எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 31, 2018

நடுவில் ஒரு மொக்கை!

இன்னமும் மருந்துகள் எடுத்துக்கொள்வதால் அவற்றின் தாக்கத்தில் காலை எழுந்துக்கவே ஐந்து, ஐந்தரை ஆகி விடுகிறது.ஐப்பசி பிறந்து இத்தனை நாட்கள் ஆகியும்   இன்னமும் இந்த வருஷம் துலாக்காவிரி அபிஷேகத்துக்குத் தங்கக்குடத்தில்  நீர் எடுத்துச் செல்லும் ஆண்டாள் யானையைப் போய்ப் பார்க்கவே முடியவில்லை. நான் எழுந்து கொண்டு வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு இருக்கும்போதே ஆறுமணிக்கெல்லாம் யானை திரும்பிக் கோயிலுக்குப் போய் விடுகிறது. ஒவ்வொரு நாளும் நாளைக்கு, நாளைக்கு எனத் தள்ளிப் போகிறது.




இது ஒரு பிள்ளையார் சதுர்த்திக்கு எடுத்த படம். அதிரடி அரிசி மாவில் கொழுக்கட்டை வராது, விரிந்து விடும் என்று சொன்னதால் படம் எடுத்துப் போட்டிருக்கேன். அரிசி மாவை நான் தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைப்பேன். அரிசியைக் களைந்து வடிகட்டி மிக்சியில் மாவாகத் திரிப்பதில்லை. அரிசியைக் காலையே நன்கு களைந்து ஊற வைத்துவிடுவேன். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு நைசாக அரைத்து விடுவேன்.  வேண்டுமெனில் இன்னும் கொஞ்சம் ஜலம் விட்டுக்கலாம். மிக்சி ஜாரை அலம்பி விடும் நீரே போதும். இந்த மாவைத் தான் உருளியில் கொஞ்சமாய் நீர் விட்டு லேசாக உப்புப் போட்டுக் கிளறி எடுத்துக் கொண்டால் மாவு உருளியில் ஒட்டாமல் வரும். உருளி இல்லை எனில் கடாய் அல்லது அடி கனமான எந்தப் பாத்திரத்திலும் கிளறலாம். பின்னர் சொப்புச் செய்து பூரணத்தை வைத்து மூடிவிட்டு இட்லித் தட்டில் வைத்து எடுத்தால் கொழுக்கட்டை ரெடி!

சாப்பிடலாம் வாங்க


இந்தச் சுட்டியில் போய்ப் பார்த்தால் கொழுக்கட்டை செய்யும் விதம் பத்தி எழுதி இருப்பேன். கோதுமை மாவில் அதுவும் அவித்த கோதுமை மாவில் இது வரை செய்தது இல்லை. இனி ஒரு முறை செய்து பார்க்கணும். மேலும் நான் மாவை அதாவது ஈர அரிசி மாவை உடனடியாகப் பட்சணம் செய்து தீர்த்து விடுவேன். ஆகவே குறைவாகவே மாவு தயார் செய்து கொள்வேன். ஈர அரிசி மாவைக் காய வைத்து அல்லது வறுத்துப் பயன்படுத்தினால் அது என்னமோ சரியா வரதில்லை எனக்கு! அவ்வப்போது தான் தயார் செய்து கொள்கிறேன். மற்றபல பயன்பாடுகளுக்கு அரிசி வாங்கி மாவு அரைத்து வைத்துக் கொள்கிறேன். இடியாப்பமாகச் செய்தால் பிடிக்கிறதில்லை. ஆகவே சேவை தான் அடிக்கடி! முந்தாநாள் கூடச் செய்தேன். அதுவும் அன்றே அரைத்து அன்றே செய்துடுவேன். மாவு மிஞ்சினால் அதில் உளுந்து அரைத்துப் போட்டு தோசை அல்லது சாப்பிட ஏதேனும் வேண்டி இருந்தால் தட்டை, முறுக்கு, தேன்குழல்னு பண்ணிடுவேன்.   

Monday, October 29, 2018

ஸ்ரீலலிதையின் சோபனம்! சிந்தாமணி க்ருஹ வர்ணனை!

பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா
ஸுகாராத்யா சுபகரீ சோனபா-ஸுலபாகதி:

என்று கூறும் லலிதா சஹஸ்ரநாமம். மொழி ஸ்வரூபமாய் இருப்பவள் அம்பிகை. 51 மாத்ருகா அக்ஷரங்களே அம்பிகையின் வடிவு என்பார்கள். ஸ்ரீசக்தி பீடங்களும் அந்த அந்த அக்ஷரங்களுக்கு ஏற்ப 51 இருக்கின்றன. சொல்லையும் பொருளையும் போல் பிரிக்கமுடியாமல் சிவசக்தி ஐக்கியம் இருப்பதை ஏற்கெனவே பார்த்தோம். பட்டரோ, மன்மதனின் தவத்தைக் கலைத்த அம்பிகையை மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதவள் என்கின்றார்.

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே!” 

அதாவது சொல்லுக்கும், எண்ணத்துக்கும் எட்டாத அம்பிகையின் திருவுருவானது இங்கே பக்தர்களின் தீவிர வழிபாட்டால் அவர்களுடைய கண்களுக்கும் வழிபாடுகளுக்கும் வெளிப்பட்டு நிற்கின்றது.

சிவப்ரியா சிவபார சிஷ்டேஷ்டா சிஷ்ட-பூஜிதா
அப்ரமேயா ஸ்வப்ரகாசா மனோவாசாமகோசரா”

என்னும் சஹஸ்ரநாமத்தின் துதியின் படி மனதினாலேயே அம்பிகையைத் துதித்து வழிபடுவர்களுக்கு அவள் அருள் புரிவாள். நம் பேரின்பவாழ்வுக்குப் பற்றுக் கோடு அம்பிகை. அவளைக் குறித்த எண்ணங்களை மனதில் விரும்பித் தியானிக்கும்படியோ, வாயினால் இவ்வாறு இருக்கும் என்றோ உரைக்க முடியாது. “பாநுமண்டல-மத்யஸ்தா பைரவீ பகமாலினீ” என சஹஸ்ரநாமத்தில் கூறுவதற்கேற்ப சூரியமண்டலத்தில் நட்டநடுவே கோடி சூரியப் பிரகாசத்தோடு இருக்கிறாள் அம்பிகை.

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே!”

யோகியான ஈசன் மனதில் இடம் பிடித்த அம்பிகை அதன் மூலம் ஒரு குழந்தையையும் பெற்றதையும் பட்டர் இவ்வாறு கூறுகிறார்.

ககனமும் வானும் புவனமும் காணவிற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும்
செம்முகனும் முந்நான்கிருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ வல்லி நீ செய்த வல்லபமே!” 

என்கிறார் பட்டர். வல்லபம் என்பது இங்கே வலிமை பொருந்திய, அறிவாற்றல் பொருந்திய என்ற பொருளில் வரும். ஞாநமே குழந்தையாகப் பிறந்த ஷண்முகனை இங்கே வல்லபம் என்கிறார் பட்டர்.

சிவசக்தியின் ஐக்கியத்திலே பிறந்த இந்தக் குழந்தை மகா ஒளி பொருந்திய குழந்தை, வல்லமை பொருந்திய குமாரன். எவராலும் வெற்றி கொள்ளமுடியாத அதிசூரன். இவன் வெறும் சக்தி மட்டும் அல்ல, அறிவுச் சக்தி, ஞாந சக்தி, அருள் சக்தி. தகப்பனுக்கே உபதேசம் பண்ணிய தகப்பன் சாமி. குருநாதன். வஸ்துவாகிய ஈசனுக்குள்ளேயும், அதன் சக்தியாகிய அம்பிகைக்குள்ளேயும் ஒன்றாக இருந்த அன்பானது இருவராகப் பிரிந்து மீண்டும் ஒன்றாய்க்கலந்து அதிலிருந்து தோன்றிய அற்புத குமாரன் ஷண்முகன். ஈசனால் தாரகனையும், சூரனையும் வதைக்க முடியாதா என்ன?? என்றாலும் அவர் தன்னைவிடத் தன் குமாரன் அதிபுத்திசாலி, மஹாவீரன் என்று காட்டாமல் காட்டினார். மனித இயல்பும் அதுதானே?? சத் எனப்படும் ஈசனும், சித் எனப்படும் அம்பிகையும் காட்டி உணர்த்திய ஆநந்தம், சச்சிதாநந்தப் பரம்பொருள் ஷண்முகன். இவரையே நடுவில் வைத்து ஒரு பக்கம் ஈசனும், மற்றொரு பக்கம் அம்பிகையும் இருக்கும் கோலத்தில் நாம் எல்லாச் சிவாலயங்களிலும் உற்சவ மூர்த்திகளாய்ப் பிரதிஷ்டை செய்திருக்கிறோம். இவரை சோமாஸ்கந்தர் என அழைக்கிறோம். ஸஹ+உமா+ஸ்கந்தர் என்பதே சோமாஸ்கந்தர் என்று ஆகிவிட்டது. லலிதா சஹஸ்ரநாமம், அம்பிகையை, “குமார கணநாதாம்பா” எனப் போற்றும். அந்தக் குமாரன் பிறந்து என்ன நடக்கிறது?? அனைவருக்கும் நிம்மதி பிறக்கிறது. தேவசேநாபதியான அவன் சூரனை வதைக்கிறான். வதைக்கிறான் என்று சொல்வதை விடவும், அவனை மன்னித்து ஆட்கொள்ளுகிறான். 



குமாரனின் ராஜ்யத்தில் பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்றெல்லாம் இல்லை. மன்னிப்பு மட்டுமே. குமரனை வணங்குபவர்களுக்கு அழியாத ஆநந்தத்தைத் தருவான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் மயிலாகவும், கோழியாகவும் மாற்றிவிடுகிறான் சூரனை. ஞானகங்கையாம் சரவணப்பொய்கையில் மூழ்கிய சூரன் அதில் தானும் கலந்து பிரணவத்தை நாதமாகவும், விந்து வடிவில் தோகை விரித்து ஆடிப் பிரணவ ஸ்வரூபத்தைக் காட்டியும் முக்தியைப் பெறுகிறான். இந்த ஓங்கார நாதமும், விந்துவும் சேர்ந்து வரும் கலையே சக்திவேல். கொக்கு அறுத்த கோ என்றும் கூவுகிறான் சூரன். கோழி கொக்கரக்கோ எனக் கூவும் அல்லவா?? கொக்கு என்னும் மாயையாகிய மாமரமாய் வந்த சூரனை அறுத்த கோமகன் ஷண்முகன்.அதையே கொக்கரக்கோ எனக்கூவிக் கோழி தன் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்துகிறது. மயிலோ எனில் பிரணவ ஸ்வரூபத்திலேயே தோகையை விரித்துக்கொண்டு ஆநந்தம் பொங்க ஆடுகிறது. மழைக்காலத்து மயிலின் ஆட்டம் இருளை நினைவு படுத்துகிறது எனில் விடிகாலை கூவும் கோழியின் குரல் உதயத்தை நினைவூட்டும். இருளிலிருந்து நம்மை வெளிச்சத்துக்கு இட்டுச் செல்லும் குரு ஷண்முகன். இனி ஸ்ரீலலிதையின் சோபனத்தில் ஷண்முகன் பிறப்பையும் அசுரர்கள் வதம் பற்றியும் பார்க்கலாமா??



“அம்மன் அனுக்ஞையால் மதனன் பூச்சரத்தாலே
அடித்தான் பார்வதி தேவி பரமேசரை
வந்து விவாஹஞ் செய்து ரமித்தார் பரமசிவன்
குமாரரும் உண்டானார் அஸுராளை வதைத்த
கோலவேலருக்குச் சோபனம் சோபனம்
தேவசேனாபதி தெய்வயானை மணந்து 
ஸ்ரீபுரந்தன்னில் வந்தார்- சோபனம் சோபனம்.

ஸ்ரீபுரமென்றதைக் கேட்டது மகஸ்தியர்
தவமுனி ஹயக்ரீவரைப் பார்த்து
ஸ்ரீபுரமென்பதை விஸ்தாரமாகவே
சொல்லவேண்டும் தயவாக வென்றார்
அன்புடன் வார்த்தையைக் கேட்டு ஹயக்ரீவர்
அகஸ்திய முனிவரைப் பார்த்துரைப்பார்
இன்பங்களுண்டாக தேவியின் நகரத்தை
இனிச் சொல்வோம் கேளென்றார்- சோபனம் சோபனம்

பண்டாஸுரனை வதைத்த ஸந்தோஷத்தால்
பரமேச்வரிக்கும் காமேசருக்கும் 
தேவசேநாபதியும் தேவர்களும் கூடி
ஸ்ரீ லலிதாம்பாள் கொலுவிருக்க
ஈச்வரியாளுக்குச் சிந்தாமணிக் கிருஹம்
விச்வகர்மாவை அமைக்கச் சொன்னார்
மகிழ்ந்து விச்வகர்மா இவர்கள் சொன்னபடிக்குப்
புகழ் பெறவே செய்தார் –சோபனம் சோபனம்.


அமிர்தக் கடலின் மத்தியில் கற்பகவிருஷங்கள் நிறைந்த தோப்பில் உள்ள ரத்னத் தீவில் கடம்பமரங்கள் நிறைந்த உத்தியானவனம் (நந்தவனம்) உள்ள சிந்தாமணி க்ருஹத்தில் பரம மங்கள வடிவில் அமைந்த சிம்மாஸனத்தில் அம்பிகை காமேசருடன் கூடி வீற்றிருக்கிறாள். இது தேவியின் வாசஸ்தலம் என்பார்கள். சிந்தாமணி கிருஹம் என்பார்கள் இதை. இந்தச் சிந்தாமணி கிருஹத்தைத் தான் விஸ்வகர்மா அமைத்துக் கொடுத்தார். அண்டங்களுக்கும், பிரம்மாண்டங்களுக்கும் அப்பால் அமிருத ஸாகரத்தின் மத்தியில் உள்ள ரத்தினத் தீவில் உள்ளது. இருபத்தைந்து வெளிப் பிராகாரங்கள். முதலில் இரும்பு எஃகு, செம்பு, வெள்ளீயம், பித்தளை, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம், புஷ்பராகம், பத்மராகம்,கோமேதகம், வஜ்ரம், வைடூரியம், இந்திரநீலம், முத்து, மரகதம், பவளம், நவரத்தினம், நானா ரத்தினம் இவற்றால் அமைந்தவை. இது தவிர மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய மூன்று தத்துவங்களாலும், சூரிய, சந்திர, மன்மதன் ஆகியோரின் தேஜஸ்ஸாலும் அமைந்தவை. இந்த 25 பிராகாரங்களில் எட்டாவது பிராகாரத்தில் கதம்பவனம். அந்தக் கதம்பவனம் மந்திரிணியான சியாமளையின் வாசஸ்தலம்.



பதினைந்தாவது பிராகாரங்களில் அஷ்ட்திக்பாலகர்களும், பதினாறாம் பிராஹாரத்தில் சேநாநாயகியான தண்டினியான வாராஹியும்,வசிப்பார்கள்.



இவளோடு சேர்ந்து சியாமளைக்கும் இங்கே ஒரு கிருஹம் உண்டு. “மஹா சதுஷ்ஷ்ஷ்டி கோடி-யோகினீ-கண ஸேவிதா”பதினேழாவதில் யோகினிகளும், பதினெட்டில் மஹாவிஷ்ணுவும், பத்தொன்பதில் ஈசானனும், இருபதில் சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும் தாரா தேவியும், இருபத்தொன்றில் வாருணியும், இருபத்திரண்டில் அஹங்காரக் கோட்டையில் குருகுல்லாதேவியும், “குருகுல்லா குலேஸ்வரீ” இருபத்துமூன்றில் சூரியப் பிராகாரத்தில் மார்த்தாண்ட பைரவரும், “மார்த்தாண்ட- பைரவாத்யா மந்த்ரிணீ-ந்யஸ்த-ராஜ்யதா”இருபத்து நான்கில் சந்திரனும், இருபத்தைந்தாவது சிருங்கார வனத்தில் மன்மதனும் இருக்கின்றனர். இதற்குள்ளேயே மகாபத்ம வனமும் கற்பக விருக்ஷங்களால் ஆன தோப்பும் உள்ளன. அதன் நடுவில் சிந்தாமணிக் கிருஹம். அக்கினி மூலையில் அம்பாள் தோன்றிய சிதக்கினிக் குண்டமும், கிழக்குத் துவாரத்தின் இருபக்கமும் மந்த்ரிணியும், தண்டினியும் இருக்கும் கிருஹங்களும் உள்ளன. நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவல் இருக்க, நவாவரணங்களுடன் கூடிய ஸ்ரீ சக்கரம் காக்ஷி கொடுக்கிறது. ஸ்ரீசக்கரத்தின் நடுவில் சர்வாநந்தமயமான பிந்து பீடத்தில் பஞ்சப் பிரம்மாஸனத்தில் ஸதாசிவனுடைய மடியில் மஹாதிரிபுரஸுந்தரியான லலிதா காமேஸ்வரி வீற்றிருக்கிறாள். "பஞ்ச பேரேதாஸனாஸீனா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ "

இந்தப் பஞ்சப் பிரம்மாஸனம் என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்களைக் கால்களாகவும், ஸதாசிவனுடைய மடியைப் பலகையாயும் கொண்ட கட்டில் ஆகும். இதுவே அ+உ+ம= ஓம் என்பதைக் குறிக்கும் அர்த்த, மாத்திரை, பிந்து வடிவான ஓங்கார மஞ்சம். “மஹா காமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரி” என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். அபிராமி பட்டர் அம்பிகையின் இந்தக் கோலத்தை வர்ணிக்கையில்

“பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்தூர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்திருந்தவளே! “

என்கிறார். இத்தகைய அம்பிகையை,

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு 
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

இது நாம் ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? அதே போல் இன்னொரு அந்தாதியிலும் கூறுவார்:

“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’

என்றும் கூறுகிறார்.

சிலம்பணிந்த சிறிய திருவடிகளை உடைய அம்பிகை தன் கைகளில் பாசமும், அங்குசமும் கொண்டு ஐந்து மலர்ப்பாணங்களையும் கையில் ஏந்தி, சிந்தூரம் போன்ற சிவந்த மேனியோடு திரிபுரசுந்தரியாக வீற்றிருக்கிறாள். அவளே பராசக்தியின் ஐந்தாவது சக்தியான அநுகிரஹ சக்தியான பஞ்சமியாகவும், “பஞ்சமீ பஞ்சபூதேசீ” கருநிறக் காளியாகவும், கோபம் கொண்ட சண்டிகாவாகவும்,” மஹேஸ்வரீ, மஹாகாலி மஹாக்ராஸா மஹாசனா!அபர்ணா சண்டிகா சண்டமுண்டாசுர நிஷூதநீ” சூரிய, சந்திர மண்டலங்களில் வீற்றிருக்கும் மண்டலியாகவும் காட்சி அளிக்கிறாள். “பாநு மண்டல மத்யஸ்தா” என லலிதா சஹஸ்ரநாமாவளி கூறும். இனி லலிதாம்பாளின் ஸ்ரீசக்ர வர்ணனையின் சோபனப்பாடலைக் காண்போம். இந்த வர்ணனை மட்டும் நடுவிலிருந்து போடாமல் பாடல் எண் 166ல் இருந்து பாடல் எண் 188 வரையும் முழுவதும் கொடுக்கப் படும்.

தரணியில் ஒன்பதும் சமுத்திரத்தில் ஏழும்
தேவிக்குப் பதிநாறு ஸ்ரீபுரங்கள்
மேருகிரியிலொரு ஸ்ரீபுரமுண்டதை
முன்னாலே உமக்கு நான் சொல்லுகிறேன்
மூவராலும் ஆதிசேஷராலும் சொல்லி 
முடியாது அம்மன்புர மஹியை
சாவதானமாகக் கேட்கவேண்டுமிதை
தன்யனே சொல்லுவேன் – சோபனம் சோபனம்

ஒன்றாவது கோட்டை இரும்பாக்குமதற்கு
உயரம் நாநூறு யோஜனைகள் உண்டு
நன்றாக நூறு யோஜனை அகலங்காண்
நான்குபுறத்திலும் வாசலுண்டு
வாசல்கள் தோறும் கோபுரமுண்டு அதற்கு
வரியாக தட்டுக்கள் இருபத்தஞ்சு
யோஜனைக்கு ஒரு தட்டு வீதங்கணக்கு
உச்சி மகுடம் மூன்று – சோபனம் சோபனம்

இந்த வாசல் போலே நாலு வாசலுக்கும்
இது போலே கோபுரத் தட்டுமுண்டு
இந்தக் கோட்டை வாசல் கதவு கோபுரமுதல்
எல்லாம் இரும்புப் பணி இதைப்போல
எந்தக் கோட்டைகளினி சொல்லப் போகின்றோமோ
அந்தக் கோட்டை இதுபோலகஸ்தியா
இந்தக் கோட்டை கழிந்தபுறமுள்ளது
ஏழுயோஜனையுண்டு சோபனம் சோபனம்

ஏழு யோஜனையுள்ள நடு இடைவெளிதன்னில்
எல்லா மரங்கலும் நிறைந்திருக்கும்
தோழர்களே ஏழு யோஜனையின் விஸ்தாரம்
சொல்லப்போகிறோம் கோட்டை இடைநடுவில்
காளியுங்காளரும் சக்தியுடனே 
கால சக்ராசனத்தில் இருந்து
லலிதையுடைய நாமஞ்ஜபித்து ஒன்றாங் கோட்டை
ரக்ஷிக்கிறாள் என்றும் சோபனம் சோபனம்

வெண்கலக் கோட்டையில் வஸந்தருது காவல்
வேலியும்கற்பக விருக்ஷமாகும்
தங்கச் செம்புக் கோட்டையில் வேலி ஹரிசந்தனம்
சுசியான கிரீஷ்மருது காவல்
ஈயக் கோட்டையின் வேலி சந்தன விருக்ஷங்கள்
எங்குஞ் சுற்றிக் காவல் வர்ஷருது
முன்னாலிரும்புக்கோட்டையின் வேலி மந்தாரை
வெளுத்த சரத்ருது காவல் –சோபனம் சோபனம்

பஞ்சலோகக் கோட்டைக்குப் பாரிஜாதம் வேலி
ஹேமந்தருது காவல் காத தூரம்
பஞ்சப்பொன்கோட்டைக்கும் மந்திரிணி முதலான
சக்திகள் கிருஹம் சிசரருது காவல்
பிக்ஷூரகத்து சித்தர்களும் முத்திப்
பெண்குகளுங்கூடி இருக்கின்றார்கள்
பிக்ஷூரம் கழிந்தப்புரஞ்சாரணர்
பத்மராகக் கிருஹம் சோபனம் சோபனம்

அழகிய கந்தர்வாள் வைரக் கிரஹந்தன்னில்
அதற்குப்பின் யோகிகள் வஜ்ஜிரக்கிருஹம்
புதுநாகரத்னமும் வைடூர்யத்தாலும்
பின்னிந்திரக் கல்லாலுமுள்ள கிருஹம்
முத்துக்கள் சூழும்மரகதத்தால் கிருஹம்
மின்போல் வராகிக்கும் நாலு கிருஹம்
சுத்தமான கிருஹம் பிரம்மாவுடையது
செம்பவழத்தாலே – சோபனம் சோபனம்

Saturday, October 27, 2018

ஸ்ரீலலிதையின் சோபனம்! கந்தன் பிறப்பு!

பக்திமார்க்கத்தில் இருந்து கொஞ்சம் உயர்ந்தது யோக மார்க்கம் இல்லையா?? அந்த யோக மார்க்கத்தில் தான் இந்த ஸ்ரீவித்யா வழிபாடுகள் வருகின்றன. நம்முடைய பிராணனின் மூலம் எதுவெனக் கண்டு பிடித்து அந்த மூலத்தோடு நாம் ஒன்று சேர்கிற வழியே நம்முடைய பிறப்பின் தாத்பரியம். எனினும் இது நமக்குப் புரியப் பல ஜன்மங்கள் ஆகின்றன. நம் பூர்வ ஜன்மக் கர்ம வினையைப் பொறுத்து இந்த ஜன்மத்தில் ஆன்மீகத்தில் நாம் முன்னேறுவது நடக்கும். நாம் நம்முடைய உறங்கும் பிராணசக்தியை மூலாதாரத்தில் இருப்பதைத் தட்டி எழுப்பவேண்டும். அதை மேலே மேலே கொண்டு வந்து சஹஸ்ராரத்தை அடையவேண்டும். சச்சிதாநந்தத்தில் மூழ்கவேண்டும். அதற்கான யோக சாதனைகளில் இந்த வித்யா வழிபாட்டு முறையும் ஒன்றாக இருந்து வருகிறது. சஹஸ்ராரத்தை அடைந்துவிட்டால் யோகத்தின் நிறைவு. யோகத்தின் நிறைவில் எந்தவிதமான அசைவுகளும் இல்லாமல் நம்மை மறந்த நிலையில் இருப்போம். நம்மிடம் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை போன்றவை நீங்க வேண்டும். ஆநந்தம் பிறக்கவேண்டும்.



பரப்பிரும்ம தத்துவத்தை ராதாகிருஷ்ணனாய்ப் பார்த்தால் அதுவும் ஆநந்தம், ஆநந்தம், ஆநந்தமே தான். ஆநந்தம் வந்தால் சிரிப்போம். ராதையின் செளந்தரியமும், கிருஷ்ணனின் ப்ரேமையும் ஆநந்தம். அதற்கு உயிரும், உணர்வும் வேண்டுமல்லவா?? அந்த உயிரும், உணர்வும், அறிவுமாக இருப்பவளே அம்பிகை. லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை, “ சித்கலாநந்த-கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ” என்று கூறும். கல்பகோடி காலமாய், இடைவிடாமல் தன் தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறாள் அம்பிகை. அவளை வழிபடுபவர்களுக்கு இனிப் பிறவி இல்லை. இதை பட்டர் எப்படிச் சொல்கிறார் என்றால்,

உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்தழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே!”

என்கிறார். நம் கர்மத்தால் பிறவி எடுக்கிறோம். அந்தப் பிறவியில் நாம் நம் முற்பிறவிக் கர்மமும், பாவமும் போகும்படியாக அம்பிகையை வணங்கினால், அவள் தாமரைத் திருவடிகளில் சரண் அடைந்தால், அவள் கருணை வெள்ளம் பொங்கி வந்து நம் ஆணவமாகிய அழுக்கை நீக்கும். மாயையிலிருந்து விடுபடுவோம். அவளே முக்திரூபிணீ. என்றாலும் அம்பிகை தன் பர்த்தாவிற்கே முதல் பெருமையை அளிக்கிறாள். காமேசரை வேண்டியே அஸ்திரம் பெறுகிறாள். இங்கே அவள் சக்தியாக இருந்தாலும் தன்னை வெளிப்படுத்தாமல் ஈசனிடம் ஒன்றிப் போகிறாள். உள்ளே இருந்து இயக்குவது அவளாகவே இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறாள். இதுவே சிவசக்தி ஐக்கியம்.

நிலவிலிருந்து ஒளியையும், பூவிலிருந்து சுகந்தத்தையும், தீபத்திலிருந்து பிரகாசத்தையும் எப்படிப் பிரிக்கவே முடியாதோ, அப்படி இவர்களையும் பிரிக்கவே முடியாது. சொல்லும், பொருளும் இவர்களே. இதையே அபிராமி பட்டர்,

சொல்லும்பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும்அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!”

என்கிறார். சொல்லில் இருந்து பொருளை எவ்வாறு தனியாய்ப் பிரிக்கவே முடியாதோ அவ்வாறே அம்மையப்பனையும் பிரிக்கவே முடியாது. “பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா” என்று லலிதா சஹஸ்ரநாமம் இதைக் கூறுகிறது. காமேசரிடம் அஸ்திரம் பெற்ற அம்பிகை பண்டாஸுரனை வதைக்கிறாள்.

“கண்டகன் பண்டாஸுரனை வதைக்கவென்றே
காமேசர் அஸ்திரங்கொடுத்தார்
வாங்கிக்கொண்டு அம்மன் காமேசர் அஸ்திரத்தை
மண்டலாகாரமாய் வில் வளைத்துக்
கோடி சூரியன் போன்ற காமேசர் பாணத்தைக்
கோதண்டத்தில் வைத்து மந்திரித்து
வேடிக்கையாகவே காது பரியந்தம்
விசையாய் இழுத்துவிட்டாள்-சோபனம், சோபனம்.

தேவி பிரயோகித்த அஸ்திரந்தானப்போ
தேவேந்திரன் வஜ்ஜிராயுதம் தடிபோல
தாவிப் பண்டாஸுரன் மார்பிலே பாய்ந்தது
தரணியிலே விழுந்து உயிரைவிட்டான்
அஸ்திரமுடையாளின் அக்கினி ஜ்வாலையாலே
அவனுடபுரங்களும் வெண்ணீராச்சு
அஸ்தமனத்தில் பண்டாஸுரனை வதைத்து
அம்மன் ஜயங்கொண்டாள்-சோபனம் சோபனம்

புஷ்பம் பன்னீர்களைச் சொரியவே தேவர்கள்
புகழ்ந்துஸகிகள் வெண்சாமரம் வீச
அப்பொழுது தேவி சக்திசேனையுடன்
ஆலயத்தை அம்மன் வந்தடைந்தாள்
ஆயுதங்களால் அடிபட்ட சக்திகள்
காயத்தை அம்ருதக் கண்ணால் போக்கினாள்
நோய்கள் போனதுபோல ஸுகம் பெற்றார் பூமியும்
புனிதமாய் செழித்தது –சோபனம் சோபனம்

ஆயிற்று. தேவியின் அவதாரக் காரியம் நிறைவேறியாச்சு . அடுத்துத் தேவர்கள் கேட்டது மன்மதனை எழுப்பவேண்டுமென்று. ஆம், அவன் சாம்பலின் மூலமே பண்டாஸுரன் வந்தானல்லவா? எரிந்த மன்மதனை நினைத்து நினைத்து அழுது வேதனைப்படும் ரதியின் மனச் சமாதானத்துக்கு மட்டுமா?? இல்லை, இல்லை, மன்மதன் இல்லை எனில் உலகில் சிருஷ்டி காரியம் எப்படி நடக்கும்?? என்றால் ஏன் ஈசன் எரித்தார்?? யோகத்தில் இருந்த ஈசன் மீண்டும் சிருஷ்டி புதிதாய்த் தொடங்க வேண்டியே அழித்தார். இப்போது அம்பிகை அருளால் மீண்டும் அனைத்தும் ஆரம்பிக்கவேண்டும் அல்லவா? மன்மதனை எழுப்பித் தரச்சொல்லிக் கேட்டார்கள் மும்மூர்த்திகள் முதல் முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும். மேலும் சூரனையும் அழிக்கவேண்டுமே.

“ஹர –நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவநெளஷதி” என்று கூறுகிறது லலிதா சஹஸ்ரநாமம். ஹரனாகிய ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த அக்னியால் எரிக்கப் பட்ட காமனைப் பிழைக்க வைத்த சஞ்ஜீவனி மருந்தைப் போன்றவள் அம்பிகை எனப் பொருளில் வரும் இந்த வரிகளில் அம்பிகையானவள் காமனுக்கு மட்டுமன்றி நமக்கும் ஒளஷதமாய்ச் செயல்படுவதை அறிந்து கொள்கிறோம். பராசக்தியானவள் ஈசனின் உடலில் பாதி சரீரம் எடுத்துக்கொண்டிருந்தாலும் உலகனைத்திற்கும் மருந்தாய் விளங்குகிறாள். விஷத்தை உண்டும் அவள் அருளால் ஈசன் பிழைத்து நீலகண்டனாக ஆகிய விந்தையையும் அறிவோம் அல்லவா?? “நஞ்சு அமுதாக்கிய அம்பிகை” என்கிறார் பட்டர் இந்தத் திருவிளையாடலை.


“பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மநோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!”

இங்கே முப்புரை என்பதற்குப் பல பொருட்களை அறிந்து கொள்கிறோம். புரை என்றால் மூத்தவள் என்ற பொருளுக்கிணங்க, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், மூன்று நாடிகளான பிங்கலை, இடைகலை, சுழுமுனை மூன்றிலும் இருப்பவள், மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றில் உறைபவள். “மஹாபுத்திர்-மஹாஸித்திர்-மஹாயோகீஸ்வரேஸ்வரீ” என்று கூறும் லலிதா சஹஸ்ரநாமம். ஆகவே அதனாலும் இவள் முப்புரை அல்லது திரிபுரை. மேலும் மூன்று தேவர்கள், மூன்று மறைகள், மூன்று அக்னி, மூன்று சக்தி, மூன்று ஸ்வரங்கள், மூன்று உலகங்கள், மூன்று நகரங்கள் என அனைத்திலும் மூன்று பிரிவுகளைக் கொண்டவளாய் இருப்பதையும் முன்னரே பார்த்தோம். அதேபோல் சந்திரகண்டம், சூர்யகண்டம், அக்னிகண்டம் என்னும் மூன்று பிரிவையுடைய சக்கரத்துக்கும் தலைவியாக இருக்கிறாள். நம் மனத்தை ஞாந நிலைக்கு எழுப்பும் மநோன்மணியாக இருக்கிறாள்.

அத்தகைய சக்தி வாய்ந்த அம்பிகை இப்போது உலகு உய்யும் பொருட்டு காமனைப் பிழைக்க வைக்கிறாள். எதற்கு?? யோகத்தில் ஆழ்ந்திருக்கிறான் ஈசன். காமனை எரித்துவிட்டு காமதகனராய்ச் சர்வ சக்தியும் ஒடுங்கிய வண்ணம் காட்சி அளிக்கிறான். அவன் கண்களை விழித்து அம்பிகையை நோக்கினால் அன்றோ, குமாரன் பிறப்பான்?? குமாரன் பிறந்தால் அன்றோ மிச்சம் இருக்கும் அசுரக் குலமும் அழியும்?? குமாரன் என்றால் கந்தன் ஒருவனே. அவனை மட்டுமே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது. அத்தகைய கந்தனைப் பிறப்பிக்கும் பொருட்டு அம்பிகை மன்மதனை எழுப்புகிறாள். வியப்பைத் தரும் திருவுருவை உடைய அம்பிகை மன்மதனை எழுப்பி அதன் மூலம் சிவனது புத்தியை வெற்றி கொண்டதை இவ்வாறு கூறுகிறார்.

“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமான தபசயமாக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே!”

தாமரை மலர்களால் துதிக்கப் பெறும் திவ்ய செளந்தரியமான அழகை உடைய அம்பிகை மன்மதன் மற்றவர்களைத் தன் மலர்க்கணைகளுக்கு ஆளாக்கி அதன் மூலம் பெற்ற வெற்றியை எல்லாம் தோல்வி அடையும்படி தன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்த ஈசனின் மனமும் மாறும்படியாக அவன் மனமும் குழையும்படியாக மீண்டும் மன்மதனை உயிர்ப்பித்ததோடு அல்லாமல், ஈசனின் மனத்தையும், புத்தியையும் ஆட்கொண்டு, உடலிலும் இடம் பெறுகிறாள். மன்மதனை எழுப்பச் சொல்லி ஸ்ரீலலிதையிடம் தேவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

“இந்த ரதியுடைய கணவன் மன்மதனை
எழுப்பித் தந்து எங்கள் மனங்குளிர
எவ்விதமாவது தயவு செய்து ஈசரும்
ஈச்வரியைக் கூடி சுப்ரமண்யர்
பிறந்து தாருகன் முதல் அஸுரர்களை வதைத்ததால்
பிறகு சங்கடமில்லை எங்களுக்கு
கூடியே தேவர்கள் எல்லோருங்கைகளைக்
கும்பிட்டு நின்றார்கள் –சோபனம், சோபனம்.”

கண்டவுடனே ரதிதேவியை அம்மன்
காமேசர் முகத்தை ஆதரவாய்ப் பார்த்தாள்
உண்டாய்விட்டான் மதன் வஜ்ஜிரதேஹத்துடன்
உடனே தாயாரை நமஸ்கரித்தான்
அனுகிரஹித்தாள் தேவி மன்மதனுக்கு
ஆருமினியவனை ஜயிக்காமல்
வானவரும் இனி ஜயிக்கமாட்டாரென்று
வரமுங்கொடுத்துச் சொல்லுவாள்- சோபனம் சோபனம்

குழந்தாய் உனக்குப் பயமில்லை இனிமேல் 
கூட்டிவை பார்வதியுடன் ஈசரை
தழுதழுத்துன்னுட பாணத்தால் சங்கரர்
தானே விவாஹஞ்செய்வார் பார்வதியை
ஒருவர் கண்ணுக்கும் இனி அகப்பட மாட்டாய்
உன்னைத் தூஷித்தபேர் அண்ணா கள்ளர்
சற்றும் பயமில்லை நாமிருக்கின்றோமென்று
சங்கரி யனுப்பினாள் –சோபனம் சோபனம்.

மன்மதனுக்கு வரம் கொடுத்து அவனை அனுப்பி வைக்கிறாள் அம்பிகை. ஈசனும், ஈச்வரியும் கூடி ஸ்கந்தன் அவதாரம் ஏற்படுகிறது.  


ஷண்முக நாயகன் தோன்றிடுவான் – சிவ
சத்குரு நாதன் தோன்றிடுவான்
கண்களால் கண்டு போற்றிடுவோம் –கொடும்
காலத்தைக் காலால் வென்றிடுவோம்

"நாதபிந்து கலாதீ நமோ நம!" என்று கூறுவார் அருணகிரிநாதர். நாதமும் பிந்துவும் சேர்ந்ததால் தோன்றிய கலையே ஷண்முகன். சிவசக்தி ஐக்கியத்தின் ஸ்வரூபமே ஷண்முகன். ஷண்முகனின் மந்திரமாகிய "சரவணபவ" என்னும் ஆறெழுத்தும் நம் உடலின் ஆறு சக்கரங்களையும் குறிக்கும். உயிர்களுக்குப்பற்றுக்கோடாக விளங்குபவன் கந்தன். அனைத்துக்கடவுளரின் ஆற்றலும், சக்தியும் திரண்டு வந்ததால் கந்தன் என்ற பெயர் பெற்றான் என்றாலும் நம் ஆன்மாவைக் கட்டிவைக்கும் சக்தியான கந்துவும் அவனிடமே இருப்பதாலும் கந்தன் என்று கூறலாம்.

Friday, October 26, 2018

ஸ்ரீலலிதையின் சோபனம் தொடர்ச்சி அம்பிகையின் பெருமை!

சிச்சக்திச் -சேதனா-ரூபா ஜடசக்திர் ஜடாத்மிகா" என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். மேலும் அம்பிகையின் கண்களை "வாமநயனா" என்றும் கூறும். இன்னொரு இடத்தில் "வாமகேசீ" என்றும் கூறும். வாமம் என்றால் இடப்பக்கம் என்ற பொருள் மட்டுமல்லாமல் அழகானது, வடிவானது என்ற பொருளிலும் வரும். வலப்பக்கம் இடப்பக்கத்தை விடவும் அதிக பலத்தோடும் திறமையோடும் இருப்பதால், (கவனிச்சுப் பார்த்தவங்க புரிஞ்சுக்கலாம், வலக்கையைவிடவும் இடக்கைச் சுற்றளவு கொஞ்சம் குறைஞ்சே இருக்கும்) வலப்பக்கம் தக்ஷிண பாகம் என்று சொல்லப் படும். அந்த வாமபாகத்தில் இருக்கும் அம்பிகைதான் ஜடப்பொருட்களையும் உயிருள்ளதாய் சக்தி உள்ளதாய் மாற்றுகிறாள். இன்னும் சொல்லப் போனால் சிவனுக்கே சக்தியை அளிக்கிறாள். அம்பிகை தான் சைதன்ய குஸுமம் எனவும் அழைக்கப் படுகிறாள். லலிதா சஹஸ்ரநாமம், "சைதன்யார்க்கய-ஸமாராத்தயா சைதன்ய-குஸுமப்ரியா" என்று கூறும். அழகான தமிழில், ஞாநப்பூங்கோதையான அம்பாள் என்று கூறலாம்.

பெண்ணுக்கு உரிமை இல்லை என்பவர்கள் கவனிக்கணும். ஈசன் பதி, அம்பாள் பத்னி என்பதிலும் அம்பாளின் சக்தியால்தான் ஈசன் அசைவே ஏற்படுகிறது. அதாவது அம்பிகையானவள் ஆட்டி வைக்கிறாள். ஈசன் ஆடுகிறார். இதைத் தான் பெண்டாட்டி பேச்சுக்கு ஆடறான் பாருனு சொல்லி இருக்கலாமோ?? நம் உடலின் இடப்பாகத்தில் இருக்கும் இதயம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சக்தியைத் தருகிறது. ஈசனின் அந்த வாமபாகத்தில் இருப்பவள் சக்திதானே? ஆனால் ஒரு விஷயம் யோசித்தோமானால் வலக்கையின் வசதியும், செளகரியமும், வலக்காலின் வசதியும், செளகரியமும் இடக்கை, காலுக்கு வருவதில்லை அல்லவா?? இங்கே தான் அம்பிகை தன்னை அடக்கிக் கொண்டு தான் ஈசனுக்கு அடங்கியவள் என்பதை நிரூபிக்கிறாள். சக்தி என்னவோ தருவது அவள் தான். ஆனாலும் ஈசனையே தன்னைவிடவும் அதிக சக்தி உள்ளவராய் வெளியே காட்டுகிறாள். மேலும் இங்கே அடக்குவது, அடங்குவது என்ற அதிகாரங்கள் பிரயோகிக்கப்படாமல் இயல்பாகவே எவரும் கேட்காமலும், சொல்லாமலும் இதுதான் நியதி என்று ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் இதயமான அந்த சக்தி இல்லை எனில் நம் உடல் எப்படி சரிவர இயங்காதோ அது போலவே அம்பிகையான சக்தி இல்லாமல் சிவத்தால் இயங்க முடியாது. இருதயம் எப்படி வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயங்குகிறதோ அப்படியே அம்பாளும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஈசனிடம் சரணடைந்து அவனையும் இயக்கி அதன் மூலம் நம்மையும் இயக்குகிறாள்.

இதையே அபிராமி பட்டர்,

“உமையும் உமையொருபாகனும் ஏக உருவில் வந்திங்
கெமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே!”

நம்மைப் போன்ற பரிபக்குவமே துளிக்கூட இல்லாத பக்தர்களுக்கும் சக்தியானவள் தன் மகிமையால் தன் திருவடிகளுக்கு அன்பு செய்யும் அன்பர்களை ரக்ஷித்து அனுகிரஹம் செய்கிறாள். மேலும் அர்த்தநாரீசுவரத் தியானம் என்பது ஆணும், பெண்ணும் சமம் என்ற உணர்வை மேம்படுத்திப் பெண்களின் மேல் மரியாதையும், மதிப்பும் உண்டாகச் செய்வதோடு பெண்ணாசையையும் ஒழிக்கும் வல்லமை பெற்றது. இதையே பட்டர் தன் அடுத்த பாடலில் இவ்விதம் கூறுகிறார்.

“ஆசைக்கடலில் அகப்பட்டருள் அற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதமெனும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத் தாண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே!”

தேவியின் வழிபாட்டால் மண், பெண், பொன் என்னும் புறவுலகுச் சிந்தனைகளும் அது குறித்த ஆசைகளும் இல்லாமல் போகும். இதற்கு அபிராமி பட்டரே ஒரு வாழும் சாக்ஷியாகவும் இருந்திருக்கிறார் அல்லவா? ஆசைக்கடலில் அகப்பட்டு அருள் அற்ற அந்தகன் என்பது இங்கே கூற்றுவனைக் குறிக்கும். கூற்றுவன் கை பாசம் என்னும் ஆயுதத்தால் துன்புறும்படி இருக்கும் அடியார்களைக் கரைசேர்ப்பவள் அன்னையே. இப்போ லலிதாம்பாள் சோபனத்தின் அடுத்த அவதாரத்தைப் பார்க்கலாம்.

ஸ்ரீராமாவதாரம். ஒரு சொல், ஒரு மனைவி, ஒரு பாணம் எனத் தனித்தன்மை பெற்று விளங்கிய புருஷோத்தமன் ஸ்ரீராமன். நம் நாட்டில் மட்டுமல்லாது உலகின் பல இடங்களிலும் பல்வேறு வடிவங்களில் ஸ்ரீமத்ராமாயணம் விளங்குகிறது என்பதே அதன் பெருமையைக் கூறும். தன்னுடைய குடிமக்களுக்குத் தான்கொடுக்க வேண்டிய நல்லாட்சிக்காகத் தான் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதால் தன் அருமை மனைவியையே துறந்தவன் ஸ்ரீராமன். பலர் கண்களுக்கும் அவன் மனைவியைத் துறந்தது தவறு எனப் பட்டாலும், அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்னும் வழக்குச் சொல்லையும் அதன் உள்ளார்ந்த பொருளையும் கூர்ந்து கவனிப்பவர்கள் ஸ்ரீராமன் செய்தது சரியே எனப் புரிந்து கொள்வார்கள். எப்போது குடிமக்களில் சிலர் தன் மனைவியைத் தவறாய்ப் பேசுகின்றனரோ அப்போது அந்த மனைவியின் மேல் எத்தனை பாசம் இருந்தாலும் அவளைத் துறப்பதே சிறந்த முடிவு, குடிமக்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு என்ற முடிவெடுத்து ஆண்டான் ஸ்ரீராமன். அதே போல் தன் அருமை இளவல் லக்ஷ்மணனையும் அவன் துறக்கவேண்டி வந்தபோது அவனையும் துறந்தான். கொடுத்த வாக்கிற்காக இளவலைத் துறந்தான். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மனிதன் எவ்வாறு மனம், வாக்கு, காயம் அனைத்தாலும் உண்மையாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டிய ஸ்ரீராமனுக்கு மங்களம்.




“இராவணனைக் கும்பகர்ணனிந்திரஜித்தனை
இராட்சதாளை யவன் அனுப்பி வைத்தான்
தேவியும் இடக்கை ஆள்காட்டி விரலைச்
செப்பிடுவித்தை போல் உதறினாளே
ஸ்ரீராமலக்ஷ்மணர் ரதத்திலிருந்து கொண்டு
ராவணன் முதலோரை வதைகள் செய்தார்
தாமஸியாமல் ராக்ஷதாளை வதைத்த
ஸ்ரீ ராமலக்ஷ்மணருக்குச் –சோபனம், சோபனம்.

அடுத்து வருகிறார் நம்ம பலராமர். மூத்தவர். கண்ணனுக்கு அண்ணன். ராமாயணத்தில் இவர் இளவலாய்ப் பிறந்து அண்ணனுக்குச் சேவை செய்ததால் இங்கே மூத்தவராய்ப் பிறந்து உலக்கையையும், கலப்பையையும் வைத்துக்கொண்டு எல்லாரையும் நாசம் செய்கிறார்.

“வானரங்களையும் வருத்திவிட்டான் பண்டன்
மலைமலையாகவே தேவிமேலே
விஜய அம்பாள் தன் இடக்கை நடுவிரலை
மின்னல் மின்னினாற்போல் உதறினாளே
பலபத்திரரும் வந்தார் கைலாச மலைபோலப்
பெரிய உலக்கைக் கலப்பை கொண்டு
உலக்கைக் கலப்பையால் குரங்குகளைக் கொன்ற
உக்கிரபாலருக்குச் –சோபனம், சோபனம்




இச்சாசக்தி-க்ஞாநசக்தி-க்ரியாசக்தி-ஸ்வரூபிணி
ஸர்வாதாரா ஸுப்ரதிஷ்டா ஸதஸத்-ரூப-தாரிணி என்று சொல்கிறது லலிதா சஹஸ்ரநாமம். அம்பிகை அனைத்து சக்திகளுமாய் இருக்கிறாள். அனைத்துக்கும் காரணியாய் இருக்கிறாள். அவ்வளவு ஏன் நமக்குப் பாலூட்டித் தாலாட்டிப் பாடி, சோறும் ஊட்டுவது அவளே. இதையே செளந்தர்ய லஹரியில் அம்பிகையை வர்ணிக்கும் ஆசாரியர் அவள் சூரியனையும், சந்திரனையும் தன்னிரண்டு ஸ்தனங்களாய்க் கொண்டு இவ்வுலகத்து மாந்தர்களான நமக்கும், மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் அமுது ஊட்டுவதாய்க் கூறுவார். பால் ஊட்டும் தாயாக அம்பிகையைக் கூறுகிறார். என்ன இது?? சூரியனும், சந்திரனும், அம்பாளின் இரண்டு மார்பகங்களா? ஒரே பேத்தல்! அது வழியாப் பாலூட்டறதாமே என்பவர்கள், நன்கு கூர்ந்து கவனிக்கவும். அம்பிகைதான் நமக்கு அன்னை. ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வாறு மனம் கனிந்து உவகையுடன் பாலூட்டுவாளோ அவ்வாறே அன்னபூரணியாம் அம்பிகையின் அருளாலேயே நாம் உண்கிறோம். தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை வங்கத்து மேதை ஜகதீஸ் சந்திரபோஸ் சொல்லி இருக்கார் இல்லையா?? நம் வேதமோ இதை அவருக்கும் முன்னரே கூறி உள்ளது.

சூரிய சந்திரர்களின் கிரணங்களால் தான் தாவரங்கள் உயிர் பெறுகின்றன அல்லவோ?? சூரிய வெளிச்சம் படவில்லை என்றால் ஒரு விதை முளைக்குமா? தாவரங்கள் தமக்கு வேண்டிய உணவை சூரியனிடமிருந்து நேரே பெறுகின்றன அல்லவா?? அதுதான் தாவரங்களின் சத்தாய் மாறி நாம் உண்ணும்போது நம் உடலில் கலந்து நமக்கு சக்தியைக் கொடுக்கிறது. இவ்வுலகிலே சூர்ய சக்தி இல்லை எனில் எதுவுமே நமக்குக் கிடைக்காதே? சூரிய சக்தியை நாமும் நேரே சூரியனிடமிருந்து பெறுவதற்காகவே அதிகாலையில் சூரிய நமஸ்காரமும், அதனோடு சேர்ந்த அனுஷ்டானங்களும் வைத்திருக்கிறார்கள். அது போல் நிலவொளியிலேயே மூலிகைகள் வளரும். மூலிகைகளின் மகத்துவம் நாம் அனைவரும் அறிவோம். மருத்துவ சக்தி உள்ள இந்த ஒளஷதங்கள் சந்திர கிரணங்களின் சக்தியைப் பெற்றே வளர்கின்றன. மேலும் சந்திரனின் பூரண வளர்ச்சியைப் பொறுத்தே சமுத்திரம் பொங்குவதும் அடங்குவதுமாய் உள்ளது. சந்திரனின் இழுப்பின் சக்தியாலேயே பருவக்காற்று, பருவ மழை அனைத்தும் ஏற்படுகின்றன. சூரிய கிரணங்களால் ஆவியாகும் சமுத்திரத்து நீரானது, சமுத்திரத்து நீரை ஆவியாக்கும் அலைகளில் சந்திரன் உண்டாக்கும் மாற்றங்களாலேயே மழையாக மாறுகின்றன. ஆகவே இவ்வுலகத்து இயக்கத்துக்கே அம்பிகை காரணமாகிறாள். நம்முடைய புத்தி ஒளிவிட்டுப் பிரகாசிப்பதற்குச் சூரியன் உதவினால் மனத்தின் எண்ணங்களுக்குக் காரணியாகச் சந்திரன் விளங்குகிறான்.

இந்த அன்னபூரணி அன்ன பிக்ஷை வயிற்றுக்கு மட்டும் போடுவதில்லை. நம் மனதுக்கும் ஞாந பிக்ஷை போடுகிறாள். இவள் நம் இச்சைகளை மட்டுமல்லாமல், நம் உடலின் சக்தியாகவும், ஞாநத்தைத் தரும் சக்தியாகவும் செயல்படுகிறாள்.



இவ்விதம் அம்பிகை அனைத்துமாய் இருப்பதை பட்டர் குறிக்கையில்,

“நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை மானே முதுகண் முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்
மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே.”

என்கிறார். இவ்வுலகங்கள் அனைத்துமே அம்பிகை ஈன்றெடுத்தாள் என்கிறார் பட்டர். மேலும் ஆதியும் அந்தமும் இல்லா, முதலும் முடிவும் இல்லா, பிறப்பும் இறப்பும் இல்லா இவளைப் போய் மலைமகள் என்று கூறுவது வம்பு என்கிறார். அம்பிகையின் சரித்திரத்தை ஆராயப் புகுந்தால் முன்னும், முடிவும், பின்னும், என்றும் எப்போதும் எதுவும் புலனாகாது. நம் அளவுக்கு மிஞ்சிய செயலாகும் அது. லலிதா சஹஸ்ரநாமத்தில்,
அநகா அத்புத சாரித்ரா” என எண்ணற்றக் கோடிக்கணக்கான அற்புதமான சரித்திரங்களை உடையவள் எனப் போற்றுகிறது. இத்தனை அற்புதச் சரித்திரம் படைத்த அம்பிகை தன் கைவிரல்களில் இருந்து கண்ணனைத் தோற்றுவிப்பது பெரிய விஷயமா?? அதைப் பார்ப்போமா?

“சிசுபாலன் கம்ஸன் சகடன் பூதன் தன்னை
துஷ்டன் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
விச்வேச்வரியும் இடக்கைப் பவித்திர
விரலை அசைத்தாள் அதிலிருந்து
சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தனாகவே
ஸ்வாமி வந்தவர்களை ஸம்ஹரித்தார்
சங்கர்ஷணன் ஸ்ரீகிருஷ்ணன், அநிருத்தன் ப்ரத்யும்னன்
ஸ்வாமி நாலுபேருக்கும்-சோபனம் சோபனம்.

அடுத்துக் கல்கி அவதாரம்.
கலியுகாஸ்திரத்திலே கக்கும் மிலேச்சரைக்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
கல்யாணியும் இடக்கைச் சுண்டு விரலைக் 
காட்டி அசைத்தாள் அதிலிருந்து
அட்டஹாஸத்துடன் கல்கி அவதாரமாய்
அச்சுதரும் வந்தார் அந்தக்ஷணம்
முரட்டுத் தனமுள்ள மிலேச்சரை வதை செய்த
முரஹரி கல்கிக்குச்-சோபனம் சோபனம்

பின்னும் அநேகம் மோஹனாஸ்திரந்தன்னைப்
பூட்டிவிட்டான் சக்தி சேனையின் மேல்
அந்நேரம் அம்மனும் சாம்பவர் அஸ்திரத்தில்
அதையும் விமோசனம் செய்துவிட்டாள்
அக்ஷெளஹிணி சேனையை நாராயணாஸ்திரத்தால்
பஸ்மமயமாக ஆக்கிவிட்டாள்
துஷ்டன் குடிலாக்ஷன் முதற்சேநாதிபதிகளைச்
சிதைத்தாள் பாசுபதத்தால்-சோபனம் சோபனம்

பின்னும் அநேகம் அஸ்திரத்தாலவன்
அக்ஷெளஹிணி சேனை போன பின்பு
என்ன பலம் லலிதா தேவிக்கு என்று
ஏங்கி விழிக்கின்றான் பண்டாஸுரன்
அம்மனும் தம்முடைய நாதர் காமேசரை
அந்தரங்கத்திலே தான் நினைத்துக்
காமேசர் அஸ்திரத்தால் ஜயம் வரட்டுமென்று
கணவரை வேண்டினாள்-சோபனம், சோபனம்.

நாளை பண்டாஸுரன் வதம்

Saturday, October 20, 2018

அதான் வந்துட்டோமுல்ல!

மூணு நாளா ரொம்பவே வேலை மும்முரம். அம்பத்தூர் வீட்டை விற்று விட்டதால் கிடைத்த பணத்தில் நாங்கள் இருக்கும் அதே அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இன்னொரு பக்கம் உள்ள ஒரு குடியிருப்பை வாங்கினோம். போன மாதம் தான் பத்திரப்பதிவுகள் முடிந்தன. அதில் சில, பல வேலைகள் செய்து, பெயின்டிங் செய்து நேற்று விஜயதசமிக்குப் பால்க் காய்ச்சிச் சாப்பிடவும் ஹோமங்கள் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தோம். திடீரென முடிவு செய்ததால் சொந்தக்காரங்களுக்கு முன்பதிவு செய்து கொண்டு வர முடியுமா, பேருந்து, ரயில் எல்லாவற்றிலும் கூட்டம் நெரியுமே என்னும் கவலை! ஆனாலும் அவங்களுக்குத் தகவல் தெரிவித்தோம்.  அதுக்குள்ளே எனக்குத் திடீரென உடல்நிலை சரியில்லை. மிக மோசமான தோல் பிரச்னை ஏற்பட்டு வலி, வீக்கம், அரிப்பு, எரிச்சல் என ஒரே கொண்டாட்டம்! சாதாரணமாச் சிவப்பு, காபி ப்ரவுன் நிறங்கள் தான் ஒத்துக்காது, ஆனால் இப்போ எந்த நிறமானாலும் கிட்டே கொண்டு வராதே என உடல்நிலை எச்சரிக்கை!

மருத்துவ ஆலோசனையின் பேரில் 3 மணி நேரத்துக்கு ஒரு மாத்திரை என ஒரு நாளைக்கு ஐந்து வேளைகள் மாத்திரை தொடர்ந்து ஒரு வாரம் போட்டுக்கணும்னு சொல்லிட்டாங்க. அரிப்புக்கு இரவு மட்டும் போட்டுக்க மாத்திரை! ஆனால் அதைப் போட்டுக் கொண்டாலும் ராத்திரி தூக்கம் வராது! காலங்கார்த்தாலே தூக்கம் சொக்கும்! கண் விழித்தால் பறக்கிறாப்போல் உணர்வு. இந்த ஆர்ப்பாட்டங்களோடு நவராத்திரியும் சேர்ந்து கொண்டது. என்ன செய்தேன், யார், யார் வீடுகளுக்குப் போனேன் என்பதெல்லாம் கூடச் சரியாச் சொல்ல முடியலை. ஆனால் அம்பிகையை வேண்டிக் கொண்டே லலிதாம்பாள் சோபனம் மீள் பதிவு போட ஆரம்பித்தேன். அதைத் தவிர்த்து வேறே எதிலும் கவனம் செலுத்தலை. திங்கட்கிழமையில் இருந்து(15 ஆம் தேதி) கொஞ்சம் கொஞ்சம் உடல்நிலையில் முன்னேற்றம். செவ்வாயோடு மருந்துகளும் முடிவுக்கு வந்தன. வேலைகளும் அதிகம். என்றாலும் பாத்திரங்கள் கழுவிக் கொடுக்க மட்டும் ஒரு பெண்ணைத் துணைக்குக் கூப்பிட்டுக் கொண்டேன். நவராத்திரி என்பதால் கூடுதல் பாத்திரங்கள்.

அதோடு கிரகப்ரவேசத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டும் இருந்தன. என்றாலும் புதன் கிழமை வரை என்னால் உட்கார முடியுமா என்னும் சந்தேகம் இருந்து கொண்டே தான் இருந்தது. ஆனாலும் வேலைகளை நிறுத்தவில்லை. புதன் கிழமையே பூக்கள், ஹோம சாமான்கள் எல்லாம் வாங்கி வந்தாச்சு. அதெல்லாம் சரி பண்ணி வைத்து நவராத்திரிக்கு அழைத்தவர்கள் வீடுகளுக்கும் போய், நம் வீட்டுக்கு வந்தவர்களையும் வரவேற்று என சரியாக இருந்தது. வெள்ளிக்கிழமை ஹோமத்துக்குப் போட வேண்டிய பிரசாதங்களை வேறே செய்ய வேண்டி இருந்தது. சமையலுக்கு ஒரு மாமியை ஏற்பாடு செய்திருந்தாலும் அவங்க சாயந்திரம் தான் வர முடியும்னு சொல்லிட்டாங்க. அவங்க வீட்டிலும் பூஜை உண்டே! ஆகவே வியாழன் அன்று காலை 3-30 க்கு எழுந்து ஆரம்பித்த வேலைகள் அன்று மதியம் 12-30 மணியோடு ஒரு மாதிரியா முடிஞ்சாலும் மற்ற வேலைகள் இருந்தன. இங்கே குடியிருக்கும் இன்னொரு மாமி புது வீட்டில் கோலங்கள் போட்டுக் கொடுத்துக் காலை சாமான்கள் தூக்கி வந்து உதவி செய்தாங்க! ஒரு வழியா நேற்றுக் காலையில் புது வீட்டில் பால் காய்ச்சிக் குடிச்சாச்சு!  ஆனாலும் நாங்க அங்கே|குடித்தனம் போகப் போவதில்லை. வாடகைக்குத் தான்! ஹோமம் எல்லாம் நன்றாக நடந்தது. என் தம்பியைத் தவிர்த்து மற்ற உறவுகள் யாராலும் கலந்துக்க முடியலை. அக்கம்பக்கம் துணை மற்றும் தெரிந்த உறவுக்காரப் பெண்ணின் துணையோடு நேற்றைய தினத்து வேலைகளைச் சமாளிச்சேன்.

விசேஷம் சிறப்பாக நடந்தாலும் அதன் பின்னால் எல்லாவற்றையும் சரி செய்து வீட்டை ஒழுங்குக்குக் கொண்டு வரும் வேலை இன்று முழுவதும் சரியாக இருந்தது. ஒரு வழியா முக்கியமானவற்றை ஒழுங்கு செய்து சமையலறையையும் சீரமைத்து விட்டேன். இனி மீண்டும் லலிதாம்பாள் சோபனம் மிச்சம் உள்ளது எல்லாம் நாளையில் இருந்து போட்டு முடிச்ச பின்னர் தான் மற்ற மொக்கைகள் தொடரும். ஒரு நாலு நாள் ஆள் இல்லைன்னதும் யாருமே கண்டுக்கலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதிலும் இந்த போஸ்ட் போட ஆரம்பிச்சதும் அதிரடி எங்கேயோ போய் ஒளிஞ்சாச்சு! ஏஞ்சல் எ.பி.யில் குடியேறி விட்டார். ஜி.எம்.பி சார் பேரன் கல்யாணத்தில் மும்முரம். பானுமதி சும்மாவே நான் நாலு பதிவு போட்டால் ஒரு பதிவில் தான் தலை காட்டுவாங்க. கமலாவை ஆளையே காணோம். கோமதி அரசு, துரை ராஜ், கில்லர்ஜி ஆகியோர் தான் விடாமல் தொடர்வது. நெ.த. வும் வல்லியும்அவ்வப்போது தலை காட்டுகிறார்கள். சரஸ்வதி பூஜைப் பதிவில் ஸ்ரீராமையும் காணோம். சுண்டல் பண்ணுவதில் மும்முரமாய் இருந்திருக்கலாம். ஆனால் நேத்திக்கும் ஏன் வரலை? சரி, விடுங்க! இனி நாளையில் இருந்து சீரியஸ் பதிவுகள். இந்த மொக்கைக்கு அநேகமா ஆள் வரும்!

Wednesday, October 17, 2018

நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 9

அம்ருதேஸ்வரியான அம்பிகை தன் பார்வை ஒன்றாலேயே அனைத்து விஷங்களையும் நம்மிடமிருந்து போக்குகிறாள்.

“ஸுமேரு –மத்யஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸனஸ்திதா!



ஸ்ரீசக்ர நாயகியான அம்பிகையின் சிந்தாமணி க்ருஹத்தைச் சுற்றி இருக்கும் அம்ருத வாவியிலே மணிமயமான படகிலே இருந்துகொண்டு அம்ருதேஸ்வரி பக்தர்களைக் கரை சேர்க்கிறாள். பக்தர்களைக் கரை சேர்ப்பதாலேயே இவளைத் தாரா என்றும் அழைப்பார்கள். மின்னல் கொடி போலவே சூக்ஷ்மமான ஒளிமயமான ரூபம் உடைய அம்பிகை, சூரியன், சந்திரன், அக்னி இவர்கள் வடிவங்களில் ஒளிமயமாய்ப் பிரகாசிக்கிறாள். நம் மூலாதாரத்தில் இருந்து படிப்படியாய் மேலேறி வரும் சக்தியானவள் சஹஸ்ராரச் சக்கரத்தில் நிலைபெறுகிறாள். ஸஹஸ்ரதளத்தில் தாமரைக்காட்டில் நிலை பெறும் இவள் ஒருத்தியே அனைத்துமாவாள் என்பதை லலிதா சஹஸ்ரநாமம் கீழ்க்கண்டவாறு கூறும்.

ஸஹஸ்ரதள-பத்மஸ்தா ஸர்வ-வர்ணோப-சோபிதா ஸர்வாயுத-தரா சுக்ல-ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ!!

சஹஸ்ரதளங்களுள்ள தாமரையில் அனைத்து வர்ணங்களோடுகூடிய சக்திகளுடன், சகலவிதமான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு அநேக முகங்களோடும் யாகினீ என்ற பெயரோடு காட்சி அளிக்கிறாள். இதை பட்டர்,
“அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோ டிணங்கேன்
எனதுன தென்றிருப்பார்சிலர் யாவரோடும் பிணங்கேன் 
அறிவொன்றிலேன் என் கண் நீ வைத்த பேரளியே!” 

என்று தேவிக்கு தேவ மாதர்கள் பரிவார சக்திகளாக இருத்தலைக் குறிப்பிடுகிறார். அழகுத் தெய்வமான அம்பிகையின் காந்தி பொருந்திய முகத்தின் ஒளியானது நம் உள்ளத்து இருட்டைப் போக்கும் வல்லமை உடையது. அவளுடைய கரிய கேசத்தின் கருமை அவளைத் தியானிக்கு அடியவர்களின் மன இருளைப் போக்கி உள்ளொளியை வளர்க்கும். அவள் கூந்தலின் இயல்பான மணத்தை லலிதா சஹஸ்ரநாமம், “சம்பகாசோக-புந்நாக-செளகந்திக-லஸத்கசா!” என்கிறது. சம்பக மலர்கள், அசோக மலர்கள், புந்நாகம்(புன்னை) மலர்களின் வாசத்தைக் காட்டிலும் மணம் அதிகமாய் உள்ள கரிய கேசத்தை உடையவள் என்பது பொருள்படும். அந்தக் கேசத்தை இரண்டாய்ப் பிரிக்கும் வகிட்டை “ஸீமந்தம்” என்று சொல்வார்கள். இதையே லலிதா சஹஸ்ரநாமம், “ஸ்ருதி-ஸீமந்த –ஸிந்தூரீ” எனக் கூறும். நெற்றியில் இருந்து வகிடு ஆரம்பிக்கும் இடத்தை ஸீமந்தம் என்று சொல்வதோடு, சுமங்கலிகள் அங்கே குங்குமம் இட்டுக்கொள்வதும் வழக்கம். நெற்றியில் நடுவே பொட்டில்லாவிடிலும், இந்த ஸீமந்தம் எனப்படும் வகிட்டின் உச்சியில் சிந்தூரம், அல்லது குங்குமம் வைத்துக்கொள்வது கட்டாயமாய் அநுசரிக்கப் படும். இந்த உச்சித் திலகத்தை வைத்தே பட்டர் அந்தாதியை ஆரம்பித்திருக்கிறார்.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயம் என
விதிக்கின்ற மேனி அபிராமி யென்றன் விழித்துணையே!”

என்கிறார். உதிக்கின்ற செங்கதிரைப் போன்று உச்சித் திலகத்தின் சிவந்த நிறம் காணப்படுகிறது என்று கூறுகிறார். சூரியன் உதித்துச் சிறிது நேரம் ஆகிவிட்டால் சூரியனை வெறும் கண்ணால் காணமுடியாது. அதே சமயம் உதய சூரியனைக் கண்ணால் நன்றாய்ப் பார்க்க முடியும். ஆகையால் உதிக்கின்ற சூரியன் என்பது இங்கே அதையும் சுட்டும். அம்பிகையை மனமாரத் தியானித்தால் அவளைக் கண்ணாரக் காண முடியும். உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்பது மெய்ஞ்ஞானம் பெற்ற ஞாநிகள் மதிக்கின்ற மாணிக்கம் போன்றவளே என்று வரும். மாதுளம்போது என்பது, அம்பிகையின் மாதுளை நிறத்தைக் குறிக்கும். “தாடிமீ குஸுமப்ரபா” என்று லலிதா சஹஸ்ரநாமம் இதைக் கூறும். “மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி” என்பது இங்கே தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளும் துதிக்கின்ற மின்னற்கொடியான அம்பிகை என்று பொருள்படும். இத்தனை பெருமை வாய்ந்த லலிதாம்பிகையுடன் பண்டாஸுரன் போருக்கு வந்திருக்கிறான்.

பண்டாஸுரன் வது சக்தியின் சேனைகளோடு தன் சேனைகளையும் மோத விட்டான். சக்திகள் கோபத்துடன் அக்னிக்கோட்டைக்கு வெளியில் வந்து சண்டை போட்டனர். ராஜராஜேஸ்வரியான லலிதாம்பிகை பண்டாஸுரனைக் கண்டு இவனை அழிக்கவேண்டியது நாமே என உறுதி பூண்டாள்.

“அக்கினிக்கோட்டைக்கு வெளியில் வந்தாள்-ஸ்ரீ
சக்கரத்தில் அபசகுனங்கண்டாள்
ஒப்பற்ற அஸுராள் தம்பட்ட முரசுகள்
உக்கிரமாய்க் கொம்புகள் ஊதிக்கொண்டு
சக்திதேவிகளை அஸுரர்கள் எல்லோரும்
சண்டை பிடித்தடிக்கத் துவங்கினார்கள்
சக்தி தேவியர்கள் அப்போ அஸுர சேனைகளை
ஸம்ஹரிக்கின்றார்கள்-சோபனம் சோபனம்

அஸுர சேனைகளை சக்திதேவிகள் சுற்றிப் பிடித்திழுத்துக் கத்தியாலே குத்தியும், ஈட்டியாலே குத்தியும், கொன்றழிக்கின்றனர். ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த ஆற்றின் இருபக்கமும் சாய்ந்து கிடக்கும் அசுரர்களின் தலைகளும், தேகங்களும் விருட்சங்களைப் போல் காட்சி அளித்தனவாம்.

யுத்தபூமிதனில் ரத்தப் பிரவாஹம்
ஓடுவதைக் கண்டு தேவரெல்லாம்
சக்திசேனையினால் அத்தனை அஸுராளும்
ஸம்ஹரிக்கப்பட்டுக் கிடப்பதையும்
அத்தனை யானை குதிரை சேனைகளெல்லாம்
ஆமை போல் மிதக்க ரத்த நதியில்
சித்தம் மகிழ்ந்து பாரிஜாதப் புஷ்பங்கள்
தேவிக்கு சொரிந்திட்டார்- சோபனம் சோபனம்

தேவர்களுஞ் சொர்ண புஷ்பமாரி சொரிந்து
திவ்விய சகுனங்களைக் காட்டினார்கள்
கோபத்துடனே பண்டாஸுரன் விழிசிவக்கவே
கொடூரமாய் உருட்டி விழித்துக்கொண்டு
தன்சேனை அஸுராளுக் கபஜயத்தைக் கண்டு
தாய் லலிதா தேவியை எதிர்த்தான்
அஞ்சாமல் தேவியும் பண்டாஸுரனைப் பார்த்து
அதிகக் கோபங் கொண்டாள்-சோபனம் சோபனம்

பண்டாஸுரன் தன் மாயையைக் காட்டி அம்பிகையை பயமுறுத்தப் பார்க்கிறான். மாயா சக்திகள் அனைத்துக்கும் தலைவியான அவளை எந்த மாயை பயமுறுத்தும். மாயையினால் அவன் இருட்டைக் கொண்டுவர, அம்பிகை சூர்யாஸ்திரத்தின் மூலம் அந்தக் காரிருட்டைப் போக்கினாள். குருடாஸ்திரம் விட்டு அம்பிகையைக் குருடாக்க நினைக்க, நேத்ராஸ்திரத்தால் அதை வென்றாள் அம்பிகை. வாயு அஸ்திரத்தைப் பண்டாஸுரன் போட, அம்பிகையோ வருணாஸ்திரத்தால் அதை முறியடித்தாள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான, கோடிக்கணக்கான வியாதிக்கிருமிகளை அனுப்ப, அவற்றைத் தன்வந்திரியான அச்சுதாநந்த கோவிந்த நாமத்ரய அஸ்திரத்தால் வென்றாள் பகவதி. அந்தகாஸ்திரத்தை அனுப்ப, ம்ருத்யுஞ்சயனால் அது வெல்லப் பட்டது. பார்த்தான் பண்டாஸுரன்.

மந்திரத்தால் சும்ப நிசும்பன் சண்டமுண்டன்
மஹிஷாஸுரனையவன் அனுப்பி வைத்தான்
அனுப்பி வைத்தான் அதைக்கண்டு மஹேச்வரி
அட்டஹாஸம் செய்தாளதிலிருந்து
அம்மனட்டஹாஸத்தால் துர்க்காதேவி யுண்டாகி
அஸுராளை ஸம்ஹரித்தாள் –சோபனம் சோபனம்



முன்னே வேதங்களைத் திருடின சோமுகன்
முதலான அஸுராளை அனுப்பி வைத்தான்
தன்னையடுத்த பேர்க்கு அபயங்கொடுத்துத்
தற்காக்கும் வலக்கைக் கட்டைவிரலை              
உதறிவிட்டாளம்மன் அதிலேயிருந்து
உண்டாகிவந்து மச்சமூர்த்தியும்
வதைத்தந்த அஸுராளெல்லாரையும்
ஜயித்த மச்சாவதாரர்க்குச் சோபனம் சோபனம்.


சமுத்திரத்தை வருத்திவிட்டான் பண்டன்
சக்திசேனைகளை முழுகடிக்க
நிமிஷத்தில் அம்மன் உதறினாளப்போது
நீட்டி ஆள்காட்டி வரல்தனையும்
குதித்தாருடனே யதிலே யிருந்து
கூர்மாவதார மஹாவிஷ்ணுவும்
கொந்தளிக்கும் சமுத்ரங்களெல்லாங்குடித்த
கூர்மாவதாரர்க்குச் சோபனம் சோபனம்.


இரணியாக்ஷனை அதிகோபத்துடனே
இந்தப் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
வராஹ மூர்த்தியும் உண்டானாரப்போ
வலக்கை நடுவிரலில் இருந்து
பொல்லாத ஹிரண்யாக்ஷ அஸுரர்களை யெல்லாம்
சற்றுப்போதைக்குள்ளே ஸம்ஹரித்தார்
வெல்ல முடியாத ரூபந்தரித்த லக்ஷ்மி
வராஹ மூர்த்திக்குச் சோபனம், சோபனம்

இவ்வுலகின் அக்ஞான இருளைப் போக்கும் ஒளியான அம்பிகையோடு சேர்ந்து ஐக்கியமான சிவனும் சேர்ந்த சச்சிதாநந்த ஸ்வரூபத்தைத் தியானிப்பவர்களுக்கு உலகின் மற்றப் புற இன்பங்களின் ஆநந்தங்கள் மங்கியே தெரியும். சிவதம்பதிகளின் ஜீவாதார ஒளியைத் தரிசித்தவர்களுக்கு வேறு பேறு வேண்டியதில்லை. பக்தர்களின் மனமாகிய சாகரத்தில் மலரும் ஆநந்தமயமான ஞாநத்தாமரையின் மகரந்த வாசனைகளை அனுபவிக்கும் இரு அழகான ஹம்ஸங்களாக ஈசனும், அம்பிகையும் குறிப்பிடப் படுகின்றனர். ஹம் என்பது சிவனையும், “ஸ” என்பது சக்தியையும் குறிக்கும். இவர்களின் சம்பாஷணைகளாகப் பதினெட்டு வித்தைகளும் குறிப்பிடப் படுகின்றன. அவை வேதங்கள் நான்கு, சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிடம் போன்றவை ஆறு, மீமாம்ஸம், நியாயம், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் என நான்கு, மருத்துவ வேதமான ஆயுர்வேதம், ஆயுதப் பயிற்சிகளைக் குறிக்கும் தனுர்வேதம், சங்கீதம் போன்ற கலைகளுக்குச் சொந்தமான காந்தர்வ வேதம், மற்றும் பொதுவான நீதிகளைக்குறிக்கும் நீதி சாஸ்திரம் போன்றவை ஆகும். நம் மனதுக்குள் இவ்வாறு ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் அம்பிகையின் ரூபத்தைத் தியானிப்பவர்களுக்கு சகல பாவங்களும் புண்ணியமாக மாறிவிடும்.

இதையே அபிராமி பட்டர்,

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.”

என்கிறார். அபிராமியின் கடைக்கண்களின் கடாக்ஷத்தால் அவளை வழிபடும் அன்பர்களுக்கு எல்லாவகையான ஐஸ்வரியங்களும் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல் தளராத மனம், தெய்வீக அழகு, வஞ்சம் இல்லாமனம் என அனைத்தையும் கொடுக்கும். லலிதா சஹஸ்ரநாமமோ, அம்பிகையை அனைத்துக்கலைகளுக்கும் தலைவி என அழைக்கிறது. “சதுஷ்ஷஷ்டி கலாமயீ” எனவும், “கலாவதீ” எனவும் கூறுகிறது. கலா என்பது மயிலின் கலாபத்துக்கும் ஒரு பெயராகும். ஆகவே அப்படிப் பார்த்தாலும் சகலகலாமயிலான அம்பிகைக்குப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் அம்பிகையின் கடைக்கண்களின் மூன்று விதமான ரேகைகள் திரிவேணி சங்கமத்தை நினைவூட்டுவதாய்க் கூறுவார்கள்.

சூரிய புத்திரியும் கறுப்பு வண்ணத்தவளும் ஆன யமுனை, வெளுப்பான கங்கை, சிவந்த நிறமுள்ள சோனை போன்ற மூன்று நதிகளின் சங்கமத்தை நினைவூட்டும் விதமாய் அம்பிகையின் கண்களின் ரேகைகள் காட்சி அளிக்கின்றன். மேலும் இவை மும்மூர்த்திகளையும் நினைவூட்டுகிறது. ரஜோ குணமுள்ள சிருஷ்டிகர்த்தா பிரம்மாவையும், ஸத்வ குணம் நிறைந்த ஸ்திதிகர்த்தா விஷ்ணுவையும், தமோ குணம் நிறைந்த ஸம்ஹார கர்த்தா ருத்திரரையும் நினைவூட்டுகிறது. இப்போ பண்டாஸுரன் என்னவானான் என்று பார்ப்போம்.

அடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.



“இரணியகசிபு முதாலானஸுராளை யெல்லாம்
இந்தப் பண்டாஸுரன் வருத்திவிட்டான்
பரமேச்வரியும் வலக்கைப் பவித்திர
விலையசைத்தாள் அதிலிருந்து
அதிபராக்கிரம நரஸிம்மரும் வந்து
அஸுர ஹிரண்யனை ஸம்ஹரித்தார்
நாகசயனர் பக்தர் பிரஹலாதர லக்ஷ்மி
நரஸிம்ம மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

நரஸிம்மர் வந்து ஹிரண்யனை வதம் செய்துவிட்டார். லக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்டு லக்ஷ்மி நரசிம்மராய்க் காட்சி தருகிறார். அடுத்து வாமன அவதாரம். முதல் இரண்டும் இரண்டு வகை நீர் வாழ் ஜந்துக்கள். மீன், கூர்மம்(ஆமை), அடுத்து வராஹம் நிலத்தில் வாழும். அதுக்குப் பின்னர் பாதி மனிதன், பாதி மிருகமான நரசிம்மம். படிப்படியான பரிணாம வளர்ச்சி. இப்போ முதல் மனிதன். முதலில் குட்டையாய்த் தானே இருந்திருக்கணும். ஆகவே வாமனன்.



மஹாபலி முதலான அஸுரசேனைகளை
வருத்திப் போகச் சொன்னான் பண்டாஸுரன்
மஹாமாயையும் வலக்கைச் சுண்டுவிரலைச்
சுழட்டியே உதறினாள் அதிலிருந்து
வந்தார் மஹாவிஷ்ணு வாமன மூர்த்தியாய்
மஹாபலி அஸுரனையும் ஜயித்து
மஹாபலியை பாதாளத்தில் தள்ளின
வாமன மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

வாமனன் மஹாபலியைப் பாதாளத்தில் அழுத்தி நித்ய சிரஞ்சீவிகளில் ஒருவராய்ச் செய்தாயிற்று. அடுத்து மனிதன் தான். ஆனால் பயங்கர கோபக் கார மனுஷன். ரிஷி புத்திரன். பல அரசர்களுக்கும், மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் ஆசாரியர். மஹாபாரத காலத்துக் கர்ணனுக்கும் ஆசாரியன். ஆனால் இவர் கார்த்த வீர்யார்ச்சுனன் இவரின் தந்தையைக் கொல்லவும், க்ஷத்திரியர்களிடம் கொண்ட பகைமையால் அவர்களை அழித்துவந்தார். இருபத்தொரு தலைமுறைக்கு க்ஷத்திரியர்களை அழித்த இவரை நிறுத்த வேண்டி காச்யபர் இவரிடம் பூமியை தானமாகப் பெற்றார். காச்யபருக்கு தானம் கொடுத்த பின்னர் அந்த பூமியில் இருப்பது முறையல்ல என்பதால் அவர் கடலரசனை வேண்டித் தமக்கென ஒரு நிலத்தை ஏற்படுத்திக்கொண்டார். மேற்குக் கடலோரமுள்ள அந்த நிலம் பரசுராமரால் ஆட்சி செய்யப் படுவதாய் இப்போதும் சிலரால் நம்பப் படுகிறது. 



கார்த்த வீர்யார்ச்சுனனைச் சேனைகளுடன்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
ஆர்த்திகளைப் போக்கும் லலிதேச்வரியும்
அசைத்தாள் இடக்கைக் கட்டைவிரலை
பரசுராமர் கையிற்கோடாலி கொண்டு
புறப்பட்டார் வெள்ளிவலையைப் போல
பலமுள்ள கார்த்த வீர்யாச்சுனனை வதைத்தப்
பரசுராமருக்குச் சோபனம், சோபனம். 

மனிதரில் பல பரிணாமங்கள், பலவிதமான மனிதர்கள். முதலில் வந்ததோ குட்டையான மனிதன். அடுத்து வந்ததோ தன் கோபத்தை அடக்க முடியாத மனிதன். இப்போ வரப் போவதோ பூரணமான ஒரு மனிதன். மனிதருள் மாணிக்கம். மர்யாதா புருஷோத்தம் என அன்போடு அழைக்கப் படுபவன். நாளை பார்ப்போமா??


இன்றைய தினம் கடைசி நாள். ஆகவே அம்பிகை சித்தாத்ரியாக வழிபடப்படுவாள். வேண்டியதை நிறைவேற்றித் தரும் அன்னை இவள். பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டும். சும்ப, நிசும்பர்களை சம்ஹரித்த தினமான இன்றைய தினம் அன்னையைக் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள். அனைத்து சித்திகளையும் அள்ளித் தரும் இவளைக் குறித்து முன்பே பார்த்தோம்.

எல்லாமும் ஒரு மகாசக்தியிலிருந்தே தோன்றியது என்பதை இவள் தன்னை வழிபடுபவர்களுக்குப் புரிய வைப்பாள். இவ்வுலகத்தின் ஆசாபாசங்களைத் துச்சமாகக் கருதும் மனோநிலை ஏற்படும். பேரானந்தம் எனப்படும் உணர்வு அவனுக்கு எளிதில் சித்திக்கும், இன்றைய தினம்  அம்பிகையை வெண்பட்டாடை உடுத்திய சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். இன்றைய தினம் சரஸ்வதிக்கே முக்கிய வழிபாடு. என்றாலும் தாமரை மலர் மீது நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் சித்தாத்ரி தேவியையும் வட மாநிலங்களில் வழிபடுவார்கள். சரஸ்வதி பிரம்மாவின் மனைவி எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இவளும் ஆதி பராசக்தியின் ஓர் அங்கமே ஆவாள். சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகிய பெயர்களிலும் வழிபடப்படுகின்றாள். சரஸ்வதி ஸூக்தம் இவளையே உலகின் ஆதி காரணி என்று சொல்கிறது. சக்தி தாசர்களின் தாரா வழிபாட்டில் வழிபடப்படும் சரஸ்வதியின் எட்டு வடிவங்கள் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர்கள் ஆவார்கள்.  கட சரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை சாலிவாகன மன்னனும் சியாமளா தேவியைக் காளிதாசனும் வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.

நதியாக ஓடி அந்தர்யாமியாகக் காட்சி கொடுப்பவளும் இவளே ஆவாள். சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள். கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள்.

இன்றைய தினம் பச்சைக்கற்பூரம் போன்ற வாசனாதி திரவியங்களால் ஆயுதங்களைக் கோலமாக வரையலாம். மருக்கொழுந்து, துளசி, வெண்ணிற மலர்களான மல்லிகை போன்றவை அன்னையின் வழிபாட்டுக்கு ஏற்றது.  இன்றைய தினம் அனைத்து சித்திகளையும் பெறுவதால் காலை அக்கார அடிசில்,  உளுந்து வடை, எள் உருண்டை, அப்பம் அல்லது அதிரசம் போன்றவையும் மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலை, வெல்லம் சேர்த்த மாவு உருண்டை போன்றவையும் நிவேதனம் செய்ய ஏற்றவை. ஒரு சிலர் இன்றைய தினம் புட்டு நிவேதனம் செய்வார்கள். கடலைப்பருப்புச் சுண்டலும் ஏற்றது!

Tuesday, October 16, 2018

நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 8

இப்போ அடுத்ததுக்குப் போகறதுக்கு முன்னால் ராம்ஜி யாஹூவின் நேயர் விருப்பம்.

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா தவ சரணயோர்-யா விரசிதா!
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வந்முகுலித-கரோத்தம்ஸ-மகுடா:

குணங்கள் மூன்று வகைப்படும். சத்வம், ராஜஸம், தாமஸம். சத்வ குணமே அனைத்திலும் மேலானதாய்ச் சொல்லப் படும். எனினும் எல்லாரிடமும் சத்வ குணமே மேலோங்கி இருப்பதில்லை. மூன்று குணங்களின் கலவையாகவே இருப்போம். இந்த மூன்று குணங்களின் மூலகர்த்தாவே அம்பிகைதான். லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை, “யோநிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா” என்று கூறுகிறது. இந்த குணங்களில் ரஜோ குணம் மேலிட்டிருந்தால் அதனுடன் சம்பந்தப் பட்ட சைதன்யம் ஆன பிரம்மாவும், சத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு சைதன்யமும், தமோ குணம் மேலிடும்போது ருத்ர சைதன்யமும் சம்பந்தப் படும். ஆகவே அம்பிகை இந்த ஈரேழு பதினான்கு உலகையும் ஈன்றவளாய், அனைத்துக்கும் மூத்தோளாய் இருக்கிறாள். அருள் கொண்டு ஈன்றது போல அவற்றைப் பாதுகாக்கவும் செய்கிறாள். தேவைப்படும்போது சம்ஹரிக்கவும் செய்கிறாள். மும்மூர்த்திகளையும் அவரவருக்கு உரிய தொழிலைச் செய்யுமாறு இயற்றுபவள் அம்பிகை என்பது இதன் மூலக் கருத்து.

இதையே அபிராமி பட்டர்,
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு 
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கிளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!” 

என்கின்றார். சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றியதால் இங்கே அம்பிகையை மூத்தவள் என்கிறார். இன்னும் தெளிவாய்ச் சொல்லப் போனால் அம்பிகையில் மும்மூர்த்திகளும் அடக்கம். ஆகவே அம்பிகையைப் பூஜித்தால் மும்மூர்த்திகளையும் பூஜித்ததாகும் என்பதே இந்த ஸ்லோகத்தின் மையக் கருத்து. இதையே லலிதா சஹஸ்ரநாமம்,

“ஸ்ருஷ்டி கர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணீ
சம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீ ஈஸ்வரீ
ஸதாசிவா அனுக்ரஹதா பஞ்சக்ருத்ய-பராயணா!

என்று கூறுவதை ஏற்கெனவே பார்த்தோம்.

இங்கே செளந்தர்ய லஹரியில் மேலும் மணிபீடஸ்ய நிகடே என்றும் கூறி இருக்கிறார் ஆசாரியாள். நம் சரீரத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்பதையும் அவற்றுக்கு உள்ள தத்துவத்தையும் ஏற்கெனவே பார்த்தோம். மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரச் சக்கரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் நம் உடலின் ஒவ்வொரு தத்துவத்தைக் குறிக்கும். அதோடு சம்பந்தப் பட்டதே. எப்படி எனில் மூலாதாரம் (இளவேனில் காலம்)வஸந்தருதுவாகவும் 55 நாட்கள் கொண்டதாயும், (வறண்ட கோடைக்காலம்)மணிபூரகம் 52 நாட்கள் கொண்ட க்ரீஷ்மருதுவாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாட்கள் கொண்ட (மழைக்காலம்)வர்ஷருதுவாகவும், அநாஹதம் 54 நாட்கள் கொண்ட (இலையுதிர்காலம்)சரத்ருதுவாகவும், விசுத்தி72 நாட்கள் கொண்ட (முன்பனிக்காலம்)ஹேமந்த ருதுவாகவும், ஆக்ஞா 64 நாட்கள் கொண்ட (பின்பனிக்காலம்)சிசிர ருதுவாகவும் வர்ணிக்கப் படுகிறது. இந்த ஆறு ஆதாரங்களும் மூன்று கண்டங்களாயும் பிரிக்கப் பட்டுள்ளது. அக்னி கண்டம், சூர்ய கண்டம், சோம கண்டம். அக்னி கண்டத்தில் பிரம்மக்ரந்தி, சூர்ய கண்டத்தில் விஷ்ணு க்ரந்தி, ஸோம கண்டத்தில் ருத்ர க்ரந்தி. ஆறு சக்கரங்களின் வழியாகவும் தேவியை உள்முகமாய் வழிபட்டால், மும்மூர்த்திகளையும் வழிபட்டதாகும். கடைசியில் சஹஸ்ராரத்தில் சச்சிதாநந்த ஸ்வரூப தரிசனம்.

இதை லலிதா சஹஸ்ரநாமம்,
மூலாதாரைக-நிலயா ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதிணீ
ஆக்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸூதாஸாராபி-வர்ஷிணீ!! 

என்று சொல்கிறது.

ஒவ்வொரு ஆதார சக்கரத்தின் வழிபாட்டின் மூலமும், சக்தியானவள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்துக்கொண்டு மேலே ஏறி சஹஸ்ராரத்தில் நிலை பெற்று இருக்கிறாள். இது யோகியருக்கே புரியும். நம் போன்ற சாமானியருக்கு எளிதில் புரியாது. குரு மூலமாகவே முயலவேண்டும். நம் உடலின் பஞ்சபூத தத்துவங்கள், இவ்வுலகின் பஞ்சபூத தத்துவங்களோடு பெரிதும் சம்பந்தப் பட்டிருக்கிறதைப் புரிந்து கொள்ள முடியும். அதைப் புரிந்து கொண்டோமானால் இந்த வார்த்தைகளுக்குப் பொருளும் எளிதில் விளங்கும்.

மூலாதாரம்-பூமி தத்துவம்
மணிபூரகம்- ஜல தத்துவம்
ஸ்வாதிஷ்டானம்-அக்னி தத்துவம்
அநாஹதம்-வாயு தத்துவம்
விசுத்தி- ஆகாயதத்துவம்
ஆக்ஞா- மனஸ் தத்துவம்

இந்த ஆறு ஆதாரங்களும், பஞ்ச பூதங்களும் காலகதிக்கு உட்பட்டவை, ஆனால் தேவியோ காலத்தைக் கடந்து என்றென்றும் நிற்பவள். இவ்வுலகத்தை அண்டம் என்கின்றோம். அதே பஞ்ச பூதங்களைக் கொண்ட நம் உடலோ பிண்டம் எனப்படும். நம் உடலின் மூலப் பொருட்கள் ஒன்பது. இவ்வுலகின் மூலப் பொருட்களும் ஒன்பது. ஆகவே அம்பிகையும் நவகோண நாயகியாவாள்.

நம் உடலின் மூலப் பொருட்களாகிய மஜ்ஜை, சுக்கிலம், பிராணன், ஜீவன் ஆகியவற்றை சிவாம்சம் எனவும், தோல், ரத்தம், மாமிஸம், மூளை, எலும்பு ஆகிய ஐந்தும் சக்தி அம்சம் எனவும் சொல்லப் படும். இது நம் பிண்டத்தின் சிவ, சக்தி அம்சங்கள் எனில் அண்டத்தில் பிருதிவி, வாயு, தேயு, அப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்கள் ஐந்தும் சக்தி அம்சமாகவும், அதைச் சார்ந்த மாயை, சுத்தவித்தை, மகேஸ்வரன், சதாசிவன் ஆகியன சிவாம்சமாகவும் கொள்ளப் படும். ஸரஸ்வதி அஷ்டோத்திரத்திலும், லக்ஷ்மி அஷ்டோத்திரத்திலும் தேவியை ப்ரஹ்ம-விஷ்ணு-சிவாத்மிகாயை நம: என்று சொல்லி இருக்கிறது. அம்பிகையே ப்ரம்ம ரூபமாயும், விஷ்ணு ரூபமாயும், ருத்ர ரூபமாயும் இருக்கிறாள் என்பதையும் முன்னரே பார்த்தோம். இந்த மாத்ருகா ரூபங்கள் அனைதுமே தேவியுடையவையே. தேவியை பட்டர் ஐந்து வர்ணங்களையும் உடையவள் என்றும் கூறுகிறார்.

“மங்கலை செங்கலசம் முலையாள் மலயாள் வருணச்
சங்கலை செங்கைச் சகல கலா மயில் தாவு கங்கை
பொங்கலி தங்கும் புரிசடையோன் புடை ஆளுடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே!” 

சில புத்தகங்களில் பசும்பொற்கொடியே என்றும் பாடம் இருக்கிறது.

மங்கலை என்றால் சுமங்கலி, அதுவும் நித்திய மங்கலையாகிய அபிராமி அன்னை, சிவந்த கலசம் போன்ற தனபாரங்களுடன், வருணனால் அளிக்கப் பட்ட சங்கு வளைகளை அணிந்த சிவந்த திருக்கரங்கள், எல்லாக் கலைகளுக்கும் தலைவி. இதை லலிதா சஹஸ்ரநாமம் சதுஷ்ஷஷ்டி கலாமயீ” என்றும் “கலாவதீ” என்றும் கூறும். அறுபத்து நான்கு கலைகளையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறாள் அம்பிகை என்றொரு அர்த்தம் கொள்ளலாம். அதோடு கலா என்றால் தோகை மயிலையும் குறிக்கும். ஈசனின் வாமபாகத்தை ஆட்கொண்ட அம்பிகையானவள் பொன் போன்ற நிறம் படைத்த பிங்கலை என்றும் கருநீல நிறம் கொண்ட காலி என்றும், செந்நிறம் கொண்ட லலிதாம்பிகையாகவும், வெண்ணிறம் பெற்ற விந்தியாவாகவும், பச்சை நிறம் பெற்ற மீனாக்ஷி, உமை அம்மையாகவும் இருக்கிறாள். இதிலே பிங்கலை ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில் காகினி என்னும் திருநாமத்தோடு பொன்னிறங்கொண்டு விளங்குகிறாள்.

இதை ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்,

ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா!
சூலாத்யாயுத- ஸம்பந்தா பீதவர்ணாதி கர்விதா!!
மேதோ-நிஷ்டா- மதுப்ரீதா பந்தின்யாதி- ஸமன்விதா
தத்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ” 

என்று கூறும். இவளே மூலாதாரத்தில் வீற்றிருக்கையில் ஸாகினீ என்னும் பெயரோடு நான்கிதழ்த் தாமரையில் பஞ்ச முகத்தோடு கரிய நிறத்தவளாய் இருக்கிறாள். லலிதா சஹஸ்ரநாமம் இதை,

“மூலாதாரம்புஜாரூட பஞ்சவக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா
அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா
முக்கெளதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா-ஸ்வரூபிணீ” 

என்றும் ஆக்ஞா சக்ரத்தில்,

“ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!
மஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி-ஸமன்விதா
ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ –ரூப-தாரிணீ” 

என்றும் கூறுகிறது. இதை பட்டர் “வெளியாள்=கலைமகள்” என்னும் பொருளில் அழைக்கிறார். ஆக்ஞா சக்ரத்தில் ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகத்துடனே ஹாகினீ என்னும் பெயரோடு வெண்ணிறமுடையவளாய் (சுக்ல வர்ணா)எழுந்தருளி இருக்கிறாள். விசுத்தி சக்ரத்தில் ரக்த வர்ணத்தில் டாகினீ என்னும் பெயரோடும் பட்டர் இவளைப் பொதுவாக “செய்யாள்=திருமகள்” என்னும் பெயரில் அழைக்கிறார்.

“விசுத்தி- சக்ர –நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா
கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா
பாயஸான்ன-ப்ரியா த்வக்ஸ்தா பசுலோக-பயங்கரீ
அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா-டாகினீஸ்வரீ!

, மணிபூரகத்தில் லாகினீ என்னும் பெயருடனும் இருப்பதாய்க் கூறுகிறது சஹஸ்ரநாமம்.

“மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா
வஜ்ராதிகாயுதோபேதா டாமர்ப்யாதிபி-ராவ்ருதா
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ரீத-மானஸா
ஸமஸ்த-பக்த ஸுகதா லாகின்யம்பா ஸ்வரூபிணீ

அநாஹதத்தில் ச்யாமளையாக ராகினீ என்னும் பெயரோடு வீற்றிருக்கிறாள்.

“அநாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா!
தம்ஷ்ட்ரேஜ்வலாக்ஷமாலாதி-தரா ருதிர-ஸம்ஸ்திதா
காலராத்ர்யாதி-சக்த்யெளக-வ்ருதா ஸ்நிக்தெளதன-ப்ரியா
மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணீ!”

இனி ஸ்ரீலலிதையின் சேனை என்ன செய்தது என்பதைப் பார்ப்போம்.

விக்ன யந்திரம் பொடிப்பொடியாகிப் போனதை அறிந்த பண்டாஸுரன் தன் தம்பிகளை அனுப்புகிறான். விசுக்கிரன் முன்னால் தலைமை வகித்து வருகிறான். மந்த்ரிணீ அவனை எதிர்த்துப் போரிடுகிறாள். அஷ்வாரூடையும் துணை புரிய சக்தி சேனைகள் எதிர்த்துச் சண்டை போட்டும் விசுக்கிரனின் பாணங்கள் மழையெனப்பொழிய அம்பிகையை வேண்டுகின்றனர்.

விஷங்களோடெதிர்த்தாள் மந்திரிணியும் பொல்லா
விசுக்கிரனை எதிர்த்தாள் வாராஹிதேவி
அச்வாரூடை முதலானபேரெதிர்த்தாள்
அந்தச் சேனைகளக்ஷெளஹிணிகளையும்
வஞ்சக விசுக்கிரன் பாண வருஷத்தால்
வாடி மெலிந்து சக்தி சேனைகளும்
அம்பாவின் சேனைகள் அஸ்திரத்தின் தாபத்தால்
அம்மனை வேண்டினார்-சோபனம் சோபனம்

மந்த்ரிணி உரையாலே சிந்துவைச்
சக்திகள் தாபந்தீர அழைத்தாள் 
வந்து சொரிந்தது சுத்த கங்கா தீர்த்தம்
வாரணத்துக்கை போல் இரண்டு சாமம்
வேண்டிய மட்டும் குடித்தே சக்திகளெல்லாம்
வெகு தாகந்தீர்ந்து பலமடைந்து
தேகக்களைகள் தீர்ந்து சத்தி சேனைகளெல்லாம்
ஜயத்துடன் எதிர்த்தார்கள்- சோபனம், சோபனம்

கங்கையின் நீரைப் பருகி புதிய பலம் பெற்று சக்தி சேனைகள் போரிட்டு விஷங்கன், விசுக்கிரன் போன்றோரை மந்திரிணியும், அஷ்வாரூடையும் வதம் செய்கின்றனர். இனி தானே நேரிடையாய்ப் போரிடவேண்டியதுதான் என பண்டாஸுரன் நினைத்தான். அவன் போருக்கு ஆயத்தமாகிறான்.

சேனாதிபதிகள் முதல் தம்பிகள் வரைக்கும்
செலவாய்ப் போனதைக் கேட்டுப் பண்டாஸுரன்
மானங்கெட்டவன் இன்னும் பின்னதி கோபமாய்
மஹேச்வரியை வைது திட்டிக்கொண்டு
கடித்துக்கொண்டான் பர்களையும் உதட்டையும்
கண்களிலே அனல்பொறி பறக்கக்
குடிலாக்ஷனைப் பார்த்து ஆக்கினை செய்கின்றான்
கிப்பக் குழந்தாய் கேள்-சோபனம், சோபனம்

கேளாய் குடிலாக்ஷா லலிதையென்பாளொருத்தி
கேடு செய்தாள் நமக்கினியவளை
வாளாலே லேசுலேசாகவே கொய்கிறோம்
வரவிடுவாய் என்றன் சேனையெல்லாம்
முன்கோட்டை வாசலில் காக்கும் சேனையைத் தள்ளி
மிச்சம் மீதியாயுள்ள சேனையெல்லாம்
பெண்கள் தவிர, மற்றப் பேர்களும் புறப்பட்டார்
பெண்கொடி லலிதைக்கு-சோபனம் சோபனம்

கழுதை, குதிரைகள் போன்றவகள் தேரில் பூட்டப் பட்டன. கரடி, சிங்கம், ஒட்டகம், கரும்பன்றி, காக்கை, பருந்து, கோழி, செந்நாய்கள், பாம்புகள், இன்னும் பூதப் ப்ரேதங்கள், வேதாளங்கள் போன்றவையும் வாஹனங்களாய் வந்து துணை செய்கின்றன. இதைத் தவிரவும் சாமானிய வாஹனங்களும் அநேகமாய் வருகின்றது. பண்டாஸுரன் கிளம்பும்போதே வழக்கம்போல் அபசகுனங்கள் தெரிய வருகின்றன. பூமாதேவி நடுங்கினாள். விண்ணிலிருந்து ரத்தம் சொரிந்தது. யானைகளுடைய தந்தங்கள் திடீரெனக் காரணமே இல்லாமல் முறிந்தன. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் பண்டாஸுரன் கிளம்பி வருகிறான்.

எந்த உற்பாதமும் எண்ணாமல் வருகிறான்
இலவம்பஞ்சு காற்றில் பறக்கின்றாப்போல்
பொல்லாத காலத்தில் பண்டாஸுரன் சேனை
புறப்பட்ட தம்மனை ஜயிக்கவென்றே
துஷ்டப் பண்டாஸுரன் வருவதைக் கண்டு
சூரிய சந்திரன் ஏழு சமுத்திரமும்
அஷ்டதிக் கஜங்களும் அலறி நடுங்கிற்று
அம்மனுக்கே ஜயம்- சோபனம் சோபனம்



இன்றைய தேவி மஹா கௌரி எனப்படுவாள். நாரசிம்ஹ தாரிணியாக வில், அம்புகளை ஏந்திக் கொண்டு அணிமா, லஹிமா போன்ற அஷ்டமாசித்திகளும் சூழ்ந்து  கொண்டிருக்கக்  காட்சி தருகிறாள் தேவி.  ரக்தபீஜனை வதம் செய்த பின்னர் சாந்தமான திருக்கோலத்தில் மஹா கௌரியாக ரிஷபத்தின் மீதோ அல்லது சிங்காதனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்திலோ வழிபடலாம். இன்னும் சிலர் அன்னபூரணியாகப் பாவிப்பார்கள்.

ஒன்பது வயதுப் பெண் குழந்தையை "துர்கை"யாகப் பாவித்து வழிபட வேண்டும். காசுகளால் பத்மம் வரையலாம். அல்லது அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப்பூக்கோலம் போடலாம். மருதாணிப் பூக்கள், செண்பக மலர், சாமந்தி, வெண் தாமரை மலர், விபூதிப் பச்சை போன்றவை வழிபாட்டுக்கு உரியவை ஆகும். குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். இன்றைய நிவேதனம் நெய்ப்பாயசம் செய்யலாம்.  மாலை நிவேதனமாக இன்று வெள்ளிக்கிழமையாக இருந்தால்   புட்டு செய்யலாம். அல்லது கடலைப்பருப்பு, கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல் செய்யலாம்

Monday, October 15, 2018

நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 7

ஸுமேரு – மத்ய- ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர -நாயிகா!
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச –ப்ரஹ்மாஸன –ஸ்திதா!!
என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியபடிக்கு லலிதா காமேஸ்வரரின் திருக்கல்யாணத்துக்குப் பின்னர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீகாமேஸ்வரரோடு வீற்றிருந்த தேவியிடம் தேவாதி தேவர்கள் பண்டாசுர வதம் பற்றி நினைவூட்டுகின்றனர். அம்பிகையும் இதற்கெனவே தான் தேவ கார்யத்துக்காக அவதாரம் எடுத்திருப்பதால் இனி தாமதிக்கக் கூடாதென்று தன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு பண்டாஸுரனோடு யுத்தம் செய்யத் தயாராகின்றாள்.


இதை லலிதா சஹஸ்ரநாமம் “தேவர்ஷி-கண-ஸங்காத ஸ்தூயமானாத்ம-வைபவா
பண்டாஸுர-வதோத்யுக்த சக்திஸேனா-ஸமன்விதா!! என்று கூறுகிறது.

ரதகஜ துரக பதாதிகளுடன் கடல் 
அலைபோல வருகின்றாள் சேனையுடன்
சதுரங்கமான சக்தி சேனைகளுடனே
சங்கரி வருகிறாள் –சோபனம் சோபனம்

சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதா
கேயசக்ர-ரதாரூட- மந்திரிணீ-பரிஸேவிதா
கிரிசக்ர-ரதாரூட-தண்டநாதா-புரஸ்க்ருதா
ஜ்வாலாமாலினிகாக்ஷிப்த-வஹ்னி ப்ராகார-மத்யகா
பண்டஸைன்ய-வதோத்யுக்த-பாலா விக்ரம-நந்திதா
மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா

ஸ்ரீசக்ர ராஜ ரதத்திற்கொன்பது தட்டு
சிங்கார உருளைகள் நான்கு வேதம்
பூஜ்யமான தர்மார்த்த காம மோக்ஷம்
புனிதமான நான்கு குதிரைகளாம்
ஆனந்தக் கொடிமரம் அதற்கு மேலழகாய்
ஐந்து யோசனை யகலம் முத்துக்குடை
முந்நூறு தேர்ப்படை முழுதுஞ் சக்திகள் வாராள்
முழுத்தேரும் தேவிக்குச் –சோபனம் சோபனம்


அம்மன் தொரட்டியில் இருந்துமொரு தேவி
ஸம்பத்கரி என்று உண்டானாள்
நன்மையாகவே பின்னும் அச்வாரூடை யுதித்தாள்
நாகபாசத்திலே உண்டாகி
யானைகள் ஸம்பத்கரிக்குச் சேனையாம்
அச்வாரூடைக்குக் குதிரைகளாம்
தாயார் மந்திரிணியுடைய ஸ்ரீசக்ரத்தில்
தட்டுக்களேழுண்டு-சோபனம் சோபனம்

மந்த்ரிணி தேரிலும் ஸ்ரீசக்ரம்போலவே
மஹாசக்திதேவிகள் நிறைந்திருக்காள்
விந்தையாய்ப் பதினாறு நாமத்தால் தேவர்கள்
மந்த்ரிணியை ஸ்தோத்திரங்கள் செய்தார்
சியாமளையுடைய திருக்கையிலிருந்து
தானும் பாணத்தோடொரு கோதண்டத்தை
நமஸ்கரித்தம்மனிடம் வாங்கியே மந்த்ரிணி
நாயகி வருகிறாள் –சோபனம் சோபனம்

“பைரவி, பஞ்சமி பாசாங்குசைபஞ்ச பாணிவஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வைரவி மண்டலி மாலினி சூலி வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே!” 
என்கின்றார் அபிராமிபட்டர்.


பைரவியும்=பைரவரின் சக்தியான இவள் பார்த்தாலே அச்சம் தருபவளாயும், பஞ்சமியும், சதாசிவத்தின் சக்தியைப் பஞ்சமி என்பார்கள் இங்கே! இது ஐந்தாவது சக்தியான அனுகிரஹ சக்தியாகும். லலிதா சஹஸ்ரநாமம் இவளை, “பஞ்சமி, பஞ்சபூதேசீ பஞ்ச-ஸக்யோபசாரிணீ!” என்கிறது. வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி=சண்டிகா தேவி, கோபத்தோடு வந்து அசுரனை வதம் செய்தவள். “அபர்ணா, சண்டிகா, சண்டமுண்டாசுர நிஷூதனி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். அடுத்து காளி, கருநிறமுள்ள காளியை “மஹேச்வரி, மஹாகாளி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். கலா வைரவி மண்டலி =சூரிய, சந்திர மண்டலங்களில் வீற்றிருப்பதைக் குறிக்கும். மாலினி=அக்ஷரமாலையைச் சூடியவள், சூலினி=சூலத்தை ஆயுதமாகக் கொண்டவள், , வாராஹி, விஷ்ணு சக்தி வகையைச் சேர்ந்தவளான இவளை அம்பிகையின் அம்ச சக்திகளுள் தண்டினி என்னும் பெயரோடு அழைக்கப் படுவாள்.

இவ்வாறு அம்பிகை பல சக்திகளாய் விரிந்து நிறைந்து இருப்பதையே பட்டர்,
“ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்திவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்றால் இலையில் துயின்றெம்பெம்மானும் என் ஐயனுமே.”
என்கின்றார்.

“வாராஹி தேரிலும் சக்திகள் இருக்கின்றார்
வாராஹிப்போன்ற ப்ராக்கிரமமாய்க்
கோரமஹிஷம் மிருகம் சிம்ஹம் யாளிமேல்
கூட வருகிறார் சக்திகளும்
தண்டெடுத்து வரும் வாராஹியைப் போற்றி
அப்ஸரஸ்த்ரீகளும் தேவர்களும்
கண்டு பன்னிரண்டு நாமத்தால் வாராஹியைக்
கைகூப்பி ஸ்துதிக்கின்றார்-சோபனம் சோபனம்

ஆலவட்டம் வெண்கத்திக்குடைகள் கொடிகள்-கொண்டு
அஸுராள் மேல் கோபிஷ்டைகளாகக்
கோலாஹலமாக யுத்த பேரி வாத்யம் முழங்க
கொடி பறக்க அணியணியாய் வாராள்
தேவ வாத்தியம் முழங்க கந்தர்வர் கானம் பண்ண
தேவதாஸிகள் நாட்டியமாடிவர
தூயமுனிவர் மலர்சொரிய லலிதேச்வரி
சுகத்துடன் வருகிறாள்-சோபனம் சோபனம்

தேவி யுத்தத்திற்கு வருகின்றதைக் கேட்டு
திடுக்கிட்டுப் பண்டாஸுரன் சபையில்
கோபத்துடனே சிம்ஹாசனத்திலிருந்து
கூடிய அஸுராளோடு யோசித்தான்
இடிபோல் அட்டகாசஞ் செய்தான், கோட்டை வாசல்கள்
எல்லாவற்றிலும் காவல் வைக்கச் சொன்னான்
குடிலாக்ஷன் மந்திரியை யுத்தத்திற்கனுப்பினான்
கோபிஷ்டை லலிதையுடன் – சோபனம் சோபனம்

அடுத்து விநாயகர் உற்பத்தியும், விக்ன யந்திரம் அழிதலும் பார்க்கலாம்.

ஹர –நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவ நெளஷதி:

ஈசன் காலாக்கினி ருத்ரனாகத் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தபோது அம்பிகையானவள் தன் குளிர்ந்த நோக்கால் சஞ்சீவனி மருந்து போலச் செயல்பட்டு மன்மதனைப் பிழைக்க வைத்தாள். அத்தகைய சஞ்சீவனி போலவே ருத்ரன் உலகங்களை எரிக்கும்போது எரிந்த உலகிற்குக் குளிர்ச்சியைத் தன் பார்வையால் கொடுத்து மன்மதனைப் பிழைக்க வைத்தது போல் அனைவரையும், உலகங்கள் அனைத்தையும் பிழைக்க வைக்கிறாள். ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தோடு அம்பிகையின் ஸ்வரூபமும் கலந்திருக்கின்றதாவது பூவிலே எப்படி மணம் சேர்ந்திருக்கிறதோ அவ்வாறு இருக்கிறதாம். பூவிலிருந்து சுகந்தத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ, அக்னியில் இருந்து பிரகாசத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ அப்படியே ஈஸ்வரனையும் அம்பிகையையும் பிரிக்க இயலாது. இந்த அபூர்வ தம்பதிகளின் ஆநந்தமயமான பிரகாசமே அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் ஜீவாதாரமாய் விளங்குகிறது. இதையே லலிதா சஹஸ்ரநாமத்தில் வ்யோமகேசீ, விமானஸ்தா” என்று கூறுகின்றனர். இதை ஆகாச தத்துவம் எனவும் கூறுவர். அர்த்தநாரீச்வரரைக் குறிப்பதாயும் கூறுவார்கள்.

இதை பட்டர்

“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமான தபசயமாகமுன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே!

தேவியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அதிசயமான வியப்பைத் தரும் திருவுருவை உடைய தேவி, அழகிய தாமரை மலர்களால் துதிக்கப்படும் அந்தத் தேவியே அந்தத் தாமரைக்கொடி போன்ற மெல்லிய உடலை உடைய அழகியவள், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய ஈசனைத் தன் வயம் இழுத்து அவரது இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டதை எங்கனம் சொல்லுவேன்? என்கிறார். மேலும், அந்த வாமபாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்து ஒன்றி இருக்கும் கோலமும், நம் உள்ளத்துள்ளே உள்ள ஆணவத்தைப் போக்கி நம்மைத் தடுத்தாட்கொள்ளுகிறதாம். அதுவும் எப்போது?? “வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!” என்கிறார்.

“வவ்விய பாகத்திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!”

காலன் வந்து நம் உயிரைக்கொள்ளும்பொருட்டு வரும்போது அம்பிகையின் தரிசனம் வேண்டிப் பிரார்த்திக்கொள்ளவேண்டும் என்கிறார் பட்டர். இனி லலிதையின் சேனை எவ்வாறு யுத்தம் செய்தது என்று பார்ப்போம்.

“பண்டஸைந்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா!
நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸூகா!!
பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா!
மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா!
விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா!
காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வரா!
மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா!
பண்டாஸூரேந்த்ர-நிர்முக்த-சஸ்த்ர-ப்ரத்யஸ்த்ர-வர்ஷிணீ!!


மேற்கண்ட ஸ்லோகங்களில் நடைபெறும் சம்பவங்களையே இன்று பார்க்கப் போகிறோம். பண்டாசுரனை வதம் செய்யவென்று அம்பிகை அனுப்பிய சேனைகளோடு முதலில் மந்திரி போர் செய்ய வந்தான். நாற்பது அக்ஷெளஹிணி சேனைகளைக் கொண்டு யுத்தம் செய்தவனை சம்பத்கரி வதைக்கிறாள். அதன் பின்னர் அனுப்பிய குண்டனை அச்வாரூடை சம்ஹரிக்க, தன் சேனாபதிகள் ஐவரை அனுப்பி வைக்கிறான். கூடவே விஷமான மாயைகளையும், சர்ப்பேணிப் பிசாசுகளையும் அனுப்பிப் பயமுறுத்துகிறான். அந்தச் சர்ப்பேணியானவள் அசுரனின் கட்டளையாலே பல பாம்புகளைப் பெற்று அவற்றை எல்லாச் சக்திகளின் மேலும் ஏவிவிடுகிறாள்.

“விதவித சர்ப்பங்கள் விஷத்தைக் கக்கிக்கொண்டு
விழுந்ததுகள் சக்திசேனையின் மேல்
இதைக்கண்டு நகுலியம்மன் கருடன் தோளில்
இருந்ததிவேகமாய் ஓடி வந்து
பாம்புக்கு ம்ருத்யுவாம் கீரிப்பிள்ளைகளைப் 
பல்லுகளிலிருந்து விழவடிஅத்தாள்
அம்மெட்டுப் பாம்பையும் துண்டாக்கியது
அம்மன் கீரிப்பிள்ளைகள்-சோபனம் சோபனம்

இதைக் கண்ட பண்டாசுரன் தன் ஏழு பிலாஸ்கார் மந்திரி ராணுவத்தை அனுப்பி சூரியனையும் மிகவும் வருத்தித் தன் வரத்தாலே அம்மன் சேனையை ஸ்தம்பிக்க வைத்தான். அப்போது தண்டினி முன்னால் ஓடோடி வந்து மந்திரிகளின் கண்களைக் குருடாக்கி அனைவரின் தலைகளையும் கொய்து மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். பண்டாசுரன் தன் சகோதரர்களோடு கலந்து ஆலோசித்துவிட்டுக் குடிலாக்ஷனை மேலும் சேனைகளோடு அனுப்பி லலிதையை உயிரோடு பிடித்துக்கொண்டு வரச் சொல்கிறான். தேரைச் சுற்றி வளைத்துக்கொண்ட குடிலாக்ஷனின் கொடுமையால் சக்திகள் தேவியிடம் முறையிடுகின்றனர். அப்போது,

பின்னே கள்ளர் வந்து செய்யுங் கலகத்தைப்
புரட்டுச் செய்கையைத் தேவியறியாமல்
முன்னே தண்டநாதைச் செய்கின்ற சண்டையின்
வேடிக்கை பார்த்தம்மனிருந்து விட்டாள்
துரோகி விஷங்கள் ஒரு பாணத்தால் தேரின்
துலங்குங் கொடிதன்னை அறுத்துவிட்டான்
வேகமாய்ப் புருவங்களை அம்மன் கோபத்தால்
வில்லுப்போல வளைத்தாள்- சோபனம், சோபனம்.

அன்னையின் கோபத்தைக் கண்ட பதினைந்து காமேச்வர சக்திகள் அசுரனைக் கொல்ல அம்மனால் அனுப்பப் பட்டனர். ஜ்வாலா மாலினி முதல் பதினைந்து அசுரர்களையும் கொன்றழிக்க, குடிலாக்ஷனை வாராஹி துரத்துகிறாள். பின்னர் ஜ்வாலா மாலினியின் உதவியோடு அக்னிக் கோட்டையை நிர்மாணம் செய்து சக்திகள் அனைவரோடும் அம்பிகை உள்ளே இருக்கின்றாள்.

“குடிலாக்ஷனையும் துரத்தினாள் வாராஹி
கூடிவந்த அஸுராளைக் கொன்றாள்
விடியற்காலங் கண்டு விஷங்கன் செய்ததுகளை
விசையாய் மந்த்ரிணி தண்டநாதையுமாய்
அம்பாவிடத்தில் சொல்லி ஜ்வாலாமாலினியாலே
அக்னிக்கோட்டையைப் போடச் சொன்னாள்
தென்புறம் வீதியொரு யோஜனை வாசலில்
ஸ்தம்பினியும் காவல்-சோபனம் சோபனம்.

முப்பது யோஜனை உயரமுள்ள கோட்டை
முழுவதும் நூறு யோஜனை சுற்றளவு
இப்படி ஸ்ரீசக்கரத் தேருஞ் சேனையுங் கொண்டு
இருக்கின்றார் சக்திகள் தீக்கோட்டைக்குள்
தம்பியும் மந்திரியும் தப்பி வந்ததையும்
சலியாத தீக்கோட்டை மஹிமை கேட்டு
அன்பாய் முப்பது பிள்ளைகளைப் பண்டன் 
சண்டைக்கு அனுப்பினான் தேவி மேல்-சோபனம், சோபனம்

இப்போது பாலா திரிபுரசுந்தரியை அனுப்புகிறாள் தேவி. தண்டினியும், மந்த்ரிணியும் துணைக்கு வர, சின்னஞ்சிறு பெண்ணான பாலா கண்டித ரதத்தில் ஏறிக்கொண்டு போருக்குப் போகிறாள். பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா!” என மேலே கூறியுள்ள படிக்கு பண்டாசுரனின் புத்திரர்களையும், கூட வந்த அசுரர்களையும் பாலா திரிபுர சுந்தரி அழிக்கிறாள். அதைக் கேள்விப் பட்ட பண்டாசுரன் கொடிய அசுரன் ஆன விசுக்கிரனை அனுப்பி விக்ன யந்திரம் செய்யச் சொல்கின்றான்.

“பாலாதேவி கையால் பிள்ளைகள் மாண்டதைப்
பண்டன் கேட்டுப் புலம்பி அழுதான் மெத்த
கொலைபாதகன் விக்னயந்திரஞ் செய்யச் சொல்லிக்
கொடூரன் விசுக்கிரனை அனுப்பி வைத்தான்
துஷ்ட விசுக்கிரன் அக்னிக்கோட்டையில் வந்து 
சுற்றி உள்ளே போகமாட்டாதே
கெட்டவன் பாறையில் எட்டுத் தேவதேயந்திரம்
சீறி ஏவினான் கேளும்-சோபனம் சோபனம்

யந்திரத்தால் சக்திகள் புத்தி மயங்கியே 
எல்லோரும் ஸ்தம்பித்து இருந்தார்கள்
தண்டினி, மந்த்ரிணி, அம்பாளிடத்திற்குச் சொல்ல
மாதாவும் காமேசர் முகத்தைப் பார்த்தாள்
சக்தி கணபதி சுத்த லக்ஷணத்துடன்
திடுமென்று குதித்து வ்ந்து யந்திரத்தைக் 
குத்தித் தன் கொம்பாலே தூளாய்ப் பறக்கவிட்ட
குஞ்ஜார முகர்க்குச் –சோபனம், சோபனம்

விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா!
காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வரா!
மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா!

அம்பாள் தன் பார்வையைக் காமேச்வரர் பக்கம் திருப்ப, அம்பாளின் மறுபாதியான ஈசனும் அம்பிகையின் எண்ணம் தெரிந்து விக்னேஸ்வரரை அவதரிக்க வைக்கிறார். விக்னேஸ்வரர் வந்து தன் கொம்பாலே விக்ன யந்திரத்தைப் பொடிப் பொடியாக்கி நிர்மூலமாக்கி அம்பாள் மனதைக் குளிர வைக்கிறார்.

நாளை பண்டாசுரனின் சகோதரர்கள் வதமும், பண்டாசுரன் யுத்தம் செய்தலும்

ஒரு யோஜனை என்பது கிட்டத் தட்ட பனிரண்டு, அல்லது பதின்மூன்று மைல்களைக் குறிக்கும்.

கூடிய வரைக்கும் ரொம்பவே எளிமையான வார்த்தைகளாய்ப் போட்டே விளக்கம் சொல்கிறேன். தத்வார்த்தமான விளக்கத்துக்கு எல்லாம் போகலை! ஆகவே புரியலைனா சொல்லிடுங்க. :)))))))

நவராத்திரி கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக வழிபடுவோம். இன்றைய தினம் தேவியின் திருநாமம் காலராத்ரி! பொதுவாக சனிக்கிழமைகளில் இவளை வழிபடுவார்கள். என்றாலும் சிலர் ஏழாம்நாளுக்கான தேவியாக வணங்குகின்றனர்.  காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.

        à®šà®¿à®¤à¯à®¤à®¾à®¤à¯à®°à®¿ க்கான பட முடிவு

ஶ்ரீவித்யா உபாசகர்கள் இவளை ஶ்ரீவித்யா பீஜாக்ஷரியாக ஆராதிக்கின்றனர். சண்ட, முண்டர்களை நேருக்கு நேர் மோதி அழித்த தினம் என்பதால் அன்னையின் சக்தி அதிகமாக ஆகும் தினமாகச் சொல்லுவார்கள். இன்றைய தினம் அன்னையை தங்கப் பீடத்தில் வீணா, புஸ்தக தாரிணியான சாம்பவியாக அலங்கரிக்கலாம். எட்டு வயதுப் பெண் குழந்தையை சாம்பவி என்னும் பெயரால் வழிபட வேண்டும். வெண்ணிற மலர்கள் மிகவும் உகந்தவை. மல்லி, நித்தியமல்லி, நந்தியாவட்டை போன்றவை உகந்தவை.
செண்பகம், ரோஜா, பன்னீர் இலை, புஷ்பம் போன்றவற்றால் திட்டாணிக் கோலமோ, வட்ட வடிவமான கோலமோ போடலாம்.

இன்றைய நிவேதனம் எலுமிச்சைச் சாதம். மாலை சிவப்புக்காராமணியில் வெல்லம் போட்ட சுண்டல் அல்லது பயறு வெல்லச் சுண்டல் செய்யலாம். வியாழக்கிழமை  வந்தால் அன்றைய தினம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டலும் செய்யலாம்.