எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 30, 2015

சாக்ஷி கோபாலனை மறந்தது எப்படி? :(

இப்போக் கொஞ்சம் ஜக்குவைப் பத்தி நிறுத்திக் கொண்டு சாக்ஷி கோபாலனைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கோயில் புவனேஸ்வரிலிருந்து புரி செல்லும் நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ளது. கலிங்க நாட்டு முறைப்படி கட்டப்பட்டது இந்தக் கோயில். இங்கே உள்ளே படம் எடுக்க அனுமதிக்கவில்லை. வெளியே எடுத்த படம் மட்டும் பகிர்ந்துள்ளேன்.  முதலில் இங்கே தான் சென்றோம்.

இதற்குக் கர்ணபரம்பரைக் கதை ஒன்று இருக்கிறது. பின்னால்  சாக்ஷி கோபாலன் என்னும் பெயரிடப்பட உள்ள  ஓர் இளைஞன் அந்தக் கிராமத்தின் தலைவனின் மகளைக் காதலிக்கிறான். எல்லாப் பெற்றோரையும் போல இங்கேயும் இந்தக் காதல் ஏற்கப்படவில்லை. கிராமத் தலைவனுக்குத் தன்னை விட வசதியிலும், அந்தஸ்திலும் குறைந்தவனுக்குத் தன் மகளை மணமுடிக்கும் எண்ணம் இல்லை.  ஆனாலும் அனைவருமாகச் சேர்ந்து அங்கிருந்து காசி நகருக்குப் புனிதப் பயணம் செய்கின்றனர். செல்லும் வழியில் கிராமத் தலைவன் கடுமையாக நோய்வாய்ப்பட கிராமத்து மக்கள் அவனைத் தனியே தவிக்க விட்டு முன்னேறுகின்றனர் ஆனால் சாக்ஷி கோபாலன் அந்த கிராமத் தலைவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறான். அப்போதைய சூழ்நிலையில் கிராமத் தலைவன் மனம் இளகித் தன் மகளை அவனுக்கே மணம் முடிப்பதாக வாக்குக் கொடுக்கிறான்.

பின்னர் அனைவரும் மீண்டும் தங்கள் கிராமத்துக்குத் திரும்புகின்றனர். இளைஞன் கிராமத் தலைவனிடம் சென்று அவன் வாக்குறுதியை நினைவூட்டுகிறான். ஆனால் இப்போது கிராமத் தலைவனோ தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும், சொன்னதற்கு சாக்ஷி ஏதேனும் இருந்தால் கூட்டி வரும்படியும் இளைஞனிடம் சொல்கிறான். இளைஞன் தான் அனுதினமும் வணங்கும் கோபாலனிடம் சென்று முறையிட இறைவனும் இளைஞனின் உள்ளார்ந்த பக்தியில் மனம் உருகி அவனுக்கு சாக்ஷி சொல்ல வருவதாகக் கூறுகிறான். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறான். இளைஞன் முன்னே செல்ல வேண்டும். கோபாலன் பின் தொடர்வான். இளைஞன் திரும்பியே பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் கோபாலன் அங்கேயே நின்றுவிடுவான். இதுதான் நிபந்தனை. இருவரும் ஒத்துக்கொள்ள இளைஞன் முன்னே நடக்கிறான். பின்னால் காலடிச் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 

அங்கிருந்த ஒரு மணற்குன்றைத் தாண்டிச் செல்கின்றனர் இருவரும். அப்போது திடீரெனக் காலடிச் சப்தம் கேட்காமல் போகவே இளைஞனுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. ஆகவே திரும்பிப் பார்த்துவிடுகிறான். அக்கணமே கோபாலன் சாக்ஷி சொல்ல வந்த சாக்ஷி கோபாலன் ஒரு மணல் சிற்பமாக மாறி அங்கேயே நிலை கொண்டு விடுகிறான். (பின்னாட்களில் இந்தப் பெயர் தான் இளைஞனுக்கும் வர நேரிட்டது.) இறைவனை சாக்ஷிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் மனம் வருந்திய இளைஞனுக்கு கிராமத்தார் ஆறுதல் கூறுகின்றனர். இத்தனை நாட்கள் இங்கே எவ்வித விக்ரஹங்களும் இல்லா நிலைமையில் இவ்வளவு தூரம் வந்து இங்கே அர்ச்சாரூபத்தில் அருள் பாலிக்கும் சாக்ஷி கோபாலனை விடப் பெரிய சாக்ஷி தேவையா என்று கிராமத் தலைவனிடம் வாதிடவே அவனால் பேச முடியவில்லை. தன் மகளை இளைஞனுக்கே திருமணம் செய்து கொடுத்து சாக்ஷி கோபாலனைச் சுற்றிக் கோயில் எழுப்பி அந்தக் கோயிலின் முதல் பூசாரிகளாகத் தன் மருமகனையும் நியமிக்கிறான். 

இதைத் தவிரவும் புராண ரீதியான ஒரு தகவலும் சொல்லப்படுகிறது. கிருஷ்ணனின் பேரன் ஆன வஜ்ரன் என்பவனால் ப்ரஜா எனப்படும் ஒரு சிறப்பான அழிக்க முடியாததொரு வகைக் கல்லால் கிருஷ்ணனின் 16 வடிவங்கள் செதுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அந்த வடிவங்கள் மதுரா நகருக்குள்ளும் அதைச் சுற்றியும் கோயில்கள் கட்டிப்பிரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது.  அவற்றில் முதல் மூன்று ப்ரஜமண்டலச் சிற்பங்கள் ஆன ஶ்ரீஹரிதேவர் என்பவர் கோவர்தனத்திலும், கேஷவ தேவர் மதுராவிலும் ஶ்ரீபலதேவர் பலதேவோவிலும், ஶ்ரீகோவிந்தா விருந்தாவனத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.  இவற்றைத் தவிர இரு நாதர்கள் எனப் பெயரிடப்பட்ட ஶ்ரீநாத் ஜி முதலில் கோவர்தனத்தில் இருந்தவர் பின்னர் ராஜஸ்தானின் நாதத்வாருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் செய்யப்பட்ட ஶ்ரீகோபிநாத் ஜெயப்பூரில் கோயில் கொண்டிருக்கிறார்.  இரண்டு கோபால மூர்த்தங்களில் ஒன்று ராஜஸ்தானின் கரோலியிலும், மற்றொன்று சாக்ஷி கோபாலனாக ஒரிசாவின் புரி மாவட்டத்திற்கும் கொண்டு சென்று வழிபடப்பட்டு வருகின்றது. 

மேலும் ஒரிசா ராதாகிருஷ்ண பக்திக்கும் பிரேமையைக் கொண்டாடுவதிலும் பெயர் போனது. இந்தக் கோயிலிலும் அப்படியே உற்சவங்கள் ராதையை முன்னிறுத்தியே கொண்டாடப்படுகின்றன. இந்தக் கோயிலில் ஆரம்பத்தில் ராதையின் சிற்பம் இல்லை என்றும் பின்னர் நாளாவட்டத்தில் அந்த ஊரில் பிறந்த லக்மி என்னும் பெண்ணை ராதையின் மறு அவதாரம் என அந்த ஊர்க்காரர்கள் போற்றிக் கொண்டாடி வந்ததாகவும் சொல்கின்றனர்.  ராதை இல்லாமல் கிருஷ்ணனைப் பிரித்துப் பார்க்க விரும்பாத பக்தர்களால் வட இந்தியாவிலிருந்து ராதையின் சிற்பம் வரவழைக்கப்பட்டு இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது.  வட இந்திய முறைப்படி காக்ராவும், சோளியும் அணிந்திருந்த ராதையின் விக்ரஹத்திற்கு ஒரிச முறைப்படியான சேலை அணிவிக்கப்பட்டது. அப்போது அதுவரை தெரியாதிருந்த ராதையின் பாத தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கவே அதை நல்லதொரு சகுனமாக எடுத்துக் கொண்டு ஆராதித்து வருகின்றனர்.  இது ஒரு நவமி தினத்தில் நடைபெற்றதால் இந்த நாளை "அம்லா நவமி" எனக் கொண்டாடுவதோடு அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்கையில் ராதையின் பாதங்களைத் தொட்டு வணங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். 

Tuesday, December 29, 2015

ஜக்குவைப் பற்றிய சில செய்திகள்!

புரி, ஜகந்நாதர் கோயில் க்கான பட முடிவு

பின்னால் கூடி நின்ற கூட்டம் அவ்வப்போது, "ஹோ" :ஹோ" என உற்சாகக் கூச்சல் எழுப்பி ஜக்குவை அழைத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூச்சல் ஒலி தூக்கிவாரிப் போட வைத்தது.  ஜக்கு தூங்கிக் கொண்டிருந்தால் கூட எழுந்து வந்து தான் ஆகணும். அப்படி ஒரு கூச்சல்! துவாரகையில் "ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!" என்றே கூறுவார்கள். மென்மையாக இருக்கும். கூட்டம் இருந்தாலும் நெரிசல் இருக்காது. வெளியே இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை!  ஆனால் இங்கே சாமானிய மக்களும் அதிகம் காணப்பட்டனர். அனைவரும் ஜக்குவைக் காண வேண்டிக் காத்திருந்தனர்.

சற்று நேரத்தில் கதவு திறக்கப் போகும் அறிகுறிகள் தெரிய கூட்டம் பித்துப் பிடித்தது போல் ஆகிவிட்டது. தள்ளு முள்ளு ஆரம்பிக்கும் போல் இருந்தது. எங்கள் வழிகாட்டி இளைஞர் என் அருகேயே எனக்குப் பாதுகாப்பாக நின்று கொண்டார். சட்டெனக் கதவு திறக்கப்பட என்னைப் பிடித்து முன்னால் தள்ளி நன்கு தரிசனம் செய்ய உதவினார் வழிகாட்டி இளைஞர்!. பலபத்திரர், சுபத்ரா, ஜகந்நாதர் ஆகியோரை அடையாளம் காட்டித் தரிசிக்க உதவினார். மரத்தால் ஆன இந்தச் சிற்பங்கள் பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன. இப்போது சமீபத்தில் தான் புதுப்பித்திருப்பதால் தரிசனம் செய்வதை மிக விசேஷமாகச் சிறப்பித்துக் கூறுகின்றனர். தரிசனம் முடிந்ததும், எங்கள் பின்னால் இருந்த கதவும் திறக்கப்பட்டுப் பொது தரிசனத்திற்காகக் காத்திருந்த மக்கள் திபு திபுவென உள்ளே புகுந்தனர். நல்லவேளையாகக் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொள்ள இருந்த என்னை வழிகாட்டி இளைஞர் தரதரவெனத் தோள்களைப் பற்றி இழுத்து வெளியே கொண்டு வந்தார்.

ரங்க்ஸ் சமாளித்துக் கொண்டு முன்னே சென்றார். என்னை இழுத்துக் கொண்டு வழிகாட்டி வெளியே வந்தார். ஜக்குவைப் பார்த்துச் சொல்ல நினைத்தது எல்லாம் மறந்து போக ஜக்குவைப் பார்த்தது மட்டுமே நினைவில் இருக்க நானும் வெளியேறினேன். நன்றாகப் பார்த்தேன் தான்! ஆனால் அந்த நேரம் ஏன் ஒன்றுமே கேட்கத் தோன்றுவதில்லை? புரியலை!  இப்போது இந்தக் கோயிலின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போமா?

பனிரண்டாம் நூற்றாண்டில் கீழைக்கங்க குல அரசன் ஆனந்த வர்மனால் கட்டப்பட்டதாக் கூறப்படும் இந்தக் கோயிலின் கட்டுமானம் கொஞ்சம் பௌத்த முறைப்படியும் கொஞ்சம்  கலிங்க தேசக் கட்டுமானத்திலும் கட்டப்பட்டது. பழமையான இதன் வரலாறு வருமாறு:

புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் என்னும் மன்னன் சிறந்த பக்தன். மஹாவிஷ்ணுவைத் தியானித்து வந்தவன் கனவில் விஷ்ணு தோன்றி தனக்கு ஒரு கோயில் கட்டித் தரும்படி கேட்டார்.  சிற்பத்தை எதனால் செதுக்குவது என யோசித்த மன்னனிடம், கடற்கரையில் கோயில் அமைந்திருப்பதால் கடலில் மிதந்து வரும் பொருளைக் கொண்டு செய்யும்படி மன்னனிடம் ஆக்ஞையிட்டார் மஹாவிஷ்ணு. கடல் பகுதியில் மன்னன் தன் காவலர்களை நிறுத்தி வைத்திருந்தான். கடலில் ஒரு பெரிய மரக்கட்டை மிதந்து வரக் காவலர்கள் அதை எடுத்துச் சென்று மன்னனிடம் ஒப்படைத்தனர். மன்னன் அந்த மரக்கட்டைக்குச் சிறப்பான வழிபாடுகளை நடத்திச் சிறந்த தச்சர்களை வரவழைத்தான்.  தச்சர்களின் தலைவர் தன் உளியை எடுத்து அந்த மரத்தில் வைக்க உளி உடைந்து விட்டது. மன்னன் சகுனம் சரியில்லை என மனம் வருந்த அங்கே ஆண்டவனே முதிய தச்சன் வடிவில் தோன்றினான்.

மன்னனிடம் 21 நாட்களில் வேலையை முடித்துத் தருவதாகக் கூறினான் இறைவன். தனக்கு ஒரு அறையை ஒதுக்கித் தரும்படியும் தான் வேலையை முடிக்கும்வரை தான் இருக்கும் அறைக்கதவைத் திறக்கக் கூடாது என்றும் கூறினான். அரசன் ஒப்புக்கொள்ள ஓர் அறைக்குள் புகுந்த தச்சன் மும்முரமாக வேலையைத் தொடங்கினான். தொடர்ந்து பதினைந்து நாட்கள் உளிச்சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அடுத்து மூன்று நாட்கள் எவ்விதமான சப்தமும் இல்லாமல் போகவே தச்சன் தூங்கிவிட்டான் போலும் என நினைத்த அரசன் கதவைத் திறந்து விட்டான். உள்ளே இருந்த ஈசனுக்குக் கோபம் வந்தது. தன் சுய உருவைக் காட்டினார். மன்னன் பொறுமையில்லாமல் கதவை அவசரப்பட்டுத் திறந்துவிட்டதால் இந்தக் கோயிலில் ஸ்தாபிக்கப்படும் சிலைகள் அனைத்தும் அரைகுறையாகவே இருக்கும் என்றும் அப்படியே பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்யுமாறும், இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் இதன் காரணத்தை அறிந்து கொண்டு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் செல்வார்கள் என்றும் கூறினார். அந்த அறையில் அரைகுறையாகச் செதுக்கப்பட்ட பலராமன், சுபத்ரா, ஜகந்நாதர் சிலைகள் காணப்பட்டன.

மன்னனால் அவை பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவன் காலத்திற்குப் பிறகுக் கோயில் பாழடைந்து போக அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. எல்லாவற்றையும் கடல் மூழ்கடிக்க, பின்னர் கி.பி. பனிரண்டாம் ஆண்டில் அப்போதைய அரசன் அனந்தவர்மன் வாளி என்பவனால் கட்டப்பட்டுப்பின்னர் அவன் பேரன் அனங்காபி மாதேவ் என்பவனால் இப்போது இருக்கும் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலைக்கட்ட கங்கையிலிருந்து கோதாவரி வரையுள்ள கலிங்க சாம்ராஜ்ய மக்களின் பனிரண்டு வருட வரிப்பணம் செலவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  இந்தக் கோயில் பஞ்சரத முறையில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். கடற்கரையிலேயே துவாரகை அமைந்திருப்பது போல் இந்தக் கோயிலும் கடற்கரையிலேயே அமைந்துள்ளது  இங்குள்ள கடலில் நீராடி இறைவனை வழிபடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.  பார்கவி, சர்வதீர்த்த ம்ஹி என்னும் நதிகளால் இந்தக் கோயில் சூழப்பட்டு ஒரு வலம்புரிச் சங்கைப் போல் தோற்றம் அளிப்பதாகவும் சொல்கின்றனர்.

இந்தக் கோயிலின் கொடிமரத்தை பதிதபாவன பாவன என அழைக்கின்றனர். ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் இது அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலின் மேற்கே எட்டு உலோகக்கலவையால் செய்யப்பட்ட நீலச் சக்கரம் ஒன்று உள்ளது. இந்தக் கொடிமரத்தையும், சக்கரத்தையும் வணங்கினாலே ஜகந்நாதரைத் தரிசித்ததற்குச் சமம் என்கின்றனர். ராமாயணத்தில் ராமனும், மஹாபாரதத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து பிரார்த்தனைகள் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

புரி, ஜகந்நாதர் கோயில் க்கான பட முடிவு


படங்களுக்கு நன்றி கூகிளார்

Monday, December 28, 2015

ஜக்குவைப் பார்க்கச் சென்றோம்!

கொஞ்சதூரம் போக வேண்டி இருந்தது. தேநீர்க்கடை மாதிரியே தெரியாத ஒரு கடை அப்போது தான் திறந்து வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். ஒடிஷாவில் தமிழ்நாட்டுக் கலாசாரங்கள் கலந்திருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.  அங்கே போய்த் தேநீர் எங்கே கிடைக்கும் என்று கேட்டோம். கடைக்காரர் அங்கிருந்த பெஞ்சைக் காட்டி உட்காரச் சொன்னார். பத்து நிமிடத்தில் தயார் செய்து தருவதாகச் சொன்னார். உடனே தேநீர் வேண்டாம், காஃபி இருந்தால் நல்லது என்றோம். சரி என ஒத்துக் கொண்டார். எதிரேயே வீடு. அங்கிருந்து அவரின் இரு பையர்களும் வந்து உதவ விரைவில் அடுப்பை மூட்டிக் காஃபி போட்டுக் கொடுத்தார். சர்க்கரை சேர்த்த காஃபியை முதலில் கொஞ்சமாக ஒரு சின்னத் தம்பளரில் ஊற்றி எங்களை ருசி பார்க்கச் சொல்லிச் சரியாக இருக்குனு சொன்னதுமே ஃப்ளாஸ்கில் ஊற்றினார்.

அதே போல் இங்கேயும் சித்திரகூடத்தில் இருந்தாப்போல் ஆட்டோக்கள் அனைத்துமே பெரிய பெரிய ஷேர் ஆட்டோக்கள். அவற்றை நமக்கு மட்டும் தேவை என்றால் சித்திரகூடத்தில் செய்தாப்போலயே, இங்கேயும், "ரிஜர்வ்" செய்துக்கணும். :) முதல்நாள் சாப்பிட்டுவிட்டு வரும்போது இதைக் குறித்து அறிந்தேன். காஃபியை வாங்கிக் கொண்டாச்சு. மறுபடி விடுதிக்குச் சென்றோம். கீழே உள்ள இருபது படிகளை ஏறி மேலே முதல் தளத்துக்கு வந்து அங்கிருந்து ஐந்தாம் தளம் ஏற வேண்டும். எப்போவுமே இறங்குவதை விட ஏறுவது சிரமம். வழியில் ஒருத்தருக்கு எங்களைப் பார்த்ததுமே கவலை வந்து விட்டது! முடியுமா எனத் திருப்பித் திருப்பிக் கேட்டார். வேறே வழியே இல்லையே! ஏறித் தானே ஆகணும்னு ஏறினோம். மேலே போய்க் காஃபியைக் குடித்துவிட்டு வெந்நீர் வருகிறதா என்று பார்த்தால் நாங்கள் தங்கி இருந்த அறையின் குளியலறையில் கீசர் வேலை செய்யவே இல்லை. தண்ணீரே வரலை. ஆகவே இரண்டாம் எண் அறைக்குப் போய் அங்கே குளித்து வெளியே செல்லத் தயார் ஆனோம் இருவரும்.

விடுதிக் காப்பாளர் வரலையேனு தொலைபேசி விசாரித்ததில் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். எட்டேகால் மணிக்கெல்லாம் வந்தும் விட்டார். அவரிடம் நாங்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லிப் புலம்பி விட்டு வண்டி எப்போது வரும்னு கேட்டோம்.  அன்றைய தினம் திங்கட்கிழமை. முந்தைய இரு தினங்கள் சனி, ஞாயிறாக இருந்ததால் அந்த வளாகத்தில் உள்ள அனைவரும் தண்ணீரை முழுக்கப் பயன்படுத்தி இருப்பதால் இந்தப் பிரச்னை என்று சொன்னார். அப்படியே இருந்தாலும் முதல் நாளே மோட்டார் போட்டிருக்க வேண்டும். என்னிக்கோ வந்து தங்கும் நமக்கே இவ்வளவு கஷ்டமா இருந்ததே, மத்தவங்களுக்கு இதனால் பாதிப்பு இல்லையானு மண்டை காய்ந்தது. சற்று நேரத்தில் வண்டி கீழே காத்திருப்பதாகத் தகவல் வந்தது. ஓட்டுநரை மேலே வரச் சொன்னார் காப்பாளர். மறுபடி ஐந்து மாடி இறங்க வேண்டுமே! அலுப்பாக இருந்தது. லிஃப்ட் சரியாகப் பத்து மணி ஆகும் எனவும் மாலை நாங்கள் வருவதற்குள்ளாகச் சரியாகிடும் என்றும் சொன்னார் காப்பாளர்.

ஓட்டுநர் அதற்குள்ளாக மேலே வர அவரிடம் எங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை ஒப்படைத்த காப்பாளர் முதலில் தென்னிந்திய உணவு விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று காலை உணவை நாங்கள் சாப்பிட ஏற்பாடு செய்யும்படியும் கூறினார். ஓட்டுநர் வேகமாகக் கீழே இறங்க நாங்கள் ஒவ்வொரு படியாக இறங்கிச் சென்றோம். முதலில் ஜக்குவை ( புரி ஜகந்நாதரை) பார்த்துடலாம்னு சொன்னோம். போகும் வழியிலேயே தென்னிந்திய உணவு விடுதி வரும் என்றும் அங்கே காலை உணவைச்சாப்பிடலாம்னும் சொன்னார் ஓட்டுநர்.  இளைஞர்! பொறுப்பாகவும், பணிவாகவும் இருந்தார்.  வழியில் தென்னிந்திய உணவு விடுதி கண்ணிலேயே படவில்லை. கொஞ்சம் ஏமாற்றம் தந்தது. ஓட்டுநர் உணவு விடுதி பூட்டி இருப்பதாகவும் திறக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டிவிட்டு வழியில் இருக்கும் வேறொரு ஓட்டலுக்குக் கூட்டிச் சென்றார்.

அந்த ஓட்டலில் பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் உணவு தயாரிப்பதாகக் கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தது. ஆங்கிலம், ஒரியா, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் போட்டிருந்தார்கள். அநேகமாக ஆங்கிலமும், ஹிந்தியும் தெரிந்தாலே போதுமானது. ஒரியா தெரிய வேண்டும் என்பதில்லை. ஆகவே எங்களுக்குச் சிரமம் தெரியவில்லை. அங்கே சென்று பூரி, பட்டாணி சப்ஜியோடு சாப்பிட்டுவிட்டுத் தேநீர் குடித்தோம். ஒரியர்களும் காலை உணவோடு வடை சாப்பிடுகின்றனர். நம்ம ஊரில் செய்யறாப்போல் அரைத்த மாவில் வடைகள் சூடாகத் தட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சூடாக விற்பனையும் ஆகின்றன. பின்னர் பூரியை நோக்கிப் பயணித்தோம். புவனேஸ்வரிலிருந்து கிட்டத்தட்ட 60 கி.மீ தூரத்தில் உள்ளது புரி ஜகந்நாதர் ஆலயம்.




இந்தக் கோயிலில் கண்ணனுக்கும், பலராமன் மற்றும் சுபத்ராவுக்கும் தான் முக்கியத்துவம். இங்கேயும் எல்லா வட இந்தியக் கோயில்களைப் போலவே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நடை சார்த்திப் பின் ஆரத்தியோடு திறக்கின்றனர்.  நாங்கள் சென்றபோது காலை பதினோரு மணி இருக்கும். அதற்குள்ளாக எனக்கு ஒரிசாவில் இருக்கும் என் நாத்தனார் பையர், மகள் ஆகியோரிடமிருந்து எஸ் எம் எஸ் செய்திகள் வந்தன. புரி கோயிலில் களவு அதிகம் போகும் என்றும் கைப்பை, பர்ஸ், பணம் ஆகியன கூட்டத்தில் பிடுங்கப்படும் எனவும், நகைகள் அணிய வேண்டாம் எனவும் செய்திகள் வந்தன. அதோடு கோயிலின் பாண்டாக்கள் அதிகம் பணம் பிடுங்குவார்கள் எனவும் கூறினார்கள்.  என் மைத்துனரும் அதைக் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் கூடியவரை பாதுகாப்பாகவே இருந்தோம்.  ஆகவே இதைக் குறித்து அதிகம் கவலைப்படவில்லைமேலும் அலைபேசிகள், தோல் பொருட்கள் போன்றவையும் அனுமதி இல்லை.

பூரியில் வண்டியிலிருந்து இறங்கும்போதே ஒரு பண்டா எங்களை அணுகினார். இளவயதுக்காரர் தான். தான் எங்களைக் கூட்டத்தில் இடிபடாமல் அருகே அழைத்துச் சென்று தரிசனம் பண்ணி வைப்பதாகவும், ஒரு ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தால் போதும் எனவும் கூறினார். எங்கள் ஓட்டுநரிடம் பேசிவிட்டு அவர் சரி என்று சொல்லவும் அந்த இளைஞரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டோம்.  அங்கிருந்து கோயில் இருக்கும் இடம் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் என்பதால் அவரே ஒரு ஆட்டோவை எங்களுக்குத் தனியாக "ரிஜர்வ்" செய்து கொடுத்தார். எங்கள் அலைபேசி போன்ற பொருட்களை வண்டி ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் அந்த ஆட்டோவில் சென்று கோயில் வாசலில் இறங்கினோம். அந்த வாசலில் அதிகக் கூட்டமில்லை. பிரதான வாயிலில் தான் கூட்டம் அதிகம் இருக்கும் என்றனர். மேலும் இந்த வாயிலில் இருந்து கருவறை அருகே இருப்பதாகவும் தெரியவந்தது.

பாதுகாப்புச் சோதனைகள் முடிந்தன. நாங்கள் கோயிலின் பிரகாரத்தினுள் நுழைந்தோம்.  அதற்கும் சில, பல படிகள் ஏறணும். பிரகாரம் சென்றதும் அங்கிருந்து கருவறை செல்லும் முன்னர் ஏதேனும் பிரசாதம் வாங்கிக்கணும் என நிர்ப்பந்திக்கப்பட்டோம். சரினு ரூ. 200/- கொடுத்து ஒரு பிரசாதம் வாங்கிக் கொண்டோம். பிரசாதம் இருந்தால் உள்ளே செல்வதும் விரைவில் நடக்கும் என்பதும் காரணம். வழிகாட்டி இளைஞர் எங்களைக் கருவறைக்குச் செல்லும் வழியில் கூட்டிச் சென்றார். அங்கே மேலும் இருபது படிகள், ஒவ்வொன்றும் ஒன்றரை அடி உயரத்தில் அமைந்திருந்தன. ஏறினதும் கருவறைக்குச் செல்லலாம் எனத் தெரிந்தது. அந்தப் படிகளையும் ஏறினோம். கருவறைக்கு மிக அருகே உள்ள இடத்திற்குச் சென்று விட்டோம். கிட்டத்தட்ட அது அர்த்தமண்டபம் போல! ஆனால் முதலில் எங்களைக் காவல்காரர்கள் உள்ளே விடவில்லை. அப்புறம் நம்ம வழிகாட்டி வந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

அந்த இடம் மட்டும் தனியாகச் சுற்றிலும் கம்பிக்கிராதிகள் போட்டுக் கதவுகளோடு இருந்தது. சந்நிதியின் வாயில் அப்போது மூடி இருந்தது. கிட்டத்தட்ட 20, 25 அடி உயரம் கொண்ட கதவுகள். கருவறைக்கு நேரே நாங்கள் நின்று கொண்டோம். எங்களுக்குப் பின்னர் இதே போன்ற வழிகாட்டிகளின் உதவியோடு வந்த சிலரும் நின்று கொண்டனர்.  இதன் பின்னால் பொது தரிசனத்திற்கு ஆயிரக்கணக்காக மக்கள் கூடி நின்று கொண்டிருந்தனர். சந்நிதி திறந்த சிறிது நேரத்தில் அந்த வாயிலும் திறந்துவிடப்படும் எனவும் அப்போது கூட்டம் தாங்காது என்றும் நெரிசலில் மாட்டிக்காமல் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டோம். ஏகாக்கிர சிந்தையோடு சந்நிதி திறக்கப்போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இந்தக் கோயிலின் ஒரு பிராகாரத்தில் ஶ்ரீமத் ராமானுஜர் நடந்திருப்பதாக மின் தமிழில் நா.கண்ணன் கூறி இருந்தார். அது பற்றி விசாரித்தால் யாருக்கும் புரியலை!  நா.கண்ணன் ஜக்குவை விசாரித்ததை மட்டும் அவரிடம் தெரிவிக்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

Sunday, December 27, 2015

ஐந்து மாடிகள் ஏறி இறங்கினோம்!

புவனேஸ்வர் க்கான பட முடிவு

புவனேஸ்வரை/புபனேஸ்வர் முதல் முதல் பார்க்கையில் நன்கு இருட்டி விட்டது. சொல்லவே மறந்துட்டேனே! தமிழ்நாட்டை விட்டு வடகிழக்கில் செல்லச் செல்ல சீக்கிரம் இருட்டி விடுகிறது. மூன்று மணிக்கே தன் கதிர் வீச்சைக் குறைத்துக் கொள்கிறான் சூரியன். நாலு, நாலரை மணிக்கெல்லாம் கையெழுத்து மறைந்து ஐந்து மணிக்கு நன்கு இருட்டி விடுகிறது! ஆறு மணிக்கெல்லாம் நம்ம ஊர் எட்டு மணி மாதிரி இருட்டு கப்பி விடுகிறது. நாங்கள் போய்ச் சேர்ந்த அன்றிரவு ஏழு மணிக்கெல்லாம் சாலையில் விடுதியை நோக்கிப் பயணம் செய்கையில் ஒன்பது, பத்து மணி ஆகிவிட்ட மாதிரி ஒரு நினைப்பு! சாலைகள் சுத்தமாக இருந்தன! எங்கும் ஒளி வெள்ளம்! சுத்தமான நடைமேடைகள். அதில் எந்தவிதமான ஆக்கிரமிப்புகளும் இல்லை. நடைமேடையைத் தாண்டி தெருக்களில் இடம் பெற்றிருந்த கட்டிடங்கள்! எல்லாம் ஒரு ஒழுங்காக இருந்தன.

புவனேஸ்வர் நகரமே திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நகரம் என்பார்கள். சுதந்திரம் அடைந்து ஒரு வருடம் வரை அதாவது 1948 ஆம் ஆண்டு வரை ஒரிசா/ஒடிஷா வின் தலைநகரமாகக் கட்டாக் தான் இருந்தது. அதன் பின்னரே புவனேஸ்வர் ஒடிஷாவின் தலைநகரமாக மாறியது. இதை நிர்மாணித்தவர்  Otto Königsberger என்னும் ஜெர்மானியர்.  ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகருக்கு அடுத்தபடி இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட புதுமையான நகரமாக புவனேஸ்வர் விளங்குகிறது. அதற்காக இது ஒண்ணும் மிகப் புதுமையான நகரமும் இல்லை. கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டு பழமையான வரலாறு கொண்டது இது. அவ்வளவு ஏன்? மஹாபாரதத்தில் வரும் சேதி/செடி வம்சத்தினரின் தலைநகராக விளங்கி இருக்கிறது. 2BCE ஆண்டிலேயே  இதன் அருகிலேயே இருக்கும் சிசுபால்கர் என்னும் நகரம் அப்போது தலைநகராக இருந்ததாகத் தெரியவருகிறது.

இந்த நகரம் திருபுவனேஸ்வரம் என்னும் பெயரில் இருந்து வந்ததாகவும் பின்னர் புவனேஸ்வர் என மாறியதாகவும் சொல்கின்றனர். மூன்று புவனங்களையும் கட்டி ஆளும் அந்த ஈசனின் நகரம் என்னும் பெயரில் இது வழங்கப்படுகிறது. இதைக் கோயில்களின் நகரம் என்றும் சொல்கின்றனர். பழமையான பல கோயில்கள் இங்கு உள்ளன. எல்லாக் கோயில்களுக்கும் போவதெனில் குறைந்தது ஒரு வாரமாவது அங்கே தங்க வேண்டும்.  இந்த நகரின் வேறு பெயர்கள் தோஷாலி, கலிங்க நகரி,  நகர் கலிங்கா, சக்ர க்ஷேத்திரா, ஏகாம்ர கானன் (இங்கேயும் ஒரு மாமரம்) ஏகாம்ர க்ஷேத்திரா, மந்திர மாலினி நகரி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இந்த ஊரில் அமையப் பெற்ற லிங்கராஜா கோயிலில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவுக்கு தூர தூரங்களில் இருந்தெல்லாம் சிவ பக்தர்கள் தோள்களில் காவடி சுமந்து கொண்டு , "போல் பம்" எனக் கூவிய வண்ணம் கால்நடையாக வருகின்றனர். இப்படிச் செல்வதைப் பல முறை கண்டிருக்கிறேன். ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தெல்லாம் பக்தர்கள் கால்நடையாகச் செல்வதுண்டு. கட்டாக்கின் இடத்தை இது பிடித்தாலும் இதையும் கட்டாக்கையும் இரட்டை நகரங்கள் என அழைக்கின்றனர். மிக நீண்ட வரலாறுடைய இந்த நகரத்தின் வரலாற்றை நாளை காண்போம். இப்போது விடுதியில் நடந்த சம்பவங்கள்! :)
*********************************************************************************

அறையில் படுத்ததும் நல்ல தூக்கம். வியர்வையே இல்லை என்பதால் தூக்கம் கலையவே இல்லை. ஆகவே காலை நாலு மணிக்குத் தான் விழிப்பு வந்தது. எப்போவுமே நல்லாத் தூங்கிட்டேன்னா காலை நாலு மணிக்குத் தானாக விழிப்பு வந்துடும்.  இரவு முழுவதும் எழுந்திருக்காததால் இயற்கை உபாதையைக் கழிக்கக் கழிவறை சென்றேன். மேல்நாட்டு முறைக் கம்மோட்! அதில் உட்காரும் முன்னர் அமரும் இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டி அருகில் இருந்த குழாயை எடுத்து நீருக்காக அமுக்கினேன். நீரே வரவில்லை. சரினு பக்கத்தில் குளிப்பதற்கென இருந்த குழாய்களில் ஒன்றின் கீழ் வாளியை வைத்து நீரைத் திறந்தேன்! புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! காற்றுத் தான் வந்தது. சிறிது நேரம் குழாய்களை மூடி மூடித் திறந்தேன். ஒரு வேளை குழாயை வெகு நேரம் திறக்காமல் வைத்திருந்தால் காற்றுப் போய் அடைத்துக் கொண்டு நீர் வராமல் தடுக்கும் என்பதால். கிட்டத்தட்ட இருபது நிமிடம் போராடி விட்டு வேறு வழியில்லாமல் நன்கு தூங்கும் ரங்க்ஸை எழுப்பினேன்.

தூக்கக் கலக்கத்தில் எழுந்தவருக்குக் கோபம். ஏனெனில் அன்றைய தினம் வெளியே செல்ல வண்டிக்கு ஒன்பது மணிக்குத் தான் வரச் சொல்லி இருந்தோம். முதல்நாளே விடுதிக்காப்பாளர் மூலம் எல்லாம் பேசி முடிவு செய்திருந்தது. ஆகவே காலை மெதுவாக எழுந்திருக்கலாம் என்று முடிவு. இப்போது அர்த்த (?) ராத்திரியில் நான் எழுப்பவே கோபம் வந்தது. என்னனு கேட்கத் தண்ணீர் வரலை என்று சொன்னேன். குழாயைச் சரியாகத் திறக்கத் தெரியலை என என்னைத் திட்டிட்டுப் போய்க் குழாயை மீண்டும் திறந்து மூடி, திறந்து மூடி, திறந்தார். ஹிஹிஹி! எனக்காவது ஒரு சொட்டு நீர் வந்தது. இப்போ சுத்தம்! பத்து நிமிடங்கள் போல் பார்த்துவிட்டுப் பின்னர் செக்யூரிடியிடம் சொல்லலாம் என லிஃப்டுக்குக் கிளம்பினார். நானும் கூடவே சென்றேன். அங்கே போனால் லிஃப்ட் அமுக்க அமுக்க மேலே வரவேஇல்லை. சில குடியிருப்பு வளாகங்களில் இரவு பத்து மணி முதல் காலை ஆறு வரை லிஃப்ட் இயக்கம் தடை செய்திருப்பார்கள். அப்படித் தான் இருக்கும்னு நினைத்துக் கீழே போகும் எண்ணத்தைக் கைவிட்டோம்.

மீண்டும் அறைக்கு வந்து விடுதிக்காப்பாளரின் எண்ணுக்குத் தொலைபேசினோம். இதற்குள்ளாக எனக்கு இயற்கை உபாதைனு ஒண்ணு இருந்ததே மறந்தே போய் விட்டது. நல்ல வேளைதான் என நினைத்துக் கொண்டேன். காப்பாளர் தொலைபேசியை எடுத்துப் பேசியவர் இரண்டாம் எண் அறைக்குப் போய்ப் பயன்படுத்திக்கச் சொன்னார். சரினு அங்கே போய்க் குழாய்களைச் சோதித்து விட்டு என்னை அங்கே பயன்படுத்தச் சொன்னார் ரங்க்ஸ். நானும் சரினு முயலவே ஒரு டம்பளர் தண்ணீர் தான் வந்தது. அங்கேயும் நின்று விட்டது. மறுபடியும் காப்பாளருக்குத் தொலைபேசி! அங்கேயும் வரவில்லைனு சொல்லவே அவர் செக்யூரிடிக்குத் தான் தொலைபேசித் தகவல் தெரிவிப்பதாகச் சொன்னார். நாங்களும் லிஃப்ட் இயங்கவில்லை என்பதால் அப்படியே செய்யும்படி சொன்னோம்.

யுகங்களாகக் கழிந்த அரை மணி நேரத்திற்குப் பின்னர் நீர் சொட்டுச் சொட்டாக வர ஆரம்பித்தது. அப்படியும் நல்ல வேகத்தில் வரவில்லை. ஆகவே இரண்டாம் எண் அறைக்குப் போய்ப் பார்த்தோம். அங்கே நீர் கொஞ்சம் வேகமாக வந்தது. அங்கிருந்த கீசரும் நன்றாக வேலை செய்தது. ஆகவே என்னை அங்கே காலைக்கடன்களை முடித்துக் கொண்டு குளித்துவிட்டு வரும்படி ரங்க்ஸ் சொல்ல நானும் சென்றேன். அவர் தான் மட்டும் கீழே இறங்கிப் போய்க் காஃபி வாங்கி வருவதாகச் சொல்ல (இதுக்குள்ளே காலை ஆறு மணி ஆகி இருந்தது) நான் குளிக்கும் திட்டத்தை ஒத்திப் போட்டுவிட்டு நானும் கிளம்பினேன். இருவருக்கும் பலத்த வாத, விவாதம். நீ வரவேண்டாம்னு அவர் சொல்ல, அப்போ எனக்குக் காஃபியே வேண்டாம்னு நான் சொல்ல வேறு வழியில்லாமல் அரை மனதாக அவர் சம்மதிக்க இருவரும் கீழே இறங்கினோம். அன்று ஊர் சுற்றி வேறு பார்க்க வேண்டும். அங்கே எத்தனை இடத்தில் ஏறி இறங்கணுமோ தெரியலை!

யப்பாடி ஒரு மாடிக்கு எத்தனை படிக்கட்டுகள்! இப்படி ஐந்து மாடி இறங்கணுமே! அப்புறமாக் காஃபி வாங்கிட்டு மறுபடி மேலே ஏறணும்! அந்தக் காப்பாளர் இருந்திருந்தா காஃபியோ, டீயோ ஏதோ ஒண்ணு போட்டுக் கொடுத்திருப்பாரே! நம்ம நேரம்! மெல்ல மெல்லக் கீழே இறங்கினோம். இரண்டு மாடி இறங்கிய பின்னர் ஒரு பெண்மணி அங்கே நடைப்பயிற்சி செய்ய அவரிடம் லிஃப்ட் ஏன் இயங்கவில்லை எனக் கேட்டோம். அது இப்படித் தான் அடிக்கடி தகராறு செய்யும் என அவர் சொன்னார். வேலைக்குச் செல்பவர்கள் பலரும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.  மூச்சு வாங்க ஐந்து மாடியும் இறங்கினோம். அது மட்டுமா? இந்தக் குடியிருப்பு வளாகத்தின் முதல் தளமே வீதியிலிருந்து கிட்டத்தட்ட இருபது அடி உயரத்தில் அமைந்திருந்தது. அதற்கு இறங்க இருபது படிகள்! அவற்றையும் இறங்கியாக வேண்டும்.  அங்கே இருந்த செக்யூரிடியிடம் லிஃப்ட் இயங்காதது குறித்தும் நீர் வராதது குறித்தும் கேட்டோம். தண்ணீர் வருவதற்கு மோட்டார் போட இன்னொருத்தர் இருப்பதாகவும் அவர் தான் வரவேண்டும் என்றும் சொன்னதோடு லிஃப்டை சரி செய்ய ஏற்பாடு செய்வதற்கும் இன்னொருத்தர் இருப்பதாகவும் அவர் வந்தப்புறம் தான் தொலைபேசித் தெரிவித்துக் கம்பெனியில் இருந்து ஆள் வர வேண்டும் எனவும் அதற்குக் குறைந்தது பத்து மணி ஆகும் எனவும் தெரிவித்தார். பின்னர் செக்யூரிடியிடம் காஃபி எங்கே கிடைக்கும் எனக் கேட்டுக் கொண்டு இருவரும் மெல்ல இறங்கிச் சென்றோம்.

Friday, December 25, 2015

புவனேஸ்வரில் ஒரு இரவு!

நேரம் போய்க் கொண்டிருந்தது. ராஜஸ்தானித் தம்பதிகள் என்னை நீயே டிடியிடம் போய்க் கேட்டு இடம் மாறி உட்காருனு ரொம்பவே வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.  எங்கள் சாமான்களை வைக்கவும் இடம் கொடுக்கவில்லை. இரண்டு பக்கமும் கீழே உள்ள இடத்தில் அவர்கள் சாமான்களே நிரம்பி இருந்ததோடு சாப்பிடுவதற்காகப் போடப்பட்டிருந்த சின்ன மேசை மீதும் அவங்க சாப்பாட்டுப் பொருட்களையும், ஒரு கூடையையும் வைத்திருந்ததோடு அதன் கீழே உள்ள இடத்திலும் பைகளால் நிரப்பி இருந்தார்கள். என்ன செய்வாங்க இத்தனை சாமான்களோடு! ஒருவழியாக விழுப்புரமும் வந்தது. அங்கே யாரும் அதிகம் ஏறவில்லை! விழுப்புரம் வந்த சிறிது நேரத்திலேயே டிடி வந்து எனக்குப் பத்தொன்பதாம் எண் கீழ்ப்படுக்கை இருக்கை ஒதுக்கி இருப்பதாகவும், ரங்க்ஸ் மட்டும் இங்கேயே இரண்டாம் நம்பர் மேல்ப்படுக்கையில் படுக்க வேண்டும் எனவும் சொன்னார்.  எங்க சாமான்களை இங்கே வைக்க ராஜஸ்தானித் தம்பதி இடமே கொடுக்காததால் மேலே வைத்திருந்தோம். அவற்றை எடுத்துக் கொண்டு பத்தொன்பதுக்குப் போய் அங்கே கீழே எல்லா சாமான்களையும் வைத்தோம்.

எதிரே 21 ஆம் படுக்கை இருக்கையில் அமர்ந்திருந்தவர் ரொம்பவே உதவி செய்தார். அவர் ரயில்வே அலுவலர். மதுரையிலிருந்து வருவதாகவும் மேல்மருவத்தூரில் இறங்கிவிடுவேன் என்றும் சொன்னார். அவருடைய இருக்கைக்கு மேலே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அதே போல் எனக்கு ஒதுக்கிய 19 க்கு மேல் 20 ஆம் படுக்கைக்கும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கே நான் குடியேற்றம் செய்ததும் இருவரும் சாப்பாடு கொண்டு வந்ததைச் சாப்பிட்டோம். பின்னர் ரங்க்ஸ் சிறிது நேரம் கழித்துத் தூக்கம் வருவதாகச் சொல்லிக் கிளம்பிச் சென்றார். எனக்குக் கவலையாக இருந்தது. மேலே கூரையில் ஏறும் இடத்தில் மடிப்பாக வரும். அது அரை அடிக்கு வெளிப்பக்கம் நீட்டிக் கொண்டு இருக்கும். அங்கே குனிந்து கொண்டு ஏறணும். இவரால் அப்படி ஏற முடியாது. என்ன செய்தாரோ என்று கவலை. போய்ப் பார்த்தேன். எப்படியோ எதிர்ப் படுக்கை இருக்கையின் இளைஞன் உதவியோடு மேலே ஏறி விட்டிருந்தார். என்னைப் போய்ப் படுக்கச் சொல்ல நானும் மறுபடி இங்கே வந்தேன். அடுத்துச் செங்கல்பட்டு, தாம்பரத்தில் ஒருத்தரும் ஏறவில்லை. எழும்பூர் வந்தது. இரண்டு, மூன்று பேர் ஏறினார்கள். அதில் ஒரு இளைஞனுக்கு எனக்கு எதிரில் உள்ள 21 ஆம் எண் கீழ்ப்படுக்கையை ஒதுக்கிக் கொடுத்தார் டிடி. எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. இளைஞருக்குக் கீழ்ப்படுக்கையை ஒதுக்கிவிட்டு ரங்க்ஸை மேலே தான் படுக்கணும்னு சொல்லிட்டாரேனு வருத்தமா இருந்தது.

ரங்க்ஸையே வந்து அந்த இளைஞனோட பேசிப் படுக்கையை மாற்றிக்கலாமானு யோசித்துப் போய்ப் பார்த்தால் ரங்க்ஸ் நல்ல குறட்டை. இப்படியாக அன்றிரவு கழிந்தது. இரவு முழுவதும் எனக்கு ஒதுக்கி இருந்த படுக்கை இருக்கைக்கு மேலோ எதிரேயோ யாருமே வரவில்லை. இரவு முழுவதும் காலியாகவே வந்தது. விசாரித்ததில் இந்த ரயில் வாரம் ஒருமுறை செல்லும் ரயில். இதற்கு முந்தைய வாரம் சென்னை வெள்ளத்தினால் ரயில்வே நிர்வாகமே இந்த ரயிலை ரத்து செய்திருந்தது. ஆகவே இப்போதும் போனால் பிரச்னையாக இருக்குமோ என்பதால் பலரும் தங்கள் பயணச் சீட்டை ரத்து செய்துவிட்டதாகச் சொன்னார்கள். காலை எழுந்து வந்த ரங்க்ஸை மேலே யாரும் இல்லை; இங்கேயே உட்காருங்கள் எனச் சொல்ல அவரும் விசாகப்பட்டினத்தில் யாரானும் ஏறலாம்னு சந்தேகப்பட்டார். ஆனாலும் அங்கேயே உட்கார்ந்தார். மெதுவாக அன்றையப் பொழுதும் போய் விட்டது. அப்புறமாய் மாறிய டிடிக்கள் யாருமே எங்களை என்னனு கேட்டுக்கவில்லை. ரங்க்ஸாகப் போய் ஒரு டிடியிடம் விளக்கப் போக அவர் பரவாயில்லை, உட்காருங்கனு சொல்லிட்டார். நிம்மதியாக இருந்தது. மாலை ஆறேமுக்காலுக்கு புவனேஸ்வர் ரயில் நிலையம் போய்ச் சேரும் என்றார்கள். அங்கே எங்களை வரவேற்க மைத்துனரின் நண்பர் ஒருவர் வருவார் எனவும் தகவல் வந்திருந்தது.

ஆகவே புவனேஸ்வரில் இறங்கி சாமான்களை இறக்கியதுமே அந்த நண்பரை எப்படித் தேடுவது என நினைக்கையில் அவரே எங்களைக் கண்டு பிடித்தார். அவருடைய காரிலேயே எங்களைத் தங்குமிடம் அழைத்துச் சென்றார். தங்குமிடம் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அமைந்திருந்தது. இரு குடியிருப்புப் பகுதிகளை வாங்கி ஒன்றாக்கி விருந்தினர் விடுதியாக மாற்றி இருந்தார்கள். அதுவும் ஐந்தாவது மாடியில் இருந்தது. ஆனால் லிஃப்ட் இருந்தது. ஆகவே கொஞ்சம் நிம்மதி. மேலும் நாளை ஒரு நாள் இங்கே தங்கி ஊரைச் சுற்றிப் பார்த்துட்டுப் பின்னர் நாத்தனார் வீடுக்குப் பயணம். ஆகவே பிரச்னை இல்லை. என நினைத்தோம். அந்த விடுதியைப் பார்த்துக் கொள்பவர் அன்றிரவு ஏதோ கல்யாண வரவேற்புக்குப் போக வேண்டி இருந்ததால் எங்கள் வரவுக்காகக் காத்திருந்தார். நாங்கள் போனதும் அவர் எங்களிடம் தான் திருமண வரவேற்புக்குப் போவதாகவும் மறுநாள் காலை வந்துவிடுவதாகவும் சொன்னார். இதில் என்ன இருக்கிறது, தாராளமாய்ப் போகட்டும் என்று சொல்லிவிட்டு மேலே அறைக்குப் போய் சாமான்களை வைத்துவிட்டு விடுதியைப் பார்த்துக் கொள்பவரிடம் சொல்லிவிட்டு அவரைப் போகச் சொல்லிவிட்டு எங்களை அழைத்து வந்தவரையே ஏதேனும் நல்ல ஹோட்டலில் விடச் சொன்னோம். அப்படியே அவரும் விட எங்கள் இரவு உணவை தவா ரொட்டியுடனும், மிக்சட் வெஜிடபுளுடனும் முடித்துக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு மீண்டும் அறைக்கு வந்தோம். அறை நல்ல வசதியாகவே இருந்தது. குளிராக இருந்தபடியால் ஏசி தேவைப்படவில்லை. மின் விசிறியைச் சின்னதாக வைத்துவிட்டுத் தூங்கப் போனோம். காலை நடக்கப் போவதை அறியாமலேயே!

பி.கு. கடுமையான ஜலதோஷத்துடன் கூடிய ஜுரம்! கண்ணில் இருந்து நீர் வடிந்தபடியே இருக்கிறது. தலைவலியும் கூட. கண்களைத் திறக்க முடியவில்லை. ஆகவே தொடர்ந்து இரு நாட்களுக்காவது கடமை ஆத்த முடியாது என்பதை சந்தோஷத்துடன் தெரிவிக்கிறேன். :)

Wednesday, December 23, 2015

சவாலே, சமாளி!

குமுட்டி அடுப்பில் சமைத்த கதை!

அட, ஊருக்குப் போறச்சே தான் அப்படி! சரி, வீட்டுக்கு வந்தப்புறமாவது கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு பார்த்தால்! கடவுளே! நேற்றைய தினத்தைப்போன்றதொரு தினம் பார்த்ததே இல்லை. சில வருடங்கள் முன்னர் அம்பத்தூரில் இருக்கையில் மழைக்காலத்தில் ஒரு நாள் நல்ல மழையில் மின்சார வெட்டு. அன்று பார்த்து எங்க வீட்டு எரிவாயு அடுப்பிலும் கசிவு ஏற்பட, இன்டக்‌ஷன் ஸ்டவோ, அல்லது ரைஸ் குக்கரோ பயன்படுத்த முடியா நிலையில் எப்போவோ வாங்கி வைச்சிருந்த அடுப்புக் கரியைப் பயன்படுத்திக் குமுட்டி அடுப்பில் சமைத்தேன். இட்லி, கையால் அரைத்த தேங்காய்ச் சட்னி, மோர்க்குழம்பு, ரசம், வெண்டைக்காய்க் கறி செய்து சாதம் வைத்துச் சாப்பிட்டோம். இந்த அழகில் ஒரு விடாக்கண்டரான விருந்தினர் வேறு வந்திருந்தார். அவருக்கும் சேர்த்து மூன்று வேளை சமைத்தேன்.

நேற்று என்ன ஆச்சுன்னா, காலை வந்ததும் காஃபி இன்டக்‌ஷன் ஸ்டவில் போட்டுக் குடித்தாயிற்று. பக்கத்தில் உள்ள மெஸ்ஸில் இட்லி வாங்கிச் சாப்பிட்டாயிற்று. துணி தோயல் போன்ற வேலைகளை முடித்துக் கொண்டு பதினோரு மணி போல் சமைக்க ஆரம்பித்தேன். பத்து நாட்களாக மூடி வைக்கப்பட்ட எரிவாயு அடுப்பின் சிலிண்டரைத் திறந்தால் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று சீறுகிறது. எரிவாயுக் கசிவின் நாற்றமும் கூடவே வர, அவசரமாக ரங்க்ஸை அழைக்க, அவரோ எரிவாயு தீர்ந்து விட்டதாக நினைக்க, இல்லைனு மறுபடி சிலிண்டரைத் திறந்து நேரடியாகச் செயல்விளக்கம் செய்து காட்டினேன். பின்னர் சிலிண்டரை மீண்டும் நன்றாக மூடிவிட்டு மேலிருந்து ரைஸ் குக்கரை எடுத்துச் சாதம் வைக்க ஏற்பாடு செய்து அதைச் சமையலறையில் வைக்கக் கூடாது என்பதால் வேறோர் அறையில் வைத்தேன்.

நேற்று துவாதசி என்பதால் ரங்க்ஸ் அகத்திக்கீரை வாங்கி வந்திருந்தார். அதை நறுக்கி வைத்திருந்தேன். அதையும் பாசிப்பருப்பையும் வேக வைப்பதற்காக இன்டக்‌ஷன் ஸ்டவை எடுத்துக் கொண்டு ரைஸ் குக்கர் வைத்திருந்த அதே அறையில் பக்கத்துப் ப்ளகில் இன்டக்‌ஷன் ஸ்டவை வைத்துவிட்டு அதில் அடிப்பாகம் சமனாக உள்ளதொரு பாத்திரத்தில் பருப்பைப் போட்டு நீர் ஊற்றி வேக வைக்கவேண்டி இன்டக்‌ஷன் ஸ்ட்வை ஏற்றினால், "பொட்" என்றொரு சப்தம்! இன்டக்‌ஷன் ஸ்டவ் அணையப் பக்கத்தில் உள்ள ரைஸ் குக்கரும் அணைய மின்சாரம் போயிடுச்சுனு நினைச்சால் இன்வெர்ட்டர் குய்யோ, முறையோ என கூக்குரல்!

நடுங்கிப் போயிட்டேன்! ரங்க்ஸ் ஓடிப் போய் இன்வெர்டரின் வாயை அடைத்தார். வீட்டில் வந்து ஒவ்வொரு அறையிலும் சோதனை செய்தால் சமையலறை, பெரிய படுக்கை அறை, சுவாமி அறை, நான் சாப்பாடு தயார் செய்யப் பயன்படுத்திய அறைகளில் மின்சாரம் இல்லை. தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் ஆகியவற்றுக்கு மின்சாரம் சீராக வந்து கொண்டிருந்தது. கணினி வைத்திருக்கும் அறையிலும் (அங்கே மட்டும்) மின்சாரம் இருந்தது. ரைஸ் குக்கரை அங்கே கொண்டு போய் வைத்துவிட்டு எலக்ட்ரீஷியனுக்குத் தொலைபேசிக் கேட்டோம். பவர் பாயின்டில் தான் இன்டக்‌ஷன் ஸ்டவை வைக்கணுமாம். இது அப்போ வைக்கும்போது ரங்க்ஸுக்கும் தோணலை! எனக்கும் தோணலை! அதான் ஃப்யூஸ் போயிருக்கும்ன்னு சொல்லிட்டு இப்போ உடனே வர முடியாது (இதுக்கே பதினொன்றரை மணி ஆகி விட்டதே!)மாலை தான் வருவேன், ஆனால் இன்னிக்குள் சரி பண்ணிக் கொடுக்கிறோம்னு சொல்லிட்டாங்க.

எரிவாயுக் கசிவுக்கான புகார் எண் எடுக்கவே இல்லை. விசாரித்தால் இப்போது அது பயன்பாட்டிலேயே இல்லையாம்! சுத்தம்! பின்னர் எங்கள் எரிவாயு முகவரின் எண்ணுக்கே தொலைபேசித் தகவல் தெரிவித்தோம். ஒரு வழியாக ரைஸ் குக்கரில் சாதம் தயார் ஆக, நல்ல மோரும் ஆவக்காய் ஊறுகாயுமாகப் போட்டுக் கொண்டு சாப்பிட்டுச் சமாளித்து விட்டோம். இதுக்கே ஒரு மணி ஆகிவிட்டது!  பின்னர் இரண்டு மணிக்கு மேல் ஒவ்வொருத்தராக வர எரிவாயுக் கசிவுக்கு சிலிண்டர் ரெகுலேட்டரின் புஷ் தேய்ந்து போயிருக்க அதை மாற்றி மீண்டும் சிலிண்டரைப் பொருத்தியதும் கசிவு நின்றது. அதன் பின்னர் எலக்ட்ரீஷியனும் வந்து இன்வெர்டரிலும் ஃப்யூஸ் போயிருக்கிறது எனச்சொல்லி அதையும் மாற்றிக் கொடுத்தார். எல்லாம் முடிய நேற்று மாலை நாலரை மணி ஆகிவிட்டது! சோதனைகள் இதோடு முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.  பிள்ளையார் என்ன நினைச்சிருக்காரோ தெரியலை! :)

Tuesday, December 22, 2015

போதும்டா சாமி! ஆளை விட்டால் போதும்! :(

ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம். எங்கே போனேன்னு நினைக்கறீங்க? ஜக்குவைப் பார்த்துட்டு அப்படியே காளியம்மாவையும் பார்க்கணும்னு கிளம்பினோம். கிளம்பும்போதே சோதனை மேல் சோதனை! :( பயணச் சீட்டு உறுதியாகவில்லை. ஆகவே கீழ்ப் படுக்கை இருக்கை கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்தில் இருந்தோம். ஒன்று கிடைத்தால் கூடப் போதும், நான் எப்படியோ பார்த்துக்கறேன்னு ரங்க்ஸ் சொல்லிட்டிருந்தார்.  கிளம்ப இருநாட்கள் இருக்கையில் இருக்கையை உறுதி செய்து செய்தி அலைபேசிக்கு வந்தது. ஆனால் அதில் படுக்கை இருக்கை எண்கள் இல்லை, கடைசியில் கிளம்புகையில் அலைபேசியில் தகவல் வந்தது, இரண்டுமே மேல்ப் படுக்கை இருக்கை என்று. அப்போதே கிளம்பும் உற்சாகம் வடிந்து விட்டது. என்றாலும் பயணச் சீட்டு வாங்கியாச்சு. தொலைதூரப் பயணம். நம்ம ரங்க்ஸுக்குப் பல வருடங்களாகக் காத்திருந்த பயணம். நான் தான் ஒவ்வொரு தரமும் ஒவ்வொரு காரணம் சொல்லி மறுத்துக் கொண்டு வந்திருந்தேன். ஆகவே இம்முறை பல்வேறு காரணங்களாலும் மறுக்க இயலாத சூழ்நிலையும் கூட! ஒரு வழியாகக் கிளம்பியாச்சு.

வழிக்கு வேண்டிய சாப்பாடைத் தயார் செய்து கொண்டு, பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்துவிட்டுப் பிள்ளையாரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பி ஶ்ரீரங்கம் ஸ்டேஷனுக்குப் போயாச்சு. வண்டி ஶ்ரீரங்கம் வழியாகப் போவதால் அங்கே இரு நிமிடங்கள் நிற்கும். அங்கேயே ஏறிக்கலாம். மாலை நாலு இருபதுக்கு வண்டி வந்துவிட்டு நாலு இருபத்து மூன்றுக்குக் கிளம்பும். காத்திருந்தோம். வேறு சில வண்டிகளுக்கான அறிவிப்புகள் வர இந்த வண்டிக்கான அறிவிப்பே வரவில்லை.  கொஞ்சம் கவலையாகவே இருந்தது. ஏனெனில் இது வாரம் ஒரு முறையே செல்லும் வண்டி. ரத்து செய்துவிட்டார்களோ என்னும் எண்ணம் வந்தது. முதல் வாரம் தான் சென்னைப் பெருவெள்ளத்தின் காரணமாக இந்த வண்டி ரத்து செய்யப்பட்டிருந்தது. அதை நினைத்துக் கொண்டிருக்கையிலேயே நாங்க காத்திருந்த நடைமேடைக்கு ஒரு வண்டி வரும் சப்தம் கேட்டது.  ஏதோ சரக்கு வண்டியாக இருக்கும் என ரங்க்ஸ் சொல்ல இல்லை, நம்ம வண்டிதான் என நான் சொல்லக் கடைசியில் நடைமேடைக்கு வண்டி வருகையில் பார்த்தால் கடவுளே! நாங்க போக வேண்டிய வண்டி தான்.

அப்படியும் ரங்க்ஸுக்கு சந்தேகம் வந்தது! அறிவிப்பே வரலையே என அங்கே வண்டிக்குள் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் கேட்க அவள் உறுதி செய்தாள். அது மூன்றாம் வகுப்புக் குளிரூட்டப்பட்ட பெட்டி. நாங்க போக வேண்டியது இரண்டாம் வகுப்புக் குளிரூட்டப்பட்ட பெட்டிக்கு. அது எங்கேயோ இருந்தது. ஆகவே அந்தப் பெண்ணிடமே சாமான்களைக் கொஞ்சம் வாங்கி வைக்கச் சொல்லிவிட்டு இருவரும் வண்டியில் ஏறினோம். அங்கிருந்த ரயில்வே ஊழியரிடம் ஏ2 எங்கே எனக் கேட்க இந்த பி1, பி2, பி3 மூன்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என அவர் சொல்லக் கஷ்டப்பட்டுக் கொண்டு சாமான்களைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தோம். இதுக்கு முன்னால் இதைவிட அதிகமான சாமான்களைத் தூக்கி இருக்கோம் தான். ஆனால் அப்போ உடல், மனம் இரண்டுமே தெம்பாக இருந்தது. இப்போ அப்படி இல்லையே! சிரமமாகத் தான் இருந்தது. ஒரு வழியாக முக்கி, முனகிக் கொண்டு ஏ2 பெட்டிக்குப் போனோம். எங்கள் படுக்கை இருக்கை எண், 2,4 ஆகவே அங்கே சென்று பார்த்தால் 1,3 படுக்கை இருக்கைகளில் எங்கள் வயதையே ஒட்டிய கணவன்,, மனைவி, ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெட்டி முழுவதும் சாமான்களைப் பரப்பிவிட்டுக் குடித்தனமே நடத்திக் கொண்டிருந்தார்கள்.

மாலை 4-30 மணி கூட ஆகவில்லை. படுக்கையும் போட்டுவிட்டு இருவரும் படுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் நுழைவதைப் பார்த்துவிட்டு எங்களைப் பரம விரோதியைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். நாங்கள் எங்கள் படுக்கை இருக்கை எண்களைச் சொல்லவும் அரை மனதாக அந்த அம்மாள் அவர் கால்களைக் கொஞ்சமாக மடக்கிக் கொண்டு  எனக்குக் கொஞ்சம் போல் உட்கார இடம் கொடுத்தார்.  ரங்க்ஸ் நின்று கொண்டே இருந்தார். அந்த மனிதர் எழுந்திருக்கும் வழியாகத் தெரியவில்லை. அதுக்குள்ளாக  பயணச் சீட்டுப் பரிசோதிக்கும் ஊழியர் வந்து அவரை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு எங்கள் சீட்டுக்களைப் பரிசோதித்துவிட்டுக் காலியான இடத்தில் ரங்க்ஸை உட்காரச் சொல்லிவிட்டுச் சென்றார். ரங்க்ஸ் அவர் பின்னாலேயே போய் ஒரே ஒரு கீழ்ப்படுக்கை இருக்கையைக் கொடுக்கும்படி மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டார். அப்படிக் கிடைக்கலைனால் நான் உட்கார்ந்து கொண்டே வரேன் என நான் அறிவிப்புச் செய்தேன்.

ராஜஸ்தானிய ஜோடிக்குக் கவலை பிய்த்துக் கொண்டிருக்கிறது போல! என்னை டிடியிடம் நீயே போய்க் கேள், வண்டியில் நிறைய இடம் இருக்கிறது. பதினைந்தாம் எண்ப் படுக்கையிலிருந்து காலி தான். அங்கே போய் உட்கார் என என்னைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். நான் அசையவே இல்லை. அவங்களும் சாப்பிடப் போகிறோம் என்றெல்லாம் அறிவிப்புக் கொடுத்துப் பார்த்தனர். பழங்கள், பிஸ்கட்கள் எனப் பெட்டியிலிருந்து வரிசையாக வந்து சாப்பிடவும் ஆரம்பித்தனர். நான் முகத்தை வெளியே வைத்துக் கொண்டு திரும்பி உட்கார்ந்து விட்டேன். அதுக்குள்ளே ரங்க்ஸ் வந்து விழுப்புரம் வந்ததும் தரேன்னு சொல்லி இருக்கார் எனச் சொல்லி அந்த ராஜஸ்தான் ஜோடியின் ஆண் நபர் அருகே உட்கார்ந்தார். அந்த நபர் உடனே தன் காலைக் காட்டித் தனக்கு இருதய அறுவை சிகிச்சை ஆகி இருப்பதாகவும் காலை மடக்க முடியாது என்றும் தெரிவித்தார்.  நாலு மணிக்கே எப்படி மேலே போய் உட்காருவது?

ரங்க்ஸுக்கு மேலே போகும்போது உள்ளே நுழையவே தலை இடிக்கும். அதோடு உட்காரவும் முடியாது அவரால். படுத்துக்கத் தான் வேணும். நான்கரை, ஐந்துக்கேவா படுக்கிறது. கிடைச்ச இடத்தில் ஒண்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.  கொண்டு போன சாப்பாடை எடுத்துச் சாப்பிடக் கூட மனசு வராது போல் இருந்தது.  என்ன செய்ய முடியும்?

Saturday, December 12, 2015

ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! :)

இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு லீவு விட்டாச்சு! மழை முடிஞ்சு லீவானு பார்க்கிறீங்களா? வெள்ள நிவாரணப் பணி எல்லாம் செய்யணும் இல்ல! அதான்! :) ஏன், எதுக்கு, எங்கே, எப்படி, என்னதுக்குனு எல்லாம் சொல்ல மாட்டேனே! எஞ்சாய் தோழர்களே, தோழிகளே, அண்ணன்மாரே, தம்பிமாரே, அக்காமாரே, தங்கச்சிமாரே! பிள்ளைகளே, பெண்களே! எல்லோரும் எஞ்சாய் பண்ணுங்க.


Friday, December 11, 2015

மஹாகவிக்கு அஞ்சலி!

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

தீம்தரிகிடபக்க மலைகள் உடைந்து-வெள்ளம் பாயுது பாயுது

பாயுது-தாம்தரிகிடதக்கத் ததுங்கிடத் தித்தோம்-அண்டம் சாயுது சாயுது

சாயுது-பேய் கொண்டு தக்கை அடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டியடிக்குது மின்னல்-கடல் வீரத்திரை கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்-கூ கூவென்று விண்ணைக் குடையுது

காற்று.சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது

வானம் எட்டுத் திசையும் இடிய-மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

அண்டம் குலுங்குது தம்பி-தலை ஆயிரந்தூக்கிய சேடனும்
பேய் போல் மிண்டிக் குதித்திடுகின்றான்

-திசை வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர் செண்டு புடைத்திடுகின்றார்;

-என்ன தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்! கண்டோம், கண்டோம்,

கண்டோம்-இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு  கண்டோம்.!

பாரதியார் க்கான பட முடிவு

இன்று மஹாகவிக்குப் பிறந்த நாள். இப்போதைய நிலைமையில் பலருக்கும் இது குறித்து நீனைவு இருந்தாலே பெரிய விஷயம். எனினும் மழை கன மழையாகப்  பெய்வது பாரதியின் காலத்திலும் இருந்தது தானே! அப்படி ஒரு கனமழையில் நடந்தது குறித்துப் பாரதி பகிர்ந்திருக்கிறார். அப்போது மழை குறித்து எழுதிய இந்தப் பாடலை அவர் நினைவு நாளில் பகிர்கிறேன். கடும் புயலுடன் கூடிய மழையிலும் தெய்வீகத்தை அவரால் காண முடிந்தது. ஆனால் நம்மால் முடியவில்லை! :(  இப்போது அடித்தது புயலும் இல்லை! கனமழையும் அதன் மூலம் பெருகிய வெள்ளமும் தான்! இதைத் தவிர்த்திருக்க வேண்டும்! அதற்கும் கையாலாகாமல் இருந்துவிட்டோம். வருங்காலத்திலாவது அதற்கேற்றவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என இந்த நாளில் உறுதி பூணுவோம். 

Tuesday, December 08, 2015

அன்னமூர்த்தியைப் பிரார்த்தித்துக் கொண்டேன்!



இன்னமும் சென்னையில் நிலைமை சரியாகவில்லை. என் தம்பியோடு ஞாயிறன்று பேச முடிந்தது. சம்பந்திகள் மற்றும் நாத்தனார் ஆகியோரோடு பேச முடிந்தாலும் அவ்வளவு சுலபமாக இல்லை! :(  இது போல் இன்னும் எத்தனை பேர் தவிக்கிறீர்களோ தெரியலை. இப்போ இரு நாட்களாக இங்கேயும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  சென்னையிலும் இன்னும் மழை பெய்யும் என்று சொல்கிறார்கள். கவலையும், பயமுமாக இருக்கிறது. யாருக்காகக் கவலைப்படுவது என்றே புரியாமல் ஒரே குழப்பமாகவும், பயமாகவும் உள்ளது. அந்த ஆண்டவன் ஒருத்தன் தான் துணை என நினைத்துக் கொண்டு அவனைச் சரண் அடைந்தோம். கும்பாபிஷேஹம் ஆனப்புரம் கோயிலுக்கே போகலை. பெரிய ரங்குவையும், நம்பெருமாளையும் பார்த்து ஏன் இப்படினு கேட்கணும்! எல்லோரையும் காப்பாத்துனு சொல்லணும். ஆகவே போகணும், போகணும் என நினைச்சது கடைசியில் நேற்று வாய்த்தது. மதியம் இரண்டு மணிக்கு மேல் கிளம்பினால் நாலுக்குள் வந்துடலாம்னு நினைச்சுக் கிளம்பினால் மழை கொட்ட ஆரம்பித்தது.

அவ்வளவு தான் என நினைத்து உட்கார்ந்துவிட்டோம். சிறிது நேரத்துக்கெல்லாம் மழை நின்றது. நம்ம ரங்க்ஸ் ஆட்டோ வைச்சுண்டு போயிடலாம்னு சொன்னார். ஆகவே ஆட்டோ வைத்துக் கொண்டு ரங்கா கோபுரம் அருகே இறங்கிக் கொண்டோம். மழை தூறிக் கொண்டு இருந்தது.  எனினும் மேலே சென்றோம். தாயார் சந்நிதிக்குச் செல்லும் வண்டி நின்றிருக்கவே முதலில் அங்கே போகலாமானு ரங்க்ஸ் கேட்டார். அங்கே போயிட்டு வரதுக்குள்ளே இங்கே முதியோருக்கான நேரம் வந்துடும்/கூட்டம் அதிகம் ஆகும் என்பதால் முதலில் இங்கே முடிச்சுக்கலாம் எனச் சொன்னேன். சரினு முதலில் பெரிய ரங்குவைப் பார்க்கவே போனோம்.  போகும்போதே துளசி குறிப்பிட்ட அன்னமூர்த்தியைப் பார்க்கணும்னு எண்ணம். எந்த இடம்னு சரியாப் புரியலை. கொடிமரத்துக்கிட்டேவா? கருட மண்டபமானு யோசித்துக் கொண்டே போனேன்.

உள்ளே போகிறதுக்குள்ளே கொடி மரத்தின் அருகிலேயே உள்ளே செல்லும் வழியை மாற்றி அமைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் செல்லுபவர்கள் இடப்பக்கமாகவும் பணம் கொடுத்து தரிசனம் செய்பவர்கள் வலப்பக்கமாகவும் செல்லவேண்டும் என்றிருந்தது. எப்போவும் உள்ளே போய்த் தான் உள் பிரகாரத்தில் பிரித்திருப்பார்கள். இது இப்போவே வளைந்து வளைந்து சென்றது. ரொம்பவே சிரமமாக இருந்தது. எனினும் சென்றோம். சீட்டு வாங்கும் இடத்துக்கு வரவே மூன்று சுற்றுக்கு மேல் சுற்ற வேண்டும்! :( 50 ரூச் சீட்டு வாங்கிக் கொண்டு சென்றோம். நல்லவேளையாக உள்ளே கூட்டம் அதிகம் இல்லை. நேரே துவாரபாலகர்கள் வாயிலுக்கு(சந்தனு மண்டபம்) சென்றோம். அங்கே சிறிதே நேரம் காத்திருக்க விரைவில் குலசேகரன் வாயிலையும் அடைந்தோம். வழக்கப்படி போகும்போதே பெரிய ரங்குவின் முக தரிசனத்தையும், நம்பெருமாளையும் பார்த்துக் கொண்டேன். உள்ளே சென்றதும் சிறிதே நிற்க அவகாசம் கிடைக்க அந்த அவகாசத்தில் பெரிய ரங்குவின் திருவடியையும் திருவடிக்கு அருகே இருக்கும் யாகபேரரையும் பார்த்துக் கொண்டேன். உபய நாச்சியார்களையும் பார்க்கையிலே இன்ப அதிர்ச்சி. ஒரு பட்டாசாரியார் எனக்குச் சடாரி சாதித்தார். பெருமாள் சந்நிதியில், பெருமாளுக்கு எதிரேயே சடாரிப் பிரசாதம் கிடைத்தது உண்மையிலேயே ஆனந்தமாக இருந்தது எனில் அடுத்த ஆனந்தம் இன்னொரு பட்டாசாரியார் அங்கேயே துளசிப் பிரசாதமும் கொடுத்தார்.

நம்ம ரங்க்ஸுக்கும் எல்லாமும் கிடைத்தது. மன நிறைவுடன் பெரிய ரங்குவுக்கும், நம்பெருமாளுக்கும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம். நம்பெருமாளைப் பார்த்துச் சிரிக்க முடியலை! :( மனம் வருத்தமாக இருந்தது. அனைவருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டு வெளியே வந்து தீர்த்தப் பிரசாதம் வாங்கிக் கொண்டு தாயார் சந்நிதிக்குக் கிளம்பினால் கடவுளே!

அர்ஜுன மண்டபம், கிளி மண்டபம் வழியாகச் சென்ற வழி முற்றிலும் அடைக்கப்பட்டு கர்பகிருஹத்திற்குப் பின்னர் இருக்கும் வடக்கு வாயிலில் உள்ள தொண்டைமான் மேடு வழியாக வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தொண்டைமான் மேடு உண்மையிலேயே மே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏடு! குறைந்தது பத்துப்படியாவது ஏறணும். நல்லவேளையாக நடுவில் உள்ள தடுப்பில் கயிறு கட்டி இருக்க அதைப் பிடித்த வண்ணம் எல்லோருமே ஏற வேண்டி இருந்தது. இல்லை எனில் அந்தக் குறுகிய படிகளில் வழுக்கும். முழங்கால் முறியும். மேலே ஏறினால் பிரணவ விமானத்தின் இன்னொரு பக்கத்தின் தரிசனம் கிடைத்தது. அது தான் மேலே பகிர்ந்து இருக்கேன். எப்போவும் பர வாசுதேவரின் பக்கவாட்டுப் பக்கமே எடுக்க முடியும். இப்போ மூலஸ்தானத்தின் நேர் பின் பக்கம் எடுக்க முடிந்தது. அந்த வழியாக வெளியே வந்தால் தாயார் சந்நிதி போகப் பிரகாரம் சுற்றி வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இது வரையிலும் பிராகாரம் சுற்றியதே இல்லை. இன்று அந்த ஆவலும் பூர்த்தி ஆகி விட்டது. பிராகாரம் சுற்றிக் கொண்டு கொடிமரத்தின் அருகே வரவேண்டும். அப்போது என்ன ஆச்சரியம்!

நான் பார்க்க நினைத்த அன்னமூர்த்தி சந்நிதி எதிரே பிரகாரம் முடியும் இடத்தில்! ஆச்சரியம் மேலோங்க படம் எடுக்கலாம்னு நினைச்சு நம்ம ரங்க்ஸைத் தேடினால் கொடிமரம் கிட்டேப் போயிட்டார். கத்திக் கூப்பிடணும்! சரி, இருக்கும் இடமோ தெரிஞ்சாச்சு! இன்னொரு நாள் படம் எடுத்துக்கலாம்னு விட்டுட்டேன்! துளசி எடுத்த படத்தைக் கீழே பகிர்கிறேன்.



அன்னமூர்த்தி என்றால் பிரம்மாவாம். ஆக பிரம்மாவும் இங்கே கோயில் கொண்டிருக்கார் போலனு நினைச்சால், சங்கு, சக்கரத்தோடு காட்சி அளிக்கிறார். இவரைக் குறித்த மேல் அதிகத் தகவல்களைத் திரட்டணும். அதன் பின்னர் வெளியே வந்து தாயார் சந்நிதிக்குச் செல்லத்தயாராக இருந்த வண்டியில் ஏறித் தாயாரைப் பார்க்கச் சென்றோம். தாயார் எப்போதும் போல் விரைவில் அருள் பாலித்தாள். மஞ்சள் பிரசாதம், தீர்த்தம், சடாரி வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.  தாயாரைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் ஒரு சில கடைகளில் சில, பல பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். நடை அதிகமாகப் போய்விட்டது நேற்று! மழை வேறு! ஆகையால் ரொம்பக் களைப்பாகப் போய் விட்டது! 

Thursday, December 03, 2015

குற்றம், குறை காண வேண்டாம்!

சென்னை வெள்ளம் க்கான பட முடிவு


சென்னை வெள்ளம் க்கான பட முடிவு


சென்னை வெள்ளம் க்கான பட முடிவு

Rescue operations are on on a large scale and the Indian Navy and Army have been pressed into service. Here are some useful helpline numbers for anyone stranded in the floods or needing help.
This is the Indian Navy's helpline number in Chennai: +914425394240
The Indian Army's helpline: 9840295100
Helplines provided by Tamil Nadu government:
Chennai city: 1070
Districts: 1077
Chennai Corporation: 1913 and 044-4567 4567
படங்கள் கூகிளாருக்கு நன்றி

சென்னையின் அதீத வெள்ளமும், பேரழிவும் மனதைக் கனக்க வைக்கிறது. பொதுவாக மக்கள் நல்லவர்களே! ஆகவே இந்தப் பேரிடர் சமயத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்பவர்களும், பிறரைக் காப்பாற்ற உதவுபவர்களும் இருக்கின்றனர். ஆனால் இந்தச் சமயத்திலும் அரசியல் பேசும் அரசியல் வியாதிகளை என்னவென்று சொல்வது? அவரவர் தங்களால் இயன்றதைச் செய்யாமல் அரசையும், அரசு ஊழியர்களையும் குறை சொல்லலாமா?

காவலர்கள் தங்கள் வீடுகளையும், மனைவி, மக்களையும் மறந்து தான் நமக்கு உதவுகின்றனர். அதே போல் பொதுப்பணித் துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், மின் வாரிய ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என அனைவரும் அரசு ஊழியர்கள் தான். இந்த இக்கட்டிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் பொறுப்பு அவர்கள் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாம் எங்க பகுதிக்கு யாரும் வரவில்லை, எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்கிறோம். சொல்பவர்களுக்கு இது எப்படிப் பட்ட பேரிடர் என்பது தெரியாமலா இருக்கிறது?

எங்கே என்று போவார்கள்? ஒரு இடத்துக்குச் சென்றால் அங்கே உள்ள மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்ட பின்னர் தானே மற்றொரு அழைப்பைக் கவனிக்க முடியும்? இந்தச் சூழ்நிலையில் வேகம் எப்படிக் காட்டுவது? பெருகி வரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வேலை செய்கின்றனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது அல்லவா? அவர்கள் குடும்பமும் இதே சென்னையில் தானே வசிக்கிறது? அவர்களை யார் காப்பாற்றுவார்கள்? நாம் நம்மைப் பற்றியே நினைக்காமல் வரும் உதவியை ஏற்றுக் கொண்டு தற்போது நம்மைக் காத்துக் கொள்ளவேண்டும்.

தன்னார்வலர்கள் பலரும், சேவா பாரதி போன்ற அமைப்புகளும் செய்து வரும் உதவிகள் சொல்லுக்கு அடங்காதது. இந்தச் சமயம் மக்கள் ஜாதி, மத பேதமில்லாமல் ஒருவருக்கொருவர் மனிதம் என்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு உதவி செய்கின்றனர். இதில் சில தொலைக்காட்சிச் செய்திகளில் மத்திய, மாநில அரசைக் குற்றம் சாட்டும் போக்குத் தான் பெரிய அளவில் செய்திகளாகச் சொல்கின்றனர். இது குற்றமும், குறையும் சொல்லும் நேரம் அல்ல! செயல்பட வேண்டிய நேரம்! சென்னையின் அழிவு தமிழ்நாட்டுக்கே அழிவாகி விடும். அண்டை மாநிலங்களின் உதவியும் தில்லி, பிஹார் போன்ற வட மாநிலங்களின் உதவியும் கடுகளவு இருந்தாலும் இந்த நேரத்தில் அவை நமக்குத் தேவையானதே. பலரும் வீடு, வாசல்கள், உடைமைகளை இழந்துள்ளனர்.

இது ஒரே நாளில் சில மணி நேரங்களில் முடிந்து விடும் விஷயம் அல்ல. இதன் தாக்கம் முழுவதும் தெரியவே ஒரு மாதம் ஆகி விடும். மெல்ல மெல்லத் தான் இயல்பு நிலைக்கு வர வேண்டும். பலருக்கும் அவர்கள் இழப்பின் மதிப்பீடு தெரியவும் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். அதில் இருந்தும் மீண்டு வர வேண்டும். இந்த நேரத்தில் இடர்கள் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டியதே நம் முக்கியமான கடமையாகும். சொல்வது எளிது. எனக்கு இப்படி ஒன்று வந்திருந்தால் என்ன செய்திருப்பேனோ சொல்ல முடியாது! அவரவருக்கு வந்தால் தான் தெரியும். அல்லவா? இப்போது என்னால் முடிந்தது அனைவருக்கும் ஆறுதல் சொல்வது ஒன்றே.  நேற்றிரவு கிடைத்த செய்தியின்படி அரக்கோணம் ராணுவ விமான தளத்தைச் சில நாட்கள் பயணிகளின் பயன்பாட்டிற்காக மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் விமானப்படை திறந்து விட்டிருக்கிறது. ஏர் இந்தியாவின் ஒரு விமானம் தன் சோதனைப் பயணத்தையும் செய்து பின்னர் ஜெட் ஏர்வேஸின் விமானம் ஒன்றும் அங்கு தரையிறக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பல திசைகளிலிருந்தும் உதவிகள் வரும்போது மனம் தளர வேண்டாம். ரயில் போக்குவரத்தும் விரைவில் சீரடையும் என நம்புவோம்.

நேற்றிலிருந்து சென்னையில் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முயல்கிறேன். முடியவில்லை. தொலைபேசிகள் வேலை செய்யவில்லை என எண்ணுகிறேன். எங்களுக்கும் கடந்த இரண்டு நாட்களாக தொலைபேசி இணைப்பும், இணைய இணைப்பும் இல்லை. நேற்று மாலை ஆறு மணிக்குப் பின்னர் தான் வந்தது!

அனைவரும் மனோபலத்துடனும், தைரியத்துடனும் எதிர்கொள்ளப் பிரார்த்தனைகள்.