
அனைவருக்கும், கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம் இரண்டின் ஒப்பீட்டையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிலர் அதிகம் கம்பனே வருவதாயும், இன்னும் சிலர் இந்த ஒப்பீடு தேவை இல்லை எனவும் சொல்கின்றனர். ஆகவே கூடியவரையில் வால்மீகியை மட்டுமே குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். வால்மீகியைப் படிச்ச அளவுக்குக் கம்பனைப் படிக்கவில்லை, கம்பனின் பாடல்களின் அழகு மனதை ஈர்க்கின்றது மட்டுமில்லாமல், ஒருமித்த தெய்வீக எண்ணங்களின் கோர்வையும் மனதைக் கவருகின்றது என்பதாலோ என்னமோ சில சமயங்களில் இந்த ஒப்பீடு என்னால் தவிர்க்க முடியலை. என்றாலும் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க நிறுத்திக்க முயலுகின்றேன். இனி, பாதுகா பட்டாபிஷேகம் தொடரும். முந்தாநாள் கதையில் விவாதம் ஆரம்பிக்கும் முன்னரே படம் போட்டாச்சா என்று திவா கேட்டிருந்தார். வேறே படம் கைவசம் உள்ளது அதற்குப் பொருந்துமாறு இல்லை என்பதால் விவாதம் முடியும் முன்னரே படம் போட்டு விட்டேன். கைவசம் உள்ள படங்களில் வேறு எதுவும் பொருந்தாத காரணத்தால் போட்டேன். பழைய புத்தகம் ஒன்றில் இருந்து இந்தப் படத்தை அனுப்பிய திவாவுக்கு என் நன்றி.
தன்னை நாட்டை ஆளுமாறு கேட்டுக் கொண்ட பரதனை ப் பார்த்து ஸ்ரீராமர், “நீ உன் தர்ம நெறியை விட்டு விலகிப் பேசக் கூடாது. நமது தந்தையின் கட்டளையின் பேரிலேயே நான் காட்டிற்கு வந்துள்ளேன். அவருடைய வார்த்தையை நான் மீற முடியாது. நீயும் மீறக் கூடாது. அவர் கூறியபடியே நீயே உன் கடமையை ஏற்றுக் கொள்.” என்று சொல்கின்றார். மறுநாள் தந்தைக்கு ஆற்ற வேண்டிய ஈமக் கடன்களைச் செய்துவிட்டு. ராமர் மீண்டும், பரதனுக்குத் தர்ம நியாயத்தை எடுத்துக் கூற ஆரம்பிக்க, பரதன் மறுக்கின்றான். தன் தாயாருக்குத் தசரத மன்னர் அளித்த இந்த ராஜ்யம் தற்சமயம் தனக்குச் சொந்தமானது என்றும், அதைத் தான் தன் இஷ்டப் படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும் என்றும், அதைத் தான் ஸ்ரீராமருக்கு அளிப்பதாயும், அவர் உடனே வந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், கேட்டுக் கொள்கின்றான். ஆனால் மறுத்த ஸ்ரீராமர், மீண்டும் தந்தையின் கட்டளையை மீற முடியாது எனக் கூறிவிட்டு, அயோத்தி உன் ராஜ்யம், இந்தக் காடும், மிருகங்களும் என் ராஜ்யம், தந்தை எனக்களித்த பொறுப்பு இது, இதை நிறைவேற்றுவது நம் இருவரின் கடமை என்கின்றார். ஆனால் பரதனோ, “என் தாயின் கோபத்தினாலோ, அல்லது அவளுடைய சாகசத்தினாலோ நம் தந்தை எனக்களித்த இந்த ராஜ்யம் என்னும் பொறுப்பு எனக்கு உகந்தது அல்ல. நான் இதை வெறுக்கின்றேன். நம் தந்தை பல புண்ணிய காரியங்களைச் செய்தும், சிறப்பான யாகங்களைச் செய்தும், குடிமக்களை பல விதங்களில் மகிழ்வித்தும் நல்லாட்சியே புரிந்து வந்தார். அவரைப் பழித்து நான் கூறுவதாய் நினைக்கவேண்டாம். இப்படிப் பட்ட ஒரு தர்ம நெறிமுறைகளை அறிந்த மனிதன், பெண்ணாசையில் மூழ்கி, ஒரு பெண்ணின் திருப்திக்காக அடாத ஒரு பாவச் செயலைச் செய்வானா? “வினாச காலே விபரீத புத்தி!” என்னும் பழமொழிக்கு இணங்க, அழியக் கூடிய காலம் வந்ததால் அன்றோ அவர் புத்தி தடுமாற்றம் ஏற்பட்டது? ஒரு மனிதனுக்கு பிரம்மச்சரியம், இல்லறம், வானப்ரஸ்தம், சந்நியாசம் இவை நான்கிலும் இல்லறமே உகந்தது எனப் பெரியோர்கள் பலரும் கூறி இருக்கத் தாங்கள் இவ்வாறு அதை உதறித் தள்ளலாமா? மன்னன் மரவுரியை ஏற்கலாமா? குடிமக்களைக் காப்பாற்றுவதும், அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதும் ஒரு க்ஷத்திரியனின் கடமை அல்லவா?” என்றெல்லாம் கேட்கின்றான். அப்போது பரதனோடு சேர்ந்து அனைவரும் ஸ்ரீராமனை நாடு திரும்ப வற்புறுத்துகின்றனர்.
அப்போது ஸ்ரீராமர் அது வரை யாரும் கூறாத ஒரு செய்தியைக் கூறுவதாய் வால்மீகி கூறுகின்றார். அதாவது, கேகய மன்னன் ஆகிய பரதனின் பாட்டனாரிடம், தசரதன், கைகேயிக்குப் பிறக்கும் பிள்ளைக்கே ராஜ்யம் ஆளும் உரிமையைத் தான் அளிப்பதாய்க் கூறியதாய்க் கூறுகின்றார். இது பற்றி வேறு தெளிவான கருத்து வேறு யார் மூலமும் இல்லை. வசிஷ்டரோ, அல்லது தசரத மன்னனிடம் வரம் கேட்கும் கைகேயியோ, அவளைத் தூண்டும் மந்தரையோ, அல்லது கேகய மன்னனே கூடவோ, யாரும் இது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசியதாய்க் கூறவில்லை வால்மீகி. ஆகவே ஒரு வேளை பரதன் ஸ்ரீராமன் இவ்வாறு கூறினால் மனம் மாறி நாட்டை ஏற்றுக் கொள்ளலாம் என்ற காரணத்தால், ஒரு சாதாரண மனிதனாகவே வால்மீகியால் குறிப்பிடப் படும் ஸ்ரீராமன் இவ்வாறு கூறி இருக்கலாம் என்ற கருத்துக்கே வரும்படியாய் இருக்கின்றது. அப்போது அங்கே அயோத்தியில் இருந்து வந்திருந்த பல முனிவர்களில் ஒருவரான ஜாபாலி என்பவர் ராமரைப் பார்த்துக் கூறுகின்றார். ஜாபாலி பேசுவது நாத்திக வாதம். முன் காலத்தில் நாத்திகமே இல்லை, என்றும், வேதங்களில் கூடச் சொல்லப் படவில்லை என்றும் பலரும் நினைக்கலாம். இறைவன் என்ற தத்துவம் ஏற்பட்ட நாளில் இருந்தே நாத்திகம் என்ற தத்துவமும் இருந்தே வருகின்றது. எவ்வாறு இறை ஏற்பு இருக்கின்றதோ, அவ்வாறே இறை மறுப்பும் இருந்தே வந்திருக்கின்றது. இன்று புதியதாய் எதுவும் வரவில்லை. ஜாபாலி ஸ்ரீராமனிடம் சொல்கின்றார்: “ஏ, ராமா, நீ என்ன பாமரத் தனமாய்ப் பேசுகின்றாய்? சிந்திக்கின்றாய்? யார் யாருக்கு உறவு? ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு என்ன செய்ய முடியும்? அனைவருமே தனித்தனியாய்த் தானே பிறக்கின்றார்கள். பயணம் செய்யும் மனிதன் ஒரு நாள் ஒரு ஊரைக் கடப்பது போலவும், இரவு தங்குவது போலவும் உள்ள இந்த வாழ்க்கையில் யார் தந்தை? யார் மகன்? தசரதன் உனக்குத் தந்தை என்பதற்கு அவன் ஒரு கருவி மட்டுமே! நீ கற்பனையாக உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வீணில் வருந்தாதே! நீ இப்போது உன் தந்தைக்குச் செய்த ஈமக் கடன்களினால் என்ன பயன்? உன் தந்தையோ இறந்துவிட்டான். அவனால் எதை உண்ண முடியும்? இந்த உணவை இப்போது நீ இங்கே படைத்தது வெறும் வீணே! பயணம் செய்யும் நமக்குக் கையில் தானே உணவு எடுத்துச் செல்கின்றோம்? அப்படி இருக்க இறந்தவனுக்கு இங்கே உணவு படைத்தால் அது அவனுக்குப் போய்ச் சேருமா என்ன? இவை எல்லாம் தான, தர்மங்களை எதிர்பார்ப்பவர்களால் சாமர்த்தியமாக விதிக்கப் பட்ட வழிமுறைகள். நீ இப்போது ராஜ்யத்தைத் துறப்பது என்பதும் உன் குலத்தில் யாரும் செய்யாத ஒரு காரியம். ராஜ்யத்தை ஏற்று அதனுடன் கூடி வரும் சுகங்களை அனுபவிப்பாயாக!” என்று கூறவே உள்ளார்ந்த கோபத்துடன் ராமர் கூறுகின்றார்.
“ராஜ்யத்தை நான் ஏற்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத் தாங்கள் இவ்வாறு பேசுவது முறையன்று. ஒரு அரசனுக்கு உண்மை தான் முக்கியம். சத்திய பரிபாலனம் செய்வதே அவன் கடமை. உலகின் ஆதாரமும் சத்தியமே ஆகும். அந்தச் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு என் தந்தை என்னைக் காட்டுக்குப் போகச் சொல்ல, அவருக்கு நானும் சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றேன். என்னால் அதை மீற முடியாது. எனக்கு முற்றிலும் கேடு விளைவிக்கக் கூடிய ஒன்றை நீங்கள் சொல்கின்றீர்களே? என் தந்தை உங்களை எப்படி ஏற்றார் என்று எனக்கு ஆச்சரியமாய் உள்ளது. நாத்திக வாதம் பேசும் நீங்கள் இந்த முனிவர்கள் கூட்டத்தில் எப்படி இருக்க முடிகின்றது?” என்று கூறவும், வசிஷ்டர் ராமனிடம் ஜாபாலி அவ்வாறு பேசியது தர்ம, நியாயத்தை அறிந்தே தான் என்றும், அவருக்கு ஏற்கெனவேயே இதன் முடிவு தெரியும் என்றும், அவர் பேசிய வார்த்தைகளினால் அவரைப் பற்றிய தவறான முடிவுக்கு வரவேண்டாம் எனவும் கூறிவிட்டு ராமனிடம் அயோத்தி திரும்பும் யோசனையை வற்புறுத்துகின்றார். ராமர் மீண்டும் பரதனுக்கு அறிவுரைகள் பலவும் சொல்லி, அயோத்தி சென்று நாடாளச் சொல்ல, பரதன் கண்ணெதிரில், ரிஷிகளும் கந்தர்வர்களும் தோன்றி ராமரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும்படி சொல்ல, திடுக்கிட்ட பரதன் ராமன் காலில் விழுந்து கதறுகின்றான். அவனைச் சமாதானப் படுத்திய ராமரிடம் பரதன் ராமரின் காலணிகளைக் கேட்டு வாங்கினான். ஆட்சியின் மாட்சிமை ராமனின் காலணிகளுக்கே உரியவை என்றும், ராமர் வரும்வரை தானும் மரவுரி தரித்து, காய், கிழங்குகளையே உண்டு, நகருக்கு வெளியே வாழப் போவதாயும் நிர்வாகத்தை மட்டும் தான் கவனிப்பதாயும், பதினான்கு ஆண்டுகள் முடிந்த மறுநாள் ராமன் அயோத்தி திரும்பவில்லை எனில் தான் தீயில் இறங்குவதாயும் சபதம் எடுத்துக் கொண்டு, ராமனின் காலணிகளைப் பெற்றுக் கொண்டு அயோத்தி திரும்புகின்றான். அங்கே ராமனின் காலணிகளைச் சிம்மாசனத்தில் வைத்துவிட்டுத் தான் நந்திகிராமம் என்னும் பக்கத்து ஊருக்குச் சென்று அங்கிருந்து அரசின் காரியங்களை ராமரின் பாதுகைகளை முன்னிறுத்த நடத்த ஆரம்பிக்கின்றான் பரதன்.
இரண்டே இரண்டு பாடல் மட்டும் போட்டுக்கறேனே? (:D)
“விம்மினன் பரதனும் வேரு செய்வது ஒன்று
இ ன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான்
செம்மையின் திருவடித் தலம் தந்தீக என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.
அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவை என முறையின் சூடினான்
படித்தலத்து இறைஞ்சினான் பரதன் போயினான்
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.”
// இரண்டே இரண்டு பாடல் மட்டும் போட்டுக்கறேனே? (:D)//
ReplyDeleteஅதானே பாத்தேன்!
வேறு இடத்தில் படித்திருக்கிறேன். :))
ReplyDelete