
இங்கே சித்திரகூடத்தில், ரிஷி, முனிவர்கள் அனைவரும் ஏதோ மனக்கலக்கத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட ராமர் அவர்களிடம் என்னவென விசாரிக்க, ராட்சசர்கள் துன்புறுத்துவதாயும், அதிலும் கரன் என்பவன் ராவணனின் சகோதரன் என்றும் அவன் ஸ்ரீராமன் மீது பெரும்பகை கொண்டு அதன் காரணமாய் ரிஷி, முனிவர்களை ராமன் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றான் என்று கோபம் கொண்டு யாகங்களைக் கொடுப்பதாயும் வேறு இடம் நாடி அவர்கள் போகப் போவதாயும் சொல்கின்றார்கள். தன் தாய்மார்கள், தம்பிமார்கள், குடிமக்கள் வந்து சென்றதில் இருந்து அதே நினைவாக இருந்து வந்த ஸ்ரீராமரும் தாங்களும் வேறு இடம் நாடிச் செல்லலாம் என யோசித்து, லட்சுமணனோடும், சீதையோடும் அங்கிருந்து கிளம்பி சித்ரகூடத்தில் இருந்து அத்ரி முனிவரின் ஆசிரமத்தை வந்தடைகின்றார். அத்ரி முனிவரும், அவர் மனைவி அனசூயாவும் தவ நெறிகளில் சிறந்து விளங்குபவர்கள்.அதிலும் அனசூயை தன் தவ வலிமையால் மும்மூர்த்திகளையுமே குழந்தைகள் ஆக்கிப் பிள்ளைகளாக மாற்றியவள். தன் தவ வலிமையால் கங்கையைப் பாலையில் ஓடச் செய்தவள். பெரும் விவேகி. அதனால் கொண்ட பெரும் உள்ளம் படைத்தவள். அவள் சீதையைத் தன் மகள் போலவே எண்ணி மிக்க பரிவுடன் அவளை வரவேற்றுப் பின்னர் சீதையின் திருமணக் கதையை அவள் வாயிலாகவே கேட்டறிகின்றாள். பின்னர் தனக்குக் கிடைத்த புனித மாலை, தன்னிடமிருக்கும் நகைகள் போன்றவற்றைச் சீதைக்கு மனம் உவந்து அளித்து மகிழ்கின்றாள். பின்னர் அந்த ஆபரணங்களைச் சீதைக்கு அணிவித்து அழகு பார்த்துவிட்டுப் பின்னர் ராமரோடு மீண்டும் காட்டு வழியில் சீதை யை லட்சுமணன் பின் தொடர அனுப்புகின்றாள். இத்தோடு அயோத்தியா காண்டம் முடிகின்றது. இனி ஆரண்ய காண்டம் ஆரம்பம்.
ஆரண்ய காண்டம்: தண்டகாரண்யத்திற்குள் பிரவேசித்த ராமரும், லட்சுமணனும், சீதையும் அங்கிருந்த முனிபுங்கவர்களை வணங்கிப் பிரார்த்தித்துக் கொண்டு பின்னர் காட்டினுள் மீண்டும் வெகு தூரம் செல்கின்றார்கள். அப்போது அங்கே கண்ணெதிரே தோன்றினான் ஒரு அரக்கன். விராதன் என்னும் பெயர் கொண்ட அந்த அரக்கன் சீதையைத் தூக்கிக் கொண்டு, நீங்கள் இருவரும் பார்க்க ரிஷிகளைப் போல் இருக்கின்றீர்கள். உங்களுக்கு எதற்கு ஒரு பெண் கூடவே? உண்மையிலேயே துறவிகள் ஆனால் பெண்ணைக் கூட வைத்திருப்பது எவ்வாறு? உங்கள் இருவரையும் கொன்றுவிட்டு, இவளை நான் மனைவியாக்கிக் கொள்கின்றேன், எனச் சொல்லிவிட்டு சீதையைத் தூக்க, ராமர் கோபம் கொண்டு, தன் தாயான கைகேயியின் நோக்கமும் இதுவோ என ஒரு கணம் மயங்க, அவரைத் தேற்றிய லட்சுமணன் அந்த அரக்கனோடு போரிட ஆயத்தம் ஆகின்றான். போரில் அவனைக் கொல்ல முடியவில்லையே என யோசிக்கும்போது ராமருக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது. இவன் தவத்தின் காரணமாய் வெல்ல முடியாத தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு பெரிய குழி தோண்டி இவன் உடலைக் குழிக்குள் புதைப்பது ஒன்றே வழி எனக் கூறவும், மனம் மகிழ்ந்த அந்த அரக்கனோ, ராமனைப் பார்த்து, “இந்திரனுக்குச் சமம் ஆனவன் நீ. உன்னை நான் முதலில் புரிந்து கொள்ளவில்லை. நீ யார் என நான் இப்போது உணர்கின்றேன்.” என்று கூறிவிட்டுத் தான் தும்புரு என்ற பெயர் கொண்ட ஒரு கந்தர்வனாய் இருந்ததாகவும், குபேரனின் சாபத்தால் அரக்கத் தன்மை பெற்றதாயும் அப்போது குபேரம் தசரதனின் மகன் ஆன ஸ்ரீராம்னால் சாப விமோசனம் கிடைத்துத் திரும்ப கந்தர்வ உலகை அடைவாய் எனவும் கூறியதாகவும், இப்போது ராமர் தன்னை குழிக்குள் தள்ளி மூடிவிட்டால் தான் விடுதலை பெற முடியும் எனக் கூறிப் பணிவோடு வணங்க, ராமரும் அவ்வாறே செய்து அவனை விடுவிக்கின்றார். பின்னர் மூவரும் சரபங்க முனிவரின் ஆசிரமம் சென்று அவரை வணங்குகின்றார்கள். முனிவரை தேவ லோகம் அழைத்துச் செல்ல வந்திருந்த தேவேந்திரன், ராவண வதம் முடியும் முன்னர் ராமனைக் காணவிரும்பவில்லை என முனிவரிடம் சொல்லிவிட்டு அங்கே இருந்து ராமன் வருமுன்னரே விடை பெற்றுச் செல்ல, பின் சரபங்க முனிவர் தான் தீ வளர்த்து ஹோமம் செய்து சரீரத்தை விட்டுவிடப் போவதாயும், சுதீஷ்ண மகரிஷியைச் சென்று பார்க்கும்படியும் ராமரிடம் கூறிவிட்டு அவ்வாறே தீ வளர்த்து ஹோமத்தில் புகுந்து மறைந்து போகின்றார். சுதீஷ்ணரிடம் சென்று, பின்னர் அங்கிருந்து முன்னேறிச் செல்லும் வழியில் சீதை ராமரிடம் அரக்கர்கள் நமக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை என்பதால் அவர்களை அழிக்க வேண்டாம் . முனிவர்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தண்டகாரண்யத்தில் முன்னேறி அரக்கர் இடம் தேடிப் போகவேண்டாம் என்றும், ஆயுதங்களின் நட்பு ஒரு துறவியைக் கூடக் கொடியவனாய் மாற்றும் சக்தி படைத்தது எனவும் கூறுகின்றாள். ராமர் அவளை மறுத்து, தாம், முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கு வாக்குக் கொடுத்திருப்பதாயும், ரிஷிகளும், முனிவர்களும் தங்கள் தவ வலிமையாலேயே அரக்கர்களையும், ராட்சதர்களையும் அழிக்கும் வல்லமை உள்ளவர்களே என்றாலும் அவர்களை அழிப்பதும், ரிஷி, முனிவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதும் தன் கடமை என்றும், அவர்கள் கேட்கவில்லை என்றாலும் தாம் இதைச் செய்வதே தமது தர்மம் என்றும் கூறிச் சீதையை சமாதானம் செய்கின்றார். பின்னர் பல முனிவர்களின் ஆசிரமங்களுக்கும் சென்றுவிட்டு அங்கெல்லாம் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு, ஒவ்வொரு இடமாய்ச் செல்கின்றனர், மூவரும். பத்து வருடங்கள் சென்றபின்னர் மீண்டும், ராமரும், லட்சுமணரும், சீதஒயோடு சுதீஷ்ணரின் ஆசிரமத்தும்மு மீண்டும் வருகின்றார்கள். அவரிடம் அகஸ்திய முனிவர் இந்தக் காட்டில் வாழ்வதாயும், அவர் இருக்குமிடம் எது எனவும் வினவ சுதீஷ்ணரும் அகத்தியரின் ஆசிரமம் செல்லும் வழியைக் கூறுகின்றார். ராமர் தன் தம்பியோடும், மனைவியோடும் அகத்திய முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார்.
No comments:
Post a Comment