/வெளிநாடுகளில், திருமணமான பெண் கணவனின் பெயரை சர்நேம் ஆக வைத்துக்கொள்வதில்லை. இந்தியாவில் திருமணமானவுடன் பெண்ணுக்கு கணவனின் சர்நேம் வந்துவிடுகிறது. இது எதனால்? இந்தியாவில் மனைவி, கணவனின் உடைமையாக கருதப்படுவதாலா?//
நெல்லை சொல்லி இருப்பது, அதிலும் வெளிநாடுகளில் அப்பா பெயர் வைச்சுக்க மாட்டாங்கனு சொல்லுவது எனக்குத் தெரிஞ்சு தப்பு. பலரும் திருமணம் ஆனதும் கணவனின் குடும்பப் பெயரைத் தான் சுமந்துக்கிட்டு இருப்பாங்க/இருக்காங்க. இங்கே வட நாட்டிலும் கணவனின் குடும்பப் பெயராக மாறிடும். வெகு சிலர் மட்டுமே அப்பா வீட்டுப் பெயரில் இருப்பாங்க. ஆனால் தென்னாட்டில் (மத்த மாநிலங்கள் பத்தித் தெரியாது.) தமிழ்நாட்டில் அப்படி எல்லாம் கல்யாணம் ஆனதும் கணவன் பெயரை நம் பெயரோடு இணைச்சுக்க முடியாது. இதுக்கு நானே ஒரு சிறந்த உதாரணம்/. நான் கல்யாணம் ஆவதற்கு முன்னரே தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலைக்குத் தேர்வாகி விட்டேன். போஸ்டிங் வருவதில் தான் தாமதம். அதுக்குள்ளே என் அப்பா ரொம்ப அவசரப்பட்டதால் எனக்குக் கல்யாணமும் ஆகி நான் சென்னை/அம்பத்தூரில் குடித்தனமும் வந்தாச்சு. அதுக்குப் பின்னரே எனக்குச் சென்னையில் ஜார்ஜ் டவுன் அல்லது தண்டையார்ப்பேட்டை அலுவலகத்தில் போய் வேலையை ஒப்புக்கொள்ளச் சொல்லி உத்தரவு வந்திருந்தது.
வேலைக்கான உத்தரவு வந்தப்போ அலுவலகத்தில் யாருக்கும் எனக்குக் கல்யாணம் ஆன விஷயம் தெரியாது. குமாரி என்.ஆர்.கீதா என்று போட்டே உத்திரவு வந்திருந்தது. தண்டையார்ப்பேட்டை அலுவலகத்தில் வேலையை ஒப்புக் கொண்டேன். அதில் கையெழுத்து இடும்போது நமக்குத் தான் கல்யாணம் ஆயிடுத்தே என்னும் எண்ணத்தில் "கீதா சாம்பசிவம்" என்று கையெழுத்துப் போட்டு உத்தரவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி உடனே வேலையையும் ஆரம்பிச்சுட்டேன். நான் இருந்தது ஓர் நிர்வாக அலுவலகம் மட்டுமே. தலைமை அலுவலகம் இம்மாதிரியான சென்னை/மற்ற ஊர்களில் உள்ளவை எல்லாவற்றுக்கும் சேர்த்து மவுன்ட் ரோடில் எல்.ஐ.சி.க்கு எதிரே ஓர் பிரம்மாண்டமான கட்டிடத்தில் இருந்தது. உத்தரவை ஏற்றுக் கொண்டு முதலில் அங்கேதான் போய் ரிப்போர்ட் செய்யச் சொல்லி இதில் அனுபவம் உள்ளவர்கள் அம்பத்தூரிலேயே சொன்னதால் நான் முதலில் மவுன்ட்ரோட் அலுவலகம் தான் போனேன். அவங்க இந்த இரு அலுவலகம் தான் தட்டச்சுபவர் கேட்டிருப்பதால் இரண்டில் நீ எங்கே போய் வேலை செய்ய ஆசைப்படுகிறாய்னு கேட்டாங்க. சென்னைக்கு அவ்வப்போது வந்து போனதத் தவிர்த்தால் நான் சென்னைக்கே புதுசு. ஆகவே ஒண்ணும் தெரியவில்லை. சும்மா இருந்தேன். அவரே நீ எங்கே குடித்தனம் இருக்காய்னு கேட்டுட்டு அம்பத்தூ ர்னா பேசின் பிரிட்ஜ் வந்து அங்கிருந்து பேருந்து பிடிச்சு அலுவலகம் போகலாம். சாயந்திரமும் அலுவலக வாசலில் இருந்து பஸ் பிடிச்சு பேசின் பிரிட்ஜ் வந்து ரயிலில் வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னார். எனக்கு இதெல்லாம் அரை குறையாகத் தான் புரிஞ்சது. என்றாலும் சரினு தலை ஆட்டினேன். தண்டையார்ப்பேட்டை அலுவலக மெசெஞ்சர் வந்திருப்பதாகவும் அவருடன் போயிடுனும் சொன்னார்.
ரொம்பப் பெரிசா ஆயிட்டதாலே பதிவாப்போட்டுட்டேன்.
வேலைக்கான உத்தரவில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்னு சொன்னேன் இல்லையா? அதூ அன்னிக்கே சாயங்காலம் அனுப்பிட்டாங்க. ஆனால் மறுநாள் அலுவலகம் வந்தால் ஒரே அதிர்ச்சி. என்னுடைய வேலைக்கான ஆர்டரை நிறுத்தி வைச்சிருந்தாங்க. என்னடா இது புதுக்குழப்பம்னு அக்கவுன்டன்ட் கிட்டே போய்க் கேட்டால். "உன் பெயர் என்னம்மா?" என்றார். கீதா நு சொல்லிட்டு இப்போக் கல்யாணம் ஆனதாலே கீதா சாம்பசிவம்னு சொன்னேன். இனிக்ஷியல்? என்று கேட்டார். ஸ்கூலில் இரண்டு ஆர். கீதா இருந்ததால் எனக்கு என்.ஆர். கீதா தான் இனிக்ஷியல் என்றேன். உடனே அந்த மறுப்புக்கான காரணம் சொல்லி வந்திருந்த கடிதத்தை என் பெயருக்கும் அலுவலகம் பெயருக்கும் மவுன்ட் ரோடு அட்மின் அலுவலர் பெயருக்கும் வந்திருந்ததில் எனக்கான காப்பியைக் கொடுத்தார். பார்த்தால் அதில் நாங்கள் தேர்வு செய்த நபர் என்.ஆர். கீதா என்னும் பெண்மணி தான். ஆனால் கீதா சாம்பசிவம்னு கையெழுத்து இருப்பதால் இதை ஏற்க முடியாது. ஆள் மாறாட்டமாய் இருக்கலாமோ என்னும் சந்தேகத்துடன் திருப்பி அனுப்புகிறோம் என்றிருந்தது. உடனே நம்மவருக்குத் தொலைபேசி மூலம் அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னார் இந்த மாதிரி இந்தத் தேதியில் கல்யாணம் ஆயிடுச்சுனும். அப்போ உன் பெயர் என்.ஆர். கீதா தான் எனவும் கல்யாணம் ஆனதால் தானாகவே கணவன் பெயரோடு இணையும் எனவும் எழுதிக் கூடவே இன்னொரு எஸ்.எஸ்.எல்.சி. சர்டிஃபிகேட் பிறப்புச் சான்றிதழ், பள்ளியில் கொடுத்த டி.சி. எல்லாத்தையும் ஒவ்வொண்ணு கெஜடட் அலுவலரிடம் கையெழுத்து வாங்கி நிரப்பிக் கொடுத்தேன். இஃகி,இஃகி,இஃகி.
மறு நாள் நடக்கப்போவதை அறியாமல் ஒரு பெருமூச்சுடன் (நிம்மதியாம்) என் இடத்தில் போய் அமர்ந்து வேலையை ஆரம்பித்தேன். மறுநாள் காலை அலுவலகம் வந்தால் மறுபடி உத்தரவை ரத்து செய்து அனுப்பி இருந்தாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னடா காரணம்னு பார்த்தால் என்.ஆர். கீதாவுக்குக் கல்யாணம் ஆனதெல்லாம் சரி. ஒத்துக்கறோம். ஆனால் அதனால் பெயரெல்லாம் மாறிடாது. என்.ஆர்.கீதா "கீதா சாம்பசிவம்"னு மாறணும்னா கெஜட்டில் விண்ணப்பம் செய்து அதில் விளம்பரம் செய்து அந்த விளம்பரத்தைப் பத்திரிகைகளில் வெளியிட்டு இந்த மாதிரி என் பெயரை நான் சட்ட பூர்வமாகக் கணவர் பெயரோடு இணைத்துக் கொண்டு விட்டேன்னு அறிவிக்கணும். இல்லைனா இவங்க என்.ஆர்.கீதா தான். என்.ஆர். கீதா தான் இங்கே வந்து வேலையை ஏத்துக்கிட்டிருக்காங்கனு நாங்க நம்பணும்னா இவங்க கையெழுத்திலும் என்.ஆர்.கீதா என்றே போடணும். இல்லைனா நாங்க நம்ப மாட்டோம்னு சொல்லிட்டாங்க. வீட்டுக்கு ஆலோசிச்சோம். என்னோட கடைசி நாத்தனார் அப்போ எங்களோட இருந்தாங்க. அவளுக்கு ஒரே கோபம். அது எப்படி அண்ணா பெயரைச் சேர்க்கக் கூடாதுனு சொல்லுவாங்க. நீங்க விடாதீங்க. கல்யாணம் ஆயிடுச்சுன்னா தானாகவே யாரும் சொல்லாமலஏயே பெயர் மாறிடும் என்றெல்லாம் சொன்னார். ஆனால் நாங்க ரெண்டு பேரும் அதை ஏத்துக்காமல் அலுவலக அளவில் என்.ஆர்.கீதாவே போதும்னு வைச்சுட்டோம். கெஜட் வரை எல்லாம் போய்ப் பெயரை மாத்த வேண்டாம்னு இருந்தோம். சரினு அலுவலகத்தில் என்.ஆர்.கீதானே எழுதிக் கொடுத்தாச்சு. அவங்களுக் குமாரியை எடுத்துட்டுத் திருமதி என்.ஆர்.கீதானு போட்டாங்க. ஆனால் இத்துடன் பிரச்னை நிக்கலையே.!


