எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 30, 2017

கொலுப் படங்கள் தொடர்கின்றன!










பாற்கடல் காட்சி மண்டபத்தின் நடுவே!




ஆழ்வார்கள் அருளிச் செயல்! ஒரு பகுதி!



இதுவும் பாற்கடல் காட்சி! நடுவில் அஷ்டலக்ஷ்மியும் இரு ஓரங்களிலும்       தசாவதாரங்கள் 







Friday, September 29, 2017

கொலு பார்க்க வாங்க எல்லோரும்! :) நோ சுண்டல்!



நான் சென்ற சில கொலுப் படங்கள்! மேலே இருப்பது திருவானைக்காவில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டு கொலு!


இது நம்ம பதிவர் வெங்கட் நாகராஜ் வீட்டுக்கொலு! ஆதி வெங்கட் வைத்திருப்பது. லேசர் விளக்குகள் போட்டிருப்பதால் எனக்கு எடுக்கும்போது கொஞ்சம் தடுமாற்றம். அதனால்  படம் தெளிவாக இல்லையோ? ஏதோ ஒண்ணு நொ.கு.ச.சா. என்று முணுமுணுப்பது கேட்கிறது. இது  இரண்டும் அலைபேசியில் எடுத்தது. அடுத்ததாக காமிரா மூலம் எடுத்த படங்கள்! ஶ்ரீரங்கம் கோயிலின் கொலுப் படங்கள்.  ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கின்றனர். சென்னை மயிலையிலிருந்து இதற்கெனத் தனியாக ஆட்கள் வந்து வைப்பதாகச் சொல்கின்றனர். மாலை சென்றால் கூட்டம் தாங்காது என்று காலை செல்லச் சொன்னார் திரு வெங்கட். அவர் சொன்னபடி முந்தாநாள் காலை பத்தரை மணி போலப் போனோம். சுமார் ஐம்பது பேருக்குள் தான் இருந்தார்கள் என்றாலும் படம் எடுக்க முடியாமல் மறைக்கத் தான் செய்தார்கள்! :(

ஹிஹிஹி, தோசைப்படம் வந்துடுச்சு! முந்தாநாள் இலுப்பச்சட்டி தோசை வார்த்தேன். காமாட்சி அம்மா சொல்றாப்போல் இரட்டை விளிம்பு தோசை! அதைப் படம் எடுத்ததே நினைவில் இல்லை! 


தட்டில் தோசை, தொட்டுக்கத் தக்காளித் தொக்கு! :) 


கோவில் கொலுவில் ஒரு பகுதியில் வைத்திருப்பது! இவை அனைத்தும் தசாவதாரக் கொலு!


தனித்தனியான பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லும் பொம்மைகள். 











மேலே உள்ள கொலுவின் கீழ்ப்பகுதி



இன்னும் இருக்கு. மற்றப் படங்கள் நாளை பகிர்கிறேன்.  இவை எல்லாமும் தசாவதாரத்தைச் சொல்லும் கொலு. மற்றவை நாளை. 

Thursday, September 28, 2017

நவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான தகவல்கள்!

 இன்றைய தினம் கடைசி நாள். ஆகவே அம்பிகை சித்தாத்ரியாக வழிபடப்படுவாள். வேண்டியதை நிறைவேற்றித் தரும் அன்னை இவள். பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டும். சும்ப, நிசும்பர்களை சம்ஹரித்த தினமான இன்றைய தினம் அன்னையைக் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள். அனைத்து சித்திகளையும் அள்ளித் தரும் இவளைக் குறித்து முன்பே பார்த்தோம்.



எல்லாமும் ஒரு மகாசக்தியிலிருந்தே தோன்றியது என்பதை இவள் தன்னை வழிபடுபவர்களுக்குப் புரிய வைப்பாள். இவ்வுலகத்தின் ஆசாபாசங்களைத் துச்சமாகக் கருதும் மனோநிலை ஏற்படும். பேரானந்தம் எனப்படும் உணர்வு அவனுக்கு எளிதில் சித்திக்கும், இன்றைய தினம்  அம்பிகையை வெண்பட்டாடை உடுத்திய சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். இன்றைய தினம் சரஸ்வதிக்கே முக்கிய வழிபாடு. என்றாலும் தாமரை மலர் மீது நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் சித்தாத்ரி தேவியையும் வட மாநிலங்களில் வழிபடுவார்கள். சரஸ்வதி பிரம்மாவின் மனைவி எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இவளும் ஆதி பராசக்தியின் ஓர் அங்கமே ஆவாள். சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகிய பெயர்களிலும் வழிபடப்படுகின்றாள். சரஸ்வதி ஸூக்தம் இவளையே உலகின் ஆதி காரணி என்று சொல்கிறது. சக்தி தாசர்களின் தாரா வழிபாட்டில் வழிபடப்படும் சரஸ்வதியின் எட்டு வடிவங்கள் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர்கள் ஆவார்கள்.  கட சரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை சாலிவாகன மன்னனும் சியாமளா தேவியைக் காளிதாசனும் வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.

நதியாக ஓடி அந்தர்யாமியாகக் காட்சி கொடுப்பவளும் இவளே ஆவாள். சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள். கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள்.
காமேஸ்வரி க்கான பட முடிவு
காமேஸ்வரி க்கான பட முடிவு
படங்களுக்கு நன்றி கூகிளார்

இன்றைய தினம் பச்சைக்கற்பூரம் போன்ற வாசனாதி திரவியங்களால் ஆயுதங்களைக் கோலமாக வரையலாம். மருக்கொழுந்து, துளசி, வெண்ணிற மலர்களான மல்லிகை போன்றவை அன்னையின் வழிபாட்டுக்கு ஏற்றது.  இன்றைய தினம் அனைத்து சித்திகளையும் பெறுவதால் காலை அக்கார அடிசில்,  உளுந்து வடை, எள் உருண்டை, அப்பம் அல்லது அதிரசம் போன்றவையும் மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலை, வெல்லம் சேர்த்த மாவு உருண்டை போன்றவையும் நிவேதனம் செய்ய ஏற்றவை. ஒரு சிலர் இன்றைய தினம் புட்டு நிவேதனம் செய்வார்கள். கடலைப்பருப்புச் சுண்டலும் ஏற்றது!

எள் உருண்டை:  விசேஷ நாட்களுக்கு எள் உருண்டை முத்துருண்டை பிடிக்கக் கூடாது. வெறும் வாணலியில் எள்ளை நன்கு களைந்து கல்லரித்து வடிகட்டிக் கொண்டு வறுக்க வேண்டும். அதோடு வெல்லத் தூள் சேர்த்து மிக்சியில் ஒரு அடி அடித்த பின்னர் வெளியே எடுத்துத் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்துக் கொண்டு உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த உருண்டையை நவராத்திரியில் வரும் சனிக்கிழமைகளிலும் செய்யலாம்.

வெல்லம் சேர்த்த மாவு உருண்டை! பாசிப்பருப்பைக் களைந்து கொண்டு நீரை வடிகட்டிக் கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். மிக்சியில் பொடி செய்யவும். பொடி நன்றாக வரும். அதிலே வெல்லத் தூளைக் கலந்து மீண்டும் மிக்சியில் சேர்த்து அடிக்கவும். ஏலத்தூள் சேர்க்கவும். ஒரு கிண்ணம் பாசிப்பருப்பு எனில் முக்கால் கிண்ணம் வெல்லத் தூள் சேர்த்தால் போதும். இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை நன்கு காய்ச்சி கலவையில் ஊற்றி உருண்டை பிடிக்கவும்.

அக்கார அடிசில் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கேன். ஆகவே மீண்டும் கொடுக்கச் சுட்டியைத் தருகிறேன்.  அக்கார அடிசில்

பத்து நாட்களும் கன்னிப் பெண்களை மேற்சொன்ன முறைகளிலும், சுவாசினிகளை அந்த அந்த நாளுக்கான தேவியாகவும் வழிபடுதல் ஐதீகம். வசதி இருப்பவர்கள் ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். எதுவும் முடியாதவர்கள் தேவி மஹாத்மியத்தின் துர்க சப்தச்லோகி, துர்க்கா சூக்தம், தேவி மஹாத்மிய ஸ்தோத்திரம் போன்றவற்றையோ லலிதா சஹஸ்ரநாமத்தையோ லலிதா நவரத்தினமாலையையோ தினம் சொல்லி வந்தால் போதும். அம்பிகை அருள் நிச்சயம் கிடைக்கும். நாம ஒண்ணுமே கொடுக்க முடியலைனாக் கூட அம்பிகை நமக்கென உரியதைக் கொடுக்காமல் இருக்க மாட்டாள்! ஆகவே நம்பிக்கையுடன் அம்பிகை அருளுக்குப் பிரார்த்தித்துக் கொண்டாலே போதும்!

சரஸ்வதி - தொடர்ச்சி!
தங்கக் கலசத்தில் அந்த நெருப்புக் கொழுந்து வைக்கப் பட்டது. சரஸ்வதியை அழைத்து நீ நீர் உருவெடுத்து நதி ரூபத்தில் சென்று இந்தத் தீக்கொழுந்தை கடலினடியில் சேர்ப்பித்துவிடு எனச் சொல்ல, சரஸ்வதியாலும் அந்த நெருப்பைத் தாங்க முடியவில்லை. பின்னர் பிரம்மன் கங்கை, யமுனை, நர்மதை, தாபி போன்ற மற்ற நதிகளையும் அழைத்து அந்தத் தங்கக் கலசத்தை தீக்கொழுந்தோடு எடுத்துச் சென்று சமுத்திரத்தின் அடியில் வைக்கப் பணித்தார். இவ்விதம் அந்தத் தீக்கொழுந்தானது கடலினடியில் சென்று மறைந்தது. அது முதன்முதல் சரஸ்வதி கையில் கொடுக்கப் பட்ட இடமே பத்ரிநாத்தில் உள்ள தப்த குண்டம் என்று சொல்லுகின்றனர்.


பிரம்மசக்தியாகத் திகழும்போது சரஸ்வதிக்கு பிராம்மி என்ற பெயர் உண்டு. பிரம்ம வித்யை இவள் முகமாகவும், நான்கு வேதங்கள் நான்கு திருக்கரங்களாகவும், இசையும் இலக்கணமும் ஸ்தனங்களாகவும், எண்ணும், எழுத்தும் இரு கண்களாகவும், இதிஹாசம், புராணம் ஆகியவை இரு திருவடிகளாகவும் கொண்ட இவள் கையில் இருக்கும் வீணை ஓங்கார வீணை. ஓங்காரத்தின் வடிவானது. கச்சபி என்னும் பெயருடைய இந்த வீணை பரமேஸ்வரனால் பிரம்மாவுக்கு அளிக்கப் பட்டு சரஸ்வதிக்கு வந்தது.
சரஸ்வதி க்கான பட முடிவு

பொதுவாக வெண்பட்டாடை தரித்து வெண்தாமரை மலராசனத்தில் நான்கு திருக்கரங்களுடன் சுவடி, ஜபமாலை, வீணை இவற்றைத் தாங்கியவண்ணம் காணப் படும் சரஸ்வதி, ஆங்காரசக்தியாய்த் தோன்றும்போது எட்டுக்கரங்கள், மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றோடு காட்சி கொடுப்பாள். உக்ரவடிவாய் கெளரியின் தேகத்தில் இருந்து தோன்றிய இவளே கம்பாசுரனை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் கூறும். வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது வாணி நான்குகரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி ஆகியவை தாங்கி முக்கண்களுடன் காட்சி கொடுப்பாள். நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, சுவடி, வீணை, கமண்டலத்துடன் சரஸ்வதியாகக் காட்சி கொடுப்பாள். மான் தோலாடை அணிந்து இடது மூன்று கரங்களில் வரதம், சூத்திரம் ஆகியவற்றையும் வல மூன்று கரங்களில் சுவடி, குண்டிகை, அபயமுத்திரை தாங்கியும் நான்முகவடிவினளாக பிரம்ம பத்னியாக சரஸ்வதி காட்சி கொடுப்பாள் .
கல்விக்கு அதிதெய்வமாகப் போற்றப் படுபவள் சரஸ்வதியே! யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்குத் தேவையான ஞானம், தேஜஸ், வெற்றி ஆகியவற்றைக் கொடுப்பவளும் சரஸ்வதியே.

யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.
சகல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

இவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு. இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

Wednesday, September 27, 2017

நவராத்திரி எட்டாம் நாளைக்கான தகவல்கள்!



இன்றைய தேவி மஹா கௌரி எனப்படுவாள். நாரசிம்ஹ தாரிணியாக வில், அம்புகளை ஏந்திக் கொண்டு அணிமா, லஹிமா போன்ற அஷ்டமாசித்திகளும் சூழ்ந்து  கொண்டிருக்கக்  காட்சி தருகிறாள் தேவி.  ரக்தபீஜனை வதம் செய்த பின்னர் சாந்தமான திருக்கோலத்தில் மஹா கௌரியாக ரிஷபத்தின் மீதோ அல்லது சிங்காதனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்திலோ வழிபடலாம். இன்னும் சிலர் அன்னபூரணியாகப் பாவிப்பார்கள்.
அன்னபூரணி க்கான பட முடிவு
 அன்னபூரணி க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

ஒன்பது வயதுப் பெண் குழந்தையை "துர்கை"யாகப் பாவித்து வழிபட வேண்டும். காசுகளால் பத்மம் வரையலாம். அல்லது அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப்பூக்கோலம் போடலாம். மருதாணிப் பூக்கள், செண்பக மலர், சாமந்தி, வெண் தாமரை மலர், விபூதிப் பச்சை போன்றவை வழிபாட்டுக்கு உரியவை ஆகும். குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். இன்றைய நிவேதனம் நெய்ப்பாயசம் செய்யலாம்.,

நெய்ப் பாயசம் செய்முறை:

அரைக்கிண்ணம் பச்சை அரிசி களைந்து ஊற வைக்கவும். ஒரு மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காயை மிக்சி ஜாரில் போட்டு இரண்டு,மூன்று முறை பால் எடுத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியையும் மிக்சியில் போட்டுக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். மூன்றாம் தேங்காய்ப் பாலில் அரைத்த அரிசி விழுதைப் போட்டு வேக வைக்கவும். ஒரு கிண்ணம் தூள் செய்த வெல்லப் பொடியை அரிசி நன்கு குழைய வெந்ததும் சேர்க்கவும். இரண்டாம் தேங்காய்ப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். பின் பாயசம் கரண்டியால் எடுக்கும் அளவு தோசை மாவு பதத்துக்கு கெட்டிப் பட்டதும் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு நிமிஷம் கொதிக்க வைத்துக் கீழே இறக்கவும். நெய்யில் முந்திரி, திராக்ஷை வறுத்து தேங்காய்ப் பால் எடுத்தது போக இருக்கும் தேங்காய்ச் சக்கையையும் நெய்யிலேயே வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.

மாலை நிவேதனமாக இன்று வெள்ளிக்கிழமையாக இருந்தால்   புட்டு செய்யலாம். அல்லது கடலைப்பருப்பு, கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல் செய்யலாம். புட்டுச் செய்முறை பழைய பதிவில் இருந்து எடுத்தது கீழே கொடுத்திருக்கிறேன். எந்தக் கிழமையாக இருந்தாலும் சுண்டல் செய்யலாம். புட்டு பொதுவாக  வெள்ளிக்கிழமை அன்றோ சரஸ்வதி பூஜை அன்றோ செய்வார்கள்.

புட்டு செய்முறை:
நவராத்திரி வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் அல்லது சரஸ்வதி ஆவாஹனம் செய்யும் தினத்தன்று புட்டு நிவேதனம் செய்வார்கள். அதற்குத் தேவை நல்ல மாவு வரும் அரிசி ஐ ஆர் இருபது அரிசி கால் கிலோ. இந்த அளவிற்கு ஏற்றாற்போல் கூடுதலாய்ச் செய்பவர்கள் கூட்டிக் கொள்ளலாம்.

அரிசி கால் கிலோ

பாகு வெல்லம் கால் கிலோ

தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

முந்திரிப்பருப்பு, ஏலக்காய், பொட்டுக் கடலை, அல்லது வேக வைத்த துவரம் பருப்பு. இரண்டு டேபிள் ஸ்பூன்.

உப்பு ஒரு சிட்டிகை

முதல் முறை:
இது ரொம்பவே ஆசாரம் பார்க்கிறவங்களுக்கானது என்பதோடு அதிகம் வேலையும் இல்லை. அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டுப் பின்னர் ஜலத்தை வடித்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும். இரும்பு வாணலியில் அரிசியைப் போட்டு நன்கு சிவப்பாகப் பொரியும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவு கலக்கும்போது நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் சேர்க்கவேண்டும். மாவு எல்லாவற்றிலும் நீரைச் சேர்த்ததும், மாவைக் கையால் உருட்டினால் உருட்டும் பதமும், உதிர்த்தால் மாவாகவும் ஆகவேண்டும். ஆகவே இதை நிதானமாய்ச் செய்யவும். நீர் கலந்த மாவை இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

பின்னர் உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்துவிட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டால் நன்கு உருட்ட வரவேண்டும். அந்த உருண்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டால் "டங்"கென்று சத்தம் வரவேண்டும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்து வைத்திருக்கும் மாவில் சேர்க்க வேண்டும். தேவையான பாகைச் சேர்த்ததும்,கீழேயே வைத்து நன்கு கலக்க வேண்டும். மாவும், பாகும் நன்கு கலந்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை, (இதற்குப் பொட்டுக்கடலையே ஏற்றது.), தேங்காய் வறுத்துச் சேர்த்து, ஏலப் பொடியும் சேர்க்கலாம்.

மற்றொரு முறை:

அரிசியை ஊற வைக்கவும். நீரை வடிக்கவும். மிக்ஸியில் போட்டு நன்கு மாவாக்கிச் சலித்து வைத்துக் கொள்ளவும். மாவை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவேண்டும். வறுத்த மாவில் முன்னர் கூறி இருக்கும்படியாக வெந்நீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு கலக்கவேண்டும். இது ஈர மாவு என்பதால் நீரைக் கொஞ்சமாகவே கலக்கவேண்டும். சிறிது நேரம் வைத்துவிட்டு ஒரு வெள்ளைத் துணியில் மாவைப் பரப்பி, இட்லிப் பானையிலோ, அல்லது குக்கரிலோ ஐந்து நிமிஷம் வைக்க வேண்டும். மாவை ஒரு குச்சியால் கிளறினால் ஒட்டாமல் வரும் என்பதோடு முன்னர் சொன்ன பதத்துக்கும் வரும். கையில் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிர்க்கவும் வரவேண்டும். பின்னர் பாகு வைப்பது, கலப்பது எல்லாம் மேலே சொன்னபடி தான். இதற்கு ஊற வைத்த துவரம்பருப்பை மாவில் வெந்நீர் கலக்கும்போதே சேர்த்துவிட்டுப் பின்னர் இட்லிப் பானையில் வேகவைக்கும்போதும் வைத்துவிட்டால் பருப்பு நன்கு வெந்துவிடும். இதன் சுவை தனியாக இருக்கும். முதலில் சொன்ன புட்டு ஒருவாரம் ஆனாலும் கெடாது. இது சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.

நமஸ்கார ஸ்லோகங்கள் முடிந்தன. கீழே சரஸ்வதி குறித்த சில தகவல்கள். மீள் பதிவாக!


சரஸ்வதி: புராணங்களில் பிரம்மாவின் மனைவி எனக் கூறப்படும் இவளைப் படைத்தவனே பிரம்மா தான் என்றும், பிரம்மாவின் உடலில் இருந்து இவள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவளின் மற்ற பெயர்கள், சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகியன. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருவம் எடுத்துப் பூஜிக்கப் படுகின்றாள். ரிக் வேதம் சரஸ்வதி ஸூக்தத்தில் உலகின் ஆதிகாரணி என இவளைப் போற்றுகிறது. சரஸ்வதி வடிவங்கள் தாராபூஜையில் வழிபடப் படுகின்றன. எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களை வழிபடுகின்றனர். அவை வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியன. கட சரஸ்வதியை வழிபட்டு தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை வழிபட்டு சாலிவாகன மன்னனும், சியாமளாவாக வழிபட்டு காளிதாசனும் பெருமை பெற்றிருக்கின்றனர் என்று சரஸ்வதி மஹாத்மியம் சொல்லுகிறது.

இவளே சரஸ்வதி என்னும் நதியாகவும் ஓடினாள். சரஸ் என்னும் பெயருக்குத் தடையில்லாமல் தெரியும் ஒளி என்றும் அர்த்தம் உண்டு. கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தியும் இவளிடம் இருப்பதாலேயே சரஸ்வதி என்னும் பெயர் உண்டாயிற்று. இவள் நதியாக ஓடியதற்கு ஒரு காரணம் உண்டு. ததீசி முனிவரிடம் தேவர்களின் ஆயுதங்கள் கொடுத்து வைக்கப் பட்டிருந்தன. நீண்ட காலம் தேவாசுர யுத்தம் நடைபெற்று வந்த சமயம் அது. தேவர்கள் தோற்றுப் போகும் சமயமாக இருந்தது. வலிமையும், சக்தியும் வாய்ந்த பல ஆயுதங்களையும் அசுரர்களிடம் இழக்க மனமில்லாத தேவர்கள் ததீசி முனிவரிடம் ஆயுதங்களைக் கொடுத்து வைக்க அவரும் மறைத்து வைக்கிறார். காலதேச வர்த்தமான மாற்றங்களால் தேவர்களும் மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட அவர்களும் அசுரர்கள் கண்களில் படாமல் மறைந்தே வாழ்கின்றனர். அப்போது விருத்தாசுரன் தேவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட அவனோடு போர் செய்யும் கட்டாயத்தின் பேரில் தேவர்கள் வெளியே வந்தாகவேண்டி இருக்கிறது.

வந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை ததீசி முனிவரிடம் கேட்க, நீண்ட நெடுநாட்கள் அவர்கள் வராத காரணத்தால் ஆயுதங்களைக் கரைத்துக் குடித்துவிட்டதாய்ச் சொல்லுகின்றார் ததீசி முனிவர். ஆயுதங்கள் இல்லாமல் தவித்த தேவர்களின் நிலை கண்ட முனிவர் தம் உயிரைப் பிராணத்தியாகம் செய்து, தன் முதுகெலும்பில் இருந்து தேவேந்திரன் ஆயுதம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார். தானே தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட மகரிஷியாதலால் அவ்வண்ணமே தன் உயிரையும் போக்கிக் கொள்ளுகிறார். அவருடைய எலும்பில் இருந்து வஜ்ராயுதம் செய்யப் பட்டு இந்திரனுக்கு முக்கிய ஆயுதமாகிறது. இங்கே ரிஷியின் மனைவி ப்ராதி பூரண கர்ப்பிணி. தன் கணவன் தன் உயிரைப் போக்கிக் கொண்ட தகவல் அறிந்த அவள் தானும் உடன்கட்டை ஏற முடிவெடுக்கிறாள். ஆனால் தன் வயிற்றில் வளரும் சிசுவுக்கு எந்தவிதமான ஹானியும் ஏற்படக் கூடாது என முடிவு செய்து தன் தவ வலிமையாலும், தன் பதிவ்ரதா வலிமையாலும் அந்தச் சிசுவை வெளியே எடுத்து வனதேவதைகளையும், வன மூலிகைச் செடி,கொடிகளையும், இன்னும் நதிகள், மலைகள், மற்றத் தாவரங்கள் போன்ற வனவளங்களை வேண்டிக் கொண்டு அங்கிருந்த பெரிய அரசமரத்திடமும் வேண்டிக் கொண்டு அந்தச் சிசுவை அங்கே விடுகிறாள். அதன் பின்னர் அவள் உடன்கட்டை ஏறித் தன் உயிரைத் தானும் போக்கிக் கொள்கிறாள். அரசமரம் வளர்த்த சிறுவன் “பிப்பலாதன்” என்னும் பெயருடன் வளர்ந்துவந்தான். 

வளர, வளர அவனுக்குத் தேவர்களுக்கு உதவி செய்யவேண்டித் தன் தந்தையும், தந்தையுடன் தாய் உடன்கட்டை ஏறினதும் தெரியவருகிறது. தேவர்களிடம் விரோத பாவம் மேலிட அவன் தேவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். பிரம்மாவின் அருள் பெற்று ஈசனைக் குறித்துத் தவம் செய்கின்றான். தேவாதிதேவர்களை அழிக்கவேண்டிய ஆற்றலைத் தருமாறு ஈசனிடம் வேண்டுகிறான். அவனுடைய பலத்தைச் சோதிக்க எண்ணிய ஈசனோ, தன் நெற்றிக்கண்ணைத் தான் திறக்கப் போவதாயும், அதைத் தாங்கும் வல்லமை அவனுக்கிருந்தால் கேட்ட வரம் தானாகவே கிட்டும் என்றும் சொல்லுகின்றார். நெற்றிக்கண்ணின் வல்லமை தாங்காமல் மீண்டும் தவம் செய்கிறான் பிப்பலாதன். இம்மாதிரி இன்னும் இருமுறைகள் அவனைச் சோதித்துவிட்டு தன் நெற்றிக்கண்ணை அவனையே திறக்கச் சொல்லுகிறார் ஈசன். பிப்பலாதனும் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான். இவனையும் ஈசனின் ஓர் அவதாரம் எனக் கருதுவோர் உண்டு. 

நெற்றிக் கண் திறந்ததும், அதிலிருந்து உக்கிரமான வெப்பத்துடன் கூடிய ஒரு தீக்கொழுந்து தோன்ற அதைப்பிப்பலாதனிடம் கொடுத்து இந்தத் தீக்கொழுந்து அனைத்து உலகையும் அழிக்கவல்லது என்றும் சொல்லுகிறார். பிப்பலாதனும் தேவர்களைத் துரத்துகிறான். தேவர்கள் பிரம்மாவைச் சரணடைகின்றனர். தேவர்களை அழிக்கக் காத்திருந்த பிப்பலாதனுக்கு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும், ஜனனம், மரணம் ஆகியவற்றையும் பற்றிய தத்துவங்களை விரிவாக எடுத்துரைத்தார் பிரம்மன். மேலும் சொன்னார்:” தேவர்களின் நன்மைக்காக வேண்டி உன் தந்தை தானாகவே மனம் விரும்பி உயிர் துறந்தார். நீயானால் தேவர்களை அழிக்கக் கிளம்பியுள்ளாய். இதோ புஷ்பக விமானத்தில் உன் தந்தையை இங்கே வருவிக்கிறேன். நீயே கேட்டுக் கொள்.” என்று கூறிவிட்டு ததீசி முனிவரையும், அவர் மனைவியையும் அங்கே வரவழைக்க உண்மை தெரிந்த பிப்பலாதன் மனம் அமைதி அடைகிறது. ஆனால் இந்தத் தீக்கொழுந்தை என்ன செய்வது? அதை எப்படி அழிப்பது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். அப்போது ஈசனால் எழுப்பப் பட்ட அந்த அக்னியே குரலெடுத்துச் சொன்னது:”என்னை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து சமுத்திரத்தில் விட்டுவிடுங்கள். நான் சமுத்திரத்தின் உள்ளே சென்று விடுகின்றேன். வடவாமுகாக்கினியாய் அங்கேயே இருப்பேன். உங்களை எல்லாம் அழிக்க மாட்டேன், எனக்கு வேண்டிய இரைகள் அங்கேயே கிடைக்கும்.” எனச் சொல்ல அவ்வாறே முடிவு செய்யப் பட்டது.

Tuesday, September 26, 2017

நவராத்திரி ஏழாம் நாளைக்கான தகவல்கள்!

நவராத்திரி கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக வழிபடுவோம். இன்றைய தினம் தேவியின் திருநாமம் காலராத்ரி! பொதுவாக சனிக்கிழமைகளில் இவளை வழிபடுவார்கள். என்றாலும் சிலர் ஏழாம்நாளுக்கான தேவியாக வணங்குகின்றனர்.  காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.



சித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி.
சித்தாத்ரி க்கான பட முடிவு
சித்தாத்ரி க்கான பட முடிவு

ஶ்ரீவித்யா உபாசகர்கள் இவளை ஶ்ரீவித்யா பீஜாக்ஷரியாக ஆராதிக்கின்றனர். சண்ட, முண்டர்களை நேருக்கு நேர் மோதி அழித்த தினம் என்பதால் அன்னையின் சக்தி அதிகமாக ஆகும் தினமாகச் சொல்லுவார்கள். இன்றைய தினம் அன்னையை தங்கப் பீடத்தில் வீணா, புஸ்தக தாரிணியான சாம்பவியாக அலங்கரிக்கலாம். எட்டு வயதுப் பெண் குழந்தையை சாம்பவி என்னும் பெயரால் வழிபட வேண்டும். வெண்ணிற மலர்கள் மிகவும் உகந்தவை. மல்லி, நித்தியமல்லி, நந்தியாவட்டை போன்றவை உகந்தவை.
செண்பகம், ரோஜா, பன்னீர் இலை, புஷ்பம் போன்றவற்றால் திட்டாணிக் கோலமோ, வட்ட வடிவமான கோலமோ போடலாம்.
சாம்பவி க்கான பட முடிவு
சாம்பவி க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்!

இன்றைய நிவேதனம் எலுமிச்சைச் சாதம். மாலை சிவப்புக்காராமணியில் வெல்லம் போட்ட சுண்டல் அல்லது பயறு வெல்லச் சுண்டல் செய்யலாம். வியாழக்கிழமை  வந்தால் அன்றைய தினம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டலும் செய்யலாம்.

எலுமிச்சைச் சாதம்:- சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு நல்லெண்ணெய், பெருங்காயத் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஆற வைக்கவும். எலுமிச்சம்பழம் பிழியவும்.  பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும், வேர்க்கடலை வெடித்ததும் அடுப்பை அணைத்துவிட்டுப் பச்சை மிளகாய், கருகப்பிலை சேர்க்கவும். இஞ்சி தேவையானால் சேர்க்கவும். (நான் சேர்ப்பதில்லை) பின்னர் இந்தக் கலவையை ஆறிய சாதத்தில் ஊற்றிக் கலக்கவும்.  நன்கு ஊறியதும் பரிமாறவும்.

கொண்டைக்கடலையை அல்லது பயறு அல்லது காராமணியை ஊற வைத்துக் கொள்ளவும்.  பின்பு குக்கரில் தேவையான உப்புச் சேர்த்து வேக விடவும். இனிப்புச் சுண்டல்னா உப்பு ஒரு அரை டீஸ்பூன் மட்டும் சேர்த்தால் போதுமானது. உப்புச் சுண்டலுக்குக் கொண்டைக்கடலையை வடிகட்டிக் கொண்டு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, மிவத்தல், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு வெந்த கடலையைப்போடவும். மி.வத்தல், கொத்துமல்லி விதையை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொண்டு அதை இதில் சேர்க்கவும். தேங்காயைச் சிறு கீற்றுக்களாக அல்லது துருவலாகச் செய்து கொண்டு இதில் போடவும்.

இனிப்புச் சுண்டலுக்கு வேக வைத்ததை வடிகட்டிக் கொண்டு, கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு மட்டும் ஒரு சின்ன மிவத்தலோடு தாளித்துக் கொண்டு வெந்ததைப் போட்டு விட்டு, ஒரு கிண்ணம் பயறு/காராமணி எனில் அரைக்கிண்ணம் வெல்லம் தூளைச் சேர்க்கவும். வெல்லம் சேரும் வரை நன்கு கிளறிப் பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்த்துவிட்டுத் தேவையானால் ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.

நமஸ்கார ஸ்லோகங்கள்

யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

அம்மா= அம்மா என்றால் அன்பு, அம்மா என்றால் பொறுமை, அம்மா என்றால் பாசம், அம்மா என்றால் இனிமை. அம்மா என்ற ஒரு வார்த்தையே நாம் அனைவருக்கும் எத்தகையதொரு நிம்மதியையும், பாசத்தையும், ஆறுதலையும் தருகின்றது. எத்தனை வயது ஆனாலும் அம்மா இருந்தால் என்ற எண்ணம் எழுவதையும், அம்மா நினைவு வருவதையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியலையே! பெண்கள் அனைவரிடமும் தாய்மை சக்தி ( இன்றைய பெண்கள் வேண்டாம்னு சொன்னாலும், உறைந்தே இருக்கின்றது. அதை எவராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது. தேவையான சமயங்களில் தன்னை மீறி வெளிப்பட்டே ஆகும்.) பட்சிகள் ஆகட்டும், புழு, பூச்சிகள் ஆகட்டும், மிருகங்கள் ஆகட்டும் அனைத்திலும் பெண் இனமே குழந்தை பெறுகின்றது. ஏதோ சில குறிப்பிட்ட ஊர்வன?? (மீன்??) இனத்தில் மட்டுமே ஆண் கர்ப்பம் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆகவே அந்த அன்னை என்னும் சக்தியாக உறைகின்றவளே தேவி தான். அவளின் சக்தி இல்லை எனில் தாய்மை என்பது கேலிக்கூத்தாக இருக்குமோ??அந்த தாய் வடிவான சக்தியாக உறைந்திருக்கும் அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

20. யா தேவீ ஸர்வ பூதேஷு ப்ராந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

ப்ராந்தி என்றால் சுற்றுதல் என்ற அர்த்தமும், ஸ்திரமற்ற தன்மையைக் குறிக்கும் என்ற பொருளிலும் வருகின்றது. மாயை, என்ற அர்த்தமும் வரும். காட்சிப்பிழை, பொய்த்தோற்றம் என்றும் சொல்லலாம். பூமியின் சுழற்சியையும் எடுத்துக் கொள்ளலாம். இறை சக்தி இல்லை எனில் பூமி சுற்றுவது எங்கே?? என்றாலும் நமக்குத் தோன்றும் மாயையைக் களைய அன்னையின் சக்தி வேண்டுமல்லவா?? அந்த மாயைத் தோற்றுவித்து, அதன் மூலம் நம்மைப் பண்படுத்தி, நல்வழியில் திருப்பி, நம்மைப் பூரண சரணாகதி அடையச் செய்யும், மாயா தேவி என்னும் சக்தியாக இருக்கும் அந்த அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

21. இந்த்ரியாணாம் அதிஷ்டாத்ரீ பூதானாஞ்சாகிலேஷு யா
பூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்தி தேவ்யை நமோ நம:

அனைத்து உயிரிகளிடத்திலும் உறைந்திருக்கும் இந்திரியங்களை அடக்கி ஆள்பவளாய் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
அகிலம் பூராவும் வியாபித்து, நாம் நிற்பது, நடப்பது, பார்ப்பது, கேட்பது, பேசுவது, முகர்வது, உண்ணுவது என அனைத்தை இயக்கங்களிலும் தானே சர்வமுமாய் நிறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள்.

22. சிதிரூபேண யா க்ருத்ஸன மேதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

சிதிரூபேண= சைதன்யமாக, ஆன்மா, உயிர், ஜீவன், உணர்ச்சி அல்லது நம் புத்தியை ஆட்டுவிக்கும் சக்தி?? என்று அந்த உணர்வாய் உறைபவளே நம் ஆன்மாவே அந்த தேவிதான். அப்படி சகல ஜீவராசிகளிலும் இவ்வாறே நிலைத்து வியாபித்துப் பரவி இருக்கின்றாள் . அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.