எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 30, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

விருந்தாவனம் சொர்க்கபூமியாக மாறி விட்டிருந்தது. ராதைக்குப் பர்சானா வாழ்க்கையை விடக் கானா பங்கு பெறும் இந்த விருந்தாவன வாழ்க்கையை நினைக்க நினைக்கத் தேனாய் இனித்தது. கானாவுடன் ஆன தன் நட்பு மேன்மேலும் இறுகுவதை நினைந்து அவள் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. இன்னொருவனுடம் திருமணத்திற்கு நிச்சயிக்கப் பட்டவள் என்ற எண்ணமே அவளிடம் இப்போது இல்லை. ஏன், கண்ணனுக்கே அது நினைவில் இல்லை என்றே சொல்லலாம்.

2893=நம்மாழ்வார் பாசுரங்கள்
நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்
என்செய்யோம், இனியென்னகுறைவினம்?
மைந்தனை மலராள்மணவாளனை,
துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். 1.10.4

ஐயனுடன் ஆன திருமண வாழ்க்கையைப் பற்றிய கனவே அவளிடம் இப்போது இல்லை. ஐயனை மறந்தே விட்டாள் என்றே சொல்லலாம். பர்சானாவில் ஒரு வானம்பாடியைப் போல் பறந்து திரிந்து கொண்டிருந்த ராதை, இங்கே விருந்தாவனத்திலும் அதே மாதிரியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டாள். ஆனால் பர்சானாவில் அவள் தாய்வழிப்பாட்டி ராதையைத் தன் கண்ணின் கருமணியை விட அருமையாகப் பாதுகாத்து அன்போடு வளர்த்தாள். இங்கே அவளின் மாற்றாந்தாய்மார்களிடம் சாதாரண அன்பே கிட்டாதபோது, அவள் கண்ணின் கருமணியாவாது எங்கனம்?? மாற்றாந்தாய்மார் ராதையின் தந்தையிடம் ராதையின் போக்கைப் பற்றிச் சொல்லிக் கண்டிக்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் ராதையின் தந்தையோ இந்த விஷயம் தூசி மாத்திரம் எனக் கருதினார். ஏனெனில் கோபியர் அனைவருமே கண்ணனிடம் பித்துக் கொண்டு அலைந்தனர். அதே சமயம் வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டு குடும்பவாழ்க்கையையும் ஒழுங்காகவும், அழகாகவும் நடத்தி வந்தனர்.

2940
உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என
வள்ளலேகண்ணனேயென்னும், பின்னும்
வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்
கள்விதான்பட்ட வஞ்சனையே. 2.4.7

ஆகையால் இது கண்ணனின் உருவ அமைப்பும், அவன் பழகும் விதமும் அனைவரையும் கவரும் வண்ணம் இருப்பதைக் கவனித்திருந்த ராதையின் தந்தை ஐயனோடு ராதையின் திருமணம் முடிந்துவிட்டால் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால்??????? கண்ணனோ பெரிய பையனாய் வளர்ந்து கொண்டிருந்தான். இப்போது காட்டிற்கு ஆநிரைகளை அழைத்துச் சென்று மேய்த்து வரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தான். யசோதைக்கோ தன் மகன் சென்று வரும் அழகைக் காணவே, அதைப் பற்றிப் பெருமை அடிக்கவே நேரம் போதவில்லை.

244/ பெரியாழ்வார் பாசுரங்கள்
சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. (2


251:
கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு
கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். 8.

இது இவ்வாறிருக்க, கண்ணனின் லீலைகளின் தாக்கம் விருந்தாவனத்திலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஒரு சமயம் பசுக்களின் கூட்டத்தில் இருந்த ஒரு பசு திடீரென ஏதோ பிசாசு பிடித்தது போல் நடந்து கொண்டு அனைவரையும் முட்டித் தள்ள ஆரம்பித்தது. கோபியர் அதனருகே செல்லக் கூடமுடியவில்லை. கோபர்கள் யாராலும் அதைப் பிடித்து அடக்கிக் கட்டிப் போடமுடியவில்லை. கண்ணன் தன் சகாக்களோடு விளையாடும் இடத்திற்கு ஒருநாள் வந்த அந்தப் பசுவைக் கண்ட மற்றப் பையன்கள் பயந்து, அலறி, விழுந்தடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள். கண்ணனையும் ஓடிவரச் சொல்லிக் கத்தினார்கள். நம் கண்ணனா கேட்பவன்?? அந்தப் பசுவுக்கு எதிரேயே நின்று கொண்டு அதைத் தன்னிடம் ஓடிவரும்படியாக அழைத்தான் கண்ணன். மேலும் ஆஹா, ஓஹோ என சப்தங்கள் செய்து அந்தப் பசுவை மிரட்டியதோடு அல்லாமல் அது கோபம் கொள்ளும்படியும் செய்தான். பசு கோபத்தோடு கண்ணனை முட்டித் தள்ள தருணம் பார்த்திருந்தது.

கண்ணனோ எவ்வாறோ அதன் கவனத்தைத் திருப்பி விட்டுப் பின்னால் மெல்லச் சென்று அதன் கழுத்திலிருந்து தொங்கிய கயிற்றை எடுத்து அருகே இருந்த மரத்தோடு சேர்த்துக் கட்ட., தனக்குப் பின்னால் ஏதோ சதி நடப்பதை உணர்ந்த பசு கோபத்தோடு திரும்பிக் கண்ணன் மேல் பாய, கண்ணன் சரியான நேரத்தில் சட்டென விலக, வந்த வேகத்தில் மரத்தில் முட்டிக் கொண்ட பசுவின் மண்டை உடைந்தது. பசு இறந்தது. இது என்னமோ புத்தி சாதுரியத்தோடும், யோசனையோடும் கண்ணன் செய்தான் எனினும் மற்ற கோப, கோபியர் இதை ஓர் மாபெரும் அதிசயமாகவும் கண்ணன் தங்களைக் காக்கவந்த கடவுள் எனவும் கருதி அவனைப் போற்றிப் புகழ்ந்த வண்ணம் இருந்தனர். இம்மாதிரியான செயல்களும் அவற்றில் கண்ணன் ஈடுபட்டு வெற்றி அடைந்து வருவதும் மெல்ல மெல்ல மதுராவுக்குச் சென்று அங்கிருந்து கம்சன் காதுக்கும் போய்ச் சேர்ந்தது. கண்ணனோ எனில் தான் ஏதோ அதிசயம் நிகழ்த்தியதான அறிகுறி துளிக்கூட இல்லாமல் சாதாரணமாய்த் தானுண்டு தன் வேலை உண்டு என இருந்தான். நாட்கள் சென்றன.

கண்ணன் வளர்ந்து மெல்ல மெல்ல வாலிபப் பருவத்துக்கு வந்து கொண்டிருந்தான். பலராமனோ ஒரு மல்லன் போல் உருண்டு திரண்ட தோள்களோடு மிக மிக வலிமையோடு வளர்ந்திருந்தான். கண்ணன் சிறுவனாய் இருந்த காலத்திலேயே அவனோடு சேர்த்து வளர்க்கவேண்டி கண்ணனின் சிற்றப்பன் ஆன தேவபாகன், தன்னுடைய மூன்றாவது குமாரன் ஆன உத்தவனை கோகுலத்துக்கு அனுப்பி வைத்திருந்தான். கண்ணனோடு கூடவே அவனும் விருந்தாவனத்திற்கும் வந்திருந்தான். இவர்களோடு ஸ்ரீதாமா என்னும் சிறுவனும் கண்ணனோடு பாலியத் தோழனாக இருந்தான். நால்வரும் சேர்ந்து கொண்டு ஒருநாள் காட்டை நோக்கிச் செல்லும்போது, யாராலும் அடக்க முடியாத காளை ஹஸ்தினைக் கண்ணன் அடக்குகின்றேன் என்று பந்தயம் வைத்திருப்பது பற்றிப் பேச்சு வருகின்றது.

பலராமன் நாளைக்குக் கடைசிநாள் எனவும், கண்ணனால் அந்தக் காளையை அடக்கவே முடியாது என்றும் இந்தப் பந்தயத்திலிருந்து விலகும்படியும் சொல்லுகின்றான். கண்ணனோ கேட்கவில்லை. நாளை வரை நேரம் இருக்கே. நாளை மாலைக்குள் காளையை அடக்கிக் காட்டுகின்றேன் என்று சொல்ல, உத்தவனோ தான் விளையாட்டுக்குச் சொன்னதாகவும், இந்தக் கடுமையான பந்தயம் வேண்டாம் என்றும் சொல்ல, ஸ்ரீதாமா அதை ஆமோதிக்கின்றான். நந்தனுக்குத் தெரிந்தால் நந்தனும் இதை ஆதரிக்க மாட்டார் என்றும், அதிலும் நந்தனின் உயிரான கண்ணன் காளையை அடக்கப் போகும் விஷயம் தெரிய வந்தால் நந்தன் உயிரையே விட்டு விடுவான் என்றும் சொல்லுகின்றான்.

படங்கள் உதவி: கூகிளார். நன்றி.

Wednesday, May 27, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

இதையே இன்னொரு விதமாயும் சொல்லுவதுண்டு. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய ஆடைகளைக் களைந்து விட்டு கண்ணனைப் பரிபூரணச் சரணாகதி அடைந்தால், அவன் தன்னிடம் உள்ள ஞானமாகிய ஆடையைக் கொடுத்து நம்மை உய்விப்பான் எனவும் சொல்லுவதுண்டு. எந்த அர்த்தத்தில் இருந்தாலும் இது ஒரு மிக அரிதான, தத்துவார்த்தமான பொருளை உள்ளடக்கியது. ராதையும், கிருஷ்ணனும் கூடி இருந்து களிப்பது என்பதே நம்மிடம் உள்ள ஜீவசக்தியானது பரமாத்மாவின் ஆத்ம சக்தியோடு இணைவதையே குறிக்கும். கண்ணனின் ஜீவசக்தி ராதை. கண்ணனின் ஜீவசக்தி அவன் படைத்த நாம் எல்லாருமே ஆவோம். நம்மைப் படைத்துக் காத்து, உய்விக்கும் வழியும் இவ்விதம் காட்டுகின்றான் கண்ணன். அவனையே பரிபூரணமாய் சரணாகதி அடைவதன் மூலம் நாம் பேரின்பத்தைப் பெறமுடியும். (கூடியவரையிலும் வார்த்தைகளை எளிமையானதாய்ப் புரிந்து கொள்ளும்படி சொல்ல முயன்றிருக்கிறேன். தத்துவார்த்தமான விளக்கம் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது.)

நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5.

அதே சமயம் கண்ணன் நம்மிடம் மட்டும் தனியான அன்பு வைத்திருக்கின்றான் எனச் செருக்கும் கொள்ளலாகாது. அப்போது கடவுள் நம்மிடமிருந்து மறைந்துவிடுவான். இங்கே கடவுள் மறைவான் என்பது நம்மிடம் உள்ள நற்குணங்கள் மறைவதையே குறிக்கும். என்றாலும் அன்றாட வாழ்க்கை நெறிக்கு ஏற்ப இதைப் பார்த்தோமானால் ஒவ்வொரு கோபரும், ஒவ்வொரு கோபியும் கண்ணன் தன்னிடம் மட்டுமே தனியான அன்பு காட்டுவதாய்ச் செருக்கடைந்தனர். இதை நாராயண பட்டத்திரி

“நிலீய தேஸெள மயி மய்யமாயம்
ரமாபதிர் விஸ்வ ம்நோபிராம:
இதிஸ்ம ஸர்வா: கலிதாபிமாநா:
நிரீக்ஷ்ய கோவிந்த திரோஹிதோ பூ:”

என்று சொல்லுகின்றார். ஸ்லோகத்தின் அர்த்தம், என் லக்ஷ்மீகாந்தனாகிய கண்ணன், என் அருமைக் காதலன், என்னிடம் மாத்திரம் தனிப்பட்ட அன்பு பூண்டிருக்கின்றான்.” என எண்ணிச் செருக்குற்றிருந்தனர். கண்ணன் அவர்களிடமிருந்து மறைந்துவிட்டான். அப்போது ராதை மட்டும் செருக்கடையாமல் இருந்ததால் அவளை மட்டும் தனியே அழைத்துச் சென்றுவிட்டான். இங்கே ராதை பூரண ஞானம் பெற்றவர்களைக் குறிப்பாள். சாதாரண மனிதர்களாகிய நாம் இறை அருளையும், இறைவனையும் பூரணமாய்ப் புரிந்து கொண்டுவிட்டதாய்ச் செருக்குக் கொள்கின்றோம் அல்லவா? அதே ஞானியரும், யோகியரும் அவ்விதம் செருக்கடைவதில்லை. அவர்களுக்குப் பரிபூரணப் பேரானந்தம் கிட்டியும், அதை வெளிக்காட்டுவதில்லை. ஆகவே இறைவன் அவர்களோடு எப்போது இருக்கின்றான்.

‘ராதாபிதாம் தாவதஜாத கர்வாம்
அதிப்ரியாம் கோபவதூம் முராரே:
பவாநுபாதாய கதோ விதூரம்
தயா ஸஹ ஸ்வைரவிஹார காரீ:”

பட்டத்திரி சொல்கின்றார். “முராரியே, ராதை மட்டும் கர்வம் கொள்ளாதிருக்கத் தாங்கள் ராதையை அழைத்துக் கொண்டு தனியே சென்று ராஸக்ரீடையை நடத்தினீர்கள் அல்லவோ?”

பின்னர் கோபியர் கண்ணனைக் காணாமல் விசனமுற்றனர். இதோ கண்ணன், இதோ அவன் புல்லாங்குழலின் இனிய கீதம்! என ஒருத்தி சொல்ல, மற்றொருத்தி, இல்லை, இல்லை, இதோ என்னோடு கண்ணன் விளையாடுகின்றானே எனச் சொல்ல மற்றும் சிலர் கண்ணன் எங்களை விட்டு விட்டு விளையாடப் போய்விட்டானோ என அழுது அரற்றினார்கள். எந்நேரமும் கண்ணன் நினைவிலேயே இருந்த அவர்கள் தங்கள் மனக்கண்ணால் கண்ணனைக் கண்டு இதோ என்னெதிரில் இருக்கின்றானே என மயங்கினர். அப்போது தனியே அழைத்துச் சென்ற ராதைக்குக் கண்ணன் தனக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாய் அஹங்காரம் மேலிடக் கண்ணன் முற்றிலும் மறைந்தான். ராதை அழ ஆரம்பித்தாள். ராதையின் அழுகுரல் கேட்ட கோபியர் ஓடோடி வந்து பார்க்க கண்ணன் ராதையிடமும் இல்லைஎனக் கண்டு அனைவருமே தேட ஆரம்பித்தனர்.

பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6.

கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. 9.

இங்கே கர்வம் கொண்ட ராதை, கடவுளைக் கண்டு ஆனந்தித்த ஞானியருக்கும், யோகியருக்கும் பரிபூரண ஆனந்தத்தை உணர்ந்து அனுபவித்த பின்னரும் ஒரு சிலருக்கு அதனால் ஏற்படும் கர்வத்தைக் குறிக்கும். இறைவனின் கருணையால் தங்களுக்குக் கிட்டிய பேரானந்தத்தை எண்ணி கர்வம் மேலிடுவதைக் குறிக்கின்றது. தங்கள் யோகத்தாலும், ஞானத்தாலும் அன்றோ இத்தகைய பெரும்பேறு? என எண்ணத் தோன்றியதைக் குறிக்கும்.


அனைவரும் கண்ணனைத் தேடி அலைந்தனர். காட்டில் நாற்புறமும் இருட்டுச் சூழ்ந்து கொண்டது. ஆனால் கண்ணன் இல்லை. யமுனைக்கரையில் அலையாய் அலைந்தனர். பிரலாபித்தனர். கண்ணனின் அருங்குணங்களைப் போற்றிப் பாடினார்கள். புகழ்ந்து பாடி இத்தகையதொரு அருமையான செல்வம் நம்மிடையே இருந்தும் நாம் நமது அறியாமையால் தொலைத்தோமே என எண்ணிக் கலங்கினார்கள். இது கஷ்டம் வரும்போது மட்டும் நாம் இறைவனைத் தேடி, அவனின் பெருங்கருணையை யாசிக்கும் சாமானியரின் குணத்தை இங்கே சுட்டும். என்றாலும் அப்படி இருந்தாலும் இறைவன் கருணை புரியவே செய்கின்றான். வருத்தத்தாலும், துக்கத்தாலும் மனம் கலங்கி இறைவனின் பேராற்றலை எண்ணிக் கண்ணீர் விட்ட வண்ணம் இருந்த கோபியர் மனம் மகிழும் வண்ணம் கண்ணன் அவர்கள் எதிரில் தோன்றினான். ஆஹா, மீண்டும் கண்ணனைச் சந்திப்போமா? அவன் அருட்பெருங்கருணை நமக்குக் கிட்டுமா என எண்ணிக் கலங்கித் தவித்த கோபியருக்குக் கண்ணன் மீண்டும் தரிசனம் கொடுத்ததும் திகைத்துத் திணறித் திக்கு முக்காடிப் போனார்கள். இறைவன் நம்மைக் கைவிட்டுவிட்டான். நாம் வாழ்க்கைப் பெருங்கடலில் மூழ்கிவிட்டோம் என எண்ணிக் கலங்கும் நமக்கு எங்கிருந்தோ ஒரு உதவிக் கரம் நீண்டு, அந்தக் கரத்தின் உதவியால் நாம் மீண்டு வருவதை இது குறிக்கும். இறைவனின் பெருங்கருணையைக் கண்ட கோபியர் பேரானந்தம் அடைந்து என்ன செய்வது என அறியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.

கதிவிதா க்ருபா கேபி ஸர்வதோ
த்ருத தயோதயா: கேசிதாஸ்ரிதே
கதிசிதீத்ருஸா மாத்ருஸேஷ்வபீத்
யபிஹிதோ பவாந் வல்லவீ ஜநை:”
இறைவனின் கருணை என்பது இயல்பானது. இயற்கையானது. சற்றும் வித்தியாசமில்லாமல் எல்லாரிடமும் பொங்கிப் பிரவாஹிக்கும் வல்லமை கொண்டது. எனினும் இங்கே கோபியர் சொல்லுவது என்னவென்றால் தயை என்பது பலவிதமாய் இருந்தாலும், இயற்கையாய் தயை புரியும் சிலரைப் போல், அல்லாமல், அண்டியவர்களிடம் மட்டும் கருணை புரிபவர்களைப் போலும் அல்லாமல், கண்ணா, நீ எங்களிடம் இரக்கம் இல்லாமல் இருந்துவிட்டாயே? என உரிமையோடு கோவிக்கின்றனர். என்றாலும் கண்ணன் அவர்கள் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு , “ஏ, கோபியர்களே, உங்களைப் போல் பிரியமானவர்கள் எனக்கு வேறு யாரும் இல்லை. உங்கள் தவறை நீங்கள் உணரவேண்டும் என்றே நான் சற்று நேரம் மறைந்து இருந்தேன். நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். இனி என்பால் உங்கள் பிரேமையும், உங்கள் பால் என் பிரேமையும் பல்மடங்குப் பெருகும். கவலை வேண்டாம். உங்களைக் கைவிடவே மாட்டேன்.” என உறுதி அளிக்கின்றான்.

Sunday, May 24, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!


இந்த ராஸக்ரீடையைப் பற்றி பாகவதம் என்ன சொல்லுகின்றது என்பதை நாராயணீயம் ஸ்லோகங்கள் மூலம் பார்ப்போமா? கண்ணனின் வேணுகானத்தில் இருந்து கிளம்பிய மனதை மயக்கும் இன்னிசையால் கோபியர் கவரப்பட்டனராம்.

“ஸம்மூர்ச்சநாபிருதித ஸ்வரமண்டலாபி:
ஸம்மூர்ச்சயந்த மகிலம் புவநாந்தராலம்:
த்வத்வேணுநாத முபகர்ண்ய விபோ த்ருண்ய:
தத்தாருஸம் கமபி சித்த விமோஹமாபு:

கண்ணனின் குழலில் இருந்து கிளம்பிய இன்னிசையின் ஸ்வரங்களால் உலகு அனைத்துமே மயங்கியது. ஏதோ சொப்பன லோகத்தில் சஞ்சரிப்பது போல் உணர்ந்தனர் அனைவருமே. இளம் மங்கையரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்கள் அனைவரும் விவரித்து உரைக்க முடியாத ஒரு பேரின்பத்தைப் பெற்றதாய் உணர்ந்தனர். அனைவரும் வனத்திற்கு வந்து கண்ணன் காத்திருக்கும் இடத்தில் கூடினார்கள்.

சந்த்ரகரஸ்யந்த லஸத்ஸுந்தர யமுநாதடாந்த வீதீக்ஷு!
கோபி ஜனோத்தரீயை ராபாதித ஸம்ஸ்தரே ந்யஷீதஸ் த்வம்!!

யமுனை நதிக்கரையே நிலவொளியால் அழகு மிகுந்து ஒரு சொர்க்கபூமியாகக் காணப் பட்டது.
கோபிகைகள் தங்கள் மேலாடைகளை விரிப்பாய் விரித்து அமரத் தாங்களும் அமர்ந்தீர்கள். இங்கே கோபிகளின் ஆடைகளைக் கண்ணன் களைகின்றானே என்ற ஒரு கேள்வி எழுகின்றது. ஆடை துறத்தல் என்பதின் உள் நோக்கம் இங்கே அனைத்தும் துறத்தல் என்று ஆகும். பொதுவாய் ஆடை இல்லாமல் யாரும் அவர்களைப் பார்க்க விரும்ப மாட்டார்கள் அல்லவா? ஆடை ஒரு கெளரவம், அந்தஸ்து தருகின்றது. ஆடை அகங்காரத்தையும் சேர்த்தே தருகின்றது. அத்தகையதொரு ஆடையானது இறைவனிடம் நம்மைச் சேரவிடாமல் நம் புத்தியை, மனதை மூடுகின்றது, மூடிக் கொள்கின்றது. அதன் வெளிப்புற அலங்காரங்களையும், இனிமையான பேச்சுக்களையும் கேட்டு மயங்கும் நாம் இறைவனிடம் சேருவதில்லை. நம் அகங்காரமே நாம் என எண்ணிக் கொண்டு அதிலேயே மூழ்கிப் போகின்றோம். ஆடை அனைத்தையும் துறத்தல் என்பது இங்கே வெட்கத்தை விட்டு இறைவனைச் சரணாகதி அடைவதைக் குறிக்கும் ஒன்று. ஆண்கள் இரு கைகளையும் மேலே தூக்கிக் கும்பிட்டாலும் பெண்கள் பொதுவாக அப்படி வணங்குவதில்லை. ஆனால்? இங்கேயோ? ஆடைகளைத் துறந்து நிர்வாணமாய் நிற்கும் கோபியர் ஆடையை வேண்டிக் கண்ணனிடம் தங்கள் கைகளை மேலே தூக்கிக்கொண்டு வணங்கி வேண்டுகின்றனர். இங்கே கோபியர் நாம் அனைவருமே. கோபர்கள், கோபியர் அனைவருமே இங்கே கோபியராய் உருவகம் செய்யப் பட்டுள்ளனர். கண்ணனின் அரசாட்சியில் கண்ணன் ஒருவனே ஆண்மகன். மற்றவர் அனைவரும் பெண்களே. இதையே மீராபாயும் தன்னைப் பெண் என்பதால் பார்க்க மறுக்கும் ஹரிதாஸரிடம் கூறுகின்றாள்.

ஆகவே நம் புத்தியை மயக்கும் அகங்காரம் என்னும் ஆடையைத் துறந்து கண்ணனைச் சரணம் என அடைந்தோமானால் அவன் நம்மைக் காத்து அருளுவான். மோட்சம் கொடுப்பான் என்பதே இதன் தாத்பரியம். மேலும் இதில் பின்னால் வரும் ஒரு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடாகவும் நாராயண பட்டத்திரி சொல்லுகின்றார். கெளரவ சபையில் அனைவர் முன்னாலும் அவமானப் படுத்தப் பட்ட திரெளபதிக்கு ஆடைகளை அளிக்க வேண்டும் அல்லவா? அதற்கு முன்னேற்பாடாகக் கண்ணன் இங்கே தன் அடியாரான கோபியரின் ஆடைகளைக் களைந்தான் என்றும் சொல்லுகின்றார். ஆகவே இதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டு படிக்கவேண்டும் அனைவரும் என வேண்டிக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

Saturday, May 23, 2009

நான் கடவுளைக் கண்டேன், ஒரு குழந்தை வடிவிலே!


நம்ம வாழ்க்கையில் அதுவும் உப்புச் சப்பற்ற வாழ்க்கையில் ஒரு குழந்தை நுழைந்தால் ஏற்படும் அதிசயங்களை என்னவெனச் சொல்லுவது? அன்றாட வேலைகளில் மாற்றம் ஏற்படுவதோடு மட்டுமில்லை. அதை அந்தக் குழந்தையின் வசதிக்கு ஏற்றாற்போல் நாமே மாத்திக்கிறோம். அதைப் பெரிசா எடுத்துக்கறதில்லை. அது சிரிச்சால் நாமும் சிரிக்கிறோம். அது அழுதால்?? நம் மனமும் அழுகின்றது. நம்ம வேலையைச் செய்ய அது அனுமதி கேட்டுட்டே செய்யறோம். அதில் நமக்கு எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் நம் சுயத்தை இழக்க மனப்பூர்வமாய்ச் சம்மதிக்கின்றோம். இதே எல்லார் கிட்டேயும் இப்படியா இருக்கோம்?

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
!" என்ற பாரதியின் வரிகளின் அர்த்தம் பாரதி எப்படி அனுபவிச்சிருப்பார்னு சொல்லுகின்றது. குழந்தையே ஓர் அற்புதம். அதுவும் பெண் குழந்தையின் அற்புதங்களைச் சொல்லி மாளாது. ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு அழகு.திடீர்னு சின்னக் குழந்தையாய் நடந்துக்கும், ஒரு சிநேகிதி போலப் பழகும், ஒரு சமயம் அதனிடம் தன்னை மீறி வெளிப்படும் தாய்மை உணர்வு. நீங்க பேசாமல் உட்கார்ந்திருந்தால் வந்து உங்களைச் சமாதானம் செய்து விளையாட வைப்பதும், நீங்க தும்மினால், "Bless You " என்று சொல்லுவதும், எல்லாத்திலேயும் மேலே நம்மைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதும். அப்பா! அதிலே ஏற்படும் ஆனந்தமே தனிதான். பெற்ற குழந்தைகள் பெயர் சொன்னால் கோபம் வருமே. ஆனால் இப்போ இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

கடும்புயலுக்குப் பின்னர் வெளிக்கிளம்பும் சூரியனைப் பார்த்தால் ஏற்படும் சந்தோஷ உணர்வை விட அதிகமாய் அந்தக் குழந்தை நம்மைப் பார்த்துச் சிரிக்கும் போது ஏற்படுகின்றது. வீட்டில் உள்ள சாமான்கள் எல்லாம் கண்டபடி வாரி இறைத்திருப்பதும் ஓர் அழகு. நாம் பலகாலம், சின்ன வயசிலே இருந்து ரொம்பப் பத்திரமாய் பொக்கிஷம் போல் வைச்சிருக்கும் டயரியை அது எடுத்துக் கிழிச்சால் கோபம் வரதில்லை. ஆனால் நமக்கு அது முக்கியம்னு யாரு சொல்லிக் கொடுத்திருப்பாங்க? தெரியலை. திரும்பக் கொடுத்துட்டு, "I am sorry, I didn't mean to" என்று சொல்லும்போது கண் தளும்புகிறது.

"குழலினிது, யாழினிது" என்று சொன்ன வள்ளுவனும் இதைக் காட்டிலும் பெரிசாய் அனுபவம் பெற்றே சொல்லி இருப்பான். எத்தனை இனிமையான சங்கீதமாய் இருந்தாலும் இதுக்குப் பின்னர் தான். இந்தக் குரல் நம்மை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்கின்றது. துன்பத்தில் இருந்து ஆனந்தத்துக்கு அழைத்துச் செல்கின்றது. உங்கள் உடல் துன்பம், மனக் கஷ்டம் என்பதையே மறக்கச் செய்கின்றது. எல்லாத்துக்கும் மேலே வாழ்க்கையை உயிர்ப்புடனும் வைக்கின்றது. உடல், உள்ளம் இரண்டும் புதிய ஜீவசக்தியால் நிரம்பி உள்ளது. குழந்தையின் முகத்திலே கோடித் துன்பம் போகும் என என் அம்மா சொல்லுவா. அது எத்தனை உண்மை! இப்போ நாங்க எல்லாருமே பேசறது மழலை தான். திரவமான ஆகாரங்கள் எதாய் இருந்தாலும், அது இப்போ எங்களுக்கு, "கமகம்" தான். பால், காஃபி, டீ, குடிக்கும் தண்ணீர் எல்லாமும். அதே போல் சாப்பிடும் திடப் பொருள் எல்லாம், "மம்மம்" தான். தோசை, இட்டிலி, சப்பாத்தி, சாதம், பொங்கல் எல்லாமுமே. வேறே பேரே கிடையாது இன்னும் கொஞ்ச நாட்களுக்கு. அப்புறமும் நாங்க இரண்டு பேர் மட்டுமே கொஞ்ச நாட்கள் இதைச் சொல்லிட்டு இருப்போம். :(((((((( என்றாலும் மறக்காது.

"அவ்வுலகம் சென்று வந்தேன்
அமுதம் குடித்து வந்தேன்,
பொன்னுலகம் போவதற்குப்
புது உடல் வாங்கி வந்தேன்"
என்பது இங்கே சரியாய் இருக்குமோ? ஆனால் எல்லாத்திலேயும் ஒண்ணே ஒண்ணுதான் நம்மாலே முடியலை. அவள் என்ன கேட்டாலும் வாங்கித் தர ஆசைதான். உலகத்தின் உச்சியில் இருக்கிறாப்போல் இருக்கு. யானை கேட்டாலும் வாங்கிக் கொடுத்துடலாம். ஆனால் அந்த யானையைப் பானைக்குள் அடைனு சொல்றது தான் முடியலை! :)))))))))))) கிருஷ்ணதேவராயரும், தெனாலி ராமனும் பட்ட கஷ்டம் எப்படி இருக்கும்னு புரியுது. உங்களுக்கு யாருக்கானும் தெரிஞ்சால் சொல்லுங்க. :)))))))))))))

Friday, May 22, 2009

அனைவருக்கும் நன்றி.

எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றி. கண்ணன் வருவான் தொடர் இன்னும் இரு நாட்களில் தொடர எண்ணம் இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே. இவ்வளவு நீண்ட நாட்கள் எழுத முடியாமல் போனதில்லை. :( எனினும் இதுவும் ஒரு அனுபவம், இதுவும் கடந்து போகும். மீண்டும் அனைவருக்கும் நன்றி.

Friday, May 15, 2009

இறைவன் கொடுத்த வரம்!

ஒவ்வொரு மூச்சும் இறைவன் கொடுத்த வரம் தான். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இதை ஒவ்வொரு கணமும் உணர்கின்றேன். இந்த மாதிரி அட்டாக் வரும் ஒவ்வொரு முறையும் அதுவா, நானா என்றே இருக்கிறது. ஆனாலும் இறைவன் அருளால் சமாளித்துக் கொண்டு வருகிறேன். என்றாலும் இம்முறை ரொம்பக் கஷ்டமாய் இருக்கு. வெயில் காரணம்னு நினைக்கிறேன். இது வரையிலும் எழுதி வைத்தவைகளை ஷெட்யூல் பண்ணி வச்சுப் போட்டாச்சு. இனிமேல் எழுதணும். அதுக்கு இப்போ தெம்பு இல்லை. வழக்கமான வேலைகள் எல்லாமே மாறிப்போயிருக்கு. மறுபடி தினசரி நடைமுறைக்கு வர எத்தனை நாளாகுமோ தெரியாது. தாங்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுக்கும் இறைவனுக்கும் நன்றி. தொலைபேசியில், தனி மடலில், பின்னூட்டங்களில் என நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.

Wednesday, May 13, 2009

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்!



---------- Forwarded message ----------
From: revathi narasimhan <bounces@list.moveon.org>
Date: Tue, May 12, 2009 at 1:35 PM
Subject: revathi narasimhan sent you a video
To: Geetha Sambasivam <sivamgss@gmail.com>


Dear Geetha,

Your friend revathi narasimhan sent you the following video from CNNBC: "Geetha Sambasivam Announced as 2009 Mother of the Year."

Watch it here:

http://news.cnnbcvideo.com/?nid=T9_JhLH71S0jgjv.04vMMjE0NDM5OTQx&referred_by=16855196-Jx_Khmx

** This message certified virus-free by ViruMail 2.1 **


கொஞ்சம் ஓவராய் இருக்கோ?? இருக்குனு அம்பி சொல்றார். பங்களூர் புகையிலே இங்கே எனக்கு இன்னும் வீசிங் ஜாஸ்தியாகுது. எல்லாரும் பார்த்து எஞ்சாய் பண்ணுங்கப்பா! திவா தெரியலைனு சொல்றார். எக்ஸ்ப்ளோரரிலே நல்லாவே தெரியுது. பிரவுசர் நெருப்பு நரியும், லினக்ஸ் இயங்குதளமும் இருந்தால் தெரியாதோனு நினைக்கிறேன். ஆகவே உஜாலாவுக்கு மாறிட்டுப் பார்த்துத் தாராளமா உங்க பின்னூட்டம், முன்னூட்டம், பாராட்டு, வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். கொஞ்சம் உடம்பு சரியானாப்போல ஒரு எண்ணம். நன்றி, வல்லி சிம்ஹனுக்கு!

Monday, May 11, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்.!

ராதை விருந்தாவனம் சென்று சரியாக ஒரு வருஷம் ஆன பின்னர் பருவகாலம் மாறி வசந்தம் வந்தது. ராதையின் வாழ்க்கையிலும் வசந்தத்தின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. கோகுலத்தில் இருந்து நந்தனின் ஆட்கள் வந்து, நந்தன் தன் மொத்த யாதவக் குடியிருப்பையே விருந்தாவனத்துக்கு மாற்றப் போவதாயும், அங்கே ஓநாய்களின் தொந்திரவு அதிகமாய் இருப்பதாயும் தெரிவித்தனர். ஆஹா, ராதைக்கு விருந்தாவனமே அழகாய்த் தோற்றமளித்தது. கடைசியில் எது நடக்குமா என நினைத்தாளோ அது நடந்தேவிட்டது. கானா வருகின்றான் இங்கே, தாற்காலிகமாய் இல்லை, நிரந்தரமாய்த் தங்க. அவன் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி விட்டான். ராதையின் கண்கள் முன்னே கானாவின் குறும்பு விழிகள் நடனமாடின. விருந்தாவனத்தின் மொத்த மக்களும் சந்தோஷம் அடைந்தனர். அனைவரும் வரப் போகும் கோகுலத்து மக்களுக்காகத் தங்க இடம் ஏற்படுத்த வேண்டி, செடி, கொடிகளை வெட்டியும், மரங்களை அப்புறப் படுத்தியும், குடியிருப்புகள் ஏற்படுத்த ஆரம்பித்தனர். விருந்தாவனத்துப் பெண்களோ அனைவரையும் வரவேற்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர். ராதையோ ஆனந்தமிகுதியோடு, தனக்குத் தெரிந்த அனைத்துச் சிறுமிகளிடமும் , சிறுவர்களிடமும், கோகுலத்தைப் பற்றியும், முக்கியமாய் அவள் அருமை நண்பன் கானா பற்றியும் கூற ஆரம்பித்தாள். கண்ணன் பூதனையை எவ்வாறு வெற்றி கொண்டான் என்பது பற்றியும் திரிணாவிரதன் பற்றியும், இரு மருதமரங்களை எப்படிச் சாய்த்தான் என்பது பற்றியும் பேசிப் பேசி அலுக்கவில்லை ராதைக்கு.

கடைசியில் அந்த நாள் இனிய நாள் வந்தேவிட்டது. குழந்தையைப் போல் குதூகலித்துக் கொண்டிருந்த ராதை தன் தந்தை விருஷபானுவுடன் கோகுலத்து மக்கள் அனைவரையும் வரவேற்கச் சென்றாள். முதலில் கோகுலத்துச் சிறுவர்களையும், சிறுமிகளையும், ஒரு தலைவனைப் போல் அழைத்து வருவது யார்? ஆஹா, கானா, கானா கானாவே தான். இப்போது அவனைப் பார்த்தால் எவ்வளவு பொறுப்புள்ள தலைவனாய்த் தெரிகின்றான். கையில் சின்னத் தடியை வைத்துக் கொண்டு, இடுப்பில் புல்லாங்குழலைச் சொருகிக் கொண்டு, பொன்னிற நூலால் வேலைப்பாடு செய்யப் பட்ட துணியைத் தலைப்பாகையாய்க் கட்டிக் கொண்டு, அதில் மயில் இறகுகளைச் சொருகிக் கொண்டு, அந்தக் குழந்தைகளை அவன் வழிநடத்திய விதமும், அவன் சொல்லுக்கு மறுசொல் சொல்லாமல் அனைவரும் கீழ்ப்படிந்த விதமும். ராதைக்குப் பெருமையில் நெஞ்சம் பொங்கியது. மாடு, கன்றுகள், கோகுலத்துப் பெண்கள், அவர்கள் தலையில் சுமந்துவந்த பானைகள், பாத்திரங்கள், ஆண்கள் சுமந்து வந்த ஆயுதங்கள், வில், அம்புகள் என அனைத்தும் இருந்தாலும் ராதையின் மனமும், கண்களும் , உடலும் ஒன்றிசைந்து ஒரே ஒருவரைத் தான் பார்த்தன. மற்ற எவரும் அவள் மூளையில் பதிந்து மனதில் எட்டவில்லை. அவள் மனதில் அத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த அன்பானது நதியில் கையால் தோண்டியதும் கிளம்பும் நீர் ஊற்றுப் போல் பொங்கிக் கிளம்பியது. அதன் பிரவாஹத்தை அடக்க அவளால் முடியவில்லை. தன்னை மறந்தாள், தன் நிலை கெட்டாள். ஓடோடிச் சென்று, “கானா, என் அருமைக் கானா, கானா, “ என்று அழைத்தவண்ணமே கண்ணனை அப்படியே தூக்கினாள் ராதை. கண்ணனுக்கும் சந்தோஷம் தான். ராதையைத் தட்டிக் கொடுத்தான். கோகுலத்து மற்றப் பிள்ளைகளும் அவர்களின் சந்தோஷத்தில் பங்கு கொண்டனர்.

அன்று யசோதையும், ரோகிணியும், விருஷபானுவின் வீட்டிலேயே படுத்துக் கொண்டனர். அவர்களுடன் கண்ணனும், பலராமனும் படுத்து உறங்கினர். அடுத்த அறையில் தன் மாற்றாந்தாய்களுடன் படுத்துக் கொண்ட ராதைக்குத் தூக்கமே வரவில்லை. பொழுது எப்போது விடியும் எனக் காத்திருந்தாள். விடிந்ததும் யசோதையும், ரோகிணியும் மாடுகளையும் கன்றுகளையும் காணச் சென்றனர். அவர்களோடு பலராமனும் சென்றுவிட்டான். ராதை கண்ணன் உறங்குமிடம் சென்று அவனை மெதுவாய் எழுப்பினாள். கண்ணன் ராதையைக் கண்டு சந்தோஷமடைந்தாலும் பலராமன் அவனை விட்டுச் சென்றது குறித்து வருந்தினான். சுதாமாவுடனும், உத்தவனுடனும் தான் யமுனைக்குச் சென்று குளிக்க உத்தேசித்திருந்ததாயும், அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனரே எனவும் கண்ணன் வருந்த ராதையின் முகம் சுண்டிப் போனது. உடனேயே கண்ணன் உணர்ந்தான், ராதையின் மனம் புண்பட்டதை. அவளைச் சமாதானம் செய்ய வேண்டி, “எனக்கு இந்த யமுனையில் எங்கே இருந்து குளிப்பது எனப் புரியவில்லை” என்று சொல்ல, ராதை மீண்டு வந்த உற்சாகத்துடன், தனக்குத் தெரிந்த ஒரு இடத்தைக் காட்டினாள். கோகுலத்துப் பெண்களைப் போல் இல்லாமல் ராதை சற்றே மாறுபட்டு இருப்பதையும் கண்ணன் உணர்ந்தான். ராதை பர்சானாவில் கிராமத்தின் கண்மணியாக வளர்ந்திருந்தாள். அவள் சொல்லே அங்கே வேதவாக்கு. அனைவரும் அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டே நடந்தனர். மெல்ல மெல்ல இங்கே விருந்தாவனத்திலேயும் அதே மாதிரி அனைவரும் ராதையின் ஆளுகைக்கு உட்பட ஆரம்பித்தனர்.

யமுனைக்கரையில் அனைத்து நண்பர்களோடும் நீந்தியும், முழுகியும், நீர் விளையாட்டு விளையாடியும் குளித்து மகிழ்ந்த கண்ணன் அவ்வப்போது தன் புல்லாங்குழலை எடுத்து இனிய கீதங்களும் இசைப்பான்.

நாவலம்பெரியதீவினில்வாழும்
நங்கைமீர்காள். இதுஓரற்புதம்கேளீர்
தூவலம்புரியுடையதிருமால்
தூயவாயில்குழலோசைவழியே
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும்
காவலும்கடந்துகயிறுமாலையாகி
வந்துகவிழ்ந்துநின்றனரே. (2) 1.

276:
இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
இருகைகூடப்புருவம்நெரிந்தேற
குடவயிறுபடவாய்கடைகூடக்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
மடமயில்களொடுமான்பிணைபோலே
மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
ஒல்கியோடரிக்கணோடநின்றனரே. 2.

கிருஷ்ணனையும், பலராமனையும் பிரிக்க முடியவில்லை. இருவரும் தங்களை அலங்கரித்துக் கொள்ளுவதும், காணவே ஓர் அற்புதமான அழகாய் இருந்தது. நீல நிறக் கிருஷ்ணன் பலராமனின் உடல் நிறக் கலரான மஞ்சள் பீதாம்பரத்தாலும், பலராமனோ கிருஷ்ணனின் உடல் நிறமான நீல நிறப் பீதாம்பரத்தாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள். கிருஷ்ணனே அனைவருக்கும் தலைமை வகித்தான் எனினும், பலராமனையே அவன் முன்னிறுத்தி வந்தான். அவர்களின் விளையாட்டில் முதலில் பெண்கள் ஒரு பார்வையாளர்களாகவே இருப்பார்கள். பின்னர் மெல்ல மெல்ல அனைவரும் பங்கெடுக்க ஆரம்பிப்பார்கள். கிருஷ்ணனின் புல்லாங்குழலின் கீதம் கேட்டதுமே எங்கிருந்தோ அனைவரும் வந்து கண்ணனைச் சூழ்ந்து கொள்வார்கள்.

சுற்றிநின்றுஆயர்தழைகளிடச்
சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின்
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக்
கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. 5.

ராதை எப்போதும் தான் கண்ணன் அருகேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவாள். நடுநாயகமாய் ராதையும், கிருஷ்ணனும் இருக்க மற்றவர் சுற்றி நின்று கை கோர்த்து ஆட, பாடலும், இசையுமாய்ப் பொழுது இனிமையாய்க் கழியும். கண்ணனின் புல்லாங்குழலோ ஒரு சமயம் கோபியரின் ஆட்டத்திற்கு ஏற்ப வேகமாயும், சில சமயம் கொஞ்சம் மெதுவாயும் மாறி மாறி இசைக்கும். அந்தத் தாளத்திற்கு ஏற்ப அனைவரும் நடனம் ஆட, நந்தனும், யசோதையும் அதைக் கண்டு மகிழ்ந்து ஆனந்தமாய்ச் சிரிக்க நாட்கள் சென்றன.
கண்ணன் இப்போது முன்னை மாதிரி வெண்ணெய் திருடவில்லை என்றாலும் அக்கம்பக்கத்து கோபிகளைக் காண அவன் சென்றால் கோபியர்கள் அவனுக்கு தாராளமாய் வெண்ணெயைக் கொடுத்து உபசரித்தனர். அவனுடைய சிறுவயதுக் குறும்புகளைச் சொல்லி நினைவு கூர்ந்தனர்.

Thursday, May 07, 2009

ரொம்ப முடியலை

பதினைந்து நாட்களாய் சமாளிச்சுப் பார்த்தாச்சு. இன்னிக்கு ரொம்ப முடியலை. மருத்துவர் கிட்டே காட்டிட்டுத் தான் இருக்கேன். என்றாலும் ரொம்பவே மூச்சுவிட முடியாமல் கஷ்டமாய் இருக்கு. கொஞ்ச நாட்கள் கழிச்சு கண்ணன் வந்து கதை சொல்லுவான்.

ஒரு சிறிய பிரார்த்தனை!

விபத்தில் அடிபட்டு வலக் கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் திரு மோகன்ராஜ் அவர்கள் சீக்கிரம் குணமடையப் பிரார்த்திக்கிறேன். எல்லாத்தையும் விட அவர் ரொம்ப மனவேதனைப் படுவது குழந்தையைத் தூக்க முடியலையே என்றே. சீக்கிரம் உடல் நலமடைந்து குழந்தையோடு சந்தோஷமாய் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

இப்போது கண்ணன் கோகுலத்தில் இருந்து விருந்தாவனம் சென்று ராதையைப் பார்க்கப் போகின்றான். ராசலீலைகள் நடக்கப் போகின்றன. ஆனால் அதுக்கு முன்னாலே நாம ஒரு எட்டுப் போய் ராதையைப் பார்த்துடுவோமா? கண்ணன் தான் மாடு, கன்றுகளை ஓட்டிக் கொண்டும், தன் சிநேகிதர்களோடும், குடும்பத்து மக்களோடும் நடந்து வருகின்றான். நமக்கு என்ன? மனத்தால் ஓடிப் போய்ப் பார்க்கவேண்டியது தானே?? இதோ! கண்ணனை கோகுலத்தில் விட்டுச் செல்லும் ராதை. கண்ணனின் புல்லாங்குழலின் இனிமையான கீதம் அவளைத் தொடர்ந்து வருகின்றது. மாட்டு வண்டியில் அண்ணனோடு விருந்தாவனம் நோக்கி அவள் உடல் தான் சென்று கொண்டிருக்கின்றது. மனமோ?? கோகுலத்திலேயே கண்ணனுடன் தங்கிவிட்டது. தன் உடலில் இருந்து ஏதோ ஒன்று பிரிந்து சென்றுவிட்டது போல அவளுக்கும் தான் ஏதோ சூன்யமாகிவிட்டாற்போன்ற உணர்வு. இந்த உணர்வை என்னவென்று சொல்லுவது? அவளுக்குப் புரியவில்லை. எத்தனை அருமையான பிள்ளை? அற்புதமான நட்பு! மாடுகள் ஒரே சீராகச் சென்று கொண்டிருந்தன. வண்டியில் அமர்ந்து கொண்டு மாடுகளின் கழுத்துச் சதங்கைகளின் ஒலியைக் கேட்டவண்ணம் ராதை அமர்ந்திருந்தாள் தன் சகோதரனுடன். வண்டி முன்னோக்கிச் செல்லும் அதே வேளையில் ராதையின் மனம் பின்னோக்கிச் சென்றது.

ராதை தன் ஆறாம் வயதில் தாயை இழந்தாள். அவள் தந்தைக்கு வேறு மனைவியர் உண்டு. ஆகவே அவர் ராதையின் தாய்வழிப்பாட்டியிடம் ராதையை விட்டுவிட்டு பர்சானாவில் இருந்து விருந்தாவனம் சென்றார். ராதை பர்சானாவில் தன் பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்தாள். அந்தக் கிராமத்துக்கே ஒரு ரத்தினம் போல் திகழ்ந்தாள். ராதையை விரும்பாதவர் யாருமே இல்லை. ஆனால் அவள் சகோதரர்களுக்கோ விருந்தாவனம் ஒரு சொர்க்கமாய்த் திகழ்ந்து வந்தது. ராதையின் தந்தை விருஷபானு ராதையை அந்தக் கால வழக்கப்படி ஐயன் என்னும் தன் நண்பரின் மகனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாய் நிச்சயம் செய்து கொடுத்திருந்தான். ஐயன் கம்சனின் படை வீரன்.

கம்சன் இப்போது அஸ்வமேத யாகக் குதிரையோடு போயிருப்பதால் ஐயனும் உடன் சென்றிருக்கின்றான். ஐயனுக்கு இந்த விருந்தாவனமோ, கோகுலமோ அல்லது மாடு, கன்றுகளோ, காடுகளோ பிடிக்காது. நகரவாசி அவன். நகரத்தில் இருக்கவே ஆசைப் பட்டான். ராதைக்குத் திருமணம் நிச்சயம் செய்த பின்னரும் அவளைத் தாய்வழிப் பாட்டி வீட்டில் வைத்திருக்க விரும்பாத விருஷபானு தன் பிள்ளைகளில் ஒருத்தனை அனுப்பி ராதையை விருந்தாவனத்துக்கு அழைத்து வரச் செய்தான். அப்போது ராதையின் பாட்டி, அவள் அம்மா ராதை சிறுபெண்ணாக இருந்தபோது கோகுலத்து கோபநாத் மஹாதேவருக்கு ராதைக்காக நேர்ந்து கொண்டதாகவும், தற்சமயம் அவள் தாயும் இல்லாதபடியால் அந்தப் பிரார்த்தனையை ராதையே செய்யவேண்டும் என்று சொன்னாள். ஆகவே ராதையின் சகோதரன் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டியே அவளை கோகுலத்துக்கு அழைத்து வந்தான். வந்த இடத்தில் இது என்ன?? அதிசயமா? அற்புதமா? ஒவ்வொரு ஜென்மத்திலும் இந்தக் கண்ணனைத் தான் கண்டது போலும், இதே வார்த்தைகளை அவனுடன் பேசிக் கொண்டிருந்தது போலவும் ராதைக்குத் தோன்றியது. கண்ணை மூடினால் கண்ணன் உரல் மேல் அமர்ந்திருக்கும் கோலம், கண்ணைத் திறந்தாலோ அவன் புல்லாங்குழலின் இனிய கீதம் கேட்கின்றது. இதோ! அவன் கண்களின் குறும்புத் தனம்! குறும்பு சொட்டும் கண்களோடு, பரிகாசம் செய்யும் கண்ணன். கண்ணா, கண்ணா! ராதை தனக்குள்ளே மெதுவாய்ச் சொல்லிக் கொண்டாள். “கானா, என் கானா!” இன்னமும் அவன் இசைத்த புல்லாங்குழலின் இனிய கீதம் காதுகளில் எதிரொலிக்கின்றதே.

"எங்கிருந்து வருகுவதோ?-ஒலி
யாவர் செய்குவதோ?- அடி தோழி!

குன்றினின்றும் வருகுவதோ? -மரக்
கொம்பினின்றும் வருகுவதோ? -வெளி
மன்றினின்று வருகுவதோ - எந்தன்
மதி மருண்டிடச் செய்குதடி! -இஃது (எங்கிருந்து)

அலையொலித்திடும் தெய்வ - யமுனை
யாற்றினின்றும் ஒலிப்பதுவோ - அன்றி
இலையொலிக்கும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்ன முதைப் போல்? (எங்கிருந்து)

வண்டிகள் அசைந்து அசைந்து செல்வது, ராதைக்குக் கண்ணன் புல்லாங்குழலோடு அசைந்து அசைந்து ஆடுவது போல் தோன்றியது. மாடுகளின் மணிகள் அசையும் ஒலி கண்ணனின் குரல் ஒலிபோல் கேட்டது அவளுக்கு. மெல்ல மெல்ல விருந்தாவனம் வந்து சேர்ந்தார்கள் அவர்கள். விருந்தாவனம் உண்மையாகவே ஒரு வனம் தான். இன்னமும் மனிதர்கள் நடமாட்டம் படாத அற்புத இடம். முதன் முதல் ராதையின் குடும்பமே அங்கே வசிக்கத் தொடங்கி இருந்தது போலும். மண்ணின் வளமும், மரங்களின் நிழலும், கொடிகள் மரங்களைத் தழுவிப் படர்ந்திருந்த விதமும், ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் பூக்கள் சொரிந்து பூக்கோலம் போட்டிருக்கும் அழகும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ராதையின் தாபம் அதிகம் ஆயிற்று. பூமித் தாய் மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்து தன் சந்தோஷத்தை இவ்விதம் வெளிக்காட்டி இருப்பதாய் ராதைக்குத் தோன்றியது. ஆஹா, கானா மட்டும் இப்போது இங்கே இருந்தால்???

பூமியும் வானமும் தங்கள் பூரண செளந்தரியத்தைப் பெற்று விளங்கின. மனதிற்கு இசைந்த மணாளனோடு திருமணத்திற்குத் தயாராய் அலங்கரித்துக் கொண்டிருக்கும் இளம்பெண்ணைப் போல் பூமி விளங்கிற்று. அதைக் கண்ட யமுனை கூட சந்தோஷத்துடன் ஆர்ப்பரிப்பது போல் தோன்றியது ராதைக்கு. அவ்வளவு வேகம் அங்கே யமுனையிடம். யமுனை மிக மிக வேகமாயும், சந்தோஷமாயும் அங்கே ஓடிக் கொண்டிருந்தாள். அவள் கரைகளின் இருபக்கமும் நெருங்கி வளர்ந்திருந்த அடர்ந்த பெரிய மரங்களும், அவற்றின் நிழலில் படுத்து அசை போடும் மாடுகளும், இளம்பெண்கள் மரங்களில் கட்டித் தொங்க விட்டிருந்த சிற்றூஞ்சல்களும் அந்த இடத்தையே சொர்க்கபுரியாகச் செய்து கொண்டிருந்தது. வீட்டிற்குச் சென்ற ராதை தன் மாற்றாந்தாய்களின் மூலம் ஐயன் கம்சனுடன் சென்றிருப்பதையும் திருமணம் ஐயன் திரும்பியதும் நடக்கும் எனவும் தெரிந்து கொண்டாள். ஆனால் அவளுக்கு இவற்றில் எல்லாம் மனம் போகவே இல்லை. ஐயனுக்கு அவள் மனதில் இடமே இல்லை. அவள் உலகமே வேறு. அங்கே அவள் “கானா” ஒருவனுக்குத் தான் இடம். வேறு யாருக்கும் இல்லை. கானா, கானா, நீ விருந்தாவனம் வருவேன் என்று எனக்குச் சத்தியம் செய்து கொடுத்தாய் அல்லவா? வருவாயா? கானா, உன்னை ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நாளும், இரவும், பகலும், எதிர்பார்க்கிறேனடா. ராதையின் மனதில் கானா வந்துவிடுவான் என்ற நிச்சயம், நம்பிக்கை. காத்திருந்தாள் கானாவுக்காக.

Wednesday, May 06, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

தேவகியோ அக்ரூரரைக் கேட்டுத் தன் அருமை மகனின் லீலைகளை அறிந்து கொள்ள ஆரம்பித்தாள். அக்ரூரரும், அவளிடம், “தேவகி கிருஷ்ணன் அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்யும் வண்ணமே வளர்ந்து வருகின்றான். உடல் ஆரோக்கியமாயும், சுறுசுறுப்பாயும், அதே சமயம் மிகுந்த புத்திசாலியாகவும் ஒரு தரம் கேட்டால் புரிந்து கொள்பவனாயும் இருக்கின்றான். அவன் ஏதோ தந்திரம் செய்வதைப் போல் தெரியும், ஆனால் அந்தத் தந்திரங்கள் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடுகின்றது. கேள் தேவகி, சரியாக ஒரு மாதம் முன்னால் தான் நான் சொன்னேனே, ஓநாய்களின் தொந்திரவு ஆரம்பித்தது. உடனேயே நந்தன் எனக்குத் தகவல் அனுப்பினான். நாங்கள் ஒன்று கூடி முடிவெடுத்தோம் அனைவரும் கோகுலத்தைக் காலி செய்து கொண்டு விருந்தாவனம் செல்ல வேண்டும் என. “

“ஆஹா, என் கிருஷ்ணன், அவனுக்கு ஒன்றும் ஏற்படவில்லையே? அவன் என்ன செய்தான் அப்போது?” தேவகி கேட்டாள்.

“ஆஹா, உன் மகன் அல்லவோ அவன் தேவகி? அவனைப் போல் புத்திசாலி யார்? அவனே தலைமை தாங்கி கோகுலத்துச் சிறுவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து விருந்தாவனத்துக்குக் கூட்டிச் சென்றான். அதே சமயம் தனக்கு மூத்தவன் ஆன பலராமனையும் ஒதுக்கவில்லை. எந்தக் காரியம் செய்தாலும் அருகில் பலராமன் இருக்குமாறு பார்த்துக் கொள்வான். “

நீங்கள் பார்த்தீர்களா அண்ணா என் மகனை? விருந்தாவனம் செல்லும்போது அவன் சந்தோஷமாய்ச் சென்றானா?

“தேவகி, விருந்தாவனம் போகும் வழியில் மதுரா அருகே உள்ள வெட்ட வெளியில் அவர்கள் தங்க நேர்ந்தது. அப்போது நான் சென்று பார்த்தேன். அவன் தான் தலைமை தாங்குகின்றான் அனைவருக்கும் என்றாலும், அவன் பலராமனையே முன்னிறுத்தி விடுகின்றான். வண்டியில் உட்கார்ந்து ஒரு சிறுவன் போல் அவன் செல்லவில்லை. கையில் ஒரு தடியைப் பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாத்த வண்ணம் நடந்தே அவன் சென்ற கோலம் இருக்கிறதே!”

அண்ணா, அண்ணா, அவன் எப்படி இருக்கின்றான்? நல்ல உயரமாய் இருக்கின்றானா? கண்கள் எப்படி உள்ளன? மூக்கு யார் மாதிரி இருக்கின்றது? சிரிக்கும்போது எப்படி இருக்கின்றான்? எவ்வாறு அலங்கரித்துக் கொள்கின்றான்? ஒரு அரசிளங்குமரனைப் போலவா? அல்லது ஒரு இடையனைப் போலவா?

“ஓஓஓ தேவகி, ஏது, ஏது, உன் கேள்விகளுக்கு முடிவே இல்லையா? உன் மகன் அனைவராலும் வியக்கத் தக்க பிரகாசம் பொருந்திய நிறத்தோடும், அழகான முகத்தோடும், உயரமாகவும், அதற்கேற்ற பருமனோடும் இருக்கின்றான். உடலில் தேவையான அளவே சதை இருக்கின்றது. கையில் ஒரு கைத்தடியை வைத்துக் கொண்டு தலையில் பொன்னிறத் துணியில் ஆன முண்டாசு கட்டிக் கொண்டு, அதில் மயிலிறகைச் சூடிக் கொண்டு, அவனின் அழகிய சிறு மூக்கில் குத்தப் பட்டிருக்கும் மூக்குத்தியானது லேசாக ஊஞ்சல் ஆடுவது போல் ஆடிக் கொண்டு, ஆஹா, இப்போது அவன் இடையன் போலத் தான் இருக்கின்றான். ஆனால் அவனை யாரும் அப்படிச் சொல்ல முடியாது. நந்தன் அவனைப் பார்த்துப் பார்த்துப் பூரித்து மகிழ்ந்து போகின்றான். யசோதையின் நிலையைச் சொல்லவே வேண்டாம்.”

ம்ம்ம்ம்ம்” பெருமூச்சு எழுந்தது தேவகிக்கு. “பலராமன்” அடுத்து அவள் கேள்வி. “ஓஓஓ அவன் நல்ல உயரம், கட்டுமஸ்தான உடல், பார்க்கவும் நன்றாயிருக்கின்றான். சகோதரர் இருவருக்கும் ஒருவர் மேல் மற்றவருக்கு எவ்வளவு பாசம் தெரியுமா தேவகி? ஆனால் கிருஷ்ணன் தான் அனைவரின் கண்ணின் கருமணி போல் விளங்குகின்றான். என்றாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் பலராமனை அவன் முன்னிறுத்தும் அழகு இருக்கின்றதே. அவன் அதை வெளிக்காட்டும் விதத்தில் யாருக்குமே கிருஷ்ணன் தான் கண்ணின் மணி என்ற எண்ணம் தோன்றாவண்ணம் மிக அழகாயும், நேர்த்தியாயும் பலராமனுக்கு மரியாதை செய்வான். ஆனால் அனைவருமே உணர்ந்துள்ளனர், பலராமனும் கூட, அனைவருக்கும் கிருஷ்ணன் தான் உயிர், ஆன்மா, ஜீவன் என. ஆனால் உன் மகன் கிருஷ்ணன் இருக்கின்றானே, தான் பெறும் இந்த அன்பைப் பலமடங்கு அதிகமாய்க் கோகுலத்து மக்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றான். அது அவன் ஒருவனாலேயே முடியும்.”

தேவகியின் நெஞ்சம் விம்மித் தணிந்தது. “கடவுளே, கடவுளே, நான் எப்போது என் மகனைப் பார்ப்பேனோ? அவன் என்னை “அம்மா” என அழைக்கும் நாள் என்றோ” என ஒரு கணம் புலம்பினாள். பின்னர் மீண்டும் அக்ரூரரைப் பார்த்து யாதவர்கள் அனைவருக்கும் விருந்தாவனத்தில் இடம் இருக்கின்றதா, வசதியாய் உள்ளனரா என விசாரித்தாள். அக்ரூரரும் காட்டைக் கொஞ்சம் அழித்துவிட்டு வீடுகள் கட்டிக் கொள்கின்றனர் என்றும் விருஷ்ணிகள் உதவி செய்வதாயும் சொன்னார். அப்போது வசுதேவர், கம்சனைப் பற்றிக் கேட்க, அக்ரூரர் சொல்லுகின்றார்: கம்சனின் மாமனார் ஆன ஜராசந்தன் அஸ்வமேத யாகம் செய்யப் போவதாயும், யாகக் குதிரையை ஓட்டிக் கொண்டு கம்சன் கலிங்கம் சென்றிருக்கின்றான் எனவும் சொல்லுகின்றார்.

ம்ம்ம்ம்., நாமும் மதுரா செல்லும் நாள் நெருங்குகின்றது என்ற வசுதேவர் அதன் பின்னர் குந்தியுடன் ஹஸ்தினாபுரம் செல்லுகின்றார். அங்கே பீஷ்மரின் ஏற்பாடுகளால் பாண்டுவின் மகன்கள் அரசிளங்குமரர்களுக்கு உரிய மரியாதையுடன் வரவேற்கப் பட்டனர். பீஷ்மர் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டு பாண்டுவை நினைத்துக் கண்ணீர் விட்டுக் குழந்தைகளை ஆசீர்வதித்தார். திருதராஷ்டிரனும், குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கண்ணீர் விட்டான். அவனுடைய குருட்டுக் கண்களில் இருந்து வந்த கண்ணீரைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப் பட்டனர். ஆனால் திருதராஷ்டிரன் மனதுக்குள்ளே தன் அருமைத் தம்பியான பாண்டுவிடம் கொஞ்சம் பாசம் இருந்தது. அதை நினைத்தே அவன் அழுதான். சத்தியவதி, தன் பேரப் பிள்ளைகளைப் பார்த்து மகிழ்ந்ததோடு அல்லாமல், ராஜா ஷாந்தனுவுக்கு வம்சம் குலையாமல் இருக்கத் தான் கொடுத்த சத்தியம் காப்பாற்றப் படும் என்றும் நிச்சயம் அடைந்தாள். அவள் மனதில் நிம்மதி பரவியது. குந்திக்கு நிம்மதி போயிற்று.

Tuesday, May 05, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

அவ்வளவில் அந்தச் சந்திப்பு முடிந்து குந்தி தன் ஓய்விடத்திற்குக் குழந்தைகளுடன் செல்ல வசுதேவரும், தேவகியும் வியாசருடன் தனித்து விடப்பட்டனர். வியாசர் அவர்களிடம் அக்ரூரர் வந்து வியாசரைச் சந்தித்ததாகச் சொல்லுகின்றார். இன்னமும் வசுதேவரைச் சந்திக்கக் காத்துக் கொண்டிருப்பதாயும் சொல்கின்றார். உடனே அக்ரூரருக்குச் சொல்லி அனுப்ப அவரும் வந்து வியாசரை நமஸ்கரிக்கின்றார். வசுதேவரைக் கட்டி அணைத்து நலம் விசாரித்து தேவகியையும் நலம் விசாரிக்கின்றார்.

பின்னர் அக்ரூரர் கம்சன் எவ்வாறு ஒவ்வொருமுறையும் கிருஷ்ணனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகின்றான் என்பதையும் எப்படியோ ஒவ்வொரு முறையும் கிருஷ்ணன் தப்புவதையும் சொல்லி விவரிக்கின்றார். மேலும் கிருஷ்ணன் இப்போது நன்கு வளர்ந்து பெரிய பையனாகி இருப்பதையும் அனைவரும் அவன் ஒரு சொல்லுக்குக் கட்டுப் படுவதையும் எவ்வாறு அவனிடம் அனைவரும் அன்போடு இருக்கின்றனர் என்பதையும் விவரிக்கின்றார். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் அடங்கலாய்க் கண்ணனுக்காக உயிர்த்தியாகமே செய்யவும் தயாராக இருப்பதாய்க் கூறுகின்றார். ஆனால் தாம் இங்கே வருவதற்கு முன்னர் கோகுலத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்ததாயும் கம்சனின் ஆணையால் அப்படி நடந்திருக்குமெனத் தாம் சந்தேகிப்பதாயும் கூறினார். வசுதேவர் என்ன நடந்தது என்று அக்ரூரரைக் கேட்க, அக்ரூரர் கோகுலம் பூராவும் ஓநாய்களால் நிரம்பி வழிகின்றது எனவும், ஓநாய்களின் தாக்குதலினால் கோகுலத்து மக்கள் செய்வதறியாது தவிப்பதாயும் கூறுகின்றார். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாய் வந்து சிறு குழந்தைகளைப் பிடித்து விழுங்கிவிடுவதாயும், நந்தனும், யசோதையும் கண்ணனுக்கு அம்மாதிரி ஏதும் நேரிட்டு விடுமோ என்ற கலக்கத்தில் இருப்பதாகவும், கோகுலத்தை விட்டு விருந்தாவனத்துக்கு மொத்த யாதவர்களையும் மாற்றிவிட எண்ணி இருப்பதாயும் கூறுகின்றார்.

தேவகியின் குரல் தழுதழுத்தது.” என் கிருஷ்ணன், என் கிருஷ்ணன் அவன் பத்திரமாய் இருப்பானா?” என்று கேவுகின்றாள். வியாசர் தன் அன்பு ததும்பும் விழிகளை அவள் பால் திருப்பினார். மிகவும் ஆதுரத்துடனும், அவளைத் தேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், வியாசர் சொல்லுகின்றார்.”தேவகி, உன் தாய் மனம் துடிக்கின்றது. எனக்குப் புரிகின்றது அம்மா. உன் குழந்தைக்கு யார் பாதுகாப்பு என நினைத்து நீ கலங்குகின்றாய். அது தேவையற்ற கலக்கம் தேவகி, நாம் அனைவருமே, ஏன் இந்த உலகே அவனுடைய பாதுகாப்பில் தான் இருக்கின்றது, இயங்குகின்றது, இதைப் புரிந்து கொள்.” என்று சொல்லுகின்றார். அக்ரூரரிடம் திரும்பி, “அக்ரூரா, தேவகிக்குக் கிருஷ்ணனைப் பற்றிய எல்லா விபரங்களையும் ஒன்று விடாமல் சொல்லு. அவள் ஆவலைப் பூர்த்தி செய்.” என்று சொல்லுகின்றார். அப்போது வசுதேவர் குறுக்கிட்டு, “குருதேவா, எல்லாம் சரி. ஆனால் கிருஷ்ணனின் படிப்பு? அது என்னாவது? அவன் ஒரு இடையனாகவே அல்லவோ வளருவான்? எவ்வாறு அவனைப் படிப்பிப்பது?” என்று மிகக் கவலையுடன் கேட்கின்றார்.

வியாசர் சொல்கின்றார்:”வசுதேவா, என் சீடன் ஆன சாந்தீபனியை இதற்காகக் தயார் செய்து கொள்ளச் சொல்லி இருக்கின்றேன். அவனுக்குப் பழங்கால நடைமுறைகளில் இருந்து ஆயுதப் பிரயோகம் வரையும், தற்கால அரசு நடைமுறைகளில் இருந்து தற்போது உள்ள போர்க்கலை வரையும் நன்றாக அறிந்து வைத்துள்ளான். கோகுலத்து மக்கள் அனைவரும் பிருந்தாவனம் போய்ச் சேர்ந்த உடனேயே அக்ரூரன் சாந்தீபனிக்கு அங்கே ஒரு ஆசிரமம் கட்டிக் கொள்ள ஏற்பாடுகள் செய்து தருவான். கிருஷ்ணனின் படிப்பை சாந்தீபனி கவனித்துக் கொள்ளுவான்.” என்று சொல்லுகின்றார். பின்னர் தன் மதிய கால அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டி வியாசர் எழுந்து கொள்ள அவரின் மெலிந்த அதே சமயம் நேரான உடலையும், கண்களின் தீக்ஷண்யத்தையும் பார்த்த வண்ணம் வசுதேவர் நினைக்கின்றார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் வைத்திருக்கின்றார் குருதேவர். அவரவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லுவதோடு அல்லாமல் அனைவரோடும் மனதுக்கு நெருங்கியவராயும் இருக்கின்றார். இவருடைய இந்தக் குணத்தை என்ன என்று சொல்லுவது என வியந்தார். அனைவரின் நலத்தை மட்டுமே விரும்பும் இவர் நம் குடும்பத்துக்கு மூத்தவராயும், குருவாயும் வாய்த்திருப்பது நாம் செய்த அதிர்ஷ்டமே என எண்ணினார் வசுதேவர்.

Monday, May 04, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

குழந்தைகள் ஐவரும் வியாசரை விழுந்து வணங்கினார்கள். குழந்தைகள் பாரம்பரியத்தை மீறாதபடிக்கும், பெரியோரை மதிக்கும் வண்ணமும் வளர்க்கப் படுகின்றனர் என்பதை வியாசர் உணர்ந்து கொண்டு பெருமை கொண்டார். அவர்களை தம் அருகே அழைத்தார். அனைவரிலும் இளையவன் ஆன சஹாதேவனை மடியில் இருத்திக் கொண்டார். பீமனைக் கட்டி அணைத்துக் கொண்டார். அவன் வயதுக்கு மீறிய உயரத்துடனும், உடல் அமைப்புடனும் இருப்பதைக் கண்டு ஆனந்தித்தார். தன் முன்னே அனைவரையும் அமரச் சொல்லக் குந்தியும், வசுதேவரும், தேவகியும் ஒரு பக்கமும், ரிஷிகள் வியாசருக்கு எதிரேயும் அமர்ந்தனர். தன் சீடர்களைப் பார்த்து, அன்றைய பாடத்தை அதோடு முடித்துக் கொண்டதாகவும், மறுநாள் சந்திக்கலாம் என்றும் சொல்லிவிட்டு விருந்தாளிகள் தங்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் சொல்லி அனுப்பினார். பின்னர் குந்தியைப் பார்த்து, “மகளே, ப்ரீத்தா, உன் துக்கத்தை நான் புரிந்து கொள்கின்றேன்.நீ அனுப்பிய உன்னுடைய மெய்க்காப்பாளன் வந்து எனக்கு எல்லாத் தகவல்களையும் சொன்னான். மாத்ரியை ஸ்த்ரீ ரத்தினம் என்றே சொல்லவேண்டும். அம்மா, உன்னைச் சொல்லவில்லை என நினைக்காதே. நீ மன உறுதி கொண்டவள். உன்னால் இந்தக் குழந்தைகளை வளர்க்க முடியும். ஆகவே நீயும் தகுதி வாய்ந்தவளே. அதிலும் மாத்ரியின் குழந்தைகளையும் நீ சற்றும் வேறுபாடு காட்டாமல் வளர்த்து வருகின்றாய். இந்தப் பெருந்தன்மை வேறு யாருக்கு வரும்?” என்றார்.

குந்தியும், “ஆம் ஐயா, மாத்ரி மிக மிகச் சிறியவள். அவள் இருக்கும்போதே இந்தக் குழந்தைகளை நான் தான் கவனித்து வந்தேன். ஆகையால் எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை. “ என்றாள். வியாசரும் “ஆம், அம்மா உன் மனப்பான்மையும், குழந்தைகளை அவர்கள் யார் குழந்தைகளாய் இருந்தாலும் அவர்களை வளர்ப்பதிலும், அவர்களைக் கண்டு ஆனந்திப்பதிலும் சிறு வயதில் இருந்தே உன் ஈடுபாடு என்னை அதிசயிக்க வைக்கின்றது. உன்னை மாதிரிப் பெண்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்.” என்றார். உடனேயே நம் பீமன் பொறுக்க முடியாதவனாய், தன் உரத்த குரலில், “தாத்தா அவர்களே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அம்மாவுக்கு நகுலையும், சஹாதேவனையும் தான் ரொம்பப் பிடிக்கும்.” என்று சொல்லவே சுற்றி இருந்த அனைவரும் சிரிப்புக் கடலில் மூழ்கினர். இந்த வெகுளித்தனமான பீமனின் பேச்சால் மனம் கவரப் பட்ட வியாசர் அன்போடு பீமனை நோக்கி, “ குழந்தாய், உனக்கும் உன் சகோதரர்களைப் பிடிக்கும் அல்லவா? அவங்க ரொம்பச் சின்னவங்க இல்லையா? நீ பெரிய பையன் ஆகிவிட்டாயே? அதோடு அப்பா பீமா, நீ எவ்வளவு பலவானாய் இருக்கிறாய்? இனிமேல் நீ உன் குட்டித் தம்பிகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா?” என்று சொல்ல, பீமன் மிகுந்த கர்வத்தோடும், பெருமையோடும், “ஆஹா, நான் நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுவேனே இவங்களை, “ என்றவன், கொஞ்சம் சிரிப்போடும், யோசனையோடும் மேலும் சொன்னான்:” ஆனால் நாங்க விளையாடும்போது அவங்களை நான் தூக்கிப் போட்டு விளையாடுவேன்.” பீமன் சிரிக்க சுற்றி இருந்த அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. யுதிஷ்டிரனோ, பெரியவன் என்ற பொறுப்போடும், நிதானத்தோடும், “குருவே, பீமனுக்குப் பெரியவர்களிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று இன்னும் பழக்கம் ஆகவில்லை. பேசத் தெரியாமல் பேசிவிட்டான். பொறுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கின்றோம்.” என்றான். அர்ஜுனனும், வியாசரைப் பார்த்துத் தன் கண்களால் அதை ஆமோதிக்கக் குந்தியோ தன் பிள்ளைகளின் ஒற்றுமையால் மனம் நிறைந்து போய்க் கண்ணால் பொங்கிப் பிரவாஹித்தாள்.

அவ்வளவில் வியாசர், சற்றே திரும்பி வசுதேவரைப் பார்த்து, “நான் தனியே உன்னோடும் தேவகியோடும் பேச வேண்டியது நிறைய உள்ளன. அதற்கு முன்னால் வசுதேவா, ஹஸ்தினாபுரத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிவாயா?” என்று கேட்டார். வசுதேவர் தெரியாது என்று சொல்ல, வியாசர் சொல்கின்றார்:” காந்தார நாட்டு இளவரசன் சகுனி என்னைக் காண இன்று காலை இங்கே வந்தான். நீ வருவதற்குச் சற்று முன்னர் தான் அவன் கிளம்பினான்.”
வசுதேவர்:”ஆம் குருவே, அவனும் நாங்களும் ஒரே மரத்தடியில் தான் கூடாரங்கள் அமைத்து நேற்று இரவு தங்கி இருந்தோம்.”

வியாசர்:”ம்ம்ம்ம்ம் வசுதேவா, சகுனி காந்தாரியின் சார்பில் சொல்லுவதாய் ஒரு செய்தியை எனக்குக் கொடுத்திருக்கின்றான். காந்தாரியே அதைச் சொன்னாளா அல்லது ஷகுனியின் சேர்க்கையா என்று எனக்குப் புரியவில்லை. செய்தியின் சாராம்சம் இதுதான். பாண்டுவின் பிள்ளைகள் ஹஸ்தினாபுரம் வந்து வசிப்பதைக் காந்தாரி விரும்பவில்லை. அவள் பிள்ளைகளுக்குச் சமமாய்ப் பாண்டுவின் பிள்ளைகளும் ஹஸ்தினாபுரம் வருவது அவளுக்குப் பிடிக்கவில்லையாம். தகுதி அற்ற குழந்தைகளோடு அவள் பிள்ளைகளும் சமமாய்ப் பழகினால் பின்னால் சகோதரர்களுக்குள் சண்டை ஏற்படும் என்று அவள் பயப்படுகின்றாளாம். ஆகவே பாண்டுவின் புத்திரர்களை நான் என்னுடனேயே வைத்துக் கொள்ளவேண்டுமாம்."

வியாசர் புன்னகையோடு இத்தனையும் சொல்ல குந்தி தான் நினைத்தது சரியாய்ப் போயிற்றே என்று கலங்கினாள். அவள் மனக்கலக்கம் அவள் கண்களில் தெரிய மீண்டும் கண்கள் மழையாக வர்ஷித்தது.

“குருதேவா, குருதேவா, என் குழந்தைகளின் கதி என்ன?” என்று புலம்பினாள் குந்தி.(படம் பீஷ்மர் சபதம் போடும் கட்டத்தைக் குறிக்கிறது.)“அவர்களுக்கு நன்மையைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது.” வியாசர் உறுதியுடன் கூறினார். மேலும் அவர் சொன்னார்:”குந்தி,கலங்காதே, நான் ஏற்கெனவே என் அன்பு அன்னை சத்தியவதிக்குத் தகவல் அனுப்பிவிட்டேன். வணக்கத்திற்குரிய பீஷ்மனுக்கும் சொல்லி இருக்கின்றேன். பாண்டுவின் புத்திரர்களை நானே ஹஸ்தினாபுரம் அழைத்து வரப் போவதாகவும், இளவரசர்களுக்கு உரிய மரியாதையுடன் அவர்களுக்கு வரவேற்புத் தரவேண்டும் என்றும் சொல்லி அனுப்பிவிட்டேன்.”

வசுதேவர்:” சகுனி என்ன செய்வானோ குருதேவா?”

வியாசர்: “தன் அன்பு சகோதரியின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப்போகும் சாக்கில் அவனும் ஹஸ்தினாபுரத்தில் தங்கிவிடுவான்.
பீஷ்மனைப் பற்றிக் கவலை வேண்டாம். தர்மத்தின் வடிவே அவன் தான். அவனிடம் எந்தவிதமான வித்தியாசமான போக்கையும் காண முடியாது. காந்தாரியின் புதல்வர்களையும் சரி, பாண்டுவின் புத்திரர்களையும் சரி ஒழுங்கான முறையிலும், சமமான அன்புடனும் வளர்க்க பீஷ்மன் ஒருவனே சிறந்தவன். அவன் பார்த்துக் கொள்வான் எல்லாவற்றையும், வசுதேவா, நீ என்னுடன் ஹஸ்தினாபுரம் வரையிலும் வரவேண்டும்.”

Friday, May 01, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்

குந்தியின் மூன்று மகன்களை விடச் சிறியவர்களாய் இருந்த மாத்ரியின் இரு மகன்களும் அவர்கள் வயதைக் காட்டிலும் அதிக புத்திசாலிகளாய் இருந்ததையும் தேவகி கண்டாள். ஐவரும் மிக மிக ஒற்றுமையாய் இருந்ததையும் பார்த்தால் ஆச்சரியமாகவும் இருந்தது. வெவ்வேறு தாயின் மக்கள் என்றே சொல்லமுடியவில்லை. அவர்கள் தங்களுக்குள் எந்தச் சண்டையும் போட்டுக் கொள்ளாமலும், குந்தியை எந்தவிதத்திலும் தொந்திரவு கொடுக்காமலும் இருப்பதையும் கண்டாள் தேவகி. அனைவரும் கொஞ்சம் நடந்து, கொஞ்சம் வண்டியில் எனப் பயணம் கிளம்பினார்கள். குருக்ஷேத்திரம் செல்லும் வழியில் ரிஷிகேசம் வந்தனர் அனைவரும். வழியில் எல்லாம் குந்திக்குக் காந்தாரியின் வரவேற்பை நினைத்துக் கவலை மூண்டது. ரிஷிகேசத்தில் வசுதேவரை எதிர்கொண்டு வந்த வீரர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். குந்தியின் பரிவாரங்களும், வசுதேவரின் பரிவாரங்களும் இரவுக்காக ஒரு பெரிய ஆலமரத்தினடியில் தங்க ஏற்பாடுகள் செய்தனர். அங்கே ஏற்கெனவேயே வேறொரு அரசிளங்குமரனின் பரிவாரங்களும் தங்கி இருப்பது தெரியவந்தது. வசுதேவர் வந்திருப்பது யார் என மெல்ல விசாரித்துத் தெரிந்து கொண்டார். வந்திருப்பது காந்தார நாட்டு இளவரசன் சகுனியாம். காந்தாரியின் சகோதரனாம். என்னவோ இனம் புரியாத கலக்கம் வசுதேவரிடமும். குந்தியிடம் விஷயத்தைச் சொன்னார்.

தனக்கு சகுனி வந்திருப்பது நல்லதுக்கு எனத் தோன்றவில்லை எனவும், மனதில் ஏதோ இனம் புரியாத வேதனை மூள்வதாயும் சொன்னார். குந்தியும் மனம் சஞ்சலம் அடைந்தாள். பாண்டு அவளிடம் இந்த சகுனியைப் பற்றி எப்போதுமே நல்ல அபிப்பிராயமாய்ச் சொல்லவே இல்லை என்றும், சூழ்ச்சிகள் நிறைந்தவன் என்றே சொல்லிக் கொண்டிருப்பார் எனவும் சொன்னாள். வசுதேவர் குந்தியிடம்:”இந்த சகுனியால் உனக்கு ஹஸ்தினாபுரத்தில் தொந்திரவு ஏதும் உண்டானால்?” என்று கவலையுடன் கேட்க, அப்படி நேர்ந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை எனக் குந்தி சொல்கின்றாள். மேலும் சொன்னாள்: “காந்தாரிக்கு என்னிடம் பொறாமை அதிகமாய் இருக்கிறது. அதை நான் உணர்ந்துள்ளேன். என்ன காரணம் என்றே புரியவில்லை. அவளுக்கு நூறு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். என்றாலும் என்னுடைய இந்த ஐந்து குழந்தைகளைக் கண்டு அவள் பொறாமை கொண்டுள்ளாள். தம்பி, வசுதேவா, அந்த மஹாதேவரே என்னையும், குழந்தைகளையும் காக்கவேண்டும். கடவுள்களுக்கெல்லாம் கடவுள் ஆனவரும், முனிவருக்கெல்லாம் முனிவராகவும், யோகிகளுக்கெல்லாம் யோகியாகவும் இருக்கும் அந்த முக்கண்ணனே என் குழந்தைகளுக்குக் காப்பு.” என்று குந்தி சொல்கின்றாள்.

மறுநாள் சகுனியின் ஆட்களும், சகுனியும் விரைவில் கிளம்ப சற்று தாமதித்தே வசுதேவரின் பரிவாரங்களும், குந்தியின் பரிவாரங்களும் கிளம்புகின்றன. குருக்ஷேத்திரம் நண்பகலில் மெல்ல மெல்லத் தெரியலாயிற்று. தூரத்தில் ஒரு பெரிய குடி இருப்பு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கும் சரஸ்வதி நதிக்கரையின் ஐந்து ஏரிகளின் நடுவே தெரிந்தது. அவற்றிலிருந்து எழும் ஹோமப் புகையைக் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தாள் தேவகி. இத்தனை நூறு குடிசைகளும், ஆசிரமங்களையும் ஒருசேரக் கண்டதிலும், அவற்றிலிருந்து எழுந்த வேத கோஷங்களும், தெய்வங்களை வாழ்த்திப் பாடும் ஒலிகளும், மேலெழுந்த வெண்புகையும் சேர்ந்து இந்த பூவுலகை ஒரு அதிசயமாக மாற்ற யத்தனித்துக் கொண்டிருந்தது. ஏரிக்கரைகளில் அமர்ந்திருந்த ரிஷிகளும், அவர்களின் சிஷ்யர்களும், நடு வானில் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரிய ஒளியும் சேர்ந்து அந்த இடத்தைப் புனிதமாக்கிக் கொண்டிருந்தது. ரிஷி பத்தினிகள் தங்கள் கணவரின் சீடர்களுக்குச் சாப்பாடு தயார் செய்து கொண்டும், தயார் செய்தவர்கள் அவர்களுக்குச் சாப்பாடு பரிமாறிக் கொண்டும், இன்னும் சிலர் தங்கள் சொந்தக் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டும், அவர்களுக்கும் தங்கள் கணவர்களுக்கும் அமுது ஊட்டிக் கொண்டும் அனைவரும் அவரவர் வேலைகளில் இருந்தனர்.

அத்தகையதொரு சூழ்நிலையில் சென்ற வசுதேவரும், குந்தியும் தங்கள் பரிவாரங்களைப் பின்னே விட்டுவிட்டு, வேத வியாசரின் ஆசிரமம் எங்கே எனக் கேட்டுக் கொண்டு, அந்த இடத்தில் நடுநாயகமாய் இருந்த வியாசரின் குடிலுக்கு வந்து சேர்ந்தனர். ஒரு பெரிய வித்வத் சபையே அங்கே நடந்து கொண்டிருந்தது என்பதற்கு அடையாளமாய் வியாசர் நடுவிலே அமர்ந்திருக்க சுற்றிலும் பல்வேறு ரிஷிகளும், முனிவர்களும் அமர்ந்து தங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும், அவற்றுக்கான பதில்களையும் பெற்றார்கள். சொன்னார்கள், சொல்ல வைத்துக் கொண்டிருந்தார்கள். வசுதேவரும், தேவகியும், குந்தியோடு அங்கே போய்ச் சேர்ந்ததும் வியாசர் உடனே இவர்களைக் கவனித்துவிட்டார். அவர்களைத் தம் அருகே அழைத்துவரச் சொல்ல, அவர்களை வரவேற்ற ரிஷி, முனிவர்களோடு அவர்கள் மூவரும் வியாசரிடம் போய்ப் பணிந்து வணங்கி நின்றனர்.