எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 11, 2023

மகாகவிக்கு அஞ்சலி!

 




அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு;-தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”


துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா!

அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

Tuesday, November 28, 2023

கார்த்திகை நல்லபடியா முடிஞ்சது! இறைவனுக்கு நன்றி!


 



 


  


கார்த்திகை தீபத்திருநாள் படங்கள். இம்முறை கார்த்திகை மன நிறைவுடனும், மகிழ்வுடனும் கொண்டாடினேன் எனில் அது குட்டிக் குஞ்சுலுவால் தான். கார்த்திகைக்கு முன்னாலும் தீபாவளிக்குக் கேட்டுக் கொண்டாற்போல் அது என்னிடம் எல்லாமும் கேட்டு வைத்துக் கொண்டது. அதே போல் ஞாயிறன்று கார்த்திகை தீபம் அங்கே நைஜீரியாவிலும் ஏற்றிக் கொண்டாடினார்கள். பட்டுப்பாவாடை, ப்ளவுஸ் போட்டுக் கொண்டு என்னிடம் காட்டியது. ஒரே ஆட்டம் தான். கொண்டாட்டம் தான். அது மட்டும் இங்கேயே இருந்திருந்தால் என்னும் எண்ணமும் வரத்தான் செய்தது. என்றாலும் இத்தனை ஈடுபாட்டுடன் நம் பாரம்பரியப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் அதுக்கு இருந்த சந்தோஷம் அளவிட முடியாத ஒன்று.  குஞ்சுலு என்னிடம் பாட்டி, நீ எத்தனை விளக்கு ஏத்தினே? எனக் கேட்டது. சுமார் 20/25 இருக்கும் என்றேன். அதுங்கிட்டே பத்து விளக்குகள் தானாம். ரொம்ப சோகமாச் சொன்னது. அடுத்த வருஷம் நிறைய ஏத்தலாம்னு சொல்லிட்டு இருந்த விளக்குகளை அவ அம்மா ஏத்தினாள். இது கூடவே நின்னுண்டு பார்த்துட்டு இருந்தது. நிலைப்படியில் எல்லாம் நான் வைச்சிருக்கிறதைப் படத்தில் பார்த்துட்டு அதே போல் அங்கேயும் வைக்கச் சொன்னது. ஒரே ஆட்டம், பாட்டம், குதியாட்டம் தான். கோடி துக்கம் போகும் குழந்தை முகத்திலே என்பார்கள். அதை ஞாயிறன்று அனுபவித்தேன்.

கார்த்திகைக்கு முன்னாலிருந்தே ரங்க்ஸின் உடம்பு சரியில்லாமல் இருந்தது. சரியாக சனிக்கிழமை அன்று காலை ஒரே தலை சுற்றல், நிற்க முடியவில்லை. என்னை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தவர் கீழே விழுந்து விடுவார் போல் இருந்ததால் நல்லவேளையாகப் பக்கத்தில் இருந்த நாற்காலியை மெதுவாக நகர்த்தி அதில் உட்கார வைத்தேன். பின்னர் மருத்துவரிடம் அவர் தானாகவே தான் சென்றார். மருத்துவரோ ஜூரம் மிக அதிகமாக இருப்பதாகச் சொல்லித் தனியே வந்ததுக்குத் திட்டி விட்டுப் பின்னர் மருந்தை ஐவி மூலம் ஏற்றித் தக்கத்துணையோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அன்று படுத்தவர் நேற்றுக் கொஞ்சம் பரவாயில்லை என்னும்படி இருந்தார். நான் ஏதோ முடிந்ததைச் சமைத்துப் பொரிப் பாகு செலுத்திக் கார்த்திகை தீபத்தை நிறைவேற்றினேன். குழந்தையின் வரவும் அதன் சந்தோஷமும் தான் மனதுக்கு ஆறுதலைக் கொடுத்தது. இன்று காலை வரை சரியாக இருந்தவருக்கு மத்தியானத்தில் இருந்து தலையில் மீண்டும் வலி. அவரை நேரில் பார்த்தவர்களுக்கு அவருக்குக் கழுத்துப் பிரச்னை இருப்பது தெரிந்திருக்கும். அதனால் ஏற்பட்ட வலி தலை முழுவதும் வியாபித்துப் பொறுக்க முடியாமல் இருக்கு. 
நாளை நியூரோ மருத்துவரிடம் போக நேரம் கேட்டு வாங்கி இருக்கேன். நாளைக்காலை போகணும். திடீரென ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தினால் வீட்டில் யாருக்குமே ஒண்ணுமே ஓடலை. பார்க்கலாம் இறைவன் நினைப்பு என்னனு. 

Monday, November 13, 2023

உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி!

 

குளிக்கப் போகும் முன்னர் எல்லாம் எடுத்து வைச்சிருந்த படம்.  சம்புடங்களில் பக்ஷணங்கள். ரிப்பன் பகோடா, மிக்சர், பாதுஷா, லட்டு ஆகியவை மட்டும். வீட்டில் நான் செய்த பாதம் பர்ஃபி   அல்வா,  என்னும் பெயரில். மருந்துப் பொடி கடையில் வாங்கியது இந்த வருஷம் அதைக் கிளறினால் கமர்கட் மாதிரி வந்திருக்கு. என்னோட தீபாவளி மருந்துக்கு ரசிகர்கள் நிறைய உண்டு ஒரு காலத்தில் பாராட்டினவங்க   எல்லோரும்  இதைப் பார்த்தால்   நீயா செய்தது எனக் கேட்டு வியப்பார்கள். :( வயசாச்சு/அதான் உனக்கு  முடியலைனு எல்லோரும் சொன்னாலும் அது நொண்டிச்சாக்கு என எனக்குத் தோணும்.



நெல்லை பார்த்தால் இந்த ரிஃப்லெக்ஷன் இல்லாமல் எடுக்கத் தெரியலைனு கேலி செய்வார். வெங்கட் நவராத்திரிம் போது வந்து ஓர் ஆய்வே நடத்திட்டார். ரிஃப்லெக்ஷன் இருக்கத்தான் இருக்கும் என்கிறார். நெல்லை என்னமோ ஒத்துக்கப் போறதில்லை. என்றாலும் ஸ்ரீராமர் ஒத்துப்பார்.


இதோ! பிரிச்சு வைச்சிருக்கேன் பாருங்க. மேலே உள்ள பிங்க் நிறப் புடைவை தான் நேத்திக்குக் கட்டிண்டேன். எங்க ஊர்ப்பக்கம் (மதுரை) ஒற்றைப் புடைவையாக வைக்கக் கூடாது என்பார்கள். இரண்டு தான் வைக்கணும் என்பார்கள். அப்பாவும் எனக்குப் பாவாடை என்றாலும் 2, புடைவை கட்ட ஆரம்பிச்சதும் 2 புடைவை என்றே எடுத்திருக்கார். ஒரு புடைவை க்ரான்டாக இருக்கும். க்ரான்டாக இருப்பதை தீபாவளிக்குக் கட்டிப்பேன். இப்போவும் அப்படித்தான். குஞ்சுலு செலெக்ஷன் க்ரான்டாக இருந்தது. அதைத் தான் கட்டிண்டேன். 

எல்லோரும் தீபாவளி கொண்டாடி இருப்பீங்க. இங்கேயும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிஞ்சது. ஒரு வாரமாகவே வெடிச் சப்தம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பயங்கரமான வெடிச் சப்தம். நேற்று மத்தியானமெல்லாம் படுக்கவே முடியலை. சாயந்திரமாக் குஞ்சுலு வந்தப்போப் பேசவே முடியலை. அதுக்கும் வெடிச் சப்தம் கேட்கணும்னு இருந்ததாலே கேட்டுட்டு இருந்தது. இரண்டு, மூன்று நாட்களாகவே தீபாவளி பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தது குஞ்சுலு.  என்னிடம் பாட்டி, தீபாவளி கொண்டாடியதும் எனக்குப் படம் எடுத்து அனுப்பு என்றது.

நான் இந்த வருஷம் எந்த பக்ஷணமும் பண்ணவில்லை. போன வருஷம் தேன்குழல் மட்டும் பண்ணிட்டு லாடு ஏதோ பிடித்தேன். இந்த வருஷம் பாதம் பர்ஃபி பண்ணலாம்னு பண்ணினால் அது பாதாம் அல்வாவாக வந்திருக்கு. சரினு பெயரை மாத்திட்டு அதையே எல்லோருக்கும் கொடுத்தாச்சு. நம்ம ரங்க்ஸ் நீ தேன்குழலெல்லாம் பண்ணாதேனு திட்டவட்டமாகச் சொல்லிட்டார். அதை மீறிட்டு என்ன செய்ய முடியும்? காடரர் கிட்டே ஆர்டர் செய்த பக்ஷணங்களையே எல்லோருக்கும் கொடுத்தாச்சு.

குட்டிப் பட்டுக் குஞ்சுலு நாங்கல்லாம் சொன்னதைக் கேட்டுக் கொண்டு நேத்திக்கு அதுவாகவே சீக்கிரமாய் எழுந்து கொண்டு அவ அம்மாவிடம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டச் சொல்லிக் குளித்துப் புது ட்ரஸ் எல்லாம் போட்டுக் கொண்டு எங்களிடம் காட்டியது.  பாட்டி, நீ சொன்ன மாதிரி நானும் தீபாவளி கொண்டாடினேன் என்று சொன்னது. பட்டாஸுகள் வெடிப்பதைக் கேட்க வேண்டும்/பார்க்க வேண்டும் என்று ஆசை. நமக்கோ அந்தப் புகையே ஒத்துக்காது. என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ நம்ம வளாகத்தின் வெளியே மேற்குப் பக்கமாக வெடி வெடிக்க அனுமதி கொடுத்திருந்தாங்க. உள்ளே வெடிச்சால் கார் பார்க் நிரம்பி வழிஞ்சது. ஆகவே பாதுகாப்பைக் கருதி வெளியே வெடிச்சாங்க. அதை அசோசியேஷன் தலைவர் வீடியோ எடுத்துப் பகிர்ந்திருந்தார். சரினு குஞ்சுலுவுக்கு அதை அனுப்பிட்டேன். அதுவும் பார்த்து ரசிச்சது.

சென்னையை விட்டு வந்தப்புறமாச் சுண்டல் கலெக்ஷன் குறைஞ்ச மாதிரி தீபாவளி கலெக்ஷனும் குறைஞ்சு போச்சு. எதிர் வீடுங்க இரண்டு மட்டும் தான் கொடுக்கல்/வாங்கல். ஆகவே பக்ஷணங்களை என்ன செய்யலாம்னு மண்டைக்குடைச்சலும் இல்லை. காடரர் கொடுத்திருக்கும் பக்ஷணங்களை விநியோகம் போக மீதம் சாப்பிட்டாலே போதுமானதுனு ஆயிடுச்சு. இப்படியாக இந்த வருஷ தீபாவளியைக் கொண்டாடி முடிச்சாச்சு. எல்லோருக்கும் தாமதமான இனிய தீபாவளி வாழ்த்துகள்..

நேத்திக்குக் காலம்பர 3 மணிக்கே எழுந்து கொண்டு வாசல் பெருக்கிக் கோலம் போட்டேன். பாரத்தவங்க எல்லாம் இத்தனை பெரிய கோலத்தை உங்களால் குனிஞ்சு போட முடிஞ்சுதானு ஆச்சரியப்பட்டாங்க. அந்த நேரம் பகவான் கொடுத்த தெம்பில் முடிஞ்சது. பின்னர் வீடு பெருக்கித்துடைச்சு, (வேலை செய்யும் பெண் தீபாவளிக்கு லீவு) இன்னிக்குத் தான் வந்திருக்காங்க. உம்மாச்சிக்கு எல்லாம் எடுத்து வைச்சு, எண்ணெய் காய்ச்சி, சீயக்காய் கரைச்சு  மஞ்சள் பொடியோடு எடுத்து வைச்சுப் புடைவை வேஷ்டி எல்லாமும் எடுத்து வைச்சேன். இந்த வருஷ தீபாவளிப் புடைவைங்க எல்லாம் ஓ.சி. புடைவை தான். பையர் மைசூர் போனப்போ குஞ்சுலு செலக்ஷனில் ஒரு புடைவை வாங்கி வந்திருந்தார். அதைத் தான் கட்டிக் கொண்டேன். குஞ்சுலு பிங்க் கலரில் எடுத்திருக்கு. அதுவுமே நேத்திக்குப் பிங்க் கலர் ட்ரஸ் தான் போட்டுக் கொண்டிருந்தது. மும்பையிலிருந்து வந்த என் ஒண்ணு விட்ட ஓர்ப்படி ஒரு புடைவை கொடுத்தாங்க. அதை நவராத்திரிக்கே கட்டிண்டாச்சு. செப்டெம்பரில் நடந்த உறவினர் திருமணத்தில் ஒரு புடைவை, நவராத்திரியில் நாத்தனார் பெண் ஒரு புடைவையும் கொடுத்திருந்தாங்க. நான் பையர் வாங்கின புடைவையையே சிறிது நேரம் கட்டிக் கொண்டேன்.  நான் தீபாவளி ஜவுளி மட்டுமல்ல, பொதுவாகக் கடைகளுக்குப் போயே 3 வருஷங்கள் ஆகின்றன. எல்லாக் கடைகளிலும் சுமார் 15/20 படிகள் ஏறணும். பிடிச்சுக் கொள்ளப் பிடிமானமும் இல்லை. ரங்க்ஸ் முதலில் மேலே ஏறிக் கொண்டு பின்னர் என்னை மேலே ஏத்தணும். சுற்றிலும் உள்ளவங்க என்னையே பார்ப்பாங்க. சில கோபக்கார மாமிகள் அவரே முடியாமல் இருக்கார், நீ அவரைப் போய் ஏன் தொந்திரவு பண்ணறே? ஏன் வெளியே வாசல்லே வரேனு கேட்டுச் சத்தமும் போட்டிருக்காங்க. ஆகவே நான் மருத்துவரைப் பார்க்க வேண்டியது தவிர்த்த மற்ற இடங்களுக்கு இப்போதெல்லாம் போவதில்லை.

Tuesday, October 24, 2023

நவராத்திரி முடிஞ்சாச்சா?


நவராத்திரிப் பத்து நாட்களூம் பதிவு போட முடியலை. முக்கியமாய் இந்தக் கணீனி ஒரு காரணம். எழுதுவது சிரமமாக ஆகி விட்டது. காப்பி, பேஸ்ட் பண்ணீப் பழைய பதிவுகள் போடலாம் எனில் அதுவும் சிரமமாக இருந்தது. ஆகவே சும்மாவே இருந்துட்டேன். இப்போ நேத்திக்கு சரஸ்வதி பூஜைப் படங்கள் குஞ்சுலுவுக்காக எடுத்தது போட்டிருக்கேன். இதிலே தீபாராதனைப் படங்கள் எல்லாம் வரலை. பார்க்கணூம் பார்த்துக் கிடைச்சதும் அதைச் சேர்க்கிறேன். இப்போதைக்குப் பூஜை நடக்கும் படங்கள் மட்டும். நிவேதனம் சாதம், பருப்பு, பாயசம், வடை, அதிரசம் மட்டும். கொண்டைக்கடலைச் சுண்டல் சாயந்திரம் பண்ணீனேன். நேத்திக்குக் கொஞ்சம் பேர் வரவும் வந்தனர். ஒரு வழியாய் நவராத்திரி முடிஞ்சாச்சு. 



 









புடைவை தெரியுதே, நான் உட்கார்ந்திருக்கேன். 

 


 







Sunday, October 08, 2023

மதுரைக்கு வந்த சோதனை!

 பதிவு எழுதணும்னு தான் ஆசை. ஆனால் நேரம் என்னமோ இறக்கை கட்டிப் பறக்கிறது. அடுத்தடுத்து உறவினர் வருகை, வீட்டு வேலைகள்னு கணினி பக்கமே வர முடியலை. முன்னெல்லாம் காலை ஒரு மணி நேரமாவது கரெக்டா உட்கார்ந்துடுவேன். இப்போல்லாம் முடியலை. அதிலும் வீட்டு வேலை செய்யும் பெண் வருவாளா/மாட்டாளா என பூவா/தலையா போட்டுப்பார்த்துட்டு வேலை செய்ய வேண்டி இருக்கே. அதோட இப்போல்லாம் வேகமா வேலை செய்ய முடியறதில்லை. சுணக்கம். பிள்ளையாருக்கு முன்னாடி நடந்த கிருஷ்ண ஜயந்திப் படங்களையே இன்னமும் போட முடியலை. அதோடு இந்தக் கணினி பிரச்னை வேறே. பழைய டெல் கணினியில் இ கலப்பையினால் எழுதினால் எழுத்துப் பிழைகள் நிறையவே வருகின்றன. சுரதா மூலம் தட்டச்சிப் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போ சுரதா வேலையே செய்வதில்லை.

இந்தப் புதுக்கணினியில் வேலை செய்தாலும் இதில் வேறே சில பிரச்னைகள். இதில் அடிக்கடி உட்கார்ந்து வேலை செய்ய முடியலை. நடுவில் பிரின்டர் வேறே வேலை செய்யாமல் படுத்தல். இதுக்கு நடுவிலே செய்ய வேண்டிய ஆன்லைன் ட்ரான்சாக்ஷன் எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம்னு எல்லாமும் செய்வதால் அதுக்கெல்லாம் உட்கார்ந்தால் ஒரு அரை மணியாவது ஒவ்வொண்ணுக்கும் ஆகிடும். அதுக்கப்புறமாப் பதிவுகள் பக்கம் வரவோ, ஏதேனும் எழுதவோ தோன்றுவதில்லை. 

வெளியே எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருப்பதால் கோயில்கள் பற்றியோ சென்ற இடங்கள் பற்றியோ எழுத முடியலை. வேறே சில விஷயங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எழுத யோசனை. இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இதுக்கு நடுவிலே எஸ் எம் எஸ் கொடுத்து மிரட்டும் சைபர் திருடர்கள்! என்னத்தைச் சொல்ல! எத்தனை கவனமாக இருந்தாலும் வந்து மிரட்டுகிறார்கள். நேத்திக்கு அக்கவுன்டே ப்ளாக் ஆகிடுத்துனு தகவல். போனாப் போகட்டும்னு அந்த எஸ் எம் எஸ்ஸை டெலீட் செய்துட்டேன். :)))))) அடுத்து உங்க வீட்டில் மின்சாரம் கட் ஆகும்னு செய்தி வரும். இதுக்கு நடுவில் தொ(ல்)லை பேசித் தொந்திரவு கொடுக்கும் நண்பர்கள். பெல் அடிக்குதேனு ஃபோனை எடுக்கப் போனால் கிட்டப் போகிறவரை அடிச்சுட்டுக் கிட்டப் போனதும் நின்னுடும். :P

எடுத்துக் கேட்டாலோ ஷேர் மார்க்கெட், சீட்டுக் கட்டுவது, ஃபைனான்ஸ் தரேன், வாங்கிக்கோனு ஏகப்பட்ட ஆஃபர்கள். இதுக்கு நடுவிலே ஷாப்பிங் வேறே தொ(ல்)லைபேசி மூலம்! அப்பாடா! எத்தனை பேரைச் சமாளிக்க வேண்டி இருக்கு. இந்தக் கணினிப் பயன்பாடு வந்தாலும் வந்தது எல்லோரும் ரொம்பவே கெட்டிக்காரங்களாவும் புத்திசாலிகளாவும் எப்படி எல்லாம் திருடலாம்னு பத்துப் பேருக்கு யோசனை சொல்லக் கூடியவங்களாவும் ஆயிட்டாங்க. எல்லாம்     தலைவர்களால் தான். அவங்க வழியிலேயே மக்களும் ரொம்பக் கெட்டிக்காரங்களா ஆயிட்டாங்க போல!  ஒவ்வொருத்தரின் சொத்துக்கள் பற்றியும் கேட்டால் ஆகா! தமிழகம் இவ்வளவு பணம் படைத்த மாநிலமாகவா இருந்திருக்கு என ஆச்சரியப்பட வேண்டி இருக்கு.

இப்போ என்னோட தலையாய கவலையே இன்னும் வீட்டு வேலை செய்யும் பெண் வரலை! வருவாங்களா? மாட்டாங்களா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!

Monday, September 18, 2023

வந்தார், வந்தார், வந்தாரே விநாயகர்!


 இது ஆடி வெள்ளீக்குப் போட்ட மாவிளக்கு



கணபதியார் குளீச்சுப் புத்தாடை அணீந்து அலங்காரத்தில்


நெய் தீபம் காட்டும்போது



நம்ம ராமர் மேலே இருந்து எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கார்.


நிவேதனங்கள். வெற்றீலை, பாக்கு, பழங்கள், சாதம், இட்லி, வடை, அப்பம், உப்பு, வெல்லக் கொழுக்கட்டைகள், பருப்புப் பாயசம்


பூப் போட்டுக் கொன்டிருக்கார்


கற்பூர தீபாராதனை
.
ஆங்காங்கே இருக்கும் தட்டச்சுத் தவறூகள் மனதை நோகடிக்கிறது. மன்னிக்கவும்.

Sunday, September 17, 2023

எங்கே தப்பு?

 குஞ்சுலு ஊருக்குப் போனதில் இருந்து ஒரே நெருக்கடி. -ஹி-ஹி, அதால் இல்லை. உறவினர் வருகை/திரும்புதல் என. உட்கார நேரம் இல்லை. சென்ற வாரம் ஒரு கல்யாணம். பையருக்கு 26 வயது/பெண்ணூக்கும் கிட்டத்தட்ட 2,3 வயதே கம்மி. பார்க்கவே அழகாக இருந்தது. இங்கே ஶ்ரீரங்கத்திலேயே பெரிய திருமண அரங்கான அரங்கன் அரங்கத்தில் கல்யாணம். உண்மையிலேயே பெரிய திருமண மண்டபம். மாமியார் வழி சொந்தங்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆகவே நம்ம வீடு கல்யாண வீடு மாதிரி ஆகி விட்டது. எல்லோரும் வருவதும் போவதுமாக இருந்தது. உட்கார நேரமில்லை. பின்னர் அவசரமான  ஒரு சின்னப் பயணமாகச் சென்னைக்குப் போயிட்டு புதன்கிழமை திரும்பிட்டோம். மறூநாள் அமாவாசை வேறே! மூச்சு விட முடியலை.

செப்டெம்பர் 11 ஆம் தேதி குட்டிக் குஞ்சுலுவின் பிறந்த நாள். அன்னிக்குக் குஞ்சுலுவைப் பார்த்து ஆசிகள் சொன்னோம். குதித்துக் கொண்டு இருந்தது. அதோட அன்னிக்குத் தான்  பாரதியின் நினைவு நாள். கணீனியைத் திறக்கவே முடியலை. விடாமல் பதிவு போட்டிருக்கேன். ஆனால் இந்த வருஷம் முடியலை!அன்னிக்குப் பூரா மனசில் பாரதியின் நினைவுப் பதிவு போடாதது முள்ளாகக் குத்தியது. என்ன செய்ய? மறூநாள் அதிகாலை சென்னை கிளம்பணூமே! உறவினரையும் கவனித்துக் கொண்டே கிளம்பவும் ஏற்பாடுகள். முன்னெல்லாம் தினம் இரு பதிவுகள் கூடப் போட்டிருக்கேன். வெளீயே எங்காவது போனால் நம்பிக்கையான நட்பிடம் கடவுச் சொல்லைக் கொடுத்துப் பதிவுகள் போடச் சொன்னதும் உண்டு. பின்னர் ஷெட்யூல் செய்து வைக்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போ 2016 ஆம் ஆண்டில் இருந்தே சுணக்கம். இப்போ 2021க்குப் பின்னர் ரொம்பவே மோசம். பதிவு போட்டாலே பெரிய விஷயம் என இருக்கு. இந்த வருஷம் அதை விடவே மோசம். இதுவும் ஒரு நேரம். கடந்து போகும் என நினைக்கிறேன்.

பல வேலைகள் முடிக்காமல் கிடக்கின்றன. வயதோ ஆகிறது. எதை எடுத்துச் செய்வது? எல்லாமே முக்கியமானவை தான். இனியாவது உட்கார முடியுமா? உட்கார்ந்தாலும் வேலைகள் முடிக்க முடியுமா? தெரியலை. என்னமோ நாட்கள் பறக்கின்றன. ஆனால் வெட்டியாக! மனது ஒரு பக்கம் குத்தினாலும் நேரம் வாய்ப்பது கஷ்டமாக இருக்கே!  ஏன் இப்படி? எங்கே தப்பு? உட்கார்ந்து யோசிச்சாலும் புரியலை. கடவுள் தான் சரி பண்ணணூம்.


Thursday, August 31, 2023

குஞ்சுலு ஊருக்குப் போயாச்சு!

 வீடு அமைதியாக இருக்கிறது. சாமான்கள் வைச்ச இடத்தில் இருக்கின்றன. அதிலும் முக்கியமாகத் தம்பளர்கள்! சமையலறையில் இரண்டு, பாத்திரம் தேய்க்கும் சிங்கில் இரண்டு, சாப்பாடு மேஜையில் 2 என அங்கும் இங்குமாகக் கிடக்கும் தம்பளர்கள் இன்னிக்கு எடுக்க ஆள் இல்லாமல் வைத்த இடத்திலேயே மௌனம் காக்கின்றன. குஞ்சுலுவின் ஐபாடில் இருந்து வரும் கார்ட்டூன்  குழந்தைகளின் சிரிப்புச் சப்தத்துடன் குஞ்சுலு சிரிக்கும் சப்தம், நடுநடுவில் ஐ பாட் பார்த்தது போதும்னு அவ அப்பா/அம்மா சொல்லும்போது நோ என உரத்த குரலெடுத்துக் கத்தும் குஞ்சுலுவின் கோபக்குரல்! எதுவும் இல்லை.

குளிக்க/சாப்பிட/பால் குடிக்க எனப் படுத்தும் குஞ்சுலு! அதைச் சமாதானம் செய்து அதற்குப் பொழுது போவதற்காகப் பையர் யாத்ரி நிவாஸ் அருகே இருக்கும் பார்க், வண்ணாத்திப் பூச்சிப் பூங்கா என அழைத்துச் சென்றது தவிர அதுக்கு பைக்கில் போவது பிடிச்சிருக்கு என்பதால் தினம் ராத்திரி அதைக் கூட்டிக் கொண்டு பைக்கில் ஓரிரு கிலோ மீட்டர்கள் போயிட்டும் வருவார். ராத்திரி வாசல் கதவைப் பூட்ட வேண்டி ரங்க்ஸ் உட்கார்ந்திருப்பார். 

தொலைக்காட்சிப் பெட்டியைப் போடவும்/அணைக்கவும் என ரங்க்ஸ் வைத்திருந்த நீளக் கம்பில் தேசியக்கொடியை ஒட்டி வைச்சிருக்கு குஞ்சுலு. அதை எடுக்கக் கூடாது எனவும் ஆர்டர் போட்டிருக்கு. அதை வைத்துக் கொண்டு இன்னொரு குச்சியையும் வைத்துக் கொண்டு காலண்டர், வால் க்ளாக், பஞ்சாங்கம் போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு எடுத்த பாடங்கள். என்னை ஓல்ட் லேடி எனவும் அவரை ஓல்ட் மேன் எனவும் கூப்பிட்டுக் கொண்டிருந்ததுக்கு திடீர்னு வெட்கம். அதைச் சொல்லி நாங்க கேட்டாலே வெட்கம் வந்துடுது. அவ அம்மா கணக்கு டேபிள்ஸ் சொல்லிக் கொடுத்தால் அதில் மனம் பதியாமல் விளையாட்டுக் காட்டும். அங்கங்கே இரைந்து கிடைக்கும் ஹேர் பான்ட்கள் விதம் விதமாக. தினம் ஒன்றை எடுத்துத் தலையில் வைச்சுக்கணும். கொம்பு முளைச்சாப்போல் இருக்குமா? நான் முயல்குட்டி எனக் கூப்பிடுவேன். அதுக்குக் கோபம் வரும். 

நாங்க வாங்கிக் கொடுக்கும் புதுப் பட்டுப்பாவாடையையோ, அல்லது நகையையோ போட்டுக் கொண்டால் உடனே எங்களிடம் வந்து காட்டாது. கண்ணில் குறும்பு மேலிடத் துணியால் அல்லது போர்வையால் தன்னை மூடிக் கொள்ளும். காதுத் தோடு, ஜிமிக்கி போட்டுக் கொண்டால் காதுகளை மூடிக்கும். நாம கவனிக்காதபோது கையை எடுக்கும். அப்போப் பார்த்துட்டேனே என்று சொன்னால் சிரிக்கும். இன்னமும் கோர்வையாக எழுத வரலை. கணக்கு ஓரளவு போடுகிறது.வரைவதிலும் கைவேலைகள் செய்வதிலும் உள்ள ஆர்வம் வியக்கத்தக்கதாய் இருக்கு. அதைப் பார்க்கையில் படிப்பில் ஆர்வம் கம்மி தான். விரைவில் நன்றாய்ப் படிக்கவும் செய்யணும். மேலும் இங்கே நைஜீரியாவில் ஆங்கிலேய வழிக்கல்வி என்பதால் பாடங்களை மெதுவாய்த் தான் சொல்லித் தராங்க. 

இது எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொண்டு தாத்தாவும்/பாட்டியும் உட்கார்ந்திருக்கப் போறோம்.குஞ்சுலு ஊருக்குப் போயாச்சு!

Monday, August 21, 2023

ஒரு வழியா எல்லாம் சரியாச்சு!

 டிரைவர் அங்கேயே தான் இருந்திருக்கார், இது போல் முதல் நாள் ஆனப்போ ட்ராவல்ஸ்காரர் நம்பர் ரங்க்ஸிடம் இருந்ததால் அவரைக் கூப்பிட்டு டிரைவரை அழைத்துவிட்டார். இப்போ அந்த நம்பரும் அம்பேல் அம்பேல், அம்பேல்! ஆகவே அவர் ஒரு பக்கம், மாப்பிள்ளை ஒரு பக்கம்னு தேடிக் கொண்டு போக டிரைவர் அங்கே இருந்ததைப் பார்த்துட்டு அப்பாடானு ஆச்சு. பின்னர் அங்கேயே ட்ராஃபிக் ஜாம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு நான் வண்டியில் ஏறிக்கொண்டேன்.ஏற்றப்பட்டேன். பின்னர் எல்லோரும் ஏறினதும் ஓட்டலுக்குப் போனோம். பெண், மாப்பிள்ளை உடை மாற்ற வேண்டி (மடிசார், பஞ்சகச்சம்) அறைக்குப் போக நான், ரங்க்ஸ், அப்பு மூவரும் டிஃபன் சாப்பிடச் சென்றோம். எங்களைப் போல் தாமதமாக வந்தவங்க சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தாங்க. நாங்க கை,கால் சுத்தம் செய்து கொண்டு உட்கார்ந்ததும் இட்லி ஒன்று, ஒரு கரண்டி பொங்கல், ஒரு உளுந்து வடை, சட்னி, சாம்பார், கிழங்கு, காரச் சட்னி ஆகியவற்றோடு டிஃபன் வந்தது. அது சாப்பிடும்போதே சுடச் சுட பூரி (பெரிதாக இருந்தது) வந்தது. பின்னர் கடைசியாக தோசை வர நாங்க சாப்பிட்டு முடித்தோம். பெண்ணும் வந்து கலந்து கொண்டு ஒரு இட்லியும், கொஞ்சம் பொங்கலும் மட்டும் சாப்பிட்டாள். அதுவே சட்னி எல்லாம் தொட்டுக்க முடியலை. பயம் வேறே!

பின்னர் அறைக்குப் போய் சாமான்களைக் கட்டி வைத்துவிட்டு ஓட்டல் அறை செட்டிலெ செய்யப் போனாங்க. அது முடிஞ்சதும் எல்லோரும் கிளம்பி ஸ்ரீரங்கம் நோக்கி வந்தோம்.  நாங்க ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பும்போது எப்போவும் போல் கல்லணை வழியில் டிரைவரைப் போகச் சொன்னோம். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பின்னர் அந்த வழியிலேயே போனார். இங்கே திருச்சி/தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கல்லணைப் பக்கம் கிழக்கே திரும்ப வேண்டிச் சென்றால் அம்மாடியோவ்1 வரிசையாக நூற்றுக் கணக்கான லாரிகள் அணி வகுத்து இருபக்கமும் நின்றன, நாங்க ஸ்ரீரங்கம் வந்த புதுசில் ஊர்ப்பக்கம் போனப்போக் கல்லணை வழி போயிட்டுப் போகும்போது அதிகாலை என்பதால் பிரச்னை இல்லாமல் போயிட்டோம். திரும்பி வரச்சே மாட்டிக் கொண்டோம் வண்டியே போக வழி இல்லை. மதியம் இரண்டரை மணிக்குத் திருவையாறைக் கடந்தவர்கள் ஸ்ரீரங்கம் போய்ச் சேர நாலரை ஐந்து மணி ஆச்சு. அன்று மதியச் சாப்பாடு இல்லை. :( இப்போவோ போகும்போதே அதே மாதிரி பிரச்னை. இரு பக்கமும் வண்டிகள் அணி வகுத்து நிற்க வழி கண்டு பிடிச்சுப் போகவே முடியலை.

நீதிமன்ற உத்தரவு இருந்ததால் சென்ற ஆட்சியில் மணல் அள்ளுவது முற்றிலும் தடுக்கப் பட்டிருந்தது. ஆகவே பிரயாணம் செய்வது வசதியாக இருந்தது இப்போதுள்ள விடியா ஆட்சியில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் மணல் அள்ள லாரிகள் அணி வகுத்து நின்றன. ஒரு வழியாக நாங்க கல்லணைப் பகுதியைக் கடக்கவே காலை ஒன்பது மணி கிட்டத்தட்ட ஆகிவிட்டது. அதை மனதில் கொண்டு இப்போது திரும்பும்போது தஞ்சை வழியாக பை பாஸில் போகலாம்னு முடிவு செய்து அப்படியே சென்றோம். ஒரு சில கிலோ மீட்டர்கள் அதிகம். ஆனாலும் வண்டி தடங்கல் இல்லாமல் போகலாமே. என்ன ஒரு பிரச்னை எனில் கல்லணை வழியில் ஷெல் கம்பெனியின் பெட்ரோல் பங்கில் WE CARE  கழிவறைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். இந்த வழியில் அது வராது. :( டிரைவர் வேறே எங்கேயோ ஒரு பங்கில் நிறுத்தியதில் பார்க்கவே சகிக்கலை. வந்துட்டோம்.

சுமார் இரண்டரை மணி அளவில் அம்மாமண்டபம் சாலை வந்தால் சாலையை அடைத்து விட்டார்கள் அப்போத் தான் நினைவுக்கு வந்தது அன்று பதினெட்டாம் பெருக்கு என்பது. சாதாரணமாகவே அம்மா மண்டபத்தில் கூட்டம் நெரியும் எனில் இப்போப் பெருமாள் வேறே வந்துட்டாராம். இந்த வருஷம் ஆடிப் பதினெட்டுக்கே காவிரிக்குச் சீர் கொடுக்கிறார் போல. தெருவெங்கும் மக்கள் வெள்ளம். ஒரு வழியாகச் சந்து, பொந்துகளில் புகுந்து சுற்றிக் கொண்டு எங்க வளாகத்தை வந்து அடைந்தோம். ரங்க்ஸ் அங்கேயே இறங்கி சாப்பாடு வாங்கச் செல்ல, நாங்க வீட்டுக்குள் போனோம். சாப்பாடு வந்து நாங்க சாப்பிடும்போது மணி மூன்று ஆகிவிட்டது. ஒரு வழியாகப் பெண்ணின் பிரார்த்தனைகள் நிறைவேறின. இரண்டு நாட்களில் அவள் ஊருக்கும் கிளம்பி விட்டாள்.


பரவாக்கரை அக்ரஹாரத்தில் பூர்விக வீடு. இங்கே தான் நம்ம ரங்க்ஸ் பிறந்தாராம்.  ஏற்கெனவே முன்னர் ஒரு தரமும் போட்டேன். 


பையர் புது மடிக்கணினி வாங்கி வந்திருக்கார். பழசு (இரண்டு இருக்கு. தோஷிபா தான் என்னோட முதல் மடிக்கணினி! பிடிச்சதும் கூட) அது இப்போ வேலை செய்யலை, 12 வருஷங்கள் உழைத்தது. அடுத்து டெல் மடிக்கணினி. குஞ்சுலுவின் வயசு ஆகுது. அதுவும் ஓரளவு உழைச்சது. தோஷிபா இல்லைனு ஆனதும் முழுக்க முழுக்க அதில் தான் வேலை செய்தேன். நன்றாகவே இருக்கு. இன்னும் சில வருஷங்கள் இருக்கும். ஆனால் பையருக்கு அம்பேரிக்க வழக்கப்படி நாலைந்து வருஷம் ஆனதும் பழசைத் தூக்கிப் போடணும்னு! இப்போதைக்கு அதை டிசேபிள் பண்ண வேண்டாம்னு சொல்லி வைச்சிருக்கேன். பார்ப்போம். :(  இ கலப்பை செட்டிங்கில் புதுக்கணினியில் பிரச்னை வந்ததால் அதை எடுக்க மனசு வராமல் இருந்தது. இப்போ இன்னிக்கு அதெல்லாமும் சரியாச்சு.

புதுக்கணினியிலும் எல்லாம் சரியாச்சு. இ கலப்பை சரியா வரலை, சுரதா மூலம் தான் தட்டச்சு செய்யறேன். இ கலப்பையில் குறில்/நெடில், ழ, ள, ல பிரச்னை மற்றும் ந, நு போட்டால் நூ என ஆகிக் கொண்டிருந்தது. ஸ் ஸா வரவே வராது. அதெல்லாம் சுரதாவில் இல்லை என்பதால் இனிமேல் சுரதா மூலம் தான் தட்டச்சணும் போல!

Sunday, August 20, 2023

கொட்டம் அடிக்கும் குஞ்சுலு!

 குட்டிக் குஞ்சுலு வந்திருக்கா? வீட்டில் ஒரே அமர்க்களம் தான். சாப்பிடப் படுத்தல் வழக்கம் போல். அது அவங்க அறையில் விளையாடும்போது வெளியே செர்வீஸ் வராந்தாவின் ஜன்னல் கதவைக் காற்றுக்காக அவ அம்மா திறந்து வைச்சிருக்கா! ஹாஹா! குரங்கார் வந்துட்டார். ஆனால் பாருங்க, இவங்க அம்மாவும் பெண்ணும் கத்தின கத்தலில் பயந்து ஓடிப் போய்விட்டது. குஞ்சுலு எங்களோட விளையாடும்போது என்னை ஓல்ட் லேடி எனவும் அவரை ஓல்ட் மேன் எனவும் கூப்பிடுகிறது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! தாத்தா உட்கார்ந்தவாறே தொலைக்காட்சிப் பெட்டியைப் போட வைச்சிருக்கும் கம்பில் தேசியக் கொடியை ஒட்டி வைச்சுட்டு அதைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் போச்சு. இன்டிபென்டென்ட்ஸ் டே என்னிக்குனு காலண்டரில் தேதி, கிழமையைக் காட்டச் சொல்லி அந்தக் கம்பை வைச்சுக் கொண்டு எங்களுக்குப் பாடம். 


அது பெயர் மிஸ் ஆன்னியாம். அவங்க வகுப்பு ஆசிரியை போல!  நான் மிஸ் துர்கா என்றதற்கு ஒரே கோபம்! நோ வே! ஐ அம் மிஸ் ஆன்னி என்றது. பின்னர் பஞ்சாங்கத்தை வைச்சுக் கொண்டுக் கணக்குச் சொல்லிக் கொடுத்தது. கடிகாரத்தில் மணி பார்க்கச் சொல்லிக் கொடுத்தது. அவங்க அப்பா ஏதோ குறுக்கே பேசினதுக்கு ஒரே அதட்டல் தான். சுமார் ஒரு மணி நேரம் போல இப்படி விளையாடியதை டான்ஸ் க்ளாஸ் ஆன்லைனில் என அவங்க அம்மா கூட்டிச் சென்று விட்டதும் ஒரே கத்தல். பின்னர் தானே சமாதானம் ஆச்சு. இப்போ மைசூருக்குப் போயிருக்குச் சுத்திப் பார்க்க. புதன்/வியாழன் வரும்.

Tuesday, August 15, 2023

வண்டி எங்கே?

 Dhanvanthri Homam Picture


மறுநாள் காலை எழுந்து கொண்டு ஓட்டலில் கொடுத்த காம்ப்ளிமென்ட்ரி காஃபியைக் குடித்தோம். எனக்கு மட்டும் ரூம் சர்வீஸ் அவங்களே செய்தாங்க. இஃகி,இஃகி,இஃகி! பின்னர் குளித்துவிட்டு அன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழரை வரை எமகண்டம் என்பதால் மற்ற ஏற்பாடுகளைச் செய்து கொண்டு ஏழேகால் மணி வாக்கில் கோயிலுக்குக் கிளம்பினோம். ரெஸ்டாரன்டில் பத்து மணி வரை டிஃபன் உண்டு எனச் சொன்னார்கள். அதுக்குள்ளே வந்துடலாம் என்று கிளம்பிவிட்டோம். காரில் மேற்கு கோபுர வாசலுக்கு வந்தாச்சு. வண்டியிலிருந்து இறங்குவதற்குள்ளாக தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிக் கொண்டு ஆட்கள் சூழ்ந்து கொள்ள அவங்களை விரட்டுவதற்குள் போதும் போதும்னு ஆயிடுத்து. எங்களுக்குக் கட்டளை குருக்கள் இருக்கார்னு சொல்லி அவர் பெயரையும் விலாசத்தையும் சொன்னதும் வேறே வழியில்லாமல் விலகிப் போனாங்க. அங்கிருந்து நேரே அம்மன் சந்நதி/அம்பிகை தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்க, நேர் எதிரே மேற்கைப் பார்த்த வண்ணம் வைத்தியநாத ஸ்வாமியின் தரிசனம். வண்டியிலிருந்து கீழே இறங்கி எல்லோரும் அம்மன் சந்நிதியை நோக்கி நடக்க ஆரம்பிக்க என்னால் பத்துத் தப்படி நடக்க முடியலை. அதுக்குள்ளே எங்க பெண், அப்பு மற்றும் நம்ம ரங்க்ஸ் முன்னால் போயிட்டாங்க. டிரைவரை என்னை இறக்கிவிட்டுட்டு வண்டியைக் கோயில் அனுமதி பெற்றுப் பார்க் பண்ண எடுத்துட்டுப் போயிட்டார். மாப்பிள்ளை மட்டும் என்னுடன் வந்தார். அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க முயன்றாலும் முடியலை. அங்கிருந்த கோயில் கடைக்காரர்கள் என்னிடம் ஏம்மா கஷ்டப்படறீங்க? வீல் சேர் இருக்கு. இலவசம் தான் வாங்கிட்டுப் போங்க சௌகரியமா. சேரை வெளி ஆட்கள் தள்ளினால் உங்களால் முடிஞ்சதைக் கொடுங்க என்றார்கள்.

எங்கே கிடைக்கும் எனக் கேட்டுக் கொண்டு மாப்பிள்ளை வீல் சேர் எடுத்துவரக் கிளம்பினார். அதுக்குள்ளே ரொம்ப தூரம் போயிட்ட நம்ம குழுவினர் அங்கிருந்து ஏன் தாமதம் பண்ணிண்டு உட்கார்ந்திருக்கே! வா! வா! எனக் கூப்பிட, அவங்கல்லாம் நம்மைப் பிடி.உஷானு நினைச்சுட்டு இருக்காங்க போலனு நினைச்சுண்டேன். அங்கே இருந்து உள்ளே போனவர் ஒருத்தரிடம் வீல் சேருக்கு உட்கார்ந்திருக்கேன்னு சொல்லி அனுப்பிச்சேன். வீல் சேருக்கு டெபாசிட் 100 ரூ. அதைக் கொடுத்துட்டு வீல் சேருடன் மாப்பிள்ளை வந்தார். வீல் சேரில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டேன்.  வேறே ஆட்கள் வீல் சேரைத் தள்ள வந்தார்கள். ஆனால் மாப்பிள்ளை விடலை. பின்னால் நிறையப் பணம் கொண்டான்னு கேட்டால் என்ன செய்வது என அவரே தள்ளினார். ஓரிரு இடங்களில் படிகள் வந்தப்போக் கூட வந்தவர்கள் உதவி செய்தார்கள். ஒரு வழியாக குழுவினர் காத்திருந்த இடத்துக்கு வந்து அங்கிருந்து உள்ளே அம்மன் சந்நிதிக்குப் போனோம். அபிஷேஹ அலங்காரங்கள் அபபோது தான் முடிந்திருந்தது. சந்நிதிக்கு நேரே சிலர் மாவிளக்குப் போட்டுவிட்டு உட்கார்ந்திருந்தனர். அங்கேயே ஓர் இடம் தேடிக் கோலம் போட்டுவிட்டு மாவிளக்கைத் தட்டில் பரத்தி விட்டு நடுவில் குழி ழெய்து நெய் ஊற்றித் திரியைப் போட்டுப் பெண்ணை விட்டு ஏற்றச் சொன்னேன். அவங்க வீட்டில் உதிராகத் தான் மாவிளக்கு இருக்கணும். அதே போல் ஒரே திரி தான். மாவிளக்கு எரியும்போது ஸ்வாமி சந்நிதியில் காலபூஜை தீபாராதனை மணி அடித்தது. மனம் மகிழ்ச்சி கொண்டது. அங்கே இருந்தே தரிசனம் செய்து கொண்டேன். சிலர் அங்கே போனார்கள். நம்ம குழுவினர் குருக்கள் வந்ததும் போகலாம்னு இருந்துட்டாங்க. சில நிமிஷங்களில் அம்பிகைக்கும் தீபாராதனை நடக்க ஏற்பாடுகள் செய்ய, கூட்டம் வந்துடும்னு மாவிளக்கை சமாதானம் செய்து தீபாராதனை காட்டி நிவேதனம் செய்து எடுத்துக் கொண்டோம். உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் படங்கள் எதுவும் இல்லை.

மாவிளக்குப் போட்டு முடிஞ்சதும் நான் அங்கேயே வீல் சேரில் உட்காரந்து கொள்ளக் கட்டளை குருக்கள் வந்து இவங்களை எல்லாம் அழைத்துச் சென்றார். எனக்கு இதான் கவலையாக இருந்தது. அங்கே உட்கார மேடையோ நாற்காலியோ கிடைக்காதே/ நம்மால் நிற்க முடியாதே/எப்படி நிற்பேன்? என்றெல்லாம் யோசித்துக் கவலையில் இருந்த எனக்கு வைத்தீஸ்வரன் நல்வழி காட்டினார். அவங்கல்லாம் மற்ற சந்நிதிகளைப் பார்த்துக் கொண்டு குருக்களிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டு வந்தார்கள். அதுக்குள்ளே ஒரு மாமி எனக்கு வெற்றிலை, பாக்குக் கொடுக்க அந்த மாமிக்கு பெண்ணை விட்டு வெற்றிலை, பாக்குக் கொடுக்கச் சொன்னேன். பரஸ்பரம் இது முடிந்ததும், எல்லோரும் வண்டியைத் தேடிக் கிளம்பினோம். ஓட்டலில் இருந்து கிளம்புகையில் என்னோட செல்லை எடுத்துக்கணும்னு நான் சொல்ல, வேண்டாம், அதுக்குனு ஒரு பை வேறே வைச்சுக்கணும், பேசாம வைச்சுட்டு வா என்று விட்டார்.

இப்போ என்ன பிரச்னைன்னா டிரைவரின் நம்பர் என்னோட செல்லில் மட்டும் இருந்தது. ஆகவே அவரை எப்படிக் கூப்பிடுவது? 


உச்சிப் பிள்ளையார் கோயில் எங்க வளாக மொட்டை மாடியில் இருந்து பெண் எடுத்தது.


காவிரி ஒரு பார்வை மொட்டை மாடியில் இருந்து! தெற்கு கோபுரமும் எடுத்திருக்காள். ஆனால் அது என்னமோ கணினியில் அப்லோட் ஆகலை.


கடைசி வெள்ளி மாவிளக்குப் போட்டேன். அப்போ எடுத்த படங்கள். மாவிளக்குப் படம் வழக்கம்போல் அப்லோட் ஆகலை. திரும்ப முயலணும்.


Monday, August 14, 2023

எட்டு வருஷம் கழிச்சுப் பெண் வந்த கதை!

29 ஆம் தேதியன்று மாலை பெண்ணும், அவள் கணவர், அப்பு ஆகியோரும் வந்தனர். ஏற்கெனவே பயணச்சீட்டு வாங்கிப் பயணம் உறுதியானாலும் அவங்க வந்து இறங்கும் மும்பையில் நல்ல மழைக்காலம். விமான நிலையத்தை மூடாமல் இருக்கணும்னு ஏகப்பட்ட கவலைகள்/பிரார்த்தனைகள். அதனாலேயே ஒருத்தருக்கும் சொல்லவும் இல்லை. அதற்கு முன்னாடியே பையர் வந்துட்டார். குஞ்சுலு அவ அம்மாவுடன் வழக்கம் போல் மடிப்பாக்கம் தாத்தா/பாட்டி வீட்டில் இருக்கப் பையர் மட்டும் வந்துட்டார். {குஞ்சுலு முந்தாநாள் வந்து விட்டது. கொட்டம் தான்} பையர். இங்கே வந்ததிலிருந்து காதில் மாட்டிய இயர் ஃபோனைக் கழட்ட நேரம் இல்லை. பெண்ணின் உடல் நிலை கருதி தன்வந்தரி ஹோமம் ஏற்பாடு செய்திருந்தோம். அது 31 ஆம் தேதி திங்களன்று காலை ஏழு மணி அளவில் ஆரம்பித்துப் பத்தரை/பதினோரு மணி அளவில் முடிந்தது. சாப்பாடு நாங்க தற்சமயம் வாங்கும் காடரரிடம் ஏற்பாடு செய்து அவங்களும் கொண்டு வைச்சுட்டாங்க. சர்க்கரைப் பொங்கலும், அவிசும் மட்டும் ஹோமத்திற்காக வீட்டிலேயே பண்ணினேன்.  இதுக்கு நடுவிலே ஸ்ரீராம் ஒரு சஷ்டி அப்த பூர்த்திக்காக ஸ்ரீரங்கத்துக்கு பாஸுடன் வரப் போவதாகச் சொல்லி இருந்தாரா? வந்துட்டுப் போயிருப்பாரோ என நினைத்து அவரைத் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர் ஆகஸ்ட் ஆறாம் தேதி தான் என்றார். நல்ல வேளை என நினைத்துக் கொண்டேன். அந்த வாரம் தான் பெண் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்வதாக இருந்தோம்.

ஆகஸ்ட் ஆறாம் தேதி தான் பெண் திரும்ப மும்பை செல்கிறாள். அதுக்குள்ளாக எங்க குலதெய்வம் கோயில், அவங்க குலதெய்வம் கோயில் ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டு பெண்ணின் குலதெய்வம் கோயிலான வைத்தீஸ்வரன் கோயிலில் மாவிளக்கும் போட வேண்டும் என்றாள். எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வரலாம் என்று  ஆகஸ்ட் 2 ஆம் தேதி புதன் கிழமை காலையில் கிளம்பினோம். பெண்ணின் உடல் நிலை கருதிக் கஞ்சியைக் காலில் கொட்டிக்கொண்டாற்போல் ஓட்ட/பாட்டம் இல்லாமல் இம்முறை சாவகாசமான பயணம். பையர் அலுவலக வேலை இருப்பதால் வீட்டில் தங்கி விட்டார். 

நாங்க அன்று மதியம் சுமார் பதினோரு மணி அளவில் பரவாக்கரை போய் மாரியம்மனைப் பார்த்துக் கொண்டு அர்ச்சனைகள் செய்து கொண்டோம். ஊர் ஜனங்களுக்கு அன்னதானத்திற்குப் பெண் ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்ததால் சாப்பாடு வகைகள் வந்து இறங்கின.  ஏழெட்டு நபர்களை முதலில் உட்கார வைத்துப் பெண்ணும் மாப்பிள்ளையும் அவங்களே சாப்பாடு பரிமாறினாங்க. அவங்க சாப்பிட்டு முடிச்சதும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். முதலிலேயே எங்க ஊர்ப் பெருமாள் கோயிலுக்குப் போயிட்டு வந்திருந்தோம் என்பதால் நேரே வைத்தீஸ்வரன் கோயில் தான் போக வேண்டி இருந்தது. பெருமாள் கோயிலிலேயே பட்டாசாரியாரிடம் சொல்லிப் புளியஞ்சாதமும்/தயிர் சாதமும் வாங்கிப் போயிருந்தோம். வைத்தீஸ்வரன் கோயில் போனதும் அதைச் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டோம்.

அக்ஷர்தாம் என்னும் ஓட்டலில் (புதிதாக வந்திருக்கு) பையர் முன் பதிவு செய்திருந்தார். அங்கே போனால் அறைகள் எல்லாம் மாடியில். தரைத்தளத்துக்கே 3,4 படிகள் ஏறிப் போக வேண்டி இருந்தது. எங்களுக்கான அறைகள் முதல் தளம். லிஃப்ட் இல்லை. ஆகவே அவங்களே அங்கே கீழேயே ரெஸ்டாரன்ட் பக்கம் இருந்த ஒரு பெரிய குடும்ப அறையைக் காட்டினாங்க. 2 குளியலறை/கழிவறை கொண்டது. இரண்டு பெரிய கட்டில்கள். நான்கு பேர் படுக்கலாம். அதிகப்படி தேவைக்கு மேலும் ஒரு படுக்கை கொடுத்தார்கள். சரினு அங்கேயே தங்கி விட்டோம். காலை உணவு ஓட்டல்காரங்களோடதாம். ஆனால் பஃபே இல்லை. combo breakfast என்றார்கள்.

இதுக்குள்ளே என்னை இணையத்தில் காணோம் எனத் தி/கீதா, கோமதி அரசு, மற்றும் பலர் வாட்சப்பில் தொடர்பு கொள்ள, நல்லவேளையாகக் காணாமல் போனவர்னு அறிவிப்புக் கொடுக்கலையேனு சந்தோஷத்தில் விபரங்களைச் சொன்னேன்.

தொடரும்!

Saturday, June 24, 2023

மாமியார் உடைத்தால்!

 போன பதிவில் குறிப்பிட்ட படங்களைத் தவிர்த்து மனோஜ் வாஜ்பாய் நடிச்ச  ச்ரிஃப் ஏக் பண்டா காஃபி ஹை படமும் தி க்ரேட் இந்தியன் கிச்சன் படமும் பார்த்து விட்டேன். கிரேட் இந்தியன் கிச்சனில் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் என்பவராம். இவர் நடித்த படம் எதுவும் பார்த்தது இல்லை. இதான் முதல் படம். மிக இயல்பாய் நடிச்சிருந்தார். அவர் கணவர், மாமனார், மாமியாரெல்லாம் யாரெனத் தெரியலை. ஆனால் படம் மிக நன்றாக இயல்பாக எடுக்கப்பட்டிருந்தது என்பதோடு எனக்கு என்னோட கல்யாண வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்களையும் நினைவூட்டியது. இப்படித்தான் சமையலறையே கதியாக எனக்கும் இருக்க நேர்ந்தது. ஆனால் ஆரம்ப காலங்களில் வேலைக்குச் சென்றேன். பின்னரும் அவசரத்திற்காக வெளியே சென்றதுண்டு. எல் ஐசி முகவர், தபால் அலுவலக சிறு சேமிப்பு முகவர், புடைவை வியாபாரம், குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்தல் எனச் செய்திருக்கேன். இதைப் பற்றி நிறைய எழுதியாச்சு என்பதால் நிறுத்திக்கறேன்.

எனக்கென்னமோ இந்தப் படம் முதலில் ஆங்கிலத்தில் வந்து  அம்பேரிக்காவில்  மட்டுமே வெளியிட்டதாக ஒரு நினைப்பு. ஆனால் இது முழுக்க முழுக்கத் தமிழ்ப்படம். நல்லவேளையாக வசனங்கள் புரிந்தன. சில படங்களில் என்ன மொழி என்றே தெரியாமல் வசனங்களை அரைக்குரலில் பேசுகின்றனர்.ஆனால் இது 2021 ஆம் ஆண்டில் முதலில் மலையாளத்தில் வந்து பின்னர் தமிழில் எடுத்திருக்காங்க. அதனால் சுவையோ, படத்தின் தரமோ குறையவில்லை. சாதாரணமாக வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு மாற்றும்போது நடிக, நடிகையருக்கு ஏற்பக் காட்சிகள், வசனங்கள் என மாற்றுவது உண்டு. பல படங்களை அப்படி மாற்றி இருக்காங்க. ஆனால் நல்ல வேளையாக இதில் மாற்றவே இல்லை. சமையலறையையே திரும்பத் திரும்பப் பார்த்தாலும் அலுப்புத் தட்டாமல் பட ஓட்டம் நம்மை உட்கார்ந்து பார்க்க வைக்கிறது. மலையாளத்திலும் கிடைக்குதானு பார்க்கணும். இப்போ ராக்கெட்ரி  படம் பார்த்துக் கொண்டு இருக்கேன். காலில் ஆங்காங்கே கோடையினால் ஏற்படும் புண்களால் அதிக நேரம் லாப்டாப்பை வைச்சுண்டு உட்கார முடியலை. அவ்வப்போது வந்து போகிறேன். மின் நூல்கள் வெளியிட வேண்டிப் பதிவுகளில் இருந்து தொகுத்து வைக்கணும். ஆனால் அதற்கு உட்கார முடியலை.

அமெரிக்கப் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் மோதியின் பேச்சுக்குக் கிடைத்த வரவேற்பை ஆச்சரியத்துடன் பார்த்தோம். இந்தியாவின் நிலைமை முன்னெப்போதையும் விட இப்போது மதிப்பும், மரியாதையும் கொண்டு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் ஒரு சிலருக்கு இது இப்போதும் குற்றமாகவே தெரிவது ஏன் எனப் புரியவில்லை. அதே சமயம் தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையும் தலைகீழாக இருப்பதையும் காண முடிகிறது. ஆனாலும் அதைக் கண்டிப்போரும் இல்லை. எல்லோரும் மத்திய அரசின் நிலையையே முக்கியமாக மோதியையே குறை கூறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்! இது பற்றி விரிவாக எழுதப் போனால் சர்ச்சைக்கு உரிய பதிவாகிவிடும். ஆகவே நிறுத்திக்கிறேன்.

Saturday, June 10, 2023

படமெல்லாம் பார்த்தேனே!

 மிசஸ் அன்டர்கவர் பார்த்துட்டேன். படம் நன்றாகவே இருந்தது. சாதாரண மனிதன் என்னும் பெயரில் பழிவாங்கும் வில்லன். அவனை யாரெனக் கண்டு பிடிப்பதே இந்தத் தனிப்படையின் வேலை. ராதிகா ஆப்தே குடும்பப் பெண்ணாகவும் தான் ஓர் ரகசிய ஏஜென்ட் என்பதை அறிந்து கொண்டும் அடக்கி வாசித்ததையும் பின்னர் பொங்கி எழுந்ததையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கார். தன் கணவன் தனக்குச் செய்யும் துரோகத்தைக் கண்டு பிடித்ததும் அவர் மனம் படும் பாட்டைக் கண்களிலேயே காட்டி விடுகிறார். படம் முடிவில் எடுத்துக்கொண்ட மிஷன் முடிஞ்சதும் மறுபடி எல்லாம் அப்படியே தொடரும் எனச் சொல்லுகின்றனர். அது ராதிகாவின் வேலை முடியாதத்தைக் காட்டுகிறது. ராதிகாவின் கணவனாக நடிப்பவர் மனைவியிடம் மன்னிப்புக்  கேட்பதும் ரசிக்கும்படி இருந்தது. 

அடுத்து ஊஞ்சாயி. இதுவும் பார்த்துட்டேன். விட்டு விட்டுப் பார்த்தாலும் அதிக நாட்கள் இல்லாமல் மூன்றே நாட்களில் பார்த்து முடித்துவிட்டேன். படம் நல்ல விறுவிறு. அனைவரின் நடிப்பும் போட்டி போட்டுக்கொண்டு நன்றாக அமைந்து விட்டது. அமிதாப் தன் உடல்நிலையை மறைப்பதும் அது சமயம் பார்த்துத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதும், நண்பர்கள் அதுக்காக அவரைக் கடிந்து கொள்வதும் அருமை எனில் நீனா குப்தா ஆசை ஆசையாய் மகளுடன் அவள் பிறந்த நாளில் தங்கி மகிழ்வுடன் சில நாட்களைக் கழிக்கவேண்டும் என்னும் எதிர்பாப்புடன் வந்து விட்டுப் பின்னர் அடைந்த ஏமாற்றம், அனுபம் கேர் தன்னுடைய ஹவேலியை வர்ணித்துக் கொண்டு வந்து ஆசை ஆசையாய் விட்டுச் சென்ற உறவினர்களிடம் உறவைப் புதுப்பிக்க முயல அது அவருக்குக் கெட்ட பெயரை உண்டாக்க, தன் உறவினர்களின் மாறிய மனதை நினைத்து வருந்திய அனுபம் கேர் அங்கே தங்கவே வேண்டாம் என முடிவு செய்து கிளம்புவது ஒரு சோகம். 

கடைசியில் எப்படியோ மலை ஏற்றத்தில் இணைந்து விடுகின்றனர். அப்போது தான் மாலா திரிவேதி என்னும் பெயரில் லக்னோவில் வந்து சேர்ந்து கொண்ட பெண் இறந்து போன டானியின் (படத்தில் பூ பேன்) பால்ய சிநேகிதி என்பதும், இருவரும் திருமணம் செய்ய நினைத்ததும், பின்னர் முடியாமல் போனதும் வெளிப்படுகிறது. அதிலிருந்து மாலா திரிவேதியும் இவர்கள் மூவருடன் தானும் பூபேனின் கடைசி ஆசையை நிறைவேற்றவே வந்திருப்பதாய்க் கூறுகிறர். மலை ஏற்றத்தின் போது நடக்கும் நிகழ்வுகள் அந்தக் குழுவின் தலைமையாகச் செயல் படும் பெண் அமிதாபையும் அவர் எழுதும் கதைகளையும் குற்றம் கூறுவது, அமிதாபின் தன்மானம் அடிபட்டுப் போவது எல்லாமும் இயல்பாகப் பொருந்தி இருக்கு.இந்த இரு படங்களுக்குப் பின்னர் வேறே படம் இன்னமும் பார்க்க ஆரம்பிக்கவில்லை. தமிழ்ப்படங்கள் பார்க்க யோசனை. விடுதலை, ருத்ரன் எல்லாமும் இருக்கிறது. ஆனால் நடிகர்கள் எல்லோருமே புதுசு. தாஜ் பார்க்கலாமா என ஆசை. பார்ப்போம்.

*********************************************************

வந்து விட்டது. வந்தே விட்டது. மறுபடியும் அக்கி. இம்முறை வலது முழங்கைப் பக்கம். இதோடு இது நான்காம் முறை. அவ்வப்போது மனதில் கவலையும் பயமும் வரும். இந்தச் சூட்டுக்கு எங்காவது அக்கி வராமல் இருக்கணுமேனு. கடைசியில் பார்த்தால் இரண்டு நாட்களாக வந்திருக்கு. முதலில் வேர்க்குரு என்றே நினைச்சேன். அப்புறமாப் பார்த்தால் கண்ணெல்லாம் வைச்சுண்டு இருக்கு. ரங்க்ஸ் பார்த்துட்டு உறுதி செய்தார். நல்லவேளையாகக் கண்ணால் பார்க்க முடியாத இடத்தில் இல்லை. போன இரு முறைகளும் முதுகில் வந்திருந்தது. அதற்கு முன்னர் முதல் முறை முகத்தில்/நெற்றியில் வந்திருந்தது. இப்போது இங்கே! :(

Monday, May 29, 2023

செங்கோலின் வரலாறு!

இன்னிக்குச் சோதனைக்குக் கொடுத்திருக்கேன். என்ன முடிவு வரப் போகுதோ தெரியலை. கீழே விழுந்ததில் ஏற்பட்ட வலி கணிசமாகக் குறைந்து விட்டது. இப்போக் கொஞ்சம் இல்லை நிறையப் பரவாயில்லை. போன வாரமே விழுந்த அன்னிக்கேக் காட்டிட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். தசை வலி தானே சரியாயிடும்னு நினைச்சு நாட்களை வீணாக்கிட்டேன். :( நாட்டில் ஆங்காங்கே நடக்கும் விஷயங்கள் திகிலை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே நேர்மையான அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருக்கார். அது தொடர்பான விசாரணகள் நடந்து முடியும் முன்னரே அடுத்தடுத்து இந்த அதிகாரிகள், வி.ஏ.ஓ. போன்றோருக்கு உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள். அரசு அதிகாரிகளாகப் பணி புரிவோர்க்கு எந்நேரமும் ஆபத்துத் தான் காத்திருக்கிறது. அதிலும் நேர்மையான அதிகாரிகள்னால் கேட்கவே வேண்டாம். பதவியில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டி உள்ளது. திருடனாகப் பார்த்துத் திருந்தினால் தான் உண்டு. 

இன்னிக்கு அக்னி நக்ஷத்திர முடிவு நாள். வெயில் என்னமோ கொளுத்துகிறது. காற்று ஆரம்பித்தாலும் அவ்வளவு மும்முரமாய் இல்லை. பருவக்காற்று இன்னமும் சுறுசுறுப்பாகத் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கலை. ஏசியைப் பகலில் எல்லாம் வைச்சுக்கறதில்லை. அப்புறமா அந்த அறையிலிருந்து வெளியே வரும்போது வெளிச்சூடு தாக்கிவிடும் என்பதால் இரவில் மட்டும் தான் ஏசி. அதையுமே விடிகாலையில் மூன்று மணி போல் அணைச்சுடுவோம். எழுந்திருப்பதற்குள்ளாக உடல் வெளியே உள்ள வெப்ப நிலைக்குப் பழகணுமே! 22 டிகிரியில் வைச்சுட்டு இருந்தோம். அப்புறமா அணைச்சுட்டு மின் விசிறியைப் போட்டால் வியர்க்க ஆரம்பிக்கிறது. ஆகவே இப்போ 24 டிகிரிக்கு வைச்சுட்டுக் கூடவே மின் விசிறியையும் போட்டுக்கறோம். அறை முழுவது நல்ல சில்லென்ற காற்று. காலம்பர அணைச்சாலும் எதுவும் தெரியலை. இதிலே மின்சாரம் வேறே மிச்சம் ஆகும் என்கின்றனர். பார்ப்போம்.

என்னோட சித்தி பையர் சத்யாவில் ஏசி வாங்கி இருக்கார். இன்ஸ்டாலேஷன் சார்ஜஸ் 850 ரூபாயோ என்னமோ சொன்னாங்களாம். வீட்டுக்கு வந்து ஏசியைப் பொருத்தும்போது அது இதுனு சொல்லிக் கடைசியில் கிட்டத்தட்ட 2000 ரூபாய்க்குக் கொஞ்சம் கீழே ஆகி இருக்கு! சேவையும் ரொம்பவே சுமார் என்கிறார். இதனாலேயே நாங்க இந்த ஆஃபர் கொடுக்கும் கடைகளுக்கே செல்லுவதில்லை. நேரடியாக எல்ஜியைத் தொடர்பு கொண்டே இரண்டு ஏசிக்களையும் வாங்கினோம். பதிவாக ஒருத்தர் வந்து எப்போதும் வேலைகளைச் செய்து கொடுப்பார். வேறே யாரையும் கூப்பிடறதில்லை.

செங்கோல் பற்றிப் பலரும் பலது சொல்கின்றார்கள். உண்மையில் இது 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர தினத்தன்று திருவாவடுதுறை ஆதீனம் அவர்களால் நேருவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதை நேரு அலஹாபாதில் ஆனந்த பவனத்தில் உள்ள காட்சிப் பொருட்களோடு வைத்திருந்ததாய்க் கேள்வி. மவுன்ட்பேட்டனிடம் யாரும் கொடுக்கவும் இல்லை. பின்னர் அவர் நேருவிடம் கொடுக்கவும் இல்லை. அப்படி நடந்ததாக ஒரு சலவைக்கல்வெட்டு வாட்சப்பில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பெயரால் சுற்றுகிறது. எது உண்மை என்பது அந்தச் சமயம் இருந்தவங்களுக்குத் தான் தெரியும். 

பிரதமர் தலைமை வகித்துப் பங்கேற்கும் விழாக்களுக்கு ஜனாதிபதியை அழைப்பது மரபு/சம்பிரதாயம் இல்லை. ஏனெனில் ஜனாதிபதி பிரதமரை விட உயர்ந்த பதவி. முதல் குடிமகன். ஜனாதிபதி பார்லிமென்ட் திற ப்பு விழாவுக்குப் பங்கேற்கச் செல்லாததில் எந்தவிதமான அரசியல் காரணங்களும் இல்லை. பார்லிமென்டில் குறிப்பிட்ட சில சமயங்கள் மட்டுமே ஜனாதிபதி கலந்து கொள்வார். அதன் முறை/சம்பிரதாயமும் கூட. இந்தக் காரணங்களால் தான் அவரை அழைக்கவில்லை என்றாலும் அவரின் வாழ்த்துச் செய்தி அரசுக்கு வந்துள்ளது.

முன்னர் இப்போதைய முதலமைச்சரின் தந்தை முதலமைச்சராக இருந்தப்போ அவருக்கும் செங்கோல் வழங்கப்பட்டது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கு? அதற்கு இப்போது சொல்லும் சப்பைக்கட்டு அது கட்சிப் பணத்தில் இருந்து வாங்கியதாம். இது அப்படி இல்லையாம்? கட்சிக்கு ஏது பணம்? கட்சித்தொண்டர்களான பொதுமக்களிடம் வசூலித்தது தானே? அது கொடுக்கலாம். இது வலிந்து ஓர் ஆதீனத்தால் எழுபது வருடங்கள் முன்னரே அப்போதைய பிரதமருக்குப்  பரிசாகக் கொடுக்கப்பட்டது இப்போது மீட்கப்பட்டுப் பொதுவில் உள்ள சொத்துக்களில் ஒன்றாக ஓர் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. எது சரி? இது மதவாதமாம்! எல்லா மதத்தினரையும் அரவணைத்துச் செல்லுவதே உண்மையான மதச் சார்பின்மை. ஆனால் இங்கேயோ சநாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னால் மதச் சார்பின்மை. சநாதனத்தைக் கொண்டாடினால் மதவெறி! என்னவோ போங்க! ஒண்ணுமே புரியலை, உலகத்திலே!

ராஜராஜ சோழன் சிவபாத சேகரனாகத் தான் கடைசிவரை வாழ்ந்தான். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். அதற்காக யாரும் அவனுக்கு மதவெறி என்று சொன்னதாகத் தெரியலை. ஜைன, பௌத்த மடங்களுக்கும், மற்ற மதங்களுக்கும் உரிய மரியாதையையும் கொடுத்து வந்தான். தில்லை வாழ் அந்தணர்கள் தான் சோழ அரசனுக்குப் பட்டம் கட்டும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் வேறுபாடுகள் பார்க்காமல் திருப்பணிகள் செய்து வந்தனர் சோழ அரசர்களும், மற்ற அரசர்களும். உண்மையான மதச் சார்பின்மை என்பது முன் காலத்தில் இருந்தது. இப்போது சுயநலம் பிடித்தவர்களால் ஆளப்படும் நாட்டில் மதச்சார்பின்மை என்பது பொருளற்றுப் போய்விட்டது.

Thursday, May 25, 2023

நானெல்லாம் படம் பார்த்து!

 இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் படங்களைப் பார்க்க வாய்ப்பு இருந்தும் அவ்வளவு மனம் ஒன்றவில்லை.முன்னால் இரண்டு படங்கள் பார்த்துட்டு எழுதி இருந்தேன். அதற்குப் பின்னர் கொஞ்ச நாட்கள் படங்களே பார்க்கும் ஆவல் வரலை. திடீர்னு ஒரு நாள் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் படிக்கையில் இந்த யூ டர்ன் படம் கண்ணில் பட்டது. சரினு பார்க்க ஆரம்பித்தேன். விறுவிறுப்பான படம் தான். நடிகர்கள் யாரும் யாரெனத் தெரியலை. முற்றிலும் புதிய நடிகர்கள். ஆனாலும் நடிப்பும், கதையும், காட்சிகளும் ஒன்றோடு ஒன்று ஒன்றிப்போய்ப் பார்க்க வைத்தது. அப்படியும் 2,3 நாட்களாகத் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து முடித்தேன். குறிப்பிட்டதொரு தேசிய நெடுஞ்சாலையில் ஓர் இடத்தில் பாலத்துக்கு மேலே யூ டர்ன் எடுக்கவே கூடாத இடத்தில் இரு சக்கர, நாலு சக்கர வாகனப் பயணிகள் அங்கே போட்டிருக்கும் கான்க்ரீட் பாறைகளை நகர்த்தி விட்டு வழி உண்டாக்கிக் கொண்டு யூ டர்ன் எடுத்துச் செல்கின்றனர். அப்படிச் செல்கின்றவர்கள் ஒவ்வொருவராக அன்றே இறக்கின்றனர்.

பத்திரிகையாளராக இருக்கும் ராதிகா பக்க்ஷிக்கு இதைக் குறித்து ஆய்வு செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. சாலைப் பயணங்களில் நடைபெறும் விபத்துக்களையும் அதோடு கூடவே ஆய்வு செய்கிறாள். அப்போது இந்த யூ டர்ன் பற்றித் தெரிய வந்ததும் அது குறித்த தேடலில் மும்முரமாய் இறங்குகிறாள்விசித்திரமான சம்பவங்கள் மட்டுமின்றி போலீஸ் ஆய்வாளர் அர்ஜுன் ராதிகாவே இவற்றுக்குக் காரணமாய் இருப்பாளோ என சந்தேகப்படுகிறார். கடைசியில் உண்மையை ராதிகாவும் அர்ஜுனுமாகச் சேர்ந்து பேசுகையில் இருவருக்குமே புரிய வருகிறது. நம்பவே முடியாத உண்மை. மிச்சத்தை இணையத் திரையில் காணுங்கள்.

அதுக்கப்புறமாப் பார்த்தப்போ "கோஸ்டி" நன்றாக இருக்குமெனப் போட்டிருந்தாங்க. காஜல் அகர்வால் தான் கதாநாயகி. காஜல் அகர்வால் குழந்தையாய் இருந்தப்போ ஐபிஎஸ் அதிகாரியாய் இருந்த அவர் தந்தை ஒருபோக்கிரிகள் கோஷ்டித்தலைவனைப் பிடித்து வந்து சிறையில் அடைத்துத் தண்டனையும் வாங்கிக் கொடுக்கிறார்.  ஆனால் காஜல் அகர்வாலின் தந்தை இறக்க அதன் உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்கணும்னு நினைச்சு அவரும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆகிறார். இந்த வழக்கை எடுத்துக் கொண்டு ஆய்வுகளைத் தொடர்கிறார். ஆனால் இவரை ஒரு தீவிரமான போலீஸ் அதிகாரியாகக் காண முடியாமல் காமெடி என்னும் பெயரில் சொதப்பி இருக்காங்க. படம் ஹிந்தியில் இருக்குமோனூ பார்த்தால் கிடைக்கலை. தமிழில் தான் பார்க்க வேண்டி வந்தது. அறுவைனா அறுவை அம்புட்டு அறுவை. பேய், பிசாசுங்க எல்லாம் வந்தாலும் திகிலாக எல்லாம் இல்லை. தலையில் அடிச்சுக்கத் தான் தோன்றியது. இதில் தேவ தர்ஷினியைப் போட்டு வீணடித்திருக்கிறார்கள். யாரோ யோகி பாபுவாம். முதலில் உயிரோடு வந்து விட்டுப் பிறகு பேய், பிசாசாக வருகின்றனர். காமெடி என்னும் பெயரில் இது ஒரு கொடுமை. படத்தை அதற்கு மேல் பார்க்கப் பிடிக்கலை என்பதால் விட்டுட்டேன். காஜல் அகர்வாலும் ஒரு போலீஸ் அதிகாரிக்குரிய கம்பீரமோ, தீவிரமான மனப்பான்மையோ இல்லாமல் அச்சுப்பிச்சென்று நடித்திருக்கார். அவரோடு கூட ஊர்வசியும், இன்னொருத்தரும். மூன்று பேரும் காமெடி என்னும் பெயரில் அறுவை போடுகின்றனர்.

விடுதலை, பத்துத்தல, அயலி, அயோத்தி, ருத்ரன் எனப் பல தமிழ்ப்படங்கள் இருந்தாலும் பார்க்கத் தோன்றவில்லை. எப்படி இருக்குமோனு ஒரு பயம். அயோத்தி பற்றி நிறைய விமரிசனங்கள் வந்தன. பார்க்க வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன்.

***********************************************


நேற்றுப் பல மாதங்களுக்குப் பின்னர் வெளியே ஒரு பூணூல் கல்யாணத்துக்குப் போனோம். ஆத்து வாத்தியார் பிள்ளைக்குப் பூணூல். குழந்தைக்கு ஏழு வயது தான் இருக்கலாம். மழலை மாறவில்லை. மொட்டை அடித்துக்கொண்டு பூணூல் போட்டுக்க வந்தபபோத் தூக்கி எடுத்துக் கொஞ்சத் தான் தோன்றியது. அந்தச் சத்திரத்துக்குள் போக எக்கச்சக்கமான படிகள். வாசல் படிகளில் ஏறும்போதே ஒரு இடத்தில் படி உடைந்து அதைக் கவனிக்காமல் ஏறிச் சறுக்கிக் கொண்டு போய்ப் பக்கத்துக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டேன். அதில் நடு நெஞ்சில் நல்ல அடி பட்டுப் படுக்கவோ, உட்காரவோ முடியலை. இரும முடியலை.வலிக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருக்கேன். அதன் பிறகு பூணூல் நடக்கும் மண்டபம் போக ஒரு பத்துப் படிகள். அங்கிருந்து சாப்பிடும் இடம் போக ஐந்தாறு படிகள். எல்லாமாகச் சேர்ந்து கசரத் வாங்கியதில் முடியலை. சாப்பாடு வேறே சரியில்லை. 

மெனு என்னமோ நல்ல மெனு தான்.பால் பாயசம், தயிர்ப்பச்சடி, இனிப்புப் பச்சடி, உ.கி.பொடிமாஸ், அவரைக்காய்க் கறி, பூஷணிக்காய்க் கூட்டு,மாங்காய் ஊறுகாய், வடை, பதிர்பேணி, புளியோதரை, வறுவலுக்குப் பதிலாக மிக்சர், கதம்ப சாம்பார், ரசம்,மோர். பறிமாறினவங்க யாருக்கும் பரிமாறவே தெரியலை. சாம்பாரை முடிச்சுட்டு ரசத்துக்கு மணிக்கணக்கா உட்கார்ந்திருந்தேன். ரசம் ஊற்றுபவர் அந்த வழியாகவே நாலைந்து தடவைகள் போய் வந்தும்,எனக்கு ரசம் ஊற்றவே இல்லை. பின்னர் கத்தினத்துக்கப்புறமா வந்து அரைக்கரண்டி ரசத்தை ஊத்திட்டு அந்தப்பக்கம் பரிமாறுபவர்களோடு மும்முரமாய்ப் பேச ஆரம்பிச்சுட்டார். வந்த கோபத்துக்கு எழுந்துடலாம்னு தோணியது. ஆனால் இந்தப்பக்கம் நாலு பேர், அந்தப்பக்கம் நாலு பேர்னு எழுந்துக்க முடியாத நிலைமை. சாப்பிட்டோம்னு பேர் பண்ணினேன்.சாப்பாடு வயித்துக்கும் ஒத்துக்காமல் ஒரே தொந்திரவு. மிளகு ரசம் வைச்சுச் சாப்பிட்டதும் கொஞ்சம் பரவாயில்லை. நம்ம ரங்க்ஸுக்குக் கூட்டிப் போகவே இஷ்டமில்லை. வராதேனு சொன்னேனே என்று சொல்லிக் கொண்டே இருந்தார். :(

Wednesday, May 03, 2023

நெல்லையின் கேள்வியும் எனக்குத் தெரிந்த பதிலும்!

 ஒரு சென்சிடிவ் கேள்வி. ஆனால் நான் நிறைய நாள் யாரிடமாவது கெட்கணும்னு நினைத்திருந்தேன். வைணவத்தில் ஆழ்வார் பதின்மர், ஆண்டாள் மதுரகவியாழ்வாரும் அவர்கள் செய்த திவ்யபிரபந்தங்களைச் சேவிப்பத் உண்டு. இதேபோல் திருமுறைகளை  எல்லா பிராமணர்களும் சேவிப்பதில்லை என்பதைக் காணுகிறேன்,  அவர்கள் பூஜை அறையிலும் கூட நாயன்மார்களோ அல்லது திருமுறைகளை உண்டாக்கியவர்களையோ வணங்குவதில்லை. இதன் காரணம் என்ன?கீதா சாம்பசிவம் போன்று இதன் பாரம்பர்யத்தைத் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

நெல்லைத் தமிழன் கேள்வி.

பிராமணர்கள் தினந்தோறும் தேவார, திருவாசகங்களை ஏன் படித்து வணங்குவதில்லை. நாயன்மார்களுக்கும் அவர்கள் ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை? நல்லதொரு கேள்வி. கிட்டத்தட்டப் பிற்காலச் சோழர்கள்/பாண்டியர்கள் காலம் வரையிலும் சைவம் செழிப்பாகவே இருந்தது. மாறி மாறிப் பாண்டியர்களும்/சோழர்களும் கோயில்களில் திருப்பணியைச் செய்தார்கள். தேவார/திருவாசகங்களை ஓதுவதற்கென  சிவத்திருமடங்களில் பொதுமக்களுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். அரசும் பல நிவந்தங்களை இதற்காக ஒதுக்கி இருந்திருக்கிறது. இது கிட்டத்தட்டத் தென்னாட்டில் முஸ்லீம்கள் படை எடுப்பு வரையிலும் சரியாகத் தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு சுமார் 40/50 ஆண்டுகள் ஒரு தலைமுறையே எந்தவிதமான இறை வழிபாடுகளும் செய்ய முடியாமல் இருந்திருக்கின்றனர். கோயில்களில் திருவிழாக்கள் நடந்தன என்பதே அப்போதைய இளைஞர்களுக்கு ஆச்சரியமான செய்தியாக இருந்திருக்கிறது. 

இந்நிலை நீடிக்காமல் விஜயநகரப் பேரரசும், நாயக்கர், மராத்தியர் ஆட்சிக்காலங்களும் மக்களுக்கு மீண்டும் பக்தி மார்க்கத்தைக் காட்டிக் கோயில்களைச் செப்பனிட்டுப் புதுப்பித்து விழாக்களை எல்லாம் ஒழுங்கு செய்து மக்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள். என்றாலும் மக்கள் முழு மனதுடன் இறை வழிபாட்டில் ஈடுபட வில்லை.அவர்களுக்குள் சைவ/வைணவப் பிரிவினை ஏற்பட்டிருக்கிறது. முன்னர் ஒரே வீட்டிலேயே அண்ணன் சிவ பக்தனாகவும், தம்பி வைணவ பக்தனாகவும் இருந்த காலம் போய் சைவ/வைணவப் பிரிவினை ஏற்பட்டு உள்ளது.

அந்நாளைய படிப்பில் சைவத்திருமுறைகளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களே கோயில் சிவாசாரியார்களாக இருக்க முடியும் என்னும் நிபந்தனைகள் எல்லாமும் இருந்திருக்கிறது. சாமானிய மனிதன் தமிழ் கற்றால் கூடத் தமிழ் இலக்கணம், இலக்கியம், சங்க இலக்கியம் என நிறுத்திவிடாமல் பன்னிரு திருமுறைகளையும் கூடக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவற்றைப் பண் அமைத்துப் பாட வேண்டும் என்னும் நிபந்தனையும் கூட இருந்திருக்கிறது. இது நம் தமிழ்த்தாத்தா அவர்கள் தமிழ் கற்கும்போது கூட இருந்திருக்கிறது என்பதை அவருடைய சுய சரிதையின் மூலம் காணலாம். தமிழ் கற்க இவ்வாறெல்லாம் நிபந்தனைகள் இருக்க ஆங்கிலப் பள்ளிகள் நாளாவட்டத்தில் பெருகின. அவை ஆங்கிலத்தைப் போதித்ததோடு நிற்காமல் தமிழின் முக்கியத்துவத்தை மெல்ல மெல்லக் குறைத்தார்கள். முன்னெல்லாம் சிவ தீக்ஷை பெற்றவர்களே தமிழில் பண்டிதர்கள் ஆகலாம் என்றிருந்தது மாறித் தமிழை ஓரளவுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்னும் நிலைமைக்கு மாற்றியது அக்கால ஆங்கில அரசு. அதே சமயம் இலங்கையில் யாழ்ப்பாணத்தமிழர்களும் சரி, மற்றத் தமிழர்களும் சரி தேவார/திருவாசகங்களைப் படித்து ஓதி சிவ தீககை பெற்றே மேற்கொண்டு படிப்பைத் தொடர்ந்தார்கள். ஆனால் தமிழ் நாட்டில் முற்றிலும் வேறான நிலைமை.


இத்தகைய சந்தர்ப்பத்தில் தான் வைணவப் பிரிவினையின் மூலம் வைணவர்கள் விஷ்ணு ஒருவனே தெய்வம்! என்னும் கொள்கையையும் தூக்கிப் பிடித்தனர். ஆரம்பத்தில் அவர்களுக்குள் வடகலை/தென்கலைப் பிரிவுகள் தோன்றினாலும் ஸ்ரீராமானுஜர் காலத்துக்குப் பின்னால் தமிழுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தினமும் கோயில்களில் பட்டாசாரியார்களே சந்நிதிக்குள் பாசுரங்கள் பாடும் முறையை ஏற்படுத்தினார்கள். அதைத் தவிரவும் பாசுரங்கள் பாடுவதில் வல்லவர்களைத் தேர்ந்தெடுத்துத் தனி கோஷ்டி முறையை உருவாக்கி இதற்கென்றே தனிப் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.

சைவர்களில் சைவர் எனத் தனியாக இருந்தவர்கள் ஆதி சைவர்களும், சிவாசாரியார்களுமே. இருவருமே ஒன்றே எனச் சிலர் சொன்னாலும் பலர் மறுக்கவும் செய்கின்றனர். இவங்க சிவனைத் தவிர்த்து வேறே கடவுளை வணங்குவதில்லை.  அதே சமயம் பிராமணர்களில் ஸ்மார்த்தர் என்னும் புதியதொரு பிரிவு தோன்றியது. இவர்கள் ஆதி சங்கரரைத் தங்கள் குருவாக ஏற்றவர்கள். அவருடைய ஷண்மத தத்துவத்தை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு எந்தக் கடவுள்களிடமும் பேதங்கள் கிடையாது. சர்வம் சிவ மயம் என்றாலும் சர்வம் விஷ்ணு மயம் என்றாலும் ஏற்பவர்கள். பஞ்சாயதன பூஜை என்னும் ஷண்மத வழிபாட்டில் முக்கியமான பூஜை முறையைப் பலரும் ஏற்று அதன்படி பூஜை செய்பவர்கள். இவர்களில் சிவ பூஜை மட்டுமே செய்பவர்கள் உண்டு. அவர்கள் தங்களுக்கான உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்வார்கள். மற்றவர்களை ஏற்க மாட்டார்கள்.

இந்த ஸ்மார்த்தர்கள் என்னும் பிரிவினர் கோயில்களில் வழிபாடுகளைச் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். ஆனால் வைணவர்களில் அப்படி இல்லை.ஆகம நடைமுறைகள் தெரிந்த பட்டாசாரியார்கள் என அனைவருமே கோயிலின் கர்பகிரஹத்தில் வழிபாடு செய்வார்கள். வழிபாடு செய்பவர்களுக்குத் துணையாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே பிரபந்தங்களை ஓதத் தெரிந்தவர்கள். ஆனால் அதே சமயம் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்கள் பன்னிரு திருமுறைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள். ஓதவும் தெரியும். ஆனாலும் எப்போது எனத் தெரியாத காலத்திலேயே சிவன் கோயில்களில் ஓதுவார்கள் தோற்றுவிக்கப்பட்டுச் சைவ மடங்களால் ஆதரிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இருக்கும் கோயில்களின் கால வழிபாட்டின்போது தேவார/திருவாசகங்களை ஓதும் பேறு பெற்று இன்று வரை பல கோயில்களிலும் ஓதி வருகின்றனர். இவர்களில் ஸ்மார்த்தர்களும் சேர்ந்து கொள்வார்கள். பலருக்கும் ஓதத் தெரிந்திருந்தாலும் சிவன் கோயில் நடைமுறைப்படி ஓதுவார் தான் ஓத வேண்டும் என்றிருப்பதால் அவர்தான் ஓதுவார். கூடவே நாமும் தெரிந்தால் சொல்லலாம்.

சிதம்பரத்தில் ஒவ்வொரு காலத்துக்கும் தருமபுரம் ஆதீனத்தால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் வந்து பன்னிரு திருமுறைகளை ஓதுவதை இன்றும் பார்க்க முடியும். அங்கே உள்ள தீக்ஷிதர்கள் ஸ்மார்த்தர்கள் ஆனாலும் அவர்கள் ஈசனின் நேரடிச் சீடர்கள் என்பதால் அவர்கள் கர்பகிரஹத்தில் வழிபாடுகள் செய்ய உரிமை பெற்றவர்கள் என்பதோடு அனைவருக்குமே பன்னிரு திருமுறைகளை ஓதவும் தெரியும். பெரும்பாலும் அபிஷேஹ காலத்தில் ஸ்ரீருத்ரம் சொல்லிக் கொண்டோ அல்லது திருமுறைகளை ஓதிக்கொண்டோ அபிஷேஹம் செய்வார்கள்.எல்லாக் கோயில்களிலும் பன்னிரு திருமுறைகளை முறைப்படி சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் அந்த அந்தக் கோயிலைச் சேர்ந்த மடங்களால் நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் பங்கு கொள்பவர்களே பிராமணர்கள் தாம். அனைவரும் சேர்ந்து தேவார முற்றோதல் என்னும் நிகழ்ச்சியை அடிக்கடி தொடங்கி நிறைவும் செய்வார்கள். கட்டாயப்பாடமாகப் பன்னிரு திருமுறைகளை வைக்காமல் விருப்பப் பாடமாக வைத்திருப்பதால் இதில் ஆர்வம் உள்ளவர்களே கலந்து கொள்கின்றனர். திருப்புகழும் அப்படித் தான் எல்லாக் கோயில்களிலும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.


ஆனாலும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை வலியுறுத்தியே ஆகவேண்டும். வைணவர்களுக்கு மகாவிஷ்ணுவிடம் உள்ள பற்றும், பாசமும், பக்தியும் சைவர்கள்னு சொல்லிக் கொள்ளும் ஸ்மார்த்தர்களுக்கு இல்லை என்றே சொல்லணும். மிகச் சின்ன வயசிலேயே வைணவ பக்தி நெறிமுறைகள் போதிக்கப்படுகின்றன என்பதற்கு என் முகநூல் நண்பர் திரு கேசவபாஷ்யம் வி.என். அவர்களின் புதல்வன் "ஆத்ரேயனே" சான்று. சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாகப் பார்த்து வருகிறேன். இங்கேயும் "சிந்துஜா ஹரிகதை" போன்ற மேதைகள் உள்லனர் என்றாலும் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.. வைணவர்கள் மறந்தும் பிறன் தொழமாட்டார்கள் என்பதற்குச் சிதம்பரம் கோயிலின் பெருமாளே சாட்சி. ஆனால் மற்றவர்கள் எல்லாவற்றையும் ஏற்பார்கள். இந்துக்களின் இன்றைய நிலைமைக்கு அது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  சிவன் கோயில்களில் ஸ்வாமி பல்லக்கைத் தூக்குபவர்கள் பிராமணராய்த் தான் இருக்கணும்னு கட்டாயம் இல்லை. ஆனால் விஷ்ணு/பெருமாள் கோயில்களில் அவர்களைத் தவிர வேறே யாரும் பெருமாளின் பல்லக்கைத் தொடக் கூட முடியாது. பிராமணர்கள் அலகு குத்திக்க மாட்டாங்க, கடினமான வேலைகளைச் செய்ய மாட்டாங்க என்பவர்கள் அந்த ஸ்ரீபாதம் தாங்கிகளின் தோள்பட்டையைப் பார்த்தால் தெரியும்.

வேறு கருத்துள்ளவர்கள் சொல்லலாம்.

Friday, April 28, 2023

தாத்தாவை நினைவு கூர்வோம்!

 உ.வே.சா. வாழ்க்கையின் சிறப்பு

உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநானூற்றிற்கும் புறநானூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றிப் பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துகளையும் விற்றுப் பல தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.


சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா. பெரும் காரணமாவார். சங்க கால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவருடைய உழைப்புப் பெரிதும் உதவியது.


இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளைப் பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களைக் குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடுள்ளது.


சீவகசிந்தாமணியைக் கற்றுக் கொடுக்க முயன்ற போது ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சிரமத்திற்கிடையில் கற்றுப் பாடம் சொல்லிக் கொடுத்ததால் இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887-ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிட்டாா். தமிழர்கள் அளித்த நல்லூக்கம் இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய காரணமாயிற்று. இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு கருத்துக் கருவூலமாக இருக்கின்றது.


நன்றி விக்கிபீடியா

சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி அவ்வுலக (ஆன்மீக) வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னை தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது எனக் கூறுவாராம்.


இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஓர் ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராகச் இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடி அலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக் கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.


தமிழாசிரியர் எங்குக் கிடைப்பாரோ என்று தேடித்தேடி, அதன் தொடர்ச்சியாகக் குடும்பம் முழுவதும் தமிழாசிரியர் இருக்கும் இடத்திற்குக் குடி பெயர்ந்து விடும். படித்த புலவர்கள் யாரைப் பார்த்தாலும் இவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் தம் உள்ளம் ஏங்கியதாக இவர் குறிப்பிட்டுள்ளார்கள். “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உ.வே.சா. பதிவுசெய்கிறார்

Friday, April 21, 2023

மாறி வருவது உலகமா? மனிதர்களா?

 விலைவாசி எல்லாமே அதிக பக்ஷமாக 100% ஏறி இருக்கும் போல! ஜனவரியில் 75 ரூபாய்க்கு விற்ற எள்ளுருண்டைகள் இப்போ 120 ரூபாய்க்கு விற்கிறது. இனிப்புப் பண்டங்கள் எல்லாமும் கிலோ  500 ரூக்கு விற்கின்றன. உணவுப் பண்டங்கள், தேநீர் எல்லாமும் விலை அதிகரித்துள்ளது. இதற்கான அடிப்படைப் பண்டங்கள் விலையும் கூடி இருக்கணும். அதைப் பார்க்கணும். ஆனால் பெரிய அளவில் இதற்காக யாரும் எதுவும் சொல்லவில்லை என்பது எனக்கு அதிசயமாகவே இருக்கு. எரிவாயு விலை கூடிக் கொண்டே போவதற்கும் ஆங்காங்கே அரசியல் கட்சிகள் கொஞ்சம் கத்துவதோடு சரி. பொதுமக்களிடமிருந்து ஏன் எதிர்ப்பே காணோம்? 

இக்காலத்துப் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதே புரியலை. சமீபத்தில் கேள்விப் பட்ட செய்திகளில் இருந்து பெண்கள் திருமணத்துக்கு முன்னரே எக்கச்சக்கமாக நிபந்தனைகள் விதிக்கின்றனர். கணவனாக வரப் போகிறவன் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதோடு இல்லாமல் தான் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் அழைத்தால் உடனே எடுத்துப் பேசணும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். அதோடு இல்லாமல் தனக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கணும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். மாமனார் மாமியார் கூடவே இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண்களின் பெற்றோர் பெண்ணுடன் தொடர்பு வைத்து இருக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகள் கணவனுடன் பேசுவதில் இருந்து எல்லாமும் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளப்படும். அவங்க ஆலோசனைகளைக் கேட்டுத்தான் தன் குடும்பத்தில் எல்லாமும் செய்வார்கள். இதில் மாமியார், மாமனார் வெளி ஆட்கள். அவங்க தலையிடக் கூடாது.

இவங்களுக்கு எல்லாம் கூடப் பிறந்த ஆண் சகோதரர் இருந்து அவரைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் இதே போல் நிபந்தனைகள் விதித்தால் ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் பெரும்பாலான பெண்கள் ஒற்றைப் பெண்களாகவே இருக்காங்க. அவங்களுக்குக் கூடப் பிறந்தவங்க இல்லை என்பதால் எதிலும் தான், தனது என்னும் நினைப்பே முன்னால் நிற்கிறது. கணவனும் ஓர் மனிதன் அவனுக்கும் பெற்றோர் உண்டு; பாசம் இருக்கும் என்பதோடு பெற்றோரைப் பார்த்துக்கும் கடமையும் உண்டு என்றெல்லாம் நினைப்பே வரதில்லை.

இந்தப் பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததோ அல்லது யாரேனும் கூடப் பிறந்தவங்க நிறையப் பேர் இருந்து அவங்களுக்குச் செய்ததோ அவங்க வாழ்க்கை மூலம் இதெல்லாம் தெரிந்து கொண்டார்கள் என்பதோ இல்லை. அப்படி இருக்கையில் அவங்களுக்கெல்லாம் எப்படித் திருமணம் நிச்சயம் ஆகும்போதே மாமனார்/மாமியார் வேண்டாதவங்க என்னும் எண்ணம் உண்டாகிறது? அவங்களைப் பார்த்துப் பழகி அவங்க குணம் பிடிக்கலைன்னா ஒத்துக்கலாம். பார்ப்பதே இவங்க நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகளில் தான். அப்போவே இவங்களால் எப்படி இம்மாதிரி எல்லாம் முடிவுக்கு வர முடியுது? பெண்கள் தங்களுடைய விட்டுக்கொடுத்தல், அனுசரித்துப் போதல் இதை எல்லாம் கடைப்பிடிப்பதே இப்போதெல்லாம் அவமானம் என நினைக்கின்றனர். 

இன்னொருவர் சொல்லி இருந்தார். குழந்தை பிறந்தாலும் கூட இவங்க எல்லாம் அந்தக் குழந்தையை முழு மனதோடு பராமரிப்பதும் இல்லை என்பதே! பெரும்பாலான பெண்கள் மொபைல் மோகத்திலும் டிக்டாக்கிலும், ஸ்ம்யூல் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று அதைச் சமூகத் தளங்களில் வெளியிடுவதிலும் உள்ள ஆர்வத்தை வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் காட்டுவதே இல்லை. முக்கியமாக அவங்க இன்னொரு மொபைல் வாங்கிக் குழந்தைக்கும் அதைப் பார்க்கப் பழக்கப்படுத்தி விடுகின்றனர். குழந்தை அழுதால் போதும் மொபைலை ஆன் பண்ணிக் குழந்தை கையில் கொடுத்துவிட்டு இவங்க தங்கள் வேலைகளில் மூழ்கி விடுகின்றனர். இது நெருங்கிய நண்பர் ஒருத்தர் வீட்டில் அவர் மருமகள் செய்வது என மனம் நொந்து போய்ச் சொல்லி இருந்தார்.

அதோடு மொபைல் அதிகம் பார்ப்பதால் குழந்தைகளுக்குச் சூடு அதிகம் ஆகிக் கண்களை அவை பாதிக்கும் அவலமும் ஏற்படுகிறது. முகநூலில் ஒரு நண்பரின் பேத்திக் காலை எழுந்ததும் கண்களைத் திறக்க முடியாமல் அவதிப்பட்டுக் குழந்தையால் பத்து மணி வரை கண்களைத் திறக்க முடியலை எனவும் பின்னர் மருத்துவரிடம்போனதில் அவர் சோதனை செய்துவிட்டு மொபைல் அதிகம் பார்ப்பதால் ஏற்பட்ட விளைவு எனவும் மொபைல் பார்ப்பதைக் குறைக்குமாறும் அறிவுரை சொல்லி இருக்கார்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தியில் பெண்கள் பெரும்பாலும் சமைப்பதே இல்லை எனவும் ஸ்விகி, ஜொமோட்டோ மூலமே உணவுப் பண்டங்களை வாங்கிக்கறாங்க என்பதும் தெரிய வருகிறது. இவை எல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே சாப்பிடும் குழந்தைகளுக்கு விரைவில் உடல் பருமன் ஆகிவிடுகிறது என்பதோடு பத்து வயதுக்குள் பூப்பும் அடைந்து விடுகின்றனர். எவ்வளவு தொல்லை இது என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.  நாங்க இந்த ஸ்விகி, ஜொமோட்டோவுக்கே போவதில்லை. வெளியில் வாங்குவது என்றாலும் குறிப்பிட்ட ஒரு ஓட்டலின் உணவு தான் எங்களுக்கு ஒத்துக்கும். எனக்கு முடியலைனா அங்கே போய் வாங்கி வருவோம். அதிலும் பெரும்பாலும் இட்லிதான்.

இதை எல்லாம் பார்த்தும் கேட்டும், படித்தும் அனுப்வரீதியாக அனுபவங்கள் அடைந்தும் வருவதால் இனி வரப்போகும் சமுதாயம் எத்தகையதொரு நிலைமையில் இருக்கும் என்பதை எண்ணினால் மனம் சஞ்சலம் அடைகிறது. என்ன ஒண்ணு! இதை எல்லாம் பார்க்க  நாங்கல்லாம் இருக்க மாட்டோம். 

Sunday, April 16, 2023

ஏமாறச் சொல்வது நானோ?

 நேற்று என்னோட மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. 8453234693 என்னும் எண்ணில் இருந்து நாங்க மின்சாரக் கட்டணம் கட்டவில்லை என்பதால் நேற்று இரவு 9.30 மணிக்கு எங்கள் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும். போன மாச மின் கட்டணமும் நாங்கள் கட்டியதற்கான சான்று இல்லை எனவும் அதையும் அப்டேட் செய்யும்படியும்  உடனே 9353544193 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளும்படியும் சொல்லி இருந்தது அந்தச் செய்தியில். அதில் மின் விநியோகம் பெறும் வாடிக்கையாளரின் பெயரோ, அவருடைய பதிவு எண்ணோ எதுவும் இல்லை. எந்த டிவிஷன் என்பதும் சொல்லவில்லை. எந்த ஊர் என்றும் சொல்லி இருக்கலை. சரி இது ஏதோ ஏமாற்றுச் செய்தி என்பது புரிந்து பேசாமல் இருந்துவிட்டோம்.

இன்று சற்று முன்னர் அந்த 9353544193 எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. நான் தான் எடுத்தேன். எடுத்துப் பேசியதுமே வட இந்தியக் குரல் என்பது புரிந்தது. எலக்ட்ரிசிடி என்பதும் புரியவே செல்லை நம்மவரிடம் கொடுத்துட்டேன். அவரிடம் பேசிய அந்தப் பேர்வழி மின் கட்டணத்தை உடனே கட்டும்படி சொல்லி இருக்கார். இன்னிக்கோ ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை தினம். அலுவலக நாட்களிலேயே அவ்வளவு சுறுசுறுப்பாகப் பணம் வசூலிக்காத மின் வாரிய ஊழியர்கள் இன்னிக்கு ஏன் கூப்பிடறாங்க? நம்மவரோ அவரிடம் எந்த ஊர், எந்த டிவிஷன் என்றேல்லாம் கேட்க சென்னை, கோடம்பாக்கம் எனச் சொல்லி இருக்கார். எங்களுக்கு அங்கே வீடே கிடையாது நாங்க ஏன் பணம் கட்டணும் என நம்மவர் கேட்க அவர் திரும்பத் திரும்ப வற்புறுத்த உடனே நம்ம ரங்க்ஸ் சரி, கட்டறேன். நீங்க வாடிக்கையாளர் பெயர், வீட்டு விலாசம். பணம் கட்ட வேண்டிய வாடிக்கையாளரின் பதிவு எண் எல்லாம் சொல்லுங்க. இல்லைனா எஸ்.எம்.எஸ். பண்ணுங்க என்றதும் அதெல்லாம் கொடுக்க முடியாது எனச் சொல்லி இருக்கார். பின்னர் எந்த நோக்கத்தில் பணம் கட்டச் சொல்றீங்க? உங்களோட சுய விபரத்தோடு மேற்கண்டவற்றையும் அனுப்பினால் அதன் பிறகு பேசலாம் என்று சொல்லி விட்டார்.வேறே வழியே இல்லாமல் அந்த நபர் செல்லைத் துண்டித்தார். பின்னர் நானும் கூகிள் பண்ணி எல்லாம் பார்த்ததில் மேற்படியான எண்களே இல்லை எனச் செய்தி வருது. ஏமாந்தவர் கிடைச்சால் எப்படி வேணா ஏமாத்துவாங்க போல!

இதே போல் அடிக்கடி ஸ்டேட் பாங்க் எனச் சொல்லிக் கொண்டு உங்க கணக்கை ப்ளாக் செய்திருக்கோம். உடனே தொடர்பு கொள்ளுங்க மேல் அதிக விபரத்துக்கு என்றெல்லாம் செய்திகள் வரும். நாம் கண்டுக்கலைன்னா உடனே ஒரு தொலைபேசி அழைப்பு. வங்கியில் இருந்து மானேஜர்  பேசறேன் என யாரானும் கூப்பிடுவாங்க. எந்த வங்கி எனக் கேட்டால் சில சமயம் சொல்லுவாங்க. பெரும்பாலும் உடனே ஃபோனை வைச்சுடுவாங்க. ஒரு தரம் ஸ்டேட் வங்கி என்றதும், எந்த ஊர், எந்த ப்ரான்ச் எனக் கேட்டதும் பதிலே இல்லை. பல சமயங்களில் நானும் அந்த வங்கியில் இருந்து தான் பேசறேன். அங்கே தான் இருக்கேன் எனச் சொல்லிடுவேன். உடனே தொலைபேசி வைக்கப்படும். 

மொத்தத்தில் திருடர்கள்/ புதுப் புது வழி கண்டு பிடிக்கிறாங்க. கவனமாக இருக்க வேண்டியது நாம் தான்.

Wednesday, April 12, 2023

ரொம்ப நாள் கழிச்சு ஒரு பட விமரிசனம்! இல்லை! படக்கதை!

 பிஎஸ் என் எல் ஃபைபர் நெட் போட்டு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. அதிலே பிஎஸ் என் எல் சினிமா+ இலவசமாகக் கொடுத்திருக்காங்க. இதுக்கு முன்னாடி டிஸ்னி ஹாட் ஸ்டார் கொடுத்தும் அதைப் போய்ப் பார்க்கவில்லை. ஜியோவில் ஜியோ சினிமா கொடுத்திருந்தாங்க. ஆனால் அதிலே படங்களே சரியாப் பார்க்க முடியலை.ஹே! சினாமிகா! பார்த்தேன். பிடிக்கலை. அப்புறமாக் காஷ்மீரி ஃபைல்ஸ் வந்திருந்தது. அதைப் பார்த்தேன். மறுபடி ராம் சேதுவோ, ராகெட்ரியோ பார்க்கலாம்னா பைசா கேட்டது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்துட்டேன். இதுக்குள்ளே தான் கண் அறுவை சிகிச்சை எல்லாம் நடந்து கணினியைத் தொடாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை. அப்புறமா ஒரு நாள் பிஎஸ் என் எல் சினிமா+ ஐத் தூண்டித்துருவுகையில் ஆர்.ஆர்.ஆர். படம் இருந்தது. ஆஸ்கார் படமாச்சேனு அதைப் பார்க்கலாம்னு ஆரம்பிச்சேன். முதல் மூன்று நிகழ்வுகளையும் பார்த்துட்டேன். பின்னர் சில நாட்கள் பார்க்க முடியலை. அப்புறமா மறுபடி மறுபடி முயன்றால் படமே வரலை. என்னனு புரியலை.


ஆனால் மற்றப்படங்கள் வந்தன. அதில் அயோத்தி,அகிலன் இதெல்லாமும் இருந்தது. அயோத்தி புதுசு என்பதோடு அதுக்குப் பைசா கொடுக்கணுமோனு சந்தேகம். அதோடு படம் விமரிசனம் படிச்சதில் எனக்குப் பிடிக்கவும் இல்லை. பிராமணர்களை மட்டும் அழுத்தம் திருத்தமாகக் கெட்டவங்களாக் காட்டிட்டு மற்றவர்களை ரொம்ப நல்லவர்களாகக் காட்டி இருக்காங்க என்று 2,3 விமரிசனங்கள் பார்த்ததும் படம் பார்க்கும் ஆசையே போயிடுச்சு. அகிலன் பார்க்க ஆரம்பித்தால் ரொம்ப போராக இருந்தது. அதான் ஆர்.ஆர்.ஆரும் வரலையேனு நினைச்சப்போ இந்த ஹிந்திப் படம் கண்களில் பட்டது. 

கஞூஸ் மகின்சோச் என்னும் படம். நடிகர்கள் எல்லாருமே புதியவர்கள். ஆனால் கதைச் சுருக்கம் நன்றாக இருக்கவே நாலைந்து நாட்களாகப் பார்த்தேன். ஒரேயடியாக உட்கார முடியறதில்லை. இன்னிக்குப் பார்த்து முடிச்சுட்டேன். ஜம்னா ப்ரசாத் பான்டே என்னும் இளைஞன் சரியான கருமி. முடிஞ்சு போன டூத் பேஸ்டைக் கூடக் குழவியால் நசுக்கி மிச்சம் மீதி இருக்கானு பார்ப்பான். அவனுக்கு அப்பா, அம்மா, மனைவி, ஒரு பிள்ளை இருந்தார்கள். இவன் ரகசியமாகப் பணம் சேர்த்து வந்தது ஒரு நாள் இரவில் வீட்டில் உள்ளவங்களுக்குத் தெரிந்து போக, அப்போத் தான் அவன் சொல்கிறான் தன் பெற்றோரின் சார்தாம் யாத்திரைக்காகப் பணம் சேர்த்து வருவதாக. எதிர்பாரா மகிழ்ச்சி அடைந்த பெற்றோரும் யாத்திரைக்குத் தயார் ஆக ஜம்னா ப்ரசாதும் அவர்களை அனுப்பி வைக்கிறான்.

அவங்க யாத்திரைக்குச் செல்லும்போது சந்தோஷமாகவே செல்கின்றனர். ஆனால் அவங்க போன அந்தச் சமயம் தான் கேதார்நாத்தில் மேகம் வெடித்து வெள்ளம் வந்திருந்தது. முதலில் பிள்ளையோடு தொடர்பில் இருக்கும் பெற்றோர் பின்னர் தொடர்பு அறுந்து விடுகிறது. மனம் உடைந்த ஜம்னா ப்ரசாத் ரிஷிகேஷ், ஹரித்வார் இங்கெல்லாம் போய் ஒவ்வொரு முகாமாகத் தன் பெற்றோரைத் தேடுகிறான்.  கிடைக்கவே இல்லை. பின்னர் சொந்த ஊரான லக்னோவிற்குத் திரும்பும் அவனுக்கு அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அளிப்பதைக் கேட்டு அதற்கு விண்ணப்பிக்கிறான். அவனுக்குப் பதினான்கு லஷம் கிடைக்கும் எனவும் அதில் மேலதிகாரிகளுக்கும் தனக்குமாக நான்கு லக்ஷத்தைப் பிடித்துக் கொண்டு மீதி பத்து லக்ஷம் தருவதாக அந்த அரசு அதிகார் சதுர்வேதி சொல்ல அரை மனதாக ஜம்னா ப்ரசாத் சம்மதிக்கிறான். 

பத்து லக்ஷத்தை வாங்கி வீட்டிற்குத் தாய்க்குப் பிடித்த நீல நிறத்தில் பெயின்டிங், செய்து பறவைகளுக்கான ஓர் இல்லம் தந்தை விருப்பத்தின்படி அமைத்து பெற்றோரின் பெயரில் பூங்காவில் அமர இரண்டு கல்லால் ஆன பெஞ்சுகள் போட்டுப் பிள்ளையைத் தன் பெற்றோர் விருப்பப்படி ஆங்கில முறைக் கல்வியில் சேர்த்து மனைவி ஆசைப்பட்ட ஆப்பிஎ ஐஃபோன் அவளுக்கு வாங்கிக் கொடுத்து என எல்லாவற்றையும் செலவு செய்து விடுகிறான்.

ஒரு நாள் இரவு அவர்கள் அனைவரும் வெளியே போய்த் திரும்புகையில் கழிவறையை யாரோ பயன்படுத்தும் சப்தம் கேட்டுக் கோபமடைந்த ஜம்னா ப்ரசாத் இந்த ஆங்கில முறையிலான கழிவறை கட்டியதில் இருந்து இந்த வளாகத்தில் இருப்பவங்க இங்கே தான் வந்து தொந்திரவு செய்யறாங்க எனக் கூறிக்கொண்டே கழிவறையை நோக்கிப் போகிறான். அதற்குள் கழிவறை/குளியலறையில் திறந்து வெளியே வருவது அவன் தாயும், தந்தையும். முதலில் பேயோ/பிசாசோ எனப் பயப்படும் ஜம்னா பின்னர் தெளிவடைகிறான். அவனுக்கு சந்தோஷப்படுவதா துக்கப்படுவதா எனத் தெரியவில்லை. ஏனெனில் அவன் பெற்றோர் உயிருடன் இருப்பதால் வாங்கிய நிவாரணத் தொகையைத் திரும்பக் கொடுக்க வேண்டும். என்ன செய்யப் போகிறான்? இதான் கதையே! மீதியை வெள்ளி இல்லாக் கணினித் திரையில் காணுங்கள்.


ட்ட்ட்டங்க்!

Tuesday, April 04, 2023

பெயரில் என்ன வந்தது?

பெயரிலே என்ன இருக்குனு சிலர் சொல்றாங்க. ஆனால் பெயரிலே தான் எல்லாமே இருக்கு இல்லையா? எங்க வீட்டிலே பாருங்க எந்தப் பெயரைச் சொன்னாலும் அந்தப் பெயரிலே யாராவது ஒருத்தர் இருக்காங்க. இப்போப் பாருங்க, அன்னிக்கு ஒருநாள் அம்பி அங்கிள் தொலைபேசிலே கூப்பிட்டு ஸ்டைலா ஸ்ரீராம்னு சொல்லி இருக்கார். ஸ்ரீராம்ங்கற பேரிலே எங்களுக்கு சொந்தங்கள் நாற்பது பேர்னா நண்பர்கள் பத்துப் பேராவது இருப்பாங்க. யாருனு எடுத்துக்கறது? நம்ம ரங்ஸுக்கு அந்தக் கவலையே இல்லை, குழப்புவார். என்னங்கறீங்க?? ஸ்ரீராமை,பொருத்தமே இல்லாத வேறே பெயராலே, கிருஷ்ணன், சேகர்னு ஆக்கிடுவார். அதோட இல்லாமல் அழுத்தம் திருத்தமா நம்மட்டே அடிச்சுச் சொல்லுவார். அவங்க வீட்டிலேயே போய் அவர் புரிஞ்சுட்ட பேராலேதான் கூப்பிடுவார். அவங்களும் பாவம்னு வந்துடுவாங்க. சிலர் மட்டும் அசடு வழிஞ்சுண்டே(நியாயமாப் பார்த்தா இவர் வழியணும், இங்கே எல்லாமே மாறிடும்) ஹிஹிஹி, என் பேர் சேகர் இல்லை ஸ்ரீராம்னு சொல்லுவாங்க. ஓஹோ, அப்படியானு கேட்டுப்பார். ஆனாலும் விடாம இவர் வச்ச பேராலே தான் கூப்பிடுவார்ங்கறது வேறே விஷயம்.

இதைவிடக் கூத்து ஒண்ணு நடந்துச்சே. ஒருநாளைக்கு திராச சார் கூப்பிட்டார். அவர் திராசனு சொல்லி இருந்தாலே இவர் புரிஞ்சுட்டிருக்க மாட்டார்ங்கறது வேறே விஷயம். அவரோ சந்திரசேகர்னு சொல்லிட்டார். சந்திரசேகர்ங்கற பேரிலே எனக்கு அக்காவீட்டுக்காரர் ஒருத்தர் இருக்கார். அதோட இவரோட நெருங்கின நண்பர்கள் இரண்டு பேர் சந்திரசேகர். இவங்க எல்லாரும் அவரை விடப் பெரியவங்க. ஆனாலும் இவர் நண்பர்கள்ங்கற ஹோதாவிலே ரொம்ப உரிமையா, "என்னப்பா, எப்படி இருக்கே??" னு எல்லாம் கேட்டுட்டு இருந்தார். சரிதான் அவரோட நண்பராக்கும்னு நினைச்சேனா?? தொலைபேசியை என் கையிலே கொடுத்து சந்திரசேகர்டி, உன்னோட பேசணுமாம். ஹிஹி அவர் நினைச்சது சந்திரமெளலியைப் போல. சரினு நானும் தொலைபேசியை வாங்கிட்டு ஹலோனு சொன்னால் எதிர்முனையில் திராச சார் பேசறார். இப்போ அசடு வழியவேண்டிய முறை என்னோடதாச்சு. இத்தனைக்கும் நம்மாளு அசரவே இல்லை. ஹிஹிஹி,இது பங்களூரிலே இருக்காரே உன்னோட நண்பர் மெளலி, அவர்னு நினைச்சேனேனு சமாளிப்பு.

நல்லவேளையாக் கொத்தனார் கூப்பிட்டப்போ "கொத்தனார் பேசறேன்னே சொல்லிட்டார். அவர் பேரிலே எங்க வீட்டிலே "என்னடா, டேய்"னு அதட்டற ரேஞ்சுக்குப் பசங்க இருக்காங்களா? பேர் சொல்லி இருந்தா மனுஷன் முழி முழினு முழிச்சிருப்பார். தி.வா.வேறே ஒருநாள் வாசுதேவன்னு சொல்லவே,அன்னிக்குத் தொலைபேசியை நான் தான் எடுத்தேன், இருந்தாலும் அது என்னோட ஓர்ப்படி பையர்னு நினைச்சுட்டேன். டேய் வாசுனு கூப்பிட்டிருக்கணும், (நல்லவேளையா, எனக்குத் தான் நல்லவேளை! :P) அப்புறம் தான் ஏதோ குரலில் மாற்றம் இருக்கேனு நினைச்சுட்டு, "யாரு"னு திரும்பக் கேட்டால் கடலூர்னு பதில் வந்ததோ பிழைச்சேன். இல்லாட்டி அன்னிக்கு ஒரு வழி பண்ணி இருப்பேன் எங்க பையர்னு நினைச்சு.

கணேசன் கேட்கவே வேண்டாம், எக்கச்சக்கமா இருக்காங்க. டேய்னு கூப்பிடறதிலே இருந்து மரியாதையாக் கூப்பிடற வரைக்கும் இருக்காங்க. பாலாங்கற பேரும் ரொம்ப காமன். அந்தப் பேரிலே நல்லவேளையா இணையத்திலே யாரும் அதிகமா இல்லையோ பிழைச்சாங்க. எங்க பால்காரர் பேரு என்னமோ முனுசாமினு. ஆனால் இவர் வச்சிருக்கிற பேரு என்னமோ அன்பழகன். அன்பழகன் இல்லை முனுசாமினு சொன்னாலும், பால்காரரைப் பார்த்தால் அன்பழகன்னு தான் தோணுதாம். ஆனால் என்ன பேரு அவங்க வீட்டிலே வச்சிருந்தாலும் நம்ம ரங்க்ஸ் கூப்பிடறதென்னமோ அவர் தானாய் செலக்ட் பண்ணிண்ட ஒரு பெயரிலே தான். இப்படி எத்தனை பேரைக் குழப்பி இருக்கார்னு நினைச்சீங்க? எல்லார் பேரையும் இஷ்டத்துக்கு மாத்திடுவார். இது வரைக்கும் அவர் மாத்தாத பேர் என்னோடதுதான்னு நினைக்கிறேன். மாத்தினாச் சும்மா விட்டுடுவோமா???

இப்போ எல்கே தாத்தா வேறே கார்த்திக்னு பேரிலே வந்திருக்காரா? கார்த்திக் என்னோட அண்ணா பையர் பேரு. இவர் கார்த்திக்னு சொன்னால் அவ்வளவு தான். என்னடானு கேட்போம். மீனாங்கற பேரிலே எங்க வீட்டிலே தடுக்கி விழுந்தால் ஒருத்தர் இருக்காங்க. அதனாலே ஒவ்வொரு மீனாவுக்கும் ஒரு அடைமொழி உண்டு. யு.எஸ்ஸிலே மட்டும் எங்களுக்குத் தெரிஞ்சு 3,4 மீனா உண்டு எங்க பொண்ணைச் சேர்க்காமல். இதிலே நம்ம கவிநயா தொலைபேசினாங்கன்னா எதிர்ப்பக்கம் சத்தமே வராது. நம்ம பேச்சுத் தான் எதிரொலிக்கும். அப்போப் புரிஞ்சுடும் அவங்கதான்னு. மத்தவங்க யாரானும் மீனானு சொன்னால் எந்த மீனானு கேட்டுக்கணும். அவ்வளவு ஏன்? என்னோட ஒரிஜினல் பேரான சீதாலக்ஷ்மிங்கறதே எங்க அப்பா வீட்டிலே பிறக்கிற எல்லாப் பொண்ணுங்களுக்கும் வச்சிருக்காங்களா? ஒரே சீதாலக்ஷ்மி மயம் தான் வீட்டிலே. நல்லவேளையாக் கூப்பிடற பேரு எல்லாருக்கும் மாத்தி மாத்தி வச்சுட்டாங்களோ பிழைச்சோம். இல்லைனா சீதாலக்ஷ்மினு கூப்பிட்டால் குறைந்தது நாங்க ஐந்து, ஆறு பேர் திரும்பிப் பார்ப்போம். இது ஒரு பரம்பரைத் தொடர்கதை! இரண்டு தலைமுறையா வந்துட்டு இருக்கு. :D

ஹிஹிஹி, இந்தப் பயங்கர ஆராய்ச்சிக்கட்டுரை தொடர்ந்தாலும் தொடரும்! எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க!

கொஞ்சம் மொக்கையும் கூடப் போட்டுக்கலாம்னு நினைச்சேன். ஆனால் இதுவும் 12 வருஷப் பழசு தான். இதிலே வரவங்க யாருமே இப்போத் தொடர்பில் இல்லை. :( அவ்வப்போது தி.வா. மட்டும் கூப்பிடுவார்.

Sunday, April 02, 2023

மெரினாவுக்கு ஈடு ஆகுமா இதெல்லாம்?

 என்ன இருந்தாலும் நம் மெரினா கடற்கரை போல் வராது தான். ஆனால் நம்மால் அதைப் பராமரிக்க முடியவில்லை. ஆங்காங்கே குப்பைகள், தின்பண்டங்களின் கழிவுகள், ப்ளாஸ்டிக் கவர்கள் எனப் போட்டு மெரினாவின் அழகையே கெடுத்துவிடுகிறோம். ஆனால் அம்பேரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் ஒரு சின்னக் குட்டிக் கடற்கரையையே எத்தனை அழகுடனும் ஆர்வத்துடனும் பராமரிக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு அம்பேரிக்கா போனப்போத் தான் பையர் இங்கே கூட்டிச் சென்றார். மக்களுக்குத் தேவையான பொழுது போக்கு அம்சங்களோடு ஓர் அருமையான கடற்கரை. ஏற்கெனவே இந்தப் பதிவை என் இன்னொரு வலைப்பக்கம் போட்டிருக்கேன். அங்கே யாரும் வரலை. மாதேவியையும் அப்போதைய சிநேகிதி ப்ரியாவையும் தவிர்த்து. இங்கே மீள் பதிவு செய்கிறேன். 


கடற்கரையில் லைட் ஹவுஸ்

 



பசுமையோடு காட்சி அளிக்கும் கடற்கரையின் ஒரு தோற்றம்.



 

ஹூஸ்டன் நகரில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கும் இந்தச் சின்னஞ்சிறு கடற்கரைப் பிரதேசம் ஒரு சுற்றுலாத்தலமாக அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பல கடற்கரை விளையாட்டுகள், காட்சிகள், பல்வேறு விதமான பொருட்களை விற்கும் கடைகள், கடல் நீரைப் பார்த்த வண்ணம் அமர்ந்து உணவு உண்ணும்படியான தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் என உள்ளன. குழந்தைகள் விளையாடப் பலவிதமான விளையாட்டுகளும் காணப்படுகின்றன. குட்டி ரயிலில் அந்தக் கடற்கரைப் பிரதேசத்தைச் சுற்றி வரலாம். ரோலர் கோஸ்டரில் ஏறிச் செல்லலாம். இன்வெர்டர் என அழைக்கப்படும் லிஃப்ட் போன்ற தூக்கும் வசதி கொண்ட ஒரு பெட்டியில் அமர்ந்து பெல்டினால் நம்மை இறுகக் கட்டிக்கொண்டால் அது நம்மை மேலும் கீழும் தூக்கி விளையாட்டுக் காட்டிவிட்டுப் பின்னர் தலைகீழாகவும் நம்மைத் தூக்கும். அதன் பின்னர் கிட்டத்தட்ட 150 அடி உயரத்தில் காணப்படும் கம்பத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கே சற்று நேரம் வைத்திருந்துவிட்டுப் பின்னர் அதிவேகமாய்க் கீழே இறங்கும்.

சிலருக்கு இதைப் பார்க்கவே பயமாக இருக்கும். ஆகவே மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே விளையாடலாம். இதை போர்ட் வாக் டவர் ட்ராப் ஜோன் எனக் கூறுகின்றனர்.

 



இதைத் தவிரவும் குழந்தைகள் ஆடுகுதிரையில் விளையாடலாம். இந்தக் குதிரை விளையாட்டு இரு தளங்களாக அமைக்கப்படுகிறது. மேல் தளத்தின் குதிரைகள் அருகிலும், கீழ்த்தளத்தின் குதிரைகள் அருகேயும் ஒவ்வொரு காப்பாளர் அருகே நின்று கொண்டே குதிரைகள் இயக்கப்படுகின்றன. இந்த விளையாட்டு வைப் அவுட் என அழைக்கப்படுகிறது. இதைத் தவிரக் குடைராட்டினமும் உள்ளது. உயரம் மிக அதிகமாகவும் உள்ளது. 65 அடி உயரத்தில் சுற்றுவதாய்க்கூறுகின்றனர். இதை விடவும் உயரத்தில் ஏவியேட்டர் என்னும் சக்கரச் சுற்றும், பலூன் வீல் எனப்படும் கூண்டு அமைக்கப்பட்ட குடைராட்டினமும் குழந்தைகள் கண்ணையும், கருத்தையும் கவரும்.

இன்னமும் பாட்டில்களைக்குறி தவறாமல் அடித்துப் பரிசாக பொம்மைகள் மற்றும் பல பொருட்களைத் தரும் கடைகள், ஐஸ்க்ரீம் ஸ்டால்கள், காஃபிக் கடைகள், துணிக்கடைகள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், செயற்கை மணிமாலைகள், முத்துமாலைகள் விற்கும் கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகளும் காணப்படுகின்றன. என்றாலும் சுற்றுவட்டாரம் சுத்தமாய்ப் பராமரிக்கப்படுகிறது. கடைகளின் பக்கவாட்டுத் தோற்றம்.




வேகமாய்ச் செல்லும் படகுகளிலும் அரைமணிநேரப் பிரயாணம் செய்யலாம். நாற்பது மைல் வேகத்தில் செல்லும் படகுகளின் பயணம் உற்சாகம் கொடுக்கும்.



gஎல்லாவற்றுக்கும் மேல் கடற்கரை சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகிறது. அத்தனை மக்கள், குழந்தைகளோடு வந்து விளையாட்டுகள் விளையாடி, உணவு உண்டு, என அத்தனையும் செய்த போதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளிலேயே குழந்தைகளைக் கூடக் குப்பைகளைப் போடும்படி பழக்கி இருக்கின்றனர். உணவுப் பொருட்களின் மிச்சமோ, துணிகளோ, ப்ளாஸ்டிக் கவர்களோ, பேப்பர் குப்பைகளோ காண முடியாது. அதோடு எங்கே சென்றாலும் வசதியான கழிப்பறைகளும், அவைகளின் சுத்தமான பராமரிப்பும், மக்கள் அவற்றைச் சுத்தமும், சுகாதாரமும் நீடித்து இருக்குமாறு பயன்படுத்துவதும், சிறு குழந்தைகளுக்குப் பொதுக்குழாயில் கைகளைக் கழுவ வேண்டி சின்னதாய் வடிவமைத்து ஆங்காங்கே காணப்படும் ஸ்டூல்களும், சின்னஞ்சிறு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துக்குழந்தைகளுக்கும், டயப்பர் மாற்றத் தனி இடமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளோடு இருப்பவர்களுக்கு முன்னுரிமை.