எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 30, 2021

ஶ்ரீராம் கேட்ட டிஃபன் வகையறா பட்டியல்! சின்னது தான்!

 ஞாயிற்றுக் கிழமை குடும்ப உறுப்பினர்கள் அநேகமாக வீட்டில் இருப்பதால் அன்னிக்கு அடை/பூரி, கிழங்கு/சப்பாத்தி/குருமா என வைச்சுக்கலாம்.

திங்கள் கிழமை மாவு அரைத்து அன்றே தோசை வார்க்கலாம். மறுநாள் இட்லி பண்ணலாம். இட்லிக்குத் தனியாகவெல்லாம் நான் அரைப்பதில்லை.

செவ்வாய்க்கிழமை இட்லினு சொன்னாலும் வேறே ரவா கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி, சேமியா கிச்சடி ஏதேனும் ஒண்ணு வைச்சுக்கலாம்.

புதன் கிழமை ரவா தோசை, உசிலி உப்புமானு பச்சரிசி+பாசிப்பருப்பு வறுத்து உடைத்த கலவையில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்துக் கடுகு+பருப்பு வகைகளோடு பமி/இஞ்சி தாளித்துக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கிப் பின்னர் ரவையைக் கொதிக்கும் நீரில் சேர்த்துக் கடைசியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கணும். இதற்குத் தக்காளித் துவையல், வெங்காயத் துவையல் நல்லா இருக்கும். 

வியாழக்கிழமை பலருக்கும் விரதமாக இருக்கும். ஆகவே அரிசி உப்புமா/கொத்சு, ஜவ்வரிசி உப்புமா,   னு பண்ணலாம்.

வெள்ளிக்கிழமை கோதுமை தோசை/தக்காளி தோசை/கேழ்வரகு அடை, வெஜிடபுள் ஊத்தப்பம் (ரவையும் மோரும்/அல்லது தயிரும் இருந்தால் போதும்) ரவா இட்லி னு பண்ணலாம்

சனிக்கிழமை இன்னிக்கும் பலருக்கும் விரதமாக இருக்கும். ஆகவே விரதப் பலகாரங்களான பச்சரிசி அடை, சேவை, இடியாப்பம்னு பண்ணலாம்.

இதைத் தவிர்த்துப் புளிப்பொங்கல் (அரிசிக்குருணையில் பண்ணுவது) புளி உப்புமா(அரிசி மாவில் புளி கரைத்து உப்புப் போட்டுத் தாளிதங்கள் செய்து பண்ணுவது)மோர்க்களி, பச்சைமாப்பொடி உப்புமா என்னும் மோரில் அரிசிமாவைப் போட்டுப் பண்ணும் உப்புமா, அவல் உப்புமா வகைகள், இதில் உருளைக்கிழங்கு வேகவைத்துச் சேர்த்துப் பண்ணும் ஆலூ போஹா, வெங்காயம் போட்டுப் பண்ணும் காந்தா போஹா, அதைத் தவிர்த்துப் புளி அவல், தேங்காய் அவல், ஜீரகம் சேர்த்த அவல், காய்கள் சேர்த்த அவல் உப்புமா என்று பண்ணலாம். பச்சரிசி, பாசிப்பருப்பை வறுத்துக் கொண்டு பண்ணும் பொங்கலும் விரதங்களுக்கு உகந்ததே. வறுத்து விடுவதால் அதை ஏற்கலாம் என்பார்கள். 

வாரத்தில் ஒரு நாள் எண்ணெயில் பொரித்த பக்ஷண வகைகள் பண்ணலாம். பஜ்ஜி, போண்டா, வடை, மசால் வடை, கீரை வடை, பகோடா, பஜியா எனப்படும் உ.கி.வெங்காயம் சேர்த்த தூள் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி. உ.கி. போண்டா, வெஜிடபுள் போண்டா, சமோசா, ஆலூ டிக்கி, கசோடி எனப் பண்ணலாம். அல்லது முறுக்கு, தேன்குழல், முள்ளுத் தேன்குழல், ஓலை பகோடா, ஓமப்பொடி, மிக்சர், காராபூந்தி, காராசேவு, மிளகு சேவு, தட்டை எனப் பண்ணி வைத்துக் கொண்டு ஒரு பத்து இருபது நாட்கள் ஓட்டலாம். சில நாட்கள் மாலை வேளைகளில் சாப்பிடச் சுண்டல் பண்ணிக்கொள்ளலாம். கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை, காராமணி, பட்டாணிச் சுண்டல்களில் சுண்டல் பண்ணியதும் அவற்றில் காரட், வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தூவிக் கொண்டு எலுமிச்சம்பழம் பிழிந்து கொண்டு சாப்பிடலாம். பேல்பூரி பண்ணியும் சாப்பிடலாம். அதற்குத் தேவையான சட்னிகள் இல்லைனாலும் பரவாயில்லை. சுகா(ஸூகா) பேலாகச் சாப்பிடலாம். முட்டைப்பொரி, ஓமப்பொடி(மெலிதாகப் பண்ணினது) காரக்கடலை, வேர்க்கடலை, கடலைப்பருப்பு வறுத்தது சேர்த்துத் தக்காளி, வெங்காயம், காரட் துருவிப் போட்டுக் கொண்டுப் பச்சைக்கொத்துமல்லிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக்கலந்து ஊற வைக்காமல் சாப்பிட்டுடணும். 

சட்னி வகைகள் இருந்தால் வீட்டில் செய்த தட்டை, முறுக்கு வகைகளை அந்த பேல் பூரி கலவையில் நொறுக்கிச் சேர்த்துப் பச்சைச் சட்னியும் புளிச்சட்னியும் சேர்த்துக் கலந்து ரொம்ப நேரம் ஊற விடாமல் சாப்பிட்டுடணும். ஒரு வருஷம் உப்பு அதிகமான கோகுலாஷ்டமி பக்ஷணங்களை நான் இப்படித்தான் தீர்த்தேன். இன்னும் எத்தனையோ இருக்கும். இப்போதைக்கு இம்புட்டுத்தேன். 

Friday, January 29, 2021

சேவை சாதிக்கிறேன்!

 நேற்றுக் காலம்பரக் கொஞ்சம் சீக்கிரமா எழுந்துட்டேன். நம்ம ரங்க்ஸ் எழுந்திருக்கலை. ஆனால் நான் ஏற்கெனவே தைப்பூசத்துக்கு உம்மாச்சிக்கு ஏதேனும் பண்ணி நிவேதனம் பண்ணிட்டு அதையே எடுத்துக்கலாம்னு நினைச்சிருந்தேன். தை வெள்ளி கொழுக்கட்டை இப்போப் பண்ண முடியாது. ஆகவே பூசத்தன்னிக்குச் சும்மாப் பத்துக் கொழுக்கட்டை பண்ணிடலாம்னு நினைச்சேன். காலம்பரவே அரிசியையும் ஊற வைச்சுட்டு அம்மிணிக்கொழுக்கட்டையாப் பண்ணிடலாம்னு அதற்காக உளுந்தையும் கொஞ்சம் துபருப்பு, கபருப்பையும் அதோட சேர்த்தேன். ஸ்ராத்தம் தவிர்த்த மற்ற நாட்களில் வெறும் உளுந்து வடை பண்ணக் கூடாதுனு எங்க வீடுகளிலே ஒரு சம்பிரதாயம். ஆகவே எப்போவும் முப்பருப்பு வடை தான். ஆனால் உளுந்து வடைங்கறச்சே உளுந்து நிறையப் போட்டுட்டுக் கொஞ்சமா துபருப்பு+கபருப்பு சேர்ப்போம்.

அப்புறமா சமையலுக்கு வாழைப்பூ இருந்ததால் அதைப் பொரிச்ச குழம்பு/கூட்டுக்குழம்பு ஏதானும் பண்ணிடலாம்னு கூட்டுக்காகப் பருப்பு வகைகளையும் நனைச்சு வைச்சுட்டுப் புளியையும் ஊற வைச்சேன். கூட்டிலே போட சிவப்புக்காராமணி நல்லா இருக்கும்னு எப்போவும் அதை வறுத்துச் சேர்ப்பேன். நேற்று அதையும் ஊற வைச்சேன். அப்புறமா நம்மவர் எழுந்து வந்தார். காஃபி முதலான கடமைகள் முடிஞ்சதும் என்னோட தைப்பூசத்திற்கான அட்டவணையைச் சமர்ப்பித்தேன். சரினாரா, நான் எழுந்து போயிட்டேன், வேறே ஏதோ வேலை இருந்தது. இவர் சும்மா இருக்காமல் மண்டை குடைச்சல் தாங்காமல் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்திருக்கார். ஞாயிற்றுக்கிழமை சங்கட சதுர்த்தினு பார்த்ததும் என்னைக் கூப்பிட்டு உடனே அது என்ன கொழுக்கட்டையா இருந்தாலும் கான்சல்னு சொல்லிட்டுச் சமையல் திட்டத்தையும் தலைகீழாய் மாற்றிட்டார்.

குட்டிப் பறங்கிக்காய் இருந்ததால் அதில் துவையல் பண்ணிட்டுப் பாகற்காய் வறுத்து வைச்சுடு. ஏதேனும் ரசம் வேண்டும்னு சொல்லிட்டு முடிச்சுட்டார். நான் திருதிரு. நனைச்சு வைச்ச அரிசியை/பருப்பு வகைகளை என்ன பண்ணுவது? புளியும் ரசத்துக்கும் துவையலுக்குமாய்ச் சேர்த்து ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்குப் போதும். என்ன பண்ணலாம்? யோசிச்சேனா. இவர் ரொம்ப நாட்களாக சேவை வீட்டிலே பண்ணவே இல்லையேனு கேட்டுட்டு இருந்தார்.  இந்த அரிசியோடு இன்னும் கொஞ்சம் அரிசியை நனைச்சுட்டு சேவை பண்ணிடறேன்னு அறிவித்தேன். பின்னர் சத்தம் போடாமல் நனைத்த பருப்பு வகைகளை உளுத்தம்பூரணத்துக்காக ஊற வைச்சிருந்த உபருப்புக் கலவையோடு சேர்த்துட்டேன். வேறே வழி? அதை உப்புக் காரம் போட்டு அரைச்சு நறுக்காமல் வைச்சிருந்த வாழைப்பூவை நறுக்கிச் சேர்த்து வாழைப்பூ வடையாப் பண்ணிடறேன்னும் சொல்லிட்டேன். ஒரு வழியாக சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது.

பின்னர் சமையலை ஒரு வழியா முடிச்சுட்டு நனைச்சு வைச்ச பருப்பு வகைகளை மறுபடி களைந்து நீர் போக வடிகட்டி வைச்சுட்டு ஊற வைச்ச அரிசியை சேவைக்கு அரைச்சு வைச்சேன். பின்னர் பருப்பு வகைகளோடு உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டு அதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சேன். சாயந்திரம் தானே வடை தட்டணும்! பின்னர் ஒரு வழியா 3 மணிக்குச் சேவைக்கு மாவைக் கிளறிக் கொட்டி அதைத் தண்ணீரில் போடலாமா கொழுக்கட்டைகளாக வேக வைக்கலாமானு சீட்டுப் போட்டுப் பார்த்துவிட்டுக் கொழுக்கட்டைகளாக வேக வைச்சுப் பிழிந்து எடுத்தேன். புளிக்காய்ச்சல் வீட்டில் இருந்ததால் கொஞ்சம் புளிக்காய்ச்சல் சேவையும், தேங்காய்ச் சேவையும் தேங்காயைத் துருவித் தாளித்துக் கொண்டு பண்ணி விட்டுக் கொஞ்சம் சேவையைத் தயிரில் போடத் தாளிதம் மட்டும் சேர்த்துவிட்டுச் சாப்பிடும்போது தயிரைச் சேர்த்துக்கலாம்னு எல்லாத்தையும் மூடி வைச்சுட்டு சேவை நாழியை அலம்பிட்டு (கையோடு அலம்பிடுவேன். வேலை செய்யும் பெண்மணி வரணும்னு போட்டு வைச்சால் துரு ஏறிடும்.) துணியைப் போட்டுத் துடைத்து எண்ணெய் தடவிக் காய வைச்சுட்டு வடை தட்டலாம்னு அடுப்பை அலம்பப் போனால் நம்மவர் இன்னிக்கு எனக்கு வடை வேண்டாம். வடை சாப்பிட்டால் அப்புறமா ராத்திரி சேவை சாப்பிட முடியாதுனு சொல்லிட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஙே! என விழித்தேன். நல்லவேளையா மாவு குளிர்சாதனப் பெட்டியிலேயே இருக்கு! வாழைப்பூவையும் நறுக்கலை! 

பின்னர் அடுப்பை அலம்பிட்டுத் தேநீர் தயாரித்துக் கொடுத்துவிட்டு அப்பாடானு ஆசுவாசமாக உட்கார்ந்தேன். 

அப்பாடா! ஒரு வழியா சாமான் வீணாகாமல் எப்படியோ ஒப்பேத்தியாச்சு? படங்கள் எங்கேனு கேட்கிறவங்களுக்கு! சேவை மாவு கிளறும்போது படம் எடுக்க முடியாது. அப்புறமா சேவையைப் பிழிஞ்சுட்டு எடுக்கலாம்னா மறந்தே போச்சு! கலந்த சேவையை எடுத்திருக்கணும். வேண்டாம்னு விட்டுட்டேன். ஏற்கெனவே சேவை பண்ணும்போது எடுத்த படங்கள் இருக்கு! ஆனால் அது புழுங்கலரிசியில் இட்லி மாதிரிப் பண்ணிப் பிழிந்தது. பரவாயில்லைனு அதைப் போட்டு வைக்கிறேன். ரொம்ப வருஷம் ஆச்சேனு நினைக்காமல் அந்தப் படத்தையும் சேவையையும் பார்த்து சந்தோஷப்படுங்க.




Monday, January 25, 2021

கௌரவப் பிரசாதம்! இது எனக்குப் போதுமா?

 என்னைப் பார்க்கிறவங்க யாராக இருந்தாலும் வீட்டில் எல்லா வேலைகளையும் நான் தான் செய்வேன் என்றோ தினசரி சமையலும் நான் தான் செய்வேன் என்றோ நம்புவது இல்லை. இது இப்போ ஆரம்பிக்கலை. கல்யாணம் ஆனப்போவே மாமியார் வீட்டில் யாருக்கும் நான் வேலை எல்லாம் செய்வேன் என்பதில் நம்பிக்கை இருந்ததில்லை. காய் நறுக்கத் தெரியுமா? தேங்காய் துருவத் தெரியுமா? தோசை வார்க்க வருமா?  இட்லி மாவு அரைக்கும்போது குழவியை எந்தத் திசையில் சுற்றுவாய்? தயிர் கடைவது என்றால் என்னனு தெரியுமா? தயிர் மத்தைப் பார்த்திருக்கியா? அதைப் பார்த்திருக்கியா?  இது தெரியுமா?" என்றெல்லாம் கேட்டார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்பதை நம்பவும் இல்லை. எல்லாம் செய்து தான் காட்டினேன். அப்போவும் இன்னிக்கு என்னமோ பண்ணிட்டே! தினம் தினம் பண்ணணுமே! அதுக்கு உன்னால் முடியுமா? என்பார்கள். இது கேட்டுக் கேட்டு எனக்கே அலுத்துப் போய்ப் பின்னர் இந்தக் காதில் வாங்கி இன்னொரு காதால் வெளியே தள்ளிவிட ஆரம்பிச்சேன்.

50 வயதுக்குப் பின்னர்   கொடி போல் இருந்த உடல் பூஷணி போல் ஆக ஆரம்பிக்கையில் யாருமே இதுக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை என்றோ நான் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்றோ ஒத்துக்கொள்ளவில்லை. சில நெருங்கிய சொந்தங்கள்/நட்புக்கள்  பார்க்கும்போதெல்லாம் வீட்டில் எல்லா வேலையையும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்துடு! உட்காராதே! மத்தியானம் தூங்காதே! அள்ளிப் போட்டுக் கொண்டு சாப்பிடாதே! அளவாகச் சாப்பிடு!" என்றெல்லாம் உபதேசிப்பார்கள். அதோடு இல்லாமல் அவங்க வீடுகளில் எல்லாம் குழந்தை இருந்ததால் "குழந்தையோடு நாங்க ஓடி ஆடறோம். நீ தனியா இருக்கே! வேலையே இல்லை; அதான் உடம்பு பெருத்துப் போகிறது!" என்பார்கள். என்னத்தைச் சொல்ல! 

அம்பத்தூரில் இருந்தவரைக்கும் காலை/மாலை இருவேளையும் வீட்டைச் சுற்றிப் பெருக்கி, மாடிப்படி பெருக்கி, கொல்லைக் கிணற்றடி பெருக்கி எனக் காலை ஒன்றரை மணி நேரம், மாலை ஒன்றரை மணி நேரம் இதுக்கே சரியாகிவிடும். வாரம் ஒரு நாள் மொட்டை மாடி சுத்தம் செய்தல், தண்ணீர்த் தொட்டி சுத்தம் செய்தல்(இரண்டு பேருமாகத் தான் செய்வோம்) என்று வேலைகள் இருக்கும். அதோடு தோட்டம் பெருக்குதலும் சேர்ந்து கொள்ளும். பின்னாட்களில் எனக்கு வீசிங் தொந்திரவு அதிகரித்ததால் தோட்டம் பெருக்குதலுக்கு மட்டும் ஆள் போட்டோம். ஆனாலும் வீட்டைச் சுற்றி நான் தான் பெருக்கிக் குப்பைகளை அள்ளிப் போடுவேன். வேப்பிலைகள், அசோக மர இலைகள், மாவிலைகள், மற்ற மரங்களின் இலைகள்னு கீழே விழுந்து ஒரே அல்லோலகல்லோலமாக இருக்கும். பெருக்கலைனா நம்ம சுப்புக்குட்டியார் அந்த இலைகள் காய்ந்தனவற்றில் புகுந்து படுத்துக்கொண்டு ஓய்வு எடுப்பார். எங்கேயானும் மிதிச்சுடப் போறோமேனு அது வேறே கவலையா இருக்கும். இது போதாது எனத் தென்னை ஓலை மட்டைகள், தேங்காய்கள் எனக் கீழே விழும்.

அவற்றை ஒதுக்குதல், தென்னங்குச்சியைக் கிழிச்சு எடுத்து விளக்குமாறுக்குச் சேர்த்தல் என வேலை இருக்கும். இந்த விளக்குமாறுக்கு ஓலை கிழிப்பதை நம்ம ரங்க்ஸ் நான் செய்தால் ஒத்துக்க மாட்டார்."தென்னை மரங்களெல்லாம் நீ எங்கே பார்த்திருக்கே? இதைப்பத்தி எல்லாம் உனக்கு என்ன தெரியும்? நான் தான் ஓலை கிழிப்பேன்!" என்று அவர் உட்கார்ந்து செய்வார். அவர் இல்லாதப்போ நானும் பண்ணுவேன். அதைப் பார்த்துச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வரும் அவருக்கு. நான் சரியாய்ப் பண்ணலையாம். போகட்டும்னு விட்டுடுவேன். இப்படி இருந்து கொண்டிருக்கும்போதே இங்கே ஶ்ரீரங்கம் வந்ததும் எல்லோருக்கும் நான் சமைக்கிறேனோ இல்லையோ எனச் சந்தேகம் வந்தது. அதற்கேற்றாற்போல் இரண்டு வருஷங்கள் முன்னர் அக்கி வந்தப்போ சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டோமா, அது சில மாதங்கள் வரை நீடித்தது. மருத்துவர் கண்டிப்பாக வேலை செய்யக் கூடாது என்று சொன்னதால் வாங்கித் தான் சாப்பிட்டோம். பின்னர் அம்பேரிக்கா போனதும் அங்கே நான் தான் சமைத்தேன். இங்கே வந்த பின்னரும் கொரோனா/தொடர்ந்து லாக்டவுன் என்று வர நான் தான் சமைக்கிறேன். இப்போத் தான் கண் அறுவை சிகிச்சை என்று முடிவாகி விட்டதால் ஒரு மாசத்துக்காவது சாப்பாடு கொடுக்க ஆள் வேண்டும் என்று தேடுகிறோம்.

இரண்டு, மூன்று பேரிடம் சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்துட்டோம். எல்லோருமே பீட்ரூட்டை விடுவதில்லை. அவங்களுக்கு அது தான் விலை மலிவு போல் இருக்கு. அடுத்து முட்டைக்கோஸ்! சென்ற வாரம் ஒரு நாள் ஒரு புது காடரர் சாப்பாடு உள்பட 50 ரூபாய் என்று சொல்லி இருந்தார். முகநூலில் நண்பர் ஒருத்தர் ஶ்ரீரங்கம் என்பதால் எனக்குப் பகிர்ந்திருந்தார். அவரிடம் சாம்பார், ரசம், கறி, கூட்டு வாங்கலாம் எனப் பேசினோம். ஒருத்தருக்கு 40 ரூபாய் என்றார். சரினு இரண்டு நபர்களுக்குத் தேவை என ஆர்டர் கொடுத்தோம். காலை பத்து மணிக்குள் வந்துவிடுவதாகச் சொன்னார்கள். அதே போல் ஒன்பதே காலுக்கெல்லாம் சாப்பாடு வந்து விட்டது. பயந்து கொண்டே வாங்கினேன். நல்ல வேளையாக அலுமினியம் ஃபாயிலில் கட்டி இருந்தார்கள். அதுக்குள்ளே நம்மவருக்கு இரவுக்கும் வாங்கிப் பார்க்கும் ஆசை வந்துவிட அவரிடம் இரவு என்ன என்று கேட்டார். பூரி, கிழங்கு என்று சொல்ல சரினு இரண்டு செட் பூரி கிழங்குக்கு ஆர்டர் கொடுத்துட்டார். நல்லவேளையாக சாதம் கூடவே வைத்திருந்தேன்.

இரவு பூரி வந்தது. கிழங்கு ப்ளாஸ்டிக் பையில் கட்டி இருந்ததைப் பார்த்தாலே பிடிக்கலை. பூரிகள் மட்டும் அலுமினியம் ஃபாயில் பேப்பரில் கட்டப்பட்டு இருந்தன. கிழங்கைப் பிரித்து ஒரு பாத்திரத்தில் கொட்டினால் ஏதோ வாசனை. குமட்டியது. வாயில் விட்டுப் பார்த்தால் உப்பு, காரம் சரியாய் இருந்தாலும் ஏதோ மாற்றம். சாதம் இருந்ததால் அதைத் தயிர் விட்டுப் பிசைந்து வைத்துவிட்டு ஊறுகாயும் எடுத்து வைத்துக் கொண்டு பூரிகளைப் பிரித்தால் உள்ளே ஆறு பூரிகளும் பொடிப் பொடியாக உதிர்ந்திருந்தன. கையில் எடுத்தால் ரொம்பவே கடினமாகவும் இருந்தன. அதிலிருந்து எப்படியோ 3 பூரிகளைப் பிரித்து எடுத்து அவருக்குப் போட்டுவிட்டுக் கிழங்கையும் ஊற்றினேன். அவரும் வாசனை சரியில்லை எனச் சொல்லிக் கொண்டே பூரியை எடுத்தார். எனக்கும் உடனே புரிந்து விட்டது. பூரி மாவில் ரவையை தாராளமாகப் போட்டு ரொம்பக் கெட்டியாகப் பிசைந்து மொறுமொறுவென எடுத்திருக்காங்க. அதைக் கட்டவும் நொறுங்கி விட்டன. கிழங்கில் என்ன பிரச்னை என்று பார்த்தால் கடவுளே!

வெங்காயம் போட்டுக் கிழங்கு பண்ணவில்லை. அதுக்குப் பதிலாக முட்டைக்கோஸை நறுக்கி வெங்காயத்துக்குப் பதிலாக வதக்கி உருளைக்கிழங்கையும் போட்டுப் பண்ணி இருக்காங்க. அதிலே உப்பு மட்டும் போட்டிருந்தாங்களே தவிர்த்து வேறே வாசனைக்குக் கருகப்பிலையோ, பச்சை மிளகாயோ, அல்லது காரப்பொடியோ, பெருங்காயமோ சேர்க்கவே இல்லை.  உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்த்து அதிலே தண்ணீர் சேர்த்து முட்டைக்கோஸுடன் சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொடுத்து விட்டார்கள். இத்தனைக்கும் நான் சாப்பாடு கேட்கும்போதே பீட்ரூட், முட்டைக்கோஸ், நூல்கோல், காலிஃப்ளவர் சாப்பிட முடியாது. தைராயிட் பேஷன்ட் எனச் சொல்லி இருந்தோம். அப்படி இருந்தும் சாப்பாட்டில் பீட்ரூட்டைச் சேர்த்து விட்டு நாங்க என்ன காய் என்று கேட்கையில் அவரைக்காய் என்று சொல்லிவிட்டார். இரவுக்கும் கிழங்குனு சொல்லிட்டு தண்டனையாகி விட்டது. நல்லவேளையா சாதம் இருந்ததோ பிழைச்சோம்.

அதுக்கப்புறமா அவரிடம் வாங்கலை. சாம்பார், ரசம் வரைக்கும் ஓகே. அளவும் இருவருக்குப் போதுமானதாக இருந்தது. என்றாலும் இந்த டிஃபனில் பட்டு விட்டதால் மேற்கொண்டு தொடரப் பயம். இப்போதைக்குச் சமைத்துக் கொண்டிருக்கேன். பின்னர் பார்க்கணும். இன்னும் நேரம் இருக்கே. அடுத்த மாதம் தம்பி குடும்பம் வருவாங்க. அதன் பின்னர் தான் எதுவாக இருந்தாலும் முடிவு எடுக்கணும். அது வரைக்கும் என் சமையல் தான்! ரசம் வைச்சாலும் போதும். ஊறுகாய் இருப்பதால் ஏதோ சாப்பிட்டுக்கலாமே! வர வர உப்பு, புளி, பருப்பு அடையாளம் தெரிஞ்சால் போதும், சமையல்காரராக ஆகிவிடலாம்னு எல்லோரும் கிளம்பிடறாங்க. இன்னொரு மாமி  நேரில் பேசும்போது தேன் வழிந்தது. சாப்பாட்டுக்குத் தொலைபேசினால் நான் வெளியே இருக்கேன். அதனால் 2,3 நாட்கள் சாப்பாடு கிடையாதுனு சொல்லிட்டாங்க. இங்கே வீட்டுக்கு வந்தப்போக் கேட்டதுக்கு என்கணவர் சமைப்பார், பிள்ளைக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்துட்டேன். அதனால் உங்களுக்குச் சாப்பாடு கிடைச்சுடும் என்றெல்லாம் சொன்னாங்க. கடைசியில் இல்லைனு கையை விரிச்சுட்டாங்க. பேசாமல் நம்ம ரங்க்ஸையே சமைக்கச் சொல்லிட வேண்டியது தானோ!இஃகி,இஃகி,இஃகி!

Sunday, January 24, 2021

தேசியப் பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு குழந்தைக்குக் கிடைத்த பரிசு!


படத்துக்கு நன்றி கூகிளார்

 அண்ணா பையர் இங்கே அரியலூர் அருகே உள்ள ஓர் கிராமத்தின் ஆசிரமத்தில் இருந்து ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்.  சுமார் 3 வருடங்களுக்கும் மேலாகப் பதிவு செய்துவிட்டுக் காத்திருந்ததாய்ச் சொன்னார். குழந்தைக்கு ஜனவரி 29 ஆம் தேதியன்று ஒரு வயசு பூர்த்தி ஆகிறது. சென்ற புதன்கிழமை அன்று சட்ட ரீதியான ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்த பின்னர் மதியம் சுமார் இரண்டரை மணி அளவில் குழந்தை அண்ணா பையர்/மருமகள் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆசிரமத்தில் குழந்தையை என்ன பெயர் சொல்லி அழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் "அபூர்வா!" என்று அழைக்கப் போவதாய்ச் சொன்னார்கள். குழந்தை அண்ணாவின் மருமகளிடம் ஒட்டிக் கொண்டு விட்டது. அண்ணா பையரிடம் போகக் கொஞ்சம் தயங்கினாலும் ஆசிரமத்தில் எல்லோரிடமும் போய்ப் பழக்கம் ஆனதால் தூக்கிக் கொண்டு விளையாட்டுக் காட்டினால் பேசாமல் இருக்கிறது. 

அவங்க சுமார் பத்துப் பேர் வந்ததால் இங்கே வந்து தங்கவில்லை.  நான் அழைத்ததற்கு முன்னரே சொல்லிவிட்டார்கள். அண்ணா பையர் தரப்பில் அவர் தங்கை, தங்கை கணவரும், மருமகள் சார்பில் அவர் தம்பி, தம்பி மனைவியும் குழந்தையுடன் வந்தார்கள். சட்ட ஆலோசனைக்காக மருமகள் உறவுப் பெண் ஒருவர் தன் கணவருடன் வந்திருந்தார்.  ஆகவே சத்திரம் பேருந்து நிலையம் அருகேயே ஒரு செர்வீஸ் அபார்ட்மென்ட் எடுத்துக் கொண்டு வந்து தங்கிக் கொண்டு போய் வந்தார்கள். புதன் கிழமை எல்லாம் முடிந்ததும் சென்னை செல்லும் முன்னர் அண்ணா பையரைக் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து காட்டிவிட்டுப் போகும்படி சொல்லி இருந்தேன். புதனன்று முழுவதும் ஆசிரமத்திலேயே சரியாகப் போய்விட்டது. வியாழனன்று குழந்தையை குழந்தை மருத்துவர் ஒருவரிடம் காட்டி இருக்கிறார்கள்.  குழந்தை எடை குறைவாக இருப்பதால் விரைவில் திட உணவு ஆரம்பிக்கச் சொல்லி இருக்கார் மருத்துவர். மற்றபடி குழந்தை நன்றாக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். குழந்தை வளர்ப்புக்கு அவரின் ஆலோசனையையும் உணவு மற்ற விபரங்கள் பற்றியும் கலந்து ஆலோசித்து விட்டுத் தாயுமானவரிடம் போய் வாழைத்தார் வைத்து வழிபட்டுவிட்டு அன்றைய தினம் கழிந்து விட்டது. வியாழக்கிழமை மாலை நாளைக்கு நாங்கள் வரலாமா என அண்ணா பையர் கேட்டார். அவர் தங்கை குடும்பமும் மருமகளின் தம்பி குடும்பமும் சென்னை திரும்பி விட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை சாப்பிடவே வரச் சொன்னோம்.

மருமகளின் உறவுப் பெண்ணும் அவள் கணவரும் சொந்த வேலை இருப்பதால் வரவில்லை. குழந்தையை எடுத்துக் கொண்டு அண்ணா பையரும், மருமகளும் வந்தார்கள். நம்ம வீட்டில் ஒரு வருஷத்துக்குக் கோலம் போடக்கூடாது என்றாலும் முதல் முறையாகக் குழந்தையை எடுத்துக் கொண்டு வருவதால் வாசலில் கோலம் போட்டுச் செம்மண் இட்டுவிட்டு வந்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்றோம். குழந்தைக்கு வேற்று முகம் இல்லை என்றாலும் கூப்பிட்டால் வரவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டது. நன்றாக விளையாடுகிறது. பால் கொடுத்தால் பாட்டிலை அதுவே பிடித்துக் கொண்டு குடிக்கும்படி ஆசிரமத்தில் பழக்கி இருப்பதால் நாம் மடியில் போட்டுக் கொண்டு பிடித்துக் கொண்டு கொடுத்தால் தட்டி விட்டு விடுகிறது.  நமக்குத் தான் ஆராய்ச்சி மூளையே! பெற்றோர் பற்றித் தெரியுமானு கேட்டதுக்கு ஆசிரமத்தில் சொல்ல மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். ஆனால் நமக்குக்குறித்துக் கொள்வதற்காகப் பிறந்த தேதி சொல்லி இருக்காங்க. நேரம் தெரியவில்லை. நம்மவர் போன வருஷப் பஞ்சாங்கத்தை எடுத்து அலசி அன்று உத்திரட்டாதி நக்ஷத்திரம் என்று சொல்லிவிட்டார். எதுவாய் இருந்தால் என்ன? பெற்றோரால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தைக்கு அதிர்ஷ்டம் என்பது கொஞ்சமாவது இருந்ததால் இங்கே வந்திருக்கிறது. பிறந்து மூன்றாம் மாதம் கொண்டு விட்டிருக்கிறார்கள். ஒன்பது மாதத்துக்கெல்லாம் அந்தக் குழந்தைக்குப் புதிய பெற்றோர்கள், வீடு, உறவு என அமைந்து விட்டது.

இதுவே ஆண் குழந்தை எனில் தத்து எடுத்துக் கொள்வது கஷ்டம் என்கின்றனர். முதலில் பெற்றோர்களே ஓர் உணர்ச்சிப்பெருக்கில் குழந்தையை விட்டாலும் ஆண் குழந்தை எனில் பின்னால் தேடிக் கொண்டு வருவதாகச் சொன்னார்களாம் அந்த ஆசிரமத்தில். எதுவாக இருந்தால் என்ன? பெண் என்றால் ஆல மரம். ஆண் என்றால் அரச மரம். இரண்டுமே நல்லது தான். ஆனால் ஆண் குழந்தை எனில் உறவு முறையில் குழந்தைகள் அதிகம் இருந்து தத்துக் கொடுத்தால் தான் உண்டு என்கிறார்கள்.  எல்லோருமே அப்படிச் சம்மதித்துக் கொடுக்க மாட்டார்கள். நாளை அந்தக்  குழந்தைக்கு நங்கநல்லூரில் குருவாயூரப்பன் கோயிலில் வைத்து அன்னப் ப்ராசனம் நடக்கிறது.27 ஆம் தேதி அண்ணா பையர் ஹைதராபாத் திரும்புகிறார்.  29 ஆம் தேதி ஹைதராபாதில் முதல் பிறந்த நாளைக் கொண்டாடுவாள் அந்தக் குழந்தை.

இன்று சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் என்பதால் இதைப் பகிர்ந்தேன்.  ஆண் குழந்தைகள் ஓர் வரம் எனில் பெண் குழந்தைகள் கடவுளே என்பார்கள். அதைப்போல் இந்தக் குழந்தையும் இப்போது வாராது வந்த மாமணியாய் வந்திருக்கிறது. என் மன்னிக்கும் அண்ணா பையர்/பெண் ஆகியோருக்கெல்லாம் இடக்கன்னத்தில் குழி விழும். அதைப் போல் இந்தக் குழந்தைக்கும் இடக்கன்னத்தில் குழி விழுகிறது. இந்த 2,3 நாட்களில் அண்ணாவின் மருமகள் தான் தனக்கு அம்மா என்பதைப் புரிந்து கொண்டும் விட்டது. இனி ஆயுசோடு நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் ஆசை.

அன்று முழுவதும் அவர்களோடு பொழுது போயிற்று. பின்னர் அவங்க கிளம்பிப் போனப்புறமா இதை எழுதலாமோனு கணினியை எடுத்தால் இணையமே வரலை. அதுக்கப்புறமா இணைய ஒருங்கிணைப்பாளருக்குத் தொலைபேசி அழைத்து அவங்க வந்து சரி பண்ணுவதற்குள்ளாக மாலை ஐந்து மணி ஆகிவிட்டதால் அப்புறமா உட்காரவே இல்லை. நேற்றும் யார், யாரோ வந்து போய்க் கொண்டிருந்தார்கள். மத்தியானம் கிடைக்கும் நேரம் தான் கணினியில் வேலை செய்ய உகந்ததாய் இருக்கும். அதற்கு இப்போது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.  இந்த வாரம் தம்பி, அண்ணா அவர்கள் குடும்பம் வருவதாக இருந்தது தற்சமயம் இந்தக் குழந்தை வரவால் ஒத்திப் போடப் பட்டுள்ளது. அடுத்த மாதம் வராங்களா என்னனு தெரியலை.

Thursday, January 21, 2021

அமேசானில் விற்கும் விராட்டிகள்! வேணுமா?

 அர்னாப் கோஸ்வாமியின் ஊழல் வெளி வந்திருக்கிறது. பொதுவாகவே அவரை எனக்குப் பிடிக்காது. நம்ம ரங்க்ஸ் அவருடைய சானலைப் போட்டாலே நான் காதைப் பொத்திக் கொண்டு நகர்ந்துடுவேன். அல்லது ஒலியைக் குறைக்கச் சொல்லுவேன். காதே செவிடாகிவிடும்படியான கத்தல். இப்படி ஆர்ப்பாட்டமான கத்தல்/கூச்சல் இருந்தாலே விஷயம் ஒன்றும் இருக்காது என்பதை இப்போது தெள்ளத்தெளிவாய்க் காட்டி விட்டார். அரசை ஏமாற்ற எப்படி மனசு வந்தது? இவர் மற்றவரின் ஊழல்களை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறாராம். தன் முதுகைத் தேய்த்துக் குளிக்காமல் பிறர் முதுகு அழுக்கைப் பற்றிச் சொல்ல வந்துட்டார். 

*********************************************************************************** எதிர்க்கட்சிக்காரங்க எதுக்காகக் கொரோனா தடுப்பு ஊசியை முதலில் பிரதமர் போட்டுக்கொண்டிருக்கணும்னு சொல்றாங்கனு புரியலை. ஆனால்  அது சரிதானோ என்று எனக்குள்ளும் அந்த எண்ணம் உண்டு. முதலில் பிரதமர், குடியரசுத் தலைவர், நிதி மந்திரி, உள்  துறை மந்திரி, பாதுகாப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோர் போட்டுக் கொண்டு மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்திருக்கலாமோ என நினைத்துக் கொண்டேன். இந்த ஊசி போட்டுக் கொண்டதில் ஓரிருவர் தவிர்த்து (அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமேனு நினைக்கிறேன்.) மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. அதற்குள்ளாக எல்லோரும் அவங்க அவங்க விருப்பப்படி இதற்கு ஆதரவு/எதிர்ப்புனு கருத்துத் தெரிவிக்க ஆரம்பிச்சாச்சு! நார்வேயில் இந்தத் தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட 20க்கும் மேற்பட்ட முதியவர்கள் இறந்து விட்டார்கள். சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் இருந்திருக்கின்றன. அந்த வகையில் நம் நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இந்த அலர்ஜி பாதிப்பு இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதால் மருந்து நல்ல மருந்து என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கே கல்யாணங்கள், விழாக்கள் எல்லாம் முழு அளவில் நடக்க ஆரம்பிச்சாச்சு. இந்த வருஷம் தைத்தேருக்கு நம்பெருமாள் ஆரம்ப நாளில் இருந்து வீதி  உலா வரவும் ஆரம்பிச்சாச்சு. கூட்டம் எப்படினு தெரியலை. நாங்க போகப் போறதில்லை. சும்மாவே பையர் தினம் இரண்டு வேளையும் எச்சரிக்கைக் குரல் கொடுத்துட்டே இருக்கார். எதுக்கு வம்பு! :(

***********************************************************************************

அமேசானில் விராட்டி விற்பதைப் பற்றி ஓரிருவர் சொல்லிக் கேட்டது உண்டு. ஆனால் உண்மையாகவே விற்பதையும் விராட்டியின் படங்களையும், இந்தியாவின் புனிதமான பசுக்களின் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்னும் விளம்பரத்தையும் முகநூலில் பார்க்க நேர்ந்தது. என்னவோ போங்க! எதைத் தான் விளம்பரம் கொடுத்து விற்பது என்று இல்லை. ஏற்கெனவே வேப்பங்குச்சி/கருவேலங்குச்சி எல்லாம் பல் தேய்க்க அமேசான் மூலம் வந்துவிட்டதாய்ச் சொன்னார்கள். இப்போ இது. நமக்கும் அமேசானுக்கும் ரொம்ப தூரம். எதுவும் வாங்கறதே இல்லை. ஆனால் நம்ம ஏடிஎம் கொடுத்த பரிசுகள் எல்லாம் அமேசான் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவைனு நினைக்கிறேன். புடைவை மட்டும் தான் மதுரா பொட்டிக்! 


*********************************************************************************

ஒரு வழியா பைடன் அம்பேரிக்க அதிபராகப்பதவிப் பிரமாணம் செய்து கொண்டு விட்டார். ட்ரம்ப் சின்னக் குழந்தை மாதிரி அழுது கொண்டே வீட்டைக் காலி செய்திருப்பார் போல! கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டதுக்கு இங்கே அவர் அம்மாவின் சொந்த ஊரில் ஏகக் கொண்டாட்டம். இனிப்புகள் பரிமாற்றம். பட்டாசுகள் வெடித்துக் கோலாகலமான கொண்டாட்டம். அவங்க அம்மாவின் அப்பாவோட குலதெய்வமான சாஸ்தாவுக்கு அடிச்சது யோகம். அபிஷேஹ ஆராதனைகள். கமலாவின் அம்மாவுக்கோ அல்லது அவர் கணவருக்கோ குலதெய்வமெல்லாம் இல்லை. ஆனாலும் நம் மக்கள் விடலையே!  என் தலையிலேயே  நான் அடிச்சுக்கொண்டேன். அந்தக் கமலா பெயர் தான் தமிழ்ப் பெயர்(சம்ஸ்கிருதத்திலும் கமலம்/கமலா தான் தாமரைக்கு)மற்றபடி அவங்களுக்கும் தமிழ் மொழிக்கும்/அவங்க தமிழர் என்பதற்கும் ஸ்நானப்பிராப்தி கூட இல்லை. அதோடு அவங்க அப்படி ஒண்ணும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிச்சவங்களாயும் சொல்லலை. ஆனாலும் நம் மக்களுக்கு உள்ள வெளிநாட்டு மோகம் இதை எல்லாம் மறக்கடிச்சு அவங்களுக்காகப் பிரார்த்தனைகள் எல்லாம் செய்துக்கற அளவுக்குப் போய்விட்டது. நல்லவேளையா யாரும் மொட்டை போட்டுக்கலைனு நினைக்கிறேன்.  திரைப்பட நடிகையர், நடிகர்களுக்குப் பின்னர் நம் மக்களின் ஆதர்சம் வெளிநாட்டினர் தான். 

Tuesday, January 19, 2021

செந்தமிழ் நாடென்ற போதினிலே!

 பல்லாண்டுகளாக சம்ஸ்கிருதத்தில் செய்தி வாசிப்பது வானொலி மட்டும் இருந்த நாட்களில் இருந்தே உண்டு. அப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி தான். அதே போல் கேந்திரிய வித்யாலயா துவங்கப்பட்டதில் இருந்து (அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் தான்) அங்கே ஹிந்தி, சம்ஸ்கிருதம்(எட்டாம் வகுப்பு வரை), ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி திவஸ்/எல்லோரும் நினைக்கிறாப்போல் தமிழில் அர்த்தம் கொள்ளப்படும் ஸ்ராத்தம் அல்ல! திவஸ் என்றால் நாள். சம்ஸ்கிருத திவஸ் இரண்டுமே அந்தப் பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வந்தன. ஹிந்திக்கான நாள், சம்ஸ்கிருதத்துக்கான நாள் என்று தான் பொருள். தமிழில் ஆசை என்பது கொடுக்கும் அர்த்தம் ஹிந்தி/சம்ஸ்கிருதத்தின் 
ஆஷா" கொடுக்காது. அங்கெல்லாம் "ஆஷா" என்றால் நம்பிக்கை என்னும் பொருள். இப்படிப் பல வார்த்தைகளுக்கே பொருள் மாறுபடும். ஆனால் நாம் புரிஞ்சுக்கறது தப்புத் தப்பாய்! 

எங்க பெண்/பையர் எல்லோரும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கேந்திரிய வித்யாலயாவில் படித்தவர்களே! அப்போதே மாநில மொழி எந்த மாநிலத்தைச் சேர்ந்து பள்ளிகள் இருக்கின்றனவோ அங்கே உள்ள மாநில மொழி கற்பிக்கப்படும். தமிழ்நாட்டில் தமிழ் என்பது போல் கேரளத்தில் மலையாளம். இதுவே வட மாநிலங்கள் எனில் அங்கே மாணவர்களின் பெரும்பான்மையையும், கற்பிக்கக் கிடைக்கும் ஆசிரியரையும் பொறுத்து மொழி தேர்ந்தெடுக்கப்படும். எங்க பையர் ராஜஸ்தான் கேந்திரிய வித்யாலயாவில் படித்தபோது மலையாளம் கற்றார். மலையாள மாணவ, மாணவிகள் 20 பேர் இருந்ததோடு ஆசிரியரும் மலையாள மொழிக்குத் தான் கிடைத்தார். இவங்க எல்லாம் நிரந்தர ஆசிரியர் அல்ல/ தொகுப்பு ஊதிய அடிப்படையில் வருடா வருடம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதே நவோதயா பள்ளி எனில் எந்த மாநிலத்தில் உள்ளதோ அந்த மாநில மொழி கட்டாயம் கற்பிக்கப்படும். கேரளத்தில் மலையாளம், கர்நாடகாவில் கன்னடம் என்று சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் ஹிந்தி/சம்ஸ்கிருதமும் உண்டு. அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். ஒரு மாணவன் ஆங்கிலம் கட்டாயம் கற்கவேண்டும். அதன் பின்னர் தாய் மொழி. அதற்குப் பிறகு எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி அல்லது சம்ஸ்கிருதம் இரண்டில் ஒன்று.  கர்நாடகத்தின் உள்ளே மலைக்கிராமங்களில் கூட மக்கள் ஹிந்தி பேசுகின்றனர். எல்லாம் நவோதயாப் பள்ளியின் காரணத்தால். மாநில மொழி கேந்திரிய வித்யாலயாவில் கற்க வேண்டுமெனில் அதற்கும் 20 அல்லது 25 மாணவ, மாணவிகள் கற்க விருப்பம் தெரிவிக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அந்தப் பள்ளியில் மாநில மொழி கற்பிக்கப்படாது. இதெல்லாம் கேந்திரிய வித்யாலயா ஆரம்பித்த நாட்களில் இருந்தே நடைபெற்று வருபவை.

அதே போல் தான் தூர்தர்ஷனில் சம்ஸ்கிருதச் செய்தியும். எப்போவும் உண்டு. புதுசாக இப்போது வரவில்லை.என்னமோ இந்த மொழிகளை எல்லாம் மோதி அரசு வந்து தான் கேந்திரிய வித்யாலயாவிலும்/தூர்தர்ஷனிலும் திணித்தாற்போல இங்கே தனித்தமிழ் ஆர்வலர்கள் போட்டி போட்டுக் கொண்டு போராடினார்கள். வழக்கும் தொடர்ந்தார்கள். சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளை உங்களுக்கு அந்தச் செய்தியைக் கேட்கப் பிடிக்கவில்லை எனில் தொலைக்காட்சியை அணையுங்கள். அல்லது சானலை மாற்றிக் கொள்ளூங்கள். இதில் எல்லாம் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டது. சின்ன விஷயம்! நமக்குப் பொறுமை என்பதே இல்லை. அப்படி என்ன தமிழைத் தவிர்த்து வேறே மொழியை நாம் கேட்காமலேயே இருக்கிறோமா என்ன? தமிழே ஒழுங்காப் பேசவரலை பலருக்கும் என்பது தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பவர்கள்/நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள்/நெடுந்தொடர்களில் நடிப்பவர்கள் ஆகியோரிடமிருந்து தெரிய வருகிறது.

ஐம்பெரும் காப்பியங்களில் சீவகசிந்தாமணி வடமொழியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டது. குண்டலகேசியும் பௌத்த சமய நூல். சம்ஸ்கிருதமே வேண்டாம் என்பவர்கள் ஐம்பெரும் காப்பியங்களையும் வேண்டாம்னு சொல்லணும். முடியுமா? சீவக சிந்தாமணி எழுதிய திருத்தக்க தேவர் அதை வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்ததாகவே சொல்லப்படுகிறது. தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகத்தின் சீவக சிந்தாமணி பற்றிய முன்னுரையில் சொல்லப்படுவது என்னவெனில்!

இச் சீவக சிந்தாமணி வடநாட்டு வேந்தனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டு அமைகிறது. காப்பியக் கதை, கதை மாந்தர்கள், கதைக்களம் முதலானவை தமிழ் மண்ணுக்குச் சொந்தமல்ல; இவை வடவர் மரபு; வடநாட்டார் மரபு; என்றாலும் காப்பிய ஆசிரியர் தமிழர்; தமிழ் நாட்டைச் சார்ந்தவர். தம் சமயச் சார்பு காரணமாக தன் சமயம் சார்ந்த வடமொழிக் கதையை எடுத்துக் கொண்டு, கதைப் போக்கை மாற்றாமல், அதே நேரத்தில் தமிழர் மரபு பிறழாமல் காப்பியத்தைப் புனைந்திருக்கின்ற திறன் அருமையினும் அருமை. இதனால்தான் இக்காப்பியம், சோழர் காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததாகச் சேக்கிழார் புராணம் குறிப்பிடுகின்றது.

இந்த ஆசிரியருக்கு வடமொழி தெரியாமல் இருந்திருந்தால் இத்தகைய அருமையான காப்பியம் ஒன்று நமக்குக் கிடைத்திருக்காது அல்லவா? இது மட்டுமா? வடமொழி தெரியவில்லை எனில் கம்பருக்கு ராமாயணம் எழுதவோ வில்லிபுத்தூராருக்கு பாரதம் எழுதவோ முடிந்திருக்குமா? அந்தக் காலங்களில் இத்தகைய சண்டை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. என் அம்மா நல்லவள் என்பதற்காகப் பிறரின் தாயைப் பழிக்கலாமா? தப்பல்லவா? எல்லா மொழிகளும் அவரவருக்குத் தாய் போன்றதே! அவரவர் மொழியை அவரவர் பேசிக் கற்று வந்தாலே போதுமானது.  இது குறித்துத் தொல்பொருள் ஆய்வாளரானா பெரியவர் நாகசாமி தெலுங்கு நாயக்கர் சாம்ராஜ்யத்தில் கூட தமிழ் மொழி அழியவில்லை எனவும், மாறாகப் பல தெலுங்கு பேசும் பாளையக்காரர்கள் தமிழ் பேசி தமிழுக்குத் தொண்டாற்றித் தம்மைத் தமிழறிஞர்கள் எனக் கூறிக் கொள்வதில் பெருமை அடைந்ததாகவும் தெரிவிக்கிறார். அதற்கான கல்வெட்டுகள் இதற்கெல்லாம் சான்றாக இருப்பதாகவும் சொல்கிறார்.

உண்மையில் தமிழுக்குப் பின்னடைவு எனில் அது ஆங்கிலேய ஆட்சி தொடங்கப்பட்ட காலத்தில் தான். ஆங்கிலேயப் பாதிரிகளான கால்ட்வெல், ஜி.யூ.போப் , பாதர் லெசராஸ் போன்றவர்கள் தமிழைக் கற்று பைபிளைத் தமிழிலும் திருக்குறளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வந்தாலும் ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்ட பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார். தமிழைப் பற்றி ஆங்கிலேயே அரசின் கெசட்டியரில் எந்தவிதமான சிறு குறிப்புக்கூடக் கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார். கிறித்துவ மதத்துக்கு மக்களை மாற்றியது குறித்தும், ஆங்கிலேயப் பள்ளிகளில் படித்தவர்களைத் தங்கள் ஆட்சியின் நிர்வாகத்திற்காக ஊழியர்களாகத் தேர்ந்தெடுத்த விபரங்களுமே இருப்பதாகச் சொல்கிறர்.

அதையும் மீறித்தான் உ.வே.சா.ஆறுமுக நாவலர், வள்ளலார், சுப்ரமணிய பாரதி, மு.ராகவ ஐயங்கார், மஹா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் இருந்து வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்றிச் சென்றிருக்கிறார்கள். தமிழ் மன்னர்களும் தெலுங்குப் பாளையக்காரர்களும் ஆதரித்த தமிழை ஆங்கிலேயர் ஆதரிக்காவிட்டாலும் அந்தக் காலகட்டத்தில் தான் உ.வே.சா.அவர்களின் பெரு முயற்சியால் பல தமிழ்நூல்கள் சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அச்சுப் பதிப்பைக் கண்டது. ஆகவே தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் நினைக்காமல் தமிழில் பேசிப் படித்து, எழுதி வந்தாலே போதும். தமிழ் தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொள்ளும். அழிவெல்லாம் கிடையாது.


Friday, January 15, 2021

கனுப்பிடியும், பொங்கல் பரிசும்.


இன்னிக்குக் காலம்பர வைச்ச கனுப்பிடி . இந்த வருஷம் மொட்டை மாடிக்குப் போகலை. போயே மாசக்கணக்கா ஆச்சு. தொடர்ந்து மழை, மழை, மழை, மழை என்பதால் மாடி வழுக்குகிறது. எங்கேயாவது விழுந்து வைச்சுட்டால் என்ன செய்ய முடியும்! நேற்றும் காலை மழை பிடித்துக் கொண்டு இரவு கொஞ்சம் ஓய்வு. இன்னிக்கும் காலையில் மழை பிடித்துக்கொண்டு பதினோரு மணிக்குப் பின்னர் கொஞ்சம் ஓய்வு. சூரியனார் பல நாட்கள் கழிச்சு வந்ததால் சோம்பல் முறித்துக் கொண்டு அரைக்கண் திறந்து பார்த்துக் கொண்டு இருக்கார்.  மழை தொடருமா என்ன என்பது பற்றி எதுவும் தெரியலை.  வெயிலின் அருமை நிழலில் தெரிகிறாப்போல் மழை பெய்யும்போதும் தெரிகிறது வெயிலின் அருமை. துணிகள் நன்றாகக் காய்ந்தே பல நாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வெயில் அடிக்குதேனு காயப் போட்டோம் எனில் நன்கு காய ஆரம்பித்ததும் மழை தொடங்கி விடுகிறது. சுமார் எட்டு ஆண்டுகள் கழிச்சு இம்மாதிரி மழை! சென்னையில் இப்படித்தான் இருக்கும். தெருவெல்லாம் வெள்ளக்காடாய் இருக்கும். இங்கே அப்படி இல்லைனாலும் வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுத்திருக்காங்க.

 இணையத்தில் பழக்கம் ஆன அனைத்து சகோதரர்களுக்காகவும் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு கனுப்பிடி வைச்சிருக்கேன். சீரு(று)கிறவங்க சீரு(று)ங்கப்பா. செக், ஆர்டிஜிஎஸ், நெஃப்ட் எப்படி வேணாலும் பணம் அனுப்பலாம். புடைவை அனுப்பறவங்க நல்ல கோ ஆப்டெக்ஸ் பட்டாக எடுத்துடுங்க! செரியா? இந்தப் பருத்திச் சேலைகள் பரவாயில்லை, ஆனால்  சிந்தெடிக் கட்டிக்கிறதே இல்லை. இவை வேண்டாம். முத்து, பவளம், ரத்தினம், வைரம், வைடூரியம், மரகதம், சிவப்புக் கெம்பு எது ஆனாலும் சரிப்பா! என்னோட எடைக்குக் கொடுத்தால் போதும். ஆனால் ஒரு பிரச்னை இப்போ என்னோட வெயிட் குறைஞ்சிருக்கு! :( (இஃகி,இஃகி,இஃகி)

கீழே ஏடிஎம் அவங்களோட சஹானா.காமில் அதிகப் பதிவுகள் வெளியிட்டதுக்காகக் கொடுத்த பரிசு! ராதா கிருஷ்ணர், கீழேயே விளக்குடன். கவரோடு போட்டதால் ஒழுங்காத் தெரியலைனு சொல்லப் போறீங்க. மேல் கவரை நீக்கிட்டும் படம் எடுத்திருக்கேன். அதையும் போடுகிறேன்.

இதோ வரேன், அந்தப் படத்தையும் எடுத்துக் கொண்டு! :) இதோ அந்தப் படம் கீழே!


இதான் அந்தப் பரிசு. ராதையும் கிருஷ்ணனும். கீழே சின்ன விளக்கு. சுவற்றில் மாட்டலாம்னு நினைக்கிறேன்.  இதுக்கு முன்னேயும் ஒரு பரிசு அனுப்பி இருந்தாங்க. அது கிட்டத்தட்ட (அநேகமா) கோமதி அரசு தீபாவளிப் பதிவில் பகிர்ந்தது தான். அதையும் ஒரு நாள் எடுத்துப் போடுகிறேன். திடீர்னு எனக்குச் சுக்கிர தசை அடிக்குதோனு ஜந்தேகமாவும் வருது! இஃகி,இஃகி,இஃகி!

sahanamag.com இதோ இங்கே இருக்கு அந்த அறிவிப்பு. அதுக்கான பரிசு தான் இன்னிக்கு வந்திருக்கு. மேலே அந்தப் படம் தான் போட்டிருக்கேன்.

மழை கொஞ்சம் விட்டிருக்கு. ஆனாலும் சூரியன் வரலை. மேகங்கள் சூழ முழு ஓய்வு. 19 தேதிக்குப் பின்னர் மழை நிற்கும் என்று சொல்கின்றார்கள். பார்ப்போம்.


Thursday, January 14, 2021

என்று ஒழியும் இந்தத் திரைப்பட மோகம்!

எல்லோர் வீட்டிலும் பொங்கல் கொண்டாடி முடிச்சிருப்பீங்க. சிலர் நாளை மாட்டுப் பொங்கலுக்குத் தயாராகிக் கொண்டிருப்பீங்க. சிலர் நாளைக்காலை கனுப்பிடி வைப்பது பற்றித் தயார் செய்ய நினைத்துக் கொண்டிருப்பீர்கள். சகோதரர்களுக்காக வைக்கும் இந்தக் கனுப்பிடியில் வைக்கும்போது நம் இணையத்து சகோதரர்கள் அனைவரையும் நினைத்துக் கொள்வேன். எல்லோர் வாழ்விலும் சுபிக்ஷம் பெருகவும், அமைதி நிலவவும் பிரார்த்திக்கிறேன். நான் இத்தனை பிரார்த்திக்கொண்டும் ஒன்றும் நடக்கவில்லை என்றும் கொரோனா 3.0 வந்துவிட்டதாகவும் நெல்லை கூறுகிறார். இதற்கு முன்னரும் வியாதிகள் வரவில்லையா என்ன?

நினைவு தெரிஞ்சதில் இருந்து அம்மைப் பால் வைக்க, காலரா ஊசி போட, பிசிஜி ஊசி போட என யாரானும் வந்து போட்டுட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். பின்னர் நம் குழந்தைகள் காலத்தில் தடுப்பு ஊசிகள், போலியோ சொட்டு மருந்து என ஏதானும் கொடுத்துக் கொண்டு தான் இருப்பார்கள், கொஞ்ச காலத்துக்குக் கான்சர் பயம் எல்லோரையும் பிடித்து ஆட்டியது. பின்னர் அது பழகிவிட்டது. இப்போதும் அது கடுமையான நோயாக இருந்தாலும்முன்னளவு பயம் யாருக்கும் இல்லை. பல வீரியமான மருந்துகள் வந்துவிட்டதால் எதிர்கொள்ளும் மனோபலம் வந்து விட்டது. பின்னர் எய்ட்ஸ் என்னும் நோய் வந்தது. எல்லோரையும் பயமுறுத்தியது. அதன் பலன் ஊசி போடும் சிரிஞ்சை உடனடியாகக் கழித்துக் கட்டும் முறை வந்துவிட்டது. இப்போது நமக்கு ஒரு ஊசி போட்டால் அந்த சிரிஞ்சை வேறு யாருக்கும் பயன்படுத்த முடியாது என்று ஆகிவிட்டது. ஆகவே இப்போது வந்திருக்கும் இந்தக் கொரோனாவுக்கும் அப்படி ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படலாம். காத்திருக்கணும். காத்திருப்போம். நல்லதே நினைப்போம்.

எங்க வீட்டில் இந்த வருஷம் பண்டிகைகள் கொண்டாட முடியாத சூழ்நிலை. என்றாலும் நாளைக் கனுப்பிடிக்காகக் கொஞ்சம் போல் பொங்கலும் எங்க புக்ககத்து வழியில் செய்யும் தனிக்கூட்டும் பண்ணி வைத்து இருக்கேன். நாளைக் கனுப்பிடிக்கு அவை தேவைப்படுமே! மற்றபடி பண்டிகையாகக் கொண்டாடவில்லை. 

பொங்கல் வெளியீடாக வந்திருக்கும் "மாஸ்டர்" என்னும் படத்தைப்பார்க்க ஒரு நபருக்கு  3000 ரூபாயெல்லாம் செலவு செய்து டிக்கெட் வாங்கிச் சென்றிருக்கின்றனர். ஒரு 3 மணி நேரப் பொழுது போக்குக்கு ஒரு குடும்பத்தின் ஒரு மாத மளிகை சாமான் செலவு! இது அடுக்குமா? இன்னொரு பக்கம் அரசு கொடுத்த பொங்கல் பணத்தைச் செலவு செய்து கொண்டு டாஸ்மாக்கிற்குச் செல்லும் மக்கள்! இந்தப் படத்தை வெளிவந்த அன்றே பார்க்கவில்லை எனில் என்ன ஆகும்? கொரோனா பரவுவது தடுக்கப்படுமா? அல்லது கொரோனாவிற்குப் புது மருந்து கண்டு பிடிச்சிருப்பதாக அந்தப் படத்தில் சொல்றாங்களா? இந்தத் திரைப்பட நடிகர்கள் எல்லாம் புரட்சி செய்வதும், அரசைத் தட்டிக் கேட்பதும் அந்தப் படங்களில் இயக்குநர் சொல்படி நடித்து, வசனகர்த்தா எழுதிக் கொடுத்ததை டப்பிங் குரலில் பேசியவை தான். அதற்கே கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கிறாங்க. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ஏதேனும் சமூக சேவையா செய்யறாங்க? எதுவும் இல்லை. கட்சி ஆரம்பித்து அரசியலுக்குப் பிள்ளையைக் கொண்டு வந்தே தீரணும்னு அவர் அப்பா பாடுபட்டுக்கொண்டு இருக்கார். அப்படியே அரசியலுக்கு வந்தாலும் எல்லாவற்றையும் மாற்றி விடப் போகிறார்களா? முடியுமா? இந்தத் திரைப்பட மோகம் என்று ஒழியும்? மக்கள் மனம் எப்போது மாறும்? 

இதிலே இன்னும் சிலருக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரணும் என்று பிடிவாதம். வேறு சிலரோ ரஜினி வந்தால் நடப்பதே வேறே என எச்சரிக்கை. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்னும் வழக்குச் சொல் உண்மையாக ஆகிக் கொண்டிருக்கிறது. அரசியலில் நுழைவதே இப்போதெல்லாம் கௌரவமானதாகத் தெரியவில்லை. ஆனாலும் வரும் தேர்தலில் யார் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்பதில் பெரிய போட்டியே நடக்கிறது. யார் ஜெயிக்கப் போறாங்களோ!

எல்லோருக்கும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் பற்றிய கட்டுரைகள்  சஹானா.காம் இலும், மின் நிலாவிலும் வந்திருப்பதால் நான் தனியாக ஏதும் எழுதி என்னோட வலைப்பக்கம் பகிரவில்லை. எல்லாம் முன்னாடியே நிறைய எழுதிவிட்டதால் இந்த வருஷம் எதுவும் இல்லை


.சஹானா.காம்  இங்கே பார்க்கவும்! பொங்கலோ பொங்கல்!

மின் நிலா இந்தச் சுட்டிக்குப் போனால் அங்கே பொங்கல் மலரின் பிடிஎஃப் கிடைக்கும். தேவைப்படுபவர்கள் தரவிறக்கிக் கொண்டு படிக்கலாம். 

Friday, January 08, 2021

என்னவோ சொல்றேன்!

கிட்டத்தட்ட 2750 பதிவுகள் வெளி வந்திருக்கின்றன. இதில் மீள் பதிவுகள் 50 இருக்கலாம். ஆரம்ப காலங்களின் மொக்கைப் பதிவுகள் 100 இருக்கலாம். உருப்படியாத் தேத்துவது எனில் 2000 இருந்தால் அதிகம். கொஞ்ச நாட்களாக இடைவெளி கொடுக்கணும்னு எழுதவில்லை. ஆனால் இந்த நாட்களில் புத்தகங்கள் படித்தேன். ஆன்லைனில் கிடைத்த புத்தகங்களைத் தரவிறக்கிக் கொண்டு படித்தேன். அநுத்தமாவின் 3 புத்தகங்கள், பிவிஆரின் 2/3 புத்தகங்கள் என்று படித்தேன். ராஜம் கிருஷ்ணனின் "அமுதமாகி வருக!" கிடைக்கவே இல்லை. அருமையான கதையம்சம் உள்ளது. ராஜம் கிருஷ்ணன் எழுத ஆரம்பித்த புதுசில் எழுதி இருக்கணும். அதில் பைகாரா-குந்தா திட்டம் செயல்பட ஆரம்பித்தது குறித்தும் அந்த நீர் மின் திட்டம்/அணைக்கட்டுக் கட்டியது பற்றியும் எழுதி இருப்பார். முன்னரே படிச்சிருந்தாலும் இப்போது மீண்டும் படிக்க ஆவல். இம்மாதிரிச் சில நாவல்கள் தான் மறுபடி படிக்கும் ஆவலைத் தூண்டும். அந்த வகையில் சலிக்காத எழுத்தாளர்கள் கல்கியும், தேவனும்.
**********************************************************************************
ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லை என்பதால் நான் அரசியலுக்கூ வரப்போவதில்லைனு அறிவிச்சுட்டார். ஆனாலும் எங்கே பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் அவரை மீண்டும் அரசியலுக்கு அழைத்துவரச் செய்யப்படும் முயற்சிகள் பற்றியே பேச்சு! காது புளித்துப் போய்விட்டது. அவர் வந்து மட்டும் என்ன செய்ய முடியும்? நிர்வாகத்தில் பழகி இருக்காரா? அரசியலில் அரிச்சுவடி தெரியுமா? மக்களிடையே அவருக்குச் செல்வாக்கு இருக்கிறது. இந்தச் செல்வாக்கு ஓர் அரசை நடத்த உதவியாய் இருக்குமா? அப்படியே அவர் வந்து விட்டாலும் அவர் உடல் நிலை இருக்கும் நிலையில் அவரால் அலைந்து, திரிந்து பிரசாரங்கள் பண்ண முடியுமா? அரசாங்கத்தை நடத்தும் நடைமுறைகளைக் கற்று அரசை நடத்துவதற்கே குறைந்த பட்சம்  ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகும். எல்லா விஷயங்களையும் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களுடனான நட்பு, மத்திய அரசுடன் நடந்து கொள்ளும் முறை என எத்தனையோ இருக்கு! இதுக்கு நடுவில் நம் தமிழக மீனவர்களின் குறைகள். அவங்கல்லாம் ரஜினி வந்து இலங்கை அரசைப் பார்த்துச் சிரித்தாலோ அல்லது திரைப்படங்களில் நடிக்கும் முறையில் கையசைவு, கண்ணசைவிலேயோ எல்லாத்தையும் முடிச்சுடுவார்னு நினைக்கறாங்களோ? ஒண்ணும் புரியலை!

நம்ம மக்கள் திரைப்பட நடிகர்கள் திரைப்படங்களில் நாட்டை ஆட்சி செய்து கொடியவர்கள் எல்லோரையும் வெற்றி கொண்டு ஒரே பாடலில் நாட்டில் கொண்டு வரும் மாற்றங்களைப் போல் இங்கேயும் ஆட்சிக்கு வந்து ஒரே பாடலில் தமிழகத்தையும் முன்னேற்றி விடுவார்கள் என நினைக்கிறாங்க போல! அது இயக்குநர் சொல்லிச் செய்வது. உண்மையில் அவங்க ஆட்சிக்கு வந்து இதை எல்லாம் செய்ய வேண்டியது என ஆரம்பித்தால்! எங்கேயோ போயிடும். தமிழக மக்கள் இன்னமும் கனவுலகிலேயே மிதக்கின்றனர். டாஸ்மாக்கையும், திரைப்படத்தையும் விட்டால் அவங்களுக்கு வேறே பொது அறிவு தேவை இல்லைனு வைச்சுட்டாங்க போல!
***********************************************************************************
காலம் இல்லாக் காலத்தில் மழை வேறு! சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக இருப்பதைத் தொலைக்காட்சி மூலம் பார்த்தோம். கவலையாகத் தான் இருக்கிறது. சூரியன் இங்கே தலைகாட்டிப் பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகப் போகிறது. இதில் ஏழெட்டு நாட்கள் மழையில் கழிந்தன. மற்ற நாட்களில் தூறுவதும் பின்னர் நிற்பதுமாகக் கழிந்து கொண்டிருக்கின்றன. இன்றும் காலையிலிருந்து வானம் மூடி இருந்துவிட்டுப் பின்னர் 2 மணியில் இருந்து தூற்றல். இப்போக் கொஞ்சம் நின்னிருக்கு! மார்கழி மழை அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர்களுக்கு ஆகாது. பயிர்கள் எல்லாம் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கின்றன.  இயற்கைச் சீற்றமா? அல்லது மாற்றமா? தெரியவில்லை. பருவகாலமே மாறிக்கொண்டிருக்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இனி வரும் நாட்கள் கடுமையான வெப்பம் இருக்கும் எனத் தோன்றுகிறது.
***********************************************************************************
புதிய கொரோனாவும் ஆபத்தை விளைவிக்கிறது எனப் பார்த்தால் பறவைக்காய்ச்சல் வேறே! மனிதர்களுக்குப் பரவுமாம். ஆனால் ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு வராதாம். ஒண்ணும் புரியலை. கேரளாவில் கொரோனாவும், பறவைக்காய்ச்சலும் முழு வீச்சில் இருக்கிறது. நாம் தான் கவனமாக இருக்கணும். கொரோனாவுக்குக் கண்டுபிடித்திருக்கும் தடுப்பு மருந்துகள் பற்றி இருவகையான கருத்துகள் நிலவுகின்றன. அதை யாருக்கு முன்னுரிமை கொடுத்துக் கொடுப்பது என்பதிலும் கருத்து வேறுபாடுகள். ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் சொல்கின்றனர். ஊசியைப் போட்டுக் கொண்டு ஒரு மணி நேரமாவது மருத்துவ மனையில் இருந்து பக்க விளைவுகள் இல்லை என்றாலே நம்பலாம்/நம்ப முடியும். 
***********************************************************************************
அரங்கனைப் பார்த்தே ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. கோயிலில் நிற்கும் கூட்டத்தைப் பார்த்தால் நம்மால் அவ்வளவு நேரம் நிற்க முடியாது என்பதாலும் விட்டு விட்டுப் பெய்யும் மழையாலும் போக முடியவில்லை/ போக முயற்சியும் செய்யலை என்பதே உண்மை. பயம் தான் காரணம். இன்று கூட வெளியே போகவேண்டிய வேலை இருந்தது. ஆனால் போகவில்லை. தவிர்த்து விட்டோம். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி? சென்னை போகணும். ஆனால் போக பயமா இருக்கு! அங்கிருந்து வருபவர்கள் சொல்வதைக் கேட்டால் சென்னைக்குப் போகவே வேண்டாமே என்று தோன்றுகிறது/ அதே சமயம் சென்னையில் இருக்கும் உறவினர்களைப் பார்க்க வேண்டும் என்னும் ஆவலும் இருக்கிறது. எல்லோரும் இருக்காங்களே! பத்திரமாக இருக்கணும்னு பிரார்த்தனைகள் தான் செய்ய முடியும். சாதாரணமாக இருந்திருந்தால் இதோடு 2 முறையாவது சென்னைக்கு வந்திருப்போம். இப்போக் கிளம்பவே யோசனை!
**********************************************************************************
சஹானாவில் என்னென்னவோ போட்டிகள்! பரிசுகள்! ஏடிஎம் சொல்லிட்டே இருக்காங்க. இந்தப் புத்தகப் போட்டியிலோ அல்லது வாசிப்புப் போட்டியிலோ கலந்து கொள்ள என்னால் முடியலை. ஏனெனில் கிண்டிலில் இருந்து புத்தகம் தரவிறக்கி வாசிக்கவோ அல்லது ஆன்லைனிலேயே அந்தப் புத்தகத்தைப் பார்க்கவோ படிக்கவோ புத்தகங்களைத் திறக்கவே முடிவதில்லை. சொல்லப்போனால் நான் இரு சமையல் புத்தகங்கள் வெளியிட்டிருக்கேன். இரண்டையும் என்னால் திறந்தோ என்னுடைய கணினியில் தரவிறக்கிக் கொண்டோ பார்க்கவோ, படிக்கவோ முடியவில்லை. ஆகவே இந்த பென் டு பப்ளிஷ் போட்டியிலோ/வாசிப்புப் போட்டியிலோ என்னால் பங்கு பெற முடியலை. நான் போட்டியில் கலந்துக்கணும்னு நினைப்பதே அபூர்வம். அப்படி நினைச்சப்போ இப்படி ஒரு தடங்கல்! இஃகி,இஃகி,இஃகி,இஃகி!  ஏற்கெனவே ஜிமெயிலைத் திறக்கும்போதெல்லாம் cannot sync என்று வரும். அநேகமாக ஒவ்வொரு நாளும் புதுசா ஜிமெயில் அக்கவுன்டைத் திறக்கறாப்போல் தான் திறக்கணும். இல்லைனா தாற்காலிகமாகத் தவறு நேர்ந்திருக்கு. சற்றுப் பொறுக்கவும். மீண்டும் முயற்சி செய்யவும். என்று வரும். Temporary Error! Retry. இந்த அழகில் நான் இணையத்துக்கு வந்து பதிவுகளை எல்லாம் பார்த்துப் படிச்சுக் கருத்துச் சொல்லி, என்னோட பதிவுகளுக்குக் கருத்துக் கேட்டு! இதே அதிகம். போதும்டா சாமி! :))))))