எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 30, 2014

திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே!

இன்று ஆடிப்பூரம். அம்மன் கோவில்களிலே திருவிழாப் போல் கூட்டம் நெரியும். சகலவிதமான அம்மன்களுக்கும் வளைகாப்புப் போல் வளையாலேயே அலங்காரம் செய்து, மகிழுவார்கள். அம்மன் அழகா, வளை, அழகா, அதைக் காண வரும் பெண்கள் அழகா எனப் போட்டி போட்டு அனைவரும் அம்மன் அருளை நாடிப் போகும் நாள். இந்த நாள் இனிய நாளாக சுதந்திரத் திருநாளாகவும் அமைந்து விட்டது. மேலும் ஆடிப் பூரம் ஆண்டாளின் திருநட்சத்திரம். ஆண்டாளுக்கு, அண்ணனாக இருந்து அவள் எப்போவோ வேண்டிக் கொண்ட வேண்டுதலை நிறைவேற்றித் தந்ததைப் பற்றி, நம் கண்ணபிரான் ஒரு அருமையான கவிதை எழுதி இருக்கிறார். அவர் அளவுக்கு எனக்கு எழுத வராது.

திருவாடிப் பூரத்து ஜெகத்து உதித்தாளை, திருப்பாவை முப்பதும் செப்பினாளை, பெரியாழ்வார் பெற்றெடுத்த குலக்கொடியைப் போற்றிப் பாடுவோம். ஆண்டாளின் தமிழ் அழகுத் தமிழ், கொஞ்சு தமிழ், எளிமைத் தமிழ். அந்தக் காலத்திலேயே மழையின் விஞ்ஞான தத்துவத்தைப் பாடல் மூலம் காட்டியவள். அவள் தமிழை மட்டும் ஆளவில்லை. நம் மனங்களையும் ஆள்கிறாள். அவள் பாடல்களிலே இறைவனின் பத்து அவதாரங்களையும், அதன் சிறப்புக்களையும் குறிக்கிறாள். கூடவே அவள் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள். உக்கம்= விசிறி, தட்டொளி=கண்ணாடி. கண்ணாடியைத் தமிழில் "தகளி" எனவும் சொல்வார்கள். இந்த அருமையான வார்த்தைகள் எல்லாம் இன்று எப்படி மறைந்து ஒழிந்து போயிற்று என நினைத்தால் ஆச்சரியமாய் உள்ளது.

அது போலே எதிர்மறைப் பொருளைக் குறிக்கும் சொல்லையும் ஆண்டாள் கையாண்ட பாணி வியக்கத் தக்கது. செய்வோம்=செய்யோம், முடிப்போம்=முடியோம், உண்போம்=உண்ணோம், ஓதுவோம்=ஓதோம், இந்த வார்த்தைகளும் வழக்கொழிந்து போய் விட்டது. தட்டொளி எப்போதில் இருந்து கண்ணாடி ஆயிற்று? புரியலை! செய்ய மாட்டோம்னு எப்போதில் இருந்து கூற ஆரம்பித்தோம்? புரியலை! ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை, அனைவரின் மனங்களையும் தான்.

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!




பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள் அவதரித்த திருநாள் ஆடிப்பூரம் ஆகும். ஆண்டாளின் இயற்பெயர் கோதை ஆகும். திருமாலின் மூன்று சக்திகளாய்க் குறிப்பிடப் படும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி என்ற மூவரும் சேர்ந்து ஓருருவாய் வந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்ததாய் ஐதீகம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கே முதல் மரியாதை. கருவறையில் ஆண்டாள் வலப்புறம் இருக்க இடப்புறம் கருடாழ்வாரோடு பெருமாள் காட்சி அளிப்பார். இந்த அமைப்பு வேறெந்தப் பெருமாள் கோயிலிலும் காண முடியாத ஒன்றாகும். எம்பெருமானின் பல்வேறு ஆயுதங்களும் அவரின் சங்கும் எம்பெருமானின் அம்சங்களாகவே போற்றப்படுகின்றன. அந்த அம்சங்கள் யாவும் சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்றவை பூமியில் ஆழ்வார்களாக அவதரித்துப் பெருமானின் புகழை இனிய தமிழ்ப்பாமாலைகளால் பாட பார்த்தாள் பிராட்டி! தான் மட்டும் என்ன சளைத்தவளா? அவளும் பூமியில் அவதரித்தாள். எம்பெருமானைத் தவிர வேறொருவரை மனதாலும் நினைக்க இயலாது என்பதை அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே உறுதிபடத் தெரிவித்தாள். தான் சூடிக்களைந்த மாலையையே ரங்கமன்னாருக்கும் அளிக்க அவனும் மிகவும் உவப்புடன் அதை அணிந்து கொண்டான்.ஆனால் இதை ஒரு நாள் நேரில் பார்த்த பெரியாழ்வாரோ மனம் நொந்து போய் அந்த மாலையை ரங்கமன்னாருக்குச் சாற்றவில்லை. ஆனால் என்ன அதிசயம்! அன்றிரவே ரங்கன் ஆழ்வாரின் கனவில் வந்து ஆண்டால் சூடிக்கொடுத்த மாலையே தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனத் தெளிவுபடக் கூறினான். மேலும் கோதை யார் எனவும், அவள் தனக்கெனவே, தன்னைத் துதிக்கவும், பாமாலைகளால் வாழ்த்திப் பாடவுமே அவதரித்தவள் என்பதையும் தெளிவாக்கினான். பெரியாழ்வார் தாம் துளசி வனத்தில் கண்டெடுத்த குழந்தைச் செல்வம் சாட்சாத் தாயாரின் அம்சமே என்பதை உணர்ந்து கொண்டு எம்பெருமானையே மனதால் ஆண்ட அவளைத் தம் வாயால் அன்று முதல் ஆண்டாள் என்றே அழைக்க ஆரம்பித்தார். ஆண்டாளும் தினமும் பெரியாழ்வார் கட்டிக்கொடுக்கும் மாலையைத் தான் சூடிக்கொண்டே ரங்கனுக்கு அனுப்பி வைத்தாள். அதோடு மட்டுமா? ரங்கனுக்கும் தனக்கும் திருமணம் நடப்பதாயும் கனவு கண்டாள்! அதுவும் எப்படி!

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட க் கனாக்கண்டேன் தோழீ நான்!

என ஆரம்பித்துக் கடைசியில் தன் திருமணம்

மத்தளம் கொட்ட வரிசங்கங்கள் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்று ரங்கனின் கரம் பற்றுவதையும், அவன் தன் கால்களைத் தூக்கி அம்மி மேல் வைப்பதையும் சப்தபதியில் தான் அவனுடன் சென்றதையும் இவ்வாறு குறிப்பிடுகிறாள்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்றும் கூறும் ஆண்டாள், அவள் காலத்திலேயே சகோதரர்கள் உடனிருக்கத் தான் பொரியிட்டதையும் கூறுவது

வரிசிலை வாள்முகத்து என்னைமார்தாம் வந்திட்டு
எரிமுகம் பார்த்தென்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்!

திருமணச் சடங்குகள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையிலும் மாறாமல் இருப்பதையும் இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை. அனைவர் மனதையும் ஆண்டாள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மதுரைக் கள்ளழகரிடம் விண்ணப்பமும் வைக்கிறாள். அதற்காக அவருக்கு அக்கார வடிசில் சமைத்துப் படைப்பதாகவும் ஆசை காட்டுகிறாள். அதுவும் எவ்வளவு! எல்லாம் நூறு தடாவாம்.

நாறு நறும் பொழில் மாவிரும் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் பராவி வாய் நேர்ந்து வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ!

ஆஹா! தடான்னா என்ன சும்மாவா! பெரிய பெரிய அண்டாக்கள். அதிலே நூறு தடா வெண்ணெய் காய்ச்சி, நூறு தடா அக்கார வடிசில். இதிலே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியவை என்னன்னா, மதுரை, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் எனக்குத் தெரிந்து அண்டாக்களில் தான் சமைப்பார்கள். இதுவும் ஆண்டாள் காலத்திலேயே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அது போகட்டும்! இந்தப் பிரார்த்தனையை வாய்மொழியாக நேர்ந்து கொண்டதோடு இல்லாமல் பாமாலையாகவும் பொறித்து வைத்த ஆண்டாளுக்குத் தன் காலத்தில் இதை நிறைவேற்ற முடியவில்லை. அவளுக்கு எப்படியோ ரங்க மன்னார் தன்னை ஏற்றுக்கொண்டானேனு சந்தோஷம். ஓட்டமாய் ஓடிவிட்டாள். தன் மனதுக்கினியவளிடம் அவள் பிரார்த்தனையை நினைவும் செய்யவில்லை அந்த வடபத்ரசாயி!

ஆனால் இதற்கெனப் பொறுப்பு வேறொருத்தரிடம் கொடுக்கப் பட்டுவிட்டது என்பதும், அதுவும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அவரால் நிறைவேற்றப்பட்டதையும் நாம் அறிய வருகிறோம். ஆம். ஸ்ரீராமாநுஜர் அவதரித்து, உபதேசம் பெற்றுத் தம் கொள்கைகளைப் பிரசாரம் செய்து வந்த காலத்தில் திருமாலிருஞ்சோலைக்கும் சென்றிருந்தார். அங்கே ஆண்டாளின் வாய்மொழிப் பிரார்த்தனையையும், அது நிறைவேறாமல் இருந்ததையும் அறிந்து கொண்டவர் அவளுக்காகத் தாம் அதை நிறைவேற்றி வைக்கிறார். அத்துடன் அதை மறந்தும் விட்டார். அதன் பின்னர் சில திவ்ய தேசங்கள் சென்று ஆண்டாளின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறார். அங்கே சந்நிதிக்குள் நுழைகிறார் ஸ்ரீராமாநுஜர். ஜலங், ஜலங், ஜலங், சலங்கைச் சத்தம், க்ணிக், க்ணிக், க்ணிக், மெட்டி ஒலி. ஓர் அழகான விக்கிரஹம் போன்ற பெண்ணுரு இளநகையுடன் நடந்து வருகிறது. பெண்ணா? விக்கிரஹமா?? கோயிலில் பூஜை செய்யும் பட்டாசாரியார்களில் இருந்து அனைவரும் திகைப்புடன் பார்க்க, கருவறையில் அர்ச்சாவதாரமாக இருந்த ஆண்டாளைக் காணவில்லை.

அவள் தான் நடந்து வருகிறாள். அதுவும் ஸ்ரீராமாநுஜரைப் பார்த்து, “என் அண்ணாரே!” எனக் கூப்பிட்ட வண்ணம் வருகிறாள். அனைவருக்கும் வியப்பு.. இப்படி ஆண்டாளாலேயே அண்ணன் என அழைக்கப்பட்டதால் ஆண்டாள் ஸ்ரீராமானுஜரை முன்னிறுத்தி, “பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே “கூறப்படுகிறாள். இப்படிப் பல வகையிலும் சிறப்புப் பெற்ற ஆண்டாளை ரங்க மன்னார் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாயும் அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வருமாறும் கட்டளையிட்டானாம். அதன்படி ஸ்ரீரங்கம் சென்றனர் இருவரும். அங்கே சந்நிதிக்குச் செல்லும் போதே ஆண்டாள் திடீரென ஒளிமயமாகக்கருவறையில் ஐக்கியம் ஆகப் பெரியாழ்வார் பரிதவித்துப் போனாராம். ஒரு சிலர் காவிரிக்கரையிலேயே குளிக்கையில் ஆண்டாள் மறைந்ததாகவும் சொல்கின்றனர். ஆனால் எப்படியோ ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெருமானோடு ஐக்கியமானது குறித்துச் சந்தேகமே இல்லை. பெண்ணைப் பெருமாளிடமே ஒப்படைத்தாலும் பெண்ணைப் பெற்றவருக்கு மன வருத்தம் இருக்குமே. புலம்புகிறார்.

ஒருமகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் கொண்டு போவானோ’

என்றெல்லாம் புலம்பினாராம் ஆண்டாளின் பிரிவாற்றாமை தாங்காமல். அதன் பின்னர் ரங்க மன்னாரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாராம். தன் மகளை ஊரறிய, உலகறிய ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையேல் பலரும் பலவிதமாய்ப் பேசுவார்கள் எனக் கெஞ்சினாராம். மாமனார், மாப்பிள்ளை ஹோதா அந்தக் காலத்தில் மட்டுமில்லாமல் எந்தக் காலந்த்திலும் உண்டு போலும்! :D பின்னர் மனமிரங்கிய ரங்கன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஒருபங்குனி உத்திரத் திருநாளில் கோதையைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம். அதோட போச்சா! அங்கேயே தங்கிவிட்டான் வீட்டோடு மாப்பிள்ளையாக!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?


ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது.







இது ஒரு மீள்பதிவு.  இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டுப் பகிர்ந்துள்ளேன். 

Sunday, July 27, 2014

எங்கே என்னோட மதுரை????

என்னத்தைச் சொல்றது?  ஒரு சிலர் புகழோ புகழுனு புகழறதைப் பார்த்தால் நாம இப்படி எழுத வேண்டி இருக்கேனு இருக்கு. ஆனால் உள்ளதைத் தானே எழுதி ஆகணும். ம்ம்ம் ஊர் எப்படி எப்படி எல்லாம் முன்னேற்றம் அடையுதுனு அவங்க சொல்றாங்க. மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை வீதியை நல்லாப் பராமரிக்கிறது பத்திச் சொல்றாங்க பாசமலர்.

//மீனாட்சி கோவிலைச் சுற்றிலும் சிமிண்ட் பாதை போடப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
கோவிலில் நுழையும் எல்லா வழிகளிலும் பாதுகாப்புச் சோதனை..விமான நிலையங்கள் தோற்று விடும்.
கோயில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் கட்ட அரசு அனுமதி கிடைத்துவிட்டதாகக் கேள்வி.//

சரிதான், சிமிண்ட் பாதை மட்டும் போட்டால் சரி, ஆனால் மக்கள் மனசிலும் சிமிண்டாலேயே மூடிக்கிட்டிருக்காங்க போல. கோவிலில் நுழையும் எல்லாவழிகளிலும் பாதுகாப்புச் சோதனை தவிர்க்கமுடியாது தான். ஆனால் உள்ளே போனால் தரிசனம் கிடைக்கும்கிற நிச்சயம் உண்டா?? கோவில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் வந்தால் நகரின் நெரிசல் குறையுமா? அதிகம் ஆகுமா? ஏற்கெனவே நின்ன இடத்தில் இருந்து நகருகிறதே இல்லை யாரும். அதிலும் மேலச் சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் கூடும் இடத்தில் கோபு ஐயங்கார் கடை வாசலில் ஆரம்பிச்சால் மேலகோபுர வாசலும் தாண்டி தெற்கு கோபுர வாசலையும் தாண்டி, சொக்கப்ப நாயக்கன் தெருவையும் தாண்டி நெரிசல் தாங்கலை. கீழ வாசல் கேட்கவே வேண்டாம். எந்த வழியிலே நுழைஞ்சாலும் இதே தொல்லை தான். போன வருஷம் நாங்க போனப்போவே தரிசன வரிசை வெளியே வந்துடுச்சு.

நாங்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு போனோம். எங்களோடு பத்து, இருபது பேர் வந்தாங்க. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நுழைவு வாயில் வழியாக நுழைந்தோம் அவ்வளவு தான். பிறகு திருப்பதியை விட மோசம். திருப்பதியிலே ஒரு செகண்டாவது பார்த்துடலாம். இங்கே மீனாட்சி தெரியவே இல்லை. அதுக்குள்ளே அதே வழியாக மொத்தக் கூட்டத்தையும் அவங்க இஷ்டத்துக்குப் பணம் வாங்கிக் கொண்டு கோயில் ஊழியர்கள் உள்ளே விட நெரிசலில் சிக்கிக் கொண்ட நான் வெளியே வரமுடியாமல் தவிக்க, வெளியே வந்துவிட்ட என் கணவரும், பையரும் அங்கே இருந்த பெண் காவலரிடம் சொல்லி என்னை மீட்கச் சொல்ல, அவங்க பேசாமல் இருக்க,ஊழியர்களின் இந்த வேலையைக் கண்டு பட்டர்கள் சத்தம் போட, ஊழியர்கள் லட்சியமே செய்யவில்லை. அப்புறமாய் ஒருவழியாய் எங்க பையர் என்னை வெளியே கொண்டு வந்தார். மூச்சு முட்டிப் போய்விடும்போல் ஆயிடுச்சு. இதுவும் முன்னேற்றத்தில் ஒரு வகை போல.

வளர்ச்சி என்பது ஒரு புராதன நகரின் ஆன்மாவைச் சிதைக்கிறாப் போல் ஆகிவிட்டதே என்று வருத்தமாய் இருக்கு. இன்று காலை ஒரு வெளிநாட்டுத் தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஜெர்மனியின் ஒரு புராதன நகரைக் காட்டினாங்க. புராதனச் சின்னங்களை அவங்க எல்லாம் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பது நாம் கட்டாயமாய் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று. மேலும் சுற்றுலாப் பயணிகளையும் எவ்வகையில் அவங்க திறம்பட திருப்திப் படுத்தறாங்க என்பதும் கவனிக்கணும். ஆனால் நாம அவங்க உடை, உணவு, மொழி, கலாசாரம்னு மாத்திக்கிறோமே தவிர எது வேணுமோ அதை விட்டுடறோம்.

எங்க மீனாட்சி, எங்க மீனாட்சி என்று பெருமையாய்ச் சொல்லிப்போம். அவள் கடைக்கண் பார்வையால் அனைவரையும் ரட்சிக்கிறாள்னு சொல்லுவோம். அந்தக் கண்களை சிமெண்ட் போட்டு மூடிக் கொண்டாள் போல. ஓயாமல் சலிக்கும் கண்களால் இப்போ பக்தர்களைப் பார்ப்பதில்லைனு வச்சிருக்கா போல. மதுரை நகரம் இருக்கு. ஆனால் மீனாட்சி அங்கே இல்லை. எங்க அம்மாவின் அழகே போய், அவளின் ஆன்மாவே போய் நகரம் இப்போது புது வண்ணம் பூசிக் கொண்டு, புது வடிவம் எடுத்துக் கொண்டு புத்தம்புதுமையாய் இருக்கு. இது என்னோட மதுரை இல்லை. ஒரு வேளை 25 வருஷமாய் எந்த வகையிலும் மாறாமல் இருக்கும் அம்பத்தூரைப் பார்த்துட்டே இருக்கிறதாலே இப்படித் தோணுதோ?? :((((((((

எங்கே என்னோட மதுரை????????? :((((((((

இது பழைய பதிவு என்றாலும் இப்போதும் மதுரையின் நிலைமை இப்படித் தான் இருக்கிறது.  இன்றைய தொலைக்காட்சிச் செய்தியில் மதுரைக் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்னு பார்த்தேன்.  உடனே நினைவு வந்தது.  இது 2007 ஆம் ஆண்டில் சென்றபோது எழுதியது.   சமீபத்தில் சித்திரைத் திருவிழாவுக்குச் சென்றிருந்த என் தம்பி குடும்பம் சொன்னதையும் கேட்டதால் ஏற்பட்ட மன வருத்தம்.  இப்போதெல்லாம் திருக்கல்யாணம் ஆனதும் அம்மனையும், சுவாமியையும் பார்க்கவே முடிவதில்லையாம்.  முன்னால் எல்லாம் இஷ்டத்துக்கு மூன்று முறை, நான்கு முறை போவோம்.  இப்போ ஒரு தரம் பார்க்கவே முடியலை என்று சொன்னார்கள்.  இது வளர்ச்சியா?  வீக்கமா?

Friday, July 25, 2014

மீண்டும் ஒரு பயணத்தின் கதை!

இன்னிக்குக் காலம்பர சீக்கிரமா எழுந்து குலதெய்வம் கோயிலுக்குப் போகணும்னு முடிவு எடுத்திருந்தோம்.   ஃபாஸ்ட் ட்ராக்கில் வண்டிக்குப் பதிவு செய்து ஐந்தரைக்கு வரச் சொல்லியாச்சு.  வெள்ளிக்கிழமை காலை பத்தரை மணியில் இருந்து பனிரண்டு வரை ராகுகாலம் என்பதால் அதற்கு முன்னாடி மாவிளக்குப் போடணும்னு எண்ணம். ஆனால் ஐந்தேமுக்கால் ஆகியும் வண்டி வரலை. வண்டி நம்பர், ஓட்டுநர் நம்பர் எல்லாம் ஐந்து மணிக்கே வந்துடுச்சு.   ஃபோன் பண்ணிக் கேட்டால் அந்த ஓட்டுநர் சாவகாசமாய் நான் வரமாட்டேன் அப்படினு சொல்றார்.  என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு நம்ம ரங்க்ஸே இன்னிக்குப் பதட்டம் அடைஞ்சுட்டார்.  மறுபடி ஃபாஸ்ட் ட்ராக்கிற்குத் தொலைபேசிக் கேட்டால் அவங்க ஓட்டுநரோடு பேசிட்டுச் சொல்றோம்னு சொன்னாங்க.


ஓட்டுநரை சமாதானம் செய்திருப்பாங்க போல.  ஆனால் ரங்க்ஸ் அந்த ஓட்டுநர் வரவேண்டாம்னு சொல்லிட்டார்.  வேறே வண்டி அனுப்பச் சொல்லி அது வரச்சே ஆறே கால் ஆயிடுச்சு.  நல்லவேளையா அபிஷேஹ சாமான்கள், மாலை, பூ, பழங்கள், தேங்காய் உள்பட ஶ்ரீரங்கத்திலேயே வாங்கிட்டோம். அதுக்கேத்தாப்போல் கும்பகோணம் எட்டரைக்குத் தான் கண் விழித்திருந்தது. எந்தக் கடைகளும் திறக்கலை.  துளசி மாலை மட்டும் அங்கே வாங்கிக் கொண்டோம்.  வழியிலே செல்லை எதுக்கோ எடுத்துப்பார்த்தா சுத்தம்!  சார்ஜே இல்லை.  நேத்திக்கே போட்டிருக்கணும் போல!  நல்லவேளையா ரங்க்ஸ் செல்லை எடுத்து வந்திருந்தார்.  அதன் மூலம் கோயில் பூசாரிக்குத் தகவல் சொல்லியாச்சு.  பெருமாள் கோயில் பட்டாசாரியாருக்கும் தகவல் சொல்லியாச்சு.

செல் தான் இருக்கேனு நான் காமிரா எடுத்துட்டுப்போகலை! :( படங்கள் எடுக்க முடியலை. கும்பகோணத்திலிருந்து பரவக்கரை வரும் வழியில் அரசலாற்றங்கரையிலும், பாசன வாய்க்காலிலும் தூர் வாரி இருந்தது தெரிந்தது.  பாராட்ட வேண்டிய விஷயம் தான்.  சில குளங்கள் தூர் வாரப்பட்டுக் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த   3 நாள் மழையில் நிரம்பியும் இருந்தது.  செல்வதற்கே கஷ்டமாய் இருந்த சாலையும் செப்பனிடப்பட்டு இருந்தது.  இப்படி நல்ல விஷயங்களாக் கண்ணிலே படறதேனு ஆச்சரியமா இருந்தது.  அதற்கேற்ப  திருஷ்டிப் பரிகாரமும் கிடைத்தது.  :(  அரசலாற்றங்கரையில் கரை ஓரமாய்ப் பெரிய பெரிய பள்ளங்கள் வெட்டி  தண்ணீருக்காக ஊற்றுத் தோண்டி இருந்தனர்.  தண்ணீரைக் குழாய் மூலம் மேலே ஏற்றி வீடுகளுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தது. எல்லாம் சரிதான்.

அந்த மேட்டின் அருகேயே தோண்டிய மணல் ஒரு சின்னக் குன்றாக இருந்தது.  அதோடு பள்ளமும் கிட்டத்தட்டப் பத்தடிக்கும் மேல் ஆழம்.  தண்ணீர் வரும் நாட்களில் இந்தப்பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி, ஆற்றிலும் தண்ணீர் ஓடும்போது கரையருகே பள்ளம் இருக்கிறது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கும்? அந்த அந்த கிராமத்துக்காரங்களுக்கே நினைவில் இருக்கப்போவதில்லை. அதோடு அருகிலிருக்கும் மேடு?  அதில் எத்தனை பேர் புதைந்து போகும் சாத்தியம் இருக்கிறது என்பதையும் யாரும் நினைவில் வைத்திருக்கப் போவதில்லை.  நம் வேலை எப்படியானும் ஆனால் சரினு இஷ்டத்துக்குப் பள்ளம் தோண்டி நதியை வறண்டு போக வைப்பதோடு ஆபத்துக்கும் வழி தேடுகிறோம்.  அப்புறமா அரசாங்கம் வந்து அதுக்கும் நஷ்ட ஈடு கொடுக்கணும்.   என்னத்தைச் சொல்றது!

ஊருக்குள்ளே நுழையும்போதே முதலில் இருக்கும் பொய்யாப் பிள்ளையார் கோயில் இருக்கும் அழகு கண்ணில் ரத்தம் வர வைத்தது. பிள்ளையாருக்கு நெய்க்கொழுக்கட்டை பண்ணிக் கொண்டு போய்க் கொடுத்தேன்.  ரொம்ப சந்தோஷமா இருந்தது அவருக்கு. பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டும் அவரைக் கவனிப்பாங்க.

மாரியம்மன் கோயிலில் மாவிளக்குப் போட்டுட்டுப் பெருமாள் கோயிலிலும் தரிசனம் முடித்துக் கொண்டு நேரே கருவிலி சென்றோம்.  அங்கே சர்வாங்க சுந்தரி அம்பாளுக்கு லக்ஷார்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.  உறவினர் திரு கண்ணன் வந்திருந்தார்.  நேற்றுத் திரு ராய. செல்லப்பாவுடன் பேசுகையில் என்னைக் குறித்தும் பேசினதாய்த் தெரிவித்தார்.  அட, நம்மை நினைவு கூர்ந்திருக்கிறாங்களே என மகிழ்ச்சியாக இருந்தது.



கருவிலி கோயிலின் ராஜகோபுரம்.  படம் சமீபத்தில் தான் எடுக்கப்பட்டது.  ராஜகோபுரமும் இப்போது தான் பத்து ஆண்டுகளுக்குள்ளாக கட்டப்பட்டது.  கோயில் சீந்துவாரின்றிக் கிடந்தது.  நான் புக்ககம் போன புதிதில் குடிக்க நல்ல தண்ணீர் இந்தக் கோயில் கிணற்றிலிருந்து தான் கொண்டு வருவோம். அப்போது வயதான ஒரு குருக்கள் மட்டுமே கோயிலில் தன்னந்தனியாக இருப்பார்.  அவர் வீடு எதிரே தான்.  இப்போது அவரின் பிள்ளை தான் கோயிலைப் பார்த்துக் கொள்கிறார்.  ஆனால் அப்போது அந்தக் கோயிலுக்குத் தினமும் போனது நானும், என் கடைசி நாத்தனாருமாகத் தான் இருக்கும். இப்போதோ எங்கெங்கிருந்தோ வந்து வழிபடுகின்றனர்.  இந்தக் கோயிலுக்குத் தான் திரு கிருஷ்ண மூர்த்தி (கல்கி வைத்தியநாதனின் தம்பி)  தன் செலவில் திருப்பணிகள் செய்வித்தார்.  இப்போதும் கோயிலில் எல்லா முக்கிய தினங்களிலும் இவரின் பங்கு நிச்சயம் இருக்கும்.

சர்வாங்க சுந்தரி ஏற்கெனவே நல்ல உயரம்.  இன்னிக்கு அலங்காரத்தில்  என் கண்ணுக்கு அம்பாள் விஸ்வரூபமாய்த் தெரிய, ரங்க்ஸுக்கோ அம்மன் சோகமாய் இருப்பதாய்ப் பட்டிருக்கிறது.  அப்புறமா ரங்க்ஸின் செல்லப் பிள்ளையாரைப் பார்த்தோம்.  அவருக்கு யாரோ பூ வைச்சிருந்தாங்க.  அதிலே அவருக்கு ரொம்ப சந்தோஷம்.  சுவற்றில் மிகச் சிறிய அளவில் ஆறங்குலமே இருப்பார் அந்தப்பிள்ளையார்.  அவர் சிறுவனாய் இருந்தப்போவிருந்தே இந்தப் பிள்ளையார் தான் நெருங்கிய நண்பர்.  தினம் எண்ணெய் முழுக்காட்டிக் குளிப்பாட்டிப் பூ வைத்து நிவேதனம் செய்வாராம்.



இது முன்னர் ஒரு முறை எடுத்த படம்.  இவர் தலைக்கு மேல் திருவாசிபோல் வந்திருக்கும் இடத்தில் தான் ஒரு சின்ன ஓட்டை இருக்கிறது.  அதில் தான் பூ வைக்கின்றனர்.  இன்றும் யாரோ வைத்திருந்தனர்.  கருவிலியை முடிச்சுட்டுப் பின்னர் கும்பகோணம் வழியா ஶ்ரீரங்கம் வரச்சே மூன்றரை மணி ஆயிடுச்சு! 

Thursday, July 24, 2014

ஒரு பாராட்டு, ஒரு குறை, ஒரு சிரிப்பு!

இம்முறை சென்னை சென்றபோது பாண்டி பஜார் வழியா வந்தப்போ மயக்கமே வந்தது.  என்ன இது?  ஏதோ மாற்றம்னு ஒண்ணுமே புரியாமல் பார்த்தப்போ, நாங்க போயிட்டிருந்த ஆட்டோவின் ஓட்டுநர், நடைபாதைக்கடைகள் எதுவுமே இப்போ இல்லைங்க, அவங்களுக்குத் தனியாகக் கட்டிக் கொடுத்து  இங்கே இருந்து எடுத்துட்டாங்கனு சொன்னார்.  உண்மையில் நல்ல விஷயம் தான். சென்னை மாநகராட்சியைப் பாராட்ட வேண்டும்.  நடைமேடையில் நடக்க முடியாமல் தெருவில் நடக்கலாம்னா, அந்த வழியாச் செல்லும் பேருந்துகள், கார்கள் போன்றவற்றிலிருந்து தப்பி ஒதுங்க இடம் இருக்காது.

 இரு பக்கமும் வண்டிகளை நிறுத்தி இருப்பாங்க.  அதற்கெனத் தனி கான்ட்ராக்ட் இருக்கு.   அவங்க வந்து பணம் வசூல் பண்ணுவாங்க.  ஆனால் அன்னிக்கு வண்டிகளும் குறைவாவே இருந்தது.  இத்தனைக்கும் வார முதல்நாள் திங்கள் கிழமை.  இப்போ வண்டிகள் நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் அந்த ஆட்டோ ஒட்டுநர் கூறினார்.  சென்னையில் வழக்கமான குப்பைகள் குறையவில்லை.  போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.  முகத்தை முகமூடி போட்டு மூடிக் கொண்டாலும் வண்டிகளின் புகை இருமலை வரவழைக்கிறது.  லஸ் சர்ச் ரோடில் பயணிக்கையில் ரேவதியின் வீட்டைப் பார்த்து  ரேவதி இருந்தால் போயிருக்கலாம்னு பேசிக் கொண்டோம்.  மரங்கள், செடிகள் எல்லாம் பசுமையாகவே இருந்தன.


சென்னை ஆட்டோக்களில் இம்முறை பயணம் செய்தப்போ மீட்டர் போட்டாலும் அதற்கு மேலே பத்தோ அல்லது இருபதோ கேட்டு வாங்குகிறார்கள் என்பதும் தெரிகிறது.  அதே குறைந்த தூரம் எனில் 30 ரூபாய் ஆகும் தூரத்துக்குக் குறைந்தது ஐம்பது கேட்கின்றனர். மீட்டர் போட்டால் 25 ரூபாய் கூட ஆகாது!   மாம்பலத்தில் இருந்து மயிலாப்பூர் கிழக்கு மாட வீதிக்கு மீட்டரில் 80 ரூபாய் ஆச்சு.  ஆட்டோ ஓட்டுநருக்கு 100 ரூபாய் கொடுத்தோம்.  திரும்பும் போதும் அதே! இப்போது இங்கே ஶ்ரீரங்கத்திலும் ஆட்டோக்காரங்க அதிகம் கேட்க ஆரம்பிச்சாச்சு.  எங்க வீட்டில் இருந்து மலைக்கோட்டை போக 150 ரூபாயில் ஆரம்பிச்சுப் பேரம் பேசிக் கடைசியில்  120க்கு வராங்க.  மீட்டர் போட்டால் 80 ரூபாய் தான் ஆகும்.  இங்கேயும் மீட்டர் ஆட்டோ அறிமுகம் எல்லாம் நடந்து செல்பேசி எண் எல்லாம் கொடுத்திருக்காங்க.  அந்த அலுவலகத்துக்குத் தொலைபேசினால் மதியம் 3-30 -க்கு நாம் கிளம்பணும் என்றால் 3-00 மணிக்குப் பேசுங்கனு சொல்றாங்க.  அப்படிப் பேசினால் அந்தக் கடைசி நிமிடத்தில் ஆட்டோ வராதுனு சொல்லிடறாங்க.  ஒவ்வொரு முறையும் கூப்பிட்டுப் பார்த்துட்டுப் பின்னர் இங்கே ஆட்டோ ஸ்டான்ட் ஆட்டோவிலேயே போகிறோம்.  இவங்க 100 ரூபாய்க்கு வருவாங்க. ஆனால் காத்திருந்து திரும்பக் கூட்டி வரதில்லை.


நேத்துத் திருச்சி சென்று திரும்புகையில் ஒரு உணவு விடுதியில் உணவு வகைகளின் பட்டியல் போட்டிருந்தது.  அதிலே எலிமிச்சை சாதம், கருவப்பிள்ளை சாதம் இரண்டையும் பார்த்துட்டுத் திகைப்பாப் போச்சு.  அப்புறமாத் தான் புரிஞ்சது எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை என்னும் கருகப்பிலை சாதம் என.   புளியஞ்சாதம் பண்ணலை போல.  இல்லைனா புலியஞ்சாதம்னு எழுதி இருப்பாங்களே!  தமிழ் என்னமாய் விளையாடுதுனு நினைச்சேன்.   அப்புறமாத் தெப்பக்குளத்துக்கு எதிரே ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையின் தமிழ்ப் பெயர்ப்பலகையில்" இக்கின்பாதம்ஸு"  எனத் தூய தமிழில் போட்டிருந்ததைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.  எ.கொ.இ.ச. என நினைத்துக் கொண்டேன்.  சும்மா ரொம்ப நாளாச்சே என எண்ணங்களின் மொக்கைப் பதிவு ஒன்று. :)

Sunday, July 20, 2014

இந்த விமரிசனம் தான் 3 ஆம் பரிசைப் பெற்றுள்ளது!

பொதுவாகவே மூத்த குழந்தைகளுக்குப் பொறுப்பு அதிகம்.  அதிலும் நாலைந்து குழந்தைகளாக இருந்தால் மூத்த குழந்தை சம்பாதிக்க ஆரம்பித்தால் தான் மற்றக் குழந்தைகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். இது எழுதப்படாத விதி.  கதாநாயகியான சுமதியும்.  நான்கு தங்கைகளோடு சேர்ந்து பிறந்த மூத்த பெண். சுமதி நர்ஸ் வேலை பார்த்தாலும் அதில் மட்டும் தன் குடும்பம் கடைத்தேற முடியாது என்பதைத் தெரிந்து வைத்திருந்தாள். வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு தன் குடும்பத்தைக் கடைத்தேற்ற நினைப்பது சரிதான்.  ஆனால் அதற்காக எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவரைப் போய்த் திருமணம் செய்து கொள்வது கொஞ்சம் ஏற்க முடியவில்லை தான். சுமதி தானாக எடுத்த முடிவு.  தீர்க்கமாக யோசித்து அவள் மருத்துவத் துறையில் இருப்பதால் இந்த நோயைக் குறித்த தகவல்கள் அவளுக்குப் பூரணமாய்க் கிடைத்து விடும்; அவ்வப்போது ஏற்படும் மருத்துவ முன்னேற்றங்களால் பாதிப்பு அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும் என  அவளும் தெரிந்து வைத்திருந்தாள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதோடு இப்படி ஒருவருக்கு சேவை செய்வதைத் தன் வாழ்க்கையில் லக்ஷியமாகவும் கொண்டிருக்கலாம்.  இப்போது சுமதி செய்வது சரியா, தப்பா என்று நமக்குப் புரியாவிட்டாலும், அவள் தைரியமாக எதிர்கொள்வதைப் பார்த்து அவளோடு நாமும் கூடச் சென்று என்ன நடக்கிறதுனு பார்க்கலாமே!

எய்ட்ஸ் உள்ள மணமகனுக்குப் பொருத்தமான மணமகள் தேவை என்னும் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு நேரடிப் பேட்டிக்குச் சென்றவளுக்குத் தன்னை வரவேற்ற வாலிபன் தான் மணமகன் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியே வருகிறது. நமக்கும் மகிழ்ச்சியே!  ஆனால் அவன் தாய் தான் கொஞ்சம் கடுகடுவென இருக்கிறாள். தன் மகனுக்கு இப்படி ஒரு அழகான பெண் மனைவியாக வருவதில் உள்ளூர மகிழ்ச்சி என்றாலும் தான் எதிர்பார்க்கும் சீர்வரிசைகளைப் பெற முடியாது என்னும் வருத்தமும் அந்த வாலிபனின் தாய்க்கு இருந்தது.  தன் ஒரே மகன் சுந்தர் இத்தனை பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும், தான் எதிர்பார்த்தது போல் சீர்வரிசையுடன் பணக்கார மருமகளை அடைய முடியாத ஏமாற்றம் அந்தத் தாய்க்கு.  இவள் பணத்தைப் பார்த்துத் தன் மகனைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாளோ என அவளால் கூட நினைக்க முடியவில்லை.  ஏனெனில் சுந்தரின் வியாதி அப்படிப்பட்டது. ஆனாலும் சுமதியின் அழகும், அவள் பழகும் விதமும் அந்தச் சிடுமூஞ்சியைக் கூட ஈர்க்கிறது.

சுமதியோ தன் குடும்பம் சாதாரணம் என்பதையும் சொல்லி விடுகிறாள்.  அந்தத் தாய்க்கு ஆறுதலான ஒரே விஷயம் சுமதியும் அவள் பிறந்த ஊரான திருச்சிக்கு அருகிலுள்ள கிராமம் என்பதே. சுமதி சுந்தரின் தாயிடம் மணமகன் சுந்தர் உண்மையை மறைக்காமல் சொன்னது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளும் விரைவில் கண்டுபிடிக்கக் கூடும், கவலைப்பட ஏதுமில்லை என்றும் தன் வருங்கால மாமியாரிடம் சொல்லி அவளுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறாள். அவள் தன்னம்பிக்கையையும், எது வந்தாலும் நேரடியாக எதிர்கொள்ளலாம் என்னும் தைரியத்தையும் இங்கே பார்க்க முடிகிறது. .  வந்த இடத்திலும் தாங்கள் சிற்றுண்டி அருந்திய பாத்திரங்களைக் கழுவி வைத்ததன் மூலம் சுமதியின் வருங்கால மாமியார் மனதில் அவள் தன் கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றுவாள் என்னும் நம்பிக்கையை ஊட்டுகிறாள்.  ஆனால் தன் மகனையே ஒழுக்கம் கெட்டவனாக நினைத்துக் கொண்டும் ; அதனால் தான் எய்ட்ஸ் அவனுக்கு வந்திருக்கிறது எனவும் அந்தத் தாய் நினைத்து அதைப் பட்டவர்த்தனமாக சுமதியிடம் சொன்னாலும் அதை  சுமதி  இதெல்லாம் சகஜம் என்று சொல்கிறாள். இதைத் தான் ஏற்க முடியவில்லை.  என்ன இருந்தாலும் ஒழுக்கமில்லாமல் ஒழுக்கக் கேடால் வந்த எய்ட்ஸ் எனில் இனியும் அவன் ஒழுக்கத்துக்குத் தகுந்த உத்தரவாதம் உண்டா என அவள் யோசித்திருக்கலாமோ?

ஆனால் எய்ட்ஸ்  ஒழுக்கம் கெட்டதால் மட்டுமே  வருவதில்லை.  சுத்தமில்லா ஊசிகள் மூலம், ரத்ததானம் செய்கையில் பயன்படுத்தப்படும் சுத்தமில்லா சிரிஞ்சுகள் மூலம், பாதுகாப்பில்லா உடல் உறவுகள் எனப் பல வழிகளிலும் எய்ட்ஸ் பரவுகிறது. இதை மரகதம் தெரிந்து வைத்திருக்கிறாளா இல்லையா என்னும் சந்தேகம் வருகிறது.  சுமதியும் இதைக் குறித்து அதிகமாய்ச் சிந்தித்திருப்பதாய்த் தெரியவில்லை.  அது குறித்த விளக்கம் இங்கே இல்லை. அடுத்ததாக மரகதம் என்ன தடை சொல்லப் போகிறாளோ என்னும் எதிர்பார்ப்பு நம்மிடம் எழுகிறது.

அதற்கேற்றாற்போல் குழந்தை பிறந்தால் என்ன செய்வது என்ற கேள்வி மரகதத்திடமிருந்து பிறக்க அதையும் சமாளிக்கிறாள் சுமதி.  தகுந்த  பாதுகாப்பின் மூலம் பரவாமல் தடுக்கலாம் என்பதோடு எய்டிஸினால் இறப்பு என்பதும் உடனடி வரக்கூடியது அல்ல என்று சொல்லி இருக்கும் காலத்துக்குள்ளாக பிறருக்கு நன்மை செய்யலாமே என்றும் வாதிடுகிறாள்.  தன்னலமற்ற சேவை செய்வதில் அவளுக்கு உள்ள ஈடுபாடு இங்கே வெளிப்படுகிறது.  அதையும் இப்படி ஒரு நோயுள்ள கணவனோடு சேர்ந்து செய்யவும் அவளுக்கு ஆசை. என்னதான் பணம், காசு இருந்தாலும் இத்தகைய கொடிய நோய் இருக்கையில் யாரும் மணந்து கொள்ள முன்வரமாட்டார்கள். சுமதியோ துணிவுடன் இதில் இறங்க நினைக்கிறாள்.     சுந்தரின் தாயோ சுமதியின் மனப் பக்குவத்தால் மனம் மகிழ்ந்தாலும் தன் குடும்ப நிலைமைக்கு ஏற்ற சீர் வரிசைகள் கிடைக்காதே என யோசிக்கிறாள். தன் பிள்ளையின் நிலைமையை யோசித்தும், இப்படி ஒரு பல்கலை வித்தகியான பெண் கிடைக்காது என்பதாலும் தன்னைச் சமாளித்துக்கொண்டு  அவள் வீட்டிற்கு வந்து பெண் கேட்பதாகச் சொல்லுகிறாள்.    நாமும் இவ்வளவு எளிதாக முடிந்ததே என எண்ணுகிறோம். ஆனால் அடுத்துத் தான் அதிர்ச்சி காத்திருக்கிறது நமக்கும், சுமதிக்கும். ஆட்டோவில் ஏறும்போது சுந்தர் கொடுத்த கவரைப் பிரித்துப் படித்தால் மாபெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது சுமதிக்கு.


தன் தாயின் பேராசைக் குணத்தைப் பார்த்தே சுந்தர் தன் குடும்ப மருத்துவர் உதவியோடு தனக்கு எய்ட்ஸ் நோய் என்பதாகப் பொய் சொல்லி இருப்பதாக அந்தக் கடிதத்தில் கண்டிருந்தது.   அதனால் தான் தங்களை வழியில் பார்த்த மருத்துவர் வாழ்த்துத் தெரிவித்தாரா என சுமதி நினைத்தாள். கூடவே சென்று அனைத்தையும் பார்க்கும் நமக்கு இத்தனை திறமையும், அழகும், நேர்மையும், குடும்பத்தின் மேல் பற்றும் உள்ள சுமதிக்குக் குறைகள் இல்லாத பெரிய பணக்காரக் குடும்ப மாப்பிள்ளையே வருவதில் உள்ளூர மகிழ்ச்சி ஏற்படுகிறது.  ஆனால் நேர்மையே வடிவான சுமதிக்கு இப்படிப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து கொள்வதில் உள்ள ஆபத்து புரிய அதோடு சுந்தர் பெற்ற தாயிடமே பொய் சொல்லி இருப்பதால் அவனை ஏற்க மறுக்கிறாள்.  தன்னால் அவர்களிடம் இந்த உண்மையை மறைக்க இயலாது என்றும் சொல்லித் திட்டவட்டமாக மறுத்து விடுகிறாள்.  இது அவள் நேர்மையை மட்டும் எடுத்துக்காட்டவில்லை. பணம், காசு இருந்தாலும் எய்ட்ஸ் என்றதும் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தவள், இப்போது அதே பணம் , காசு இருந்தாலும் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து கொள்வது நன்மை தராது என்று உணர்ந்து விடுகிறாள்.  உலகில் பணம், காசை விட நேர்மையும் சத்தியமுமே பெரிது என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்.  அதோடு சுந்தரின் தாய் சீர்வரிசை எதிர்பார்ப்பதைத்  தவறானதல்ல என்பதையும் உணர்த்துகிறாள்.

//திருமணமாகி புதுப்பெண்ணாய் வருபவள் எல்லாச் செல்வங்களுடனும் வந்தால் தான், புகுந்த வீட்டில் அவளுக்கும் ஒரு கெளரவமாகவும், பெருமையாகவும், மரியாதையாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான்;

எனவே தங்கள் தாயாரின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் நியாயமானதே;

அவர்களிடம் உண்மையைச்சொல்லி விட்டு, பிறகு அவர்கள் விருப்பப்படியே, நீங்கள் வேறு யாரையாவது உங்கள் ஸ்டேட்டஸுக்குத் தகுதியானவளாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்; //

மனித மனத்தில் தோன்றும் இயல்புகளை நன்கு புரிந்து வைத்திருக்கிறாள் சுமதி என்பதும் மேற்கண்டவற்றை அவள் சொன்னதிலிருந்து ஊகிக்க முடிகிறது. இத்தனை நற்குணங்கள் அமைந்த பெண்ணை மணக்க முடியவில்லை என்பது சுந்தருக்கு வருத்தமாகி விட அவன் சுமதியை நினைத்து ஏங்குகிறான். தன் ஒரே மகன் படும்பாட்டைக் கண்ட அவன் தாய் ஆஸ்பத்திரிக்கே நேரில் போய் சுமதியை விசாரிக்க எண்ணுகிறாள்.  கதாசிரியர் ஆஸ்பத்திரி சூழ்நிலையை இங்கே அருமையாக வர்ணித்திருக்கிறார்.  நாமே நேரில் சென்று அனைத்தையும் பார்க்கிறாப்போல் இருக்கிறது வர்ணனைகள்.  மரகதத்திடம் உண்மையான காரணத்தைச் சொல்லாமல்  சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கும் சுமதியின் மேல் கோபத்துடன்  வீட்டுக்கு வந்தவளுக்கு சுந்தர் சொல்லி உண்மை புரிகிறது.  சுமதியின் பெருந்தன்மை மட்டுமின்றித் தன் குடும்பம் கஷ்டப்படும் நேரத்திலும் பணத்துக்கு ஆசைப்படாமல் நேர்மையாகவும், உறுதியாகவும் சுந்தரிடம் அவள் மறுத்திருப்பதைக் கண்ட மரகதத்துக்கு இவளைவிடச் சிறந்த மருமகள் தனக்குக் கிடைக்க மாட்டாள் என்பது புரிந்து போக, இத்தனை வருடங்களாக அவள் கண்களை மறைத்திருந்த பணமோகம் அகன்று விடுகிறது.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற..

என்னும் குறளின் பொருள் இப்போது தான் மரகதம் உணர்ந்தாள்.

மனிதரை மனிதருக்காக நேசிக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்கிறாள்.  அடுத்த ஒரே மாதத்தில் சுமதியைத் தன் மருமகளாக்கிக் கொள்கிறாள்.

நேர்மையான வழியில் செல்பவர்களுக்குத் தோல்வி என்பது இல்லை.  என்றேனும் ஒருநாள் அவர்களின் நேர்மைபுரிந்து கொள்ளப்பட்டுப் பாராட்டுப் பெறும்.  சுமதியின் விஷயத்தில் உடனடியாக நடந்து விடுவது அவள் அதிர்ஷ்டமா, சுந்தர் அதிர்ஷ்டமா?  இருவரையும் சேர்த்து வைத்துப் பார்த்து ஆனந்தம் அடையும் மரகதத்தின் அதிர்ஷ்டமா? சொல்வது கஷ்டம் தான்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

Friday, July 18, 2014

கண்ணே பாப்பா!




முந்தாநாள் மதியம் வெட்டிப் பொழுது போக்குகையில் தற்செயலாக இந்தப் படம்  வசந்த் தொலைக்காட்சியில் மத்தியானமாப் போட்டாங்க.  கறுப்பு வெள்ளைப்படம் தான். ஆரம்பம் கொஞ்சம் சொதப்பல் தான்.  கே.ஆர். விஜயா குற்றாலத்தில்  ஊர் சுற்றி (?) பார்க்க வரும் முத்துராமனின் பின்னணியே தெரியாமல் அவரிடம் தன்னை இழந்ததாகக் காட்டி இருப்பது அபத்தத்தின் உச்சகட்டம்.  என்ன இருந்தாலும் இளம் வயதுப் பெண் இப்படியா ஏமாறுவாங்க? ஆனால் இம்மாதிரிப் பெண்களை அந்தக் காலங்களில் (படம் அறுபதுகளில் வந்திருக்கணும்) "அபலை" என்ற பட்டம் சூட்டி இரக்கம் காட்டி மகிழ்வார்கள்.  அப்படியே இதிலும் நடக்கிறது.  பகவதிபுரம் தான் தன்னோட ஊர்னு கே.ஆர். விஜயாவை ஏமாத்திப் பாதியிலேயே விட்டுட்டுப் போறார்.  அந்த ஊரிலேயே ஸ்டேஷன் மாஸ்டர் வி.எஸ்.ராகவன் உதவியுடன் தங்கி இருந்த விஜயா  வர ஒவ்வொரு ரயிலிலும் முத்துராமனைத் தேடிக் கடைசியில் தனக்குக் குழந்தை பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தற்செயலாக ஒரு ரயிலில் காண்கிறார்.  ஆனால் முத்துராமன் அவரைத் தெரியாது எனச் சொல்லி விடுகிறார்.

தன் தந்தையிடம் குழந்தையைச் சேர்ப்பிக்கச் சொல்லி விஜயா கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செத்து விடுகிறார்.  உறவினர் அனைவரும் குழந்தையை ஏற்க மறுக்க அது எப்படியோ ரயிலில் ஏறிச் சென்னை வருகிறது பெற்றோரைத் தேடி.  வந்த குழந்தை எப்படியோ பிச்சை எடுத்துப் பிழைக்கும் கும்பலிடம் சேர்ந்து கொள்கிறது.  குழந்தையை ஆதரிக்கும் சந்திரபாபு அதன் பெயரில் வாங்கிய லாட்டரிச் சீட்டிற்கு லக்ஷ ரூபாய்ப் பரிசு விழ ஆரம்பம் ஆகிறது விறுவிறுப்பு.

குழந்தையாக நடித்திருப்பது பேபி ராணியாம்.  நல்லா இயல்பா நடிக்கிறது. அதை விட நல்லா "ஓ"னு அழுகிறது.  அழுகை வெகு இயல்பு.  அதிலும் லாட்டரிச் சீட்டைக் களவாட வருபவர்களைச் சரியாகக் கணித்து அவர்களிடமிருந்து தப்பிப்பது;  வழியில் சந்திக்கும் நடிகை மனோரமா, உபந்நியாசகர் வேடத்தில் இருப்பவர்  வி.கே.ராமசாமி, ரிக்க்ஷாக்காரர், குப்பத்துக்காரர்கள் இத்தனை பேரையும் சமாளிக்கும் விதம் நன்றாகவே படமாக்கப்பட்டுள்ளது. நம்பியாரை முதலில் நம்பி அவருடன் செல்ல நினைக்கும் குழந்தை பின்னர் தப்பி விடுகிறது. கடைசியில் ஒரு வழியாக போலீஸ் கமிஷனர் சுந்தரராஜனிடம் வந்து சேர்ந்து உண்மையைச் சொல்கிறது.



குழந்தையை நம்பியாரிடம் போய் இருக்கச் சொல்லும் சுந்தரராஜனிடம் மாட்டேன்னு சொல்லுகிறது.  பின்னர் நம்பியார் நல்லவர் தான் எனத் தெரிந்து கொண்டு அவரிடம் போகிறது.  அவர் மனைவியாக வரும் விஜயகுமாரிக்குக் குழந்தை இல்லாததால் இந்தக் குழந்தையிடம் பாசமழை பொழிகிறார். முத்துராமன் பெண்களை ஏமாற்றிப் பிழைக்கும் கும்பலில் வேலை செய்கிறார்.  (அந்தக் காலத்திலேயே ஆன்டி ஹீரோவாக நடிச்சிருக்கார் முத்துராமன். )மனோகர் தான் தலைவர்.  குழந்தைக்குப் பரிசு கிடைத்திருப்பதும், அதன் பெற்றோர் படமும் தினசரிகளில் வரக் குழந்தையிடமிருந்து பணத்தைப் பிடுங்கத் தயாராகின்றனர் வில்லன் மனோகர்  குழுவினர்.  அதற்காக டி.கே.பகவதியின் மகளான கல்பனா (இதுவும் கே.ஆர்.விஜயா)வை குழந்தைக்குத் தாயாக நடிக்கச் சொல்ல பின்னர் நடப்பது தான் க்ளைமாக்ஸ். பி.மாதவன் இயக்கம்.  கதை கோர்வையாகச் சொல்லப்பட்டிருப்பதோடு சம்பவங்களும் முன்னுக்குப் பின் முரண் இல்லாமல் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  அந்தக் காலத்தில் இந்தப்படம் நல்லா ஓடி இருக்கணும்.  கண்ணே பாப்பா, என் கனிமுத்துப்பாப்பா பாட்டு தான் ஹிட்  சாங்.  அடிக்கடி கேட்டிருக்கலாம்.  ஹிஹிஹி, அறுபதுகளில் வந்த படத்துக்கு இப்போ விமரிசனம் செய்தாச்சு.  நல்லா இருக்கா?

ரொம்ப நாள் ஆசை பாச மலர் படமும், பாலும் பழமும் படமும் பார்த்துட்டு விமரிசிக்கணும்னு இருக்கு.  அது என்னமோ தொலைக்காட்சியில் வரவே மாட்டேங்குதே! :)

Tuesday, July 15, 2014

அம்மாமண்டபத்தில் ஓர் காலைப் பொழுது!

நேத்து ஒரு வேலையா பாரத ஸ்டேட் வங்கிக்குப் போக வேண்டி இருந்தது.  குறிப்பிட்ட வேலை சம்பந்தமாக நாங்க பார்த்த பெண்மணி, "உட்காருங்க, பத்து நிமிஷத்திலே எல்லாம் ரெடி பண்ணிட்டுக் கூப்பிடறேன்!" னு சொன்னாங்க. ரங்க்ஸ், "எப்போவுமே இப்படித் தான் சொல்லுவாங்க.  லேசில் கூப்பிடமாட்டாங்க!" னு முணுமுணுத்தார்.  இருவருமாய்ப்போய் உட்கார்ந்து ஐந்தே நிமிஷத்தில் கூப்பிட்டுட்டாங்க.  தேவையான கையெழுத்துக்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கொஞ்ச நேரம் பொறுத்திருக்குமாறு வேண்டிக் கொண்டார்.  குரலிலேயே தாமதம் ஆவதற்கான மன்னிப்புக் கேட்கும் தொனி புரிந்தது.

பின்னர் மீண்டும் ஐந்து நிமிஷத்தில் அழைத்து வேலையை முடித்துக் கொடுத்துவிட்டார். பனிரண்டரைக்கு வீட்டை விட்டுக் கிளம்பினோம்.  பிரயாண நேரத்தையும் சேர்த்து 40 நிமிஷத்தில் வேலை முடிந்துவிட்டது.  ஆச்சரியம் இல்லையா? இப்படி எல்லாவற்றிலும் மாற்றங்களை எதிர்பார்ப்போம். 

இன்னிக்கு அம்மாமண்டபம் படித்துறைக்குப் போயிருந்தோம்.  அங்கே இருக்கிற கோவில்லே ஒரு வேலை. அது பத்திக் கேட்டுட்டு, சிராத்தம் செய்வதற்காக ஆற்று மணல் எடுத்து வந்தார் ரங்க்ஸ்.  காவிரிக்கரை ஓரங்களை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.  அதிலும் அம்மாமண்டபத்தில் குளிக்க வரும்பொது ஜனங்கள் செய்யும் அட்டூழியம் சொல்லி முடியாது.  எங்கே பார்த்தாலும் ப்ளாஸ்டிக் பைகள், கேன்கள், துணிகள் எனக் கரையோரமாகக் கால் வைக்க முடியாதபடி இருக்கும். கரையோரங்களில் அவற்றை எல்லாம் தோண்டி எடுத்துக் குவித்துக் கொண்டிருந்தது புல்டோசர்.  இன்னும் கொஞ்சம் மணலின் மேடு பள்ளங்களையும் செப்பனிட்டுச் சமன் செய்தால் தண்ணீர் வந்தால் ஓட வசதியாக இருக்கும்.

அம்மாமண்டபத்தில் நின்றிருக்கையில் விதவிதமான ஜனங்கள் மூத்தோர் கடன் செய்வதைப் பார்த்தேன்.  பெரிய சதுரமாக வாயில்கள் வைத்துக் கோலம் போட்டு நடுவில் ஒரு மண்டபம் மாதிரி வாயில்களோடு வைத்து அதிலே சுற்றியும் சின்னச் சின்ன மண் குடுவைகளை வைத்து நூல் போட்டுக் கட்டி ஏதோ பரிகாரம்(?) செய்திருந்தனர்.  இம்மாதிரிச் செய்வதை இன்று தான் புதிசாய்ப் பார்க்கிறேன்.  போகும் எண்ணம் இல்லாததால் கிளம்புகையில் காமிராவோ, செல்பேசியோ எடுத்துச் செல்லவில்லை.  இல்லைனா ஃபோட்டோ எடுத்திருக்கலாம். :(

அதைத் தவிர ஆங்காங்கே இலையில் அரிசி, வாழைக்காய், காய்கள், வெல்லம், துணிமணி, தேங்காய் எனக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  சிலர் பித்ரு கடன் செய்து கொண்டிருந்தனர்.  அவங்களைச் சுற்றிக் குடும்ப உறுப்பினர் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.  ஓர் இடத்தில் இன்னும் திருமணம் ஆகாத முதிர் கன்னர் ஒருத்தர் எல்லா தோஷமும்  நீங்க வேண்டிப் பரிகாரம் செய்து கொண்டிருந்தார்.  பின்னர் ஒரு வாழைக்கன்றை அலங்கரித்து ஒரு மண் தொட்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.  அந்த வாழைக்கன்றுக்குத் திருமாங்கல்யதாரணம் செய்தார்.  அதன் பின்னர் ஏதேதோ மந்திரங்கள் சொல்லி விட்டு, வாழைக்கன்றைத் திருமாங்கல்யம் கட்டியதற்குக் கொஞ்சம் கீழே அரிவாளால் சீவி விட்டார். இதெல்லாம் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.  பார்த்ததில்லை.  இன்று பார்க்கவும் சந்தர்ப்பம் வாய்த்தது.  படம் எடுத்தால் என்ன சொல்வாங்களோ!  சிலருக்குப் பிடிக்காது.  எப்படியாயினும் கையில் ஒண்ணும் இல்லை.  கையை வீசிக் கொண்டு போயிருந்தேன்.

அந்த முதிர்கன்னருக்கு இப்போவே 40 வயசுக்குக் குறையாது! :( சீக்கிரம் கல்யாணம் ஆகப் பிரார்த்தித்துக் கொண்டேன். 


அம்மாமண்டபம் நான் எடுத்த படம் கிடைக்கவில்லை.  படத்துக்கு நன்றி கேஆர் எஸ்! :)

இப்போது தான் இரு நிமிடங்கள் முன்னர் ஒரு பெண்மணி, சென்னை, ராகவேந்திரா ஜ்வல்லர்ஸிலே இருந்து கூப்பிடறதாயும், என்னோட அலைபேசி எண்ணுக்கு ஒரு பவுனுக்கு அமெரிக்கன் டயமன்ட் பதித்த மோதிரம் விழுந்திருக்கிறதாயும், அதை வாங்க வேண்டியும், குறிப்பிட்ட விழாவுக்காகவும் 5,000/- ரூ அனுப்பும்படியும் தொலைபேசி அழைப்பு. கடுமையாகத் திட்டிட்டு வைச்சேன். இது மாதிரி அழைப்புக்கள் நிறையவே வருகின்றன.  பிஎஸ் என் எல்லில் புகாரும் கொடுத்தாச்சு!  ஆனாலும் நிற்கவே இல்லை. 

Sunday, July 13, 2014

பேய், பிசாசுகளை எல்லாம் பார்த்தேனே!

Darr @ The Mall படம் மத்தியானமாய்ப் பார்த்தேன்.  படம் நல்லாவே இருந்தாலும் முதலில் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.  மும்பை --புனே வழியில் ஒரு இடிந்த கட்டிடம் முன்னால் பிரபலமான ஹோட்டலாக இருந்ததாகவும், அது பின்னர் ஏதோ சில அறியாத காரணங்களால் மூடப்பட்டுப் பாழடைந்து போய்விட்டதாகவும், அந்த ஹோட்டலில் இறந்த பெண்ணின் ஆவி அங்கே உலாவுவதாகவும் சில வருடங்கள் முன்னர் தொலைக்காட்சியில் செய்தி ஒன்றில் பார்க்க நேர்ந்தது.  அந்த இடத்தை ஒரு தொழிலதிபர் வாங்கி மீண்டும் ஹோட்டல் திறக்கப் போவதாயும் சொல்லிக் கொண்டு இருந்தனர்.

அது என்ன ஆச்சுனு அப்புறமாத் தெரியாது.  ஆனால் கிட்டத்தட்ட அந்தக் கரு தான் இங்கேயும். ஆசியாவின் மிகப் பெரிய மால்  திறக்கப் படப் போகிறது. அதைக் கட்டும்போதே பல்வேறு பேச்சுக்கள்.  அந்த இடமே ஆவிகள் உலாவும் இடம் என்றும் வெள்ளைப் புடைவை கட்டிக்கொண்டு வெண்மையான தலைமயிருடன் ஒரு பெண்ணின் ஆவியைப் பார்த்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தனர்.  ஆனால் கட்டடம் கட்டுபவர்கள் யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை என்றாலும் அமாநுஷ்யமான சம்பவங்களால் இது உண்மையாக இருக்குமோ என்னும் எண்ணம் அனைவருக்கும்.  அதைத் திறக்கப் போவதற்கு முதல்நாள் மாலையில் அதன் சொந்தக்காரர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தானும், தன்னுடைய குழு நண்பர்களும் அங்கே இரவைக் கழிக்கப் போவதாய்ச் சொல்கிறார்.

ஆனால் அவர் மட்டும் அங்கே தங்கவில்லை.  சொந்தக்காரரின் பெண் அஹானாவும், அவளுடைய சில பணக்கார நண்பர்களும் கூட உள்ளே நுழைகின்றனர். இன்னொரு பக்கம் மாலின் காவலுக்கு அமர்த்தப்பட்டிருக்கும் காவலாளிகளின் தலைவன் ஆன விஷ்ணுவும் உள்ளே தான் இருக்கிறான். அஹானாவின் சிநேகிதி ஐஸ் ஸ்கேட்டிங்கில் திடீரெனக் கொல்லப்படுவது திகிலூட்டும் சம்பவம்னா, அடுத்து அவர்களின் ஒரு சிநேகிதனும் கொல்லப்பட்டுக் கை மட்டும் தனியே வெளியே தொங்கும்.

இந்த மூன்று குழுவுக்கும் ஏற்படும் அனுபவங்கள் தான் கதையே. திகிலூட்டும் சம்பவங்கள். காரணம் தெரியாத இறப்புகள். திடீர்னு எதிரே வந்து நிற்கும் ஆவிகள்னு கதை சுவாரசியமாப் போச்சு. முடிவில் தான் உண்மை தெரிகிறது.  வழக்கமான பழிவாங்கல் கதை தான்.  ஆவிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டமாக வந்து பழிவாங்குகின்றன.விஷ்ணுவுக்கு அந்த ஆவிகளுடனான தொடர்பும் புரிகிறது.  ஏனெனில் அந்த ஆவிகள் விஷ்ணுவை ஒண்ணும் செய்யலை.  விஷ்ணு கேட்டுக் கொண்டதன் பேரில் அஹானாவையும் ஆவிகள் விடுவிக்கின்றன. :))))

முடிவில் செக்யூரிடி விஷ்ணுவும், அஹானாவும் ஒன்று சேர்கின்றனர்.  இதான் கொஞ்சம் இடிக்குது.  கதாநாயகன் என்றாலே பணக்காரப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கணுமோ? பிரியலையே! 

Saturday, July 12, 2014

திக், திக், திக், நிமிடங்கள்!

50 வருஷமாச் சமைக்கிறேன்.  இப்படி எண்ணெய் மட்டுமில்லை, வெந்நீரைக் கூடக் கொட்டிக் கொண்டதில்லை. :(  எப்போதேனும் தோசைக்கல், குக்கர், இரும்புச் சட்டி போன்றவற்றை இறக்குகையில் கையில் சூடு லேசாகப் படும். அதுக்கே ரங்க்ஸ் சூட்டோடு இதை எல்லாம் இறக்க வேண்டாம்.  ஆறினதும் இறக்கிக்கலாம் னு 14 4 தடை உத்தரவு போட்டிருக்கார்.  இப்போது தான் முதல் முறையாக இவ்வளவு கஷ்டமான அனுபவம்.  அதனால் தானோ என்னமோ தெரியலை.  ஊருக்குப் போகையில் கொஞ்சம் அலுப்பாகவும், ஒரு மாதிரி வெறுமையாகவும் இருந்தது.  என்னால் எதையும் தூக்க முடியாதுங்கறதாலே சாப்பாடுப் பையை மட்டும் என்னிடம் ரங்க்ஸ் கொடுத்து வைச்சிருந்தார்.  ரயிலில் போகும்போது அதை மேலே மாட்டி இருந்தோம்.  மாம்பலம் ஸ்டேஷனில் இறங்க கிண்டி வரும்போதே தயார் ஆவோம் என்பதால் சாமான்களைத் தூக்கிக் கொண்டு இருவரும் இறங்கும் வாயில் அருகே போய் விட்டோம்.  சாப்பாடுப் பை என் பொறுப்பில் இருந்ததால் அவருக்கு நினைவிலேயே இல்லை.  நானோ அதைத் தூக்கிக் கொண்டு போய்ப் பழக்கம் இல்லாததால் கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு போயாச்சு.  வண்டியும் மாம்பலத்தில்  நின்று நாங்களும் இறங்கிக் கொஞ்ச தூரம் போனதும் திடீர்னு ஏதோ குறைஞ்சாப்போல் எனக்குத் தோன்ற, அவரிடம் சாப்பாடுப் பை எங்கேனு கேட்டேன்.

அப்போத் தான் அதை வண்டியிலேயே விட்டுட்டோம் னு புரிஞ்சது.  நல்லவேளையாக நாங்க இறங்கின பெட்டி அருகே தான் போயிட்டிருந்தோம். அதுக்குள்ளே ஒரு வாயிலை உள் தாழ்ப்பாள் போட்டிருந்தாங்க. ரங்க்ஸ் இன்னொரு வாயிலுக்கு ஓடி உள்ளே இருந்தவங்களிடம் சொல்லிப் பையை வாங்கிட்டார் ரங்க்ஸ்.  வண்டி கிளம்பறதுக்கு ஊதியாச்சு.  அவருக்கும் பதட்டம்.  அவசரத்தில் கதவைத் திறப்பதற்கு பதிலாக மூடி இருக்கார்.  அப்புறமா ஒருத்தர் சொல்லிக் கதவைத் திறந்து வாயிலருகே வரார்.  வண்டி கிளம்பியாச்சு.  அவரை இறங்க வேண்டாம்.  எழும்பூர் போயிடுங்கனு சொல்ல நான் வேகமாய்ப் போகும்போது ஒரு காலைப் படியில் வைத்து மற்றொரு காலை நிதானமாகத் தரையில் வைத்து இறங்கி விட்டார்.  உயரமாய் இருந்ததால் சாத்தியமாயிற்று என்றாலும் அந்த விநாடி மனம் பரபரப்பும், திகிலும் சொல்ல முடியாதவையாக இருந்தது.   ஒரு நிமிஷம் இந்தப் பை போனால் போகிறதுனு விட்டிருக்கலாமேனு நினைப்பு வந்தது.  முக்கியமான சில பொருட்கள் அதில் இருந்தன.  எப்படியோ முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலன் எங்களுக்குக் கிடைத்தது.  நல்லபடியாக இறங்கிட்டார். இதுக்காகவே திரும்பி வரும்போது சாப்பாடுப் பையைச் சாப்பிட்டு முடிச்சதுமே சாமான்களைப் பிரித்துப் பெரிய பையில் போட்டு மூடி விட்டோம்.

ரயில்வேயில் மாற்றங்கள் வந்திருப்பதைப் பார்த்தால் தான் ஒத்துக்க முடியும். அடிக்கடிப் பயணம் செய்பவர்களுக்குக் கட்டாயமாக மாற்றங்கள் தெரியும். அதோடு இல்லாமல் மற்றத் துறைகளிலும் மௌனமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.  தமிழ்நாடு கல்வித் துறை அதிகாரிகள் மானியங்களுக்காகவும், மற்ற சில தேவைகளுக்காகவும் மத்திய அரசின்  HRD Ministry யின் அதிகாரிகளோடு  சில நாட்கள் முன்னர் சந்திப்பு நடத்தி இருக்காங்க.  தமிழ்நாட்டு அதிகாரிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதோடு அந்த ஒரே நாள் சந்திப்பில் எல்லாவற்றுக்கும் பதில் அளித்து இவங்க தேவைகளை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் பதிலளித்து உத்தரவாதமும் கிடைத்திருக்கிறது.

தமிழக அதிகாரிகள் இதை எதிர்பார்க்கவே இல்லையாம்.  வருஷா வருஷம் அவங்களோடான சந்திப்புக்கே 3,4 நாட்கள் காத்திருக்க வேண்டி வருமாம்.  அதுக்குப் பின்னரும் நீங்க திரும்பிப் போங்க, நினைவூட்டல் கடிதம் அனுப்புங்கனு சொல்லிடுவாங்களாம்.  குறைந்த பக்ஷமாக 3 மாதமாவது ஆகுமாம்.  இப்போது வேலை முடிந்தது குறித்து அவங்க மயக்கம் போட்டு விழாத குறைதான்.  உள் கட்டமைப்பு வேலை வெளியே தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. அதன் தாக்கம் பொதுமக்களுக்குப் புரிய நாட்கள், மாதங்கள் ஆகலாம்.

நேற்றைய பட்ஜெட்டில்  பொதுவான சிறப்பம்சங்கள் இருந்தாலும் சேமிப்பு வரம்பை  3  லக்ஷத்திலிருந்து 5 லக்ஷமாக உயர்த்தி இருக்கலாம்.  இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். பொதுமக்களுக்கும் பயன்பாடு இருக்கும்.  சேமிப்பை 1.5 லக்ஷத்தோடு நிறுத்தியது சரியில்லை.  இதையே திரு இன்னம்புரார் அவர்களும் கூறியுள்ளார்.  பொதுவாக பட்ஜெட் திருப்திகரம் எனத் தோன்றினாலும் விளைவுகளை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.  திட்டங்கள் அறிவிப்புக்களோடு நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். போக வேண்டிய தூரம் மிக அதிகம்.

Friday, July 11, 2014

ஜானே பி தோ யாரோ

சென்ற ஞாயிறன்று   வேலை ஒண்ணும் செய்ய முடியாமல் மத்தியானம் குரங்கு வருதானு  வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தப்போ ஒரு ஹிந்திப் படம் பார்த்தேன்.  ஜானே பி தோ யாரோ என்னும்  படம்.  Jaane be do Yaaro/ NFDC யால் எடுக்கப்பட்டது.  குந்தன் ஷா இயக்கம்.  நஸ்ருதீன் ஷா, சதீஷ் ஷா, ஓம் புரி, பங்கஜ் கபூர்,  ரவி பாஸ்வானி, நீனா குப்தா போன்ற நாடகக் கலைஞர்களால் (theatre artists) நடிக்கப்பட்டது.  இயல்பான நடிப்பு.  நஸ்ருதீன் ஷாவும், ரவி பாஸ்வானியும் ஃபோட்டோகிராஃபர்கள்.  தற்செயலாக ஒரு போட்டிக்குப் படம் எடுக்கையில் கொலை ஒன்றையும் படம் எடுத்து விடுகின்றனர்.  அதை யார் என்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி.

அதற்கு மேல் அதிர்ச்சியாக சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் எல்லாமே நகைச்சுவையோடு பின்னிப் பிணைந்து இயல்பாக வருகிறது.  இறந்து போன சதீஷ் ஷாவின் பிணத்தை வைத்துக்கொண்டு இவங்க அடிக்கிற கூத்து, முக்கியமா ஓம்புரி பண்ணும் வேடிக்கை! பின்னர் க்ளைமாக்ஸில் திரௌபதி வஸ்திர அபஹரணம் சீனில் சதீஷ் ஷாவை திரௌபதி வேஷம் போட்டு நிற்க வைத்து அடிக்கும் கூத்து! அமர்க்களம்.  முடிவு எதிர்பாராதது.  ஆனால் அன்றும், இன்றும், என்றும் நடைபெறும் யதார்த்தம்.

பிணத்தை வைத்து இவங்க அடிக்கும் இந்தக் கூத்து படத்தில் வந்தது 83 ஆம் வருஷமோ, 84 ஆம் வருஷமோ.  ஆனால் இதை தான் நம்ம உலக நாயகர் மகளிர் மட்டும் படத்தில் நாகேஷை வைத்துக் காமெடி ஆக்கி இருக்கார். கிட்டத்தட்டப் பனிரண்டு வருடங்கள் கழித்து.  மனுஷன் கிட்டே ஒண்ணு கூட ஒரிஜினலா இருக்காது போல! :(

ஹம் ஹோங்கே காம்யாப்
ஹம் ஹோங்கே காம்யாப்

ஏக் தின்

பூரா ஹை விஷ்வாஸ்
மன் மேஹை விஷ்வாஸ்

ஹம் ஹோங்கே காம்யாப்

ஏக் தின்.

இப்போதைய நிலைக்கும் இது பொருத்தமாய்த் தான் இருக்கு.

Thursday, July 10, 2014

கிழக்கே போன ரயிலில் நானும்!

மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்னை சென்றிருந்தோம்.  இங்கேயே நேர்முகத் தேர்வில் ஃபெயில்.  இதோடு இரண்டு தரம் ஃபெயில் ஆகிட்டதாலே மருத்துவர் எனக்கும் மாத்திரை கொடுக்க ஆரம்பிச்சுட்டார்.  ஆகவே நானும் குழுமத்தில் சேர்ந்தாச்சு வருத்தத்துடன்.  ஆனால் ரொம்பவே வீரியமான மாத்திரைகள் அல்ல என்பதோடு காலை, இரவு இரண்டே வேளைக்குத் தான் மாத்திரைகள். பத்து நாளில் மறு தேர்வு இங்கேயே செய்துட்டு அதன் முடிவை மருத்துவரிடம் தொலைபேசியில் சொல்லணும்.  வீட்டுப்பாடம் எல்லாம் கொடுத்துட்டார்.

இம்முறை ரயில் பயணத்தில் சென்ற முறை கடைசியாக விசா ரினிவலுக்குப் போனப்போ இருந்ததை விடவும் பயணம் சுகமாக இருந்தது.  ஏ.சி.யின் குளிர் சீராக இருந்ததோடு ரயில் பெட்டி சுத்தமாக இருந்தது.  வேகம் இருந்தாலும் தூக்கித் தூக்கிப் போட்டு நிற்கவே முடியாமல் வண்டி குதிக்கவில்லை. கழிவறை சென்றால் நிற்க முடியாமல் வண்டி ஆட்டத்தில் பலமுறை கீழே தள்ளும், முக்கியமா அது இல்லை. குறிப்பிட்ட பெட்டிகளின்  உதவியாளர்கள் பெட்டிக்கு வெளியேயே உட்கார்ந்திருந்தார்கள் என்பதோடு அவரைத் தேடிக் கொண்டு அலைய வேண்டி இருக்கவில்லை.   வெளியிலிருந்து விற்பனை செய்பவர்களை அனுமதிக்கவில்லை.  எல்லோருமே சுத்தமான உடையுடன் அவங்க அடையாளம் உள்ள பெயர்ச்சீட்டைக் கழுத்தில் கட்டாயமாக மாட்டி இருந்தனர்.  இம்முறை வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு போக முடியாததால் ரயிலிலேயே பயத்தோடு வாங்கினோம். என்ன ஆச்சரியம்! பொங்கல் சூடுன்னா அப்படி ஒரு சூடு.  சுவையும் நன்றாகவே இருந்தது. காஃபி, டீ வாங்கினவங்களுக்கு எல்லாம் அந்தக் கப்பில் முக்கால் கப் வரை காஃபி, டீ கொடுத்தாங்க.  ஆங்காங்கே ஒரு சிலர் முன்னை மாதிரி அரைக் கப் கொடுக்கிறாங்க தான்.  என்றாலும் அவங்களும் விரைவில் மாறுவாங்கனு எதிர்பார்ப்போம்,  குறிப்பாக ரயில் சேவையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்து விட்டது.  மெல்ல மெல்லத் தான் சூடு பிடிக்கணும்.  டிக்கெட் இதுவரை விலையேற்றியதை நியாயப் படுத்தலாம்.  ஆனால் தொடர்ந்து அடிக்கடி ஏறும் என்பதை ஏற்கத் தான் முடியவில்லை.


ஆம்னிப் பேருந்துக்கோ, தனியார் சிறப்புப் பேருந்துகளிலோ, தனியார் வோல்வோ பேருந்துகளிலோ பயணம் செய்ய 500 ரூபாய்க்கும் மேல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கிறது.  அதைக் கொடுத்துப் பயணம் செய்கின்றனர் தானே.  அதில் கால் வாசி கூட ரயில்வேயில் விலை ஏற்றம் இல்லை.  மேலும் நமக்கு வசதிகளும் வேண்டும், ரயில் டிக்கெட்டும் விலை ஏறக்கூடாதுன்னா அரசாங்கம் எங்கிருந்து வசதி செய்து தர முடியும்? முக்கியமாய் டிக்கெட் பரிசோதகர்களை நிறைய நியமனம் செய்ய வேண்டி இருக்கிறது.  ஒரே டிக்கெட் பரிசோதகர் 4,5 பெட்டிகளில் டிக்கெட் பரிசோதனை செய்ய வேண்டி இருக்கிறது.  இதிலே இப்போது பெண் டிக்கெட் பரிசோதகர்களும் வருவதால் அவங்களாலே நிச்சயமா முடியறதில்லை. இதை ஒரு குற்றமாய்ச் சொல்லவில்லை.  குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக 2 பெட்டியின் 150 பயணிகளின் டிக்கெட்டை மட்டும் தான் பரிசோதிக்க இயலும். ஆகவே புதிதாக நியமனம் செய்தால் அவங்களுக்குச் சம்பளம் கொடுத்தாகணும்.  இந்தியா முழுமைக்கும் இப்படி எத்தனையோ நியமனங்கள் செய்யப் பட வேண்டும்.

பராமரிப்புச் செலவு போன்ற முக்கியமான செலவுகளுக்கும் பணம் தேவை. இன்னும் எத்தனையோ வழித்தடங்கள் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. அவை எல்லாம் முடிக்கணும்.  எல்லாவற்றிலேயும் சலுகையைக் கொடுத்தால் அப்புறமா ரயில்வேக்கு வருமானம் எங்கிருந்து வரும்?  நமக்கு வசதி வேண்டும்னா இம்மாதிரியான சின்னச் சின்ன விலை ஏற்றங்களை ஏற்கத் தான் வேண்டும்.  இப்போதெல்லாம் அரசாங்கம் எல்லாத்தையும் இலவசமாக் கொடுக்கணும்;  அதுவும் தரமாக இருக்கணும் என்னும் மனப்பானமை பெருகி விட்டது.  வருமானத்துக்கு வழியில்லாத அரசால் எதைச் சாதிக்க முடியும்?

சென்னை போன அன்னிக்கு மாம்பலத்தில் இறங்குகையில் ஒரு சிறு நிகழ்வு. கொஞ்சம் அசட்டுத்தனம்,,கொஞ்சம் மறதி எல்லாம் கலந்த அந்த நிகழ்வு குறித்துப் பின்னால் பார்ப்போமா? :)

கை இன்னும் சரியாகவில்லை. :( வலக்கைப் பயன்பாட்டுக்கு வர இன்னும் ஒரு வாரமாவது ஆகும் போல் இருக்கு! வீக்கம், வலி குறைந்துள்ளது. 

Saturday, July 05, 2014

குரங்காரால் கிடைத்த ஓய்வு! :)

இன்னிக்குத் தனியா இருக்கிறச்சே குரங்கார் படுக்கை அறைக்குள் நுழைஞ்சதிலே இருந்து ஏற்பட்ட பாதிப்பில் சமைக்கிறச்சே கவனம் இல்லாமல் ஒரு சின்ன விபத்து ஏற்பட்டு விட்டது.  குரங்காரைக் கண்டு நான் பயப்படுவதால் சமையலறை பால்கனி ஜன்னலுக்கு ரங்க்ஸ் கம்பி வாங்கிக் கட்டி விட்டார்.  ஆனால் படுக்கை அறை பால்கனி ஜன்னல் எல்லாம் இன்னமும் பெரிசு.  அங்கே தான் உட்கார்ந்திருக்கு!  அந்த பால்கனிக் கதவைத் திறக்கிறதே இல்லை!

சமைச்சு முடிச்சுட்டுச் சாப்பிடும்போது வடாம் பொரிக்கலாம்னு எண்ணெய் காய வைத்தேன்.  எப்போவுமே இரண்டு பேருக்குனு சின்னச் சட்டியிலே தான் காய வைப்பேன்.  நேத்திக்கும் அப்பளம் பொரிச்சேன்.  இன்னிக்கு வடாம் பொரிக்கையிலே எண்ணெய் கொட்டிக் கைவிரல்களில் பட்டு வெந்து போய் விட்டன.  முக்கியமா ஆள்காட்டி விரலும், கட்டை விரலும் ரொம்ப பாதிப்பு.  சரியாக இன்னும் சில நாட்கள் ஆகும்.  அதுவரை எஞ்சாய் மாடி!!! :)))

கண்ணன் பதிவுகள் எழுதி வைச்சிருப்பதால் முடிஞ்சவரை அதைப்போடுவேன். விடமாட்டோமுல்ல! அதோடு திங்களிலிருந்து புதன் வரை ஒரு சின்ன விடுமுறையும் கூட. எல்லாரும் ஸ்வீட் எடுங்க, கொண்டாடுங்க.  செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி போட்டுண்டு வந்தாச்சு.  

Tuesday, July 01, 2014

குரங்காரின் கொட்டம் !

நம்ம வீட்டுக்கு நாலுகால் பிராணிகள் ஆன பசுக்கள், கன்றுகள், நாய்கள், பூனைகள்னு தான் வந்துட்டு இருந்தன.  இதெல்லாம் அம்பத்தூரில் இருக்கிறச்சே.  நாயும், பூனையும் குடித்தனமே இருந்ததுங்க.  எல்லாம் எழுதி இருக்கேன்.  அதோட சுப்புக்குட்டிங்க வேறே. விதம் விதமா வருங்க.  இப்போ இங்கே வந்தப்புறமா ஒரே ஒருநாள் எலியைப் பார்த்துப் பயமுறுத்தியதோடு சரி.  அவ்வப்போது ஹால்லே இருக்கும் பால்கனியில் தேன்சிட்டு வந்து உட்காரும்.  அதைப் படம் பிடிக்கணும்னு எழுந்தா ஓடிப் போயிடும்.

இப்போப் போன வாரத்திலே இருந்து கு"ரங்கார்" வந்துட்டு இருக்கார்.  போன வாரத்திலே ஒருநாள் வாசல் வராந்தாவுக்கு வந்து பால் வாங்கிட்டேனானு செக் பண்ணிட்டுத் திரும்ப நினைவா பாத்திரத்தை அதே போல் மூடி விட்டுப் போனார்.  மறுநாள் பிள்ளையாருக்கு மட்டுமா கொழுக்கட்டை? எனக்கு வடைகிடையாதானு வந்து கேட்டுட்டுப்போனார்.  அதுக்கப்புறமாக் கொஞ்சம் வரவு குறைந்திருந்தது.  ஞாயிறன்றிலிருந்து எல்லாக் கதவுகளையும் வழக்கம் போல் திறந்து வைக்க ஆரம்பித்தோம்.  நேத்து மத்தியானம் உள் அறையில் மேசைக்கணினியில் வேலை செய்யும்போது சமையலறைப் பக்கமிருந்து சத்தம் வரவே, சமையலறையின் வெளி வராந்தாக் கதவை இழுத்துச் சார்த்தினேன்.  அப்புறமா ஏதுமில்லை.

இன்னிக்குக் காலம்பரக் கஞ்சி தான்போட்டுட்டு இருந்தேன்.  சமையலறைக்கு வெளியே வாளியை யாரோ எடுக்கும் சப்தம்.  ரங்க்ஸோ மும்முரமான வேலை எதிலோ கவனமாக இருந்தார்.  ஆகவே அவர் இல்லை.  சந்தேகமா எட்டிப்பார்த்தா நம்ம நண்பர்.  நல்லவேளையா வாளியில் போட்டிருந்த துணிகளை எல்லாம் அலசிக் கிரில் கம்பியில் காய வைத்திருந்தேன்.  அதுக்கு ஏதும் கிடைக்கலை.  என்னைப் பார்த்ததும் உள்ளே வரலாமா என்கிறாப்போல் என்னையும் பார்த்து சமையலறையின் உள்ளேயும் பார்த்தது.  ரங்க்ஸைக் கூப்பிட்டேன்.  ஆனால் அவர் எழுந்து வரதுக்குள்ளே என்ன நினைச்சதோ ஒரே தாவு தாவி கிரில்லுக்கு வெளியே புகுந்து ஜன்னல் கைப்பிடியில் உட்கார்ந்து கொண்டு உலர்த்தி இருந்த துணிகளை எல்லாம் எடுத்துட்டு மறுபடி உள்ளே வரலாமானு யோசிக்க ஆரம்பிச்சது.

அதுக்குள்ளே ரங்க்ஸ் வந்து பார்த்து அதைச் செல்லமாகப் போடானு சொல்ல அது பல்லைக்காட்டியது.  பல்லைக் காட்டி பயமுறுத்தி இருக்குனு நினைக்கிறேன். அப்புறமா கம்பைத் தூக்கவும் ஒரே தாவாத் தாவிப் போய் விட்டது.  மறுபடி எல்லாக் கதவுகளையும் சார்த்திட்டு உட்கார்ந்துக்கறோம். :( நேத்திக்கு அம்மா வந்ததாலே இதை எங்கானும் கொண்டு விட்டிருந்தாங்களா இல்லாட்டி இதுவே அம்மாவுக்குப் பயந்துண்டு வெளியே தலைகாட்டலியா தெரியலை.  இன்னிக்கு மறுபடி வந்திருக்கு.


கொசுறு:  அம்மா வந்ததாலே நேத்திக்கு மின்வெட்டே இல்லைனு நினைச்சால் சாயந்திரம் ஆறரைக்கு வெட்ட்டிட்டாங்க.   இடியும், மின்னலும் இருந்ததும் ஒரு காரணம். :)


தடை செய்யப்பட வேண்டிய விளம்பரங்கள்:   Indian Men Wanted விளம்பரம் மற்றும் பார்லே மாரிகோல்டில் வரும் பெண்கள் பேசிக்கொள்ளும் அசிங்கமான கமென்ட்கள்!  ஃபேர் அன்ட் லவ்லி போட்டுக்கொண்டால் தான் தன்னம்பிக்கை பிறக்கும் என்னும் விளம்பரங்கள்.  ஆஃப்டர் ஷேவ் லோஷன் விளம்பரங்கள், ஒரு ஆண் செல்ஃபோனில் ஒரு பெண்ணைப் படம் பிடிக்கும் விளம்பரம், அதற்கு அந்தப் பெண் கொடுக்கும் மட்டமான காட்சிகள்.  காஜல் நடிக்கும் ஜெல்லி விளம்பரம்(இப்போ அதிகமா வரதில்லை)