எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 26, 2021

பானுமதியின் பரிசு! சுஜாதா/பிவிஆரின் கதைகள்!

 கடந்த நாட்களில் சுஜாதாவின் கதை ஒன்றும் "கமிஷனருக்குக் கடிதம்!" பிவிஆரின் கதை ஒன்றும் "அதிர்ஷ்ட தேவதை" படித்தேன். முதல் கதை காவல்துறையையும் அதன் செயல்பாடுகளையும் பற்றியது. பெண் ஒருத்தி காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாள். இந்தக் கதை எழுதிய கால கட்டம் பெண்கள் காவல் துறையில் அதிகம் பங்கெடுக்காத காலம் என நினைக்கிறேன். எண்பதுகளின் ஆரம்பமோ! இருக்கலாம். அந்தக் காவல் நிலையத்தின் கமிஷனரில் இருந்து உதவிக்கமிஷனர் வரை அந்தப் பெண்ணின் மேல் ஆசை கொள்கின்றனர். அந்தப் பெண்ணுக்கோக் காவல் துறையில் சாதிக்க எண்ணம்.  வேலையில் சேர்ந்த அன்றே விபத்து/அதில் இறந்தவரின் உடல், மார்ச்சுவரி, தற்கொலை செய்து கொண்டவரைப் பார்க்க அழைத்துச் செல்லுதல் என அந்தப் பெண்ணுக்கு அடுத்தடுத்துப் பார்த்துத் திகைக்க நேரிடுகிறது. இதற்கு நடுவே இரண்டு அதிகாரிகளும் மாற்றி, மாற்றி அந்தப் பெண்ணைத் தன் வசப்படுத்த முயலும் முயற்சிகள்.

இவற்றிலிருந்து அந்தப் பெண் எப்படி மீண்டாள் என்பதே கதை என்றாலும் அதற்காக அவள் எடுத்துக் கொண்ட விஷயம் கொஞ்சம் ஆபத்தானது. அவள் வேலையே போய்விடும் அபாயம் கொண்டது. இதற்கு நடுவில் சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு பெண்ணைப் பார்த்துப் பரிதாபம் கொண்டு அவளை மாற்றவும் முற்படுகிறாள். முடியவில்லை. ஆனால் அதனால் அந்தப் பெண் காவல் துறை அதிகாரிக்குக் கெட்ட பெயர் தான் மிச்சம். மேல் மட்டத்தில் இருந்து அவளைப் பணி இடை நீக்கம் செய்யச் சொல்லி உத்தரவு வர, தன் மேலதிகாரியின் குடும்ப விஷயத்தைப் பார்த்து விட்டு அதைச் சரி செய்ய அந்தப் பெண் அதிகாரி மேற்கொண்ட முயற்சிகளால் கடைசியில் அவளாகவே வேலையை விட்டு ராஜினாமா செய்யும்படி நேருகிறது. இடைப்பட்ட பக்கங்களில் நடந்தவைகளை நேரில் படிக்கையில் விறுவிறுப்பாக இருந்தாலும் ஒரு பெண்ணாக இருந்தால் அவள் காவல் துறையில் நீடித்து நிற்க முடியாது என்னும்படியான ஓர் எண்ணத்தை சுஜாதா இதில் ஏற்படுத்தி இருக்காரோ? ஆகவே அந்தப் பெண் தானாகவே ராஜினாமா செய்யும்படியான சூழ்நிலையை ஏற்படுத்தி சுஜாதா எழுதி இருக்கும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு வேளை இது அவருடைய ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறதோ என்றும் தோன்றியது. 

இன்னொரு கதையான பிவிஆரின் "அதிர்ஷ்ட தேவதை"யில் ரங்கன் என்னும் ஓர் அப்பாவிக்கு ரமணி என்னும் ஓர் வாலிபன் தற்செயலாக அறிமுகம் ஆகிப் பின்னர் உள்ளார்ந்த நட்புப் பாராட்டும்படி ஆகிறது. இந்த ரங்கனுக்கு எல்லாமே ரமணி தான். ரமணி சொல்படி தான் அவன் எல்லாமும் கேட்பான். அப்படிப்பட்ட ரங்கன் ரமணி பேச்சைக் கேட்காமல் செய்து கொண்ட கல்யாணமும், ரங்கனின் ஆசையால் அவன் அடுத்தடுத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவுக்குப் பணமும் வந்து சேரக் கடைசியில் ரமணியின் குடும்பமும்/தாத்தாவும், ரமணி மணந்து கொள்ளக் காத்திருக்கும் பெண்ணுமாகச் சேர்ந்து ரங்கனின் வாழ்க்கையைச் செப்பனிடுகிறார்கள். ஆனாலும் துரதிர்ஷ்டம் பிடித்த ரங்கனுக்கு நுரையீரல் வலுவிழந்து போக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல நேரிடுகிறது.  பணம் இல்லாதபோதெல்லாம் நன்றாக இருந்த ரங்கன் லட்சாதிபதி ஆனதும் அடிக்கடி மருத்துவமனை வாசம். பணத்தை அவனால் அனுபவிக்க முடியவில்லை.

இதற்கு நடுவில் ரமணியின் குடும்பச் சூழ்நிலை/அவன் தாத்தாவின் பாசம்/ரமணியின் நேர்மை/ அவன் காதல்/கடைசியில் வெகு காலத்துக்கும் பின்னர் நடந்த திருமணம்/ ரமணிக்கு ரங்கனின் திருமணப்பரிசு என்றெல்லாம் விவரித்து நேர்மைக்குக்கிடைத்த பலனாக ரமணியின் வாழ்க்கையை ஓர் உதாரணமாகக் காட்டி இருக்கார் பிவிஆர் அவர்கள். கதை முழுவதும் அநேகமாக உரையாடல்களிலேயே போனாலும் ஆங்காங்கே விவரணைகளும் வருகின்றன. சுவாரசியமாக இருந்தது கடைசி வரைக்கும். ரங்கனின் முடிவு வெகு விரைவில் ஏற்பட்டு விடும் என்பதில் ரமணிக்கு மட்டுமா வருத்தம்? நமக்கும் ஏற்படுகிறது. இரண்டு புத்தகங்களும் இணையம் வழி படித்ததால் எங்கே கிடைக்கும்/எப்போ எழுதினது/என்ன விலை என்பதெல்லாம் தெரியாது.

எங்கள் ப்ளாகில் பானுமதி சுஜாதாவின் ரிசப்ஷன் கதையின் முடிவு பற்றிக் கேட்டிருந்த கேள்விக்கு ஓரளவு சரியான பதிலைக் கொடுத்ததால் எனக்கு சுஜாதாவின் புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கப் போவதாகச் சொல்லி இருந்தார். நானும் ஏதோ விளையாட்டு என்று சும்மா இருந்துவிட்டேன். பின்னர் வாட்சப்பில் செய்தி கொடுத்துத் தொலைபேசியில் அழைத்துப் பேசி என் விலாசத்தை வாங்கிக் கொண்டு புத்தகத்தை அனுப்பி வைத்திருக்கிறார். நேற்று வந்து சேர்ந்தது.  சுஜாதாவின் "ப்ரியா" புத்தகம். குமுதத்தில் தொடராக வந்தப்போப் படிச்சிருக்கேன். அதை நம்ம ரங்க்ஸும் நினைவு கூர்ந்தார். பின்னர் திரைப்படமாக வந்தப்போவும் தொலைக்காட்சி தயவில் பார்த்தோம். படம் படு சொதப்பல். ஶ்ரீதேவியையும் ரஜினியையும் போட்டும் சோபிக்கவில்லை. இந்தப் புத்தகத்தை இன்னமும் மீள் வாசிப்புக்கு உட்படுத்தவில்லை. இனிமேல் தான் ஆரம்பிக்கணும். சில மாதங்களாகக் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்காமல் இணைய வழியே படித்து வந்தேன். இனி இந்தப் புத்தகத்தில் ஆரம்பிக்கணும். 

அநேகமாய்த் தலைப்பு சரியில்லைனு ஶ்ரீராம் சொல்லுவாரோ? அவரைக் கேட்டுத் தலைப்புப் போடலாம்னா இது நான் நேரடியாக எழுதிக் கொண்டு இருக்கேனே! இந்தத் தலைப்பே இருக்கட்டும் விடுங்க ஶ்ரீராம்!

Friday, October 15, 2021

சௌந்தர்ய லஹரி! 8! நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

 அம்பிகையின் பாத கமலங்களின் சக்தி எப்படிப்பட்டதெனில், மற்ற தெய்வங்கள் எல்லாம் தங்கள் திருவடிகளைச் சுட்டிக்காட்டி அபய வரத முத்திரை காட்டுகையில் அம்பிகையோ அதெல்லாம் இல்லாமலேயே தன்னிரு பாதங்களை இறுகப் பற்றிக்கொண்டவர்களை ஒரு நாளும் கைவிடுவதே இல்லை. நேரே தன்னில் அவர்களை ஐக்கியப்படுத்தி மோக்ஷத்தை அளிக்கிறாள். இந்த உலகம், ஈரேழு பதினாலு லோகங்கள் மற்றும் மற்ற தெய்வங்களின் சக்திகள் போன்ற எல்லா சக்தியும் அம்பிகையிடமிருந்தே வந்திருக்கையில் அவளுக்கெனத் தனியாக அபய வர ஹஸ்தங்கள் எதுக்கு என்கிறார் ஆசாரியார். அம்பிகையின் வெவ்வேறு வடிவங்களே மற்ற தெய்வங்கள் எல்லாம் என்றாலும், இங்கே அனைத்தும் அடங்கிய லலிதா திரிபுர சுந்தரியாக அம்பிகையைக் காண்கிறார் ஆசாரியார். அத்தகைய லலிதா திரிபுர சுந்தரி இவ்வுலகத்து மாந்தரெல்லாம் அடைக்கலம் புகும் புகலிடமாகவும் இருக்கிறாள். அவள் என்னைச் சரணடையுங்கள்; நான் உங்களை ரக்ஷிப்பேன்; என்றெல்லாம் அபயவர ஹஸ்தம் காட்டவேண்டும் என்பதே இல்லை. அவளை மனதில் தியானித்தாலே போதும். தன்னோடு சேர்த்துக் கொண்டு கேட்டதை வாரி வாரி வழங்குகிறாள். 

த்வ-தன்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண: 

த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா 

பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்

 சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள 

தேவெனப் புகழ அதில் நிமிர்ந்து நிகர் 

செப்புவார் அபய வரதமாம் 

பாவகத்து அபினயத்தோடு உற்ற கை 

பரப்பி என் பயம் ஒறுக்குமே யாவருக்கும் அஃதரிது நின் பதம் 

இரப்ப யாவையும் அளிக்கு மான் 

மூவருக்கும் ஒரு தாவரப் பொருள் என் 

மூலமே தழையு ஞாலமே. 

கவிராஜப் பண்டிதரின் தமிழாக்கம் 

ஸம்சார பயத்தைப் போக்கி மோக்ஷத்தை அளிக்கும் அபய முத்திரையைக் காட்டும் பிற தெய்வங்களைப் போலன்றித் தன் காலடியில் வந்து வணங்கினாலே மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவள் அம்பிகை. நாம் கேட்பதற்கும் அதிகமாகப் பலனைத் தருவாள். லலிதா திரிபுரசுந்தரிக்குக் கரங்களில் பாசாங்குசங்கள், புஷ்பபாணங்கள், கரும்பு வில் போன்றவற்றோடு காட்சி அளிப்பதால் அம்பாளுடைய கைகளால் தன்னைச் சரணடை என இடக்கை பாதங்களைச் சுட்டாமலும், வலக்கை மேல்நோக்கிக்காட்டாமலும் அவளுடைய பாதங்களே சரணம் செய்யத் தக்கவை என்பது இங்கே சூசகமாய்ச் சொல்லப் படுகிறது. பொதுவாகவே பெரியவர்களை நமஸ்கரிப்பது வழக்கம். யார் வீட்டிற்கானும் போனாலும் அங்கே வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் நமஸ்கரித்து ஆசிகளை வாங்கிக்கொள்வோம். இப்போதெல்லாம் இந்த வழக்கம் இல்லை எனினும் இன்னமும் சிலர் கடைப்பிடித்து வருகின்றனர். வீட்டுப் பெரியவர்களை வணங்கினாலே ஆசிகளும், வாழ்த்துகளும் கிடைக்கிறது. கீழே விழுந்து வணங்குவதன் மூலம், நாம் அனைத்திலும் சிறியோன் என்ற எண்ணம் தோன்றி விநயம் பிறக்கும். வீட்டின் பெரியவர்களை விழுந்து வணங்கிப் பழகினோமானால் நாளாவட்டத்தில் அம்பிகையின் பாதங்களைப் பூரணமாய்ப் பற்றிக்கொள்ளலாம். நாம், நம்முடைய, என்ற நமது ஆணவம் விலகவேண்டுமானால் பரிபூரண சரணாகதி தான் சிறந்தது. 

ஆனால் அம்பிகையோ மூத்தோர்களுக்கெல்லாம் மூத்தவள்! அபிராமி பட்டரும் கூட அம்பிகையை "மூத்தவளே" என ஒரு பாடலில் அழைக்கிறார். ஆதிமூலமான பராசக்தியை அனைத்தையும் இயக்கும் சக்தியை வணங்கினால் கிடைக்கும் பெறர்கரிய பேற்றைப் பற்றி எண்ணுகையிலேயே, அவள் நாமத்தைச் சொல்கையிலேயே மனம் ஆனந்த சாகரத்தில் மூழ்குகிறது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையையே லலிதா திரிபுரசுந்தரியாக வழிபடுகிறோம். அப்போதாவது நம் ஆணவத்தை எல்லாம் விட்டு விட்டு அம்மா, தாயே, நீயே சரணம், உன் பாதாரவிந்தங்களில் நமஸ்கரிக்கிறேன்; என்னை ஏற்றுக்கொண்டு நான் நல்வழிக்குத் திரும்பச்செய்வாய்! உன்னை என்றும் மறவாமல் இருக்கும்படி பண்ணுவாய்! என்று நம்மை மறந்து தேவியின் பாதங்களையே நினைத்துக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும். 

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே

 மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே! 

முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே 

பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே. 

இதையே அபிராமி பட்டர் கூறுகையில் சிந்தூரத்தை ஒத்த செந்நிறப்பெண்ணே! அம்பிகையை உதிக்கின்ற செங்கதிருக்கும் ஒப்பிட்டிருக்கிறார் பட்டர். இங்கேயோ சிந்தூரத்தைக் கூறுகிறார். அவ்வளவு செக்கச் சிவந்த மேனியை உடைய பெண்ணரசியே, நான் என்றும் வணங்கி தாள் பணிவது உன் பொன்னிறத் திருவடித் தாமரையில் தானே! தாமரை மலர்களை ஒத்த அந்தத் திருவடியில் விழுந்து வணங்குவதோடு அந்தத் திருவடியைத் தம் சிரசின் மேலும் தாங்குகிறார் பட்டர். அம்பிகையின் திருவடியைத் தம் சிரசின் மேல் தாங்கிக்கொண்டு, தன் மனதினுள்ளே அம்பிகையின் திருமந்திரமான சக்திப் பிரணவத்தை நினைத்த வண்ணம் துதிக்கிறார். அம்பிகையும் தானும் ஒன்றாகி தானே அம்பிகை என்னும் வண்ணம் இரண்டறக் கலந்து விடுகிறார் பட்டர். இவ்வளவும் போதாது என்று, அம்பிகையைத் துதிப்பதே தங்கள் வாழ்நாளின் பெரிய கடமை, பெரும்பேறு என எண்ணும் அடியார் கூட்டத்தோடும் சேர்ந்து அவர்கள் அம்பிகை குறித்த நூல்களைப் பாராயணம் செய்து வாழ்த்திப் பாடுகையில் தாமும் சேர்ந்து கொண்டு அம்பிகையை வாழ்த்திப் பாடுகிறார். இப்படிச் சொல், செயல், நினைவு என எல்லாமும் அம்பிகையாகவே இருக்கத் தான் செய்த புண்ணியம் தான் என்ன என வியந்து மகிழ்கிறார் பட்டர். அவரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அமாவாசை அன்று தாம் பெளர்ணமி என அம்பிகையின் முகதரிசனத்தைக் குறித்துச் சொன்னதை மன்னன் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தும், மன்னன் கட்டளை இட்டுவிட்டான். பெளர்ணமி பூரணச் சந்திரனைக் காட்டு என! என்ன செய்ய முடியும் அவரால்! அம்பிகையைச் சரணடைந்தார். உன் பக்தன் ஆன நான் சொல்வதும் பொய்யாகுமா அம்மா! என நம்பிக்கையோடு பாடுகிறார். அம்பிகையைப் பூரண நிலவை வரச் செய்தாகவேண்டிய கட்டாயமான சூழ்நிலை; அந்தக் கடுமையான நிலையிலும் கூட அவருக்கு அம்பிகையின் மேன்மையையும், அவள் கருணையையும், அவள் பாதார விந்தங்களின் பெருமையையும் மறக்க முடியாமல் அவற்றைக் குறித்துப்புகழ்ந்தே சொல்லுகிறார் எனில் என்றோ ஓர் நாள், ஒரு நிமிடம் நின்றுகொண்டு நாம் சொல்லுவதற்கே இவ்வளவு செய்கிறாளே அம்பிகை அதை என்னவென்று சொல்வது!

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

நவராத்திரி அனுபவங்கள்!


நவராத்திரி முடிஞ்சாச்சு. இந்தப் பதிவு நேற்று வந்திருக்கணும். நேற்றுப் பூராவும் கணினியில் வேலை செய்ய நேரம் கிடைக்கவில்லை. ஆகவே இன்று போடுகிறேன். இன்றோடு கொலு முடிந்து விடுகிறது. ஆனால் இந்தப் பதிவுகள்  இன்னமும் இருக்கின்றன. முடிந்தவரை போடுகிறேன்.

இந்த வருஷம் நவராத்திரிக்குக் கொலு வைக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனால் எப்படியானும் வைச்சுடணும்னு ஓர் உறுதியும் இருந்தது. படி கட்டி எல்லாம் வைக்கும் அளவுக்குப் பொம்மைகளும் இல்லை என்பதால் இருப்பனவற்றைச் சீராக அமைத்து வைத்து விட்டேன். பொம்மைகளைப் பெட்டியில் இருந்து எடுத்துத் துடைத்துக் கொடுத்தது நம்ம ரங்க்ஸ் தான். வரிசைப்படி வைத்தது நான்.  ஒரு மாதிரியாக இந்த ஒன்பது நாட்களை ஒப்பேற்றி விட்டேன். தினமும் ஒரு சுண்டல் கட்டாயமாய்ப் பண்ணிடுவேன். ஒரு நாளைக்குக் குணுக்குப் போட்டேன். இந்தப் பத்து நாட்களில் பலவிதமான அனுபவங்களும் கூட. வெற்றிலை, பாக்கு வாங்கிக்கொள்ள அழைத்தாலும் வராதவர்கள்! ஒரு நாள் வாங்கிக் கொண்டாச்சே தினம் தினம் வாங்கிக்கணுமா என்று சிலர்! தினமுமா சுண்டல் பண்ணுவாய் என்று கேட்டுக்கொண்டு சிலர்! ஒரு தரம் வெற்றிலை, பாக்குக் கொடுத்தாச்சு என்பதால் மற்ற ஒன்பது நாட்களும் அழைக்கவே அழைக்காத சிலர்! இப்படிப் பல்வேறு வேடிக்கையான மனிதர்கள். 

நான் தினம் தினம் அழைத்ததால் என்னைக் கண்டாலே ஓடி ஒளிந்த சிலரும் இவர்களில் அடக்கம். இந்தக் கொலுவுக்கு அழைப்பதிலும் சரி, வருவதிலும் சரி சென்னையை மிஞ்ச யாரும் இல்லை என்பது நன்கு புலனாயிற்று. அங்கே அம்பத்தூரில் நாங்க அனைவருமே ஒரே தெருக்காரர்கள் தான். வருஷா வருஷம் பார்க்கிற/பார்த்த கொலு தான்! என்றாலும் அழைத்தால் உடனே வருவார்கள். யாருக்கு முடிகிறதோ அவங்க தினம் வருவார்கள். இன்னும் சிலர் செவ்வாய், வெள்ளி தப்பாமல் வந்து வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டு செல்வார்கள். இங்கே மாதிரி கௌரவம் பார்த்தது இல்லை. ஏனெனில் நவராத்திரியில்வெற்றிலை, பாக்கு மஞ்சள் குங்குமம் கொடுப்பதே முக்கியம். அதோடு அம்பிகைக்குத் தினம் ஒரு சுண்டலும் நிவேதனம் செய்ய வேண்டும். காலையும் ஏதேனும் கலந்த சாதம், அம்பிகைக்குப் பிடித்தமான பாயசம் பண்ணி நிவேதனம் செய்ய வேண்டும். கொலுவை வைத்து விட்டுத் தினமுமா சுண்டல் எனக் கேட்டுக் கொண்டும், யாரையும் அழைக்காமல் ஏதோ ஒரு நாள் மட்டும் அழைத்துக் கொடுத்துவிட்டுப் போதும் என இருந்தால் அது என்னமோ எனக்கு மனதுக்குக் கேட்கவில்லை. கொலுவை வைத்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டும் சிலர் போகின்றனர். :( அதுவும் சரியில்லை. 

முன்னெல்லாம் சென்னையில் தபாலில் கொலுவுக்கு அழைப்பதைப் பற்றி வேடிக்கையாகப் பேசிச் சிரித்திருக்கிறோம். ஆனால் அது தொலைவில் இருந்தவர்களுக்கான அழைப்பு என்பது பின்னால் புரிந்தது. இப்போதெல்லாம் என்னிக்கானும் ஒரு நாள் மட்டும் அழைத்து மஞ்சள், குங்குமம் கொடுத்துவிட்டு மற்ற நாட்களில் யாரையும் கூப்பிடாமல் இருப்பது என்னவோ மாதிரி இருக்கிறது.  எப்படியோ இந்த வருஷம் ஓட்டியாச்சு. இனி பிழைத்துக் கிடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்னடா அம்பிகை பற்றிய பதிவோடு சேர்த்துப் போட்டுட்டேன்னு நினைக்காதீங்க! மனசில் தோன்றியதை உடனே எழுதிட்டேன். :) மேலும் தனியாப் போட்டிருந்தால் அதான் போணி ஆகும். அம்பிகை குறித்த பதிவுக்கு யாரும் வரமாட்டாங்க! :))))

Wednesday, October 13, 2021

சௌந்தர்ய லஹரி 7! நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

 அம்பிகையின் பாதாரவிந்தங்களைச் சரணடைவது குறித்துப்பார்த்தோம். அவள் பாத தூளியால் சிருஷ்டிகளும், வையத்தைக் காப்பதும் , அழிப்பதும் என அனைத்துத் தொழில்களும் சிறப்பாக நடைபெற்று வருவதையும் பார்த்தோம். அந்தப் பாததூளி எத்தகைய மஹிமை வாய்ந்தது எனில் அனைவருக்கும் முக்தியைக் கொடுக்க வல்லது. நம் மனத்தின் இருளைப் போக்கி நம்பிக்கையாகிய சூரியனைப் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை கொண்டது.

 அவித்யானா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகூரீ

 ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ

 தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதெள்

 நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வரஹஸ்ய பவதி 

அறிவிலர்க்ககு இதய திமிரம் மீரும்

 அளவற்ற ஆதவர் அளப்பிலா 

எறி-கதி-ப்ரபை குழைத்து இழைத்தனைய

தீ இயாமளை நினைப்பிலார் 

செறி மதிக்-கிணரின் ஒழுகு தேன் அருவி 

தெறுகலிக்கு அருள் மணிக்குழாம் 

பிறவி மைக்கடல் விழாது எடுப்பது ஒரு 

பெருவராக-வெண் மருப்பு அரோ. 

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் 

அவித்யா என்பது அக்ஞானம் எனப்படும் மூடத்தனம், மடமை என்றும் சொல்லலாம். நம்முள்ளே நாம் தான் அனைத்தும் செய்கிறோம் என்றதொரு எண்ணம் எப்போதும் இருந்து வருகிறது. இந்த “நான்” என்பது நம்முள்ளே உறைந்து எப்போதும் கோயில் கொண்டிருக்கும் ஜோதிரூபமான ஆன்மாவை நம்மால் உணரமுடியாதபடிக்குச் செய்துவிடுகிறது. மனமென்னும் காட்டிலே நினைவுகளென்னும் விருக்ஷங்கள், எண்ணற்றவை முளைத்துப் படர்ந்து மனம் முழுதையும் இருட்டாக்கி ஞான சூரியனின் கிரணங்கள் சிறிதளவு கூட உள்ளே வராமல் செய்து இருட்டாக்கி விடுகிறது. அந்தக் காட்டின் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, ஒரு சின்ன அகலை ஏற்றுவது போல் அம்பாளின் பாத கமலங்களை இறுகப் பற்ற வேண்டும் என்றொரு எண்ணமாகிய அகலை ஏற்றிக்கொண்டு இருந்தால், நாளடைவில் அந்த அகலின் வெளிச்சம் கோடி சூரியப் பிரகாசமாகி நமக்கு ஜோதிமயமான ஆன்மாவுடன் ஒன்றிப் போகச் செய்யும். இந்த அக்ஞானம் சாமானிய மனிதருக்கு மட்டுமல்லாமல், புத்திமான்கள், வித்தை தெரிந்த அதிமேதாவிகள், கெட்டிக்காரர்கள் என அனைவரையுமே பீடித்திருக்கும். இவர்களைப் பீடித்திருக்கும் அக்ஞானம் அகந்தையாகும். இன்னும் சிலருக்கு என்ன சொன்னாலும் தெரியாது; தானாயும் தெரிந்து கொள்ள மாட்டார்கள்; சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களை ஜடம் என்றே சொல்லலாம். 

அப்படிப்பட்டவர்களுக்கு புத்தியின் தேஜஸ் அதிகரிக்கவும் அம்பாளின் பாத தூளி பயன்படும். அடுத்தது தரித்திரம் பிடிப்பது; யாருக்குத் தான் செல்வம் சேர்க்க ஆசையில்லை. செல்வம் சேர்ப்பதில் அடங்கா ஆசையும் உண்டு; அதே சமயம் செல்வந்தர்களைக் கண்டாலே வெறுப்பவர்களும் உண்டு. ஆனாலும் நினைத்ததை நடத்தித் தரும் சிந்தாமணி என்னும் மணியானது தெய்வாம்சமுள்ள மணியானது கிடைத்தால் எப்படி இருக்கும்?? நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் தந்துவிடுமே சிந்தாமணி. அப்படிப் பட்ட சிந்தாமணி தரும் செல்வத்தை எல்லாம் அம்பிகையின் பாததூளி தந்துவிடும்.

கவனிக்க; இங்கே அனைத்துச் செல்வங்களும் கிடைத்துவிடும் என்று வருவதால் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் எனப் பொருள் கொள்வதை விட, இம்மாதிரி அம்பாளின் நாமத்தைப் பாடி அவள் பாததூளியைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டால், நமக்குச் சிந்தாமணியின் மூலம் கிடைக்கும் பெளதிக சம்பந்தமான சொத்துக்களை விட மேன்மையான பெரும் செல்வம் கிட்டும் என்பதே உள்ளார்ந்த பொருளாகும். இதைக் கடைசி வரி விளக்குகிறது. ஹிரண்யாக்ஷன் அபகரித்துக்கொண்ட பூமிதேவியை மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் செய்து தன் கோரைப்பற்களில் தூக்கிக்கொண்டு வருவார். பாதாளத்துள்ளே இருந்த பூமிதேவியை எவ்வாறு விஷ்ணு அவ்விதம் மேலே தூக்கி வந்து கொண்டுசேர்த்தாரோ அவ்வாறே அம்பிகையின் பாததூளியானது இந்த சம்சார சாகரத்தில அழுந்தி மூழ்கி, மூச்சுத் திணறும் நம்மையும் தன் கருணா சாகரத்தில் கொண்டு சேர்த்து நம்மை ஆனந்தக் கடலில் வாசம் செய்யும்படி செய்யும். 

தேவி மஹாத்மியத்தில் மது, கைடபர் என்னும் இரு அரக்கர்களை மஹாவிஷ்ணு வதம் செய்வார். இந்த இரு அரக்கர்களும் அடங்கா ஆசைக்கும், அடங்கா வெறுப்புக்கும் உதாரணமாவார்கள். இவற்றை வெல்வதையே மது, கைடபர்களின் அழிவு சுட்டுகிறது. நம் மனதில் உள்ள ஆசையையும், வெறுப்பையும் மற்ற எதிர்மறைச் சிந்தனைகளையும் அழித்து ஒழிப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. நம்மை நாமே பூரணமாக அறிந்து கொண்டு, நம்மிடம் உள்ள “நான்” என்னும் சுயப் பெருமையை ஒழித்து நம்மை முழுதும் கடவுளின் பாதத்தில் ஐக்கியமடைய வைப்பதே நவராத்திரியின் முக்கியத் தத்துவம் ஆகும். நம்மில் பலரும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம்; இன்று சந்தோஷமாக இருந்தால் நாளை எழுந்திருக்கும்போதே வருத்தம் தாங்காது. இன்னொரு நாள் கோபம், எரிச்சல் வரும். ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இருக்கட்டும். ஏனென்றே சொல்லமுடியாத கோபமும் வரும். இதற்குக் காரணம் நம் முன்னோர்கள் ஒருபக்கம் எனில் இன்னொரு பக்கம் நம் முன் ஜென்மவினையும் ஆகும். இது குறித்து நாளை பார்ப்போமா! 

மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருளிலேயே அபிராமி பட்டர் கூறி இருப்பது என்னவென்றால்,

 நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;

 என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின் 

ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து 

அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

 ரிஷி, முனிவர்களால் உணர்ந்து அறியப்பட்டு ஓதப்படுவதான வேதத்தின் பொருளாக இருப்பவளே அம்பிகைதான் என்கிறார் பட்டர். அவள் வேதப் பொருள் மட்டுமல்லாமல் அதன் பொருள் உணர்ந்து ஓதுவோர்க்கு அருளுபவளும் ஆவாள். எல்லாம் வல்ல அந்த ஈசனையே இயக்கும் மாபெரும் சக்தியான அம்பிகையானவள் இமவானுக்கு நன்மை செய்யும்பொருட்டு அவன் மகளாகப்பிறந்தாள். அழியாத முத்தியைத் தன்னை வணங்குபவர்களுக்கு அளித்து வருகிறாள்; அத்தகைய அம்பிகையை நான் நின்று கொண்டிருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், அமர்ந்து கொண்டிருந்தாலும், கீழே கிடந்தாலும் எந்நேரமும் அவளையன்றி வேறொருவரை நினைப்பது என்னால் கூடுமோ! அவள் மலர்ச்சேவடியைத் தவிர வேறொன்றையும் நான் வணங்குவேனோ! அம்பிகையின் திருவடித்தாமரைக்கும், அவள் பாத தூளிகளுக்கும் மோக்ஷம் தரும் வல்லமை உள்ளது என்பதே இதன் உட்கருத்தாகும்.




Tuesday, October 12, 2021

சௌந்தர்ய லஹரி 6! நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என அனைத்துத் தொழில்களையும் புரிபவள் ஆதிபராசக்தியே என்றே கூறுவார்கள். சக்தியிலிருந்தே பிரபஞ்சம் உருவாகிறது. அவ்வளவு ஏன்! பரப்ரம்மம் ஆன சிவனும் அவள் செயலாலேயே தனது அசலத்தில் இருந்து அசைந்து கொடுத்து பிரபஞ்சத் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறான். பரிபூரணமாக இருக்கும் ப்ரம்மத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தி அவளே. அத்தனை சக்தி வாய்ந்த பராசக்திக்கு நன்றி கூறும் வகையில் எடுக்கப்படும் விழாவாகிய இந்த நவராத்திரியில் அனைத்துப் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கான பண்டிகைகளிலேயே மிகவும் விமரிசையாகப் பத்து நாட்கள் கொண்டாடப் படுவது இந்த சாரதா நவராத்திரியே. நவராத்திரி என்றால் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய இரவுகளை ஒரு பக்கம் சுட்டினாலும், மற்றொரு பக்கம் ஒன்பது இரவுகள் என்றும் பொருளைக் கொடுக்கும். எப்போதுமே உயிருள்ள ஜீவன்கள் அனைத்துக்குமே இரவில் அமைதி கிட்டுகிறது. நம் அன்றாட வேலைகளைப் பகலில் செய்தாலும் இரவிலேயே தூங்கி ஓய்வெடுத்து அமைதியைப் பெறுகிறோம். இதற்கு இன்றைய அவசர நாட்களில் பொருளில்லை என்றாலும் பொதுவானதொரு நியதி இரவிலே உடல் ஓய்வெடுக்கும் வேளையில் மனமும், மூளையும் சேர்ந்து ஓய்வெடுக்கும் என்பதே.

பிறந்த குழந்தையானது எவ்வாறு தாயின் கர்ப்பத்தில் ஒன்பது மாதங்கள் தங்கிப் பின்னர் வெளிவருகிறதோ அதைப் போல் இந்த ஒன்பது நாட்களும் அம்பாளிடம் பக்தி செலுத்தி அந்தக் கர்ப்பவாசத்தில் மூழ்கி இருக்கிறோம். நம் மனதிலுள்ள துர் எண்ணங்கள் மறைந்து நல்லெண்ணங்கள் தலை தூக்கும். புதியதோர் ஜீவசக்தி உடலில் பாய்ந்தாற்போல் இருக்கும். ஆகவே இந்த நவராத்திரியை நாம் கொண்டாடுவது என்பது நம் எண்ணங்களையும், உடலையும் சேர்த்துப் புதுப்பித்துக்கொள்ளவே ஆகும். இது நவராத்திரியில் அம்பிகையைத் தியானிப்பதற்கு ஒரு காரணம் ஆகும். முந்தின ஸ்லோகத்தில் பூர்வபுண்ணியம் இருந்தாலே அம்பிகை வழிபாட்டில் நம்மால் ஈடுபடமுடியும் என சங்கரர் மட்டுமின்றி பட்டரும் கூறுவதைப் பார்த்தோம். அடுத்த ஸ்லோகம் அவளுடைய பாததூளி மஹிமையாலேயே அனைத்துத் தொழில்களும் நடைபெறுவது குறித்து ஆதிசங்கரர் சொல்கிறார்.

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம் 

விரிஞ்சி:ஸஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்

வஹத்யேனம் செளரி:கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம் 

ஹர:ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்

த₁னீயாம்ஸம் பா₁ம்ʼஸும்ʼ த₁வ ச₁ரண -ப₁ன்கே₃ருஹ-ப₄வம்ʼ

விரிஞ்சி₁: ஸஞ்சி₁ன்வன் விரச₁யதி₁ லோகா₁ -நவிக₁லம்ʼ 

வஹத்₁யேனம்ʼ ஶௌரி: க₁த₂மபி₁ ஸஹஸ்ரேண ஶிரஸாம்ʼ 

ஹர: ஸங்க்₁ஷுத்₃யைனம்ʼ ப₃ஜ₁தி₁ ப₄ஸிதோ₁த்₃து₄லன - விதி₄ம் 

பாத தாமரையி னுள் உண்டு கட்பரம

 வணுவினில் பலவியற்றினால் 

வேத நான்முகன் விதிக்க வேறுபடு 

விரிதலைப் புவனம் அடைய மான்

 மூதரா அடி எடுத்த அனந்த முது 

கண-பணா அடவி பரிப்ப மேல் 

நாதனார் பொடி படுத்து நீறணியின் 

நாம் உரைத்தென் அவள் பான்மையே 

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

அசையாத பிரம்மமாக இருந்த சிவனை ஞானஸ்வரூபமாகத் தெரிந்து கொள்ள வைத்தவள் அம்பிகை. அவனை வெளியே இருந்து எல்லாம் அவள் அசைக்கவில்லை. அவனுள்ளே சக்தியாக ஐக்கியமடைந்திருப்பவள் இங்கே எண்ணமே இல்லாமல் இருந்த ஞான ஸ்வரூபத்திற்கு “நான்” என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அசைத்தாள். இது இவ்வுலகின் முதல் அசைவு எனலாம். ஆட்டமான ஆட்டம்! இதுவே ஸ்ருஷ்டி மூலமாகவும் ஆனது. உள்ளுக்குள்ளே குமுறிக்கொண்டிருந்த ஒரு அசைவு தானே அதிர்வு தானே முதல் முதல் வெளிப்பட்டது! இது தான் big bang எனப்படும் பெருவெடிப்பு என்று அறிவியல் கூறுவதாய்ப் பரமாசாரியார்(காஞ்சி) கருதுகிறார். பரப்ரஹ்மத்தின் அதிர்வே சப்த ரூபமான வேதமந்திரங்களாகி அதிலிருந்தே ஸ்தூல வஸ்துக்கள் அனைத்தும் உண்டானதாய்ச் சொல்கிறார். இதைத் தான் ஸ்பந்தனம் எனப்படும் அசைவு. இத்தகைய அசைவை உண்டாக்கின அம்பிகை இதன் மூலம் ஐந்தொழில்களையும் நடத்துகிறாள். பிரம்மா, விஷ்ணு , ருத்ரன் ஆகியோரின் உதவியோடு. அவர்கள் மூவரும் முறையே படைத்து, காத்து அழித்தல் தொழிலைச் செய்து வருகின்றனர்.

பிரம்மா அன்னையின் திருவடித்தாமரைகளிலுள்ள மிக மிக நுட்பமான துகள்களே அந்த அதிர்வின் மூலம் வந்ததோ என்னும்படி அவற்றைச் சேகரித்தே இவ்வுலகை சிருஷ்டிக்கின்றாராம். ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேஷன் உருவில் விஷ்ணுவும் இவ்வுலகை மட்டும் தன் தலையில் தாங்காமல் அம்பிகையின் அந்தப் பாததூளியையும் சேர்த்தே தாங்குகிறான். ருத்ரனோ அவற்றை விபூதியாகத் தன் உடலில் பூசிக்கொள்கிறார். இவ்விதம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவருமே அம்பிகையைத் தியானிக்கின்றனர் என்கிறார் ஆசாரியர். இதையே அபிராமி பட்டர், 

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும், 

காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு 

சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்

நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே. 

கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே 

என விளிக்கிறார். தெய்வீக மணம் கமழும் கடம்பமலரைத் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் அணங்காகிய அம்பிகையை ஏத்தும் பல அடியவர்களோடு இந்த ஈரேழு உலகினையும் படைத்து, காத்து, அழித்து என முத்தொழில்களையும் செய்து வரும் மும்மூர்த்திகள் கூட தெய்வ மணம் பொருந்திய உன் திருவடிகளை வணங்கி, உன்னையும் வணங்கித் துதிக்கின்றனர். அத்தகைய பெருமை வாய்ந்த உன் திருவடிகளைப் போற்றிப் புகழும் அளவுக்கு என்னால் என்ன பாடல் புனைய முடியும்! இருந்தும் என் பாடலையும் நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாயே! அம்மா, அபிராமி, எளியோனாகிய என் நாவில் இருந்து வெளிவரும் அர்த்தமற்ற சொற்களால் பாடப்படும் பாமாலையையும் நகைப்புக்குரியதாய்க் கருதாமல் ஏற்றுக்கொள்கிறாய் அல்லவா!




Monday, October 11, 2021

சௌந்தர்ய லஹரி 5! நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

வழக்கம் போலப் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு இதை ஆரம்பிக்கிறேன். ஏதோ எனக்குத் தெரிந்ததை நான் புரிந்து கொண்டதை மட்டும் இங்கே சொல்கிறேன். குற்றம், குறைகளைப் பொறுத்தருள வேண்டும். நம் அனைவருக்கும் குருவாக இருந்து இந்த ஜகத்துக்கே குருவாக விளங்கிய ஆசாரியருக்கு நம்முடைய நமஸ்காரங்களைச் சமர்ப்பிப்போம். 

ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா கதி:ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனாத்யாஹூதி-விதி: ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மத்மார்ப்பண-த்ருசா ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் 

நம்முடைய ஆன்மாவையே இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பணம் செய்கிறோம். இதுவே அதி உந்நதமானதொரு நிலை. ஆனால் எல்லாராலும் இது இயலுமா? என்றாலும் அத்தகையதொரு முயற்சியை அம்பிகை வழிபாட்டின் மூலம் தொடங்க வேண்டும். இந்த நிலையால் இந்த சமர்ப்பணத்தால் நம்முடைய ஒவ்வொரு பேச்சுமே அம்பிகைக்குரிய ஜபமாகவும், நாம் செய்யும் அனைத்துத் தொழில்களும் அவளுக்குச் சமர்ப்பணம் செய்யும் முத்திரைகளின் விளக்கமாயும், நம் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு நடையும் அம்பாளுக்குச் செய்யப் படும் பிரதக்ஷிணமாகவும், நாம் உட்கொள்ளும் உணவு, போன்றவை ஹோமத்தின் ஆஹுதியாகவும், நாம் ஓய்வெடுக்கப் படுப்பது அவளுக்குச் செய்யும் நமஸ்காரமாகவும், இன்னும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு செய்கையும் அம்பிகைக்குச் சமர்ப்பிக்கிறோம். எப்போதும் இந்த நினைப்போடு இருந்தோமானால் நம்மைத் துன்பங்கள் அண்டாது. அவமானங்கள் தகிக்காது; துயரங்கள் சூழாது. அனைத்தும் அவள் செயலே என நினைப்போம்.

இது சமர்ப்பண ஸ்லோகத்தின் பொருள். 

அடுத்து ஆநந்த லஹரி முதல் ஸ்லோகம் ஆரம்பம்: 

சிவ:சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் 

ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி 

அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி 

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி


 ஶிவ: ஶக்₁த்₁யா யுக்₁தோ₂ யதி₃ ப₄வதி₁ ஶக்₁த₁: ப்₁ரப₄விது₁ம்ʼ

 ந சே₁தே₁வம்ʼ தே₃வோ ந க₂லு கு₁ஶல:ஸ்ப₁ந்தி₃து₂-மபி₁ 

அத₁ஸ்த்₁வா -மாராத்₄யாம்ʼ ஹரி -ஹர - விரின்சா₁தி₃பி₄ -ரபி₁

 ப்₁ரணந்து₁ம்ʼ ஸ்தோ₁து₁ம்ʼ வா க₁த₂-மக்₁ருத₁பு₁ண்ய: ப்₁ரப₄வதி₁ 

சிவம் எனும் பொருளும் ஆதி சத்தியொடு 

சேரின் எத்தொழிலும் வல்லதாம் 

இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது

அரிதெனா மறை இரைக்குமாம்

 நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில்

 நடத்தி யாவரும் வழுத்து தாள்

 அவனியின்கண் ஒரு தவம் இலார் பணியல்

 ஆவதோ பரவல் ஆவதோ 

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் 

கொடுத்து உதவியது அப்பாதுரை! 

சிவ சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. சிவனோடு சக்தி சேர்ந்தாலே சிவன் சீவன் ஆகிறான். சக்தி இல்லை எனில் சிவன் பயனற்று சவம் ஆவான். சிவனுக்கும் மங்களத்தைச் செய்து அவனை விட்டுப் பிரியாத சக்தி நமக்கும் மங்களத்தை உண்டாக்கட்டும். தக்ஷிணாமூர்த்தியாக யோகநிலையில் இருக்கையில் ஈசன் தன் சக்தியை உள்ளூர அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறான். அந்த சித்சக்தி தான் அம்பாள். அவள் உள்ளே அடங்கிக்கிடக்காமல் வெளியே வந்தால் தான் உலகம் இயங்கும். எந்தக் காரியமுமே பண்ணாமல் ப்ரம்மமாய் சிவன் அமர்ந்திருந்தால் சிருஷ்டிகள் நடைபெறுவது எங்கனம்! சித்சக்தி சேர்ந்தாலேயே பிரபஞ்சம் நடைபெறும்.

ஆகையால் சகலத்தையும் நடத்தும் சக்தியே அம்பாள் ஸ்வரூபம். அவளே அனைத்தையும் படைத்துக்காத்து ரக்ஷிக்கிறாள். மும்மூர்த்திகள் மூலமாக அவள் இந்தத் தொழிலைச் செய்து வருவதாக ஐதீகம்.

இதையே அபிராமி பட்டரும், 

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர் 

கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,

 மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும் 

துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. 

அபிராமி அந்தாதி 7 

இப்படி விஷ்ணு, பிரம்மா, ருத்ரன் மூவராலும் அம்பிகை வழிபடப் படுகிறாள். இவ்வளவு பெருமை வாய்ந்த அம்பிகையை நாமும் வழிபடுவதெனில் இது முன் ஜென்மப் புண்ணியம் அன்றி வேறென்ன இருக்க முடியும். பிறவிப் பெருங்கடலாகிய மாபெரும் சுழலில் சிக்கித் தயிர் கடையும் மத்தைப் போல் நாம் அலையாமல் நம்மைத் தடுத்தாட்கொள்ள அந்தச் சுழலில் இருந்து நம்மை விடுவிக்க அம்பிகையின் சேவடிகளைப் பற்றினாலே இயலும். நம்மால் அதாவது நம் போன்ற சாமானியர்களால் நிர்குணமான பிரம்மத்தை வழிபடுவது என்பது அவ்வளவு எளிதில் முடியாத ஒன்று. புரிந்து கொள்ளவும் இயலாது. அதனால் ரூபஸ்வரூபமாக அம்பாளை ஸ்தாபித்து வழிபட்டு வந்தோமானால் நம் மனதை அந்த அம்பாளின் ரூபத்தில், பக்தி மார்க்கத்தில் திருப்பினால் அது தானாகவே நம்மை ஞான மார்க்கத்துக்கு அழைத்துச் செல்லும். நம்முடைய தேவதை ஆராதனைகளின் தாத்பரியமும் இதுவே. 

சிவனை விட்டு ஒரு கணமும் பிரியாத இந்தச் சக்தியை நாம் வழிபட்டு வந்தால் ஸர்வ விக்னங்களும் நாசம் அடைந்து, நாம் எடுக்கும் அனைத்துக் காரியங்களும் ஸித்தி அடையும் என்பது ஆன்றோர் வாக்கு.

இதை அபிராமி பட்டர், 

கண்ணியதுன் புகழ் கற்பதுன் நாமங்கசிந்து பத்தி 

பண்ணியதுன்னிரு பாதாம்புயத்திற் பகலிரவா

நண்ணியதுன்னை நயந்தோர் வையத்து நான் முன்செய்த 

புண்ணியமேது என்னம்மே புவியேழையும் பூத்தவளே. 

அபிராமி அந்தாதி 12. 

என்று கூறுகிறார். 

ஊனும், உடலும் உருக உருக, அபிராமி அன்னையின் திருவருள் வேண்டிப் பாடிய இந்த அந்தாதித் தொகுப்பில் மேற்கண்ட பாடலுக்குப் பொருள் காண்கையில்,  அபிராமி பட்டர் 

புவி ஏழையும் பெற்றெடுத்த அம்மா, என் தாயே, அபிராமி அன்னையே, உன் புகழையே நான் நினைந்து நினைந்து பாடி வருகிறேன், உன் திருநாமம் தவிர மற்ற நாமங்களைக் கற்றேன் அல்ல; எப்போதும், எந்த நேரமும் உன்னையே நினைந்து பக்தி செய்தும் வருகிறேன். அம்மா, உன்னை நினைத்துக்கொண்டே இருந்ததால் அன்றோ, உன் பூரண நிலவு போன்ற முகத்தை நினைத்த காரணத்தால் அன்றோ அமாவாசையைப் பெளர்ணமி எனக் கூறினேன். இப்படி நான் என்னையே மறக்கும் அளவுக்கு பக்தி செய்து வந்திருக்கிறேன் என்கிறார் பட்டர். பகலும், இரவும் உன்னை நெருங்கி எந்நேரமும் உன் புகழ் பாடும் அடியார் கூட்டத்தை அல்லவோ நான் எப்போதும் நாடுகிறேன். இவை எல்லாம் உன் திருவருளால் அன்றோ நடைபெறுகிறது! என் தாயே, நான் முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பிறவியில் எனக்கு இவை எல்லாம் கிடைக்கப் பண்ணி இருக்கிறாய்.

Sunday, October 10, 2021

சௌந்தர்ய லஹரி 4! நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

 பல நாட்களாய் எழுதணும்னு நினைத்த ஒரு விஷயம் தான் செளந்தர்ய லஹரி. ஆனால் நான் அதை ஆழ்ந்து படிச்சதில்லை. ஆகவே தயக்கம் இருந்தது. இப்போ ஒரு குழும விவாதத்தில் திவாகர் திராவிட சிசு பற்றிக் கேட்க, நான் செளந்தர்ய லஹரியை எடுத்துக்காட்ட, திவாகர் அதை விபரமாக எழுதச் சொன்னார். அந்த ஒரு பதிவு தான், அத்தோடு முடிந்தது என நினைத்திருந்த சமயம் அதைப் படித்த பின்னர் ஜெயஸ்ரீ இந்த நவராத்திரிக்கா என்று கேட்க, அட, இது தோன்றவே இல்லையே என நினைத்தேன். முடிந்த வரை பார்க்கலாம் என்று எழுத ஆரம்பித்திருக்கிறேன். தீராத மன வேதனையும், அதனால் ஏற்படும் உடல் கோளாறுகளிலும் கவனம் செல்லாமல், மனம் திசை திருப்பப்பட்டு ஆறுதல் ஏற்படும் என்பதும் இன்னொரு காரணம். ஆக என் சொந்த லாபத்திற்காக நான் செய்யும் இந்த வேலையைப் புகழ்ந்து பின்னூட்டம் போடுவது சரியாய் இருக்காது. அம்பாளையே போற்றி வழிபடுவோம். அம்பாளே கதி என அவள் பாதத்தை இறுகப் பிடித்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. *************************************************************************************



 நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. பெண்ணைத் தெய்வமாய்ப் போற்றும் நாடு நம் நாடு. பெண்ணுரிமை பேசுவோர் இதை அடிமைத் தனம் எனக் கூறினாலும் இன்றளவும் அது மாறவில்லை என்றே சொல்லலாம். சக்தி உபாசகன் ஆன பாரதியும் சக்தி வழிபாட்டிலும், காளியை வணங்குவதிலும் காட்டிய ஈடுபாடு நாம் அறிவோம். காளியே அனைத்திலும் நிலைத்து நின்று இருக்கிறாள் என்பதை அவன்

 யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய்; 

தீது நன்மையெல்லாம்-காளி தெய்வ லீலையன்றோ" 

என்ற பாடலின் மூலம் காட்டுகிறான். மேலும் பாடலின் கடைசியில் காளியைச் சரணடைந்து அன்பு செலுத்தினால் அவளும் அனைத்தையும் தருகிறாள் என்றும் உறுதிபடச் சொல்கின்றான்.

 அன்பு தந்துவிட்டாய்-காளி-காளி

 ஆண்மை தந்துவிட்டாய் 

துன்பம் நீக்கிவிட்டாய்- 

காளி துயரமழித்து விட்டாய்! 

என்று காளியைச் சரணடைந்தால் அனைத்துத் துன்பங்களும் நீங்கும் எனக் கூறுகிறான். இது உண்மை என்பதையும் அறிவோமல்லவா! அன்னையின் பாதங்களைச் சரணடைந்தால் அவளே கதி என இறுகப் பற்றிக்கொண்டு விட்டால் அந்தக் குழந்தையை அவள் எட்டியா உதைப்பாள். இந்த எண்ணங்களோடு தெய்வத்தின் குரல் புத்தகத்தில் செளந்தர்ய லஹரி விளக்கங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

எல்லாவற்றுக்கும் மேலே ஆச்சரியவசமாக நான் பிரித்த பக்கத்திலும் அம்பாளின் காலடிகளைப் பிடித்துக்கொண்டு கதறுவதையே பரமாசாரியாரும் கூறி உள்ளார். இந்த மனம் பல விதங்களிலும் வெட்கம் அடைந்து, பலராலும் துக்கம் அடைந்து, அதனால் அவமானம் அடைந்து அழுகிறது. துடிக்கிறது. ஆனால் நாம் அப்போதாவது அம்பாளைச் சரணடைய வேண்டாமா! மாட்டோம். உலகாயுத விஷயங்களில் மூழ்கி, அதிலேயே கவனமாக நமக்கு ஏன் இப்படி ஒரு கதி ஏற்பட்டது என்றெல்லாம் யோசிப்போம். அதன் பின்னராவது புத்தி வருமா என்றால் வராது. இவ்வுலகத்தை நாமா உண்டாக்கினோம்? எல்லாமே நம்மால் தான் என்பது போல் ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு மேலும் மேலும் மனம் புழுங்குவோம். கோபம், ஆத்திரம், அசூயை, எரிச்சல் எல்லாம் ஏற்படும். கொஞ்சம் யோசித்தால், சூரிய, சந்திரரை, மலையை, மரம், செடிகொடிகளை, புழுக்களை, பூச்சிகளை, விலங்குகளை, பறவைகளை எது நம்மால் ஏற்பட்டது! எதுவும் இல்லை. நாமே அவள் சிருஷ்டி. நம் மனத்தை நம்மால் அடக்க முடியாமல் தவிக்கையில் இது நம்மால் இயலக்கூடிய ஒன்றல்ல, இதுவும் அம்பிகையின் மாயை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை அடக்க வல்லது தேவியின் திருநாமமே என்பதைப் புரிந்து கொண்டால் அவளே கதி எனச் சரணடைந்தால் அப்படி நாம் சரணடைவதும் அவள் அனுகிரஹத்தாலேயே என்பதைப் புரிந்து கொண்டால் மனம் என்பது ஒன்று இருப்பதே தெரியாமல் உடல் இருப்பதும் தெரியாமல் பக்திப் பரவசத்தில் மூழ்கி விடுவோம். ஆனால் எங்கே! அப்போதும் நாம் நம்மைக் குறித்தே தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். 

ஆனால் அம்பாள் அனைத்தையும் மன்னிப்பாள். தாய் எங்காவது தன் குழந்தையிடம் கோபமாய் நடந்து கொள்வாளா?? அப்படிக் கோபமாய் இருந்தால் அது நம் நன்மைக்கே தான் இருக்குமே அன்றி, சும்மாவானும் அம்மா கோபிக்க மாட்டாள் இல்லையா?? அதே போல் தான் அம்பாள் நமக்குத் தரும் கஷ்ட, நஷ்டங்கள் அனைத்துமே நம் நன்மைக்காகவே. நம்மைப் புடம் போட்டு நம் மனதைத் திடம் ஆக்கித் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தானும் ஆனந்தித்து, நம்மையும் ஆனந்தமாக இருக்கப் பண்ணுவதற்காகவே அனைத்தும் நடக்கின்றன. அன்னையைத் தொடர்ந்து வழிபடுவோர் நாளடைவில் தாம் அவளது குழந்தை என்ற மனோபாவம் தோன்ற ஆரம்பித்து ஒரு குழந்தையைப் போலவே நிர்மலமான மனத்தைப்பெறுவார்கள். குழந்தையாகவே மாறி, தேவி ஒருத்தியே அனைவருக்கும் தாய் என்ற எண்ணம் மேலிட்டு இருக்கும். பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அன்னை வடிவிலேயே பார்க்க ஆரம்பிப்பார்கள். 

நம் நாட்டில் தெய்வ வழிபாடு, அதிலும் பெண் தெய்வ வழிபாடு தொன்று தொட்டு, எப்போது எனத் தெரியாத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பழையோள் எனவும், ஐயை எனவும் போற்றித் துதித்து வந்திருக்கின்றனர். நம் தமிழ் மூதாட்டியான ஒளவையோ “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்கிறாள். மாணிக்கவாசகரோ தம் சிவ புராணத்தில், “தாயிற்சிறந்த தயாவான தத்துவனே!” எனவும், பிடித்த பத்துக்களில் “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே” எனவும் ஈசனுக்கும் மாத்ருபாவத்தை ஏற்றிப் பாடி இருக்கிறார் என்பதையும் காண்கிறோம். 

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ

 அன்புடைய மாமனும் மாமி யும்நீ

 ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ 

ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ 

என்கிறார் திருத்தாண்டகத்தில் அப்பரடிகள். அவ்வளவு ஏன்! திருச்சியில் மலைக்கோட்டைக் கோயிலில் “தாயுமானவர்” என்ற பெயரிலேயே அருளாட்சி புரிந்து வருகிறார். செட்டிப் பெண்ணின் பிரசவத்திற்காக அவள் தாயைப் போல் வந்து அவளுக்குப் பிரசவம் பார்த்த நிகழ்ச்சி அந்தக் கோயிலின் தலவரலாறாகவே சொல்லப் படுகிறது. இதிலிருந்து தாயின் முக்கியத்துவம் புரிகிறது அல்லவா. 

ஆனால் நம் சரீரத்தை, உடலை நமக்குக் கொடுத்த தாய் என்றேனும் ஓர் நாள் மறையலாம்; ஆனால் சர்வலோகத்துக்கும் மாதாவான ஜகத் ஜநநீயான அம்பாளோ நம்மை என்றும் தொடர்ந்து வருகிறாள். அதுவும் ஈசனையும் தன்னுள் அடக்கிய வண்ணம் சிவசக்தியாகத் தொடர்ந்து வந்து என்றென்றும் சாச்வதமாகத் தன் கருணையைக்காட்டிய வண்ணமே இருக்கிறாள். அத்தகையதொரு மாத்ருகாபாவத்தை நாம் அன்னையிடமே காணமுடியும். இந்த அன்னைக்கு எடுக்கும் விழாவே நவராத்திரி ஆகும். பொதுவாக விழாக்களும் பண்டிகைகளும் ஓரிரு நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த நவராத்திரிக்கு மட்டும் ஒன்பது நாட்கள்! ஒன்பது நாட்களும் அன்னைக்கு விழா எடுப்பார்கள். முக்கியமாய்ப் பெண்களுக்கெனவே ஏற்பட்ட மாபெரும் பண்டிகை நவராத்திரிப் பண்டிகை ஆகும். ஏன்? 

சிருஷ்டிக்குப் பெண்ணே முக்கியம். அனைத்துக்கும் ஆதாரம் அவளே. பெண்ணில்லையேல் சிருஷ்டி இல்லை. அழிந்து போகும் இவ்வுயிருக்கு எப்படி ஒரு தாய் இருக்கிறாளோ அவ்வாறே இகம், பரம் இரண்டிலும் ரக்ஷிக்கிற ஒரு தாயையே அம்பாள் வடிவில் நாம் வழிபடுகிறோம். இந்த மண்ணில் தோன்றிய புல்லில் இருந்து, புழு, பூச்சி, வண்டுகள், பறவைகள், அசையும் அசையாப் பொருட்கள், விலங்குகள், மலைகள், காடுகள் என அனைத்துக்கும் உருக்கொடுத்து சிருஷ்டியை ஏற்படுத்திய தாயை நாம் வணங்கி அவளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதே நவராத்திரியின் தாத்பரியம். மஹாபிரளயம் முடிந்து சிருஷ்டி ஆரம்பிக்கையில் முதலில் பரம்பொருள் உண்டாக்குவது இச்சா சக்தி என்னும் சக்தி. அதன் பின்னரே கிரியை உண்டாகிறது. முடிவில் ஞானம் கிட்டுகிறது. இவையே முறையாக முதல் மூன்று நாட்கள் துர்கை, நடுவில் மூன்று நாட்கள் லக்ஷ்மி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என வழிபடப் படுகிறது. இம்மூன்று சக்திகளும் சேர்ந்த திரிபுரசுந்தரியையே விஜயதசமி அன்று வெற்றித் தேவதையாக வழிபடுகிறோம். 


படங்களுக்கு நன்றி: கூகிளார்!

துர்கையானவள் வீரத்தின் விளைநிலமாக, சிவனுக்குப் ப்ரியமானவளாக, நெருப்பைப் பார்க்கையில் அழகாக இருக்கும், தொட்டால் சுடும் என்பது போல் சீற்றம் நிறைந்தவளாக, கேடுகளை அடியோடு அழிக்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறாள். இந்த துர்கைகள் ஒன்பது பேர். அவர்கள் முறையே வன துர்கை, சூலினி துர்கை, ஜாத்வே துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, ஆசுரி துர்கை, லவண துர்கை 

லக்ஷ்மி: செல்வத்தின் பிறப்பிடம், விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்பவள், தாமரை மலர் போன்ற அழகுடையவள், அமுதமயமான இவள் வறுமையைப் போக்குவாள். கிரியா சக்தியான இவள் அஷ்ட லக்ஷ்மிகளாகவும் விளங்குகிறாள். அவர்கள் முறையே ஆதி லக்ஷ்மி, தன லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி

 சரஸ்வதி: ஆரவாரமில்லாமல் ஜொலிக்கும் வைரம் போன்ற இவள், கல்வியின் தெய்வம், ஞானச் சுடர், பிரம்மனுக்குப் பிரியமானவள். அஷ்ட சரஸ்வதியர் வாகீஸ்வரி, சித்தேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி. 

அதே போல் மூன்று தேவியரின் முப்பெரும் சக்திகளாக முதலில் துர்கைக்கு மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி ஆகியோரும் லக்ஷ்மிக்கு இந்திராணி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி ஆகியோரும், சரஸ்வதிக்கு மஹாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகியோரும் சக்திகள். இவர்கள் அனைவரும் சேர்ந்தே மஹிஷனை அழித்தார்கள் எனப்படும். 


துணைப் புத்தகங்கள்: தெய்வத்தின் குரல் ஆறாம் பாகம், செளந்தர்ய லஹரி விளக்கங்கள் ஸ்ரீதேவி மஹாத்மியம், ராமகிருஷ்ணா பதிப்பகம், விளக்க உரை அண்ணா.

Saturday, October 09, 2021

சௌந்தர்ய லஹரி 3! நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

 ஸெளந்தர்ய லஹரி எனப் பெயர் வைத்துவிட்டு ஆசாரியாரின் அவதாரத் தேதிகளிலேயே ஆழ்ந்து போகாமல் கொஞ்சம் லஹரியில் மூழ்குவோமா?? இது சாக்ஷாத் பரமேச்வரனாலேயே அம்பிகையைப் போற்றிப் பாடப்பட்டது என்பார்கள். அந்தக் கைலை சங்கரன் சொன்னதை நம் அவதார சங்கரர் கைலை சென்ற போது நேரிலேயே ஈசனிடமிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் இந்த ஓலைச்சுவடிகளையும் பெற்றுக்கொண்டதாய்ச் சொல்லுவார்கள். லிங்கங்கள் ஈசன் ஸ்வரூபம் எனில் இந்தச் சுவடிகளில் அம்பாளின் மந்த்ரமயமான ரூபஸ்வரூபம். ஆகவே இது உலக மக்களுக்குப் பயன்படவேண்டியே கொடுத்திருக்கின்றனர். இது வசின்யாதி வாக்தேவதைகளே அம்பாள் மேல் பாடியதாகவும் சொல்கின்றனர். ஆனால் லிங்க புராணத்திலோ இது மஹாமேருவில் விநாயகரால் எழுதப்பட்டது என்று இருப்பதாய்த் தெரிய வருகிறது. புஷ்பதந்தர் என்பார் மேருமலையில் இதை எழுதி வைத்ததாயும் ஒரு கூற்று. இன்னொரு கூற்று அவருக்கும் முன்னரே மேரு மலைச்சுவர்களில் இது காணப்பட்டது என்றும், ஸ்ரீ கெளடபாதர் இதைக் கிரஹித்துப்பின் ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாயும் சொல்லப்படுகிறது. காலத்தால் முந்திய சில ஆக்கங்கள் எப்போது எழுதப்பட்டது என்பதை விட்டுவிட்டு அதன் சாரத்திற்குப் போவோம். 


எப்படியானாலும் நமக்குக் கிடைத்தது ஆதிசங்கரர் மூலமே என்பது என்னவோ உறுதி. அவர் ஈசனிடமிருந்து இதைப் பெற்று வந்தபோது அங்கே காவல் இருந்த நந்திதேவர் இவர் கைகளில் இருந்த சுவடிகளைக் கண்டதும் அவற்றை வேகமாய்ப் பிடுங்கிவிட்டாராம். ஆசாரியாரிடம் 41 ஸ்லோகங்கள் கொண்ட சுவடிகள் மட்டுமே தங்க, திகைத்த ஆசாரியாரை அம்பிகை மீதம் உள்ள ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை சங்கரரையே பாடிப் பூர்த்தி பண்ண ஆக்ஞாபித்தாள் என்பதும் கேள்விப் படுகிறோம். இதில் முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஸ்ரீசக்ர வழிபாட்டு முறைகளையும், தாந்த்ரீக பூஜை முறைகளையும் விளக்குகிறது எனில் அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் அம்பிகையைக் கேசாதிபாதம் வர்ணனை செய்கிறது. முடிந்த வரையிலும் பார்க்கலாம். செளந்தர்ய லஹரி என்ற பெயர் அம்பாளின் கேசாதி பாத வர்ணனையைக் குறிப்பதால் மட்டும் வரவில்லை. அழகு அலைகள் அல்லது அழகு வெள்ளம் என்றெல்லாம் நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்தால் அதன் உண்மையான அழகு என்னமோ குறைந்து தான் காணப்படுகிறது. அலைகள் கரை ஏறாது. கரை வரைக்கும் வந்துவிட்டுத் திரும்பக் கடலுக்குச் சென்று விடுகின்றன அல்லவா? அப்படித் தான் இங்கேயும்.


அம்பாளின் அருள் வெள்ளமானது நம்மைத் திரும்பத் திரும்ப அவள் பாதத்துக்கே இழுத்துச் சென்று அவள் கருணை வெள்ளத்திலே நாம் என்றென்றும் மூழ்கி ஆனந்த சாகரத்தில் இருக்கும்படிப் பண்ணுகிறது. அதோடு இந்த ஸ்லோகங்களை ஆசாரியாள் தன் பக்திப் பிரவாஹத்தின் மூலம் வெள்ளமாய்க் கொட்டும்படி பண்ணி இருக்கிறார். இந்த ஸ்லோகங்களின் மூலம் அம்பாளின் கருணை வெள்ளத்தை அவள் அன்பை அவள் நம்மை ரக்ஷிப்பதை, சிவ சக்தி ஸ்வரூபமாய்க் காட்சி அளிக்கும் அற்புதத்தை என்றென்றும் நினைவில் இருத்தி பக்தி செலுத்தலாம்.


பொதுவாக பக்திப் பதிவுகள் கூடக் கொஞ்சம் ருசிகரமாக இருந்தால் தான் போணி ஆகும். இதுவோ முழுக்க முழுக்க யோகம் சார்ந்த  தத்துவார்த்தப் பதிவுகள். கூடியவரை தத்துவங்களைக் குறைத்துவிட்டு லௌகிகமாகவே எழுதினாலும் வரவேற்புக் கிடைப்பது கொஞ்சம் தான். எனினும் பிடிச்சவங்க படிச்சுக்கலாமே! அதான் மீள் பதிவாய்ப் போட்டு வருகிறேன். 

Friday, October 08, 2021

சௌந்தர்ய லஹரி! 2 நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

சங்கரரின் காலம் பற்றி  ஓரளவுக்குக் கூறுகிறேன். திருச்சூர் வடக்கு நாதர் கோயிலில் பஜனம் இருந்த ஆர்யாம்பாளுக்கும், சிவகுருநாதருக்கும் கனவில் வடக்குநாதர் தோன்றிக் குறைந்த வயதுள்ள புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா? அல்லது அதிக வருடம் உயிர் வாழும் சாதாரணக் குழந்தைகள்போதுமா எனக்கேட்க இருவருமே புத்திசாலிப் பிள்ளையைக் கேட்டுப் பெற்றுக் குழந்தை கர்ப்பத்தில் தோன்றிப் பிறந்தும் ஆயிற்று. குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும். சங்கரன் எனப் பெயரிடுகிறார் குழந்தையின் தகப்பனார். இது எப்படித் தீர்மானிக்கப்பட்டது என்பதை இங்கே நம் பரமாசாரியாள் கூறுவதைப் பார்ப்போம்; சங்கரர் ஒரு அவதார புருஷர் எனவும் சாக்ஷாத் ஈசனின் அம்சம் என்பதும் தெரிந்ததே. ஆனால் பெயர் வைக்கப்பட்ட காரணம் அதுவல்ல.

அவர் பிறந்த மாதம், திதி, நக்ஷத்திரம், பக்ஷம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டும் விதமாகவே பெயர் வைக்கப்பட்டது. மேலும் கேரளாவில் அந்தக் காலம் தொட்டே ஒருவர் பிறக்கும் மாசம், திதி, பக்ஷம் போன்றவற்றைக் கடபயாதி சங்க்யை என்னும் எண்ணிக்கைக் குறிப்பின்படி குறிப்பிட்டே நாமகரணம் செய்வார்கள் என்றும் பரமாசாரியாள் கூறுகின்றார். இதற்கு உதாரணமாக நாமும் கேரளத்து அரசர்களுக்கு அவர்களின் நக்ஷத்திரத்தைச் சேர்த்துச் சித்திரைத் திருநாள், சுவாதித் திருநாள் என்றெல்லாம் அழைப்பதைப் பார்க்கிறோம். ஆசாரியாள் பிறந்ததாக பரமாசாரியார் கூறுவது நந்தன வருஷம். கி.மு. 509 என்கிறார். பிறந்த மாதம் வைகாசி. சுக்ல பக்ஷம். வைகாசி இரண்டாவது மாதம், சுக்லபக்ஷம் முதல் பக்ஷம். அதாவது மாதம் 2, பக்ஷம் 1, திதி பஞ்சமி ஐந்தாம் திதி. ஆக திதி 5. இதை 2-1-5 என எடுத்துக்கொண்டு இதைத் தலைகீழாக்குவது கடபயாதி சங்க்யை முறையில் அக்ஷரங்கள் குறிப்பிடப்படும்.

5-1-2 இது எவ்வாறெனில் கடபயாதி சங்க்யையில் மெய்யெழுத்துக்கு எந்தவிதமான பொருளும் இல்லை என்பதால் “ங்” என்னும் எழுத்தை நீக்க வேண்டும். இப்போது பார்த்தால் 5 ஆம் எண்ணுக்குரிய எழுத்து “ச” 1-ஆம் எண்ணுக்குரிய எழுத்து “க” இது சம்ஸ்கிருதம் முறையாகக் கற்றிருந்தாலே புரியக்கூடும். கசடதபற என நமக்குத் தமிழில் வருவது போல் சம்ஸ்கிருதத்தில் யாத்யஷ்ட பிரகாரம் ய-ர-ல-வ-ச என வரும்போது ச எழுத்து ஐந்தாம் எண்ணைக் குறிக்கும். பஞ்சமித் திதியைக் குறிக்கும் 5-ஆம் எழுத்தை முதலில் “ச” என்றும், அடுத்து பக்ஷத்தைக் குறிக்கும் எண்ணான 1-ஆம் எழுத்தை அடுத்தும் எடுத்துக்கொண்டு “க” என்றும், அடுத்த இரண்டாம் மாதமான வைகாசியின் எண் 2-ஆம் எண்ணைக் குறிக்கும் எழுத்து “ர”வை ச் சேர்த்தும் சகர சேர்த்து சங்கரர் ஆயிற்று என்று பரமாசாரியாள் கூறுகிறார். தமிழிலேயும் எண்களைக் குறிக்க எழுத்தைப் பயன்படுத்துவது உண்டல்லவா?? அதே போல் தான் இங்கேயும். இதற்குத் தமிழ் எண்கள் பரிச்சயம் இருந்தால் புரியும்.

தமிழில், “க” என்றால் எண் 1, “உ” என்றால் எண் 2, “’ரு” என்றால் எண் 5 எனக்குறிக்கப்படும். நம் தமிழ் மூதாட்டியான ஒளவை, எட்டேகால் லக்ஷணமே எனத் தொடங்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளாள் என்பதை அறிவீர்களா?? எட்டேகாலைக் குறிக்கும் எண்கள் “அ” என்பது எட்டையும் கால் என்னும் பின்னத்தொகையைக்குறிக்க “வ” என்னும் எண்ணும் பயன்படுத்தப்பட்டது. அவ இரண்டு எழுத்துக்களையும் லக்ஷணமே என்பதோடு சேர்த்தால் அவலக்ஷணமே என்று வரும் இல்லையா? இதைத் தான் மறைமுகமாய் ஒளவை எட்டேகால் லக்ஷணமே என்றாள். அதுபோலவே இங்கேயும் சங்கரரின் பெயருக்குப் பயன்படுத்தப்பட்டது. இது காலத்தை எப்படிக் குறிக்கிறது என்பதற்கான ஆதாரம் ஆதி சங்கரர் உட்பட குரு பரம்பரையின் ஆசாரியர்கள் சித்தி அடைந்த தினம் குறித்த “புண்ய ஸ்லோக மஞ்சரி” என்னும் குறிப்புக்களிலிருந்து ஆசாரியாளின் முக்தி தினம் குறித்த குறிப்பைப் பரமாசாரியாள் மேற்கோள் காட்டுகிறார். 

அதில் ஆசாரியாள் ஸித்தி அடைந்த தினம் குறித்த ஸ்லோகம் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்.

 மஹேசாம்சாத் ஜாத: மதுரம் உபதிஷ்டாத்வய நய: மஹா-மோஹ-த்வாந்த ப்ரசமந ரவி: ஷண்மத குரு: பலே ஸ்வஸ்மிந் ஸ்வாயுஷி சரசராப்தே (அ) பிசகலேர் விலில்யே ரக்தாக்ஷிண்-யதிவ்ருஷ ஸிதைகாதசி-பரே 

மேற்கண்ட ஸ்லோகம் ஆசாரியர் ஷ்ண்மதங்களையும் ஸ்தாபித்து ஸநாதன தர்மத்தை நிலை நாட்டியதைக் குறிப்பிட்டிருப்பதோடு, ரக்தாக்ஷி வருஷம் வைகாசி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசியில் ஸித்தி அடைந்ததாயும் சொல்லி உள்ளது. ரக்தாக்ஷி வருஷம் எப்போது வந்த ரக்தாக்ஷி என்பதற்கான அத்தாட்சி மூன்றாவது வரியில் கூறி இருப்பதாய்க் கூறுகிறார். அதாவது ஆசாரியாள் ஸித்தி அடைந்த போது அவர் வயதை கடபயாதி ஸங்க்யையில் வார்த்தைகளாய்க் கொடுத்திருப்பதாய்க் கூறியுள்ளார்.மேற்கண்ட ஸ்லோகத்தில் வரும் சரசராப்தே எனும் வார்த்தைதான் கலியில் எத்தனாம் வருஷம் என்ற எண்ணிக்கையைச் சொல்வது எனப் பரமாசாரியார் கூறுகிறார். இதை saracharaabde என்றே உச்சரிக்க வேண்டும். உச்சரிப்பில் கொஞ்சம் பிழை ஏற்பட்டாலும் பொருள் மாறும். “சர”(sara) என்றால் அம்பு, அல்லது போவது என்று பொருள் கொண்டாலும் பரமாசாரியார் இதற்கென உள்ள “காதிநவ” என்னும் ஸூத்ரத்தைத் துணை கொண்டு கணக்கிடவேண்டும் என்கிறார்.

 ஏற்கெனவே நாம் பார்த்தோம், ய-ர-ல-வ-ச என்று “ச” ஐந்தாவதாக வருவதை. “ர” இரண்டாவதாய் வருகிறது. ச என்னும் எழுத்து 5 என்றால் ர என்னும் எழுத்துக்கு 2. இதிலே சரசர என்பதில் வரும் கடைசி ர வும் 2 என்னும் எண்ணைக் குறிக்கிறது. “ச” என்பது ‘காதிநவ”வில் 6 என்னும் எண்ணையும் கொடுப்பதாய்ச் சொல்கிறார். (இந்த இடத்தில் கொஞ்சம் தெளிவாய் இல்லை; புத்தகம் இல்லை என்னிடம். பிடிஎப்பில் எழுத்துக்கள் ஒன்றன்மேல் ஒன்று வந்துள்ளதால் படிக்க முடியவில்லை) ஆக சேர்த்துப் பார்த்தால் 5262 என்று ஆகும் என்கிறார். அதைத் தலைகீழாக்கினால் 2625 என்று வரும். எனில் கலி பிறந்து 2625 வருஷத்திற்குப் பின்னர் வந்த ரக்தாஷியில் வைகாசி சுத்த ஏகாதசியில் ஆசாரியார் ஸித்தி அடைந்துள்ளார் என்கிறார். எழுத்துக்களை எண்களாக்கும் வழக்கம் மேலை நாடுகளிலும் உண்டு என்பதை அறிவோம் அல்லவா. அதே போல் தான் இங்கேயும். கலியுகம் பிறந்தது கி.மு. 3102 எனச் சொல்கின்றனர். கலி பிறந்து 2625-வது வருடம் என்பது கி.மு. 477 ஆகும். 

அடுத்து ஆசாரியார் ஸித்தி அடையும்போது அவரின் வயசைச் சொல்லும் கணக்கு. மேற்கண்ட ஸ்லோகத்தில் வரும் “பலே” என்பது ஒரு சிலேடை வார்த்தை என்கிறார் பரமாசாரியார். ‘ப’, ‘ல’ என்னும் இரண்டு எழுத்துக்களைக் கொண்டு பார்த்தால் அது ஆசாரியாரின் ஸித்தி அடைந்த வயதைக் குறிக்கும் எனவும் ‘பல’ என்று சேர்த்து எடுத்துக்கொண்டால், காரியத்தில் வெற்றி அடைந்ததை அதாவது ஆசாரியாளின் அவதாரப் பூர்த்தி அடைந்து பரமேச்வரனிடம் ஐக்கியமடைந்ததைக் குறிக்கும் எனவும் கூறுகிறார். ‘ப’, ல’ என்னும் எண்ணிக்கையில் ‘ப’ என்பது 2ஆம் எண்ணையும் ஏற்கெனவே பார்த்தபடி ‘ல’ என்பது 3 ஆம் எண்ணையும் குறிக்கிறது. இரண்டும் சேர்த்தால் வரும் 23 என்னும் எண்ணை மாற்றிப் போட்டால் வரும் 32 ஆசாரியார் ஸித்தி அடைந்தபோது அவரின் வயசைக் குறிக்கிறது. கி.மு. 477-ஆம் ஆண்டு 32 வயதில் ஸித்தி அடைந்தார் எனில் கி.மு. 477+32=509 என்பதால் ஆசாரியரின் அவதார வருடம் கி.மு. 509 என வருகிறது. மேலும் ஆசாரியார் ஸித்தி அடைந்தது ரக்தாக்ஷி வருடம் எனவும், அவதாரம் செய்தது நந்தன வருடம் எனவும் இருப்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் கி.மு. 477-ஆம் ஆண்டில் ரக்தாக்ஷியும், கி.மு. 509இல் நந்தனவும் வருகிறது. ஆகவே ஆசாரியார் அவதரித்தது கி.மு. என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

அபிநவ சங்கரருக்குப் பின்னர் வருகிறேன். இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் சங்கரர் காலத்தில் புத்தமதம் பரவி இருந்ததை அறிந்து கொள்ளலாம். அப்போது பக்தி மார்க்கம் துவங்கவில்லை என்பதும் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் த்ரவிட சிசு என முருகனைக் குறித்து சங்கரர் கூறி இருக்க இயலாது.  ஞானசம்பந்தரைச் சொல்லி இருந்தால் அதற்கேற்ற ஆதாரங்கள் எதுவும் இல்லை. தன் காலத்துக்கு முன்னர் தோன்றிய சம்பந்தரைத் தான் புகழ்ந்திருக்க முடியும் என்பது ஆய்வாளர்கள் கூற்று எனில் சங்கரரும் கவிதை மழை பொழிந்து கவிகளுக்குள் கவியாகத் தான் இருந்திருக்கிறார். மேலும் வேறு எந்த நாயன்மார்களையும் சங்கரர் குறிக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. சம்பந்தரை மட்டும் வியந்து பாராட்டினார் என்று சொல்வதற்கில்லை. அவருக்கு முன்னரே காரைக்காலம்மையார், அப்பர், சிறுத்தொண்டர் போன்ற பலர் இருந்திருக்கின்றனர் அல்லவா? இவர்களில் யாரையும் ஏன் சொல்லவில்லை?? ************************************************************************************* மேற்கண்ட விளக்கத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும்படி  விண்ணப்பித்துக்கொள்கிறேன். அல்லது படிக்கும் வேறு யாரேனும் விளக்கமோ, தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும்படியோ கூறலாம். நன்றி.




Thursday, October 07, 2021

சௌந்தர்ய லஹரி! நவராத்திரியில் அம்பிகையை வழிபடுவோம்!

 இந்த வருஷம் நவராத்திரிப்பதிவுகள் போடுவதற்கான முன்னேற்பாடுகளோ/குறிப்புக்களோ எதுவுமே தயார் செய்துக்கலை. எங்கே கணினியில் உட்காரும் நேரமே குறைவு. முதலில் எதுவும் எழுத வேண்டாம்னு தான் இருந்தேன். இன்னும் வீட்டில் கொலு வைக்கவில்லை. இன்னிக்குத் தான் வைக்கணும். இனிமேல் தான் ஏற்பாடுகளே! ஆனாலும் நவராத்திரிக்கு அம்பிகை பற்றி ஏதேனும் எழுதணும்னு மனதில் தோன்றியது. முதலில் தேவி மஹாத்மியத்தில் வரும் "யாதேவி சர்வ பூதேஷூ" என ஆரம்பிக்கும் நமஸ்கார ஸ்லோகங்களை எழுதலாம்னு நினைச்சேன். ஆனால் அந்தப் பக்கங்கள் கிடைக்கவில்லை. ஆகவே சௌந்தர்ய லஹரி பற்றி எழுதியதையே மீள் பதிவாகப் போடலாம்னு நினைச்சுப் போடப் போகிறேன்.  மற்றபடி ஒவ்வொரு நாள் நவராத்திரி பற்றியும் அதன் அலங்காரங்கள், நிவேதனங்கள், பூஜை செய்யும் முறை பற்றியும் நிறைய எழுதிட்டதால் அதை இந்த வருஷம் தொடரவில்லை. மன்னிக்கவும். 

***********************************************************************************


 
ஆதி சங்கரரால் எழுதப்பட்ட சௌந்தர்ய லஹரி அம்பிகையை வர்ணித்துச் சொல்லப்பட்டது. முதலில் சங்கரர் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு மேலே செல்லலாம். பலரும் ஆசாரியர் காலம் எட்டாம் நூற்றாண்டு என்கிறார்கள். அந்தச் சமயம் இருந்த ஶ்ரீஶ்ரீ அபிநவ சங்கரரைப் பற்றியே இப்படிச் சொல்கிறார்கள் என நம்புகிறேன். ஏனெனில் ஆசாரியரின் காலம் அதை விட முன்னால் வருகிறது. கடபயாதி சங்க்யை என்னும் முறையில் பார்த்தால் ஆசாரியர் காலம் நன்றாகத் தெரியும்படி/புரியும்படி இருக்கும். 

முதலில் ஆசாரியர் காலம் கி.மு. என்று நாம் புரிந்து கொண்டால் தான் சரியாக இருக்கும். மேலும் ஆசாரியர் தமிழ் பேசும் பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் எடுத்துக் காட்டியுள்ளார். அனைவரும் நினைக்கும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியவர் அபிநவ சங்கரர். இவருக்கும் ஆதிசங்கரருக்கும் இருந்த நிறைய ஒற்றுமைகளால் ஏற்பட்ட குழப்பம் என்பதையும் அறிய முடியும் அனைவரும் நினைப்பது போல் சங்கரர் காலம் கி.பி. இல்லை, கி.மு. தான் இதை நம் பரமாசாரியாள் அவர்கள் தெளிவாக்கி இருக்கிறார். தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதியில் சங்கர சரிதம் என்னும் தலைப்பின் கீழ் வரும் அத்தியாயங்களில் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-ல் இருந்து கி.மு 477 வரையானது என்பதைத் தெள்ளத் தெளிவாய்க் கூறி உள்ளார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 38-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஅபிநவ சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெரும்பாலும் ஆதிசங்கரரை ஒத்திருந்ததால் அநேகமான ஆய்வாளர்கள் இவர் தான் ஆதிசங்கரர் எனத் தவறாகக் குறிப்பிடுகின்றனர். ஆகவே படிக்கும் நேயர்கள் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-கி.மு 477 என்பதை நினைவில் கொண்டு படிக்குமாறு வேண்டுகிறேன்.

 இது குறித்து இங்கே சொல்லப் போவதில்லை; திராவிட சிசு எனத் தன்னைத் தானே ஆசாரியாள் கூறிக்கொண்டதை மட்டும் பார்க்கப் போகிறோம். ஜகத்குருவான சங்கராசாரியாரின் காலம் எப்போது என வரையறுக்கப் படாத காலத்திலே தோன்றினார் என்றே சொல்லப் படுகின்றது. அப்போது நம் தென் தமிழ்நாடு பூராவும் தமிழே பேசப் பட்டிருக்கின்றது. அதனாலேயே இவர் “தமிழ் சங்கரன்” எனப் பாடப் பட்டிருக்கின்றார். ஆசாரியாள் பேசியதும் அவருடைய தாய்மொழியும் தமிழே. சங்கரர் பிறந்த கதை அனைவரும் அறியலாம். சிவகுருநாதருக்கும் ஆர்யாம்பாளுக்கும் திருச்சூர் வடக்கு நாதர் அருளில் தோன்றிய சங்கரர் குழந்தையாக இருந்த போது ஒரு நாள் நடந்தது இது.

 ஒருநாள் சிவகுருநாதன் அவர்களுக்கு அருகே இருக்கும் மாணிக்கமங்கலம் என்னும் ஊரில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தவேண்டிய வேலை இருந்தது. ஆர்யாம்பாள் அக்கால வழக்கப்படி வீட்டுக்குள் வரமுடியாத மாதாந்திரத் தொல்லையில் இருந்தாள். ஆகையால் அவள் இல்லத்தின் கொல்லைப் புறத்திலே இருந்தாள். குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்ட படியால் சிவகுருநாதர் ஒரு கிண்ணம் நிறையப் பாலைக் குழந்தைக்கு எனக் குழந்தையின் அருகேயே வைத்திருந்தார். குழந்தை தன் மழலையிலே பாலைப் பின்னர் அருந்துவதாய்ச் சொல்ல அவரும் கோயிலுக்குச் சென்றுவிட்டார். குழந்தை விளையாட்டு மும்முரத்தில் பாலை மறக்க தாய் மறப்பாளா? ஆர்யாம்பாள் கொல்லைப் புறத்தில் இருந்து, “சங்கரா, பாலைக்குடித்தாயா அப்பா?” என ஆதூரம் மிகக் கேட்டாள். குழந்தைக்கும் அப்போதுதான் பாலின் நினைவே வந்தது. கிண்ணத்தையே பார்த்தது குழந்தை. பால் தளும்பிற்று.

 கிண்ணத்தைக் கையில் எடுத்தது. சாப்பிடப் போன குழந்தைக்குத் தன் தந்தை எது சாப்பிட்டாலும் உம்மாச்சிக்குக் காட்டுவாரே என நினைப்பு வந்தது. உடனேயே தத்தக்கா பித்தக்கா எனத் தளிர் நடை நடந்து பூஜை அறைக்குச் சென்றது குழந்தை. பால் கிண்ணத்தைக் கீழே வைத்தது. அதன் எதிரே அன்னபூரணியின் உருவப் படம் மாட்டப் பட்டிருந்தது. அன்னபூரணியையே ஒரு கணம் உற்றுப் பார்த்தது. யார் கண்டார்கள்? அன்றொரு நாள் தான் பிரம்ம கபாலத்தை ஏந்தி பிக்ஷை எடுத்து வந்த நாட்கள் ஒன்றிலே சாட்சாத் அன்னபூரணியின் கை அன்னத்தால் தன் பிக்ஷைப் பாத்திரம் நிரம்பிய நினைவு மனதில் மோதிற்றோ?? குழந்தை தன்னிரு கண்களையும் மூடிக்கொண்டது. தகப்பன் அப்படித் தான் செய்வார், பார்த்திருக்கிறது. ஏதோ முணுமுணுப்பாரே? ம்ம்ம்?? சரி, நாம் இப்படிச் சொல்வோமே. “அம்மா, அன்னபூரணி, இந்தப் பாலை எடுத்துக்கோயேன்.” குழந்தை வேண்டியது. அப்பா செய்யறாப்போலே குஞ்சுக்கைகளால் நிவேதனமும் செய்தது. அடுத்த கணம் கிண்ணத்தில் இருந்த பாலைக் காணோம். குழந்தை திகைத்துப் போனது. இது என்ன? அப்பா நிவேதனம் செய்வார். அப்புறம் நாம் தானே சாப்பிடுவோம்? ஆனால் இப்போ??

 பாலையே காணோமே? வெறும் கிண்ணமல்லவா இருக்கு?? கிண்ணத்தையும் பார்த்துவிட்டு அன்னபூரணியையும் பார்த்தது குழந்தை. பசி வேறு ஜாஸ்தியாகிவிட்டது. என்ன செய்யறதுனு புரியாமல் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, “அம்மாஆஆஆஆஆ, பால்” என்று அழ ஆரம்பித்தது. தன் பதியின் அவதாரமான இந்த ஞானக்குழந்தையோடு சற்று விளையாடுவோம் என எண்ணின அன்னபூரணி இப்போது பதறினாள். ஆஹா, குழந்தை அழுகிறானே? பசி பொறுக்க மாட்டானே? உடனே கிண்ணத்தில் பால் நிரம்பியது. குழந்தை சிரித்தது. (இதைப் பின்னர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடப் போகிறார் சங்கரர். அதைப் பின்னால் பார்ப்போம்.) உமை அளித்த அந்த ஞானப்பாலைக் குழந்தை குடித்தது. பின்னால் வரப் போகும் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகளே இவை எல்லாமே. அம்பாளைக் குறித்த கேசாதிபாத வர்ணனையில் சங்கரர் அம்பாளின் ஸ்தனங்களைக் குறித்தும் பாடி இருக்கிறார். அம்பாளின் மார்பகத்தில் ஊறும் ஞானப்பாலைக் குடித்தே தேவர்கள் நித்ய யெளவனமாய் இருக்கின்றனர் எனவும் அவர்கள் குமாரர்களையோ நித்ய இளைஞர்களாக என்றும் இளையோயாய் மாற்றிவிட்டது எனவும் கூறுகிறார்.

 இதன் உள்ளார்ந்த கருத்து அம்பாளின் ஞானப்பாலை உண்டதால் காமமே என்னவெனத் தெரியாத ஞானமூர்த்திகளாக இருக்கின்றனர் என்று கூறுகிறார். இங்கே ஞானம் என்பதை பரப்ரும்மத்தை அறிவது என்ற கருத்தில் ஆசாரியார் கூறி இருக்கலாம். அம்பாளின் ஸ்தனங்களிலிருந்து ஞானம், கருணை, ஸெளந்தரியம், போன்ற அனைத்தும் அவள் இருதயத்திலிருந்து ஊறிப் பாலாகப் பெருகித் தன்னையும் அவளின் குழந்தையாக ஆக்கியது என்கிறார். இதை உண்டதாலேயே ஸாக்ஷாத் சரஸ்வதியின் சாரம் தமக்குள்ளே ஊறிக் கவிதை மழை பொழிய முடிந்தது எனவும் கூறுகிறார். இது சங்கரரே எழுதியதாய்ச் சொல்லப்படும் ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களில் ஒன்று. முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி எனப்படும். அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் ஸெளந்தர்ய லஹரி எனப்படும். இவை அனைத்தும் சேர்ந்தே ஸெளந்தர்ய லஹரி என்று அழைக்கப்படுகிறது. அதன் எழுபத்தி ஐந்தாம் ஸ்லோகத்தில் இந்தக் குறிப்பிட த்ரவிட சிசு என்னும் வார்த்தை காணப்படும். 

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத: பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ: தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத் கவீனாம் ப்ரெளடானா-மஜனீ கமனீய: கவயிதா

 இங்கே ஞானசம்பந்தரை ஆதிசங்கரர் குறிப்பிடக் காரணம் ஏதும் இருப்பதாய்த் தோன்றவில்லை. மேலும் மலையாள மொழியின் வரலாறு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே. அதன் முன்னர் சேர, சோழ, பாண்டியர் காலங்களில் சேர நாட்டிலும் தமிழே மொழியாக இருந்தது என்பதையும் அறிவோம். ஆதிசங்கரரும் அப்படியான தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவரே என்பதால் தம்மைத் தானே இங்கே மூன்றாம் மனிதர் போல் பாவித்துக் குறிப்பிட்டிருக்கிறார். அம்பாளின் ஞானப்பாலைக் குடித்து சரஸ்வதியின் அருட்கடாக்ஷத்தைப் பெற்றதால் தம் வாக்வன்மை அதிகரித்துக் கவிஞர்களுக்கெல்லாம் கவியாகத் தம்மை ஆக்கிவிட்டது. இதுவும் அவள் அனுகிரஹமே என்கிறார் ஆசாரியார்.





சௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள்  இன்னும் வரும்.