எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 25, 2018

ஶ்ரீராமநவமிக்கு ஓர் மீள் பதிவு!


ஶ்ரீராமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! :)

ராமருக்குப் பாவம் ரொம்பவே மிருதுவான பக்ஷணங்கள்! அதான் அவர் இப்படிச் சொல்றார்!
நீங்கல்லாம் கிருஷ்ண ஜயந்தின்னா எல்லாம் நொறுக், முறுக்னு தின்னப் பண்ணித் தள்ளறீங்க! இன்னைக்கு என்னோட பிறந்த நாளைக்கு எல்லாம் மிருதுவாத்தானே பண்ணணும்! அது கூடப் பண்ணலைன்னா எப்படினு கேள்வி மேல் கேள்வி! கண்ணனை இப்போத்தானே எழுதறேன், அதுக்கு முன்னாடியே உங்களைப் பத்தி எழுதியாச்சே! ரெண்டாவதா அவன் இன்னமும் குழந்தை தான்! உங்க மேலே முதல்லே மரியாதை தானே வருதுனு சொன்னேன்! ஏதோ சாக்குனு முகத்தைத் திருப்பினார் ஶ்ரீராமர்!  சரி இன்னிக்குத் தான் ராமருக்குப் பிறந்த நாள் வேறேயே! நேத்திக்கே ஜன்ம நக்ஷத்திரம் வந்தாச்சு! ஆனால் நாமெல்லாம் என்னமோ நவமி திதியிலே தானே கொண்டாடறோம்! ஆகவே இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு ஶ்ரீராமர் மனம் குளிரும்படி எல்லாமும் செய்துடலாம்னு முடிவு.

இந்த வருஷம் மல்லிகை மாலை போடலை. பூ சரியாக வர ஆரம்பிக்கலை. அதனால் கதம்பம் தான். படமும் முன்னால் எடுத்தது. இந்த வருஷம் எடுக்கலை! :)


என்ன பெரிசா? சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், வடை, பானகம், நீர்மோர்! அம்புடுதேன்! அதுக்கே இங்கே நாக்குத் தள்ளுது! :) போளியெல்லாம் பண்ணலை!  இந்த வெயில் வேறே இந்த வருஷம் பாடாய்ப் படுத்தி எடுக்குது. குளிச்சுட்டு வந்த உடனே மறுபடி குளிச்சாப்போல் வியர்வை வெள்ளம். அடுப்பு எரிஞ்சால் என்ன, எரியாட்டி என்னனு மெத்தனமா சமையலறையில் முழு வேகத்தில் மின் விசிறியைச் சுத்த விட்டுட வேண்டி இருக்கு!  பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வியர்வைக்குளியலைக் கழுவி நல்ல நீர் விட்டு முகம், கை,கால்களைக் கழுவிட்டு வர வேண்டி இருக்கு! இத்தனைக்கு நடுவே சமையல், சாப்பாடு. மூணு நாளாக் காலை நோ டிஃபன்! நம்ம ரங்க்ஸுக்கு அதுவே பாதி பலவீனமாயிடுச்சு. பசி தாங்கலை! காஃபி இரண்டு தரம், ஹார்லிக்ஸ் (மருத்துவர் தடை போட்டிருக்கார்) ஒருதரம்னு குடிச்சாலும் தாங்கறதில்லை. ஆகவே பத்து மணிக்குள்ளாகச் சமைக்கணும்.

வீடு சுத்தம் செய்துட்டுக் குளிச்சுட்டு வரவே எட்டரை மணி ஆயிடுது! :) அதுக்கப்புறமா இவை எல்லாம் செய்துட்டுச் சரியாப் பத்து மணிக்கு எல்லாம் முடிச்சுட்டேன். வெள்ளிக்கிழமையா, ராகுகால விளக்கு ஏத்துவேன். அதுக்காகப் பத்து நிமிஷம் காத்திருந்து நிவேதனம் பண்ணினேன். கீழே படங்கள்! ராமர் படத்தின் மேலே வெளிச்சம் பிரதிபலிக்காமல் எடுக்கணும்னு பார்த்தால் முடியலை. மின் விளக்கை அணைத்தால் படம் எடுக்க வெளிச்சம் போதலை. விளக்கைப் போட்டால் அது பிரதிபலிப்பு அதிகமா ஆகி ஶ்ரீராமரின் முகமே தெரியறதில்லை!



சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், பானகம், நீர்மோர், வடை, வெற்றிலை பாக்கு, பழம் நிவேதனம்!

கீழே கற்பூரம் காட்டியது தட்டில் எரிந்து கொண்டு இருக்கிறது.  பலகையில் ராகுகால விளக்கு ஏற்றியது எரிகிறது. :)

எல்லோரும் சீக்கிரமா வந்து சுடச் சுட வடை, பாயசம், சுண்டல் எடுத்துண்டு, பானகமும், நீர்மோரும் குடிங்கப்பா!

இது ஒரு மீள் பதிவு. மற்றபடி இந்த வருஷமும் பாயசம், சுண்டல், வடை, நீர்மோர், பானகம், சாதம், பருப்பு, வெற்றிலை, பாக்கு, பழம்!

Saturday, March 24, 2018

தோசை முகம் மாறிப் போச்சே!

அஹமதாபாதிலிருந்து சென்னை வந்ததும் எழும்பூரில் வழக்கமான சங்கீதா ஓட்டலில் சாப்பிடச் சென்றோம். முன்னே மாதிரி இல்லைனாலும் மனசு என்னமோ அங்கேயே சாப்பிடலாம் என்றது. நாங்க வந்த விமானத்திலே தாராளமாத் தண்ணீர் மட்டும் கொடுத்தாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! காலம்பர அஹமதாபாதிலிருந்து ஆறு மணிக்கே கிளம்பியாச்சு. தங்கி இருந்த ஓட்டலிலே காலை ஏழரைக்குத் தான் ப்ரெக்ஃபாஸ்ட் ஆரம்பம். அதுக்குத் தங்கினா இங்கே விமானம் போயிடும். நல்லவேளையா இப்போல்லாம் எல்லா ஓட்டல்களிலும் வைக்கிறாப்போல் காஃபி பொடி, பால்பவுடர், சர்க்கரை எல்லாம் வைச்சிருந்ததாலே காலங்கார்த்தாலேயே காஃபி கலந்து சாப்பிட்டோம். தமிழ்நாட்டிலே இன்னும் இப்படி இருக்கிறாப்போல் தெரியலை. மதுரை போனப்போத் தங்கின நக்ஷத்திர ஓட்டலிலேயே இல்லை! நறநற! ஆனால் கும்பகோணத்திலே ஓட்டல் ராயாஸில் வைச்சிருந்தாங்க. டீ, காஃபி, பால், சர்க்கரை எல்லாமும் இருந்தது.

சங்கீதாவிலே நம்ம ரங்க்ஸ் சாப்பாடு சாப்பிட்டார். எனக்குச் சாப்பாடு சாப்பிட பயம். வயிறு என்ன சொல்லுமோ! அதோடு மறுபடி ரயிலில் பயணம் இருக்கே! பாதி வழியில் வயிறு தகராறு செய்தால்! ஆகவே எளிமையா இருக்கட்டும்னு தோசை சொன்னேன். வெங்காய தோசை தான் இருந்தது. விட்டால் மசாலா தோசை! மசாலா தோசைல்லாம் ரொம்ப கனம் அதிகம் உள்ள உணவு. வெங்காயம் பரவாயில்லை ரகம்! ஆகவே வெங்காய தோசையே சொன்னேன்.  தோசை வந்தது பாருங்க! என் மூஞ்சியைப் பார்க்கச் சகிக்காமல் இருந்தது என்று கண்ணாடியைப் பார்க்காமலேயே என்னால் சொல்ல முடியும். பொதுவா தோசைனா ஓரங்களில் முறுகலாக அடுத்த ஒரு அங்குலத்திற்குக் கொஞ்சம் மெத்தென்றும் நடுவில் போகும்போது ஓரங்கள் மெலிதாக முறுகியும் நடுவே கொஞ்சம் மெத்தென்றும் இருக்கும். இதைத் தான் நாம் தோசை என்போம். இப்போல்லாம் முறுகல் தோசை என்னும் பெயரில் ஒடிக்கிறாப்போல் தோசையைக் கொடுக்கிறாங்க. விண்டால் தூள் தூளாக ஆகி விடுகிறது. அம்பேரிக்காவில் எல்லா ஓட்டல்களிலும் இப்படித் தான் தூள் தூளாகத் தோசை! அல்லது ரப்பர் போல் இழுக்கும் தோசை! அங்கேயாவது வார்க்கத் தெரியாமல் வார்க்கிறாங்கனு நினைச்சால் இங்கேயும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வெங்காய தோசை எனில் மாவில் வெங்காயத்தைக் கலந்து கொண்டு அதுவும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைக் கலக்கணும். தோசை வார்க்கும்போதும் ரொம்ப மெலிதாகவும் இல்லாமல் கனமாக ஊத்தப்பம் போலவும் இல்லாமல் சாதாரண தோசை மாதிரியே வார்த்துட்டு வெங்காயத்தை நன்கு வேகும்வரை திருப்பியும் போடணும்! இங்கே! ம்ஹூம்! மெலிதாகப் பேப்பர் மாதிரி! பேப்பர்னா "தமிழ் தி இந்து" அல்லது "தினமலர்" அல்லது "தினத்தந்தி" அல்லது "தினகரன்" மாதிரிப் பேப்பர் தாங்க! அவ்வளவு மெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லிசாக வார்த்துட்டு அதில் கரடு முரடாக நறுக்கிய வெங்காயத்தை உள்ளே கொட்டி வைச்சிருக்காங்க. தோசையை எடுத்தால் வெங்காயம் தனியாக் கொட்டுது! தோசை கையில் ஒரே சுருட்டாகச் சுருட்டலாம். அந்த மாதிரி இருக்கு!

இது வெங்காயம் தனி, தோசைங்கற வஸ்து தனியா இருந்தது. தோசையைப் பிய்ச்சா வெங்காயத்தோடு சேர்ந்து வரணும். ம்ஹூம், வெங்காயம் எங்கேயோ இருந்தது. தோசையை வார்த்துட்டு அதன் மேலே வெங்காயத்தை இஷ்டத்துக்கு நறுக்கி உள்ளே கொட்டி வைச்சிருக்காங்க! இதுக்கு வெங்காய தோசைனு பேராம்! இதுக்குப் போய்   75 ரூபாயாம். தண்டம்! அரைக்கரண்டி மாவு கூட எடுத்திருக்க மாட்டாங்க! ஆனாப் பாருங்க, எங்களுக்கு, முக்கியமா எனக்கு முதல் நாளிலே இருந்தே சந்திராஷ்டமம் ஆரம்பிச்சிருக்குப் போல! முதல் நாள் சாப்பாட்டிலே அன்னிக்கு 100ரூ தண்டம். அப்போவே உஷாரா இருந்திருக்கணும்! :)  எங்கே! புதன்கிழமை நல்லா மாட்டிக்கிட்டேன். நம்ம ரங்க்ஸ் சிரிச்சிருக்கணும். என்னைப் பார்த்தாப் பாவமா இருந்தது போல! ஒண்ணும் சொல்லாம விட்டுட்டார். இல்லைனா இம்மாதிரியான நிகழ்வுகளுக்கே நாங்க காத்திருப்போமே! மாட்டி விட்டிருக்க மாட்டோமா என்ன! :)))) அப்புறமா ஒரு லஸ்ஸி சாப்பிட்டுப் பசியை ஆத்திக் கொண்டேன். முதல்லேயே லஸ்ஸி சாப்பிட்டுட்டு தோசையைக் கான்சல் செஞ்சிருக்கணுமோ! தோசைன்னாலே இப்போ பயம்மாவும் இருக்கு! வாழ்க்கையும் வெறுத்துப் போச்சு! ஶ்ரீரங்கம் வந்து ஓர் அடை, அவியலோடு சாப்பிட்டதும் தான் வாழ்க்கை திரும்பக் கிடைச்சது.  பயத்திலே தோசை கிட்டேக் கூடப் போகலை. என்  பிரியமான தோசை முகமே மறந்துடுமோனு பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவும் இருக்கு! :)

இன்னிக்குப் பாருங்க, தோசைக்கு அரைக்கிறேன்னு சொன்னா ரங்க்ஸ் ஓட்டமா ஓடிட்டார். எங்கே அது போல வார்த்துடுவேனோ னு பயம் போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!




இது மங்களூரு நீர் தோசை வார்த்தப்போ எடுத்த படம்! நீர்த் தோசை

Friday, March 23, 2018

சித்தப்பாவுக்கு அஞ்சலி!



சித்தப்பா இறந்து இன்றுடன் ஒரு வருஷம் ஆகி விட்டது. இன்னமும் மனது ஏற்க முடியாத ஒரு விஷயம் உண்டெனில் அது இது தான்!  பல இடங்களில் நினைவஞ்சலி நடத்துவதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. நல்ல அற்புதமான மனிதர். எங்க குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமானவர். அவருக்கும் எல்லோரையும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவரிடம் ஓர் ஈடுபாடு உண்டு எனில் அவரும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அன்பைக் காட்டி இருக்கிறார். மறக்க முடியாத மனிதர். 

Monday, March 19, 2018

"திங்க"ற கிழமைக்குப் பறங்கிக்கொட்டை அடை!

இதைப் போன மாசமே ஶ்ரீராமுக்கு அனுப்பி இருக்கணும். அவரும் மார்ச் மாதம் வெளியிடுவதாய்ச் சொன்னார். ஆனால் அடுத்தடுத்து ஏதேதோ பிரச்னைகள்! கவலைகள்! இதை மறந்தே விட்டேன். ஶ்ரீராமும் அப்பாடா!னு நிம்மதிப் பெருமூச்சு விட்டது இங்கே வந்து கேட்டது. பின்னே? வரிசையில் இருக்கிறதையே போட முடியலையாம்! இதிலே நான் வேறே அனுப்பினால் ஶ்ரீராமுக்கு என்ன பண்ணறதுனு கவலையா இருக்காதா?

கீழே செய்முறைகள் கொடுத்திருக்கேன். யாரும் உதவிக்கு இல்லை. தி/கீதா எப்படியோ எல்லோரையும் செய்யச் சொல்லி வேலை வாங்கிடறாங்க. நமக்கு வேலை வாங்கற சமத்து எல்லாம் இல்லை. ஆகவே நானே செய்தது தான் எல்லாமும்! 

அடைக்குத் தேவையான சாமான்கள்: பச்சரிசி அரைக்கிண்ணம், புழுங்கலரிசி ஒன்றரைக்கிண்ணம். பலரும் பச்சரிசியிலேயே அடை செய்யறாங்க. ஆனால் நான் புழுங்கலரிசி சேர்ப்பேன். ஏகாதசின்னா அன்னிக்குப் பச்சரிசி அடை!

துவரம்பருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு அரைக்கிண்ணம், உளுத்தம்பருப்பு ஒரு கரண்டி, கறுப்பு உளுந்து இருந்தால் தோலோடு போடவும்.

மி.வத்தல் நான்கு, பச்சை மிளகாய் இரண்டு, உப்பு, பெருங்காயம்



புழுங்கலரிசி ஒன்றரைக்கிண்ணம்+பச்சரிசி அரைக்கிண்ணம் களைந்து ஊற வைச்சாச்சு!


துவரம்பருப்பு ஒரு கிண்ணம் (துவரம்பருப்பு கூடப் போட்டால் அடை மொறுமொறுப்பாக வரும்) கடலைப்பருப்பு அரைக்கிண்ணம்+உளுத்தம்பருப்பு ஒரு கரண்டி. கறுப்பு உளுத்தம்பருப்பு தோல் நீக்காதது எனில் ருசி அதிகம்.



மிக்சி ஜாரில் பச்சை மிளகாய் இரண்டும் நான்கு சிவப்பு மிளகாய் வற்றலும் உப்பு, பெருங்காயம் சேர்த்து முதலில் ஒரு ஓட்டு ஓட்டிக்கணும். பின்னர் அரிசியைப் போட்டு அரைக்கணும். ஜலம் அதிகம் விடக் கூடாது. நிதானமாக ஜலம் விட்டால் போதும். 



புழுங்கலரிசி+பச்சரிசிக் கலவை அரைத்த பின்னர்


அதில் பருப்புச் சேர்த்தாச்சு. பருப்புச் சேர்த்து அரைத்த கலவை கீழே!




கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்திருக்கேன்.


இளங்கொட்டை கிடைக்காததால் பச்சைப் பறங்கிக்காய் வாங்கினோம். 


பொடிப்பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கணும்.



தோசைக்கல்லில் வேகும் அடை!


திருப்பிப் போட்டு வேகும் அடை! சூடான பறங்கிக்கொட்டை அடை தயார். சாப்பிடலாம் வாங்க! 








Saturday, March 17, 2018

ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்!

எல்லோருக்கும் ஓர் நற்செய்தி!ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்.      நாளையிலிருந்து புதன் வரை இணையத்துக்கு வர மாட்டேன். குஜராத் போகிறோம். போயிட்டு வந்து விபரங்கள் சொல்றேன். என்ன ஒரு பிரச்னைன்னா இன்டிகோ விமானத்தில் மூணு மாசம் முன்னாடியே டிக்கெட் வாங்கியாச்சு. இப்போ நாங்க போகற நேரம் பார்த்து இன்டிகோ விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. அவங்க ரத்து செய்த விமானங்களில் நாங்க போற விமானம் இல்லைதான்! நேத்திக்கு ஏர்லைன்ஸ் வெளியிட்ட ரத்து செய்யப்பட்ட விமானங்களோடு நாங்க போக வேண்டிய ஊரோ, விமானமோ இல்லை என்பதையும் பார்த்தாச்சு.  முன்பதிவு செய்த ஏர்லைன்ஸ் ஏஜென்டிடமும் தொலைபேசிப் பேசி உறுதி செய்து கொண்டாச்சு! ஆகவே   நாளைக்கே அம்பத்தூர் போய் அங்கே சில, பல வேலைகள் முடித்துக் கொண்டு பின்னர் திங்களன்று மாலை அஹமதாபாதுக்கு விமானம் ஏறிப் பயணம்

செவ்வாயன்று அங்கே வேலையை முடித்துக் கொண்டு பின்னர் திரும்ப புதன் காலை அங்கிருந்து சென்னைக்குத் திரும்பணும். இந்தப் பதிவுக்கு நீங்க கொடுக்கும் கருத்துகளுக்கு இன்னிக்குச் சாயந்திரத்துக்குள்ளாகப் பதில் சொல்லப் பார்க்கிறேன். முடியலைனா வந்து தான். அதிரடி, இது முக்கியமா உங்களுக்குத் தான். ஊருக்குப் போறதாலே தான் முன்னர் போட்ட பதிவுகளுக்கு வந்த கருத்துகளுக்கு உடனே பதில் சொல்லிட்டேனாக்கும்.  (அதானே, பார்த்தேன்! இல்லைனா ஒரு மாசம் ஓட்டி இருக்க மாட்டீங்க?) ஹிஹிஹி, அது நெ.த.வோட ம.சா. போல! கொஞ்சம் சத்தமாப் பேசி இருக்கா! இங்கே வந்து கேட்குது!

சரி, சரி, போற வரைக்கும் ஏதானும் செய்து கொடுத்துச் சாப்பிட வைச்சுட்டுப் போகணும் இல்லையா? அதுக்காக நான் இன்னிக்குச் செய்து காட்டப்போவது பறங்கிக் கொட்டை போட்டு அடை! அடை தான் எல்லோருக்கும் தெரியுமேனு நினைக்காதீங்க! ஒவ்வொருத்தர் வீட்டில் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அடையில் வெங்காயம், முட்டைக்கோஸ், கீரை, முருங்கைக்கீரை, வாழைப்பூ போன்றவை போடலாம். பொடிப் பொடியாய்த் தேங்காய்க் கீற்றுகள் கூடப் போடுவாங்க! அது மாதிரிதான் பறங்கிக் கொட்டையும். பறங்கிக் கொட்டை சின்னதா இருக்கணும். பழுத்த மஞ்சள் பறங்கியோ, பச்சை நிறம் மாறி வருவதோ கூடாது. பச்சை நிறப் பறங்கியாக இருந்தால் பரவாயில்லை ரகம். அன்னிக்கு எனக்குக் கொட்டை கிடைக்கலை. இந்த இளம் பறங்கிக் கொட்டையில் இளங்கொட்டைக் கூட்டு என்று பண்ணுவாங்க. அதெல்லாம் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இளங்கொட்டைக்குப் படம் போடலாம்னு தேடினா கூகிளார் கையை விரிக்கிறார். அப்பாடா! கடைசியில் கூகிளாரால் கூடக் கொடுக்க முடியாத ஒன்று இருக்கே! சந்தோஷமா இருக்கு! வெளிர் பச்சை நிறத்தில் சின்னதாகப் பப்பாளிக்காய் போல் இருக்கும் இளங்கொட்டை. இது பறங்கிப் பிஞ்சு என்றும் சொல்லலாம்.  இதைத் தோல் சீவாமல் பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொண்டு தேங்காயை மட்டும் துருவிக் கொஞ்சம் போல் ஊற வைத்த அரிசியோடு அரைத்துக் கொண்டு வெந்த கூட்டில் கலக்க வேண்டும். உப்புப் போடுகையில் அவரவர் ருசிக்கு ஏற்ப வெல்லமோ, சர்க்கரையோ போட வேண்டும். தேங்காய் அரைத்துத் தேங்காய்ப் பால் சேர்த்தால் வெல்லமும்,வெறும் பால் சேர்த்தால் சர்க்கரையும் போடுவது என் வழக்கம். இதற்குத் தேங்காயைத் துருவிக் கொண்டு நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம்.

இந்தப் பறங்கிக்கொட்டையைத் துருவிக் கொண்டு துவையலும் அரைக்கலாம். துருவிய பறங்கிக்கொட்டை

மி.வத்தல் 4 அல்லது ஆறு வற்றல்கள் (காரத்துக்கு ஏற்றாற்போல்)

புளி சின்னச் சுண்டைக்காய் அளவு ஊற வைக்கவும்.

பெருங்காயம் ஒரு துண்டு

உப்பு தேவையான அளவு

எண்ணெய் வதக்கத் தேவையான அளவு சுமார் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உ.பருப்பு.

கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு முதலில் கடுகு, உ.பருப்பை வறுத்து எடுத்துக் கொண்டு தனியாக வைக்கவும். பின்னர் பெருங்காயத்தைப் போட்டு எடுத்துவிட்டு மி.வத்தலை நன்கு கருகாமல் வறுத்து எடுக்கவும். கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயிலேயே துருவி வைத்த பறங்கிக்காயைப் போட்டு நன்கு வதக்கவும். சுருள வதக்கிய பின்னர் ஆற வைக்கவும். ஆறியதும் மி.வத்தல் ஊற வைத்த புளியோடு உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு வதக்கிய பறங்கிக்காயைப் போட்டு அரைக்கவும். நன்கு அரைபட்டதும் கடைசியில் கடுகு, உ.பருப்பைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுக்கவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப்போட்டுப்பிசைந்து சாப்பிடவும். தொட்டுக்க டாங்கர் பச்சடி அல்லது மோர்ச்சாறு. அல்லது வெள்ளரிப் பச்சடி, காரட் பச்சடி போன்றவை.


ஹிஹிஹி, பறங்கிக்காய் அடைனு சொல்லிட்டு இது என்னனு பல்லைக் கடிக்கிறவங்களுக்கு! திங்கட்கிழமை வரமாதிரி ஷெட்யூல் பண்ணி  இருக்கேன். ஶ்ரீராமுக்குத் தான் அனுப்பறதா இருந்தேன். அவருக்கு வரிசை கட்டிச் செய்முறைகள் இருப்பதால் அனுப்பலை! :) திங்கட்கிழமைக்கு நான் இல்லைனாலும் "திங்க" போட்டி வேண்டாமா? அதான்!

Friday, March 16, 2018

தொடரும் மின்வெட்டு! :(

கடந்த ஒரு வாரமா மத்தியான நேரங்களில் கடுமையான மின்வெட்டு! :( தொடர்ந்து இருந்து வருகிறதால் மத்தியானம் கிடைக்கும் நேரத்தில் எதுவுமே செய்ய முடியாமல் பயனற்றுப் போகிறது. அப்போத் தான் புதுசாப் பதிவு எழுதிச் சேமிக்கவோ, ஷெட்யூல் பண்ணவோ முடியும்! பதிவுகளுக்கு வரும் கருத்துக்களுக்கு எதிர்வினை ஆற்ற முடியும். மற்றப் பதிவுகளுக்கோ முகநூலுக்கோ போய் மேய்ந்துவிட்டு வர முடியும்! காலை நேரம் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அடிச்சுப் பிடிச்சுண்டு ஶ்ரீராமின் எ.பி.க்குப் போகவும் திரும்பி வரவும் சரியாப் போயிடும். இன்னிக்கு மத்தியானம் மின்வெட்டு உண்டா இல்லையா என்பது இப்போ வரைக்கும் சஸ்பென்ஸ்! ஒரு மணிக்கு மேல் தான் தெரியும்! எல்லா இடங்களிலும் இருக்கிறதாத் தெரியலை. இங்கே மட்டும் தான் இருக்குனு நினைக்கிறேன். ஏனெனில் யாருமே சொல்லலையே! அதே போல் மத்தியானம் இரண்டில் இருந்து மூன்றுக்குள் தினம் ஒரு அரைமணியாவது மழை! காய்ந்த வற்றல், வடாம்களை நனைத்து விட்டுத் துணிகளை ஈரமாக்கிட்டுப் போகிறது! வர வர வானமும் அடம் பிடிக்கும் குழந்தையாக ஆகிட்டு வருது!


என்னிக்காவது தான் இந்த மாதிரி ஒன்பது மணிக்கு உட்கார நேரம் அமையும். பல பதிவுகள் பாதியிலேயே ட்ராஃப்ட் மோடில் கிடக்கின்றன. ஆன்மிகப் பயணம் பக்கத்தில் எழுதி ஒரு மாசம் ஆச்சு. சாப்பிடலாம் வாங்க பதிவில் கீரையைப் பாதி நறுக்கி வைச்சுட்டு வந்தது. நெ.த. வந்து பார்த்து என்னனு கேட்கிறதுக்குள்ளே அங்கே மறுபடி ஆரம்பிக்கணும். இப்போ அவரோட ஹஸ்பன்ட் வந்திருக்கிறதாலே நம்ம பதிவிலே அவரால் கவனம் செலுத்த முடியாது என்பது ஓர் ஆறுதல். அடுத்த ஆறுதல் அடுத்த மாசம் அவர் ஊருக்குக் கிளம்பும் ஏற்பாடுகளில் மூழ்கி இருப்பார்! ஆகவே அதிகம் கவனிக்க மாட்டார்! அப்பாடா! அதுக்குள்ளே ஏதேனும் எழுதித் தேத்திடலாம். :)

சமீபத்து உ.பி., பிஹார் இடைத்தேர்தல்களில் பிஜேபி கட்சி தோத்துடுச்சாம். நம்ம ஆங்கில, தமிழ் ஊடகங்களுக்கு சந்தோஷம் தாங்கலை. காங்கிரஸோ, கம்யூனிஸ்டோ வர முடியலைங்கறதும், காங்கிரஸுக்கு டெபாசிட் கூடக் கிடைக்கலைங்கறதும் அந்த அந்தக் கட்சிக்காரங்களுக்குத் தான் மறந்துடுச்சுன்னா நம்ம மீடியாக்காரங்களும் மறந்துட்டாங்க! சமீபத்திய ஆர்.கே.புரம் (தமிழ்நாடு) இடைத்தேர்தலில் தோற்ற ஒரு கட்சி பிஜேபிக்கு அவமானகரமான தோல்வி எனக் குதித்துக் கொண்டிருந்தது. சிப்புச் சிப்பா வந்தது! இதிலே என்ன அவமானம் வருது? இதுவே பிஜேபி ஜெயிச்சிருந்தா ( ஓட்டுக்கள் குறைந்த அளவு வித்தியாசம் தான்) கொஞ்சம் கூட யோசிக்காமல் ஈவிஎம் என்று சொல்லும் இதே ஊடகங்களும், கட்சிகளும் இப்போ பிஜேபி மேல் மக்களுக்குக் கோபம் என்று சொல்கிறதே! அப்போ தோற்ற மற்றக் கட்சிகள் மேலும் மக்களுக்குக் கோபம் தானே!   இந்த ஆட்சியில் கெடுபிடிகள் நிறைய என்பதால் அரசுத் துறைகள் சார்ந்த ஊழியர்களே இந்த அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை என்பது தெரிந்த விஷயம் தானே!  ஆகவே மக்களுக்குக் கோபம்னு புதுசா ஒண்ணும் இல்லை! என்ன நான் சொல்றது?

யாருங்க அங்கே, வர வர இந்த வலைப்பக்கம் அரசியல் சார்ந்தே இருக்குனு சொல்லிட்டு இருக்கிறது? அடுத்து ஒரு மொக்கை போட்டுடுவோம்! செரியா?

Tuesday, March 13, 2018

அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள்!

அடுத்தடுத்து இள வயதினர் மரணம். மனதைக் கலங்க அடிக்கிறது. முதலில் இங்கே திருச்சியில் ஓர் கர்ப்பிணி இளம்பெண் மரணம். அடுத்துச் சென்னையில் மீனாக்ஷி கல்லூரி மாணவி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப் பட்டிருக்கிறாள். கணவன் தான் காரணம் என்கின்றனர். இன்னொரு பக்கம் அந்த இளைஞன் கணவனே இல்லை. பலவந்தமாகத் தாலி கட்டினான் என்கின்றனர். எது எப்படியோ ஓர் உயிர் போய் விட்டது.யார் காரணமாக இருந்தாலும் இம்மாதிரி இள வயது மரணங்களை ஏற்க முடியவில்லை. 

இதெல்லாம் விபத்து, கொலை என்று சொன்னாலும் இப்போது தேனி மாவட்டத்தில் குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டவர்கள் பற்றியும் வித விதமாகச் செய்திகள் வருகின்றன. இதிலே ஒரு பக்கம் மாட்டிக் கொண்டவர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தக்க ஏற்பாடுகள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள்! இன்னொரு பக்கம் மலை ஏற்றம் செய்தவர்கள் அனுமதி இல்லாமல் சென்றார்கள் என்ற செய்தி! இன்னும் சிலர் அனுமதியுடன் தான் சென்றதாகவும் அங்கீகரிக்கப்பட்ட மலை ஏற்றக் குழுவினருடனேயே சென்றதாகவும் சொல்கின்றனர்.

இதற்கு நடுவே நம்ம தமிழ் சானல்கள் மீண்டு வந்தவர்களிடம் கேட்கும் கேள்விகள்! "இன்னும் சிறிது நேரம் முன்னால் வந்தால் உங்க நண்பரை/ சிநேகிதியைக் காப்பாற்றி இருக்கலாம் என நினைக்கிறீர்களா?" என்று கேட்கின்றன.  இவங்க மலை ஏறச் சென்றதே அந்த மாவட்டப் பொறுப்பாளர்களையும் வனச் சரக அலுவலர்களையும் தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் என்ன தினசரியிலே விளம்பரங்கள் கொடுத்துவிட்டுச் சென்றார்களா என்ன? இத்தனைக்கும் அனுபவம் வாய்ந்த காட்டுவாசிகள் "காட்டுத் தீ" குறித்து எச்சரிக்கை செய்ததாகவும் சொல்கின்றனர். எல்லாவற்றையும் மீறிப் போனார்களா, தெரியாமல் போனார்களா என்பதெல்லாம் இப்போது தேவை இல்லை. ஆனால் மாட்டிக் கொண்டவர்கள் தகவல் தெரிவித்தாலும் அது சமவெளியில் இருப்பவர்களுக்கு வந்து சேர வேண்டாமா?

சில இடங்களில் தான் சில அலைபேசிகள் வேலை செய்யும். இத்தகைய அத்துவானக் காட்டில் தகவல், தொடர்புக்கு வசதி இருக்கிறதா என்பது கூடத் தெரியாமல் போய் மாட்டிக் கொண்டவர்களை உடனே மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற முயற்சி எடுக்கவில்லை என்பது என்ன நியாயம்னு புரியலை! மலையோ செங்குத்தான மலை! என்னதான் ஹெலிகாப்டர் என்றாலும் மலையின் செங்குத்தான சிகரம் ஒன்றில் லேசாக இடித்தாலே போதும்! அங்கே விமானத்தை இறக்கவும் முடியாது!  இத்தனை கெடுபிடிகளிலும் நம் வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்களால் முடிந்தவரை காப்பாற்றி இருக்கின்றனர். அதைப் பாராட்ட வேண்டுமே அன்றிக் குற்றம் குறை சொல்வது சரி இல்லை.

ஊடகங்களுக்குத் தேவையான செய்தி, மத்திய அரசு தமிழர்களைக் காப்பாற்றுவதில் தாமதம் காட்டியது என்று சொல்வதே! ஆனால் காட்டுத் தீயின் புகை மட்டத்தில் மேலே ஹெலிகாப்டர்களில் இருப்பவர்களால் கீழே மலையில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களைக் கண்டறிவது கடினம். அடர்ந்த காட்டில் செல்ஃபோன் டவர் கிடைக்கவும் வாய்ப்பில்லை. ஆகவே இருந்த வசதிகளை வைத்து நம் ராணுவ வீரர்கள் செங்குத்தான மலைச்சரிவுகளுக்கு இடையில் ஹெலிகாப்டருக்கும் சேதம் வராமல், மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஹெலிகாப்டர்களைச் செலுத்திய விமானிகளுக்கும், மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கும் நம் நன்றியை உரித்தாக்குவோம். 

Thursday, March 08, 2018

பாரதி கண்ட புதுமைப் பெண்!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்
நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டீரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவி லொழிப்பராம்.
சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரியங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்மைகள் யாவு மழிப்பராம்
மூடக் கட்டுகள் யாவுந் தகர்ப்பராம்!

மேலே சொல்லி இருப்பது பாரதி தான் கண்ட புதுமைப் பெண் குறித்த கற்பனைகள். ஓரளவுக்குப் பெண்கள் இவற்றில் வெற்றி கண்டும் இருக்கின்றனர். பாரதி வாழ்ந்த காலத்தில் பெண்களுக்குப் படிப்பு என்பது மறுக்கப்பட்டு இருந்தது. பல காரணங்கள்! அந்நியர் படையெடுப்பு முக்கியம். அதோடு இல்லாமல் மத மாற்றம் செய்யப்பட்டதும் ஒரு காரணம்.  பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் இருந்ததுக்கு மேற்சொன்ன காரணங்கள் தான் முக்கியம். அதற்கு முன்னால் சுமார் பதினெட்டாம் நூற்றாண்டு வரை பெண்கள் படித்துக் கொண்டு தான் இருந்திருக்கின்றனர். பல அரச மகளிர் எல்லாக் கலைகளையும் கற்றுத் தேர்ந்து மிகவும் சாமர்த்தியசாலியாகவும் புத்திசாலியாகவும் அரசை நிர்வகிக்கும் சக்தி உள்ளவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

பதினான்காம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசியான கங்கா தேவியின் மதுரா விஜயம் அவள் சம்ஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறது. இதிலிருந்து பெண்கள் படிக்காமல் இருந்ததில்லை என்பதையும் பெண்களுக்குப் படிப்பு மறுக்கப்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே! அந்தக் கால கட்டங்களில் பெண்ணை வீட்டில் வைத்திருப்பதற்கு பயந்து விரைவில் திருமணமும் முடித்து அனுப்புவதை வழக்கமாய்க் கொண்டனர். திருமணங்களும் பெரும்பாலும் இரவில் நடத்துவார்கள். ஆகவே பாரதியார் மேற்கூறியபடி பெண்கள் முன்னேற்றம் குறித்துக் கருத்துகளைத் தெரிவித்துப் பாடல்களாகவும் பாடி வைத்துள்ளார்.

ஆனால் இன்றைய புதுமைப் பெண்ணுக்கு சுதந்திரம் என்பது கட்டற்றதாகவே இருக்கிறது. பெண்களின் திருமண வயதும் 30க்கு வந்து விட்டது. அப்படியும் பல திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. முன்னெல்லாம் திருமணத்தில் வைதிகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் திருமணங்கள் ஆடம்பரச் செலவுகளில் மூழ்கி முத்தெடுக்கின்றன.  நமக்கு வடக்கே பேசும் மொழி வேண்டாம். ஆனால் கலாசாரத்தை மறுப்பதில்லை. பல திருமணங்களிலும் மெஹந்தி விழா வட மாநிலங்களைப் போல் நடத்துகின்றனர். அதே போல் உடை, நடை, பாவனைகளும் வட மாநிலப் பெண்களைப் போல் தான்! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனார்கலி சல்வார், குர்த்தா இல்லைனா லெஹங்கா, சோலி போட்டுக் கொண்டு தான் மணப்பெண் நிற்பார். ஆனால் வெளியில் பேசும்போது தமிழ், தமிழ்க் கலாசாரம், தமிழ் மொழியை எங்கிருந்தோ வடக்கத்தியர் வந்து அழிக்கின்றனர் என்று அரசியல் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

திருமண பந்தம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள் முன்னெல்லாம். ஆனால் இப்போதெல்லாம் ஆயிரம் நாட்கள் வாழ்ந்தாலே விழா எடுக்க வேண்டியதாய் உள்ளது. நம் திருமணத்தின் முக்கியத்துவம் இன்னமும் குறையாமல் இருப்பதாலேயே நம் நாட்டின் பொருளாதாரமும் ஆட்டம் காணாமல் நிலைத்து இருக்கிறது! இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்குப் பின்னால் அது பற்றி வேறொரு சமயம் பேசிக்கலாம். குடும்பம் என்பது இருப்பதால் தான் இன்னமும் திருமணங்கள் பெற்றோர் பார்த்து வைத்தும் நடந்து வருகின்றன. அந்தத் திருமணங்களில் சப்தபதி என்றொரு நிகழ்ச்சி நடக்கும். தாலி கட்டி முடிந்ததும் அது நடக்கும். தாலி கட்டியதும் திருமணம் முடிந்து விட்டதாகப் பெரும்பாலோர் நினைத்தாலும் சப்தபதி முடிந்தால் தான் திருமணம் முடிந்ததாக அர்த்தம்.  தாலி கட்டிய பின்னர் கூடப் பெண்ணோ, பிள்ளையோ திருமணம் வேண்டாம்னு போனால் அது சட்டரீதியாகச் செல்லுபடி ஆகும். ஆனால் சப்தபதி முடிந்த பின்னர் தம்பதிகள் சட்டரீதியாகப் பிரிவது கடினம். குறைந்தது ஒரு வருஷம் காத்திருக்கணும்.

அப்படி என்ன இருக்கு சப்தபதியிலே என்பவர்களுக்கு! இது கிட்டத்தட்டத் தாலி கட்டிக் கொண்ட பின்னர் கணவன், மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்றது!

அக்னிக்கு வடக்கே மணமகன் மணமகளின் வலக் கையைப் பிடித்த வண்ணமே அவள் வலக்காலைத் தன் இடக்கையால் பிடித்துக் கிழக்கே பார்த்து அல்லது வடக்குத் திசையில்  முன்னே ஓர் அடி நகர்த்த வேண்டும். கூடவே தானும் செல்ல வேண்டும்.  சாஸ்திரங்கள் சொல்லுவதன் பேரில் ஒருவருடன் நாம் ஏழு அடிகள் எடுத்து வைத்து நடந்தால் அவர் நம் நண்பர் எனப் பொருள். சாவித்திரி சத்தியவானை மீட்க யமனுடன் ஏழடி நடந்து சென்று அவனுடன் சிநேகிதி ஆன பின்னரே வாதங்களில் ஈடுபட்டு சத்தியவானின் உயிரை மீட்பாள்.

இங்கே திருமணத்தில் ஒவ்வொரு அடிக்கும் ஓர் மந்திரம் உண்டு. அவற்றின் பொருள் என்னவெனில் மஹாலக்ஷ்மியை நிகர்த்த நீ என் வீட்டுக்கு வருவதால் என் குலம் விருத்தி அடையட்டும். நீயும் சந்தோஷம் அடைந்து என்னையும் சந்தோஷம் அடையச் செய்யப் போகிறாய். நீ என் வீட்டுக்கு வரும் நேரம் உணவுப் பொருட்கள் தட்டாமல் நிறைந்து இருக்க அந்த மஹாவிஷ்ணு திருவருள் புரியட்டும்.

இரண்டாம் அடி: அந்த மஹாவிஷ்ணுவின் அருளால் உனக்கு என் வீட்டில் வந்து இருக்கக் கூடிய உடல் வலிமை ஏற்படட்டும். உன் எண்ணங்களையும் அவன் நிறைவேற்றித் தரட்டும்.

மூன்றாம் அடி:  நாம் இருவரும் சேர்ந்து வாழப்போகும் இந்தப் புதிய வாழ்க்கையில் நாம் சாஸ்திர சம்பிரதாயங்களை மீறாமலும் அவற்றின் நியமங்களை மீறாமலும் கடமையுடன் செயலாற்றவும் அதற்கான நம்பிக்கை நமக்கு ஏற்படவும் அந்த இறைவனின் ஒத்துழைப்பை நாடுவோம்.

நான்காம் அடி: இவ்வுலக வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை நாம் இருவரும் சேர்ந்து அனுபவிக்கவும் அனைத்துச் சுகங்களும் என்னோடு சேர்ந்த உனக்கும் முழுமையாகக் கிடைக்கவும் இறைவன் அருளட்டும்.

ஐந்தாம் அடி: சுக, போகங்களை அனுபவிக்கத் தேவையான வீடு, வாசல், நிலம், கால்நடைச் செல்வங்கள் ஆகியவையும் நிறைந்து இருக்கக் கடவுள் அருளட்டும்.

ஆறாம் அடி: பருவகால மாற்றங்களினால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களை வாழ்வின் சுவை குன்றாமல் அவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நமக்குத் தருமாறு அந்தக் கடவுளை வேண்டுவோம்.

ஏழாம் அடி:  நம் வாழ்க்கையில் வெறும் சுகம் மட்டுமே இல்லாமல் அனைத்தையுமே பார்ப்போம். அதற்கு அடிப்படையான இயற்கைச் சக்திகளை மழை, வெயில், பனி போன்றவற்றை அந்த அந்தப் பருவத்தில் தவறாமல் ஏற்படுவதற்கு  உதவி செய்யும் கண்ணுக்குத் தெரியாத அந்த மாபெரும் சக்தியை நாம் வணங்கவும் அதற்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் நாம் இருவரும் சேர்ந்து நிறைவேற்றவும் எல்லாம் வல்ல அந்த சக்தியை வேண்டுவோம்.

இவ்வாறு திருமண வாழ்க்கையில் ஈடுபடும் மணமகனும், மணமகளும் தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உலக க்ஷேமத்துக்கும் சேர்த்துப் பிரார்த்திப்பான். இதன் மூலம் இருவருக்கும் மனத்தெளிவு உண்டாகி ஆன்மிகப் பாதையில் செல்ல வேண்டிய பக்குவம் ஏற்படும்.  இந்தப் பிறவியின் கடமைகளை ஆற்றவேண்டுமானால் இயற்கைச் சக்திகளும் உதவ வேண்டும் அல்லவா? அதற்கும் கடமைப்பட்டிருப்பதால் அவற்றுக்கும் சேர்ந்து நன்றிக்கடனை வேள்விகள், பூஜைகள் மூலம் நிறைவேற்றுவார்கள் தம்பதியர்.  இப்படி அறம் சார்ந்த வாழ்க்கையே இல்லறம் எனப்பட்டது.

ஆனால் இன்றைய அவசரகால வாழ்க்கை முறை இணையம், முகநூல், செல்ஃபோன் போன்றவற்றோடு சம்பந்தப் பட்டிருப்பதால் கணவனும், மனைவியும் அதிலேயே மூழ்கி விடுவதால் இவற்றை எல்லாம் நினைக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. தங்களைப் பற்றியே நினைக்க நேரமில்லாதவர்களுக்கு உலகைக் குறித்த சிந்தனைகள் எங்கே இருந்து வரும்? என்னவோ வாழ்க்கை நடத்துகின்றனர். சமீபத்தில் ஒரு புதிதாகத் திருமணம் ஆன தம்பதியரின் வாழ்க்கை முறை பற்றிக் கேட்டதில் அவங்க உறவினர் சொன்னது. கணவன் காலை வெளியே போனால் அந்த நேரம் மனைவி தூங்குவாள். இரவில் மனைவி சீக்கிரம் வந்து சாப்பிட்டுப் படுத்து விடுவாள். கணவன் நேரம் கழித்து வந்து தானே சாப்பிட்டுப் படுப்பான். காலை அவன் எழுந்தால் மனைவி வேலைக்குப் போய்விடுவாள். இருவரும் சந்திப்பது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே! அதுவும் இருவருக்கும் வேறு வேலை ஏதும் இல்லை எனில்! பேசிக் கொள்வதும் அப்போது தான். பல சமயங்களில் மனைவி சனிக்கிழமையும் வேலைக்குப் போய்விடுவார். கணவன் தனியாகத் தான் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்கிறார். இதுக்குக் கல்யாணம் எதுக்கு என்று நினைத்துக் கொண்டேன்! :( இப்போப் பல குடும்பங்களின் நிலைமை இது தான்.

இது தான் பெண் சுதந்திரம். பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

வாழ்க அனைத்து மகளிரும். மகளிர் தின வாழ்த்துகள்! 

Tuesday, March 06, 2018

ஏமாந்த சோணகிரி! :(

நேத்திக்கு சங்கடஹர சதுர்த்தி என்பதால் நம்ம நண்பருக்குக் கொழுக்கட்டை நிவேதனம் செய்துட்டு இருந்தேன். நம்ம ரங்க்ஸ் வெளியே சென்றிருந்தார். அப்போது முதல்லே இன்டர்நெட்டுக்குப் பணம் கட்டிய ரசீதை எடுத்துக் கொண்டு அந்தக் கம்பெனி ஊழியர் கொடுத்துவிட்டுச் சென்றார். பின்னர் எங்க குடியிருப்பு வளாகப் பாதுகாப்புக் காவலர் வந்து விட்டுப் போனார். இரண்டு பேருமே கதவுக்கு வெளியேயே நின்று கொண்டு கொடுத்தார்கள். பின்னர் வந்தது துணிகளை இஸ்திரி போட எடுக்க வரும் பெண்மணி. ஐந்தாண்டுகளாகப் பழக்கம் தான்!

ஆனால் அந்தப் பெண்மணி வந்துட்டுப் போனப்புறமா யாரும் வரலை. வீட்டினுள்ளே சோஃபாவில் வைச்சிருந்த செல்ஃபோன் காணாமல் போய்விட்டது. ரொம்ப நேரமா வாட்சப் ஒண்ணுமே வரலையேனு ஒரு பதினொன்றரை மணி போல ஃபோனைத் தேடியதில் கிடைக்கலை. ரங்க்ஸிடம் சொன்னால் அப்போப் பார்த்து ப்ளம்பர்&எலக்ட்ரீஷியன் வந்திருந்ததால் அதிலே பிசி! அவர் எடுத்துப் போகலைனும் சொல்லிட்டார். எல்லா இடங்களிலும் தேடிட்டு ரங்க்ஸ் வந்ததும் அவர் செல்ஃபோனில் இருந்து என்னோட ஃபோனின் எண்ணைப் போட்டுப் பார்த்தால் ஸ்விட்ச் ஆஃப்! என்ன செய்யறதுனு புரியாமக் குழப்பம்!

கீழே துணிகளை இஸ்திரி போடும் இடமெல்லாம் சென்று ஒருவேளை துணிகளுடன் வந்துவிட்டதோ எனத் தேடியாச்சு. அந்தப் பெண்மணியையும் கேட்டாச்சு! பின்னர் நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் கூகிளில் டெலிபோனின் எண்ணைக் கொடுத்தும் எங்கே இருக்குனு தேடியாச்சு. அதற்கென உள்ள தனி நம்பருக்குத் தொலைபேசிச் சொல்லியாச்சு. முறையே பிஎஸ் என் எல், சாம்சங் போன்றோருக்கும் தகவல் சொல்லிட்டோம். பிஎஸ் என் எல்லில் அதே நம்பரைத் தருவதாகவும் உடனே வந்து வாங்கிச் செல்லும்படியும் சொன்னாங்க. அதோடு இன்னொரு நண்பர் போலீஸிலும் சொல்லச் சொல்லவே உடனடியாக இருவிண்ணப்பங்கள் எழுதிக் கொண்டு போனார்.

பிஎஸ் என் எல்லிடம் வேலை முடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போனால் காலையிலிருந்து நடந்தது, அப்போ எதிர்வீட்டில் யார் இருந்தாங்க, சிசிடிவி காமிராவில் பதிவாகி இருப்பதுனு எல்லாமும் கேட்கிறாங்க. சிசிடிவி காமிரா கீழ்த் தளத்துக்கு மட்டும் தான். மேலும் ஃபோன் இருந்த இடம், அங்கிருந்து வெளியார் எடுத்துச் செல்ல முடியுமா? எவ்வளவு தூரம் என்றெல்லாம் கேட்டார்கள். நான் எவ்வளவு நேரம் உள்ளே இருந்தேன் என்பதை எல்லாமும் கேட்டிருக்கின்றனர்! என்னத்தைச் சொல்ல! போலீஸில் புகாரே கொடுக்க வேண்டாம்னு வந்துட்டார்.

ஒரு நல்ல விஷயம் என்னன்னா என்னோட செல்ஃபோன் கடவுச் சொல் போட்டால் தான் திறக்கும். ஆகவே அவங்களால் திறக்க முடியாது. மேலும் நாங்கள் மொபைல் வழியாக எவ்விதப் பணப் பரிவர்த்தனையும் செய்வதில்லை. சொல்லப் போனால் நான் யூ ட்யூப் பார்ப்பதோ அல்லது வீடியோக்கள் தரவிறக்கிப் பார்ப்பதோ, தொலைக்காட்சித் தொடர்கள், சினிமா போன்றவை பார்ப்பதோ இல்லை. விளையாட்டுக்களும் பார்ப்பது இல்லை. வாட்சப்பில் குடும்ப உறவினர்கள் உள்ள குழுக்கள், பெண், பையர், மற்றும் நண்பர்கள் இருப்பதால் வாட்சப் செய்திகள் 200,300க்கு மேல் வந்து கொண்டிருக்கும். அவற்றை அவ்வப்போது படித்துப் பார்த்து உரியனவற்றுக்கு பதில் சொல்லி உடனடியாக நீக்கிவிடுவேன். வேறே எதுவும் மொபைல் வழி பார்ப்பதில்லை. என்னோட ப்ளாகுக்கெல்லாமோ அல்லது மற்றவர்கள் பதிவுகளுக்கோ மொபைல் வழி போனதில்லை. அதெல்லாம் தெரியவும் தெரியாது.  (D)  டாட்டா கார்ட்  வைச்சுக்கலை. இணைய இணைப்பு வீட்டில் உள்ள வை ஃபை மூலமே!  ஆகவே ஃபோனை எடுத்தவங்க அதை விற்றுத் தான் ஆகவேண்டும். வேறே வழியே இல்லை.

என்ன ஒரு வருத்தம்னா குடும்பத்து உறுப்பினர்கள் படங்கள், முக்கியமாக எங்கள் பேத்தியின் அவ்வப்போதைய முன்னேற்றங்களைக் காட்டும் படங்கள், (நேத்திக்குக் கூட 4,5 வந்தது) அது பற்றிய வீடியோக்கள் இருந்தன.  அதான் நினைக்க நினைக்க வருத்தமாக இருக்கு. குழந்தை பிறந்ததில் இருந்து ஒன்றரை வருடமாக எடுத்த படங்கள்! :(  ஏதோ ஓர் ஆபத்தைத் தவிர்க்கவே பிள்ளையார் செல்ஃபோனைக் காணாமல் போக வைச்சுட்டாரோனு நினைக்கிறேன். என்னவோ! எடுத்தவங்க நல்லா இருக்கட்டும்! அவ்வளவு தான்! 

Saturday, March 03, 2018

அடுத்தடுத்த இரு மரணங்கள் சொல்லும் செய்திகள்!



ஶ்ரீதேவியின் மரணச் செய்தி கொடுத்த அதிர்ச்சி இன்னும் தீரவில்லை.  பாவப்பட்ட ஜன்மம். பிறருக்காகவே உழைத்தவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் திரை உலகில் கோலோச்சியவர். மர்மமான முறையில் இறந்து விட்டார். அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் அனுபவிக்கவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் விரும்பியதை உண்ண முடிந்ததா என்பதே சந்தேகம்! ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடனே காட்சி அளித்து அனைவரையும் தன் நடிப்பால் மகிழ்வித்து வந்தார். பிறந்த இடம், புகுந்த இடம் இரண்டிலும் ஒதுக்கப்பட்டவர். அவர் மனதில் இதற்கெல்லாம் வேதனைகள் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் இரு பெண்களுக்காகவே வாழ்ந்தார். அதிலும் மூத்த மகளைத் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்க மிகவும் உழைத்தார். வெற்றி பெறும் நேரம் அவர் இவ்வுலகிலேயே இல்லை! :(
*********************************************************************************


காஞ்சி மடத்தின் பீடாதிபதியான ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு  வயதும் ஆகிவிட்டது. உடலும் நோயால் தளர்ந்து விட்டது. எனினும் அவர் தான் நன்றாக இருக்கும் காலத்தில் இருந்தே அடித்தட்டு மக்களுக்காக மிகவும் பாடுபட்டவர். இந்த விஷயத்தில் தன் குருவின் எச்சரிக்கையையும் மீறிச் செயல்பட்டார். அதனாலேயே இருவருக்கும் மனக்கசப்பு வந்து சில நாட்கள் பிரிந்தும் இருந்தார். பின்னர் சமாதானம் செய்யப்பட்டுத் திரும்ப வந்தார். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிப் பேசினாலும் உண்மையான காரணம் அவர் மடத்தின் நியதிகளை, ஆசாரங்களை மீறிக் கடைநிலை மக்களுக்கும் சேவை செய்தது தான் முக்கியக் காரணம்.

ஜாதி வித்தியாசம், மத வித்தியாசம் பார்க்காமல் எல்லோருடனும் நல்லமுறையில் பழகினவர். அயோத்தி பிரச்னையில் ஒரு தீர்வு காண அவரால் இயன்றவரை முயன்றார். அதனாலேயே பல்வேறுவிதமான சங்கடங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளானார். மத்திய, மாநில அரசுகளால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டபோதும் அவர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினவர் இல்லை. எல்லா அவமானங்களையும் பொறுமையாக ஏற்றுக் கொண்டார்.   எங்கோ வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த டாக்டர் பத்ரிநாத் இவர் வேண்டுகோளின்படி இந்தியா வந்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் சங்கர நேத்ராலயா ஆரம்பித்து இப்போது வெற்றிகரமாகச் செயல்படுவதோடு எத்தனையோ கண் மருத்துவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறது.

அதே போல் நுங்கம்பாக்கத்தில் குழந்தைகளுக்கென ஒரு தனி மருத்துவமனையும் ஶ்ரீமடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தாம்பரம்  ஹிந்து மிஷன் மருத்துவமனையும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சேவைகளைச் செய்து வருகிறது.  பள்ளிகள், கல்லூரிகள் போன்றவையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். விளம்பரம் இல்லாமல் சேவைகள் செய்து வருவதால் பலருக்கும் இது புரிவது இல்லை. அதிலும் அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்ததில் இவரைப் போல் மடாதிபதிகளைக் காண்பது அரிது. ஏழைப் பெண்களுக்கும்  தேவையானால் ஆண்களுக்கும் இலவசத் தையல் பயிற்சி அளித்தும் வந்தார்.  இவர் ஆலோசனையின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட "நந்தனார் சேவாஸ்ரமம் ட்ரஸ்ட்" என்னும் அமைப்பின் மூலம் அரியலூர், பெரம்பலூர், கடலூர் போன்ற ஊர்களின் ஏழை இளம்பெண்களுக்காகத் தையல் இயந்திரங்கள் வாங்கிக் கொடுத்துத் தையல் பயிற்சி அளிக்க வைத்து ஊக்கம் கொடுத்தார். பிற்படுத்த மக்களுக்காக அவர்கள் வாழ்வின் தரத்தை உயர்த்த மிகவும் பாடுபட்டார். ஜன் கல்யாண் என்னும் திட்டத்தின் மூலம் இவற்றைச் சேரிகளில் சென்று செயல்படுத்தி வந்தார். இதற்குப் பல எதிர்ப்புகள் இருந்தாலும் அதைக் குறித்துக் கவலைப்படாமல் தன் குறிக்கோளிலே குறியாக இருந்தார்.

மாணவர்கள் உயர்கல்வி பெறவும் உதவிகள் பல செய்தார். ஶ்ரீமடத்திலேயே சிலருக்கு இவர் நடவடிக்கைகள் பிடிக்காமல், "சேரி சாமியார்" என்று அழைத்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மக்களுக்குத் தொண்டு செய்து வந்தார். இவரின் செல்வாக்குத் தென் மாநிலங்களில் மட்டுமில்லாமல் வட மாநிலங்களுக்கும் பரவியது. ஆனாலும் அரசியல்வாதிகளின் திட்டமிட்ட சதிகளை எதிர்கொள்ள முடியாமல் தோற்றுப் போனார்.  தீராப்பழியைச் சுமந்து கொள்ள நேர்ந்தது. என்றாலும் உண்மை பக்தர்கள் அவர் மேல் வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை. அடுத்ததாகப் பொறுப்பேற்கும் விஜயேந்திரர் இவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து பொறுப்பேற்றுக்கொண்டு சரிவரச் செய்ய வேண்டும்.

எவ்வளவு புகழ், செல்வாக்குப் படைத்தவர்கள் ஆனாலும் மரணம் நிச்சயம்! அவர்கள் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் இது! யாரும் நிரந்தரம் அல்ல!  இருக்கும்வரை நல்லதையே நினைப்போம்! நல்லதையே செய்வோம்! நல்லதையே சொல்வோம்!