எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 28, 2012

சென்னை விட்ட சோகக் கண்ணீரும் ஶ்ரீரங்கத்தின் ஆனந்தக் கண்ணீரும்!

இப்படி எதானும் சொல்லித் தான் சமாளிச்சுக்கணும். :))) வேறே வழியில்லை. கிளம்பறன்னிக்குக் காலங்கார்த்தாலே 2 மணி 3 மணிலே இருந்து இடியும், மின்னலுமா வானம் அமர்க்களப் படுத்திட்டு இருந்தது. காலங்கார்த்தாலே ஆறு மணிக்கெல்லாம் பாக்கர்ஸை வரச் சொல்லியாச்சு. வந்துடுவாங்க.  சாமான்களை எப்படி ஏத்தறது.  மாடியிலே இருந்து கீழே இறக்கியாகணும்.  கவலை பிச்சுக்கொள்ளப் பிள்ளையாருக்கு ஒரு ரூபாய்க் காசு லஞ்சம் கொடுத்துச் சரிக்கட்டினேன்.  வரும் வழியிலே தூற்றல் அக்ஷதை போட, இங்கே வந்ததும் வெளுத்துக் கட்டியது மழை.  சென்னை அளவுக்கு வெயில் தெரியலை; சாமான்களை எல்லாம் இன்னும் சரி பண்ணலை.  பிஎஸ் என் எல்லுக்கு ஏற்பாடாக முன்னாடியே எல்லாம் கொடுத்துத் தயார் செய்து வைத்திருந்தும் இந்தக் கட்டிடத்தில் ஒரு சில குடியிருப்புக்காரங்களுக்கு பிஎஸ் என் எல் கனெக்‌ஷனுக்கான வயர் இணைப்பு இல்லை.  அதிலே நம்ம குடியிருப்பும் ஒண்ணு.  இன்னிக்குத் தான் வந்து பார்த்துட்டுத் திங்கட்கிழமைக்குள்ளாக வயர் இணைப்புக் கொடுப்பதாய்ச் சொல்லி இருக்காங்க.  வராதுனு நினைச்ச எரிவாயு இணைப்பு வந்தாச்சு.  மற்ற இன்வெர்டர், ஏசி இணைப்பெல்லாம் கொடுத்தாச்சு.  இரண்டு நாளாகக் கரன்டும் கட் ஆகலை.

இன்னிக்கு பிஎஸ் என் எல் டாடா கார்ட் வாங்கினேன் அவசரத்துக்காக.  தாத்தாவோட அஞ்சலிப் பதிவு ஒரு மாசம் முன்னாடியே ஷெட்யூல் பண்ணியாச்சு.  டாடா கார்ட் விலை மட்டுமில்லாமல் இணைய இணைப்புக்கான பணமும் நான் 2ஜியில் சம்பாதிச்சிருந்தாத் தான் கட்டுபடியாகும் போலிருக்கு.  ஆகவே தோழர்களே, தோழிகளே, நண்பர்களே, நண்பிகளே, சகோதர, சகோதரிகளே, ரத்தத்தின் ரத்தங்களே, உடன்பிறப்புக்களே, அனைவரும் ஸ்வீட் எடு, கொண்டாடுனு கொண்டாட வேண்டாம்.


வண்ணான் வீடு போற வழி இன்னும் கொஞ்ச தூரம் தான்.  வந்துடுவோமாக்கும்.

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி!

இன்று தமிழ்த் தாத்தாவின் நினைவு நாள்.  தமிழுக்கு அவர் செய்திருக்கும் அளப்பரிய தொண்டுக்குச் சும்மாவானும் நன்றி என்ற ஒற்றைச் சொல்லை நாம் சொல்வது வெறும் சம்பிரதாயம்.  வறுமையிலும் மிகவும் கஷ்டப் பட்டுப் பல பணக்காரர்களின் ஆதரவைப் பெற்றுத் தமிழின் அரிய நூல்களைப் பதிப்பித்தார்.  அவர் இல்லை எனில் மணிமேகலை எந்த மதத்தைச் சார்ந்த நூல் என்பதையே நாம் அறிந்திருக்க மாட்டோம்.  பல அரிய நூல்களைச் சுவடிகளில் இருந்து கண்டறிந்து பதிப்பித்த மாமனிதருக்கு நாம் செலுத்த வேண்டிய அஞ்சலி எப்போதும், எங்கேயும்  தமிழிலேயே பேசுவது ஒன்றே.  ஆங்கிலச் சொற்களைத் தேவையான இடத்தின் பயன்படுத்திக்கொள்ளலாம்.  ஆனால் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசுவதைக் கூடியவரை தவிர்ப்போம்.

Friday, April 20, 2012

விடை கொடுக்கிறேன் சென்னைக்கு!

சென்னையில் இருந்து எழுதும் கடைசிப் பதிவு இது. திங்களன்று ஶ்ரீரங்கம் சென்று பால் காய்ச்சி விட்டு வந்தாச்சு. இன்னிக்குத் தொலைபேசியையும், ப்ராட்பான்ட் இணைப்பையும் சரன்டர் பண்ணுகிறோம். இனி அங்கே சென்று தான். அங்கே எல்லா ஏற்பாடுகளும் செய்து வைச்சாச்சு. நாங்க அங்கே போயிட்டுக் கணினியையும் இணைப்புகள் கொடுத்துத் தயார் செய்து வைக்கணும். எப்படியும் புதன் கிழமை தான் போகப் போவதால் அடுத்தவாரக் கடைசி ஆகும். ஆகவே ஒரு வாரம் நோ இணையம்.

ஊர்களுக்கெல்லாம் அடிக்கடி செல்வதில் இணையத்துக்கு வராமல் இருப்பதில் பிரச்னை ஒன்றும் இல்லை. அதோடு இங்கேயே சில சமயம் இணையத்திலே அதிகம் அமராமல் இருக்கவேண்டும் எனக் குறைத்துக் கொள்வதும் உண்டு.சில சமயம் bandwidth exceed ஆயிடுமேனும் குறைச்சுக்கறது உண்டு. ஆகவே புத்தகங்கள் துணையோடு ஒருவாரப் பொழுது போயிடும். :)))))) சில ஆண்டுகளாகவே சென்னையை விட்டுச் சென்றுவிடும் எண்ணத்தில் இருந்தோம். பல ஊர்களையும் சென்று ஆராய்ச்சிகள் செய்தோம். ஶ்ரீரங்கம் லிஸ்டிலேயே இல்லை. இது திடீர்னு யு.எஸ்ஸில் இருக்கையில் எடுத்த முடிவு. ஶ்ரீரங்கம் போகலாமானு யோசனையாத் தான் இருந்தது.  சென்னையை விட வெயில் அதிகம்.அதோடு பவர் கட்டும் அதிகம்.  முதலமைச்சர் தொகுதி என்பதால் எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் இல்லை என்பதே உண்மை.

என்றாலும் மனசில் என்னமோ அங்கே செல்லவேண்டும் எனத் தோன்றியது. சென்னைக் காதலர்களுக்கு எனக்குச் சென்னை பிடிக்காது என்றால் ஆச்சரியமாய்ப் பார்க்கலாம். அவங்க கிட்டே எல்லாம் மன்னிப்புக் கேட்டுக்கறேன். என் பதிவுகளில் ஆரம்பக் காலத்திலேயே சென்னைனா பிடிக்காது என எழுதி இருப்பேன். :)))))) முக்கியமா இன்னம்புரார்! :)))) சென்னை என்றால் அவருக்கு ஒரு தீராத மயக்கம். என்னவோ எனக்கு அந்த மயக்கம் வந்ததில்லை. எப்படியோ, சந்திக்க ஒரு வாரம் ஆகும் என்பது தான் விஷயம். பின்னூட்டங்கள் எல்லாம் கொடுத்து வைங்க. இங்கே சொந்தக்காரங்க வீட்டிலே இணையம் கிடைச்சா பப்ளிஷ் பண்ணி வைக்கிறேன். :))))) அப்படிப் போட முடியலைனா யாரும் உண்ணும் விரதம், தீக்குளிப்புனு ஆரம்பிக்க வேண்டாம்.

எல்லாரும் சமத்தா அலகு குத்திக்கொண்டு, காவடி எடுத்தால், அல்லது மண்சோறு சாப்பிட்டாலே போதும்! 

Thursday, April 19, 2012

நலம் தானே, நலம் தானே!

அனைவருக்கும் வணக்கம். ஏற்கெனவே அறிவிப்புச் செய்த நினைப்பில் பதிவிலே ஏதும் சொல்லாமலேயே ஊருக்குக் கிளம்பிப் போயிட்டேன். பலரும் தொலைபேசி(செல்)யில் அழைத்துக் கேட்டதும் தான் புரிந்தது. மன்னிக்கணும்! பல்வேறு வகையான குழப்பங்கள்; எல்லாத்தையும் விட சொந்த வீட்டை விட்டுட்டுப் போகும் மன வருத்தம். ஆகவே முன்னுக்குப் பின் முரணாகி விட்டது. ஶ்ரீரங்கம் போய்ப் பால் காய்ச்சி அங்கே இரண்டு நாள் தங்கிட்டு வந்தாச்சு. அனுபவங்கள் பின்னர். இப்போத் தான் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் வந்தோம். இணையம் இருக்கானு சோதனை செய்தேன்.  அதோடு அநேகமா நாளையிலிருந்து இணையம் கட் பண்ணிடுவாங்கனு நினைக்கிறேன். நாளை தான் தெரியும். அப்புறமா ஶ்ரீரங்கம் போய் இணையம் இணைப்பு வந்து தான் உங்களை எல்லாம் பார்க்க/படிக்க முடியும்.


அதுக்குள்ளே யாரும் தீக்குளிக்க வேண்டாம்;மண் சோறு சாப்பிட்டு அலகு குத்திக் காவடி மட்டும் எடுத்தால் போதும். :))))))

Thursday, April 12, 2012

அன்றொரு நாள்: ஏப்ரல் 13 சித்திரை, தமிழ்ப் புத்தாண்டு. நந்தனத்துக்கு வயசு 60



திரு இன்னம்புராரின் அன்புக் கட்டளை புத்தாண்டிற்கு அன்றொரு நாள் நான் எழுதவேண்டும் என்பது.  அவராட்டமா சுவை கூட்டி எழுதத் தெரியாது;  வராது. பொறுத்தருள்க!  வார்த்தைகளில் சிக்கனம் மட்டுமின்றி ஒரே வார்த்தையில் மொத்தக் கட்டுரையின் உள்ளார்ந்த பொருளைக் கொண்டு வருகிறார்.  நானோ வள வள, ஆகவே 2 நாட்களுக்கு என்னோட அறுவை தான்.  பெரியவர் ஓய்வு எடுக்கப் போகிறேன்னு சொல்லிட்டார். தொந்திரவு செய்ய வேண்டாம்!

அப்பாவோட முன்னோர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள்.  மத்தியப் ப்ரதேசம், ஆந்திரா பார்டர்னு சொல்வாங்க.  அவங்க பரசுராம க்ஷேத்திரத்திலே கன்யாசுல்கம் முறையில் பெண்ணை தானமாய்ப் பெற்றுக் கொஞ்ச காலம் அங்கே குடித்தனம் பண்ணி, பின்னர் என் அப்பாவோட கொ.தா. காலத்தில் மதுரைக்கருகே மேல்மங்கலம் வந்து குடியேறினாங்க. ஹிஹி, வந்தேறிங்க தான்!  தொழில் வைத்தியம். ஆனால் என்னோட தாத்தாவோட அதெல்லாம் போயாச்சு. இப்போச் சொல்ல வந்தது என்னன்னா எங்க வீட்டிலே யுகாதியும் உண்டு; தமிழ் வருஷப் பிறப்பும் உண்டு; விஷுக்கனியும் உண்டு. சின்ன வயசிலே விபரம் தெரியாப் பருவத்திலே விஷுக்கனி கொண்டாடியது மங்கலாக நினைவில் இருக்கு. யுகாதியும் தமிழ் வருஷப்பிறப்பும் கொஞ்சம் கூடக் குறையாத அதே விமரிசையோடு கொண்டாடப் படும். இப்போவும் அண்ணா, தம்பி வீடுகளில் யுகாதிக்குப் பாயசம் வைத்து விருந்து உண்டு.  விஷுவும் தமிழ் வருஷப் பிறப்பும் அநேகமாச் சேர்ந்தே வந்துவிடுவதால் பிரச்னை இல்லை.

கல்யாணம் ஆன வருஷம் யுகாதி கொண்டாட்டம் வழக்கம் போல் கொண்டாட நினைத்தால் நம்ம தலைவர் சிரிக்கிறார்.  இது என்ன வழக்கம்னு! அப்புறமா மாமியாருக்குக் கடிதம் போட்டுக் கேட்டால் அதெல்லாம் இல்லைனு சொல்லிட்டாங்க.  அவங்க சோழ தேசத்து வடமர்கள். J ஆகவே சித்திரை வருடப் பிறப்பு விமரிசையாகக் கொண்டாடினோம்.  எனக்குக் கல்யாணமாகிக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆக இருந்த நேரம்.  எங்க பெண் வயிற்றில் மூணு மாசம்.  ஆகவே புதுப் புடைவை எல்லாம் எடுத்துக் கொண்டாடினோம்.  இதிலேயும் முன்னெல்லாம் பஞ்சாங்கப்படி வருஷம் பிறப்பது முதல் நாளாகவும் சித்திரை ஒண்ணாம் தேதி அடுத்த நாளாகவும் இருக்கும். இம்மாதிரிச் சமயங்களில் என் அப்பா வீட்டில் தமிழ் வருஷப் பிறப்பை முதல் நாளே கொண்டாடுவாங்க.  அடுத்தநாள் சித்திரை ஒன்றாம் தேதி தான் விஷுக்கனி.  சில சமயம் இரண்டும் சேர்ந்தே வரும்.  இந்த வருஷம் அப்படிச் சேர்ந்தே வந்திருக்கு.

முழுப் பூஷணி, முழுப் பரங்கி, வாழைக்காய்த் தார், வாழைப்பழத்தார், பச்சைக்காய்கள், பழ வகைகள், தானியங்கள், அரிசி, பருப்பு, வெல்லம், மஞ்சள் கிழங்கு, நிறைநாழி ஒரு படி அளவுள்ள படி அளவையில் மஞ்சள், குங்குமம் இட்டு, சந்தனம் தடவி அரிசியை அதில் நிறைத்து, மேலே காசுகளைப் போட்டுப் பூவால் சுற்றி நடுவில் வைப்பார்கள்.  பக்கத்தில் ஒரு தாம்பாளத்தில் பருப்பு, வெல்லம், முழுத் தேங்காய் வைக்கப் பட்டிருக்கும்.  அவரவர் குல தெய்வப் படத்தை முன்னே வைத்துப் பக்கத்தில் பெரிய  கண்ணாடியை வைத்து நாகர்கோயில் வெண்கல விளக்கை ஏற்றி வைப்பார்கள்.  வெற்றிலை, பாக்கு, பழம், காசுகள் வைத்திருக்கும்.  சுவாமி படத்துக்கு நகைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.  காலையில் எழுந்ததும் கண்களைத் திறக்கக் கூடாது.  வீட்டின் பெரியவங்க யாராவது ஒருத்தர் கையைப் பிடிச்சு அழைத்துச் சென்று கண்ணாடிக்கு எதிரே காட்டுவாங்க.  அதில் தெரியும் காட்சியைக் கண்டதும் பின்னர் சுவாமிக்கு எதிரே வைத்திருக்கும் பொருட்களையும் பார்த்ததும் நமஸ்கரித்து எழுந்ததும், கை, கால் சுத்தம் செய்து குளித்து வந்ததும், வீட்டுப் பெரியவங்க இனிப்பை முதலில் உண்ணக் கொடுத்துப் பின்னர் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்துக் காசோ அல்லது ஏதேனும் பரிசோ கொடுப்பாங்க.  என்ன அதிகம் போனால் அந்தக் காலத்து வெள்ளி நாலணா கிடைக்கும். J
இந்த வருஷத்தோட பெயர் நந்தன. நாரதரும் கண்ணனும் கூடியதால் பிறந்த குழந்தைகள் என்று அசிங்கமான கற்பனைகள் காணக்கிடைக்கின்றன.  அப்படியே எடுத்துக்கொள்ளாமல் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் கண்ணனை நினையாதவர் யார்?  எல்லாருக்குமே அவன் அருளுகிறான்.  அப்போ கண்ணன் இல்லாத இடம் ஏது?  அவனை நினையாத மனம் ஏது?  அப்படிக் கண்ணனை நினைந்திருந்த நாரதர் கண்ணனின் மாயையில் சிக்கித் திளைத்து மீண்டு வந்ததையே அது சுட்டிக்காட்டுகிறது.  மனிதனின் வாழ்நாளின் ஒரு சுற்று அறுபது வருடம். அப்படி அறுபது வருடங்கள் பிறந்தன. இந்த அறுபது வருடங்களும் மாயையில் மூழ்கி இருந்தார் நாரதர். கண்ணனின் மனைவி என்றே எடுத்துக்கொண்டாலும் கண்ணனை நினைப்பவர்கள் அனைவருமே நாயகியர் தானே.  பக்த மீராபாய் இதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறாளே!  அவன் சந்நிதியில் ஆண்மகன் அவன் ஒருவனே என்று! 

பார்த்தீங்களா!  வளவளக்க ஆரம்பிச்சாச்சு!  இந்த நந்தன வருஷத்து முக்கியத்துவம் என்னன்னா, நம்ம நந்தனம் தெரியுமா?  நந்தனம்?? அதாங்க தமிழ்நாட்டின் முதல் ஹவுசிங் போர்ட் குடியிருப்புப் பகுதி.  இதற்கு அறுபது வருடம் ஆகுதாம்.  கல்கியிலே படிச்சேன்.  ராஜாஜி முதலமைச்சரா இருந்தப்போ  ராமநாதபுரம்சேதுபதி ராஜாவுக்கும், பித்தாபுரம் மகாராஜாவுக்கும்ம் சொந்தமானதா இருந்த இந்த இடத்தை வாங்கிச் செப்பனிட்டு வடிவமைத்துப் பசுமையான இடமாக மாற்றிச் சிறு சிறு மனைகளாய்ப் பிரித்து நடுத்தர வர்க்கத்தைக் குடியேற்றினார்களாம்.  சேதுபதி, பித்தாபுரம் ராஜாக்களுக்கு முன்னர் ஆற்காடு நவாபிற்குச் சொந்தமாக இருந்ததாம் இந்த இடம்.  நவாப் கார்டன்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாம். ஒரு வீட்டுக்கும், இன்னொரு வீட்டுக்கும் குறைந்தது ஐந்தடியாவது இருக்க வேண்டும் என்ற சட்டத்தை மதித்த காலம் அது.  இப்போ மாதிரி மூச்சுக்கூட விடமுடியாமல் கட்டவில்லை.  இதற்கு நல்லதொரு பெயர் சூட்ட நினைத்த ராஜாஜி அப்போது “நந்தன” வருஷம் நிகழ்ந்ததால் அந்தப் பெயரையே சூட்டினாராம்.

நந்தன என்றால் வாரிசு எனப் பொருள்படும். ஶ்ரீராமரை ரகுநந்தனன் என்பது உண்டு.  கண்ணனையோ யது நந்தனன் என்பார்கள்.  அது போல் இந்த இடமும் வாரிசுகளாலும் முறையாகப் பராமரிக்கப் படவேண்டும் என்ற உயர்ந்ததொரு நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட நந்தனத்தின் இப்போதைய வயது 60.

சையது ஷா என்ற ஆற்காடு நவாபின் சேவகர் ஒருவருக்கு நவாபால் பரிசளிக்கப்பட்ட சையது கான்பேட்டை தான் இன்றைய சைதாப் பேட்டை. இந்த சையது ஷாவிற்குத் தான் நந்தனம் பகுதியும்  நவாப் கார்டன்ஸ் என்ற பெயரில் சொந்தமாக இருந்ததாக சென்னை நகர்ப் பாரம்பரியக் காவலர் எஸ்.முத்தையா கூறுகிறார்.


நந்தனம் பற்றிய குறிப்புகளுக்கு உதவி 15--04--2012 தேதியிட்ட கல்கி இதழ்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நாளை இணையத்துக்கு வர தாமதம் ஆகும். ஆகவே பின்னூட்டம் வெளிவரலைனா யாரும் உண்ணும் விரதம் இருக்க வேண்டாம்.  முக்கியமா ஶ்ரீராம். :)))))))))

Wednesday, April 11, 2012

ஆட்டமென்ன சொல்லுவேன்!

நேத்திக்குச் சாயங்காலம் கணினியிலே உட்கார்ந்திருக்கையிலே திடீர்னு சேரோட ஆடறாப்போல் இருந்தது.  என்ன ஆச்சுனு கத்தினேன்.  அப்போப் பக்கத்திலே வீட்டை இடிச்சதிலே ஒரு பக்கத்துச் சுவர் அப்படியே விழுந்துடுச்சுனாங்க.  அப்போவே சந்தேகமா இருந்தது.  ஆனால் தொடர் வேலைகளில் சுத்தமா மறந்தே போச்சு; ராத்திரி எலி வந்ததா!  அப்போ எங்க ரெண்டு பேருக்கும் நடந்த யுத்தத்திலே காலம்பர மெளன விரதம்.  எலி என்னமோ தப்பிச்சுண்டு போயாச்சு.

இன்னிக்கு மத்தியானம் சாப்பிட 2 மணிக்கு மேல் ஆச்சு. கரண்ட் 2 மணிக்குப் போயிடும்.  ஆகவே வெராந்தாவிலே உட்கார்ந்திருந்தேன்.  ரங்க்ஸ் உள்ளே ஆளை வைச்சுக் கொண்டு ஏதோ வேலை செய்துட்டு இருந்தார்.  அப்போப் பார்த்து உட்கார்ந்திருந்த சோபா கிடு கிடு, கிடு கிடுனு ஆட்டம்.  எனக்கா அப்போத் தான் எழுந்துக்கணும்னு. இவர் வேறே எதையோ எடுத்து வைச்சுட்டு இதை என்ன பண்ணறதுனு பாருனு கூப்பிட்டார்.  எழுந்தா பூமியே நழுவறது.  உட்கார்ந்தா சோபாவோட ஆட்டம்.  லேட்டாச் சாப்பிட்டது ஒத்துக்கலையா?  அல்லது ரத்த அழுத்தம் அதிகமாச்சா?  குறைஞ்சு போச்சா?  என்னனு புரியலை. எழுந்துக்கவே இல்லை.

இரண்டு நிமிஷத்துக்கு எல்லாம் கீழே இருக்கும் உறவுக்காரப் பெண் வந்து பூகம்பத்தை உணர்ந்தீங்களானு கேட்க, "அட, இதானா!" எனத் தோன்றியது.  அட, ஆமாம், ஆட்டம் போட்டதுனு சொன்னேன்.  ஆனால் என் கணவருக்கோ, கூட இருந்த ஆளுக்கோ எதுவுமே தெரியலையாம்.  எதிர் வீட்டில், பக்கத்து அபார்ட்மெண்டில், இன்னொரு பக்கத்து வீடுனு எல்லாரும் வீட்டுக்கு வெளியே.  என்னையும் ஏன் வெளியே வரலைனு கேட்டாங்க.  எங்கே, அந்த முழங்காலை முறிக்கும் படியில் நான் இறங்கறதுக்குள்ளே இன்னொரு ஆட்டம் ஆடிச்சுன்னா தானே இறங்கிடுவேன்;  இல்லைனா மேலே போயிடுவேன்னு சொன்னேன்.  ஆக மொத்தம் சில விநாடிகளில் இந்தோனேசியா பத்தித் தெரிய வந்தது. இங்கே கரண்ட் இல்லாததால் செய்திகளைப் பார்க்க முடியலை.  மனசுக்கு வருத்தமா இருக்கு. 

இவ்வளவு மோசமான பூகம்பம் இந்தோனேசியாவிலே வந்திருக்கு. மக்களை அந்த ஆண்டவன் தான் காப்பாற்றணும்

Tuesday, April 10, 2012

இது என்ன கொடுமை!

 இப்போதைய அரசு சில குறிப்பிட்ட கட்டண அதிகரிப்புச் செய்திருப்பதை ஒட்டுமொத்தமாக அனைவரும் எதிர்க்கின்றனர்.  முக்கியமாய்ப் பேருந்துக் கட்டணம்; மின் கட்டணம்.  இரண்டுமே பல வருடங்களாக ஏற்றப்படவே இல்லை.  அப்போதைக்கப்போது சிறிது சிறிதாக ஏற்றி இருக்க வேண்டிய ஒன்றே. ஆனால் யாரும் முன் வந்து செய்யவில்லை.  இப்போது நமக்குச் சுமையாகத் தெரியும் அளவுக்கு ஏற்றப்பட்டிருக்கிறது.  என்றாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது குறைவே.

தியேட்டரிலே போய்ப் படம் பார்க்கக் கட்டணங்கள் எக்கச்சக்கமா ஏறி இருக்கிறதாச் சொல்றாங்க. இது தியேட்டர் முதலாளிகளோட விருப்பம்னும் கேள்விப் பட்டேன்.  தியேட்டரிலே போய்ப் படம் பார்க்கும் வழக்கமே இப்போ எங்க வீட்டிலே 20 வருஷங்களுக்கும் மேலாக இல்லாமல் போயாச்சு.  ஆனாலும் பத்திரிகைகளில் படிப்பதையும், செல்பவர்கள் சொல்வதையும் வைத்துக் கேட்டால் இரண்டு பேர் ஒரு சினிமா பார்க்கப் போக்குவரத்துச் செலவையும் சேர்த்துக் கொண்டு, காபி, டிபன் வகையறாவும் சேர்த்தால் ரூ. 500/-க்கும் மேல் என்று சொல்கின்றனர்.  ஆனால் இதை ஏன் யாரும் எதிர்ப்பதில்லை??

விவசாயத்திற்கு மின்சாரம் இலவசம்.  அதுவும் சரியாக வருவதில்லை என்பதால் பயிருக்கு நீர் பாய்ச்ச முடியலை என ஒரு விவசாயி புலம்புவதாக ஒருத்தர் எழுதி இருந்தார்.  இப்போ ஐம்பது வருடங்களுக்குள்ளாகத் தான் பம்ப்செட்டெல்லாம்.  முன்னெல்லாம் எப்படித் தண்ணீர் பாய்ச்சினோம்?  நம் கால்நடைகளின் உதவியோடு, கிணற்றில் ஏற்றம் இறைத்ததும், கால்வாய்கள் வெட்டி நீர் பாய்ச்சிய முறையும் தண்ணீர் குறைவாய்க் கிடைக்கும் இடங்களில் சொட்டு நீர்ப்பாசன முறையும் என்ன ஆச்சு?  ஏன் மின்சாரத்தையே நம்பி இருக்க வேண்டும்??  கால்நடைகளைச் சரியானபடி பராமரித்தால் இயற்கை உரமும் கிடைக்கும்.  நீர் பாய்ச்சவும், ஏர் உழவும் பயன்படுமே?  இப்போதெல்லாம் யார் மாட்டை வைத்து ஏரோட்டுகிறார்கள் என்பவர்களுக்கு, அதெல்லாத்தையும் நாம் விட்டு விட்டு நவீனம் நவீனம் என்று அதன் பின்னால் சென்றதாலேயே இப்போது இத்தகைய அவதி.

காலத்துக்குத் தகுந்த முன்னேற்றங்கள் வேண்டியது தான்.  ஆனால் இலவசங்களும் வேண்டுமா? அவை எப்படி மனிதரைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி, அவர்களின் உழைப்பைச் செய்ய விடாமால் சோம்பேறியாக்குகிறது என்பதை நாம் அறிவோமா?? எல்லாம் இலவசமாய்க் கிடைப்பதால் ஏன் வேலை செய்து கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணம் இன்று பெரும்பாலோர் மத்தியில் நிலவுகிறது.  அதுவும் கிராமங்களில் விவசாயக் கூலி வேலை செய்யும் ஆட்களிடம் இந்த எண்ணம் பரவலாய்க் காணப்படுகிறது.  ஏற்கெனவே விளைநிலங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும், வணிகவளாகங்களாகவும் மாறி வருகின்றன.  இப்போது இப்படி ஆட்களும் சோம்பேறிகளாகி வருவதால் நாளைய சமுதாயத்துக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம் என்று கவலையாக இருக்கிறது.  இலவசம் கொடுப்பதற்காகவே பணம் தேவை என அரசு கூடுதல் வரி விதிக்கிறது.  ஆக மொத்தம் இலவசத்தால் என்ன லாபம்??

இலவசம் வேண்டாம். ஆனால் தடையற்ற மின்சாரம் தாருங்கள் என அரசைக் கேளுங்கள்.  அவர்களால் இயன்ற அளவுக்கு உற்பத்தியை அதிகரித்து மின்சாரம் விநியோகம் செய்ய இயலும்.  பணம் இல்லாமல் அரசும் எப்படி மின் உற்பத்தியை அதிகரிக்கும்?

கொஞ்சம் இல்லை; நிறைய யோசியுங்கள்.

இன்றைய தினசரியில் பள்ளி ஆசிரியை ஒருவர் தன் காதலனைத் திருமணம் செய்ய வேண்டி காதலனின் சொந்தக்குழந்தைகளைக் கொலை செய்யத் தூண்டி குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றன.  அந்த ஆசிரியைக்கும் ஒரு மகள் இருக்கிறாள். விதவை.  மறுமணம் தேவை தான்;  ஆனால் அதற்காகக் குழந்தைகளைக் கொன்று மணம் செய்து கொள்ள எப்படி மனம் வந்தது?  அந்தக் காதலனும் சரி, தான் பெற்ற குழந்தைகளை எப்படிக் கொல்லத் துணிந்தான்?  பெற்ற குழந்தையையே அடித்துக் கோமா நிலைக்குத் தள்ளி இருக்கிறார் தகப்பன் ஒருவர்.  ஏனெனில் அவருக்குப் பிறந்தது பெண் குழந்தையாம்.  அவரைப் பெண் பெற்றெடுக்காமல் ஆணா பெற்றெடுத்தார்?? இது என்ன கொடுமை???

Monday, April 09, 2012

வல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்



பிறந்தநாள் வாழ்த்துகள்!

இனிய சிநேகிதி வல்லி சிம்ஹனுக்கு இன்று பிறந்த நாள். கண்ணுக்கு அறுவை சிகிச்சை முடிஞ்சு இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமாச் சரியாகிட்டு வருதுனு சொன்னாங்க.அவங்க உடல் நலத்துக்கும், பிறந்த நாளைக்காகவும். அனைவரும் வாழ்த்தி வணங்கலாம். வாழ்த்துகள் வல்லி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் மகிழ்வோடும்,நீங்களும் சிங்கமும் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், மகள், மருமகன், மகன்கள், மருமகள், மற்றும் பேரன், பேத்திகளோடும், ஆனந்தமாயும், ஆரோக்கியமாயும், மகிழ்வாயும் வாழப் பிரார்த்திக்கிறோம்.

கீதா&சாம்பசிவம்.

பி.கு. இந்த வருஷம் அதிகப்படியான வேலை காரணமாப் போன வருஷத்துப் பதிவையே மீள் பதிவாப் போட்டதுக்கு மன்னிக்கவும்.

Sunday, April 08, 2012

கோஸ்லாவின் கூடு!

Khosla ka Ghosla அப்படினு ஒரு படம் வந்திருக்கு.  இன்னிக்கு மத்தியானம் வழக்கம் போல் தொலைக்காட்சியில் ஒவ்வொரு சானலாத் திருப்பிட்டு வந்தப்போ  தூர்தர்ஷன் லோக்சபா சானலில் அனுபம் கேர் ரொம்பவே சீரியஸாப் பேசிட்டு இருந்தார்.  என்னனு பார்த்தா ஏதோ வீட்டைப் பத்தின படம்னு தெரிய வந்தது.  உடனே மண்டையை உடைக்கப் படத்தை முழுசும் பார்த்தேன்.  தன்னோட சேமிப்பை எல்லாம் போட்டு அனுபம் கேர் வாங்கின நிலத்தை உள்ளூர் தாதா குரானா அபகரித்துவிட்டு அனுபம் கேரிடமே ஹிஹி படத்திலே கோஸ்லா, கோஸ்லாவிடமே அந்த நிலம் திரும்ப வேணும்னா 15 லக்ஷம் கொடுக்கச் சொல்றான்.  போலீஸில் ஆரம்பிச்சு எல்லா இடத்திலும் முட்டி மோதியும் பலனில்லாமல் கோஸ்லாவின் பெரிய பிள்ளை தனக்குத் தெரிந்த அடியாட்கள் மூலம் நிலத்தைத் திரும்பக் கைப்பற்ற, பெரிய கோஸ்லா, அதாங்க அனுபம் கேர், போலீஸ் லாக்கப்பில்.

குரானா போலீஸைக் கையில் போட்டுக் கொண்டு தன்னைப் பயமுறுத்த இதைச் செய்தது புரிய வருகிறது.  குரானாவும் இப்போக் கொஞ்சம் இறங்கி வந்து 12 லக்ஷம் கொடு; நிலத்தைத் திருப்பித் தரேன்னு சொல்றான்.  கோஸ்லா அவமானப் பட்டது போதும்னு முடிவுக்கு வரார்.  ஆனால் அமெரிக்கா செல்ல இருந்த 2-ஆம் பிள்ளைக்கு இதை விட மனசில்லை.  தனக்கு அமெரிக்கா செல்ல உதவி செய்த ஏஜெண்டிடம் இது குறித்துப் பேச ஒரு திட்டம் உருவாகிறது.  அதைச் செயல்படுத்திக் குரானாவிடமிருந்தே மூன்றரைக் கோடி பணமாக வாங்கிக் கொண்டு அதில் இருந்து 12 லக்ஷத்தைக் குரானாவிடம் கொடுத்துவிட்டு நிலத்தை மீட்கின்றனர்.  மிச்சப் பணம் இந்தத் திட்டத்துக்கு உதவின நண்பர்களுக்குள்ளே பிரிச்சுக்கறாங்க.

படம் வெகு இயல்பான நடிப்போடு நல்லாவே இருந்தது.  நல்லவேளையா இரண்டாவது பிள்ளையும், அவன் காதலிக்கும் பெண்ணும் டூயட் எல்லாம் பாடலை.  சாதாரணமாகவே வீட்டில் நடக்கும் நிகழ்வுகளாகவே போகிறது. என்ன ஒண்ணே ஒண்ணு, ஏமாத்திப் பணம் பிடுங்குவதை முதலில் ஒப்புக்காத அனுபம் கேர் பணம் வந்ததும் மாறிப் போகிறார்.  எனக்கு இன்னும் ஒத்துக்க முடியலை.

அதனால் என்ன?  படத்துக்கு தேசீய விருது கிடைச்சதாம்.  அதோடு நல்ல வசூலும் இருந்ததாம். கூகிளாண்டவர் தயவிலே இந்தத் தகவல்கள் கிடைச்சன.  படம் பெயரே தெரியாமல் பார்த்துட்டு இருந்தேனா! என்ன பேர்னு தெரிஞ்சுக்க கூகிளாண்டவரைக் கேட்டால் முழு வரலாற்றையும் சொல்லிட்டார்.



பகுத்தறிவோட முருங்கைக்காய், வாஸ்து போஸ்டில் கமென்டவே முடியலை;  அந்தக் கமென்ட் இங்கே.

வீட்டுக் "கொள்ளை"= வீட்டுக் கொல்லை.  முதலில் தனி வீடுகளே இருக்குமானு பார்க்கணும். எல்லாரும் வீடுகளை இடிச்சு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்ட ஆரம்பிச்சாச்சு.  அதுவும் பக்கத்து வீடுகளை முட்டும்படியான தூரத்தில் கட்டறாங்க.  இங்கே இருந்து அங்கே ஒருத்தருக்கொருத்தர் தொட்டுக் கொள்ளலாம். :((((

Friday, April 06, 2012

எண்ணங்கள், எண்ணங்கள்!

நேற்றிலிருந்து மின்சாரம் அடிக்கடி போய்விட்டு வருகிறது.  எப்போப் போகும், எப்போ வரும்னு சொல்ல முடியலை. :( அதோடு ஜேசிபி மெஷின்கள் வந்து சாலையைத் தோண்டிக் கொண்டு இருப்பதால் (எனக்குத் தெரிஞ்சு மூணு வருஷமாத் தோண்டறாங்க) தொலைபேசி, இணைய இணைப்புக்கான கேபிள்கள் எல்லா இடங்களிலும் அறுந்து போய் அது வேறே பிரச்னை!  இங்கே பக்கத்திலே இத்தனை மாசங்களாப் பூட்டிக் கிடந்த வீட்டை இடிக்கிறாங்க.  அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் தான்!  அவங்க மின்சாரம் இல்லைனாக் கூட ஜெனரேட்டர் மூலம் வீட்டைக் குடைந்து கொண்டிருக்கின்றனர்.  காலம்பர ஐந்து மணிக்கே ஆரம்பிச்சா ராத்திரி ஒன்பது மணி வரை சத்தம்.  அந்த நேரம் யாரானும் தொலைபேசியில் அழைத்தாலும் கேட்கிறதில்லை.  அப்படியே மணி சத்தம் கேட்டாலும் நாம பேசறது அவங்களுக்குப் புரியறதில்லை.  அவங்க பேசறது நமக்குப் புரியறதில்லை.  மொத்தத்தில் இந்தியா வந்ததில் இருந்து இராப் பகலாத் தூக்கம் இல்லை. :(

இது எல்லாம் எப்போ முடியும்?? அம்பத்தூர் முனிசிபாலிடியாக இருந்தப்போ செய்தது கூட இப்போ மாநகராட்சியில் இணைந்ததும் கிடைக்கவில்லை.  ஆனால் இதற்கு ஒரு முடிவு காண்பாரும் இல்லை.   வெட்கமாக இருக்கிறது. ஒன்றரை கி.மீட்டருக்குள் உள்ள தூரத்துக்கு ஆட்டோக்காரர்கள் கூசாமல் எண்பது ரூபாய் கேட்கின்றனர்.  கி.மீட்டருக்கு 20ரூ என்று வைத்துக் கொண்டால் கூட முப்பது ரூபாய் தான் வரும்.  நாம் கேட்டால் சாலையைக் குறித்துக் குறை கூறி நம்மிடமே சண்டை போடுகின்றனர்.  அந்தந்தத் தெருக்காரங்களே கூடிச் சாலை போட்டுக் கொண்டால் கூட மீண்டும் மாநகராட்சியில் வந்து தோண்ட மாட்டாங்க என்பது என்ன நிச்சயம்??  நமக்குக் கைவிட்டுச் செலவு செய்து நஷ்டம் அடைந்தது தான் மிஞ்சும்.  எல்லாரும் இதைக் கேட்கின்றனர்.


தமிழ்நாட்டில் விவாகரத்து முன்னணியில் இருக்கிறதாம்.  தினசரிப் பத்திரிகைச்செய்தி. என்ன சொல்றது?  விட்டுக் கொடுத்தலும், அனுசரித்துப் போவதும் சுத்தமாய் இல்லை.   அதோடு பல பெண்களும் மிகவும் அதிகமாய்ச் சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஒரு காரணம்.  பெற்றோரும் துணை இருக்கப் பெண்களும் பல்வேறுவிதமான நிபந்தனைகள் போடுகின்றனர்.  இது குறித்துச் சொல்ல நிறைய இருந்தாலும் ம்ஹ்ஹும், இப்போ வேண்டாம்.  இரு தரப்பிலும் தவறுகள் நிறைய.  ஆண்களை மட்டுமே சுட்டிக் காட்டுவது தவறு.

இன்றைய இளம் பெற்றோர்கள் ஒரே குழந்தை போதும்னு முடிவு பண்ணறாங்க.  கேட்டால் இதை வளர்க்கிறதே பெரும்பாடா இருக்கு;  இதிலே இன்னொண்ணா? னு கேள்வி வருது.  தப்பு; பெரிய தப்பு.  நீங்க முதல் குழந்தைக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசே அதற்கு ஒரு தம்பியோ, தங்கையோ தான்.  ஒரே குழந்தையாக இருப்பதால் கிடைக்கும் அளவு மீறிய செல்லத்தால், சலுகைகளால் அந்தக் குழந்தை எவரோடும் ஒத்துப் போவதில்லை.  கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதால் பிடிவாதம், கோபம், மனிதர்களைத் தூக்கி எறிந்து பேசுதல் என இருக்கிறது.  அதோடு மனபலம் இருக்கும் குழந்தை என்றால் சரி.  அது இல்லாத குழந்தைகள் பெற்றோரை விட்டுத் தனியாக வாழக் கொஞ்சம் அச்சப்படுகின்றனர் என்பது தான் உண்மை.  பெற்றோரும் பொத்திப் பொத்தி வளர்க்கின்றனர்.  இத்தகைய குழந்தைகள் வாலிபப் பருவம் வந்தும் குழந்தையாகவே நடந்து கொள்கின்றனர்;  பெற்றோரும் குழந்தையாகவே நடத்துகின்றனர்.  விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல், பகிர்ந்து உண்ணுதல், மனம் விட்டுப் பேசுவது போன்றவை இத்தகைய குழந்தைகளிடம் காணக் கிடைக்காது. 

பொதுவாகவே பார்த்தால் வீட்டின் முதல் குழந்தையை விடவும் 2--ஆம் குழந்தை மிகவும் இணக்கமாகவும், அனுசரித்துக் கொண்டும், பெரியவர்கள் சொல்வதைக் கேட்கும் குழந்தையாகவும், பகிர்ந்து கொள்ளும் பண்பு உள்ளதாகவும் காணப்படும்.  யோசியுங்கள்.  நம் நாட்டில் ஏற்கெனவே கலாசாரங்கள் சீரழிந்து வருகின்றன.  ஓரளவாவது காப்பாற்றப் பட்டு எதிர்காலத்துத் தலைமுறை பண்பும், அன்பும், மனிதத் தன்மையுடனும் இருக்க வேண்டுமானால் நாம் இந்த வழிமுறையைப் பின்பற்றியே ஆகவேண்டும்.

Wednesday, April 04, 2012

ஹூஸ்டன் ம்யூசியத்தில் ஏமாந்தோம்!




Posted by Picasaஹூஸ்டன் ம்யூசியம் போனோம்.  அங்கே படங்கள் எடுக்கத் தடை.  ஒரு சில காலரிகளில் மட்டும் எடுக்கலாம்.  இது அந்தக் காலத்து சைனா கிண்ணம்.  ஐந்து நூற்றாண்டுகள் முன்பு இருந்ததாம். இம்மாதிரி நிறைய வைச்சிருக்காங்க.  இதை மட்டும் படம் எடுக்க அனுமதி கிடைச்சது. ஒரு இடத்தில் இம்மாதிரிப் பீங்கான் துண்டங்களாலேயே கார்ப்பெட் மாதிரி அலங்கரித்து வைச்சிருக்காங்க. 

பல நாட்டுக் கலைப்பொருட்களும் இருக்கின்றன.  உலக நாடுகள் அனைத்திலிருந்தும் கலைப்பொருட்களைச் சேகரித்திருக்கிறார்கள். அதில் ஆப்பிரிக்க, சீனக் கலைப் பொருட்கள் கொஞ்சம் பார்க்கும்படியாக இருக்கின்றன.  மிகக் கொஞ்சமே இருந்த இந்திய காலரியில் பத்தாம் நூற்றாண்டு  அம்பிகையும், நடராஜரும்,  இருக்கின்றனர்.  பிற்காலச் சோழர் காலச் சிலைகள் அதிகம் காணப்பட்டன.  புத்தர் திபெத்தில் இருந்து வந்திருக்கார்.  ஒரு சில பல்லவ காலத்துச் சிலைகளாகக் காணப்படுகின்றன.  பலவும் சுவாமிக்குப் போடும் கவசம், நகைகள், ஆபரணங்கள், தலைக்கிரீடம் போன்றவையே. ஒரு கோணத்தில் பார்த்தால் புத்தர் தக்ஷிணாமூர்த்தி மோன தவத்தில் இருப்பது போல் காணப்படுகிறார்.

மிகப் பெரிய ம்யூசியம்னு நினைச்சுட்டுப் போய் மிகப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது என்னவோ உண்மை.  சித்திரங்கள் உள்ள காலரியில் படம் எடுக்கலாம்.  அங்கே எல்லாம் கிறிஸ்துவின் வாழ்க்கையை விளக்கும் ஓவியங்களாகவே காண முடிகிறது.

மாதிரிக்கு ஒண்ணு.

Sunday, April 01, 2012

காணாமல் போன நண்பர் குழாம்!

2011 நவம்பரோட வலைப்பக்கம் ஆரம்பிச்சு ஆறு ஆண்டுகள் முடிஞ்சாச்சு. ஆனாலும் தமிழில் எழுத ஆரம்பிச்சது 2,  ஏப்ரல் 2006-இல் இருந்து தான்.  அது வரைக்கும் உடம்பும் சரியில்லாமல் இருந்தது; தமிழில் தட்டச்சவும் வரலை.  இத்தனைக்கும் தமிழ், ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். :))))) போகட்டும்.  தமிழில் எழுதச் சுட்டி அனுப்பி உதவியது ஜீவ்ஸ்.  வெண்பா வடித்துக்கொண்டிருந்தவர் கூடவே எனக்கும் வந்து சொல்லிக் கொடுத்தார். ஆனால் அதுக்கப்புறமாக் குழந்தை பிறந்திருக்குனு சொல்லிட்டுக் காணாமல் போயிட்டார். (வலை உலகிலே எனக்குச் சொல்லிக் கொடுத்ததுதான் காரணம்னு யாரானும் சொன்னால் நம்பாதீங்க! :D) ஜீவ்ஸ் சொல்லிக் கொடுத்தும் முடியாமல் தவிச்சுட்டு இருந்தப்போ முதல் முதல் 2 ஏப்ரல் 2006-இல் அம்பி தான் என்னைக் கிண்டல் பண்ணி முதல் கமென்ட் போட்டிருந்தார்.  ஹிஹி நினைவு அப்படித் தான் சொல்லுது.  செக் பண்ணணும்.  அதற்கு முன்னர் பல பின்னூட்டங்கள் வந்தாலும் அன்னிக்கு அம்பி போட்டது கையைப் பிடிச்சு எழுதச் சொல்லித் தரமுடியுமானு கிண்டல் பண்ணி இருந்தார். அதுக்கு அடுத்த பதிவை ஒழுங்கா எழுத ஆரம்பிச்சுட்டேன்.  தாங்க்ஸ் டு அம்பி! :))))


அப்புறமாப் பழக்கம் ஆனவங்களிலே சூடான் புலி நாகை சிவா, கைப்புள்ள இருவரும் முக்கியமானவர்கள் என்பதோடு எனக்கு ஒரு வகையில் விளம்பரமும் கொடுத்தாங்க.  கைப்புள்ள வா.வா. சங்கத்தில் என்னோட பிறந்த நாளைக்குப் போஸ்டர் ஒட்டினார் என்றால் (பல்லி முட்டாய் வாங்கி அவரே தின்னதைப் பெருந்தன்மையா மன்னிச்சு விட்டுட்டேன்.) நாகை சிவா தொழில் நுட்ப உதவிகள் பலவும் செய்தார்.  ஆனால் இப்போ இவங்க மூணு பேருமே கல்யாணம் ஆகிக் குழந்தை பிறந்த பின்னர் பதிவுலக வரவைக் குறைத்துக் கொண்டு விட்டார்கள்.  நாகை சிவாவும், கைப்புள்ளயும் எப்போவோ ஓரிரு பதிவுகள் போட்டாலும், அம்பி சுத்தமாய்ப் பதிவு எழுதுவதையே நிறுத்திவிட்டார்.  கொஞ்சம் வருத்தம் தான்.  ஆனால் அவருக்கு என்னமோ யு.எஸ். போனதில் இருந்து எழுதத் தோன்றவில்லை போலிருக்கு.

அடுத்து அதே கால கட்டத்தில் அறிமுகம் ஆனவர் கார்த்திக் முத்துராஜன்.  அம்பியும் நானும் போட்டுக்கொள்ளும் வம்புச் சண்டையில் சமயத்துக்கு ஏற்றாற்போல் அவரும் கலந்து கொண்டு கலகலப்பை ஏற்படுத்துவார். வலை உலகில் அறிமுகம் ஆனப்புறம் ஒரு கல்யாணத்துக்காக பங்களூர் சென்றோம். அப்போ அம்பியைப் பார்க்க வரதாச் சொல்லி இருந்தேனா. நான் பங்களூர் போனப்போ அதைப் போஸ்டர் போட்டு விளம்பரப் படுத்தினார்.  மிக அருமையான நண்பர். இவரும் பல விதங்களில் ஊக்கம் கொடுத்ததோடு அருமையாகத் தன் கிராமத்து வாழ்க்கையை எழுதி வந்தார்.  இவரையும் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பதிவுகளில் பார்க்க முடியவில்லை.  2010-ஆண்டில் கடைசியாக எழுதினார்னு நினைக்கிறேன்.  இவங்க எல்லாருமே கிட்டத்தட்ட நான் ஆரம்பிச்ச சமயமே ஆரம்பிச்சாங்க.


இதில் அருமைச் சகோதரி வல்லி சிம்ஹனும் ஒருவர்.  ஆரம்பத்தில் நானும் வல்லியும்  இருவருமே ஒருவருக்கொருவர் பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டதோடு அம்பிக்கும் பின்னூட்டம் கொடுப்போம்.  அதன் பின்னர் ஒவ்வொருத்தருக்கும் திசை மாறியது.   இதிஹாசங்கள், புராணங்கள் குறித்தே எழுத நினைத்த எனக்கு எண்ணங்கள் வலைப்பக்கத்தில் அதை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியவில்லை. பல்வேறு விஷயங்களைத் தொகுத்தளிக்கும் முக்கிய வலைப்பக்கமாகவும் ஆகி விட்டது அது.  ஆகையால் என்னுடைய தனிப்பட்ட விருப்பம் ஆன இதிஹாசங்கள், புராணங்களுக்காகத் தனி வலைப்பதிவு துவங்கும்படி ஆகிவிட்டது.  பிரயாணங்கள், பக்திச் சுற்றுலாக்கள் போன்றவற்றிற்கு நாகை சிவாவின் உதவியோடு ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் வலைப்பக்கம் திறக்க முடிந்தது.  அதைத் தவிரவும் சில வலைப்பக்கங்களைத் திறந்தேன். அவற்றிலும் ஏதோ உளறிக் கொட்டிக் கிளறி மூடி இருக்கேன்.

ஆன்மிகப் பயணம் வலைப் பக்கத்தில்  பயணக்கட்டுரைகள் தவிரவும் சிதம்பர ரகசியம் என்னும் சிதம்பரம் குறித்த தொடரும் மற்றச் சில பதிவுகளும், கிராமத்து தெய்வங்கள், ஈசனின் வடிவங்கள் என எழுதி வருகிறேன்.  இந்தச் சிதம்பர ரகசியம் தான் ஓரளவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த தொடர் என்பதோடு அனைவரும் கவனிக்கவும் ஆரம்பித்தார்கள்.  அதே சமயம் இந்தத் தொடர் பிடிக்காதவங்களும், இதெல்லாம் என்ன, இதுக்குப் படிச்சுப் பின்னூட்டம் போடணுமானு கேட்டவங்களும் உண்டு.  இம்மாதிரியான தொடர்கள் எல்லாவற்றுக்கும் குறிப்புகள் எடுக்கத் தான் நேரம் எடுக்கும்.  நினைத்த மாதிரி எழுதிவிட முடியாது.  சில சமயம் தொடர்ந்து நாலைந்து பதிவுகளுக்கு எழுதி வைத்துக்கொண்டு விடுவேன்.  அப்போது அடுத்தடுத்துப் போட முடியும்.  சில சமயம் குறிப்புகள் எடுக்கவோ, புத்தகங்கள் கிடைக்கவோ சிரமம் ஆகப் போய்விடும்.  அப்போதெல்லாம் தாமதம் ஆகும்.  ஆனால் எப்படியோ ஒப்பேத்திக்கொண்டு வருகிறேன்.  சமீப காலமாகப் பழகிய  நண்பர்கள் யாரும் இன்று எழுத முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.  அப்போ ஒரு கூட்டம் என்று சொல்லும்படியா அமர்க்களம் செய்து கொண்டிருந்தோம்.


அடுத்த முக்கியமான வெகு முக்கியமான நபர் வேதா. அம்பியோட பதிவுகளின் மூலம் பழக்கம் ஆனவர். என் அருமைச் சிநேகிதி;  இன்றும் என்றும்.  வயசு பார்க்கப் போனால் எனக்குப் பெண்ணாக இருக்கலாம்.  என்றாலும் மன முதிர்ச்சியில் என்னை விடச் சிறந்தவள்.  பல விதங்களில் இருவரும் ஒத்துப் போவோம்.  நான் என்னை நானே தலைவியாக அறிமுகம் செய்து கொண்ட நமக்கு நாமே திட்டத்தின்படி வேதா தான் உ.பி.ச.  அதுக்குப் போட்டியாக இன்னும் யாரையும் நியமிக்கவில்லை.  எல்லார் பேரும் லிஸ்டில் வரிசைக்கிரமமாக இருக்கு. :D  ஆனால் என்று வேண்டுமானாலும் வேதா உள்ளே நுழையலாம்.  (யாருப்பா அது மு.அ.வோட உ.பி.ச.வோட கம்பேர் பண்ணறது? நாங்க தனி ரகம் ஆக்கும்!)  அதனால் மத்தவங்க பார்த்துட்டு இருங்க இப்போதைக்கு.  அடிக்கடி தொலைபேசிப்போம். இதோ எழுத வருவேன் என ஒவ்வொரு முறையும் சொல்லுவார்.  ஆனால் அவரால் இயலவில்லை.  அமெரிக்காவில் இருக்கையில் என்னோடு பேசியஅம்பியும் வேதா ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டார் என விசாரித்தார்.  என்னனு சொல்வது!  2007-ல் நான் அமெரிக்கா சென்றபோது வேதா எனக்குப் பல உதவிகள்செய்து கொடுத்தார். முக்கியமாய்ப் படங்களைத் தரவிறக்கி அப்லோட் செய்ய, லிங்க் இணைக்க, எனப் பலவும் சொல்லிக் கொடுத்தார்.  இப்போது நானாகவே சில விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்றாலும் வேதா இல்லாதது மிகப் பெரிய குறையே.  பழைய ஆட்களில் நானும் வல்லி சிம்ஹனும் மட்டும் ஏதோ எழுதுவதாய்ப் பேர் பண்ணிக் கொண்டிருக்கோம்.

அடுத்து தி.ரா.ச. அவர்கள்.  குமரனின் பதிவின் மூலம் பழக்கம் ஆனார்.  இப்போது தொடர்பில் இருக்கிறார் என்றாலும் அவருக்கு இருக்கும் வேலைத் தொந்திரவினால் எப்போதாவது பதிவு எழுதுகிறார்.  ஆனால் ஒரு பதிவு எழுதினாலும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க அளவுக்கு அதில் மிக முக்கியமான விஷயங்கள் இருக்கும்.  அவ்வப்போது தொலைபேசியில் உரையாடலோ, ஜி சாட்டிலோ, மெயிலிலோ பார்க்க இயலும்.  இப்போ இம்முறை இந்தியா வந்தப்புறமாப் பார்க்க முடியலை.  பிசி போல் இருக்கு.  இன்னும் நிறையப் பேர் இருக்காங்க.  எல்லாரையும் குறித்து எழுத முடியவில்லை. இலவசக் கொத்தனார், மணிப்பயல்,  போர்க்கொடி, ச்யாம், மணிப்ரகாஷ், மதுரை ராம்னு நிறைய நண்பர்கள் இருக்காங்க தான்.  ஆனால் ரொம்பவே தொடர்பு வைச்சுக் கொண்டு இருந்தவங்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறதால் மத்தவங்களை மறந்துட்டேனோனு யாரும் வருந்தவேண்டாம். தவறாக நினைக்க வேண்டாம்.  பதிவு ஏற்கெனவே பெரிசு.  இன்னும் பெரிசாகிவிடும்.  இப்போதைக்கு இந்த நாள் முக்கியமான நாள் என்பதற்காகவே இந்தப் பதிவு.


இப்போ எனக்கு ஏழாவது வயசு ஆரம்பம்.  ஒரு வகையில் ஆரம்பிச்சாச்சு; இன்னொரு வகையில் ஆரம்பிக்கப் போகுது.  எல்லாருக்கும் நக்ஷத்திரப் பிறந்த நாள், ஆங்கிலத் தேதினு இருக்காப்போல் வலைப்பக்கம் ஆரம்பிச்சது 2005 நவம்பர் என்றால் தமிழில் எழுத ஆரம்பிச்சது ஏப்ரல் 4 2006.  அதற்கான கொண்டாட்டங்களை ஆரம்பிக்கலாம். சாதாரணமா நம்ம தொண்டர்கள், குண்டர்கள் எல்லாருமாக் கூடி முப்பெரும் விழா எடுக்கிறது தான் வழக்கம்.  அதுக்கு இன்னும் ஒரு மாசம் காத்திருக்கணும். :)))))))


ஹூஸ்டன் வீட்டிலே முயல் ஐந்தாறு குட்டிங்க போட்டிருக்காம்.  நேத்திக்குப் பேசறச்சே பையர் சொன்னார்.  இல்லாமல் போயிட்டேனேனு ரொம்பவே வருத்தமாப் போச்சு.  நாங்க வந்ததுக்கு அப்புறமாப் போட்டிருக்கு.  இருக்கிறச்சேயே போட்டிருக்கக் கூடாதோ?  ஒரு படம் எடுத்திருப்பேன். அபார்ட்மெண்டிலே இருந்த வரைக்கும் புறாக்கள் குடும்பம் நடத்திக் குப்பை கொட்டிட்டு இருந்ததுங்க.  இங்கே வந்ததில் இருந்து முயல்கள். எப்படியோ குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கட்டும்.