எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 30, 2020

ஏன் இந்தக் கொடுமை!

 எதுவும் மனதுக்கு உற்சாகம் அளிக்கிறாப்போல் இல்லை. இரண்டே நாட்கள் ஆன ஆண் குழந்தையை எரித்துக் கொன்ற செய்தி சில நாட்களுக்கு முன்னர் படித்த நினைவு மாறும் முன்னர் இங்கே காவிரிக்கரையில் ஒரு பொட்டலத்தில் பிறந்த பெண் குழந்தை! நல்லவேளையாக ஆட்டோ ஓட்டுநர் ஒருத்தர் தற்செயலாகப் பார்த்தப்போப் பொட்டலம் அசையவே பிரித்துப் பார்த்துப் பின்னர் அரசு விடுதியில் ஒப்படைச்சிருக்கார். இப்போ நேற்று ஓர் குழந்தையை அதுவும் இரண்டே நாட்கள் ஆன குழந்தை! ஸ்க்ரூ டிரைவரை வைத்து வயிற்றில், நெஞ்சில் துளைபோட்டுக் கொன்று விட்டு வீசி எறிந்திருக்கிறார்கள். பதினெட்டே வயதான இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து எலும்புகளை நொறுக்கிக் கொன்று பொட்டிருக்கிறார்கள். 

முதல் இரண்டும் தமிழ்நாட்டில். கடைசி இரண்டும் வட மாநிலத்தில்! ஆனால் எங்கே செய்தாலும் இவை எல்லாம் செய்யும் அளவுக்கு மனித மனம் குரூரம் அடைந்திருப்பது ஏன்? அதிலும் இரண்டு நாள் குழந்தையை உயிருடன் எரிக்க அந்தத் தாய்க்கு எப்படி மனசு வந்தது ? அப்புறம் ஏன் குழந்தையைப் பெற்றுக்கொண்டாள்? முறை தவறிப் பிறந்த குழந்தை எனில் அது பிறக்கும் வரை ஏன் காத்திருக்கணும்! ஆரம்பத்திலேயே அழித்திருக்கலாமே! இன்னொரு தாய் குழந்தையின் உடலில் ஸ்க்ரூ டிரைவரால் ஓட்டை போட்டிருக்கிறாள். குழந்தை எப்படிக் கதறித்துடித்திருக்கும்! அப்போக் கூடவா மனசு கல்லாக இருந்திருக்கிறது!  இந்த அழகிலே பெண்ணை தெய்வமாகக் கொண்டாடும் நாடு என்கிறோம். பெண்ணிற்குத் தாய் என்னும் புனிதமான அந்தஸ்தைக் கொடுத்துக் கொண்டாடுகிறோம். தாயை தெய்வமாய்க் கொண்டாடும் நாடு! அதிலும் எப்படிப் பட்ட தாய்மார்கள்? பிறந்த குழந்தையைக் கொல்லும் அளவுக்கு மனம் கல்லாகிப் போன பெண்கள்!


வரவர நானும் ஒரு பெண் என்று சொல்லிக் கொள்ளவே எனக்கு மனம் கூசுகிறது. அந்த அளவுக்குப் பெண்கள் தரம் தாழ்ந்து விட்டார்கள். இதற்கெல்ல்லாம் காரணம் பிறப்பு வளர்ப்பா? சந்தர்ப்ப சூழ்நிலையா? அந்த நேரத்து மனோநிலையா? எதுவாக இருந்தாலும் செய்துவிட்டு மனம் துன்புறாமல் நிம்மதியாக அவர்களால் இருக்க முடியுமா?

Friday, September 25, 2020

எஸ்பிபிக்கு அஞ்சலி! :(

மண்ணில் இந்தக் காதல்  எஸ்பிபியின் அனைத்துப் பாடல்களுமே ரசிக்கும் வகை என்றாலும் எனக்கு ரொம்பப் பிடித்தது இந்தப் பாடல் தான். படமும் பிடிக்கும், பாடலும் பிடிக்கும். அவர் நடிப்பும் இந்தப் படத்தில் பிடிக்கும். அருமையான பாடல். அவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்திற்கும் கோடானுகோடி ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், வருத்தங்கள். ஓரளவு எதிர்பார்த்த செய்தி என்றாலும் எப்படியும் பிழைச்சுடுவார் என்னும் நம்பிக்கையும் இருந்தது. ஆனாலும் இப்படி ஒரு நல்ல மனிதரைக் காலன் இந்தப் பாடு படுத்தி இருக்க வேண்டாம். அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.


கீதா & சாம்பசிவம்

Saturday, September 19, 2020

நாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும்! ஆனால்! :(

இன்னிக்குத் தொலைக்காட்சிச் செய்திகளில் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி! ஒரு மனிதர் தான் கல்யாணம் செய்து கொண்ட மனைவியைக் கையைக் காலைக் கட்டிப் போட்டு அடித்து,வெட்டி எல்லாம் செய்கிறார். அந்தப் பெண் கத்தினாள் என்பதால் வாயில் துணியை அடைத்துவிட்டுப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப் பார்த்திருக்கிறார். நல்லவேளையாக அந்தப் பெண்ணின் கதறல் சப்தம் கேட்டுக் கதவை உடைத்துக் கொண்டு வந்த சில நல்ல மனிதர்களால் அந்தப் பெண் உயிருடன் மீட்கப்பட்டு அந்தக் கணவனையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. மனைவியை இப்படியெல்லாம் கொடுமைப் படுத்த இவர்களுக்கு அதிகாரம் கொடுப்பது யார்? திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை தான் நடத்த வேண்டும். முடியலையா/பிடிக்கலையா/ இருக்கவே இருக்கு விவாகரத்து! அதை விட்டுட்டு ஏன் இந்தக் கொடுமை? மனித மனத்தின் கொடூரம் நாளாக ஆக அதிகரிக்கிறது. 

***********************************************************************************

இது இப்படின்னால் இன்னொரு ஊரில் ஒரு பெண் முறை தவறிப் பிறந்த ஆண் குழந்தையை நான்கு நாட்கள் கூட ஆகாத குழந்தையை உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருக்கிறாள். இதற்கு அந்தப் பெண்ணின் தாய் உதவி செய்திருக்கிறார். இத்தனை காலம் எப்படி அந்தப் பெண் ஊர் வாயில் விழாமல் தப்பித்தார்? அது போலவே இந்தக் குழந்தையையும் காப்பாற்றி இருக்கலாமே! பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறுகிற வரை சும்மா இருந்துட்டுப் பிறந்தப்புறம், அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்தப்புறமா ஒரு தாய்க்குக் குழந்தையைக் கொடுமையாக எரித்துக் கொல்லவும் மனம் வந்திருக்கு! என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

***********************************************************************************

இன்னொரு பெண்மணி பிரபல ஜோசியராம், ராசிக்கல் ஜோதிடம் சொல்லுவாராம்! அவர் மருமகளைக் கொடுமைப் படுத்திக் கல்யாணம் ஆனதுமே வீட்டை விட்டு விரட்டியதாகச் சொல்லுகிறார்கள். அந்த ராசிக்கல் அம்மாவோ காவல்துறையிடம் இந்தப் புகாரை வாங்கக் கூடாது என்று வேறே சொன்னாங்களாம். ஆனால் இப்போ எப்படியோ விஷயம் வெளியே வந்துவிட்டது. இவங்கல்லாம் ஏன் இப்படி நடந்துக்கறாங்க? எங்கே கோளாறு? பிறந்த விதமா? வளர்ந்த விதமா? சந்தர்ப்பங்களா? சுற்றி இருக்கும் மனிதர்களா? எதுவும் புரியலை! 

***********************************************************************************

நீட் தேர்வு எழுதப் பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்களைப் பற்றிச் செய்திகள் நிறைய வருகின்றன. அதில் ஒரு மாணவன் +2 தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்களே பெற்றிருப்பதாக அவனுடைய மதிப்பெண் சான்றிதழ் சொல்கிறது. அந்தப் பையனைப் போய் மருத்துவம் படிக்கச் சொல்லி நிர்ப்பந்தித்தால்! இது முழுக்க முழுக்கப் பெற்றோரின் தவறே! அதே போல் முதல் முதலில் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்த பெண்ணும் பெற்றோருக்குத் தான் கடிதம் எழுதி இருக்கிறாள். அவளும் பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் பயந்திருக்கிறாள். ஆக இது முழுக்க முழுக்கப் பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பே என்பது தெரிகிறது. 

ஆனாலும் மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்தத் தேர்வை சர்வ சகஜமாக எழுதித் தள்ளும்போது நம் மாநிலத்து மாணவர்கள் பயப்படக் காரணம் அவர்கள் மனதில் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறலாம் என்ற எண்ணம் ஊட்டப்பட்டது தான். எந்தப் பொதுத்தேர்வையும் எதிர்கொள்ளும் மனோபலத்துடன் மாணவர்களைப் படிக்க வைப்பதில்லை. இப்போதைய அதிமேதாவி அறிவாளிகளும் அறிவு ஜீவிகளும், குழந்தை எழுத்தாளர்களும் இது அநியாயம், அக்கிரமம், தேர்வெல்லாம் வைக்கக் கூடாது என்றே சொல்கின்றனர்.பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்குமாம். ஆரம்ப கட்டத்தில் உள்ள சின்னச் சின்னத் தேர்வுகளே அழுத்தம் கொடுக்கும் என்கிறார்கள், அதனால் மாணவர்களின் உளநிலை பாதிக்கும் என்கின்றனர்.  எனில் பின்னர் அவர்களால் எப்படிப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பனிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வெல்லாம் எதிர்கொள்ள முடியும்? தமிழ்நாட்டைத் தவிர்த்த வேறே எந்த மாநிலங்களிலேயும் இப்படிப் படிக்காமல் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதில்லை. மாணவர்களின் தகுதி என்னவென்று தெரிய வேண்டாமா? முன்னெல்லாம் நான் சொல்வது நூறாண்டுகள் முன்னர் எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஈஎஸ் எல் சி என்னும் பெயரில் இருந்தது. என் அம்மா அந்தத் தேர்வு எழுதிவிட்டுப் பின்னர் ஆசிரியப் பயிற்சியில் சேர இருந்தார். திருமணம் ஆனதால் போகமுடியவில்லை. ஆனால் எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஒன்றும் புதியது அல்ல. அதே போல் பள்ளி இறுதியிலும் பொதுத் தேர்வு எழுதுவதற்குத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்யும் பொதுத் தேர்வு ஒன்று அந்த அந்தப் பள்ளி அளவில் நடைபெறும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே பள்ளி இறுதிப் பொதுத் தேர்வு எழுத முடியும். தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த வருஷம் மீண்டும் இந்தத் தகுதித் தேர்வு எழுதித் தான் பொதுத் தேர்வுக்குப் போக முடியும். அப்படியெல்லாம் இப்போது இல்லை. எட்டாம் வகுப்பு வரை தேர்வே இல்லை. எல்லோரும் பாஸ். ஒன்பது, பத்தாம் வகுப்பில் பாடங்களை எப்படிப் படிப்பார்கள்? பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எனில் மதிப்பெண்களை அள்ளிப் போட்டுவிட்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் என்றால்? தேர்வு என்றாலே மாணவர்கள் பயந்து ஒதுங்கும்படி செய்துவிட்டார்கள். 

இப்படிக் கோழையான மாணவர்களால் மருத்துவப் படிப்பை மட்டும் எப்படி எதிர்கொள்ள முடியும்? முதல் வருஷம் அனாடமி வகுப்பிலேயே மயக்கம் போட்டு விழுந்து வீட்டுக்கு வந்து விடுவார்கள். முதல் வருஷம் தேர்ச்சி பெறவில்லை எனில் அடுத்த வருஷம் படித்துக் கொண்டே முதல் வருஷம் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறலாம் என்பது மருத்துவக் கல்வியில் இல்லை. மீண்டும் முதல் வருஷப் பாடங்களைத் தான் படிக்க வேண்டும்.இதுவே அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் எனில், நம் நடிகர்கள் இந்த நாடுகளைத் தானே சுட்டிக் காட்டுவார்கள். அங்கெல்லாம் இப்படி ஒரு தேர்வு இல்லை என்பார்கள். ஆனால் அதற்கு முன்னர் அவங்க ஒன்றாம் வகுப்பில் இருந்தே மருத்துவப் படிப்புக்கான தேர்ச்சி பெறும் வகையில் படிக்க வேண்டும் என்பது இங்குள்ளவர்கள் யாருக்கும் தெரியாது. நம்ம அதிரடி அதிரா அவர் மகன் மருத்துவத்தில் சேர எத்தனைத் தகுதித் தேர்வுகள், நேர் காணல்கள் என எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்பதோடு அவர் தன்னார்வலராக ஏதேனும் மருத்துவமனைகளில் தொண்டு செய்திருக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக் காட்டி இருந்தார். இங்கெல்லாம் அப்படிச் சொல்லிட்டு எங்கே போவது?  மாணவர்களைக் கொடுமைப் படுத்துவதாகச் சொல்லி விடுவார்கள்.

ஒரு நல்ல மருத்துவராக முக்கியமான தகுதியே மனோ தைரியம், எந்த நிலையிலும் துவளாத மனம் இவை தான். ஆனால் இங்கேயோ நுழைவுத் தேர்வுக்கே, அதிலும் படித்த பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள், உங்கள் தாய்மொழியில் பதிலளிக்கலாம், என இவ்வளவு சலுகைகள் இருந்தும் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான மனோபலம் இல்லை எனில் இவங்கல்லாம் படிச்சு மருத்துவராகப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆனாலும் கஷ்டம் தான். எதற்கெடுத்தாலும் சிங்கப்பூரை உதாரணம் காட்டுபவர்கள் அங்கெல்லாம் 3 ஆம் வகுப்பு, ஆறாம் வகுப்பு ஆகியவற்றில் பொதுத்தேர்வுகளைக் கடந்தால் தான் நல்ல பள்ளியில் அனுமதி கிட்டும் என அங்கே இருப்பவர் ஒருத்தர் சொல்கிறார். அதோடு மருத்துவம் படிக்க நுழைவுத் தேர்வுகள் அங்கேயும் இருப்பதாகவும் சொல்கிறார். இதே அம்பேரிக்கா என்றால் எடுத்த எடுப்பில் நம்ம நாடு மாதிரி மருத்துவக் கல்லூரியில் சேரமுடியாது. நான்காண்டுகள் பட்டப்படிப்பு மருத்துவத்துக்குத் தேவை. எங்க பெரிய பேத்தி சட்டம் படிக்கப் போகிறாள். அதற்கு அடிப்படையாக அவள் மூன்றாண்டுகள் அடிப்படைப் படிப்பு முடித்துப் பட்டம் வாங்கி இருக்கிறாள். இப்போது சென்ற வாரம் சட்டப்படிப்புக்குச் சேரப் பொதுத்தேர்வு எழுதி இருக்கிறாள். அதில் அவள் வாங்கும் மதிப்பெண்கள்/கிரேட் ஆகியவற்றைப் பொறுத்தே அவளுக்குக் கல்லூரி கிடைக்கும்.அவள் விரும்பும் கல்லூரி வேண்டுமெனில் அதற்கேற்ற மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.சட்டப்படிப்புக்கே இவ்வளவெனில் மருத்துவத்துக்கு? 

நான்காண்டுகள் அடிப்படைப் படிப்பு முடித்த பின்னரே மருத்துவத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கும் எம்சிஏடி என்னும் (Medical College Admission Test) தகுதித் தேர்வு உண்டு. அதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவப் படிப்பில் சேரலாம். அதிலும் நான்கு முதல் ஐந்தாண்டுகள் கட்டாயம் படித்தாக வேண்டும். அதன் பின்னர் அவரவர் தகுதி அடிப்படையில் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலும் பயிற்சி மருத்துவர். அதன் பின்னரே சிறப்பு மருத்துவத் துறைப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.  பள்ளிப்படிப்பு முடிந்ததும் இங்கெல்லாம் மருத்துவப் படிப்புக்குச் சேர்ந்து படிப்பது போல் அங்கெல்லாம் படிக்க முடியாது. அதோடு இல்லாமல் பள்ளிப் படிப்பு மட்டுமில்லாமல் அவங்க பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை, தன்னார்வத் தொண்டு, விளையாட்டு, கலை,  எனப் பல்வேறு விஷயங்களில் அவர்கள் எப்படி நேரத்தைச் செலவு செய்திருக்கிறார்கள் என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தப்புறம் படிக்க வேண்டிய படிப்பு அது தனி! இன்னொரு பதிவாக எழுத வேண்டிய அளவுக்கு இருக்கும். இந்த அழகில் பனிரண்டாம் வகுப்புத் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவத்தில் சேர்ந்தால்! அவங்கல்லாம் மருத்துவராக வந்துவிட்டால் அவங்களிடம் மருத்துவம் செய்து கொள்ள நம்ம ஊர் அரசியல்வாதிகளையும்,திரைப்பட நடிகர்களையும் அனுப்பணும். ஆனால் அவங்க என்னடான்னா வெளிநாடுகளுக்குப் போய் வைத்தியம் செய்துக்கறாங்க! இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்லுவது? :)))))))

இந்த அழகிலே இவங்க மத்திய அரசுப்பணியில் தமிழர்கள் இல்லைனு வேறே சொல்றாங்க! அதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறும் அளவுக்குப் படிப்புத்தகுதி இருக்கா? அதை விடுங்க! போக மாட்டாங்க. அதில் நிரந்தரப்பணியோடு, ஓய்வூதியத்தோடு கூடிய வேலை, மருத்துவச் சலுகை, குழந்தைகள் படிக்கச் சலுகை, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஊர் சுற்றிப் பார்க்க இந்தியா முழுவதும் போகச் செலவுத் தொகைனு எத்தனையோ உண்டு. ஆனால் நம் மக்கள் இதை எல்லாம் புரிந்து கொள்ளுவதே இல்லை. இப்போதெல்லாம் மத்திய அரசு அலுவலகங்களில் வெளி மாநிலத்தவரே அதிகம் இருக்கிறார்கள் எனில் அது ஏன்? யோசிக்க வேண்டாமா? அதோடு இல்லாமல்  ஐஏ எஸ், ஐபிஎஸ், சி.ஏ., போன்ற படிப்புகளிலும் தமிழர்கள் குறைவே! ஏனெனில் அதிலும் பொதுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் உண்டு. அவ்வளவு ஏன்? வெளிநாடுகளில் படிக்கச் செல்லுபவர்களுக்கு எனத் தேர்வுகள் தனியாக உண்டு. இப்படி எங்கே போனாலும் தேர்வுகள் வைத்தே தகுதியை நிர்ணயம் செய்யும்போது மருத்துவப் படிப்பில் நுழையத் தகுதித் தேர்வே வேண்டாம் என்றால் எப்படி?  

Friday, September 11, 2020

மஹாகவிக்கு அஞ்சலி! குஞ்சுலுவின் பிறந்த நாள்!

 Bharathiyar Images Download full HD pictures

மஹாகவி பாரதியில் நினைவு நாள். நூறாவது நினைவு தினம். மஹாகவிக்கு சுமார் ஆறு மொழிகள் தெரியும். எனினும் தமிழைத் தான் அவர் உயர்வாகக் கருதி இருந்தார் என்பது நாம் அனைவரும் அறிவோம். அவர் இன்றிருந்தால் நம் மாணவர்கள் இப்படிக் கோழையாகத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக்கொள்வது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகள் வரலாம். அவற்றை எதிர்கொள்வது தானே வாழ்க்கை? இப்படி ஒரு சின்னத் தேர்வையே எதிர்கொள்ள முடியாதவன் மருத்துவப் படிப்புப் படித்து யாரைக் காப்பாற்றப் போகிறான்? வெட்கமாக இல்லையோ?  முதலில் இவர்களால் மருத்துவம் படிக்க முடியுமா என்பதே சந்தேகம்! கையில் கத்தியை எடுத்தால் நடுங்கிப் போவான். எவ்விதத் தகுதியும் இல்லாமல் மருத்துவத்தில் சேர்ந்து அதில் முழுசாக ஆறு வருடங்கள் முடித்துப் பின்னர் பட்டமேற்படிப்பும் படித்த பின்னரே நிலையான வருமானம் பார்க்க முடியும். அத்தனை வருடங்கள் இவனால் காத்திருக்கவே முடியாது. மாணவர்களை இப்படிக் கோழைகளாக ஆக்கி வைத்திருப்பது இன்றைய படிப்பு முறையும், அரசாங்கங்களும் தான். ஒருவர் இறந்துவிட்டால் அவர் குடும்பத்திற்கு உடனே லக்ஷக்கணக்கில் பண உதவி கிடைக்கிறது/கிடைத்து விடுகிறது.  வாழ்க்கையில் அடிபட்டுக் கஷ்டத்தில் இருப்பவர்களுக்குக் கிடைக்கிறதோ இல்லையோ இம்மாதிரித் தகுதித் தேர்வுக்குப் பயந்து உயிர்விடுபவர்களை அரசாங்கம் ஆதரித்துப் பண உதவி அளித்துவிடுகிறது. போகட்டும்! 

***********************************************************************************

 " ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"  என்றான் பாரதி! ஆனால் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் எங்கே கேட்கிறது?  இதிலே ஹிந்தி வேண்டாம் போடானு சொன்னால் அவங்களுக்குத் தமிழ் உணர்வு (அது என்னனு புரியலை!) அதிகமாம். சொல்றாங்க. சொல்றவங்களும் சரி, ஹிந்தி வேண்டாம்னு சொன்னவங்களும் சரி, நாலைந்து மொழிகள் அறிந்தவர்களே! இதில் தமிழ் தான் அவங்களுக்கு எல்லாம் கஷ்டமான மொழி! சிலருக்குத் தாய்மொழியே சம்ஸ்கிருத வார்த்தைகள் நிறைந்த தெலுங்கு!  தனிப்பட்ட முறையில் நாலைந்து மொழிகளைத் தெரிந்து வைத்துக்கொள்பவர்களும், தங்கள் குழந்தைகளை மும்மொழித் திட்டப் படிப்பில் படிக்க வைப்பவர்களுமே இன்று ஹிந்தி வேண்டாம் என எதிர்க்கின்றனர்.  தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாய்க் கற்பிக்கப்படுகிறது. ஹிந்தி தமிழகத்தில் நுழையக் கூடாது எனில் அரசு மூலம் நுழையாமல் இப்படித் தனியார் மூலம் நுழையலாம் என்று பொருள் போலும்! 

**********************************************************************************

இன்று குட்டிக் குஞ்சுலுவுக்கு ஆங்கிலத் தேதிப்படி பிறந்த நாள். அது  பிறந்த ஜன்ம நக்ஷத்திரப் பிறந்த நாள் ஆவணி மாசம் பிறந்ததுமே வந்துவிட்டது. ஆனால் இப்போதைய வசதியை ஒட்டி நாளைத் தான் கொண்டாடுவார்கள். குட்டிக் குஞ்சுலுவுக்கு எல்லா நலங்களும் நிறைந்து சாப்பாடு எல்லாமுமே சாப்பிடும்படி அதிலும் விரும்பிச் சாப்பிடும்படி முன்னேற்றம் காணப் பிரார்த்திக்கிறேன். வெறும் பாலிலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எப்போவானும் பனானா! அதிலும் ஒன்றே ஒன்று தான்! :(   அதுக்குப் பிடிச்ச மிக்கி மௌஸ் கீழே!


Mickey Mouse - Wikipedia

Sunday, September 06, 2020

தேன் சிட்டும், வடமொழி கற்றலும்!

 தேன்சிட்டு2.gif

Heritage Wiki

படங்களுக்கு நன்றி மரபு விக்கி! நடராஜன் கல்பட்டு "இறைவனைக் காண்போம்!"

பிர்ட் 2 முதல்.gif


இந்தத் தேன்சிட்டு கூடு கட்டினால் அணிலனுக்கும், அணிலளுக்கும் என்ன வந்ததுனு தெரியலை! மூன்று நாட்களாக அங்குமிங்கும் சுற்றி அலைந்துத் தேன் சிட்டு (சாதாரணமான குருவி நிறத்தில் குட்டியாய் இருக்குமே அது) கூடு கட்டப் புற்களையும், தென்னங்கீற்றில் இருந்தோ அல்லது செடிகளிலிருந்தோ ரிப்பன் மாதிரி இலைக்கிழிசல்களையும் கொண்டு வந்து எதிரே இருக்கும் குடியிருப்பின் குளியலறை ஜன்னலில் எக்ஸ்ஹாஸ்ட் மின் விசிறி வைக்கும் இடத்தில் கட்ட ஆரம்பித்தது, அவ்வப்போது எங்க பால்கனிக் கம்பியில் வந்து வாயில் புல்லையோ அல்லது நீண்ட பச்சை நிற ரிப்பனையோ வைத்துக் கௌவிக்கொண்டு உட்கார்ந்து ஓய்வெடுக்கும். சரினு காமிராவைத் தூக்கிண்டு வரதுக்குள்ளே ஓடிடும் உள்ளே. அங்கிருந்து சின்னத் தலையை நீட்டி எட்டி எட்டிப் பார்க்கும். எதிரே இருக்கும் சுவர்! எதிரே குடித்தனம் இருக்காங்க. ஏற்கெனவே நாங்க அந்தப் பக்கமே பார்ப்பதைப் பார்த்து என்ன நினைப்பாங்களோனு தோணும். இப்போ அங்கே படம் எல்லாம் எடுத்தால் என்ன சொல்லுவாங்களோனு படம் எல்லாம் எடுக்கவில்லை. நம்ம பக்கம் வந்தால் எடுக்கலாம்னா ஓடிப் போயிடுதுங்க.


நேத்திக்கு இப்படித்தான் எல்லாவற்றையும் இரண்டுமாக விர் விர் விர் விர்ருனு பறந்து பறந்து கொண்டு வைத்துவிட்டுச் சாப்பிடவோ எங்கேயோ போயிருக்குங்க. நான் சமையல் செய்ய சமையலறைக்கு வந்துட்டேன்.  தற்செயலாக ஏதோ மனதில் பட நிமிர்ந்து பார்த்தேன். ஜன்னலில் இருந்து அந்தச் சுவரும் அந்த வட்ட வடிவனமான காற்றுப் போக்கியும் நல்லாவே தெரியும். அங்கிருந்து பார்த்தால் இந்த அணிலன் வந்து மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கிறான். உள்ளே பார்த்துட்டுச் சுற்றும் முற்றும் ஒரு திருட்டுப் பார்வை. எனக்கு உடனேயே திக்கென்றது. உஷ், உஷ் எனச் சத்தம் கொடுத்தேன். ம்ஹூம், அணிலனுக்கு லக்ஷியமே இல்லை. உள்ளே சொருகி வைத்திருந்த பச்சைப் புல்லை எல்லாம் வெளியே இழுத்துத் தள்ளி விட்டது. எல்லாம் கீழே போய் விழுந்தது. இன்று வேலை செய்யும் பெண் வந்தப்போ கீழெல்லாம் அந்தப் புல் கிடந்தது என்று சொன்னார். எல்லாம் அணிலன் வேலை என்று நான் சொன்னேன். அது எப்படியோ தெரியலை தேன் சிட்டுக்குத் தெரிந்து விட்டது. அந்தப் பக்கமே அப்புறமாப் போகலை. வேறே எங்கேயோ புதுசா இடம் பிடித்திருக்கிறது. இன்னிக்கெல்லாம் அங்கே தான் போய்க் கொண்டிருக்கு. எனக்கு ரொம்பவே வருத்தமாப் போச்சு! 

அது பாட்டுக்குக் கூடு கட்டினால் இந்த அணிலனுக்கு என்ன வந்ததாம்? அதுக்கோ அதனுள் நுழையவே முடியாது. அவ்வளவு சின்ன துவாரங்கள். இந்தச் சுண்டு விரல் நீளத் தேன் சிட்டு,  அதிலும் குட்டிக் குஞ்சுலுவின் சுண்டு விரல் நீளத்தில் உள்ள தேன்சிட்டுக் குருவி அங்கே கூடு கட்டினால் என்ன ஆகி விடும்? ஆனால் இதுக்கெல்லாம் தேன்சிட்டு அசைந்து கொடுக்கலை. இங்கே கூடாதா சரினு  எல்லாவற்றையும் எதிர்கொண்டு கொஞ்சமும் பயமில்லாமல் அது வேறிடத்தை மாற்றிக் கொண்டு மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் புதுக்கூடு கட்டிக் கொண்டிருக்கு! ஆனால் மனிதர்களான நாமோ? உடனே மனச் சோர்வு அடைந்து விடுகிறோம். என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். இதுங்களிடமிருந்து நாம் கற்க வேண்டியது எத்தனையோ உள்ளன. ஆனாலும் குயிலம்மாவைப் பார்த்தெல்லாம் கத்துக்கக் கூடாது. சரியா? அது பாட்டுக்குக் காக்கைக் கூட்டில் முட்டையிட்டுவிட்டுக் கவலையில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும். பொறுப்பே இல்லாத ஜன்மங்கள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடவுள் இதுக்கு மட்டும் ஏன் இப்படி புத்தியைக் கொடுத்தார்?

***********************************************************************************

முகநூல் முழுசாகச் சில நண்பர்கள், "நான் நாலைந்து மொழி கற்றிருக்கிறேன்; நாலைந்து மொழி பேசுவேன்!" என்றெல்லாம் பதிவுகள் போட்டிருக்கத் திடீர்னு என்ன வந்தது? அரசாங்கம் தான் இப்படி ஏதேனும் எதுக்கானும் கேட்டிருக்கோனு பார்த்தால் ஒரு பதிவில் சில இளைஞர்கள் அணிந்திருந்த டீ ஷர்ட்டில், "எனக்கு ஹிந்தி தெரியாது!" என்னும் வாசகங்கள்! சிரிப்புத் தான் வந்தது. இதைத் தமிழ்நாட்டில் சொல்லுவானேன். ஹிந்தி பேசும் மாநிலங்களில் சொன்னால் புரிஞ்சுக்கலாம். ஆனால் அதிலும் பாதி தமிழ், பாதி ஆங்கிலம்னு எழுதி இருப்பதால் தமிழ் தெரியாதவங்க புரிஞ்சுக்கறதும் கஷ்டம்.  இங்கே ஹிந்தி பேசுபவர்கள் குறைவு என்பதோடு வட மாநிலத் தொழிலாளர்கள் திரும்பிச் சென்றவர்கள் எல்லாம் மறுபடி தமிழ்நாடு வர யோசிக்கிறாங்களாம். அவங்க குடும்பமே அவங்க இப்படி வந்து வேலை செய்வதைத் தடுக்கிறதாம். ஒரு காரணம் டாஸ்மாக். இங்கே வந்தால் அது பழகிடும் என்பது. இரண்டாவது காரணம் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பது. இதை வேலைக்கு எடுக்கிறவங்க செய்து கொடுக்கணும். ஆனால் அவங்க வரைக்கும் குறைந்த சம்பளத்திற்கு ஆட்கள் கிடைத்தால் போதும் என இருக்காங்க போல! இப்போதுகட்டுமான வேலைகள், தொழிற்சாலை வேலைகள்னு எல்லாவற்றிற்கும் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை. ஆங்காங்கே முதலாளிகள், சின்னச் சின்னத் தொழிலதிபர்கள் புலம்பல்கள்! இன்னும் சொல்லப் போனால் அம்பத்தூரில் எங்க வீட்டை இடித்துக் கட்டிக் கொண்டிருக்கும் பில்டரும் ஆட்கள் சரியாக வருவதில்லை என்பதால் வீடு முடிய ரொம்பத் தாமதம் ஆகிறது என்கிறார்.  ஹிந்தி கற்றுக்கொண்டு என்ன செய்வது? பானி பூரியா விற்க முடியும் என்றவர்களுக்கு நல்ல வேலை கிடைத்ததோ இல்லையோ அந்த ஹிந்தி பேசும் ஆட்கள் இல்லாமல் இங்கே பல வேலைகள் தொங்கலில்!

நம்ம தமிழர்கள் இல்லாத இடம் எங்கே? இதில் மட்டும் நாம் பெருமை பீற்றிக்  கொள்வோம். ஆனால் வெளி மாநிலம் போய் அங்குள்ள மொழியையும் அவங்க கற்றுக்கொண்டு நிபுணர்களாய் இருப்பதைப் பற்றி வாயைத் திறக்க மாட்டோம். இதை நான் கர்நாடகத்திலேயே பார்த்தேன். ஆட்டோ ஓட்டும் தமிழர் கூட உள்ளூர் மக்களோடு கன்னடத்திலும், தமிழர்களைப் பார்த்தால் தமிழிலும், வெளிநாட்டுப் பயணிகளிடம் ஆங்கிலத்திலும், வடமாநிலப் பயணிகளிடம் ஹிந்தியிலும் பேசுகின்றனர்.  அநேகமாக இவர்கள் தமிழகத்தில் சேலம், ஈரோடு,திருப்பூர், கோவைப்பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.  இன்றைய தினசரியில் பர்மாவில் இருந்து 60களில் அகதிகளாக வந்த தமிழர்களில் பலரும் இங்கிருக்கப்பிடிக்காமல் மீண்டும் பர்மா போனப்போ அங்கே ஏற்பட்டிருந்த ராணுவ ஆட்சி அவர்களை ஏற்காமல் திருப்பி அனுப்ப, அவங்க தமிழகம் வரப்பிடிக்காமல் அங்கேயே எல்லைப்பக்கமே தங்கி தங்களுக்குத் தெரிந்த வியாபாரத்தில் ஈடுபட்டு இப்போது அங்கே கோயில்கள், வர்த்தகத்தில் முதன்மை என அங்கிருந்த பூர்வகுடிகளை விட முன்னேறி இருக்கிறார்களாம். தமிழகத்தை விட்டு வெளியே சென்று சில காலம் வாழ்க்கை நடத்திய தமிழர்களால் நிச்சயம் மீண்டும் தமிழகம் வந்து வாழ்க்கை நடத்துவது இயலாத ஒன்று. அந்த பர்மிய அகதிகளான தமிழர்கள் பர்மிய மொழி, ஹிந்தி, வங்காளம், தமிழ், ஆங்கிலம் என சுமார் ஐந்து மொழிகள் பேசுகின்றனராம்.


நாம இன்னமும் தமிழ் மட்டும் பேசுவோம்; படிப்போம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கோம். அப்படியானும் தமிழை உருப்படியாகக் கற்றிருக்கோமா என்றால் அதுவும் இல்லை. பழங்காலத் தமிழ் இலக்கியங்களையும், தமிழ் இலக்கணங்களையும் கற்பதே இல்லை. பேசும் தமிழோ கொடுமையிலும் கொடுமை! தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தங்கள், தமிழில் இருக்கும் கம்பராமாயணம், வில்லி பாரதம் போன்ற பக்தி இலக்கியங்களையும் கற்க வேண்டும். கூடவே ஐம்பெரும் காப்பியங்களையும் கற்க வேண்டும்.  ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்கள் அநேகமாக வடமொழியில் இருப்பதைக் கண்டாலே போதும். இப்போதுள்ள வடமொழி வெறுப்புக் குறையும். பௌத்த, சமண சமயங்களைச் சேர்த்த காப்பியங்களாகக் கருதப்படும் இவற்றில் வடமொழி ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் சீவக சிந்தாமணி வடமொழிக்காப்பியங்களான கத்திய சூடாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகியவற்றைத் தழுவி முழுப் பெரும் காப்பியமாக எழுதப் பட்டதாகும். திருத்தக்க தேவருக்கு வடமொழிப் புலமை இருந்ததால் அல்லவோ இது சாத்தியம் ஆனது! இப்படித் தமிழில் இருந்து வடமொழிக்கும், வடமொழியிலிருந்து தமிழுக்கும் அந்தக் கால கட்டங்களில் போக்குவரத்து இருந்து கொண்டிருந்திருக்கிறது.

 இதன் காலம் சரிவரத் தெரியவில்லை என்றாலும் சங்க காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலைக்குப் பின்னர் சோழர் காலத்தில் எழுதப் பட்டதாகச் சொல்கின்றனர். சுமார் ஒன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில்  வளையாபதியும், பத்தாம் நூற்றாண்டில் குண்டலகேசியும் எழுதப்பட்டிருப்பதால் இது அதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்கலாம். அப்போதெல்லாம் வடமொழிக்கு எந்தவிதமான எதிர்ப்புக்களும் இருந்ததாகத் தெரியவில்லை. இப்போது தான் கடந்த நூறாண்டுகளாக எதிர்ப்புத் தோன்றி வளர்ந்து வருகிறது. எனினும் விரைவில் நிலைமை சீரடையும் என எதிர்பார்ப்போம்.

தலைப்பைப் பார்த்துட்டுத் தேன் சிட்டுக்கும், வடமொழிக்கும் என்ன சம்பந்தம்னு மண்டையை உடைச்சுக்க வேண்டாம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தலைப்பைப் பார்த்துட்டு வருவீங்க இல்ல, அதுக்குத் தான்.

மேலே போட்டிருக்கும் தேன்சிட்டுப் படங்கள் சொந்தம்தான் ஒரு வகையில். நடராஜன் கல்பட்டு ஐயா உயிருடன் இருந்தப்போ அவர் எழுதித் தொகுத்தப் பறவைகள் பற்றிய தொடரை மரபு விக்கியில் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தப்போ இந்தப் படங்களையும் அங்கே ஏற்றினேன். அதிலிருந்து தான் இங்கே எடுத்துப் போட்டிருக்கேன். சுட்டியும் கொடுத்திருக்கேன். முடிஞ்சா மரபு விக்கியையும் எட்டிப் பாருங்க. அநேகமாக எல்லாத் தலைப்புக்களிலும் நம்ம கைவண்ணம் கொஞ்சமானும் இருக்கும். ஒரு காலத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலராக  முழு நேர வேலையாகச் செய்துட்டு இருந்தேன். இப்போ எல்லாவற்றையும் நிறுத்தியாச்சு.

Tuesday, September 01, 2020

கணினியிலிருந்து தமிழ் வரை!

இரண்டு மடிக்கணினி இருக்குனு சொல்லி இருக்கேன் இல்லையா? அதில் பழசில் பாட்டரி தீர்ந்து போய் ஆறு மாசமாக மாத்திடு, மாத்திடுனு கதறிக் கொண்டிருந்தது. நான் அதை சார்ஜில் போட்டுக் கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தேன். வழியில் வயர் நீளமாக நீட்டிக் கொண்டிருக்கும். நம்மவருக்கு அதைத் தாண்டுவது ஏதோ வித்தை போல! கஷ்டப்பட்டுப் போவதாய்க் காட்டிப்பார். ஆனாலும் இன்னிக்கு வேண்டாம், இன்னும் கொஞ்ச நாட்கள் ஓட்டலாம்னு இருந்தேன். ஆனால் பாருங்க, இன்னிக்கு "வேல் மாறல்" பாராயணம் பண்ணும்போது தொலைபேசி அழைப்பில் இன்னிக்கு ஒரு முக்கியமான மெயில் மைத்துனர் அனுப்பி இருப்பதாய்க் கூறவே அதைப் பார்க்க வேண்டி மெயிலைத் திறந்துவிட்டு நம்ம ரங்க்ஸிடம் காட்டினேன். அவர் தன்னோட டீபாயின் மேல் வைக்கச் சொல்ல அவசரமாக அதில் கனெக்டிங் வயர் இருப்பதை மறந்துட்டு அப்படியே இழுத்துட்டேன். அம்புடுதேன். போயே போச்! போயிந்தி! ஒண்ணுமே வரலை! ஒரே கறுப்புத் திரை. மறுபடி வயரைச் சொருகிப் ப்ளகில் சேர்த்து ப்ளகையும் "ஆன்" செய்துட்டுக் கணினியைத் திறந்தால் Option "Start windows normally"  வந்தது, சரினு தட்டிட்டு உட்கார்ந்தால் வின்டோஸ் திறக்கவே இல்லை.

மறுபடி ஜகதலப்ரதாபன் போல சில, பல வேலைகளைச் செய்து மறுபடி ஸ்டார்ட் கொடுத்தால் உடனே கணினி ரிப்பேருக்குப்போய் விட்டது. இது முடிய சில, பல நிமிடங்கள் ஆகும்னு சொல்லிட்டது. ஆகவே இன்னொரு மடிக்கணினியில் நம்மவருக்கு வேண்டியதை எடுத்துத் திறந்து கொடுத்தேன். இது ரிப்பேர் ஆகி வின்டோஸ் சரியாகத் திறந்து டெஸ்க் டாப் திறக்கவும் பார்த்தால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பல ஐகான்கள் இல்லை. முக்கியமாய் இணைய இணைப்பே இல்லை. காணாமல் போய்விட்டது. க்ரோம் எங்கேனே தெரியலை. ஆன்டி வைரஸ் எனக்கும் இந்தக் கணினிக்கும் சம்பந்தமே இல்லைனு சொல்லுது. எப்படியானும் இணைய இணைப்பைக் கொண்டு வந்துடலாம்னு முயன்றால் ம்ஹூம்! அசையவே இல்லை. சரி, இணைய இணைப்புக் கொடுப்பவரைக் கூப்பிடலாமானு நினைச்சுட்டு அடுத்த நிமிஷமே அந்த யோசனையைப் புறம் தள்ளிவிட்டுக் கணினி மருத்துவரையே கூப்பிட்டேன். மத்தியானம் வருவதாகச் சொன்னார்.

மத்தியானம் வந்து பார்த்துட்டு நான் செய்த மாதிரியே செய்தார். இணைய இணைப்பு வந்துவிட்டது. துரோகி! ஆனால் க்ரோம் எல்லாம் வரலை. ஆன்டி வைரஸும் வரலை. அப்புறமாய்ப் பார்த்துட்டு ஆன்டி வைரஸ் முடிஞ்சிருக்கிறதைக் கண்டு பிடித்துச் சொன்னார். அதுக்கப்புறமா இனிமேல் தாங்காது, பாட்டரி வாங்கியே தீரணும்னு சொல்லி அவரை பாட்டரியும் வாங்கிப் போடச் சொல்லிட்டு ஆன்டி வைரஸையும் புதுப்பிச்சாச்சு. இத்தனை நேரம் அதான் வேலை. இப்போக் கணினியில் அந்த ஜாவா ஸ்க்ரிப்ட் எரர் வந்தது கூட வரலை என்பதோடு ஜிமெயில் கனெக்ட் செய்யும் போது "cannot sync" என்று வருமே அதுவும் வரவில்லை. ஏதோ புதுக்கணினியில் வேலை செய்யறாப்போல் ஒரு எண்ணம்.
********************************************************************************

ஒரு வாரமாகக் கண்ணில் வலப்பக்கம் கீழ் இமை வீங்கிக் கொண்டிருந்தது. ஏதோ கண்ணில் தான் பிரச்னையாக்கும்னு நினைச்சுட்டுக் கணினிப் பயன்பாட்டையும் குறைத்திருந்தேன். வலி வேறே இருந்தது. கடைசியில் அது ஏதோ எறும்போ, கொசுவோ, வண்டோ கடித்ததால் வந்ததுனு தெரிய வந்தது. ஆனாலும் கண்கள் சிவந்து வீங்கிப் பார்க்கவே கவலை அளிக்கும்படி இருந்தது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு!
*********************************************************************************

ஊரடங்கை முழுக்கத் தளர்த்தி இருக்காங்க என்றே சொல்லலாம். மக்கள் ஊரடங்கிலேயே சொன்னதைக் கேட்காமல் கூட்டம் கூட்டமாகக் கூடினார்கள். இனிமேல் கேட்கவே வேண்டாம். பேருந்து சேவையையும் ஆரம்பித்து விட்டதாகத் தெரிய வருகிறது. ஆனால் இங்கே திருச்சியில் தனியார் பேருந்து சேவை இப்போது துவக்கப் போவதில்லையாம். நல்லதாய்ப் போச்சு! கோயில்கள் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டாலும் எங்களைப் போன்றவர்கள் போக முடியாது. பத்து வயதுக்குக் கீழுள்ளவர்களும், அறுபது/அறுபத்தைந்து வயதுக்கு மேல் ஆனவர்களும் போகக் கூடாதாம்! என்னத்தைச் சொல்வது!
*********************************************************************************

நாட்டு நடப்பு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. சின்னச் சின்னக் காரணங்களுக்கெல்லாம் சண்டை, வெட்டு, குத்து. பசுமாடு மேய்ந்தது என்பதற்காக ஒருத்தர் மாட்டை வெட்டி விட்டார். பாவம், வாயில்லாப் பிராணி. இன்னொரு கூட்டத்தில் நண்பர்கள் தங்கள் நண்பன் பிறந்த நாளில் அவருக்குச் சாணி அபிஷேஹம், சாம்பல் அபிஷேஹம் என்றெல்லாம் செய்து கிட்டத்தட்ட அரைக் கொலை பண்ணி இருக்கிறார்கள். இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தியைத் தூக்குவதோ அரிவாளைத் தூக்குவதோ அதிகம் ஆகிவிட்டது. மக்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டுக் கொந்தளிக்கின்றனர்.
*********************************************************************************
தமிழர்களுக்கு அரசாங்க வேலை முக்கியமாய் மத்திய அரசு வேலை கொடுப்பதில்லை/ஓர வஞ்சகம் என்றொரு விமரிசனம் எழுந்துள்ளது. முதலில் இப்படி வேலைக்கு ஆட்கள் எடுப்பதை நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறார்கள்? அறிந்து வைத்திருந்தாலும் எத்தனை பேர் அதற்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் மனோநிலையில் இருக்கிறார்கள்? இங்கே தான் தேர்வு முறைகளையே எதிர்க்கும் சூழ்நிலை. எட்டாம்வகுப்புப் பொதுத் தேர்வு ஆங்கிலேய ஆட்சி முறையிலேயே இருந்தது தான். அந்தக் காலங்களில் பலரும் எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஈஎஸ் எல் சி என்பார்கள். அதில் தேர்ச்சி பெற்றதும் ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியர்களாக ஆகி இருக்கின்றனர். எங்க வீட்டிலேயே அம்மாதிரி நாலைந்து பேர் ஆசிரியர்களாக ஆகி இருக்கின்றனர். தேர்வு வைத்தால் தான் தகுதி தெரியவரும். தேர்வினால் மாணாக்கர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாக இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்தால் மன அழுத்தம் போய்விடுமா?

அப்போது பத்தாம் வகுப்பு, பனிரண்டாம் வகுப்பில் மன அழுத்தம் அதிகம் ஆகாதா? அப்போது மட்டும் மாணவர்களுக்கு மன தைரியம் வந்துவிடுமா? ஏற்கெனவே மோசமான பாடத்திட்டம். அள்ளிப் போடப்படும் மதிப்பெண்கள்/ எல்லாவற்றையும் மனப்பாடம் பண்ணி எழுதும் மாணாக்கர்கள். இவர்கள் மேல் வகுப்புகளுக்கு அதாவது கல்லூரிகளில் பொறி இயல்,  மருத்துவம் படிக்கையில் திணறிப் போகின்றனர். பலராலும் எதிர்கொள்ள முடியாமல் போகிறது. இந்த அழகில் தேர்வே வேண்டாம் என்று சொல்லுவது அநியாயம். முதலில் பாடத்திட்டத்தை மனப்பாடம் செய்யாமல் புரிந்து கொண்டு படிக்கும்படி மாற்றி ஆக வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கும் பாடத்தில் விருப்பம் வரும். எத்தனை பேருக்கு அரசு வேலைக்கு +2 படித்தால் போதும் என்பது தெரியும்? அதற்கான தகுதித் தேர்வுக்கு எப்படித் தயார் செய்து கொள்வது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதை எல்லாம் சொல்லிக் கொடுக்கும்படி இங்கே யாரும் இல்லை. இங்கே உள்ள அரசியல்வாதிகளுக்கோ, படிப்புச் சொல்லிக் கொடுப்பவர்களுக்கோ அதில் எல்லாம் ஆர்வமும் இல்லை; அதை எல்லாம் தெரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.

இதை எல்லாம் மாநில அரசு தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஐஏ எஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் ஒரு காலத்தில் தமிழகம் தான் கோலோச்சியது. இப்போது தமிழகத்தைப் பொறுத்தவரை அதில் தேர்ச்சி பெறுபவர்கள் சிபிஎஸ்சி, ஐசிஎஸ் ஈ போன்ற தனியார் பள்ளிகள் அல்லது கேந்திரிய வித்யாலயாவில் படித்தவர்களாகவே இருப்பார்கள். இந்தப் பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக இவற்றில் படிக்கும் அளவுக்கு வசதி படைத்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால் அரசுப்பள்ளிகளில் படித்தவர்களால் இவற்றை எதிர்கொள்ள முடியாது. பாடத் திட்டம் மட்டுமின்றி  அந்த அளவுக்கு மாணவர்களைக் கோழையாக்கி வைத்திருக்கிறார்கள். ஆகவே இப்போது "நீட்" "ஜேஈஈ" மற்றத் தேர்வுகளுக்கு அரசு சார்பில் பயிற்சிப் பள்ளிகள் இருப்பதைப் போல் இம்மாதிரி மத்திய, மாநில அரசுத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள், ரயில்வேதேர்வுகள் ஆகியவற்றை எதிர்கொள்ளவும் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் தமிழக மக்களும் மத்திய , மாநில அரசுப்பணிகள், வங்கிப் பணிகள், ரயில்வே போன்றவற்றில் வேலை வாய்ப்புக்குப் போட்டியிட முடியும். இப்போது பொறி இயல் படித்துவிட்டுக் கூட ஐஏ எஸ், ஐபிஎஸ் தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெறுகிறார்கள் எனில் அந்தத் தேர்வுகள் எவ்வளவு கடினமானவையாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்குக் கிடைக்கும்/கிடைத்திருக்கும்/கிடைக்கப் போகும் பெரும் சொத்து கல்வி ஒன்று மட்டுமே. அதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் கஷ்டப்பட்டு உழைத்துப் படித்தால் சமூகத்தில் நன்றாக முன்னுக்கு வரலாம். படிக்கும் காலம் படிப்பு ஒன்றைமட்டுமே நினைத்துப் படிக்க வேண்டும்.  தேர்வுகளை எதிர்கொள்ளும் மனோ தைரியம் வேண்டும். தமிழ்நாட்டில் தமிழில் படிப்பவர்களால் கூடத் தமிழை ஒழுங்காக எழுதவோ, பேசவோ முடியவில்லை. "சொல்ல மாட்டேன் என்கிறார்கள்" என்பதைச் "சொல்ல மாட்ராங்க" என்கிறார்கள். நமது முதல் மந்திரியாக இருக்கும் எனச் சொல்ல வேண்டியதை, "முதல் மந்திரியாக இருக்கக் கூடிய" என்கின்றனர். இருக்கக் கூடிய என்பது ஏதோ சந்தேகமாகச் சொல்லும்போது பயன்படுத்த வேண்டியது அல்லவோ?  அதே போல் திருமணம் பண்ணிக் கொள்வேன், என்பதை "கல்யாணம் பண்ணுவேன்" என்கின்றனர். இது இவங்க யாருக்கோ கல்யாணம் பண்ணி வைப்பதைத் தான் குறிக்கும். "நீடூழி வாழ்க" என்பது இப்போது "நீடுடி வாழ்க" என்றாகி அதுவே நிரந்தரமாகவும் ஆகி விட்டது. இப்படிப் பல சொற்கள் அர்த்தமே மாறிப் பேச்சுக்களில் எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்னத்தைச் சொல்றது! இந்த அழகிலே வேறு மொழி வந்துவிட்டால் தமிழ் அழிந்து விடுமாம்.

தொல்காப்பியர் காலத்திலிருந்து மணிப்ரவாள நடை, க்ரந்தம், எனப் பலவற்றையும் பார்த்திருக்கும் தமிழ்மொழி, தெலுங்கு, கன்னட, துளு, மராட்டி அரசர்கள் ஆட்சியின்போதெல்லாம் அழியாத தமிழ்மொழி, கிட்டத்தட்ட 40 ஆண்டு கால சுல்தான்கள் மதுரையில் ஆட்சி புரிந்தபோது அழியாத தமிழ்மொழி இப்போது ஹிந்தி வந்துவிட்டதாலோ, அல்லதுவேறே மொழி வந்துவிட்டதாலோ அழிந்துவிடுமா? மொழி என்றைக்கும் அழியாதது. அதைப் பேசும் கடைசி மனிதன் இருக்கும்வரை அழியாது. தமிழ்நாட்டில் இத்தனை கோடி மக்கள் இருக்கையில்சென்னைத் தமிழ், நெல்லைத் தமிழ், குமரித் தமிழ், மதுரைத் தமிழ், மலையாளத் தமிழ் என்றெல்லாம் தமிழ் இருக்கையில் தமிழ் அழிந்தெல்லாம் போகாது. என்றென்றும் வாழும், நாம் மனம் வைத்தால்!