எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 25, 2020

விஜய தசமி:

 விஜய தசமி: பத்தாம் நாளான இன்று அம்பிகை ராஜராஜேஸ்வரியாக அலங்கரிக்கப்படுகிறாள். வெள்ளைப் பட்டாடை தரித்து வெண் தாமரையில் அமர்ந்திருக்கும் சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். மூன்று தேவியரும் ஒன்று சேர்ந்த விஜயா என்ற பெயரிலும் தேவி அலங்கரிக்கப்படுவாள். இன்றைய தினம் ஒன்பது நாட்கள் வழிபட்ட அனைத்துப் பெண் குழந்தைகளையும் அழைத்து அனைவருக்கும் வழிபாடு நடத்திப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றைக் கொடுக்கலாம். மஞ்சள் பொடி சேர்த்த வாசனை மலர்களைக் கோலத்தில் போட்டு அம்பிகையை அமர்ந்த திருக்கோலத்தில் அமர்த்தி அனைத்து வாசனை தரும் மலர்களாலும் அர்ச்சித்து, வெற்றித்துதிகள், மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம், லலிதா நவரத்ன மாலை, துர்கா சப்த சதீ ஆகிய ஸ்லோகங்களைச் சொல்லித் துதிக்கலாம். இன்றைய காலை நிவேதனத்தில் தயிர் சாதம் முக்கிய இடம் பெறும்.

விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கியஸ்வரூபிணியாகத் தோற்றமளிக்கும் அம்பிகை அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முஹூர்த்தத்திலேயே அம்பு போட்டு அசுரர்களை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தமாகவும் நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய முஹூர்த்தமாகவும் சொல்லப்படுகிறது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்ல நேரமே இன்றளவும் அம்பு போடுதல் என்னும் பெயரில் பத்தாம் நாளான விஜயதசமி அன்று ஒவ்வொரு வருடமும் எல்லாக் கோயில்களிலும் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி அனைவராலும் கொண்டாடப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதி தேவி, ஜின ஐஸ்வர்யா, ஜின வாணி, ஆகமஸ்வரூபி என அழைத்தால் பௌத்தர்களோ மஹா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணா தாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பௌத்தர்கள் சொல்லுவது உண்டு. சரஸ்வதி பூஜையன்று வழிபடும் புத்தகங்கள், இசைக்கருவிகள், ஆயுதங்களை விஜயதசமி அன்று எடுத்துப்பயன்படுத்துவது மிகவும் சிறப்பு. விஜய தசமி அன்று சின்னக் குழந்தைகளைப் பள்ளியிலே சேர்ப்பதும் உண்டு. ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப்பட்ட தரையில் நெல் பரப்பி, அதில் “ஹரி ஓம்” என எழுதுவதற்குக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ உதவக் குழந்தை எழுதிப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படும்.

ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞான சக்தி என்றெல்லாம் போற்றப்படும் சரஸ்வதியை சகல கலைகளுக்கும் அதிபதியான சாரதையாகவும் துதிப்பது உண்டு. ஆதி சங்கரர் சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்து சாரதையாகப் பிரதிஷ்டை செய்தார். அத்தோடு கூட ஸ்ரீசக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். மூன்று தேவிகளும் இவளே ஆவாள். கல்வி, ஞானம் தரும் சரஸ்வதி/சாரதை,  தனம் தரும் லக்ஷ்மியும் இவளே! வீரம் செறிந்த துர்கையும் இவளே! இவளைக் குறித்தே ஒவ்வொரு வருடமும் இந்த சாரதா நவராத்திரியைக் கொண்டாடுகிறோம்.

கொலு வைத்திருப்பவர்கள் இன்று இரவு அம்பிகைக்கு பால், பழம் வெற்றிலை பாக்குடன் நிவேதனம் செய்துவிட்டுப் பின்னர் ஆரத்தி எடுத்து முதல் படியில் அல்லது ஏதேனும் ஒருபடியில் உள்ள பொம்மையைப் படுக்க வைக்க வேண்டும். மறுநாள் செவ்வாய்க்கிழமையாக இருப்பதால் அன்றைய தினம் பொம்மைகளை எடுத்து வைக்கக் கூடாது. புதன்கிழமை எடுத்து வைக்கலாம்.


Saturday, October 24, 2020

நவராத்திரி ஒன்பதாம் நாள்

சக்திகள் நால்வரைப் பார்த்தோம். இனி மற்றவர்கள்.


படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினமலர்

நாராயணி: இவளை வைஷ்ணவி என்றும் சொல்லுவார்கள். சங்கு, சக்கரங்களை ஏந்திய வண்ணம் முன்னிரு கரங்களால் அபய ஹஸ்தம் காட்டிப் பசுமை நிறத்தவளாய்ப் பரந்தாமனின் அனைத்து அம்சங்களுடனும் கருட வாஹனத்தில் காட்சி தருவாள். அனைவரையும் பாதுகாக்கும் இவளிடம் நலமும், வளமும் பெற வேண்டிக் கொள்ளலாம்.


படத்துக்கு நன்றி கௌமாரி

கௌமாரி: கந்தனின் அம்சமான இவள் அவன் பெயராலேயே கௌமாரி என அழைக்கப்படுகிறாள். கந்தனைப் போலவே மயில் வாஹனத்தில் ஜடாமகுடம் தரித்து நான்கு கரங்களுடன் சக்தி ஆயுதம், வஜ்ராயுதம் தாங்கிக் காட்சி தருவாள்.


படத்துக்கு நன்றி கூகிளார்

சாமுண்டி கிட்டத்தட்டக் காளி/காலியின் அம்சமான இவள் கரிய நிறத்தவள். சண்டனையும் முண்டனையும் அழிக்க அன்னையால் தோற்றுவிக்கப்பட்டவள். முக்கண் உடையவள். புலித்தோலை ஆடையாக அணிந்திருப்பாள்.கத்தி, சூலம், கபாலம் ஆகியவற்றை மூன்று கரங்களில் ஏந்தி ஒரு கையால் அபய ஹஸ்தம் காட்டுவாள். எத்தகைய கொடிய துன்பத்தையும் அழித்துப் போக்க வல்லவள்.

இன்றைய தினம் அம்பிகையை “சுபத்ரா” வாகப் பாவித்து வணங்க வேண்டும். இன்னும் சிலர் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள். 


காமேஸ்வரி படத்துக்கு நன்றி கூகிளார்

ஆயுதங்களால் ஆன கோலத்தைப் போட வேண்டும். வாசனை திரவியங்களாலும் ஆயுதக் கோலம் போடலாம். கோலமாவினாலும் போடலாம்.  பத்து வயதுப் பெண் குழந்தையை “சுபத்ரா”வாகப் பாவித்து அலங்கரித்து வழிபட்டுப் பாத பூஜை செய்து வெண்ணிற மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். மல்லிகை, நந்தியாவட்டை ஆகிய பூக்கள் உகந்தவை. வாசனையை அள்ளித்தரும் மரிக்கொழுந்தும், துளசியும் கூட இன்றைய தினத்துக்கு உகந்தவை. குழந்தைக்குப் பிடித்தமான ஆடை, ஆபரணங்களை வாங்கிக் கொடுக்கலாம். லலிதா நவரத்ன மாலை, சரஸ்வதி துதி ஆகியவற்றால் துதித்து லக்ஷ்மி அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யலாம். இன்றைய தினம் புத்தகங்கள், ஆயுதங்கள் தவிர இசைக்கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மோட்டார் கார், சைகிள், இரு சக்கர வாஹனங்கள் அனைத்தும் வழிபாடு செய்யப்படும். சிலர் மறுநாள் விஜயதசமி அன்றும் செய்வார்கள். முக்கியமாக இன்றே சரஸ்வதிக்கு உரிய நாளாகக் கருதி சரஸ்வதி பூஜை செய்வதால், புத்தகம், படிப்பு, எழுத்து சம்பந்தப்பட்ட பொருட்களுக்குச் சந்தனம், குங்குமம் இட்டுப் பட்டுத்துணி சுற்றிப் பூஜையில் வைத்து மறுநாள் விஜயதசமி அன்று காலை எடுத்து நல்ல நேரம் பார்த்துக் கற்பூர ஆரத்தி காட்டிப் படிப்பார்கள். ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜையன்று காலை நிவேதனத்தில் பருப்புப் பாயசம், அல்லது தேங்காய்ப் பாயசம், சுகியம், அப்பம், உளுந்து வடை ஆகியன முக்கியமானவை. சிலர் எள்ளுருண்டையும் பண்ணுவார்கள். மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல்.

பாயச வகைகள் முன்னர் எழுதி இருக்கேன். அவற்றில் உள்ளபடி ஏதேனும் ஒரு பாயசம் பண்ணலாம். 

சுகியம்  இதற்கு அரிசி மாவைப் பொடியாகத் தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு சின்னக் கிண்ணம் அரிசி மாவிற்கு ஒரு கிண்ணம் உளுத்தம்பருப்பு. களைந்து ஊற வைத்துக் கொடகொடவென இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொண்டு அரிசி மாவைப் போட்டு உப்புச் சேர்த்து அரை மணி நேரம் வைத்து விடவும்.

தேங்காய்த் துருவலில் வெல்லம் சேர்த்துக் கிளறி ஏலப்பொடி சேர்த்துத் தேங்காய்ப் பூரணம் பண்ணவும். பூரணத்தைத் தேவைக்கு ஏற்பக் குறைந்தது ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்காவது உருட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு உருட்டிய பூரணத்தைத் தயாராக இருக்கும் மாவில் போட்டு நாலாபக்கமும் மாவு பூசினாற்போல் இருக்கும்படி செய்து அதை எடுத்துக் கொதிக்கும் எண்ணெயில் போடவும். எண்ணெய் ரொம்பக் காய்ந்தால் சீராக வேகாது என்பதால் எண்ணெய் காய்ந்ததுமே அடுப்பைத் தணித்துக் கொள்ளவும். இம்மாதிரி எல்லாவற்றையும் போட்டு எடுக்கவும்.

அப்பம்: பச்சரிசி+கடலைப்பருப்பு ஒரு மேஜைக்கரண்டி+கோதுமை ரவை ஒரு மேஜைக்கரண்டி. கழுவி ஊற வைக்கவும். மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும். அரைக்கையிலேயே வெல்லத்தூள், ஏலக்காய்ப்பொடி சேர்க்கலாம். பின்னர் எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி விட்டு நன்கு கனிந்த வாழைப்பழம் இருந்தால் அதைப் போட்டு மாவை நன்கு கலக்கவும். பின்னர் அப்பக்காரையில் எண்ணெய் விட்டு அதை அடுப்பில் வைத்துச் சூடு பண்ணி ஒவ்வொரு குழியிலும் மாவை விட்டு இருபக்கமும் வேகவிட்டு எடுக்க வேண்டும். அப்பக்காரை இல்லை எனில் மாவை சுகியம் செய்த எண்ணெயிலேயே போட்டு எடுக்கலாம். ஒரு சின்னக்குழிக்கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஒவ்வொன்றாகப் போட்டு இரு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கலாம்.

உளுந்து வடை: கால்கிலோ உளுத்தம்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு ஆகியவற்றைக் கழுவி ஊற வைக்கவும். பொதுவாகப் பண்டிகைகளுக்கு முப்பருப்பு வடை தான் பண்ணுவார்கள். தனி உளுந்து வடை பண்ணுவதில்லை. ஸ்ராத்தம் போன்ற அபர காரியங்களிலேயே தனி உளுந்து வடை பண்ணுவார்கள். பருப்புக்களை ஊற வைத்துக்கொண்டு பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் அவரவர் காரத்துக்கு ஏற்பச் சேர்த்துக் கொண்டு உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொண்டு வடையாகத் தட்டவேண்டும். இந்தக் காரம் வேண்டாம் மிளகு காரம் தான் வேண்டுமெனில் முதலில் உளுந்தை நன்கு அரைத்த பின்னர் மிளகு பொடி, உப்புச் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். இந்த மாவில் பெருங்காயம், கருகப்பிலை சேர்க்க வேண்டாம். மிளகாய் போட்டு அரைத்த மாவில் பெருங்காயம், கருகப்பிலை சேர்க்கலாம். எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு ஒரு வாழை இலையில் மாவை உருட்டிப் போட்டுத் தட்டை போலத் தட்டி நடுவில் ஓட்டை போட்டுக் கொண்டு எண்ணெயில் போட்டு இருபக்கம் சிவக்க வேகவிட்டு எடுக்க வேண்டும்.

கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல்: கொண்டைக்கடலையை முதல்நாளே ஊற வைக்க வேண்டும் மறுநாள் நாலைந்து முறை கழுவி விட்டுக் குக்கரிலே உப்புச் சேர்த்துக் குழைய வேகவிடவும். பின்னர் வடிகட்டி வைக்கவும். ஓர் வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் கொண்டு காயந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயப் பொடி, கருகப்பிலை போட்டுப் பொரித்துக் கொண்டு வெந்த கொண்டைக் கடலையைப் போட்டுக் கிளறவும். இதற்குக் கட்டாயமாய் மி.வத்தல்+கொத்துமல்லி வறுத்து அரைத்த பொடியைச் சேர்க்கவும். தேங்காய்த் துருவல் போடவும். அல்லது தேங்காயைக் கீறிச் சேர்க்கவும். நன்கு கலந்ததும் சுண்டல் விநியோகத்துக்குத் தயார்.


Friday, October 23, 2020

நவராத்திரி எட்டாம் நாள்


நாரசிம்ஹி படத்துக்கு நன்றி மஹாபெரியவா வலைப்பக்கம்.

இன்றைய தினம் அனைத்து சக்திகளும் சேர்ந்து அன்னையுடன் அசுரனை எதிர்த்துப்  போரிடுவார்கள். அம்பிகை ரக்தபீஜனை வதம் செய்த திருக்கோலத்தில் காட்சி அளிப்பாள். இவளை நாரசிம்ஹி அல்லது துர்கையாக வழிபடுவார்கள். இந்தப் போரில் அன்னைக்கு உதவிய அனைத்து சக்திகளையும் வழிபடுதல் விசேஷமானது.



பிராம்ஹி படத்துக்கு நன்றி விக்கி பீடியா

பிராம்ஹி  பிரம்மனுக்கு உரிய சக்தியாக ப்ராம்ஹி. நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் உகந்தது. ருத்ராக்ஷ மாலை தரித்து ஹம்ச வாஹனத்தில் அமர்ந்த வண்ணம் முன்னிரு கரங்களால் அபய ஹஸ்தம் காட்டிப் பின்னிரு கரங்களில் கமண்டலமும் அக்ஷமாலையும் தரித்திருப்பாள். சகல கலா வல்லியான இவளைத் துதித்தால் அனைத்துக் கலைகளும் கை கூடும்.




வாராஹி படத்துக்கு நன்றி கூகிளார்

வாராஹி, மஹா விஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் அம்சமாய்த் தோன்றியவள். அம்பிகையின் படைத்தளபதி இவளே! தண்டினி எனவும் அழைக்கப்படுவாள். மேக வண்ணத்திலானவள். இவளுக்கு உகந்த நிறம் கறுப்பு. வராஹ முகத்தோற்றத்துடன் கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி முன்னிரு கரங்களால் அபய ஹஸ்தம் காட்டுவாள். சிம்ஹ வாஹினியான இவளை வணங்குவோர்க்குச் சிக்கல்கள், இன்னல்கள், இடையூறுகள் நீங்கும்.



மாகேஸ்வரி படத்துக்கு நன்றி கூகிளார்

மாகேஸ்வரி! முக்கண்ணனின் சக்தியான இவளும் முக்கண்கள் கொண்டவள். ஈசனைப் போலவே ஜடாமகுடத்துடன், மான், மழுவுடன்  ரிஷப வாஹனத்தில் காட்சி கொடுப்பாள். வெண்மை உகந்த வண்ணம். மங்களங்களை அள்ளித்தரும் தேவி இவள்.


இந்திராணி படத்துக்கு நன்றி கூகிளார்

இந்திராணி: இந்திரனின் சக்தியான இவள் மாஹேந்திரி என்னும் பெயரும் கொண்டவள். தங்கம் போல் மிளிரும் பொன்னிற மேனி கொண்ட இவள் சக்தி ஆயுதமும்,  வஜ்ராயுதமும் தாங்கி வெள்ளை யானை மேல் அமர்ந்த வண்ணம் அபயஹஸ்தம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குவாள்.



துர்கை படத்துக்கு நன்றி கூகிளார்

இன்று ஒன்பது வயதுப் பெண் குழந்தையை “துர்கை”யாகப் பாவித்து வழிபட வேண்டும். பத்மக் கோலம் போடலாம். அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப்பூக்கோலமும் போடலாம். முல்லை மலர்கள், தாமரை மலர்கள், மருதாணிப்பூக்கள், செண்பக மலர்கள், சாமந்திப்பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சிக்கலாம். எல்லா நிறங்களும் கலந்த வஸ்திரங்கள் கொடுக்கலாம். கொலுவிலும் இன்று சக்திகள் புடைசூழ வீற்றிருக்கும் துர்கையாக அம்பிகையை அலங்கரிக்கலாம். சக்திகள் புடை சூழ மலர் அம்பு ஏந்தி அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் இந்த அம்பிகையைத் துதித்தால் பகை ஒழியும். சத்ரு நாசம் ஏற்படும். மனதில் தைரியமும் செயல் திறனும் அதிகரிக்கும். அத்தகைய வல்லமையைத் தருவாள் இந்த மஹாசக்தி!

வேர்க்கடலைச் சுண்டல் மாலையில் பண்ணலாம். காலையில் தேங்காய்ச் சாதம் அல்லது எள் சாதம் பண்ணலாம். இன்றைய எட்டாம் நாளும் சனிக்கிழமையாக இருப்பதால் பலரும் எள் சாதமே பண்ணுவார்கள். இல்லை எனில் பால் பாயசம் செய்யலாம். அஷ்டமி திதியான இன்று தான் சரஸ்வதி ஆவாஹனம் செய்யப்படுகிறது. இன்றும் அபிராமி அந்தாதி, சரஸ்வதி துதி, சகலகலாவல்லி மாலை, லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவை சொல்லி வழிபடலாம். தேங்காய்ச் சாதம், எள் சாதம் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கேன்.

பால் பாயசம். ஒரு சின்னக் கிண்ணம் அரிசியைக் களைந்து நெய்யில் வறுத்துக் கொண்டு அரை லிட்டர் பாலில் குழைய வேக விடவும். பால் பாயசத்துக்கு என முதல் நாளே ஒரு லிட்டர் பால் வாங்கிக் குறுகக் காய்ச்சி வைக்க வேண்டும். பால் சிவந்த நிறம் வந்ததும் அதில் உள்ள ஆடைகளோடு அப்படியே எடுத்து வைக்க வேண்டும். குழைந்து வெந்த அரிசியில் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரையைச் சேர்க்கவும்.ஒரு கிண்ணம் சர்க்கரை வரை சேர்க்கலாம். பின்னர் குறுகக் காய்ச்சிய பாலைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பாயசம் அடியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பாயசம் கெட்டிப் பட்டதும் பாலில் கரைத்த குங்குமப் பூச் சேர்த்து, தேவை எனில் ஏலக்காய்ப் பொடியும் சேர்த்துக் கீழே இறக்கவும். முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா ஆகியவற்றை மெலிதாகச் சீவி வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.

வேர்க்கடலைச் சுண்டல்: வேர்க்கடலையை முதல் நாளே ஊற வைக்கவும். இரண்டு, மூன்று முறை நன்கு கழுவி நீரை மாற்றி வைக்கவும். சொத்தைக் கடலை இருந்தால் எடுத்து விடவும். எல்லாவற்றுக்குமே  இப்படிச் செய்யலாம். மறுநாள் மீண்டும் நன்கு கழுவி குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும். வெந்த வேர்க்கடலையை வடிகட்டி வைக்கவும். பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, மி.வத்தல், கருகப்பிலை சேர்த்துக் கொண்டு வெந்த வேர்க்கடலையையும் கொட்டிக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்க்கவும். காரம் அதிகம் தேவையானால் கொஞ்சம் சாம்பார்ப் பொடி அல்லது மி.வத்தல்+கொத்துமல்லி விதை வறுத்த பொடியைச் சேர்க்கவும். விநியோகத்துக்குச் சுண்டல் தயார்!


Thursday, October 22, 2020

நவராத்திரி ஏழாம் நாள்

படத்துக்கு நன்றி விக்கி சோர்ஸ்

நவராத்திரி வெள்ளிக்கிழமைக்குரிய தேவி கூஷ்மாண்டா ஆவாள். கூஷ்மம் என்பது முட்டை, அண்டம். அண்டம் என்பது இந்தப் பிரபஞ்சத்தைக் குறிக்கும். கூஷ்மம் ஆகிய முட்டை வடிவில் இந்தப் பிரபஞ்சம் தோன்றியது இந்த தேவியிடம் இருந்தே என்பதால் இவளைக் கூஷ்மாண்டா என அழைக்கிறோம். தீவினைகளைப் போக்கி நல்வினைகளை உருவாக்கும் இந்த தேவியைத் துதித்தால் கண் திருஷ்டிகளை நீக்கித், தீய சக்திகளைத் தன் பக்தர்களை அணுகாமல் பாதுகாக்கிறாள். இதை வைத்தே பூஷணிக்காயில் குங்குமம் தடவி நட்ட நடு ரோட்டில் போட்டு திருஷ்டி கழிய என உடைக்கிறோம். இதன் மூலம் தெருவில் நடமாடும் அனைவர் கால்களையும் கூட உடைக்கிறோம் என்பது தெரியவில்லை நமக்கு. திருஷ்டிப் பூஷணிக்காயை ஓர் ஓரமாக உடைத்துப் போட்டு விட வேண்டும். பூஷணிக்காயையும் கூஷ்மாண்டம் என்பார்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்குரிய நாளான இன்று நமக்குச் சுக்கிரதசை அடிக்க வேண்டுமெனில் இந்த தேவியைத் துதிக்க வேண்டும். சுக்கிரன் மகிழ்ந்து எல்லாச் செல்வங்களையும் அருளுவார். தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துப் பாதுகாப்பாள். பகலும் இரவும் சந்திக்கும் அற்புத வேளையில் தன் இடக்கால் விரலால் ஈசன் வரைந்த கோலம் சப்த ஒலிக் கோலம். தாண்டவம் சந்தியா தாண்டவம். இந்தச் சமயம் தோன்றியவளே கூஷ்மாண்டா ஆவாள்.

நவராத்திரி ஏழாம் நாள் என்பதோடு கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்குரிய நாட்கள் என ஏற்கெனவே பார்த்தோம். ஆகையால் இன்றைய தினம் கொலுவில் அம்பிகையை மஹாசரஸ்வதியாக அலங்கரிக்கலாம்.



படத்துக்கு நன்றி கூகிளார்

 ஸ்ரீவித்யா பீஜாக்ஷரியான அன்னை சண்டமுண்டர்களை அழித்த கோலத்தோடு மிகவும் வீரியம் கொண்டு காட்சி அளிப்பாள். இவளைத் தங்க சிங்காதனத்தில் வீணையைக் கையில் ஏந்தி அமர்ந்திருக்கும் “சாம்பவி”யாக வழிபட வேண்டும்.  வெண் தாமரை மலரில் வீணை வாசிக்கும் கோலத்தில் அமர்ந்திருக்கும் இவளை வெண்ணிற மலர்களால் அர்ச்சிக்கலாம்.    

எட்டு வயதுப் பெண் குழந்தையை “சாம்பவி”யாக நினைத்து ஆவாஹனம் செய்து வெண்பட்டு வஸ்திரம், வெண்ணிற மல்லிகை மலர்கள், வெள்ளியில் ஆன ஆபரணங்கள் கொடுத்து உபசரித்து வெண் தாமரைப்பூ, மல்லிகை, முல்லை, தாழம்பூ ஆகிய வெண்ணிறம் அல்லது பழுப்புக் கலந்த வெண்ணிறப் பூக்களால் அர்ச்சித்து வழிபடலாம். இவளாலேயே மழை பொழிந்து நீர் வளம், நிலவளம் ஏற்படும்.

திட்டாணிக் கோலம் போடலாம். செண்பகப்பூக்கள், ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நறுமணம் மிக்க மலர்களால் வட்டவடிவமான கோலமும் போடலாம். அபிராமி அந்தாதி, சரஸ்வதி துதி ஆகியவற்றால் அன்னையைத் தொழுது வணங்கலாம். 

இன்றைய தினம் வெண்பொங்கல் குழைய வேகவைத்துப் பண்ணி நிவேதனம் செய்யலாம். அல்லது காய்கள்+பருப்பு+அரிசி கலந்த கதம்பச்சாதமும் பண்ணலாம். இன்றைய தினம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல் பண்ணலாம். ஆனாலும் நவராத்திரி வெள்ளிக்கிழமைகளில் புட்டுப் போடுவதே விசேஷம்.

வெண் பொங்கல்: ஒரு கிண்ணம் அரிசியோடு அரைக்கிண்ணம் பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்துக் கொள்ளவும். வேகும்போது ஒரு கிண்ணம் பால் சேர்க்கலாம். வெந்து வரும்போது தேவையான உப்புச் சேர்த்து மஞ்சள் பொடியும் சேர்க்கவும். பின்னர் பக்கத்தில் இன்னொரு அடுப்பில் ஒரு கடாயில் இரண்டு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றிக் கொண்டு மிளகு இரண்டு தேக்கரண்டி, ஜீரகம் இரண்டு தேக்கரண்டி, இஞ்சி பொடியாக நறுக்கியது இரண்டு தேக்கரண்டி போட்டுக் கருகப்பிலையும் போட்டுப் பொரித்துப் பொங்கலில் ஊற்றவும். முந்திரிப்பருப்பு இருந்தால் அதையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம். சுவையான வெண்பொங்கல் தயார். 

கதம்பச் சாதம்: அரிசியையும் பருப்பையும் நன்கு வேக வைத்துக் கொண்டு ஓரளவுக்குக் குழைந்து வரும்போது ஒரு கிண்ணம் புளியைக் கரைத்து எடுத்த சாறை வெந்து கொண்டிருக்கும் அரிசியில் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். இன்னொரு அடுப்பில் எல்லாக் காய்களையும் கொஞ்சம் வதக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். காய்கள் வெந்ததும் வெந்து கொண்டிருக்கும் சாதத்தில் சேர்த்துக் கிளறவும்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அதில் மிளகாய் வற்றல், கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக் கொண்டு வறுத்த தேங்காய்த் துருவலோடு சேர்த்துப் பொடிக்கவும். தேவையான பொடியை வெந்து கொண்டிருக்கும் சாதத்தில் போட்டுக் கலக்கவும். பச்சை மொச்சை, மற்றும் பருப்புகள் கிடைத்தால் அவற்றைச் சாதம் வேகும்போது சேர்க்கலாம். கீரை வகைகளையும் சேர்க்கலாம். எல்லாம் சேர்த்து நன்கு கிளறிக் கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு, மிளகாய் வற்றல் ஒன்று, கருகப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொண்டு சாதத்தில் சேர்க்கவும். பிடித்தமானால் கொத்துமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். ஏதேனும் ஒரு தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.

வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல்: கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைத்துவிட்டு மறுநாள் மாலை 3 மணி அளவில் நன்கு கழுவிக் குக்கரில் உப்புச் சேர்த்துக் குழைய வேக வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருகப்பிலை சேர்த்துக் கொண்டைக்கடலையையும் போட்டுக் கிளறவும். மிளகாய் வற்றல்+கொத்துமல்லி விதைப் பொடி இருந்தால் அதையும் போட்டுத் தேங்காய்த் துருவலோடு சேர்த்துக் கிளறவும். சிலருக்குத் தேங்காய்ப் பல்லுப் பல்லாகப் போட்டால் பிடிக்கும். இது அவரவர் வழக்கப்படி செய்யவும். பின்னர் சுண்டலை அடுப்பிலிருந்து எடுத்து விநியோகம் செய்யலாம். 

புட்டுச் செய்யும் முறை

கால் கிலோ பச்சரிசி ஐ.ஆர். 20 எனில் நல்லது.

பாகு வெல்லம் கால் கிலோ

வேக வைத்த துவரம்பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன்.

உப்பு மொத்தமாக அரைத்தேக்கரண்டி

மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி

பிசைய வெந்நீர்

தேங்காய்த் துருவல் சின்னதாக ஒரு மூடி

முந்திரிப்பருப்பு ஒரு கைப்பிடி, ஏலக்காய்த் தூள் அரைத் தேக்கரண்டி

நெய் இரண்டு மேஜைக்கரண்டி, தேங்காய்த் துருவல் முந்திரிப்பருப்பு வறுக்க.

முதல் முறை: அரிசியைக் களைந்து ஊற வைத்துக் கொண்டு நீரை வடித்துவிட்டு வெறும் வாணலியில் சிவப்பாக வறுக்கவும். நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கொதிக்கவிடவும். அதிலேயே தேவையான உப்பையும், மஞ்சள் பொடியையும் சேர்க்கவும். இந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவைக் கையால் பிடித்தால் பிடிக்க வரவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும். நிதானமாய்ச் செய்து சுமார் இரண்டு மணி நேரம் இதை ஊற வைக்கவும்.

உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்து விட்டுப் பாகு காய்ச்சவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டுப் பார்த்தால் உருண்டையாக உருட்ட வரவேண்டும். உருட்டிப்போட்டால் “டங்”என்று சப்தம் வரும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்திருக்கும் மாவில் விட்டுக் கிளறவும். தேவையான பாகைச் சேர்த்ததும் மாவும் பாகும் நன்கு கலக்கும்படி கிளறவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, பொட்டுக்கடலை, தேங்காய் ஆகியவற்றைச் சிவக்க வறுத்து ஏலக்காய்த் தூளுடன் போட்டு நன்கு கலக்கவும்.

இன்னொரு முறை

அரிசியை நன்கு ஊற வைக்கவும். நீரை வடித்து விட்டு மிக்சி ஜாரில் போட்டு மாவாக்கவும். ஒரு மாவுச் சல்லடையில் சலித்தால் நைசான மாவு மட்டும் விழும். எல்லா மாவையும் சலித்து எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் நன்கு வாசனை வர வறுத்துக் கொள்ளவும். வெந்நீரைக் கொதிக்க வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு மாவில் கொஞ்சமாக விட்டுக் கலக்கவும். ஈர மாவு என்பதால் நீர் அதிகம் போனால் தளர்த்தியாகி விடும். சிறிது நேரம் மாவை வைத்து விட்டு ஓர் வெள்ளையான ஈரத்துணியில் மாவைப் பரப்பி இட்லித் தட்டில் துவரம்பருப்பு ஊற வைத்ததைக் கலந்து வைக்கவும். இட்லித்தட்டை மூடவும். மாவு வெந்துவிட்டதா எனப் பார்க்க ஒரு குச்சியால் கிளறினால் அதில் ஒட்டாமல் வரும். முன் சொன்ன மாதிரி உதிர்த்தால் உதிரும். பிடித்தால் பிடிக்கவும் வரும். பின்னர் மேலே சொன்ன மாதிரிப் பாகு வைத்துக் கொண்டு மாவில் விட்டுக் கலக்கவும். நெய்யில் வறுத்த சாமான்களைச் சேர்க்கவும். இந்தப் புட்டு முதலில் சொன்னதை விட மெதுவாக மிருதுவாக இருக்கும்.


Wednesday, October 21, 2020

நவராத்திரி ஆறாம் நாள்:

படத்துக்கு நன்றி கூகிள் வாயிலாக விக்கி பீடியா

பர்வதராஜன் மகளாய்ப் பிறந்த தேவி பார்வதி என்றும் பர்வத ராஜகுமாரி எனவும் அழைக்கப்பட்டாள். அவள் ஈசனையே தன் கணவனாக அடைய விரும்பி கடும் தவம் இருந்தாள். ஈசன் அவள் முன் தோன்றி ஈசனைக் கணவனாக அடைவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை எனவும் இன்னமும் கடுமையான தவம் இயற்ற வேண்டும் என ஓர் கிழவன் வடிவில் வந்து சொல்ல அப்படியே ஊண், உறக்கம் துறந்து தேவி கடும் தவத்தில் ஈடுபடுகிறாள். அகில உலகையும் படைத்து, காத்து, அழிக்கும் வல்லமை பெற்ற பரப்பிரும்மம் ஆன தேவியே தவம் இருந்ததால் அவள் “பிரமசாரிணி” என அழைக்கப்பட்டாள். 


படத்துக்கு நன்றி கூகிள்

மாங்காட்டில் ஈசனை நினைத்து தவம் செய்த காமாட்சியும் இவள் வடிவே என்பார்கள். இவள் நவராத்திரி வியாழக்கிழமைக்கு உரிய தேவி ஆவாள். குரு பகவான், வியாழன் எனவும் அழைக்கப்படுவார் அல்லவா! அந்த குருவானவர் நாம் இவளை வழிபடுவதன் மூலம் அனைவருக்கும் ஞானம், கல்வி, அமைதியான நிலையான வாழ்க்கை கிட்டச் செய்வார். திரிபுர சம்ஹாரத்தின்போது ஈசனின் இடக்கால் கட்டை விரலால் வரையப்பட்ட அஷ்டவகைக் கோலத்திலிருந்து தோன்றியவளே “பிரமசாரிணி” ஆவாள். இன்றைய தினம் அம்பிகையை சாகம்பரியாகவும் வழிபடுவார்கள். கொலுவில் அம்பிகையை சாகம்பரியாக அலங்கரித்துக் காய், கனிகளால் அலங்கரிக்கலாம்.



படத்துக்கு நன்றி விக்கி பீடியா

இன்றைய தினம் ஏழு வயதுப் பெண் குழந்தையைச் சண்டிகா தேவியாக நினைத்து ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும். சர்ப்ப ராஜனை ஆசனமாய்க் கொண்ட சண்டிகாதேவி தூம்ரலோசனன் என்னும் அசுரனை வதம் செய்தாள் தன் கரங்களில் அக்ஷமாலை, கபாலம்,தாமரைப்பூ, தங்கக்கலசம் ஆகியவற்றை ஏந்திய வண்ணம் காட்சி தருவாள். ஆறாவது நாள் சஷ்டி தினமான இன்று அம்பிகையின் பல்வேறு நாமங்களை அரிசிமாவினால் அல்லது மஞ்சள் பொடி கலந்த கடலை மாவினால் கோலமாக வரைதல் நல்லது. அர்ச்சனைக்குப் பவளமல்லிப் பூக்கள் சிறந்தவை. எனினும் செம்பருத்தி மலர்களும் உகந்தவையே! ரோஜாப்பூக்களும் உகந்தவை. இன்றும் சிவந்த நிறமுள்ள ஆடைகளையே குழந்தைக்குக் கொடுக்கலாம். கல்கண்டு சாதம் நிவேதனம் பண்ணலாம். இயலவில்லை எனில் தேங்காய்ப் பால்ப் பாயசம், தேங்காய்ச் சாதம் எனத் தேங்காய் சேர்த்த உணவுகளைச் சமைத்துக் கொடுக்கலாம். பச்சைப்பயறு அல்லது பாசிப்பருப்பில் சுண்டல் பண்ணலாம். 

பச்சைப்பயறுச் சுண்டல்: பயறை நன்கு களைந்து அதில் கல் போன்றிருக்கும் பயறுகளைக் களைந்து அரித்துவிட்டு முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் 2,3 முறை கழுவி விட்டுப் பின்னர் ஓர் வாயகன்ற பாத்திரம் அல்லது கடாயில் வேக வைக்கவும். பாதி வெந்ததும் உப்புச் சேர்க்கவும். பின்னர் நீரை வடிகட்டி எடுத்துக் கொண்டு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டுக் கடுகு,பெருங்காயம், மிளகாய் வற்றல், கருகப்பிலை தாளித்து வெந்த பயறோடு தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கிளறவும்.

இனிப்புச் சுண்டல் எனில் பயறை ஒரு அரைத் தேக்கரண்டி உப்புப் போட்டு வேக வைத்து எடுத்துக் கொண்டு வடிகட்டி வைக்கவும். கடாயில் நெய்யை ஊற்றிக் கடுகு, மிளகாய் வற்றல் தாளித்துக் கொண்டு வெந்த பயறைக் கொட்டி வெல்லத்தூள் சேர்த்துத் தேங்காய்த் துருவலோடு கலந்து நன்கு கிளறவும். மி.வத்தல் போடுவதால் ஏலக்காய் தேவை இல்லை. ஏலக்காய் தேவை எனில் மிளகாய் வற்றல் தாளிக்க வேண்டாம்.

கல்கண்டு சாதம் ஒரு கிண்ணம் அரிசியோடு அரைக்கிண்ணம் பாசிப்பருப்பையும் சேர்த்து வறுத்துப் பாலில் குழைய வேக விட வேண்டும். இந்த அளவு அரிசிக்கு அரை லிட்டர் பாலாவது தேவைப்படும்.  குழைந்த சாதத்தில் கட்டிக்கல்கண்டைக் கால்கிலோ சேர்த்துக் கல்கண்டு சாதத்தோடு சேர்ந்து கெட்டிப்படும் வரை கிளற வேண்டும். பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்து ஏலக்காய், ஜாதிக்காயை நெய்யில் பொரித்துப் பொடித்துச் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களால் அலங்கரிக்க வேண்டும்.

தேங்காய்ப் பால்ப் பாயசம்: அரைக்கிண்ணம் அரிசியை நன்கு வறுத்துக் களைந்து கொண்டு மிக்சி ஜாரில் போட்டுக் குருணையாகப் பொடிக்க வேண்டும். ஒரு நடுத்தர அளவுத் தேங்காயை உடைத்துத் துருவிக் கொண்டுப் பால் எடுக்க வேண்டும். முதல் பாலைத் தனியாக வைத்து விட்டு இரண்டாம், மூன்றாம் பாலில் அரிசியை நன்கு குழைய வேக வைக்கவும். இந்த அளவுக்கு 200 கிராம் வெல்லத்தூள் தேவை. அரிசி குழைந்ததும் வெல்லத்தூளைச் சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்ல வாசனை போகக் கரைந்ததும் முதல் பாலைச் சேர்த்து ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைக்கவும். முதல் பாலைச் சேர்த்துக் கொதிக்க விட்டால் திரிந்து விடும். நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்து அத்துடன் தனியாக எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப் பால் பிழிந்த சக்கையையும் வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.

தேங்காய்ச் சாதம். இரண்டு கிண்ணம் சமைத்த சாதம். உதிர் உதிராக இருக்க வேண்டும். ஒரு நடுத்தர அளவுத் தேங்காயை உடைத்து ஒரு மூடியைத் துருவிக் கொள்ளவும். துருவல் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்துத் தேங்காய் எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி ஊற்றவும். கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை/முந்திரிப்பருப்பு (இரண்டில் ஏதேனும் ஒன்று) போட்டு ஒவ்வொன்றாகத் தாளித்துப் பருப்புச் சிவந்ததும் பச்சை மிளகாய் இரண்டு, கருகப்பிலை, பெருங்காயம் போட்டுத் தேங்காய்த் துருவலையும் அதில் போட்டுக் கிளறவும். சிவக்க வறுத்தால் பிடிக்குமெனில் சிவப்பாக வறுக்கவும். இல்லை எனில் போட்டு இரண்டு நிமிஷம் வறுத்த பின்னர் அடுப்பை அணைத்துவிடலாம். இதில் இரண்டு கிண்ணம் சமைத்த சாதத்தைச் சேர்த்துத் தேவையான உப்புடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கிளறவும். சுவையான தேங்காய்ச் சாதம் தயார். சர்க்கரை சேர்ப்பதால் தேங்காயின் ருசியை எடுத்துக் காட்டும் என்பார்கள்.


Tuesday, October 20, 2020

நவராத்திரி ஐந்தாம் நாள்:




படத்துக்கு நன்றி விக்கி சோர்ஸ்

காத்யாயினி! காத்யாயன மஹாமுனிவர் உலகாளும் அம்பிகையே தனக்கு மகளாய்ப் பிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அவர் எண்ணம் ஈடேறும்படி அன்னை இவருக்கு மகளாய்ப் பூவுலகில் பிறந்தாள். காத்யாயன மஹாமுனிவரின் மகள் என்பதால் காத்யாயினி என்னும் பெயரைப் பெற்றாள். கோகுலத்து கோபியர் கண்ணனை அடைய இருந்த விரதமான பாவை நோன்புக்கு இவளே தேவி ஆவாள். இவளை நினைத்தே அவர்கள் விரதம் இருந்து நோன்பு நூற்றார்கள். கன்னியர் மனம் மகிழும்படியான கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அருளும் இவளுக்கான ஸ்லோகம் மிகவும் பிரபலமானது. பெண்கள் தினம் இதைச் சொல்லுவதால் நல்ல கணவன் கிடைப்பான் எனவும் கிடைத்த கணவனுடன் நல்வாழ்வு வாழ வழி செய்யும் என்றும் கூறுவார்கள். அந்த ஸ்லோகம்:

காத்யாயினி மஹா மாயே மஹா யோகிந் யதீஸ்வரி

நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ!

என்பதாகும். இந்த ஸ்லோகத்தை தினம் தினம் முழு மனதுடன் தேவியை நினைத்துச் சொல்லும் பெண்களுக்கு நல்ல கணவன் கிட்டுவான் என்பதில் சந்தேகமே இல்லை.  நவராத்திரி புதன்கிழமைக்கான இந்த தேவியை வழிபடுவதன் மூலம் புத்தியும், ஞானமும் கிட்டுவதோடு கல்வி, கேள்விகளில் சிறந்தும் விளங்குவார்கள். திருமணப் பேறும் அளிப்பாள் இந்த தேவி. பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்துத் தாளம் கொட்ட ஈசன் ஆடிய தாண்டவம் முனி தாண்டவம் எனப்படும். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணிலே இருந்து தோன்றியவளே காத்யாயினி. இன்றைய தினம் மஹாலக்ஷ்மி அஷ்டகம், அல்லது ஷோடசி துதிகளால் அம்பிகையை வணங்கலாம். 



இன்றைய தினம் அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். இன்றைய தினத்துக்கான தேவி “காளிகா” ஆறு வயதுக்குட்பட்ட பெண் குழந்தையை “காளிகா” வாகப் பாவித்து வழிபடுதல் நன்று. குழந்தைக்குப் பிடித்தமாதிரி  சிவந்த நிறமுள்ள ஆடைகளாகக் கொடுக்கலாம். இன்றும் சிவந்த மலர்களாலேயே அர்ச்சிக்க வேண்டும். எனினும் செந்தாமரைப்பூக்கள், செவ்வரளிப் பூ விசேஷமானது. ஒரு சிலர் அம்பிகையை வைஷ்ணவியாகவும் பாவித்து சங்கு, சக்கரத்துடன் அலங்கரித்து வழிபடுவார்கள். கடலை மாவில் மஞ்சள் பொடி கலந்த மயில் அல்லது பறவைகள் கோலம் அல்லது பாவைகள் கோலமாகப் போடலாம். 

பால் சாதம் விசேஷமானது. நிவேதனம் பண்ணலாம். சர்க்கரைப் பொங்கலும் ஏற்றது. குழைய வடித்த சாதத்தில் சுண்டக்காய்ச்சிய பாலை விட்டுக் கலந்து ஏலப்பொடி, முந்திரிப்பருப்பு நெய்யில் வறுத்தது சேர்த்துக் கலந்து ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரம் சேர்த்து நிவேதனம் பண்ணிக் குழந்தைக்குக் கொடுக்கலாம். 

கடலைப்பருப்புச் சுண்டல் இன்று பெரும்பாலும் கடலைப்பருப்புச் சுண்டலே விசேஷம். கடலைப்பருப்பைக் காலையிலோ அல்லது மத்தியானம் பனிரண்டு மணி அளவிலோ கழுவி ஊற வைக்கவும். சுமார் 3 மணி சுமாருக்கு வாயகன்ற பாத்திரம் அல்லது கடாயில் கடலைப்பருப்பை வேக வைக்கவும். அரை வேக்காட்டில் உப்புச் சேர்க்கவும். கடலைப்பருப்பு நன்கு நசுங்கியதும் அடுப்பை அணைத்துச் சிறிது நேரம் சூட்டோடு வைத்திருந்து பின்னர் வடிகட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காய்த் தூள், பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்த்துத் தாளித்துக் கடலைப்பருப்பைக் கொட்டிக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்க்கவும். காரம் வேண்டுமெனில் பச்சை மிளகாய் அதிகம் சேர்க்கலாம். அல்லது 3,4 பச்சை மிளகாய் தாளித்துவிட்டுக் கடலைப்பருப்பைக் கொட்டிக் கிளறுகையில் இரண்டு தேக்கரண்டி சாம்பார்ப் பொடியைச் சேர்க்கலாம். காரம் அவரவர் விருப்பம்/வசதிப்படி சேர்க்கவும். கட்டாயமாய்ச் சர்க்கரையும் சேர்த்துத் தேங்காய்த் துருவலோடு கிளறவும். இருந்தால் பச்சைக் கொத்துமல்லி போட்டுக் கலந்து விநியோகிக்கலாம். நவராத்திரி இல்லாத நாட்களில் இந்தச் சுண்டலோடு பச்சைக் கொத்துமல்லி, வெங்காயம் பொடியாக நறுக்கியது, துருவிய காரட், புதினா இலைகள் பொடியாக நறுக்கியது சேர்த்துக் கிளறிச் சாப்பிடலாம். இதோடு மிக்சர், ஓமப்பொடி கலந்தும் சாட் மாதிரிச் சாப்பிடலாம்.


Cooking for Youngsters  என்னுடைய இந்த ஆங்கிலத்தில் சமையல் குறிப்புகள் எழுதப்பட்ட மின்னூல் கின்டிலில் இன்று மதியம் பனிரண்டு மணியில் இருந்து அக்டோபர் 25 ஞாயிறன்று மதியம் 12-29 வரை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விரும்பியர் தரவிறக்கலாம்.


For America  Those who lived in America can go to this link and can download the book for free from today 20-10-2020 till 25-10-2020 Sunday Timings from today noon to Sunday noon, Thank You.


Monday, October 19, 2020

நவராத்திரி நான்காம் நாள்

படத்துக்கு நன்றி கூகிள்

 இன்றைய தினத்துக்கான தேவி சந்திரகாந்தா அல்லது ஸ்கந்த மாதா ஆகியோர் ஆவார்கள். ஸ்கந்தமாதா செவ்வாய்க்கிழமைக்கு உரிய தேவி. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை என்பதால் ஸ்கந்தமாதாவாக அம்பிகையை வழிபடலாம். சந்திரகாந்தாவாகவும் வழிபடலாம். சந்திரகாந்தா முக்கண்கள் உடைய தேவி ஆவாள். வெப்பத்தைத் தணிவிக்கும் தேவி இவள். சந்திரகாந்தக் கல்லானது சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகிறாப்போல் அம்பிகையும் நம் தீவினைகளைத் தன்னுள் வாங்கிக் கொண்டு தன் முக்கண்களால் கருணை என்னும் அருளைப் பொழிகிறாள். நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக்கொள்ளும் அம்பிகை கருணை நீரைப் பொழிகிறாள். இங்கே குறிப்பிடப்படும் வெம்மையானது நம் தீவினைகளே ஆகும். இந்தத் தீவினைகளை அம்பிகை தன்னுள் வாங்கிக் கொண்டு கருணை மழையால் நம் உடலையும், மனதையும் குளிர்விக்கிறாள். முக்கண்ணனின் மனைவியான இந்த தேவி தானும் முக்கண்களைக் கொண்டு ஈசனைப் போல் தானும் பிறைச் சந்திரனைச் சூடிக் கொண்டு காட்சி தருகிறாள். நம் தீவினைகளாம் அசுரர்களை அழித்தொழிக்க வேண்டிக் கைகளில் பல்வேறு ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறாள் இந்த தேவி. ராகு காலம், செவ்வாய்க்கிழமைகளில் இவளை வழிபடுதல் சிறப்பு. நவராத்திரி செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் இவளை நினைத்து வழிபடுதல் இன்னமும் சிறப்பு. திருவாலங்காட்டில் காளி ஆடிய ஆட்டத்தில் அவளைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஊர்த்துவத் தாண்டவத்தில் தோன்றிய இந்தச் சந்திரகாந்தா தேவி ஈசன் ஒரு காலைத் தரையில் ஊன்றி மறுகாலைத் தோளுக்கு மேல் தூக்கிய கோலத்தின் போது பிறந்தவள் என்பார்கள்.


படத்துக்கு நன்றி கூகிள்

அடுத்து வரும் ஸ்கந்த மாதாவும் செவ்வாய்க்கிழமைக்கு உகந்த தேவி. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் ஸ்கந்தனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையே உகந்த நாளாகும். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின்ன் திரு அவதாரத்துக்குக் காரணம் ஆன இந்த ஸ்கந்தமாதா அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரித்துச் சாம்பலாக்குகிறதோ அவ்வாறு நம் தீவினைகளையும் சுட்டெரித்துச் சாம்பாலாக்குவாள். நமக்கு அங்காரக தோஷத்தினால் ஏற்படும் துன்பங்கள் தீவினைகளைச் சுட்டுப் பொசுக்குவாள். நவராத்திரி செவ்வாய்க்கிழமைக்கு உகந்த தேவியான இவள் பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்த போது தோன்றிய ஆலஹால விஷத்தை உண்ட ஈசன் கண்டத்தைப் பிடிக்கவும், அப்போது ஈசன் ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் எனப்படும். ஸ்கந்தமாதா தோன்றியது அப்போது தான்.

இன்றைய தினம் ஐந்து வயதுப் பெண் குழந்தையை “ரோஹிணி” என்னும் திருநாமத்தால் வழிபட வேண்டும். சிவந்த நிறத்தில் ஆடைகள் கொடுக்கலாம். இன்றைய தினம் படிக்கட்டுக் கோலம் போடலாம். அல்லது அக்ஷதை, மலர் இதழ்கள் இவற்றாலும் கோலம் போடலாம்..கீழே குறுகி மேலே செல்லச் செல்ல விரிந்து வருவதைப் போல் கோலமிட்டால் செல்வம் பெருகும் என்பார்கள்.  நமக்கு இருக்கும் ரோகங்கள் நீங்க இத்தகைய வழிபாடு சிறப்பானது. பொதுவாகச் சிவப்பு மலர்களால் 4,5,6 நாட்களில் அம்பிகையை அர்ச்சிக்க வேண்டும் என்பார்கள். செந்தாமரை மலர், ரோஜாமலர்கள், அரளிப்பூக்கள் ஆகியவை இன்றைக்கு ஏற்றவை. கஸ்தூரி மஞ்சள் பொடியாலும் அர்ச்சிக்கலாம். மஹாலக்ஷ்மி அஷ்டகம் அல்லது திருமகளைக் குறித்த துதிகளால் வழிபடலாம். அம்பிகையை இன்று ஜயதுர்கை கோலத்தில் சிங்காதனத்தில் வீற்றிருக்கும் தேவியாக அலங்கரிக்கலாம். நிவேதனமாக அவல் கேசரி அல்லது ரவா கேசரி பண்ணலாம். சர்க்கரைப்பொங்கலும் பண்ணலாம். மாலை பட்டாணிச் சுண்டல் பண்ணி விநியோகிக்கலாம்.

நல்ல கெட்டி அவலை நெய்யில் வறுத்துக் கொண்டு அதோடு சேர்த்துச் சர்க்கரையைக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் வெந்நீரைக் கொதிக்க வைத்து அவலும் சர்க்கரையும் கலந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். சிறிது நேரத்தில் அவல் வெந்து சர்க்கரையோடு கலந்து விடும். தேவையானால் கேசரிக்கலர் சேர்க்கலாம். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழங்கள் சேர்த்து ஏலப்பொடி சேர்க்கவும். அவல் இல்லை எனில் ரவையில் இதே மாதிரிப் பண்ணலாம். 

சர்க்கரைப் பொங்கலுக்கு அரிசி, பருப்பை வாசனை வரும்படி வறுத்துக்கொண்டு பாலில் குழைய வேக வைத்துக் கொண்டு தேவையான வெல்லம் சேர்த்து வெல்ல வாசனை போகச் சுருள வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராக்ஷைப் பழங்கள் சேர்த்துப் பின்னர் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம்.

வெள்ளைப் பட்டாணியை முதல்நாளே ஊற வைத்துக் கொண்டு மறுநாள் நன்கு கழுவி உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காய்த்தூள், பச்சை மிளகாய், இஞ்சி, மாங்காய்(கிடைத்தால்) கருகப்பிலை, தேங்காய்க்கீற்றுகள் சேர்த்து நன்கு கிளறி வெந்த பட்டாணியைப் போட்டுக் கிளறி எடுத்தால் சுவையான தேங்காய், மாங்காய்ப் பட்டாணிச் சுண்டல் தயார். விநியோகிக்கலாம்.

பட்டாணிச் சுண்டல் சொந்தம், சில வருடங்கள் முன்னர் பண்ணியது. முகநூலில் மோகன் ஜி அவரோட பதிவுக்குப் போட்டிருந்தார். எந்தப் பதிவிலே போட்டேன்னு தேடணும். ஆனாலும் சொந்தச் சுண்டல், பச்சைப் பட்டாணியா இருந்தா என்ன? இதுவும் பட்டாணிச் சுண்டல் தானேனு போட்டுட்டேன். இத்தனை வருஷங்களாக நன்றாக இருக்குமானு தெரியலை! ஹிஹிஹி! 





அமேசானில் புத்தக வெளியீடு!

 அனைவருக்கும் வணக்கம். வெங்கட்டின் தீவிர முயற்சியால் என்னுடைய சமையல் புத்தகம் Cooking for Youngsters ஆங்கிலத்தில் எழுதப்பட்டது நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. கின்டிலில் கிடைக்கும். 

இந்தியாவில் இருப்பவர்கள் https://www.amazon.in/dp/B08LCC5ZYT என்ற தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

 For India  https://www.amazon.in/dp/B08LCC5ZYT for India Click  செய்தால் அந்த லிங்குக்குப் போகும். 

பதிவில் காப்பி, பேஸ்ட் டிசேபிள் செய்திருப்பதால் லிங்கைக் க்ளிக்கினால் போகாது!.

https://www.amazon.com/dp/B08LCC5ZYT என்ற முகவரியிலிருந்து அமெரிக்காவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அமேசான் எந்த நாட்டில் இருக்கிறதோ அதற்குத் தகுந்த மாதிரி, .in என்பதற்கு பதிலாக .de, .uk என மாற்றினால் போதுமானது! 

 For America  https://www.amazon.com/dp/B08LCC5ZYT  for America click  செய்தால் அந்த லிங்குக்குப் போகும். 

Do not copy, paste the links given here. It is disabled in this web page. Just Click on For India or For America. You can easily get the page. 

Name of the Book: Cooking for Youngsters.

இதில் உள்ள குறிப்புகள் அவ்வப்போது எங்க பெண்ணுக்கு நான் அந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அனுப்பியவை. அவற்றை ஓர் பதிவாகவும் போட்டு வந்தேன். இப்போது முதல் முயற்சியாக அதில் உள்ள சமையல் குறிப்புக்களைத் தொகுத்துப் புத்தகமாக்கி வெளியிட ஆசையில் வெங்கட்டைத் தொடர்பு கொண்டேன். இதில் எடிட்டிங் செய்தது, எழுத்துப் பிழைகளைச் சரி பார்த்தது ஆகியவை மட்டுமே என்னோட வேலை. மற்றதெல்லாம் வெங்கட் தான் செய்தார். புத்தகத்தின் அட்டை நன்றாக இருப்பதாக என் பெண் சொன்னாள். அவளுக்குப் புத்தகம் திறக்கவில்லை என்றாள். இந்தச் சுட்டியைக் கொடுத்துத் திறந்து பார்க்கச் சொல்லணும். எனக்கும் புத்தகம் திறக்கவில்லை. சரினு BUY FREEஎன்று இருக்கும் இடத்தில் போய்க் க்ளிக்கினால் புத்தகத்தோட விலையை எப்படிக் கொடுக்கப் போறேனு என்னையே கேட்குது! சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்னு ஓடியே வந்துட்டேன். எத்தனை நாட்கள் இலவசத் தரவிறக்கம் என்பது தெரியவில்லை. எப்படியும் புதன் வரை இருக்கும். அதுக்குள்ளே முடிஞ்சவங்க/விருப்பமுள்ளவங்க தரவிறக்கிக் கொள்ளவும். தமிழ் படிக்கத் தெரியாத எங்க வீட்டுக் குழந்தைகளுக்காகப் போட்டிருக்கும் புத்தகம் இது. விரைவில் அடுத்த புத்தகமும் வெளிவர முயற்சிகளை மேற்கொள்ளணும். இம்முறை நானே (முடியுமா) புத்தக வெளியீடு செய்யவும் ஆவல். பார்க்கலாம். 

வெங்கட்டுக்கு மிக்க நன்றி. எத்தனை தரம் சொன்னாலும் போதாது.

Sunday, October 18, 2020

நவராத்திரி மூன்றாம் நாள்:

 இன்றைய தேவதை மஹா கௌரி!  திங்கட்கிழமைக்கு உகந்த தேவதையான இவள் சிறுமி வடிவில் இருந்தாலும் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டாள். இதனால் இவளுக்கு ஏற்பட்ட உடல் சோர்வில் இவள் பொன்னிறம் மங்கவே ஈசன் கங்கை நீரினால் அவள் உடலைச் சுத்தம் செய்ய உதவுகிறார். கசடுகள் நீங்கி மீண்டும் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்த மஹா கௌரியான இவள் மன நலம் பாதிக்கப்பட்டோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் வணங்கும் தெய்வம் ஆவாள். திங்கட்கிழமைக்கு உகந்த தேவதை இவளே! தண்டகாரண்யத்தின் முனிவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் தீர ஈசன் ஆடிய சுத்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் இந்த மஹா கௌரி.


மூன்றாம் நாளான இன்று பூக்களால் கோலம் போடுவது சிறப்பு. அல்லது அரிசியை ஊற வைத்து அரைத்த மாவினால் நக்ஷத்திரக் கோலமும் போடலாம். இன்றைய தினம் அம்பிகையை நான்கு வயதுள்ள பெண் குழந்தையாக, “கல்யாணி” என பாவித்து வழிபட வேண்டும். சிவப்பு அல்லது சிவப்பும்,மஞ்சளும் கலந்த நிறத்தில் ஆடைகளைக் கொடுக்கலாம். அர்ச்சனைக்குச்  செம்பருத்திப்பூக்கள், தாமரைப்பூக்கள், செண்பகப்பூக்கள், குங்குமம் ஆகியனவற்றால் வழிபடலாம். லலிதா நவரத்னமாலை, துர்காஷ்டகம் போன்ற துதிகளால் வழிபடலாம். அம்பிகையைக் கல்யாணியாக அலங்கரித்து கொலுவில் வைக்கலாம். 


படங்களுக்கு நன்றி கூகிள்

இன்றைய தினம் காலை கோதுமை மாவில் உருண்டை பண்ணி நிவேதனம் செய்யலாம். அல்லது முழு கோதுமை அல்லது ரவையில் சர்க்கரைப் பொங்கல் பண்ணலாம். தயிர் சாதமும் பண்ணலாம்.

கோதுமை உருண்டை  கடாயில் நெய்யைக் காய வைத்துக் கொண்டு முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்துத் தனியாக வைக்கவும். மீதமிருக்கும் நெய்யோடு இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துக் காய்ந்ததும் அதில் ஒரு கிண்ணம் கோதுமை மாவைப் போட்டு வறுக்கவும். மாவு நன்கு வறுபட்டு வாசனை வரும் சமயம் ஒரு கிண்ணம் சர்க்கரை அல்லது வெல்லத்தூள் சேர்க்கவும். இனிப்பு அதிகம் வேண்டுமெனில் ஒன்றரைக் கிண்ணம் சேர்க்கலாம். இந்த மாவில் ஏலக்காய்த் தூள் சேர்த்து வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கலாம்.. 

 கோதுமைப் பொங்கல் கோதுமையை வறுத்துக் கொண்டு வறுத்த பாசிப்பருப்போடு சேர்த்துப் பாலில் வேக வைத்துக் கொண்டு வெந்ததும்  தேவையான  வெல்லம் சேர்த்துக் கரைய விடவும். சேர்ந்து வந்ததும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களைச் சேர்க்கலாம். நெய்யில் வறுத்த தேங்காய்த் துண்டுகளையும் சேர்க்கலாம். இது அரிசி சேர்த்த சர்க்கரைப் பொங்கல் மாதிரிக் குழையாது. கோதுமை பிடிக்கவில்லை எனில் கோதுமை ரவையில் இதே மாதிரிப் பண்ணலாம். இதெல்லாம் முடியாதவர்கள் சாதத்தைப் பாலில் குழைய வேகவைத்துக் கொண்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய், உப்புச் சேர்க்கவும். இரும்புக்கரண்டியில் நல்லெண்னெய் சேர்த்துக் கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயம் தாளித்துச் சாதத்தில் கொட்டி விட்டு ஒரு சின்னக் கிண்ணம் தயிரை விட்டு நன்கு கலந்து கரண்டியால் மசிக்கவும். இதையும் நிவேதனம் பண்ணலாம்.

மாலை சிவப்புக் காராமணிச் சுண்டல். இதை வெல்லம் போட்டு அல்லது காரம் போட்டுப் பண்ணலாம். காராமணியை முதல் நாளே ஊற வைத்துக் கொண்டு மறுநாள் கழுவிக் குக்கரில் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் போட்டு உப்புச் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, கருகப்பிலை, மிளகாய் வற்றல் தாளித்துக் கொண்டு பெருங்காயப் பொடியும் சேர்த்துக் கொண்டு வெந்த காராமணியைக் கொட்டித் தேங்காய்த் துருவலும் போட்டுக் கிளற வேண்டும். தேவையானால் மிளகாய் வற்றல்+கொத்துமல்லி வறுத்துச் செய்த பொடியைச் சேர்க்கலாம்.

இனிப்புச் சுண்டல் எனில் காராமணியை உப்புச் சேர்க்காமல் நன்கு வேக வைத்துக் கொண்டு நெய்யில் கடுகு தாளித்துக் காராமணியை வடிகட்டி அதில் சேர்த்து ஏலக்காய்த்தூளுடன் வெல்லத்தூள்+தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி விநியோகம் பண்ணலாம்.

சஹானாவில் சுட்டி இணைக்க முடியவில்லை. இரவு பார்க்கிறேன். அல்லது நாளைக்குள் இணைக்கிறேன். மன்னிக்கவும். 


Saturday, October 17, 2020

நவராத்திரி இரண்டாம் நாள்!

 நவராத்திரி இரண்டாம் நாள்: இன்றைய தினம் அம்பிகையை சைலபுத்ரியாக ஆராதிக்கலாம். சைலம் என்றால் மலை. மலையரசன் மகளான அம்பிகையையே இது குறிக்கும். பார்வதி, பர்வத ராஜகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப்படும் தேவி இவளே! தேவர், பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகிய மூவர் என அனைவரிலும் நிறைந்து நிற்கும் சக்தியானவள் இவளே! இவளன்றி ஓரணுவும் அசையாது. தமிழில் இவள் மலைமகள் என அழைக்கப்படுகிறாள். மஹாமேருவை தினந்தோறும் வலம் வந்து கொண்டிருக்கும் சூரியன் இவளின் பக்தர்களுக்கு அருள் புரிவான். நவராத்திரி ஞாயிறன்று இவளை வழிபடுதல் உசிதம். இன்றைய தினம் நவராத்திரி ஞாயிறு மேலும் இரண்டாம் நாள் ஆகையால் சைலபுத்ரியை வணங்குதல் சிறப்பானது. ஆரோக்கியம் பெருகி மனம் விசாலமடையும் இந்த தேவியைத் துதிப்பதால் மனம் மகிழ்வுறும்.. ஈசன் வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடிய ஆனந்தத் தாண்டவத்தின் ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவள் இந்த சைலபுத்ரி ஆவாள்.


படத்துக்கு நன்றி கூகிளார்.

அரிசிமாவினால் பூக்கள் வரைந்து போடும் கோலம் சிறப்பானது. இன்றைய தினமும் லலிதா நவரத்னமாலையும், லலிதா சஹஸ்ரநாமமும் சொல்லலாம்.



படத்துக்கு நன்றி விக்கி பீடியா

இன்றைய தினம் மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிபுரை/திரி மூர்த்தி என பாவித்து வணங்கி வழிபடுதல் வேண்டும். கொலுவில் அம்பிகையை இன்று ராஜராஜேஸ்வரியாக அலங்கரிக்கலாம்.  இன்றும் மஞ்சள் நிறம் உகந்தது என்றாலும் சிவப்புக் கொன்றையும், துளசியும், முல்லையும் கூட ஏற்றது. மஞ்சள் நிறத்தில் ஆடைகளும், சிறு குழந்தைக்கு ஏற்ற தின்பண்டங்களும் கொடுக்கலாம் என்றாலும் காலை நிவேதனத்தில் எள் சாதம், புளியோதரை சிறப்பானது. 


எள் சாதம் 50 கிராம் எள்ளைக் கல்லரித்துக் கொண்டு வெறும் வாணலியில் நான்கு அல்லது ஐந்து மிளகாய் வற்றல், உப்பு தேவையானது சேர்த்து வறுத்து மிக்சி ஜாரில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும். சமைத்த அன்னத்தில் கால் தேக்கரண்டி உப்புச் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும். கொஞ்சம் உதிர் உதிராகச் சாதம் ஆனதும் தேவையான எள்ளுப் பொடியைப் போட்டுக் கிளறவும்.

புளியோதரை   புளிக்காய்ச்சல் தயார் செய்யணும். சுமார் 150 கிராம் புளியை ஊற வைத்துக் கொஞ்சம் கெட்டியாக புளிச் சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி எள், ஒரு மேஜைக்கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி மிளகு, இரண்டு தேக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். தேவையானால் மிளகை மட்டும் தனியாகக் கொஞ்சம் நெய் விட்டு வெடிக்க விட்டு எடுத்துக் கொள்ளலாம்.  இவை ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும். நன்கு நைசாகவே பொடிக்கலாம். அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தைப் போட்டுச் சுமார் 100 கிராம் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பத்து மிளகாய் வற்றலைக் காம்பு ஆய்ந்து இரண்டு மூன்றாகக் கிள்ளி உள்ளிருக்கும் விதைகளை எடுத்த பின்னர் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போடவும். மிளகாய் வற்றல் கறுப்பாக ஆக வேண்டும்..அதன் பின்னர் கடுகு, ஊற வைத்த கொண்டைக்கடலை அல்லது கடலைப்பருப்புப் போட்டுவிட்டு ஒரு கைப்பிடி வறுக்காத வேர்க்கடலையும் சேர்க்கவும். பெருங்காயம் ஒரு துண்டு சேர்க்கவும். பெருங்காயம் பொரிந்ததும் கருகப்பிலை போட்டு மஞ்சள் பொடி சுமார் 3 தேக்கரண்டி சேர்க்கவும். அல்லது சின்னதாக விரலி மஞ்சள் துண்டை மிளகு வறுக்கையில் சேர்த்து வறுத்துவிட்டு அந்தப் பொடி செய்யும்போது சேர்த்துப் பொடித்துக் கொள்ளலாம். இப்போது கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தைச் சேர்த்து உப்புச் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது சுமார் ஐம்பது கிராம் வெல்லத்தூள் சேர்க்கவும். வெல்லத்தூள் கரையும்போது ஏற்கெனவே செய்து வைத்திருக்கும் பொடியில் தேவையானதைப் போட்டுக் கலக்கவும். மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு அடுப்புச்சூட்டோடு வைத்தால் இன்னும் கொஞ்சம் இறுகும்.  இதற்கு மிளகாய் வற்றலைப் போடாமல் மற்ற சாமான்களைப் போட்டுத் தாளித்துக் கொண்டு வறுத்துப் பொடிக்கும் பொடியில் மிளகைக் கூடுதலாகச் சேர்க்கலாம். கோயில் புளியோதரை போல் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்குக் காரம் தாங்காது. 

சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு அரைத் தேக்கரண்டி உப்பு, அரைத்தேக்கரண்டி மஞ்சள் பொடி, அரைத்தேக்கரண்டி பெருங்காயப் பொடி சேர்த்து ஒரு சின்னக் குழிக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு சாதத்தை உதிர்க்கவும். செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலில் தேவையானதாகக் கொஞ்சம் எடுத்து இதில் போட்டு நன்றாகக் கலக்கவும். புளியோதரை தயார் ஆனதும் நிவேதனம் செய்துட்டு விநியோகிக்கலாம்.

இன்று மாலை வேர்க்கடலைச் சுண்டல் பண்ணலாம். வேர்க்கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் நன்கு கழுவி உப்புச் சேர்த்துக் குக்கரில் அல்லது வாயகன்ற கனமான பாத்திரத்தில் வேக வைக்கவும். பின்னர் நீரை வடிகட்டி விட்டுக் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருகப்பிலை தாளித்துக் கொண்டு அதில் வடிகட்டி வைத்திருக்கும் வேர்க்கடலையைப் போட்டுச் சிறிது மிளகாய்வற்றல்+தனியாப் பொடியையும் சேர்த்துக் கிளறிவிட்டுத் தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறவும். சுண்டல் விநியோகத்துக்குத் தயார்.

சஹானாவில் லிங்க்! கீழே!

Friday, October 16, 2020

நவராத்திரி நாயகியர் மற்றும் வழிபாடுகள்!

 நவராத்திரி மூன்று வகைப்படும். அவற்றில் சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி என 3 வகைகள் உண்டு. ஆஷாட நவராத்திரி என்பது ஆடி மாதம் அமாவாசையிலிருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். சாரதா நவராத்திரி புரட்டாசி மாதம் மஹாலய அமாவாசையிலிருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். இந்த வருஷம் புரட்டாசி மாதம் இரண்டு அமாவசைகளுடன் அதிக மாதம் எனப்படும் மாதமாக இருப்பதால் புரட்டாசி மாத 2 ஆவது அமாவாசையிலிருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. வசந்த நவராத்திரி என்பது வசந்த கால ஆரம்பத்தில் பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர் கொண்டாடப் படுகிறது. இவற்றில் பொதுமக்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி அல்லது சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியே ஆகும். 

இந்த நவராத்திரிக்குத் தனிச் சிறப்பு உண்டு. இது முழுக்க முழுக்கப் பெண்களுக்கான பண்டிகை என்றாலும் ஆண்களின் பங்களிப்பு இல்லாமல் நிறைவேறுவது இல்லை. பெண் தெய்வம் ஆகிய ஆதி சக்தி அசுரத்தனங்களைக் கொன்று அழித்து வெற்றி கண்டதைக் கொண்டாடும் பண்டிகை இது. தேவியின் சக்தி மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றும் ஆகும். ஆதி சக்தியான ஸ்ரீலலிதை மஹிஷாசுரனை வதம் செய்ய துர்கா பரமேஸ்வரியாக அவதாரம் எடுத்தாள். அதை ஒட்டியே நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அசுர சக்தி மேலோங்கும் சமயம் மக்கள் மனதில் ஏற்படும் பீதியைப் போக்கும் துர்கா பரமேஸ்வரிக்காக நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. மக்கள் மனதில் பயம் நீங்கியதும் செல்வத்தை அடைய அடுத்த மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மிக்காகக் கொண்டாடப்படுகிறது. கடைசி மூன்று நாட்களோ  அறிவு பெருகி ஞானம் அடைவதற்காக சரஸ்வதிக்காகக் கொண்டாடப் படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு பருவம் உள்ள பெண் குழந்தையாக நினைத்து ஆராதித்து வழிபடுவார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையாகக் கொண்டாடினாலும் கடைசி நாட்கள் சரஸ்வதி பூஜை, விஜயதசமி எனத் தென்னாட்டிலும் துர்கா பூஜை, தசரா என வட மாநிலங்களிலும் கொண்டாடுகிறார்கள். இதற்காகத் தென் மாநிலங்களில் பொம்மைக் கொலு வைப்பார்கள். அதில் சுமார் ஒன்பது படிகள் இருக்கும். ஒவ்வொரு படியும் உலக வாழ்வின் தத்துவத்தை எடுத்துச் சொல்வதாக அமையும். கீழே தெப்பக்குளம் அமைத்து அதில் நீர் வாழ் உயிரினங்களை பொம்மை வடிவில் மிதக்க விடுவார்கள். உலகம் முதலில் நீரால் சூழ்ந்திருந்ததை அது நினைவூட்டும். அடுத்து படிகளில் நீரில், நிலத்தில் வாழும் உயிரினங்கள். அடுத்த படியில் காட்டு மிருகங்கள். அடுத்த படிகளில் மனிதர்களால் வளர்க்கப்படும் வீட்டு மிருகங்கள். அதன் பின்னர் பாதி மனிதன், பாதி மிருகமான காட்டு மனிதர்கள். அதன் பின்னர் பரிணாம வளர்ச்சியில் குறுகிய மனிதன், பின்னர் சாதாரணமான இப்போதைய மனிதன், என ஆரம்பித்துச் சாதாரண மனிதர்கள், அவர்களில் திருமணங்கள் செய்யும் காட்சிகள் எனவகை வகையாய் வைத்துப் பின்னர் மனித நிலையிலிருந்து உயர்ந்த சில தெய்வீக மனிதர்களான புத்தர், வள்ளலார், விவேகானந்தர், ராகவேந்திரர், காந்தி  போன்றவர்களின் உருவ பொம்மைகள், அதன் பின்னர் தேவாதி தேவர்கள், ஶ்ரீகிருஷ்ணன், ஶ்ரீராமன் போன்ற மனிதத் தன்மையும், தெய்வத் தன்மையும் கலந்த அவதாரங்கள் என வைத்துப் பின்னர் கடைசிப் படியில் மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களோடு நடுவில் ஆதி பராசக்தியையும் வைப்பார்கள். மனிதன் புழு, பூச்சியிலிருந்து ஆரம்பித்து தெய்வீக நிலையை அடைவதைச் சுட்டிக்காட்டும்படி அவை அமைக்கப்படும். 

சக்தியின் வெளிப்பாடே இவற்றில் முக்கியம். அன்னையின் தசமஹா சக்திகளையும் இந்த நாட்களில் விசேஷமாகக் கொண்டாடுவார்கள் சக்தி உபாசகர்கள்.. முக்கியமாய் மஹிஷனை வதம் செய்த துர்கைக்கே முக்கியத்துவம். ஆகவே நாம் இப்போது துர்கையின் பல்வேறு வடிவங்களையும் நவராத்திரி நாளின் முதல் நாளிலிருந்து ஒன்பது நாட்களுக்கும் ஆன தேவிகளையும் பற்றிப் பார்ப்போம். 




நவராத்திரி முதல் நாள்: சித்தாத்ரி மாதா!

நவராத்திரி முதல் நாளில் வழிபட வேண்டியவள் சித்தாத்ரி மாதா ஆவாள். பொதுவாக சனிக்கிழமைகளிலேயே இவள் வழிபடப்படுவாள். இந்த வருஷம் நவராத்திரி ஆரம்பம் சனிக்கிழமை என்பதால் இவளை வழிபடப் பொருத்தமான தினம் சனிக்கிழமையும் முதல்நாள் நவராத்திரி தினமும் ஆகும். இந்த தேவி அஷ்டமாசித்திகளான அணிமா, மஹிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளையும் அளிப்பதால் இவள் சித்தாத்ரி எனப்படுகிறாள். நவரசங்களையும் வெளிப்படுத்தும் நவரச நாட்டியங்களில் ஒரு வகையான சிருங்கார தாண்டவத்தை ஈசன் ஆடியபோது தோன்றியவள் சித்தாத்ரி என்பார்கள். இன்னும் இவளைக் “காலி” எனப்படும் மஹாகாளியாகவும் வழிபடலாம். (காலி என்பதே சரியான உச்சரிப்பு) இவளும் சனிக்கிழமைக்கு உரியவளே! காலத்தைக் குறிப்பதால் காலி என்பதால் இந்தப் பெயர் என்பதோடு அல்லாமல் காற்றின் வேகத்தில் நமக்கு வேண்டியதைச் செய்ய நம்மை வந்தடைவாள் என்றும் சக்தி உபாசகர்கள் சொல்லுவார்கள். காலத்தை வென்றவளான இவள் தன் கரிய நிறத்தாலும் “காலி”எனப்படுகிறாள். அச்சமூட்டும் தோற்றத்துடன் விளங்கினாலும் தன்னை நம்பியவர்களுக்குக் காற்றை விடக் கடுகி வந்து வேண்டியன செய்வாள். கால ராத்ரி என்னும் பெயரிலும் அழைக்கப்படும் இவள் தன்னை அண்டியவர்களுக்கு மங்களங்களை அள்ளித் தருவாள். சனிக்கிழமைகளில் இவளை வணங்குபவர்களுக்குச் சனைஸ்வரனின் தாக்கம் குறையும். மனவல்லமை அளிக்கக் கூடிய இந்தக் காளியானவள் தாருகா வனத்து முனிவர்களால் ஏவப்பட்ட கஜமுகாசுரனைக் கொன்று அவன் தோலைப் போர்த்திக் கொண்டு ஈசன் ஆடிய பூதத் தாண்டவத்தின் போது தோன்றியவள். அதனாலும் இவள் பெயர் காலி எனப்படும். இன்றைய தினம் கொலுவில் தேவியை ஶ்ரீதுர்கையாக அலங்கரிக்கலாம்.


பாலா திரிபுர சுந்தரி

நவராத்திரி முதல் நாள் பொட்டுக்கோலம் போட்டு அம்பிகையை “பாலை”யாக நினைத்து ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும். குமாரி எனவும் அழைக்கலாம். இரண்டு வயதுப் பெண் குழந்தையை “பாலை”யாக நினைத்து வழிபடலாம். அதற்குப் பிடித்த ஆகாரங்கள், பொம்மைகள், துணிகள் ஆகியவற்றைக் கொடுத்துக் குறிப்பாக மஞ்சள் நிறம் கொண்ட துணிகளைக் கொடுப்பது சிறப்பு. மஞ்சள் சாமந்திப்பூவால் வழிபாடுகள் செய்யலாம். மஞ்சள் முல்லையும் மிகச் சிறப்பு. செவ்வரளியும் உத்தமம். சிலர் மல்லிகைப் பூவும் கொடுப்பார்கள். லலிதா நவரத்ன மாலையால் பாடிக் குழந்தையை ஆராதிக்கலாம். மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தையும் சொல்லலாம். குழந்தைக்குப் பிடித்த சாப்பாடு கொடுக்கலாம் எனினும் மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சைச் சாதம் நிவேதனத்துக்குச் சிறப்பு. வெண் பொங்கலில் கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்துச் செய்தும் கொடுக்கலாம். மஞ்சள் நிறம் சிறப்பு. 

பச்சைப் பயறுச் சுண்டல்: மாலை முதல் நாள் என்பதால் இனிப்புச் சுண்டலான பச்சைப்பயறுச் சுண்டல் செய்யலாம். பச்சைப் பயறை முதல் நாளே ஊற வைத்துக் கழுவி அரை உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு வாணலியில் நெய் ஊற்றிக் கொண்டு கடுகு மட்டும் தாளித்துக் கொண்டு வெந்த பயறைப் போட்டு வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து ஏலக்காய்ப் பொடியும்போட்டுக் கிளற வேண்டும். இதை கொலுவுக்கு வருகிறவர்களுக்கு விநியோகிக்கலாம். 

மொச்சைச் சுண்டல் . மொச்சையை முதல் நாளே ஊற வைத்துக் கொண்டு மறுநாள் வாயகலமான அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரில் தேவையான உப்பைச் சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின்னர் வெந்த பருப்பை வடிகட்டிக் கொண்டு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல், கருகப்பிலை தாளித்துக் கொண்டு வெந்த மொச்சையைப் போட்டுக் கிளறவும். மறுபடியும் உப்புப் போடக் கூடாது. 10, 12 மிளகாய் வற்றல்+ இரண்டு மேஜைக்கரண்டிக் கொத்துமல்லி விதையக் கொஞ்சம் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால் சுண்டலில் மிளகாய் வற்றலைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொடியைப் போட்டுக் கிளறலாம். பின்னர் துருவிய தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறிவிட்டுப் பின்னர் விநியோகம் செய்யலாம்.

இது நாளைய தினம் நவராத்திரி முதல்நாள் வழிபாட்டுக்கு உரியது, இரண்டாம் நாளுக்கான பதிவு நாளை வரும்.  இந்தப் பதிவை சஹானா. காம்.  இணைய இதழிலும் பார்க்கலாம்.

சஹானா.காம்

Tuesday, October 13, 2020

ப்ளாகர் கொடுக்கும் அகுடியா! (ஐடியா)

 ப்ளாகர் டாஷ்போர்டில் பக்கத்திலேயே அகுடியா/ஐடியா கொடுக்கிறாங்களாம். ஆண்டாளின் சகோதரர் பத்தி எழுதுனு ஒரு ஐடியா! இன்னொன்று சகோதரர் பெயர் தெரியுமா உனக்குனு! இன்னொன்று ரங்கநாதர் பத்தி எழுதுனு சொல்லுது. இன்னொன்று காவிரியைப் பத்தி எழுது! காவிரிப் பாசனத்தில் சூரியகாந்தியைப் பண்ணலாமானு ஒரு அகுடியா! காவிரியின் வேகம் என்னனு ஒரு அகுடியா! இன்னொன்று காவிரியை எப்படிச் சுத்தம் செய்யறதுனு! இப்படி அகுடியா மன்னனாக ஆகிவிட்டது ப்ளாகர். 

இதிலே இப்போ நவராத்திரி சமயங்கறதாலே அதைப் பத்தி எழுதுனு ஒரு அகுடியா! யாரோ ஒருத்தர் அவங்க அம்மா இறந்துட்டதாலே நவராத்திரி பொம்மைக்கொலு வைக்கலாமானு கேட்டிருக்கார். இன்னொருத்தர் ராமாயணம், மஹாபாரதம் பத்தி எழுதுனு சொல்கிறார். எதை எழுத, எதை விட?  தோசைப்புராணம் எழுதச் சொல்லி ஒரு அகுடியா! கர்நாடகாவின் எம்ஜி ரோடில் ஒரு ஓட்டல் பெயரைக் குறிப்பிட்டு அங்கே தோசை சாப்பிட்டிருக்கியா? தோசையின் நடுவில் என்ன தடவித் தருவாங்கனு ஒரு கேள்வி. வெண்ணெய் தோசை கர்நாடகாவில் எங்கே பிரபலம்னு ஒரு கேள்வி! நான் சாப்பிட்டது என்னமோ கோலாப்பூரில். கர்நாடகாவில் சாப்பிடலை!  இது பக்கத்திலேயே இருந்துண்டு ஒரே பிடுங்கலா இருக்குனு அதை மூடிட்டேன். யாரோ, எங்கேயோ இருந்துண்டு நம்மை வேவு பார்க்கிறாங்களோனு ஒரு எண்ணம். பக்கத்திலேயே ஏன் வருது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லோருக்கும் இப்படி வருதா தெரியலை. நான் தான் weird  ஆச்சே! அதனால் எனக்கு மட்டும் வருதா? ஏனெனில் யாரும் இதைப் பத்திச் சொல்லவே இல்லை. 

இது என்ன சொன்னாலும் நான் எனக்கு என்ன இஷ்டமோ, என்ன எழுதணும்னு தோணுதோ அதைத் தான் எழுதப் போறேன். அது பாட்டுக்குச் சொல்லிட்டு இருக்கட்டும். அதன் வாயை அடைச்சுட்டு நான் பாட்டுக்கு எழுதறேன்.

Tuesday, October 06, 2020

இதெல்லாம் திப்பிசத்தோடு சேர்த்தி இல்லை!

 முன்னெல்லாம் அதாவது பதிவுகள் எழுத ஆரம்பித்த சமயம், பதினைந்து வருஷங்களுக்கு முன்னர் இரண்டு தீவிர விஷயங்களைக் கொண்ட மாதிரி மனோபாவத்தோடு பதிவுகள் போட்டால் அதைச் சரிக்கட்ட இரண்டு மொக்கைகள் போடுவேன். எல்லாம் நம்ம உலக்கை நாயகர், ஒரு சீரியஸ் படம் எடுத்தால் ஒரு மொக்கை எடுப்பாரே! அது மாதிரித் தான்! இஃகி,இஃகி,இஃகி! இப்போல்லாம் பதிவுகள் தினசரி போடுவதையே நிறுத்திட்டேன். என்னிக்கானும் தான்! ஆகவே மொக்கைகள் போடவே முடிவதில்லை. இன்னிக்கு ஒரு மொக்கைப் பதிவு. 

பானுமதியோடு ஜவ்வரிசி வடையைப் பார்த்ததும் நேத்திக்கு நானும் ஜவ்வரிசிக் கிச்சடி/உப்புமாவுக்கு ஜவ்வரிசியை ஊற வைச்சிருந்தேனா! மத்தியானம் சாதம் கொஞ்சம் அதிகம் மிஞ்சி விட்டது. இன்னிக்குச் செவ்வாய்க்கிழமை! விரதம்னு இருக்காட்டியும் பழையது சாப்பிட முடியாது! சாதத்தைத் தீர்த்துடணும். உப்புமாவை ஊற வைச்ச ஜவ்வரிசியைப் போட்டுக் கிளறினால் அதுவே நிறைய ஆயிடும். சாதம் வீணாகிடும். தூக்கியும் எறிய முடியாது. இத்தனைக்கும் ஒரு கிண்ணம் ஜவ்வரிசி தான் ஊற வைச்சேன். ஊறி இரட்டிப்பாகி விடுமே! ஆகவே உப்புமாவுக்கு ஊற வைச்ச ஜவ்வரிசியில் பாதியை எடுத்து வைச்சுட்டு மீதியில் சாபுதானா கிச்சடி பண்ணி, அந்த சாதத்தையும் மோர் விட்டுப் பிசைந்து ஊறுகாயோடு சாப்பிட்டாச்சு. இன்னிக்குக் காலையிலிருந்து அந்த ஜவ்வரிசியை என்ன செய்யலாம்னு பேச்சு வார்த்தைகள்! சுமுகமான முறையிலேயே போச்சு! மிச்சம் வேர்க்கடலைப் பொடியும் இருந்தது. தாலி பீத் பண்ணவானு கேட்டேன். ராத்திரி வேளைக்கு அது ரொம்பவே வயிறு கனமாக இருக்கும்னு சொன்னார். ஆகவே ஜவ்வரிசி வடை செய்துடலாம். ஆளுக்கு இரண்டிரண்டு வரும்னு முடிவு பண்ணி ஓகேனு அப்ரூவலும் வாங்கியாச்சு. ஒரு நடுத்தர உருளைக்கிழங்கைக் குக்கரில் குழைய வேக விட்டு எடுத்துக் கொண்டேன். 

ஊற வைச்ச ஜவ்வரிசியைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சிருந்ததை சுமார் 2 மணி அளவில் வெளியே எடுத்து வைத்திருந்தேன். அதில் உருளைக்கிழங்கை உதிர்த்துப் போட்டு, வேர்க்கடலைப் பொடியையும் போட்டுப் பச்சைமிளகாய், (இஞ்சி மறந்துட்டேன்) உப்பு, கருகப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயப் பொடி போட்டுச் சேர்த்துப் பிசைந்தேன். வேர்க்கடலைப் பொடி போதவில்லை. சரினு என்னிடம் எப்போவும் கையிருப்பில் இருக்கும் பொட்டுக்கடலைப் பொடியில் கொஞ்சம் சேர்த்துக் கொண்டேன். (இது ஒண்ணு தான் திப்பிசம்) சரியாகி விட்டது. வடைகளாகத் தட்டினேன்.  படங்கள் கீழே! 



பிசைந்து வைத்திருக்கும் மாவு! இலை எடுத்து வைச்சுக்க மறந்துட்டேன். ஆகவே ப்ளாஸ்டிக் கவர்!


வெந்து கொண்டிருக்கும் வடைகள். ஜவ்வரிசி முத்து முத்தாகத் தெரிந்ததும் ரேவதி நினைவு வந்தது., வடை ஓரம் எல்லாம் முறுகலோ முறுகல். பொட்டுக்கடலை மாவு காரணமோனு நினைச்சேன். இனிமேல் பொட்டுக்கடலை மாவே போடலாமோனும் நினைச்சேன். நன்றாக உப்பிக் கொண்டு வந்தது. சாப்பிட்டாச்சு பானுமதி தயவில்! 

Saturday, October 03, 2020

நாற்பதுகளில் மும்பையில் நடந்த கடற்படை புரட்சி!

சிப்பாய்க் கலகம் 

சிப்பாய்க் கலகம் 2

துரோகம்

துரோகம் 2

3 கொடிகள்

புரட்சி

சரண்

சரண் 2

காந்தி பற்றிய பேச்சு ஒன்றில் ரேவதி மும்பையில் நடந்த கடற்படைப் புரட்சி பற்றிக் கேட்டிருந்தார். அவர் அதைப் பற்றி அறிவார் எனினும் நான் எழுதியதைப் படிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். ஆகவே  அதைக் குறித்து நான் எழுதிய சில பதிவுகளின் சுட்டிகள் மேலே! அவற்றைக் காப்பி, பேஸ்ட் பண்ணலாம்னு தான் நினைச்சேன். கிட்டத்தட்டப் பத்துப் பதிவுகள். ஆகவே சுட்டிகளைக் கொடுத்திருக்கேன், விருப்பம் உள்ளவர்கள் அங்கே போய்ப் படிச்சுக்கலாம். எல்லாம் 2007 ஆம் ஆண்டில் அம்பேரிக்காவில் இருந்தப்போ எழுதினவை! அவற்றில் ஒன்றில் துரைராஜ்னு ஒருத்தர் கருத்து இடம்பெற்றிருக்கிறது. நம்ம துரையோனு நினைச்சுப் பார்த்தால் நம்ம துரை/ துரை செல்வராஜ்னு நினைவு வந்தது. இது வேறே யாரோ! ஆனால் நம்ம ஜீவி சார் பாராட்டிக் கருத்துச் சொல்லி இருக்கார். படிச்சவங்க காந்தியைப் பற்றிய உங்கள் கருத்துகளை இஷ்டமிருந்தால் பகிரலாம். கட்டாயமெல்லாம் இல்லை. 

Friday, October 02, 2020

இன்று மட்டுமில்லாமல் என்றும் நினைக்க வேண்டியவர்கள்!

 

இன்று காந்திக்கு மட்டுமில்லாமல் நேருவுக்குப் பின்னர் பிரதமராக இருந்த திரு லால்பஹாதூர் சாஸ்திரி அவர்களுக்கும் பிறந்த நாள். யாருமே நினைவு கூரவில்லை. அவரைப் பற்றிய பேச்சே யாரிடமும் காணமுடியவும் இல்லை. இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தத்துக்கு உழைத்தவர். மர்மமான முறையில் ரஷ்யாவின் தாஷ்கென்டில் உயிர் இழந்தவர். நேதாஜியின் மறைவைப் போல் இன்றளவும் இவர் மரணமும் ஓர் மர்மமாகவே நீடிக்கிறது.



இன்று பெருந்தலைவர் காமராஜர் உயிர் நீத்த நாள். இந்த நாளில் நாங்க புது தில்லி க்ரான்ட் ட்ரங்க் விரைவு வண்டியில் ராஜஸ்தான் செல்லவேண்டி ஆக்ராவிற்குப் பயணித்துக் கொண்டிருந்தோம். ரயிலில் கூட வந்த எவரோ வைத்திருந்த ட்ரான்சிஸ்டர் மூலம் கிடைத்த செய்தி மனதை வேதனைப் பட வைத்தது. சாப்பாடு சாப்பிட ஆரம்பித்திருந்த நேரம். இந்தச் செய்தியைக் கேட்டபின்னர் சாப்பிட மனம் வரலை. வருத்தமாக இருந்தது, நீண்ட நாட்கள் நீடித்த வருத்தம்.

***********************************************************************************


Srividya Veeraragavan  


என் கணவரின் தங்கையும் என் இரண்டாவது நாத்தனாரின் இரண்டாவது பெண்ணுமான ஸ்ரீவித்யா வீரராகவன் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாகக் "கதை சொல்லி"யாக இருந்து வருகிறார். இதிஹாச, புராணங்களில் இருந்தும் பஞ்ச தந்திரக் கதைகளில் இருந்தும் தக்க நீதி போதனைக்கதைகளைத் தேர்ந்தெடுத்துச் சிறார்களுக்கு நம் கலாசாரம், இதிஹாசம் போன்றவற்றில் உள்ள நீதி, நேர்மை, உண்மை போன்றவற்றை எடுத்துக் காட்டிச் சொல்லி வருகிறார். இதற்காகச் சேரிகளுக்குக் கூடப் போய்ச் சொல்லுவதற்குத் தயங்கியதில்லை. அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என எல்லாப் பள்ளிகளின் சிறார்களுக்கும் இவரின் "ஸ்டோரி ட்ரெயின்" செல்லுகிறது. இதற்காக அம்பேரிக்காவில் கூடச் சென்று அங்குள்ள கதை சொல்லிகளைப் பற்றிக் கேட்டும், பழகியும், படித்தும் வந்தார்.  இவரின் தந்தை என் சித்தப்பா "அசோகமித்திரன்" அவர்களின் கூடப் பிறந்த தம்பியாவார். 


சென்னை, அடையார், கேந்திரிய வித்யாலயாவில் படித்த ஸ்ரீவித்யா தன் பட்டப்படிப்பை முடித்த பின்னர் Madras School of Social Works இல் சேர்ந்து பயிற்சியும் பட்டமும் பெற்றுச் சில காலம் டாடா கன்சல்டன்சியில் இருந்தபின்னர் திருமணம் ஆகிக் குழந்தை பிறந்த நிலையில் சமூக சேவையிலிருந்து ஒதுங்கி இருந்தார். இவர் பிள்ளைக்கு ஐந்து வயது ஆகும்போது அவனை ஒத்த குழந்தைகளுக்காக ஆரம்பித்த இவரின் பயணம் தொடர்ந்து நீடிக்கிறது. இப்போது பத்து வயது ஆகும் அவர் மகனும் படிப்பிலும், இசையிலும் திறமையுடன் விளங்குகிறான். 

இவரைப் பற்றி எதற்கு இத்தனை சொல்கிறேன் என்றால் கடந்த செப்டெம்பர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நம் பிரதமர் ஆற்றிய "மன் கி பாத்" பேச்சில் அவர் இந்தக் கதை சொல்லிகளையும் பெயர் சொல்லிக் குறிப்பிட்டுப் பாராட்டி உள்ளார். மற்ற இருவரையும் சொன்ன பிரதமர் சென்னையிலிருந்து ஓர் பெண்மணி ஸ்ரீவித்யா வீரராகவன் எனக் குறிப்பிட்டு எங்கள் நாத்தனார் பெண்ணையும் குறிப்பாகப் பாராட்டி அங்கீகாரம் செய்துள்ளார். இந்தச் செய்தி அன்றே உடனேயே தெரிந்து முகநூலிலும் இதைப் பற்றிப் போட்டுவிட்டேன். ஆனால் இங்கே கொஞ்சம் தாமதமாகச் சொல்லுகிறேன். ஶ்ரீவித்யா சின்ன வயதிலேயே ஆங்கிலக் கவிதைகள் எழுதுவதில் திறமை வாய்ந்தவர். அவருக்குப் பனிரண்டு வயதாய் இருக்கும்போது தந்தையை இழந்ததில் அவர் மேல் எழுதிய கவிதைகள் வெகுநாட்கள் வரை அடையார் கேந்திரியவித்யாலயாவின் நோட்டீஸ் போர்டில் தொகுக்கப்பட்டு விளங்கியது. வாய்ப்பாட்டு, வீணை ஆகியவற்றிலும் தேர்ந்த வித்யாவுக்குச் செல்லங்கள் எதாக இருந்தாலும் அவற்றின் மேல் அளவு கடந்த பிரியம். கொஞ்சம் கூடக் குரலை உயர்த்திப் பேசாத சுபாவம். அவருக்குப் பிரதமராக் கொடுக்கப்பட்ட இந்த கௌரவம் எல்லாவிதத்திலும் தகுதி வாய்ந்ததே ஆகும்.  மேலே கொடுத்துள்ள சுட்டியில் "தி ஹிந்து"வில் வெளிவந்த வித்யாவின் பேட்டியைப் பார்க்கலாம்.

தாய் மாமன், மாமி என்னும் முறையில் நாங்கள் இருவரும் வித்யாவின் குடும்பம் சீருடனும், சிறப்புடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.