எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 29, 2020

வந்தாச்சு புடைவை!

 sahana.com  இந்தச் சுட்டியில் இன்று ஏடிஎம் அறிவிப்புச் செய்துள்ளார்.

சஹானா இணைய இதழில் ஏடிஎம் தீபாவளிக்குப் பல போட்டிகள் வைத்திருந்தார். அதிலே தீபாவளி பக்ஷணம் செய்முறையில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது என்பது எனக்கே ஆச்சரியம். தீபாவளி நினைவுகள் பற்றி எழுதியதற்குப் பரிசு ஒண்ணும் கிடைக்கலை. மற்ற போட்டிகளில் நான் கலந்து கொள்ளவில்லை. முதல் பரிசு கிடைத்ததற்கு என்ன தருவாங்களோனு யோசனையில் இருந்தப்போ சனிக்கிழமை புடைவை அனுப்பப் போவதாக இந்தப் போட்டிக்கு ஸ்பான்சர் பண்ணிய "மதுரா பொடிக்" காரங்ககிட்டே இருந்து மெயில் வந்தது. இன்னிக்குப் புடைவையும் வந்து சேர்ந்தது. ஏடிஎம் அவங்க சார்பிலே ஒரு ட்ராஃபியும், இ-சான்றிதழும் அனுப்பினாங்க. எல்லாவற்றையும் இங்கே படம் பிடித்துப் போட்டிருக்கேன். ஏடிஎம்முக்குத் தனியா அனுப்பிட்டேன். அவங்க கொஞ்ச நேரம் முன்னர் வரை பார்க்கலை. 

நான் போட்டினு கலந்து கொண்டதே முதல் முதலாக வைகோ சார் வைத்த விமரிசனப் போட்டியில் தான். ஒவ்வொரு போட்டியிலும் அவர் என்னைத் திரும்பத் திரும்பத் தொந்திரவு செய்து எழுத வைத்தார். அதிலும் முதல், இரண்டாம் பரிசுகள், மூன்று முதல் பரிசுகள் எனக் கிடைத்தது. அதன் பின்னர் எந்தப் போட்டியிலும் கலந்துக்காம இருந்தேன். இது நம்ம ஏடிஎம் ஆச்சேனு கலந்து கொண்டேன். முதல் பரிசே கிடைத்துவிட்டது. 

கீழே படங்கள்.


ஏடிஎம் அனுப்பி வைத்த ட்ராஃபி




புடைவைனதும் எங்கேயாவது டிசைனர் புடைவையா இருக்கப் போறதேனு ஒரே கவலை. நல்லவேளையாக் காட்டன் புடைவை.  இரு பக்கக் கரையும் கோர்த்து வாங்கினதாம். போட்டிருந்தது அதிலே. ஹிஹிஹி, கலர் தான் ஏற்கெனவே 2 இருக்கு. நம்ம ராசி அம்புடுதேன்/அப்படித்தேன்! :))))))  இந்தச் சொல்லாடல் சும்மாச் சிரிக்க மட்டும். தீவிரமாக எடுத்துக்க வேண்டாம்.


மதுரா பொடிக் காரங்க எழுதி இருந்த கடிதம்


ஏடிஎம் இரண்டு பதிவுகளுக்கும் அனுப்பி வைத்த சான்றிதழ்கள். 




முன்னாடியே ஏன் பகிர்ந்துக்கலைனு நினைப்பவர்களுக்கு எல்லாத்தையும் சேர்த்துப் போட்டுப் பீத்திக்கணும் என்று ஓர் அல்ப ஆசை. அது இப்போ நிறைவேறியாச்சு!


Monday, December 28, 2020

மதுரையும் மார்கழி மாசமும்!

பத்து நாட்களுக்கும் மேல் தொடர்ந்து பதிவுகள் வரலைனதும் சிலர் என்ன ஆச்சு என்று கேட்டனர். முக்கியமாய் ரேவதி பயந்தே விட்டார். தொலைபேசி அழைத்துக் கேட்டார். கண்கள் தான் முக்கியக் காரணம் என்றாலும் நான் எழுத நினைப்பதை எல்லாம் எழுத முடியாது என்பதும் ஒரு காரணம். கண்கள் வேறே சோர்ந்து விடும் விரைவில். அதன் பின்னர் கண்களை மூடிக் கொண்டாலே தேவலை எனத் தோன்றும். ஆகவே அதிகம் கணினியில் உட்காரலை. ஆனாலும் புத்தகங்கள் படித்தேன். திரு கௌதமன் அனுப்பி இருந்த அனுத்தமாவின் இரண்டு நாவல்கள், ஸ்ரீராம் அனுப்பியது "நைந்த உள்ளம்" (லக்ஷத்துப் பத்தாயிரமாவது தரம்) "பிரேம கீதம்" முதல் முறை படித்து முடித்தேன். புத்தகங்கள் வெளியீடு செய்யத் தொகுக்கும் வேலையை நிறுத்தி வைச்சிருக்கேன். அதையும் தொடரணும். இப்படிப் பல வேலைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்றன. வீட்டில் சுத்தம் செய்யும் வேலைக்கு ஆளைக் கூப்பிட முடியாத காரணத்தால் நாங்களே செய்துக்க வேண்டி இருக்கிறது. காலைப் பொழுதின் பெரும்பாகம் அதில் போய்விடும். அதோடு கொஞ்ச நாட்கள் எழுதாமல் இருப்போமே என்னும் எண்ணமும் தான். கீழே கொடுத்திருக்கும் பதிவு 2008 ஆம் வருடம் டிசம்பர் 29 ஆம் தேதியில் "மதுரை மாநகரம்" வலைப்பக்கம் பகிர்ந்தது. இங்கே மீள் பதிவாய்க் கொடுத்திருக்கேன்.

திருப்பாவை, திருவெம்பாவை எழுதியாச்சு என்பதால் அதை மீள் பதிவாய்ப் போட வேண்டாம்னு போடலை. "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்" என்னும் பெயரில் திருப்பாவைப் பதிவுகள் மின்னூலாக வெளிவந்துள்ளது.

மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் இங்கே காணலாம். ஆகவே திரும்பத் திருப்பாவை, திருவெம்பாவை பத்தியெல்லாம் எழுதாமல் சின்ன வயசில் மதுரையில் கழித்த நாட்களின் நினைவுகளைக் கீழுள்ள பதிவில் மறுபடியும் பகிர்ந்துள்ளேன்.  பதிவுகள் 3,000 த்தை நெருங்கிக் கொண்டிருப்பதாலும் நிறுத்தி வைத்துள்ளேன். 

**********************************************************************************

மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தைப் சில வருடங்கள் முன்னர் டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது. 



உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.



பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார். சனிக்கிழமைகளில் பெரியப்பா வீட்டில் ஏதாவது ஒரு சனிக்கிழமை பஜனை கோஷ்டியை அழைத்துச் சூடான பால், காலை ஆகாரம் முதலியன கொடுத்து கௌரவிப்பார்கள். அதில் எல்லாம் கலந்து கொண்டு பள்ளிக்கும் போயிருக்கேன். 

மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.

எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம். நம்ம ரங்க்ஸுக்கு இந்த கோஷ்டி என்றால் என்னனே தெரியாது. அவங்க பெற்றோருக்கும் தெரிஞ்சிருக்கலை. பின்னர் தான் தெரிந்து கொண்டார்கள். கோஷ்டி பார்க்க ரங்க்ஸுக்கு ஆசை இருக்கவே இங்கே ஶ்ரீரங்கம் வந்த பின்னர் உள் ஆண்டாள் சந்நிதியில் நடைபெறும் கோஷ்டியில் 2,3 முறை கலந்து கொண்டிருக்கோம். 

சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதிலும் அந்தத் தயிர் சாதம்! அதன் சுவையே தனி. வடக்குக் கிருஷ்ணன் கோயிலும்  ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! ஆனால் அப்போவே அதில் தூண்களின் சிற்ப விசித்திரங்களைப் பார்த்து ஆச்சரியமா இருக்கும்.   கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். அப்பாவெல்லாம் காலை நான்கரை மணிக்குக் கிளம்பினா எல்லாக் கோயில்களுக்கும் போயிட்டு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வருவார். என்ன ஒண்ணு பிடிக்காதுன்னா எல்லாக் கோயில்ப் பிரசாதங்களையும் ஒண்ணாய்ப் போட்டுக் கொண்டு வருவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த அந்தக் கோயில் பிரசாதத்தின் தனிச் சுவையே தெரியாமல் போயிடும்.  காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((

Wednesday, December 16, 2020

மனம் விட்டுப் பேசுகிறேன்!

 சமீப காலமாகவே கொலை, தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. மனதில் வலிமை இல்லாததே காரணம்.  வளர்க்கும்போதே மனோபலத்தை ஊட்டி வளர்ப்பது இப்போதெல்லாம் குறைந்து வருகிறது. முக்கியமாக நீதி போதனைகள், இது தப்பு செய்யக் கூடாது, இது செய்யலாம், என்பதை எல்லாம் பெற்றோரோ, பள்ளிகளோ சொல்லிக் கொடுப்பதில்லை, பள்ளிப் பாடங்களில் நீதி போதனைகளே இருப்பதில்லை. கடவுள் வாழ்த்திலிருந்து எல்லாவற்றையும் நீக்கிய போதனைகளே அதிகம். ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றிலிருந்து அவற்றின் நீதிகளையும், அது சொல்லும் கருத்துக்களையும் யாரும் பார்ப்பதில்லை. தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் போன்றவை போதிக்கப்படுவதே இல்லை. இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் ஆண்டாள் யார் என்றே தெரிந்திருக்காது. தேவார, திருவாசகங்களை எங்கே இருந்து அறியப் போகின்றனர்1 திருப்பாவை, திருவெம்பாவையின் முக்கியமும் திருப்பள்ளி எழுச்சி பற்றிய அறிவும் நிச்சயம் இருக்காது. 

இது போதாது எனத் தொலைக்காட்சிகள் தங்கள் நெடுந்தொடர்களில் பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைத்து வருகின்றன. பிரபலமான தொலைக்காட்சியில் தினம் மாலை ஆறரை மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு தொடரில் மூன்று குழந்தைகள்! இரண்டு ஆண்! ஒரு குழந்தை பெண்! அந்தப் பெண் குழந்தையை இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் பிடிக்காதாம். அதற்காக அந்தப் பெண் குழந்தைக்கு எந்த எந்த வகையில் எல்லாம் துன்பம் கொடுக்க முடியும் என்பதை இந்தச் சின்ன வயதிலேயே யோசித்து யோசித்துச் செய்கிறார்களாம் இந்தச் சிறுவர்கள் இருவரும். அதில் ஒரு சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கு தினம் ஒரு காரணம் கண்டு பிடிக்கிறானாம். பள்ளிக்கே போக மாட்டானாம். அதற்கு அவன் பாட்டி ஆதரவாம். பேரன் மேல் மிகுந்த பாசமாம். இந்தப் பாசத்தை வைத்துக் கொண்டு அந்தச் சிறுவன் முன்னுக்கு வந்துவிட முடியுமா? இதைப் பார்க்கும் இந்தத் தலைமுறைக் குழந்தைகள் தாங்களும் அப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் வரும் காலம் என்ன ஆகும்? நாளைய இந்தியாவை இந்த மாதிரிக் குழந்தைகளா முன்னுக்குக் கொண்டு வரப் போகிறார்கள்? ஒண்ணும் புரியலை. நான் உட்கார்ந்து பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது காதில் விழும் வசனங்கள்! நல்லவேளையா நம்ம வீட்டில் குழந்தைகளே இல்லைனு நினைத்துக் கொண்டேன்.  அந்தக் குறிப்பிட்ட தொடரைத் தடை செய்ய வேண்டும் என்றும் நினைத்தேன். ஆனால் என் நினைப்பெல்லாம் என்ன ஆகப் போகிறது! இந்த மாதிரித் தொடர்கள் எடுப்பவர்கள், கதை எழுதுபவர்கள் போன்றோரால் தான் கொடுஞ்செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதை அவங்களே உணர்வதில்லை. 

**********************************************************************************

சனிக்கிழமை அன்று கண் பிரச்னைக்காகக் காலையே மருத்துவரிடம் போக இருந்தேன். ஆனால் மறுநாள் தம்பி குடும்பம் வருவதால் காய்கறிகள் வாங்கப் போக வேண்டி இருந்தது. ஆகவே மாலை போனோம். நாலே முக்காலுக்கே போய்த் திரும்பி வீட்டுக்கு வரும்போது ஏழரை மணி ஆகிவிட்டது. நல்ல கூட்டம். எனக்கு முன்னாடியே 5 பேர் இருந்தனர். கண் சோதனைகள் எல்லாம் முடிந்து மருத்துவர் பார்க்கும்போதே ஏழு மணி. எல்லாச் சோதனையும் முடித்து விட்டு ஆறு மாதங்களுக்குள்ளாக இரண்டு கண்ணுக்கும் அறுவை சிகிச்சை செய்துடணும் என்று சொல்லி விட்டார். மூன்று மாதங்களுக்குள்ளாக ஒரு கண்ணுக்கான சிகிச்சைக்கு ஆயத்தமாகத் திட்டம் போட்டுக் கொண்டு வரச் சொல்லி இருக்கார். அறுவை சிகிச்சை செய்யும் நிலைமைக்குப் போகாது என நினைத்திருந்தேன். நம்ம ரங்க்ஸோ நீ கணினியில் உட்காருவதால் உனக்குக் கண் புரை வந்திருக்கு என்கிறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதுக்கு முன்னால் எல்லாம் உட்கார்ந்ததை விட இப்போக் குறைவு தான். ரொம்பக் குறைச்சுட்டேன். ஆனாலும் எப்படியோ வந்து விட்டது! ஆகஸ்ட் மாதம் போனப்போக் கூட ஒண்ணும் இல்லைனு சொன்னாங்க!  ஐந்து மாதங்களுக்குள்ளாக எல்லாம் மாறி விட்டது. எனக்கு அறுவை சிகிச்சையை விட அதுக்குப் போடும் ஊசி பற்றித் தான் கவலை, பயம் எல்லாம். என்னமோ போங்க, வந்தாச்சு! இனி மற்றவை நடந்து தானே தீரணும்!

***********************************************************************************

ஞாயிறன்று தம்பி குடும்பம் வந்துவிட்டுத் திங்களன்று கிளம்பி விட்டார்கள். இப்போச் சில நாட்களாகவே வீட்டில் வேலை அதிகம் ஆனாப்போல் ஒரு எண்ணம். சாப்பிடுவதற்கே பனிரண்டரை, ஒரு மணி ஆகிவிடுகிறது. அதுக்கப்புறமாக் கணினியில் ஒரு மணி நேரம் உட்கார்ந்துவிட்டுக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பின் திரும்ப நாலு மணிக்கு வருவேன். சில நாட்கள் அதுவும் முடியறதில்லை.  நாட்கள் ஓடுகின்றன. ஆனால் எந்த வேலையும் நடக்கவில்லை போல் ஓர் எண்ணம். மழை வேறே! விட்டு விட்டுப் பெய்து கொண்டிருக்கிறது, இந்த வருஷம் மழை அதிகம் தான்!  

 

Friday, December 11, 2020

மஹாகவியின் பிறந்த நாள்!

 



துச்சா தனன்எழுந்தே -- அன்னை

துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.

‘அச்சோ தேவர்களே!’ -- என்று

அலறியவ் விதுரனுந் தரைசாய்ந்தான்.

பிச்சேறி யவனைப்போல் -- அந்தப்

பேயனுந் துகிலினை உரிகையிலே,

உட்சோதி யிற்கலந்தாள்; -- அன்னை

உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்.   


‘ஹரி, ஹரி, ஹரிஎன்றாள்; -- கண்ணா!

அபய மபயமுனக் கபயமென்றாள்.

கரியினுக் கருள்புரிந்தே -- அன்று

கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்,

கரியநன்னிற முடையாய், -- அன்று

காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!

பெரியதொர் பொருளாவாய், -- கண்ணா!

பேசரும் பழமறைப் பொருளாவாய்!  


‘சக்கர மேந்திநின்றாய், -- கண்ணா!

சார்ங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!

அட்சரப் பொருளாவாய், -- கண்ணா!

அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!

துக்கங்கள் அழித்திடுவாய், -- கண்ணா!

தொண்டர்கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!

தக்கவர் தமைக்காப்பாய், -- அந்தச்

சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய்.  


‘வானத்துள் வானாவாய்; -- தீ

மண்நீர் காற்றினில் அவையாவாய்;

மோனத்துள் வீழ்ந்திருப்பார் -- தவ

முனிவர்தம் அகத்தினி லொளிர்தருவாய்!

கானத்துப் பொய்கையிலே -- தனிக்

கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,

தானத்து ஸ்ரீ தேவி, -- அவள்

தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய்!  


‘ஆதியி லாதியப்பா, -- கண்ணா!

அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,

சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்

சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!

மாதிக்கு வெளியினிலே -- நடு

வானத்திற் பறந்திடும் கருடன்மிசை

சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!

சுடர்ப்பொருளே பேரடற்பொருளே!  


‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!

காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!

வம்புரை செய்யுமூடா” -- என்று

மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,

செம்பவிர் குழலுடையான், -- அந்தத்

தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!

நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை

நாணழியா திங்குக் காத்தருள்வாய்.  


‘வாக்கினுக் கீசனையும் -- நின்றன்

வாக்கினி லசைத்திடும் வலிமையினாய்,

ஆக்கினை கரத்துடையாய், -- என்றன்

அன்புடை எந்தை, என் னருட்கடலே,

நோக்கினிற் கதிருடையாய், -- இங்கு

நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்,

தேக்குநல் வானமுதே! -- இங்கு

சிற்றிடை யாச்சியில் வெண்ணெஉண்டாய்!  


‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!

மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!

ஐய, நின் பதமலரே -- சரண்.

ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.

பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல

புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,

தையலர் கருணையைப்போல், -- கடல்

சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்,  


பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த

பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,

கண்ணபிரா னருளால், -- தம்பி

கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை

வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!

எண்ணத்தி லடங்காவே; -- அவை

எத்தனை எத்தனை நிறத்தனவோ!  


பொன்னிழை பட்டிழையும் -- பல

புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்,

சென்னியிற் கைகுவித்தாள் -- அவள்

செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே,

முன்னிய ஹரிநாமம் -- தன்னில்

மூளுநற் பயனுல கறிந்திடவே,

துன்னிய துகிற்கூட்டம் -- கண்டு

தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்.  


தேவர்கள் பூச்சொரிந்தார் -- ‘ஓம்

ஜெயஜெய பாரத சக்தி!’ என்றே.

ஆவலோ டெழுந்துநின்று -- முன்னை

ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.

சாவடி மறவரெல்லாம் ‘ஓம்

சக்திசக்திசக்தி’ என்று கரங்குவித்தார்.

காவலின் நெறிபிழைத்தான், -- கொடி

கடியர வுடையவன் தலைகவிழ்ந்தான்.  

என்னோட மனக்குழப்பத்திலே இன்னிக்கு பாரதியின் பிறந்த நாள் என்பதை மறந்துட்டேன். அதனால் தாமதமாகப் பதிவு! மஹாகவியின் தீர்க்கதரிசனக் கவிதைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

Tuesday, December 08, 2020

மழையும் ரயிலும்!

இந்த வருஷம் சொல்லக்கூடிய அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. ஏனெனில் திருச்சியில்/ஶ்ரீரங்கத்தில் இருக்கும் எங்களுக்கே மழைப் பொழிவு இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  இந்த மழை/புயலால் பொது மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டது எனத் தொலைக்காட்சிகள், ஊடகங்கள், தினசரிச் செய்திகள் அலறுகின்றன. மழை பெய்யாவிட்டால்? என்ன செய்வோம்? இந்த வருஷம் தண்ணீர்க் கஷ்டம் வரப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்ததை வசதியாக எல்லோரும் மறந்தாச்சு. மழை பெய்து கெடுக்கிறது என்றே சொல்கின்றனர். தினமலர் தலைப்புச் செய்தியாகக் "கொடுத்துக் கெடுக்கும் மழை!" என்று வருகிறது. மழைத் தண்ணீர் வயல்களில் தேங்கி நிற்பதாகப் படங்கள் போடுகின்றனர். மழையில் ஊறிய நெற்பயிரைக் கைகளில் வைத்துக் கொண்டு விவசாயிகளும் தொலைக்காட்சி/செய்திப்பத்திரிகைகளுக்குச் செய்திகள் கொடுக்கின்றனர். அது சரி! மழை இப்போதெல்லாம் மட்டும் புதுசாகப் பெய்து கொண்டு இருக்கா? முன்னெல்லாம் மழையே கிடையாதா? புயலே வந்ததில்லையா? என்றால் வந்திருக்கு. மழை, புயல் எல்லாம் உண்டு. அறுபதுகளில் தனுஷ்கோடியே முழுகிப் போகும் அளவுக்கு மழை/புயல் இருந்திருக்கு.  அப்போல்லாம் மட்டும் வயல்களே இல்லையா?பயிர்கள் தண்ணீரில் முழுகவில்லையா?



இருந்திருக்கு. என் கணவர் நேற்றுக் கூடச் சொல்லிக் கொண்டிருந்தார். மழை கொட்டும். ஐப்பசி, கார்த்திகை அடைமழை என்னும் வழக்குச் சொல்லை இப்போதெல்லாம் எல்லோருமே மறந்துட்டாங்க போல! வயலில் தண்ணீர் தேங்கும் ஒவ்வொருத்தர் வயலில் இருந்தும் வடிகாலுக்குப் போக ஒரு தனிப்பாதை உண்டு. அந்தப் பக்கத்து வரப்பை வெட்டி விட்டால் எல்லா நீரும் வடிகால் வழியாக ஆறுகளுக்குப் போய்விடும். கருவிலி, பரவாக்கரை இரண்டுக்கும் நடுவில் உள்ள முட்டையாறு எனப்படும் ஆறு அத்தகைய வடிகால் தான் என்றார். அந்தக் காலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கினால் நிவாரணம் என்ற பேச்சே இல்லை என்றும் சொன்னார். இன்று? அந்த முட்டையாற்றையே காணோம். நான் கல்யாணம் ஆகிப் போன புதுசிலே மழை நாளில் பரவாக்கரை மாரியம்மனைப் பார்க்கப் போகணும்னா முட்டையாற்றில் வண்டி போகாது. நாங்கள் வண்டியிலிருந்து கீழே இறங்கி நடந்து குறுகலான பாலம் வழி செல்வோம். வண்டியைச் சில சமயங்களில் அங்கேயே மாடுகளை அவிழ்த்து விட்டுக் கட்டி விடுவார்கள். நாங்கள் நடந்தே போய் விட்டு வந்து மறுபடி முட்டையாற்றங்கரையில் வண்டியில் ஏறிப்போம். சில சமயம் மாடுகள் நீரில் இறங்கி அக்கரை வரும். வண்டியை ஆட்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஆற்றில் இறக்கி நகர்த்தி அக்கரை கொண்டு மேலே சேர்ப்பார்கள். இப்போக் கல் பாலம் இருக்கு. ஆனால் ஆறு இல்லை, தண்ணீர் இல்லை. வயலில் தேங்கும் நீர் முட்டையாறு வரை வருவதில்லை. ஏன்? என்ன காரணம்! யோசியுங்கள். தப்பு  யார் மேல் என உணர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் அப்போதெல்லாம் பரம்பரைப் பட்டாமணியம், கணக்குப் பிள்ளை, வெட்டியான்கள் உண்டு. அவர்களுக்கெல்லாம் யார் நிலத்திற்கு முதலில் நீர் வரும் எனவும் கடைசியில் யார் நிலம் மூழ்கும் அளவுக்குப் போகும் எனவும் தெரியும். எந்த வடிகாலுக்கு நீரை மாற்ற வேண்டும் என்பதும் அறிந்து வைத்திருப்பார்கள். ஊர்ப் பொதுவில் கூட இத்தகைய நிவாரண வேலைகள் அந்த அந்தக் கிராமத்துத் தலைவர்களின் கட்டளைகளின் பேரில் நடந்து வந்திருக்கின்றன. இன்று?

அதே காரணம் தான் சென்னை வாசிகளுக்கும். அம்பத்தூரில் பேருந்து நிலையத்திலிருந்து வரும் மழை நீரெல்லாம் ஓட்டமாக ஓடிப் பள்ளமான பிருதிவிபாக்கம் வழியாக வந்து அங்கே உள்ள வாய்க்கால் வழியாகக் கொரட்டூர் ஏரிக்குப் போய்ச் சேரும். அழகாக வழியமைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில். வாய்க்கால் சுமார் 20 அடிக்கும் மேல் அகலம், நீளம் கொரட்டூர் ஏரி வரை. நடுவே உள்ள சின்னச் சின்னக் குளங்களுக்கும் அதிலிருந்து நீர் போகும். குளங்கள் நிரம்பும். அண்டையில் உள்ள வீடுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தண்ணீர்ப் பிரச்னை யாருக்கும் வராது. ஆனால் இப்போது கொரட்டூர் ஏரி எங்கே? அதுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால் எங்கே? வாய்க்கால் அதை ஒட்டி வீடு கட்டி இருப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இப்போது வாய்க்கால் இந்த வழியில் இருந்தது என்று சொன்னால் நம்புபவர்கள் இல்லை. கொரட்டூர் ஏரியோ ப்ளாட் போட்டுக்கூறு கட்டி விற்றுக் கொண்டிருக்கின்றனர். பெரிய பில்டர் ஒருத்தர் அங்கே அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டுவதாகச் சொல்கின்றனர்.  சாலைகளிலும், தெருக்களிலும், வீதிகளிலும் தண்ணீர் தேங்கத் தான் செய்யும். வீடுகளுக்குள் நீர் புகத்தான் செய்யும். அதன் இடத்தை நாம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டோம். அது வழக்கமான வழியில் வந்து எங்கே என் இடம் எனத் தேடுகிறது. இப்படித்தானே காட்டு மிருகங்களை எல்லாம் ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்கோம். அது மாதிரித் தான் நீர் நிலைகளும். மனிதர்கள் கைகளில் பட்டுப் படாத பாடு படுகின்றன. அதன் இடங்களை நாம் ஆக்கிரமித்திருப்பதால் எங்கே போக என வழி தெரியாமல் விழிக்கின்றன. மழையைப் பழிப்பதற்கு முன்னர் இதை உணர வேண்டும்.

***********************************************************************************



ஊட்டி மலை ரயில் செப்பனிடப்பட்டுப் புதுசாக மீண்டும் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. இது குறித்துத் தொலைக்காட்சிகளில் காட்டினார்கள். காட்டும்போது பயணச்சீட்டு விபரங்களோ, அதன் உள் கட்டமைப்புப் பற்றியோ, வசதிகள் பற்றியோ குறிப்பிடும்படி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் இது தொலைதூரப் பயணம் இல்லை. மேட்டுப் பாளையத்தில் ஏறினால் 2,3 மணி நேரத்தில் ஊட்டிக்குப் போய்விடலாம். முன்னால் எல்லாம் கழிப்பறை வசதி கூட இருந்ததில்லை. இப்போது வசதி ஏற்படுத்தி இருக்கலாம். அது பற்றித் தெரியவில்லை. தொலைக்காட்சிகளும் இதை ஓர் செய்தியாக மட்டும் சொல்லிவிட்டு விட்டு விட்டன. ஆனால் நம் சிநேகிதர்கள் பலரும் இந்த வண்டியை வழித்தடத்தைத் தனியார் ரயில்வேக்கு மத்திய அரசு தாரை வார்த்து விட்டதாகவும், இதில் சாப்பாடு, காஃபி, தண்ணீர் போன்ற வசதிகளைப் புதிதாக ஏற்படுத்தி இருப்பதாகவும், விமானத்தில் பயணிப்பதைப் போன்ற வசதிகள் இருப்பதாகவும் பணிப்பெண்களும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அனைவரும் காவி உடையுடன் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டு பலத்த கண்டனங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேல் அந்தக் குறைந்த தூரத்துக்கான சுமார் 60 கிலோ மீட்டருக்குள் இருக்கும். இதற்கான கட்டணம் குறைந்த பட்சமாக 3000 ரூபாயும், அதிக பட்சமாக 12,000 ரூபாயும் என்று சொல்லிக் கொண்டு பதிவுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் தெற்கு ரயில்வேயின் தொடர் வண்டிச் செய்திகள் பற்றிய முகநூல் பதிவில் அதிகாரிகள் தரப்பில்  15 ரூபாயாக இருந்த சாதாரண கட்டணம், 75 ரூபாயாகவும், முதல் வகுப்பு கட்டணம் 470 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 145 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்கள் என்று செய்தி வந்துள்ளது. மேலும் தனியாருக்கு எல்லாம் தாரை வார்க்கவில்லை. அது அத்தனை எளிதும் அல்ல. அரசின் நடைமுறைகளோ அந்த ரயிலின் செயல்பாடுகள் குறித்தோ அறியாதவர்கள் தங்கள் இஷ்டப்படி பேத்துகின்றனர். ஆனாலும் இப்போது உயர்த்தி இருக்கும் கட்டணம் நிச்சயம் அதிகம் தான். இல்லைனு சொல்ல முடியாது. அதற்காகப் போராடலாம். எதிர்ப்புத் தெரிவிக்கலாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம்,

Sunday, December 06, 2020

(அசோகமித்திரன்) சித்தப்பாவை விட்டு விடுங்கள்! :(

 சபாஷ் சாரு!

நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம்:

அன்புத் தம்பி சூர்யாவுக்கு…

சமீபத்தில் இந்து தமிழ் நாளிதழில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். சினிமா நடிகர்களால் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவே வாழ முடியவில்லை; விமான நிலையத்தில் அற்பசங்கை பண்ணி விட்டு வந்தால் கூட கை குலுக்குகிறார்கள்; செல்ஃபி எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்பது உங்கள் புகார்.  உங்கள் தந்தை சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனைத் தட்டி விட்டது தவறுதான் என்றாலும் ரசிகர்களின் டார்ச்சரும் தாங்க முடியாததாக இருக்கிறது என்பது உங்கள் கட்டுரையின் சாரம்.  இது பற்றி உடனடியாக உங்களுக்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் நேரம் இல்லை.  தம்பி சூர்யா, நீங்களும் உங்களைப் போன்ற ஹீரோக்களும் வாங்கும் சம்பளம் 50 கோடி, 60 கோடி ரூபாய்.  ஆனால் துப்புரவுத் தொழிலாளியின் மாதச் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா?  வெறும் 6000 ரூ.  அறுபது கோடிக்கும் ஆறாயிரம் ரூபாய்க்கும் எத்தனை வித்தியாசம்?

தமிழ்நாட்டில் சினிமாதான் மதம்.  நீங்களெல்லாம் கடவுள்கள்.  எம்ஜியார் ஒரு கடவுள்.  சிவாஜி ஒரு கடவுள்.  கமலை மட்டும் ஆண்டவர் என்று சொல்லுவோம்.  ஏனென்றால் அவர் நாஸ்திகர்.  ரஜினி கடவுள்.  விஜய் கடவுள்.  அஜித் கடவுள்.  நீங்கள் கடவுள்.   உங்கள் தம்பி கார்த்தி கடவுள்.  ஏன், முன்பு அப்பாஸ் என்று ஒரு நடிகர் இருந்தாரே அவர் கூட கடவுள்தான்.  அப்படித்தான் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.  நீங்கள் நினைத்தால் முதல்மந்திரியிடம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்கலாம்.  ஒரு தமிழ் எழுத்தாளனால் முடியுமா?  நான் 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  என் சகாக்கள் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் 200 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.  இவர்களுக்குத் தமிழ் சமூகத்தில் என்ன அடையாளம்?

தம்பி, அசோகமித்திரன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார்.  அவரையெல்லாம் உங்கள் தந்தை சிவகுமார் கரைத்துக் குடித்திருப்பார்.  சிவகுமார் என்னுடைய 20 ஆண்டுக் கால நண்பர்.  என் வீட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார்.  அவருடைய சித்திரங்கள் என் வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன.  அவர் வரைந்த காந்தியின் ஓவியம் என் மேஜை மேல் இருக்கிறது.  ஏன் தெரியுமா?  சிவகுமார் இலக்கியத்தின் வாசகர்.  அதனால்தான் என் வீடு தேடி வருவார்.  ஆனால் நீங்கள் அடுத்த தலைமுறை.  என் மகன் தலைமுறை.  அவனுக்கும் இலக்கியம் தெரியாது.  அவனுக்கும் அசோகமித்திரனைத் தெரியாது.  இதையெல்லாம் நான் அவன் வாயில் புட்டிப்பாலைப் போல் ஊற்ற முடியாது.  நீங்களாகவேதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.  சரி, அந்த அசோகமித்திரன் நம் தமிழ் மொழியின் ஆகச் சிறந்த எழுத்தாளர்.  நோபல் பரிசு பெற்ற பல எழுத்தாளர்களையும் விட சிறப்பான எழுத்தை நம் தமிழுக்குக் கொடுத்திருப்பவர்.  வீட்டில் எழுதுவதற்கான வசதி இல்லாமல் தி. நகர் நடேசன் பூங்காவில்தான் தன் நாவல்கள் பெரும்பாலானவற்றை எழுதினார்.  அவர் 18 ஆண்டுகள் வாசன் ஸ்டுடியோவில் பி.ஆர்.ஓ.வாக இருந்தார்.  அசோகமித்திரனின் தந்தையும் வாசனும் அடாபொடா நண்பர்கள்.  அதனால் தந்தையில்லாத அசோகமித்திரனை ஹைதராபாதிலிருந்து அழைத்துத் தன் சினிமா கம்பெனியில் வேலை கொடுத்தார் வாசன்.  18 ஆண்டுகள் கழித்து ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.  அன்று வாசன் அசோகமித்திரனை அழைத்துத் தன் காரைத் துடைக்கச் சொன்னார்.   இதெல்லாம் சினிமா கம்பெனியில் சகஜம்தானே?  ஷூவைத் துடைக்கச் சொன்னாலும் துடைக்கணும் இல்லையா?  ஆனால் அசோகமித்திரன் அப்படிப்பட்டவர் இல்லை.  எழுத்தாளர் ஆயிற்றே?

”சார், நான் ஒரு எழுத்தாளன்.  என்னைப் போய் இந்த வேலையையெல்லாம் செய்யச் சொல்கிறீர்களே?” என்றார் வாசனிடம் அசோகமித்திரன்.  அதற்கு வாசன் சொன்ன ஒரு பதிலால் அசோகமித்திரனின் ஒட்டு மொத்த வாழ்க்கையே திசை மாறியது.  அப்போது அசோகமித்திரனுக்கு 35 வயது என்று நினைக்கிறேன்.  “ஏம்ப்பா, நீ எழுத்தாளனா இருந்தா இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டியேப்பா?”

அவ்வளவுதான்.  அந்தக் கணமே வேலையை ராஜினாமா செய்து விட்டு அடுத்த 20 ஆண்டுகள் ஏழ்மையில் உழன்றார் அசோகமித்திரன்.  இதெல்லாம் அசோகமித்திரனே எழுதினது.  சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிடவில்லை என்று சொல்லியிருக்கிறார்.  எனக்கே தெரியும்.  அவருக்கு ஆஸ்துமா.  மூச்சு விட சிரமப்படுவார்.  மாத்திரை மருந்து வாங்கக் காசு இருக்காது.  தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுத வல்லவர்.  ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்தால் இந்நேரம் நோபல் பரிசு பெற்றிருப்பார்.  ஆனால் தமிழில்தான் எழுதுவேன் என்று உங்களுக்கும் எனக்கும் தாய்மொழியான தமிழைத் தேர்ந்தெடுத்தார்.  பட்டினி கிடந்தார்.  அவர் பிள்ளைகள் தலையெடுத்த பிறகுதான் அவரால் சாப்பிட முடிந்தது.  ஆனால் வயிறு சுருங்கி விட்டது.  ஒரே ஒரு மொளகா பஜ்ஜி போதும்ப்பா என்பார்.

அவர் தன் மகன் வீட்டில் இருந்தார்.  அவருடைய அறையில் புத்தகங்களே இல்லை.  எங்கே உங்கள் லைப்ரரி என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன்.  என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு இந்த அறையில் எங்கே புத்தகங்களை வைப்பது?  எல்லாவற்றையும் நண்பர்களிடம் கொடுத்து விட்டேன் என்றார்.

அவர் வீட்டுக்கு எதிரே ஒரு அரண்மனை இருக்கிறது.  அங்கேதான் உங்கள் இசைஞானி வாழ்கிறார்.

தம்பி சூர்யா, பாப்லோ நெரூதா என்று ஒரு கவிஞர் இருந்தார்.  சீலே தேசத்தின் தேசியக் கவி.  அவருக்கு சீலேவின் தலைநகர் சந்த்தியாகோவில் ஒரு மாளிகையும் அவர் பிறந்து வாழ்ந்த வால்பரய்ஸோ என்ற நகரில் ஒரு மாளிகையும் இருக்கிறது. அந்த வால்பரய்ஸோ இப்போது ஒரு டூரிஸ்ட் சொர்க்கமாக விளங்குகிறது.  உலகமெங்கிலும் இருந்து வால்பரய்ஸோவுக்குப் போய் நெரூதா வாழ்ந்த வீட்டைப் பார்த்து மகிழ்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள்.  அதே சீலே தேசத்தில் நிகானோர் பார்ரா (Nicanor Parra) என்று ஒரு கவிஞர் இருந்தார்.  சில மாதங்களுக்கு முன்புதான் இறந்தார். 103 வயது வரை வாழ்ந்த அவரிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு சீலே அதிபரே மாதக் கணக்கில் காத்திருப்பார்.  இன்னும் பல தென்னமெரிக்க அதிபர்களும் அவருடைய அப்பாய்ண்ட்மெண்ட்டுக்காகக் காத்துக் கிடந்தனர்.  அவர் நடிக்கும் பால் விளம்பரத்துக்கு அவர் வாங்கும் தொகை ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகை வாங்கும் தொகைக்குச் சமம்.

இதையெல்லாம் இவர் ஏன் உளறுகிறார் என்று உங்களுக்குத் தோன்றும்.  அசோகமித்திரன் சென்ற ஆண்டு மரணம் அடைந்த போது அவருக்குக் கூடிய கூட்டம் 25 பேர்.  அதில் 15 பேர் அவரது உறவினர்.  மற்ற பத்துப் பேர் அவரது ஆயுட்கால நண்பர்கள்.  இப்படிப்பட்ட தேசத்தில் கடவுள்களைப் போல், சுல்தான்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள் – அவர்களை அப்படி வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஜனங்கள் எப்பவாவது செல்ஃபி எடுத்துக் கொள்ள முனைந்தால் அது உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது.

தம்பி சூர்யா… உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரிந்தால் கொஞ்சம் அசோகமித்திரனின் கதைகளைப் படித்துப் பாருங்கள்.  கரைந்த நிழல்கள் என்ற நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம்.  ஏனென்றால், அது அவருடைய சினிமாக் கம்பெனி அனுபவங்களை வைத்து எழுதியது.

இன்னொரு விஷயம் தம்பி.  இன்று காலை வேந்தர் டிவி என்ற தொலைக்காட்சியிலிருந்து ஒரு பெண் போன் செய்தார்.  சாரு நிவேதிதா மேடம் இருக்காங்களா என்றது குரல்.  குரலுக்கு உரியவருக்கு 25 வயதுதான் இருக்கலாம்.  மேடம் இல்லீங்க, நான் தான் சாரு நிவேதிதா என்றேன்.  ஓ அப்டியா சார்.  சரி சார்.  நாஸ்டிரடாமஸின் predictions பற்றி ஒரு நிகழ்ச்சி பண்றோம்.  அதில் உங்கள் கருத்துக்களைச் சொல்லணும் என்றார்.

எல்லாமே ஓசி சூர்யா.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் எங்களுக்கு ஒரு நாள் போய் விடுகிறது.  ஆனால் காசு கொடுப்பதில்லை.  கேட்டால், நடிகர் சூர்யா போன்றவர்களுக்குக் கூட காசு தருவதில்லை சார்.  அவர்களும் கேட்பதில்லை என்கிறார்கள்.  நான் எதுவும் பதில் சொல்வதில்லை.  உங்கள் சம்பளம் கோடிகளில்.  எங்கள் சம்பளம் ஒரு கட்டுரைக்கு 1000 ரூபாய்.  தொலைக்காட்சிக்கு ஓசி.

நான் அந்தப் பெண்ணிடம் எனக்கு ரொம்ப வேலை இருக்குங்க ஸாரி என்று சொல்லி விட்டேன்.

சாரு நிவேதிதா மேடம்.  எப்படி இருக்கு பாருங்க.  நீங்க என்னடான்னா செல்ஃபி எடுத்து டார்ச்சர் பண்றாங்கங்க்றீங்க!!!

அன்புடன்,

சாரு நிவேதிதா


இது முகநூலில் நண்பர் ஒருவரால் பகிரப்பட்ட பகிர்வு. சாரு நிவேதிதா அவர்கள் நடிகர் சூர்யாவுக்கு எழுதின கடிதமாம். தமிழ் இந்து/ஹிந்து? அல்லது தமிழ் த ஹிந்துவில் வந்திருக்கிறது. இதற்கு அன்றே அங்கேயே பதில் சொல்லி விட்டேன். ஆனால் இன்று மீண்டும் நண்பர் ராம்ஜி யாஹூ மஹாதேவன் இந்த விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கார். கீழே உள்ளது ராம்ஜி யாஹூ மஹாதேவன் சொல்லி இருப்பது. அசோகமித்திரன் வறுமையில் வாடினார் என்பதாக இவரும் சொல்லுகிறார். என்னமோ கிட்டே இருந்து பார்த்தாப்போல்! 

அசோக மித்திரன் மட்டுமல்ல,  ஜெயமோகன் , எஸ் ரா கூட சினிமா வசன வருமானம் இல்லாவிடில் 

வறுமையாகத் தான வாழ்வை நடத்திக் கொண்டு இருக்க வேண்டும். 

மனைவியர்  சம்பள வருமானம் அடிப்படை செலவுகளுக்கு மட்டுமே சரியாக இருக்கும். 

விமானப் பயணம், முதல் வகுப்பு ரயில் பயணம்  எல்லாம் சாத்தியம்  இல்லை. 

சாரு  சொல்லும் முழு நேர எழுத்தாளர் வறுமை இப்போதும்  இருக்கிறது .


இது நான் ராம்ஜி யாஹூ மஹாதேவனுக்குக் கொடுத்திருக்கும் பதில்!

சித்தப்பா வறுமையில் வாடினார் என்பதெல்லாம் பொய்யான செய்தி. ஏற்கெனவே  ஜெயமோகனுக்குப் பதில் கூறும்போது இதைச் சொல்லி இருக்கேன். அவர்  20 வயது வரைக்கும் ஹைதராபாத்-செகந்திராபாத் வாசம். அவர் தந்தை நிஜாம் ரயில்வேயில் வேலை செய்து வந்தார். இள வயதில் வறுமை சாப்பாட்டுக்கு இல்லை என்பதெல்லாம் முற்றிலும் பொய்யான செய்திகள். அவருக்கு 20 வயதில் தான் சென்னை வந்தார். அதுவும் சொந்த வீடு தி.நகர் தாமோதர ரெட்டித் தெருவில் வாங்கிக் கொண்டு வந்தார்கள். அவர் திருமணம் என் தந்தை ஏற்பாடு செய்தது தான். திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தது. சித்தப்பாவின் அம்மா அப்போது இருந்தார். சித்திக்கு அவர் தன்னுடைய வைரத்தோட்டைக் கொடுத்தார். திருமணம் ஆகிப் பெண்ணை அழைக்கையில் சித்திக்கு அவங்க மாமியார் டிஷ்யூ புடைவை வாங்கிக் கொடுத்திருந்தார். அந்தக் காலத்திலேயே இது 500 ரூபாய்க்கு மேல் இருக்கும். நான் சொல்லுவது 1963 ஆம் ஆண்டில்.  இவங்க வறுமையில் வாடினார் என்பதெல்லாம் பொய் என நிரூபிக்கவே இதைச் சொல்லும்படி ஆயிற்று. சித்தப்பாவுடன், சித்தி, அவங்க 3 பிள்ளைகள், சித்தப்பாவின் மூத்த அக்கா,சித்தப்பாவின் தம்பி,  இருந்தனர். தம்பிக்குத் தான் என் நாத்தனாரைக் கொடுத்தது. அந்தத் திருமணம் 70 ஆம் ஆண்டு நடந்தது. வறுமையில் வாடுபவர்கள் வீட்டில் யாரும் பெண்ணைக் கொடுப்பார்களா? ஜெயமோகனில் ஆரம்பித்துச் சாரு நிவேதிதா வரை சொல்லும் ஆண்டுகளில் தான் சித்தப்பா வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள்.  சித்தப்பாவின் கல்யாணம், அவர் தங்கை கல்யாணம் (இது அம்மா இறந்த பின்னர் சித்தப்பா நடத்தி வைத்தது) அதன் பின்னர் அவர் தம்பியின் திருமணம். இதற்கு நடுவில் சித்தப்பாவிற்கு 3 பிள்ளைகள் பிறந்தனர். 

எனக்குப் பத்து வயதில் இருந்து சித்தப்பாவைத் தெரியும். நீங்கள் சொல்லும் வறுமையை அவர் அனுபவித்ததாகச் சொல்லப்படும் கால கட்டமும் அது தான். ஆனால் 20 வயது வரை ஹைதராபாதில் இருந்து விட்டுச் சென்னைக்கு வந்தவர் உடனே வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார். எங்கிருந்து வந்தது வறுமை? வறுமையில் உழல்பவருக்கா அவர் அம்மா பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்? பேத்தலாக இல்லையோ?   சித்தி எந்த வேலைக்கும் போகவில்லை. வீட்டில் தான் இருந்தார். மனைவியரின் வருமானம் எனக் குறிப்பிட்டிருப்பது சரியல்ல. மாடியும் கீழுமாக உள்ள வீடு. பின்னால் கொல்லைப்புறத்தில் வீட்டை ஒட்டியே இரண்டு ஓடு போட்ட போர்ஷன்கள். ஒன்றில் சித்தப்பாவின் தங்கையும் இன்னொன்றில் வேறொருத்தரும் இருந்தார்கள். கிணற்றடியை ஒட்டி ஓர் ஓட்டு வீடு சின்னதாக இருக்கும். அதிலும் யாரோ குடி இருந்தனர். சித்தப்பா இருந்த வீடு அந்தக் கால மெட்ராஸ் டெரஸ். கீழே மாதிரி மேலே ஒரே மாதிரியான அமைப்பு. படியேறியதும் மேலே இருக்கும் வராந்தாவில் தான் அவர் எழுது பொருட்கள், டைப்ரைடிங் மிஷின் போன்றவை இருந்தன. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த வண்ணம் கூட நடு இரவில் குத்திட்டு உட்கார்ந்து யோசித்துக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பதைப் பல முறை பார்த்திருக்கேன். 

மேலும் அந்த அறுபதுகளில் தான் அவர் கணையாழியின் அசோசியேடட் எடிட்டராகவும் இருந்தார். கணையாழி புத்தகம் ப்ரஸ்ஸிலிருந்து வந்ததும் அனுப்ப வேண்டியவர்களுக்கு விலாசங்களைத் தட்டச்சி அனுப்பும் வேலையைப் பல மாதங்கள் நான் செய்திருக்கேன். வண்டி வைத்துக் கொண்டதில்லை. சைகிள் தான். ஆனால் அதற்காக வறுமை என்றே இருந்ததில்லை. வாசலில் மாடு கட்டிக் கறந்து தான் பால் வாங்கி இருக்காங்க. தினம் தினம் காஃபிக் கொட்டையை வறுத்து அரைத்துத் தான் காஃபி சாப்ப்பிட்டிருக்காங்க. எனக்கு நல்ல காஃபி என அறிமுகம் ஆனதே சித்தப்பா வீட்டில் தான். நான் மட்டுமில்லாமல் என் அண்ணா, சித்தி பிள்ளைகள், பெண்கள், மாமா பெண் எனப் பலர் அந்த வீட்டில் இருந்திருக்கோம். இப்போவும் சொல்கிறேன். அந்த வீடு ஓர் ஆலமரம். விழுது விட்டுப் படர்ந்து அனைவருக்கும் நிழல் தான் கொடுத்திருக்கிறது. வறுமை எனப் பட்டுப் போகவெல்லாம் இல்லை. பிள்ளைகள் சம்பாதித்துத் தான் அவர் சாப்பிடவே ஆரம்பித்தார் என்பதை அவர் பிள்ளைகளான என் தம்பிகளே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரவர் விருப்பப் படிப் படித்தார்கள். அவர்கள் விருப்பமான படிப்புப் படிப்பதில் சித்தப்பாவின் தலையீடு இருக்கவில்லை. மற்றபடி படிக்க வைக்க முடியலைனு எல்லாம் சொல்ல முடியாது. இதைத் திரும்பத் திரும்ப எழுத எனக்கு வெட்கமாக இருக்கிறது. இனியாவது சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொண்டு இப்படி எல்லாம் எழுதுங்கள்! 

நடிகர்களை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். சித்தப்பாவை இதோடு விட்டு விடுங்கள். சித்தப்பாவின்  " பதினெட்டாவது அக்ஷக்கோடு"  படித்தால் உண்மை புரியும். அதில் அவர் சிகந்திராபாதில் இருந்தப்போ நடந்த விஷயங்களையும் நிஜாமின் ராணுவத்தை இந்திய ராணுவம் எதிர்த்ததும், கல்லூரி வாழ்க்கை பற்றியும் பகிர்ந்திருப்பார். அவற்றில் பலவும் உண்மைச் சம்பவங்களே

Thursday, December 03, 2020

என்னத்தைப் போற்றுவது போங்க! :(

 தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தான் போல! தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிகைகளும் இணைய வெளியில் உள்ளவர்களும் பேசித் தீர்க்கிறார்கள். என்னவோ தெரியலை திரைப்பட நடிகர்கள் எனில் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வத்துக்கும்/அதைவிடவும் மேல் ஆனவர்கள்.

*************************************************************************************

பொதுவாகத் தமிழ்நாட்டிலே ராணுவத்திற்கு மதிப்புக்கிடையாது. அவர்களின் சேவை குறித்த புரிதலும் இல்லை. தமிழக மக்களைப் பொறுத்தவரை ராணுவம் எனில் அவசர காலத்திலும், மழை, வெள்ளக் காலத்திலும் பேரிடர்க்காலங்களிலும் வந்து உதவ வேண்டியவர்கள். அதற்கு மேல் அவர்களைக் குறித்த புரிதல் சுத்தமாக இல்லை. அதிலும் இந்தத் திரைப்படம் எடுக்கும் இயக்குநர்கள், நடிகர்கள், கதாசிரியர்கள் போன்றவர்களுக்குச் சுத்தமாகப் புரியவே இல்லை. சமீபத்தில் ஓர் படம் "ஓடிடி" எனச் சொல்லப்படும் தளத்தில் வெளியிடப்பட்டு அதைக் குறித்த விமரிசனம் எல்லாத் தளங்கள், தனியார் வலைப்பதிவுகள், முகநூல் எனப் பகிரப்பட்டது. அந்தக் கதை உயிருடன் இருக்கும் ஒருவரின் உண்மைக்கதையாம். திரைப்படத்திற்காக அந்தக் கதாநாயகரின் ஜாதியை மாற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்களாம். உண்மையில் முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த அந்த மனிதர் திருமணம் செய்திருப்பதும் தன் சொந்த சமூகத்திலே தானாம். ஆனால் திரைப்படத்தில் அப்படிக் காட்டவில்லையாம். பாரம்பரிய முறைப்படி திருமணம் எனக் காட்டாமல் புரட்சித் திருமணமாகக் காட்டப்பட்டுள்ளது என்று எழுதி இருந்தனர். 

அதெல்லாம் எப்படியோ போகட்டும். எனக்கு அந்த விமரிசனத்தில் படித்த ஒரு முக்கியமான விஷயம் தான் உறுத்தலாகவே இருக்கிறது. அந்தக் கதாநாயகர் கதைப்படி/(அல்லது உண்மையான அந்த மனிதரும் அப்படித்தானோ என்னமோ) விமானப்படை ஊழியராம். உண்மைக்கதையிலும் அந்த மனிதர் விமானப்படை ஊழியராக இருந்திருக்கலாம். ஆனால் இங்கே சொல்லி இருப்பது திரைப்படக் கதாநாயகர் விமானப்படையில் காப்டன் என்று. உண்மையில் தரைப்படையில் தான் "காப்டன்" அந்தஸ்து உள்ள பதவி உண்டு. விமானப்படையிலும், கடல்படையிலும் காப்டன் என்ற பதவியே கிடையாது.  இது தான் போச்சு எனில் திரைப்படத்தில் அந்தக் கதாநாயகர் தன் தந்தை இறந்துவிட்டார் என்பதால் ஊருக்கு வர விமானம் மூலம் பயணச் சீட்டு வாங்க முயற்சித்து அவருக்குப் பயணச்சீட்டே கொடுக்கலையோ அல்லது இல்லை என்று விட்டார்களோ தெரியலை. அல்லது பயணச் சீட்டின் பணம் அவரால் கொடுக்க முடியலைனு சொல்லி இருக்காங்களோ தெரியலை. அவர் பயணச் சீட்டுக் கிடைக்காமல் அழுது புரண்டு அலறுகிறாராம். கடைசியில் பயணச் சீட்டுக்காகப் பிச்சை எடுக்கிறாராம். ராணுவ வீரனுக்கு இப்படி அழுவது என்பது கேவலமான ஒன்று. கொச்சைப் படுத்தி இருக்காங்க திரைப்படத்தில்.

இதைப் படித்ததும் சீத்தலைச் சாத்தனார் எழுத்தாணியால் குத்திக் கொண்ட மாதிரி எனக்குக் கையில் ஒண்ணும் கிடைக்கலை. வெறும் கையால் தலையில் அடித்துக் கொண்டேன். உண்மையில் முதல்லே எந்த ராணுவ வீரனும் அது எந்தப் படையைச் சேர்ந்தவர்கள் ஆயினும் இப்படி எல்லாம் அழுது புரள மாட்டார்கள். அடுத்தது பிச்சை எடுக்க மாட்டார்கள். ராணுவத்தில் அதிகாரியாகச் சேராமல் சாதாரண வீரனாகச் சேர்ந்தாலே நல்ல சம்பளம், உடை, உணவு, இருப்பிடம் எல்லாம் இலவசம். ரேஷன் இலவசம், பால், வெண்ணை, காய், கனிகள் இலவசம். இம்மாதிரிச் சமயங்களில் அல்லாமல் சாதாரணமாகத் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதென்றாலே அவர்களுக்கு வாரன்ட் எனப்படும் சலுகைப் பயணச் சீட்டுக் கிடைக்கும். அரசு செலவில் தான்! அதோடு இல்லாமல் ரயில் பயணம் என்றாலும் சரி, விமானப் பயணம் என்றாலும் சரி ராணுவ வீரர்களுக்கு எனத் தனியாகப் பத்திலிருந்து இருபது இருக்கை வரை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பார்கள். இது எந்த வழியாகச் செல்லும் ரயில்கள், விரைவு வண்டிகள், ராஜ்தானி போன்ற சிறப்பு ரயில்கள் எல்லாவற்றிலும் உண்டு. விமானத்தில் செல்வதற்கும் அதே போல் உண்டு. தகுதிக்கு ஏற்ப எகானமி வகுப்போ, முதல் வகுப்போ கிடைக்கும்.  அழுது புரள்வது எல்லாம் எப்போவுமே இல்லை. ராணுவ வீரர்கள் யாரும் வரவில்லை என்பது தெரிந்தால் மட்டுமே அது சாதாரணப் பயணிக்குக் கொடுக்கப்படும்.  அதோடு இல்லாமல் இம்மாதிரி அவசர காலங்களுக்கு என அவங்களுக்கு ஓர் ராணுவ அதிகாரி ரயில் நிலையத்திலேயே/விமான நிலையத்திலேயே இருப்பார். அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னால் அவங்களுக்கு உள்ள சிறப்புச் சலுகை மூலம் பயணச் சீட்டுக் கிடைத்துவிடும். கிடைக்காது என்ற பேச்சே இல்லை.

சாதாரண ராணுவ வீரனுக்கே இத்தனை சலுகைகள் உண்டு எனில் விமானப்படை அதிகாரிக்கு விமானத்தில் செல்லப் பயணச் சீட்டுக் கிடைக்காமல் யாரும் உதவாமல் அழுது புரண்டாராம். ராணுவத்தில் இப்படி எல்லாம் நடக்காது. இம்மாதிரிச் செய்தி வந்து ஒரு வீரன் சொந்த ஊர் போக வேண்டும் எனில் அந்த யூனிட் முழுவதும் சேர்ந்து அவனுக்கு உதவி செய்யும். பண உதவி தேவை என்றாலும் அனைவரும் கையிருப்பிலிருந்து போட்டுக் கொடுத்து உதவுவார்கள். சாப்பாடெல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட வீரனை ரயில் அல்லது விமானத்தில் ஏற்றி அனுப்புவதை எல்லாம் அவர்கள் தங்கள் சொந்தப் பொறுப்பில் செய்வார்கள். மேல் அதிகாரிகளும் உதவுவார்கள். சாதாரண வீரனுக்கே இப்படி எனில் விமானப்படை அதிகாரிக்கு மட்டும் அந்தப் படத்தில் சொன்னாப்போலவா நடக்கும்! பேத்தல்! ராணுவத்தில் ஜாதி, மத பேதம் பார்க்காமல் அனைவருமே ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு தான் இருப்பார்கள். 

நாங்க நேரடியாக சீருடை தரிக்கும் ராணுவம் இல்லை எனினும் எங்களுக்குக் கூட ராணுவ யூனிட்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். மாற்றல் ஆகிவிட்டதெனில் சாமான்களைப் பாக்கிங் செய்வதிலிருந்து ரயிலில் ஏற்று அனுப்புவது வரை ஆட்கள் மாறி மாறி வந்து உதவுவார்கள். சாப்பாடு ஒரு வேளைக்கு ஒருவர் வீட்டில் என்று போடுவார்கள். சொல்லப் போனால் மாற்றல் ஆகிப் போகும் ஊரில் ஒரு வாரத்துக்கு நாம் வீட்டில் சமைக்க வேண்டாம். அதே போல் எந்த ஊரில் இருந்தோமோஅந்த ஊரிலும் ஒரு வாரம் ஊருக்குக் கிளம்பும் நாள் வரை சமைக்க வேண்டாம். கையிலும் சாப்பிடக் கொடுத்துவிடுவார்கள்.  இது பற்றி எல்லாம் எந்தவிதமான அறிவும் இல்லாமல் ராணுவத்தையும், ராணுவ வீரனையும் அந்தப் படத்தில் கொச்சைப் படுத்தி எடுத்திருக்கிறார்கள். இதை எப்படிப் படத்தணிக்கைக் குழு அனுமதித்தது என்று புரியவில்லை. விமானப்படை அதிகாரிகள் நேரடியாக இந்தச் செய்திக்கு மறுப்புச் சொல்ல மாட்டார்கள். சொல்லவும் கூடாது. ஆனால் அதிகாரிகள் சிலரின் மனைவிமார்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுதி இருந்தார்கள். இத்தனைக்கும் தாம்பரம் விமானப்படைத் தளத்திலே இந்தப் படம் எடுக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். தமிழ்ப்படம் என்றாலே இப்படித் தான் இருக்கும் என்று ஆகிவிட்டது.  

இதைப் பற்றிக் கேள்விப் பட்ட அந்த நபர் (உண்மை நாயகர்) திரைப்படம் தானே, அதனால் இப்படி எடுத்திருக்காங்க என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டதாகவும் படித்தேன். தமிழகத்தில் ராணுவம் பற்றிய புரிதல் ஏற்படும் வரை இப்படித் தான்! என்ன செய்ய முடியும்!