எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 26, 2021

நம்பெருமாளைப் பார்க்க முடியலையே! :(

இங்கே ஶ்ரீரங்கத்துக்கு  வந்து சுமார் பத்து வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனாலும் நம்ம ரங்கு (நம்பெருமாள்) ஒவ்வொரு முறையும் பங்குனி மாசத் திருவிழாவின் போது உறையூருக்குப் போக எங்க தெரு வழியாத் தான் போயிட்டு அதே வழியாத் திரும்பியும் வரார்னு எனக்கு/எங்களுக்கு நேத்திக்குத் தான் தெரியும். அசடு மாதிரிப் பத்து வருஷமா இந்த விஷயமே தெரியாமல் நம்பெருமாளைப் பார்க்காமல் இருந்திருக்கோமேனு நினைச்சால் மனசு கஷ்டமா இருக்கு. அவரானால் ரங்க நாயகிக்குத் தெரியாமல் திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிறாரா அதனால் விடிகாலை மூன்றிலிருந்து நான்கு மணிக்குள்ளாக (ரங்கநாயகி கண் அசரும் நேரம்) உறையூருக்குப் போகிறார். அங்கே போய்க் கல்யாணம் ஆகிச் சேர்த்தி எல்லாம் முடிஞ்சப்புறமா கமலவல்லியை அங்கேயே விட்டுட்டு எங்கே ரங்கநாயகிக்குத் தெரிஞ்சுடுமோனு உடனேயே அடிச்சுப் பிடிச்சுண்டு ஓட்டமா ஓடி வரார். போகும்போது கல்யாணம் பண்ணிக்கப் போற குஷியிலே நிதானமாக ரசிச்சுக் கொண்டு போனவர் திரும்பி வரச்சே விழப்போகும் அடியை நினைச்சு ஓட்டமா ஓடி வரார். இன்னிக்குக் காலம்பர 3 மணிக்குத் திரும்பி இருக்கார். அதுவும் தெரியாமல் போச்சு. எங்க வீட்டில் வேலை செய்யும் பெண் கூப்பிடறேன் மாமினு சொல்லிட்டுக் கூப்பிடவே இல்லை. 

ஆனால் போகும்போது பார்த்திருக்காங்க அந்தப் பெண்மணி. அப்போவும் எங்களைக் கூப்பிடலை. இன்னிக்குக் காலம்பர இங்கேயே ஷண்முகா கல்யாண மண்டபம் காரங்க நம்பெருமாளுக்கு மரியாதை எல்லாம் செய்து சுமார் 20 நிமிடங்கள் போல் இங்கேயே நின்னுட்டு இருந்திருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தெரியவே இல்லை. என்ன போங்க! அம்பேரிக்கா போகும் முன்னர் ரங்குவைப் பார்த்தது. பெரிய ரங்குவைத் தான் பார்க்க முடியலை. இவரையாவது பார்ப்போம்னா அதுவும் முடியலை. எப்போக் கொடுத்து வைச்சிருக்கோ தெரியலை. 



நன்றி மாலை மலர்! 

இங்கே வந்ததும் இன்னிக்கு இருக்கு அவருக்கு. மட்டையடித் திருவிழா! 
















ரங்கநாயகித் தாயாருடன் நம்பெருமாளின் சேர்த்தி சேவை. இப்போது ஶ்ரீரங்கத்தில் இந்த மட்டையடித் திருவிழா நடந்து வருகிறது. இன்னிக்குத் தான் நம்பெருமாள் உறையூரிலிருந்து திரும்பி இருக்கிறபடியால் அநேகமா இன்னிக்கு ஆரம்பிச்சிருக்கும்.









இவை எல்லாம் 2018 ஆம் ஆண்டிலோ என்னமோ எடுத்த படங்கள். சுமார் 2 வருஷங்களாக நம்பெருமாளைப் படம் எடுக்கவே வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பார்க்கவும் முடியாமல் போகிறது. அவர் தான் மனசு வைச்சு தரிசனம் கொடுக்கணும்.

Tuesday, March 23, 2021

பல்லவர்களுடன் அத்திமலைத் தேவன்!

எனக்கு முதல் முதல் அத்தி வரதர் பற்றிய தகவல் நான் கல்யாணம் ஆகி வேலைக்குப் போனப்போக் கூட வேலை பார்த்த ஶ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கனகவல்லி என்னும் சிநேகிதி மூலம் தெரிய வந்தது. ஆனாலும் அப்போ எல்லாம் இத்தனைத் தகவல்கள் தெரியாது/யாரும் சொல்லவில்லை. 40 வருடங்களுக்கு ஒரு முறை அத்தி வரதர் வெளியே வருவார் என்பது மட்டுமே தெரிய வந்தது. ஏன் உள்ளே வைச்சிருக்காங்க என்பதற்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. சிலர் அவரை வெளியே வைக்கக் கூடாது எனவும், அதோடு இல்லாமல் அந்நியப் படையெடுப்பின்போது அத்திவரதர் மறைத்து வைக்கப்பட்டதாகவும் சொன்னார்கள். ஆனால் யாருமே அக்கினியிலிருந்து தோன்றியவர் எனச் சொல்லவில்லை. அதை முதலில் நரசிம்மா மூலமே தெரிந்து கொண்டேன். என் வாழ்நாளில் 79 ஆம் வருடம் ஒரு முறை அத்தி வரதர் வெளி வந்திருக்கிறார். அப்போ நாங்க சிகந்திராபாதில் இருந்தோம். ஆனால் இம்முறை அத்தி வரதர் வந்தப்போ நடந்தாப்போல் கோலாகலக் கொண்டாட்டங்கள், கூட்டங்கள், விமரிசனங்கள் ஏதும் அப்போ இருந்ததாய்த் தெரியலை.  அல்லது முழுக்க முழுக்கக் குடும்பச் சூழ்நிலையில் முழுகி இருந்த எனக்குத் தெரியலை. 

காஞ்சிக் கோயிலில் அத்திவரதர் மூழ்கி இருக்கும் அனந்த சரஸ் குளமும், அதன் மண்டபத்தில் ஆடிய நடிகை (கோழி கூவுது விஜி) க்கு நேர்ந்த துயரச் சம்பவங்கள் பற்றியும் அறிய நேர்ந்தபோது உண்மையிலேயே அதிர்ச்சி! இப்படியும் நடக்குமா என்பது! ஆனால் நடந்திருக்கே! நரசிம்மாவுக்கும் அத்தி வரதர் அந்நியப் படையெடுப்பில் பின்னமாக்கப்பட்டதாகச் சொல்லி இருக்காங்க. அவர் முழுத்தகவல்களுக்குகாகவும் தேடி அலைந்திருக்கார். காஞ்சியின் தல வரலாற்றிலும் அத்தி வரதர் தோன்றிய விதம் சொல்லப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எனக்குப் புதிது. அத்தி மரத்தை மஹாவிஷ்ணு என்பார்கள். வீட்டில் அத்திமரம் இருப்பதையும் விசேஷம் எனச் சிலரும், இருக்கக் கூடாது எனச் சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அகத்தி வேறே அத்தி வேறே!  அந்த அத்திமரம் பற்றி நாம் அறியாத பல தகவல்களைச் சொல்கிறார் நரசிம்மா! அத்திமரம்/பூவரசு எனவும் தேவ உடும்பரம் எனவும் பெயர் பெற்றிருப்பதாய்ச் சொல்கிறார். அதோடு அல்லாமல் இது உக்கிரத்தைத் தணிக்கும் என்பதாலேயே கோபத்துடன் பாய்ந்த வேகவதியான சரஸ்வதியின் உக்கிரம் அத்திமரத்துண்டுகளைப் போட்டதும் நிதானம் கொண்டதாயும் தெரிவிக்கிறார். 

எல்லாவற்றையும் விட ஆச்சரியத்தில் ஆழ்த்துகிற தகவல் என்னன்னா புத்தர் ஞானம் பெற்றது இந்த தேவ உடும்பர அத்திமரத்தினடியில் தான் என்கிறார். புத்தருக்கு ஞானம் கிடைத்ததாலே போதி மரம் என்னும் பெயரைப் பெற்றதாகவும். இந்த தேவ உடும்பர அத்திமரம் தென்னாட்டில் காஞ்சியிலும் வடக்கே புத்த கயாவில் புத்தர் ஞானம் பெற்ற இடத்திலும் இருந்ததாயும், வடக்கே இருந்த தேவ உடும்பர அத்தி மரத்தைத் தான் அசோகன் வலிந்து மணந்து கொண்ட கலிங்கத்து இளவரசி திஸ்ஸரக்கா நாசமாக்கினதாயும் சொல்கிறார். ஆனால் இந்த மரத்தின் தன்மை இதன் வேர்/பூ/விதையை இன்னொரு மரத்தில் நட்டால் உடனே அந்த மரத்தோடு இணைந்து மீண்டும் ஜனிக்கும் என்பதும் ஆச்சரியமான செய்தி. அப்படி வந்தது தான் இப்போது நாம் அனைவரும் பார்க்கும் போதி மரம் என்றும் சொல்கிறார்.  அதோடு இல்லை, சிவன் கையிலிருக்கும் உடுக்கை இந்த தேவ உடும்பர அத்திமரத்தால் செய்யப்பட்டது எனவும் சொல்கிறார். அதனாலேயே இதை"உடம்ரூ" என அழைத்த வட இந்தியர்கள் இப்போது கொச்சையாய் "டம்ரூ" எனச் சொல்வதாயும் சொல்கிறார்.

அத்திமரம் அஷ்டமாசித்திகளையும் அளிக்க வல்லதாம்.தத்தாத்ரேயர் நின்று கொண்டிருப்பது தேவ உடும்பர அத்திமரத்தின் கீழ்தான் என்கிறார்கள். வடமொழியில் இந்த மரம் "காஞ்சி" என அழைக்கப்பட்டதால் இந்த மரங்கள் நிறைந்திருந்த காஞ்சியைக் காஞ்சி என்னும் பெயராலும் "அத்திவனம்" என்னும் பெயராலும் அழைக்கப்பட்டதாய்ச் சொல்கிறார். புத்தகயாவில் இருந்தது இந்த மரம் தான் என்றும் இப்போதுள்ள அரசமரம் அல்ல என்றும் திட்டவட்டமாய்ச் சொல்லுகிறார். இதன் விதையை வேறொரு மரத்தில் விதைத்தால் அது வளர்ந்து மூல மரத்தைப் பிளந்து கொண்டு வந்துவிடும் தன்மை உள்ளது என்கிறார். 

இத்தகைய சக்தி வாய்ந்த அத்திமரம் வடக்கே பாழ்பட்டுவிட்டதை அறிந்து கொண்டு தெற்கே இருக்கும் அத்திமரத்தையும், அத்தி வரதனையும் தேடிக்கொண்டு பல மன்னர்கள் படை எடுத்து வருகின்றனர். அவர்களில் சமுத்ரகுப்தனும் ஒருவன். ஆனால் இங்கே வந்ததும் மனம் மாறிப் பல்லவர்களோடு சமரசம் செய்து கொண்டு தான் வந்ததற்கு அடையாளமாகச் சித்ரகுப்தன் கோயிலைக் கட்டிவிட்டுச் செல்வதாய்க் கூறுகிறார் நரசிம்மா. அந்தச் சித்ரகுப்தன் கோயில் நாம் இப்போது பார்க்கும் இடத்தில் யமனுடைய கணக்குப் பிள்ளையாகக் காட்சி தந்தாலும் சமுத்ரகுப்தன் கட்டும்போது அவனை நினைத்துக் கட்டவில்லை என்கிறார்.  

உபபாண்டவர்களைக் கொன்ற அஸ்வத்தாமாவுக்குக் கண்ணன் கொடுத்த சாபத்திலிருந்து நீங்க முடியாமல் பரசுராமரின் ஆலோசனையின்படி அவன் தெற்கே வந்து அத்தி வனம் எனப்படும் அத்திவரதர் இருப்பிடத்திற்கு வந்து தவம் செய்ய வருகிறான். அங்கே அவன் உடல்நிலையைக் கூடக் கருதாமல் ஓர் பெண் மணந்து கொள்ள அவள் மூலம் இரு பிள்ளைகளைப் பெறுகிறான் அஸ்வத்தாமா. அவர்களில் தொண்டைச்செடி மாலையுடன் இருக்கும் புலிசோமா என்னும் பெயருள்ள  பிள்ளையின் வம்சாவழியினரே பல்லவர்கள் என்னும் பெயருடன் நாட்டை ஆளத் தொடங்குகின்றனர். இன்னொரு பிள்ளையான அஸ்வதன் என்பவன் தன் தாயுடன் செல்கிறான். அவன் தான்  சாவகத் தீவு என அப்போது அழைக்கப்பட்ட காம்போஜத்தின் அரசனாகிறான். அவர்கள் கடைப்பிடிப்பது தேவராஜ மார்க்கம் எனப்படும் தெய்விக நெறி. இங்கேயோ புலிசோமா அத்திவரதரையே குலதெய்வமாய்க் கொண்டு தேவராஜனாக வணங்கி வருகிறான்.  அத்தி வரதரை ஸ்தாபிதம் செய்யும்போது குபேரன் யக்ஷ நேத்திரக் கற்களால் ஆன மாலை ஒன்றைச் செய்து அத்திவரதருக்கு அளிக்கிறான். அந்த மாலையை சித்திரை மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தன்று அத்தி வரதருக்கு அணிவித்தால் அன்றைய தினம் விண்ணில் ஏற்படும் ஒளி மிகப் பிரகாசமாகக் காம்போஜம் வரையும் தெரியுமாம். மேலும் அப்போது அத்திவரதர் கிழக்கே பார்த்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததால் ஒவ்வொரு சித்திரை ஹஸ்தத்தன்றும் காம்போஜத்தில் பூகம்பமும் ஏற்படுமாம். காஞ்சிக்கு நேர் கோட்டில் காம்போஜத்தின் தலைநகரான தரும நகரம் இருக்கிறதாயும் சொல்கிறார். காஞ்சியிலும் ஒரு தரும நகரம் இருந்திருக்கிறது.

அதே போல் அக்காலத்தில் தக்ஷசீலா/நாளந்தாவைப் போல் காஞ்சியின் முக்கூடல் கடிகை எனப்படும் பல்கலைக்கழகமும் மிகவும் பிரபலமாக இருந்து வந்திருக்கிறது. மாணவர்கள் நானா திசைகளிலிருந்தும் வந்து கல்வி கற்றுக்கொண்டு செல்வதும் போவதுமாக இருந்திருக்கின்றனர். கிட்டத்தட்டக் கதையையே சொல்கிறேனோ? தெரியலை. ஆனால் பல்லவர்கள் காலம் அஸ்வத்தாமாவின் மகனில் இருந்து ஆரம்பிக்கிறது. சிம்ம விஷ்ணு காலத்தில் பிரபலம் அடைகிறது. அத்திவரதருக்காகவும், அவருடைய ஶ்ரீதள மணிமாலைக்காகவும் பலரும் வருகின்றனர். அதனால் ஏற்படும் சிக்கல்கள்! அத்திவரதரை வைத்துக் கொண்டு அஸ்வமேத யாகம் செய்தால் நினைத்தது நடக்கும் எனவும் மொத்த பாரதத்தையும் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வந்துவிடலாம் எனவும் பல மன்னர்கள் அத்தி வரதரை அடையவும் தேவ உடும்பர மரத்தின் பட்டைகளுக்காகவும் போர் தொடுக்கின்றனர். அவர்கள் முயற்சி பலித்ததா? 


தொடரும்!

Monday, March 22, 2021

"அத்திமலைத் தேவன்" படித்து விட்டீர்களா?

 குட்டிக்குஞ்சுலு பள்ளிக்குப் போக ஆரம்பித்து விட்டது. முன்னெல்லாம் விளையாட்டுக்கு "நான் பிசி" என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே ஓடும். இப்போ நிஜம்மாவே பிசி. அதிலும் பள்ளியில் சுமார் ஒன்றரை மணி நேரம் விளையாட விடுகிறார்களாம். அதில் கொட்டம் அடிச்சுட்டு வீட்டுக்கு வந்தால் விளையாடியபோது ஏற்பட்ட அழுக்கை நீக்கக் குளிப்பாட்டும்போதே தூங்கி விடுகிறதாம். பாவம்! அதுக்குப் பாலும் அங்கே சரியாய்க் கிடைப்பதில்லை. இங்கே பள்ளிகளில் உணவு அம்பேரிக்கா மாதிரி அவங்க கொடுப்பதில்லை. நாம் தான் கொடுத்து அனுப்பணும். குஞ்சுலுவுக்கு அதைச் சாப்பிடத் தெரியவில்லை/அல்லது பிடிக்கலை. அது வேறே! நாமெல்லாம் பள்ளியில் படிக்கையில் பள்ளி அருகேயே வீடு இருந்ததால் மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வந்திருப்போம். நாங்க வந்தோம். ஆனால் இங்கெல்லாம் அப்படி இல்லை.  குஞ்சுலுவுக்கு இங்கே பல்லி, கரப்பான், மரவட்டை, மற்றச் சில ஊர்வன போன்றவற்றைப்பார்க்க முடிகிறதாம். ஆகையால் வீட்டுக்குள் எப்போதும் செருப்பு அணிந்து கொண்டே இருக்கின்றனர். குஞ்சுலு தனியாக வீட்டுக்குள் சுற்றி விளையாடவும் யோசிக்கிறது. நாளடைவில் எல்லாம் பழகி விட்டால் இந்தியா வந்தால் அதற்குப் புதுசாகத் தோணாது. எங்க அப்பு என்னிடம் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் "பாட்டி, பல்லி இன்னமும் இருக்கா?" என்று கேட்பாள். நானும் பல்லியைப் படம் எடுத்து வாட்சப்பில் அனுப்பி இருக்கேன்.  அப்புவுக்கு இந்தியா பிடிக்கும். சொல்லப் போனால் இங்கே வந்து எங்களுடன் இருந்து எங்களைப் பார்த்துக்கவும் அவளுக்கு ஆசை! 

*********************************************************************************

ஒரு வழியாக "அத்திமலைத் தேவன்" ஐந்து பாகங்களையும் முடித்துவிட்டேன். கடந்த ஒரு மாதமாகச் சமைத்தேன், சாப்பிட்டேன், வேலைகள் செய்தேன், எல்லாம் அன்றாட நிலவரப்படி நடந்து வந்தாலும் ஏதோ வேறே காலத்தில் இருந்தாப்போல் ஒரு எண்ணம். இவ்வுலகில் இருப்பவை கண்களில் பட்டாலும் மனதில் பதியாமல் இருந்தது,குஞ்சுலுவைத் தவிர்த்து. இப்போ அத்திமலைத் தேவனை முடிச்சதும் நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்தாற்போல் இருக்கிறது. அத்திமலைத் தேவன் என்னும் ஒரு புத்தகம் வெளிவந்ததும் அதைப் படித்துவிட்டு ஆதி வெங்கட்,, அவர் மகள் ரோஷ்ணி ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு படித்ததையும் ஆதி விவரித்திருந்தார். அப்போதெல்லாம் அவ்வளவு மனதைக் கவரவில்லை. அதன் முக்கியக் கரு அத்திவரதர் என்பது குறித்த விபரம் அப்போது தெரிந்து கொள்ளவில்லை. பின்னர் நாளாவட்டத்தில் தெரிய வந்தது. நரசிம்மா அதற்கு முன்னர் எழுதிய சில நாவல்களை ஆதியிடமிருந்து வாங்கிப் படித்திருந்தேன்.  இதை யாரிடமிருந்து வாங்கிப் படிப்பது? ரொம்ப யோசனை! அப்போத் தான் திடீரென எதிர்பாராவிதமாகப் புத்தகங்கள் கிடைத்தன. கொடுத்தவருக்கு நன்றி சொல்லி விட்டுச் சீக்கிரம் திருப்பணுமே என்னும் எண்ணத்தில் படிக்க ஆரம்பித்தாலும் நடு நடுவில் தொடர முடியாமல் பிரச்னைகள்.  அத்தி வரதர் காஞ்சிக்குச் சென்று அடையும் வரை எப்படி அக்ஞாதவாசம் இருந்தாரோ அம்மாதிரி நானும் புத்தகத்தைத் தொடாமலேயே சில/பல நாட்கள் இருக்க நேர்ந்தது. அப்புறமா ஒருவழியாகத் தொல்லைகள் கொஞ்சம் குறைந்து புத்தகத்தைத் தொடர முடிந்தது.

***********************************************************************************

பல்லவர்கள் சரித்திரம் எனக்குக் கல்யாணம் ஆன புதுசில் முதல் முதல் காஞ்சி போனப்போத் தெரிய வந்து ஆச்சரியமா இருந்தது. ஆனால் அப்போவும் முழு விபரங்கள் தெரியாது. பின்னர் நாளாவட்டத்தில் "தெய்வத்தின் குரல்" புத்தகம் மூலம் காஞ்சிப் பெரியவர் பல்லவ குலத்தைப் பற்றிச் சொல்லி இருப்பது குறித்துத் தெரிய வந்தது. அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் என்பதும், பாரத்வாஜ கோத்திரம் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் அதில் காம்போஜத்தைப் பற்றியோ தேவராஜ மார்க்கம் பற்றியோ குறிப்பிட்டிருந்ததாய் நினைவில் இல்லை. நரசிம்மா தொண்டை நாட்டுக்காரர் தானே! அதனால் பல்லவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கார் போல என நினைத்தால் அவர் எங்கேயோ போய்விட்டார். சாணக்கியன் காஞ்சிபுரத்துக்காரர் என்பதில் ஆரம்பித்து ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே போகிறார். ஆனால் இதில் ஒரு விஷயம் எனக்குப் புதிதல்ல. அது தான் அசோகனின் கொலை வெறி! இது ஹிந்தி படிச்சிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. அசோகனின் கொலைவெறியை வைத்து ஹிந்தியில் நாவல்கள், பாடல்கள், நாடகங்கள் என வந்திருக்கு. நான் விஷாரத் படிக்கையில் தெரிந்து கொண்டேன். தன் சொந்த அண்ணனையே காதல் போட்டியிலும்/அரியணைப் போட்டியிலும் கொன்றுவிட்டு அசோகன் பட்டத்துக்கு வந்தான் என்பதைத் தெரிந்து கொண்டிருந்தேன். கலிங்கத்துப் போர் அவன் மனதை மாற்றியது என்றாலும் அதற்கான வலுவான காரணங்களை "அத்திமலைத் தேவன்" மூலமே அறிந்து கொண்டேன்.

போதி மரம் குறித்த தகவல்கள் புதியவை. அது அசோகன் மனைவியால் சிதைக்கப்பட்ட தகவலும் புத்தம் புதிது. ஆம்ரபாலியை நாடகமாகப் படித்திருக்கேன் ஹிந்தியில்! இதில் நிறைய விபரங்கள். தாய் வயிற்றில் இருந்த பிம்பிசாரனைக் குழந்தையாகப் பாதுகாத்த முறையும், அதுவும் தாய் இறந்த பின்னரும், செலுகஸ் நிகேடார் மகளை சந்திரகுப்தன் மணந்து கொண்டான் என்பதை நாம் படிச்சிருக்கோம். ஆனால் பிம்பிசாரன் அவளுக்குப் பிறந்த பிள்ளை அல்ல என்பது புதிது! அவன் சந்திரகுப்தனின் இந்திய மனைவிக்குப் பிறந்தவன் என்னும் செய்தியை இப்போது அறிந்தேன்.  தேவ உடும்பர மரம் பற்றியும் ஸ்ரீதள மணி பற்றியும் புதிதாக அறிந்தேன். ஸ்ரீதள மணி மாலை உக்ரோதயமாக மாற்றப்பட்டு தன் உக்கிரத்தைக் காட்டி வந்து கடைசியில் ஒருத்தருக்கும் கிடைக்காமல் கடலடியில் மறைந்தது நானே சொந்தமாக எதையோ இழந்து விட்டாற்போல் ஒரு எண்ணம். 

என்ன தான் புத்திசாலியாகவும் ஓர் அரசையே உருவாக்கும் சாமர்த்தியம், திறமை நிறைந்திருந்தாலும் சாணக்கியர் செய்த தவறு தேவ உடும்பர மரம் பற்றியும் அத்திமலைத் தேவன் பற்றியும் வடக்கேயும் போய்ச் சொன்னது தான். அதன் விளைவுகள் அசோகனின் மகள், மகன், அவர்களுடன் வந்த ஆம்ரபாலி எனத் தொடர்ந்தாலும் ஒரு கட்டத்தில் வடக்கே இருந்து வந்த மன்னர்களுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தெற்கே இருந்த சேர, சோழ, பாண்டிய வம்சங்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள சொந்த, பந்தங்கள், விருப்பு, வெறுப்புகள் என ஆரம்பிக்கின்றன. அதற்குள் விரிவாக நாளைப் பார்ப்போம். 

தொடரும்!

Friday, March 19, 2021

நான் போட்ட எட்டு! (2007 ஆம் ஆண்டு)

எட்டுப் போட்டிருக்கேன், பாருங்களேன்!

எட்டுப் போடறது எவ்வளவு கஷ்டம்னு வண்டி லைசென்ஸ் இந்தியாவிலே வாங்கறவங்களுக்குத் தெரியும். இப்போ என்னடான்னா நம்ம இ.கொ. வந்து எட்டு போடுன்னு மிரட்டறதோடு இல்லாமல், எட்டு ஆள் வேறே பிடிக்கச் சொல்றார். எல்லாம் ஹெட் லெட்டர். வேறே என்ன? அதிலும் சாதனையா வேறே இருக்கணுமாமே! நான் ப்ளாக் எழுதறதே ஒரு சாதனைன்னு சொன்னால் அது பப்ளிஷ் ஆகிறது அதைவிட சாதனை. வரவர கணினி கிட்டே வரக் கூட முடியாமல் ஆணிகள் அதிகமா இருக்கு. "சிதம்பர ரகசியம்" ஒரு பக்கம் வா, வான்னு கூப்பிடுது, இன்னொரு பக்கம் "பம்பாய் ராயல் நேவி" புரட்சி என்னை அநாதையா விட்டுட்டியேனு கேட்குது. முதலில் இந்த எட்டைப் போட்டுடறேன். &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

படிப்பிலே நல்லாப் படிப்பேன்னாலும், சாதனை எல்லாம் ஒண்ணும் பண்ணினதில்லை. இந்தக் கணக்கு வந்து காலை வாரும். அதிலும் கணக்கு டீச்சருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம், அம்பிக்கும் எனக்கும் மாதிரி. எனக்குக் கூட ரொம்ப நாளா ஒரு சந்தேகம் என்னோட கணக்கு டீச்சர் தான் அம்பியா மறுபிறவி எடுத்து வந்திருக்காங்களோன்னு. :P 

1. கணக்கே வராத நான் பள்ளி நாட்களில் எடுத்துப் படித்தது அக்கவுன்டன்ஸியும், காமர்ஸும். நாளாவட்டத்தில் பாடத்தில் விருப்பம் அதிகரிக்கவே, பின்னால் ஆடிட்டர் ஆகலாம் என்ற ஆசையும் இருந்தது. இத்தனைக்கும் அம்மாவோட விருப்பம் வேறேயா இருக்க அப்பா தன் விருப்பப் படி என்னை அதிலே சேர்த்திருந்தார். ஒரு இ.கொ. மாதிரியோ, ஒரு தி.ரா.ச. மாதிரியோ, ஒரு மணிப்பயல் மாதிரியோ ஆடிட்டராய் வந்திருக்கணும். பாருங்க, உங்க எல்லாருக்கும் போட்டியே இல்லாமப் போச்சு! ஒரே சாதனை பாதிப் படிப்பில் கல்யாணம் செய்து கொண்டது தான். இதுவும் அப்பாவின் விருப்பம்தான். ஆகவே திருமணம் ஆகிப் பத்து வருஷம் கழித்துப் பட்டம் மொழிப்பாடத்தில் வாங்க முடிந்ததே ஒரு சாதனை தான் என்னளவில்.

 2.நான் படிச்ச நாட்களில் என் தோழிகள் அனைவரும் "ஷுக்லா" புத்தகம் வைத்துப் படிக்க எனக்குக் கிடைத்ததோ என்னோட அப்பா படிச்சு, மாமாவுக்குக் கொடுத்து, பின்னால் பெரியப்பா பையன், என்னோட அண்ணா அனைவருக்கும் வந்து அதுவரை கிழியாமல் இருந்த "சுப்ரமணியம்" புத்தகம் தான். நான் ரொம்ப அடம் பிடித்ததன் பேரில் அப்பா யார் கிட்டேயோ போய்க் கேட்டு நான் பிறக்கும் முன்னேயே பப்ளிஷ் செய்யப் பட்ட "பாட்லிபாய்" புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதை நான் கல்யாணம் செய்து கொள்ளும் வரை விட்டுப் பிரியவே இல்லை. அரை மனத்துடன் "பிரியா வடை" கொடுத்தேன், அதுக்கு.(ஹிஹி, வடைன்னா போதும், ஒரு சின்ன மாலையே போட்டுக்கும் இது) அடைப்புக்குறிக்குள் வழக்கம் போல் ம.சா. தான். நறநறநற. எனக்கு அப்புறம் படிச்ச என் தம்பி "ஷுக்லா" புத்தகம் புத்தம்புதியதாய் வாங்கிக் கொண்டதைப் பார்த்து அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டதும் ஒரு சாதனை தான்.

 3. கொஞ்சமாவது ஆங்கிலம் எனக்கு வருதுன்னா என்னோட ஆசிரியைகள் தான் காரணம். முதலில் ஆரம்பிச்சு வச்ச ரூபி டீச்சர், பின்னர் பள்ளி இறுதி நாட்களில் பாடம் சொல்லிக் கொடுத்த மிஸ்.ஜேகப் இருவரும் ஆங்கிலப் பாடம் நடத்துவதே தனி சுகம். அதுவும் மிஸ் ஜேக்கப் ஆங்கிலக் கவிதைகளுக்கு நடித்தே காட்டுவார், எங்களையும் நடித்துக் காட்டச் சொல்லுவார். ஒரு முறை நாங்கள் அனைவரும் பேசி வைத்துக் கொண்டு ஆசிரியையைத் திகைக்க வைத்தோம். வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் ஒரு கவிதையில், "Books, 'tis an endless strife, come, hear the woodlands cry என்ற , வாசகங்கள் வரும். அதை என்னை நடித்துக் காட்டச் சொல்லும் போது நான் புத்தகத்தைத் தூக்கிப் போட்டு விட்டு வெளியே சென்று சைகை காட்ட மொத்த வகுப்பும் என்னோடு வெளியேற திகைத்த ஆசிரியை பின்னர் நினைத்து நினைத்துச் சிரித்ததும் ஒரு சாதனை தான். 

4. பரிட்சை நாட்களில் அப்பாவுக்குத் தெரியாமல் பாட புத்தகங்களுக்குள் கதைப் புத்தகமோ, ஆனந்தவிகடனோ, கல்கியோ படிக்கிற சுகம் இனி எப்போ வரும்? சொல்லுங்க? அதுவும் ஒரு சாதனை தான். (என்னடா, அப்பா, அப்பான்னே சொல்றேன்னு பார்க்கிறீங்களா< எங்க வீட்டிலே அப்பா ஆட்சிதான். ரொம்பக் கண்டிப்பான அப்பா.) 

5.முதல் முதலில் ராஜஸ்தான் வரை வந்ததே ஒரு சாதனைதான் என்றால் அப்புறம் பல இடங்களுக்கும் ஊர்களுக்கும் போனது மற்றொரு சாதனை. இதில் இதுவரை யாருமே முறியடிக்காத விஷயம் முதல்வகுப்புக்கு டிக்கெட் வாங்கி விட்டு மூன்றாம வகுப்பில் முன்பதிவு செய்யப் படாத பெட்டியில் உட்கார்ந்து போனது தான் அதிகம். இதை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை.

 6. அமெரிக்கா எல்லாம் வருவேன்னு நினைச்சே பார்க்கலை. நான் போக ஆசைப் பட்ட இடம்னு பார்த்தால் இங்கிலாந்து ஒன்றுதான். அதுவும் அதிகமான அகதா க்ரிஸ்டி கதைகளின் வர்ணனையைப் படித்ததால் இருக்கலாம். அயர்லாந்தின் வடமுனையைப் பற்றிய அவரின் வர்ணனை ஒரு கதையில் வரும். அவரின் துப்பறியும் நிபுணர் ஆன " Hercule Poirot" அங்கே போயிருப்பார். அந்த இடம் செல்ல ஆசை. 

7. இரண்டு முறை அமெரிக்கா வந்தும் எந்த இடமும் சுற்றிப் பார்க்காமல் இருப்பதும் நாங்களாய்த் தான் இருக்கும். அதுவும் ஒரு சாதனைதான். சூழ்நிலையும், சந்தர்ப்பங்களும் அம்மாதிரி அமைகின்றது. ஆகவே போக முடியவில்லை. தவிர, சாப்பாடு வேறே ஒரு பிரச்னை. 

8. என்வாழ்நாளில் நிஜமான சாதனை என்றால் "திருக்கைலாய யாத்திரை" சென்றது தான். உண்மையில் நான் போவதாய் இல்லை. என் கணவர் தனியாகப் போக இருந்தார். என்னை அதிலே இழுத்துவிட்டது ட்ராவல்ஸ் ஏஜென்ட் தான். மனதில் எந்த உணர்வுகளும் இல்லாமல் தான் பிரயாணத்தை ஆரம்பித்தேன். வெற்றியாக முடித்து வைத்தது இறைவன். மற்றபடி நான் வலைப்பக்கம் ஆரம்பித்து எழுதுவது ஒரு சாதனை என்றால் அதன் மூலம் இத்தனை நண்பர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதும், ஒரு சாதனை தான். மெய் சிலிர்க்க வைக்கும் சாதனை! இது ஒன்றுதான். மனம் நெகிழ்ந்து போகிறது. *********************************************************************************** 

திரு ஜிஎம்பி அவர்கள் எட்டெட்டு வாழ்க்கைப் பதிவைப் பார்த்ததும் முன்னர் போட்ட எட்டுகள் நினைவில் வந்தன. அப்போதெல்லாம் அடிக்கடி தொடர் பதிவு இருக்கும்.  2007 ஆம் ஆண்டில் போட்ட எட்டு இது. இதற்குப் பிறகும் போட்டிருக்கும் நினைவு இருக்கு. தேடிப் பார்க்கணும். இது ஒரு மீள் பதிவு. 


எட்டுப் போடுங்க!  பழைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். இதிலே கீழே நான் அழைத்தவங்க பெயர்கள் இருந்தன. அதை மட்டும் எடிட் செய்துட்டுப் பதிவை மட்டும் போட்டிருக்கேன். 


புதுப்பதிவு போடத்தான் ஆசை! ஆனால் இப்போ வேணாம்னு தள்ளிப் போட்டிருக்கேன். அது வரைக்கும் நான் உங்க எல்லோருடைய நினைவில் இருக்கணுமே! அதான் மீள் பதிவு!

Sunday, March 07, 2021

ஏதோ சொல்லி இருக்கேன்!

 வர வர எழுதுவதில் மனம் பதிவது இல்லை. ஏனோ தெரியலை. கணினியில் உட்காரும் நேரமும் குறைஞ்சிருக்கு. வழக்கம் போல் இம்முறையும் வயிறு சரியாக நாட்கள் எடுத்து விட்டன. அதோடு வீட்டிலும் வேலைப் பளு அதிகம். குட்டிக் குஞ்சுலுவும் அவ பெற்றோருடன் நைஜீரியாவுக்குப் போய்ச் சேர்ந்து அவங்க இருக்கப் போகும் ஊருக்கும் போய்ச் சேர்ந்து விட்டனர். குஞ்சுலு முகத்தில் இனம் தெரியாத சோகம் இருப்பதாய் எனக்கும் அவருக்கும் தெரிகிறது. ஆனால் பையர் அதெல்லாம் இல்லை என்று சொல்கிறார். அவங்க மூன்று பேரும் கம்பெனியின் விருந்தினர் விடுதியில் பதினைந்து நாட்கள் க்வாரன்டைனில் இருக்காங்க. அது முடிஞ்சு கொரோனா பரிசோதனை எல்லாம் ஆகிப் பின்னர் தாற்காலிக வீட்டிற்குப் போகணும். இன்னமும் சாமான்கள் எல்லாம் வந்து சேரவில்லை. குஞ்சுலு ஏற்கெனவே சாப்பிடாது. இங்கே அதுக்கு எல்லாம் பிடிக்கணும். நாங்க பார்க்கையில் விளையாடிக் கொண்டிருந்தது. தானாகவே விளையாடிக்கும். நல்லவேளையா அதோடப் பத்துப் பதினைந்து பேபீஸ்களில் முக்கியமான சில பேபீஸ் கூடவே வந்து சேர்ந்து விட்டன. இல்லைனா ஏங்கிப் போயிருக்கும். எல்லா பேபீஸும் படுக்கையில் அதோடு படுத்துக்கொள்ளணும். இப்போ நாலைந்து பேபீஸ் மட்டும் தான் இருக்கின்றன. 

அம்பேரிக்காவில் சென்ட்ரலைஸ்ட் ஏசி. வீடு முழுக்க எப்போதும் இருக்கும். இங்கே நம்ம ஊர் மாதிரி ஸ்ப்லிட் ஏசி எல்லா அறைகளிலும் போட்டிருக்காங்க. பையர் இப்போவே வியர்க்கிறது என்றார். அங்கேயும் இந்தியாவுக்கும் நாலரை மணி நேரம் வித்தியாசம்.  இப்போ இங்கே மாலை ஆறு மணி எனில் அங்கே மதியம் ஒன்றரை மணி. மாலை நான்கு மணிக்குப் பையர் கூப்பிட்டால் அங்கே நண்பகலுக்கு அரை மணி முன்னதாக பதினொன்றரை ஆகிறது. ஒரு விதத்தில் வசதி. இன்னொரு விதத்தில் வசதி இல்லை. நாளையிலிருந்து பையருக்கு அலுவலக வேலையை இந்த விருந்தினர் விடுதியில் இருந்தே செய்யும்படி இருக்கும். அப்போ அவருக்கு வர முடியாது. அவங்க இரவு ஆரம்பிக்கையில் நமக்கு நடு இரவு ஆகி இருக்கும். நம்ம காலைஆறு மணி எனில் அவங்களுக்கு நடு இரவு ஒன்றரை மணி. ஆகவே பையருக்கு அலுவலகம் விடுமுறை என்றால் தான் குழந்தையைப் பார்க்க முடியும். அம்பேரிக்காவில் எனில் ராத்திரி படுக்கும்போது எப்படியும் பார்த்துடலாம். இது கொஞ்சம் கஷ்டம் தான்.

********************************************************************************

கொலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அதிலும் கணவன், மனைவியைக் கொல்வதும், மனைவி கணவனைக் கொல்வதும், பெண் பெற்றோரைக் கொல்வதும், மகன் பெற்றோரைக் கொல்வதுமாக அதிகரித்து வருகின்றன கொலைகள். எல்லாம் பணத்தாசை/ குடியில் ஆசை! மக்களுக்குப் பணத்தின் தேவை இருக்க வேண்டும் தான். ஆசையும் இருக்கத்தான் செய்யும். அதுக்காகப் பெற்றோரைக் கொல்லும் அளவுக்கா? அதுவும் குடித்துவிட்டு! என்னவோ தமிழகம் ஒருக்காலும் திருந்தப் போவதில்லை. வீண் பெருமை பேசிக்க மட்டும் பேசிப்பாங்க! நாங்கள் தனித் தமிழர்கள் என்று!