
குகனைப் பொறுத்த மட்டில் அவன் ஒரு சிற்றரசன் என்றும் ராமனின் நெடுநாள் நண்பன் எனவும் வால்மீகி கூறக் கம்பரோ ஆயிரக்கணக்கான ஓடங்களை உடைய ஒரு ஓடக் கூட்டத்தின் தலைவன் என வர்ணிக்கின்றார், மேலும் வால்மீகி தராத ஒரு சிறப்பையும் அவர் குகனுக்குத் தருகின்றார்.ராமனைக்குகன அப்போதே அறிவதாய்க் கூறும் கம்பர் மேலும் குகனே ஓடத்தை ஓட்டிக் கங்கையைக் கடக்க உதவுவதாய்ச் சொல்லும் கம்பர், மேலும் ஒரு படி போய், அவனிடம் தான் ராமன் சித்திரகூடம் செல்லும் வழியைக் கேட்டதாய்க் கூறும் கம்பர், இவை அனைத்துக்கும் மேலாய் அவனை ஸ்ரீராமன் ஒரு சகோதரனாய் வரித்ததாயும் கூறுகின்றார் இவ்வாறு:
"துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வெம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்"
என்று ராமன் குகனைப் பார்த்து, நாங்கள் நால்வர் சகோதரர்களாய் இருந்தோம் உன்னைப் பார்க்கும் முன்னர். ஆனால் இப்போது உன்னோடு சேர்ந்து நாம் ஐவர் என்றாராம். இதற்கு முன்னாலேயே தசரதன் உயிர் நீங்குவது பற்றிக் குறிப்பிடுகின்றார் கம்பர். ஆனால் வால்மீகி நடந்ததை நடந்தபடியே கூறுகின்றார். கம்பருக்கு ராமன் ஒரு அவதார புருஷன், வால்மீகிக்கு அவர் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதன், அவ்வளவே!

காட்டில் தங்கிய ராமர் தன் தாயையும், தகப்பனையும் பிரிந்து இருப்பதைப் பற்றியும் தன் தாயையும், தகப்பனையும் கூடக் கைகேயி துன்புறுத்துவாளோ என்றும் அஞ்சிப் புலம்ப ஆரம்பித்தார் என்று சொல்கின்றார் வால்மீகி. பெண்மாயையால் தகப்பன்மனம் மாறியதைக் குறிப்பிட்டுக் கூறும் ராமர், லட்சுமணனை உடனே அயோத்தி திரும்பித் தாய்மாரையும், தந்தையையும் பார்த்துக்கொள்ளச் சொல்லி வேண்டுகின்றார். லட்சுமணன் ராமரைப் பிரிய மறுக்க இவ்வாறு பேசிக் கொண்டே இரவு கழிகின்றது என்கின்றார் வால்மீகி. இதைப் பார்க்கும்போது, ராமாயண யுகத்திற்குப் பின்னர், மற்றொரு யுகம் கழிந்தும் பல நூற்றாண்டுகள் ஆகிய பின்னர், ஸ்ரீராமனை ஒரு தெய்வமாகவே போற்றி வாழும் நமக்குக் கொஞ்சம் ஆச்சரியம் மட்டுமின்றி, ஜீரணிக்கவும் முடியாது தான். ஆனால் ஒரு மனிதனாய் வாழ்ந்து வந்தார் ராமர் என்ற நோக்கிலே பார்க்கவேண்டும். மனிதனுக்கே உரிய குணாதிசயங்கள் அவரிடமும் நிரம்பி இருந்தது என்பதே உண்மை! ராமன் என்ற தெய்வமா இப்படிச் செய்தது என்ற குழப்பத்தைக் கொண்டு வராமல், நாமாக இருந்தாலும் இப்படித் தானே நடப்போம் என நினைத்தால் குழம்பவே மாட்டோம். கதையின் போக்கிற்கும், பின்னால் வரக்கூடிய வாலி வதம், சீதையின் அக்னிப்ரவேசம் போன்ற இடங்களில் ராமனின் போக்கைப் புரிந்து கொள்ள இது உதவும் என்பதாலேயே இந்தக் குறிப்பு இங்கே தரப் படுகின்றது. குறைகள் இல்லாத மனிதனைப் படைக்கவே இல்லை, நம் இதிகாசங்களோ, புராணங்களோ. அந்தக் குறைகளை வென்று முன்னேறுவது பற்றித் தான் அவை சொல்கின்றன. இதையும் நினைவில் கொள்ளவேண்டும். தன் பேச்சில், குணத்தில், செய்கைகளில் அங்கங்கே சாதாரண மனிதன் போல் குறைகள் கொண்டிருந்த ஸ்ரீராமன் அந்தத் தர்மத்தைச் சற்றும் வழுவாமல், சொன்ன சொல் தவறாமல், நேர்மையின் வடிவமாய்த் திகழ்ந்ததாலேயே அவனுக்குப் பெருமை! இது அவனுக்கு ஒரு சிறுமை அல்ல.
பின்னர் அங்கிருந்து கங்கை, யமுனை சேருமிடம் அது, அதன் அருகில் உள்ள பிரயாகையில் தான் பரத்வாஜர் ஆசிரமம் உள்ளது எனத் தெரிந்து கொண்டு ராம, லட்சுமணர்கள் அங்கே சென்று பரத்வாஜரைப் பணிந்து வணங்கி, ஆசி பெற்றுவிட்டு, அவர்கள் வசிக்கத் தகுந்த இடம் சொல்லுமாறு கூற பரத்வாஜரோ அங்கே தங்கும்படி வேண்டுகின்றார். அயோத்திக்கு இவ்வளவு அருகாமையில் தான் வசிக்க விரும்பவில்லை என ராமர் கூற பின் அவரும் அங்கிருந்து சித்ரகூடம் என்னும் இடத்துக்குச் செல்லும் வழியைக் கூறுகின்றார். இரவுப் பொழுதை பரத்வாஜரின் ஆசிரமத்தில் கழித்துவிட்டுப் பின்னர் யமுனையை ஒரு கட்டுமரத்தின் உதவியால் கடந்து மூவரும் சித்ரகூடம் செல்கின்றனர். அங்கே உள்ள வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்து அவரிடம் ஆசி பெற்றுவிட்டுப் பின்னர் தங்குமிடம் தேர்ந்தெடுத்து மால்யவதி நதிக்கரையில் இறைவனை முறைப்படி பூஜித்து ஒரு பர்ணசாலையை லட்சுமணன் நியமிக்க, அதிலும் முறைப்படியான வழிபாடுகளை நடத்திவிட்டு அதில் தங்க ஆரம்பிக்கின்றனர், மூவரும்.
*************************************************************************************
இங்கே கங்கைக் கரையில் ராமனிடம் இருந்து விடைபெற்ற குகன் தன் இருப்பிடம் திரும்புகின்றான். அவன் ஆட்கள், ராம, லட்சுமணர்கள் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அடைந்து, அங்கிருந்து சித்ரகூடம் சென்றதை அவனிடம் தெரிவிக்க அவனும் சுமந்திரருக்குச் செய்தியைக் கொடுக்க அதைப் பெற்ற சுமந்திரரும் நாடு திரும்ப ஆயத்தம் ஆகின்றார். ராமன் இன்றி அயோத்தி திரும்பிய சுமந்திரரை மக்கள் வெள்ளம் சூழ்ந்து கொள்ள, அதை சமாளித்துக் கொண்டு அரண்மனை சென்ற அவரிடம் கோசலை தன் மகனைப் பற்றி விசாரிக்கின்றாள். சுமந்திரரைப் பார்த்ததுமே தசரதன் மயக்கமுற்றுத் தரையில் விழ, கோசலையோ, கைகேயி ஏதும் நினைத்துக் கொள்வாளோ என்ற எண்ணத்தால் பேசாமல் இருக்கின்றீர்களோ எனக் கடுமையாகக் கேட்கின்றாள். ராமனும், சீதையும் பெரியோரை வணங்கிப் பேசிய பேச்சையும், லட்சுமணனின் அடங்காக் கோபத்தையும் எடுத்து உரைத்த சுமந்திரர், மக்களும் மிகுந்த துயரத்தை அடைந்திருப்பதாய்த் தெரிவிக்கின்றார். அதை ஏற்றுக் கொள்ளும் தசரதர் மிக்க வேதனையுடனேயே பேசுகின்றார். ராமனிடமும், சீதையிடமும் தன்னை அழைத்துச் செல்லச் சொல்கின்றார். முதலில் கடுமையாகப் பேசிய கோசலையோ இப்போது அவரைத் தேற்ற ஆரம்பிக்கின்றாள். என்றாலும் அவளுக்கு மீண்டும் மகன் பிரிவு என்னும் துயர் வாட்ட, "நீரும் ஒரு அரசனா? அரச லட்சணங்கள் உம்மிடம் உள்ளதா? ராமனை இவ்வாறு நாடு கடத்தியதன் மூலம் நீர் என்னையும் அழித்ததோடு அல்லாமல் இந்தக் கோசல நாட்டையும் அழித்துவிட்டீர் என்றெல்லாம் சொல்கின்றாள். பின்னர் தசரதரும் அவளிடம் மன்னிப்புக் கேட்க அவளும் மன்னிப்புக் கேட்க இப்படியே பொழுது அஸ்தமிக்கின்றது, கொடும் இரவும் வருகின்றது.
ராமன் காடு சென்ற ஆறாம் நாள் இரவில் தசரதனுக்குத் தாம் செய்த அந்தக் கொடுஞ்செயல், முனிகுமாரனை, யானை என நினைத்துத் தான் அம்பு எய்தியதும், அதனால் வீழ்ந்த முனிகுமாரன் இறந்ததும், அவன் பெற்றோரிடம் சென்று தான் உண்மையை உரைத்ததும், அதனால் அவர்களின் சாபம் தனக்குக் கிட்டவில்லை எனவும், இல்லை எனில் இந்த ரகுவம்சமே அழிந்து பட்டிருக்கும், என் தலை ஆயிரம் சுக்கல் ஆகி இருக்கும், ஆனால் என் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தப்பினேன் என்றும் நினைவு கூருகின்றான். மேலும் அந்த முனிகுமாரனின் பெற்றோர் தங்கள் ஒரே மகன் இறந்து உயிர் வாழ விரும்பாமல் தசரதனையே அவர்களையும் கொல்லுமாறு கூறியதையும் பின்னர் பிரிவு தாங்காமல் மகனுக்காகச் சிதை வளர்த்து அதில் இருவரும் விழுந்து உயிர் விட்டதையும் உயிர் விடுமுன்னர் தனக்கு அளித்த சாபத்தையும் நினைவு கூருகின்றார். முனிவர் சாபம் ஆனது:" மகனைப் பிரிந்து நாங்கள் படும் துன்பம் போல் உனக்கும் நேரும். நீயும் உன் மகனைப் பிரிந்து அந்தப் பிரிவின் காரணமாய் உயிர் விடுவாயாக. எவ்வாறு உன் நற்காரியங்களின் பலனை நீ அனுபவிக்கின்றாயோ, அவ்வாறே உன் தவறுகளின் விளைவுகளையும் ஏற்றுத் தான் தீரவேண்டும்" என்று கூறியதை நினைவு கூர்ந்தான். இவ்வாறு இரவு பூராவும் புலம்பிய மன்னன் பின்னர் இறந்தான்.
வால்மீகியில் ராமன் காட்டுக்குச் சென்ற ஆறாம் நாள் தசரதன் இறந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. ஆனால் கம்பர் ராமன், சீதையுடன் தேரில் ஏறிச் சுமந்திரருடன் புறப்பட்ட அன்றே இறந்துவிட்டதாய்த் தெரிவிக்கின்றார். மேலும் முனிவர் சாபம் கொடுக்கும்போது வால்மீகியின் கூற்றுப் படி தசரதன் திருமணமே ஆகாத ஒரு இளைஞன், ஆனால் கம்பர் சொல்வதோ, மகனைப் பிரிந்து அந்தச் சோகத்தினால் இறப்பாய் என முனிவர் சாபம் இட்டதால் தனக்கு ஒரு மகன் நிச்சயம் உண்டு என்ற ஆனந்தம் வந்ததாய்த் தெரிவிக்கின்றார் இவ்வாறு: நகர் நீங்கு படலம்: பாடல் எண் 378& 379:
"தாவாது ஒளிரும் குடையாய் தவறு இங்கு இது நின் சரணம்
காவாய் என்றாய் அதனால் கூடிய சாபம் கருதேம்
ஏவா மகவைப் பிரிந்து இன்று எம்போல் இடர் உற்றவை நீ
போவாய் அகல் வான் என்னாபொன் நாட்டிடை போயினரால்."
மன்னனே தன் தவறை ஒத்துக் கொண்டதால் சாபம் கடுமையாகக் கொடுக்க விரும்பாத முனி தம்பதிகள், நீ ஏவல் சொல்லாமலேயே குறிப்பறிந்து பணிபுரியும் ஒரு மகனைப் பெற்று அவனைப் பிரிந்து நாங்கள் இப்போது துன்புறுவது போலவே நீயும் துன்புற்று மடிவாய்!" என்று கூறிவிட்டு இருவரும் இறந்ததாய்ச் சொல்கின்றான். பின்னர்:
"சிந்த தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன்சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்"
நானோ அச்சாபத்தால் மனம் தளராமல் அப்போது நமக்கு ஒரு அரிய நற்குணங்களுடன் கூடிய மகன் பிறப்பான் என்று எண்ணம் வந்ததால் மன மகிழ்வோடேயே அயோத்தி திரும்பினேன். இப்போது ராமன் காட்டுக்குப் போவதும் உறுதி, அவனைப் பிரிந்து நான் இறப்பதும் உறுதி என்று சொல்கின்றான். இவ்விதம் பெண்ணாசையால் மதி இழந்த மன்னன் தசரதன் தன் மைந்தர் நால்வரில் ஒருவர் கூட அருகிருந்து பணிவிடை செய்ய முடியாமல் இறந்தான். அவன் உடல் பாதுகாக்கப் பட்டு பரதனின் வரவுக்குக் காத்திருந்தது. ஏற்கெனவேயே துக்கத்தில் ஆழ்ந்த அயோத்தி மக்கள் மேலும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.
படித்தேன்னுமட்டும் சொல்லிட்டு ஜூட்.
ReplyDeleteநானோ அச்சாபத்தால் மனம் தளராமல் அப்போது நமக்கு ஒரு அரிய நற்குணங்களுடன் கூடிய மகன் பிறப்பான் என்று எண்ணம் வந்ததால் மன மகிழ்வோடேயே அயோத்தி திரும்பினேன். இப்போது ராமன் காட்டுக்குப் போவதும் உறுதி, அவனைப் பிரிந்து நான் இறப்பதும் உறுதி என்று சொல்கின்றான். இவ்விதம் பெண்ணாசையால் மதி இழந்த மன்னன் தசரதன் தன் மைந்தர் நால்வரில் ஒருவர் கூட அருகிருந்து பணிவிடை செய்ய முடியாமல் இறந்தான். அவன் உடல் பாதுகாக்கப் பட்டு பரதனின் வரவுக்குக் காத்திருந்தது. ஏற்கெனவேயே துக்கத்தில் ஆழ்ந்த அயோத்தி மக்கள் மேலும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.//
ReplyDeleteஅழகாக கருத்துகளைச் சொல்லுகிறீர்கள் கீதா. மிகச் சோகமான படலம் இது.