எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 29, 2018

பவனி வரார், நம்பெருமாள் பவனி வரார்!










இன்னிக்கு கஜேந்திர மோட்சம். ஆகவே அம்மா மண்டபத்துக்கு நம்பெருமாள் எழுந்தருளி இருக்கார். நம்ம குடியிருப்பு வளாகத்துக்கு அடுத்த மண்டகப்படியில் ஒவ்வொரு வருஷமும் வருவார். போன வருஷம் அம்பேரிக்காவில் இருந்ததால் பார்க்க முடியலை. இந்த வருஷம் நேற்றிலிருந்தே தயாராக இருந்தோம். காலை சீக்கிரமாய் வேலைகளை முடித்துவிட்டுக் கீழே பாதுகாவலருக்கு இன்டர்காம் மூலம் அழைத்துக் கேட்டால் ஒன்பதரைக்கு மேல் ஆகும் என்றனர். சரினு காய் எல்லாம் நறுக்கி வைச்சு சமையலுக்கு எல்லாவற்றையும் தயார் செய்து விட்டுப் பத்து மணிக்கிக் கீழே இறங்கினோம்.

சற்று நேரத்தில் பெருமாள் மூன்று பக்கங்களிலும் திரையால் மூடப் பட்டு வந்தார். வெயில் படாமல் இருக்க இந்த ஏற்பாடு. எப்போதும் மூடு பல்லக்கில் வருவார். அப்போதும் திரை போடப்படுவதால் பெருமாளைப் பார்க்கச் சிரமம் தான். ஒரு பக்கமாக வேறே உட்கார்ந்திருப்பார். எந்தப் பக்கம் என்பது பல்லக்கை இறக்கும்போது தான் தெரியும். ஆனால் இன்று மூடு பல்லக்கு இல்லை. காற்றாட வந்தார். மேலே வெயில் படாமல் இருக்க வேண்டிக் கூடாரம் போல் பட்டுத்திரைகள். மண்டகப்படிக் கட்டிடம் உள்ளே வரும்போது திரையை விலக்குகின்றனர். பின்னர் பெருமாள் உள்ளே வந்ததும் மண்டகப்படிக்காரர்கள் கொடுக்கும் நிவேதனம் மற்றும் மரியாதைகள் பெருமாளுக்குத் தரப்பட்டுப் பெருமாள் தரப்பில் பட்டாசாரியார்கள் மண்டகப்படிக் காரர்களுக்குப் பரிவட்டம் கட்டித் தீர்த்தம், சடாரி சாதித்தனர். அதன் பின்னர் உடனே பெருமாள் அடுத்த மண்டகப்படிக்குக் கிளம்பினார். ஆட்கள் நிறையப் பெருமாளைச் சுற்றி இருந்ததால் என்ன தான் முயன்றாலும் ஓரளவுக்குத் தான் படம் வந்தது. செல்லில் ஜூம் பண்ணுவது எப்படினு தெரியலை. என்றாலும் ஓரளவுக்குச் சுமாராக இருக்கும் படங்கள் போட்டிருக்கேன். கிட்டக்க நம் பெருமாளைப் பார்த்தேன். ரொம்பவே துளியூண்டுக்கு இருக்கார். அந்தச் சிரிப்பும், அழகும் இருக்கே, காணக் கண் கோடி போதாது! 

Saturday, April 28, 2018

தமிழ்த் தாத்தாவுக்கு அஞ்சலி! உ.வே.சா.நினைவு நாள்

 à®‰.வே.சா க்கான பட முடிவு


தடைப்பட்டு நிறைவேறிய கல்யாணம்!

சென்னைக் கிறிஸ்டியன் காலேஜில் தமிழாசிரியராக இருந்த கா.ஸ்ரீ. கோபாலாசாரியாரென்பவர் இலக்கண இலக்கியப் பயிற்சியிலும் பிரசங்கம் செய்வதிலும் செய்யுள் இயற்றுவதிலும் பத்திரிகைகளுக்கு விஷயம் எழுதுவதிலும் சிறந்தவராக இருந்தார். திவ்யப் பிரபந்த வியாக்கியானங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த மையின் பல வைஷ்ணவப் பிரபுக்கள் அவரிடம் அன்பு வைத்து ஆதரித்து வந்தார்கள். அவர் பல வருஷங்கள் சென்னை ஸர்வகலாசாலையில் தமிழ்ப் பரீக்ஷகராகவும் இருந்தார். அவர் கெளரவமான நிலையிலே வாழ்ந்து வந்தார். அவருடைய சொந்த ஊர் ராஜமன்னார் குடிக்குப் பக்கத்தேயுள்ள காரப்பங்காடு என்பது.

அவர் எனக்கு முக்கியமான நண்பர். திருவல்லிக் கேணியில் திருக் குளத்துக்குக் கீழ்க்கரையில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்

கோபாலாசாரியார் தம்முடைய குமாரிக்கு விவாகம் செய்ய எண்ணிப் பல இடங்களில் வரன் தேடினார். கடைசியில் மன்னார்குடியில் பந்துக்களுள் செல்வ முள்ள குடும்பத்தைச் சார்ந்த ஒரு பிள்ளையைப் பார்த்து நிச்சயம் செய்து முஹூர்த்தம் வைத்தார். கல்யாணத்தை மிக்க செலவில் விமரிசையாக நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தி ருந்தார். கல்யாணம் நடத்துவதற்காகத் தனியே ஒரு ஜாகை யைத் திட்டம் செய்தார். பந்தல் மிகவும் சிறப்பாக அமைக்கப் பட்டது. சம்பந்திகள் தங்குவதற்குக் குளத்தின் வடகரையில் ஒரு பெரிய ஜாகையை ஏற்பாடு பண்ணினார்.

கல்யாணத்திற்கு முன்னே நடைபெறவேண்டிய சுபகாரியங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெற்றன. கல்யாணத்துக்கு முதல்நாள் காலையிலேயே சம்பந்திகள் மன்னார்குடியிலிருந்து சென்னைக்கு வந்துவிடார்கள். அவர்களைத் தக்கபடி வரவேற்று அவர்களுக்காக அமைக்கப் பெற்ற ஜாகையில் இருக்கச் செய்தார். அவர்களுக்கு வேண்டிய ஆகார வகைகளை அனுப்பி உபசரித்தார். முதல்நாள் இரவு மாப்பிள்ளை ஊர்வலம் (ஜான்வாஸா) உயர்ந்த முறையில் நடை பெற்றது. கல்யாண தினத்தன்று காலையில் பெண் வீட்டிலும் பிள்ளைவீட்டிலும் தனித் தனியே நடைபெற வேண்டிய வைதீக காரியங் களும் ஒழுங்காக நடந்தன. அப்பால் மாப்பிள்ளை பரதேசக் கோலம் வந்தார். பிறகு பெண்ணும் மாப்பிள்ளையும் கல்யாண வீட்டு வாசலில் மாலை மாற்றிக்கொண்டார்கள்.

மாலை மாற்றிக்கொள்கையில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அவர்களுடைய அம்மான்மார்கள் தோளில் எடுத்துச் செல்வது வழக்கம். அவர்களுக்குப் பதிலாக வேறு சிலர் அவர்களை எடுத்துக்கொண்டு இடசாரி வலசாரியாகச் செல்வதும் ஆடுவதும் ஸ்ரீவைஷ்ணவக் குடும்பங்களில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு தோளெடுப்ப தற்காகவே காஞ்சீபுரத்தில் தேகவன்மையுள்ள ஒரு கூட்டத்தினர் உண்டு.

கோபாலாசாரியார் வீட்டுக் கல்யாணத்திலும் இந்த வைபவம் நிகழ்ந்தது. தோள் எடுப்பவர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலியாமல் குதித்தும் ஆடியும் ஓடியும் மேளதாளத்திற்கேற்ப நடனம் செய்தும் உத்ஸாகத்தோடு தங்கள் வன்மையைக் காட்டினர். கல்யாணத்துக்காக வந்திருந்த ஜனங்களோடு வேறு ஜனங்களும் இந்த வேடிக்கையைப் பார்க்கக் கூடி விட்டனர். ஜனங்களுடைய சந்தோஷ ஆரவாரமும் வாத்திய கோஷமும் கல்யாணத்துக்கு வந்திருந்த வர்களுடைய குதூகலமும் நிறைந்திருந்த அந்தக் காட்சியைக் கண்டு கோபாலாசாரியார் மனம் சந்தோஷ சாகரத்தில் நீந்தியது. அவருடைய சம்பந்தி யாகிய கனவானும் மிக்க சந்தோஷத்தோடு திண்ணை யில் உட்கார்ந்து இந்தக் காட்சியை அநுபவித்துக் கொண்டிருந்தார்.

இவ்வாறு இருந்த சமயத்தில் யாரோ ஒருவர் மெதுவாகச் சம்பந்திக்கு அருகில் சென்றார். இரகசியமாக அவர் காதண்டையில் சில வார்த்தைகள் சொன்னார். அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சம்பந்தியின் முகமலர்ச்சி மாறியது. அவர் திடீரென்று திண்ணையிலிருந்து கீழே குதித்து இறங்கினார். ஒருவர் தோளில் ஆரோகணித்திருந்த தம் குமாரரிடம் சென்றார். "கீழே இறங்கு" என்று கூறி அவரை அழைத்துக்கொண்டு நேரே தாம் தங்கியிருந்த ஜாகைக்குப் போய் விட்டார். அங்கிருந்த யாருக்கும் 'அவர் ஏன் அப்படிச் செய்தார்?' என்பது விளங்கவே இல்லை. அவரைச் சேர்ந்தவர்களும் அவர் போவதைக் கண்டு ஒருவர் பின் ஒருவராகச் சென்று விட்டனர். ஒரு நிமிஷத்தில் அங்கிருந்த ஆரவாரம் எல்லாம் மாறிவிட்டது.

கோபாலாசாரியார் பல நண்பர்களுக்கு விவாக முஹூர்த்தப் பத்திரிகை அனுப்பியிருந்தார். எனக்கும் வந்திருந்தது. கல்யாண தினத்து மாலையில் பாட்டுக் கச்சேரி ஒன்றும் ஏற்பாடாகியிருந்தது. நான் முஹூர்த்தத்தன்று பிற்பகலில் கல்யாணம் விசாரிப்பதற்காக, காலேஜ் விட்டவுடன் நேரே விவாகம் நடைபெறும் ஜாகைக்குச் சென்றேன். நான் போன சமயம் நான்கு மணியிருக்கும்.

அங்கே என்னைப் போலப் பலபேர்கள் கல்யாணம் விசாரிக்க வந்திருந் தார்கள். கோபாலாசாரியாரும் வேறு சிலரும் வந்தவர்களுக்குச் சந்தனம், புஷ்பம், கற்கண்டு, தாம்பூலம், தேங்காய் முதலியவற்றை வழங்கிக்கொண்டிருந்தனர். வந்தவர்களிற் சிலர் தாம்பூலம் பெற்றுக் கொண்டு திரும்பினர். சிலர் அங்கேயே உட்கார்ந்திருந்தனர்.

நான் போனவுடன் கோபாலாசாரியார் எனக்கும் சந்தனம், தாம்பூலம் கொடுத்தார்; அவர் முகத்தில் சோர்வுதான் காணப்பட்டது. நான் சாதா ரணமாக, "முஹூர்த்தம் சரியான காலத்தில் நடந்ததா?" என்று விசாரித்தேன்.

"அதுதான் இல்லை" என்றார் அவர்.

"ஏன்? நாழிகை ஆகிவிட்டதோ" என்று கேட்டேன்.

"முஹூர்த்தமே நடக்கவில்லை" என்று அவர் சொன்னார். நான் திடுக்கிட்டேன். "என்ன? முஹூர்த்தம் நடக்கவில்லையா? சந்தனம், தாம்பூலம் கொடுக்கிறீர்களே!"

"நாளை ஆறுமணிக்கு வேறு பையன் வந்துவிடுவான். காஞ்சீபுரத்திற்குச் சொல்லியனுப்பியிருக்கிறேன். இதைப் போல இரண்டு மடங்கு விமரிசையாக முஹூர்த்தம் நடந்துவிடும்."

எனக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் உண்டாயிற்று.

"என்ன சொல்கிறீர்கள்? வேறு பையனாவது! வரவாவது! இந்தப் பையன் என்ன ஆனான்? விஷயத்தை விளங்கச் சொல்லுங்கள்" என்றேன்.

"சொல்வது என்ன இருக்கிறது? மனுஷ்யர் சமயத்தில் இப்படி அவமானப்படுத்துவாரென்று எண்ணவே இல்லை. ஹூம்! நம் மேல் தப்பு. மனுஷ்யருடைய தராதரம் அறிந்து நிச்சயம் செய்திருக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே அவர் பெருமூச்சு விட்டார்.

அருகில் இருந்த ஒருவர் என்னிடம் விஷயத்தை விரிவாகச் சொல்லலானார்; "முஹூர்த்தத்துக்கு முன்பு நடக்கவேண்டிய காரியங்களெல்லாம் நன்றாகவே நடந்தன. எல்லோரும் திருப்தியாகவே இருந்தோம். பெண்ணும், பிள்ளையும் மாலை மாற்றிக்கொண்டார்கள். அப்போது எங்கிருந்தோ சனீச்சரன் போல் ஒருவன் வந்தான். சம்பந்தி காதைப் போய்க் கடித்தான். அந்த மனுஷ்யர் கொஞ்சமாவது மரியாதை யைக் கவனிக்காமல் திடீரென்று பையனை அழைத்துக்கொண்டு ஜாகைக்குப் போய்விட்டார். அவர் பிறகு வருவாரென்று எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தோம். அங்கிருந்து ஒருவரும் வரவில்லை. இங்கிருந்தும் ஒருவரும் அங்கே போகவில்லை."

"மத்தியான்னம் போஜனம் செய்தீர்களா?"

"போஜனமா? காலையில் ஆகாரம் பண்ணினது தான். அப்பால் ஒன்றும் சாப்பிடவே இல்லை."

'இதில் ஏதோ சிறு விஷமம் நடந்திருக்கிறது. கெளரவத்தைப் பெரிதாக எண்ணிக்கொண்டு ஒருவ ருக்கொருவர் மனஸ்தாபமடைந்திருக்கிறார்கள். சமாதானம் செய்வார் யாரும் இல்லை' என்று நான் தெரிந்து கொண்டேன். பிள்ளை வீட்டுக்காரரும் எனக்குத் தெரிந்தவராதலின், 'நாம் இதில் தலையிட்டுச் சமாதானம் பண்ணவேண்டும்' என்று நிச்சயம் செய்துகொண்டேன்.

"சரி;என்னுடன் சம்பந்தி ஜாகைக்கு நம்பிக்கை உள்ள ஒருவரை அனுப்புங்கள்" என்று கோபாலாசா ரியாரிடம் சொன்னேன்.

"தாங்கள் ஒன்றும் சிரமப்படவேண்டாம். அவர்கள் செய்த அவமா னத்தால் அவர்களைப் போய்ப் பார்த்துக் கெஞ்சுவதற்கு என் மனம் சம்மதிக்கவில்லை" என்றார் அவர். கெளரவத்தை விடாமல் அவர் இவ்வாறு சொன்னாலும் 'எப்படியாவது இதற்கு ஒரு வழி ஏற்படாதா?' என்ற எண்ணம் அவருக்கு இருந்ததென்பதில் சந்தேகம் சிறிதும் இல்லை.

"நீங்கள் இவ்வாறு சொல்லுவது தவறு. இவ்வளவு ஏற்பாடு செய்துவிட்டு இப்படிப் பிடிவாதம் செய்வத னால் லாபம் என்ன? பொருள் நஷ்டம், அவமானம் முதலியவையே உண்டாகும். ஆக்ஷேபிக்காமல் என்னுடன் ஒருவரை அனுப்புங்கள்" என்று நான் வற்புறுத்திக் கூறினேன். அவர் தம் பந்து ஒருவரை அனுப்புவதாகச் சொல்லி உள்ளே சென்றார்.

அவர் சென்ற சமயம் பார்த்து அங்கே உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவர், "இந்தப் பயலுக்கு இது வேணும்" என்றார்.

"ஏன்?" என்றேன் நான்.

"நான் அப்பொழுதே சொன்னேன். இந்த ஸம்பந்தம் வேண்டாமென்று முட்டிக்கொண்டேன். ஒருவார்த்தை என்னிடம் சொன்னானா? ஏதடா, பெரியவன் ஒருவன் இருக்கிறானே, அவனைக் கேட்போமென்று நினைத்தானா? இப்போது அதன் பலனை அநுபவிக்கிறான்."

"இவ்வளவு கோபமாகப் பேசும் இந்த ஸ்வாமி யார்?" என்று அருகிலுள்ள ஒருவரைக் கேட்டேன்.

"இவர் கோபாலாசாரியாருடைய தமையனார்" என்றார் அவர்.

இதற்குள் கோபாலாசாரியார் தம் பந்து ஒருவரை அழைத்து வந்து என்னுடன் அனுப்பினார். அவரைக் கையில் தாம்பூலம் புஷ்பம் எடுத்துக்கொள்ளச் சொல்லி உடன் அழைத்துக்கொண்டு சம்பந்திகள் தங்கியிருக்கும் ஜாகைக்குச் சென்றேன்.

அங்கே சம்பந்தி ஒரு நாற்காலியில் முகவாட்டத்துடன் உட்கார்ந் திருந்தார். அருகில் பெஞ்சியில் சிலர் இருந்தனர். சிலர் கீழே ஜமுக்காளத்தின்மேல் அமர்ந்திருந்தனர். எல்லோருடைய முகமும் சோர்வ டைந்திருந்தன. யாவரும் உத்ஸாகத்தை இழந்து மத்தியான்ன உணவில்லாமையால் பசி ஒரு பக்கம் வருத்த, இன்னது செய்வதென்று தோற்றாமல் இருந்தனர்.

நான் சம்பந்தியிடம் போய், "என்ன இப்படிச் செய்து விட்டீர்களே! கல்யாணம் எவ்வளவு சிறப்பாக நடந்தி ருக்கவேண்டும்!" என்றேன்.

அவர், "நீங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ, அப்படி நடக்கிறேன்" என்றார்.

சமாதானம் பண்ணுவதற்கு ஒருவரும் வாராமையால் அவர் மிகவும் மனம் கலங்கி உட்கார்ந்தி ருந்தாரென்று தோற்றியது.

"கல்யாணத்துக்காக எவ்வளவு விரிவான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்? எவ்வளவு பந்துக்கள் வந்திருக் கிறார்கள்? எவ்வளவு சிநேகிதர்கள் வந்து வந்து விசாரிக்கிறார்கள் ? நீங்கள் திடீரென்று இப்படிச் செய்ய லாமா? ஏதாவது தோஷத்தைக் கண்டீர்களா ? முன்பே தீர யோசித்துத் தானே இந்தச் சம்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டிருப்பீர்கள் ?"

அவர் பதில் சொல்லாமல் எதையோ யோசித்தார், பெருமூச்சுவிட்டார்; பிறகு பேசலானார்:

"ஏதோ நடந்தது நடந்துவிட்டது; அவர்கள் எங்களை மதித்திருந்தால் உடனே வந்து கூப்பிட்டிருக்கலாமே. நாங்கள் மத்தியான்னம் கூடச் சாப்பிடவில்லை; காலையில் ஆகாரம் பண்ணியதுதான். அவர்களில் யாராவது வருவார்கள் வருவார்கள் என்று எதிர் பார்த்துக்கொண்டே இருந்தோம். எங்களை இவ்வளவு சங்கடமான நிலைமையில் அவர்கள் வைத்தது நியாயமா?"

"நீங்கள் திடீரென்று வந்துவிட்டீர்களாமே; உங்களுடைய அபிப்பிராயம் என்னவென்று தெரியாமல் உங்களிடம் வருவதில் அவர்களுக்குத் தைரியமில்லை. என்ன காரணமென்று சொல்லக் கூடுமானால் சொல்லுங்கள்."

"அதெல்லாம் இப்போது எதற்காகச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்? ஏதோ சகுனம் சரியாக இல்லை யென்று தெரிந்தது. அதனால் வரவேண்டியதாயிற்று."

"இப்போது கல்யாணம் நடப்பதில் தங்களுக்கு எந்தவிதமான ஆக்ஷேபமும் இல்லையே; முஹூர்த்தத்தை நிறைவேற்றிவிடலாமல்லவா?"

"பேஷாக நடத்தலாம்."

உடனே கல்யாண ஜாகைக்கு உடன் வந்தவரை அனுப்பி, பிள்ளை வீட்டுக்காரருக்கு அந்தச் சமயத்தில் பசியை அடக்கக் கூடிய பலகாரங்களை அனுப்பச் செய்தேன். விசாரித்ததில் அஸ்தமனத்துக்குப் பின் ஒரு முஹூர்த்தம் இருப்பதாகத் தெரிந்தது. அதற்கு முன் சதிபதிகளாக உள்ள சிலரைக் கற்கண்டு, சர்க்கரை, சந்தனம், புஷ்பம், தாம்பூலம் முதலியவற்றோடும் வாத்தியத்தோடும் மாப்பிள்ளை வீட்டார்களை அழைப்பதற்கு வரும்படி செய்தேன். யாவரிடமும் அதுவரையிலும் மனஸ்தாபத்தாலும் சோர்வினாலும் மறைந்திருந்த உத்ஸாகம் இரண்டு மடங்கு அதிகமா யிற்று. சம்பந்திகள் புறப்பட்டார்கள். வாசலில் அடி வைத்தவுடன் ஒரு சுமங்கலி நிறைகுடத்தோடு எதிரே வந்தாள். அடுத்தபடி கையில் பால் எடுத்துக் கொண்டு இரண்டு பிராமணர்கள் வந்தனர். இப்படியே கல்யாண ஜாகைக்கு அவர்கள் போகும் வரையில் நல்ல சகுனங்கள் உண்டாயின. அவ்வாறு வரும்வண்ணம் ஜாக்கிரதையாக ஏற்பாடு செய்யவேண்டு மென்று சொல்லியிருந்தேன்.

கல்யாண ஜாகையின் வாசலில் மீண்டும் மாலை மாற்றும் வைபவம் சுருக்கமாக நடைபெற்றது. உடனே முஹூர்த்தமும் நிறைவேறியது. திருமங்கலிய தாரணம் ஆகும்வரையில் நான் இருந்தேன். தாலி கட்டியவுடன் சம்பந்தியிடம் என்ன சகுனத்தடை உண்டாயிற்றென்று கேட்டேன். அவர், "எங்களுக்குத் தெரிந்த ஜோஸ்யர் ஒருவர் என்னிடம் வந்து பெண்ணின் ஜாதகத்தில் தோஷம் இருக்கிறதென்றும், காலையில் புறப்படும்போது நல்ல சகுனம் ஆக வில்லை யென்றும் சொன்னார். சகுனம் ஆகாதது எனக்கும் தெரியும். என் மனத்தில் அந்த விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது. அதோடு அவர் தோஷமென்று சொன்ன காரணமும் சேரவே, நான் பொறுமையை இழந்து அவ்வாறு செய்தேன். ஜாகைக்குப் போனபிறகு மற்றொரு ஜோஸ்யரைக் கொண்டு பார்த்ததில் தோஷமே இல்லையென்று தெரிந்தது. ஆனால் நாங்களாக வலிந்து வந்தால் கெளரவக் குறைவென்றும், அவர்கள் வந்து கூப்பிட்டால் போகலாமென்றும் எண்ணினோம். அவர்கள் வாராமையால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தோம். தாங்கள் வந்து எங்கள் சங்கடத்தைப் போக்கினீர்கள். காலையில் சகுனமாகாததன் பலன் மத்தியான்னம் பட்டினி கிடந்ததோடு சரியாகப் போய்விட்டது" என்றார்.

தாலிகட்டினவுடன் மிக்க திருப்தியோடு முதல் தாம்பூ லத்தை நான் வாங்கிக்கொண்டு விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன். கல்யாண கோஷ்டியில் இரு சாராரும், இந்த விஷயத்தை அறிந்த பிறரும் என்னை வாழ்த்தினர்.

Friday, April 27, 2018

கலப்பையை மீட்டாச்சு!

ஹையா, கலப்பை வந்துடுச்சே! இனிமேலே ஹிஹிஹி னு சிரிக்கலாம். ஹூஹூனு கத்தலாம். க்ஷ, ஷ, ஸ, ஹ, ஜ எல்லாம் போட்டு எழுதலாம். ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா!

நேத்திக்குத் தானாக டெலீட் ஆன கலப்பை பழைய வெர்ஷன். நான் மீண்டும் போட்டது புது வெர்ஷன். அதிலே தான் வைரஸ் அட்டாக் ஆகிவிட்டதால் கலப்பை வேலை செய்யவில்லை. இப்போ மருத்துவரை அழைத்ததில் பழைய வெர்ஷனையே போட்டுக் கொடுத்து இருக்கார். ஆனால் இதில் லை, ள் போன்றவை அடிப்பதில் பிரச்னை இருக்கு. வேறே வழியில்லை. நேரடியாகத் தட்டச்ச இதை விட்டால் வேறே என்ன இருக்கு. என்னவோ போங்க நேரமே சரியில்லை. தானாக இந்தக் குறாஇகள் சரியாகும்னு நினைக்கிறேன். ஐ சேர்க்கும் எழுத்துக்களீல் கால் வாங்கும் இடத்தில் பிரச்னை வருது. ளி அடித்தால் ளீ எனத் தான் வருது. என்னோட வேகமான தட்டச்சை இதில் செய்ய முடியாது. ரொம்பப் பொறூமை வேண்டும்.


எழுத்துப் பிழைகள் சகித்துக் கொள்ளும்படிக் கேட்டுக்கிறேன்.

Thursday, April 26, 2018

கலப்பைக்கு வந்த சோதனை!

என்ன என்னமோ மாஜிக் எல்லாம் செய்யுதே நம்ம கணீனி! திறக்கும்போதே தகராறூ செய்யும்.  பாஸ்வேர்ட் போடத் திறக்க முடியாது.  அப்படியே வந்தாலும் பாஸ்வேர்ட் போடுவதற்கான ஆப்ஷனில் போடவே முடியாது. மீண்டும் மீண்டும் முயல வேண்டும்.   அப்படி இருக்கையில் இன்று திடீரென இ கலப்பை காணாமல் போய்விட்டது. தமிழில் தட்டச்சவே முடியலை! என்னனு புரியலை. கணினியை என்னைத் தவிரத் தொடுபவர்கள் யாரும் இல்லை. பிள்ளை, பெண் இருந்தால் அவங்க பார்ப்பாங்க. இப்போ என்னைத் தவிரக் கணினிக்கு வரவங்க யாரும் இல்லை! கருத்துச் சொல்ல முடியலை! கருத்துச் சொன்னால் ஏற்கெனவே காணாமல் போய்க் கொண்டிருந்தது. திடீர்னு மவுஸில் உள்ள ஆரோ மார்க் காணாமல் போயிடுது! திரும்பத் திரும்ப மவுசை மூடி மூடிமூடி த்திறந்து திறந்து திறந்து ஆரோ மார்க்கைக் கொண்டு வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. கணினி என்னமோ புத்தப் புதுசு! 2016 டிசம்பரில் தான் வாங்கினது! கொஞ்சம் பார்த்துட்டுப் பழைய மடிக்கணினியை எடுத்துட வேண்டியது தான்னு நினைக்கிறேன்.


இ கலப்பை கூர்மை போய்விட்டதா என்னனு தெரியலை! இன்னிக்கு அதோடு போராட்டம். திரும்பத் திரும்பத் திரும்பத் தரவிறக்கினாலும் சரியா வரலை! ஆன்டி வைரஸ் ஒத்துக்கலை. இத்தனை நாட்கள் ஒண்ணும் பிரச்னை இல்லை ஆனால் இன்னிக்கு என்னனு தெரியலை! திடீர்னு ஷார்ட் கட், ஒத்துக்க மாட்டேன்னு சொல்லுது. சரினு புதுசாத் தரவிறக்கினால் அதுவும் ஏத்துக்கலை. சரினு அழகி தரவிறக்கினால் அம்மா என்பதில் கடைசி மா வராமல் ம விழவே இல்லை. வெறும் கால் வாங்கியது மட்டும் வருது. அம்மா என்று முழுதும் வரவில்லை. இ கலப்பையில் தட்டுத் தடுமாறித் தட்டச்சலாம் எனில் கீ போர்டே வரலை. முதலில் ஒரு கீ போர்டு வந்தது. அதில் எழுத்துப் பிழைகள் நிறையவே வந்தன. றா என்பது வரவில்லை. ணு வராமல் ணூ என்றே வருது. று வராமல் றூ என்றே வந்தது. ணி போட்டால் ணீ என வருது.   சரி, இன்னிக்கு அவ்வளவு தான் என நினைக்கிறேன். இது சுரதா மூலம் தட்டச்சுகிறேன். இதிலேயும் hihiஎன்பது   கிகி என்றே வரும். ஃகி ஃகி என்றே சிரிக்கணும். :P என்னத்தைச் சொல்லறது போங்க! ஏற்கெனவே துர்க்குணி அதிலும் கர்ப்பிணி என்றொரு சொல் வழக்கு உண்டு. அது போல் ஏற்கெனவே சில மாதங்களாகச் சரியாகப் பதிவுகள் போட முடிவதில்லை. ஏதோ ஒப்பேத்தறேன். ட்ராஃப்ட் மோடில் நிறைய இருக்கு. இ கலப்பையில் தட்டச்சுவதில் உள்ள சௌகரியம் வேறே ஏதுவும் இல்லை. ஆனால் அது என்னமோ தகராறு செய்யுதே! நாளைக்கு முயன்று பார்த்துட்டுப் பின்னர் மறுபடி கணினியில் தரவிறக்கிப் பார்க்கணும். இத்தனைக்கும் வின்டோஸ் 10 க்கு உள்ளதைத் தான் தரவிறக்கினேன். ஏற்கெனவே இறக்கியது எங்கே என்றே காணோம்.

Friday, April 20, 2018

கல்யாண மோர் என்றால் என்ன? கேள்வி-பதில்! :)

கண்ணிலே ஒரு கட்டி! ஒரு மாசம் முன்னே சின்னதாய்க் கிளம்பியது. ஒரு சின்னக் கடுகு அளவு இருந்தது மெல்ல மெல்லக் கிளம்பி ஓர் உளுத்தம்பருப்பு அளவு ஆயிடுத்து. பையர் கிளம்பிப் போனதும் போன திங்களன்று கண் மருத்துவரிடம் போயிட்டு வந்தேன். அதைக் கீற வேண்டாம் எனவும், ஒண்ணும் பயமில்லை! என்றும் சொல்லி ஓர் ஆறுதலுக்கு ஓர் ஆயின்ட்மென்ட் கொடுத்தார். தானே விழுந்துடும் என்றார். விழலைனால் கீறி விடறேன் என்று சொன்னார். அது வேறே கவலை! கீறினால் என்னடா செய்வோம்னு!  கண் இமையில் ஒரே அரிப்பு வேறே. கண்ணைக் கசக்கிக் கசக்கிக் கசக்கிக் கசக்கி! போயிட்டு வந்து ஒரு வாரம் வரைக்கும் விழலை! கட்டி மட்டும் பெரிசா ஆயிட்டு இருந்தது. என்னடா, இது மதுரைக்கு வந்த சோதனைனு நேத்திப் பூரா மனசுக் கலக்கம். எங்க ஊர் மாரியம்மனுக்கும், வைத்தீஸ்வரருக்கும் வேண்டிக் கொண்டேன். ஹிஹிஹி, ஹாஹாஹா, நேற்றிரவு தூக்கத்திலே கட்டி விழுந்திருக்கு.  இந்தக் கட்டி தொந்திரவாலும் வெயிலில் அதிகம் கணினி முன் உட்கார முடியாமலும் பதிவு ஒண்ணும் தேத்தலை. என்றாலும் நேத்திக்கு முகநூலில் நண்பர் ஒருத்தரின் பதிவைப்படிச்சப்போ நான் அதுக்குக் கொடுத்த பதில்கள் என்னளவில் சுவாரசியமாக இருந்ததால் அதைப் பகிர்ந்தேன்.

நண்பர் உப்பிலியின் பதிவு!

கல்யாண மோர் என்றால் என்ன ?

குறிப்பாக தஞ்சாவூர் - கும்பகோணம் வாத்திமா கல்யாணங்கள் வெகு நேர்த்தியாக இருக்கும். நான்கு நாள் கல்யாணம். மூன்றாம் நாள் இரவு சம்பந்தி விருந்து. அன்று செம்மங்குடியோ, அரியக்குடியோ கச்சேரி இருக்கும். பக்கவாத்தியக்காரர்களும் பெரிய ஜாம்பவான்களாக இருப்பர். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள். கச்சேரி கேட்பதற்கென்றே கூப்பிட்டவர்கள், கூப்பிடாதவர்கள் என்று பல கிராமங்களில் இருந்தும் மிகப் பெரிய கூட்டம் வரும்.

கச்சேரி முடிந்ததும் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து விடுவார்கள். 500 பேருக்குச் சமைத்த சமையல் 1000 பேருக்கு எப்படிப் போதும்? சமையல் கலைஞர்களும் ஜாம்பவான்கள். ஒரு காளியாகுடி செட்டோ, அகோரம் செட்டோ ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆனால் பெண் வீட்டாருக்குக் கவலை. எப்படி இவர்களையெல்லாம் சமாளிக்கப் போகிறோம் என்று? சமையல் கலைஞர் சொல்வார். "கவலையை எங்களிடம் விடும். உக்கிராண உள்ளில் இருக்கும் சாமான்கள் போதும்" என்று.

சரி. ஆனால் மோருக்கு வழி? ஒரு பெரிய அண்டா நிறைய அரிசி களைந்த நீரை (அது மோர் நிறத்தில்தான் இருக்கும்) கொட்டி, அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, சிறிதளவு உப்பு சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, பெருங்காயம் சேர்த்து, கடுகு தாளித்துப் பரிமாறுவார்கள். எல்லோரும் ருசித்து தொன்னையிலும் வாங்கிக் குடிப்பார்கள். "மோரு பலே ஜோரு" என்று சொல்லி, தாம்பூலம் வாங்கிக் கொண்டு விடை பெறுவார்கள். எப்போதுமே இமிடேஷன் ஒரிஜினலைவிட ஜொலிக்கும்தான். அதற்குக் கல்யாண மோரும் விதிவிலக்கில்லை.


இதற்கு நான் கொடுத்த பதில் இதான்!

நான் கல்யாணம் ஆகிப் போனதும் மாமியார் வீட்டில் இரண்டாம் நாளே இதான் மோர் எனச் சொல்லி விட்டார்கள். ஒரே அதிர்ச்சி! கேள்விப் பட்டதே இல்லை! :) ஆனால் இது தஞ்சை ஜில்லாவில் மட்டுமே இப்படிச் செய்வதாகத் தோன்றுகிறது. மற்ற ஊர்களில் கேள்விப் பட்டதில்லை.

ஆனால் இந்தத் திப்பிச வேலைகள் எல்லாம் தினசரி சமையலில் கொண்டு வருவேன். மோர்க்குழம்பு மிஞ்சிப் போனால் மாலை வெண்டைக்காய் மசாலாவோ, உ.கி. மசாலாவோ செய்து மோர்க்குழம்போடு சேர்த்து தஹி ஆலு, தஹி பிண்டி என நாமகரணம் செய்வேன்.

சாம்பார் மிஞ்சினால் கொ.க.பட்டாணி ஊற வைச்சு அதுக்குள்ள உப்பு மட்டும் போட்டு தக்காளி, வெங்காயம் வதக்கிச் சேர்த்து மிச்ச சாம்பாரையும் சேர்த்துக் கீழே இறக்கும்போது அரை டீஸ்பூன் கரம் மசாலா போட்டால் போதும். நவரத்ன குருமா அல்லது கோலாபுரி தால் எனப் பெயர் வைக்கலாம்.

காலை செய்த கீரை மிஞ்சினால் அரைத் தக்காளி, அரை வெங்காயம் அரைத்துக் கொண்டு பாக்கி அரைத்தக்காளி, வெங்காயத்தை நறுக்கி வதக்கிக் கொண்டு பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுக் கொஞ்சம் போல் உப்பு, சர்க்கரை போட்டுக் கிளறி அரை டீஸ்பூன் மிபொடி அரைடீஸ்பூன் தனியா பொடி, கால் டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்துக் கிளறிக் கீரை மசியலையும் கொட்டிச் சேர்த்துக் கிளறினால் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். வேணுமானால் ஊற வைத்த பட்டாணியையும் வேக வைத்து இதில் சேர்த்து பாலக் மட்டர் என்னும் பெயரைச் சூட்டலாம். உப்பு மட்டும் கவனமாச் சேர்க்கணும். கீரையில் ஏற்கெனவே உப்புப் போட்டு மசித்திருப்போம். அதே போல் மேலே சொன்ன தால் வகைகளிலோ அல்லது மோர்க்குழம்பு மசாலாவோ செய்யும் போது காய்களுக்கு உள்ள உப்பை மட்டும் முதலிலேயே சேர்த்து விட்டுட்டால் அப்புறமா உப்புப் போட வேண்டாம்.

Tuesday, April 17, 2018

ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா! பயணம் 4

திருப்பதி க்கான பட முடிவு

ஆசை தீரப் பார்க்க லட்டுகள். ஆனால் எங்களுக்கு இந்த லட்டு கிடைக்கவில்லை! :(

ஓட்டல் ஊழியரை அழைத்துத் தேநீர் கொண்டு வந்து தரும்படி சொல்லி எங்கள் ஃப்ளாஸ்கைக் கொடுத்தோம். அருமையான தேநீர் வந்தது. அதைக் குடித்தபின்னர் மீண்டும் கை, கால் சுத்தம் செய்து கொண்டு கோயில்களுக்குச் செல்லத் தயாரானோம். கீழே சென்று ஓட்டல் வரவேற்பில் இருந்தவரிடம் நாங்க போக வேண்டிய இடங்களைச் சொல்லி ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து தரச் சொன்னோம். கோவிந்தராஜப் பெருமாள் கோயில், அலமேலு மங்காபுரம், ஶ்ரீநிவாச மங்காபுரம் ஆகிய கோயில்களே நாங்க செல்ல வேண்டியது.  ஆட்டோக்காரர் வந்தார். அறுநூறு ரூபாயில் ஆரம்பித்து பேரம் பேசிக் கடைசியில் ஓட்டல்காரர்கள் சத்தம் போடவே நானூறு ரூபாய்க்கு இறங்கி வந்தார். ஆனாலும் கோவிந்தராஜப் பெருமாளைத் தரிசனம் செய்ய முடியாது என்றார்.

அங்கே திருப்பணி வேலைகள் நடப்பதால் கோவிந்தராஜப் பெருமாளை பாலாலயத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்ட நேரமே தரிசனம் என்றும் சொன்னார். சரினு ஒத்துக் கொண்டு அப்போதே மாலை மணி ஆறு ஆகிவிட்டபடியால் முதலில் ஶ்ரீநிவாசமங்காபுரம் போகச் சொன்னோம். அது கிட்டத்தட்டப் போக வர 25 கிலோமீட்டர் இருக்கும். அலமேலு மங்காபுரம் வேறு திசை! அது ஒரு ஐந்து+ஐந்து =பத்து கிலோமீட்டர். கோயில்கள் ஒன்பது வரை இருக்கும் என்பதால் கவலை இல்லை. முதலில் ஶ்ரீநிவாசமங்காபுரமே செல்லச் சொன்னோம். ஆட்டோ கிளம்பியது.

இதற்கு முன்னால் கடைசியாகத் திருப்பதி வந்தபோது  ரயிலில்      ரேணிகுண்டாவிலிருந்து கீழத்திருப்பதி வரை ரயில்பாதையின் இருபக்கமும் வறண்ட நிலங்களாகவும் காய்ந்தும் வறட்சியாகவும் காணப்பட்டது. இப்போதோ! இருபக்கமும் தொழிற்கூடங்கள்! வழி எங்கும் நல்ல மரங்கள் வளர்க்கப்பட்டு நிழல் தரும் சாலைகள்! ரேணிகுண்டாவில் இருந்து திருப்பதி வரும் போது இந்தக் காட்சிகளைக் கண்டு வியந்தோம். எவ்வளவு முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது ஆந்திரா என்னும் வியப்புத் தான்! நம் பக்கமோ நேர்மாறாகக் காட்சி அளிக்கும். அதோடு தமிழ்நாட்டில் இருந்து வெளியேறினாலே எங்கும் கட்சிக் கொடிகளோ, தலைவர்களின் கட் அவுட்டுகளோ காணவும் முடியாது. வட மாநிலங்களில் லக்னோவில் மாயாவதி ஏற்படுத்திய யானைகள் பிரம்மாண்டமாகக் காட்சி அளிக்கும். மற்றபடி வேறெங்கும் காண முடியாது.

அதே போல் இங்கே கீழத்திருப்பதியிலும் எங்கும் கட்சிக் கொடிகளோ, தலைவர்களின் திருவுருவப் படங்களோ, கட் அவுட்டுகளோ இல்லை. வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் இருந்த சாலை முழுதும் நூறடிச்சாலையாக நல்ல தரத்துடன் போடப்பட்டு ஆட்டோ கூடக்குலுங்கல் இல்லாமல் சென்றது. இரு பக்கமும் அடர்ந்த மரங்கள்! தெருக்களிலும், சாலைகளிலும் எங்குமே ஒரு மாடோ, நாயோ சென்று பார்க்கவில்லை. குப்பைகளையும் காணமுடியவில்லை. ஒரு சில முக்கிய நாற்சந்திகளில் என்.டி.ராமாராவின் சிலை மார்பளவில் அமைக்கப் பட்டிருந்தது. மற்றபடி வேறெங்கும் தலைவர்களின் சிலைகளைப் பார்க்க முடியவில்லை. இதற்கு முன் இந்தச் சாலையைப் பார்த்தவர்கள் இப்போது வியப்பின் எல்லைக்கே போவார்கள். ஶ்ரீநிவாசமங்காபுரம் போய்ச் சேர்ந்தோம். கோயிலுக்குள் செல்ல முக்கிய வாயில் வழி ஆட்டோ செல்ல முடியவில்லை என்பதால் முக்கியச் சாலையில் இருந்த பக்கவாட்டு வழியாகவே சென்றோம். ஆட்டோ டிரைவர் கீழே இறங்கி வழி காட்டினார். திரும்ப இந்த வழியிலேயே வரும்படியும் சொன்னார். நாங்கள் இறங்கிய வழி புஷ்கரணிப் படிக்கட்டுகள் உள்ள இடம். அங்கிருந்து புஷ்கரணியைச் சுற்றிக் கொண்டு மறுபக்கப் படிக்கட்டுகள் வழியாகக் கோயிலுக்குள் ஏறினோம்.

அப்போது கோயிலில் சாயரட்சை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால் திரை போட்டிருந்தார்கள். பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர். மாடக் கோயில் போலும். சுமார் பத்து, இருபது படிக்கட்டுகள் மேலே ஏறித் தான் போகணும். அங்கெல்லாம் பக்தர்கள் அமர்ந்திருக்க நாங்க பிரகாரத்திலேயே ஓர் மரத்தடியில் அமர்ந்து கொண்டோம். நம் முன்னோர்கள் வந்து விளையாட்டுக்கள் காட்டி அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள். நல்லவேளையாகத் தேங்காய், பழம் ஏதும் வாங்கிச் செல்லவில்லை! சிலரின் தண்ணீர் பாட்டில்களைப் பிடுங்கிக் கொண்டு குடிக்கத் தெரியாமல் தவித்தனர் சில முன்னோர்கள். சிலரோ அழகாய் பாட்டிலைத் திறந்து குடித்தனர். புஷ்கரணி ஜலத்தை ஏன் குடிக்கலைனு புரியலை.

அரை மணி நேரம் கழிந்த பின்னர் பட்டாசாரியார்கள் நிவேதனத்தை எடுத்துக் கொண்டு சுற்றி கோஷ்டத்தில் இருக்கும் கடவுளருக்கும் காட்டிவிட்டுச் சென்றனர். அதன் பின்னர் திரை திறந்து தீபாராதனை சமயம். எல்லோரையும் உள்ளே விட்டனர். முடிந்தவரை தீபாராதனை பார்த்தோம். கூட்டம்! மறைத்தது! பின்னர் வரிசையில் சென்றோம். ஐந்து ரூபாய்ச் சீட்டு என நினைக்கிறேன்.
திருப்பதி க்கான பட முடிவு
பெருமாள் அலர்மேலு மங்கையுடன் திருமணம் முடிந்த பின்னர் இங்கே தங்கி இருந்தாராம். திருப்பதி பெருமாளின் ஜெராக்ஸ் காப்பி! அங்கே சரியாக தரிசனம் செய்யலை எனில் இங்கே தரிசித்துக் கொள்ளலாம். அதே மாதிரி காட்சி அளிக்கிறார். கல்யாண வேங்கடேசப் பெருமாள் என அழைக்கின்றனர். திருமணம் ஆகாத பிரமசாரிகள் இங்கே வந்து தரிசனம் செய்தால் திருமணம் ஆகும் என்னும் நம்பிக்கை!  உள்ளே போய் நன்றாக தரிசனம் செய்து கொண்டோம். பின்னர் மீண்டும் வந்த வழியில் திரும்பி ஆட்டோவில் ஏறிக் கொண்டோம். ஆட்டோக்காரர் அலமேலுமங்காபுரம் நோக்கிக் கிளம்பினார்.  ஶ்ரீநிவாசமங்காபுரத்திலிருந்து அலமேலு மங்காபுரம் சுமார் பத்து கிலோமீட்டர் இருக்கலாம். கொஞ்சம் போக்குவரத்து நிறைந்த பாதை! ஆகவே நாங்கள் கோயிலுக்கு வரும்போதே ஏழரை மணி ஆகிவிட்டது.

அலர்மேலு மங்கை க்கான பட முடிவு
படங்களுக்கு நன்றி கூகிளார்!

குங்கும அர்ச்சனை சேவையில் கலந்துக்கணும் என்னும் நினைப்புடன் வந்தோம். ஆனால் அந்த சேவை முடிந்து விட்டதாகச் சொன்னார்கள். இங்கேயும் சிறப்பு தரிசனச் சீட்டு வாங்கிக் கொண்டே சென்றோம். உள்ளே போய் அலர்மேலு மங்கையைக் கண் குளிரத் தரிசனம் செய்தோம். அப்போது தான் குங்கும அர்ச்சனை நேரம் முடிந்திருந்ததால் ஒரு சில ஆந்திரப்பெண்மணிகள் பூக்கள், குங்குமம் இவற்றோடு காட்சி அளிக்க நமக்குக் கேட்டால் கொடுப்பாரா எனத் தயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெண்மணி திடீரென என்ன நினைத்தாரோ என்னைப் பார்த்து அம்மா, அம்மாயி என அழைத்துக் குங்குமத்தை என் நெற்றியில் வைத்ததோடு அல்லாமல் என்னையும் தனக்கு வைக்கச் சொன்னார். உடனே மற்றச் சிலரும் வந்து அம்மாதிரி வைத்துவிட்டுத் தாங்களும் வைத்துக் கொண்டு சென்றனர். அந்த நிமிஷம் வயதில் பெரியவளாய் இருப்பதன் மகிமையும் புரிந்தது. (ஹிஹிஹி, அதுக்காக என்னை வயசானவள் கோஷ்டியில் சேர்க்க வேண்டாம். நான் இன்னும் பிறக்கவே இல்லை! தெரியுமா?)

பின்னர் அங்கிருந்து கிளம்பி ஓர் அரைமணி நேரத்தில் ஓட்டலுக்கு வந்து விட்டோம். மேலே சென்றுசற்று அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்ட பின்னர் கீழே வந்து உணவகத்தில் டிஃபன் சாப்பிட்டோம். அதே 147 ரூபாய் இரண்டு பேருக்கும். இம்முறை காஃபி சாப்பிடாமல் பால் சாப்பிட்டிருந்தோம். அவ்வளவே வேறுபாடு! பொதுவாகவே டிஃபன்கள் விலை பக்தர்களால் கொடுக்க முடிந்ததாக இருக்கணும் என ஓட்டல்காரர்களுக்குச் சந்திரபாபு நாயுடு அரசு கட்டளை போட்டிருப்பதாகச் சொல்கின்றனர். என்றாலும் அதை மீறாமல் இவ்வளவு பெரிய ஓட்டல் குறைந்த கட்டணமே வாங்குவது ஆச்சரியமாகத் தான் இருந்தது. அறைகள் தான் குளிரூட்டப்பட்டவை. உணவகம் குளிரூட்டப்படவில்லை. அதனாலோ! தெரியலை. என்றாலும் குளிரூட்டப்படாத உணவகங்கள் பலவும் சென்னை, திருச்சியில் அதிகமான விலையே வைத்து விற்கின்றனர் என்பதையும் கண்டு வருகிறேன்.

பின்னர் சென்று படுத்துத் தூங்கிக் காலையில் காஃபி வாங்கிக் குடித்துவிட்டுக் குளித்துத் தயாராகிக் கீழே வந்து காலை உணவை எளிமையாக முடித்துக் கொண்டோம். நான் பூரி+கிழங்கு+சப்போட்டா மில்க் ஷேக். ரங்க்ஸ் இட்லி+சட்னி, சாம்பார்+பைனாப்பிள் பழச்சாறு. இவற்றுக்கு நூறு ரூபாய்க்குள் தான் ஆயிற்று. அதோடு நாங்க ரயிலில் குடிக்க என்று எங்க ஃப்ளாஸ்கிலும் இரண்டு தேநீர் வாங்கிக் கொண்டோம். மொத்தமாக 110 ரூபாய்க்குள் ஆனது. பின்னர் அறையைக் காலி செய்து கொண்டு அங்கிருந்த வரவேற்புப் பெண்ணிடம் எங்கள் நன்றியைத் தெரிவித்து விட்டு எதிரேயே இருக்கும் ரயில் நிலையத்துக்கு நடக்க ஆரம்பித்தோம். அங்கே முதல் நடைமேடையின் லிஃப்ட் மூலம் மேலே சென்று இரண்டாம் நடைமேடைக்கான லிஃப்டில் சென்று அங்கிருந்து கீழே இறங்கி மூன்றாம் நடைமேடையில் எங்களுக்காக வரவேண்டிய சப்தகிரிக்காகக் காத்திருந்தோம். சரியாகப் பத்து மணிக்கு சப்தகிரி வந்து நாங்களும் ஏறிக் கொண்டு கிளம்பினோம் சென்னையை நோக்கி. சென்னைக்குச் சரியாக ஒரு மணிக்கு வந்தது சப்தகிரி. அங்கிருந்து எழும்பூர் வரத்தான் பிரச்னை! ஆட்டோக்காரர்கள் அருகிலிருக்கும் இடம் என்பதால் மறுக்க, சிலர் அதிகத் தொகை கேட்க, ஒரே ஒரு ஆட்டோக்காரர் இரக்கப்பட்டு ஏற்றிக்கொள்ள அதுக்குள் பொறுக்க முடியாமல் பின்னே நின்ற வண்டிக்காரர்கள் அவசரப்படுத்த எங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு கிளப்பினார் அந்த ஆட்டோக்காரர். ரங்க்ஸின் கால் முழுதும் உள்ளே வரலையே என நான் கவலைப்பட மெல்ல மெல்ல உள்ளே நுழைந்தார் ரங்க்ஸ்!

இதான் சென்னை! ஆந்திராவில் ராஜ மரியாதை! இங்கே சொந்த மாநிலத்தில்! :))))))  படங்கள் எதுவும் எடுக்க முடியலை! எடுக்க விடலை. அலைபேசியை தங்கும் அறையிலேயே வைத்துப் பூட்டிச் செல்ல நேர்ந்தது. ஆகவே படங்கள் இல்லை. எனினும் கூகிளாரிடம் கேட்கிறேன்.

சிறப்பான ஏற்பாடுகள். பக்தர்களுக்கான வசதிகள். தரிசனக் கட்டணம் வாங்கினாலும் அதற்காக பக்தர்கள் யாருமே ஏமாற்றம் அடையாவண்ணம் தரிசனம். எப்போதுமே திருமலா-திருப்பதிப் பயணம் இந்த விதத்தில் ஓர் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. அதுவும் கடந்த இருபது வருடங்களாகவே இம்மாதிரி வசதிகள். அறுபதுகளில் சென்றபோதெல்லாம் மேலே ஏறவே நாட்கணக்கில் காத்திருக்கணும். உள்ளே போயும் நாட்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்திருக்கோம். அப்போப் பள்ளி மாணவி. அண்ணா+தம்பியின் உபநயனம் அங்கே தான் நடந்தது. சாமான்கள், அடுப்பு, பாத்திரங்கள் எனத் தூக்கிக் கொண்டு நடந்து சென்று மைசூர் மஹாராஜா சத்திரத்தை அடைந்து அறை எடுத்துத் தங்கிச் சமைத்துச் சாப்பிட்டு நடுவில் தரிசனமும் செய்து அண்ணா+தம்பிக்குப் பூணூலும் போட்டு அது ஓர் மறக்கமுடியா நிகழ்வு. 

Sunday, April 15, 2018

ஏழுமலையானுக்கு கோவிந்தா! கோவிந்தா! பயணம் 3

வரிசையிலே போய்ப் பெருமாளை தூரத்திலே இருந்தே பார்த்துக் கொண்டு போனதில் பெருமாள் என்னமோ இளைச்சு உயரமும் குறைஞ்சு இருப்பதாகத் தோன்றியது. உள்ளே அலங்கார மின் தீபங்கள் ஏதும் இல்லாமல் அந்தக் குத்து விளக்குகளின் சுடர் ஒளியில் மட்டுமே பார்க்கலாம். மிக அற்புதமாக அலங்காரம் பண்ணி இருந்தனர். உள்ளே யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் முன்னெல்லாம் அர்த்த மண்டபத்துக்குள்ளே போய்ப் பார்த்தபோது உள்ளே பட்டாசாரியார்கள் இருப்பார்கள். இன்று யாரும் அப்படி இல்லை. கொஞ்சம் கூட எவ்விதத் தடங்கலோ, மறைப்போ இல்லாமல் பெருமாள் மட்டுமே ஓர் ஓவியம் போலக் காட்சி அளித்தார். பார்த்த பின்னர் அனைவருமே வலப்பக்கமாகச் செல்ல அனுமதித்தார்கள். அதனால் நாம் கட்டாயமாக ஒரு பிரதக்ஷிணமாவது செய்யும்படி ஆகிறது.

பிரதக்ஷிணமாக வந்து தங்க கோபுர தரிசனம் செய்து கொண்டு உண்டியலில் காணிக்கையைச் செலுத்திக் கொண்டு (உண்டியலும் சின்னதாக இருக்கோ?) என்னும் சந்தேகத்தைத் தள்ளிவிட்டுக் கொண்டு வெளியே வந்து லட்டுக்களை நோக்கி நடந்தோம், நடந்தோம், நடந்து கொண்டே இருந்தோம். லட்டுகள் செய்யும் மடப்பள்ளி வாசலுக்கே போய்விட்டோம். அங்கே தான் எதிரே கொடுப்பதாகச் சொன்னார்கள். பைகள் வாங்கிக்கலாம்னா அதுக்குத் தனிக் காசாம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என மனசுக்குள் சொல்லிவிட்டு நம்ம முன்னேற்பாடு முத்தண்ணாவாக ரங்க்ஸ் கொண்டு வந்திருந்த பைகளில் லட்டுக்களை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல ஆரம்பித்தோம். ஆங்காங்கே வழி கேட்டுக்கொண்டு (தன்னார்வலர்களும், காவல்துறையும் தெலுங்கு கலந்த தமிழில் சொல்கின்றனர்.) செருப்புக்கள் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றோம். அதான் கொஞ்சம் புரியவில்லை. அப்புறமா ஒரு தன்னார்வலர் தமிழ்க்காரர் வாரம் ஒரு முறை இங்கே சேவை செய்ய வருவாராம். அவர் அழைத்துச் சென்று விட்டார். செருப்புக்களை எடுத்துக் கொண்டு எங்களுக்கு டோக்கன் கொடுத்த இடம் வழியாகவே வெளியே வந்தோம்.

ஒரு டாக்சியில் வியாசராஜமடம் சென்று அங்கே அறையைக் காலி செய்வதாகச் சொல்லிவிட்டு மேலே சென்று சாமான்களைச் சேகரித்துக் கொண்டு மடத்து ஊழியர் ஏற்பாடு செய்து கொடுத்த டாக்சியில் கீழே இறங்க ஆயத்தம் ஆனோம். கீழே இறங்க ஐந்நூறு ரூபாய் கேட்டார். வேகமாகப் போனால் அரை மணிப் பயணம் தான். என்றாலும் மலைப் பாதை என்பதால் ஒத்துக் கொண்டு கீழே இறங்கினோம். நாற்பது நிமிடங்கள் கழித்தே கீழே இறங்கணுமாம். ஆகவே அரை மணியில் (இத்தனைக்கும் மெதுவாகவே வந்தார்) கீழே இறங்கிய ஓட்டுநர் பத்து நிமிஷம் ஓர் மர நிழலில் நிறுத்திவிட்டுப் பின்னர் கீழே இறங்கி நாங்கள் கேட்டபடி பீமவிலாஸ் ஓட்டலில் நிறுத்தினார். அங்கே தான் முதல் நாள் மாலை டிஃபன் சாப்பிட்டோம்.  பூரி,கிழங்கு+தோசை+ காஃபி இரண்டு பேருக்கு 147 ரூபாய் தான் ஜிஎஸ்டி உட்பட ஆகி இருந்தது. பீமவிலாஸ் ஓட்டல் மிகப் பழமையானது. நாங்க சாப்பிட்ட ஓட்டல் அருகேயே அவங்க தங்குமிடமும் அதை ஒட்டியே இருந்ததால் அங்கே அறை கேட்டு வாங்கிக் கொண்டு மேலே லிஃப்டில் சென்று (அப்பாடா) சாமான்களை வைத்துக் கொண்டு சுத்தம் செய்து கொண்டு கீழே சாப்பிட வந்தோம்.

இருவருக்குமே சாப்பாடு சொல்லி இருந்தோம். சாப்பாடும் இருவருக்கும் 147 ரூபாய் தான் ஆனது. நல்ல சாப்பாடு. சுவையாகவும் இருந்தது. நல்லவேளையாகக் காரமும் அதிகம் இல்லை. சாப்பிட்டு மேலே வந்து ஓய்வு எடுத்துக் கொண்டு நாலு மணி, ஐந்து மணி அளவில் கிளம்பி கோவிந்தராஜப் பெருமாள், அலமேலு மங்காபுரம், ஶ்ரீநிவாச மங்காபுரம் ஆகிய கோயில்களுக்குப் போகத் திட்டம். 

Friday, April 13, 2018

ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா! பயணம் 2

ரொம்ப முக்கியமான அவசியம் ஆன ஒரு விஷயத்தை நேற்றுப் பகிர மறந்து விட்டேன். கீழத் திருப்பதியில் ரயிலில் இருந்து இறங்கியதும் வெளியே செல்லவேண்டி படிக்கட்டுகளை நோக்கி நடந்தபோது கூட வந்த சிலர் படிக்கட்டுகளுக்குக் கொஞ்சம் முன்னாடியே லிஃப்ட் இருப்பதாகவும் அதில் செல்லலாம் என்றும் கூறினார். என்ன லிஃப்ட் இருந்து என்ன பயன்? இருக்கும் கூட்டமெல்லாம் அங்கே தானே செல்லும் என நினைத்துக் கொண்டே எதுக்கும் பார்க்கலாம் என்று போனோம். லிஃப்ட் இயக்குநரோடு அங்கே காத்திருந்தது. சின்ன வயசுக்காரங்க வந்தாலும் விரட்டி விட்டுடறாங்க. வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே லிஃப்ட். ஆகவே நாங்கள் லிஃப்டின் அருகே செல்லும் வரை காத்திருந்து எங்களை ஏற்றிக் கொண்டு மேலே கொண்டு விட்டதோடு அல்லாமல் கீழே இறங்கி முதல் நடைமேடைக்குச் செல்லும் லிஃப்ட் கொஞ்ச தூரத்தில் இருக்குனும் சொன்னாங்க.

கூட வந்தவங்க கொஞ்சம் வேக நடை நடந்ததால் அவங்க கிட்டேச் சொல்லி லிஃப்டைக் காத்திருக்கச் சொல்லிட்டு நாங்களும் சென்று லிஃப்டில் ஏறினோம். கீழே முதல் நடைமேடையில் வெளியேறும் வாசலுக்குக் கொஞ்சம் அருகே கொண்டு விட்டது. வெளியே வந்து நண்பருக்குத் தொலைபேசியில் முயன்றுவிட்டுப் பின்னர் பீமவிலாஸ் ஓட்டலில் லேசாக ஆகாரம் செய்து கொண்டு பின்னர் தான் அலைபேசியைச் சரி செய்து கொண்டு நண்பருடன் தொடர்பு கொண்டு மேலே வந்து வியாசராஜ மடத்தில் தங்கினோம். இதை இங்கே இப்போப் பகிரக் காரணமே நம்ம தெற்கு ரயில்வேயும் தாம்பரம், மாம்பலம், எழும்பூர் போன்ற இடங்களில் இது போன்ற லிஃப்டை அமைக்கலாம் என்னும் கருத்தைத் தெரிவிக்கத் தான். அதிலும் மாம்பலத்தில் இறங்கினாலோ, தாம்பரத்தில் இறங்கினாலோ ஏ.சி. பெட்டியிலிருந்து நடைமேடை முழுவதும் (சுமார் ஒன்றரை கிமீ) நடந்து வந்து பின்னர் படிகளில் பையையும் தூக்கிக் கொண்டு ஏறணும். போர்ட்டர் வைக்கலாம் எனில் அவங்க வேகத்துக்கு நம்மால் நடக்க முடியறதில்லை. அதோடு அவங்க கேட்பதும் கிட்டத்தட்ட நாம் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர ஆகும் பணம்!

கொஞ்சம் கருணை காட்டித் தெற்கு ரயில்வே முக்கிய ரயில் நிலையங்களில் இம்மாதிரி லிஃப்ட் வசதியைப் பயணிகளுக்கு முக்கியமாக மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் செய்து கொடுக்கலாம். எழும்பூரில் நடமாடும் படிக்கட்டுகள்(எஸ்கலேட்டர்) இருக்கின்றன தான்! ஆனால் அதில் எல்லோராலும் ஏற முடியவில்லை. தாம்பரத்திலும் இருக்கோ? என்றாலும் அதில் மாட்டிக் கொண்டு ஏறவோ இறங்கவோ முடியாமல் தவித்தவர்களின் அனுபவங்களைக் கேட்டால் அதில் செல்லத் தயக்கம் தான் ஏற்படுகிறது.
***************************************
வியாசராஜ மடத்தில் காலை நாலரை ஆனதும் ஊழியரைக் கூப்பிட்டுக் காஃபி வாங்கி வந்து கொடுத்த பின்னர் வெந்நீர் கொடுக்கும்படி சொன்னோம். அவரும் கொடுத்தார். பின்னர் மூத்த குடிமக்களுக்கான டோக்கன் கொடுக்கும் இடத்திற்கு ஐந்தரைக்குள் செல்லும்படி வற்புறுத்தினார். சரினு நாங்களும் குளித்து முடித்த பின்னர் கிளம்பிவிட்டோம். செல்ஃபோன் கட்டாயமாக எடுத்துச் செல்ல முடியாது என்பதோடு மேலே வந்ததிலிருந்து சிக்னல் கிடைக்காமல் பிஎஸ் என் எல் சுத்தமாக வேலை செய்யவும் இல்லை. ஆகவே ஊழியர் பிடித்துக் கொடுத்த டாக்சியில் சென்று டோக்கன் கொடுக்கும் இடத்தை அடைந்தோம். அங்கே சென்றால் எங்களுக்கு முன்னாடியே சுமார் 40 பேர்கள் இருந்தனர். டோக்கன் கொடுக்கும் இடம் ஒரு அஸ்பெஸ்டாஸ் ஷெட்டால் மூடப்பட்டிருந்தது. நான்கு கவுன்டர்கள் இருந்தன. வரிசையில் நிற்கக் கம்பி கட்டி இருந்தாலும் ஒரு சமயத்தில் சுமார் 30 பேர்களே நிற்கலாம். விமான நிலையங்களில் இமிக்ரேஷனுக்குக் காத்திருப்பது போல் காத்திருந்து இரண்டு இரண்டு பேராகவே செல்லலாம்.  அந்த ஷெட்டில் உட்கார நாற்காலிகள் இல்லை என்பதோடு காத்திருப்பவர்களும் ஷெட்டிற்கு வெளியே தான் காத்திருக்கணும். ஷெட் திறக்க ஆறரை மணி ஆகுமாம். அதுவரை வெளியே இருக்கும் சின்னக் கைப்பிடிச் சுவரில் தான் அமரணும். அதுவும் இடம் இருக்கும்வரை தான் கிடைக்கும். இடம் இல்லை எனில் வெளியே தான் நிற்கணும். எங்க அதிர்ஷ்டம் கொஞ்சம் இடம் கிடைக்கவே உட்கார்ந்து கொண்டோம்.

எவ்வளவோ செய்யும் சந்திரபாபு நாயுடு இதையும் கவனித்து எல்லோரும் அமரும்படி நாற்காலிகள் போடச் செய்யலாம். வரிசைக்கிரமமாக வருவதற்குரிய டோக்கனையும் கொடுத்துவிட்டால் மூத்த குடிமக்கள் வரிசையாகவும் வருவார்கள். மூத்த குடிமக்கள் அமைதியாகவே வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு உதவியாக என்னும் பெயரில் வரும் இளைஞர்கள்/வயது குறைந்தவர்கள் கூட்டம் தான் கொஞ்சம் தொந்திரவு கொடுக்கின்றனர். (இது குறித்துப் பின்னர்) ஆனால் ஷெட்டில் வரிசையாக நிற்பதில் எவ்விதப் பிரச்னையும் இல்லை. சரியாகக் காலை ஆறரை மணிக்கு தேவஸ்தான ஊழியர்கள் இருவர் வந்து அனைவருக்கும் காஃபி கொடுத்தார்கள்.  நல்ல சூடாகவும் நன்றாகவுமே இருந்த அந்தக் காஃபி குளிரில் வெளியே நின்றுகொண்டிருந்தவர்களுக்கு ஆறுதலாகவும் அமைந்தது. ஆறே முக்காலுக்கு ஷெட் திறந்து முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு ஊழியர்கள் நான்கு பேர் மூத்த குடிமக்களுக்கான டோக்கன்களைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.



படங்களுக்கு நன்றி கூகிளார்

லட்டுக்கான டோக்கனையுமே இங்கேயே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஒருத்தருக்கு நான்கு லட்டு என்றும் நான்குக்கும் சேர்த்து 70 ரூ என்றும் சொன்னார்கள். நாங்களும் எட்டு லட்டுக்கான பணம் கொடுத்து லட்டுகளுக்கும் சேர்த்து டோக்கன் வாங்கிக் கொண்டோம். டோக்கன் வாங்க ஆதார் கார்டு முக்கியத் தேவை. கணினியில் பொருத்தி இருக்கும் ஸ்கானிங் காமிரா மூலம் ஆதார் எண்ணைப் போட்டு நம்முடைய கண்களைச் சோதனை செய்து திருப்தி அடைந்தால் மட்டுமே டோக்கன். சிலருக்கு ரேகை சோதனையும் உண்டு. எங்களைக் காமிரா மூலம் பார்த்துவிட்டே டோக்கன் கொடுத்துவிட்டனர்.  ஒரு அம்மா ஏற்கெனவே இருமுறை (எப்படியோ) வந்து விட்டு மூன்றாம் முறையும் வர அதைக் கண்டு பிடித்து அவரை ஓரம் கட்ட, அவர் கத்திக் கொண்டே இருந்தார். டோக்கன் பெற்றவர்கள் அங்கே வந்த தேவஸ்தான இலவசச் சிற்றுந்தில் ஏறிக் கொண்டு தரிசனம் செய்யக் காத்திருக்க வேண்டிய இடத்தை நோக்கிச் சென்றார்கள். சிற்றுந்தில் சுமார் 20 பேர் அமர்ந்த வண்ணம் பயணிக்கலாம். ஆனால் சிற்றுந்து ஓட்டுநர்களும் சரி, மக்களும் சரி, அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறவே நாங்க செய்வதறியாமல் யோசித்தோம்.

அதற்குள்ளாக அங்கே இரண்டு பாட்டரி கார் வர அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் எனப் போட்டிருக்கவே மீண்டும் யோசித்தோம். சிலர் போய் ஒரு காரில் அமரவே அந்தக் காரோட்டியும் ஓட்டிக் கொண்டு சென்றதோடு எங்களையும் இன்னொரு காரில் அமரச் சொன்னார். எங்கள் கார் ஓட்டி வரக் கொஞ்சம் தாமதம் ஆனது. வந்ததும் அமர்ந்திருந்த ரங்க்ஸைப் பின்னால் போய் உட்காரச் சொல்ல, நான் கொஞ்சம் கலங்கினேன். ஆனால் பின்னால் இருந்தவர் அவருக்கு இடம் கொடுத்தார்.  எங்கள் காரும் கிளம்பியது. நாங்களும் இன்னும் சிலரும் முட்டாள் தனமாகச் செருப்பை அணிந்து கொண்டு வந்து விட்டோம். (ஆனால் அது எவ்வளவு புத்திசாலித் தனம் என்பது திரும்பும்போது தான் புரிந்தது.) ஆகவே செருப்புக்களை எங்கே விடுவது எனக் குழம்பியபோது ஓட்டுநர் எங்களை இறக்கி விட்ட இடத்தில் அங்கேயே மர நிழலில் விடச் சொன்னார். செருப்புக்கள் அணிந்து சென்றவர்கள் அங்கேயே விட்டுவிட்டு உள்ளே தரிசனத்துக்குச் செல்ல வேண்டிய பாதையில் சென்றோம். உள்ளே முதல் கூண்டு வந்தது. எங்களுக்கு முன்னால் 100,150 பேர் வந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காலை உணவோடு காஃபியும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

நாங்களும் காலை உணவு வாங்கிக் கொண்டோம். பொங்கல் தான் காலை உணவு. சுமாராக இருந்தாலும் நல்ல சூடாக இருந்தது. எல்லோருக்கும் எத்தனை முறை கேட்டாலும் கொடுத்தார்கள். முதலில் கொடுத்ததே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஏற்கெனவே இரண்டு காஃபி சாப்பிட்டு விட்டதால் மீண்டும் காஃபி வேண்டாம், ஒன்பது மணிக்குப் பால் கொடுத்தால் வாங்கிக்கலாம் என்று முடிவு செய்தோம். அந்தக் கூண்டில் சென்று நாங்கள் அமரும்போது காலை மணி ஏழரை ஆகி இருந்தது. அங்கேயே கழிவறை, குடிநீர் வசதி எல்லாம் இருந்தது. தண்ணீர் அலறிக் கொண்டிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்தது வெளிப்பிரகாரத்தில் சந்நிதியை ஒட்டிய ஒரு கூண்டு. எங்களுக்குப் பின்னால் உயரத்தில் இன்னொரு கூண்டும், அதன் பக்கம் இன்னொரு கூண்டும் இருந்தது. மெல்ல மெல்ல எல்லாக் கூண்டுகளும் நிரம்பிக் கொண்டிருந்தன. தாமதமா வந்த பலரும் பொங்கல் வாங்கும் சாக்கில் முன்னால் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்து அங்கேயே நுழைவாயில் அருகே இருப்பதைப் பார்த்ததும் அங்கேயே தங்கி விட்டனர். இப்படிச் சுமார் நூறு பேருக்கு மேலே அங்கே வந்து விட்டனர்.

ஒன்பது மணிக்குப் பால் கொடுக்க ஆரம்பித்ததும் இளைஞர் கூட்டம் எல்லாம் அங்கே சென்று ஒரே நெரிசல். அதிலும் ஒரு குடும்பத்தில் மாமனார், மாமியார் வந்தால் அவங்களுக்கு உதவியாகப் பெண், மாப்பிள்ளை அல்லது பிள்ளை, மருமகள் என்று வந்திருந்ததால் மொத்தக் குடும்பமே குழந்தைகளோடு வந்திருந்தனர். ஒவ்வொருத்தருக்கும் இரண்டு குழந்தைகள் என்ற கணக்கில் இருந்ததால் பால் வாங்க அடிதடி, கூட்ட நெரிசல், நான் போகவே இல்லை. பாலே வேண்டாம்னு விட்டுட்டேன். சரியாக ஒன்பதே முக்காலுக்குக் கூண்டைத் திறந்தார்கள். உடனே வந்தது பாருங்க ஒரு கூட்டம். பின்னால் இருந்த சிறுவயதுக்காரர்கள் எல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு நாற்காலிகளின் மேல் ஏறி அதைத் தாண்டிக் கொண்டு முண்டி அடித்து முன்னே சென்றார்கள். இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்தாலும் எங்களால் போக முடியலை. ஊழியர்கள் முதல் கூண்டைத் திறந்து அனைவரையும் அனுப்பிய பின்னர் இரண்டாம் கூண்டைத் திறந்திருக்கணும். ஆனால் இரண்டாம் கூண்டிலிருந்தே கழிவறை செல்லவோ, குடிநீருக்குச் செல்லவோ முடியும் என்பதால் அது திறந்தே இருந்தது. வேறு வழியில்லை. ஆகவே எல்லோரும் வர வசதியாகி விட்டது. நடுவில் உள்ள கூண்டுக்காரர்களும் ஏறிக் குதித்து முன்னேற நாங்கள் கொஞ்சம் பின் தங்கியே சென்றோம்.

மூத்தகுடிமக்களிடம் கடுமை காட்டக் கூடாது என்றும், கையைப் பிடித்துத் தள்ளவோ, ஜரிகண்டி சொல்லவோ கூடாது என்னும் கடுமையான கட்டளை இருப்பதால் யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆகவே கூட்டத்தினருக்கு இது வசதியாகப் போகிறது. என்றாலும் கொஞ்ச தூரம் நடந்ததுமே சந்நிதி வந்து விடுவதால் ஒண்ணும் பிரச்னை இல்லை. என்ன ஒரு பத்து நிமிடம் போல் தாமதமாக தரிசனம் செய்வோம். அவ்வளவு தான். சந்நிதிக்கு அருகே வரும்போது ஷிர்டியில் இருப்பது போல் மூன்று வரிசைகளாக விடுகின்றனர். அதோடு எங்குமே ஏறவோ இறங்கவோ படிகளே கிடையாது என்பதும் என் போன்றோருக்கு ஒரு சௌகரியம். எல்லாம் சாய்வான பாதைகளே! ஆகவே ஏறவோ, இறங்கவோ கஷ்டப்படவே வேண்டாம்.  சந்நிதிக்குச் செல்ல வரிசைகளில் காவலர்கள் பிரித்து விடுகின்றனர். என்னை நடுவரிசைக்குச் செல்லும்படி பெண் காவலர் அனுப்ப நம்ம ரங்க்ஸ் இங்கே வலப்பக்கம் வா, அப்போத் தான் பெருமாள் தெரிவார் என்று சொல்லிவிட்டார். ஆனால் நடுவில் போனால் தான் பெருமாளுக்கு நேரே நின்று பார்க்க முடியும். வலப்பக்கமோ, இடப்பக்கமோ போனாலும் பெருமாள் தெரிந்தாலும் நடுவில் நின்று பார்ப்பது போல் வராது!

முன்னெல்லாம் உள்ளே அர்த்த மண்டபத்துக்குள்ளே கூட்டமாய்ப் போய் தரிசனம் செய்ய வேண்டி இருந்தது. இப்போ துவார பாலகர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே (மதுரை மீனாக்ஷியை தரிசனம் செய்வது போல்) பார்க்க வேண்டும். ஆனாலும் பின்னால் சாய்வுப்  பாதை உயரமாக இருப்பதால் நாம் தூரத்திலிருந்து போகும்போதே தரிசனம் செய்து கொண்டே போகலாம். சாய்வுப் பாதை போகப் போகக் கீழே இறங்குவதால் யாரும் மறைப்பார்கள் என்றெல்லாம் இல்லை. அதோடு நின்று ஒரிரு வினாடிகள் பார்ப்பதற்கும் காவலர்கள் மறுப்புச் சொல்வதில்லை. கையைப் பிடித்துத் தள்ளுவதில்லை. கடைசி முறையாகப் பத்து வருடங்கள் முன்னே போனபோது காவலர்கள் பிடித்துத் தள்ளியதில் தான் சந்நிதிக்கு உள்ளேயே விழுந்தேன். இப்போ அதெல்லாம் இல்லை. பணிவாக வேண்டிக் கொள்கின்றனர்.