எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 30, 2011

ஊரைச் சுற்றிய விபரங்கள்

யு.எஸ்ஸுக்கு மூன்று முறை வந்தும் எங்கேயும் சுற்றிப் பார்க்கப் போனதில்லை. முதல் முறை அட்லான்டாவில் இருந்த என் சித்தி பையரைப் பார்க்கச் சென்ற போது அங்கே ஸ்மோக்கி மவுன்டன்ஸ், இன்க்ளைன்ட் ரயில் பயணம், குகைக்குள்ளே ரூபி ஃபால்ஸ் போன்றவை பார்த்தோம். அப்போ இணையத்தில் எழுத ஆரம்பிக்கவில்ல. எழுத ஆரம்பித்ததும் சென்ற முறை வந்தப்போ அதிகமா எங்கேயும் போக முடியவில்லை. அருகே இருக்கும் கால்வெஸ்டன் பீச்சுக்கு மட்டும் காலை கிளம்பிப் போய்விட்டு மாலை வந்தோம்.


இம்முறை இரண்டரை மணி நேரப் பயணத்தில் இருக்கும் சான் அன்டானியோவுக்குப் பையர் அழைத்துச் சென்றார். சான் அன்டானியோ கதையும், அங்குள்ள ரிவர் வாக்கும் தனியாக வரும். இப்போது அங்கே பார்த்த ஸீ வேர்ல்ட் பற்றி மட்டுமே. கடல், கடல் சார்ந்த பிராணிகள் குறித்த இந்தப் பூங்கா குழந்தைகளுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் ருசிகரமாய் ஆவலைத் தூண்டுவதாய் இருக்கிறது. ஸீ வேர்ல்டுக்குள் போக டிக்கெட் மட்டும் ஒருத்தருக்கு 50 டாலர். அதோடு தண்ணீர் மட்டும் எடுத்துப் போகலாம். உள்ளே சென்றால் வெளியே வரக் குறைந்தது எட்டு மணி நேரம் ஆகும். ஆனால் சாப்பாடு உள்ளே விற்பதைத் தான் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்க என் கணவரின் நீரிழிவு நோயைக் காரணம் காட்டிவிட்டு குட் டே பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்ல அநுமதி வாங்கிக் கொண்டோம். மற்றப் பழங்கள், உணவுப் பொருட்களைக் காரிலேயே வைக்கும்படி ஆயிற்று. இதோ ஸீ வேர்ல்டின் நுழைவாயில்.

நுழைகையில் பாதுகாப்புச் சோதனை உண்டு. சிறு குழந்தைகளுக்கும் பாதுகாப்புப் பரிசோதனையோடு குழந்தைகளின் கை விரல் அடையாளங்கள் பதிக்கப்படுகின்றன. உள்ளே போய்க் குழந்தை பிரிந்துவிட்டால் அடையாளம் காண வேண்டி எனச் சொன்னார்கள். நல்ல யோசனைதான். உள்ளே நுழைகையிலேயே கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. நாம் வருஷம் பூராவும் பல பண்டிகைகளைக் கொண்டாடினாலும் இவர்கள் கொண்டாடும் இந்த ஒரே நாள் பண்டிகைக்கு அளிக்கும் முக்கியத்துவம் மனதைக் கவர்கிறது. முக்கியமாய்க் குழந்தைகளின் மனதைக் கவர்ந்த சான்டாவின் பலவேறு விதமான கோலங்களை எங்கும் காணலாம். ஒரு சிலர் சான்டாவைப் போல் உடையணிந்தும் காணப்படுகிறார்கள். அவர்களைப் படம் எடுக்கிறதுக்குள்ளாகக் காட்சி மாறிவிட்டது. முதலில் ஷாமு ஷோ பார்க்கச் சென்றோம்.



இந்த ஷாமு 1961-ல் பிடிபட்ட மிகப் பெரிய திமிங்கிலத்தில் ஒன்று. பெண் திமிங்கிலமான இது உலகின் நான்காவது பெரிய திமிங்கிலமாகவும், இரண்டாவது பெண் திமிங்கிலமாகவும் இருந்ததோடு பொதுமக்களின் பார்வைக்காகவும் வைக்கப்பட்டது. நாளாவட்டத்தில் இதைப் பழக்கி ஷாமு எனப் பெயரிட்டு சான் டியாகோவில் இருந்த ஸீ வேர்ல்ட் காட்சியில் நக்ஷத்திர அந்தஸ்தைப் பெற்றது. ஆனால் குழந்தைகள், பொதுமக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்த இந்த ஷாமு பதின்மூன்று மாதங்களே காட்சிகளில் வந்தது. 1971-ல் இது இறந்ததாய்ச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் பல திமிங்கிலங்கள் பிடிக்கப்பட்டுக் காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டாலும் அனைத்துக்கும் பிரபலமான ஷாமுவின் பெயரையே சூட்டினார்கள். அது சான் டியாகோவில் மட்டுமில்லாமல் எந்த மாநிலத்தின் ஸீ வேர்ல்ட் காட்சியாக இருந்தாலும் ஷாமுவின் பெயரிலேயே காட்சி நடந்து வருகிறது. காட்சியின் சில பகுதிகளைக் காணலாம்.
நாங்கள் அமர்ந்திருக்கும் பக்கம் அருகே வந்த திமிங்கிலத்தையும் அதே சமயம் எதிர்ப்பக்கம் போன திமிங்கிலத்தையும் காணலாம்.


எதிர்ப்பக்கம் சென்ற திமிங்கிலம்.


குழந்தைகளை மகிழ்விக்க விதவிதமான வேஷங்களில் காட்சி கொடுப்பவர்கள். இப்போது கிறிஸ்துமஸ் நெருங்குவதால் அனைத்துக் காட்சிகளும் அதை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது. கிறிஸ்துமஸின் புனிதமும், கிறிஸ்துவின் அறிவுரைகளும், கிறிஸ்துமஸ் அலங்காரங்களும், சான்டாவைப் பற்றியும், அவர் எவ்வாறு நல்ல குழந்தைகளுக்கு அருமையான பரிசை அளிப்பார் எனவும், வழி தவறும் குழந்தைகளை எவ்வாறு அரவணைத்துத் திருத்திப் பெரிய பரிசளிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

இவர்களோடு கை குலுக்கி உரையாடிப் படங்கள் எடுத்துக்கொள்கின்றனர் குழந்தைகள் தனியாகவும், அவர்கள் குடும்பத்தினரோடும். குழந்தைகளின் விருப்பங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இடம் அடைக்கும் என்பதாலும், திறக்க நேரம் பிடிக்கும் என்பதாலும் ரெசலூஷனைக்குறைச்சுப் போட்டிருக்கேன் சில படங்களை. சரியா வந்திருக்கானு தெரியலை. தொ.நு.நி. மன்னிக்க. :P

ஓ, வெல்கம், ஸ்வீட் வெல்கம், மெரி கிறிஸ்துமஸ்!


சான்டா அங்கே ஒரு மாபெரும் கப்பலில் மிதந்து கொண்டிருந்தார். இந்தப் பையன் பில்லி, அங்கே தான் காலநிலையைக் கவனிக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தான். எட்வர்டும், அந்தச் சுட்டிப் பெண்ணும் அவனை அழைக்கச் சென்றபோது தவறுதலாக எதையோ அழுத்த, அது பின்னாலேயே நகர ஆரம்பிக்க மூவரும் அதோடு பயணித்து, அங்கு நடைபெறும் அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டே வந்தனர். கிறிஸ்துமஸுக்குப் பரிசளிக்கவென சான்டா கிளம்பும் கலைமான்கள் பூட்டிய வண்டி பயணம் செய்யச் சித்தமாக நின்றது. அப்போது அந்த வெள்ளி மணிகளில் ஒன்று தவறிக் கீழே விழ எட்வர்ட் அதைக் கையில் எடுத்து ஆட்டிப் பார்த்தான். போலார் எக்ஸ்பிரஸில் வருகையில் அந்தப் பெண்ணிற்கு இந்த மணி ஓசை கேட்டது அவன் நினைவில் வந்தது. அப்போது அவனுக்குக் கேட்கவில்லை. ஆகவே இப்போதாவது தனக்குக் கேட்கிறதா என்று பார்த்தான். ஏமாற்றம் தான்! மணி ஓசை கேட்கவே இல்லை அவனுக்கு. உடனே தனக்கு சான்டாவிடமும், கிறிஸ்துமஸின் உண்மையான புனிதத்திலும் நம்பிக்கை இருப்பதாக வாய்விட்டுச் சொல்லிக் கொண்டான். சான்டாவை நம்புவதாகவும் மீண்டும் கூற அவன் கண்களுக்கு சான்டாவும் தெரிந்தார். மணியின் ஓசையும் கேட்டது. அந்த மணியில் சான்டாவின் உருவமும் தெரிந்தது.

கிறிஸ்துமஸின் முதல் பரிசைக் கொடுக்க சான்டா எட்வர்டைத் தேர்ந்தெடுத்தார். எட்வர்டிடம் இவ்வுலகில் இருக்கும் எதை வேண்டுமானாலும் கேள்; உனக்குக் கிடைக்கும் எனக் கூறினார். எட்வர்டுக்கோ அந்த வெள்ளி மணியின் மேலே ஆசை; மணி ஓசை எல்லாருக்கும் எப்போதும் கேட்காது. சான்டாவின் மேலும் கிறிஸ்துமஸின் புனிதத்தன்மையின் மேலும் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும். சான்டாவின் கைகளில் இருந்து வெள்ளிமணி நழுவ அதை எடுத்துத் தன் ட்ரவுசர் பையில் போட்டுக்கொண்டான் எட்வர்ட். அங்கிருந்த அனைவருக்கும் பரிசளித்த சான்டா மற்றக் குழந்தைகளுக்கும் பரிசளிக்க அங்கிருந்து தன் பயணத்தைத் தொடங்கினார்.
குழந்தைகளும் மீண்டும் போலார் எக்ஸ்பிரஸுக்குத் திரும்பினார்கள். குழந்தைகளின் டிக்கெட்டுகளில் அறிவுரைகள் நிரம்பிய கடிதங்களைக் கோர்த்துக் கொடுத்தார் ரயிலின் கன்டக்டர். தன் வீடு வரும் போது தன் ட்ரவுசர் பையைச் சோதித்துப் பார்த்த எட்வர்ட் அந்தப் பை எப்படியோ ஓட்டையாகி இருப்பதையும் வெள்ளி மணி அதிலிருந்து கீழே விழுந்திருப்பதையும் கண்டு ஏமாந்து போய்ச் சுற்றும் முற்றும் தேடினான். மணி எங்கும் கிடைக்கவில்லை. ரயிலிலிருந்து கீழே இறங்கித் தேடலாம் என்றால் நேரமாகிவிட்டது. மனம் ஒடிந்து போனான் எட்வர்ட். ஆனால் அவன் மனதில் கொஞ்சமாவது சந்தோஷம் கொடுக்கும் நிகழ்வு ஒன்று அப்போது நடந்தது. ஷிகாகோவிலிருந்து வந்த பில்லிக்கு அவன் கேட்ட பரிசு கிடைத்துவிட்டதாம். சான்டா வந்து கொடுத்திருக்கிறார் என மிகவும் சந்தோஷம் அடைந்து கிறிஸ்துமஸ் தனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாய்ச் சொன்னான். அவன் வீட்டருகே ரயில் வந்து நின்றதும் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லிப் பிரியாவிடை பெற்றான் எட்வர்ட். மறுநாள் கிறிஸ்துமஸ் அன்று காலை அவன் தங்கை கிறிஸ்துமஸ் மரத்தினருகே இன்னும் பிரிக்கப்படாமல் இருந்த பரிசுப் பொருள் ஒன்றைக்கண்டாள். அனைத்துப் பரிசுகளும் பிரிக்கப்பட்டிருக்க அது மட்டும் பிரிக்காமல் காணப்பட்டது.

எட்வர்ட் அதை எடுத்துப் பிரித்தால் ஆஹா, அந்த வெள்ளி மணியே அது! அதை எடுத்து ஆட்டிப் பார்த்தான். இனிய நாதம் கிளம்பியது. அவன் மட்டுமின்றி அவன் தங்கையும் கேட்டாள். ஆனால் அவன் பெற்றோருக்குக் கேட்கவில்லை. ஏனெனில் அவர்கள் சான்டாவை நம்புவதை விட்டுவிட்டனர். ஆனால் எட்வர்டிற்கு மட்டும் அவன் பெரியவனான பின்னரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அவன் சிநேகிதர்களுக்கும் சரி, அவன் சகோதரிக்கும் சரி, அவர்கள் வயதானபின்னால் கேட்கவே இல்லை என்று சொன்னார்கள்; சொல்கிறார்கள். ஆனால் எட்வர்டிற்கு மட்டும் அவனுக்கு வயதானபின்னரும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஏனெனில் அவன் உண்மையாக சான்டாவின் இருப்பை நம்புகிறான்.

Sunday, November 27, 2011

ஜிகு ஜிகு ஜிகு ரயில் வண்டி, கூ உச் உச் உச் உச்!

ரயிலில் ஏறிய எட்வர்ட் அங்கே அவன் மட்டும் தனியாக இல்லை, எனவும் அவனைப் போன்ற குழந்தைகள் பலரும் சான்டாவைக்காணப் பயணப்பட்டிருப்பதையும் கண்டான். அவர்களில் ஒரு சிறுமி தனக்கு எல்லாம் தெரியும் என்பது போன்ற தன்னம்பிக்கையோடு இருந்தாள்.
பில்லி என்னும் வேறொரு சிறுவனோ ஷிகாகோவின் இல்லினாய்ஸிலிருந்து வந்திருந்தான். தனிமையை விரும்பினான் . அவனுக்கு ரயிலின் கூரையின் மேலே ஒரு நாடோடியுடனும், நெருப்பு அள்ளிப் போடும் ஃபயர்மேனான ஸ்டீமரோடும் ரயிலின் எஞ்சினியரான ஸ்மோக்கியோடும் மோதல் ஏற்பட்டது. அதோடு இல்லாமல் ரயில்பாதையில் நிறையத் தடங்கல்களுக்கும் குறைவில்லை. ஒரு நேரம் ஒரு பெரிய மலைப்பாதையை ரயில் தாண்டுகையில் அந்த நாடோடியும், சிறுவனும் அங்கே நடுவழியில் குறுக்கிட்ட சுரங்கப்பாதையில் இடித்துக்கொண்டு நசுங்கிப் போய்விடாமல் இருக்கவேண்டிக் கீழே இறங்கினார்கள். வழுக்கிவிட்டது. கிட்டத்தட்ட ரயிலில் இருந்து கீழே விழுந்திருக்க வேண்டும். மேலேயே இருந்திருக்கலாம் என்றால் சுரங்கத்தின் கூரைக்கும், ரயிலின் மேல்பாகத்துக்கும் இடைவெளி ஒரு இஞ்ச் கூட இல்லை. நல்லவேளையாகத் தப்பிப் பிழைத்தனர். அதை அடுத்து கூட்டம் கூட்டமாகக் காரிபோ என அழைக்கப்பட்ட மிருகங்கள் வந்தன. (கலைமான்??) ஒருவழியாக அவற்றிலிருந்தும் தப்பினால் ரயிலின் முக்கியச் சாவி ரயிலை மெதுவாகச் செலுத்த முயன்றபோது உடைந்துவிட்டது. மிகவும் கஷ்டப்பட்டுச் செலுத்திக்கொண்டிருந்த ரயில் இப்போது நீராவியை அள்ளித் தெளித்தபடி (சே, நிஜம்மாவே ஜலம், மேலெல்லாம் தெளிக்கிறதே!:D) கட்டுப்பாடில்லாமல் சென்றது.

நம் ஹீரோவான எட்வர்டும், ஹீரோயின் ஆன அந்தச் சிறுமியும் ரயிலின் கண்டக்டரின் உதவியோடு முன் நின்று ரயிலைப் பனிப்பாறைகளால் நிரம்பியதொரு ஒடுக்கமான பள்ளத்தாக்கிற்குக் கொண்டு வந்தனர். திடீரென அங்கே செங்குத்தாகப் பாதை கீழே இறங்கி மேலே செல்ல, மூவரும் முன்னால் நின்றவண்ணம் இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டனர். ரயில் வேகமாய்ச் சென்றது. அங்கிருந்த ஓர் உறைந்த ஏரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயிலை ஓட்டுவதற்குச் சிரமப் பட்டுக்கொண்டிருந்த ஸ்டீமர் அவசரத்திலும் சாவியைச் சரி செய்ய வேண்டும் என்ற வேகத்திலும் தெரியாமல் அதை விழுங்கி விட்டான். இப்போ என்ன செய்யறது? ரயிலோ குலுங்கிக்குலுங்கிச் செல்கிறது. அதோ அந்தச் சாவி! ஸ்டீமரின் தொண்டையிலிருந்து வெளியே வந்து, கீழே உறைந்திருக்கும் பனியில் அல்லவோ விழுகிறது. ஆஹா! இது என்ன! அது விழுந்த வேகத்தில் அங்கே உறைந்திருக்கும் பனியெல்லாம் உடைந்து போகிறதே! அதற்குள் ஸ்மோக்கி தன்னிடமிருந்த ஒரு ஹேர்பின்னால் காட்டர்பின்(சாவி) செய்யவேண்டிய வேலைக்கு மாற்றாகப் பயன்படுத்துகிறான். அவர்களுக்குப் பின்னாலேயும் ஐஸ் உடைந்து கொண்டு வந்தது. ரயிலின் பாதையும் முழுக்க முழுக்க ஐஸால் நிறைந்து இருந்தது. கன்டக்டர் வெகு கவனமாக ஸ்மோக்கியையும், ஸ்டீமரையும் ஏரியின் அடுத்த பக்கம் தாண்டுவதற்கு உதவி செய்கிறார். அப்பாடா, ஒரு வழியா வடதுருவத்துக்கு வந்து சேர்ந்தாச்சு. ஆனால் இந்த பில்லி, என்னமோ சான்டாவைப் பார்க்கத் தான் வரப் போவதில்லை என்கிறானே? ஏனென்று கேட்டால் அவன் எங்கிருந்து வந்திருக்கிறானோ அந்த ஊரும் சரியில்லையாம்; அவன் குடும்பமும் உடைந்து விட்டதாம். கிறிஸ்துமஸோ, சான்டாவோ தனக்கு எதுவும் நன்மை செய்ய முடியாது என்று கூறுகிறான். உண்மையா?

Friday, November 25, 2011

வட துருவத்துக்கு வாரீஹளா!

கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது. நாளை கிறிஸ்துமஸ். மிசிகனில் உள்ள க்ரான்ட் ராபிட்ஸில், பத்து வயதே ஆன எட்வர்டிற்கு (கற்பனைப் பெயர்) தூக்கம் வரவே இல்லை. நாளை விடிந்தால் கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸின் உண்மையான திருப்தியும், புனிதமும் கிறிஸ்துவை நம்புவது மட்டுமில்லாமல், சான்டா என்னும் தாத்தா தான் வந்து வருடா வருடம் பரிசுப் பொருட்களைக் கொடுப்பார்கள் என்று அம்மாவும், அப்பாவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே! அது உண்மையா?? சான்டா கலைமான்கள் பூட்டிய வண்டியில் வெள்ளி மணிகளை ஆட்டிய வண்ணம் "ஹோ ஹோ, ஹோ" என்று கோஷம் போட்டுக்கொண்டு வருவாராம். அவரவர் ஆசைப்பட்டுக் கேட்கும் பரிசுகளைப் புகைபோக்கி வழியாய்க் கீழே இறங்கி (எப்படி முடியும் இது?) கொடுப்பாராமே? உண்மையா? எட்வர்ட் இன்றிரவு விழித்துக்கொண்டு இதைக் கண்டு பிடித்தே ஆகவேண்டும் என நினைத்தான்.

பக்கத்து அறையில் அவன் தங்கையை அவன் பெற்றோர் தூங்க வைக்கும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தன் படுக்கையில் படுத்திருந்த அவனுக்குக் கீழே இருந்து ஏதோ சப்தம் கேட்க உடனே சான்டா வாயில் வழியாக வருகிறாரோ எனத் தோன்ற அவசரம் அவசரமாகக் கீழே இறங்கினான். ஏதோ நிழல் போல் தெரிந்தது. இதுதான் சான்டாவோ என நினைத்துப் பார்க்கையில் அவன் பெற்றோர் தான் சான்டாவின் அலங்காரத்தில் வந்திருப்பதைப் புரிந்து கொண்டுவிட்டான். என்றால் தங்கையைத் தூங்க வைத்துவிட்டு சான்டாவின் உடையை அணிந்து கொண்டு இருவரும் வருகின்றனரா? எழுந்தவன் தன்னுடைய புத்தக அலமாரியைக் குடைந்தான். என்சைக்ளோபீடியாவிலோ அல்லது அவனிடம் இருக்கும் மற்றப் புத்தகங்களிலோ சான்டாவைப் பற்றிய விபரங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றான். சரியான புத்தகம் கிடைக்கவில்லை. அதற்குள்ளாக அவன் பெற்றோர் அவன் அறைப்பக்கம் வருவது தெரிய வரவே, மீண்டும் படுக்கையில் போய்ப் படுத்துக்கொண்டு தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தான்.

சான்டாவைப் பற்றிய கதைகளைக் கேட்பதில் எட்வர்ட் எவ்வளவு ஆவலாக இருந்தான் என்பது குறித்து அவன் பெற்றோர் இருவரும் அவர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டே அங்கே வந்தனர். இரவு எத்தனை மணியானாலும் விழித்திருந்து சான்டாவைப் பற்றிய கதைகளைக் கேட்டுவிட்டே படுப்பானே என அவர்கள் சொன்னதைக் கேட்டதும் கொஞ்சம் மன உறுத்தலாக இருந்தது அவனுக்கு. யோசனைகள் செய்து கொண்டே தூங்காமல் இருந்தவனுக்கு ஒரு மணி நேரம் சென்றது தெரியவில்லை. அப்போது எங்கேயோ ரயில் ஊதும் சப்தம்.



கூ கூ கூ கூ உச் உச் உச் உச் உச் உச் உச்,

இந்த நேரத்தில் ரயிலா? அதுவும் இங்கேயா?

"எட்வர்ட், எட்வர்ட், வா, எழுந்திரு, இந்த ரயிலில் நாம் வடதுருவத்திற்குப் போகப் போகிறோம். சான்டாவை அங்கே நீ நேரேயே சந்திக்கலாம்."





ரயிலின் கன்டக்டர் கூறினார். சற்றே தயங்கிய எட்வர்ட் தன்னையும் அறியாமல் எழுந்து வந்து ரயிலில் ஏறிக்கொண்டான். ரயிலும் கிளம்பியது.

ரயிலின் பெயரே போலார் எக்ஸ்பிரஸ்.

கூ கூ கூ உச் உச் உச் உச் உச் உச் உச்


ரயில் தொடர்ந்து செல்லும்!

டிஸ்கி: பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் என் போக்கில் சொல்ல முயன்றிருக்கிறேன். ஆகவே ஏற்கெனவே தெரிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளவும். அதோட எங்கள் ப்ளாகுக்குக் கதை எழுதினதின் தாக்கம் இன்னமும் இருக்கே! :))))))))) நன்றி.

Thursday, November 24, 2011

ஒரு முக்கியமான விஷயம்!

விரைவில் எதிர்பாருங்கள்


நாசாவில் தலைவி!


பூமிக்குக் கீழே 180 அடி ஆழத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட தனிபெரும் தலைவி!


விபரங்கள் விரைவில்.

Catch me if you can!


பக்கத்து ஊரான சான் அன்டானியோவின் ரிவர் வாக்கிற்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல் சாப்பாடு பிரச்னை. :))) பழங்கள், பிஸ்கட், சாலட் என சமாளிச்சாச்சு! அங்கே தங்கி இருந்தப்போப் பொழுது போகலைனு தொலைக்காட்சியை மேய்ந்தபோது காட்ச் மீ இஃப் யு கான். என்ற படத்தைப் பார்க்க நேர்ந்தது. நாங்க பார்க்கையிலே வழக்கம்போல் கொஞ்சம் படம் ஓடியாச்சு. ஆஸ்பத்திரியில் நர்சிடம் பொய்யான தகவல்களைக் கொடுக்கும் இடமா இருந்ததா! சரி, நம்ம வசூல்ராஜாவோட ஒரிஜினலோனு நினைச்சுட்டேன். கடைசியிலே பார்த்தாக்க, இது "நான் அவனில்லை(?) படத்தோட ஒரிஜினலோனு சந்தேகம். லியனார்டோ டி காப்ரியோ நல்லா நடிச்சிருக்கார்னு சொல்றது எல்லாம் சும்ம்ம்மா! ஒரிஜினல் Frank Abagnale, Jr. ஆகவே மாறிட்டார்.

அவரோட அப்பாவைச் சந்திக்கிறதெல்லாம் உண்மைக் கதையில் இல்லையாம்; சினிமாவுக்கு மசாலா சேர்க்க வேண்டிச் சொல்லி இருக்காங்களாம். ஆனாலும் அது கதையோட ஒட்டியே வருவதால் வித்தியாசமாத் தெரியலை. கல்யாண ரிசப்ஷன் பார்ட்டியில் அவசரம் அவசரமா மனைவி கிட்டே உண்மையை ஒத்துக்கொண்டு தன்னோட கூட ஓடி வரும்படி கேட்டுக்கொண்டு, அவளுக்காகக் காத்துட்டு இருக்கிறச்சே, மனைவி வரதைப் பார்த்து சந்தோஷப்பட்ட அடுத்த விநாடியே ஆங்காங்கே நிற்கும் உளவுத்துறை ஆட்களை அடையாளம் கண்டு கொண்டு ஏமாந்து போகிறார். மனைவி அப்புறம் என்ன ஆனானு சரியாத் தெரியலை சினிமாவிலே. உண்மை வாழ்க்கையில் பிடிபட்டு தண்டனை அனுபவிச்சப்புறமும் விடுதலையாகிக் கல்யாணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளும் 26 வருடத் திருமண வாழ்வும் இந்தப் படத்தை எடுக்கையில் உண்மையான ஃப்ராங்கிற்கு ஏற்பட்டிருக்கிறது.

விமானத்திலிருந்து கழிவறை வழியாத் தப்பிக்கிறதெல்லாம் ரொம்பவே ஓவர்! நம்பறாப்போல் இல்லை. அதுவும் உண்மைக் கதையில் இருந்திருக்காதுனு நினைக்கிறேன். என்னதான் கழிவறை வழியாக் கீழே ஒளிந்திருந்து தப்பிச்சாலும் விமானம் மேலே பறக்கையிலே எப்படி அவ்வளவு நேரம் ஒளிஞ்சிருக்க முடியும்? அந்தச் சின்ன துவாரம் வழியாக் கீழே சக்கரங்களுக்கு நடுவே இறங்கி ஓடிடறாராம். ம்ஹும்; சான்ஸே இல்லை; கஸ்டம்ஸ், இமிக்ரேஷன் எல்லாம் தூங்கிட்டா இருந்தாங்க?

மற்றபடி படம் உண்மைக் கதைங்கறதாலே உள்ளது உள்ளபடி எடுத்திருக்காங்க. எப்.பி.ஐ. கிட்டேயே மாட்டிக்கொண்டு, தண்டனை பெற்று, பின்னால் அவங்களுக்குத் தற்செயலாக உதவி செய்து, விடுதலை அடைந்து, அவங்களுக்கே உதவிகள் செய்து அதன் மூலம் நிரந்தர வருமானம் பெற்று; நடுவில் மறுபடி ஓடிப் போய்; மறுபடி திரும்பி வந்து! எல்லாம் நடந்தவை. உண்மையான ஃப்ராங்கே பார்த்துட்டுப் பாராட்டினாராம். நிறைய விருதுகள் இந்தப் படத்திற்குக் கிடைச்சிருக்கு. தொய்வில்லாமல் இருந்தது.

Friday, November 18, 2011

கவரை, துவரை, விடாதீர்கள் அவரை! (எங்கள் சவடால் 2K+11)

தங்கத் தவளை பெண்ணே!
சவடால் கதைப் போட்டி. எங்கள் 2K+11.


ராஜா வேட்டையாடி விளையாடுகையில் நடந்தவைகளைக் கேள்விப்பட்ட ஜோசியர் "அவரை விடாதீர்கள் !" எனக் கத்த நினைத்துத் தம்மை அடக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டார். பின்னர் தம் அறைக்குச் சென்று உள்ளே தாழிட்டுக் கொண்டார்.

அவரை, துவரை, கவரை ஹோய்

ஹோய், கவரை துவரை அவரை டோய்

டோய் துவரை, அவரை, கவரை ஹோய்

எனத் திரும்பத் திரும்பக் கூறினார். ஒவ்வொரு முறையும் அவர் உடல் சிலிர்த்துக்கொண்டது. எதையோ எதிர்பார்க்கிறாப்போல் காணப்பட்டார். அவர் எதிரே ஒரு கண்ணாடி.
அதிலே சற்று நேரத்திற்கெல்லாம் சில காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. ஏழு கடல்கள், ஏழு மலைகள் தாண்டி, ஏழு கிணறுகள் தாண்டி அங்கே வசிக்கும் விசித்திரமான தவளைக் குடும்பங்களைத் தாண்டிச், சென்றால் அங்கே ஓர் அவரைப் பந்தல். அதிலே காய்த்தன பச்சைப்பசேலென அவரைக்காய்கள். அதிலே ஒரு அவரைக்காய் மட்டும் தனித்துத் தெரிந்தது. அது அளவில் கொஞ்சம் பெரிசாகவும், அதோடு முழுத்தங்கமாகவும் இருந்தது. அதையே உற்றுப் பார்த்துக்கொண்டு, "விடாதீர்கள் அவரை" என மீண்டும் கத்தினார் ஜோசியர். உடனே அங்கே தூரத்தில் காவல் காத்துக்கொண்டிருந்த முரட்டுத் தவளை ஓன்று வந்து, கண்ணாடியில் தெரிய இங்கிருந்தே அதனிடம், மறுபடியும் தன் மந்திர ஸ்லோகத்தைக் கூறிப் பின் "விடாதீர்கள் அவரை" என்று முடித்தார்.

அந்தத் தவளை பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அந்தப் பெரிய அவரைக்காயிடம் போய், கேலி செய்வது போல் தன் குரலெடுத்துக்கத்த ஆரம்பித்தது. அவரைக்காய் திடீரெனப் பேசியது. " உன்னை அழிக்கும் வழி எனக்குத் தெரியும். பொறுத்திரு; என் மனைவி ஒரு பெரும்படையோடு வருவாள். பாம்புக்கூட்டங்களை அழைத்துவந்து உங்களை எல்லாம் அழிப்பாள்." என்று பெருமிதத்தோடு கூறியது.

"ஹாஹாஹா, அவள் அப்படி ஏதேனும் செய்யக் கூடாது என்று தானே அவளை நாங்கள் தங்கத்தவளைப் பெண்ணாக மாற்றிவிட்டோம்! ஹையா! ஜாலி, ஜாலி, இப்போ என்ன பண்ணுவே, இப்போ என்ன பண்ணுவே?" என்று அந்தத் தவளை தாவிக் குதித்தது. மனம் நொந்து போனான் இளவரசன்/ராஜா/ராஜகுமாரியின் கணவன்?? எங்கள் ப்ளாக் இதிலே எதுவேணாலும் வைச்சுக்குங்க!

ஜோசியர் மீண்டும் கூறினார், "விடாதீர்கள் அவரை!" பின்னர் அந்தக் கண்ணாடியை மூடி வைத்துவிட்டு சந்தோஷமாகத் தன் எதிர்காலத்தைக் குறித்துக் கனவு காண ஆரம்பித்தார்.


இங்கேயோ தங்கத்தவளைப் பெண்ணாக வந்த ராஜகுமாரி ராஜா புங்கவர்மன் ஏதோ செய்யப் போறான்னு நீனைச்சா அவன் வேட்டைனு போயிட்டு கடைசியில் எலி வேட்டை ஆடிவிட்டு அதற்கே களைத்துப் போய்க் கொட்டாவி விட்டுத் தூங்கிவிட்டான் என்பதைப் பார்த்துவிட்டு மனம் வருந்தினாள். என்ன செய்யலாம் என யோசித்துத் தன் தவளைக்குரலில் விடாமல் கத்த ஆரம்பித்தாள். ராஜாவுக்குத் தூக்கம் கலைந்தது. அப்போது பச்சை வண்ண ஆடைக்காவலன் சந்தடியில்லாமல் அறைக்குள் நுழைந்தான். ராஜாவுக்குப் பயத்தில் பேச்சே வரவில்லை. "சே, நீயெல்லாம் ஒரு ராஜா, உனக்கெல்லாம் ஒரு வாளா!" என்றான் காவலன். ராஜா அசடு வழியச் சிரித்து, "என்ன விஷயம், உன் சம்பள பாக்கி....." என இழுக்க, "விட்டுத்தள்ளுங்க, நான் அதைக் கேட்க வரலை இப்போ! உங்க கிட்டே ஒரு ரகசியத்தைச் சொல்லிட்டுப் போக வந்தேன்.' என்றான்.

"ரகசியமா? என்னது அது?' என்று ராஜா கேட்க, "நானும், உங்க கிட்டே சம்பளம் கேட்காமல் நீங்களும் பணக்கார ராஜாவாக ஒரே ஒரு வழி இருக்கு." என்றான் ப.வ.காவலன். ராஜா ஆர்வத்தோடு தன் மூக்கை நீட்ட, அதில் ஓங்கிக் குத்திய காவலன், "என்ன பறக்காவட்டித்தனம்! இருங்க!" என்று சொல்லிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தான். "விடாதீர்கள் அவரை!" என்றான். ராஜா பயத்தில் துள்ளிக் குதிக்க, தன் தலையில் மடேர் மடேர் என அடித்துக்கொண்ட காவலன்," இது ஒரு ரகசிய மந்திரமாக்கும்" என்றான். "ஹிஹிஹி, என்னைத்தான் எதிரிகளிடம் பிடிச்சுக் கொடுக்கிறயாக்கும்னு நினைச்சுட்டேன்." என அசடு வழிய, "நீங்க கெட்ட கேட்டுக்கு எதிரிவேறேயா?" எனத் தனக்குள் முணுமுணுத்த ப.வ.காவலன் ஜோசியர் அறையின் ஜன்னல் வழியாகத் தான் கண்ட காட்சிகளைக் கூறினான்.
எல்லாவற்றையும் கேட்ட ராஜா, தங்கத்தவளைப்பெண்ணின் கணவன் தங்க அவரைக்காயாக இருக்கிறான் எனக் கேள்விப்பட்டுவிட்டு அங்கே எப்படிச் செல்வது எனக் காவலனையே கேட்டான். காவலன் மறுபடி தலையில் அடித்துக்கொண்டு, "நீயெல்லாம் ஒரு ராஜா, உனக்குக் காவலன் ஒரு கேடு!" என்று சொல்லிவிட்டு ஜோசியரைத் தாஜா செய்ய நாட்டியக்காரியை அனுப்பச் சொன்னான். ராஜாவுக்கு நாட்டியக்காரியை அனுப்பவேண்டும் என்றதும் தானும் உடன் செல்லவேண்டும் என்ற சபலம் தட்டியது. காவலன் கண்டிப்பாக ராஜா போகக் கூடாது என்று சொல்ல அரை மனசோடு ராஜா சம்மதித்தான். நாட்டியக்காரியோ ஒரு வருஷமாகச் சம்பளம் கிடையாது, புத்தாடைகள் கிடையாது; ஜோசியரை மயக்கறது என்றால் அதற்கேற்ற மதுவகைகள் கிடையாது; நான் போக மாட்டேன்." என்று பிடிவாதம் பிடிக்க இதுதான் சாக்கு என்று ராஜா அவளைத் தாஜா செய்யும் சாக்கில் கொஞ்ச ஆரம்பித்தார்.

தங்கத் தவளைப்பெண் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுக் காவலனின் புத்திசாலித்தனத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தாள். ராஜாவும் நாட்டியக்காரியும் குலாவுவது கண்டு அவளுக்குப் பொறாமையும் கோபமும் வர மீண்டும் தவளைக்குரலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். காவலன்," ஜோசியரைப் பத்தி உனக்குத் தெரியுமா?" என்று தங்கத்தவளை கிட்டே கேட்க, "விடாதீர்கள் அவரை" என்று தவளைக்கத்தல் கத்தினாள் ராஜகுமாரி. காவலன் அதிபுத்திசாலியாதலால் இதிலே ஏதோ சூட்சுமம் இருக்குனு புரிந்து கொண்டான். நாட்டியக்காரியைப் பலவந்தமாகப் பழைய மதுவையே எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் போய் அவரை மயக்கி விஷயங்களைத் தெரிந்து வரச் சொல்லி அனுப்பி வைத்தான்.

நாட்டியக்காரியையும் ,மதுவையும் பார்த்ததுமே ஜோசியர் உளற ஆரம்பித்தார். தான் முன்னர் இருந்த நாட்டில் அவரை ராஜகுமாரனின் பணச் செருக்கையும் அவன் சபையில் தான் இருந்தபோது இரண்டு பேருக்கும் வந்த சண்டையையும், அவனைப் பழிவாங்கவென்றே தான் இந்த நாட்டுக்கு வந்து அவனையும் அவரைக்காயாக மாற்றிவிட்டு, ராணியையும் தவளையாக மாற்றித் தன் அடிமையாக வைத்திருப்பதையும் உளறிக்கொட்டிக் கிளறி மூடினார். அப்படியா? அங்கே செல்ல வழி என்ன? என்று நாட்டியக்காரி கேட்க, தன் கண்ணாடியைக் காட்டிய ஜோசியர் அதைத் தேய்த்தால் அதிலிருந்து வரும் ஒளிக்கிரணங்களில் ஜிலுக்கு குலுக்கு பாய் பாய், என்னும் மந்திரத்தைச் சொன்னால் அது பறக்கும் பாயாக மாறும் என்றும்
அதில் ஏறிச் செல்லவேண்டும், அங்கே போய், அந்தத் தங்க அவரைக்காயைப் பறித்துக்கொண்டு,
அவரை, துவரை, கவரை ஹோய்

ஹோய், கவரை துவரை அவரை டோய்

டோய் துவரை, அவரை, கவரை ஹோய்"


என்னும் மந்திரத்தைச் சொன்னால் தங்க அவரை ராஜா உருவம் பெற்றுவிடுவான் என்றும், மீண்டும் அதே மந்திரத்தை மட்டும் சொல்லாமல் கூடவே , கவரை, துவரை, விடாதீர்கள் அவரை என்னும் மந்திரத்தை மட்டும் தனியாகச் சொன்னால் தான் அவரைக்காயாக நிரந்தரமாக ஆகிவிடுவோம் என்றும் தனக்கு அப்படி ஒரு சாபம் இருப்பதாகவும், அதனால் தான் கவரை, துவரையைச் சேர்த்துச் சொல்லாமல் வெறும் "விடாதீர்கள் அவரை" என்பதை மட்டுமே சொல்வதாகவும் கூறிவிட்டார். அவரை மயக்கித்தூங்க வைத்த நாட்டியக்காரி ராஜாவை நம்பாமல் காவலனிடம் எல்லாவற்றையும் கூற, அவனும் ஜோசியரின் கண்ணாடியைத் தேய்த்து அதிலிருந்து வரும் ஒளிக்கிரணங்களில் ஜிலுக்கு, குலுக்கு பாய் பாய் என்னும் மந்திரத்தைச் சொல்லப் பாய் பறந்து வந்தது. அதில் ஏறிய காவலன் ராஜாவும் கூட வரவேண்டும் என்று அழுது அடம் பிடிக்கிறதைப் பார்த்துச் சகிக்காமல் கூடவே ராஜாவையும் ஏற்றிக்கொண்டான். தங்கத்தவளைப் பெண்ணோ தான் தத்தித்தத்தியே வந்துவிடுவதாய்ச் சொல்லிவிட்டாள்.


ஏழு மலைகள், ஏழு கடல்கள், ஏழு கிணறுகள் தவளைக்குடும்பங்கள் தாண்டி அவரைத் தோட்டத்துக்குப் போனால் அங்கே எல்லாமும் தங்க அவரைக்காய்களாக இருந்தன. எது ராஜா அவரை எனப் புரியவில்லை. சற்று நேரம் பிரமித்துப் போன காவலன், மந்திரத்தைத் திரும்பத் திரும்ப உருப்போட ஆரம்பித்தான். அப்போது முன்னம் பார்த்த பெரிய தவளை வந்து ஹாஹாஹா எனச் சிரிக்க தங்கத்தவளைப் பெண் அங்கே வந்து சேர்ந்தாள் ஒரு பெரும் பாம்புக்கூட்டத்துடன்.
அவள் தன் தங்கத்தோலைக்கழட்டி மானுடப் பெண்ணாக மாறிப் பாம்பாட்டியின் உதவியோடு பாம்புகளைப் பிடித்து வந்திருந்தாள். அதுக்குத்தான் பின்னாடி வரேன்னு சொல்லி இருக்கிறாள். பாம்புகள் தவளைகளைப் பிடிக்கச் செல்ல தவளைகள் பயந்து ஓட அவரைப்பந்தலில் இருந்த அவரைக்காய்கள் நிஜமாக மாற ஒரே ஒரு காய் மட்டும் தனித்துப் பெரியதாகத்தங்கமாய்த் தெரிய அதைப் பறித்த தங்கத்தவளைப்பெண் அந்த மந்திரத்தைச் சொல்லச் சொன்னாள்.

காவலனும் சொல்ல ராஜாவும் உருவம் பெற்றான். பின்னர் அந்தப் பறக்கும் பாயைப் பிடித்துக்கொண்டு, மீண்டும் மந்திரத்தைச் சொல்லக் கண்ணாடி எதிரே தெரிந்தது. அதில் தூங்கிக் கொண்டிருந்த ஜோசியர் தெரிய அவரைப் பார்த்துக் காவலன் சொன்னான்.

கவரை, துவரை, விடாதீர்கள் அவரை!


இங்கே பார்க்கவும்

Thursday, November 17, 2011

ஶ்ரீ சக்ரராஜ சிம்மாசனேஸ்வரி! தொடர்ச்சி!

அம்பிகையின் பரிபூரண சாந்நித்யம் ஶ்ரீவித்யா தேவதையாக இருக்கும் யந்த்ர ரூபத்திலேயே சிறப்பாகக் காணப்படும். ஆகவே இதற்கெனச் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது. அடுத்து இவற்றில் காணப்படும் எட்டுத்தளங்கள் வஸுதல: வஸுக்கள் எனப்படும். அஷ்டவஸுக்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆகையால் இங்கேயும் எட்டு என்னும் எண்ணையே இந்த வஸு தல: என்னும் சொல் குறிக்கும். அடுத்து வரும் பதினாறு தளங்கள் பதினாறு கலைகளையும் குறிக்கின்றன. இவற்றோடு பிந்துவையும் சேர்த்துக்கொண்டு நாற்பத்து நான்கு கோணங்கள் என்று சொல்வார்கள். இந்த ஶ்ரீசக்ரமும் பூப்ரஸ்தார்ம், மேரு ப்ரஸ்தாரம் என இருவகைப்படும். மேரு என்பதையும் அனைவரும் பார்த்திருப்போம். மேருவும் பூர்ண மேரு, அர்த்த மேரு என இருவகைப்படும். ஆகவே அவற்றுக்கு உரிய முறையில் வழிபடவேண்டும்.

அம்பாளின் இந்த வாசஸ்தலத்துக்கு ஶ்ரீநகரம், ஶ்ரீபுரம் என்றே பெயர். இதை எல்லாம் குருமுகமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். மேலோட்டமாகச் சொல்லியதை வைத்து எதுவும் செய்யக் கூடாது. சக்கரங்கள் வழிபடுபவரின் எந்தப்பக்கமாக இருக்கவேண்டும் என்பதில் இருந்து கணக்கு உண்டு. அம்பிகையை வழிபடுவதும் இருவிதமான முறைகளில் வழிபடுவது உண்டு. ஒரு வழிபாட்டு முறையில் சக்கரத்தின் நடு முக்கோணம் மேல் நோக்கியும், இன்னொரு முறையில் நடு முக்கோணம் கீழ் நோக்கியும் காணப்படவேண்டும். ஆகவே மிகவும் கவனத்தோடு செய்யப்பட்டு, அதைவிடக்கவனத்தோடு பூஜையில் வைத்து, ஆசாரம் தப்பாமல் குரு மூலம் உபதேசம் பெற்ற பின்னரே இந்த வழிபாடுகளைச் செய்யலாம். அதுவரைக்கும் ஸ்லோகம் மட்டும் சொல்லுவோம்.

இப்படியான தேவியைத் துதித்த பட்டரோ தான் அழிவற்ற இன்பத்திலே வாழும்படியான ஒரு பரம்பொருளே அவள் எனக் கூறுகின்றார். ஶ்ரீசக்ர ராஜ்யத்தில் வசிக்கும் தேவியைத் தன் மனக்கண்ணால் தரிசித்தவர், இந்லழகை வாயினால் உரைக்கவும் முடியுமோ என்கிறார். ஏழு கடல்களாலேயும், ஏழு உலகங்களாலேயும், பெரிய அட்ட குலாசலங்களாலேயும் அணுக முடியாத தேவியானவள் சூரிய, சந்திரர்க்கு நடுவே அவர்களின் சுடரை விடப் பிரகாசமாகக் கோடி சூரியப் பிரகாசமாக நித்தியசூரியாக விளங்குகிறாள் என்கிறார்.

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

மனதாலும் வாக்காலும் அணுகுவதற்கு அரியவளான தேவியை நம் பேரின்ப வாழ்க்கைக்குப் பற்றுக்கோடானவள் என்பதைப் புரிந்து கொண்டு, அவளே கதி எனச் சரணடைந்து, நாம் செய்யும் அனைத்துத் தவறுகளையும், அவள் விலக்கும் காரியங்களைச் செய்தாலும் பொறுக்கும் தன்மையையும் கொண்டவள் அம்பிகை. அந்த உரிமையிலும், தைரியத்திலுமே தாம் அவளை வாழ்த்தித் துதிப்பதாக பட்டர் கூறுகிறார்.

Tuesday, November 15, 2011

ஶ்ரீ சக்ரராஜ சிம்மாசனேஸ்வரி!

चातुर्भि: : श्रीकण्टै: शिव व्युवतिभि: पञ्चभिरपि
प्र्भिन्नभि: श्म्भोर्णव्भिरापि मुलप्र्क्रुतिभि:
चतुश्चात्वारिम्शद -वसुदल -कलाश्र -त्रिवलय -
त्रिरेखाभि; सार्धं तव शरणकोणा: परिणता:


சா₁து₁ர்பி₄: : ஶ்ரீக₁ண்டை₁: ஶிவ வ்யுவதி₁பி₄: ப₁ஞ்ச₁பி₄ரபி₁
ப்₁ர்பி₄ன்னபி₄: ஶ்ம்போ₄ர்ணவ்பி₄ராபி₁ முலப்₁ர்க்₁ருதி₁பி₄:
ச₁து₁ஶ்சா₁த்₁வாரிம்ஶத₃ -வஸுத₃ல -க₁லாஶ்ர -த்₁ரிவலய -
த்₁ரிரேகா₂பி₄; ஸார்த₄ம்ʼ த₁வ ஶரணகோ₁ணா: ப₁ரிணதா₁:

சதுர்ப்பி: ஶ்ரீகண்டை: சிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபின்னாபி: சம்போர் -நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாச்ர-த்ரிவலய-
திரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:


சிவகோணம் முற்பகர்வது ஒருநாலு சத்திநெறி
செறிகோணம் அத்தொடரும் மருவுகோள்
நவகோணமும் உட்படுவது எழுமூ விரட்டி ஒரு
நவில் கோணமுற்றதுவும் வலயமா
யிவரா நிரைத்த தளம் இருநாலும் எட்டிணையும்
எழிலாய வட்டமொடு சதுரமாய்
உவமானம் அற்றதணி தனி மூவகைக்கணும்
உமைபாதம் உற்ற சிறுவரைகளே

வீரை ராஜக்கவிராயரின் தமிழாக்கம்.

சென்ற ஸ்லோகத்தில் குண்டலினி ஏறுவதையும், ஸஹஸ்ராரத்தில் காட்சி கொடுத்துவிட்டு மீண்டும் யதாஸ்தானம் வருவதையும் பார்த்தோம். இப்போது ஶ்ரீசக்கரத்தின் வர்ணனையைப் பார்ப்போம். அம்பாளின் நாம ஸ்வரூபம் மட்டுமின்றி யந்திர ஸ்வரூபமும் உள்ளது. யந்திர ஸ்வரூபமே ஶ்ரீசக்கரம் எனப்படும். இந்த ஶ்ரீ சக்கரம் ஒன்பது முக்கோணங்களால் ஆனது.



இந்த யந்திரமானது அபார சக்தி கொண்டது. ஒவ்வொரு தேவதைக்கும் அக்ஷரக் கூட்டங்கள் ஒரு ரூபம் எனில், சப்தரூபம், மந்திர ரூபம், யந்திர ரூபம் என்றும் உண்டு. கோடுகள், கோணங்கள், வட்டங்கள், கட்டங்களால் ஆன அந்த யந்திர ரூபத்தின் அர்த்தங்கள் குரு மூலமே அறியத் தக்கவை. அம்பிகைக்கு உரிய மந்திரத்தை மனதில் ஜபித்தவண்ணம் யந்திரத்திலும் வழிபாடுகள் செய்வதுண்டு. கோணங்கள், தளங்கள் ஆகியவற்றில் அவை அவைக்கு உரிய மந்திர அக்ஷரங்களைப் பொறித்து வழிபாடு செய்வார்கள். அம்பாளுக்கு இருக்கக் கூடிய அநேக ரூபங்களுள் இந்த ஶ்ரீசக்கர வழிபாடே பிரபலமாக இருக்கிறது.

மந்திரங்களில் சப்தம் மாறுபட்டால் எவ்வாறு அதன் மூலம் தோஷங்கள் ஏற்படுமோ அப்படியே ஶ்ரீசக்கரத்தின் அமைப்பிலும், அதற்கென உண்டான அளவுகளிலும் சிறு மாறுபாடு கூட இருக்காமல் என்ன பரிமாணத்தில் இருக்கவேண்டுமோ அவ்வாறே இருக்க வேண்டும். அதோடு கூட வழிபாட்டுக்கென உள்ள நியமங்களையும், ஆசாரங்களையும் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அம்பாளின் செளந்தரிய விக்ரஹ வடிவை விட இந்த ஶ்ரீசக்ர வடிவுக்கே அதிகம் சிறப்பும் உண்டு. இந்த மந்திரங்களிலும் நாமம் என்பதே கிடையாது. பீஜாக்ஷரங்களே காணப்படும். அதோடு ஶ்ரீவித்யா தேவதையை திரிபுரசுந்தரி என அழைத்தாலும் உருவம் அமைக்காமல் யந்திர ரூபமாகவே வழிபடுவார்கள். இதற்கான காரணம் எவரும் கூறவில்லை. ஆகையால் அது முறையாக சாக்த வழிபாட்டைச் செய்பவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று.

ஒன்பது கோணங்களால் ஆன இந்த ஶ்ரீசக்கரத்தில் கீழ் நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் சக்தி சக்கரங்கள் எனப்படும். மேல் நோக்கிய நான்கும் சிவ சக்கரங்கள் எனப்படும். கொடிய விஷத்தைத் தன் கழுத்தில் வைத்திருக்கும் ஶ்ரீகண்டனாகிய ஈசனின் பத்தினியான பராசக்தியைக் குறிக்கும் இந்த சக்கரத்தின் வர்ணனை மேலும் வருமாறு:

ஒன்பது சக்கரங்களும் அண்டம் எனப்படும் இவ்வுலகின் மூலகாரணங்கள், அதே போல் பிண்டமாகிய இவ்வுடலின் மூலகாரணங்கள் ஆகியவற்றின் தத்துவங்களைக் குறிக்கும். ஆகவே மூலப்ரக்ருதி எனப்படும். சிவாம்சம் கொண்ட மூலப் ப்ரக்ருதி பிண்டமாகிய உடலில் மஜ்ஜை, சுக்கிலம், பிராணன், ஜீவன் ஆகிய நான்காகும். அதே அண்டமாகிய உலகில் மாயை, சுத்தவித்தை, மகேசுவரன், ஸதாசிவன் ஆகிய நான்காகும்.

சக்தி அம்சமோ எனில் தோல், ரத்தம், மாமிசம், மேதை எனப்படும் மூளை, அஸ்தி எனப்படும் எலும்பு ஆகிய ஐந்தும் ஆகும். அதே அண்டமாகிய உலகில் ப்ருத்வி, அப்பு, வாயு, தேயு, ஆகாசம் ஆகிய ஐந்தாகும்.


தொடரும்.

Saturday, November 12, 2011

செளந்தர்ய லஹரி வீரைராஜக் கவிராயரின் மொழிபெயர்ப்போடு!

सुधाधारासारै-श्रणयुगलान्त -विर्गालितै:
प्र्प्नचं सिञ्चन्ति पुनरपि रसाम्नाय -महस:
अवाप्य स्वां भूमिं भुजगनिभ् -मध्युष्ट -वलयं
स्वमात्मानं कृत्वा स्वपिषि कुलकुण्डे कुहरिणि ஸ்லோகம் 10

ஸுதா₄தா₄ராஸாரை-ஶ்ரணயுக₃லாந்த₁ -விர்கா₃லிதை₁:
ப்₁ர்ப்₁னச₁ம்ʼ ஸிஞ்ச₁ந்தி₁ பு₁னரபி₁ ரஸாம்னாய -மஹஸ:
அவாப்₁ய ஸ்வாம்ʼ பூ₄மிம்ʼ பு₄ஜ₁க₃னிப்₄ -மத்₄யுஷ்ட₁ -வலயம்ʼ
ஸ்வமாத்₁மானம்ʼ க்₁ருʼத்₁வா ஸ்வபி₁ஷி கு₁லகு₁ண்டே₃ கு₁ஹரிணி

கவிராயரின் தமிழாக்கம்

தாளிணைக் கமலம் ஊறித்
தரும் அமிழ்து உடல் மூழ்க
மீள அப் பதங்கள் யாவும்
விட்டு முன் பழைய மூலம்
வாளரவு என்ன ஆகம்
வளைத்து உயர் பணத்தினோடு
நாள் உமைக் கயற்கண் துஞ்சு
ஞான ஆனந்தம் மின்னே!

நம் உடலின் மூலாதாரம் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டோம் அல்லவா? அந்த மூலாதாரத்தில் இருந்தே சக்தி பிறக்கிறது. நம் உடலுக்கு ஆதாரமும் அதுவே. அந்த மூலாதாரம் இல்லை எனில் நம் தேகம் கீழே விழுந்து விடும்; அல்லது உடல் மேலே செல்லும் என்று ஆன்றோர் கூறுகின்றனர். ஆகவே நம்மைத்தாங்கிப் பிடிப்பதே அந்த மூலாதாரம் தான். இவ்வுலகிலும் எல்லாவற்றிற்கு ஆதாரமாக பூமியே உள்ளதே. ஆகவே பூமி தத்துவத்தைச் சுட்டிக்காட்டும் நம் உடலின் அந்த மூலாதாரத்தில் அம்பிகை ஒரு சின்ன குண்டலம் போல் சுருட்டிக் கொண்டு காணப்படுகிறாள்.

நம் அனைவரின் உடலிலும் இந்த சக்தி இருக்கிறது. இதுவே பரப்ரம்ம சக்தி என்றும் கூறுவார்கள். இதை எழுப்பவெனச் செய்யும் வழிபாடுகளையே சாக்தத்திலும், யோக முறையிலும் சொல்லப்படும் வழிபாடுகள். இந்த சக்தியை யோக சாதனை மூலம் எழுப்ப வேண்டும். அதற்கெனத் தனியான மந்திரம் உள்ளது. முதலில் மனம் பக்குவம் அடைய வேண்டும். மனச் சஞ்சலம் கூடாது. பின்னர் தக்க குரு மூலம் உபதேசம் பெற்று மந்திர ஜபம் செய்து யோக சாதனை செய்தோமானால் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்பு அடைந்து மேலுள்ள சக்கரங்களையெல்லாம் ஊடுருவிக்கொண்டு மெல்ல மெல்ல மேலே சென்று ஆக்ஞா சக்கரத்தில் பராசக்தியாகக் காட்சி கொடுத்து சஹஸ்ராரத்தில் பரப்ரும்மம் எனப்படும் சதாசிவத்தோடு ஐக்கியம் ஆகிப் பின்னர் மீண்டும் தனது இருப்பிடமான மூலாதாரத்திற்கே வந்தடைந்து மறுபடியும் ஒரு பாம்பைப் போல் குண்டல வடிவில் சுருட்டிக்கொண்டு மூலாதாரத்தில் அம்பிகை உறங்குகிறாள்.

மேலுள்ள ஸ்லோகத்தின் பொதுவான பொருள் இதுவே. ஆனால் இந்த சாதனை சாதாரணமாகச் செய்யக் கூடியது இல்லை. எங்கேயோ லக்ஷத்தில் ஒருத்தர் செய்தால் பெரிய விஷயம். என்றாலும் சில விஷயங்களை ஸ்லோகங்களிலும், சித்தர் பாடல்களிலும், மற்ற அம்பிகை பாடல்களிலும் சொல்லி இருப்பது இம்மாதிரியான மனிதர்கள் இருந்து அனுபவித்துச் சொல்லி இருப்பதை நாம தெரிந்து கொள்ளத்தான்.

அம்பிகையின் திருவடிகளிலிருந்து அமிருத தாரை பெருகுகிறதாம். அந்த அமிருததாரையால் பக்தனின் ஐம்பூதங்களால் ஆன உடலிலுள்ள அனைத்து நாடிகளையும் நனைத்துக்கொண்டு மேலே சென்று பக்தனுக்குத் தன் பூர்ண சந்திரப் பிரவாகமான அமிர்தத்தைக் காட்டி அங்கிருந்து கீழிறங்கி வந்து மீண்டும் மூலாதாரத்துக்கு வந்து தன் உறக்கத்தைத் தொடங்குகிறாள். யோகம் என்பது இப்படி பரிபூரணமாக இருத்தல் வேண்டும். இப்படி மேலே போய்விட்டு ஏன் கீழே இறங்க வேண்டும்? யோகியானவன் தன் யோகசாதனையைப் பூர்த்தி செய்ய மட்டுமல்ல. இப்படியான யோகிகளையும் நினைத்தால் அம்பிகை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம் அல்லவா? அதற்காகவே எவ்வளவு உயரம் போனாலும் கடைசியில் கீழே இறங்கித்தான் ஆகவேண்டும்; நீயே கதி தாயே எனச் சரணாகதி அடைகின்றன.ர்.


அம்பாளின் திருவடித்தாமரைகளைப் பற்றிக் கூறுகையில் பட்டரும் இவ்வாறு கூறுகின்றார்.

சென்னியதுன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னிய துன் திருமந்திரம் சிந்தூர வண்ணப்பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியதென்றும் உன்றன் பரமாகம பத்ததியே.

சிந்தூரம் போல் செந்நிறம் வாய்ந்த தேவியின் திருவடித்தாமரை என் சிரத்தின் மேல் முடி போல் திகழ்கின்றது. அழகு வாய்ந்த தாமரை மலரால் செய்யப்பட்ட
திருமுடியைப் போல் காண்கின்றன அம்பிகையின் திருவடித்தாமரைகள். என் நெஞ்சிலோ நிலையாது என்றும் இருப்பது அம்பிகையின் திருமந்திரமாகும். அந்த மந்திரங்களைச் சொல்லி நான் அவளையே தியானிக்கிறேன். என் மனம், சொல்/வாக்கு, காயம்/உடல் ஆகிய அனைத்தாலும் நான் அவளைத்தவிர வேறு எவரையும் நினைப்பதில்லை. இவை அனைத்தையும் கொண்டு நான் பரம ஆகமங்களிலும் சொல்லப்பட்ட பத்ததிகளால் அம்பிகையை வழிபட்டு வருகின்றேன்.

அபிராமி அந்தாதி ஓரளவுக்குத் தான் பொருந்தி வருகிறது. கூடியவரை பொதுவான பொருள் இருக்கும் செய்யுளையே தேர்ந்தெடுக்கிறேன்.


இதிலே விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஒண்ணுமே எழுதாதப்போ பின்னூட்டம் கொடுத்தவங்க எல்லாம் இதுக்கும் வரணும்! ஆமாம்! சொல்லிட்டேன்! :))))

Friday, November 11, 2011

सुधाधारासारै-श्रणयुगलान्त -विर्गालितै:
प्र्प्नचं सिञ्चन्ति पुनरपि रसाम्नाय -महस:
अवाप्य स्वां भूमिं भुजगनिभ् -मध्युष्ट -वलयं
स्वमात्मानं कृत्वा स्वपिषि कुलकुण्डे कुहरिणि

ஸுதா₄தா₄ராஸாரை-ஶ்ரணயுக₃லாந்த₁ -விர்கா₃லிதை₁:
ப்₁ர்ப்₁னச₁ம்ʼ ஸிஞ்ச₁ந்தி₁ பு₁னரபி₁ ரஸாம்னாய -மஹஸ:
அவாப்₁ய ஸ்வாம்ʼ பூ₄மிம்ʼ பு₄ஜ₁க₃னிப்₄ -மத்₄யுஷ்ட₁ -வலயம்ʼ
ஸ்வமாத்₁மானம்ʼ க்₁ருʼத்₁வா ஸ்வபி₁ஷி கு₁லகு₁ண்டே₃ கு₁ஹரிணி


க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., இதுக்கு விளக்கமே இன்னும் கொடுக்கலை; இதை எடுத்து வைச்சுண்டு ரெண்டு நாளா எழுத முயற்சி பண்ணியும் ஏதோ தொந்திரவு; தடங்கல்கள்; தொலைபேசி அழைப்புகள். :)))))) எழுதினதை யாருமே படிக்கலையாம். இதுக்குப் பின்னூட்டம் வந்துட்டு இருக்கு. இன்னிக்கு ராத்திரிக்குள் போடப் பார்க்கிறேன். அப்புறம் யாருமே வர மாட்டீங்க! :P :P :P :P

For Jeyasri,
இந்த எண்கள் எல்லாம் சம்ஸ்கிருஷ அக்ஷரம், ஹிந்தி அக்ஷரங்களில் வரும் "க"வர்கம், "ச" வர்கம், "ட"வர்கம், "த" வர்கம், "ப"வர்கம் இவற்றின் மாறுபட்ட உச்சரிப்போடு கூடிய அக்ஷரங்களைக் குறிக்கும். நமக்கு ஒரு "க" என்றால் அங்கே நாலு "க" வித்தியாசமான உச்சரிப்போடு. அதே போல் மற்றவற்றிலும் வரும். 2 என எண் குறிச்சிருக்கையில் "க" எழுத்து இருந்தால் இரண்டாவது "க kha" என்று உச்சரிக்கவேண்டும். இதே போல் மற்றவற்றிற்கு உச்சரிப்பு மாறும்.

क ka--- ख kha--- ग ga--- घ gha

क ख ग घ
च ca छcha जja झ jha
ट ठ ड ढ
त थ द ध
प फ ब भ

Wednesday, November 09, 2011

வீரைக்கவிராஜ பண்டிதரின் செளந்தர்ய லகரி தமிழாக்கம்

முதலில் பாயிரச் செய்யுள்களை மட்டும் இங்கே இடுகிறேன். அதன் பின்னர் அந்த அந்த ஸ்லோகத்துக்கு உரிய செய்யுட்களைக் குறிப்பிட்ட பகுதியில் சேர்த்துவிடுகிறேன். சிரமம் பார்க்காமல் போய்ப் படிக்கவும் சுட்டி தந்துவிடுகிறேன். நன்றி. இதை அனுப்பித்தந்த திரு அப்பாதுரைக்கு என் நன்றி.

பாயிரம்

மொழிந்த மறை நூல் இயற்று முகபடாம்
அணிந்து முதுஞான தானம்
பொழிந்து தனது இணைமணி என்று இருசுடரும்
ப்ணைகளிற்றைப் போற்றல் செய்வாம்
வழிந்து பெரும்புனல் பரந்து வடவரையில்
உலகு ஏழும் ஏழும் ஒக்க
வழிந்திடினும் அழியாத அபிராமி
பாடல் வளம் அளிக்க என்றே.

இத்தனை நாள் நீயிருக்க வாயிருக்க
இயல் இருக்க அருள்பாடாமல்
மத்தனை ஆளுங்கொடியை இப்போது என்
வழுத்துகின்றவாறு என்பீரேல்
பித்தனை யார் ஏவல் கொள்வார் பித்து ஒழிந்தால்
உரியவர்கள் அடிமை ஓலைக்
கொத்தனை யார் ஏவல் கொள்வார் கொள்ளும்போது
எவனாலே குழப்பலாமே.

யாமளைதன் பெரும்புகழை ஆதிமறை
நாலில் வடித்தெடுத்த நூலை
நாமகள் தன் பாடல் இது என்று அரனார்க்கு
நவிலவ்வர் நகை செய்தன்றே
பாமகளை அருகழைத்துப் பருப்பதத்திற்
பொறித்திருந்த பரிசு காட்டும்
சேமநிதிப்பாடலை என் புன்கவியால்
கொள்வது அவ்வடிமை அன்றே.

அரன் கயிலைப் புறத்து எழுதப்படு நூலை
அருந்தவத்துப் புட்பதந்தன்
பரந்த வடவரை அழுத்த அதைக் கவுட
பாதர் உளம்பதித்து முற்றும்
தரம் பெறு சொல் அமுது எனப் பின் சங்கரமா
முனிக்கு அருள அந்த மேகம்
சுரந்து உலகில் வாடும் உயிர்ப் பயிர் தழைப்பச்
சொரிந்தது எனச் சொல்வர் நல்லோர்.

இன்ன தன்மைய நூலினைக் கவி
ராசராச வரோதய
மன்னன் நம் பிரமாதராயன்
வடித்து அரும்பொருள் கூறவே
கன்னல் அம்சிலை வேள் எனுங் கவி\
ராசபண்டிதன் வீரையான்
சொல் நயம்பெறு காவியக்கவி
சொல்ல என்று தொடங்குவான்

வடமொழி எனும் பழைய விரிகடல் பிறந்து இறைவர்
மணையிடை இருந்து சிலைமேல்
இடமொடு தவழ்ந்து தனது இடுபெயர் சவுந்தரிய
லகரி என நின்று வளர்மாது
அடலரசு முன்பினுள் பல மத ப்ரபந்தம் எனும்
அடுபகை துரந்து என் மணிநா
நடம் இடு பெருங்கவிதை மதகரியொடும் புவியை
நகர் வலம் வந்தது இதுவே.

Monday, November 07, 2011

செளந்தர்ய லஹரி--- தொடர்ச்சி!

இப்போ நேரடியா நாம் செளந்தர்ய லஹரி ஸ்லோகத்தின் ஒன்பதாம் ஸ்லோகத்திலிருந்து பார்க்கப் போகிறோம். ரொம்ப நாட்களாக தமிழில் போடுகையில் சப்தங்களைக் குறிக்கும் எண்களோடு போடணும்னு தோன்றும். ஆனால் என்னமோ அது முடியாமலே போயிட்டு இருந்தது. பராஹா.காம் டவுன்லோட் பண்ணி வைச்சும் அதிலே கொடுத்து மாற்றிப் போட முடியலை. நேரமே இருக்காது. எழுதினதைப் போட்டால் போதும்னு இருக்கும். இப்போ நம்ம மின் தமிழ் நண்பர் விநோத்தின் அக்ஷரமுகியில் மாற்றிப் போடுவது சுலபமாக இருக்கிறது. இதை யாருக்கானும் ஸ்லோகங்கள் அனுப்பறதுக்குனு மட்டும் வைச்சிருந்தேன். இனி பதிவிலும் பயன்படுத்திக்கலாம்னு முதல் முதலாகப் போடுகிறேன். கூடவே சாதாரணமுறையிலும் போடுகிறேன்.
*************************************************


महीं मूलाधारे कमपि मणिपुरे हुतवहं
स्थित स्वाधिष्टाने हृदि मरुत -माकाश -मुपरी
मनोस्पी भ्रूमध्ये सकलमपि मितवा कुलपथं
सहस्रारे पध्मे सह रहसि पत्या विहरसे


மஹீம்ʼ மூலாதா₄ரே க₁மபி₁ மணிபு₁ரே ஹுத₁வஹம்ʼ
ஸ்தி₂த₁ ஸ்வாதி₄ஷ்டா₁னே ஹ்ருʼதி₃ மருத₁ -மாகா₁ஶ -முப₁ரீ
மனோஸ்பீ₁ ப்₄ரூமத்₄யே ஸக₁லமபி₁ மித₁வா கு₁லப₁த₂ம்ʼ
ஸஹஸ்ராரே ப₁த்₄மே ஸஹ ரஹஸி ப₁த்₁யா விஹரஸே

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்திதம் ஸ்வாதிஷ்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி
மனோsபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே

மூல மணிபூரகத்தோடு இலிங்க மார்பு
முதுகளம் விற்-புருவ நடு மொழிவது ஆறு
ஞாலமும் மென்புனலும் அனல் பிழம்பும் காலும்
நாதம் உறு பெருவெளியும் மனமும் ஆக
மேல் அணுகிக் குளபதத்தைப் பின்னிட்டு அப்பால்
மென்கமலத்து ஆயிரம் தோட்டு அருண பீடத்து
ஆலவிடம் பருகிய தன் மைழ்நரோடும்
ஆனந்தம் உறும் பொருளை அறியலாமே

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

நம்முள்ளே உறைந்து கிடக்கும் சக்தியை எழுப்புவதே மூலாதரத்தில் உறங்குவதை எழுப்புவது என்பார்கள். இது சாதாரணமான விஷயம் இல்லை. இதைக் குறித்து எழுதுவதாலேயே எனக்குப் புரிந்துவிடவும் இல்லை. இங்கே கூறி இருப்பது அம்பிகையானவள் மூலாதாரத்தின் ப்ருத்வி தத்துவத்தில் இருந்து எழுந்து ஒவ்வொரு படியாக மேலேறிச் சென்றுக் கடசியில் ஆயிரம் இதழ் கொண்ட சஹஸ்ராரச் சக்கரத்தில் அதிரகசியமான இடத்தில் இருக்கும் சிவத்தோடு ஐக்கியமாகிறாள் என்பதே பொதுவான அர்த்தம்.

தற்காலங்களில் இந்தக் குண்டலினி யோகம் படும்பாடு சொல்லி முடியாது. சிம்பிள் குண்டலினி யோகா என்றெல்லாம் வந்து இருக்கிறது. பல குருமார்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால் இந்தக் குண்டலினியை எளிதில் அடைய முடியுமா? அந்த குருமார்கள் சொல்லித் தருவது போல் எதுவும் நடக்கிறதா? யாருக்கானும் அது குறித்து சரியாகச் சொல்ல முடியுமா? இல்லை என்பதே பதில். சாதாரணமாக தியானம் அல்லது பிராணாயாமம் பண்ணுகையிலேயே உடலில் ஒருவித உணர்ச்சி ஊடுருவும். இது அனைவரும் அறிந்திருப்போம். இம்மாதிரியாக ஏதோ தோன்றுவதைத் தான் குண்டலினி எழுந்துவிட்டதாக அனைவரும் நினைக்கலாம். உண்மையில் இதற்குக் கடுமையான பயிற்சி வேண்டும். அதோடு இப்படி அனைவரும் அறியும்படியெல்லாம் குண்டலினி எழுந்து கொள்ளவும் செய்யாது.

எப்படி மின்சாரக் கம்பிகளின் இணைப்பில் கண்ணுக்குத் தெரியாதபடிக்கு மின்சாரம் பாய்கிறதோ, அப்படி நமக்கும் சரியான குரு என்னும் இணைப்பின் மூலம் மந்த்ரோபதேசம் நடைபெற வேண்டும். அதிலும் ஒவ்வொரு ஆதாரத்துக்கும் உரிய மந்திரங்கள் உள்ளன. மின்சாரம் கண்ணுக்குத் தெரியாமல் வருவது போல் ஆதாரங்களுக்குரிய மந்திரத்தையும் ரஹஸ்யமாகவே கற்க வேண்டும். இதற்குச் சரியான குரு தேவை. குண்டலினி விழித்துக்கொள்வதை எல்லாம் உணர்ந்து தான் தெரிந்து கொள்ள இயலும். உணர்ந்தவர் யாரும் அது குறித்துச் சொல்ல மாட்டார்கள்.

இப்போ அம்பிகையைப் பார்ப்போம். மூலாதாரம் என்பது நம் உடலில் முதுகெலும்பின் கீழ் மலத்துவாரத்துக்குச் சற்று மேலே உள்ளது. நான்கு இதழ் தாமரை போல் காணப்படும் இது பூமிக்குச் சமமாகச் சொல்லப்படும். இதற்கெனத் தனியான குணங்கள் உண்டு. இந்த மூலாதாரத்துக்கு அடுத்து இரண்டு விரல் கடை மேலே ப்யூபிக் எலும்பில் உள்ளது ஸ்வாதிஷ்டானம். ஆறு இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்பில் உள்ள இது உருக்கி வாரத்த வெள்ளியின் நிறம் கொண்டு நீருடன் சம்பந்தம் கொண்டது. இந்த மூலாதாரமும், ஸ்வாதிஷ்டானமும் சேர்ந்தே அக்னிகண்டம் என்பார்கள். இதற்கு மேலே பிரம்மக்ரந்தி என்னும் முடிச்சு. இந்த இடம் ச்ருஷ்டிக்கும் காரணமாக அமைந்தது. ஆகவே பிரம்மக்ரந்தி என்பது பொருத்தம் அல்லவா?

அதற்கு அடுத்து மணிபூரகம். நாபிக்கமலம் அல்லது தொப்புள் இதன் இருப்பிடம். பத்து இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்போடு சம்பந்தப்பட்டது. சிவந்த நிறம் கொண்டது. நம்முடைய அனைத்து உணர்வுகளையும் பசியைத் தூண்டும் சக்தியும், ஜீரணசக்தியை ஏற்படுத்தும் சக்தியும் உள்ளது. இதற்கு அடுத்து அநாஹதம். உடலின் மத்தியில் இருதய பாகத்தைக் குறிக்கும் இது 12 இதழ் தாமரைப்பூ வடிவில் காணப்படும். பச்சை நிறம் கொண்ட இதற்குக் காற்றின் சக்தி. காற்று நமக்கு எவ்வளவு தேவை என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. காற்றுத்தான் நம்மைக் காக்கவும் செய்கிறது. சரியான உணவும், மூச்சுக்காற்றும், நீருமே நம்மைக் காக்கிறது. மணிபூரகமும், அநாஹதமும் சேர்ந்து சூரிய கண்டம். இதற்கு மேல் விஷ்ணுக்ரந்தி என்னும் முடிச்சு காணப்படும்.

அடுத்து விசுத்திச் சக்கரம். இது நம் கழுத்துப்பாகம். நஞ்சுண்ட கண்டர் அந்தக் கொடிய விஷத்தைத் தான் உண்டதாலும் கண்டத்தில் நிறுத்திக்கொண்டதாலுமே ப்ரபஞ்சம் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆகவே ஒவ்வொருத்தருக்கும் இந்த கண்டம் எனப்படும் கழுத்துப்பாகம் முக்கியமானது. குரல்வளையைப் பிடித்தால் நம்மால் மூச்சுவிட முடியுமா? 16 இதழ் தாமரைப்பூப் போன்ற அமைப்புக் கொண்ட இது நிறமற்றது நம்முடைய சுயம் வெளிப்படும் இடம் இதுவே. பிந்துச் சக்கரத்திற்கு அருகே இருக்கும் இங்கே விஷமும் தயார் நிலையில். அமிர்தமும் தயார் நிலையில். அதனாலேயே சில சமயம் விஷம்போல் பேசுவதும், சில சமயம் இனிக்க இனிக்கப் பேசுவதும் நடக்கிறது, இது திறந்து கொண்டாலே நமக்கு முக்தி எனப்படும் அதி அற்புத சித்தி கிடைக்கும். மாறாக இது மூடிக்கொண்டால் மரணம். இதற்கு மேல் ஆக்ஞா சக்கரம். நம்முடைய இருபுருவங்களுக்கிடையே உள்ளது. நெற்றிப்பொட்டு வைக்கும் இடத்தின் பின்னே உள்ள இதைத்தான் பிந்து என்றும் சொல்வோம். நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதை பிந்து, பிந்தி என்றெல்லாம் சொல்வோம் அல்லவா? இங்கே தான் நம் உடலின் இடநாடியும் பிங்கள நாடியும் சூக்ஷ்ம நாடியோடு சேர்ந்து இங்கே வரும் குண்டலினியை மேலே அனுப்பும். இந்த விசுத்தி சக்கரமும், ஆக்ஞா சக்கரமும் சேர்ந்தது ஸோமகுண்டம் அதற்கு மேலே உள்ளது ருத்ரக்ரந்தி எனப்படும் முடிச்சு.

இந்த க்ரந்தி என்பது நம் நாடிகளில் காணப்படும் முடிச்சை மட்டும் குறிக்காது நம் எண்ணங்களில் ஏற்படும் பூர்வவாசனையால் ஏற்படும் சிக்கல்களையும் குறிக்கும். ஆகவே இவை அனைத்தையும் பிளந்து கொண்டே அம்பிகை மேலேறுவாள். எனில் எவ்வளவு முயற்சி வேண்டும் என்பதை நினைத்துப் பார்ப்போமாக! இங்கே அம்பிகையை மூலாதாரத்திலிருந்து எழுப்பி சஹஸ்ராரத்துக்குக் கொண்டு போய் சதாசிவத்தோடு சேர்த்து மீண்டும் மூலாதாரத்துக்கு அம்பிகை எழுந்தருளும் தருணத்திற்குக் காத்திருப்பதைக் குறிக்கும்.

நம்முள்ளே தினம் தினம் நாம் செய்யவேண்டிய வேள்வியை இது குறிக்கும். நம்முள்ளே உறைந்து கிடக்கும் சக்தியை எழுப்பி நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த சகல சித்திகளையும் தரும் தேவியை அபிராமி பட்டர்,

சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே."

என்கிறார். ஆதிபராசக்தி அட்டமாசித்திகளை மட்டுமில்லாமல் சக்தியைத்தம்மிடத்தே தழைக்கச் செய்யப் பரசிவனோடும் ஐக்கியமாகி, தவம்புரிவார்க்கு மோக்ஷ ஆனந்தத்தைத் தருகிறாள்.. அந்த முத்தியைப் பெற அடியிடும் மூலமும், மூலமாகித் தோன்றி எழும் ஞானம் ஆகிய எல்லாமாக இருப்பவள் மாதா திரிபுரசுந்தரியே.

Wednesday, November 02, 2011

மிஸ்ஸியம்மா


அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போல் ஆடி
இல்லறம் இப்படி நடந்தால்
நல்லறமாமோ நிலவே!


தன் பிடிவாதம் விடாது
என் மனம்போல் நடவாது
தனக்கென எதுவும் சொலாது
நம்மையும் பேச விடாது!


வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே

Tuesday, November 01, 2011

நான் பார்த்துட்டேன்! அப்போ நீங்க!

ஆரக்ஷண்= அமிதாப் நடிப்புப் பரவாயில்லை; படம் வெளிவர இவ்வளவு அமர்க்களப்படுத்தி இருக்கவேண்டாமோ? பெரிசா நினைச்சதிலே கடைசியிலே, கடைசியிலே என்ன கடைசியிலே படம் ஆரம்பத்திலிருந்தே ஒண்ணுமே இல்லை படத்திலே! தீபிகா படுகோனே இந்த சினிமாவை விடவும் சோனி டிஜிடல் காமிரா விளம்பரத்தில் அழகாய்த் தெரிகிறார். அதிலும் அந்தக்கிளியைப் பார்த்து ஆச்சரியத்தோடு சிரிக்கையில் நல்லா இருக்கும்.

நரம் கரம்; பார்க்கணும்னு ஆசைப்பட்டுப் பார்க்க ஆரம்பிச்சேன். ஏதோ வேலையிலே முழுசாப் பார்க்கலை. பார்க்கணும்; பார்க்கலாம்.

ஆழ்வார்= இப்படிப் பேரிலே ஒரு படம் வந்ததே இப்போத் தான் தெரியும். வழக்கமான அஜீத் மசாலா.

பம்மல் கே.சம்பந்தம்= இப்போத்தான் பார்த்தேன். என்னை ஆச்சரியமாப் பார்த்த மருமகளிடம், இன்னும் படையப்பாவும், முதல்வனும் பார்க்கலைனு உண்மையைச் சொல்லிட்டேன். என்னை அதிசயப் பிறவியாகப் பார்த்தாள். சினிமாவே பார்க்கிறதில்லைனு சொன்னால் ஆச்சரியமாப் பார்க்கிறா. அதான் சேர்த்து வைச்சு இங்கே பார்த்தாறதே. அங்கே வேறே பார்க்கணுமா என்ன? நகைச்சுவைக்காட்சிகள்ங்கற பேரிலே அவ்வப்போது நம்மை எரிச்சல் பட வைக்கிறதைப் பாரக்கிறோமே, அதுவே போதாது?

இதயத்திருடன்: இப்படி ஒரு படம் வந்ததும் தெரியாது. ஜெயம் ரவி. கதாநாயகி யாரு? தெரியலை. இதுவும் மசாலா தான்.

அவதார்: இன்னும் முழுசும் பார்க்கலை. பன்டோராவைத் தாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதோட நிறுத்திட்டுப் படுத்தாச்சு. முடிஞ்சா மிச்சத்தை இன்னிக்குப் பார்க்கணும்.

புத்தகம் ஒண்ணும் புதுசாப் படிக்கலை. அதான் கொஞ்சம் வருத்தம் கொண்டு போயிருக்கும் ஒரு சில புத்தகங்களைத் தான் திரும்பப் புரட்டறேன். இன்னும் ஐந்து மாசம் ஓட்டணுமே! ஈஸ்வரா!