எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 22, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 23


அகத்திய முனிவரின் ஆசிரமத்தை நோக்கிச் சென்ற ராம, லட்சுமணர்கள் முதலில் அவரின் சகோதரரைக் கண்டு விட்டுப் பின்னர் பயணத்தைத் தொடர்ந்தனர், சீதையுடன். அப்போது ஸ்ரீராமன் லட்சுமணனுக்கு அகத்தியர் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கின்றார். வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அரக்கர்களும், அந்தணர்களை ஏமாற்றி விருந்துக்கு அழைத்து, வாதாபியை வெட்டிக் கண்ட துண்டம் ஆக்கி அவனைச் சமைத்துப் பரிமாறியதையும் அவன் பின்னர் விருந்துண்ட அந்தணரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து விடுவதையும், இதன் மூலம் பல அந்தணர்களையும், முனிவர்களையும் கொன்று கொண்டிருந்ததையும், அகத்தியரையும் அவ்வாறே விருந்து வைத்துப் பின்னர், கொல்ல முயன்ற வேளையில் அகத்தியர் வாதாபியை ஜீரணம் செய்து எமனுலகம் அனுப்பி இல்வலனையும் வீழ்த்தியதையும் தெரிவிக்கின்றார். பின்னர் அகத்தியரின் ஆசிரமத்தை அடைந்து அவரிடம் அனுமதி வேண்டிக் காத்திருக்கின்றனர். அகத்தியரோ எனில் இவர்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார். அவர்களை வரவேற்ற அகத்தியர் முறைப்படி முதலில் அக்னிக்கு உணவு படைத்துவிட்டுப் பின்னர் வந்த அதிதிகளுக்கும் உணவு படைக்கின்றார். அதன் பின் ராமனிடம் ஒரு வில், அம்புகள், ஒரு கத்தி ஆகியவற்றைக் கொடுத்துவிட்டுச் சொல்கின்றார்:விச்வகர்மாவினால் செய்யப் பட்ட இந்த வில் மகாவிஷ்ணுவுடையது. இந்த இரு அம்பறாத் தூணிகள் இந்திரனால் கொடுக்கப் பட்டவை. தீக்கு நிகரான பாணங்கள் நிரம்பிய இது எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும் தன்மை உள்ளது. மற்றொரு அம்புறாத் தூணியின் அம்பு சூரியனுக்கு நிகரானது. இந்தக் கத்தி தெய்வத் தன்மை வாய்ந்தது. இவற்றை நீ என்னிடமிருந்து இப்போது பெற்றுக் கொள் என வருங்காலம் அறிந்தவராய்ச் சொல்லுகின்றார்.

பின்னர் அந்த இடத்தில் இருந்து இரண்டு யோசனை தூரத்தில் உள்ள பஞ்சவடி என்னும் இடத்திற்குச் சென்று அங்கே ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்குமாறும் கூறுகின்றார். ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு ராமன், சீதையுடனும், லட்சுமணனுடனும் பஞ்சவடி செல்லும் வழியில் ஜடாயு என்னும் பெரிய கழுகைக் கண்டார்கள். முதல் பார்வையில் அந்தக் கழுகரசனை ஓர் அரக்கன் என நினைத்தனர் மூவரும். பின்னர் அந்தக் கழுகரசனின் வரலாற்றைக் கேட்டறிந்து கொள்கின்றனர். தன் வரலாற்றைக் கூறிய அந்தக் கழுகு தன் வம்சாவளியைக் கூறி இறுதியில் அருணன் என்பவனுக்குத் தான் பிறந்ததாயும், தன் தமையன் பெயர் சம்பாதி எனவும், தன் பெயர் ஜடாயு எனவும் கூறுகின்றது. இந்தப் பஞ்சவடியிலேயே அவர்களைத் தங்குமாறு கூறிவிட்டுப் பின்னர் சீதைக்குத் தான் பாதுகாப்பாய் இருப்பதாயும் உறுதி அளிக்கின்றது. தசரத மன்னன் தனக்கு நண்பன் எனவும் சொல்கின்றது அந்தக் கழுகு.

பின்னர் பஞ்சவடியை அடைந்த ராம, லட்சுமணர்கள் அங்கே ஒரு பர்ணசாலையை எழுப்பி, கோதாவரி நதியில் நீராடி, சாத்திர முறைப்படி பர்ண சாலையில் வழிபாடுகள் நடத்தி அங்கே வாழ்க்கையைத் துவக்குகின்றார்கள். அப்போது பருவம் மாறிக் குளிர்காலம் வந்துவிட லட்சுமணன் அங்கே உள்ள குளிரைப் பற்றிச் சொல்லிவிட்டுப் பரதனை நினைக்கின்றான். பரதனின் நற்குணத்தையும், ராமனின் பால் அவன் கொண்டுள்ள அன்பையும் பற்றிப் பேசிய லட்சுமணன், பரதன் இந்தக் குளிரிலும் ராமன் மீதுள்ள அன்பால் பரதனும் தரையில் படுத்துக் காட்டு வாழ்க்கையை மேற்கொண்டானே என மனம் வருந்திக் கைகேயியை நிந்தித்துப் பேச, ராமர் அவனைத் தடுக்கின்றார். இப்படியே ஒரு சமயம் இல்லாமல் பல சமயங்களிலும் இவர்கள் பழங்கதைகளையும்,மேலே நடக்கவேண்டியதும் பற்றிப் பேசிக் கொண்டிருந்த ஒரு நாளில் வந்தாள் சூர்ப்பனகை! இவளைக் கம்பர் எவ்வாறு வர்ணிக்கின்றார் என்று மட்டும் ஒரே ஒரு அருமையான பாடல்:
பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்"
எவ்வளவு அழகான வர்ணனை? அன்னம் என மின்னினாளாம் அந்த வஞ்ச மகள். அவளின் மற்ற காரியங்கள் பற்றி நாளை பார்க்கலாமா? இந்த சூர்ப்பனகை ஏன் ராமனையும், சீதையையும் பழி வாங்க வேண்டும்? சீதையின் மேல் கொண்ட பொறாமை ஒரு பக்கம் என்றாலும், அவளின் முக்கிய நோக்கம், ராவணனைப் பழி வாங்குவதே என்றும் ஒரு கூற்று. இதைத் திருத்தணித் திருப்புகழில் அருணகிரிநாதர் கூறி உள்ளது, பின்னர் பார்க்கலாம்.
*************************************************************************************
மகாராஷ்டிராவின் நாசிக் நகரின் வெளியே ஒரு 20 கி.மீ தூரத்தில் உள்ளது இந்தப் பஞ்சவடி. ஆனால் இதன் உண்மையான பெயர் பத்மபுரம் என்றே அங்குள்ளோர் சொல்கின்றனர். ஐந்து பெரிய ஆலமரங்கள் சூழ்ந்த அந்த இடம் ஆலமரத்தை வடமொழியில் "வடி" எனச் சொல்வதால் ஐந்து ஆலமரங்கள் சூழ்ந்த இடம் என்ற பெயரால் "பஞ்சவடி" என அழைக்கப் பட்டதாய்க் கூறுகின்றார்கள். இந்த மாதம் ஏப்ரம் ஆறாம் தேதி அன்று பஞ்சவடிக்குச் சென்று, தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாங்கள் சென்ற போது மதியம் 11-00 மணி அளவில் இருக்கலாம். சுமார் 500 பேர் உள்ள எங்கள் சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் எங்களுக்கு வந்த வழிகாட்டி, அந்த வெயிலில், (அப்படி ஒண்ணும் அதிகம் வெயில் இல்லை, சொல்லப் போனால் குளிர் போகாமல் தான் இருந்தது) நடந்தே பஞ்சவடி போகலாம், ராமன் தண்டகாரண்யத்தில் இருந்து நடந்து வந்திருக்கின்றான், நாம் என்ன இந்த மூன்று கி.மீ. நடக்கக் கூடாதா எனக் கேட்க மொத்தக் கூட்டமும் நடந்தே சென்றோம். போக்குவரத்து ஸ்தம்பிக்க நாங்கள் சென்றோம். ஐந்து ஆலமரங்கள், அங்கே ராணி அகல்யாவால் ஏற்படுத்தப் பட்ட ராமர் கோவில் அனைத்தையும் தரிசித்தோம். ராமர், லட்சுமணர் வெளியே சென்றிருக்கும் வேளையில் சீதை தங்கி இருந்த குகையும் அங்கே உள்ளது. ஆனால் குகைக்குள் செல்லும் வழி மிக மிகக் குறுகியது. கொஞ்சம் குனிந்து, கொஞ்சம் தவழ்ந்து, கொஞ்சம் ஊர்ந்து சென்று தரிசித்துவிட்டுப் பின்னர் அதே மாதிரியில் வேறு வழியாக வெளியே வர வேண்டும். ஆனால் எனக்கு மூச்சுத் திணறல் இருப்பதால் அனுமதி மறுக்கப் பட்டது. என் கணவரும் அதிக உயரம் காரணமாய் உள்ளே செல்ல முடியாமல் அவரும் செல்ல முடியவில்லை. என்றாலும் சென்றவர்கள் கூறியதைக் கொண்டு உள்ளே விக்ரகங்கள் இருப்பதாயும், வழி மிகக் குறுகல் எனவும் அறிந்தோம். சில வருடங்கள் முன்னர் கூடக் காடாக இருந்த அந்த இடம் தற்சமயம் கட்டிடங்களால் நிரம்பி இயற்கைச் சூழல் மாறிவிட்டது எனவும் சொல்லிக் கொண்டனர். சீதைக்காக லட்சுமணன் எழுப்பிய கோதாவரி நதியின் குளம் ஒன்றும், ராம தீர்த்தம் என்ற பெயரில் அங்கே உள்ளது. கோதாவரி அங்கே தான் ஆரம்பிக்கின்றது.

1 comment:

  1. இராமயணத்தைக் கேட்டாலே புண்ணியம்.படித்தால் அதை விட அதிகம். பல நூறு பேர்கள் படிக்கிற மாதிரி அழகாய் எழுதிவரும் கீதாமேடத்துக்கு நெறய புண்ணியம் கொடு இராமா !

    ReplyDelete