எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 18, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 19.



ராமன் காட்டுக்குச் சென்ற ஆறு நாட்கள் கழிந்த பின்னரே தசரதன் இறந்ததாய் வால்மீகி குறிப்பிடக் கம்பரோ சுமந்திரர் திரும்பி வந்து, தன்னுடன் ராமன் வரவில்லை எனக் கூறியதுமே உயிர் பிரிந்ததாய்க் கூறுகின்றார். சுமந்திரர் திரும்பியதுமே வசிஷ்டர் முகத்தைப் பார்த்ததுமே மன்னன் இவ்வாறு நினைத்தானாம்: "தைலமாட்டு படலம்: பாடல்: 582, 583

"இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான்
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம்
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இவ்
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகலப் போனான்."

என வசிஷ்டர் பதில் ஏதும் கூறாமல் மெளனமாய் இருந்ததை வைத்தே ராமன் வரவில்லை என அறிந்த தசரதனின் உயிரானது அக்கணமே பிரிந்தததாம்:

"நாயகன் பின்னும் தன் தேர்ப்பாகனை நோக்கி நம்பி
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும்
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்"

ராமனும், லட்சுமணனும் சீதையுடனேயே மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த காட்டுக்குள்ளே சென்று மறைந்தனர் என்று சுமந்திரன் கூறியதைக் கேட்ட உடனேயே தசரதன் உயிர் பிரிந்ததாம். உடனேயே மன்னனின் உயிரற்ற உடல் பாதுகாக்கப் பட்டது. வசிஷ்ட முனிவரின் தலைமையில் அமைச்சர்களும், மந்திரி பிரதானிகளும், மற்ற முனிவர்களும் ஒன்று கூடி அடுத்து நடக்க வேண்டிய காரியத்தைப் பற்றி ஆலோசித்து, வசிஷ்டரின் யோசனையின் பேரில் பரதனுக்கு உடனே அயோத்தி திரும்பி வருமாறு தூதர்களை அனுப்ப முடிவு செய்தார்கள். இங்கே நடந்த விபரங்களைச் சொல்லாமலேயே உடனே திரும்புமாறு உத்தரவிட்டால் போதும் எனவும் தெரிவிக்கப் பட்டது. அவ்வாறே தூதர்கள் கேகய நாடு கிளம்பிச் சென்றார்கள். அங்கே கேகய நாட்டிலோ பரதன் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்துக் கொண்டிருந்தான். முதல்நாள் இரவு முடியும் சமயம் அவன் கண்ட கனவு அவனை அவ்வாறு தவிக்க வைத்துக் கொண்டிருந்தது. தன் தந்தையான தசரத மாமன்னர் கழுதை பூட்டிய ரதத்தில் இரும்பு ஆசனத்தில் அமர்ந்து தென் திசை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கண்டதாகவும், மலை உச்சியில் இருந்து கீழே விழுவது போலவும் கனவு கண்டதாகவும் சொல்லி வருந்திக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த சிலர் அவனிடம் அயோத்தியில் இருந்து தூதுவர்கள் வந்திருப்பதாய்க் கூற அவனும் அவர்களைச் சந்திக்கின்றான். அவர்கள் அவனை உடனே நாடு திரும்புமாறு மந்திரி, பிரதானிமார் வேண்டுகோள், குல குருவான வசிஷ்டரும் அவ்வாறே சொல்லி அனுப்பி இருப்பதாய்த் தெரிவிக்க, பரதனோ தன் தாயான கைகேயியைச் சுயநலம் பிடித்தவள் எனக் கூறி அவள் நலமா என விசாரிக்கின்றானாம்.

சித்திரகூடத்தில் ராம, லட்சுமணர்கள், சீதையுடன் சுகமாய் வாழ்வதாய்த் தெரிவித்த பின்னரே, கம்பர் பரதனுக்கு வருகின்றார். கேகய நாட்டில் இருந்து அவன் அயோத்தி வந்து சேர ஒரு வாரம் ஆகின்றதாம், கம்பர், வால்மீகி இருவரின் கூற்றுப் படி! வால்மீகியும், சில நதிகள், சில, பல கிராமங்கள், பல நந்தவனங்கள் ஆகியவற்றைக் கடந்து பரதன் வந்ததாய்த் தெரிவிக்கின்றார். உள்ளே வரும்போதே பல துர்ச்சகுனங்கள் தென்படுகின்றதாம் பரதனுக்கு. சந்தேகத்தோடு தந்தையைக் காண கைகேயியின் மாளிகையை அடைகின்றான் பரதன். பரதனைக் கண்ட கைகேயி, தன் பிறந்த வீட்டையும், அங்கு உள்ள உறவினர்களையும் பற்றி விசாரிக்க, பரதனோ, தந்தை எங்கே, என்றும், அவரைத் தான் உடனே வணங்க வேண்டும் எனவும் கூற, தந்தை இறந்தார் என மிகச் சாதாரணமாகத் தெரிவிக்கின்றாள் கைகேயி. பரதன் அதிர்ச்சியோடு துக்கமும் அடைந்து, கடைசியில் தந்தை என்ன கூறினார் என வேண்ட கைகேயியும்,"ராமா, சீதா, லட்சுமணா!" எனக் கூவிக்கொண்டே உயிரை விட்டார் உன் தந்தை, என மகிழ்வுடன் கூறிக் கொண்டே, ராமனும், சீதையும், லட்சுமணனும் மரவுரி தரித்துக் காட்டுக்குச் செல்ல நேர்ந்த நிகழ்ச்சிகளை பரதனுக்கும் சந்தோஷம் தரும் என நினைத்துச் சொல்கின்றாள். ராமன் காட்டுக்கு அனுப்பப் பட்ட காரணம் கேட்ட பரதனிடம் கைகேயி தன் இரு வரங்களைத் தான் மன்னனிடம் யாசித்தது பற்றிச் சொல்லவும், கோபம் கொண்ட பரதன் கைகேயியைப் பலவாறு நிந்தித்துப் பேசலானான்.

தன் தாயைப்பார்த்து பரதன், "பாம்பினும் கொடியவளே! உன்னாலன்றோ தந்தை இறந்தார்? தமையன் காட்டிற்குச் சென்றான். அவனுக்கு நான் மனதில் எத்தகைய இடம் கொடுத்திருக்கிறேன் என்பதை நீ அறிந்திருந்தாயானால் இவ்விதம் செய்திருப்பாயா? முன்னோர்களின் ராஜ்யம் மூத்தவனுக்கே உரியது என்பது இக்ஷ்வாகு குலத்தில் உள்ள மாறுபடாத ஒரு வழக்கம். அதை மாற்ற நீ யார்? ராஜ மரபை மதிக்காத நீயும் ஒரு ராணியா? புண்ணியவான்களை முன்னோர்களாய்க் கொண்ட குடும்பத்தில் பிறந்த நீயா இம்மாதிரியான காரியம் செய்தாய்? ஆஹா, மகனைப் பிரிந்து மன்னர் எவ்வளவு வேதனையில் துடி துடித்து இறந்திருப்பார்? கோசலை தேவியும், அன்னை சுமித்திரையும் தத்தம் மகன்களைப் பிரிந்து எவ்வாறு துக்கத்தில் மூழ்கி இருப்பார்கள்? கன்றைப் பிரிந்த பசுப் போல் கோசலை துடிப்பாரே? அவர் எவ்விதம் இனி உயிர் வாழ்வார்? இக்கேடு கெட்ட செயலுக்கு நான் காரணம் என்றல்லவோ ஆகிவிட்டது? நான் இனி எவ்விதம் என் தாயார்கள் முகத்தையோ, சகோதரர்கள் முகத்தையோ, தேவி சீதையையோ பார்ப்பேன்? அடி, பாவி, அழியாத பழியை என் மீது சுமத்தி விட்டாயே? நீ இந்த ராஜ்யத்தை விட்டுப் போனால் தான் அனைவருக்கும் நிம்மதி!" என்றெல்லாம் கோபமாய்ப் பேசிவிட்டுத் தன் மூத்த இரு தாயார்கள் ஆன சுமித்திரையையும், கோசலையையும் காணப் புறப்படுகின்றான், சத்ருக்கனனுடன். அப்போது கோசலையே அங்கே பரதனின் கோபக் குரல் கேட்டு வருகின்றாளாம், நடக்கக் கூட முடியாமல். என்றாலும் கோசலை அவ்வளவு துக்கத்திலும் பரதனிடம் கடும் மொழிகளையே பேசுகின்றாளாம். துடி துடிக்கும் பரதன் அவள் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்கின்றான்.

தன் தாயின் விருப்பம் தன்னுடையதில்ல எனச் சொல்லும் அவன் ஒரு பாவப் பட்டியல் ஒன்றைக் கோசலையிடம் சொல்லி ராமரைக் காட்டுக்கு அனுப்பியவர்கள் அத்தகைய பாவங்களைச் செய்தவர்கள் ஆவார்கள் என்று சொல்லி அழுது புலம்புகின்றான். பின்னர் வசிஷ்டர் பரதனைத் தேற்றி, ஆகவேண்டிய காரியங்களை மன்னனுக்குச் செய்யச் சொல்லி நீத்தார் கடன்களை முடித்து வைக்கின்றார். அப்போது அங்கே வரும் மந்தரையைக் கண்டு சத்ருக்கனன் கோபத்துடன் அவளைத் தண்டிக்க முயலக் கைகேயியால் அவள் காப்பாற்றப் படுவதாய் வால்மீகி கூறுகின்றார். பின்னர் பரதன் தான் நேரில் காட்டுக்குச் சென்று ராமனைச் சந்தித்து நாட்டுக்குத் திரும்பி வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசாளவேண்டும் எனக் கேட்கப் போவதாயும், அதற்கான ஆயத்தங்களைச் செய்யுமாறும் வேண்டிக் கொள்கின்றான். அனைவரும் மனம் மகிழ, பரதன் அயோத்தி மக்கள் புடை சூழப் பெரும்படையோடு கிளம்புகின்றான். கங்கைக் கரையில் குகனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்த சைன்னியத்தைப் பார்த்தும், அதன் விபரங்களைக் கேட்டும் குகன் சந்தேகத்தில் ஆழ்ந்தான்! கவலை சூழ்கின்றது அவனுக்கு!

*************************************************************************************
வால்மீகி ராமாயணத்தில் தசரதரின் இறுதிச் சடங்குகளை பரதனே செய்கின்றான் என்றே வருகின்றது. தசரதன் பரதன் நாட்டை ஏற்றுக் கொண்டானானால் அவன் என் மகன் இல்லை என்றே கூறுகின்றார். பரதனோ நாட்டை ஏற்கவே இல்லை என்பதோடு ராமனையும் திரும்ப வரவழைக்க வேண்டும் என்றே கூறுகின்றான். ஆகவே தசரதரின் சாபம் அவனைத் தாக்கவில்லை என்றே வால்மீகியின் கூற்று. துளசியும் அவ்வாறே எழுதி இருக்கின்றார் என்று தெரிய வருகின்றது. ஆனால் கம்பரோ சத்ருக்கனன் இறுதிச் சடங்குகள் செய்தான் என்று கூறுகின்றார். கோசலை பரதனைப் பார்த்து இவ்வாறு கூறுவதாயும் : பள்ளியடைப் படலம்: பாடல்: 903

"மறு இல் மைந்தனே வள்ளல் உந்தையார்
இறுதி எய்தி நாள் ஏழ் இரண்டின
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று
உறுவல் மேயினாள் உரையின் மேயினாள்.

எனக் கோசலை தந்தை இறந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டதாயும் உடனே ஈமக் கடன்களை நிறைவேற்றவும் கூறுகின்றாள். ஈமக் கடன்கள் செய்ய ஏற்பாடுகளும் செய்து பரதன் சடங்குகள் செய்யப் போகும் வேளையில் வசிஷ்டர் சொல்வதாய்க் கம்பர் கூறுகின்றார்: பாடல்: 912
"என்னும் வேலையில் எழுந்த வீரனை
அன்னை தீமையால் அரசன் நின்னையும்
துன்னு துன்பத்தால் துறந்து போயினான்
முன்னரே என முனிவன் கூறினான்."

என உன் அன்னை செய்த கொடுஞ்செயலால் உன்னையும் உன் தகப்பன் துறந்துவிட்டான் என வசிஷ்டர் கூறியதாய்க் கூறுகின்றார். அதன் பின்னர் சத்ருக்கனனைக் கொண்டு ஈமச் சடங்குகள் செய்வித்ததாய்க் கூறுகின்றார் கம்பர்: பாடல் எண் 920

"என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அத்
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்
அன்று நேர்கடன் அமைவது ஆக்கினான்
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான்"
என சத்ருக்கனனைக் கொண்டு ஈமச் சடங்குகளைச் செய்வித்ததாய்க் கூறுகின்றார் கம்பர்.
*************************************************************************************பல தரப் பட்ட குணாதிசயங்களும் ராமாயணத்தில் பேசப் படுகின்றன. தசரத மன்னன் பல விதங்களில் புகழ் பெற்றிருந்தாலும் பெண்ணாசை என்ற ஒன்றால் வீழ்த்தப் பட்டான், சொந்த மனைவியாலேயே. அவன் மகன்கள் நால்வருமோ, ஒருவரை ஒருவர் விஞ்சும்படியான குணாதிசயங்களைக் கொண்டிருந்ததோடு மட்டுமில்லாமல், நால்வருக்கும் மன ஒற்றுமையும் இருந்து வந்தது. மூத்தவன் என்ற காரணத்தினால் ராமன் மற்றச் சகோதரர்களால் மிகவும் மதிக்கப் பட்டதோடு அல்லாமல், தானும் அதுக்குத் தக்க பாத்திரமாகவே வாழ்ந்தும் காட்டினான். தன் இளைய சகோதரனுக்காகத் தனக்கு உரிமையுள்ள அரசாட்சியைத் துறக்கின்றான். சகோதர பாசத்தில் ஒருவரை மிஞ்சினர் இவர்கள் நால்வரும், என்றால்,இன்னும் நாம் பார்க்கப் போகும் சகோதரர்கள், வாலி, சுக்ரீவன், தம்பியான சுக்ரீவனை நாட்டை விட்டே விரட்டினான் வாலி! ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், அவர்களிடையே ஒற்றுமை உண்டா? இல்லை எனில் ஏன் இல்லை? சகோதர உறவின் மேம்பாட்டை ராமன் - பரதனிடையே கண்டோமானால், அதன் வேறொரு நிலைப்பாட்டை இனி நாம் ராவணன் -விபீஷணனிடம் காணப் போகின்றோம். இரு வேறு துருவங்களான மனிதர்கள் இப்போதும் இருக்கின்றார்கள். ஒரு தாயின் வயிற்றிலேயே நல்லவனும், பிறக்கின்றான், கெட்டவனும் பிறக்கின்றான். வெவ்வேறு தாய்மார்களின் வயிற்றில் பிறந்த ராம, லட்சுமண, பரத, சத்ருக்கனர்கள் சகோதர உறவு என்றால் எவ்விதம் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே விளங்கினார்கள் என்று சொல்வது சற்றும் மிகை இல்லை!

4 comments:

  1. //ஒரு தாயின் வயிற்றிலேயே நல்லவனும், பிறக்கின்றான், கெட்டவனும் பிறக்கின்றான். //

    உண்மைதான்.....பெற்றவள் இரு மக்களையும் ஒரே மாதிரித்தான் வளர்ப்பாள்....ஆனாலும் ஒன்று நல்லவனாகவும், இன்னொன்று கெட்ட்வனாகவும் ஆக காரணம் என்ன?

    ReplyDelete
  2. எல்லாம் அந்த அந்த ஜீவனோட வாசனைதான்!

    ReplyDelete
  3. கோபப்படாமல் இதையும் படியுங்கள். இதை ஏற்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. குறைந்தபட்சம் சிந்தியுங்கள். அப்புறம் முடிவு செய்யுங்கள்.

    சீதை - இராமணுக்கு தங்கை --ராமாயணம்-எத்தனைஎத்தனை ராமாயணம்!

    ராமாயணம் நடந்ததுதான்; கற்பனை அல்ல. ராமர் வாழ்ந்தார்; பாலம் கட்டினார் என்பவர்கள், எந்த ராமாயணத்தில் உள்ளபடி ராமர் வாழ்ந்தார் என்று எதிர்கேள்வி எழுப்பினால் முறையாக பதிலளிக்க முன்வருவதில்லை.

    இன்றைக்கு நேற்றல்ல; 1920-களிலேயே தந்தை பெரியார் அவர்கள் ராமாயணம்பற்றி ஆய்வு நடத்தி பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்!

    வால்மீகி ராமாயணம் - கம்ப ராமாயணம், துளசி தாசர் ராமாயணம் மட்டுமே ராமாயணங்களல்ல. இவை தவிர அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு முரண்பட்ட தகவல்கள் கொண்ட ராமாயணங்களும், மூட நம்பிக்கைகளும் இருக்கின்றன. சீதை ராமனின் தங்கை என்று சொல்கிற ராமாயணமும் இருக்கிறது என்றெல்லாம் பல்வேறு ராமாயணங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு - அவற்றில் காணப்படும் முரண்பாடு களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

    பெரியார் மட்டுமல்ல; பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, சந்திரசேகரப் பாவலர், பண்டிதர் சவரிராயப் பிள்ளை, ஆர்.சி. தத்தா போன்ற ஆராய்ச்சியாளர்கள் பலரும் பல்வேறு ராமாய ணக் கதைகளை ஒப்பிட்டுக் காட்டி - ராமாயணம் நடந்த கதை யல்ல; கற்பனைதான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

    ந.சி. கந்தையாப்பிள்ளை அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த அரும்பெரும் ஆராய்ச்சியாளர். அவர் எழுதிய நூல்களையெல்லாம் திரட்டி - தொகுப்பாக 20-க்கும் மேற்பட்ட தொகுப்பாக - வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே பத்தாவது தொகுப்பு ஆரியர் - தமிழர் கலப்பு என்ற தலைப்பில் வெளி வந்திருக்கிற நூலாகும். அமிழ்தம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலில்,

    தசரத சாதகம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இராம காதையை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
    ராமாயணத்தில் தென்னாடு சம்பந்தமாகக் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்குச் சமாதானம் காண மாட்டாத வடநாட்டு வரலாற்றாசிரியர்கள் இலங்கை என்பது இலங்கைத் தீவு அன்று; அது தண்ட காருண்யத்தை அடுத்திருந்த ஓர் இடம் எனக் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
    கவுதம புத்தர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் விளங்கினார். அவர் காலத்தோ, அதற்குச் சிறிது பின்போ, புத்தரின் பழம் பிறப்புகளைக் கூறும் சாதகக் கதைகள் எழுந்தன. அக்கதைகளுள் ஒன்றாகிய தசரத சாதகத்தில் இராம கதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

    "முன்னொரு காலத்திலே வாரணவாசியில் தசரதன் என்னும் அரசன் வாழ்ந்தான். அவனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்களுள் பட்டத்துத்தேவி இரு குமாரரையும், ஒரு குமாரத்தியையும் பெற்றாள். மூத்த குமாரன் இராமன், இரண்டாம் குமாரன் இலக்குமணன்; புதல்வி சீதை.

    பின்பு அரசி இறந்து போனாள். அவள் இறந்து போதலும் அரசன் இன்னொருத்தியை மணந்தான். அவன் அவளிடத்தில் மிக மயங்கியிருந்தான். அவள் வயிற்றில் ஒரு மகன் பிறந்தான். அவனுக்குப் பரதன் என்ற பெயர். மகன்மீது கொண்ட பற்றினால் அரசன் பட்டத்துத் தேவியை ஒரு வரம் கேட்கும்படி சொன்னான். அவள், தான் வேண்டும்போது வரத்தைக் கேட்டுக் கொள்வதாகச் சொன்னாள். பரதனுக்கு எட்டு வயதாயிற்று. அப்பொழுது அவள் அரசனிடம் சென்றாள். முன் கொடுப்பதாகச் சொன்ன வரத்தின்படி இராச்சியத்தை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டாள். அரசன் கையை உதறி, ``நாயே, எனது அழகிய இரண்டு மக்களையும் கொன்றுவிட்டு இராச்சியத்தை உன் மகனுக்குக் கொடுக்கும்படி கேட்கிறாயா? என்றான். அவள் அரசனின் கோபமான சொற்களைக் கேட்டுப் பேசாது அறையினுள் சென்றாள். அவள் தினமும் அரசனை அடைந்து நாட்டை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டு வந்தாள். அவன், ``பெண்கள் தீயவர்கள்; இவள் பொய்யான கடிதம் எழுதி அல்லது எவருக்காவது கைக்கூலி கொடுத்து என் புதல்வரைக் கொன்று விடுவாள் என்று தனக்குள்ளே நினைத்தான். அவன் தனது இரு புதல்வரையும் அழைத்து, ``நீங்கள் இங்கிருந்தால் உங்களுக்குப் பல துன்பங்கள் நேரும்; நீங்கள் அடுத்த இராச்சியத்துக்கு அல்லது காட்டுக்குச் செல்லுங்கள்; எனது மரணக்கிரியை நடக்கும்போது வந்து எனது இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னான்.

    அவன் சோதிடரை அழைத்தான். தனக்கு இன்னும் எவ்வளவு கால வாழ்நாள் இருக்கின்றதென்று பார்க்கும்படி சொன்னான். அவர்கள் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வரும்படி அரசன் தனது இரு புதல்வர்களுக்கும் சொன்னான். ``நானும் எனது சகோதரர்களுடன் செல்லப் போகின்றேன் என்று சீதை சொன்னாள். பலர் பின் தொடர மூவரும் நாட்டுக்கு வெளியே சென்றார்கள். அவர்கள் உடன் வந்தவர்களைப் போகும்படிச் சொல்லிவிட்டு ஹமவந்தா என்னும் காட்டை அடைந்தார்கள். அங்கே இலைகளால் வேய்ந்த குடிசை ஒன்றை அமைத்தார்கள். இராமனைக் குடிசையில் இருக்கும்படி சொல்லிவிட்டு இலக்குமணனும், சீதையும் பழங்கள் கொண்டுவர வெளியே சென்றார்கள். அன்றுமுதல் இராமன் குடிசையில் இருந்தான்; மற்ற இருவர் பழங்களைக் கொண்டு வந்தார்கள்.

    இவர்கள் இவ்வாறு இருக்கும்போது தசரதன் மக்களைப் பிரிந்த கவலையினால் ஒன்பதாவது ஆண்டே மரணமானான். ஈமக்கிரியை முடிந்தது. ``எனது குமாரனுக்கு முடிசூட்டுங்கள் என்று அரசி, மந்திரிமாரிடம் சொன்னாள். அவர்கள் அதற்கு இணங்கவில்லை. பரதன் இராமனைக் காட்டினின்றும் அழைத்து வருவதாகச் சொல்லி நால்வகைச் சேனைகளோடும் புறப்பட்டான். அவன் சேனையைத் தூரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றான். அப்பொழுது இலக்குமணனும், சீதையும் பழம் பறிக்க வெளியே சென்றிருந்தார்கள். பரதன் இராமனைக் கண்டான்; அவன் பாதங்களில் விழுந்து வணங்கித் தந்தையின் மரணத்தைக் கூறினான். இராமன் கவலை கொள்ளவும் இல்லை, அழவும் இல்லை; பரதன் அழுதுகொண்டிருந்தான். அப்பொழுது மற்ற இருவரும் பழங்கள் கொண்டு வந்தனர். தந்தையின் மரணத்தைக் கேட்டதும் அவர்கள் மயக்கமடைந்தார்கள். அறிவு தெளிந்த பின் அவர்கள் எல்லாரும் அழுது கொண்டிருந்தார்கள்; இராமன் அழவில்லை. பரதன் இராமனை நோக்கி ``நீர் அழாமல் உறுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்டான். ``மனிதனால் ஆகாத ஒன்றிற்காகப் புலம்புவதால் பயனில்லை. பழுத்த பழம் எப்பொழுதாவது நிலத்தில் விழுந்துவிடும். பிறந்தவர் எல்லாரும் ஒரு நாளைக்கு இறந்துவிடுவர் என்று இராமன் சொன்னான். இதைக் கேட்டு மற்றவர்கள் ஆறுதலடைந்தார்கள்.

    பரதன் வணங்கி வாரணவாசியை ஆளும்படி இராமனைக் கேட்டான். ``இலக்குமணனையும், சீதையையும் அழைத்துச் சென்று நீயே ஆட்சி செய். எனது தந்தை பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வரும்படிக் கட்டளையிட்டார். இப்பொழுது வந்தால் நான் தந்தையின் கட்டளையைக் கடந்தவனாவேன். நான் இன்னும் மூன்று ஆண்டுகளின் பின் வருவேன் என்றான். அவ்வ ளவு காலமும் யார் ஆட்சி புரிவார் என்று பரதன் கேட்டான்.

    இராமன் ``எனது மிதியடிகள் ஆட்சி புரியும் என்று சொல்லித் தனது, புல்லால் முடைந்த மிதியடிகளை அவனிடம் கொடுத்தான். மூவரும் மிதியடிகளை எடுத்துக்கொண்டு வாரணவாசி சென்றார்கள். மந்திரிமார், சிங்காசனத்தின்மீது மிதியடிகளை வைத்து ஆட்சி புரிந்தார்கள். ஆகாத யோசனைகளை அவர்கள் செய்ய நேர்ந்ததால், மிதியடிகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. மூன்று ஆண்டுகள் கழிந்தன. இராமன் காட்டினின்றும் வந்தான். அவன் பதினாறாயிரம் ஆண்டுகள் நீதி ஆட்சி புரிந்து வானுல கடைந்தான்.

    இவ்வரலாற்றில் இராவணன் சீதையைக் கவர்ந்ததைப் பற்றியோ, இராம இராவணப் போர்களைப் பற்றியோ யாதும் கூறப்படவில்லை. தசரத சாதகக் கதை எழுதப்படுகின்ற காலத்தில் இராம. இராவணப் போர்களைப்பற்றிய வரலாறு வழங்கவில்லை என நன்கு புலப்படுகின்றது. தொடக்கத்தில் தசரத சாதகத்தில் சொல்லப்பட்டதுபோல வழங்கிய கதையே பிற்காலத்தில் இன்றைய இராமாயணமாக வளர்ச்சியடைந்தது. இவ்வாறு இராமாயணம் மேலும் மேலும் வளர்வதற்குள்ள காரணம் இராமர் விட்டுணுவின் அவதாரமெனப் பிற்காலத்திலெழுந்த தவறான கருத்தேயாகும்."

    - என்று குறிப்பிட்டிருக்கிறார் ந. சி. கந்தையாப் பிள்ளை.

    பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் என்ற கவியரசு கண்ணதாசனின் பாடலைப்போல இராமாயணங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதாகப் பல்வேறு இராமாயணங் களும் பல்வேறு முரண்பாடுகளுடன் எழுதி வைக்கப்பட்டி ருக்கின்றன.
    தசரத சாதகம் - சீதைக்கு இராமன் அண்ணன் என்கிறது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகத்தில் சீதை ராமனின் சகோதரியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாள். பிற்காலத்தில் ராமாயணம் எழுதியவர்கள் - அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு புதுப்புது இராமாயணங்களைப் படைத்து விட்டார்கள்.

    தமிழ்நாட்டிலேகூட ``சீதைக்கு ராமன் சித்தப்பா என்று கேலி பொங்கிடும் ஒரு பழமொழி இருக்கிறதே.

    நன்றி: `"முரசொலி" 21.9.2007

    ReplyDelete
  4. //உண்மைதான்.....பெற்றவள் இரு மக்களையும் ஒரே மாதிரித்தான் வளர்ப்பாள்....ஆனாலும் ஒன்று நல்லவனாகவும், இன்னொன்று கெட்ட்வனாகவும் ஆக காரணம் என்ன?//

    குட் கொஸ்டின். கீதா அக்கா விளக்கவும்.:)

    ReplyDelete