எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 31, 2006

176, மறுபடியும் ஹூஸ்டன்

சுருங்கிப் போய் முறுக்கிக் கொண்டிருக்கும் என்னுடைய நுரையீரல் போன்ற புடவையைக் கையில் வைத்துக் கொண்டு திகைத்துப் போன நான் செய்வதறியாது முழிக்கையிலே சமையல் அறையில் இருந்து வந்த தீய்ந்த வாசனையும், புகையும் மேலும் திகைக்க வைத்தது. எனக்குப் புகை அலர்ஜி வேறே உண்டு. உடனேயே exhaust fan முழு வேகத்தில் சுழல வைக்கப் பட்டது. என் கணவர் சமையல் அறையின் ஜன்னல் கதவுகளையும், பால்கனிக் கதவுகள், மற்ற ஜன்னல் கதவுகள் எல்லாத்தையும் திறந்து வைத்தார். ஒரு வழியாகப் பதினைந்து நிமிஷங்கள் போராட்டத்திற்குப் பின் புகை வெளியேறியதும், நான் சமையல் அறைக்கு வந்து குக்கரைத் திறந்தால் கன்னங்கரேல் என்று சாந்து மாதிரி ஏதோ ஒன்று. நான் வைத்தது என்னவோ சாதம் தான். இது எங்கிருந்து வந்தது? வியந்தபடியே மூக்கைச் சுற்றித் துணி கட்டிக் கொண்டு (பின்னே தீஞ்ச வாசத்தை என்ன செய்யறது?) எல்லாவற்றையும் எடுத்து அங்கே தொட்டி முற்றத்தில் போட்டு விட்டு, disposer-ஐத் திறந்து விட்டு விட்டு, வெந்நீர்க் குழாயையும் திறந்து விட்டேன். அமெரிக்காவில் இது ஒரு வசதி. எல்லாத்தையும், தொட்டி முற்றத்திலேயே டிஸ்போஸ் செய்து விடலாம். குக்கரை என் கணவர் தான் தேய்ப்பதாய்ச் சொல்லவே நான் நேரடியாக மறுபடி சாதம் வைத்தேன். அதற்குள் ரொம்பக் கஷ்டப் பட்டுத் தேய்த்து வைத்த குக்கரை எடுத்துப் பார்த்தேன். பளீரென இருந்த குக்கர் உள்ளே கொஞ்சம்கொஞ்சம் கறுப்புப் பொட்டுக்கள் இருந்தது. பையன் ரொம்பவே உஷாரான பேர்வழி. ஹிஹிஹி, என் பையன் ஆச்சே? கட்டாயம் கண்டு பிடிப்பான். என்ன பதில் சொல்றது? மணி 12-ம் ஆச்சு. ஒருவழியாய்ச் சமைத்து விட்டு, என் கணவருக்குச் சாப்பாடு போட்டு விட்டு, நானும் சாப்பிட ஆரம்பிக்கும் போது பையன் வந்தான். வரும்போதே கேட்டுக் கொண்டு வந்தான். "என்ன ஏதோ தீஞ்ச வாசனை வருது? இங்கேயெ? வேறே எங்கேயுமா?" என்று. நான் வேறே எங்கேயும் இருக்கும் என்று சொல்வதற்குள் அவன் கண் குக்கரின் மேல் போனது.

ஏன் குக்கரில் சாதம் வைக்கலியா? என்று கேட்டான். நான் அது ரொம்ப வெயிட்டாக இருக்கு, என்னால் தூக்க முடியலை என்று சொல்லி முடிப்பதற்குள் அதைக் கையில் எடுத்து மேலே வைக்கப் போனவன் கண்களில் கறுப்புப் பொட்டுக்கள் பட்டிருக்கிறது. உடனே "என்ன இது?" என்று கேட்டுக் கொண்டு பார்த்தான். நான் அ.வ.சி. பேசாமல் ஜெட்லாக் இன்னும் தெளியலை (நிஜமும் அது தான், இல்லாட்டி இந்தியாவில் கையால் துவைக்கக் கூட வேலைக்கார அம்மா கிட்டே போடமாட்டேன் புடவையை, இங்கே வந்து மெஷினில் போடுவேனா?) ன்னு சொல்லிட்டுப் போய்ப் படுத்தேன். பையன் சாப்பிட்டு விட்டு வேலைக்குப் போய் விட்டான். இன்னொரு புடவை தூய கைத்தறிப் புடவை, கலாக்ஷேத்திரா காட்டன் புடவை, சற்று விலையும் அதிகம் தான், அதைக் கையால் துவைத்துக் காயப் போடலாம் என்று போனேன். துவைத்துப் பிழிந்து அதை உதறிக் குளிக்கும் தொட்டியைச் சுற்றித் திரை போட்டிருந்த குழாயில் திரையை விலக்கி விட்டுப் போட்டேன். அவ்வளவு தான். மறுபடி தொப்! குழாயோடு சேர்ந்து புடவையும் விழுந்து விட்டது. குழாய் சுவரில் பதித்திருக்க வில்லை. Vaccuam Fitting. இது தெரியாமல் போட்டிருக்கிறேன். இது என்ன பிரமாதம்? நம்மளே மாட்டலாம் என்று நினைத்துக் கிட்டத் தட்ட 1/2 மணி நேரம் முயன்றாலும் வரவே இல்லை. அங்கே அபார்ட்மெண்டில் வெளியே பால்கனி இருந்தாலும் துணி எல்லாம் காய வைக்க முடியாது. இந்தப் புடவையை மெஷினில் போடவும் முடியாது. குஞ்சம் எல்லாம் வைத்த முந்தி உள்ளது. குஞ்சம் வீணாகி விடுமே?

அதற்குள் உள்ளே போன என்னைக் காணோமே என்று என் கணவர் சற்றுப் பயத்துடனேயே வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவரும் கவலையுடனும், சந்தேகத்துடனும் முயற்சி செய்தார். அவராலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் முயன்றும் முடியவில்லை. அமெரிக்காவின் அபார்மெண்ட் ரூல்ஸ் எல்லாம் அங்கே இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆகவே ரொம்பவே பயமாய் இருந்தது. நம்ம ஊரில் என்றால் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு எவ்வளவு தொந்திரவு என்றாலும் கவலையே படாமல் அவங்க வீட்டுப் பக்கம் துணியைப் போட்டுவிட்டுப் போவாங்க. எனக்குத் தெரிஞ்சு "Archie Comics"ல் தான் Archie and Juggie இரண்டு பேரும் துணிகளைக் கொடி கட்டி க்ளிப் போட்டுத் தோட்டத்தில் உலர்த்திப் பார்த்தேன். அமெரிக்காவில் தனிவீட்டுக் காரங்க கூட யாரும் உலர்த்துவது இல்லை. புடவையை உள்ளே படுக்கை அறையிலேயே கதவில் கட்டி உலர்த்தினோம். மின் விசிறியைச் சுழல வைத்தால் கூட இங்கே மாதிரி அங்கே வேகமாய்ச் சுற்றாத மின் விசிறிகள் அங்கே. அநேகமாய் வீடு முழுக்க குளிர்வசதி இருப்பதால் மின் விசிறியின் தேவை கம்மி. என் பையன் பயந்தது ஸ்விட்சுகள் எல்லாம் இந்தியா மாதிரி இருக்காமல் மாறி இருக்கும்.எனக்கு உபயோகிப்பதில் குழப்பம் வரும் என்று பயந்தான். மிக்ஸி, லைட், ஃபான், ஏ.சி., மின் அடுப்பு என்று எல்லாமே. அதில் எல்லாம் குழப்பம் வரவே இல்லை. இந்த மாதிரி வந்துடுச்சே என்று கவலையாக இருந்தது. சாயந்திரமும் வந்தது. பையனும் வந்தான். எங்கள் முகத்தைப் பார்த்து விட்டே ஏதோ நடந்திருக்கிறது என்று ஊகித்துக் கொண்டு,"என்னம்மா? இப்போ என்ன விஷமம் பண்ணினே?" என்று கேட்கவே நாங்கள் விஷயத்தைச் சொன்னோம். அவன் என்னைப் பார்த்த பார்வையில் உடனேயே சென்னைக்கு விமானம் இருக்குமா? என்று யோசிப்பது போல் இருந்தது எனக்கு. அப்புறம் ரொம்ப நேரம் அப்பாவும், பிள்ளையும் முயன்று குழாயை மாட்டினார்கள். எனக்கு உயிரும் வந்தது. (இதோட போச்சா? மெம்பிஸில் பெண்ணோட வீட்டில் smoke detector வாயை அடைக்க முடியாமல் நான் பட்ட பாடு, அப்புறம் அங்கே இருந்த ஒரு தமிழ்க்காரர் யோசனைப் படி அதை எடுத்துக் கழட்டி வைத்ததும் தான் அது வாயை மூடிக் கொண்டது. இல்லாட்டி தாளித்தால் கூட அலற ஆரம்பிக்கும்.) கடவுளே எல்லாம் என் HEAD LETTER தான் வேறே என்ன? அப்புறம் முதல் வேலையாக வால் மார்ட், அதோட தம்பி வால் க்ரீன், அதோட அண்ணா சாம்ஸ் க்ளப் என்று அலைந்து திரிந்து ஒரு ரைஸ் குக்கரை வாங்கி விட்டுத் தான் மறு வேலை.

Thursday, December 28, 2006

175. நடராஜரா? ரங்கராஜரா?

நடராஜனும், ரங்க ராஜனும் என்றால் யாருன்னு நினைச்சீங்க? நம்ம ஸ்ரீரங்கத்தில்
கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதரையும், சிதம்பரத்தில் கோவில் கொண்டிருக்கும்

நடராஜரையும்தான் சொல்கிறேன். சைவர்களின் கோயில் சிதம்பரம் என்றால்,

வைணவர்களின் கோயில் ஸ்ரீரங்கம் என்று எல்லாருக்கும் தெரியும். நமக்கெல்லாம்

பிறப்பு, இறப்பு என்று இருக்கிற மாதிரி இவங்களுக்குக் கிடையாது. சிவன் காலத்துக்கு எல்லாம் காலன் என்று சொல்லப் படும் காலகாலன் என்றால் விஷ்ணுவோ என்றால் எங்கும் பரவி, வியாபித்து, எல்லாரையும் படைத்துக் காத்து அருளுபவர். "ஷ்ரவண" என்று

சொல்லப் படும் திருவோண நட்சத்திரத்தின் அதி தேவதையான விஷ்ணுவை நாம்

ஆராதித்தோமானால் அந்த நட்சத்திரத்தையும் ஆராதித்த மாதிரி ஆகும். அது போல் சிவனை

ஆராதித்தோமானால் அவர் அதிதேவதையாக இருக்கும் "திருவாதிரை" நட்சத்திரத்தை ஆராதித்த மாதிரி ஆகும். இதில் சிவன் சற்றுச் சூடாகவும், விஷ்ணு சற்றுக் குளிராகவும் இருக்கிறார். எப்படின்னு பார்த்தால் இந்த உலகிலேயே குளிர்ச்சியும் இருக்கிறது. சூடும் இருக்கிறது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஒன்றை வைத்துத் தான் மற்றது. வேறுபாடு கிடையாது. நம்ம உடம்பிலேயே இரண்டும் இருக்கிறது. சூடு மட்டும் அதிகம் ஆனால் "காய்ச்சல்" என்கிறோம். குளிர்ச்சி அதிகம் ஆனாலோ நாமே இருக்க மாட்டோமே!

ஆகவே இரண்டும் இருக்க வேண்டும்.குளிரின் சூட்சும ஆற்றல் விஷ்ணு என்றால், சூடின் சூட்சும ஆற்றல் சிவன் ஆவார். பனி படர்ந்த கைலையில் இருக்கும் சிவன் சூடாகத் தானே இருக்க வேண்டும்? பாற்கடலில் இருக்கும் மஹாவிஷ்ணுவோ அதற்கேற்பக் குளிர்ச்சியாக இருக்கிறார் அல்லவா? ஒரே பொருளின் இரண்டு பகுதிகளான இவர்கள் இருவரும் ஒருவரே! அவர்தான் சங்கரநாராயணன் என்று சொல்கிறோம். "உமையொரு பாகன்" என்றும், "அர்த்த

நாரீஸ்வரர்" என்றும் சொல்கிறோம். என்னடா வென்று பார்க்கிறீர்களா? ச்யாமளனும் அவனே! ச்யாமளையும் அவளே! நாராயணனும் அவளே! நாராயணியும் அவனே! மாயனும் அவனே! மாயையும் அவளே! வைஷ்ணவனும் அவளே! வைஷ்ணவியும் அவனே!

சிவசக்தி பேதத்தில் புருஷ சக்திதான் திருமாலாக வணங்கப் படுகிறது. பொதுவாகப் பெண்களை வலப்பக்கமாய்ப் படுக்கச் சொல்வதுண்டு. பள்ளி கொண்டிருக்கும் எம் பெருமாளைப் பாருங்கள். வலப்பக்கமாய்த்தான் ஒருக்களித்துப் படுத்திருப்பார். இவர் நன்கு

தூங்க, ஆடவல்லானோ ஆடிக் கொண்டிருக்கிறான். எப்படிப் பட்ட ஆட்டம்? ஆனந்தக் கூத்து ஒரு சமயம்,ஆக்ரோஷக் கூத்து ஒரு சமயம், அமைதியான நடனம் ஒரு சமயம்,

பக்தர்களுக்கு அருள ஒரு சமயம். நாமே பாருங்க, நமக்கு மனதுக்குப் பிடித்த ஒரு

காரியம் நடந்தாலோ., அதிக மகிழ்ச்சியான மன நிலையிலோ ஆடலாம், பாடலாம்,.

குதிக்கலாம் போல் இருக்குன்னு சொல்வோம். சிலபேர் ஆடிப்பாடிக் குதிக்கவும் செய்வோம். தூக்கமும் மன நிம்மதியில் தான் நல்லாத் தூங்கினேன்னு சொல்வோம்.

இந்த இடையறா ஆட்டமும் சரி, அந்த இடையறாத் தூக்கமும் சரி எதுக்கு? நம்மை

உய்வித்து வாழ்வாங்கு வாழ வைக்கத்தான். காலை எப்போ வருது? மாலை எப்போ

வருது? இரண்டும் எப்போ சேருது? எப்போ பிரியுது? யாராலும் சொல்ல முடியுமா? முதலில் மாலை வந்ததா? இரவு வந்ததா? அல்லது காலை வந்ததா? பகல் வந்ததா? பதில் சொல்ல முடியுமா? இரண்டும் ஒரே சமயம் வருகிறது, வந்தது போல் போகிறது. இருள் நீங்கினால்

கவலை இல்லை. ஒளி வந்தால் களிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சி. ஆகவே கவலையற்ற நிலையை ஸ்ரீரங்கநாதனின் திருப்பள்ளியும், களிப்புற்ற நிலையை நடராஜரின் திரு நடனமும் நமக்கு உணர்த்துகின்றது. இரண்டுமே பொன்னரங்கம், பொன் சபை ஆகும்.

எங்கும் வியாபகமாய் இருக்கும் திருமால் ரங்கராஜனாய்த் திருவரங்கத்தில் கவலையற்ற நிலையில் திருப்பள்ளி கொண்டிருக்கிறார். "பூலோக வைகுண்டம்" எனப்படும் ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் மாதம் 30-ம் தேதி சனிக்கிழமை அன்று "வைகுண்ட ஏகாதசி"ப் பெருநாள்

கொண்டாடப் படுகிறது. நடராஜரோ என்றால் சிதம்பரத்தில் நம் எல்லாருடைய

நலனுக்காகவும் களிப்புற்ற நிலையில் இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கிறார். ஜனவரி 3-ம் தேதி புதன் அன்று "பூலோகக் கைலாயம்" என்று அழைக்கப் படும் சிதம்பரத்தில் "ஆருத்ரா தரிசனம்" நடைபெறுகிறது. அனைவரும் சிவ, விஷ்ணு பேதங்களை மறந்து, சிவசக்தி ஐக்கியத்தை நினைத்து ஒன்றில்லாமல் மற்றது இல்லை என்றப் பேருண்மையைப் புரிந்து கொண்டு இருவரையும் வணங்கி இறை அருள் பெறுவோமாக.

Wednesday, December 27, 2006

174. சில, பல, எண்ணங்கள்.

ஒரு தாமதமான வரவேற்பு:

ஐ.நா. சபை இந்தியாவிற்காக அனுப்பிய நல்லெண்ணத் தூதுவர், சூடான் புலி, திரு நாகை சிவா அவர்கள், தன்னுடைய களப்பணிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பி உள்ளார். அவருடைய செய்தியைத் தலைவி தாமதமாகப் பார்க்க நேர்ந்த காரணத்தால் வரவேற்பு விழாவிற்கும் தாமதமாகி விட்டது. என்றாலும் இதைப் பொருட்படுத்தாமல் ரத்தத்தின் ரத்தங்களும், கண்மணிகளும், பிள்ளைகளும், தொண்டர்களும், குண்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்கும்படித் தலைவியின் ஆணை.அது சரி, புலி இப்போ எங்கே இருக்கு?

ஒரு அறிவிப்பு:

தலைவியின் கணினி வெற்றிகரமாய் வந்து விட்டாலும், நேற்றுத் தொண்டர் "கார்த்திக்"அவர்களின் பெரு விருப்பத்தினை ஒட்டித் தலைவி "வரலாறு" திரைப்படம் பார்த்ததால் இணையத்திலும் இருக்க முடியவில்லை, களப்பணியும் ஆற்ற முடியவில்லை. "வரலாறு" படத்தில் அசின் பாத்திரப்படைப்பு ஒரு தண்டம் என்று தலைவி பெருமகிழ்ச்சியுடன் (:D) தெரிவித்துக் கொள்கிறார். மேலும் கணினியின் ரிப்பேருக்காகத் தலைவியின் உதவிக்கு வந்த கார்த்திக், கைப்புள்ள இவர்களுக்குத் தலைவி தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அதுக்கு அப்புறம் தலைவியின் தலையைக் கண்டாலே ஒளிந்து கொள்ள முயற்சி செய்யும் இருவரையும், மற்றும் மதுரையின் மைந்தர், "ராம்" அவர்களையும் சேர்த்துத் தலைவி கடுமையாகக் கண்டிக்கிறார். அதுவும் கார்த்திக் தூங்கும்போது கூடக் கணினியில் "sleeping" என்று போட்டு விட்டுத் தூங்குவதையும் வன்மையாகக் கண்டிக்கிறார்.

தலைவியின் தொழில் நுட்பக் கேள்விகளாலும், பதில்களாலும் திகைப்படைந்த கைப்புள்ள தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்ததையும், தலைவியால் அவரைச் சமாதானப் படுத்த முடியாமல் தோல்வி அடைய நேரிட்டதையும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்ளும் தலைவி பின் கைப்புள்ள என்பதால் அவர் தானே அழுது ஓய்ந்து சமாதானம் அடைந்ததையும் பாராட்டுகிறார். தான் ஒரு கைப்புள்ள தான் என்பதை நிரூபித்த அவர் தனக்குப் பதிலாக மண்ணின் மைந்தர் "ராமை" மாட்டிவிடப் பார்த்ததையும், "ராம்" மாட்டிக் கொள்ளாமல் நாளது வரை தப்பித்ததையும் மன்னிக்கவே முடியாது என்கிறார். ஏற்கெனவே கணினியின் "RAM"-ஆல் வெறுப்புற்றிருந்த தலைவி மேலும் மன வேதனை அடைந்தார். "ராமா, ராமா, என்று நாம ஜபம் செய்ய ஆரம்பித்ததும் எல்லாம் சரியாகி விட்டதாயும் தெரிவித்துக் கொள்கிறார். ஆகவே தொண்டர்களே, உங்கள் கணினி நல்லா வேலை செய்யணும்னா நீங்களும் "ராமா, ராமா" என்று சொல்லவும். (ஆன்மீகத்துக்கு ஆன்மீகமும் ஆச்சு, அறுவைக்கு அறுவையும் ஆச்சு, அம்பியோட கண்ணோட்டத்திலே ஒரு மொக்கையும் ஆச்சு.)ஹூஸ்டன் பயணம் தொடரும். அதுக்குள்ளே, டாடா இண்டிகாம் காரங்களுக்கு என்னவோ வந்துடுச்சு. எல்லாம் இந்த அம்பியோட கண்ணுதான். வேறே என்ன? :D

Sunday, December 24, 2006

173. சோதனை மேல் சோதனை

வேறே யாருக்கு? எனக்குத் தான். உண்மையிலே திருஷ்டி முதலில் எனக்குத்தான் ஏற்பட்டிருக்கிறது. அதுக்கு அப்புறம் தான் வேதா(ள்)வுக்கு. அதுவும் என்னோட இலக்கிய நயம் மிகுந்த(ஹிஹிஹி, நான் சொல்லிக்கலைன்னா வேறே யார் சொல்வாங்க?) கட்டுரைகளைத் தினம் ஒண்ணாகவும் சிலசமயம் இரண்டிரண்டாகவும் போட்டு வந்ததை யாரோ பார்த்துட்டு பயங்கர திருஷ்டி போட்டதினாலேயோ அல்லது எதிர்க்கட்சியினரின் சதியினாலோ என்னோட கணினி இன்னும் வரவே இல்லை. நேத்து வரும்னு சொன்னாங்க, தொலைபேசினால் இன்னும் நேரம் ஆகும்னு சொல்றாங்க. அதிர்ஷ்டம் இருந்தால் நாளை வரும். அதுவரை அடாது தொந்திரவு கொடுத்தாலும் விடாமல் பதிவு போடும் எண்ணம் இருப்பதால் என் அண்ணா வீட்டிலேயே வந்து எழுதுகிறேன். இதிலே என்ன கஷ்டம்னால் நம்ம கைவண்ணம் அவங்களுக்கும் தெரியும். அண்ணா பெண்ணுக்கோ கல்லூரியில் ப்ராஜெக்ட் வேலைக்குக் கணினி தேவை. இந்த லட்சணத்திலே நாம் வேறே வந்து கை வண்ணத்தைக் காட்டறோமேன்னால் என்ன செய்யறது? எல்லாம் அவங்க Head Letter இப்படி இருக்கே? என்னோட பெண்ணும், பையனும் என்னை accident prone என்று சொல்வதுண்டு. எல்லாம் ARCHIE COMICS அதிகம் படிச்சதாலேன்னு நினைக்கிறேன். ஹிஹிஹி, நானும் போட்டி போட்டுக்கிட்டு படிக்கிறதுண்டு. இப்போக் கூட பழைய ARCHIE அதுவும் teen age ARCHIE தான் எனக்குப் பிடிக்கும். ஏன் என்றால் என்னோட வயசு இல்லையா? அதான்.

சில நாள் முந்தி மிஸ்டர் பீன் பார்த்துக்கிட்டு இருக்கும்போது ஒரு நாள் வந்தது பாருங்க மிஸ்டர் பீன் துணி துவைக்கும் விஷயம் பத்தி. Common Laundryயில் அவர் துணி துவைப்பதைக் காட்டினார்கள். அதிலே சிலசமயம் தவறுவது சகஜம் தான். ஆனால் நான் ஹூஸ்டன் போனப்போ துணி துவைச்சேன் பாருங்க, அதுக்கு ஈடு ஏதும் கிடையாது. 2004-ம் வருஷம் அக்டோபரில் 25-ம் தேதி ஹூஸ்டன் போய்ச் சேர்ந்தோம். 3 வருஷம் கழிச்சுப் பையன் எங்களைப் பார்க்கிறான். அபார்ட்மெண்ட் டைப் வீடுகள். ஹூஸ்டனின் இருதயப் பகுதியில் அமைந்திருந்தது. எல்லாம் நல்லாத்தான் இருந்தது. பெரிய பாத்ரூம், நம்ம ஊரிலே இரண்டாய்ப் பிரித்து வாடகைக்கு விட்டிருப்பாங்க. போனதும் பையன் நான் சமைக்கிறேன், நீ ரெஸ்ட் எடுத்துக்கோன்னு சொல்லிட்டான். எனக்கும் jetlog ரொம்பவே இருந்தது. சாயங்காலம் போனோம் ஹூஸ்டனுக்கு. இந்தியாவில் அப்போ காலை என்பதால் எனக்குத் தூக்கமே வரலை. என்னத்தை ரெஸ்ட் எடுக்கிறது? சாப்பிட்டுப் படுத்தோம். விடிகாலையிலே தூக்கம் சொக்கியது. கொஞ்ச நேரம் தூங்கி விட்டுப் பையன் அலுவலுக்குச் செல்லும் சமயம் எழுந்தேன். அவன் சமையல் அறையில் மின் அடுப்பை எப்படி உபயோகிப்பது என்று சொல்லிவிட்டு, ஓரளவு தெரியும் என்றாலும், கொஞ்சம் பயம்தான். "மற்றப் படி நீ பார்த்துக்கோ, மத்தியானம் சாப்பிட வருவேன்"னு சொல்லிப் போனான். நான் தூக்கக் கலக்கத்தோடேயே குளிக்கப் போனேன்.பாத்ரூமிலேயே வாஷிங் மெஷின் இருந்தது. முதல்நாள் சாயங்காலம் குளித்துவிட்டுப் பட்டுப் புடவை கட்டி இருந்தேன். அதைத் துவைக்க எடுத்து வைத்து விட்டுக் குளித்து விட்டு வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டேன்.அங்கே வாஷிங் முடிந்து, துணிகள் எல்லாம் spin ஆகி அரை ஈரத்துடன் வந்ததும் drier-ல் போட்டால் துணி நன்கு காய்ந்து சூடாக வெளியே எடுக்கலாம். Washer, drier தனித் தனியாக இருக்கும்.

துணிகளைப் போட்டு விட்டு வந்து குக்கரை வைத்தேன். நல்ல சேலம் ஸ்டீல் குக்கர். இங்கே எல்லாம் இந்த மாதிரி அழுத்தமான தரமான குக்கர் வருவது இல்லை. சாதம் அதிலே வைத்து விட்டுப் பருப்பை ஒரு நான் -ஸ்டிக் பாத்திரத்தில் நேரடியாகப் போட்டு விட்டு மற்றவேலைகளைக் கவனிப்பதற்குள் வாஷிங் மெஷின் கூப்பிட்டது. சரினு உள்ளே போய்த் துணிகளை எடுத்தால் என்னோட பட்டுப் புடவையைக் காணோம். அதுக்குப் பதிலாய்ச் சின்னதாய் ஒரு ஜரிகை போட்ட சிவப்புக் கைக்குட்டை வடிவத்தில் ஒரு துணி இருந்தது. இது என்னன்னு யோசித்துக் கொண்டே எல்லாத்தையும் டிரையரில் போட்டேன். சற்றுப் பொறுத்து வந்து ட்ரையரில் இருந்து துணிகளை எடுத்தால் சிவப்புக் கலரில் நீளமாய் ஒரு ரிப்பன் வருகிறது. நான் போட்ட சத்தத்தில் பயந்து போன என் கணவர் ஓடி வந்தார். "ஏன், என்ன ஆச்சு?" "என்னோட புடவையைக் காணோம்." இது நான். "என்ன புடவை? நேத்துக் கட்டினாயே, அந்தப் பட்டுப் புடவையா?" அவர். "ஆமாம், இங்கே யார் ரிப்பன் வச்சுக்கறாங்க? இதோ பாருங்க, சிவப்புக் கலரில் ஒரு ரிப்பன் வந்திருக்கு"ன்னு சொன்னேன். அவர் வாங்கிப் பார்த்து விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். நான் முறைத்தேன். "நேத்தே உன்னைப் பட்டுப் புடவை வேண்டாம்னு சொன்னேனே?" என்றார். இந்தக் கலாட்டாவில் சாதம் வைத்ததே மறந்து போச்சா? ஏதோ தீயற வாசனை வந்தது. வந்து பார்த்தால் குக்கர் புகை விடுது. கடவுளே!ன்னு தலையில் கை வைத்து உட்கார்ந்தேன். இப்போவே மணி 11-00 ஆகி விட்டது. 12 மணிக்குப் பையன் சாப்பிட வருவானே?

Thursday, December 21, 2006

மன்னிப்பு, வேண்டுகிறேன்.

போன பதிவில் "ஓம் நமச்சிவாயா" தவறுதலாய்க் காப்பி, பேஸ்ட் பண்ணும்போது இங்கே வந்து விட்டது. அதனாலோ என்னவோ சில பின்னூட்டங்களும் இருந்தன. ஆனால் அது தெரியாமல் நான் எடுத்து விட்டேன். பின்னூட்டம் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். அன்று இணைய இணைப்புச் சரியாகக் கிடைக்காத காரணத்தால் நேர்ந்த தவறு. மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்.

Sunday, December 17, 2006

கனவு நனவானது.

வேறே யாருக்குன்னு நினைக்கறீங்க? எல்லாம் நம்ம அம்பியோட கனவுதான். நனவாயிட்டது. என்னோட கணினி வர இன்னும் குறைஞ்சது 10 நாளாவது ஆகும். அவர் எந்தப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைச்சாரோ தெரியலை. ஆனால் என்னோட ரசிகர்கள்தான் ரொம்பக் கஷ்டப் படறாங்கன்னு நினைக்கிறேன். ஹிஹிஹி, எனக்கும் ரசிகர்கள் எல்லாம் இருக்காங்கன்னு ஆச்சரியப் படறீங்களா? முதல் ரசிகர்கள் நம்ம கைப்புள்ளையும், கார்த்திக்கும். 2 பேரும் என்னவோ நான் எழுதறது தமிழ்னும் நான் தமிழில் ரொம்பத் தேர்ச்சி பெற்றவள்னும் நினைக்கிறாங்களே? அதான் சொன்னேன். அதிலும் நம்ம கைப்புள்ள அதியமான் என்றால் நான் ஒளவை. அவர் பாரி வள்ளல் என்றால் நான் கபிலர். அவர் கோப்பெருஞ்சோழன் என்றால் நான் பிசிராந்தையார். (இந்த அம்பியோட மாத்தையார் வேலை எல்லாம் பலிக்காது.) கார்த்திக்கைப் பத்திச் சொல்லவே வேணாம். பதிவுக்குப் பதிவு ஏதாவது ஒரு விஷயத்தில் எனக்கு இலவச விளம்பரம் தரத் தவறுவது இல்லை. அதான் ரொம்பப் பெருந்தன்மையோட அவரோட முதல் அமைச்சர் பதவியை ஏத்துக்கிட்டேன். எல்லாம் அவரோட பக்தி உணர்வைப் பாராட்டறதுக்குத் தான். அப்புறம் நம்ம SKM, உமாகோபு, சமீபத்தில்தான் சிநேகம் ஆனாலும் இரண்டு பேரும் ஏதோ சொந்தம் போல ஆயிட்டாங்க. ரொம்பவே என்னோட பதிவைக் கொண்டாடறாங்க. (இல்லைனு சொல்லி மானத்தை வாங்கிடாதீங்க).

அப்புறம் நம்ம வேதா(ள்) கேட்கவே வேணாம், 2 நாள் எழுதலைன்னாக் கூட உடனே தொலைபேசுவாங்க. அவ்வளவு பாசம். உடம்பு முடியாதப்போக் கூடத் தொலைபேசிக் கேட்டாங்கன்னா பாருங்களேன். இந்தப் பாசமழை மட்டும் இல்லைன்னா என்னால் எழுதவே முடியாது. இதைத் தவிர, என்னோட அண்ணா பையன் ஒருத்தன் துபாயிலே இருக்கான். அவன் என்னடாவென்றால் தீக்குளிக்கிற ரேஞ்சுக்கு ஒரு தொண்டர் படையே திரட்டி வச்சிருக்கான். நான் அனானி பின்னூட்டம் ஏத்துக்கறதில்லை. இல்லாட்டி அனானி பேரிலே பின்னூட்டம் கொடுப்பான், பாவம் என்னைக் கேட்டுப் பார்த்தான். அதெல்லாம் அனானிக்குக் கொடுக்கப் போறதில்லைனு சொல்லிட்டேன். விட்டால் துபாயிலே இருந்து வரதுக்குள்ளே எனக்குச் சிலை எடுப்பான்னு நினைக்கிறேன். நான், " சிலை எல்லாம் வேண்டாம்பா, சும்மா குஷ்பூ கோவிலை விடப் பெரிசாவோ அல்லது எம்.ஜி.ஆர். கோவிலை விடக் கொஞ்சம் சின்னதாவோ ஒரு கோவில் கட்டிடு. நானே வந்து மூலஸ்தானத்திலே உட்கார்ந்து அருள் பாலிக்கிறேன்"னு சொல்லலாம்னு இருக்கேன்.

ஆகையால் அம்பி, ச்யாம் போன்றவர்கள் அதிகம் சந்தோஷப்படவேண்டாம். எனக்குத் தொண்டர் படையில் இருந்து குண்டர் படை வரை இருக்கு. சீக்கிரம் வந்து உங்களை எல்லாம் ஒரு கை இல்லை இரண்டு கை பார்க்கிறேன். அது வரை enjoooooooooyyyyyyyy!

Monday, December 11, 2006

ஊர்மிளையின் விரகம்-லாவண்யாவுக்காக

ராமாயணத்தில் பேசப்படும் கதாபாத்திரங்களில் ராமர், சீதை, ராவணன் தவிர, கைகேயி, கெளசல்யா, சுமித்திரா போன்றவர் இருந்தாலும் அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களில் ஒன்று லட்சுமணனின் மனைவியான ஊர்மிளை ஆவாள். சீதையுடன் ஜனகரின் மற்ற புத்திரிகளான மாண்டவி, பரதனையும், ஊர்மிளை லட்சுமணனையும், சுருதகீர்த்தி, சத்ருக்கனனையும் மணந்தார்கள். இதில் மாண்டவியும், சுருதகீர்த்தியும் தத்தம் கணவன்மார்களோடு இருக்க, சீதையோ ராமனுடன் வனவாசம் போனாள். இதில் தனித்து விடப்பட்டது லட்சுமணனின் மனைவியான ஊர்மிளை ஆவாள். அவள் லட்சுமணனைப் பிரிந்து எவ்வாறு துன்பப்பட்டாள் என்பதைக் குறிப்பதே "சாகேத்" எனப்படும் ஹிந்தி மொழியிலான கவிதைத் தொகுப்பு. ஸ்ரீமைதிலிசரண்குப்தாவினால் எழுதப்பட்ட இந்தக் கவிதைத் தொகுப்பு 12 அத்தியாயங்களால் ஆனது. இதை எழுத அவருக்குக் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பிடித்தது. 1914-ல் எழுத ஆரம்பித்தவர் 1931-ல்தான் முடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ராமாயணக் கதைகளின் அடிப்படையிலேயே ஒரு புது நோக்கோடு செல்லும் இந்தக் கவிதைத் தொகுப்பின் நோக்கம் "ஊர்மிளையின் விரகம்" என்னும் உள்நோக்கத்தைக் குறித்தே செல்லுகிறது.
இதில் 9-வது அத்தியாயத்தில் ஆரம்பித்துப் பத்தாம் அத்தியாயமும் ஊர்மிளை தன் விரகத்தை நினைப்பதைக் குறிப்பதோடு பின் 11, 12-ல் ஸ்ரீராமர் திரும்புவதையும், லட்சுமணன் ஊர்மிளையுடன் சேருவதையும் குறிக்கிறது.

இது வரை யாரும் தொடாத இந்தப் பாகத்தை எழுதிய கவிஞர் ஊர்மிளை எப்படி தைரியமாகத் தன் கணவனின் பிரிவை ஏற்றுக் கொண்டாள் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார். ஊர்மிளை தன் கணவனுடன் சந்தோஷமாய் இருப்பதைக் குறிப்பிடும் கவிஞர் அடுத்த நாளே கைகேயியின் வேண்டுகோளை நிறைவேற்ற ராமர் வனவாசம் செல்வதையும், கூடவே லட்சுமணனுன் தயாராவதையும் குறிப்பிடுகிறார். அந்தச் சமயம் தசரதன் தன் சத்தியம் நிறைவேறுவதிலும், கெளசல்யா தன்னுடைய பிரேமையைக் காட்டுவதிலும், சுமித்திரை ஒரு க்ஷத்திரியப் பெண்ணாகத் தன் வைராக்கியத்தைக் காட்டுவதிலும், சீதை தன் கணவனுடன் சென்று தன் பதிவ்ரதைத் தனத்தை நிரூபிப்பதிலும் கவனமாய் இருக்க ஊர்மிளையைப் பற்றி நினைத்தவர் யார்? லட்சுமணன் ஒருவனைத் தவிர? ஊர்மிளையின் நிலையைப் பார்த்த லட்சுமணன் அவளைப் புரிந்து கொண்டு தன் மனத்தில் இவ்வாறு நினைக்கிறானாம். கவியின் வார்த்தைகளில் பார்ப்போமா?
"ரஹோ, ரஹோ, ஹே ப்ரியே, ரஹோ!
யஹ பி மேரே லியே ரஹோ!"
என்று தன் மனத்தினால் ஊர்மிளைக்குக் கட்டளையிட, அல்லது வேண்டுகோள் விடுக்க அதைப் புரிந்து கொள்கிறாளாம் ஊர்மிளை, தன் கணவன் எண்ணம் என்னவென்று.
வஹ பி சப் குச் ஜான் கயி!
விவஷ் பாவ் ஸே மான் கயி! அடுத்த கணமே தன் மனத்தைத் திடப் படுத்திக் கொண்டு மனதுக்குக் கட்டளை இடுகிறாள்,
"ஹே மன்! தூ ப்ரிய-பத் கா விக்ன ந பன்!" மனதில் எவ்வளவு வைராக்கியம் இருந்தால் இம்மாதிரி ஒரு எண்ணம் ஏற்படும்?

என்றாலும் லட்சுமணன் காட்டிற்குச் சென்றதும் ஊர்மிளைக்கு அவன் பிரிவைத் தாங்க முடியவில்லை. சீதையோ என்றால் தன் கணவனுடன் இருந்தாள். அதனால் அவளுக்கு வனமும் நந்தவனம் ஆகி விட்டது. ஊர்மிளையோ நந்தவனத்தில் இருந்தாலும் வனத்தில் இருப்பது போல் உணர்வதோடு அல்லாமல் தன் கவனிப்பு இல்லாமல் நந்தவனச் செடிகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதையும் உணர்கிறாள். தன் தோழியரைக் கூப்பிட்டு வாடும் நந்தவனச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றச் சொல்கிறாள். லட்சுமணன் பிரிவால் வாடும் அவள் மனமாகிய நந்தவனச் செடி மலர்வது எப்போது? இந்த இடத்தில் கவி சொல்கிறார். ரகுகுலத்திற்கே ஒரு திலகம் போன்றவள் ஊர்மிளை என்றும், அவளால் ரகுகுலத்திற்கு ஏற்பட்ட களங்கம் துடைக்கப் பட்டது என்றும் சொல்கிறார். கைகேயி தான் வாழ்க்கைப் பட்ட ரகுகுலத்தின் நல்வாழ்வைப் பற்றி நினையாமல் சுயநலத்துடன் இருந்தது போல் அல்லாமல் தன் சுகத்தைப் பற்றி நினைக்காத ஊர்மிளை மிகவும் உயர்ந்து விட்டாள். பிரிவாற்றாமை என்னும் நெருப்பில் வெந்து கொண்டிருந்த ஊர்மிளை தன் தியாகத்தால் புடம் போட்ட பொன்னைப் போல் ஒளிர்ந்தாள் என்கிறார் கவிஞர். அவள் கண்களில் லட்சுமணன் தான் எப்போதும் தெரிகின்றான். தனக்கு வேண்டிய சுகதுக்கங்களை மறந்த அவள் தன்னையே மறந்தாள். யோகசாதனை செய்பவர்கள் தன்னை மறந்து தன் யோக சாதனையின் உச்சகட்டத்திலேயே நினவு வைத்திருப்பதைப் போல் அவள் தன் பெயரையும் மறந்தாள், தன்னையும் மறந்தாள்.
"தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள்!
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!" என்று நாவுக்கரசர் சொன்னதைப் போல் ஊர்மிளை தன்னை மறந்து தன் பெயரையும் மறந்து இருந்தாள். "ருதந்தி" என்னும் வேர் பண்டைய நாட்களில் ரசவாதத்துக்கு உபயோகப்பட்டது என்றும், அதன் ரசத்தைப் பிழிந்துத் தாமிரப் பாத்திரத்தில் இட்டு அக்னியில் காய்ச்சினால் தங்கம் கிடைக்கும் என்றும் சொல்வார்கள். அது போல ஊர்மிளையின் கண்ணீரான ரசத்தில் அவள் கற்பாகிய நெருப்பில் பொசுங்கித் தங்கம் போல் ஒளிர்ந்தாள் என்கிறார் கவிஞர். அவள் உள்ளமாகிய சமுத்திரத்தில் மூழ்கிய லட்சுமணனின் நினைவுகளால் அவள் கண்களில் இருந்து மழைபோல் கண்ணீர் பெருகுவதாய்க் குறிப்பிடுகிறார்.

அவள் நினைவில் தன் சிறுபிராய நினைவுகள் மோதுகின்றன. தானும், சீதையும், மாண்டவியும், சுருதகீர்த்தியும் விளையாடியதும், தாங்கள் நால்வரும் சகோதரர் நால்வரைத் திருமணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதையும் தன் திருமணம் பற்றிய நினைவுகளும் தோன்றுகின்றன அவள் உள்ளத்தில். பின் ராம, ராவண யுத்தத்தைப் பற்றி வசிஷ்டர் தான் அறிந்ததைக் கூறுகிறார். ராமர் திரும்புவதைப்பற்றியும் கூறுகிறார்.

பின் ராமர் அயோத்தி திரும்பும்போது கூடவே திரும்பும் லட்சுமணனைப் பார்த்து அப்படியே நிற்கிறாள் ஊர்மிளை. சீதை தன் தங்கையின் நிலையைப் பார்த்து அவளைப் புதுத் துணிகள் அணிந்து வருமாறு கூற அதற்கு அவள் இவ்வாறு கூறுவதாய்க் கவிஞர் கூறுகிறார்:
"நஹி, நஹி, ப்ராணேஷ் முஜி ஸே சலி ந ஜாவே!
மை ஜைஸா ஹூம் நாத் முஜே வைஸா ஹி பாவே!"
என்கிறாள். அதற்கு லட்சுமணன் சொல்வது என்னவென்றால்,
வஹ வர்ஷா கி பாட் கயி, உஸ்கோ ஜானே தோ!
ஷுச்சி-கம்பீரதா பிரியே! ஷரத் கீ யஹ ஆனே தோ!"
ஊர்மிளை சொல்வது" நான் எப்படி இருக்கின்றேனோ அப்படியே என் ஸ்வாமி என்னை ஏற்றுக் கொள்ளட்டும்" என்று. லட்சுமணன் அவளைச் சமாதானப் படுத்துகிறான், "போனது போகட்டும், இனி நம் வாழ்வில் வசந்தம் தான்!" என்று. ஒரு பெரிய நீண்ட பிரிவுக்குப் பின் இருவரும் கூடுவதோடு முடிகிறது.

லாவண்யா கேட்டுக் கொண்டதுக்கிணங்க எனக்குத் தெரிந்த வரை எழுதி இருக்கிறேன். கவிதை முழுதும் கிடைக்கவில்லை. கிடைத்ததில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் எழுதி இருக்கிறேன். இதைப் படிக்கும்போது நம்மால் கண்ணீரை அடக்க முடியாது, இம்மாதிரி வெளியில் சொல்ல முடியாத அளவு தியாகங்களைப் புரிந்தவர்கள் நம்மிடையே இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட" UNSUNG HEROES" எல்லாருக்கும் நம்முடைய உள்ளார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பிப்போம்.

Thursday, December 07, 2006

கலைந்த சுருதி

சுருதி கலைந்ததா? என்றால் என்னைப் பொறுத்தவரை ஆம் என்றுதான் சொல்வேன். என்ன செய்யறது? பழைய மாதிரி எதுவுமே இல்லை. இப்போ எல்லாமே மாறி இருக்கு. என்னைப் பொறுத்த வரை எப்பவும் போல் தான் இருக்கேன். ஆனாலும் என்னால் உணர முடிகிறது மாற்றங்களை. இது எதனால்? எப்போ நேர்ந்தது? எப்படி நேர்ந்தது? தெரியாது. எங்கோ எதிலோ ஒரு இழை மாறி இருக்கிறது. அல்லது ஒரு சின்னத் தவறு நம்மை அறியாமல் நேர்ந்திருக்க வேண்டும். புரியாமல் இருக்கலாம் அல்லது புரிந்து கொண்டு இனிமேல் தொடரவேண்டாம் என்றும் இருக்கலாம். எல்லாம் நேரத்தைப் பொறுத்துத் தான் அமையும்.

நான் பதிவுகள் எழுத ஆரம்பித்தது தற்செயல்னு எல்லாம் சொல்ல மாட்டேன். சுமார் 2 வருடங்களாகவே இதைப் பத்தி ஓரளவு தெரியும். விகடனில் "கற்றதும் பெற்றதும்" எழுதி வந்த திரு சுஜாதா இங்கே நடக்கும் விவாதங்களைப் பற்றியும் அவ்வப்போது எழுதுவார். "பொன்னியின் செல்வன்" குழுவைப் பற்றிய அறிமுகம் "கல்கி" பத்திரிகை வாயிலாகக் கிடைத்தது. கல்கியிலேயே திரு இரா.முருகன் எழுதி வந்த வலை உலக விமரிசனங்களையும் படித்து வந்திருக்கிறேன். இப்போவும் வந்து கொண்டிருந்தது. சில வாரங்களாய் வருவது இல்லை. அப்போவெல்லாம் கணினி வாங்குவதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. அப்புறம் கணினி வாங்கி கிட்டத் தட்ட ஒரு வருஷம் ஆகப் போகும் சமயம் தான் திடீரென என் பெயரில் ப்ளாக் ஆரம்பித்து வைத்தேன். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தான் எழுத முடிந்தது. அப்புறம் தமிழில் எழுத டோண்டு சாரில் இருந்து, வெ.வ.வா. ஜீவா, சூப்பர் சுப்ரா , மஞ்சூர் ராஜா வரை உதவ தமிழ் வர ஆரம்பித்தது.

இதெல்லாம் ஒரு பதிவா? மொக்கை என்று அம்பி சொன்னாலும் அவை எனக்கு எரிச்சல் மூட்டுவதற்கு வேண்டுமென்று சொல்வது என்று புரிந்து கொள்வேன். அம்பி இப்போ தங்கமணி பற்றிய கனவுகளில் மூழ்கி இருப்பதால்தான் எதுவும் எழுத முடியவில்லை. ஆஃபீஸ் வேலை என்பதெல்லாம் சும்மா, உள உளாக்கட்டிக்கு. அப்புறமும் அவர் தங்கமணியைக் கேட்டுக் கொள்ள வேண்டும், எழுத அனுமதி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். தங்கமணியும் எழுத ஆரம்பித்தால் பிரச்னை இல்லை. என்னைப் பொறுத்த வரை நான் எழுதுவது எல்லாமே கிட்டத் தட்ட என் கணவருக்குத் தெரியும். இன்னும் சொல்லப் போனால் பின்னூட்டங்களில் இருந்து எல்லாமே அவரிடம் சொல்லுவேன். சில விஷயங்களை எப்படி எழுதினால் சரியாக இருக்கும் என்று பேசித் தெரிந்து கொள்வேன். இந்த வலை உலகில் நடக்கும் எல்லா விஷயங்களும், அவற்றுக்கு நான் அளிக்கும் பின்னூட்டங்களும், எனக்கு வரும் பின்னூட்டங்களும், இ-மற்றும் எறும்பு மெயில்களும் காட்டுவேன். ரொம்பவே அபூர்வமாய்ச் சிலசமயம் நான் யாரிடமாவது "சாட்"டிக் கொண்டிருக்கும்போதோ அல்லது ஏதாவது எழுதும்போதோ கிட்டே உட்கார்ந்து பார்ப்பார். அதன் மூலம் என்னோட வலை உலக நண்பர்கள் பற்றிய அறிமுகமும் கொடுத்திருக்கிறேன். என்ன, பேர் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டார். மற்றபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி அறிமுகம் கொடுத்திருப்பதால் அதை வைத்துப் புரிந்து கொள்வார். இப்போ லேட்டஸ்டா வந்திருக்கிற "உமாகோபு" மற்றும் SKMல் இருந்து எல்லாரையும் பற்றிச் சொல்லி இருக்கிறேன். உமாகோபுவிற்கு அறிமுகம் "மைலாப்பூர் மாமி" என்றும் SKMற்கு அறிமுகம் யு.எஸ். மாமி என்றும் (ஹிஹிஹி), சொன்னால் புரிந்து கொள்வார். கூடவே எஸ்கேஎம் பெண் இந்தியாவில் படிப்பதையும் நினைவு படுத்த வேண்டும். இதனால் என்ன பிரயோஜனம் என்றால் என்னைத் தேடி வரும் நண்பர்களுடன் அவரும் தடங்கல் இல்லாமல் பழக முடியும் இல்லையா? இல்லாவிட்டால் அவர் ஏதோ உலகிலும், நான் ஏதோ உலகிலும் தனித்து இருக்க வேண்டி இருக்கும்.

சுருதியைக் கூட்ட முயன்றிருக்கிறேன்.சரியா இருக்கா இல்லையா? நீங்க எல்லாம் தான் சொல்லணும், அப்புறம் இன்னொரு விஷயம் அம்பி இனிமேல் அடிக்கடி சென்னை வர நேரலாம். ஒவ்வொரு முறையும் என்னோடு பேச இனிமேல் யோசிப்பார் என்று நினைக்கிறேன். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத் தான் இல்லையா அம்பி? இது கொஞ்சம் திடீர்னு தான் முடிக்கிறேன். திரும்ப வந்தாலும் வரும். பார்க்கலாம், வர்ட்டா?

Wednesday, December 06, 2006

கார்த்திக் கேட்டது இதுவா?

முதலில் ஒரு சின்னக் கவிதை. எனக்குப் பிடிச்சது. இதை முன்னேயே எழுதிட்டு இருந்தப்போ திடீர்னு மின்சாரம் போயிட்டது. சேமிப்பில் போட்டேன். ஆனால் சரியாக சேமிப்பு ஆகவில்லை.முதலில் நிறைய எழுதி இருந்தேன். இப்போ திரும்ப எல்லாம் எழுதும்படி ஆயிடுச்சு. எல்லாம் HEAD LETTERதான் வேறே என்ன? அப்புறம் இணைய இணைப்பு வராமல் போய் ஒரே தொந்திரவுதான். இப்போ கூட அடிக்கிறச்சே ரொம்பத் தகராறு தான். தப்பு வராமல் அடிக்கிறவள் இப்போ சரியா எழுத்து விழாமல் ரொம்பவே திரும்பத் திரும்ப அடிக்க வேண்டி இருக்கு.இப்போ கவிதையைப் பார்ப்போம். இருக்கவே இருக்கு என்னோட புலம்பல்.இதோட மூணாவது முறையாப் போயிடுச்சு. எல்லாம் சேமிப்புக்கே போக மாட்டேங்குது. என்னன்னே தெரியலை.

"சிரிப்பினால் என் உதடுகள் அகன்றிருப்பதால்,
பாட்டினால் என் குரல் ஆழ்ந்து ஒலிப்பதால்,
இவ்வளவு நீண்ட காலம் என் வேதனையைப்
பொறுத்திருப்பதால் நான் துன்புறுகிறேன் என்று
நீ நினைக்காமல் போனாயா?

சிரிப்பினால் என் உதடுகள் அகன்றிருப்பதால்
என்னுள்ளிருந்து வருகின்ற அழுகை உனக்குக்
கேட்காமல் போயிற்றா?
நடனத்தில் என் பாதங்கள் திளைத்திருப்பதால்
நான் செத்துக் கொண்டிருக்கிறேன் என்று
உனக்குத் தெரியாமல் போயிற்றா?" இந்தக் கவிதையை எழுதியது நீக்ரோக் கவிஞர் லாங்ஸ்டன் ஹ்யூஸ் என்பவர். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் 'UNCLE TOM'S CABIN" என்ற ஆங்கிலத் துணைப்பாட நூல் படிக்கும் சமயம் எங்கள் ஆங்கில ஆசிரியை எங்களுக்குக் கற்பித்த பாடல் இது. இதன் ஆங்கில மூலம் தொலைந்து விட்டது. இப்போ கார்த்திக் கேட்டது மூன்றாவது முறையாக எழுதுகிறேன். எல்லாருக்கும் சுலபமாக இருப்பது எனக்கு என்னவோ ரொம்பவே கஷ்டப் பட வேண்டி இருக்கிறது. எல்லாம் பாதி எழுதும்போதே மின்சாரத் தடை வந்து விடுகிறது. சிலசமயம் உடனேயே வருகிறது. சிலசமயம் வோல்டேஜ் சரியில்லை. அதனாலே எங்க வீட்டு டி.வி. கூட இப்போ ரிப்பேருக்குக் காத்திருக்கிறது. சுதந்திரம் வந்து இவ்வளவு நாள் ஆகியும் ஒரு மின்சாரம் தடை இல்லாமல் ஒரே சீராக விநியோகம் செய்ய முடியவில்லை நம்ம அரசுகளால்.
**********************************************8
பிடிச்ச வாசனை: சின்னப் பூப்போன்ற குழந்தைகளிடம் இருந்து வரும் வாசனை. இப்போ உள்ள ஜான்ஸன்ஸ் பேபி சோப், பவுடர் இல்லை. ஒரிஜினல் ஸ்ரீவில்லிபுத்தூர் வாசனைச்சக்கைப் போட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டி விட்டச் சின்னக் குழந்தையின் வாசனை.
2.எங்க வீட்டுத் தோட்டத்தில் பவளமல்லிச் செடி இருக்கும்போது அதன் பூ இரவில் மலரும்போது அதோடு சேர்ந்து வரும் மல்லிகைப் பூவின் வாசனையும் சேர்ந்து.
3. பாக்குப் பழம் பழுக்கும்போது வரும் சுகந்தமான வாசனை.

பிடிக்காத வாசனை: சிகரெட்டின் துர்நாற்றம். பொதுவாய்த் தமிழில் நாற்றம் என்றால் நல்ல மணம், நறுமணம் என்று தான் அர்த்தம்.
பூண்டின் வாசனை.
சர்க்கரை ஆலைகளில் இருந்து வரும் கழிவுகளின் துர்நாற்றம்.

பிடித்த வேலை: எல்லா வேலையும் பிடிக்கும். பிடிக்காதுன்னு ஒண்ணும் கிடையாது. என்ன, என்னால் செய்ய முடிந்த வேலையாக இருக்கணும். அதான், பொதுவாய் நான் ஒரு workaholicனு தான் என்னோட பொண்ணு சொல்லுவா.
பிடிக்காத வேலை: சும்மா உட்கார்ந்திருப்பது தான் பிடிக்காத வேலை.ஏதாவது படிக்கவாவது படிக்கணும்.

பிடிச்ச படம்: பப்படம் தான். ஹிஹிஹி, பிடிச்ச படம் எல்லாம் முன்னாடியே எழுதி இருக்கேன். இருந்தாலும் நீங்க கேட்கிறதாலே சில விளம்பரப் படங்கள்.
1.ப்ரூ விளம்பரத்தில் வரும் பெண்ணின் "ஸ ஸ ஸ ஷுகர் போதுமாப்பா?" என்ற கேள்வியும், அவளோட அப்பாவின் பதிலும்.
2.அதே ப்ரூ விளம்பரப் பெண் தனக்குக் குழந்தை பிறக்கப் போவதைச் சின்னக் கப்பை வைத்துக் கொண்டு கணவனுக்குத் தெரியப் படுத்தும் இடம். அந்தப் பெண்ணின் இயல்பான நாணமும், மகிழ்ச்சியும் சற்றும் செயற்கையாக இருக்காத ஒன்று. ரொம்பவே இயல்பான ஒன்று.கவிதை!
3.ரேமாண்ட்ஸ் விளம்பரத்தில் வரும் இளம் தந்தை. குழந்தையைக் கொஞ்சும்போது, "feeling heavens. Isn"t it?" என்ற கேள்வி வருவது. இன்னும் ஹட்ச் நாய்க்குட்டியும், தாரா பையனின், "ஜிலேபி?" என்ற ஆச்ச்சரியமான கேள்வியும் கவிதைகள்.
ம்ம்ம்ம்ம்ம், படம்னு கேட்டிருக்கிறதாலே சில கார்ட்டுன் படங்கள் சொல்றேன். நான் சின்னப் பொண்ணுதானே. அதனாலே கார்ட்டூன் படங்கள் ரொம்ப விரும்பிப் பார்ப்பேன்.
1.Tom and Jerry இதை அடிச்சுக்க ஆள் கிடையாது இன்னி வரைக்கும்.
2.Finding Nemo அப்பா மீனின் தவிப்பும், அழுகையும் திரும்பத் திரும்பப் பார்க்கும். உணர்ச்சி வசப்படும் மீன்களின் கவிதை இது. எத்தனை முறை வேணுமானாலும் பார்க்கலாம்.
3.MR.Bean: இவர் செய்யும் எது நமக்குப் பிடிக்காது? எல்லாமே பிடிக்கும். இருந்தாலும் சமீபத்தில் பார்த்தது ஒன்று. ஒரு குழந்தையைத் தவறுதலாகப் பிராம்புலேட்டருடன் தள்ளிக் கொண்டு வரும் திரு பீன் அந்தக் குழந்தையின் அழுகையைச் சமாதானப் படுத்தும் அழகு இருக்கிறதே! குழந்தையைச் சமாதானப் படுத்த நிறையப் பலூன்கள் வாங்கிப் பிராமில் கட்டுவதும் பலூன்கள் கட்டப் பட்ட பிராம் மேலே எழும்புவதும், திகைத்துப் போன திரு பீன், உடனேயே வில்லும் அம்பும் வாங்கி ஒவ்வொரு பலூனாக உடைப்பதும் பலூன்கள் உடைபட்ட பிராம் கீழே இறங்குவதைப் பார்த்துப் பயப்பட்டுக் கண்ணை மூடிக் கொள்ளும் பீன் கண் திறக்கும்போது பிராம் குழந்தையின் அம்மா போலீஸ் புகார் கொடுக்கும் சமயம் சரியாகப் போய் இறங்கி விட்டதையும்,. தாயைப் பார்த்தக் குழந்தை சிரிப்பதைப் பார்த்து அவர் சிரிப்பதும் ரொம்பவே நல்லா இருக்கும்.

மறக்க முடியாத நினைவுகள்: மதுரையில் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மறக்க முடிந்ததில்லை. தினம் காலை கோயிலில் இருந்து வரும் கோடி அர்ச்சனைப் போற்றி மந்திர வழிபாடும், (எனக்குத் தெரிந்து மதுரையில் தமிழில்தான் வழிபாடு நடந்து வருகிறது.) ஆடி வீதி திருப்புகழ் மண்டபத்தில் நடக்கும் திருப்புகழ் பஜனைகளும், மார்கழி மாதம் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் நடத்தும் திருப்பாவை வகுப்பில் சேர்ந்து, விடிகாலை மூன்று மணிக்கே எழுந்து மதன கோபால ஸ்வாமி கோவிலில் இருந்து கிளம்பும் பஜனையில் கலந்து கொள்ளும் சுகமும், பஜனை முடிந்து திரும்பும் போது கொடுக்கும் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் போன்றவற்றின் சுவையும், ஹரிதாஸ் ஸ்வாமிகளின் பஜனையும், வாரியார் ஸ்வாமிகளின் கந்தபுராணச் சொற்பொழிவும், சந்தான கோபாலாச்சாரியாரின் வீணையில் வாசிக்கும் சாம கானமும், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் நாராயணீயமும், சிவானந்த விஜயலட்சுமியின் ஹரிகதா காலட்சேபமும், கொத்தமங்கலம் சுப்புவின் வில்லுப்பாட்டில் காந்தி மஹான் கதையும் இன்னும் எத்தனையோ இருக்கிறது. எதை விட, எதைச் சொல்ல? கல்யாணம் ஆகி வந்த புதிசில் தண்ணீரில் இருந்து எடுத்து விட்ட மீனைப் போல இது எல்லாம் இல்லாமல் ரொம்பவே தவித்திருக்கிறேன். இப்போவும் அந்த நாட்களை ரொம்பவே இழந்திருக்கிறேன் என்று தோன்றும்.
அப்புறம் எங்க கல்யாணம் ஆனதும் நாங்க நசீராபாத்தில் கழித்த் 7, 8 வருடங்கள். பொற்காலம்னு சொல்லலாம்.

செயல்: மறக்கமுடியாத செயல்னு ஒண்ணும் செய்யலை. வேணும்னா இப்போ கைலை போயிட்டு வந்ததைக் குறிப்பிடலாம். யாருக்காவது ஏதாவது செய்யணும்னாலோ, கொடுக்கணும்னாலோ உடனே கொடுத்துடுவேன், செய்துடுவேன், தள்ளிப் போட மாட்டேன்.

மறக்க முடியாத உணவு: நிறைய இடங்களில் நிறைய விதமான உணவுகள் சாப்பிட்டிருக்கிறேன். அநேகமாய்க் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை எல்லாவிதமான சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறேன். கிழக்குப் பகுதிக்கு மட்டும் இன்னும் போகலை. இருந்தாலும் சாப்பாடுன்னு வரும்போது, நாங்க கல்யாணம் ஆன புதிசிலே ஒரு முறை டவுனுக்கு வந்துட்டுத் திரும்ப நேரம் ஆகவே, அங்கேயே ஆர்மெனியன் வீதியில் உள்ள "பாலிமார்" ஹோட்டலை ஒருத்தர் சொல்ல அங்கே போய்ச் சாப்பிட்டோம். அது மாதிரிச் சாப்பாடு இதுவரை சாப்பிட்டதில்லை. மறுபடி எத்தனையோ முறை டவுன் பக்கம் போனாலும் அங்கே போக முடிந்ததில்லை. அப்புறம் ஹைகோர்ட் எதிரே உள்ள என் அண்ணாவின் பாங்கிற்குச் சென்றால் பக்கத்தில் உள்ள ஈரானியன் கடையில் தேநீரும்,. சமோசாவும் வாங்கிக் கொடுப்பார். சில சமயம் அங்கே பக்கத்தில் உள்ள "ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம்"ல் சாப்பிடுவோம். அதுக்கும் பக்கத்தில் உள்ள"காதி கிராப்டில்" சாயங்கால நேரத்தில் சுண்டலும், சுக்குக் காபியும் கிடைக்கும். இப்போ காதி அதே இடத்தில்தான் இருக்கு. சுண்டலும், சுக்குக் காபியும் இருக்கா தெரியலை.

விரும்பும் இடம்: எங்கே போனாலும் திரும்ப இங்கே தான் வரவேண்டி இருக்கிறது. அதனாலே விரும்பும் இடம்னு எல்லாம் வச்சுக்க முடியலை. இருந்தாலும் மதுரையின் அருகே உள்ள எங்க ஊர் வராக நதிக்கரை ஓரம் உள்ள மேல்மங்கலம் பிடிக்கும். சின்ன வயசிலே சின்னமனூரில் சித்தி வீட்டில் இருந்தப்போ அங்கே உள்ள ஆற்றங்கரையும், சிவன் கோவிலும், பிள்ளையாரும் ரொம்பவே பிடிக்கும்.

அழ வைத்த விஷயங்கள்: நிறையவே இருக்கிறது. நிறையப் பேர் அழ வைத்திருக்கிறார்கள். காரணம் தெரியாமலும் அழுதிருக்கிறேன். ஏமாத்தறது தெரிஞ்சும் ஏமாந்து அழுதிருக்கிறேன். நட்புன்னு சொல்லி முதுகில் குத்தி இருக்காங்க, சொந்தங்களிலும் ஒரு பலி ஆடு ஆக்கப் பட்டிருக்கிறேன். அதெல்லாம் எல்லார் வாழ்விலும் உண்டு. அதனாலே அது வேண்டாம்.

சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் "சின்னஞ்சிறு பெண்போலே" பாட்டு. அழ வைக்கும் பாட்டு அது. அதுவும் ஒரு முறை ஆடி வீதியில் பாடும்போது, "சிவகங்கைக் குளத்தருகே" என்பதைப் "பொற்றாமரைக் குளத்தருகே" என்றும் "அன்னை சிவகாமி"யை "அன்னை மீனாட்சி" என்றும் பாடினார். அப்போது கிடைத்த standing ovationஐ சமீபத்தில் அருணா சாயிராமிற்குக் கிடைத்ததோடு ஒப்பிடலாம்.

அருணா சாயிராமின் "அபங்க்" கேட்டவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும். அந்த husky voiceல் அவர் தன்னை மறந்து இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு கண்ணை மூடிக் கொண்டு பாடும்போது, அதுவும் மராட்டி நன்கு தெரியுமாதலால், நன்கு பாவத்தோடு பாடுவார். அப்போது வரும் உணர்ச்சிப் பிரவாகத்தை வடிக்க வார்த்தைகள் கிடையாது.

அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை, வதன் கி சிட்டி ஆயி ஹை" எப்போ கேளுங்க, எத்தனை முறை கேளுங்க, எங்கே கேளுங்க, பெருகி வரும் கண்ணீருக்கு அணை போட முடியாது. சீக்கிரம் பப்ளிஷ் செய்யறேன். இதுவும் போயிடப் போகுது. திரும்பிக் கூடப் பார்க்கலை. அப்படியே போடறேன். தப்பு இருந்தா நான் பொறுப்பு இல்லை.

Monday, December 04, 2006

167. அதனால் என்ன, பரவாயில்லை!

திரும்ப வந்துட்டேன். கொஞ்சம் போர் அடிக்கப் போறேன் வழக்கம்போலே. பொறுத்துக்குங்க. திடீர்னு 23-ம் தேதி காய்ச்சல்னு வந்ததும், சரி, வழக்கமான bronchitis fever தான். இனிமேல் ஒரு 2 மாசத்துக்கு "லொக், லொக்" தான்னு நினைச்சேன். ஆனால் டாக்டர் கிட்டேப் போனால் அவர் இல்லை வைரல் ஜுரம்தான்னு சொல்லிட்டார். 3 நாளிலே சரியாப் போயிடும்னு நினைச்சுத் திங்கள் அன்று கொஞ்சம் உட்காரமுடிஞ்சதுன்னு நினைச்சு வழக்கம்போல் வீட்டு வேலைகளைப் பார்த்தால் முடியவே இல்லை. செவ்வாய் அன்றும் சரியாக இல்லை. அப்புறம் ஆரம்பிச்சது பாருங்க ஒரு தொந்திரவு என் ஆயுளில் அனுபவிக்கலை இது மாதிரி. Severe food poisonஎன்று டாக்டர் சொல்லி விட்டார். புதன், வியாழன் என்ன நடந்ததுன்னே தெரியலை. அவ்வளவு மோசமா இருந்தது. டாக்டர் பார்த்துட்டு நாளைக்குள் சரியாகலைன்னா in-patientஆ வச்சுத் தான் பார்க்கணும்னு சொல்லி இருக்கிறார். வியாழன் அன்று இரவு கொஞ்சம் சுமாராக இருந்தது, வெள்ளி அன்று மறுபடி மோசமாக மருந்துகள் மாற்றப்பட்டன. ஊசிகள் குத்தப்பட்டன. எத்தனைன்னு கணக்கு எல்லாம் கேட்கமுடியாது. அப்புறம் சனி அன்று கண் விழித்துத் தமிழ் சினிமா மாதிரி, "நான் எங்கே இருக்கேன்னு கேட்கலாம்"னு பார்த்தால், என் கணவரும் படுக்கையிலே.

கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்னு படுத்திருக்கார்னு நினைச்சு, "என்ன ஆச்சு? ஏன் படுத்திருக்கீங்க?"னு கேட்டா எனக்கும் 2 நாளாகக் காய்ச்சல் இருந்ததுன்னு சொல்றார். சரி, மெல்ல எழுந்து சமையல் அறைப்பக்கம் போகலாம்னு பார்த்தாக் கை, கால் எல்லாம் ஒரே நடுக்கம், நடக்கவே முடியலை. அவர் நீ படுத்துக்கோனு சொல்லிட்டு அவரே எழுந்து எல்லா வேலையும் செய்தார். காய்ச்சல் இருக்கேன்னு கேட்டதுக்கு, 2 நாளா இருந்தது. நேத்திலே இருந்து பரவாயில்லைனு சொல்றார்.என்னத்தைச் சொல்றது? அது கூடத் தெரியாமல் இருந்திருக்கேன். அதுக்குள்ளே தொலைபேசி அழைப்பு. அவர் எடுத்துக் கேட்டுவிட்டு, ஸ்ரீராம், பேசறதுன்னு சொல்லிக் கொடுக்கவும், இப்போதானே வந்துட்டுப் போனான், பங்களூரில் இருந்து நம்மைக் கூப்பிட்டுப் பேசும்படி என்ன விஷயம்?னு ஆச்சரியமா தொலபேசியை வாங்கினேன். கடைசியில் பார்த்தால், இல்லை, இல்லை, முதலில் இருந்தே அது அம்பி தான். அவர் ரொம்ப ஸ்டைலாக, "நான் ஸ்ரீராம் பேசறேன்" னு சொன்னதும் என் கணவர் பங்களூரில் உள்ள எங்க சொந்தக் காரப் பையன்னு நினைச்சிருக்கார். 2 நாளாக தி.ரா.ச. சார் வீட்டில் டேரா என்று சொன்ன அம்பி, குண்டர் படைத் தலைவர், தி.ரா.ச. சார் எல்லாரும் என்னிடம் ஏதேதோ பேச நான் வேறே ஏதோ உலகத்தில் இருந்து அவர்கள் பேசற மாதிரி நினைச்சேன். ஒருமாதிரி, ஒரு மாதிரித் தான் சமாளிச்சுப் பேசி முடிச்சேன்.

இப்போ வானம் நல்லாத் தெளிஞ்சிருக்கிறதாலேயும், வந்து இரண்டு நாள் தான் ஆனதாலேயும்,என்னை வந்து பார்க்க முடியலைன்னு அம்பி சொன்னார். அதனால் என்ன பரவாயில்லை, நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் சமயம் எங்க தெருவிலே தண்ணீர் மேடு, பள்ளம் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தால் அப்போ நீங்களே என்னை அம்பத்தூரில் இருந்து கிளம்பி தி.ரா.ச. சார் வீட்டில் உங்களை வந்து பார்க்கும்படிச் சொல்லி இருப்பீங்களேனு சொன்னேன்.(:D) பாவம், எனக்கு மெயில் கொடுத்து விசாரிச்சிருக்கார். நான் அப்புறம் தான் பார்த்தேன். அதிலே தன்னோட சென்னைப் பயணத்தையும் குறிப்பிட்டுவிட்டு என்னை அவசரப்பட்டு எழுத ஆரம்பிக்க வேண்டாம், நாங்க எல்லாம் ரொம்பவே சந்தோஷமா இருந்துக்கிட்டிருக்கோம்னு வேறே குறிப்பிட்டிருந்தார். அதான் கொண்டாட வந்திருக்கார் போல் இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன். கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சு பங்களூர் போயிருப்பார்னு நினைக்கிறேன். அன்னிக்குத் தற்செயலா மெயில் பார்த்தது, அப்புறம் இன்னிக்குத் தான் வரேன்.இந்த வேதா தான் நான் ஒரு 2 நாள் எழுதலைன்னா கூட தொலைபேசுவாங்க. அவங்க என்னமோ இந்த முறை மூச்சு விடவில்லை. ஏதோ ஊருக்குப் போகப் போறதா அவங்க பதிவிலே பார்த்தேன். போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். என்னைப் பதிவில் விசாரித்த அனைவருக்கும் என் நன்றி. மற்றபடி தனிப்பட்ட முறையில் விசாரித்த அம்பி, அவரோட தம்பி, தி.ரா.ச. சார், கைப்புள்ள, பாசிட்டிவ் ராமா, காழியூரார், உமாநாத் மற்ற முத்தமிழ்க் குழும நண்பர்கள் எல்லாருக்கும் ரொம்பவே நன்றி. இப்போ கொஞ்சம் பரவாயில்லை, இன்னும் normal diet ஆரம்பிக்கவில்லை. அதனால் என்ன, பரவாயில்லை! இப்படியே இருக்கட்டும். இதுவும் கடந்து போகும்.

166. உள்ளொளி பரவட்டும்!

நேற்றுக் கார்த்திகைத் தீபத் திருநாள். நேற்றே எழுதி இருக்க வேண்டியது. முடியலை. எல்லார் வீட்டிலும் கார்த்திகைத் தீபம் ஏற்றிக் கொண்டாடி இருப்பீங்க, சிலர் இன்னிக்குக் கொண்டாடுவாங்க, எல்லார் வீட்டிலும் தீபங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற மாதிரி எல்லார் மனதிலும் அந்த ஒளி சுடர் விட்டுப் பிரகாசிக்கட்டும். "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி"யான அந்த இறைவனின் உடலில் ஒருபாதி கேட்ட உமையவளின் சக்திச் சுடர் எல்லார் இல்லங்களையும், மனதையும் நிறைக்கட்டும். சிவசக்தி ஐக்கியமே இந்த உலகில் மாறாத உண்மை, தத்துவம். அந்தப் பெரும் உண்மையைப் புரிந்து கொள்ளும் திறனை இந்தக் கார்த்திகைத்திருநாள் நம் எல்லாருக்கும் அளிக்கட்டும்.

"வானமெங்கும் பரிதியின் சோதி,
மலைகள் மீதும் பரிதியின் சோதி,
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின்மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி,
மானவன் தன் உள்ளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!" என்று தன் உள்ளத்து இருளைச் சுட்டிக் காட்டுகிற அதே பாரதிதான் பின்னொரு நாளில்,

"அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
ஆங்கோர் காட்டிடைப் பொந்தினில் வைத்தேன்!
வெந்து தணிந்தது காடு- தழல்
மூப்பினில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?" என்று கேட்டுக் கொண்டு மேற்கொண்டு "தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்" என்றும் ஆடிப் பாடுகிறார். நம் மனமாகிய இருண்ட காட்டிற்கும் அது போல் ஒரு ஞான ஒளி தோன்ற வேண்டும். காட்டில் ஏற்படும் தீயானது எப்படிக் காட்டை அழித்துப் பொசுக்குகிறதோ, அது போல் நம் மனத்தில் தோன்றும் இந்த ஒளியானது நம் மனமாகிய காட்டில் உள்ள இருண்ட பாகங்க்ளில் ஒளியைத் தோற்றுவிப்பதோடு நில்லாமல், காட்டில் உள்ள வேண்டாத செடி, கொடி, மரங்களான ஆசை, பொறாமை, தீயவை நினைத்தல், தீயவை செய்தல், தீயவை பார்த்தல் போன்றவற்றையும் அழித்துப் பொசுக்க வேண்டும். பாரதியின் உள்ளத்தில் சக்தியானவள் அந்தப் பொறியை ஏற்படுத்தினாள். அவர் உள்ளத்தில் உள்ள கெட்ட எண்ணங்களால் ஆன காடு அழிந்து ஒழிந்ததை அவர் கூறி ஆனந்தக் கூத்தாடுகிறார். ஆகவே நம் உள்ளத்திலும் சிறு பொறி போல பக்திச் சுடரை ஏற்றினோமானால் அந்த ஒளியானது நம் உள்ளமெங்கும் பரவிப் பிரகாசிக்கும்.

தீயிலே எங்காவது சின்னது, பெரிசு என்று உண்டா? தீ, தீதானே? ஆனால் அதையும் முறையாகப் பயன்படுத்த வேண்டும். நமக்கு உள்ளே ஒளி தருவதோடு இல்லாமல் வேண்டாதவற்றையும் அழித்து ஒழிக்க வேண்டும். அதற்கு நம்முள் இருக்கும் உள்ளுணர்வை, உள்ளொளியை நாம் பக்தி என்னும் பொறியால் ஏற்றினோமானால் நமக்குள்ளும் ஞானம் என்னும் உள்ளொளி பரவும்.நம்மைச் சுற்றியே நாம் பிரகாசத்தை உணர்வோம். அப்புறம் என்ன? நமக்கும் தத்தரிகிட, தத்தரிகிட, தித்தோம்னு குதிக்கத் தோணும். மதுரை ஜில்லாக்காரப் பெண்கள் இந்தக் கார்த்திகைத் திருநாளைத் தங்கள் இல்லம் ஒளிருவது போல் தங்கள் சகோதரர்கள் வாழ்விலும் ஒளி ஏற்றும்படி பிரார்த்தித்துக் கொண்டு கொண்டாடுவார்கள். இன்றளவும் என் சகோதரர்கள் எனக்குக் கார்த்திகைச் சீர் செய்யத் தவறியதில்லை. அது போல எல்லாரும் பிரார்த்தித்துக் கொள்வோம், இவ்வுலகில் உள்ள எல்லாச் சகோதரர்கள் வாழ்விலும் ஒளி வீசும்படிப் பிரார்த்திப்போம்.

"ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு
பயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை."