எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 31, 2007

ஹூஸ்டன் பெற்ற பெரும் பேறு!

முதலில் இந்த மாதிரி எழுதற எண்ணமே எனக்கு இல்லை. இந்த அம்பிதான் வேலை மெனக்கெட்டு எனக்கு மெயில் கொடுத்துத் "தலைவியின் ஹூஸ்டன் விஜயம்" அப்படின்னு ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்னு எழுதி இருந்தாரா? தொண்டர், அதுவும் என்னை நேரிலே பார்த்த முதல் தொண்டர், பிடிவாதமாய் எங்க அம்மா, அப்பா கல்யாணத்துக்குப் பல வருஷங்கள் முன்னாலேயே நான் பிறந்துவிட்டதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் தொண்டுகிழம், கேட்டிருப்பதை எவ்வாறு மறுப்பது? அதான் இந்தப் போஸ்ட்! ம்ம்ம்ம்ம், எப்போ வேணாலும் தலைவி இங்கே "நாசா"வுக்கு விஜயம் செய்யலாம். ஹிலாரி கிளின்டனுக்கு உதவி செய்யத் (மதுரையம்பதி தான் ரொம்பக் கேட்டுக் கொண்டார்)தான் நான் யு.எஸ். வந்தேன் என்பது உலகு அறிந்த உண்மை! அவங்க பிரச்னை தீர்ந்து போச்சு, எல்லாம் பத்திரிகைகளிலும், செய்தித் தாள்களிலும் பார்த்திருப்பீங்களே! அதான் மெம்பிஸில் இருந்து கிளம்பிட்டேன்.


மெம்பிஸில் இருந்து சனிக்கிழமை கிளம்பி ஹூஸ்டன் வந்தாச்சு. இங்கே கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டுப் பின்னர் இந்தியா திரும்பணும். முதலிலே நாங்க 2 பேரும் விமானத்திலேயே ஹூஸ்டன் வந்துடலாம்னுதான் நினைச்சோம். விமானம் டிக்கெட் விலை, விமானத்தின் விலையை விடச் சற்று அதிகமா இருந்ததாலும், தற்சமயம் விமானம் எதுவும் வாங்கும் எண்ணம் இல்லாத காரணத்தாலும், நாங்க காரில் பிரயாணம் செய்வதையே தேர்ந்தெடுத்தோம். மெம்பிஸில் இருந்து "ப்ரீவே" எனப்படும் ஹைவேயில் வருவதென்றால் மூன்று மாநிலங்கள் கடந்து வரவேண்டும். மெம்பிஸில் இருந்து மிஸ்ஸிஸிபி, பின் ஆர்கன்சாஸ், பின்னர் லூஸியானா அல்லது முதலில் லூசியானா, பின்னர் ஆர்கன்சாஸ் என்றோ கடந்து வரவேண்டும். ஆனால் எங்க பையன் அப்படிவராமல் ஆர்கன்சாஸ் வந்து பின்னர் அங்கிருந்து பிரியும் டெக்ஸாஸ் மாநிலத்தின் "மாநிலத் தரைவழிப்பாதை"யைத் தேர்ந்தெடுத்தான். இதில் நேரமும், தூரமும் குறையும். என்ன, அதிகம் "ரெஸ்ட் ஏரியா" இருக்காது. யு.எஸ்ஸில், ஹைவேயில் காரில் பயணிப்பது மிகவும் செளகரியமான ஒன்று. 80, அல்லது 100 மைல்களுக்கு இடையே ஒரு ரெஸ்ட் ஏரியா, அந்த, அந்த மாநிலத்தால் நிர்வகிக்கப் படும். சில இடங்களில் போர் வீரர்கள், அல்லது சரித்திர முக்கியத்துவம் பெற்ற மனிதர்களில் நினைவுக்கான ரெஸ்ட் ஏரியாவும் உண்டு. மிக மிகச் சுத்தமாகவும், 24 மணி நேரமும் செயல்படும் இந்த ரெஸ்ட் ஏரியாவில் கழிப்பறை வசதிகள் மட்டுமில்லாமல் குளிர்பானங்களும் கிடைக்கும் "வென்டிங் மெஷின்"களும் இருக்கும். சில இடங்களில் இரும்பினால் ஆன நாற்காலிகள் மரத்தடியிலோ அல்லது புல்வெளியிலோ போடப் பட்டிருக்கும். ஆகவே கையில் எடுத்துப் போகும் சாப்பாடை வசதியாக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் கூடப் போட்டு விட்டுப் போகலாம்.

மாநிலத்தால் நிர்வகிக்கப் படும் சாலை வழிகளிலும் ரெஸ்ட் ஏரியா உண்டு என்றாலும் கொஞ்சம் குறைவாக இருக்கும். என்றாலும் நாம் வழியில் பெட்ரோல் பங்குகள் இருக்கும் இடம் பார்த்துக் கொண்டு அங்கே ஊருக்குள் போக எக்ஸிட் எடுத்து ஊருக்குள் ஹைவேயில் இருந்து சற்றுத் தூரத்திலேயே இருக்கும் பெட்ரோல் பங்கில் போய் அங்கே இருக்கும் ரெஸ்ட் ரூம்களையும் உபயோகிக்கலாம். ஒன்றும் பிரச்னை இல்லை. கழிப்பறைகளை இங்கே "ரெஸ்ட் ரூம்" எனச் சொல்கிறார்கள். பெட்ரோல் பங்கில் ஷாப்பிங் வசதிகள் இருப்பதால் உணவு வகைகளும், குளிர் பானங்களும், காபி, டீ, சாக்லேட் மில்க் போன்றவைகளும் கிடைக்கும். இது தவிர சில ஊர்களில் உணவு வகைகளுக்கும் பெயர் போன மக்-டொனால்ட் கம்பெனிகளின் உணவு விடுதிகளும் ஹைவேயை ஒட்டியே நகரத்துக்குள் செல்லும் எக்ஸிட்டில் இருந்து சற்றுத் தூரத்திலேயே அமைந்திருக்கும். என்ன, எங்களைப் போன்ற சுத்த சைவக் காரர்கள் வெறும் காபி, டீயுடன் நிறுத்திக் கொள்ளும்படியா இருக்கும். கார்ப்பயணத்தில் நெடுந்தூரம் போவதின் சிரமமே தெரிவதில்லை. ஓட்டுபவர்களுக்கு வேண்டுமானால் சிரமமாய் இருக்கலாம். சாலையின் இரு பக்கங்களிலும் நம்ம ஊர் போல் கடைகள், ஆக்கிரமிப்புக்கள் என்று பார்க்க முடியாது. இரு பக்கமும் நெருங்கிய மரங்களுடன் கூடிய காடுகள்தான் பெரும்பாபாலாகத் தொடர்ந்து வரும். ஊர்கள் ஏதும் நெருங்கும்போது வீடுகளோ, அல்லாது "ராஞ்ச்" எனப்படும் பண்ணைகளோ, அதில் வளரும் ஆடு, மாடு, குதிரைகள், கோழி வகைகள் தெரியும் என்றாலும் ஹைவேக்கு அருகே அவை வரமுடியாதவாறு வேலி போட்டுத் தடுக்கப் பட்ட இடத்துக்குள்ளேயே மேய்ந்து கொண்டிருக்கும். மனித நடமாட்டமே பார்க்க முடியாது ஹைவேயில் எங்குமே! கார்கள் எல்லாம் கட்டாயமாய் 70மைல் வேகத்தில் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கும்.

Friday, July 27, 2007

அமெரிக்கா - ஆங்கிலேயர் எப்போவோ வந்தாச்சே!

காட்டாறு ரொம்பவே பாராட்டி இருக்காங்க, என்னோட எழுத்துத் திறமையை! ஹிஹிஹி, இப்படி எல்லாம் மொக்கை போட்டால் தான் கொஞ்சமாவது வருவாங்க! அவங்களுக்கு என்ன? பின்னூட்டமே வராமல் நான் படுகிற கவலை எனக்கு இல்லை தெரியும்? :))))) இந்த சமையல் பத்தி நிறையச் சொல்லணும் தான். ஆனால் நடு நடுவிலே சொல்லிக்கிறேன். இப்போ இங்கே கிடைக்கும் மற்ற செளகரியங்கள் பத்திப் பார்ப்போம். எல்லா வேலையும் நாமே தெரிஞ்சு வச்சுகிறது தான் டாலருக்கு நல்லது. கொஞ்சமாவது கையில் இருக்கும். வேலைக்கு ஆட்களைக் கூப்பிட்டால் சொத்தை எழுதி வைக்கணும். ஆகவே சொந்த சமையல் நல்லதுன்னாலும் சில இந்தியன் க்ரோசரியில் இட்லி, மசால் வடை, மசால் தோசையில் ஆரம்பித்து வட இந்திய உணவு வகைகள் வரை அனைத்தும் ப்ரோசன் ஆகக் கிடைக்கிறது. உங்களோட ஜீரண சக்தி நல்லா இருந்தால் கவலையே இல்லை. ஜமாய்க்கலாம். அல்லது சில பெண்கள் தங்கள் வீடுகளிலேயே இந்திய உணவு தயாரித்து விற்பனைக்கும் கொடுக்கிறார்கள். நமக்குத் தேவைப் படும் நேரத்துக்குக் குறைந்தது 2 மணி நேரமாவது முன்னால் சொல்லிவிட்டால் போதும். நிச்சயமாய் உணவு விடுதியை விட விலை குறைச்சல்தான்.டோர் டெலிவெரி சிலர்தான் செய்கிறார்கள் மற்ற இடங்களில் நாமே போய் வாங்கி வந்து விடலாம். நம் நாடு போலவே விசேஷங்களுக்குச் சமைத்துக் கொடுக்கவும் பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வே உங்களுக்கு இருக்காது. கோவில்கள் அனைத்திலும் அநேகமாய் இலவச உணவு ஞாயிற்றுக் கிழமைகளில் கிடைக்கின்றன. இங்கே மெம்பிஸில் அம்மாதிரி இல்லை என்றாலும் அநேகம் கோவில்கள் கொடுக்கின்றன.

பெரும்பாலும் தென் இந்தியக் கோவில்கள் ஆந்திரர்களாலேயே நிர்வகிக்கப் படுகின்றன. சில கோவில்களில் மாறுபட்டிருக்கலாம். குஜராத்தியர்களும் பெரும்பாலாகக் கோவில்களை நிர்வகிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா கோவில்களும், ஸ்வாமிநாராயண் கோவில்களும் குஜராத்தியர் முற்றிலும் நிர்வகிப்பதோடு, இலவசமாய்ச் சாப்பாடும் கொடுக்கின்றனர். பெருமளவில் ஹோமங்கள், யாகங்கள் போன்றவையும் நடத்தப் படுகின்றன. நிதானமாய் நல்லாத் தரிசனம் செய்யலாம். எல்லாக் கடவுளரும் பாகுபாடு இல்லாமல் ஒரே பெரிய ஹாலிலேயே இடம் பெற்று விடுகின்றனர். அநேகமாய் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் அனைவரும் திருப்பதியில் இருந்தே வருகின்றனர். ஹூஸ்டன் மீனாட்சி கோவில் மட்டும் விதி விலக்கு. அங்கே மதுரையைச் சேர்ந்த பட்டர்தான் இருக்கிறார்.
*************************************************************************************
14-ம் லூயி காலத்தில் ப்ரெஞ்ச் காலனிகள் நன்கு நிர்வகிக்கப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், அதிகம் பேர் காலனிகளில் வசிக்க முன்வரவில்லை. தவிர எப்போதும் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் உள்ள பகை உணர்வு இந்தக் காலனி ஆதிக்கத்திலும் ஏற்பட்டது. 1629-ல் ஒரு முறையும், 1632-ல் ஒரு முறையும் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் சண்டை ஏற்பட்டு "க்யூபெக்" பிடிக்கப் பட்டது. சாம்ப்ளேன் வேறு இடம் தேடிப் போனார். பின்னர் வந்த உதோப்பிய கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மிஷனரியில் இருந்து பிரசாரகர்களைக் கொண்டு வந்து உள்ளூர் மக்களைப் பெருமளவில் மதம் மாற்றினார்கள். இதை " Iraquois" என்ற பெயருள்ள வேறு இனத்தவர் எதிர்த்தனர். பிரான்ஸில் இருந்து 15 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 700 பேர் இங்கே அரசால் அனுப்பப் பட்டனர். உள்ளூர் மக்களுடன் திருமண உறவும் அனுமதிக்கப் பட்டது. இது ஹென்றி ஹட்சன் தன் வியாபாரத்தை விஸதரிக்கும் வரை நடந்தது. 1670-ல் ஹட்சனின் "பே கம்பனி" பிரான்ஸ் வியாபாரிகளின் வியாபாரத்துக்கு முடிவு கட்டியது. ப்ரெஞ்சுக்காரர்கள் தெற்கே நகர ஆரம்பித்தனர். 1682-ல் "ஒகையோ"வும் "மிஸ்ஸிஸிப்பி" பள்ளத்தாக்கும் கண்டு பிடிக்கப் பட்டது. "கல்ப் ஆப் மெக்ஸிகோ" வரை உள்ள பகுதி ப்ரெஞ்சுக்காரருடையது என அறிவிக்கப் பட்டது. "லூசியானா" என்ற பெயரும் அப்போது தான் வைக்கப் பட்டது. இனி அடுத்து "சூரியன் என்றும் மறையா ஆட்சியைத் தந்த ஆங்கிலேயர் ஆதிக்கம்"!

Wednesday, July 25, 2007

இது ஒரு காதல் கதை!

எல்லாருமே காதல் கதைகள் நிறையவே எழுதி இருக்காங்க. ஆனால் கல்கியின் இந்தக் காதல் கதை வித்தியாசமான ஒன்று. அவர் இதை எழுதும்போது திரைப்படமாய் எடுக்கும் நோக்கில் எழுதி வந்ததாய்ச் சொல்வார்கள். எப்போ எழுதினார் என்பதெல்லாம் தெரியலை. ஆனால் இதுதான் அவரோட கடைசிக் கதை என்ற வரையிலும் தெரியும். பாதியில் நின்று போன இந்தக் கதை பின்னர் அவர் பெண்ணான "ஆனந்தி"யால் எழுதி முடிக்கப் பட்டது என்றும் தெரிந்து கொண்டேன். எனக்குப் பத்து வயது இருக்கலாம். தற்செயலாக மாமா வீட்டுக்கு லீவுக்குப் போன நான் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தைப் படிக்க நேர்ந்தது. கதையில் சந்திரமணி என்னும் பெண், காசிலிங்கம் என்னும் சர்க்கஸ்காரரைக் காதல் மணம்புரிவதும், இந்துமதி என்ற பெண் பிறப்பதும் அவளின் காதலும் தான் முக்கியமான ஒன்று. காதல் என்றால் ஆண், பெண் இருவரிடம் மட்டும் திருமண ஆசையில் ஏற்படும் ஒன்று என்ற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருந்த நான், அப்போதுதான் வேறு பரிமாணங்கள் இதில் இருப்பதையும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன் எனச் சொல்லலாம். காதல் என்பது புரியாவிட்டாலும் அன்பு, பாசம்னால் புரியுமே! அந்த வகையில் இதில் புரியாமல் ஒன்றும் இல்லை. உண்மையில் இப்படிப் பட்ட ஓர் அன்பை, பாசத்தை, நேசத்தை, கரை காணாக் காதலை அன்று வரையில் எனக்குத் தெரியாது! கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. இது ஒரு கதைதானே என்றும் நினைத்துக் கொண்டேன். மற்றப் பாகங்கள் கிடைக்கவில்லை. முடிவும் தெரியவில்லை. சிறையில் இருக்கும் அமரதாரா என்ன ஆனாளோ என்ற எண்ணம் துரத்திக் கொண்டே இருந்தது. ரங்கதுரையும், இந்துமதியும் சேர்ந்தார்களா? இந்துமதி தன் மேலிருந்த கொலைப்பழியில் இருந்து தப்பித்தாளா? யார் உண்மையில் கொலை செய்தது? மனம் தத்தளித்துத் தடுமாறிக் கொண்டே இருந்தது பல வருஷங்கள். இந்தக் கதை மனதில் இருந்து கொண்டே இருந்தது.

அந்தப் புத்தகம் தான் "கல்கியின் அமரதாரா". கல்கி அவர்கள் தன் வாழ்நாளின் கடைசியில் எழுத ஆரம்பித்து முடிக்காமலே போனது. இந்தக் கதையின் நாயகியான "அமரதாரா" என்ற இந்துமதி சிறையில் இருக்கும்போது தன் காதலன் ஆன ரங்கதுரையின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதியதாய்க் கதை ஆரம்பிக்கும். கதை இந்துமதியின் அம்மா சந்திரமணி, காசிலிங்கத்தை மணந்து கொண்டு, உறவினர் தொல்லையில் இருந்து தப்பிக்க மந்திரமூர்த்திப் பண்ணையாரிடம் அடைக்கலம் புகுந்ததில் ஆரம்பித்து இருக்கும். இந்துமதியின் வார்த்தைகளிலேயே போகும் இந்தக் கதையில் இந்துமதி, ரங்கதுரையை முதன் முதல் அவன் சிநேகிதன் ஆன தங்க பாண்டியனுடன் சேர்ந்துக் காரில் போகும்போது சந்தித்ததும், அப்போது அவள் தறி கெட்டு ஓடும் கன்றுக்குட்டியை அடக்கக் கையில் பிடித்திருந்ததும், தாவணி காற்றில் பறக்க, பின்னல் தொங்க, கன்றுக்குட்டியை அடக்க முடியாமல் பிடித்து இழுத்துக் கொண்டு நிற்கும் இந்துமதியையும் அவளைப் பார்த்து வியக்கும் ரங்கதுரையையும் ஓவியர் மணியத்தின் தூரிகை அருமையாகச் சித்தரித்து இருக்கும். இந்துமதி தன் வாழ்க்கையைப் பற்றி ரங்கதுரையின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதிக் கொடுத்தது போலவே, அவனும் தன் வாழ்க்கையைப் பற்றி முழுதும் எழுதி அவளிடம் படிக்கக் கொடுப்பான். அவனுக்கு அவள் மேல் உள்ள அன்பு எத்தகையது என்றால் இந்துமதிக்காகத் தன்னுடைய நீதிபதி பதவியையே வேண்டாம் என உதறிவிடும் அளவுக்கு இருந்தது.

ரங்கதுரைக்கு இந்துமதியிடம் தானாகப் பெருக்கெடுத்து வரும் அன்பும், பாசமும், நேசமும், காதலும், பரிவும் கதை முழுதும் விரவி நிற்கும். அதன் பிரதிபலிப்பே போல் இந்துமதிக்கும் ரங்க துரையிடம் ஏற்படும் அன்பும் இருக்கும். இருவருக்குமே இது எப்படிப்பட்ட அன்பு என்று ஆச்சரியமாக இருக்கும். தந்தை மகளிடம் வைத்திருக்கும் பாசம் போன்றதா? தாய் மகனிடம் காட்டும் அன்பு போன்றதா? அல்லது காதலன், காதலியிடம் காட்டும் காதலா? அல்லது கணவன், மனைவிக்குள் உள்ள நேசமா? என்று ஆச்சரியப் படுவார்கள். நானும் சேர்ந்துதான் ஆச்சரியப் பட்டிருக்கிறேன், இது என்ன அன்பு என்று. இந்துமதி ரங்கதுரையை நினைத்து ஏங்கும் அதே சமயம் ரங்கதுரையும் இந்துமதியை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பான். இதையும் மணியத்தின் ஓவியம் மிகவும் அருமையாகச் சித்தரித்து இருக்கும். இந்துமதியின் கண்களில் தெரியும் ஏக்கமும், வருத்தமும் நம் நெஞ்சையே உலுக்கும். ரங்கதுரை அருகில் இல்லாமல் அவள் நண்பர்களாலும், உறவினர்களாலும் ஏமாற்றப் பட்டதும், அதன் தாக்கத்தில் சினிமாவில் நடிக்கப் போனதும், அதற்குப் பின்னர் ரங்கதுரையை நெருங்கிய சிநேகிதியுடன் கண்டு மனம் வெதும்பிப் போய் தங்கள் காதல் கதையையே படமாக எடுத்ததும், அதைப் பார்த்து மனம் பதைத்துப் போன ரங்கதுரையும், இப்போது ரங்கதுரை இங்கே வந்தால் பரவாயில்லை, என இந்துமதி அவன் பிரிவு தாங்க முடியாமல் நினைக்கும் அதே வேளையில் ரங்கதுரை அவள் அருகே வந்து விட்டிருப்பான். மனதின் எண்ண அலைகளின் ஓட்டமும், ஒரே சமயத்தில் இருவருக்கும் சேர்ந்தாற்போல் எண்ணங்கள் பரிமாற்றம் ஆகும் விந்தையும் சிலிர்க்க வைக்கும். கதையைப் படித்த எல்லாருக்கும் இப்படி இருக்குமா? அல்லது இருந்ததா? தெரியாது! என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு அதிசயம், ஆனந்தம், அபூர்வம், அழகு, எல்லையற்றது!. அவ்வளவுதான். இம்மாதிரியான அன்பை நான் அப்போதுதான் முதன்முதலாய் உணர்ந்தேன்.

அதுவரை பாரதியின் சுதந்திரப் போரட்டப் பாடல்களையே கேட்டிருந்த நான் அவரின் காதல் பாட்டுக்களையும் இந்தக் கதை மூலம் அறிமுகம் செய்து கொண்டேன். இப்போதும் ,

"நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்,
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்,
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்,
சின்னக் குமிழிகளில் நின்முகங்கன்டேன்"
"பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை,
சிரித்த ஒலியினில் உன் கைவிலக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங்கண்டேன்"

என்ற பாரதியின் பாட்டுப் படிக்கும் போதெல்லாம் இந்தக் கதைதான் நினைவில் நிற்கும். பின்னர் பல வருஷங்கள் கழித்து, இந்தப் புத்தகம் தற்செயலாய் எல்லாப் பாகங்களும் கிடைத்துப் படித்து முடிவைத் தெரிந்து கொண்டேன். காதல், திகில், பேராசை, அன்பு, பாசம், மர்மம் அனைத்தும் கலந்து வரும் இந்த நாவல் தான் கல்கியின் நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

எனக்குத் தெரிந்து இந்தப் புத்தகம் அச்சில் இல்லை. பலவருஷங்களுக்குப் பின்னர் ஒரே ஒரு பதிப்பு மட்டும் வந்து பின்னர் அதுவும் இல்லை. அதனால் நிறையப் பேருக்கு இது பற்றித் தெரியவில்லைனு நினைக்கிறேன்.

Tuesday, July 24, 2007

யார் மனசிலே யாரு? அவங்களுக்கு என்ன பேரு?

அடுத்ததாய்ப் "பார்த்திபன் கனவு" நாவலை எடுத்துக் கொண்டால் அதில் சோழர்களின் மறு பிரவேசமே ஆதாரம். அதற்கான கனவுகளே பிரதானம். இதிலும் காதல் வருகிறது என்றாலும் நரசிம்மனின் மகள், சோழ இளவரசனை மணந்து கொண்டது, சரித்திரம் சொல்லும் உண்மை, ஆகவே இதிலும் காதல் சற்றுத் தள்ளியே நிற்கிறது. அடுத்து "சிவகாமியின் சபதம்". பார்த்திபன் கனவுக்குப் பின்னர்தான் கல்கி சிவகாமியின் சபதம் எழுதியதாய் என் அம்மா சொல்லி இருக்கிறார். அதற்கான வித்து கல்கி அவர்களுக்கு பார்த்திபன் கனவிலேயே விழுந்திருக்கிறது. இதில் காதல்பிரதானமாக வருகிறது. அதுவும் சிவகாமி என்ற நாட்டியத் தாரகைக்கும், நரசிம்ம பல்லவன் என்ற பட்டத்து இளவரசனுக்கும். சிறு வயதில் இருந்தே அறிமுகமான அவர்கள் நட்பு காதலாக மாறுகிறது என்கிறார் கல்கி அவர்கள். ஆங்காரமும், கோபமும், பொறாமையும், ஆர்வமும், தன் காதலன் தனக்கு மட்டுமே உரியவனாய் இருக்க வேண்டும் என்ற ஆசையும் அத்தோடு கூட நாட்டியத்தில் பெருமளவு ஆர்வமும், ஆவலும், ஈடுபாடும் கொண்ட பெண்ணாக வரும் சிவகாமி, நரசிம்மரைக் காதலித்தாலும், அந்தக் காதலை என் மனம் என்னவோ ஏற்றதில்லை. நரசிம்மரைப் பொறுத்த மட்டில் அவருக்குக் கடமை, நாடு, போர், வீரம் போன்றவைகளுக்குப் பின்னரும், இன்னும் சொல்லப் போனால் தந்தைப் பாசத்துக்கும் பின்னர்தான் காதல். காதலில் ஈடுபட்டு விட்டு இருவரும் ஒருநாளும் நிம்மதியாக இருந்ததில்லை. சந்திக்கும் போதோ கேட்கவே வேண்டாம். சிவகாமியின் சண்டைகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண புருஷனாக நரசிம்மர் மாறவேண்டி வருகிறது. இது அவரின் கம்பீரத்தைக் கொஞ்சம் குறைக்கவே செய்கிறது. சிவகாமியின் காதல் நிறைவேறவில்லையே என வருத்தம் வருவதற்குப்பதிலாய் அனுதாபமே பிறக்கிறது. முடிவு சரியான முடிவுதான் எனத் தோன்றுகிறது.

பின்னர் வந்ததா? முன்னர் வந்ததா தெரியாது "அலை ஓசை". சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நாவல். இதில் காதல் மட்டும் இல்லாமல் அரசியல், தேச சுதந்திர விடுதலைப் போராட்டம், தேசத்தின் சுதந்திரம், காந்தியின் மறைவு என எல்லாமே முன்னிலை பெறுகிறது. கதைக் களமே முதல் உலக யுத்தத்தில் ஆரம்பிகிறது என நினைக்கிறேன். அதில் ஆரம்பித்துப் பின்னர் தேசம் விடுதலை ஆகும் வரை நடக்கும் கால கட்டங்களில் செளந்திரராகவன் என்னும் கதாநாயகனுக்கும், தாரிணி, சீதா என்ற இரண்டு நாயகிகளுக்கும் இடையில் நடக்கும் மனப் போராட்டங்களும், வாழ்க்கைப் போராட்டங்களும்தான் கதை. தாரிணி யாரெனத் தெரியாமலேயே அவளிடம் காதல் வயப் படும் செளந்திரராகவன் அவளை மணக்க முடியாமல் கிட்டத் தட்ட அவளின் ஜாடையில் இருக்கும் சீதாவை மணக்கிறான். அவன் பெண்பார்க்க வந்தது என்னமோ சீதாவின் மாமா பெண்ணான லலிதாவை. ஆனால் திருமணம் முடித்ததோ சீதாவை. முதலில் தாரிணியை அவன் காதல் செய்தது பற்றி நமக்குத் தெரிவதில்லை. இருந்தாலும் சீதாவின் அப்பா தந்தி கொடுக்கிறார் திருமணத்தை நிறுத்தச் சொல்லி. சீதாவை ஒருதலையாகக் காதலித்து வந்த அவளின் மாமா பையன் ஆன சூர்யா சீதாவுக்கு நல்ல வாழ்க்கை பெரும் உத்தியோகஸ்தரோடு அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அந்தத் தந்தியை மறைக்கிறான். அது எவ்வளவு பெரிய தவறு? பின்னாதான் தெரிகிறது நமக்கு. ஒரு சமூகக் கதையை இந்த அளவுக்குத் திகிலோடும், சஸ்பென்ஸோடும் நகர்த்திச் செல்ல முடியும் அதுவும் கதை போக்கில் இருந்து சற்றும் விலகாமல் அதன் போக்கிலேயே போய்! கல்கியால் எது தான் முடியாது?

சீதாவைத் திருமணம் செய்த பின்னரும் தாரிணியை மறக்க முடியாதிருந்த செளந்திர ராகவன் அவளை மறுபடி சந்திக்கும்போது ஒரு குழந்தையும் அவனுக்குப் பிறந்து விடுகிறது. அதுவரை சீதாவோடு இனிய இல்லறம் நடத்தி வந்த அவன் இப்போது தடுமாற ஆரம்பிக்கிறான். அதுவும் சீதாவின் மாமா பையன் ஆன சூர்யாவுடன் அவன் தாரிணியை ஒன்றாகப் பார்க்கும்போதெல்லாம் அவன் உள்ளம் எரிகிறது. சீதாவையும், தாரிணியையும் அவன் உள்ளம் ஒப்பிட்டுப் பார்க்கிறது. இருவருக்கும் அதிகம் வேறுபாடு இல்லை என்றும், சீதாவின் கண்களின் நேர்த்தியும், கண்களால் பேசும் அழகும் தாரிணிக்குக் கிடையாது எனவும்,ஆனால் புத்திசாலித்தனம், திறமை, ஆளுமை போன்றவற்றில் தாரிணியே சிறந்தவள் எனவும் புரிகிறது அவனுக்கு. அதேசமயம் சீதாவின் வெகுளித்தனமான போக்கினாலும் கணவனிடம் அவள் வைத்திருக்கும் எல்லையற்ற அபிமானமும், மரியாதையாலும் தடுமாறும் செளந்திரராகவன், உண்மை தெரிந்து சீதா ராகவனின் வீட்டை விட்டுப் போகும் சமயம் கூடத் தாரிணியை மட்டுமில்லாமல் அத்தோடு சீதாவையும், மறக்க முடியாமல் இருமனம் கொண்டு தடுமாறுகிறான்.

தற்செயலாகவோ வேண்டுமென்றோ சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக மாறி சிறை வாசம் அனுபவிக்கும் சீதா, உறவினர் கொடுமை தாங்காமல் தவிக்கும் சீதா, என சீதாவின் வாழ்வே துன்பமயமாக இருக்கிறவேளையில் ராகவன் மனம் மாறி சீதாவோடுப் புது வாழ்வு தொடங்க வேண்டித் தன் பெற்றோருடன் இருக்கும் குழந்தையையும் சீதாவையும் பஞ்சாபுக்கு அழைத்துச் செல்கிறான். ஆனால் விதி யாரை விட்டது? சீதாவின் நல்வாழ்வுக்கு அங்கேயும் பங்கம் வருகிறது நாட்டுப் பிரிவினை ரூபத்தில்! அந்தச் சமயம் காப்பாற்ற முடியாமல் சீதா இறந்து போகத் தாரிணியோ அங்கங்கள் வெட்டப் பட்டு கோரரூபியாக மாறுகிறாள். இருந்தும் தாரிணியைத் திருமணம் செய்து கொள்கிறான் ராகவன். உண்மையான காதலால்? அல்லது தாயைப் பிரிந்து இருக்கும் தன் பெண்குழந்தைக்காகவா? என்ன இருந்தாலும் தன் மனைவியின் மூத்த சகோதரியாகத் தாரிணி இருப்பதால் அவளே தங்கையின் பெண்ணைப் பார்த்துக் கொள்ளச் செளகரியமாக இருக்கும் என்றா? தெரியவில்லை! கதை முழுதுமே செளந்திரராகவன் என்னும் இந்தக் கதாநாயகனின் இரட்டைமனப் போக்கு நம்மை ஆத்திரம் கொள்ளவே செய்யும். சாதரணமாய்க் கதாநாயகர்களிடம் உண்டாகும் இயல்பான அனுதாபம் சற்றும் இவனிடம் பிறக்காது. மாறாக சூரியாவிடமே அனுதாபம் பிறக்கிறது, அதுவும் ஒருதலையாக இரு பெண்களைக் காதலித்து, அதுவும் முதலில் தங்கை, பின்னர் அக்கா, இருவருமே அவன் மணம் புரிந்து கொள்ளும் முறை கொண்டவர்கள், இருந்தும் இருவரும் விரும்பியதோ செளந்திரராகவனை, இருவரையும் அவன் இந்தப் பெண்களின் விருப்பத்துக்குத் தலை சாய்த்து விட்டுக் கொடுக்கிறான்.

என்றாலும் முதலில் சீதாவுக்கும், பின்னர் தாரிணிக்கும் காத்திருந்த சூரியாவுக்குக் கிடைப்பது ஏமாற்றம்தான். அவன் மணந்து கொள்ளுவது பாமா என்னும் வேறொரு பெண்ணை! :பாமா விஜயம்" என்னும் இந்த அத்தியாயம் தான் கடைசி அத்தியாயம். பாமாவை மணந்து கொண்டு சூர்யா மறுபடி கிராமத்துக்குத் திரும்புவதோடு கதை முடியும். காதல்? யார் மனசிலே யாரு? இதிலும் குழப்பம் தான்! குழப்பமே இல்லாத காதலே கல்கி எழுதலையா? ஏன் இல்லை எழுதி இருக்காரே! இதோ அது!

Sunday, July 22, 2007

நிச்சயமாய் இது "மொக்கை" இல்லை!

ரொம்ப அதிசயமாய் இன்னிக்கு ப்ளாக்கர் தலைப்புக் கொடுத்ததுமே ஏத்துக்கிட்டது. இந்தத் தலைப்புக் கொடுக்கிறது ஒரு கஷ்டமா அபி அப்பா, முத்துலட்சுமி, நுனிப்புல் உஷா போன்ற திறமைசாலிகளுக்கும் இருக்குங்கிறதிலே ஒரு அல்ப சந்தோஷம். அப்புறம் நான் ஒரு அறிவு ஜீவி! ஹிஹிஹி, ஆச்சரியமே வேண்டாம்! இந்த "ஜீவி"னு ஒரு பெண் எழுத்தாளர் சமீப காலங்களில் பதிவு எழுதவும் ஆரம்பிச்சு இருக்காங்க! அவங்க தப்பா நினைக்கப் போறாங்க! அந்த "ஜீவி" இல்லை, நான் அறிறிறிவு ஜீஈஈவி!"கமல்ஹாசன் படம் பார்க்கிறவங்களுக்குக் கட்டாயமாய்த் தெரியும் ஒரு சீரியஸ் படம் கொடுத்தால் அடுத்து ஒரு சிரிப்புப் படம்கிற பேரிலே ஒரு மொக்கைப் படம் கொடுப்பார்! அந்தமாதிரியான அறிவு ஜீவி நான்ன்னு சொல்றேன்! இப்போப் புரியுதா? ஆனால் இந்தப் பதிவு கொஞ்சம் ஒரு மாதிரியான அலசல்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

"பொன்னியின் செல்வன்" மறுபடியும் வரேன். அதிலே வரும் காதலர்களின் நிலையைக் குறித்து ஆராய்ச்சி செய்த "பாட்டியன்" (என்னங்க பேரு? ?) என்னும் பதிவாளர் எழுதி இருப்பதைப் படிச்சதும் ரொம்ப நாளாக எழுதவேண்டும் என்று தோன்றியதை எழுத எண்ணியதன் விளைவு தான் இந்தப் பதிவு!

பொன்னியின் செல்வனில் கதாநாயகன் ஆன வந்தியத் தேவனின் பாடே ரொம்பக் கஷ்டம், இதிலே காதல் வேறே வந்தாச்சு! அதுவும் யாரிடம் நாட்டின் இளவரசியிடம், இளவரசி அவனை விடச் சோழநாட்டைக் காதலிப்பதால் நாட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் வந்தியத் தேவனை மணந்து கொள்கிறாளோ என்னமோ? இன்னொரு போட்டி பார்த்திபேந்திர பல்லவன், அவன் ஒரு நாளும் சோழநாட்டில் வந்திருக்கச் சம்மதித்து இருக்க மாட்டான். அதனால் கூட வந்தியத் தேவனை மணக்க இளைய பிராட்டி சம்மதிக்கிறாளோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியலை. மணிமேகலையோ வந்தியத் தேவனைக் காணமலேயே காதல் கொள்கிறாள். அவனுடைய அகட, விகட சாமர்த்தியங்களில் பெருமையும் கொண்டு அவன் நினைவாகவே உயிரும் துறக்கிறாள். இது உயர்ந்த காதல் என்றாலும் ஒருதலைக் காதல்தான். ஒத்துக்கிறேன். அது போலவே நந்தினியிடம் ஆதித்த கரிகாலன் காதலும், பூங்குழலி, இளவரசரைக் காதலிப்பதும். ஆதித்த கரிகாலனும் நந்தினியின் அழகில் மயங்கினவனாகவே தான் தோன்றுகிறது. இருந்தாலும் அவளை இழக்கிறான், நாட்டுக்காக. நாடு தான் முக்கியம் என்றும் எதிரியை விடக் கூடாது என்றும் அரசகுலதர்மத்தைக் கைவிடாமல் வீரபாண்டியனைக் கொன்று விடுகிறான். பின்னர் அதற்காக வருந்துகிறான், உயிரோடு இருக்கும் வரையில்!


ஒரு கட்டத்தில் இளவரசன் ஆன பொன்னியின் செல்வன் பூங்குழலியைக் காதலிப்பதாகவே நமக்கும் தோன்றுமாறு, இரண்டாம் பாகம், மூன்றாம் பாகங்களில் கதை போகும் என்றாலும் பூங்குழலி பேரில் கோபம் ஒண்ணும் வரலை. அது போலவே சேந்தன் அமுதன், பூங்குழலியிடம் கொள்ளும் காதலும். அதுவும் தான் ஒரு இளவரசன் என்பது தெரிந்திருந்தும், அவன் பூங்குழலியை அவளுக்காகவே காதலிக்கிறான். சேந்தன் அமுதன் "இளவரசன்" என்பது தெரியும் முன்னரே பூங்குழலி கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டாலும், அது காதலின் பேரிலா? அல்லது "பொன்னியின் செல்வன்" தனக்குக் கிடைக்க மாட்டார் என்பதாலா? யோசிக்க வேண்டிய விஷயம். பெரிய பழுவேட்டரையரோ, நந்தினியின் அழகில்தான் மயங்குகிறார். அவள் பேரில் உண்மையில் காதல் இருக்கவில்லை, அதுவும் நிஜம்தான். இப்போ மற்றக் கதைகளைப் பார்ப்போமா?

Saturday, July 21, 2007

அமெரிக்கா - ஆங்கிலேயர் இல்லாமலா?

ஹிஹிஹி, சமைக்கும் முறை பத்திக் கூறுவது கொஞ்சம் ஓவர்னாலும் புதிசா வந்து மாட்டிக்கிறவங்க தெரிஞ்சுக்கலாம் இல்லையா? அப்புறம் என்னதான் பிஞ்சாகப் பார்த்து வாங்கினாலும் கொத்தவரை, அவரை, பீன்ஸ் போன்றவற்றில் தேங்காய் சேர்த்துப் பொரியல் என்பதை மறந்துடணும்! ஹிஹிஹி, டாக்டரும், வேந்தரும் அடிக்கப் போறாங்க! :P வதக்கினால் தான் இவை நன்கு பதமாக வேகிறது. வேகவைத்துச் செய்தால் அப்புறம் தேங்காய்த் துருவல் போட்டுத் தாளிக்கும்போது ரப்பரை விட மோசமாக விறைத்துப் போகிறது. ப்ரோசன் காய்கள் எல்லாம் இந்தச் சூட்டில் நல்லா வேகும்போது இது ஏன் இப்படின்னு எனக்குப் புரியாத மர்மம்! கூடியவரை பருத்தி ஆடை உடுத்திக் கொண்டு சமைக்கணும்னாலும் இங்கே அது கஷ்டம். ஏனெனில் வாஷிங் மெஷின் எப்படிப்பட்ட உயர்தரப் பருத்திச் சேலையானாலும் சரி, சல்வார், குர்த்தாவானலும் சரி, மெஷினில் துவைத்து டிரையரில் போட்டால் உங்களுக்குத் திரும்பக் கொடுப்பது ஒரு ரிப்பன் மட்டும்தான். துவைத்துவிட்டு வெளியில் உலர்த்தலாம் என்றாலோ அபார்ட்மென்டில் பால்கனி இருந்தால் கூட போட அனுமதிப்பது இல்லை. தனிவீடுன்னால் இன்னும் கஷ்டம், ஹோம் அசோசியேஷனில் அனுமதிக்க வேண்டும். ஆகவே சுருங்கினாலும் சுமாராக இருக்கும் பாலிகாட் ரக ஆடைகள் தான் சிறந்தது, அல்லது ஜார்ஜெட்டில் நல்லரகமாகவோ, பூனம் சேலைகளோ பரவாயில்லை! ஜீன்ஸ் போடும் வழக்கம் இருந்தால் ரொம்பவே நல்லது. ஜீன்ஸை நல்லாவே துவைத்து உலர்த்திக் கொடுக்கும். நான் கூட ஜீன்ஸ் பழக்கப் படுத்திக் கொண்டிருக்கலாம்னு இப்போ தோணுது! :)))))))))

இந்தியத் தயாரிப்புக்களான மிக்ஸியோ, கிரைண்டரோ யு.எஸ்ஸின் 110 வோல்ட்ஸுக்குத் தகுந்தவாறு தயாரிக்கப் பட்டது, இங்கே நல்லா வேலை செய்யும். இந்தியாவில் இருந்து தைரியமாக 110 வோல்ட்ஸுக்கு உள்ளதை வாங்கி வரலாம். ஆனால் இங்கிருந்து நீங்கள் அதுமாதிரி ஒரு ப்ரெட் டோஸ்டர் கூட வாங்கிப் போய் இந்தியாவில் உபயோகிக்க முடியாது என்னதான் கன்வெர்டர் இருந்தாலும்!யு.எஸ்.தயாரிப்புக்களான எலக்ட்ரானிக் சாதனங்களை எங்க வீட்டிலே எல்லாம் சரஸ்வதி பூஜைக்குப் பூஜை செய்ய மட்டும்தான் வெளியே எடுப்போம். துணிகளோ என்றால் அநேகமாய் எல்லாம் இந்தியா, பங்களா தேஷ், இலங்கையில் இருந்து வருபவை,இவைதான் விற்பனைக்கு இருக்கும். சரியா இல்லைன்னால் அது நாம் ஊருக்கு எடுத்துப் போகும் முன்னேயே சரி பார்க்கணும். பரிசாக எல்லாம் வாங்கிப் போனால் அவ்வளவுதான், சரியா வரலைனால் ஒண்ணும் செய்ய முடியாது! இந்தியாவிலேயே நம் பட்ஜெட்டுக்குள் ஏற்றாற்போல் வாங்கிக் கொடுத்துடலாம். :P
*************************************************************************************
ப்ரெஞ்சுக்காரர்கள் பல முறை முயற்சித்தும் அவர்களால் யு.எஸ்ஸில் சரியான காலனிகளை ஏற்படுத்த முடியவில்லை. 1598 -ல் இருந்து 1608 வரை சாதாரண வியாபாரிகளாலும், மற்றவர்களாலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
1608-ல் தான் ப்ரெஞ்சு அரசு நேரிடையாக இதில் தலைஇட்டது. 4-ம் ஹென்றி என்று சொல்கிறார்கள். அவர் காலத்தில் தான் "சாம்ப்ளேன்" என்பவர் அரசரின் உதவியுடன் 28 நபர்கள் கொண்ட 6 குடும்பங்களைக் கனடாவில் குடியமர்த்தினார். அப்போது கனடாஎன்ற பெயர் பேரளவுக்குத் தான் இருந்திருக்கிறது என நினைக்கிறேன். அங்கே உள்ள தட்ப, வெப்ப நிலை தாக்குப் பிடிக்க முடியாமல் பலர் இறந்தனர். கனடாவில் தற்சமயம் உள்ள க்யூபெக்கில் ஆரம்பித்ததாய்ச் சொல்கிறார்கள். . 1630-ல் 100 காலனிகளாய் இருந்தது 1639- -ல் 359 ஆக அதிகரித்தது. ப்ரெஞ்சு இளைஞர்கள் உள்ளூர் மக்களுடன் நெருங்கிப் பழக அனுமதிக்கப் பட்டனர். திருமண உறவும் ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். வியாபாரம் விஸ்தரிக்கப் பட்டது. உள்ளூர் மக்களின் பழக்க, வழக்கங்கள், மொழி, வழிபாடு முதலியவற்றைத் தெரிந்து கொள்ள இளைஞர்கள் தயார்படுத்தப் பட்டனர். "சாம்ப்ளேன்" நியூ பிரான்ஸின்
கவர்னர் ஆக்கப் பட்டார். "க்யூபெக்" வியாபாரக் கேந்திரமாகத் திகழ்ந்தது. ஆனால் அப்போதைய கார்டினல் "ரிச்லீ" கத்தோலிக்கர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் "ப்ராட்டஸ்டென்ட்"டுகளுக்குப் பிடிக்கவில்லை.
ஏற்கெனவே மதக் கொந்தளிப்பு ஐரோப்பாவில் பரவலாக இருந்தது. ஆகவே பலர் ஆங்கிலேயக் காலனிகளுக்குக் குடி பெயர்ந்தனர். தென் பகுதியிலோ ஆங்கிலேயர் ஆதிக்கம் அதிகமாகவும் ஸ்திரமாகவும் இருந்து வந்தது. அதை நாளை பார்ப்போம்!

Thursday, July 19, 2007

கொலம்பஸ், கொலம்பஸ், விட்டாச்சு லீவு!

பொன்னியின் செல்வனுக்குத் தொடர்ந்து பின்னூட்டங்கள் வந்துட்டிருக்கிறதைப் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அனைவருக்கும் தனித்தனியா பதில் கொடுக்க முடியலை. மன்னிக்கவும். வேதா, கொலம்பஸ் ஸ்பெயினில் இருந்து வந்தார், என்னோட முந்தைய பதிவுகளை நீங்க சரியாப் படிக்கலைன்னு புரியுது! :P அம்பி, ச்யாம், மணிப்ரகாஷ், நாகை சிவா, அபி அப்பா போன்றோருக்குச் சரித்திரம்னால் எட்டிக்காய்னு புரியுது. அதுவும் அம்பி ரொம்பவே சரித்திரம், பூகோளத்தில் வீக்னு அவங்க அம்மா கூடச் சொன்னாங்க என்னிடம் தனியா. :P
************************************************************************************

இங்கே இந்திய உணவு வகைகள் அனைத்தும் இந்திய உணவு விடுதிகளில் கிடைக்கிறது என்றாலும் தரம், சுவை என்று பார்க்கும்போது சில உணவு விடுதிகளில் தோசை, தோசையாகவே இருக்காது. அதிலும் பாரம்பரிய முறைப்படி இட்டிலிப் பானையில் இட்டிலி வேக வைக்கும் என் போன்றோருக்கு இங்கே கிடைக்கும் இட்டிலியைப் பார்த்தால் அதாலேயே அந்த உணவு விடுதிக்காரரை அடிக்கலாம் போல் வரும். சமீபத்தில் இங்கே "நாஷ்விலெ" என்னும் இடத்தில் உள்ள கோவிலுக்குப் போய்விட்டு அங்கேயே உள்ள உட்லண்ட்ஸ் உணவு விடுதியில் சாப்பிடப் போனோம். மெனு கார்டு கொடுத்ததும் அதிலே அடையோடு வெஜெடபில் எல்லாம் போட்டுக் கிடைக்கும் என்று போட்டிருந்தது. நாவில் நீர் ஊற அடை, அவியல் என்று நினைத்துக் கொண்டேன், அது என்னோட தப்பு! போனதோ உட்லண்ட்ஸ். இது சென்னையைச் சேர்ந்ததா? அல்லது நியூஜெர்ஸியில் தொழில் துவங்கிய சகோதரர்களின் கிளையானு புரியலை. சரி உட்லண்ட்ஸ் உணவுதான் பிரசித்தி ஆச்சேனு ஆர்டர் செய்தேன் எனக்கு, மத்தவங்க எல்லாம் தோசைக்குப் போக நான் மட்டுமே அடை விரும்பி. ஆனால் வந்தது என்னமோ வெஜெடபில் ஊத்தப்பம். அத்தோடு சட்னி, சாம்பார் துணைக்கு. கேட்கலாமான்னு நினைச்சால் வரும்போதே உணவு பரிமாறுபவர் அடை, உங்களுக்குத் தானே என்று கேட்டு விட்டுத் தான் கொடுத்தார். சரி, போகட்டும்னு சாப்பிட்டேன். கொஞ்சம் தோசை வாசனை வந்தது என்றாலும் அடை மாதிரி கொஞ்சம் கூட இல்லை. மற்ற உணவு விடுதிக்கு இது பரவாயில்லை என நினைத்துக் கொண்டேன்.

மற்றபடி இங்கே குளிர்பதனப் படுத்தப் பட்ட உணவு வகைகளும் எல்லா வகைகளிலும் கிடைக்கிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போவது என்றால் கவலையே இல்லை. ஹூஸ்டனில் இட்டிலி, தோசைக்கு அரைத்த மாவே புதியதாய்க் கிடைக்கிறது. ஆகவே நாம் போகிற ஊரில் இந்திய உணவு விடுதி இருக்கும் இடம் தேடிப் போக வேண்டும். சில விடுதிகளில் சைவம், அசைவம் இரண்டுமே வைக்கிறார்கள். அம்மாதிரி விடுதிகளில் பெரும்பாலும் சைவ உணவுக்காரர்கள் சாப்பிடக் கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருக்கிறது. நம்ம ஊர் இட்டிலிப் புழுங்கல் அரிசி கிடைத்தாலும் கிரைண்டர் இருந்தால்தான் அதிலே நல்லா வரும். மிக்ஸியில் என்றால் அவ்வளவு நல்லாய் வருவதில்லை. இங்கே நாங்கள் உபயோகிப்பது அமெரிக்கன் லாங் கிரெயின் அரிசியும், அங்கிள் பீன்ஸ் புழுங்கல் அரிசியும். இதில் அங்கிள் பீன்ஸ் புழுங்கல் அரிசியை ஒரு கைப்பிடி மட்டும் போட்டால் போதும். மற்றபடிப் பெரும்பான்மையாகப் பச்சை அரிசிதான் போட வேண்டி இருக்கிறது.

வீட்டோடு சேர்ந்து ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அடுப்பு, மின்சார அடுப்பு, அத்துடன் சேர்ந்த அவன், வாஷிங்க் மெஷின், டிஷ் வாஷர் எல்லாமும் அநேகமாய் எல்லா அபார்ட்மென்டுகளிலும் இருக்கின்றன. நம்மால் வாடகை கொடுக்க முடியாது அவ்வளவு என்றால் வாஷிங் மெஷினும், மைக்ரோவேவும் இருக்காது, மற்றவை கட்டாயமாய் இருக்கும். வாஷிங் மெஷின் காமன் லாண்டரிக்குப் போய் வாரம் ஒரு முறையோ அல்லது உங்கள் நேரத்தைப் பொறுத்தோ துணிகளைத் துவைக்கலாம். வீடு சொந்தமாய் வாங்கினாலோ, கட்டாயம் மின் அடுப்போ, அல்லது அந்தப் பகுதி காஸ்சப்ளை உள்ள பகுதி என்றால் காஸ் கனெக்க்ஷனோ கட்டாயமாய் இருக்கும். டிஷ் வாஷரும் வீட்டுடன் சேர்ந்தே வரும். இந்த மின் அடுப்பு 4 பர்னர் கொண்டது. 2 சின்னது, 2 பெரிது. அடுப்பை நீங்கள் ஏற்றும் முன்னேயே எல்லாமும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியைப் போட்டுவிட்டு, அது காய்ந்ததும், எண்ணெய், பின் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, மற்ற சாமான்கள் என்று போட்டால் அவ்வளவு தான். ஸ்மோக் டிடெக்டர் ஊரைக் கூட்டி விடும். அடுப்பு ஏற்றும் முன்னேயே வாணலியில் எண்ணெய் ஊற்றிவிட்டுப் பெருங்காயம், கடுகு போட்டுவிட்டு அடுப்பை ஹையில் வைத்தால் அது காய ஆரம்பித்ததுமே மற்ற சாமான்களைப் போட்டு விட்டு அடுப்பை உடனே அணைத்தால் பிழைத்தீர்கள். இல்லைனால் என்னதான் எக்ஸ்ஹாஸ்ட் ஃபான் சுற்றினாலும் ஸ்மோக் டிடெக்டர் ஊரைக் கூட்டி உங்களை இரண்டில் ஒன்று பார்த்து விடும். அம்பி ஆலாய்ப் பறக்கிற "காபி"க்குப் பின்னால் வரேன். இது கொஞ்சமாய் எழுத ஆரம்பித்தது நீஈஈஈஇளமாய்ப் போயிடுச்சு. அதனால் சரித்திரம் நாளைக்கு, இன்னிக்கு எல்லாருக்கும் லீவு விட்டாச்சு, கொலம்பஸ்!

Tuesday, July 17, 2007

அமெரிக்கா - பிரான்ஸும் வந்தது தெரியுமா?

"பொன்னியின் செல்வன்" பத்தி நான் எழுதின போஸ்டுக்குத் தொடர்ந்து கமென்டுகள் வருவதைப் பார்த்தால் அந்தக் கதை வாசகர்களை எவ்வளவு ஈர்த்திருக்கிறது எனப் புரிகிறது. இத்தனை உயிரோட்டமான கதைகள் எழுத அதுவும் சரித்திரக் கதைகள் எழுத ஒரு முன்னோடியாகக் "கல்கி" அவர்கள் இருந்ததோடு அல்லாமல், தம்முடைய சரளமான எளிய தமிழ் நடையாலும் சாமானிய மக்களுக்கும் தன்னோட எழுத்துப் போய்ச் சேரும்படி எழுதி உள்ளார். அதை வியக்காமல் இருக்க முடியவில்லை. இப்போக் கொஞ்ச நாளாக என்னால் வரமுடியவில்லை, எழுத நேரம் கிடைப்பதில்லை. வீட்டில் ஆணிகள் மட்டுமில்லாமல் கொஞ்சம் உடல்நிலையும் காரணம். அதுக்கு இங்கே உள்ள சீதோஷ்ணம் ஒரு காரணம். ஒரு நாள் போல் ஒரு நாள் இங்கே இருப்பது இல்லை. இன்று வெயில் அடித்தால், நாளை மழை, கொட்டும் சில மணி நேரத்துக்காவது. 2 நாள் முன்னால் காலை எழுந்து வெளியே போகமுடியாத அளவுக்கு மூடுபனி இருந்தது. நம் இந்தியா போல் பருவ மழை என்பது இங்கே அந்த அந்தப் பருவத்தில் மட்டும் பெயவதில்லை. வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஒரு வாரத்துக்கான பருவ நிலையை முன்கூட்டியே அறிவித்து விடுகிறார்கள். அவர்கள் சொல்வதுபோல்தான் பருவ காலமும் சரியாக இருக்கும். சற்றும் தவறுவதில்லை. நாங்கள் இருப்பது யு.எஸ்ஸின் தென்பகுதி என்றாலும் இங்கேயும் குளிர்காலத்தில் "ஸ்னோ ஸ்டார்ம்" எனப்படும் பனிமிழை மிதமானது முதல் நடுவாந்திரம் வரை இருக்கிறது, போனமுறை அக்டோபரில் யு.எஸ் வந்தபோது குளிர்கால ஆரம்பம்.

மரங்களில் பசுமை மாறி செம்பழுப்பு நிறத்தை இலைகள் அடையத் துவங்கி இருந்த நேரம். இந்தக் காட்சியைக் காணவென்றே "பாஸ்டன்" நகருக்கும் சுற்றுப் புறங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு என்று சொன்னார்கள். பாஸ்டன் நகர் வடகிழக்கில் உள்ளது. பறவைகளும் போனமுறை கண்ணில் அதிகம், அதிகம் என்ன தென்படவே இல்லை. எல்லாம் விசா இல்லாமலேயே வெளிநாடுகளுக்குக் குளிர் குறைவான பகுதிகளுக்குச் சென்று விட்டன. இருந்த ஒன்றிரண்டு பறவைகளும் சத்தம் கூடப் போட முடியாமல் இருந்தன. இங்கே நாங்கள் தற்சமயம் இருக்கும் மெம்பிஸில் டிசம்பரில் ஒரு நாள் பனிமழை 2 நாட்களுக்குப் பெய்யும் என அறிவித்தார்கள். அதே போல் ஒரு வெள்ளி அன்று காலை சொன்னால் சொன்னபடி பனி பெய்ய ஆரம்பித்து விட்டது. அலுவலகம் செல்பவர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே வேலை செய்ய அனுமதி கொடுத்து விடுகிறார்கள். ஆகவே யாரும் போகவில்லை. பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது ஏற்கெனவேயே கிறிஸ்துமஸுக்கு. எங்க வீட்டு வாசல் வரை பனிக்குவியல் வந்து " நலமா" என விசாரித்து விட்டுப் போனது. மறுநாள் அனைவரும் அந்தப் பனியில் நடக்கப் போனோம். அனைவரும் "தொப் தொப்" என்று விழுந்து கொண்டு இருக்கவே என்னை வரவேண்டாம் என்று எச்சரித்த என்னோட மறுபாதி தொப் என விழ நான் ஜம்முனு நடந்தேன். புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். இப்போ வெயில் காலம்னு பேர்தான். ஆனால் மாறி மாறி வருகிறது. வெயில் அடித்தாலோ "சுள்"ளெனச் சாயந்திரம் 8-00 மணி 8- 30 மணி வரை வெயில் இருக்கிறது.
*********************************************************************************

ஃப்ளோரிடாவில் தோன்றிய ஸ்பானிஷ் காலனிகள் மக்களின் எதிர்ப்பால் தெற்கே நகர ஆரம்பித்தது. தற்சமயம் மெக்ஸிகோவில் அதிகம் ஸ்பானிஷ்காரர் இருக்கின்றனர்.St. Augustine, ஃப்ளோரிடாவில் மட்டும் ஸ்பானிஷ் குடியிருப்பு உள்ளது. இது 1565-ல் கண்டுபிடிக்கப் பட்டதாய்ச் சொல்கின்றனர். இவர்களைத் தவிர, ஐரோப்பியரில் பிரிட்டிஷ், ஃப்ரெஞ்சுக் காரர்கள், ஸ்வீடிஷ் காரர்கள், நெதர்லாண்ட்ஸ், நார்வே, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் பெருமளவில் குடி பெயர்ந்தனர். இதில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது பிரிட்டிஷ்காரரும், ஃப்ரெஞ்சுக்காரரும்தான். எப்போதும் ஒன்றை ஒன்று ஜெயிக்கப் போட்டி போடும் இங்கிலாந்தும், பிரான்ஸும் இதிலும் போட்டி போட்டன. வட அமெரிக்காவின் உள்பாகத்தில் ஃப்ரெஞ்சுக்காரர்களால் பல குடியிருப்புக்கள் ஏற்படுத்தப் பட்டன. இந்தக் குடி இருப்புக்கள் கொண்ட பாகம் "New France" என்று அழைக்கப் படுகிறது. 1534-ல் "Jacques Cartier" என்பவரால் ஏற்படுத்தப் பட்ட இது 1763 வரை ஃப்ரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. "New France " எல்லை "New Foundlanad to Lake Superior " இருந்தும் மேலும் "Hudson Bay to Gulf of Mexico" வரையும் இருந்து வந்தது. இது பின்னர் 5 காலனிகளாய்ப் பிரிக்கப் பட்டு சுய ஆட்சி நிர்வாகத்தின் மூலம் செயல்பட்டது. அந்த 5 காலனிகளாவன: கனடா, அகேடியா, ஹட்சன்பே, நியூஃபவுன்ட்லான்ட், லூசியானா, ஆகியவை ஆகும். (தற்சமயம் கனடா நாட்டில் பெரும்பான்மையாகப் ஃப்ரெஞ்சுக்காரர்கள் வசிப்பதாய்ச் சொல்கிறார்கள்.) மிகுந்த இயற்கை வளமும், கனிப்பொருட்களும் நிறைந்த இந்த நாட்டில் குடியிருப்புக்கள் அமைய வேண்டிய உபரி நிலமும் தாராளமாய்க் கிடைப்பதால் எவ்விதமான இடையூறுமின்றி ஐரோப்பியரால் இங்கே வசிக்க முடிந்தது. விலைமதிப்பில்லாப் பொருட்கள் அவர்களைக் கவர்ந்ததோடு அல்லாமல் வியாபாரம் செய்யவும் முற்பட்டனர். ஃப்ரெஞ்சு நாட்டில் இருந்து பல வியாபாரக் கப்பல்கள் வந்து இங்கே இருந்து ஏற்றிக் கொண்டு போன சரக்குகளின் உண்மையான விவரம் கிடைக்கவில்லை. அதற்கான ஆவணங்கள் அழிக்கப் பட்டதாய்க் கூறப் படுகிறது. எனினும் இவர்களால் வேகமாய்க் குடியிருப்புக்களை எற்படுத்த முடியாமல் உள்ளூர் மக்களின் மொழியும் பழக்க வழக்கங்களும் தடை செய்தன. ஆகவே அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Thursday, July 12, 2007

அமெரிக்கா - கொலம்பஸுக்கு அப்புறம் என்ன?

நான் படிச்ச முதல் அமெரிக்க காமிக்ஸ் "Denis the Menace ". ஆங்கிலப் பத்திரிகைகளில் வருவது தான் அப்போ எல்லாம். காமிக்ஸ் புத்தகம எல்லாம் வாங்கிப் படிச்சது இல்லை. அதுவும் என்னோட அப்பா வீட்டிலே பேப்பர், பத்திரிகை வாங்கவே மாட்டார், ஓசிதான் எல்லாம். :D கல்யாணம் ஆனதுக்குப் பின் குழந்தைகள் படிக்க ஆரம்பிச்சதும்தான் "Archie Comics" காமிக்ஸ் எல்லாம் அவங்க கூடப் போட்டிப் போட்டுப் படிப்பேன். இப்போக் கூட 2 நாளா அதான் படிச்சுட்டு இருக்கேன். :D பொதுவாய் யு.எஸ்ஸில் கிடைக்காத இந்தியத் தயாரிப்புக்கள் இல்லை. அநேகமாய் காய்களில் புடலை, முருங்கை, வாழைப்பூ என எல்லாமே கிடைக்கிறது. சாப்பாட்டு வகைகளிலும் பதப் படுத்தப்பட்டதில் இருந்து, மற்ற இந்திய உணவுப் பொருட்கள் எல்லாமே கிடைக்கிறது. இந்தியன் க்ரோசரி இல்லாத ஊரே இல்லை எனலாம். இங்கே வரும் இளைஞர்களுக்குக் கோவில், தமிழ்ச்சங்கம், அதைச் சேர்ந்த நூலகம் என எல்லாமும் இருப்பதாலோ என்னமோ மிகவும் பிடித்துப் போய் விடுகிறது. கிடைக்காத ஒன்றே ஒன்று அப்பாவும், அம்மாவும் தான். அது ரெடிமேடாகக் கிடைப்பதில்லை!
*************************************************************************************
1492-ல் ஆரம்பித்த கொலம்பஸின் கடல்பயணத்தில் அவர் 1498-ல் தான் மெயின்லான்ட் எனப்படும் முக்கியத் தரைப் பகுதியை அடைந்தார் என ஒரு குறிப்பு, இன்னொரு குறிப்பு 1493 நவம்பர் 19-ல் அவர் ப்யூர்டோ ரிகோ வை அடைந்தார் எனவும் சொல்கிறது. கொலம்பஸுக்கு முன்னரே இங்கே இருந்து வந்த மக்களை "native Americans or Pre Colombians" என்று அழைக்கிறார்கள். இவர்கள் பொதுவாகப் பூர்வ குடிகள் எனச் சொல்லப் பட்டாலும் இவர்களிலும் ஹவாய் தீவு, அலாஸ்கா போன்ற இடங்களில் இருந்து வந்தவர்களைத் தனியாகச் சொல்கின்றனர். அமெரிக்கக் கண்டத்திலும், ஸ்பெயின் நாட்டிலும் கொலம்பஸ் தன் பயணத்தை ஆரம்பித்த அக்டோபர் 12-ம் நாள் "கொலம்பஸ் தினம்" என அங்கீகரிக்கப் பட்டு விடுமுறை விடப் படுகிறது. தற்சமயம் யு.எஸ்ஸில் இது பள்ளி, அரசு நிறுவனங்களில் மட்டுமே அனுசரிக்கப் படுகிறது.

அமெரிக்காவின் பூர்வகுடிகள் அதாவது யு.எஸ். நாட்டின் பூர்வ குடிகள் தற்சமயம் அலாஸ்காவிலும், கண்டத்தின் சில பகுதிகளிலும் மிகக் குறைந்த அளவே காணப் படுகிறார்கள். இவர்களைக் கொலம்பஸ் "இந்தியர்" என நினைத்ததால் "இந்தியர்" என அழைக்கப் பட்டாலும் இவர்கள் அதை விரும்புவதில்லை. அமெரின்டன் என அழைக்கப் படுவதை விரும்புகிறார்கள். அல்லது "Aamerica's First Nationals" என்று சொல்லுவதை மிகவும் விரும்புகிறார்கள். ஏனெனில் இவர்களில் சிலருக்கு நாடு தங்களுடையாய் இருந்தது என்னும் எண்ணம் இன்னும் இருப்பதாய்க் கூறப் படுகிறது. கொலம்பஸ் வந்து இறங்கிய 15-ம் நூற்றாண்டில் இருந்து 19-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கே வந்து கூட்டம் கூட்டமாய்க் குடியேற ஆரம்பித்தனர். இவர்களுடன் பெரும் கொள்ளை நோய்களும் வந்து முன்னரே இருந்த பூர்வ குடிகள் நோய்க் கடுமை தாங்காமல் பெரும் அளவில் இறக்க ஆரம்பித்தனர். இங்கே முன்னரே குதிரைகள் இருந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் ஸ்பானிஷ்காரர்களும், ஐரோப்பியரும் வந்து பெரும் அளவில் கப்பல்களில் குதிரைகளைக் கொண்டுவந்து இறக்குமதி செய்தனர். இந்தக் குதிரைகளில் சில தப்பி ஓடிக் காட்டை அடைந்து பூர்வகுடிகளால் பிடிக்கப் பட்டு வளர்க்கப் பட்டு அவர்களின் போக்குவரவுக்குப் பெரிதும் உதவியது.

முதன்முதல் இங்கு வர்த்தகம் ஆரம்பித்ததும் ஸ்பெயின் நாட்டு அடிமை வியாபாரிகள் தான். அவர்கள் தங்கள் குடியிருப்பை ஃப்ளோரிடா மாகாணத்தில் நிர்மாணிக்கவும், அங்கே உள்ள பூர்வ குடிகளுடன் தொடர்பு கொண்டு வியாபாரத்தை விஸ்தரிக்கவும் முற்பட்டனர். ஆனால் அங்கே இருந்த் பூர்வகுடிகள் இவர்களை எதிர்த்தனர். முதன் முதல் அவர்களுக்குள் ஏற்பட்ட சணடையும் 1513-ல் ஏற்பட்டது. பூர்வகுடிகள் வெல்ல, ஸ்பானிஷ்காரர்கள் மீண்டும் மீண்டும் முயன்றனர். 1521-ல் ஓரளவு ஐரோப்பியரை அங்கே வரவிடாமல் பூர்வகுடிகள் அடித்து விரட்டினர். என்றாலும் பின்னர்?

Monday, July 09, 2007

அமெரிக்கா - கொலம்பஸ் தானா கண்டுபிடிச்சது?

"விக்கிபீடியா-கன்ஃபூயுசிங்" பத்தி இளா கொடுத்திருக்கும் லிங்கை அடிப்படையாக வைத்துத் தான் நான் ப்ரிட்டிஷார் சொல்லுவதை எழுதினேன். பல்வேறு கருத்துக்கள் இதில் இருக்கின்றன. அப்புறம் போகிற போக்கில் நம்ம வேதா(ள்) நைசா, பதிவு சின்னதாய் இருக்கணும்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. வளவளன்னு எழுதும் நமது பதிவுகள் சின்னதாய் வர நான் ரொம்பவே கஷ்டப்படணும்னு அவங்களுக்குத் தெரியலையா? அல்லது படிச்சுப் புரிஞ்சுக்க முடியலையா? ஹிஹிஹி, உள்குத்து ஏதும் இல்லை.
*************************************************************************************

அமெரிக்கா எனப்படும் இந்தக் கண்டத்தில் யு.எஸ். மட்டுமே கனவுப் பிரதேசமாக இருந்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை நான் இங்கே வருவேன் எனக் கனவு கூடக் கண்டதில்லை. முதன்முதல் யு.எஸ். பத்தி நான் படிச்ச நாவல் "Gone with the Wind" தான். எழுதியது மார்கரெட் மிட்செல்? படமாகக் கூடவந்தது. அதிலேதான் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டு யுத்தம் பற்றிய தகவல்களை முதன்முதலாக அறிந்து கொண்டேன். நான் இந்தக் கதையைப் படிக்கும்போது திருமணம் ஆகி 3 வருஷம் ஆகிவிட்டதால் இந்தக் கதாநாயகியின் போக்கும், அவளின் காதலர்களை மாற்றிக் கொள்ளும் பாங்கும் அதிர்ச்சியை அளித்தது என்னவோ நிஜம். இருந்தாலும் கதை என்னைக் கவர்ந்தது, முதன்முதலாக "யாங்கி" என்னும் வார்த்தையையும் அறிந்து கொண்டது இந்தக் கதை மூலம்தான். இதற்குப் பின்னர்தான் அமெரிக்கா பத்தி அதிகம் அறிய முயற்சியும் ஓரளவு செய்தேன்.
*************************************************************************************

இந்தக் கண்டத்தில் முதன்முதல் குடியேற்றம் நடந்தது கிட்டத் தட்ட 50,000 வருஷங்களுக்கு முன்னர் என்று ஒரு ஆய்வும், அதற்கு முன்னரே இங்கே மனிதர்கள் வசித்ததாய் இன்னொரு ஆய்வும் கூறுகிறது. யுரேசியர்கள் எனப்படும் மனிதவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் குடியேற ஆரம்பித்தது 12,000 வருஷங்களுக்கு முன்னர். இவர்களைத் தான் அமெரிக்காவின் "பூர்வகுடிகள்" எனச் சொல்கிறார்கள். விவசாயம் அந்தக் கால கட்டத்திலேயே செழிப்பாக இருந்து வந்திருக்கிறது. கட்டடக் கலையிலும் தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். சைபீரியாவில் இருந்து வந்த யுரேசியர்கள் "Bering Strait"-ல் இருந்த தரைப் பாலத்தைக் கடந்து வந்ததாகச் சொல்கிறார்கள். ஹவாய்த் தீவில் இருந்தும் வந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது. இவர்கள் அனைவரும் கலந்துதான் அமெரிக்கன் இந்தியர்கள் ஏற்பட்டதாய்ச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொலம்பஸ் வந்தபோது இவர்கள் தான் இருந்தனர்.

ஸ்பெயின் நாட்டு அரசியின் உதவியோடு புதிய நாட்டைக் கண்டறிய வந்த கொலம்பஸ் கண்டது ஹவாய்தீவையும், தற்போது வெஸ்ட் இன்டீஸ் என அழைக்கப் படும் நாட்டையும்தான் என்றும் சிலர் கூறுகிறார்கள். 1492-ம் ஆண்டில் கொலம்பஸ் இந்தக் கண்டத்தைக் கண்டறிந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் 1498 வரை மெயின் லாண்ட் எனப்படும் உள்நாட்டைக் கண்டறியவில்லை. கொலம்பஸுக்கு முன்னாலேயே பலர் முயன்றாலும் இப்படி ஒரு கண்டம் இருப்பதை உலகுக்கு அறிவித்த முதல் நபர் கொலம்பஸ்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரோ இந்த நாட்டை "இந்தியா" எனவே நினைத்தார். அப்போது மேலைநாடுகளின் கனவுநாடாக செல்வச் செழிப்புடன் இருந்த இந்தியாவை அடைவது அவர்களின் நோக்கமாக இருந்து வந்தது. 1506-ல் இறந்த கொலம்பஸ் தான் கண்டறிந்த இந்த நாடு தனக்குப் பின்னர் இந்தக் கண்டத்துக்கு வந்த நபரான "Amerigo Verspucci" பெயரால் இந்த நாடு அழைக்கப் படுவதற்கு எந்தவிதமான ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை என்பதற்கு இதை இந்தியா என நம்பியதுதான் காரணம் எனவும் சொல்லப் படுகிறது.

1875-ல்"Jules Marcow" அவருக்குப் பின்னர் வந்த கதாசிரியர்"Jan Carew" இருவரும் அமெரிக்கா என்ற பெயர் நிகாரகுவவின் ஒரு நகரமான "Ammerique" எடுக்கப் பட்டிருக்கலாம் எனச் சொல்கிறார்கள். தங்கத்திற்கு, அதிலும் சுத்தத் தங்கத்திற்குப் பேர் போன அந்த நகரத்திற்குக் கொலம்பஸ் மட்டுமின்றி "Vespucci" விஜயம் செய்தார்.Marcow சொல்கிறார் இந்தப் பேரை"Vespucci" புதிய உலகிற்குச் சூட்டியதல்லாமல் தன் பெயரையும் "Alberigo" இருந்து "Amerigo" என மாற்றிக் கொண்டதாயும் குறிப்பிடுகிறார்.

Sunday, July 08, 2007

கொடுமைங்க இது!

"பொன்னியின் செல்வன்" கதையை நான் எத்தனை முறை படிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது. ரொம்பச் சீக்கிரமாகவே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த நான் முதன் முதல் "பொன்னியின் செல்வன்" படிக்கிறப்போ 7 வயசு இருக்கும். அப்போ 3-ம் வகுப்பில் இருந்த நான் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டதால் அந்த வருஷம் லீவில் அப்பா பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்து வந்த பொன்னியின் செல்வனைப் படிக்க நேர்ந்தது. படிக்கும்போது அந்தக் கதையின் ஓட்டமும், ஆழ்வார்க்கடியான், வந்தியத் தேவனின் சாகசங்களும் மனதைக் கவர்ந்தது. இன்னும் சொல்லப் போனால் வந்தியத் தேவனின் குணமும் என்னோட குணங்களும் கிட்டத் தட்ட ஒத்துப் போனதாக எனக்குத் தோன்றியதாலும் வந்தியத் தேவன் பாத்திரத்தின் மேல் அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது. எனெனில் எனக்கும் கொஞ்சம் கிறுக்குப் புத்தி உண்டு. அதனால் மாட்டிக் கொண்டு முழிக்கறது உண்டு. பலமுறை பலிஆடு ஆக்கப் பட்டிருக்கிறேன். நெருங்கியவர்கள் என நினைத்தவர்கள் என்னை ஒரு பொருட்டாகக் கருதியதில்லை. இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டேன். மேலும், வந்தியத் தேவன் போலவே உதவின்னு செய்யப் போய் இக்கட்டில் மாட்டிக் கொண்டு முழிக்கறது உண்டு. என்றாலும் அவனைப் போலவே அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளித்து வெளியே வர நேர்ந்ததும் உண்டு. (ஹிஹி, மறுபாதியோட கமென்ட், இப்போவும் அப்படித்தான்). அதற்குப் பின்னர் பலமுறை படித்தேன்.

2-ம் முறையாகக் "கல்கி" பத்திரிகையில் தொடர் வந்துகொண்டிருந்தபோது என்னுடைய அம்மாவின் சிநேகிதியின் பெண்களுக்குப் "பொன்னியின் செல்வன்" கதையை நான் எடுத்துச் சொல்ல நேர்ந்தது. வந்தியத் தேவன் மேல் ஈர்ப்பு வரும்படி நான் சொன்னதாலோ என்னவோ, கடைசி பாகத்தில் அவன் சிறையில் அடைக்கப் பட்டதும், அந்தப் பெண்கள் வந்தியத்தேவன் விடுதலைக்காக மதுரை "நேரு விநாயகர்" கோவிலில் தேங்காய் உடைக்கிறேன் என வேண்டிக் கொண்டதும் நினைவில் இருக்கிறது. இப்போவும் இந்தியாவில் என்னிடம் புத்தகம் ஊள்ளது, சற்றே கிழிந்த நிலைமையில். பல ஊர்கள் பார்த்துவிட்டதே அந்தப் புத்தகம். போனமுறை யு.எஸ்ஸுக்குக் கூட வந்தது. இப்போ அதன் உடல்நிலை கருதி எடுத்துவரவில்லை. என்றாலும் கதை என்ன நமக்குத் தெரியாததா என அலட்சியமாக நினைத்துக் கொண்டுதான் "கண்ணபிரான், ரவிசங்கர்" வைத்த "புதிரா, புனிதமா?" போட்டிக்குப் போனேன். முதல் கேள்விக்கே விடை தவறு. இந்த ராமன், கிருஷ்ணன், கிருஷ்ணன்ராமன் என்று மாற்றிவிட்டதில் சற்றே குழம்பிப் போய் முற்றிலும் தவறான விடை கொடுத்துவிட்டேன். அடுத்து வந்தியத் தேவன் முதலில் போவது மாதோட்டம்தான், அங்கே தான் கொடும்பாளூர் வேளிரால் சிறையில் வைக்கப் படுவான், என்று நன்கு தெரிந்திருந்தும் அனுராதபுரம் என்று பின்னர் அவன் ஆழ்வார்க்கடியானுடன் போகும் ஊரை நினைத்துக் கொண்டும், அங்கே தம்பள்ளைக்கு அருண்மொழித்தேவர் போய்விட்டுத் திரும்புவதையும் நினைத்துக் கொண்டுவிட்டேன். அதுவும் தப்பு. கடைசிக் கேள்விக்குப் பெரிய பழுவேட்டரையர்தான் சரியான விடை என்று கண்ணன் சொல்கிறார். ஆனால் நந்தினி அவரிடம் இருந்து பயந்து கொண்டு வெளியே வந்து அழுது முடித்துவிட்டுச் சின்னப் பழுவேட்டரையரின் பரிவாரங்களுடன் வந்த குதிரைகளில் ஒன்றில்தானே போவாள்? அப்போது சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்துத் தானே அவள் மனம் மாறி ஓடுவாள்? இதுதான் நான் நினைத்தது. நந்தினி ஓடிப் போகும் சமயம் பெரிய பழுவேட்டரையர் குகையை விட்டு வெளியே அப்போதுதான் வந்து கொண்டிருப்பார். ஏனெனில் ரவிதாசன் குழுவினர் குகையை மேலே பாறையைப் போட்டு மூடிவிட்டுத் தப்பி இருப்பார்கள். இதுதான் சரியான பதிலோ என்று நான் நினைத்தது. ஆக மொத்தம் நான் மூவரில் ஒருத்தியாகக் கூட வரவில்லை. உண்மையிலேயே கொஞ்சம் வெட்கமாய்த் தான் இருக்கிறது. "கற்றது கைம்மண் அளவு" கூட இல்லை! நான் படிச்சதும் ஒண்ணுமே இல்லை! பலர் ரொம்பவே சுலபமான கேள்விகள் எனச் சொல்லி இருக்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் கர்வம் பங்கம் ஆனது!
:((((((((((

Friday, July 06, 2007

அமெரிக்கா - கண்டு பிடிச்சது யாரு?

எல்லாரும் பொதுவாய் அமெரிக்கான்னு சொன்னதும் நினைச்சுக்கறது யு.எஸ். என்னும் நாட்டைத் தான் என்றாலும், மிகப் பெரிய இந்தக் கண்டம் ஆனது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்ற இரு பகுதிகள் கொண்டது. நான் எழுதப் போறதும் என்னமோ யு.எஸ். என்னும் நாட்டைப் பத்தித் தான் என்றாலும் கொஞ்சம் இதன் பூகோளமும் ரொம்ப லேசாய்த் தொடுகிறேன். வடக்கே கனடா, மத்தியில் யு.எஸ்., தெற்கே மெக்ஸிகோ,தென் அமெரிக்காவில் பிரேஸில் அர்ஜென்டினா, சிலி, வெனிஜூலா, பெரு, போன்ற நாடுகள் இருக்கின்றன, என்றாலும் உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் அதிகம் விரும்பி வருவது இந்த யு.எஸ்ஸுக்குத் தான். விசாவுக்கு விண்ணப்பிக்காமல் திருட்டுத் தனமாய் வருபவர்களும் அதிகம். சென்னையில் யு.எஸ். கான்சலேட் அலுவலகம் யு.எஸுக்கு வர விசா கேட்டு வரும் விண்ணப்பங்களால் திணறுகின்றது. ஆன்லைனில் கூட விசா நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பங்களும், தேதிகளும் கிடைப்பது கஷ்டமாய் இருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது இந்த நாட்டில்? அனைவரையும் கவரும் இந்த நாட்டில் கிடைக்காதது என்று ஒன்றுமே இல்லை. எல்லாவிதமான வளங்களும் நிரம்பப் பெற்றது. தேவைக்கு மீறியோ என்று கூட நான் எண்ணுவது உண்டு. இப்போது சற்றுப் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போமா?
*************************************************************************************

இறைவனால் படைக்கப் பட்ட கண்டங்களும், அதில் மனிதன் வாழ்வதும் இருந்து வந்திருந்தாலும் பெரும்பாலும் மற்றக் கண்ட மனிதர்கள் இன்னொரு கண்டத்திற்குக் குடி பெயரும்போது தான் அது கண்டறியப் பட்டதாய்ச் சொல்லுகிறோம். அந்த வகையில் இந்தக் கண்டம் "கிரிஸ்டோபர் கொலம்பஸ்" என்னும் ஸ்பெயின் நாட்டுக் கடலோடியால் கண்டு பிடிக்கப் பட்டாலும், அவர் நினைத்தது என்னமோ இந்த நாடுதான் "இந்தியா" என. ஆகவே தான் இங்கே இருந்து வந்த "பூர்வ குடிகள்" இந்தியர் எனவே அழைக்கப் பட்டு வருகின்றனர். இது இவ்வாறிருக்க உலக நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளைத் தன் ஆதிக்கத்துக்குள் வைத்திருந்த பிரிட்டனின் கூற்று என்னவென்றால் கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பிரிட்டனின் "பிரிஸ்டல்" என்னும் இடத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்தக் கடலையும், கண்டத்தையும் கண்டறிந்ததாகச் சொல்கிறார்கள். பிரிஸ்டலில் இருந்த ஒரு வியாபாரியான Richard Amerike இவர் John Cabot என்பவருக்குப் பண உதவிகள் செய்து புதிய நாடு கண்டுபிடிக்க உதவியதாக Alfred Hudd என்பவர் சொல்கிறார். இதற்கான ஆதாரங்கள் பிரிட்டனின் Westminister Abbey யில் இருப்பதாகவும் சொல்கிறார். மேலும் இவர் கூறுவது அதற்கான படங்களை Waldsmuller போட்டிருப்பதாகவும் ஒரு பழைய ஆங்கிலேயப் படத்தை முன் மாதிரியாக வைத்துத் தான் இது வரையப் பட்டதாகவும் சொல்கிறார். இவரின் கூற்று அந்த வியாபாரியின் பெயரில் இருந்துதான் அமெரிக்கா என்று இந்தக் கண்டம் பெயர் சூட்டப் பட்டது என்பதாகும்.

கொலம்பஸ் முதன் முதல் இறங்கியது தற்சமயம் யு.எஸ். என்று அழைக்கப் படும் நாட்டில் இல்லை. அது பற்றிப் பின்னர் வரும்.

மண்ணின் மைந்தர்!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் "மண்ணின் மைந்தர்" அருண்குமாருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்ன அருண், ஒரு 90 வயசு ஆயிருக்குமா? :))))))))

விவேகானந்தர் நினைவு நாள் -ஒரு தொடர்ச்சி!

தமிழன் என்பவர் ஸ்வாமி விவேகானந்தர் பத்திய என்னோட பதிவில் அவரை "அன்னிபெசன்ட்" அம்மையார் தன்னுடைய தியோசபிகல் சொசைடியின் கருத்துக்களைத் தான் சொல்லவேண்டும் என்று வறுபுறுத்தியதாய்க் குறிப்பிட்டிருக்கிறார். நான் அறிந்தவரை விவேகானந்தர் இறந்து சில வருடங்கள் சென்றபிறகே ஐரோப்பாவில் இருந்து வந்த பெசன்ட் அம்மையார் தியோசபிகல் சொசைடியின் பொறுப்பை ஏற்கிறார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்னும் ஜே.கே. பற்றிப் படிக்கும்போது இதைப் படித்திருக்கிறேன். என்றாலும் இன்று மறுபடி ஒருமுறை பெசன்ட்டையும், விவேகானந்தரையும் கூகிளாண்டவரின் தயவுடன் நோண்டியபோது இருவரும் சந்தித்து இருக்க வாய்ப்பே இல்லை எனத் தோன்றுகிறது.

ஏனெனில் விவேகானந்தர் 1890-ம் ஆண்டில் இருந்தே தன்னுடைய இந்தியச் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்து உள்ளார். 1892-ம் ஆண்டில் தான் அவருக்கு சேதுபதி ராஜாவின் அறிமுகமும், மைசூர் ராஜாவின் அறிமுகமும் கிடைக்கிறது. அவர் 1893-ம் ஆண்டில் செப்டெம்பர் மாதம் தான் சிகாகோவில் தன்னுடைய மதிப்பிற்குரிய உரையை நிகழ்த்துகிறார். அதற்கு அன்னிபெசன்ட் அம்மையார் சென்றிருந்திருக்கிறார், என்றாலும் அவர் அப்போது தான் தியாசபிகல் சொசைடியின் கருத்துக்களால் கவரப்படுகிறார். அதுவரை ஒரு மார்க்ஸிஸ்ட் ஆக இருந்த அவர் அதன்பின்னர் மனம் மாறி தியாசபிகல் சொசைடியில் சேர்ந்து 1893-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முறையாக இந்தியா வருகிறார். ஜூலை 4 1902-ம் ஆண்டில் தன்னுடைய இறப்பைப் பற்றி முன்கூட்டியே அறிவித்த விவேகானந்தர் 39-ம் வயதில் இறந்து போகிறார். அதற்குச் சில வருஷங்களுக்குப் பின்னரே அன்னிபெசன்ட் அம்மையார் 1909-ம் ஆண்டு சென்னை, அடையார், தியாசபிகல் சொசைடியின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். அவரை மிகவும் கவர்ந்தவர் அங்கே வேலை செய்து கொண்டிருந்த திரு நாராணய்யா என்பவரின் மகன் ஆன 14 வயது நிரம்பிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்னும் ஜேகேவைச் சந்திக்கிறார்.

அம்மையார் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டு சிறுவனை உருவாக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்கிறார். அம்மையார் மனதில் புத்தன், ஏசு போல் இந்தக் கிருஷ்ணமூர்த்தியும் ஒரு அவதாரம், என்ற எண்ணம் தோன்றியதோடல்லாமல் அப்படியே அவரை ஒரு "மைத்ரேயன்" எனப் பிரகடனமும் செய்துவிட்டார். ஆனால் ஜேகேயோ தான் ஒரு அவதார புருஷன் இல்லை என்று அந்தப் பதவியை உதறிவிட்டதோடு அல்லாமல் தான் மிகுந்த ஆசை வைத்திருந்த ஒரே தம்பி இறந்துபோன நிலையில் ஆத்மஞானம் அடைந்தார். ஆனாலும் அன்னிபெசன்ட் அம்மையார் தன்வரை இவரை ஒரு அவதாரபுருஷனாகவே நினைத்து வந்தார். அவருடைய சிந்தனைகளையும் மதித்தார். பொதுவாக "ஆசையை அடக்கு" என்றுதான் அனைவரும் சொல்லுவார்கள். ஆனால் ஜேகேயே அடக்குவதினாலோ, விரட்டுவதினாலோ ஆசை அடங்காது. அதன் தன்மையை நாம் ஆராய்ந்தோமானல் தானாகவே ஆசை அடங்கிவிடும்." என்கிறார். எந்தச் சமயக் கருத்துக்களையும் சாடாத இவர், "நான் சொல்லுவதை எல்லாம் வெறும் போதனைகளாகக் கேட்கவேண்டாம். அவை வெறும் சொற்களே. அனுபவரீதியாக உண்மையை உணரவேண்டும்." என்று சொல்லுவதோடு அல்லாமல், "சமயம் வாழ்விலிருந்து வேறுபட்டதல்ல. சொல்லப் போனால் அதுதான் வாழ்வு. இந்த வாழ்வுக்கும், சமயத்திற்கும் வேறுபாடு ஏற்படுத்தியதால் துன்பங்கள் உண்டாகின்றன. உள்ளொளி ஞானம் என்பது தானே ஒளியாக இருப்பது. வாழ்க்கையைச் சரியாக வாழ்வதில்தான் ஆத்மஞானம் இருக்கிறது. இதை அனுபவத்தால்தான் பெற முடியும்." என்றும் சொல்கிறார்.

ஹிஹிஹி, எங்கேயோ இருந்து எதுக்கோ போயிட்டேனோ? விவேகானந்தரும், பெசன்ட் அம்மையாரும் சந்திக்கவே இல்லை என்பது தான் நான் சொல்ல வந்தது.

Wednesday, July 04, 2007

சுதந்திர நாள் கொண்டாட்டம்!

இன்றைக்கு அமெரிக்க சுதந்திர தினம். நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் ஆரம்பித்த பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது. முதலில் போய்ப் பார்க்கவேண்டும் என நினைத்தோம்., ஆனால் வீட்டில் இருந்து பார்த்தாலே தெரிகிறது. ஒரு வாரமாகவே வெடிக் கொண்டாட்டங்கள் தான். பல நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஒன்று சேர்ந்ததைக் குறித்து ஆச்சரியப் படுவதா? புரியவில்லை. முதலில் சில நாடுகள் மட்டும் பிரிட்டனிடம் இருந்து வந்தது. அவை விடுதலைப் போரில் பிரிட்டனைத் தோற்கடித்துவிட்டுப் பின் ஒன்று சேர்ந்தன.

13 மாநிலங்கள் அதில் அநேக வட மாநிலங்கள் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்தன. நியூ நெதர்லாந்து என்று அழைக்கப் பட்டு வந்த இடம் தான் "நியூயார்க்" என பிரிட்டனால் பெயர் மாற்றம் செய்யப் பட்டது. இங்கு வந்து குடியேறியவர்கள் என்றாலும் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தை யாரும் விரும்பவில்லை. முதல் சுதந்திரப் போர் ஆரம்பித்தது. 1775 ஜூன் 14-ம் தேதியில் ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையில் சுதந்திரப் போர் ஆரம்பித்தது. ஃப்ரெஞ்சுக் காரர்களின் உதவியுடன் போர் நடைபெற்றது. இதற்கிடையில் "தாமஸ் ஜெஃப்பர்சன்" என்பரால் எழுதப் பட்ட விடுதலைப் பிரகடனம் ஜூலை 4-தேதி 1776-ம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது.

போரில் பிரிட்டன் படுதோல்வி அடைந்து, பிரிட்டனின் ஆதரவாளர்கள் அனைவரும் வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்தார்கள். இருந்தாலும் சரியான அரசு ஏற்படுத்தச் சில வருடங்கள் பிடித்தன. 1783 வரை பிரிட்டன் இந்த அரசை அங்கீகரிக்கவில்லை. அதற்குப் பின்னர்தான் 1789-ம் ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் முதல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பதவி ஏற்றார். முதலில் நியூயார்க் நகரம்தான் தலைநகரமாக இருந்து வந்தது. வடமாநிலங்களில் கறுப்பு இனத்தவரை அடிமையாக வைக்கும் அடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கப் பட்டது. 1800-ம் ஆண்டு தான் தற்போதைய தலைநகரமான "வாஷிங்டன்" நகரத்திற்கு அரசு குடி பெயர்ந்தது. (இன்னும் வரும்)

விவேகானந்தர் நினைவு தினம் இன்று!

ஜூலை 4-ம் தேதி விவேகானந்தர் நினைவுநாள். விவேகானந்தர் பத்தி ஏதாவது எழுதணும்னு பார்த்தால் என்னிடம் உள்ள புத்தகங்களில் எதுவுமே கிடைக்கவில்லை. கூகிளில் தேட நேரம் இல்லை.ஒவ்வொரு நாள் பதிவு போடுவதே இப்போதெல்லாம் பெரும்பாடாக இருக்கிறது. அதுக்கு ஏற்றாற்போல் வழக்கமான நண்பர் குழாமும் அவங்க அவங்க வேலையிலே ரொம்ப பிசி!. என் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதறேன்.
************************************************************************************

முதன்முதல் வெளிநாடு சென்று அங்கே நம் நாட்டுக் கலாசாரத்தைப் பரப்பியவர்களில் ஒருவர் விவேகானந்தர். சிகாகோவில் அவர் ஆற்றிய உரை உள்ள புத்தகம் கூட இந்தியாவிலே விட்டுட்டு வந்திருக்கேன்.(ஏற்கெனவே நான் கொண்டு வந்திருக்கும் புத்தகங்களால் எடை ரொம்ப அதிகம் ஆயிட்டதுன்னு மறுபாதி ஒரே புலம்பல்) "என்னருமை அமெரிக்க நாட்டு சகோதர, சகோதரிகளே!" என அவர் தன் உரையை ஆரம்பித்த கணம் ஏற்பட்ட கைதட்டல் ஒலி வெகு நேரத்துக்குக் கேட்டதாய்ச் சொல்லுவார்கள். எவ்வளவு பரந்த மனம் இருந்தால் அனைவரையும் தன் சகோதர, சகோதரியாக எண்ணி இருப்பார்?

அவரை அமெரிக்க நாட்டிற்குப் போகப் பணம் உதவி செய்து அவரை அனுப்பி வைத்துப் பின் வரவேற்பு செய்தது ஒரு தமிழர்! யார் தெரியுமா? ராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்கள் தான். முதலில் ராஜாவே போவதாய்த் தான் இருந்தார். பின்னர் விவேகானந்தர் பத்திக் கேள்விப் பட்டு தன்னை விட அவரே தகுதியான நபர் எனத் தீர்மானித்து அவரை அனுப்பி வைத்தார். விவேகானந்தர் வெளிநாட்டில் இருக்கும்போது ஒரு பெண்மணி அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என விவேகானந்தர் அந்தப் பெண்மணியிடம் கேட்க அந்தப் பெண்மணி விவேகானந்தர் போல் ஒரு மகன் தனக்கு வேண்டும் எனவும் அதற்கு அவரைத் திருமணம் செய்து கொண்டால்தானே முடியும் எனவும் சொன்னாராம். அதற்கு விவேகானந்தர் அந்தப் பெண்மணியிடம், "தாயே, இந்த நிமிஷம் முதல் நான் உங்கள் மகன், என்னையே நீங்கள் உங்கள் மகனாக எண்ணிக் கொள்ளலாம்." என்று சொன்னாராம். அந்தப் பெண்ணிற்குப் பேச்சு எழவில்லை. இத்தனை சிறிய வயதில் இவ்வாறு நினைக்க மனம் எவ்வளவு பண்பட்டிருக்க வேண்டும்? இது போல் எத்தனையோ நிகழ்ச்சிகள் சின்னச் சின்னதாய் விவேகானந்தர் வாழ்வில் நடந்தவை இருக்கின்றன. முடிந்தால் எல்லாவற்றையும் தொகுத்துப் போடவும் ஓர் ஆசை இருக்கிறது.

விவேகானந்தர் வெளிநாட்டில் நம் கலாசாரத் தூதுவராய்ச் சென்று திரும்பி வரும்போது அவரை சேதுபதி மகாராஜாவைத் தவிர வேறு யாரும் வரவேற்கவில்லை. ஆஸ்தீக இந்துக்கள் அவர் கடல் கடந்து சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். 1905-ம் ஆண்டு பாரதியார் "காசி காங்கிரஸ்" மகாநாடு சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை ஆன சகோதரி நிவேதிதா தேவியைச் சந்தித்துத் தன் ஆன்மீக குருவாக ஏற்றார். ஆன்மீகத் தேடலில் தன்னிறைவு பெற்ற விவேகானந்தரின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும். விவேகானந்தர் இந்து மதத்தைக் காப்பாற்றியதாக சக்கரவர்த்தி ராஜாஜியும், புதிய நவீன இந்தியாவின் ஸ்தாபகர் என்று சுபாஷ் சந்திர போஸாலும், விவேகானந்தரின் நாட்டுப் பற்று மிகுந்த கட்டுரைகளைக் காந்தியும் மேற்கோள் காட்டி இருக்கின்றனர். காந்தி விவேகானந்தரின் எழுத்துக்களுக்கு அறிமுகம் தேவை இல்லை எனவும் கூறி இருக்கிறார். விவேகானந்தர் இறந்த பல வருஷங்களுக்குப் பின்னர், ரவீந்திர நாத் தாகூர், "இந்தியாவை அறிய வேண்டுமா? விவேகானந்தரின் எழுத்துக்களைப் படித்தால் அறியலாம். இத்தனை நேர்மறையான சிந்தனைகளுடன் உள்ள இளைஞர் அவரைத் தவிர யாரையும் பார்த்தது இல்லை!" என்று கூறி இருக்கிறார். அவருடைய பிறந்த தினம் ஆன ஜனவரி 12-ம் தேதி இந்தியாவில் இளைஞர்கள் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது. பூபேந்திர தத்தா என்ற சுதந்திரப் போராட்டப் புரட்சி வீரரின் சகோதரர் ஆன விவேகானந்தரைத் தன் குருவாக அரவிந்தரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். விவேகானந்தர் இளைஞர்களுக்குத் தான் அதிகம் எழுதி இருக்கிறார். அன்றைய நாட்களில் இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்புவதற்காக அவர் சொன்ன சொல்: விழிமின்! எழுமின்! கேண்மின்! இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும்.