எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 30, 2013

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில்-- தொடர்ச்சி குப்தகோதாவரி

சார்தாமில் பார்க்கவேண்டிய முதல் இடமான ஹநுமான் தாரா தான் போகாதீங்கனு சொல்லிட்டாங்க. அடுத்து சதி அநுசுயா ஆசிரமம் பார்த்தாச்சு.  அங்கேயும் மலை ஏற்றம் உண்டு.  தவிர்த்தோம். வேறே வழியே இல்லை. அடுத்தடுத்து அலைச்சல்கள்.  கோயில்கள் படியே நிறைய ஏறணும், இறங்கணும்.  அவையே பூமியிலிருந்து உயரமாக ஐம்பது, அறுபது படிகளோடு இருந்தன.  இதிலே மலையும் ஏறினால் நேரமும் ஆகும்.  உடம்பும் முடியாமல் போயிடும்.  அஹோபிலம் நவ நரசிம்மர் பார்த்தப்போக் கூட (2010 ஆம் ஆண்டு ஜனவரியில் ) கஷ்டப்படலை.  அதிலே மலைகளும் ஏறியாகணும்.  பிடிக்க ஒண்ணும் இருக்காது.  மலைப்பாறையிலே ஏறித் தாண்டி மேலே ஏறினு எல்லாம் போகணும்.  ஒரு பக்கம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். பாறையிலிருந்து தொங்கும் சங்கிலிகளைப் பிடித்த வண்ணம்  தாண்டிப் போகணும். எல்லா வித்தைகளும் பண்ணியாச்சு.  இப்போ வேண்டாம்னு அரை மனசோடத் தான் முடிவு செய்தோம்.  

சதி அநசூயா ஆசிரமத்துக்கு அடுத்து குப்த கோதாவரி.  இங்கே இரண்டு குகைகள் இருக்கின்றன.  இங்கே ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர் ஆகிய மூவரும் பதினோரு ஆண்டுகள் வசித்ததாய்ச் சொல்கின்றனர்.  குகைக்குள் போகும் முன்னர் செருப்பை எல்லாம் கழட்டி வைச்சுட்டுப் போகணும்.    நுழைவுச் சீட்டு உண்டு.  இரண்டு குகைக்கும் சேர்த்து எடுக்கணும்.  முதல் குகைக்குள் போகப் படிகள் சில ஏறணும்.


இந்தப்  படிகளில் ஏறி மேலே சென்று மறுபடி மலைப்பாதையில் சரிவில் இறங்கி முதல் குகைக்குப் போகணும்.  மேலே ஏறியதுமே அங்கே சில பண்டாக்கள் அமர்ந்து கொண்டு ஒரு இலைத் தட்டில் குங்குமம், மஞ்சள், ஒரு செம்பருத்திப் பூ போன்றவற்றை வைத்து அம்மாதிரிப் பல தட்டுக்களை வைத்து ஒரு தட்டு இருபது ரூபாய் என விற்பனை செய்தனர்.   அதை வாங்கிக் கொண்டு தான் போக வேண்டும் என்றும், இல்லைனால் ஶ்ரீராமர், சீதையின் அருள், கருணை, ஆசிகள் கிடைக்காது என வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.  நாங்க பொதுவாகவே இம்மாதிரியான பிரபலக் கோயில்களுக்குச் செல்கையில் எதுவுமே வாங்காமல் தான் போவோம்.  வாங்கிப் போனால் அதை சுவாமிக்குச் சார்த்துவதில்லை என்பதோடு தூக்கி ஒரு பக்கமாகப் போட்டு விடுகிறார்கள்.  வாங்காமல் சென்றோம்.  உடனே என்னைக் கன்னாபின்னாவெனத் திட்டினார் அந்த ஆசாமி.  கையில் ஒரு சின்னக் கோலை வைத்துக் கொண்டு எல்லாருடைய உச்சந்தலையிலும் தட்டி அதை வலுக்கட்டாயமாகக் கைகளில் திணித்துக் கொண்டிருந்தனர்.  அதைப் படம் எடுக்க முடியாமல் கூட்டம் வேறு நெரிசல்.

இந்தக் கூட்டத்தின் நெரிசலின் மகத்துவம் உள்ளே இறங்குகையில் தான் புரிந்தது.   வரவும், போகவும் ஒரே வழி.  மிகக் குறுகல்.  ஒருவர் தான் உள்ளே நுழையலாம்.  அதுவும் கஷ்டப்பட்டு.  அந்த வழியிலேயே எல்லாருக்கும் உள்ளே செல்லவும் அவசரம், வெளியே வரவும் அவசரம். 

கொஞ்சம் கஷ்டப்பட்டே படம் எடுத்தேன்.  இங்கே யாரும் இல்லாததால் எடுக்க முடிந்தது.  ஆனால் படம் எடுக்க நின்று ஃபோகஸ் செய்யல்லாம் அவகாசம் இல்லை. எடுக்கையிலேயே ஒரு தன்னார்வலர் கத்த ஆரம்பிச்சுட்டார்.  ஃபோட்டோ எடுக்கக் கூடாதுனு.  முன் அனுமதி வாங்கி இருக்கணும் போல.  டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஒண்ணும் சொல்லலை.  இன்னொரு படம் அவசரமாக எடுத்தேன்.  அங்கே உள்ளே பாறைகளின் வடிவங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தன.  அதைப் படம் எடுத்தேன்.  அதுக்குள்ளே மீண்டும் கத்தவே பிடுங்கி எல்லாத்தையும் அழிச்சுடப் போறாங்கனு ரங்க்ஸ் பயந்தார்.  ஆகவே நிறுத்திட்டேன். அரை மனசாக.


உள்ளே நுழைந்ததும் பாறைகளின் விசித்திரமயமான அமைப்பு மேலுள்ள படத்தில்.  உள்ளே நுழைந்ததும் கொஞ்சம் விசாலமான மண்டபமும், அதிலே ஒரு சந்நிதியும் இருக்கிறது.  எல்லா சந்நிதிகளிலும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன், அநுமன் ஆகியோர் தான்.  அங்கே படம் எடுக்க அநுமதி கிடைக்கலை என்பதோடு கூட்டமும் அதிகமாக இருந்தது.  அங்கே தரிசனம் முடிச்சு வெளியேறும் வழியில் வெளிவந்தோம்.  இந்த குகையில் தளம் கொஞ்சம் சுமாராக இருந்தது.  ஆகவே செருப்பில்லாமல் நடக்கையில் அதிகம் கஷ்டம் தெரியலை.  மறுபடி அடுத்த குகைக்குச் செல்லணும். 

வெளியே வந்து மறுபடி வேறு வாசல் வழியாகப் படிகள் கீழே இறங்கி அடுத்த குகைக்குச் சென்றோம். இது நீளமாகவும் வளைந்து வளைந்தும் சென்றதோடு நீரும் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தது.  அனுமான் தாராவின் உற்பத்தியாகும் தண்ணீர்னு சொல்றாங்க.  கோதாவரி மறைந்திருப்பதாயும் சொல்கின்றனர்.  முதல் குகையிலும் இந்த குகையிலும் கோதாவரி அம்மனுக்கு சந்நிதி இருக்கிறது.  இங்கே ராமனும், சீதையும் சிம்மாசனம் போன்றதொரு பாறையில் அமர்ந்திருப்பார்களாம்.  எதிரே இன்னொரு சிறிய பாறை.  அதில் லக்ஷ்மணன் அமர்ந்திருப்பானாம்.  இந்தப் பாறைகளில் இப்போது மிகச் சிறிய அரை அடியே இருக்கும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன் அனுமனோடு இருக்கும் சிலைகள் வைக்கப்பட்டு பாறைகளுக்கு இரு பக்கமும் இரு பண்டிட்கள் அமர்ந்து வழிபாடு நடத்துகின்றனர்.

விளக்குகள் எல்லாம் போட்டு வெளிச்சம் கொடுத்திருந்தாலும் அடர்ந்த காட்டின் உள்ளே இருக்கும் பாறைக்குகை.  உயரம் அதிகம் இல்லை.  அவற்றைக் குனிந்து கடக்கும்போது ரங்க்ஸ் ரொம்ப சிரமப் பட்டார். கீழே சலசலத்து ஓடும் தண்ணீர் வேறே. இம்மாதிரிப் பல இடங்களில் கடக்கணும்.  அதோடு கீழே பாறைகள் வேறே ஆங்காங்கே முண்டும், முடிச்சுமாக நீட்டிக் கொண்டும், உருண்டையாகவும், சில இடங்களில் உயரமாகவும் இருக்கின்றன.  முன்னும், பின்னும் ஆட்கள் வேறே.  ஒவ்வொருத்தராய்த் தான் போக முடியும்.  உடம்பை வளைக்க முடிந்தால் தான் நல்லது.  அவ்வளவு குறுகலான வழி.  எங்கே மேடு, எங்கே பள்ளம்னு புரியறதில்லை.  காலில் கூர்மையான கற்கள் குத்துகின்றன.  சரினு கொஞ்சம் நகர்ந்தால் அங்கே உயரமான பாறையாக இருக்கும்; இல்லைனா பள்ளமாக இருக்கும். 

சில இடங்களில் தண்ணீரின் ஆழம் ரங்க்ஸுக்கே முழங்காலுக்கு வந்துவிட்டது.  அப்போ எனக்கு இடுப்புக்கும் மேல்னு புரிஞ்சுக்கோங்க.  இதைக் குறித்து ஏற்கெனவே அறிந்து வைத்திருந்ததால் அவர் கிளம்புகையிலேயே பெர்முடாஸ் போட்டுக் கொண்டு வந்துவிட்டார்.  புடைவை எல்லாம் நனைந்து போய் நடக்க சிரமப்பட்டதோடு இல்லாமல் பாறைகளும் குத்தின.  இங்கே பார்த்து நம் மக்கள் குனிந்து குளிக்க ஆரம்பிப்பதும், தண்ணீரைக் குடித்துத் துப்புவதுமாக அமர்க்களம் பண்ண ஆரம்பிக்கிறாங்க.  உதவிக்குத் தன்னார்வலர்கள் தான்னு நினைக்கிறேன்.  அவங்க ஒண்ணும் சொல்றதில்லை.  படம் எடுக்கிறதை மட்டும் ஏன் தடுக்கறாங்கனு புரியலை.  இதை முழுசும் பார்த்து முடிக்க எங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆச்சு.  நாங்க வெளியே வரச்சே எங்கே எங்களைக் காணோமேனு நினைச்சார் போல ஆட்டோ பையர்.  தேடிட்டு வந்திருந்தார்.

அடுத்து என்னனு கேட்டதுக்கு, பரத் கூப்(பரதன் குகை) என்று என்னிடம் சொன்னார். அப்போ ரங்க்ஸ் ஒரு இடத்தைத் தாண்ட சிரமப் படவே அவரிடம் சென்று உதவி செய்தார்.  ரங்க்ஸ் அவரிடம் சாப்பிட்டுவிட்டு பரதன் குகை பார்க்கலாம் என்றும், அதோடு டிக்கெட் முன்பதிவுக்கு வேறே போகணும்னும் சொல்லி இருக்கார்.  என்னிடம் பரதன் குகை பார்க்கணும்னு சொன்ன அந்த ஆட்டோக்காரருக்கு என்ன தோணித்தோ அவரிடம் பரதன் குகை பார்க்கிறதுன்னா தனியாப் பணம் நானூறு ரூபாய் கொடுக்கணும்.  இதோட சேர்ந்தது இல்லை.  அது ரொம்ப தூரம்னு சொல்லி இருக்கார்.  உண்மையில் ஒவ்வொண்ணும் தூரம் தான் இல்லைனு சொல்லலை.

ஒவ்வொண்ணும் போறதுக்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆகிடுது.  நாங்க காலை பத்து மணிக்கே கிளம்பியதில் அப்போ கிட்டத்தட்ட மதியம் மூணு மணி ஆகி இருந்தது.  ஆகவே சர்க்கரை நோயாளியான ரங்க்ஸுக்குப் பசி வந்திருக்கு.  சாப்பிட்டுட்டுப் போகலாம்னு சொல்லி இருக்கார்.  மீண்டும் நகருக்குள் வந்தால் மறுபடி காட்டுப் பகுதிக்குப் போகணுமேனு அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தோணித்தோ என்னமோ. இம்மாதிரி சொல்லி இருக்கார்.


Friday, November 29, 2013

சதி அநுசுயா ஆசிரமம்--சித்திரகூடம் தொடர்ச்சி!


அநசூயா ஆசிரமம் குறித்த அறிவிப்புப் பலகை


ஜெய் பஜ்ரங்க் பலி, செல்லும் வழியில் காணப்பட்ட ஆஞ்சநேயர் வடிவம்.  தரையோடு தரையாக புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறார்.




அநசூயா, அத்ரிக்கு மகனாய்ப் பிறந்த தத்தாத்ரேயர் பிறந்த இடம். மற்றப் படங்கள் சரியாக வரலை. ஆகையால் பகிரவில்லை. :(

Thursday, November 28, 2013

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் --தொடர்ச்சி!

முன் பதிவு

அந்த ஆட்டோக்கள் எல்லாமே ஷேர் ஆட்டோக்கள் தான். நாங்க அதிலே போய்க் கடைத்தெருவிலே இறங்கிக்கலாம்னு தெரியாம ஒவ்வொருத்தரையாக் கூப்பிட்டோம்.  கடைசியிலே ஒருத்தர் கடைத்தெருப்பக்கம் போன ஒரு ஆட்டோவை நிறுத்தி எங்களுக்கு ஏற்பாடு பண்ணிப் பேசிக்கொள்ளச் சொன்னார்.   ரங்க்ஸ் சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் சாப்பிடணும்ங்கறதாலே முதல்லே நாங்க காலை உணவு எடுத்துக்க வேண்டி ஒரு ஹோட்டலுக்குக்கூட்டிப் போகச் சொன்னோம்.  அங்கிருந்து சித்திரகூடத்தின் சார் தாம் என அழைக்கப்படும் நான்கு இடங்களுக்கும் கூட்டிச் செல்லச் சொன்னோம்.

சித்திரகூடத்து மலையடிவாரத்தையே கிரி வலமும் வருகின்றனர்.  அதைப் பரிக்ரமா என்று சொல்கிறார்கள்.  நாங்கள் இருந்த பகுதியும் சித்திரகூடத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களும் மத்தியப் பிரதேசப் பகுதியில் இருந்தன. சார்தாமில் முதலில் அனுமான் தாரா என்னும் மலை.  600 படிகளுக்கு மேல் ஏறிப் போய் அனுமனைப் பார்க்கணும்.  துளசி இங்கே தான் ராம் சரித மானஸ் எழுதினதாகவும் சொல்கிறார்கள்.  ஆனால் எங்களைப் பார்த்ததுமே அனைவரும் அனுமான் தாராவுக்கு நீங்க போக முடியாது.  மலைப்படிகள். ஏறுவதும் கஷ்டம்;  இறங்குவதும் கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள்.  சரினு மத்த மூணு இடங்களுக்கு ஆட்டோக்காரரிடம் பேசினோம்.  வழக்கம் போல் "ரிஜர்வ்ட்" என்று கேட்டு ஆட்டோவை அவங்க சட்டப்படி எங்களுக்கு மட்டுமே பேசிக் கொண்டோம். ஆட்டோக்காரப் பையருக்கு 20 வயதுக்குள் தான் இருக்கும். எல்லா இடமும் கூட்டிப் போய் விட்டு மதியம் சாப்பாட்டுக்கும் ஹோட்டலுக்குப் போய்ப் பின்னர் அங்கிருந்து மறுநாள் கிளம்புவதற்கு ரயிலில் முன்பதிவு செய்யணும்னு அதையும் கேட்டுக் கொண்டோம். எல்லாவற்றுக்கும் அழைத்துச் செல்வதாய்ச் சொன்னார் அந்தப் பையர்.  நாங்களும் நம்பியதால் வேறு யாரிடமும் இதைப் பத்திக் கேட்கவே இல்லை.

அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் காலை ஆகாரம் எடுத்துக் கொண்டோம்.  நான் வழக்கம் போல் சாப்பிடப் படுத்த, ரங்க்ஸோ, சாப்பிட்டால் தான் எல்லாத்தையும் பார்க்கத் தெம்பு வரும்.  ஒழுங்கா சாப்பிடுனு மிரட்ட, நாஷ்டா தட்டில் சூடான ஜிலேபிகளோடு பூரி, சப்ஜி, தயிர், ஊறுகாய் இத்தனையும் வர, ஜிலேபிகளைப் பார்த்த பரவசத்தில் நானும் நாஷ்டானு கூவ. நாஷ்டாவும் வந்தது.  சாப்பிட்டுவிட்டுக் காஃபி இங்கே சாப்பிட்டுப் பார்க்கலாம்னு (கொழுப்புத் தானே னு என் ம.சா. கேட்குது) காஃபி ஆர்டர் பண்ணினோம்.  சகிக்காத காஃபி வர, அவர் எனக்கு உபசாரம் பண்ண, நான் அவருக்கு  உபசாரம் பண்ண கொடுத்த காசுக்குக் காஃபியைக் கொட்டாமல் (பின்னே?  காலம்பர காஃபி, டீ கிடைக்காமல் தவிச்ச தவிப்பு பாடம் கத்துக் கொடுத்துடுச்சே) குடிச்சு வைச்சுட்டு ஆட்டோவில் ஏறினோம்.  அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுக்கணும், நாலும் ஒரே ஆட்டோவில் பேசிய பணத்துக்குத் தானே போகணும்னு எல்லாம் கேட்டிருக்கணும்.  என்னமோ ஒரு அலுப்பு, சலிப்பு.  இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு.  ஆட்டோவில் ஏறிக் கொண்டு டிக்கெட் பார்க்கப்போனால் திறக்கவே இல்லை.

முதலில் அனுமான் தாரா தான் இல்லையே;  அடுத்து என்னனு பார்த்தால் சதி அநசூயா ஆசிரமம்.  அங்கே செல்லும் வழியில் ஒரு கோயிலையும், ஒரு பாறையையும் காட்டினார்கள்.  அங்கே தான் ஶ்ரீராமரும், சீதையும் தனித்திருந்தபோது காகாசுரன் வந்து சீதையைத் தொந்திரவு செய்த இடமாம். அங்கே ஒரு கோயிலும் இருக்கிறது இப்போது.  பாறையில் சிந்தூரப் பொடிகளைத் தூவி  ஒரு பண்டிட் உட்கார்ந்து காசு பண்ணிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் மேலே ஏறிப் போகணும். போனோம்.


இந்தப் பாறை தான், ஶ்ரீராமர், சீதை அமர்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.  சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருப்பவர் தான் பண்டிட்.  பின்னால் தெரிவது மந்தாகினி நதி.


அதே காட்சி  



 மந்தாகினி நதிக்கரையில் அமர்ந்திருக்கும் ஒரு தொழிலாளி. 

Tuesday, November 26, 2013

பெண்கள், இந்நாட்டின் கண்கள்? அல்லது புண்கள்?? :(

சூரி சார்,

நீங்க இன்னமும் அறுபது, எழுபதுகளின் மாமியார்த்தனங்களை விட்டு வெளியே வரலையோனு நினைக்கிறேன். ஏனெனில் கடந்த இருபது வருடங்களாகவே எந்தப் பிள்ளையின் அம்மாவும், ஸ்டேடஸோ, சீர் வரிசைகளோ, பெண் வீட்டில் மரியாதை செய்யலைனோ சொல்லிக் கொண்டு கல்யாணத்தை நிறுத்துவதில்லை; மருமகள்களை அந்தக் காரணத்துக்காகப் படுத்துவதாகவும் தெரியவில்லை.  அதிலெல்லாம் மாறித் தான் வருகிறது.  ஆகவே நீங்க சொன்ன மாதிரி சீர் வரிசை இல்லைனோ, ஸ்ப்ளிட் ஏசி இல்லைனோ பிள்ளையின் அம்மா நிறுத்தலை.

சொல்லப் போனால் பிள்ளை வீட்டினருக்கு இருக்கும் வசதிக்கு மூணு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தும் இந்தப் பிள்ளைக்குச் சொத்து மிஞ்சும். ஆகவே நிச்சயமாய் இம்மாதிரி அல்பக் காரணத்துக்காக நிறுத்தறவங்க அவங்க இல்லை.  அது சர்வ நிச்சயம்.

முதல் பிள்ளையின் கல்யாணம் எவ்வளவு ஆசையும்,ஆவலும் கொண்டு எதிர்பார்த்தாங்க என்பதையும் கல்யாணத்துக்கு அப்புறம் மருமகள் வேலைக்குப் போக இஷ்டப்பட்டால் போகட்டும் என்றும் அது பிள்ளையும், பெண்ணும் பேசி முடிவு செய்துக்கட்டும் என்றும் விலகி இருந்தவங்க.  பெண்ணும், பிள்ளையும் பேசிக் கொண்டு தங்கள் சம்மதத்தைத் தெரிவித்த பின்னரே பிள்ளையின் அப்பா, அம்மா, பெண்ணின் அப்பா, அம்மாவிடம் பேசித் திருமணத்தை நிச்சயம் செய்தனர். அதுவே ஒரு சின்னக் கல்யாணம் போல் கோலாகலமாக நடந்தது. :(

எங்க பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயம் செய்கையில் எங்க சம்பந்தி வீட்டில் ஏசி எல்லாம் கிடையாது.  அதுக்காக நாங்க கல்யாணத்தை நிச்சயம் செய்யாமல் இல்லை;  நிறுத்தவும் இல்லை.  இந்தக் காலத்தில் பெண்ணும், பிள்ளையும் கல்யாணத்துக்கு முன்பே பேசிக்கிறது, முடிவு செய்துக்கறதுனு ஆன பின்னால், பிள்ளையின் அப்பா, அம்மாவோ, பெண்ணின் அப்பா, அம்மாவோ இதை எல்லாம் முக்கியமான குறைகளா நினைப்பதும் இல்லை.

இந்தக் காலத்துக்கு வாங்க சார், எப்போதும் போல் வழக்கப்படி பிள்ளையைப் பெத்தவங்களையே குறை சொல்லக் கூடாது.  இந்தக் காலம் பெண்களின் காலம் என்பதை நீங்க ஒத்துக்கறீங்க தானே!  அப்படி இருக்கையில் இப்போது பெண்கள் கல்யாணத்துக்குப் போடும் கண்டிஷன்களை எல்லாம் பற்றித் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் (சிலநாட்கள் முன்னர் கல்கியில் கூட வந்தது.  எங்கள் ப்ளாகிலும் பதிவாய்ப் போட்டிருந்தாங்க) வரதை எல்லாம் நீங்க பார்க்கிறது இல்லையா? 25 வயதுக்கு மேல் கல்யாணம் செய்துக்கும் பெண்ணால் நிச்சயமாய் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருப்பது கஷ்டமே.  வளைந்து கொடுப்பதே கேவலம் என இக்காலப் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் நினைக்கின்றனர். மேலும் இந்தப் பெண் திருமணத்தின் அர்த்தத்தையே கொச்சைப்படுத்துவது உங்களில் எவருக்கும் புரியவே இல்லையே என நினைக்கவும் ஆச்சரியமா இருக்கு! :(

தி.வா. சொன்னதும் தான் மறுபடி அப்பாதுரையோட கமென்டைப் பார்த்தேன். ஏன் நல்ல கர்ப்பமா வேண்டும்னு பிரார்த்திச்சுக்கக் கூடாது?  கர்பம் நல்ல கர்பமாக இருந்தால் தானே வருங்கால சந்ததிகளுக்கும் நல்லது.  இது ஒரு தொலைநோக்குப் பார்வை என்பது புரியலையா?  நம் சந்ததிகள் நல்லா இருக்கணும்னு நினைப்பதில் என்ன தப்பு இருக்கு?  இப்படி ஒவ்வொரு குடும்பமும் நினைச்சுப் பிரார்த்திச்சுக் கொண்டால் வருங்காலமும் நன்றாக இருக்குமே!  குடும்பம் சேர்ந்து தானே சமூகம், சமூகம் சேர்ந்து நகரம், நாடு!  நகரமும், நாடும் இப்போது இந்த அளவுக்கு மோசமாக் கெட்டுப் போயிருக்குனா சரியான நெறிமுறைகள் இல்லாமல் போனதே காரணம் என்பதோடு முப்பது வருஷத்துக்கு முந்தைய கால கட்டத்தில் பெற்றோர் ஒரே குழந்தை போதும்னு முடிவெடுத்ததும் இன்னொரு முக்கியக் காரணம்.  பல பெண்குழந்தைகள் அழிக்கப்பட்டன.

விளைவு?? இன்னிக்குப் பெண்கள் கிடைப்பதே கஷ்டமாய் இருக்கிறது. கிடைத்தாலும் இப்படிப் பல நிபந்தனைகள்.  கல்யாணத்தைப் புனிதமாக நினைப்பதே கேவலம் என்றொரு எண்ணம்.  ஆனால் இத்தனைக்கும் நடுவில் இன்னமும் சில பெண்கள் தங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டும், வேலைக்குச் செல்வதும், ஒன்றுக்கும் மேல் இரண்டாவது குழந்தையும் பெற்றுக் கொண்டிருப்பதும், குடும்பத்துக்காகக் குழந்தைகளுக்காக வேலையை விட்டு விட்டுப் பார்த்துக் கொள்வதும் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது.  இதில் நவநாகரிக, நவீனப் பெண்களும் அடக்கம். யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் தன் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தனக்குத் தான் என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லையா!  அதற்கே அவங்களுக்கு ஒரு சல்யூட்!!!

அதோட இன்னொரு விஷயம், முதல்முறையா இந்தப் பொண்ணு தான் குழந்தையைப் பாத்துக்க முடியாதுனு சொல்லலை.  என் உறவினர் பையருக்குப் பார்த்த இன்னொரு பெண்ணும் இதே கண்டிஷன் போட்டிருக்கார். பெண்ணின் அப்பா, அம்மா எங்களுக்கு வயசாச்சு, எங்களால் பார்த்துக்க முடியாது.  உங்க வம்சத்து வாரிசு தான், அதனால் நீங்க தான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்களாம். ஆக இது ஒண்ணும் இப்போப் புதுசா நடக்கலை தான். ஆனால் பெண்கள் இதைத் தான் சுதந்திரம், விடுதலைனு நினைச்சுக்கிறது தான் சரியா வரலை. அதுவும் இப்போதெல்லாம் பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலைகள் மட்டுமின்றிக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதிலும் மனைவிக்கு உதவியாகத் தான் இருக்கிறார்கள்.

ஜிஎம்பி சார் சொல்வது ஒரு விதத்தில் சரி.  இங்கே பெண்ணுக்குப் பிள்ளையைப் பிடிக்கலைனோ, பிள்ளைக்குப் பெண்ணைப் பிடிக்கலைனோ, சீர் வரிசைகள் விஷயத்திலோ கல்யாணம் நிக்கலை.  பெண் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பையரைத் தன் வழிக்கு மாற்ற வேண்டி முயற்சிக்கையில் அவங்க இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிளவு! அதன் மூலம் ஏற்பட்ட எதிர்பாரா விளைவு என்ற அளவிலே நான் புரிஞ்சுட்டு இருக்கேன்.  ஒரே பெண். கூடப் பிறந்தவங்க யாருமே இல்லை. ஆகையால் அந்தப் பெண் நினைச்சதை நடத்திடணும்னு நினைச்சிருக்கலாம்.

பதிவோடு சம்பந்தமில்லாவிட்டாலும் இக்காலப் பெண்களைப் பற்றிய ஒரு தகவல்:  இப்போது பெண்கள் எத்தகைய கொடூரத்துக்கும் போவாங்க, அதற்கு எல்லையே இல்லை என்பதற்கு உதாரணம் திருவானைக்காவல் வைர வியாபாரி, அவர் மகன், மகள் அனைவரையும் கொலைசெய்த பெண்மணியும், அவருடைய கள்ளக் காதலும் சாட்சி!  சினிமாவை விடக் கொடூரம் இது.  கொலை செய்துட்டு அந்தப் பாவத்தைக் கழுவ ஷிர்டி போனாங்களாம். போன உயிர் திரும்பியா வரும்? :(

Sunday, November 24, 2013

பெண்களே, இந்நாட்டின் கண்களே, என்ன எண்ணம் உங்களுக்கு??

சில நாட்களாகவே மனம் சஞ்சலம் அடையும் நிகழ்வுகளாகத் தொடர்ந்து! ரேவதியின் இழப்புக்குப் பின்னர் மீண்டும் ஒரு மனம் வருந்தும் செய்தியைக் கேட்க நேர்ந்தது.  அதிலே என்ன முக்கியம்னா நிச்சயம் ஆகித் தேதி குறித்துப் பத்திரிகைகள் எல்லாம் அடித்து, பத்திரிகைகள் விநியோகமும் ஆனதும் கல்யாணத்துக்கு இன்னும் ஒரே மாசம் இருக்கையிலே பெண் வீட்டினர் கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள்.  பெண்ணுக்கு அவங்களோட career முக்கியமாம். ஆகவே வெளிநாடு போவாங்களாம்.  அப்படிப் போகையில் கணவனின் விசாவில் dependent visa வில் செல்ல மாட்டாங்களாம். அவங்களோட தனி விசாவில் தான் செல்வாங்களாம்.

அவங்க இருக்கும் இடத்துக்குக் கணவனுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லையாம்.  ஐந்து வருஷத்துக்குக் குழந்தை பெத்துக்க மாட்டாங்களாம். ஐந்து வருஷத்துக்குப் பின்னர் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை பையரின் பெற்றோரோ அல்லது பையரோ பொறுப்பு எடுத்துக்கணுமாம்.  இவங்க தாய்நாட்டுக்கு வரமாட்டாங்களாம்.  அதுக்குச் சம்மதிச்சால் பையர், தன்னோடு குடும்பம் நடத்த (அதுவும் பத்து வருஷங்களுக்கு மட்டும்) ஒத்துப்பாங்களாம். இல்லைனா அவங்க வழி, அவர் வழி தனினு இருக்கலாமாம். பத்து வருஷத்துக்குப் பின்னர் குடும்பம், குழந்தைனு எல்லாம் அவங்களாலே பொறுப்பு ஏத்துக்க முடியாதாம்.  ஆகவே தனித்தனி வாழ்க்கை தான் நல்லதுனு நினைக்கிறாங்களாம். அவங்க சேர்ந்து இருக்கும் ஐந்து வருடங்களிலும் பிள்ளையின் அம்மா, அப்பா அங்கே வரக் கூடாது.  எங்களுக்கு முடிஞ்சால், நேரம் இருந்தால் நாங்க அவங்களை வந்து பார்ப்போம்.  அப்பா, அம்மாவுக்குப் பிள்ளையோடு எந்தவிதத் தொடர்பும் கூடாது னு திட்டவட்டமாக அறிவிப்பு.

இதுக்குப் பெண்ணின் அம்மாவும் துணை போறாங்க.  பெண் சொல்வதில் தப்பே இல்லைனு அவங்க கட்சி.  நிச்சயம் ஆகும் முன்னரே சொல்லி இருக்கலாமேனு கேட்டதுக்கு, உங்க பிள்ளை கல்யாணம் ஆனால் தன்னால் வழிக்கு வந்துடுவார்னு நினைச்சோம்.  கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க பொண்ணோட ஒத்துப்போகலைனா கல்யாணம் ஆனப்புறமா எங்க பொண்ணு கஷ்டப்படுவா!  அதனால் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்.  எங்க பொண்ணைப் படிக்க வைச்சுட்டு அவள் இஷ்டத்துக்கு வேலை பார்க்க முடியாமல் கல்யாணம் பண்ணிட்டு உங்க பிள்ளைக்குச் சமைச்சுப் போட்டுட்டு வீட்டிலா உட்கார முடியும்னு அவங்க கேள்வி!


பிள்ளை வீட்டிலே எவ்வளவோ புரிய வைக்க முயற்சி செய்தும், பெண்ணின் அம்மா நிச்சயதார்த்தமே பெண்ணின் அப்பாவின் கடைசி வேண்டுகோள்னு தான் ஒத்துண்டோம்.  அதுக்கப்புறமா உங்க பிள்ளை கிட்டே எல்லாத்தையும் சொல்லி ஒத்துக்க வைக்க நினைச்சோம்.  அவர் ஒத்துக்கலை.  இப்படிப் பிடிவாதமா இருக்கும் பிள்ளை எங்களுக்கு வேண்டாம். னு சொல்லி இருக்காங்க.  நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் பெண்ணின் அப்பா காலமாகி விட்டார். :(

அழுவதா, சிரிப்பதானு தெரியலை!  கல்யாணத்தை ஒரு வியாபார ஒப்பந்தமாக மாற்றி வருகின்றனர் இன்றைய நவநாகரிகப் பெண்மணிகள். அவங்க எதிர்பார்ப்புகள் தான் என்ன?  எனக்குத் தெரிஞ்சு பல பெண்கள் நல்லாப் படிச்சும், குழந்தைக்காக வேலையை விட்டுட்டு இருக்காங்க தான். அதே சமயம் பல பெண்களும் வேலையையும் விடாமல், குழந்தையையும் பார்த்துக்க ஆள் போட்டுக் கொண்டோ, அல்லது மாற்றி, மாற்றி, மாமியார், அம்மா இவங்களைத் துணைக்கு வைத்துக் கொண்டோ இரட்டைக்குதிரை சவாரி செய்யறாங்க.  அப்படி இருக்கையில் இப்போது இப்படியும் சில பெண்கள் சொல்றாங்க.

ஒரு பக்கம் மருத்துவ ரீதியாக 25 அல்லது 27 வயதுக்குள்ளாகக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர்.  இன்னொரு பக்கம் பெண்ணின் திருமண வயது குறைந்த பக்ஷமாக இப்போது 30 -க்கு வந்திருக்கிறது.  அப்படி இருக்கையில் குழந்தை பெற்றுக்கொள்வதை ஐந்து வருஷம் தள்ளிப் போட்டால் 35 வயதுக்குப் பிறக்கும் குழந்தையை வளர்க்கும் பொறுமையும், கனிவும், உடல் நலமும், ஆரோக்கியமும் இவங்களிடம் இருக்குமா?  குழந்தைதான் ஆரோக்கியமாக இருக்குமா?  மன நலம் சிறப்பாக இருக்குமா?

படித்த படிப்பை வைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்த வண்ணம் சம்பாதிக்கப் பல வழிகள் இப்போது ஏற்பட்டிருக்கின்றன.  அது ஏன் இவங்களுக்குத் தெரிவதில்லை.  பல பெண்களும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தொழிலும் ஆரம்பித்து முன்னேறி இருக்காங்க. நிச்சயமாய்ப் பின்பலம்/பக்கபலம் வேண்டும் தான்.  ஏன் அப்படிச் செய்யக் கூடாது? கல்யாணத்தை வியாபாரமாக ஆக்காமல் இருக்கலாமே?  இவங்க கல்யாணம் என்பதை என்னனு புரிஞ்சுட்டு இருக்காங்க?   ஒரு ஆணும், பெண்ணும் உடல் உணர்வுகளைத் தீர்க்க மட்டும் தான் கல்யாணம் என்ற எண்ணமா? அதையும் தாண்டிய ஒண்ணு கல்யாணத்திலே இருக்குங்கற செய்தியை இக்காலப் பெண்களுக்குச் சொல்லப் போவது யார்?

Friday, November 22, 2013

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில்! தொடர்ச்சி!

மடிக்கணினிக்கு என்னமோ உடம்பு. நேத்திக்குப் பூராவும் ஓய்வு எடுத்துண்டதும், இன்னிக்கு டாக்டரைப் பார்த்ததும், தானே சரியாயிடுத்து. அது கிட்டே ரொம்பக் கோபமா வந்தது.  ஆனால் கடந்த இரு நாட்களும் எதுவுமே சரியில்லை.  ஒரே பிரச்னை மேல் பிரச்னை.  நேத்திக்குக் கோவிலுக்குப் போய்ப் பெருமாளைப் பார்த்து "ஹெலோ" சொன்னதும் கொஞ்சம் மனம் லேசாச்சு. இம்முறை ஒரு நிமிஷம் நிக்க முடிஞ்சது. நம்பெருமாளும் எப்போவும் போல நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சிண்டார். இப்போ நம்ம சித்ரகூடப் பயணத்தைத் தொடருவோமா?
*******************************************************************************

சித்ரகூடம் பாதி நகரம் உத்தரப் பிரதேசத்திலும், பாதி நகரம் மத்தியப் பிரதேசத்திலும் உள்ளது.  உத்தரப் பிரதேசப் பகுதி தாண்டினதுமே நல்ல வெளிச்சம் இருக்கு.  அதாவது மின் விநியோகம் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது.  ஆனாலும் எங்களால் ஹோட்டல்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  முதலில் சொன்ன ஹோட்டலில் இருந்து கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் போயிருப்போமோ என்னமோ!  ஒரே ஒரு ஹோட்டல் திறந்திருந்தது.  படிகள் ஏறிப் போகணும். ஆனால் நானும் வந்து அறையைப்பார்க்கணும்னு எங்க இரண்டு பேருக்குமிடையே பேசப்படாத ஒரு ஒப்பந்தம்.  ஆகவே வேறே வழியில்லாமல் இறங்கினேன்.  இந்த ஆட்டோக்களே தனிப்பட்ட முறையில் இருக்கின்றன.  உயரக் காலைத் தூக்கி வைச்சு ஏறணும். மடிக்க முடியாத முழங்காலோடு ஏறவும், இறங்கவும் கஷ்டம்.  ஹோட்டலுக்கு வேறே பத்துப் படிகள் ஏறணும்.  ஏறி அங்கே போனால் அங்கே இருந்தவரை எழுப்பினோம்.

முதலில் அறை இல்லைனு சொன்னவர், என்னைப் பார்த்ததும் இரவு தங்கிப் படுத்துக்க இடம் வேணும்னா தரேன்னு சொன்னார்.  அது ஏதானும் அறையிலிருக்கும்னு நினைச்சால், கடவுளே, அங்கேயே ஒரு ஒதுக்குப்புறமான ஹாலில் கிட்டத்தட்டப் பத்துப் பேர் படுத்து உறங்கினார்கள்.  அவங்களைக் கொஞ்சம் ஒதுங்கச் சொல்லிட்டு நமக்கு இடம் கொடுப்பாங்களாம்.  இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு திரும்ப நினைச்சோம்.  அதுக்குள்ளே எங்க முகத்தைப் பார்த்த அந்த நபர், "இதெல்லாம் ராயல் குடும்பம் போலிருக்கு"னு நினைச்சிருப்பார் போல!  உங்களுக்கெல்லாம் சரியா வராதும்மானு சொல்லிட்டு, தேவி பகவதி ஹோட்டல் என்னும் பெயரை ஆட்டோக்காரரிடம் சொல்லி, வழியையும் சொல்லி அங்கே கட்டாயம் அறை கிடைக்கும் என்றும், ரொம்ப ரொம்ப வசதியாய் இருக்கும்னு சொன்னார்.

ஆஹானு மகிழ்ந்து போய் ஆட்டோவில் மறுபடி ஏறினோம்.  கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கும் மேலே போனதும் அந்த தேவி பகவதி ஹோட்டல் வந்தது.  ஆட்டோ அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் நின்றது.  நின்றது ஒரு மேடான இடம்.  அங்கிருந்து இறங்கிப் பள்ளத்தில் போய் மலைச்சாரலில் இன்னும் பள்ளத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.  அது தான் தேவி பகவதி ஹோட்டல்.  பகவானே!  இப்போத் தானே கட்டிட்டு இருக்காங்க.  அதோடு போற பாதையே சரியில்லையே!  இங்கே எப்படிப் போறது? நான் வரமாட்டேன்னு அடம் பிடிக்க, அந்த ஹோட்டல் கதவு திறந்து விளக்குப் போடப்பட்டது.  ஆட்டோக்காரரும் அவருடைய உதவியாளும் போய்ப் பேசினாங்க.  அறை இருப்பதாகச் சொல்லி இருக்காங்க.  ஆகவே ஆட்டோக்காரர், பிரச்னை தீர்ந்ததுனு நிம்மதியா சாமானைத் தூக்க ஆரம்பிச்சார். நான் ஆக்ஷேபிக்க, ரங்க்ஸோ இந்த நேரத்தில் வேறே எங்கே போய்த் தேடுவோம், பேசாமல் வா, என்று அதட்ட அரை மனசாப் போனேன்.

அங்கே மாடியில் (லிஃப்டெல்லாம் இல்லை) படிகள்.  ஒவ்வொன்றுக்கும் குறைந்தது முக்காலடி இருக்கும். :( படி ஏறிப் போனதும் கடைசியில் இருந்த அறை ஒன்றைக் காட்டினார். பத்துக்குப் பத்து அறைக்குள்ளேயே குளியல், கழிவறை போக மீதம் இருந்த இடத்தில் கட்டிலைப் போட்டு அழுக்கான படுக்கை.  அதிலே எப்படிப் படுக்கிறது? அதுக்குள்ளே ஆட்டோக்காரங்க சாமானைக் கொண்டு அங்கே வைச்சாச்சு.  அந்த விடுதிக் காப்பாளர்னு சொல்லக் கூடிய ஒரு நபர் (இளைஞன்) அங்கே வந்தார். வாடகை 450 ரூ என்றார்.  இந்த அறைக்கா? என நான் கேட்க, இப்போ இந்த வாடகை, நவம்பரில் ஆயிரம் ரூபாய் வாங்குவோம்னு சொன்னார்.  அந்த ஹோட்டலில் கீழ்த்தளம் மிகப் பெரிய ஒரு கூடம் (கிட்டத்தட்ட நூறு பேர் சாப்பிடலாம்) ஒன்றோடும், அதைத் தாண்டி சமையலறை, வெளியே கழிவறை, தண்ணீர்க் குழாய்கள் என்றும் ஹாலில் நுழையும் இடத்துக்கு அருகிருந்து மாடிப்படிகளோடும் காணப்பட்டது.  மாடியில் ஒரு தளம் தான் கட்டி முடிஞ்சிருந்தது.  இரண்டாம் தளம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முழுதும் கட்டி முடிச்சதும், கீழே சாப்பாடும், மேலே தங்குமிடமாகவும் இருக்குமாம்.

அதெல்லாம் சரி, இப்போ சாப்பாடுக்கு என்ன செய்யறது?  முக்கியமாக் காலைத் தேநீர் கிடைக்குமானு கேட்டதுக்கு அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுனு சொல்லிட்டார் அந்த வாலிபர்.  கடவுளே!  எங்கே போய்க் குடிக்கிறதுனா?  நீங்க போய்ப் பாருங்க ஏதேனும் டீக்கடை இருந்தால் குடிச்சுக்கலாம்னு பதில் வருது.  சாப்பாடும் அப்படியேனு சொல்லிட்டார். இங்கே இன்னும் இரண்டு நாள் தங்கணுமா?  மாடி ஏறி, ஏறி இறங்கி ரோடுக்குப் போய், அங்கிருந்து ஆட்டோ ஏதும் கிடைச்சால் கடைத்தெருக்குப் போய் அப்புறமாத் தான் சாப்பிட ஏதானும் கிடைக்கும்.  இங்கே நீங்க போட்டுத் தர மாட்டீங்களா, குறைந்த பக்ஷம் தேநீர் மட்டும் என்று கேட்டதுக்குப் பிடிவாதமாக அந்த இளைஞர் மறுத்துவிட்டார்.

விதியேனு ஒருத்தரை பார்த்து விழித்த வண்ணம் விளக்கை அணைச்சுட்டுப் படுத்தோம்.  இதுக்குள்ளாக மணி நாலு ஆகி இருந்தது.  எங்கே இருந்து தூங்க?  ஶ்ரீராமர் சித்திரகூடம் வந்து கஷ்டப்பட்டாரோ இல்லையோ, தெரியலை, நாம் கஷ்டப்படறோம்.  இங்கேருந்து எப்போத் திரும்பிப் போறது? திடீர்னு எனக்குக் கவலை வர, நாளைக்கு மதியம் ரயிலிலேயே திரும்பிடலாம்னு சொல்ல, லக்னோவோ, கான்பூரோ போய் இருந்தாலும் அங்கே எல்லாம் பார்க்க இரண்டு நாளைக்குள் தான் ஆகும்.  நம்ம டிக்கெட் புதன் கிழமைக்குத் தான் அதுவரை அங்கே சும்மா உட்கார முடியுமானு அவர் திரும்பக் கேட்க இரண்டு பேருக்கும் விடியும் வரை விவாதம். விடிஞ்சதும், பல் தேய்த்து விட்டுக் கீழே இறங்கினோம்.  அருகில் டீக்கடை இருக்கானு கேட்டுக் கொண்டே போய்க் கொஞ்ச தூரத்தில் தென்பட்ட ஒரு டீக்கடையில் தேநீர் குடிச்சோம். சகிக்கவில்லை.  திரும்பி ஹோட்டலுக்கு வந்து துணி துவைக்க முடியுமானு கேட்டதுக்கு! அப்பாடா, அந்த இளைஞன் தோய்த்து உலர்த்தக் கொடி கூடக் கட்டி இருக்கோம்.  உங்க அறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தில் பாருங்கனு உதவியாக ஒரு வார்த்தை சொல்ல, நான் என் துணி, அவர் துணினு எல்லாத்தையும் தோய்த்து உலர்த்திப் பின் குளித்தேன்.

நல்லவேளையா( என்னனு எங்களுக்கே தெரியலை) வெந்நீர் ஒரு பக்கெட் கொடுத்தான்.  ஆனால் அது வெந்நீர்னு சத்தியம் பண்ணணும். பரவாயில்லைனு அதிலே நான் மட்டும் குளிச்சேன்.  இரண்டு பேரும் டிபன் எங்கேயானும் சாப்பிட்டுட்டுச் சுத்திப் பார்க்கக் கிளம்பினோம்.  வெளியே வந்து ரோடில் நின்று ஒவ்வொரு ஆட்டோவாகக் கூப்பிட்டோம்.


Thursday, November 21, 2013

என்ன செய்யலாம் சொல்லுங்க! :(

மின்சார விநியோகம் மிக மோசமா இருக்கு. :( காலை ஆறு மணிக்குப் போனால் ஒன்பதுக்கோ, ஒன்பதரைக்கோ வந்தால் மறுபடி பனிரண்டுக்குப் போயிடும்.  திரும்ப மூணுக்கோ, (இன்னிக்கு மூணு மணிக்கு வந்திருக்கு) அல்லது மூணரைக்கோ வருது.  மடிக்கணினி வேறே உடம்பு சரியில்லாமல் இருக்கு.  அது இருந்தால் மின்சாரம் இல்லாத சமயம் ஏதேனும் எழுதியானும் வைச்சுக்கலாம்.  அப்புறமா மின்சாரம் வந்தப்புறம் பதிவைப் போடலாம். இப்போ அதுக்கும் வழியில்லை. மூணுக்கு வந்தால் மறுபடி ஆறு மணிக்குப் போயிடும். அப்புறமா ஏழுக்கோ ஏழரைக்கோ வந்து திரும்ப ஒன்பதுக்குப்போயிடும். மொத்தம் ஆறு மணி நேரம் பகல் நேரத்தில் இருந்தால் பெரிய விஷயம்.

இந்த நேரத்துக்குள்ளேயே  வீட்டு வேலைகளை எல்லாம் பண்ணிக்கணும்; முட்டி மோதிக்க வேண்டி இருக்கு. மின்சாரம் இல்லாத நேரம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா உட்காரணும். :( ஒண்ணுமே சரியில்லை!

Tuesday, November 19, 2013

ஶ்ரீராமனின் பாதையில் --சித்திரவதையுடன் சித்திரகூடப் பயணம்!

என் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா? சந்தேகமே! "தங்க மங்கை" பிடி. உஷா கூட தோத்திருப்பார்.  அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.  எல்லாரும் அவரவர் வேலையிலே கவனமாக இருந்தார்கள்.  ஆனால் ரங்க்ஸ்? கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றி வந்தப்போ எதிரே இருந்த கான்டீனில் தெரிஞ்ச முகமாத் தெரியவே, சாமானை விட்டுத் தள்ளியும் போகாமல் அங்கே இருந்தே உற்றுப் பார்த்தேன்.  அதுக்குள்ளாக அந்த முகமும் என்னைப் பார்த்து, "இரு, வரேன்!" என்று ஜாடை காட்டியது. சீ, எனக்கிருந்த குழப்பத்தில் அந்த முகம் ரங்க்ஸுக்குச் சொந்தம் என்று புத்தியில் உறைக்கவே ஒரு நிமிடம் ஆயிற்று.  உடனே வந்தது பாருங்க ஒரு கோபம்.  சாமான் எங்கே இருக்கு?  அப்படியே போட்டுட்டு அங்கே போய் என்ன செய்யறார்?  வரட்டும், இரண்டு கையாலேயும் பார்த்துடுவோம்.

சற்று நேரத்தில் கையில் தண்ணீர் பாட்டிலுடன் ரங்க்ஸ் வந்து சேர்ந்தார்.  "எங்கே போனீங்க?"  "தண்ணியே இல்லை! வாங்கப் போனேன்!" "அது சரி, என்னோட ஹான்ட் பாக் எங்கே?"  "ஹான்ட் பாகா?" திரு திரு திரு திரு!

நான், "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்களை நம்பிப் பையைக் கொடுத்துட்டுப் போனா வீசி எறிஞ்சுட்டுப் போயிருக்கீங்க!" குற்றம் சாட்டியாச்சு.  அவருக்குத் தன்னிடம் ஹான்ட் பாக் இருந்ததோ, அதைக் கீழே இறக்கியதோ எதுவுமே மனதில் படவில்லை. ஹான்ட் பாகும் வெயிட்டாக இருந்ததால் எல்லா சாமான்களையும் இறக்கி வைச்சாப்போல் வைச்சுட்டேன் என்றார். முறைச்ச நான் "இனி ஹான்ட்பாகை உங்க கையிலே கொடுக்கவே போறதில்லை.  நானே வைச்சுக்கறேன்."என்று அவசரச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விட்டு, "எந்த நடைமேடை?" என்று கேட்டேன்.  ஆறாவது நடைமேடையாம்.  அங்கே போனோம்.  இந்த மாதிரி ஒரு கூட்டத்தை என் ஜன்மத்தில் பார்த்தது இல்லை.  அதோடு  நடைமேடை அந்தக் கால எழும்பூர் நடைமேடையை ஒத்திருந்தது.  அருகே கார், வண்டிகள் வந்து நிற்கும் பாதை.  அங்கே நடை மேடையின் ஒரு ஆரம்பத்திலிருந்து இன்னொரு பக்க முடிவையும் தாண்டி பெட்டி, படுக்கையோடு வரிசையாக ஆட்கள் அமர்ந்திருந்தனர்.  படம் எடுக்க முடியவில்லை.  காமிராவை உள்ளே வைச்சுட்டேன்.  செல்லைக் "கு" ரங்கார் கேட்டுட்டு இருந்தார். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததுமே வயிற்றைக் கலக்கியது.  முன் பதிவும் இல்லாமல் எப்படி ஏறப் போறோம்?

சிறிது நேரத்தில் பின்னால் வரிசை கட்டி நின்றவர்கள் இரவு ஒன்பது மணிக்கு லக்னோவிலிருந்து மும்பை செல்லும் வண்டிக்குக் காத்திருந்தவர்கள்(முன் பதிவில்லாமல் ஏறுவதற்கு) என்பது புரிந்தாலும் இந்த நடைமேடையில் எக்கச் சக்கக் கூட்டம்.  அதோடு உட்கார எங்கேயும் பெஞ்சோ, உட்காரும் மேடைகளோ இல்லை.  நிற்க வேண்டி வந்தது.  சும்மாவே வீங்கிக்கும் என்னோட கால் நிற்க ஆரம்பிச்சதும் தள்ளாட ஆரம்பிச்சது.  ஏற்கெனவே முதல் நாள் அலைச்சல் வேறே.  போர்ட்டர் ஒருத்தர் வண்டியில் சாமான்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு அந்த வண்டியிலேயே உட்கார அவரிடம் கேட்டுக் கொண்டு நானும் போய் உட்கார்ந்தேன்.  ஐந்தரைக்கு வண்டி வந்தது.  லக்னோவிலிருந்து தான் கிளம்புகிறது.  ஆனால் சித்ரகூடம் வரை மட்டும் சென்று கொண்டிருந்த வண்டியை ஜபல்பூர் வரைக்கும் நீட்டித்திருப்பதால் கூட்டம் தாங்கவில்லை.

பொதுப்பெட்டியில் ஏறக் கும்பல்.  அந்தக் கும்பலில் என்னால் ஏறவே முடியவில்லை.  ரங்க்ஸ் மட்டும் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு எப்படியோ ஏறிவிட்டார்.  அங்கே எனக்கும், அவருக்கும் அந்தப் பையை வைத்து உட்கார இடம் போட்டுவிட்டு, என்னை அழைக்க வந்தார்.  சரினு நானும் சாமான்களை ஏற்றிவிட்டு, ஏறப் பார்த்தால் ஏற விடாமல் தள்ளு, முள்ளு.  கீழே விழ இருந்தேன்.  தள்ளிவிட்டு எல்லாரும் அவரவர் காரியத்தில் கண்ணாக ஏற ஆரம்பிக்கின்றனர்.  ரங்க்ஸ் எப்படியோ முண்டி அடிச்சுண்டு வந்து என்னிடம் இருந்து சாமானை வாங்கிக் கொண்டு உள்ளே வைத்துவிட்டு என்னையும் அழைத்துச் சென்றார்.  ஒடுங்கிய வண்ணம் உட்கார இடம் கிடைச்சது.  உட்கார்ந்தோம்.  சாதாரணமாக ஸ்லீப்பர் க்ளாஸ் எனில் மூன்று பேர் உட்காரும் இடம்.  ஆறு பேர் அமர்ந்திருந்தோம்.  மேலும், மேலும் ஜனங்கள் வந்து கொண்டிருந்தனர்.  ஒரே குட்கா வாசனை, சிகரெட், பீடி வாசனை.

சொகுசாய்ப் பயணம் செய்து பழக்கப்பட்டுப் போன உடம்பும், மனமும் பலமாக ஆக்ஷேபிக்க, அதை அடக்கத் தெரியாமல் அழுகையும், கோபமும் முட்டிக் கொண்டு வந்தது.  இத்தனைக்கும் நடுவில் யார் ஏறினாங்க, யார் ஏறலைனு கவலையே இல்லாமல் வண்டி கிளம்பி வேகம் எடுத்தது.  ஒவ்வொரு ஸ்டேஷனாக நின்று நின்று போச்சு.  ஒவ்வொன்றிலும் பதினைந்து பேர் இறங்கினால் முப்பது பேர் ஏறினார்கள். மேலும் நெரிசல். பாத்ரூம் போகக் கூட வழியில்லை. கான்பூரில் சாப்பிட ஏதேனும் வாங்கலாம் என்றால் தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியலை.  வண்டிக்குள்ளேயே சமோசா கொண்டு வந்ததை ரங்க்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டார்.  அவருக்கு மாத்திரை சாப்பிட ஏதேனும் உணவு எடுத்துக் கொண்டாகணுமே!  வேறே வழியில்லை.

மதியம் பனிரண்டு மணிக்குச் சாப்பிட்ட தவா ரொட்டியெல்லாம் ஜீரணம் ஆகிவிட்டது.  வயிறு கூவியது.  தேநீர் வாங்கிக் கொடுத்தார். பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு.  தேநீர்ப் பாத்திரத்தைக் கழுவிய நீரைக் கொடுத்தார் அந்தத் தேநீர் விற்பவர்.  என்ன இருந்தாலும், என்ன அவசரம்னாலும் ராஜஸ்தான், குஜராத்தில் இந்தத் தேநீர் விஷயத்தில் ஏமாத்தவே மாட்டாங்க. வண்டியோட ஓடி வந்து கொடுப்பாங்க என்பதோடு நல்ல தேநீராகவும் கிடைக்கும். அடுத்து மஹாராஷ்ட்ரா!  இந்த மூணு மாநிலத்தையும் விட்டால் மற்ற எங்கேயும் நல்ல தேநீரே கிடைக்காது(தமிழ்நாடு உட்பட). வாங்கியதை அப்படியே கொட்டினேன்.  தண்ணீர் குடிக்கவும் பயம்.  நம்பர் ஒன் வந்தால் போக வழியில்லை.  மணி ஏழுக்கு மேல் ஆகவும் ஏறினவங்க அப்படி அப்படியே படுக்க ஆரம்பிச்சாங்க.  கழிவறை போகணும்னா அவங்க மேலே ஏறிக் குதிச்சுத் தான் போகணும்.  அவ்வளவு ஏன்? இறங்கணும்னாக் கூடக் கஷ்டம்.  ஒரு ஸ்டேஷன் முன்னாடியே போய் வாசல் கிட்டே நின்னுக்கணும்.  கீழே காலை எல்லாம் வைச்சுக்கவே முடியலை.  காலடியில் மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.  மேலே சாமான்கள் வைக்கும் இடத்திலும் காலைத் தொங்கப் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தனர்.  இத்தனைக்கும் மேல் ஒவ்வொருத்தரும் கொண்டு வந்த சாமான்கள் வேறே!

இரவு பத்தேகாலுக்குச் சித்ரகூடம் போகும் னு சொன்ன வண்டி ஒரு மணி ஆகியும் போகலை.  அதுக்குள்ளே வண்டியில் வந்த இரண்டு பண்டிட்கள் எங்களுக்குச் சிநேகமாக அவங்க சித்ரகூடத்தில் இறங்குவதால் எங்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னார்கள்.  அதே போல் நட்ட நடு இரவில் இரண்டரை மணிக்கு வண்டி சித்ரகூடத்தை அடைந்ததும், எங்களையும் இறக்கி சாமான்களையும் இறக்கி ஒரு ஆட்டோ பார்த்து அமர்த்தி, போக வேண்டிய ஹோட்டலையும் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.  இது வரை எல்லாம் நல்லாவே நடந்தது.  ஆனால் போன இடத்தில் அந்த ஹோட்டலில் இடம் கிடைச்சதா?  ம்ஹ்ஹும், ஹோட்டலில் அழைப்பு மணியை அழுத்த, அழுத்த யாருமே வந்து திறக்கவே இல்லை.  ஆட்டோக்காரருக்கு அந்த இரவில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் செல்ல அழைப்பு மேல் அழைப்பு வருது.  ஆனால் நாங்களோ சாமான்களோடு வண்டியில்.  அவருக்கோ போயாகணும்!

மறுபடி வேறே ஹோட்டலைத் தேடி ஆட்டோ சென்றது! நல்ல ஹோட்டலாகக் கிடைத்திருக்கக் கூடாதோ!

Sunday, November 17, 2013

ஶ்ரீராமனின் பாதையில்! அவரைக் காணோமே!

காலை எழுந்ததும் குளித்து முடித்துத் தயாராகிக் காலை உணவு எடுக்காமல் நேரே ப்ரஞ்ச் சாப்பிடலாம்னு முடிவெடுத்து விடுதிக் காப்பாளரிடம் வண்டி பற்றிக் கேட்டோம்.  அவரும் லக்னோ செல்ல நாங்க சொன்ன தொகைக்கு ஒத்துக் கொண்டு ஒருத்தர் வரேன்னு சொல்லி இருப்பதாய்ச் சொன்னார். சரினு நாங்களும் அக்கம்பக்கம் கொஞ்சம் பார்த்து வரலாம்னு போயிட்டு வந்தோம். திரும்பி வந்தால் பசிக்கிறாப்போல் இருக்கவே கீழே போய் வெறும் ப்ரெட் டோஸ்டும், தேநீரும் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு எப்போத் தயாராகும்னு கேட்டுக் கொண்டு திரும்பினோம்.  கிளம்பத் தயாராக பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தோம்.  துணி துவைக்க நிறைய இருந்தது. சித்ரகூடம் போய்த் தான் தோய்க்கணும்.

பதினொன்றரைக்கு மீண்டும் கீழே போய் உணவு எடுத்துக் கொண்டோம். சரியாய்ப் பனிரண்டுக்கு வண்டியும் வர, விடுதி ஆட்கள் உதவி செய்ய லக்னோ நோக்கிக் கிளம்பினோம். விடுதியின் கவனிப்புக்கும், உதவிகளுக்கும் நன்றி சொல்லி ஆட்களுக்கும் தாராளாமாய் டிப்பி விட்டு சந்தோஷமாய்க் கிளம்பினோம்.  டிரைவர் இளைஞன்.  இன்னும் சொன்னால் சிறுவன் என்றே சொல்லலாம்.  ஆனாலும் அபாரமாக வண்டி ஓட்டினார். அவர் வீட்டில் ஆயிரம் வருஷத்துப் பழைய ஶ்ரீராமர் சிற்பங்கள் இருப்பதாகச் சொல்லி அங்கே அழைத்துச் சென்றார்.  வீடு தான் என்றாலும் கோயில் போன்ற அமைப்பில் இருந்தது.  அங்கிருந்தவர் அன்றைய வழிபாடு முடிந்து கதவு சார்த்திவிட்டதால் இனி மாலை மூன்று மணிக்கு மேல் தான் பார்க்கலாம்னு சொல்லிட்டார். கொஞ்சம் ஏமாற்றமே. லக்னோவுக்கு இரண்டரையிலிருந்து மூன்றுக்குள் வந்துவிட்டோம்.  நேரே முன் பதிவு செய்யும் இடம் போய் அன்றைய சித்ரகூட் எக்ஸ்பிரஸில் முன் பதிவுக்குக் கேட்டால் இங்கே டிக்கெட் மட்டும் தான்.  ரயிலில் டிடி யிடம் கேட்டு முன்பதிவு செய்து கொள்ளவும்னு சொல்லிட்டாங்க.  சரினு டிக்கெட்டை வாங்கிண்டு  உள்ளே போனால் ரயில் எங்கே வரும்னு தெரியலை.

அங்கே இங்கே அலைந்து விசாரித்தால்,"அது சோட்டி லைன்! அந்த ஸ்டேஷனுக்குப் போங்க!" னு சொல்லிட்டாங்க.  அப்போ மீட்டர் கார்டிலா வண்டி ஓடுது? சந்தேகம்.  சோட்டி லைன் ஸ்டேஷன் எங்கேனு கேட்டுண்டு போனோமா! வந்தது வினை!  எல்லா ஆட்டோக்காரங்க, ரிக்‌ஷாகாரங்க எல்லாம் சூழ்ந்து கொண்டு, 'எந்த வண்டி'னு கேட்கவே சரி, விபரமானும் தெரிஞ்சுக்கலாம்னு சொன்னோம்.  உடனே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ரயிலுக்கு நேரமாச்சாக்கும்.  உங்களால் போய்ப் பிடிக்க முடியாது;  நாங்க கொண்டு விடறோம்னு கையிலே இருந்து பெட்டிகளைப் பிடுங்காத குறை.

சமாளித்துக் கொண்டு நடந்தோம்.  ஒரு போர்ட்டரிடம் கேட்கலாம் என்றால் ஒருத்தருமே கண்ணில் படலை.  எல்லாரும் ஒளிஞ்சுண்டாங்க போல! அதற்குள்ளாகக் கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு ஆட்டோ ஓட்டி மெதுவாக எங்களிடம் வந்து எதிரே இருக்கும் கட்டிடத்தைக் காட்டி, அங்கே இருந்து தான் சித்ரகூட் எக்ஸ்பிரஸ் கிளம்பும், ரயிலுக்கு நேரமிருக்கு, மெதுவாகவே போங்கனு சொன்னார்.  அடக் கடவுளே! எப்படி எல்லாம் ஏமாத்த நினைக்கிறாங்கனு நினைச்சு அவருக்கு நன்றி சொல்லிட்டுக் கொஞ்சம் மெதுவாவே போக ஆரம்பிச்சோம்.

ரங்க்ஸ் முன்னாலே போக நான் பின்னால் போய்க் கொண்டிருந்தேனா!  ஒரு இடத்தில் நடைமேடை ஒன்றைக் கடக்கணும்.  அப்போ அவர் இறங்கிட்டார். கையில் பெட்டியை வைத்துக் கொண்டு என்னால் இறங்க முடியலை.  ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு இறங்கினேன்.  அதுக்குள்ளாக அவர் இன்னும் தூரமாகப் போயாச்சு.  என்னை ஒரு ஆள் தொடர்ந்து வந்தான்!  "மேடம், மேடம்," என்றான்.  திரும்பிப் பார்த்தேன்.  "உங்க பர்ஸ் அங்கே விழுந்துடுச்சு. எடுத்து வைச்சிருக்காங்க. வாங்க, வாங்கித் தரேன்!"  என்றான். எல்லாம் ஹிந்தியிலே தான்.

நான் எப்போவுமே கையிலே பர்செல்லாம் வைச்சுக்க மாட்டேன்.  கைப்பை தான்.  அதிலேயே குடித்தனமெல்லாம் பண்ணிடுவேன். சின்ன பர்ஸ் அவர் தான் வைச்சுப்பார்.  அதையும் அவர் மறந்து வைச்சுடறார் என்றே இம்மாதிரியான நேரங்களில் நான் வாங்கி என் கைப்பையின் உள்ள்ள்ள்ள்ள்ளே போட்டுடுவேன்.  ஆகவே நிச்சயமாய்ப் பர்ஸ் விழவில்லை. என்றாலும் நான் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்தவாறே, "நீயே எடுத்துக்கோ!" என்று சொல்லிவிட்டேன்.  அதுக்குள்ளாக ரங்க்ஸுக்கு நான் வரேனானு சந்தேகம் வந்து திரும்பிப் பார்த்து அங்கிருந்தே என்னனு கேட்க, நானும் ஒண்ணும் இல்லைனு சொன்னேன்.

வந்த ஆளும் தன்னோட வேலை இங்கே ஆகாதுனு புரிஞ்சுண்டு திரும்பினான்.  அந்த ஸ்டேஷனுக்குப் போய் எந்த நடைமேடைனு பார்த்துட்டு அங்கே போகிறதுக்குள்ளே எனக்கு அவசரமாக இயற்கையின் அழைப்பு வர ரங்க்ஸிடம் கைப்பையைக் கொடுத்து பத்திரமா வைச்சுக்கச் சொல்லிட்டு பயணிகள் தங்கும் அறைக்குப் போய்ப் பார்த்தா சுத்தம்! ஒண்ணுமே இல்லை.  அங்கே இருந்தவங்க கிட்டேக் கேட்டால் தெரியாதுனு சொல்றாங்க.  ஆஹா, கொடுத்து வைச்சவங்கப்பா!  இயற்கை அழைப்புக் கூட இல்லாதவங்களா இருக்காங்களேனு நினைச்சு வெளியே வந்து அங்கே இங்கே மோதி ஒரு வழியாக் கண்டுபிடிச்சுப் போனால்!


க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  பணம் கொடுக்கணும்.  வெறும் கையை வீசிண்டு போனால்?? திரும்ப ரங்க்ஸை விட்ட இடத்திலே தேடி அவர் கிட்டே பணத்தோடு அர்ச்சனையும் வாங்கிக் கட்டிண்டு மறுபடி கழிவறை போய்ட்டுத் திரும்பி வரேன். சாமான் எல்லாம் பப்பரப்பேனு கீழே வைச்சிருக்கு.  சாமான் மட்டும் இருந்தால் பரவாயில்லையே!  எடுத்துட்டுப் போக வசதியா என்னோட கைப்பையும் அங்கே வைச்சிருக்கு. ஆனால் ரங்க்ஸைக் காணோம்! கடவுளே! இந்தக் கைப்பையில் தானே  திரும்பிப் போக டிக்கெட்டிலே இருந்து எல்லா கஜானாவும் இருக்கு.  இதை இங்கே இப்படி அநாதையா விட்டுட்டு அவர் எங்கே போனார்?

Saturday, November 16, 2013

அயோத்தி முடிவு! நந்திகிராமம்--தொடர்ச்சி!

பரதன் இருந்த குகையே இன்னொன்று விக்கிரமாதித்தனால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற அறிவிப்பைச் சென்ற பதிவில் பார்த்தோம். அதுவும் தற்போதைய "பரத் -ஹநுமான் மிலன் மந்திருக்கு அருகேயே உள்ளது.  அங்கே  சுமார் 27 தீர்த்தங்கள் உள்ளதொரு தீர்த்தஸ்தானம் இருக்கிறது.  தற்சமயம் அதைச் சுற்றிக் கிணறு போல் கட்டியுள்ளனர். பரதனின் குகைக்கான அறிவிப்புப் பார்க்கலாம்.  ஆனால் உள்ளே செல்ல விடுவதில்லை.


தவக்கோலத்தில் பரதன்.  இங்கே தன் மனைவியுடன் காணப்படுகிறான்.


பரதன் மனைவி மாண்டவி

மன்னனுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் வண்ணம் நந்திகிராமத்திலேயே தங்கிய குலகுருவான வசிஷ்டர்

பரதன் தவமிருந்த குகை குறித்தும் 27 தீர்த்தங்களைக் குறித்துமான அறிவிப்பு

பரதன் பூஜித்ததாய்ச் சொல்லப்படும் ராமர் பாதுகை.  எழுத்தால் எழுதி இருக்கேன்.  ஆனால் மங்கலாகத் தெரிகிறது. :(

இக்ஷ்வாகு குலத்தவர் வழிபட்ட சிவன் சந்நிதி.  இது புதுசாய்த் தான் இருக்கு. ஆனால் முன்னர் லிங்கம் இருந்ததாய்ச் சொல்லப்படுகிறது.


தீர்த்தக் கிணறு.  இங்கே கோயிலை நிர்வகிக்கும் சந்நியாசி(பெரும்பாலான கோயில்களை சந்நியாசிகளே நிர்வகிக்கின்றனர்.) அன்று பலருக்கு அன்னதானம் செய்து  கொண்டிருந்தார்.  அதைப் படம் எடுக்கவில்லை. ஆனாலும் அன்னதானத்துக்கு எங்களால் ஆன தொகையைக் கொடுத்தோம். இம்மாதிரி நிறைய சந்நியாசிகளால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் அயோத்தியில் நிறைய இருக்கிறது.  வசூலும் நிறையவே கேட்கின்றனர். இதில் நிறையவே கவனம் தேவை.  இதற்கடுத்துத் தான் மணிபர்பத் போனோம்.  அங்கே பழைய பெளத்த ஸ்தூபம் மேலே இருக்கிறதாய்ச் சொன்னார்கள்.  செல்லும்போதே மணி ஐந்து ஆகிவிட்டது.  அதோடு மேலே ஏறவும் கூடாது என மருத்துவர்கள் கட்டளை.  முன்னோர்கள் வேறே மலை ஏறும் வழியில் கூட்டம் கூட்டமாய்க் காத்திருந்தனர்.  ஆட்டோவிலோ எதையும் வைத்துவிட்டுப்போகக் கூடாது என்று அன்புக் கட்டளை. காமிராவை வெளியே எடுக்க விடாமல் முன்னோர்கள் படுத்தல்.  தேநீர் குடிக்கக் கடைக்கு வெளியே அமர்ந்தால் கூடவே அவங்களும்!  அயோத்தி நகரை மேலிருந்து பார்க்கலாம் என்றும் சொன்னார்கள்.  எனினும் ஆவலை அடக்கிக் கொண்டோம். இதுவும் முற்றிலும் ராணுவப் பாதுகாப்போடு காணப்பட்டது.

சற்று நேரம் அந்த இயற்கையான சூழலில் அமர்ந்திருந்து தேநீர் அருந்திவிட்டுப் பின்னர் அங்கிருந்து கிளம்பி, நாங்கள் தங்கி இருந்த விடுதிக்குக் கிளம்பினோம்.  அங்கிருந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆயிற்று.  அதுவும் வழியை அடைத்திருந்ததால் சுற்றிச் சுற்றி நகருக்குள் வரவே அரை மணிக்கும் மேலாயிற்று.  அங்கிருந்து விடுதிக்கு வந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு விடுதிக் காப்பாளரிடம் மறுநாள் கான்பூர் செல்ல வண்டி கிடைக்குமா என்று கேட்டோம்.  அவரும் கேட்டுவிட்டுக் கான்பூர் செல்ல வண்டியின் விலையைக் கிட்டத்தட்டக் கூறினார்.  எங்கள் பிரயாணத்திட்டத்தில் அயோத்தியிலிருந்து கான்பூர் சென்று அங்கே இருந்து அருகிலுள்ள பிட்டூர் என்னும் ஊரிலுள்ள வால்மீகி ஆசிரமத்தைக் காண்பது.  பின்னர் கான்பூரிலிருந்து கிளம்பும் சித்ரகூட் எக்ஸ்ப்ரஸில் சித்திரகூடம் செல்வது என இருந்தது.

ஆனால் கான்பூர் செல்ல லக்நோவைத் தாண்டித் தான் செல்லவேண்டும் என்றும் பணம் அதிகம் ஆகும் என்றும் சொல்ல பயணத்திட்டம் மாறியது. அயோத்தியிலிருந்து மீண்டும் லக்நோவே சென்று அங்கிருந்து கிளம்பும் சித்திரகூட் எக்ஸ்பிரசில் சித்திரகூடம் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.  விளைவுகள் எப்படி இருக்கும் என அப்போது தெரியாது. விடுதிக் காப்பாளரிடம் மறுநாள் லக்னோ செல்ல வண்டிக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு அன்றைய தினம் நன்றாய்க் கழிந்த திருப்தியுடன் மறுநாளைக் குறித்த கவலை ஏதுமில்லாமல் படுத்துத் தூங்கினோம். மறுநாள் விடிந்தது.

Friday, November 15, 2013

இனி என்ன?? :(((((

நேற்று மடலைப் படிக்கையில் கூட ஏதோ ஹாக் செய்யப்பட்ட மின் மடல் என்றே நினைத்தேன்.   ஏனெனில் இன்னொரு தோழியின் ஐடி ஒரு வாரம் முன்னர் ஹாக் செய்யப்பட்டு அவங்களோட பெயரில் எனக்கெல்லாம் வேண்டாத மடல் வந்திருந்தது.  பின்னர் தோழியைத் தொடர்பு கொண்ட பின்னரே உண்மை தெரிந்தது.  ஆனாலும் உடனே ரேவதியைத் தொடர்பு கொண்டேன், அவங்களோட பேச முடியலை. அவங்க சகோதரர் பிள்ளை பேசினார்.  செய்தியை உறுதி செய்தார்.  அப்போவே மனம் உடைந்து விட்டது.  ஆனாலும் இது பொய்யாய் இருக்கக் கூடாதோ என்ற எண்ணமே தொடர்ந்து என் மனதில்.  சிறிது நேரம் கழித்து மீண்டும் ரேவதியுடன் தொடர்பு கொண்டேன்.  இம்முறை ரேவதியுடன் பேச முடிந்தது.  அவங்களால் பேசவே முடியலை.  அழக் கூடத் தெம்பில்லை.  சாதாரணமாக இரவு படுக்கும் முன் கழிவறை சென்றவர் திரும்பி வந்ததும் கீழே விழுந்துவிட்டார்.  அந்தக் கணமே உயிர் சென்றிருக்கிறது.  கொடுத்த வைத்த புண்ணியாத்மா என்றாலும் ரேவதிக்கு இனி என்ன?  என்ன செய்வது? என்ற குழப்பம், கவலை,

இத்தனை நாட்கள், வருடங்கள் கூடப் பழகிக் கூடவே நடந்தவர் இன்று இல்லை.  இன்றைய ஆங்கில தினசரி ஹிந்துவிலும் அறிவிப்பு வந்துவிட்டது.  அதன் பின்னரே என் மனதிலும் செய்தி உண்மை தான் என்ற எண்ணமே வந்திருக்கிறது. நேற்றிலிருந்து சமையல், சாப்பாடு எல்லாமே இயந்திரத்தனமாகச் செய்கிறோம். உப்பும், நீரும் சேரச் சேர மறக்கும் தான். வடு மறையுமா? சந்தேகமே. மனதில் ஒரு பெரிய பள்ளம் விழுந்து விட்டது.  என்னைத் தனிமடலில் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு எல்லாம் ரேவதியின் சார்பில் நன்றி.

இரண்டு நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை. :((( பதிவுகள் கொஞ்சம் தாமதமாக வெளிவரும். 

Thursday, November 14, 2013

ரேவதிக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு!

என் அருமைச் சகோதரி திருமதி ரேவதி(வல்லி சிம்ஹன்)  கணவர் சிங்கம் நேற்றிரவு திடீரென இயற்கை எய்தினார் என்னும் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  ரேவதிக்கும், அவர் குடும்பத்துக்கும் இந்த சோகத்திலிருந்து மீண்டு வரக் கூடிய அளவுக்கு மனோ தைரியத்தை ஆண்டவன் அருளுவானாக!

எனக்கு என்ன எழுதுவது, என்ன சொல்லுவது என்றே புரியலை.  

Wednesday, November 13, 2013

நந்திகிராமத்தின் காட்சிகளைக் காண வேண்டாமா?

நந்திகிராமத்தில் முதலில் சென்ற பரத்குண்ட் என்னும் இடம்.  இந்தக் குளத்து நீரைக் குளிக்கவோ, குடிக்கவோ மற்ற எதற்கும் பயன்படுத்துவதில்லை. மேலும் இங்கே பித்ரு காரியங்கள் செய்ய உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. நாங்கள் சென்றபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டபடியால் எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் சென்னை, திருவல்லிக்கேணியிலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரை இங்கே சந்தித்தோம். கிட்டத்தட்டப் பதினைந்து, இருபது ஆண், பெண்கள் வந்திருந்தனர்.

பரதனை ஆஞ்சநேயர் சந்தித்து ஶ்ரீராமர் வருகிறார் என்ற தகவலை அளித்த இந்த இடம் பரத்-அநுமன் மிலன் மந்திர் என அழைக்கப்படுகிறது.  முற்றிலும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது.  உள்ளே ஶ்ரீராமர் சந்நிதிக்கு இடப்பக்கமாகக் கீழே சென்றால் பரதன் இருந்த குகையும், பரதனும் ஆஞ்சநேயனும் சந்தித்து ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு மகிழ்ந்ததைக் காட்டும் சிற்பத்தையும், ராமர் பாதுகையையும் காணலாம்.

பரதனும் ஆஞ்சநேயனும் ஒருவரை கட்டி அணைத்த வண்ணம் காட்சி அளிக்கின்றனர்.

காட்டில் ஶ்ரீராமன் தவம் இருந்தான் எனில் நாட்டிலேயே தவம் இருந்த பரதன்.

ஆஞ்சநேயர் தனி சந்நிதியில்

ஆஞ்சநேயருக்கு மேலே சுவத்திலே நம்மாளு இருந்தாரா, கொஞ்சம் தூரக்க இருந்தாலும் விடலை!  பிடிச்சுட்டேன்.



லவ, குசர்களின் பாணத்தால் காயமடைந்த ஹநுமான் இங்கே வந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.


விக்கிரமாதித்தனைக் குறித்த விளக்கத்தைக் கொடுக்கும் அறிவிப்புப் பலகை. 

Sunday, November 10, 2013

அயோத்தியை நோக்கி! குப்தார்காட்டிலும், நந்திகிராமத்திலும்!

சிறிது நேரம் ஓய்வெடுக்கும் போதே ஆட்டோக்காரர் வந்து கூப்பிடுவதாக ரிசப்ஷனிலிருந்து தொலைபேசி அழைப்பு வர, உடனடியாகக் கிளம்பினோம்.  சாலை சரியாக இல்லாததாலும், விரைவில் இருட்டி விடுவதாலும் செல்ல வேண்டிய இடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திக்கிலே சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாலும் சீக்கிரம் சென்றால் தான் மாலை ஏழுக்குள் வர இயலும் என ஆட்டோ ஓட்டுநர் கூறக் கிளம்பிவிட்டோம்.  முதலில் சென்றது குப்தார்காட் என்னும் சரயு நதி தீரம்.

http://sivamgss.blogspot.in/2008/08/85.html/கதை கதையாம் காரணமாம்/ராமாயணம்

http://sivamgss.blogspot.in/2008/08/86.html

http://sivamgss.blogspot.in/2008/08/87.html

ஶ்ரீராமர் எந்தச் சூழ்நிலையில் சரயுவில் மூழ்கி மறைய நேர்ந்தது என்பதை என் "கதை கதையாம் காரணமாம்--ராமாயணம்" தொடரின் மேற்கண்ட சுட்டிகளில் காணலாம். (ஶ்ரீராம் கேட்டதினால் இந்த வரிகள் விட்டிருப்பதைத் தெரிந்து கொண்டேன், மன்னிக்கவும்.)


 அயோத்திக்கு மேற்கே உள்ள சரயு தீரத்தில் ஶ்ரீராமர் சரயுவில் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது.  அது குறித்த விளக்கங்களை ஏற்கெனவே எழுதி விட்டதால் சுட்டிகளை மட்டுமே அளித்துள்ளேன். ஹிந்தியில் "குப்த்" என்றால் மறைவாக, ரகசியமாக என்றெல்லாம் பொருள்படும்.  இங்கே தான் ராமர் மறைந்தார் என்பதால் குப்தார்காட் என இதை அழைக்கின்றனர்.  இங்கே நதிக்கரையில் ஒரு கோயிலும் இருக்கிறது.  இது தான் மதராசி மந்திர், அம்பாஜி மந்திர் என்றெல்லாம் அழைக்கப்படும் கோயில் என அறிந்தேன்.  ஆனால் நாங்கள் சென்ற நேரம் மணி மூன்று.  கோயிலை நான்கு மணிக்கு மேல் தான் திறப்பார்களாம். வெளியில் இருந்தே சில சந்நிதிகளை மட்டும் தரிசித்தோம். அவை கீழே.  சிவன் சந்நிதி மட்டும் பார்க்க முடிந்தது.


அதற்குள்ளாக ஆட்டோக்காரர் அழைப்பு மேல் அழைப்பு விடுத்துவிட்டார். அயோத்தியின் நிலைமை அப்படி உள்ளது.  எந்த நேரம் எந்த வழியை மூடுவாங்க, அல்லது திறப்பாங்கனு சொல்ல முடியாது. அதோடு இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் வேறே உள்ளன.  அவற்றுக்கு வெவ்வேறு திக்கில் செல்ல வேண்டும். இதுக்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தோம்.



வழியெங்கும் நெல் வயல்கள்.  கரும்புத் தோட்டங்கள்.  செழுமை பொங்கின. இவ்வளவு நீர், நில வசதி இருந்தும் நாடு ஏன் முன்னேறவே இல்லை என்ற கேள்வியும் மனதைத் துளைத்தது.  ஆங்காங்கே வயல்களில் வரப்போரமாகவோ அல்லது சாலைகளின் ஓரமாக வயல் கரையிலோ இயற்கை உரங்கள் மலை போல் குவிந்து கிடந்தன.  எங்கேயும் செயற்கையான உரத்தையே பார்க்க முடியவில்லை.  ஒவ்வொரு வீட்டிலும் அது குடிசையாக இருந்தாலும் குறைந்தது நான்கு பசுக்கள் இருந்தன.

குப்தார்காட்டின் படகுத் துறை.  காலை பார்த்த இடத்திலும் படகுத்துறை இருந்தது.  அங்கே ஆழம், வேகம் குறைவு. இங்கே ஆழம் நாற்பது அடிக்கும் மேல் என்றார்கள்.  வேகமோ வேகம்.  அதான் ராமர் இதைத் தேர்ந்தெடுத்தாரோனு நினைத்தேன்.


 கால்நடைப் பராமரிப்பும் சரி, வளர்ப்பும் சரி அமோகமாக இருப்பதும் தெரிந்தது.  பசுக்கள் மேயப் புல்வெளியும் ஏராளம்.  ஆகவே எந்தப் பசுவும் சினிமா போஸ்டரையோ, ப்ளாஸ்டிக் பைகளையோ சாப்பிட்டும் பார்க்கலை.  இதை இங்கே ஶ்ரீரங்கத்திலும் பார்க்கலாம்.  பசுக்களுக்கு மாட்டுச் சொந்தக்காரர் அறியாமல் நாமாக ஏதேனும் உணவைக் கொடுத்துவிட முடியாது. கொடுத்தால் அகத்திக்கீரை மட்டும் கொடுக்கலாம். பாழாய்ப் போனதெல்லாம் பசுவன் வயித்திலே என்ற பழமொழி இங்கே எடுபடாது.  ஏன் நீ சாப்பிடேன், என்று திருப்புவார்கள். இது மாட்டின் நன்மைக்கே என்றாலும் முதலில் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.  பின்னர் பழகி விட்டது.

குப்தார் காட்டிலிருந்து நாங்கள் சென்றது நந்திகிராமம். இங்கே தான் ஶ்ரீராமன் வருவதற்கு நேரம் ஆகிறது என்பதால் இனி அவன் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகத்தில் பரதன் தீக்குளிக்க இருந்ததும், அப்போது அநுமன் தூதுவனாக வந்து பரதனைக் காத்ததும் நடந்தது.  இங்கே அநுமனும், பரதனும் ஆலிங்கனம் செய்து கொள்ளும் சிற்பம் ஒன்றும், அநுமன் சந்நிதியும் உண்டு. பரதன் தவம் இருந்த குகையில் இப்போது ஶ்ரீராமன், பரிவாரங்களோடு கோயில் கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலின் அருகேயே இன்னொரு பழமையான கோயில் அது தான் உண்மையான பரதன் குகை என்று சொல்கிறது.  இதைக் கண்டறிந்ததும் விக்கிரமாதித்த அரசன் என்றும் சொல்கிறது. இரண்டையுமே சென்று பார்த்தோம்.  இரண்டாவது கோயிலில் கீழுள்ள குகைக்குச் செல்ல முடியவில்லை.  அநுமதி கொடுப்பதில்லை என்றனர்.  சிலர் அநுமதி கொடுப்பவர் வரவில்லை என்றனர்.  ஆக மொத்தம் பார்க்க முடியவில்லை. 

Saturday, November 09, 2013

அயோத்தி செல்கையில் எழுதிய அவசரப் பதிவு! தீபாவளி நினைவுகள்.

தீபாவளி நினைவுகள் - கீதா சாம்பசிவம்

கீதா சாம்பசிவம்

 சின்ன வயசில் தீபாவளி சமயம் அநேகமாய் ஜுரம் வந்து படுத்திருப்பேன். ஆகவே ரொம்பச் சொல்ல ஒண்ணும் இல்லைனே சொல்லணும்.  ஆனால் அப்போதிருந்த உற்சாகம், பட்டாசு வெடிக்கும் ஆர்வம் இப்போதைய குழந்தைகளிடம் இல்லை.  ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் அப்போதைய தீபாவளி நினைவுகள் நினைத்தாலே இனிக்கும்வகை தான். தீபாவளி குறித்த பேச்சு எல்லாம் நவராத்திரிக்கே ஆரம்பிக்கும். எனக்குத் துணி எடுக்கும்முன்னர் அப்பா ஒரு முறை தெரிஞ்ச ஜவுளிக் கடைகளை எல்லாம் சுத்தி வருவார்.  அந்த வருஷம் லேட்டஸ்ட் என்னனு தெரிஞ்சுப்பார்.எல்லாத்துக்கும் மேலே அதை வாங்கும் அளவுக்குப் பணம் வேணுமே, அதுக்காக மூணு மாதங்கள் முன்பிருந்தே தயார் பண்ணிப்பார். தீபாவளிக்கு பக்ஷணங்கள் நிறையவே செய்வாங்க.  அதுக்காகவும் சாமான்கள் சேகரம் பண்ணப்படும்.

அண்ணாவுக்கும், தம்பிக்கும் அரை டிரவுசர் எனப்படும் உடையும், மேல் சட்டையும் துணி வாங்கித்தைக்கக் கொடுப்பாங்க.  அதிலே தான் அப்பா காமெடி பண்ணி இருப்பார். வளரும் பசங்கனு சொல்லி தையற்காரரிடம் அளவு எடுக்கிறச்சே தாராளமாத் தைங்கனு சொல்லிடுவார்.   அரை மீட்டர் துணி போதும்ங்கற இடத்திலே ஒரு மீட்டர் வாங்கி இருப்பார்.  ஆகவே அது அண்ணா மாதிரி இரண்டு பையர்கள் போட்டுக்கிறாப்போல் இருக்கும். தம்பிக்கும் அப்படித் தான். இந்த தீபாவளிக்குத் தைச்ச டிரவுசரை அவங்க அதுக்கப்புறமா இரண்டு வருஷம் கழிச்சுப் போட்டால் கூடப் பெரிசாத் தான் இருக்கும். அவங்க போட்டுக்கவே முடியாது. ஆனால் அப்பாவுக்கோ பிள்ளைங்க ரெண்டு பேரும் அசுர வளர்ச்சி என நினைச்சுப்பார். அடுத்த தீபாவளிக்கும் இதே கதை தொடரும். அண்ணாவுக்குத் தைச்சதெல்லாம் தம்பி வளர்ந்து போட்டுக்க ஆரம்பிச்சான்னா பாருங்களேன்.

அடுத்துப் பட்டாசு.  அதுவும் குறிப்பிட்ட கடையிலே தான் வாங்குவார். எவ்வளவுக்குனு நினைக்கிறீங்க? இரண்டே ரூபாய்க்கு. அதிலேயே லக்ஷ்மி வெடி, குருவிவெடி, சீனிச்சரம், ஓலைப் பட்டாசு, கொம்பு வாணம், புஸ் வாணம், ஏரோப்ளேன், அணுகுண்டு, பென்சில் மத்தாப்பு, சாட்டை, கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு எல்லாமும் வரும். அதை நான்கு பாகமாய்ப்போடுவார் அப்பா.  நான் பெண் குழந்தை என்பதால் பட்டாசு எல்லாம் கிடையாதுனு சொல்லிப் பார்ப்பார்.  ஆனால் நான் விட மாட்டேனே! எனக்கும் வேணும்னு கேட்டு வாங்கி வைச்சுப்பேன். கடைசியிலே உடம்பாப் படுத்துப்பேனா, எல்லாத்தையும் அண்ணா, தம்பிக்குக் கொடுத்துடுனு அப்பா சொல்லுவார்.

கடைசியிலே அவங்களோடதையும் சேர்த்து அப்பாவே விட்டுடுவார். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே இருந்து அம்மா பக்ஷணம் பண்ண ஆரம்பிப்பாங்க. மைசூர்ப்பாகு நிச்சயமா இருக்கும். அல்வா நிச்சயமா இருக்கும். மற்ற ஸ்வீட் அம்மாவுக்கு என்ன முடியுமோ அது. மிக்சர் நிச்சயமா இருக்கும். அதுக்குப்  பண்ணும்போதே தேன்குழல், ஓமப்பொடினு பண்ணுவாங்க.  அப்புறமா உக்காரை நிச்சயமா இருக்கும். இது சிலர் அரிசியிலெ செய்யறாங்க. எங்க வீட்டிலே து.பருப்பு, க,பருப்பு வறுத்து ஊற வைச்சு அரைச்சுச் செய்வாங்க.  அது பற்றிப் பின்னர் எழுதறேன்.  தீபாவளிக்கு எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும் சமயங்களில் எல்லாம் எல்லா பக்ஷணங்களும் கார்த்திகைக்குத் திரும்பப் பண்ண ஆரம்பிச்சது கடைசியில் அது ஒரு வழக்கமாவே மாறிப் போச்சு! :))))

தீபாவளிக்குக் காலம்பர மூணரை மணிக்கே அம்மா எழுப்புவாங்க.  எழுந்துக்கத் தான் சோம்பலா இருக்கும். இந்த அம்மாவெல்லாம் தூங்கவே மாட்டாங்க  போலனு  நினைச்சுப்பேன். முதல்லே நான் எழுந்து குளிச்சாத் தான் அப்புறமா அண்ணா, தம்பி எல்லாம் குளிக்கலாம்.  அந்த நேரத்துக்கே அம்மா குளிச்சிருக்கிறதைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும். அப்பா அமாவாசையும் சேர்ந்து வந்தால் குளிச்சிருக்க மாட்டார்.  ஏன்னா, முதல்லெ ஒரு தரம் எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டா அப்புறமா  அமாவாசைத் தர்ப்பணத்துக்கு மறுபடி குளிக்கணும். ஆகவே பண்டிகை தனித்து வந்தால் எண்ணெய்க் குளியல். எல்லாம் முடிஞ்சு மூணு பேரும் குளிச்சுட்டு வந்ததும், அப்பா தன் கையாலே துணி எடுத்து தருவார்.  அதுக்குள்ளே அம்மா சாமிக்குக் கோலம் போட்டு விளக்கு ஏத்தி, பக்ஷணம், துணி, பட்டாசு எல்லாம் எடுத்து வைச்சிருப்பாங்க. அப்பா குளிச்சுட்டா நிவேதனம் பண்ணுவார்.  இல்லைனா அம்மாவை விட்டு செய்ய சொல்லுவார். எல்லாரும் புதுத் துணி உடுத்தி சந்தோஷமாப் பட்டாசு வெடிக்கப் போவோம்.

அதுக்கு அப்புறமா உள்ளூரிலேயே இருக்கும் பெரியப்பா, பெரியம்மா வீடுகள், தாத்தா வீடு ஆகிய வீடுகளுக்குப் போயிட்டு அவங்க கிட்டெ எல்லாம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வருவோம். பணமோ, துணியோ, பக்ஷணம், பட்டாசு என்று அது கலெக்‌ஷன் தனி.

இப்போதோ குழந்தைங்க ஒரு பக்கம், நாங்க ஒரு பக்கம்.  2011 ஆம் வருஷம் மட்டும் எங்க பையர் வீட்டிலே யு.எஸ்ஸிலே கொண்டாடினோம்.  குழந்தைங்களோட இருக்கிற சந்தோஷம் இருந்தாலும் இந்தியாவிலே பண்டிகை கொண்டாடிய சந்தோஷம் என்னமோ வரலை.  இப்போ நவராத்திரி என்றால் கூட கொலு வைச்சுட்டு நான் மட்டுமே தன்னந்தனியா உட்கார்ந்திருக்கிறாப்போல் இருக்கு.  அதுவும் சென்னையில் யாருமே வர மாட்ட்டாங்க. ஸ்ரீரங்கத்தில் பண்டிகை கொஞ்சம் பரவாயில்லைனு தோணுது.  என்றாலும் பக்ஷணத் தொழிற்சாலை மாதிரி பக்ஷணங்கள், புடைவைக் கடை போலப் புடைவைகள் என வாங்கிக் கொண்டாடிய காலம் எல்லாம் போய் இப்போ நாம் இருவர், நமக்கு நாம் இருவர் மட்டுமேனு தீபாவளி கொண்டாடிட்டு இருக்கோம்.

கல்யாணம் ஆனப்புறமா தீபாவளி என்பதும் கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்னரே பக்ஷணத் தொழிற்சாலை ஆரம்பிப்பதோடு ஆரம்பிக்கும். நம்ம ரங்க்ஸுக்குக் குடும்பம் மொத்தத்துக்கும் துணி எடுக்க வேண்டி இருப்பதால் தீபாவளிக்கு இரண்டு மாசம் முன்னாலிருந்தே சிக்கன நடவடிக்கைகளை ஆரம்பிப்பார். பக்ஷணத் தொழிற்சாலைக்கு வேண்டிய சாமான்களை சேகரம் செய்வது என் பொறுப்பு.  அக்கம்பக்கம் அனைவரின் ரேஷன் கார்டுகளையும் வாங்கி தீபாவளிக்குப் போடும் சர்க்கரை (அப்போல்லாம் எக்ஸ்ட்ரா சர்க்கரை போடுவாங்க) வாங்கிச் சேகரம் செய்வேன். காலை எழுந்து வீட்டில் சமையல், டிபன் வேலை முடித்து ஒன்பது மணிக்கெல்லாம் ரேஷனுக்கும் போய் சாமான் வாங்கி வந்து, பின்னர் வீட்டுக்கு வந்து மாமியார், மாமனாருக்குச் சாப்பாடுபோட்டு நானும் சாப்பிட்டுவிட்டு மறுபடி என்னோட கலெக்‌ஷன் வேலைக்குக் கிளம்புவேன். அதை முடிச்சுட்டு இரண்டு மணிக்கு வருவேன்.  கொஞ்ச நேரம் ஓய்வு. படிப்பு. ஹிஹிஹி, அப்போப் படிச்சுட்டும் இருந்தோமுல்ல! :))))

அது முடிஞ்சதும் மாலை டிஃபன், காஃபி, இரவு உணவுக்கான ஏற்பாடுகள்.  என்னிடம் படிக்கும் குழந்தைங்க, என் குழந்தைங்க எல்லாருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தல்னு இருக்கும்.  இதுக்கு நடுவிலே பக்ஷணமும் பண்ணி இருக்கேன்.  இப்போ??? நினைச்சாலே எப்படிச் செய்தோம்னு ஆச்சரியமாத் தான் இருக்கு.  விஜயதசமி அன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் போய் எல்லாருக்கும் துணி எடுப்போம்.  அநேகமாய் கோ ஆப்டெக்ஸ்;  ஒரு மாறுதலுக்கு உள்ளூர் துணிக்கடையில் கடனுக்கு.  அடுத்த தீபாவளி வரை வரும். :)))) என்றாலும் தீபாவளி உற்சாகமாகவே இருந்தது.  தொலைக்காட்சி வந்தப்புறம் தீபாவளி சிறப்புப் படமும், சிறப்பு நாடகமும் பார்க்க வீட்டில் கூட்டம் தாங்காது. அவரவர் வீட்டு பக்ஷணப் பரிமாற்றங்களோடு பார்த்த நாட்கள் அவை.

காலம் மாறியது என்பதோடு அல்லாமல் உறவுகள் ஒரு இடம் நாம் ஒரு இடம் என்றெல்லாம் ஆகும்னு நினைச்சுப் பார்க்கவில்லை. இதையும் ஏற்று கொண்டு வாழப் பழகியாச்சு.   எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.


பி.கு. மின் தமிழ்க் குழுமத்துக்காக அவசரக் கோலமாய் அள்ளித் தெளிச்ச பதிவு இது. குற்றம், குறை இருப்பின் மன்னிக்கவும்.

ஹிஹிஹி, அங்கே போணியே ஆகலை.  இங்கேயாச்சும் யாரானும் போணி பண்ணுங்கப்பா! :))))))

Friday, November 08, 2013

வந்துட்டேனே!

வந்துட்டேன். :) நேற்றைய பதிவு   (என்னைப் பொறுத்தவரை முக்கியமான பதிவு) வலைச்சரத்தில் கணிசமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது சந்தோஷமாக இருக்கிறது.  அந்த அளவுக்குப் பின்னூட்டம் வரலை என்பதும் உண்மை. :))) இது ஒரு புரியாத புதிர்.

கல்யாணத்துக்கு வந்தவங்களை எல்லாம் ராகுகாலத்துக்கு முன்னர் வழி அனுப்பிட்டு வீட்டுக்கு வந்தால் ஒரே நிசப்தம்.  ஒரு வாரமாகக் கலகலவென இருந்த வீடு.  இன்னிக்கு நாங்க மட்டும் வழக்கம் போல் . :))   கல்யாணப் பிள்ளை இங்கே இருந்து கிளம்பியதோடு அல்லாமல் நேற்று கிரஹப்ரவேசம் முதலான முக்கிய நிகழ்வுகளையும் இங்கே நம்ம வீட்டிலே நடத்தினாங்க. மாப்பிள்ளை ஊருக்குக் கிளம்பியதும் சென்டிமென்டாக இங்கே இருந்து தான்.  ஒரே ஓட்டம், பிடி தான் மூணு நாளும். சமையல் இல்லைனு தான் பேர்.  காப்பியும், டீயும் போட்ட வண்ணம்.

இன்னிக்கு வீட்டுக்கு வந்ததும், வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு முக்கியமான மடல்கள் மட்டும் பார்த்துட்டுக் கொஞ்சம் ஓய்வும் எடுத்துக் கொண்டு மீண்டும் கணினிக்கு இப்போத் தான் வந்திருக்கேன். பதிவுகள் எழுதணும். :))))  மறுபடியும் வரேன். 

Wednesday, November 06, 2013

ஊர்லே கல்யாணம், மார்பிலே சந்தனம்!

இங்கே எங்க குடியிருப்பு வளாகத்துக்கு எதிரிலுள்ள கல்யாணமண்டபத்தில் நெருங்கிய உறவினர் திருமணம்.  அதுக்காக ஏற்கெனவே ஞாயிறன்று என் தம்பி குடும்பத்தோடு வந்திருக்கிறார்.  இன்னிக்குக் காலம்பர திடீர்னு ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸின் தாமதத்தினால் கல்யாணப் பிள்ளையே அவர் அப்பா, அம்மாவோடு இங்கே  நம்ம வீட்டில் வந்து இறங்கும்படி ஆயிற்று. எதிரிலே கல்யாணம்; இங்கே அமர்க்களம்! :)))) அண்ணா குடும்பம் வேறு வந்திருக்காங்க.  ஆகவே இரண்டு, மூன்று நாட்களுக்கு இணையத்தில் அமர நேரம் இருக்காது.  வீடு நிறைய மனிதர்கள்.  சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி சாமான்கள். :)))

வெள்ளிக்கிழமை வரையும் வலைச்சர வேலையைக் கவனிக்க மட்டுமே கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருக்கேன்.  சனிக்கிழமைக்கான வலைச்சரப் பதிவை வெள்ளிக்கிழமைக்குத் தான் எழுத முடியும். :))) வலைச்சர வேலையும் திடீர்னு வந்த ஒன்று. ஆகவே அயோத்தித் தொடருக்குக் கொஞ்சம் தாமதம் ஆகும்.  டிடியை வேறே காணோமா!  வலைச்சரத்துக்கு வரவும் யாரும் இல்லை.  எனக்கும் போய்ச் சொல்ல முடியலை.  எல்லாரும் வலைச்சரத்துக்கு ஆதரவு கொடுத்து உங்கள் ஓட்டை வலைச்சரத்துக்கே அளித்து என்னை வெற்றியடையச் செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


சே, தேர்தல் நினைப்பு வந்துடுச்சு! :P

Monday, November 04, 2013

அயோத்தியை நோக்கி! பணமூட்டையுடன் நாங்கள்! :))))

ராம ஜன்மபூமி செல்லும் வழியில் கட்டவிருக்கும் ராமர் கோயிலின் மாதிரியையும் கட்டிக் கொண்டிருக்கும் இடத்தையும் காணலாம்.  அதைப் படம் எடுக்க முடியவில்லை.  அங்கிருந்து ஆட்டோவில் கொஞ்சம் பயணித்து ஶ்ரீராமஜன்ம பூமிக்குச் செல்லும் பாதையை அடைந்தோம். ஆட்டோ நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு  கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்று வரிசையில் நிற்பதற்கான வாயிலை அடைய வேண்டும். அதற்கு முன்னர் நாம் கையில் கொண்டு போகும் சாமான்களை வைக்கும் லாக்கர்  உள்ளது.  அங்கே சென்றோம்.  ஶ்ரீராம ஜன்மபூமியைப் படம் எடுக்கக் கூடாது.  மொபைல்களும் அங்கே பயன்படுத்தக் கூடாது.  கைப்பைகளோ, அல்லது ப்ளாஸ்டிக் பைகளோ, துணிப்பைகளோ எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது.  வெறும் கையோடு தான் செல்ல வேண்டும்.

ஆகவே என்னோட கைப்பையை லாக்கர் வைத்திருக்கும் இளைஞரிடம் கொடுத்தேன்.  அதிலுள்ள பணங்கள், நகைகள் இருந்தால் எடுக்கச் சொன்னார். நகைகளே ஏதும் கிடையாது.  பணத்தை எடுத்தால் எங்கே வைச்சுக்கறது!  அங்கே பணமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தங்குமிடத்துக்கு அன்றைய வாடகையை அன்றே கொடுத்தாக வேண்டும். இன்று மதியம் பனிரண்டு மணி மேல் அரை மணி நேரம் தங்கினாலும் ஒரு நாள் வாடகையைக் கொடுத்தாக வேண்டும்.  மேலும் ஏடிஎம் எங்கே இருக்குனு தேட வேண்டி இருக்கும். அதெல்லாம் யோசித்துப் பணமாகவும் இருந்தது.  சரி சின்ன பர்ஸில் வைக்கலாம் என சின்ன பர்ஸை எடுத்தேன்.  அருகிலிருந்த பாதுகாப்புக் காவலர் அதையும் மறுத்தார்.  அதுவும் எடுத்துச் செல்லக் கூடாது என்றார். நம்ம ரங்ஸோ வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கார்.  பான்ட் போட்டிருந்தால் பான்ட் பாக்கெட்டில் வைக்கலாம். என்ன செய்வது? அதுக்குள்ளாகப் பையைத் திரும்பக் கொடுத்த லாக்கர் இளைஞன், "நிறையச் சில்லறை இருக்கு,  அதையும் எடுங்க", னு சொன்னார். கைப்பையே கனம் தாங்காத அளவுக்கு கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய்க்குச் சில்லறை வைத்திருந்தோம்.  ஆங்காங்கே தேநீருக்கு, காபி, பழங்கள் வாங்கினால் சில்லறை இல்லாமல் சிரமப் படும் எனப் பத்து ரூபாய்க் காசிலிருந்து எட்டணா வரை சில்லறை இருந்தது.

எல்லாவற்றையும் காலி செய்தேன்.  அதுக்குள்ளே மேல்துண்டை எடுத்தார் நம்மவர்.  அதிலே கொண்டு போன ரூபாய்களையும் போட்டுச் சில்லறையையும் போட்டோம். ஒரு மூட்டையாகக் கட்டினோம்.  கொஞ்ச நேரம் ரங்க்ஸ் தூக்கிக் கொண்டு வந்தார்.  வழியெல்லாம் கிட்டத்தட்டப்பத்து இடங்களில் பாதுகாப்புச் சோதனை. அவங்களைப் போல் ஐந்து மடங்கு நம் வாநரர்களின் பாதுகாப்பு.  பாதுகாப்புக் காவலர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரளமாகப் பதில் சொல்ல முடிந்தது.  ஆகையால் பண மூட்டையோடு செல்ல எங்களை அநுமதித்ததோடு அவங்களோட கவலையையும் தெரிவிச்சு, என் புடைவைத் தலைப்பில் வைத்து மறைத்துக் கொண்டு குரங்குகளிடமிருந்து பாதுகாப்பாகச் செல்லும்படியும் கூறினார்கள். சுற்றிச் சுற்றிச் சுற்றி வழி சென்று கொண்டே இருந்தது.  ஆங்காங்கே பாதுகாப்புச் சோதனை!  அதே கேள்விகள், அதே பதில்கள்!

கிட்டத்தட்ட மீண்டும் ஒரு இரண்டு கிலோ மீட்டர் அந்த வரிசைக்கான சுற்றுவழியில் சுற்றிச் சுற்றிச் சென்றதும் திடீர்னு  "இதோ ராமஜென்மபூமி" என்று காட்டி வணங்கச் சொல்கின்றனர். ஶ்ரீராமர் குழந்தை வடிவில் மிகச் சிறிய உருவத்தில் காணப்படுகிறார். சுற்றிலும் ராணுவப்பாதுகாப்பு.  ராஜா அல்லவா?  மெய்க்காவலர்கள் புடைசூழக் காவலில் இருக்கக் காண முடிகிறது.  ஒரு பண்டிட் அங்கே சுற்றிலும் காவலர்கள் புடை சூழ அமர்ந்திருக்கிறார்.  "போலோ,  ஶ்ரீராம்லாலா கி ஜெய் !" என்ற கோஷம் எங்கும் எழுந்தது. ஆம் இங்குள்ள ஶ்ரீராமரைக் குழந்தை என்பதால் "ராம்லாலா" என அழைக்கின்றனர்.  பளிங்கினால் செய்த சிலையில் தங்கத்தால் கோட்டிங் செய்திருப்பதாகச் சொல்கின்றனர்.  ஶ்ரீராமர் விக்ரஹம் இருக்கும் இடத்துக்கும் நாம் தரிசனம் செய்யும் இடத்துக்கும் குறைந்த பக்ஷமாக ஐம்பது அல்லது அறுபது அடிக்கு மேலேயே இருக்கும்.  ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட பல்லக்கில் வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர்.

சற்று நின்று தரிசிக்கலாம்.  ஒண்ணும் சொல்வதில்லை என்றாலும் அடுத்தடுத்து மக்கள் வந்து கொண்டிருப்பதால் இரண்டு நிமிடத்துக்கு மேல் நிற்க முடிவதில்லை. விநயமாகவே நகரச் சொல்லி வேண்டுகோள் விடுக்கின்றனர்.  மீண்டும் அதே நாலு கிலோ மீட்டர் தூர நடை.  அதன் பின்னர் ஶ்ரீராமரின் உலோக விக்ரஹங்கள் சில வாங்கிக் கொண்டு அங்கே காத்திருந்த வழிகாட்டியுடன் அறையை நோக்கித் திரும்பினோம்.  அதற்குள்ளாக மணி பதினொன்றுக்கும் மேல்  ஆகிவிட்டதால் ஶ்ரீராமஜென்ம பூமியையும் மூடி விட்டார்கள்.  இனி மதியம் இரண்டு மணிக்குத் தான் திறப்பார்கள்.  அதோடு அங்கே மறுநாள் ஏதோ கிளர்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஏற்கெனவே தொலைக்காட்சிச் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிருந்தோம்.  அதை உறுதிப் படுத்துவதைப் போல் அயோத்திக்குள் வரும் வழிகளை மூடிக் கொண்டிருந்தனர்.  அதனால் தான் எங்கள் வழிகாட்டியும் எங்களை அவசரப் படுத்திக் காலைத் தேநீருக்குப் பின்னர் எதுவும் உண்ணக் கூட அநுமதிக்காமல் எல்லாவற்றையும் காட்டிவிட்டார். :))))

அறைக்கு வந்து நேரே உணவு எடுத்துக் கொண்டு சற்று ஓய்வு எடுத்துக்கலாம் என்று போனோம்.  ஆட்டோக்காரர் மதியம் பார்க்க வேண்டியவைக்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசினார்.  அவை எல்லாம் அயோத்தியிலிருந்து 25, 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவை.  ஒன்று ஶ்ரீராமன் சரயு நதியில் மறைந்த இடம் குப்தார் காட் என்னும் இடம்.  இன்னொன்று நந்திகிராமம்,  27 தீர்த்தங்களைக் கொண்டு வந்த இடம் ஒன்று , மணி பர்வதம் என்றொரு இடம்.  எங்களால் மணி பர்வதம் ஏற முடியாது என்று சொல்லிக் குறைச்சுக்கச் சொன்னோம். அவர் கூட்டித் தான் போவேன் என்றும் அங்கே போனப்புறம் ஏறுவதோ, ஏறாமல் இருப்பதோ எங்கள் இஷ்டம் என்றும் கறாராகச் சொல்லிவிட்டார். ஆட்டோக்காரரையும் அனுப்பிட்டுச் சாப்பிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மதியம் கிளம்பத் தயாரானோம். 

Saturday, November 02, 2013

தீபாவளி வாழ்த்துகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

தலை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு இனிய(தல)

தீபாவளி வாழ்த்துகள்.  :))))))))