எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 27, 2008

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 28


வால்மீகி ராமாயணத்தில், ராவணனின் பிறப்பு, வளர்ப்பு, போன்ற விபரங்கள் உத்தரகாண்டத்திலேயே இடம் பெறுகின்றது. என்றாலும் நம் கதைப் போக்குக்குத் தேவையாக,இப்போதே சொல்லப் படுகின்றது. ராம பட்டாபிஷேகம் முடிந்த பின்னர், அகத்தியரால் ராமருக்குச் சொல்லப்பட்டதாய் வால்மீகி ராமாயணம் கூறுகின்றது. இனி, ராவணனின் கதை தொடரும்:

"தன் தாயின் ஆசையையும் அவள் வார்த்தையையும் கேட்ட ராவணன், தாயிடம், அவள் ஆசையைத் தான் நிறைவேற்றுவதாய் உறுதி அளித்ததோடு அல்லாமல், தன் தம்பியரோடு கூடிக் கடும் தவங்களில் ஈடுபட்டான். கும்பகர்ணன், கடும் வெயிலில் அக்கினிக்கு நடுவேயும், குளிரில் நீருக்கு நடுவேயும் தவம் புரிய, விபீஷணனோ ஒற்றைக் காலில் நின்று தவம் செய்கின்றான். ராவணனோ என்றால் நீர் கூட அருந்தாமல் தவம் செய்ததோடு அல்லாமல், தன் தலைகளையும் ஒவ்வொன்றாய் அறுத்துப் போட்டுத் தவம் செய்கின்றான். ஒன்பது தலைகள் வெட்டப் பட்டு, பத்தாவது தலை வெட்டப் படும்போது பிரம்மா எதிரே தோன்றி, "தசக்ரீவா, என்ன வரம் வேண்டும்?" என வினவ, சாகா வரம் கேட்கின்றான், தசக்ரீவன். அது இயலாது என பிரம்மா கூற, தசக்ரீவன் சொல்கின்றான்:" நாகர்கள், கழுகு இனங்கள், தேவர்கள், யக்ஷர்கள், தைத்யர்கள், தானவர்கள், ராட்சதர்கள் ஆகியோர் மூலமாய் எனக்கு மரணம் நேரிடக் கூடாது. மனிதர்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை, புல்லைவிடக் கீழாய் அவர்களை நான் மதிக்கின்றேன்." எனக் கூறுகின்றான். அவ்வாறே வரம் அளித்த பிரம்மா, "உன் மற்ற ஒன்பது தலைகளையும் நீ திரும்பவும் பெறுவாய்! அத்தோடு, நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தையும் அடைவாய்" என்றும் ஆசி அளிக்கின்றார்.

பின்னர் விபீஷணனைப் பார்த்து என்ன வரம் வேண்டுமெனக் கேட்க, அவனோ, " எந்த நெருக்கடியிலும் தன்னிலை இழக்காமல், நல்ல வழியை விட்டு விலகாமல், தர்மத்தின் வழியிலேயே நான் நடக்க வேண்டும், பிரம்மாஸ்திரம் முறையான சிட்சை இல்லாமலேயே எனக்கு வசமாக வேண்டும், த்ர்மத்தின் வழியை விட்டு நான் விலகக் கூடாது!" என்று கேட்க அவ்வாறே அவனுக்கு வரம் அளிக்கப் பட்டது. மேலும், பிரம்மா விபீஷணனை, "நீ சிரஞ்சீவியாக இருப்பாய்!" எனவும் ஆசி வழங்குகின்றார். அடுத்துக் கும்பகர்ணன் வரம் கேட்க எத்தனித்த போது, தேவர்கள் பிரம்மாவைத் தடுக்கின்றார்கள். வரம் ஏதும் கொடுக்கும் முன்னரே கும்பகர்ணன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. வரம் கொடுத்தால் தாங்காது. அவனை மாயைக்கு உட்படுத்திவிட்டுப் பின்னர் வரம் கொடுங்கள் என்று சொல்கின்றார்கள். இல்லை எனில் பூவுலகின் நன்மைகள் அனைத்தும் கடுந்தீமைகளாகி விடும் எனவும் சொல்கின்றனர். பிரம்மாவும் சரஸ்வதி தேவியை மனதில் நினைக்க அவளும், கும்பகர்ணன் நாவில் குடி இருந்து, விருப்பம் தவறிய சொல் வரும்படியாகச் செய்கின்றாள். கும்பகர்ணன் விரும்பியதோ "நித்தியத்துவம்" ஆனால் அவன் நாவில் வந்ததோ "நித்ரத்துவம்". காலம் கடந்தே இதை உணர்ந்த கும்பகர்ணன் வருந்த, வேறு வழியில்லாமல் உறங்காமல் இருக்கும்போது பெரும்பலத்துடன் இருக்கும் சக்தியையும் அடைகின்றான்.

பின்னர் தசக்ரீவனின் பாட்டன் ஆகிய சுமாலி, பேரன்கள் மூவருக்கும் பிரம்மா கொடுத்த வரங்கள்ல் பற்றித் தெரிய வர, தசக்ரீவனை அழைத்து, குபேரனைத் துரத்தி விட்டு இலங்கையை உனதாக்கிக் கொள்வாய்! உன் இனிய மொழிகளால் கிடைக்கவில்லை எனில் அன்பளிப்பாகவோ, அல்லது, பலாத்காரமாகவோ இலங்கையை உன் வசப் படுத்து! எனக் கூறுகின்றான். தசக்ரீவன் மறுக்கின்றான். வைஸ்ரவணன் என்ன இருந்தாலும் என் சகோதரன். வனை அங்கிருந்து விரட்டுவது தவறு எனக் கூறுகின்றான். ஆனால் சுமாலி மேலும் மேலும் அவனை வற்புறுத்தக் கடைசியில் மனம் மாறி தசக்ரீவன் குபேரனுக்குத் தூது அனுப்பி இலங்கையைத் தன் வசம் ஒப்படைக்கும்படிக் கேட்கின்றான். இருவருக்கும் தந்தையான விஸ்ரவஸ் குபேரனிடம் தசக்ரீவன் பெரும் வரங்களைப் பெற்றிருப்பதை எடுத்துக் கூறி, அவனை விரோதித்துக் கொள்ள வேண்டாம், எனவும், கைலை மலையில் குபேரன் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளலாம் எனவும் கூறுகின்றார். இந்தப் பிரச்னையின் காரணத்தால் தசக்ரீவனைத் தாம் சபிக்கவும் நேர்ந்து விட்டது எனக் கூறி வருந்துகின்றார். ஆகவே குபேரன் தகப்பன் மனம் நோகாமல் இருக்கக் கைலை சென்று அங்கே "அல்காபுரி"யை ஸ்தாபித்து அங்கே இருக்க ஆரம்பிக்க இலங்கை தசக்ரீவன் வசம் ஆகின்றது.

பின்னர் சூர்ப்பநகை வித்யுத்ஜிஹ்வாவையும், மயன் மகள் மண்டோதரியை தசக்ரீவனும் திருமணம் செய்து கொள்கின்றார்கள். தசக்ரீவனுக்கும், மண்டோதரிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. அப்போது விண்ணில் இருந்து பெரும் இடி முழக்கம் கேட்க, ராஜ்ஜியமே ஸ்தம்பித்து நின்றது. அந்தக் குழந்தைக்கு மேகநாதன் என்ற பெயரிட்டு வளர்த்து வருகின்றான், தசக்ரீவன். கும்பகர்ணனோ தான் பெற்ற வரத்தால் பெருந்தூக்கத்தில் ஆழ, தசக்ரீவன் பெரும் போர்களைப் புரிகின்றான். பல ரிஷிகளையும், யக்ஷ, கந்தர்வர்களையும், இந்திர லோகத்தையும் அழிக்கின்றான். தசக்ரீவனின் அண்ணன் ஆன குபேரன் தம்பியை நல்வழிப்படுத்த வேண்டி, ஒரு தூதுவனை அனுப்புகின்றான். அந்தத் தூதுவன், தசக்ரீவனிடம் கைலை மலை பற்றியும், சிவ, பார்வதி பற்றியும் கூறி, நீ நல்வழிக்குத் திரும்பி விடு, இல்லை எனில் அழிந்து விடுவாய் எனக் கூற, தசக்ரீவன் கோபம் கொண்டு, "மகேசனுக்கு நெருங்கியவன் என்பதால் என் அண்ணன் தன் வசமிழந்து விட்டானோ? அண்ணன் எனக் கூடப் பார்க்காமல் அவனையும் மற்ற நாயகர்கள் ஆன இந்திரன், யமன், வருணன் ஆகியோரையும் அழிக்கின்றேன்!" எனக் கோபத்துடன் கூறிவிட்டு தூதுவனை வெட்டி வீழ்த்தி விட்டுக் கைலை மலை அடைந்தான்.

2 comments:

  1. எத்தனை சுவையாக இருக்கிறது!!கீதா, மிக நன்றி.

    ReplyDelete
  2. ராவணன், இராவணன் என்று சொல்வதை விட தசக்கிரீவன் அப்படிங்கறது நல்லாயிருக்கே!!!

    ReplyDelete