எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 08, 2026

கவர்னரைப் பார்த்தேன்!

 



ஒரு நல்ல ஹிந்திப்படம் பார்த்தேன். ஒரு மாதத்துக்கும் மேலாக அது அமேசான் பிரைமில் இருந்தாலும் நேத்திக்குத் தான் திடீர்னு அதைப்பார்க்கணும்னு நினைச்சேன். முதலில் ஏதோ மாநில கவர்னர் பத்தின கதைனு தான் நினைச்சேன். ஆனால் இல்லை. இது இந்தியாவின் பொருளாதார வரலாறு. அதுக்காக அறுவை எல்லாம் போடவில்லை. த்ரில்லிங்காக எடுத்திருக்காங்க. இது 1990 ஆம் ஆண்டில் திரு சந்திரசேகர் பிரதமராக இருந்தப்போ, அதாவது வி.பி. சிங்கிற்குப் பின்னர் கொஞ்ச காலமே சந்திரசேகர் பிரதமராக இருந்தார். யஷ்வந்த் சின்கா தான் அப்போ நிதி மந்திரினு நினைவு. அந்தக் கால கட்டத்தில் இந்தியாவில் தோன்றிய நிதி நெருக்கடியையும் அதை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த திரு வெங்கிட ரமணன் அந்த நிதி நெருக்கடியை எப்படிச் சமாளித்தார் என்பதையும் திரைப்படமாக எடுத்திருக்காங்க.

ஓர் தமிழரான வெங்கிடரமணன் இதிலும் கிட்டத்தட்ட அந்தப் பெயரிலேயே ராமன் என்று அழைக்கப்படுகிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் ராமனாக நடித்திருப்பவர் மனோஜ் வாஜ்பாய். இவர் ஆரம்ப காலத்துப் படங்கள் அதிகம் பார்த்திருக்கேன். இப்போதைய படங்கள் பார்க்கவில்லை. இதில் சிறப்பாகச் செய்திருக்கிறார். முதலில் தன்னை விட சீனியரான டெபுடி கவர்னர் சி.ஆர். இருக்கையில் தன்னை கவர்னராகப் போட்டதையே ஏற்க முடியாமல் இருந்தாலும் பின்னர் மெல்ல மெல்ல சமாளித்துக் கொள்கிறார். ஆரம்பத்தில் அலுவலக ஊழியர்களின் ஒத்துழைப்புக் கிடைக்காமல் இருந்தாலும் மெல்ல மெல்ல அவர்கள் அபிமானத்தைப் பெறுகிறார். இவர் நிதி நெருக்கடியைச் சமாளிக்கச் சொல்லும் ஒவ்வொரு யோசனையும் தோற்றுப் போகக் கடைசியில் அரசியல் நெருக்கடி காரணமாகச் சந்திரசேகர் காபந்து சர்க்காரின் பிரதமராக இருக்கையில் தான் இந்தத் தங்கத்தை வைத்துப் பணம் வாங்கும் சூழ்நிலையை ராமன் அவர்கள் நிதி மந்திரியிடமும், பின்னர் பிரதமரிடமும் சொல்ல இருவரும் கடுமையாக ஆக்ஷேபிக்கின்றனர். ஆனால் இப்போது ராமனின் தேசத்தின் மீதுள்ள பற்றும் எப்படியாயினும் தேசத்தைக் காக்க வேண்டும் என்று அவர் முழு மூச்சாக இயங்குவதையும் பார்த்த சி.ஆர். டெபுடி கவர்னர் அவருடன் ஒத்துழைத்துப் பிடிவாதமாக நிதி மந்திரியிடமும், பிரதமரிடமும் தங்கத்தை வைக்க ஒப்புதல் பெற்று விடுகிறார்.

அலுவலகச் சூழ்நிலையும் திருப்தியாக இல்லாத சமயத்தில் ஒவ்வொரு பிரச்னையையும் நிதானமாகக் கையாண்டு  நாட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கத் தங்கத்தை வைக்க வேண்டும் என்னும் முடிவுக்குப் பிரதமரை ஒப்புக்கொள்ள வைக்கிறார். அந்தத் தங்கத்தை விமானம் மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்குக் கொண்டு சேர்க்க அவர் படும் பாடு. கடைசி நிமிடத்தில் இன்ஷூரன்ஸ் பிரச்னை பண்ண அதுவும் பிரச்னை தீர்ந்து போய்த் தங்கம் அனைத்தும் மூன்று ராணுவ வான்களில் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதை சாதாரணமான வான் எனக் காட்டிக் கொண்டு எந்தவிதமான அடையாளங்களும் இல்லாமல் எடுத்துப் போனாலும் ஓர் பத்திரிகை நிருபியான அதிதி வர்மா என்னும் பெண் அதைப் பார்த்து விடுகிறாள். 

இதுக்கு நடுவில் 3 வான்களில் மற்ற இரண்டும் விமானம் ஏறப் போய்ச் சேர்ந்து விட மூணாவது வான் மட்டும் விபத்தில் மாட்டிக் கொள்ள விபத்தில் மாட்டினவன் பேட்டை தாதா. மூணாவது வானுக்கு என்ன ஆச்சுனு பார்க்க வந்த மனோஜ் வாஜ்பாய் அந்த மனிதனைச் சமாளித்து மூணாவது வானையும் விமான நிலையம் அனுப்பி வைக்கும் வரை அனைவருக்கும் திக் திக் திக் தான்.அவன் தன்னுடைய அரசியல் செல்வாக்கை வைத்து வானுக்குப் பாதுகாப்பாக வந்த ரிசர்வ் வங்கி அலுவலரின் மேல் சந்தேகப்பட்டு வானைச் சோதனை போட வேண்டும் என்று தகராறு செய்து போலீசை அழைக்கச் சரியாக அந்த நேரத்தில் வானைத் தேடிக் கொண்டு வரும் ராமன் விஷயம் புரிந்து தாதாவைச் சமாளித்து வானை விமான நிலையம் கொண்டு செல்ல உதவுகிறார். அந்தச் சமயம் பார்த்து பத்திரிகை நிருபியான அதிதி வர்மா அவரிடம் தங்கத்தை அடகு வைப்பது குறித்து ஆக்ரோஷமாகச் சண்டை போட அவரோ தன் நிலையை விளக்குகிறார். அவர் சொல்வதைக் கேட்ட அதிதிக்கும் மனம் மாறி இந்த விஷயத்தை ஸ்கூப் செய்தியாகப் பத்திரிகைக்கு அனுப்பாமல் காத்திருந்து காரியம் முடிந்ததுமே பத்திரிகையில் வெளியிட வைக்கிறாள்.

 ராமனின் மகள் ஐஏஎஸ். பாஸ் செய்த தகவல் வர   அங்கே நினைத்தால் எல்லோரிடமும் கடன் வாங்கிப் பிழைக்கும் ப்யூன் படில் ஸ்வீட்டை எடுத்துக் கொண்டு வந்து தன் மகள் பார்தியும் ஐஏஎஸ் பாஸ் பண்ணி இருப்பதாகச் சொல்ல  ஊழியர்கள் அனைவரிடமும் ஒரே உணர்ச்சி வெள்ளம்.ப்யூன் ஆன படில் ஸ்வீட் எடுத்து வந்து தன் மகள் ஐஏஎஸ் பாஸ் பண்ணி இருப்பதாகச் சொல்ல   அனைவரும் கண்ணீரோடு ஆசீர்வாதம் பண்ணப் பின்னர் தங்கம் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களுக்குப் போய்ச் சேர்ந்து ரிசர்வ் வங்கிக்குப் பணமும் வந்து சேருகிறது. நடுவில் ராஜிவ் காந்தி கொலை பத்தி எல்லாம் வந்தாலும் விரிவாக எல்லாம் சொல்லலை. பின்னர் நர்சிம்ம ராவ் பிரதமராக ஆவதும் மன்மோகன் சிங் நிதி மந்திரி ஆனதும் அவர் மூலம் இந்தியா திறந்த பொருளாதாரத்துக்குள் நுழைந்ததும் காட்டப்படுவதோடு இப்போது இந்தியா பொருளாதாரத்தில் வலிமை அடைந்திருப்பதையும் சிம்போலிக்காகக் காட்டுவதோடு படம் முடிகிறது.

இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும்னு எல்லாம் சொல்ல முடியாது. எந்தவிதமானக் காதல் காட்சிகளோ, அல்லது சண்டைக் காட்சிகளோ இல்லை. பாடல் கூட ஒரே ஒரு இடத்தில் பின்னணியில் வருகிறது. உண்மையில் அந்தக் கால கட்டத்தில் இந்திய அரசாங்கத்தில் என்ன நடந்திருக்குமோ அதை மட்டுமே எடுத்துப் போட்டிருக்கிறார்கள். உண்மைச் சம்பவங்கள் என்பதால் அதிகமாகக் கட்டுக்கதையோ மிகைப்படுத்தலோ இல்லை. எல்லோரும் நிஜமான உணர்வுகளோடு வருகிறர்கள். நடிச்சுட்டு இல்லை அந்த அந்தப் பாத்திரமாக வாழ்ந்துட்டுப் போயிருக்கிறார்கள். 

Friday, September 04, 2026

கோகுலாஷ்டமி வாழ்த்துகள். சோதனைப் பதிவு

 Checking my post.




அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள். என்னால் இன்னிக்கு மத்தவங்க யாரோட பதிவிலும் கருத்துச் சொல்ல முடியலை. அதான் இங்கே என்னோட வலைப்பக்கம் வந்து பழைய பதிவுகளிலும் இன்னிக்கு இந்தப் பதிவைப் போட்டுட்டு இதிலேயும் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக் கொண்டேன். இது 2024 ஆம் வருடம் நம்ம ரங்க்ஸ் இருக்கையில் கொண்டாடியது. இதுக்கப்புறமாக் கொண்டாடலை. இந்த வருஷம் தான் இங்கே முதல் முதலாகக் கிருஷ்ண ஜயந்தியுடன் ஆரம்பிக்கும் பண்டிகைக் காலம்.   இங்கே இன்னிக்கு கோகுலாஷ்டமி கொண்டாடினாலும் இந்தியாவில் பண்ணுவது போலெல்லாம் பண்ண முடியாது. சும்மாக் கொஞ்சம் போல் ஏதானும் இனிப்புச் செய்துட்டுப்ப் பால், பழம், தயிர், மோர், அவல் வைத்து நிவேதனம் பண்ணணும். அவ்வளவு தான் முடியும். முன்னர் போலெல்லாம் பக்ஷணங்கள் பண்ணவோ, அல்லது தின்னவோ உடல்நிலையோ மனநிலையோ இடம் கொடுக்காது. எனினும் குழந்தைகளின் க்ஷேமத்துக்காகப் பண்டிகையைக் கொண்டாடணும். இது என் அப்பா முன்னெல்லாம் அடிக்கடி சொல்லுவார். அப்பாவிடம், "நீ பண்டிகை கொண்டாடிட்டா நாங்க க்ஷேமமா இருந்துடுவோமா?" எனக் கிண்டல் செய்திருக்கேன். ஆனால் இப்போ அதன் உள் அர்த்தம் புரிகிறது. எல்லோரும் நல்லா இருக்கணும். உலக க்ஷேமத்தை வேண்டியும் இன்னிக்குக் கிருஷ்ண ஜயந்தியை அனைவரும் நல்லபடியாக் கொண்டாடணும். ஒண்ணும் முடியாட்டியும், பால், சர்க்கரையாவது வைச்சுக் கிருஷ்ணனை வணங்குவோம்.


அனைவருக்கும் இனிய ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்.

Wednesday, August 05, 2026

கண்டு பிடிச்சீங்களா ?

 

இது யாருனு தெரியுது இல்லையா? எப்போ எடுத்ததுனு யாரானும் யூகம் செய்யுங்க. இப்படி இருந்த நான் தான் இப்போ இப்படி ஆயிட்டேன். :(


இன்னும் சில படங்கள் இருக்கின்றன. அவற்றையும் ஒண்ணொண்ணாப் போடறேன். கூட இருக்கிறவங்க யார்னு புரியுதா/ ம்ஹூம் புரிஞ்சிருக்காது. 


இப்போதைய மனோ நிலை எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்னு எல்லாவற்றிலும் ஒரு கலக்கமாக, கவலை தருவதாக இருக்கிறது. அதனால் இப்படிக் கொஞ்சம் மனசை மாற்ற முயற்சி செய்யறேன். ஆச்சு இன்னும் அதிகம் போனால் 20 நாட்கள் தான் இந்தியா வாசம். எப்போக் கிளம்புவோம்னு எனக்கே தெரியாது.

Wednesday, July 22, 2026

உன் பெயர் என்ன சொல்லு!

 /வெளிநாடுகளில், திருமணமான பெண் கணவனின் பெயரை சர்நேம் ஆக வைத்துக்கொள்வதில்லை. இந்தியாவில் திருமணமானவுடன் பெண்ணுக்கு கணவனின் சர்நேம் வந்துவிடுகிறது. இது எதனால்? இந்தியாவில் மனைவி, கணவனின் உடைமையாக கருதப்படுவதாலா?//

நெல்லை சொல்லி இருப்பது, அதிலும் வெளிநாடுகளில் அப்பா பெயர் வைச்சுக்க மாட்டாங்கனு சொல்லுவது எனக்குத் தெரிஞ்சு தப்பு. பலரும் திருமணம் ஆனதும் கணவனின் குடும்பப் பெயரைத் தான் சுமந்துக்கிட்டு இருப்பாங்க/இருக்காங்க. இங்கே வட நாட்டிலும் கணவனின் குடும்பப் பெயராக மாறிடும். வெகு சிலர் மட்டுமே அப்பா வீட்டுப் பெயரில் இருப்பாங்க. ஆனால் தென்னாட்டில் (மத்த மாநிலங்கள் பத்தித் தெரியாது.) தமிழ்நாட்டில் அப்படி எல்லாம் கல்யாணம் ஆனதும் கணவன் பெயரை நம் பெயரோடு இணைச்சுக்க முடியாது. இதுக்கு நானே ஒரு சிறந்த உதாரணம்/. நான் கல்யாணம் ஆவதற்கு முன்னரே தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலைக்குத் தேர்வாகி விட்டேன். போஸ்டிங் வருவதில் தான் தாமதம். அதுக்குள்ளே என் அப்பா ரொம்ப அவசரப்பட்டதால் எனக்குக் கல்யாணமும் ஆகி நான் சென்னை/அம்பத்தூரில் குடித்தனமும் வந்தாச்சு. அதுக்குப் பின்னரே எனக்குச் சென்னையில் ஜார்ஜ் டவுன் அல்லது தண்டையார்ப்பேட்டை அலுவலகத்தில் போய் வேலையை ஒப்புக்கொள்ளச் சொல்லி உத்தரவு வந்திருந்தது.

வேலைக்கான உத்தரவு வந்தப்போ அலுவலகத்தில் யாருக்கும் எனக்குக் கல்யாணம் ஆன விஷயம் தெரியாது. குமாரி என்.ஆர்.கீதா என்று போட்டே உத்திரவு வந்திருந்தது. தண்டையார்ப்பேட்டை அலுவலகத்தில் வேலையை ஒப்புக் கொண்டேன். அதில் கையெழுத்து இடும்போது நமக்குத் தான் கல்யாணம் ஆயிடுத்தே என்னும் எண்ணத்தில் "கீதா சாம்பசிவம்" என்று கையெழுத்துப் போட்டு உத்தரவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி உடனே வேலையையும் ஆரம்பிச்சுட்டேன். நான் இருந்தது ஓர் நிர்வாக அலுவலகம் மட்டுமே. தலைமை அலுவலகம் இம்மாதிரியான சென்னை/மற்ற ஊர்களில் உள்ளவை எல்லாவற்றுக்கும் சேர்த்து மவுன்ட் ரோடில் எல்.ஐ.சி.க்கு எதிரே ஓர் பிரம்மாண்டமான கட்டிடத்தில் இருந்தது. உத்தரவை ஏற்றுக் கொண்டு முதலில் அங்கேதான் போய் ரிப்போர்ட் செய்யச் சொல்லி இதில் அனுபவம் உள்ளவர்கள் அம்பத்தூரிலேயே சொன்னதால் நான் முதலில் மவுன்ட்ரோட் அலுவலகம் தான் போனேன். அவங்க இந்த இரு அலுவலகம் தான் தட்டச்சுபவர் கேட்டிருப்பதால் இரண்டில் நீ எங்கே போய் வேலை செய்ய ஆசைப்படுகிறாய்னு கேட்டாங்க. சென்னைக்கு அவ்வப்போது வந்து போனதத் தவிர்த்தால் நான் சென்னைக்கே புதுசு. ஆகவே ஒண்ணும் தெரியவில்லை. சும்மா இருந்தேன். அவரே நீ எங்கே குடித்தனம் இருக்காய்னு கேட்டுட்டு அம்பத்தூ ர்னா பேசின் பிரிட்ஜ் வந்து அங்கிருந்து பேருந்து பிடிச்சு அலுவலகம் போகலாம். சாயந்திரமும் அலுவலக வாசலில் இருந்து பஸ் பிடிச்சு பேசின் பிரிட்ஜ் வந்து ரயிலில் வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னார். எனக்கு இதெல்லாம் அரை குறையாகத் தான் புரிஞ்சது. என்றாலும் சரினு தலை ஆட்டினேன். தண்டையார்ப்பேட்டை அலுவலக மெசெஞ்சர் வந்திருப்பதாகவும் அவருடன் போயிடுனும் சொன்னார்.

ரொம்பப் பெரிசா ஆயிட்டதாலே பதிவாப்போட்டுட்டேன்.

வேலைக்கான உத்தரவில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்னு சொன்னேன் இல்லையா? அதூ அன்னிக்கே சாயங்காலம் அனுப்பிட்டாங்க. ஆனால் மறுநாள் அலுவலகம் வந்தால் ஒரே அதிர்ச்சி. என்னுடைய வேலைக்கான ஆர்டரை நிறுத்தி வைச்சிருந்தாங்க. என்னடா இது புதுக்குழப்பம்னு அக்கவுன்டன்ட் கிட்டே போய்க் கேட்டால். "உன் பெயர் என்னம்மா?" என்றார். கீதா நு சொல்லிட்டு இப்போக் கல்யாணம் ஆனதாலே கீதா சாம்பசிவம்னு சொன்னேன். இனிக்ஷியல்?  என்று கேட்டார். ஸ்கூலில் இரண்டு ஆர். கீதா இருந்ததால் எனக்கு என்.ஆர். கீதா தான் இனிக்ஷியல் என்றேன். உடனே அந்த மறுப்புக்கான காரணம் சொல்லி வந்திருந்த கடிதத்தை என் பெயருக்கும் அலுவலகம் பெயருக்கும் மவுன்ட் ரோடு அட்மின் அலுவலர் பெயருக்கும் வந்திருந்ததில் எனக்கான காப்பியைக் கொடுத்தார். பார்த்தால் அதில் நாங்கள் தேர்வு செய்த நபர் என்.ஆர். கீதா என்னும் பெண்மணி தான். ஆனால் கீதா சாம்பசிவம்னு கையெழுத்து இருப்பதால் இதை ஏற்க முடியாது. ஆள் மாறாட்டமாய் இருக்கலாமோ என்னும் சந்தேகத்துடன் திருப்பி அனுப்புகிறோம் என்றிருந்தது. உடனே நம்மவருக்குத் தொலைபேசி மூலம் அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னார் இந்த மாதிரி இந்தத் தேதியில் கல்யாணம் ஆயிடுச்சுனும். அப்போ உன் பெயர் என்.ஆர். கீதா தான் எனவும் கல்யாணம் ஆனதால் தானாகவே கணவன் பெயரோடு இணையும் எனவும் எழுதிக் கூடவே இன்னொரு எஸ்.எஸ்.எல்.சி. சர்டிஃபிகேட்  பிறப்புச் சான்றிதழ், பள்ளியில் கொடுத்த டி.சி. எல்லாத்தையும் ஒவ்வொண்ணு கெஜடட் அலுவலரிடம் கையெழுத்து வாங்கி நிரப்பிக் கொடுத்தேன். இஃகி,இஃகி,இஃகி.

மறு நாள் நடக்கப்போவதை அறியாமல் ஒரு பெருமூச்சுடன் (நிம்மதியாம்) என் இடத்தில் போய் அமர்ந்து வேலையை ஆரம்பித்தேன். மறுநாள் காலை அலுவலகம் வந்தால் மறுபடி உத்தரவை ரத்து செய்து அனுப்பி இருந்தாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னடா காரணம்னு பார்த்தால் என்.ஆர். கீதாவுக்குக் கல்யாணம் ஆனதெல்லாம் சரி. ஒத்துக்கறோம். ஆனால் அதனால் பெயரெல்லாம் மாறிடாது. என்.ஆர்.கீதா "கீதா சாம்பசிவம்"னு மாறணும்னா கெஜட்டில் விண்ணப்பம் செய்து அதில் விளம்பரம் செய்து அந்த விளம்பரத்தைப் பத்திரிகைகளில் வெளியிட்டு இந்த மாதிரி என் பெயரை நான் சட்ட பூர்வமாகக் கணவர் பெயரோடு இணைத்துக் கொண்டு விட்டேன்னு அறிவிக்கணும். இல்லைனா இவங்க என்.ஆர்.கீதா தான். என்.ஆர். கீதா தான் இங்கே வந்து வேலையை ஏத்துக்கிட்டிருக்காங்கனு நாங்க நம்பணும்னா இவங்க கையெழுத்திலும் என்.ஆர்.கீதா என்றே போடணும். இல்லைனா நாங்க நம்ப மாட்டோம்னு சொல்லிட்டாங்க. வீட்டுக்கு ஆலோசிச்சோம். என்னோட கடைசி நாத்தனார் அப்போ எங்களோட இருந்தாங்க. அவளுக்கு ஒரே கோபம். அது எப்படி அண்ணா பெயரைச் சேர்க்கக் கூடாதுனு சொல்லுவாங்க. நீங்க விடாதீங்க. கல்யாணம் ஆயிடுச்சுன்னா தானாகவே யாரும் சொல்லாமலஏயே பெயர் மாறிடும் என்றெல்லாம் சொன்னார். ஆனால் நாங்க ரெண்டு பேரும் அதை ஏத்துக்காமல் அலுவலக அளவில் என்.ஆர்.கீதாவே போதும்னு வைச்சுட்டோம். கெஜட் வரை எல்லாம் போய்ப் பெயரை மாத்த வேண்டாம்னு இருந்தோம். சரினு அலுவலகத்தில் என்.ஆர்.கீதானே எழுதிக் கொடுத்தாச்சு. அவங்களுக் குமாரியை எடுத்துட்டுத் திருமதி என்.ஆர்.கீதானு போட்டாங்க. ஆனால் இத்துடன் பிரச்னை நிக்கலையே.!

Saturday, July 18, 2026

கு.கு. ஊருக்குப் போயிருக்கு!

 வீடு ஒரே அமைதியா இருக்கு. ஐந்தாறு நாட்களாக. சத்தமே இல்லை. வைச்ச சாமான்கள் வைச்ச இடத்தில் இருக்கின்றன. கம்ப்யூட்டர் அறை வெறிச்சோடிக் கிடக்கு. வாஷ் பேசினில் கை கழுவும் சோப் குறையவே இல்லை. விட்டு வைச்ச மாதிரி அப்படியே இருக்கு. வீட்டில் குப்பையும் இல்லை. ஹால் சோஃபாவில் படுத்திருக்கும் கு.கு.வின் பாப்பாக்கள் எல்லாம் கணினி அறையை விட்டே வெளிவரலை. கு.கு அதில் ஒன்றை எப்போவும் எடுத்துப் போகும். கூடவே வைச்சுக்கும். ஆனால் தோஹாவிலோ என்னமோ அதைப் பத்தி செக்யூரிடி கேட்டாங்களோ இல்லை வேறே காரணமோ தெரியலை. இப்போல்லாம் எடுத்துப் போவதில்லை. ஒருவேளை தான் பிக் கேர்ல் ஆகிக் கொண்டு வருவதாக அது சொல்லுகிறதே அதனாலோ என்னமோ. டைனிங் டேபிளில் பால் தம்பளரை வைச்சிருந்தால் உடனே வந்தெல்லாம் குடிக்காது. குடிச்சுட்டுப் பின்னர் ஓட்டமா ஓடிப் போய் சிங்கில் போட்டுவிட்டு ஓடும். 


கலர் கலராக வார்னிஷ் பேப்பர் அல்லது கலர் பேப்பர்களைக் கத்திரித்து அதுக்குத் தோன்றிய டிசைனில் வெட்டி ஒட்டிக் கொண்டு வீட்டில் காகிதக் குப்பைகளைப் போடும். கத்திரிக்கோல்கள் எல்லாம் அதன் அதன் இடத்தில் இருக்கு இப்போ. வண்ணக்கலவை குழைக்கும் கிண்ணங்கள் காய்ந்து கிடக்கின்றன. அதன் பாட புத்தகம் மட்டும் கையில் எடுத்துப் போயிருக்கு போல. மற்றபடி அதன் நினைவுகள் இந்த வண்ணக்கலவைகளிலும், வெட்டிப் போடும் காகிதக் குப்பைகளிலும் ஆங்காங்கே கிடக்கும் அதன் பேபி பொம்மைகளும் அது இல்லை ஊருக்குப் போயிருக்கு என்னும் உண்மையைச் சத்தமாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறாது. இப்போத் தான் நாலைந்து நாட்கள் ஆகின்றன.  அது அடுத்த மாதம் 10 அல்லது 15 தேதிக்குத் தான் வரும். தினம் ராத்திரி அதுக்காக உணவு வரவழைத்துக் கொண்டிருந்தேன். இப்போ நான் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொள்கிறேன். அமாவாசைக்கு அரைச்ச மாவு கொஞ்சம் மீதம். அதைப் பயன்படுத்துகிறேன். 


காகிதங்களைக் கத்திரித்து வெட்டி ஒட்டி ஒரிகாமி போலப் பற்பல டிசைன்களில் ஏதாவது பண்ணிக் கொண்டே இருக்கும். இல்லைனா படங்களை வண்ணம் குழைத்து வரைந்து வெட்டி அட்டையில் ஒட்டி வைச்சுக் கொடுக்கும். சில சமயம் வந்து காட்டிட்டுத் திரும்ப வாங்கிக் கொண்டு போயிடும். இப்போ! வெறிச். ஆச்சு, இன்னும் கொஞ்ச நாட்கள் தான். என்றாலும் ஒரு குழந்தை வீட்டில் மனிதர்களிடையே இத்தனை மாற்றங்களை உண்டு பண்ணும் என்பதை நினைத்தாலே சந்தோஷமா இருக்கு. முன்னெல்லாம் ஓல்ட் மேன், ஓல்ட் லேடினு எங்களைக் கூப்பிடும். இப்போத் தாத்தா இல்லை என்னும் நிதர்சனத்தை ஒப்புக் கொண்டிருக்கு. ஆகவே என்னிடம் அதிகம் வந்து முன்னைப் போல் எதுவும் கேட்பதில்லை. என்றாலும் பாசமும் இருக்கு. அது இரண்டு வருஷங்களுக்கும் முன்னால் ரங்க்ஸ் எனக்கு வெண்டைக்காய் நறுக்கித் தரும்போது செய்த சில்லறை விஷமம். கீழே.



நான் உடம்பு முடியாமல் இருந்தப்போ கெட் வெல் ஸூன் பாட்டி! என்று எழுதி துர்கானு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது இது.







தாத்தா வெண்டைக்காய் நறுக்கும்போது அதன் காம்புகளைப் பொறுக்கித் தாத்தாவுக்கு ஆபரணங்களாக அணிவித்த படம் இது இரண்டும். 

Tuesday, June 16, 2026

வருஷம் முடிஞ்சது நல்லபடியாக!

 


நேத்திக்கு ஹோமம் செய்யும் இடத்தில் மாமா படம் வைச்சு மாலை எல்லாம் போட்டிருந்தோம். அதைத் தான் இங்கே பகிர்ந்திருக்கேன். கீழே எங்க வீட்டு ராமர் இப்போதைய நிலையில்.




ஜூன் ஆறாம் தேதி இங்கே ஸ்ரீரங்கம் வீட்டுக்கு வந்தோம். வந்ததில் இருந்து ஒரே அலைச்சல். இன்னிக்கு இப்போத் தான் கொஞ்சம் உட்கார நேரம் கிடைச்சிருக்கு.  ஆறு, ஏழு தேதிகளில் வீட்டின் மின் சாதனங்களைச் சரி பண்ணவே நேரம் ஆகி விட்டது. திங்களன்று கண் பரிசோதனைக்கு இங்கே உள்ள ஜோசஃப் மருத்துவமனைக்குப் போனோம். கிட்டத்தட்ட நூறு வருடங்கள் ஆகப் போகிறதாம் இந்த மருத்துவமனைக்கு. எனக்கு மஹாத்மா காந்தி மருத்துவமனைக்குத் தான் போகவேண்டும் என்னும் எண்ணம். ஆனால் இப்போது அங்கே சேவை சரியில்லை எனச் சொல்லிட்டாங்க. நான் வலக்கண் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையின் மருத்துவர் இப்போ பாதி நாட்கள் இங்கேயும், பாதி நாட்கள் வெளி நாட்டிலேயும் இருக்காங்களாம். அவங்க உதவி மருத்துவர் தான் இப்போச் சிகிச்சை செய்வதாகச் சொன்னாங்க. காலையிலேயே போயிட்டு வீட்டுக்கு வர ஒன்றரை மணி. வந்து தான் சாப்பிட்டோம். 

மறுநாள் பரிசோதனைகள். அதுக்கும் காலையிலேயே போயிட்டு நேரம் எடுத்து விட்டது. வீட்டுக்குப் பதினொன்றரை மணிக்குத் தான் வந்தோம். இதெல்லாம் முடிஞ்ச மறு நாளே வருடாந்திரக் காரியங்கள் ஆரம்பிச்சு ஆச்சு. நல்லவேளையாக இம்முறை சமையலுக்கு ஆளைப் போட்டு விட்டேன். மனிதர்கள் நிறைய என்பதால் கூட ஒரு ஆளையும் வைச்சுக்கச் சொன்னேன். அவங்க கணவரே வந்துட்டார் அதுக்கு. எல்லாக் காரியங்களும் நல்ல முறையில் நடந்தது. கடைசி நாளான நேற்று மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. என் அண்ணா, மன்னி, தம்பி, தம்பி மனைவி, தம்பியின் மருமகள், அண்ணா பெண், மற்றும் நாத்தனார்கள், மைத்துனர் குடும்பம், சம்பதி குடும்பம் எல்லோரும் வந்திருந்தனர். நேற்றிரவு எல்லோரும் ஊருக்குப் போயாச்சு. 

இன்னிக்குத் தான் 3 நாட்கள் துணியைச் சேர்த்து வைச்சிருந்தேன். துவைச்சு உலர்த்தி எடுத்து வைச்சுட்டு மத்தியானம் கொஞ்சம் படுத்துக் கொண்டேன்.  .நாளை அறுவை சிகிச்சை என்பதால் இன்னிக்குக் கண்ணில் இரண்டு மணிக்கொரு தரம் மருந்து விட்டுக்கச் சொல்லி இருப்பதால் மருந்து விட்டுக் கொண்டிருக்கேன். அது என்னமோ மயக்க மருந்து கொடுத்துப் பண்ணப் போறாங்களாம். என்னனு புரியலை. :(   நடுவில் கணினியில் சிறிது நேரம் உடகாரலாம்னு வந்திருக்கேன். நாளைக் காலையிலேயே மருத்துவமனைக்குப் போகணும். நாளைக்குத் தான் கண்ணில் அறுவை சிகிச்சை. ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்த வலக்கண்ணில் லென்ஸைச் சுத்தி ஏதோ முளைச்சிருக்காம். என்ன விதை விதைச்சாங்களோ தெரியலை. அதையும் சுத்தம் செய்யணும். ஆனால் இப்போ இல்லை. பத்துநாட்கள் கழிச்சு. இப்போதைக்கு நாளைக்குக் கண் அறுவை சிகிச்சை என்பதால் மறுபடி சில நாட்கள் வருவது கஷ்டம் தான். பார்க்கலாம்


Wednesday, May 27, 2026

ஒரு வருஷம் ஆகிவிட்டது! :(



ஆயிடுத்து. இன்னிக்கோட ஒரு வருஷம். ஆங்கிலத் தேதியைக் கணக்கில் எடுத்துண்டால் ஒரு வருஷம். தமிழ் மாசத்  திதியும் அமாவாசை அன்னிக்கு வந்தது தான். ஆனால் அது சூன்ய திதி என்பதால் பண்ணலை. அடுத்த வாரம் இந்தியா போகணும். கிட்டத்தட்டப் பத்தொன்பது வயதில் இருந்து பார்த்துப் பழகிய மனிதர். இப்போல்லாம் பத்தொன்பது வயசுக்குக் குழந்தை என்கின்றனர். சிலருக்குப் பள்ளிப் படிப்பே அப்போத் தான் முடியும். ஆனால் எனக்கோ கல்யாணமே ஆகி விட்டது. எங்க காலத்தில் என்னை விட இன்னும் சின்ன வயசில் கல்யாணம் ஆனவங்க உண்டு. அவ்வளவு ஏன் என்னோடு படிச்ச சில பெண்களும் எஸ் எஸ் எல் சி பரிட்சை முடிஞ்சதுமே கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். மிஞ்சிப் போனால் 16, 17 வயதுக்குள் தான் இருக்கும்.

இப்போவும் என்னால் இன்னமும் நம்ப முடியலை. இரவில் பக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கிறாப்போல் இருக்கும். திடீர்னு கூப்பிட்டாற்போல் தோன்றி முழிப்பு வரும். அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததில் இருந்து எப்படியும் ராத்திரி பனிரண்டு வரைக்கும் அவரோடத் தான் உட்கார்ந்து கொண்டு இருப்பேன். சில நாட்கள் தூங்கிடுவார். சில நாட்கள் சீக்கிரம் தூக்கம் வராது. அப்போ மட்டும் தூங்கறதுக்குனு ஒரு மாத்திரை கொடுக்கச் சொல்லி மருத்துவர் சிபாரிசு பண்ணி இருந்தார். அதைக் கொடுப்பேன். கொஞ்ச நேரம் புரண்டுவிட்டுப் பின் தூங்குவார். நான் என் படுக்கையில் வந்து படுத்துப்பேன்.

திடீர்னு ஹார்லிக்ஸ் கொடு பசிக்கிறது என்பார். ஒவ்வொரு சமயம் பசி தாங்கலை. சாதம் இருந்தால் நன்கு பிசைந்து மோர் விட்டுக் கரைச்சுக் கொடு என்பார். அந்த அகால வேளையில் சாதம் எப்படிக் கொடுப்பது? கொடுத்தாலும் ஒரு தம்பளர் சாப்பிட்டாலே அதிகம். பாதியில் திரும்பக் கொடுத்துடுவார். ஆனாலும் நல்ல நினைவுகள் இருந்தன. தானே எழுந்து நடமாட ஆரம்பிச்சப்புறமாப் பர்வாயில்லை. இனி ஆபத்து இருக்காது. மருந்துகள் மட்டும் தொடரணும் என்றே நினைச்சிருந்தோம். பிசியோ தெரபிஸ்டும் இனி தேவைன்னா கூப்பிடுங்க வந்து பார்க்கிறேன் என்று 2024 டிசம்பர் கடைசியில் விடை பெற்றார். வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நர்ஸ் பெண்களும் ஒவ்வொருவராக விடை பெற்றனர். இரவுக்கு மட்டும் யாரானும் வரட்டும் என்றால் அவரோ நான் இனி இந்தக் கட்டிலில் படுக்கப் போவதில்லை. நம்ம ரூமில் என்னோட கட்டிலில் என்னோட மெத்தையில் தான் படுத்துக்கப் போறேன்னு சொல்லிட்டு அங்கே வந்து படுக்க ஆரம்பிச்சார். இரவு கழிவறை போறச்சே மட்டும் கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கணும். மற்றபடி பிரச்னை ஏதும் இல்லாமல் தான் இருந்தது.

திடீர்னு சர்க்கரை ஏறி, ஏறி, இறங்கி, இறங்கி நு விளையாட்டுக் காட்ட ஆரம்பிக்க எதுக்கும் காட்டிட்டு வந்துடலாம்னு தான் அன்னிக்கு மருத்துவமனைக்கே போனோம். திரும்பி வந்துடுவோம்னு நினைச்சோம். ஆனால் அங்கே போனப்போ சர்க்கரையை அதிகமாய்க் காட்ட மருத்துவர் உடனே எமர்ஜென்சியில் சேர்த்துவிட்டு எழுந்து நடமாடக் கூடாது என்பதால் கதீடரையும் போடச் சொல்லிட்டார். அவரோ எழுந்து கொண்டு டாய்லெட்டில் தான் போவேன்னு பிடிவாதம். எப்படியோ சமாளிச்சேன். நர்ஸ் பெண் ஒருத்தரை இரவுக்குத் துணைக்கு வரச் சொல்லி இருந்தேன். அவரும் இருந்தார். நானும் இருந்தேன். அன்னிக்கெல்லாம் தூங்கிட்டார். பின்னர்மறுநாள் வந்த ஒரு மருத்துவர் திடீர்னு வயிறு பெரிசா இருக்குனு சொல்லிட்டு என் ஜி ட்யூப் மூக்குவழியாப் போட்டு வயிற்றில் என்ன இருக்கோ அதை வெளியேத்தணும்னு சொல்ல, நான் கடுமையாக எதிர்த்தேன். ஆகவே காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் வந்து பார்க்கச் சொன்னார்கள். அவரும்   வந்து பார்த்துட்டு ஒண்ணும் தேவையில்லை. அசிடிடி மாத்திரை மட்டும் கொடுங்கனு சொல்லிட்டார். 

ஆனாலும் இவங்க கேட்கலை. நான் இல்லாதப்போ ஊரில் இருந்து வந்திருந்த பையரிடம் கையெழுத்து வாங்கி என் ஜி ட்யூபைப் போட்டாங்க. அதில் வந்தது தான் பிரச்னை. சாப்பாடே கிடையாது. மூக்கு வழியாகச் செல்லும் ட்யூப் மூலம் ஆகாரம். அதுவும் சொட்டுச் சொட்டாக. அவரோ பசிக்கிறது என்பார். ஒரே வேதனை..வயிற்றிலிருந்தோ பைல் தண்ணீர் மட்டும் மஞ்சளாக வந்திருந்தது. 24 மணி நேரத்துக்கு அதக்கு மேல் வேறே ஏதும் வயிற்றில் இருந்து வரலை. மறுபடியும்  காஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட் பார்க்க வந்தப்போ அவரை எழுதிக் கொடுக்கச் சொல்லி ட்யூபை அகற்றச் சொல்லி அகற்றினோம். பின்னர் வீட்டுக்குப் போய்விடலாம் என்னும் எண்ணத்தில் மருத்துவரைப் பார்க்க அவங்களும் சர்க்கரை குறைஞ்சிருக்கு. வீட்டில் வைச்சுப் பார்த்துக்கோங்கனு சொல்லிட்டு டிஸ்சார்ஜ் எழுதி கொடுத்தார். 

வீட்டுக்கு வந்ததில் இருந்து மருந்துகள் எல்லாமும் ஐவி வழியாகவே கொடுக்கச் சொன்னதால் தெரிந்த நர்ஸ் வீட்டுக்கே வந்து இரண்டு வேளையும் மருந்தை ஏற்றிவிட்டுப் போவார். இதில் வீசிங் இருந்ததால் நடு நடுவே நெபுலைசர் வேறே வைச்சோம். ஆனாலும் பிடிவாதமாக எழுந்து நடப்பேன்னு நடந்தே கழிவறை செல்வார். நாங்க பிடிச்சுப்போம். என்னோட பெட்டில் படுத்துக்கணும். அங்கே கூட்டிப் போ என்று சொல்லவும் சரினு எங்க ரூமுக்கு வந்து அங்கே அவரோட படுக்கையில் படுக்க வைச்சோம். ஆனால் இந்த பெட்டில் ஐவி ஏற்றும் வசதி இல்லை என்பதால் மறுபடி அந்த ரூமுக்கே போனோம். ஒரு வார விடுமுறையில் வந்திருந்த பையர் கிளம்பி சனிக்கிழமை போனார். ஆனால் அவருக்கு திடீரெனப் பிள்ளையை யார்னு தெரியலை. தன்னோட தம்பினு நினைச்சுட்டுப் பேசினார். அப்போவே கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கு. என்றாலும் என்னிடம் முழு நினைவோடு பேசினதோடு இல்லாமல் திங்கட்கிழமை அமாவாசை, இந்தத் தரம் உட்கார்ந்து தர்ப்பணம் பண்ண முடியுமா தெரியலை என்று வேறே சொன்னார். அந்தத் தரம் எழுந்து தர்ப்பணம் பண்ண முடியலை. ஆனால் சாயங்காலம் பிசியோ தெரபிஸ்ட் வந்தப்போ அவரைப் பிடிச்சுக்கச் சொல்லிட்டு நடந்தே போனார் . பிசியோ தெரபி முடிஞ்சதும் பாத்ரூமுக்கு நர்ஸும் நானும் பிடிச்சுக்கப் போயிட்டு வந்தார். 

ராத்திரியெல்லாம் பேசிண்டே இருந்தார். திடிர்னு என் கைகளைப் பிடிச்சுண்டு என்னை விட்டுட்டுப் போயிடாதே. நீ இல்லைனா நான் சோத்துக்குத் திண்டாடணும். என்னை யார் பார்த்துப்பாங்க? யார் பார்த்துண்டாலும் சரியா வராது. நு சொல்லிண்டே கைகளை இறுக்கிப் பிடிச்சுண்டார். விடவே இல்லை. சரினு நானும் அங்கேயே உட்கார்ந்து கொண்டேன். சாதாரணமாகப் பேசிண்டே இருந்தார். நிகழ்காலம், இரவு என்பதெல்லாம் தெரிந்தது. ஆனால், பிள்ளை, பெண்ணைத் தெரியலை. பெண் கூப்பிட்டப்போ அவளைப் பேத்தினு நினைச்சுண்டார். அதொடு இல்லாமல் அவரோட அப்பா வந்திருப்பதாகவும் நினைச்சுண்டு இருந்தார். அப்பா சாப்பிட்டாரா? காஃபி குடிச்சாரானு எல்லாம் கேட்டார்.91 ஆம் ஆண்டிலேயே அவர் அப்பா (மாமனார்) இறந்துட்டார். ஆனால் அவருக்கு அப்பா இருக்கிறாப்போல் ஓர் எண்ணம் போல. பின்னர் அப்படியே தூங்கிப் போனார். சுமார் ஒன்றரை வரை அங்கே உட்கார்ந்துட்டு இரவுப்பணிக்கு வந்த நர்சிடம் கதீட்டர் பையை மாத்திக் கொட்டச் சொல்லிட்டுப் படுத்துக்கப் போனேன். தூக்கமே இல்லை. புரண்டு புரண்டு படுத்துட்டு எப்போத் தூங்கினேனோ! திடீர்னு அவர் கூப்பிட்டாப்போல் இருக்கவே முழிச்சுண்டு மணியைப் பார்த்தால் வழக்கமா நான் எழுந்திருக்கும் நேரம் நாலரை மணி. சரி, பரவாயில்லைனு நினைச்சு எழுந்து கொண்டு வாசல் தெளிச்சுக் கோலம் போட்டு சாமி விளக்கேத்திட்டுக் காஃபி டிகாஷன் போட்டுப் பாலையும் அடுப்பில் வைச்சு அடுப்பைச் சின்னதாக்கிட்டு அவரை எழுப்பிப் பல் தேய்ச்சு விடலாம்னு போனால்............

அசையாமல் படுத்திருந்தது என்னமோ மனசை உறுத்தத் தொட்டுப் பார்த்தால் லேசாகச் சூடு இருந்தது. நேஞ்சில் கை வைச்சுப் பார்த்தாலும் மிக மிக லேசாக அடிச்சுண்டது. உடலில் சூடு இருந்ததால் உலுக்கினேன். ஆனாலும் எழுந்துக்கலை.  அபார்ட்மென்டில் கீழே இரண்டாம் தளத்தில் இருக்கும் மருத்துவருக்கு இன்டர்காம் மூலம் கூப்பிட்டால் பதிலே வரலை. சரினு எதிர்வீட்டு மாமா, அசோசியேஷன் தலைவர் ஆகியோரைக் கூப்பிட்டுவிட்டு ஆம்புலன்ஸுக்கும் தொலைபேசினேன். கீழே இருந்து வந்த மருத்துவருக்கும் உடலில் கொஞ்சம் சூடு இருப்பதாலும் நாடி மெலிதாக அடிப்பதாலும் முதல் சிகிச்சை செய்துடலாம்னு கீழே போய் உபகரணங்களை எடுத்து வந்தார். அதுக்குள்ளே 108 ஆம்புலன்ஸ் சகல ஏற்பாடுகளுடனும் மருத்துவருடனும் வந்து விட்டது. மருத்துவர் உதவி ஆட்களுடன் மேலே வந்தவர் அவரைப் பார்த்துட்டு உடனேயே உயிர் பிரிஞ்சாச்சு எனச் சொல்லிட்டார். பின்னர் இரு மருத்துவர்களும் சோதனை செய்துவிட்டு உறுதிப் படுத்தினார்கள்.  ராத்திரி எல்லாம் பேசிக்கொண்டு இருந்தாரே! எனக்கு அதுவே மனதில் ஓடியது. காதில் திரும்பத் திரும்ப அதுவே கேட்டுக் கொண்டிருந்தது. பண விவகாரங்களில் எல்லாம் நான் அதிகம் ஆர்வம் காட்டித் தெரிஞ்சுக்க விரும்பியதில்லை. அதெல்லாமும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பார்.  பிள்ளை, பெண்களிடமும் சொல்லுவார். எது எங்கே இருக்குனு தெரிஞ்சுக்காம இருக்காளே என்பார். அப்போவும் அதைப் பத்தித் தான் சொன்னார். இனிமேல் நீ என்ன பண்ணப் போறியோ, தெரியலை, உன்னைத் தனியா விட்டுட்டுப் போனேன்னா நீ என்ன செய்வே? என்றார். கடைசியில் அவர் முந்திண்டார். கொஞ்சம் முழிச்சுப் பார்த்திருந்தால் என்ன சொல்லி இருப்பாரோனு நினைச்சுக்கறேன். 

நேத்திக்கு ராத்திரி கூடத் தூக்கமே வராமல் புரண்டு கொண்டிருந்தப்போப் பக்கத்தில் பேச்சுக்குரல் கேட்டாப்போலயும், கீதா, கீதானு கூப்பிட்டாப்போலயும் ஓர் எண்ணம்.அவர் எப்படி மூச்சு விடுவாரொ அதே போல மூச்சுக்காற்று தான் எனக்குத் துல்லியமாக அவர் இருப்பைக் காட்டியது. ஒருவேளை இங்கே புது இடத்தில் நான் இருப்பதால் எனக்குத் துணையாக வராரோ என்னமோ!  சண்டைனு பெரிசாப் போட்டதில்லை. ஆனாலும் தினமும் சண்டை வரும். காய்கறி வாங்குவதில் சண்டை வரும். கால் கிலோ பீன்ஸோ, கொத்தவரையோ செலவழிக்க முடியாமல் செலவு செய்கையில் ஒரு கிலோ, அரை கிலோனு வாங்கிடுவார். கொத்துமல்லியா 3 கட்டு, புதினா இரண்டு கட்டு. தினுசு தினுசாகப் பச்சை மிளகாய்கள்னு வாங்குவார். அதை எல்லாம் செலவழிக்கத் திண்டாடுவேன். கோபம் வரும் சத்தம் போடுவேன். மற்றபடிப் பெரிய அளவில் சண்டையோ கருத்து வேறுபாடோ இல்லை. யாரானும் ஒருத்தர் இன்னொருத்தர் சொல்வதைக் கேட்டுக் கொண்டுவிடுவோம்.  

கூட்டுக் குடும்பத்தில் எத்தனையோ பிரச்னைகள். ஆனாலும் நான் அவரிடம் வருத்தத்தை மட்டும் காட்டிப்பேன். மற்றபடி புகார் சொன்னதில்லை. அவரும் எதுவுமே கேட்டுக்க மாட்டார். யார் என்ன சொன்னாலும் அமைதிதான். எவ்வளவோ பிரச்னைகள். பணத்தேவைகள்! நாங்க இருவருமே சமாளிச்சோம். வேலை செய்வதில், அது வீட்டு வேலையானாலும் சரி, சாமான்கள் வாங்க வெளியே போக வேண்டி இருந்தாலும் சரி, நான் விட்டுக் கொடுக்காமல் முன்னே நின்று எல்லாத்தையும் சமாளிச்சுடுவேன். எந்தவிதமான உதவியும் யாரும் செய்ய மாட்டாங்க. அதை எல்லாம் பொருட்படுத்தியதே இல்லை. அதே போல் பண விஷயத்திலும். அவர் மட்டும் தான் எல்லாவற்றையும் பார்த்துப்பார். பெரிய அளவிலோ சின்ன அளவிலோ யாருமே எந்தவிதமான உதவியும் செய்தது இல்லை. ஆனாலும் சமாளிச்சோம்.

 ஒருத்தருக்கொருத்தர் புரிதல் இருந்ததால் இது சாத்தியம் ஆனது. எப்படியோ 55 வருஷங்கள் ஓடிவிட்டன. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் தான். பார்க்கப் போனால் என்னை விட அவர் ஸ்ட்ராங். வலு உள்ளவர். அவரே இதைப் பெருமையாகச் சொல்லிப்பார். உன்னை விட ஏழெட்டு வயசு பெரியவன். ஆனால் உன்னை மாதிரி நான் சோப்ளாங்கி இல்லை என்பார். இந்த விஷயத்தில் நான் நிறைய மருந்து, மாத்திரை சாப்பிடுவதைக் கேலி செய்திருக்கார். ஆனால் கடைசியில் அவருக்கு இப்படி ஓர் உடல்நலக் கோளாறு வரும்னு எதிர்பார்க்கவே இல்லை. என்றாலும் ரொம்பவே படுக்கையில் போடாமல் நடமாடிக் கொண்டு தன் நினைவு இருக்கிறச்சே தூக்கத்திலேயே உயிர் போயிருக்கு.  இது தான் அவர் விரும்பியதும். விரும்பிய வண்ணம் கடவுள் அருள் செய்துவிட்டார். எனக்குத் தான் இனி எப்படியோ? எத்தனை காலமோ? காத்துட்டு இருக்கேன்.  என்னென்னவெல்லாமோ எழுதிக்கொண்டு இருந்தேன். இப்போ சுயப் புலம்பல்கள் எழுதும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கு. என்ன செய்ய முடியும்?