
ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரம் ஆன ராவணனின் அறிமுகம் நமக்கு இங்கே தான் முதன்முதலாய்க் கிடைக்கின்றது. அதுவும் முதலில் அகம்பனன் மூலமும், பின்னர் சூர்ப்பனகை மூலமும். இருவருமே சீதையை அபகரித்து வருவதின் மூலம் ராமனைத் துன்புறுத்தலாம் என்றே சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால் அதில் ராவணைன் அழிவும் இருக்கின்றது என்பதை உணராமல் இருந்திருப்பார்களா என்ன? இதைக் காட்டவே கம்பர்,
"நீல மாமணி நிற நிருதர் வேந்தனை
மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள்" என்று சூர்ப்பனகை, ராவணனை அடியோடு அழிக்கும் திறன் பெற்றவள் எனக் கூறுகின்றார். சூர்ப்பனகையின் கணவன் ராவணனால் கொன்றது பற்றியும், அவள் மகனை லட்சுமணன் கொன்றது பற்றியும் நேற்றுக் கண்டோம். அந்த லட்சுமணால் மூக்கறுபட்டவள் என்பதைத் தான் அருணகிரியார்,"மூக்கறை மட்டை மகாபல காரணி" எனச் சொல்கின்றார். மேலும் சூர்ப்பநகையைப் படு மூளி, உதாசனி, வஞ்சகி என்றெல்லாம் சொல்பவர் "விபீஷணன் சோதரி" என்று குறிப்பிடுவதின் நோக்கம் முற்பிறவியில் நடந்த ஒரு சம்பவம். காரண, காரியத்தோடு தான் ராமாயண கதா பாத்திரங்களின் தோற்றம் என்பதே கதையின் நோக்கம் என்பதால் இதை இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு தாய் வயிற்றில் பிறந்தும், ராட்சத குலச் சகோதரர்களில் விபீஷணன் மட்டும் ஏன் நல்லவனாய் இருந்தான் என்பதும், தெரியவரும்.
//சத்யவிரதன் என்னும் மன்னன் மகன் சங்கசூடன் என்பவன் ஆதிசேஷனின் பக்தன். நாள் தோறும் தவறாமல் ஆதிசேஷனை வழிபட்டு வந்தான் அவன். அவனுடைய குருநாதரின் மகள் சுமுகி என்பவள். அவள் சங்க சூடன் மேல் மாறாக் காதல் கொண்டாள். அவனிடம் தன்னை மணக்கும்படி வேண்ட, சங்க சூடனோ, "குரு என்பவர் தந்தைக்குச் சமானம்! அவ்வகையில் நீ என் சகோதரி! ஒரு சகோதரியைச் சகோதரன் திருமணம் செய்ய நினைப்பது எத்தகைய கொடிய பாவம்! அத்தகைய பாவத்தைச் செய்து குருத் துரோகம் நான் செய்ய மாட்டேன்!" என்று கூறுகின்றான். அவள் திரும்பத் திரும்ப அவனிடம் வேண்ட, "நீ அடுத்த பிறவியிலும் எனக்குச் சகோதரி தான், போ! உன்மேல் எனக்குக் கடுகளவும், விருப்பம் என்பதே இல்லை!" என்று சொல்ல, கோபம் கொண்ட சுமுகி அரசனிடம் முறையிடுகின்றாள். அதுவும் எப்படி? "மன்னா, ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று நீ நினைக்கும் உன் மகன் குரு புத்திரியான என்னிடம் தவறாய் நடந்து கொள்கின்றான்! நீதி தவறாத உன் ஆட்சியிலும் இவ்வாறான கதியா எனக்கு?" என்று அழுது, புலம்ப நீதி தவறாத மன்னனும், தீர விசாரிக்காமல், மன்னன் மகனே ஆயினும், தண்டனைக்கு உட்பட்டவனே எனக் கூறி, இளவரசனை மாறு கால், மாறு கை வாங்குமாறு தண்டனை விதிக்கின்றான். இளவரசனுக்குத் தண்டனை நிறைவேற்றப் படுகின்றது.
ஒரு பாவமும் செய்யாத தனக்கு ஏன் இந்தக் கதி என்று ஆதிசேஷனிடம் முறையிட்ட சங்க சூடன்முன்னால் தோன்றினார் ஆதிசேஷன். "என்ன தான் உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் சிலரின் குணத்தை மாற்ற முடியாது. நீ சொன்னபடியே உன் வாக்கை நிறைவேற்ற என்னால் முடியும். அடுத்த பிறவியிலும் அவள் உனக்குச் சகோதரியாகவே பிறப்பாள். அப்போது, நானே வந்து அவளுக்குத் தண்டனை கொடுக்கின்றேன். அது வரை பொறுத்திருக்கத் தான் வேண்டும்!" எனச் சொல்லி மறைகின்றார். அதன்படி இந்தப் பிறவியில் விபீஷணன் சகோதரியாக வந்து பிறந்த சுமுகி ஆன சூர்ப்பநகைக்கு, ஆதி சேஷனின் அவதாரம் எனச் சொல்லப் படும் லட்சுமணனால் தண்டனை விதிக்கப் படுவதாய்ச் சொல்கின்றார் அருணகிரியார். இனி கதைக்குச் செல்வோமா?
*************************************************************************************
பெருங்கூச்சலுடனும், கத்தலுடனும் ராவணன் சபைக்கு வந்த சூர்ப்பனகை ராவணனைப் பார்த்துக் கத்த ஆரம்பிக்கின்றாள். "பெண்களோடு கூடி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்ற நீயும் ஒரு அரசனா? உன் ராஜ்யத்தில் நடப்பது என்னவென நீ அறிவாயா? உன் மனிதர்கள் ஆயிரக் கணக்கில் ஜனஸ்தானத்தில் கொல்லப் பட்டதையும், அந்த இடமே அழிக்கப் பட்டதையும் நீ அறிவாயா? ராமன் என்ற ஒரு தனி மனிதன் இதைச் செய்ததாவது உனக்குத் தெரியுமா? அவன் மேற்பார்வையில், தண்டக வனத்தை ரிஷிகளின் தவங்களுக்கு ஏற்றவகையில் பாதுக்காப்புச் செய்து கொடுப்பதை நீ அறிவாயா? இத்தனையும் அவன் செய்து முடிக்க, நீயோ அகங்காரத்துடன் எனக்கு நிகரில்லை என வீற்றிருக்கின்றாய்! நாட்டு நடப்பை அறியாத அரசன் ஆன நீ கிழிந்த துணிக்குச் சமானம், தூக்கி எறியப் பட்ட வாடிய பூவுக்குச் சமம். " என வாயில் வந்தபடி ராவணனை இழித்துப் பேச ஆரம்பித்தாள். அவள் பேச்சால் கோபம் அடைந்த ராவணன், "யார் அந்த ராமன்? எங்கிருந்து வந்தான்? என்ன ஆயுதங்கள் வைத்துள்ளான்? எத்தன்மையானவன்?" என வினவுகின்றான்.
சூர்ப்பனகை ராமனின் வீரத்தை விவரிக்கின்றாள்:" ஒரு பெண் என்பதால் என்னைக் கொல்லாமல் அங்கஹீனம் செய்து விரட்டி விட்டான் அவன் தம்பி லட்சுமணன் என்பவன். அண்ணனிடம் பெரும் அன்பும், அதற்கு மேல் மரியாதையும் பூண்டவன் என்பது அவனைப் பார்த்தாலே தெரிகின்றது. அவர்களுடன் இருக்கின்றாள் பேரழகியான ஒரு பெண். அவள் பெயர் சீதை. ராமனின் மனைவியாம் அவள். எப்பேர்ப்பட்ட பேரழகி தெரியுமா அவள்? அவள் இருக்க வேண்டிய இடம் உன் அந்தப் புரம். திருவான அந்த மகாலட்சுமியே அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தது போன்ற அற்புதத் தோற்றம் நிறைந்த அந்தப் பெண் உனக்கு மனைவியாக இருப்பதற்கே அருகதை படைத்தவள். அவளுக்கேற்ற கணவன் நீதான் ராவணா! நான் அவளை உனக்கு மனைவியாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடேயே அவளை நெருங்கினேன். அப்போது தான் அந்த லட்சுமணன் என் அங்கங்களை வெட்டி விட்டுத் துரத்தி விட்டான். பார் ராவணா, உனக்காக நான் இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், உன்னிடம் சொல்லி எப்படியாவது அந்த சீதையை நீ தூக்கி வந்தாவது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே வந்தேன்." என்று சொல்கின்றாள். அவள் வார்த்தையைக் கேட்ட ராவணன், தன் சபையில் வீற்றிருந்த மந்திரிமார்களை அனுப்பி விட்டுப் பெரும் யோசனையில் ஆழ்ந்தான்.
நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ந்து, சிந்தித்துப் பார்த்து, பின்னர் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய்த் தன் தேர் இருக்குமிடம் சென்று தேரோட்டியிடம் மாரீசன் இருக்குமிடம் போகச் சொல்கின்றான். தேரும் சென்றது. மாரீசன் இருக்குமிடமும் வந்தது.
*************************************************************************************
இனி நேயர் விருப்பம் இருந்தால் (:D) ராவணன் பிறப்பு, வளர்ப்பு பற்றிய விபரங்கள் வெளியிடப் படும். இதுக்கு எல்லாரும் வந்து ஓட்டுப் போடும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.
இராமாயனம் ஒரு பொய் . ஆரிய மாயை
ReplyDeletejaisankarj
// ராவணன் பிறப்பு, வளர்ப்பு பற்றிய விபரங்கள் வெளியிடப் படும். இதுக்கு எல்லாரும் வந்து ஓட்டுப் போடும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்//
ReplyDeleteவேண்டும் வேண்டும், ராவணன் பிறப்பு பற்றிய பதிவு வேண்டும். :-)
இராவனன் பிறப்பு, வளர்ப்பு தெரிந்து அவன் வந்து வோட்டு பொட போரானா?
ReplyDeleteவெட்டி வெலை என்பது இதுதானா?