எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 19, 2008

கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 20


"மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய் முதல்
தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல்
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ" : ஆறு செல் படலம்: பாடல் எண் 939

என்று வசிஷ்டர் தன்னை முடிசூடச் சொன்னபோது, பரதன் வசிஷ்டனைப் பார்த்துப் பழித்துச் சொன்னதாய்க் கூறுகின்றார் கம்பர். மூத்த மகனுக்கே உரியதான அரசுரிமையைப் பறித்து எனக்குக் கொடுத்த என் தாயின் செயல் நீதியானதும், தர்மத்துக்கு உரியதும் என்றாகிவிடுமே எனக் கேட்கின்றான். பின்னர் அனைவரும் ராமனை அழைத்துவரப் புறப்பட்டுக் கங்கைக் கரையை வந்தடைய, அவர்களையும், பெரும்படையையும் முதலில் பார்த்த குகனின் மனதில் சந்தேகம் வருகின்றது. ராமனுக்குத் தீங்கு செய்யும் எண்ணத்துடன் பரதன் இவ்வளவு பெரிய சேனையைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கின்றானோ என்ற எண்ணத்துடனேயே அவனைச் சென்று சந்தித்து, உபசாரங்கள் பலவும் செய்து, பின்னர் அவன் வந்த காரியம் யாது என வினவுகின்றான். பாரத்வாஜ ஆசிரமம் செல்லும் வழி எது என பரதன் கேட்க, "நானே கங்கையைக் கடந்து கொண்டு விடுகின்றேன், ஆனால் தாங்கள் ராமனுக்குத் தீங்கு செய்யும் எண்ணத்தோடு வந்திருக்கின்றீர்களோ?" எனக் குகன் வினவுகின்றானாம். ராமனுக்குத் தீங்கா? ஒருகாலும் இல்லை. என் தந்தை இறந்ததுமே என் மூத்த சகோதரன் ஆன ராமன் எனக்குத் தந்தை ஆகிவிட்டான். அவனுக்குத் தீங்கு இழைக்க நான் எவ்விதம் துணிவேன்?" என்று பரதன் சொல்ல குகன் மனம் மகிழ்ந்தான். இங்கே கம்பர் சொல்வது என்னவென்றால் பரதன் வருவது தெரிந்ததுமே, கோபம் கொண்ட குகனைத் தேடி பரதன் போவதாயும், அவனைக் கண்டதுமே குகன் திகைத்ததாயும் தெரிவிக்கின்றார். ஏன் திகைக்கின்றான் குகன் என்றால் அயோத்தியில் இருந்து ராமனைத் தேடி வரும்போதே பரதனும், சத்ருக்கனனும் மரவுரி தரித்தே வந்தார்களாம். அதைக் கண்டதுமே பரதனின் நல்ல உள்ளம் குகனுக்குப் புரிந்து விட்டதாம். ஆனால் வால்மீகியில் பரதன் மரவுரி தரிப்பது இனிமேல் தான் வரும். இதைக் கம்பர் இவ்வாறு கூறுகின்றார்.

"அஞ்சன வண்ணன் என் ஆர் உயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ
உஞ்சு இவர் போய்விடின் நாய்க்குகன் என்று எனை ஓதாரோ"
கங்கை காண் படலம்: பாடல்: 998

எனக் குகன் ராமனை நாடாளவிடாமல் செய்த பரதன் வந்துவிட்டானே எனப் பதறுகின்றானாம். குகனைக் கண்ட சுமந்திரர் பரதனிடம் அவன் ராமனின் நண்பன் என உரைக்க பரதன் தானே அவனைக் காண்போம் எனக் கிளம்புகின்றான் என்று கம்பர் இவ்வாறு கூறுகின்றார்:

"தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முத்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலாத் திரு மனத்தான்
மன் முன்னே தழீ இக் கொண்ட மனக்கு இனிய துணைவனேல்
என் முன்னே அவற் காண்பென் யானே சென்று என எழுந்தானே!"
கங்கை காண் படலம்: பாடல் 1011.
என்று பரதன் கிளம்பிக் குகனைக் காண அவனைக் கண்ட குகன் இவ்வாறு சொல்கின்றான்: பாடல் 1014
"நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவில்லை திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான்."

என ராமனைப் போலவே ஆடவரிற் சிறந்தவனாய் விளங்கும் இந்தப் பரதனும், அவன் அருகே நிற்கும் சத்ருக்கனனும், ராமனைப் போலவே தவ வேடம் பூண்டு, அவன் இருக்கும் தென் திசை நோக்கித் தொழுத வண்ணம் துன்புற்ற மனதோடு இருக்கின்றனரே? இவர்கள் ஸ்ரீராமனின் தம்பியர் தவறேதும் செய்வார்களோ?"என எண்ணிக் கொண்டானாம். மேலும் குகன் சொல்கின்றான் பரதனைப் பார்த்து: பாடல் 1019

"தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி
போயினை என்றபோழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா."

என்று ஆயிரம் ராமர் கூட உனக்கு இணையாக மாட்டார்கள், அப்படி நீ, உன் தாயின் கொடுஞ்செயலால் உனக்குக் கிடைத்த ராஜ்யம் வேண்டாம் என உதறிவிட்டு, துயரதோடு ராமனைத் தேடி வந்துள்ளாயே என்று போற்றுகின்றான். மேலும் குகன் சொல்வதாவது: பாடல் எண் 1020

"என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர் குணத்து உரவுத் தோளாய்!"

எவ்வாறு சூரியன் தன் ஒளியால் சந்திரனையும் மற்றவற்றையும் மறைத்து விடுகின்றதோ, அவ்வாறே உன் குலப்புகழ் கூட நீ இப்போது செய்யும் இந்தக் காரியத்தினால் மறைந்து போய் உன் புகழே மேம்பட்டு விளங்குகின்றது என்று கூறினானாம் குகன். பின்னர் குகனின் உதவியோடு பரத, சத்ருக்கனர் கங்கையைக் கடக்கின்றனர். பரத்வாஜ ஆசிரமத்தை அடைந்ததும், பரதனின் விருப்பத்தை அறிந்து மகிழ்ந்த பரத்வாஜர் பரதனுக்கும், அவனுடன் வந்த சேனைகள், பரிவாரங்களுக்கு விருந்து அளித்துக் கெளரவிக்கின்றார். பரதனுடன் அவனுடைய தாய்மார்கள் மூவரும் சென்றதாய்க் கம்பரும் கூறுகின்றார். வால்மீகியும் அவ்வாறே கூறி இருக்கின்றார். தன் தாய்மார்களை பாரத்வாஜ முனிவருக்கு அறிமுகம் செய்த பின்னர் சித்திர கூடம் செல்கின்றார்கள் பரதனும் படை வீரர்களும்.

சித்திரகூடத்தில் ராமரும், சீதையும் அதன் அழகைப் பற்றிப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் காட்டு மிருகங்கள் நாலாபக்கமும் பதறி ஓட, பெரும் புழுதி எழுந்து வானை மறைக்கக்கண்டார் ராமர். உடனேயே லட்சுமணன் ஒரு உயரமான மரத்தின் மேல் ஏறிக் கொண்டு பார்க்க, தூரத்தே ஒரு பெரிய சேனை வருவது தெரிகின்றது. முன்னே வரும் நாட்டுக் கொடியில் அயோத்தியின் சின்னம் ஆன அத்திக் கொடி தெரியக்கோபம் கொண்ட லட்சுமணன், பரதன் பெரும்படையோடு வந்து நம்மைக் கொல்லப் பார்க்கின்றான் என்றே எண்ணுகின்றான். அதை ராமனிடம் சொல்ல அவரோ நம்ப மறுக்கின்றார். பரதன் அப்படிப் பட்டவனே இல்லை என உறுதியாக மறுக்கின்றார். ஒருவேளை தந்தையே நேரில் வருகின்றாரோ என லட்சுமணன் நினைக்க இல்லை வெண்கொற்றக் குடை இல்லையே என ராமர் கலங்க பரதன் வந்து சேருகின்றான். அண்ணனை, நாடாள வேண்டியவனை, ஒரு மரத்தடியில் மரவுரி தரித்த கோலத்தில் அமர்ந்திருக்கக் கண்ட பரதன் நெஞ்சம் பதறுகின்றது. ஓடி வந்து அண்ணன் காலடியில் விழுகின்றான். சத்ருக்கனனும் உடன் வந்து வணங்க, தாய்மார், தந்தையை விட்டு விட்டு வந்ததன் காரணம் என்ன? தந்தையைப் பார்த்துக் கொள்வார் யார் என ராமர் பரதனைப் பார்த்து வினவுகின்றார். பரதன் அவரைத் திரும்ப நாடாள வரவேண்டும் என வேண்ட, ராமர் அதை மறுத்துத் தர்ம, நியாயங்களை எடுத்துச் சொல்கின்றார்.

அப்போது பரதன் தந்தை இறந்தார் எனச் சொல்ல திகைத்த ராமர் துக்கம் தாங்க முடியாமல் விம்மி, அழுகின்றார். ராமர் அழும் சத்தம் கேட்டுக் கூட வந்த மற்றவர்கள் பரதன் ராமனைக் கண்டு பேசிவிட்டான் எனத் தெரிந்து கொண்டு அவர்கள் இருக்கும் இடம் நோக்கி வருகின்றார்கள். தாய்மார் மூவரையும் பார்த்துக் கண்ணீர் சிந்தும் ராமரைப் பார்த்து அவர்களும் கதறி அழ, ராமர் பரதனை பார்த்து வந்த காரணம் என்ன என மீண்டும் வினவ, ராமன் வந்து நாடாள ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றான் பரதன். சகோதரர்களுக்குள் விவாதம் தொடங்குகின்றது.

1 comment:

  1. அட இப்பதானே விவாதம் ஆரம்பிக்குது அதுக்குள்ள பாதுகையை தூக்கிகிட்டு கிளம்பிட்டாரா?
    :P

    ReplyDelete