எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 21, 2021

சித்தப்பாவும் சுஜாதா வீட்டுக் காஃபியும்!

 இன்னிக்குக் கொஞ்சம் எழுந்து உட்கார்ந்திருக்கேன். கால் வலி எல்லாம் குறைந்தாலும் வீக்கம் குறையவில்லை. இரண்டு கால் பாதங்களிலும் வீக்கம் வருகிறது/மறைகிறது. மீண்டும் வருகிறது.  நோய்க்கிருமிகளால் உண்டான நச்சுப் பூராவும் வெளியே வரணும். மெதுவாகத் தான் சரியாகும் என்கிறார் மருத்துவர். ஆனால்  ஊன்றும்போது இருந்த கடுமையான வலி இப்போது இல்லை. என்றாலும் கால்க் கணுவைச் சுற்றிய வலி இன்னும் குறையணும். வலக்காலில் குறைந்திருக்கு. அது போல் இடக்காலில் குறையவில்லை. எப்போ எழுந்து சகஜமான நடமாட்டம் வரும்னு புரியலை. எல்லா உம்மாச்சிங்களையும் வேண்டிண்டாச்சு. இனி அவங்க பொறுப்பு!

*************************************************************************************

குட்டிக் குஞ்சுலு விதம் விதமாகக் கோணங்கி எல்லாம் பண்ணுகிறது. எங்களைப் பார்த்தால் ஏதேனும் புத்தகம்/பொம்மையை வைத்துத் தன் முகத்தை மறைத்துக் கொள்ளும். அதை அவ அப்பா எடுத்தால் சிரிக்கும்/ இல்லைனா சில சமயம் கத்தும். சில சமயம் அதுவே அந்தப் பொம்மையைக் காட்டி இதான் பேபி என்று சொல்லும்/ நாங்க அதைத் தான் கொஞ்சணுமாம். கொஞ்சினால் இப்போல்லாம் காதைப் பொத்திக்கறது. அது பேபி இல்லையாம். ஆகவே கொஞ்சக் கூடாதாம். விளையாட்டுக் காட்டும். புத்தகத்தில் வர்ணங்கள் வரைந்து காட்டும். பசில்ஸில் சிலவற்றைப் போட்டுக் காட்டும். எல்லாம் செய்யும் சமயம் ஐ பாட் பார்த்துட்டால் உடனே ஐ பாட் தான்! காமிக்ஸ் பார்க்கணும்! ஒரே ரகளையா இருக்கும். எங்களுக்கு டாட்டா சொல்லச் சொன்னால் அவளோட பேபியின் கையை அசைத்து டாட்டா காட்டுவாள். ஃப்ளையிங் கிஸ் கேட்டால் அவள் பேபி மூலம் தான் வரும். அது கொடுக்காது.  காலம்பர எழுந்தால் பல் தேய்க்க, பால் குடிக்க ஒரே ரகளை! ஓட்டம் காட்டுகிறது. அப்பா, அம்மாவுக்கு நல்ல உடல் பயிற்சி! 

***********************************************************************************

சில நாட்கள் முன்னர் எங்கள் ப்ளாக் வாட்சப் குழுமத்தில் திரு ஜீவி அவர்கள்பூ வனம் வலைப்பக்கச் சொந்தக்காரர், எழுத்தாளர்கள் பற்றிய ஏதோ பேச்சில் சித்தப்பா திரு சுஜாதாவின் மரணத்திற்குப் பின்னான இரங்கல் கூட்டத்திற்குப் போனதாகவும், அங்கே சுஜாதாவின் வீட்டுக் காஃபி நன்றாக இருக்கும் என்று சொல்லி விட்டு மேடையை விட்டு இறங்கியதாகவும் எழுதி இருந்தார். இதற்கு என்னையும் துணைக்குச் சேர்த்திருந்தார். நான் யாரோ அவரை அங்கே கொண்டு விட்டதாகச் சொன்னதாகச் சொல்லி இருக்கார். 

உண்மையில் நடந்ததே வேறே! சித்தப்பாவைக் கொண்டு விட்டதாக நான் சொன்னது அநேகமாக ஜெயலலிதா கொடுத்த விருது வாங்கும் விழாவுக்கு என நம்புகிறேன். இது பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். ஆகவே இப்படிச் சொல்லி இருக்கேன். என் நினைவு சரியானால் அது இந்த விழாவில் தான் மேடை ஏறுவதைப் பற்றிக் குறையாகச் சித்தப்பா சொன்ன நினைவு. வயதாகிவிட்டதால் மேலே ஏறச் சிரமமாக இருந்ததைச் சொல்லி இருந்தார்.  ஆனால் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்திற்கு (அப்படி ஒன்று நடந்திருந்தால்) சித்தப்பா போகவே இல்லை என்பது நூற்றுக்கு நூறு சதம் உண்மை. திரு சுஜாதா அவர்களுடன் வீட்டுக்கு எல்லாம் அடிக்கடி போய் வந்து கொண்டு அப்படி எல்லாம் நெருங்கிய பழக்கம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பழக்கம் உண்டு. ஆகவே சுஜாதா இறந்ததும்  2008 ஆம் ஆண்டில் சித்தப்பா யார் துணையும் இல்லாமல் தானே சுஜாதாவின் வீட்டைத் தேடிக் கொண்டு சென்றார். அங்கே அவருக்குக் கொஞ்சம் உடல் நலம் இல்லாமல் போக அவரைச் சில நண்பர்கள் ஆட்டோ பிடித்து வீட்டில் கொண்டு விட்டிருக்கின்றனர். இது தான் சித்தப்பா சுஜாதா வீட்டிற்கு முதலும்/கடைசியுமாகப் போனது. சுஜாதா இறந்த சமயம் ஹிந்துவில் இருக்கும் அவருடைய 3 ஆவது பிள்ளை ராமகிருஷ்ணன் ஊரிலேயே இல்லை. ஆகவே அவருக்குத் தகவல் பின்னர் தான் தெரியும்.  சுஜாதாவுக்கு இரங்கல் கூட்டத்திற்குச் சித்தப்பா போகவில்லை என்பதையும் திரு ராமகிருஷ்ணன் உறுதி செய்தார். 

இதை எல்லாம் கடந்த நாட்களில் விசாரித்து அறிந்து கொண்டு எழுதுவதற்காகவே இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தேன். சித்தப்பாவின் கடைசி மகன் என் ஊகத்தை உறுதி செய்தார். இப்படி ஒன்று நடக்கவே இல்லை என உறுதியாகக் கூறினார்.  யார் யாரோ சித்தப்பா பற்றி மட்டும் இல்லாமல் அவங்களுக்குத் தெரிந்த மறைந்த எழுத்தாளர்கள்/பிரபலங்கள் பற்றிக் கதையை அவிழ்த்து விடுகிறார்கள். அது போலத்தான் இதுவும். சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் சித்தப்பா அவர் வீட்டுக் காஃபி நன்றாக இருக்கும் என்று சொன்னதாய்க் கூறுவதும். அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் யாரும் இப்படிக் கூற மாட்டார்கள். இன்னும் என்னென்ன இருக்கோ! தெரியலை!

Monday, July 12, 2021

இன்றைய நிலவரம்!

 நெல்லைத் தமிழர் மற்றும் இன்னும் சில உறவினர்கள் எனக்கு calcaneal  spur எனப்படும் குதிகால் வலி என நினைக்கின்றனர். அது இல்லை. அதெல்லாம் ஏற்கெனவே வந்து விட்டுப் போய்விட்டது. இது முழுக்க முழுக்க நரம்புகளைச் சார்ந்தது. கணுவைச் சுற்றி வலி. கட்டை விரலில் இருந்து குதிகால் வரை வலி பரவுகிறது. பாதம் மட்டும் வீங்கிக் கொள்கிறது.  காலைத் தூக்கி வைத்து நடக்கவே முடியலை.  நடக்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. அதிலும் இன்று காலையிலிருந்து என்னால் நகர்வதே சிரமமாகப் போய் விட்டது. மத்தியானமாய் மருத்துவரைப் பார்க்கப் போவதாக இருந்தோம். ஆனால் போகவில்லை. கால் இருக்கும் இந்த நிலையில் லிஃப்ட் வரை நடந்து கீழே போய்ப் பின்னர் அங்கே படிகளில் இறங்கி ஆட்டோவில் ஏறி மருத்துவரைப் பார்க்கப் போகணும். அவர் அங்கே மாடியில் இருப்பார். எனக்காகக் கீழே வரேன்னு சொல்லி இருந்தாலும் வாசலில் இருந்து அந்த மாடிப்படி வரை நடக்கணும். ஆகவே மருத்துவரிடம் என்னால் வர முடியாதுனு காலையிலே கூப்பிட்டுச் சொல்லிட்டேன்.

அவரே வரேன்னு சொல்லிட்டு வந்து பார்த்துட்டும் போயிட்டார். மருந்துகளும் கொடுத்திருக்கார்.  இது முழுக்க முழுக்க ரத்தநாளங்களின் பிரச்னை என்றும் சொன்னார். சர்க்கரையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றாலும் முக்கியமாக அசுத்த ரத்தம், சுத்த ரத்தம் மேலும் கீழும் பிரயாணம் பண்ணுகையில் அசுத்த ரத்தம் வெளிவராமல் ரத்த நாளங்களில் அடைத்துக் கொண்டிருக்கிறதாய்ச் சொன்னார். அதுக்குத் தான் மருந்துகள் கொடுத்திருக்கார்.  விரைவில் சரியாகணும் என வேண்டிக் கொண்டிருக்கேன்.  இன்னிக்குக் காலம்பரக் காஃபி போட்டதோடு சரி. மற்ற எந்த வேலையும் செய்ய முடியலை. எப்படியோ சமாளித்துக் கொண்டு குளித்துவிட்டு வந்துட்டேன். அதுக்கப்புறமா உட்கார்ந்த இடத்தை விட்டு நகர முடியலை. எப்போச் சரியாகும்னு கவலையாயும் பயமாகவும் இருக்கு. இம்மாதிரி இத்தனை நாட்கள் தொடர்ந்து இருந்ததில்லை. இதற்கு என்றே எத்தனையோ அலோபதி/ஆயுர்வேதம் என மருந்துகள் சாப்பிட்டாச்சு. எல்லாவற்றுக்கும் கட்டுப்படாமல் இப்போது கொஞ்சம் வீரியமுள்ள ஆயுர்வேத மருந்தே எடுத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. மற்ற மருந்துகளை நிறுத்தச் சொல்லி இருக்காங்க.  பார்ப்போம், எப்படி இருக்குமோ என்று.


இம்முறை காவிரியில் தண்ணீர் வந்ததில் இருந்து மொட்டை மாடிக்குப் போகவே இல்லை. தண்ணீர் வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் எனக்கோ வீட்டுக்குள்ளேயே நடக்க முடியாதப்போ மொட்டை மாடிக்கு எங்கேருந்து போறது! நெல்லைத் தமிழர் காவிரியைப் படம் பிடித்துப் போடுவதற்காகவாவது/ அதுக்காகவாவது எனக்குச்  சரியாகணும்னு பிரார்த்தனை பண்ணுவதாக எழுதி இருக்கார். அதைப் படித்ததும் கண்ணீரே வந்து விட்டது. ரேவதியும் அடிக்கடி தொலைபேசியில், வாட்சப் செய்தியில் அப்போதைய நிலவரம் கேட்டுக் கொண்டிருக்காங்க. எங்க பெண்/பையருக்கு இந்த மாதிரி விஷயம் முழுக்கவும் தெரியாது. பையரிடம் போன வாரம் பேசும்போது சொன்னோம். அதுவும் அவர் என் முகத்தைப் பார்த்துட்டுக் கேட்டதால். ஆனால் இந்த அளவுக்கு மோசம்னு சொல்லலை. பெண் இன்னும் உடம்பு சரியாகாமல் இருப்பதால் அவளிடம் எதுவுமே சொல்லலை. சரியான பின்னால் சொல்லிக்கலாம்னு இருக்கோம். விரைவில் சரியாகணும்னு வேண்டிக் கொண்டே இருக்கேன். 

Friday, July 02, 2021

ஆண்டறிக்கை தயாரிப்பது எப்படி? :)

 ஆண்டறிக்கை என்பது அவ்வளவு ஒன்றும் எளிதாகத் தயாரிக்க முடியும் ஒன்று இல்லை. நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்த ஆண்டறிக்கை நிறுவனத்தின் அத்தியாவசியமான தகவல்களை வைத்துத் தயாரிக்கப்படும் ஓர் முக்கிய ஆவணம் ஆகும். பங்குதாரர்களுக்கம்பெனியில் வரவு, செலவுகள் பற்றி மட்டுமில்லாமல் நிறுவனம் செயல்படும் விதம், தொழிலாளர்களின் பங்கு, தொழில் துறையின் தற்போதைய போக்கு, முன்னர் இருந்த விதம், இப்போது மாறுதல்கள் தேவைப்பட்டால் அவற்றை எவ்வகையில் நடைமுறைப்படுத்துவது, இவற்றோடு நிறுவனத்தின் நிதி நிலைமை, வரவு,செலவுக் கணக்குகள், வரவாக இருந்தால் லாபம் எவ்வளவு, அதில் முதலீடுகள் செய்யப்படுமா? தொழிலாளர்களுக்குப் பங்கு உண்டா என்பதில் இருந்து ஆரம்பித்து செலவு எனில் அதை ஈடு கட்டுவது எப்படி, லாபத்தைக் கொண்டு வரும் மாற்று வழி என்ன? அதனால் லாபம் நிச்சயமாய்க் கிடைக்குமா என்பதிலிருந்து நிர்வாகத்தின் நடைமுறைகள், நிர்வாக அதிகாரிகளின் ஆலோசனைகள், அவர்கள் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் சலுகைகள், போனஸ் அளிப்பதெனில் எத்தனை சதவிகிதம் அதற்கான அடிப்படை எங்கிருந்து வருகிறது, தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் சேர்த்துக் கொடுக்கப்படும் சலுகைகள், அவர்களுக்கான மருத்துவ உதவி, குழந்தைகள் நலன் என அனைத்துக்கும் சேர்த்து ஓர் திட்டம் போட்டு அதை முதலில் திட்ட அறிக்கையாகக் கொடுப்பார்கள். 

பின்னர் அந்த வருஷம் அந்தத் திட்டத்தின்படியே வரவு செலவிலிருந்து எல்லாவிதமான நிறுவனத்தின் வேலைகளும் நடந்தனவா என்பதற்கு அந்த நிதி  ஆண்டு முடிவில் ஓர் அறிக்கை அளிப்பார்கள். அதில் தாங்கள் செய்த செலவு மட்டுமில்லாமல் ஆக்கபூர்வமாகச் செலவுகள் செய்யப்பட்டனவா? அதில் தவறு நேர்ந்திருக்கிறதா? முதலீடுகள் லாபத்தைக் கொடுத்தனவா? தவறு நேர்ந்திருந்தால் எதனால் நேர்ந்தது? அதன் மூலம் ஏற்பட்ட நஷ்டம் என்ன? அவற்றை ஈடு செய்வது எப்படினு ஆரம்பிச்சுத் தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கும்படி லாபம் வரவில்லை எனில் அதை எப்படி ஈடு செய்வது? அவர்களின் தேவைகளை எப்படி நிறைவேற்றுவது என்பது வரை எல்லாவற்றையும் யோசித்துத் தயாரிக்க வேண்டிய ஒன்று. சும்மாவானும் ஆண்டறிக்கை என எதை வேண்டுமானாலும் வாசித்துவிட முடியாது. சிறுகதை எழுதுவதற்கும் ஆண்டறிக்கை தயாரிப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. சிறுகதை கேள்விப்பட்ட ஒன்றை அல்லது கற்பனையில் ஒன்றை வைத்துக் கொண்டு சம்பவங்கள், சம்பாஷணைகள், கதாபாத்திரங்கள் எனக்கூட்டியோ, குறைத்தோ வைத்துக் கொண்டு தர்க்கரீதியாக ஒத்துக்கொள்ளும்படி எழுதி விடலாம். சொல்லப் போனால் எல்லோராலும் எழுத முடியாது தான். கற்பனை வளம் வேண்டும்

ஆனால் ஆண்டறிக்கை உண்மை நிலவரங்களையே தெரிவிக்க வேண்டும். புள்ளி விபரங்கள் தவறாகக் காட்டப்படக் கூடாது. வருட ஆரம்பத்தில் சொல்லப்பட்ட திட்ட அறிக்கையுடன் வருட முடிவின் காட்டப்படும் ஆண்டறிக்கை ஒத்துப் போக வேண்டும். செலவு கூடி இருந்தால் காரணம் சரியாக இருக்க வேண்டும். லாபத்தையும் குறைக்காமல் காட்டி ஆகவேண்டும். திட்ட அறிக்கை தணிக்கைக்கு உட்படாது. ஆண்டறிக்கை தணிக்கைக்கு உட்படும். ஆகவே மிகவும் யோசித்துச் சரியானபடி வரவு, செலவுகள், மற்றச் செலவுகள், முதலீடுகள், வியாபாரங்கள் நடந்திருக்கின்றனவா என்பது பற்றி அந்த அந்தக் குறிப்பிட்ட துறையின் நிர்வாகிகள் சரியான புள்ளி விபரங்களை அளித்தாலே தலைமை நிர்வாகியால் உண்மையான ஆண்டறிக்கையைத் தயார் செய்ய முடியும். இதற்குக் கடுமையான உழைப்புத் தேவை. மூளைக்கும் வேலை அதிகம். அலுவலகத்தின் கலாசாரங்களும் இதன் மூலம் தெரிவிக்கப்படுவதால் அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

முக்கியமாய் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தொடர்பு கொள்ளும் நிறுவனங்களுடன் சரியான உறவைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அவற்றில் அபாயங்கள் இருக்குமானால் அது குறித்த எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும் என்பதோடு அபாயங்களைக் கண்டறியும் ஆற்றலும் வேண்டும். ஆண்டு அறிக்கையின் உள்ளடக்கமோ அல்லது அதன் தொனியோ  நிறுவனத்தைக் குறித்த அத்தியாவசியமான தடயங்களை நமக்குக் கொடுக்கும். அதன் மூலம் நாம் சரியான நிறுவனத்தில் தான் முதலீடு செய்திருக்கோமா என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் நம் முதலீடு இங்கேயே தொடரலாமா வேண்டாமா என்பது குறித்தும் முடிவு செய்து கொள்ளலாம். ஆகவே ஆண்டறிக்கையை வாசிப்பதோ/எழுதுவதோ எளிது அல்ல. கடினமான ஒரு விஷயம்.