எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 23, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 24


ராமனின் அழகைக் கண்டு வியந்த சூர்ப்பனகையானவள், அவரிடம், துறவிக் கோலத்தில், ஆனால், வில்லும், அம்பும் வைத்துக் கொண்டு, கூடவே மனைவியையும் வைத்திருக்கும் நீ யார் என வினவ, தான் ராஜா தசரதனின் குமாரன் ராமன் எனவும், இவள் தன் மனைவி சீதை எனவும், லட்சுமணன் இளைய சகோதரன் எனவும் கூறிவிட்டு, தந்தையின் கட்டளையைச் சிரமேற்கொண்டு வனவாசம் செய்ய வந்திருப்பதாய்க் கூறுகின்றார். பின்னர் சூர்ப்பனகையை யார் என ராமன் கேட்க அவளும் தன் கதையைச் சொல்கின்றாள். விஸ்ரவஸ் என்ற முனிவருக்கும், கைகசி என்ற ராட்சதப் பெண்ணிற்கும் பிறந்த ராவணன் என்பவன் தன் மூத்த தமையன் எனவும், அவன் சகோதரனும் பெரும் தூக்கம் கொள்பவனும் ஆகிய கும்பகர்ணனும், பக்திமான் ஆனவனும், ராட்சதர்களின் நடத்தை சிறிதும் இல்லாதவனும் ஆன விபீஷணன், மற்றும் அங்கிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள ஜனஸ்தானத்தில் வசிக்கும் கர, தூஷணர்கள் போன்றவர்கள் அனைவருமே தன் சகோதரர்கள் எனவும் சொல்கின்றாள். ராமா, நாங்கள் அனைவருமே உன்னை மிஞ்சுபவர்கள். உன்னைப் பார்த்த கணத்தில் இருந்தே உன்னை என் கணவனாய் வரித்து விட்டேன். என்னை ஏற்றுக் கொண்டு, விகார உருவத்துடன் இருக்கும் இந்த உன் மனைவியை விட்டு விடுவாயாக என வேண்டுகின்றாள்.

சாதாரணமாய் எந்த மனிதருமே ஒரு பெண், அதிலும் கோர உருவம் படைத்த அரக்கி இவ்விதம் கேட்கும்போது எவ்வாறு பரிகசித்து விளையாடுவார்களோ, அவ்விதமே ராமனும் பரிகசித்து விளையாடுகின்றான் சூர்ப்பனகையுடன். அவளைப் பார்த்து அவன் சொல்கின்றான்:
"ஏ, பெண்ணே! நான் மணமாகி என் மனைவியுடனே வசிக்கின்றேன். இதோ நிற்கும் என் தம்பி, என்னை விட அழகும், தைரியமும் நிரம்பியவன். அவன் மனைவியுடன் இல்லை. தனியே இருக்கின்றான். ஆகவே அவனை உன் கணவனாய் ஏற்றுக் கொள்வாயாக!" என்று லட்சுமணன் பக்கம் கையைக் காட்ட அண்ணனின் நோக்கைப் புரிந்து கொண்ட லட்சுமணனும் சிரிப்புடனேயே, "பெண்ணே, அண்ணனே உனக்குப் பொருந்துவார், அதை விடுத்து என்னிடம் வராதே! உன்னைப் போன்ற அழகி கிடைத்தால் அண்ணன் இந்தப் பெண்ணை விட்டுவிடுவார்!" என்று பரிகாசத்தை அதிகரிக்க, இது புரியாத சூர்ப்பனகை, இந்த சீதை இருந்தால் தானே ராமன் தன்னை ஏற்க மறுக்கின்றார் என நினைத்தவளாய், சீதையை அழிக்க நினைத்து, அவளை நெருங்க, உடனேயே விஷயம் முற்றுகிறதை உணர்ந்த ராமர், லட்சுமணனிடம்," இவள் கொடியவள் என்பதை அறியாமல் நாம் பரிகாசம் செய்து விட்டோமே! இவளைத் தண்டித்து சீதையைக் காப்பாற்று!" என்று சொல்ல கோபம் கொண்ட லட்சுமணனும், அவளின், காது, மூக்கு போன்றவற்றை அறுத்துத் தள்ளுகின்றான்.

சூர்ப்பனகை கதறிக் கொண்டே ஜனஸ்தானத்தில் உள்ள தன் தம்பியர் ஆன கர, தூஷணர்களிடம் போய் விழுந்தாள். தங்கள் தமக்கையின் அலங்கோலத்தைக் கண்டு ஆத்திரம் அடைந்த கர, தூஷணர்கள் அவளிடம் நடந்ததைக் கேட்க, அவளும் ராம, லட்சுமணர்களின் அழகையும், வீரத்தையும், கம்பீரத்தையும், அவர்களுடன் இருக்கும் பேரழகியான சீதையைப் பற்றியும் கூறிவிட்டு அவர்களைக் கொன்று தான் அவர்கள் ரத்தத்தைக் குடிக்க வேண்டும் எனச் சொல்லவே, முதலில் பல்லாயிரம் வீரர்களை அனுப்பிய கர, தூஷணர்கள் ராமன் ஒருவனே தனியாக அவர்களை அழித்தது கண்டு மிரண்டு போய் நிற்க, சூர்ப்பனகை வாயில் வந்தபடி இருவரையும் திட்டுகின்றாள். அவள் சமாதானம் அடைய வேண்டி, இருவரும் தங்களுடன் திரிசிரஸ் என்ற மூன்று தலையுடைய அசுரனுடனும் பல்லாயிரக் கணக்கான வீரர்களுடனும் சென்று ராமனுடன் போர் தொடுக்கச் செல்கின்றான். ராமன் லட்சுமணனிடம் தான் தனியாகவே இந்தப் போரைச் சமாளிப்பதாயும் லட்சுமணன், சீதையை அழைத்துக் கொண்டு குகையினுள் அவளை வைத்துவிட்டுக் காவல் காக்கும்படியும் சொல்லவே, அவ்வாறே லட்சுமணனும் சீதையுடனே குகைக்குள் செல்கின்றான். ராமர் கடும்போரிட்டுக் கர, தூஷணர்களை அழிக்கின்றார். விண்ணில் இருந்து வானவர்களும், மண்ணிலிருந்து ரிஷிகளும் பூமாரி பொழிந்து ராமனைப் பாராட்ட, குகையிலிருந்து லட்சுமணனும் சீதையுடனே வெளிப்பட அனைவரும் மகிழ்வுடனேயே திரும்பவும் ஆசிரமம் நோக்கிச் சென்றார்கள். ஜனஸ்தானத்தில் இருந்து தப்பிய அகம்பனன் என்னும் அரக்கன் ராவணனை அடைந்து ஜனஸ்தானத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்க ராவணன் கோபம் அடைகின்றான்.
*************************************************************************************
சகோதர ஒற்றுமை இங்கேயும் சொல்லப் பட்டாலும் அவை நற்காரியத்துக்கும், தர்மத்தை நிலை நாட்டவும் அல்லாமல், பழி வாங்கவே பயன்படுத்தப் படுகின்றது. கர, தூஷணர்களைச் சூர்ப்பனகை நாடுவதும் சரி, பின்னர் ராவணனிடம் சென்று அவனை சீதையை அபகரிக்கும்படி சொல்வதும் சரி, ஒரு விதத்தில் ராமனைப் பழிவாங்க வென்று தோன்றினாலும் உண்மையில் சூர்ப்பனகைக்கு ராவணனிடமும் கோபம் இருந்ததாயும் தெரியவருகின்றது. அது தவிர லட்சுமணனும் அவள் கோபத்தை அதிகரிக்கும் வகையில் அவள் பிள்ளையை, தெரியாமல் கொன்று விடுகின்றான். இங்கு சகோதர ஒற்றுமை என்பது அழிக்கவே பயன்படுத்தப் படுகின்றது. கடைசியில் குலம் அழியவும் காரணம் ஆகின்றது. ராவணனுக்கு சீதையை அபகரிக்கும் எண்ணத்தை முதலில் ஏற்படுத்தியது அகம்பனன் என்றாலும், மாரீசன் உதவியை நாடிய ராவணன், அவனால் நற்போதனைகள் போதிக்கப் பட்டுத் திரும்பிவிடுகின்றான் என்றாலும், பின்னர் சூர்ப்பனகையால் தூண்டப் படுகின்றான். சூர்ப்பனகை உண்மையில் ராவணனுக்கு சீதை மனைவியாக வேண்டும் என விரும்பினாளா? அப்படி என்றால் இதன் பின்னர் அவள் ஏன் இந்தக் கதையில் வரவில்லை? வஞ்சனை நிறைந்த சூர்ப்பனகையின் நோக்கம் ஒருவேளை ராவணனையும் அடியோடு அழிப்பதாயும் இருக்குமல்லவா? நாளை காண்போம்!

No comments:

Post a Comment