எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 10, 2025

நினைவோ ஒரு பறவை!

 இந்த வருஷம், இந்த மாதம் ஐந்தாம் தேதியோடு சரியா இருபது வருஷங்கள் ஆகின்றன. நான் வலைப்பக்கம் எழுத ஆரம்பிச்சு 20 வருடங்கள் முடிந்து விட்டன. ஆரம்பத்தில் தமிழ் எழுத வராமல் ஆங்கிலத்தில் தட்டச்சி இருந்தேன். அதுக்கு ஒருத்தரும் கருத்துச் சொல்லவில்லை. சில, பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2014 ஆம் ஆண்டில் ரஞ்சனி முதல் ஆளாக வந்து கருத்திட்டிருந்தார். பின்னர் கில்லர்ஜி அடுத்த நாளே வந்திருந்தார். இந்த "எண்ணங்கள்" வலைப்பக்கம் மட்டும் இன்று வரையில் 2,972 பதிவுகள் வந்திருக்கின்றன. சில மீள் பதிவுகளையும் சேர்த்து. ஆனால் பலருக்கும் எனக்கு இது ஒன்று மட்டும் நான் வைத்திருக்கும் வலைப்பூ அல்ல இன்னும் சிலவும் இருக்கின்றன என்பது தெரியாது. இதே ஐடியிலேயே என்னுடைய கோயில்களின் புனித யாத்திரை பற்றிய பதிவுகள் ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். அதிலே முதலில் எங்க கயிலை யாத்திரை பற்றி எழுதிட்டுப் பின்னர் சிதம்பரம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளின் அடிப்படையில் ஒரு தொடர் எழுதினேன். என்னை ஓரளவுக்குப் பிரபலம் ஆக்கியது அந்தத் தொடர் தான். அதனால் பல சிதம்பரம் தீக்ஷிதர்களும் பழக்கம் ஆனார்கள். பின்னர் ஆங்காங்கே நாங்கள் போய் வந்த கோயில்கள் குறித்தெல்லாம் எழுதிட்டுப் பின்னர் ஸ்ரீரங்கம் வந்த புதுசில் ஸ்ரீரங்கம் பற்றி எழுத ஆரம்பிச்சிருந்தேன். அதைத் தொடர முடியாமல் நான் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே சிரமத்துடன் நடந்து கொண்டிருந்தேன். அதில்லிருந்தே நான் பதிவுகள் எழுதுவது ரொம்பக் குறைந்து விட்டது. 

முதலில் எழுதிய பதிவின் சுட்டி கீழே

https://sivamgss.blogspot.com/2005/11/my-thoughts.html#comment-form

கண்ணனைப் பற்றி எழுத ஆரம்பிச்சப்போ முதலில் இந்த வலைப்பக்கம் தான் ஆரம்பிச்சேன். பின்னர் அதற்கெனத் தனியாக ஒரு மெயில் ஐடி கொடுத்து அதில் ஒரு வலைப்பக்கம் திறந்து அதில் எழுதி வந்தேன். அதற்கு முன்னரே எங்களோட பிரயாணங்களையும் , முக்கியமான இடங்களையும் பற்றி எழுதத் தனியான ஓர் மெயில் ஐடியில் எழுதி வந்தேன். மின் தமிழ்க் குழுமத்தில் இருந்தப்போ அந்த ஐடி தான் அதிகம் உபயோகிச்சிருக்கேன். மின் தமிழ் குழுமத்திற்காக எழுதிய ஒரு சில பதிவுகள், குறிப்புகள் எல்லாமும் அங்கே வெவ்வேறு பெயர்களில் உள்ள வலைப்பக்கங்களில் காணக் கிடைக்கும். சமையல் பற்றி எழுத ஒரு தனி வலைப்பூ இந்த ஐடியில் துவங்கி பாரம்பரிய சமையலில் இரு புத்தகங்களும் கின்டிலில் போட்டிருக்கேன். எங்க பொண்ணு, இன்னும் சில உறவுக்காரப் பையர், பெண்களுக்காக ஆங்கிலத்தில் ஓர் சமையல் குறிப்புக்கள் கொண்ட வலைப்பூவும் ஆரம்பிச்சேன்.

படங்களுக்கெனத் தனியாக ஒரு வலைப்பூவும் தொடங்கி இருந்தேன்.  ராம்லக்ஷ்மியிடம் இருந்து  பாராட்டுக் கிடைத்தால் சந்தோஷம். அதையும் சின்னப் புத்தகமாகப் போட்டிருக்கேன். ஆக இவை எல்லாமும் சேர்ந்தால் மொத்தப்பதிவுகள் நிறையவே இருக்கும். மழலைகள் குழுமத்துக்கு, நம்பிக்கை குழுமம், முத்தமிழ்க் குழுமம், ரத்தினமாலை குழுமம் எனக் குழுமங்களுக்காக எழுதியவையும் உண்டு. அப்போல்லாம் நிறையப் படித்துக் கொண்டிருந்ததாலும், அடிக்கடி கோயில்களுக்குப் போனதாலும் எழுத விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதைத் தவிர்த்தும் லினக்ஸிற்காகத் தமிழ் மொழீபெயர்ப்பு, தினத்தந்தி நூற்றாண்டு மலருக்காக வேலை எனப் பற்பல வேலைகள். இப்போ எதுவும் இல்லை. நேரம் என்னமோ இப்போக் கடினமாக இருப்பதோடு கொஞ்சம் எழுதவே நிறைய நேரம் எடுக்கிறது என்பது உண்மை. 

இதை எல்லாம் இப்போ ஏன் எழுதுகிறேன் எனில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னால் நாங்க எழுதினப்போ எழுதிக் கொண்டிருந்த க்ருத்திகா ஸ்ரீதர் என்னும்  ஒரு சிநேகிதியின் பதிவை முகநூலில் படிச்சேன். அவர் சில நாட்களுக்கு முன்னர் வந்து கூட என்னிடம் இன்னமும் ப்ளாக் எல்லாம் எழுதறீங்களா என ஆச்சரியமாய்க் கேட்டிருந்தார். இவர் தெரிந்தவரே ஒழிய நான் அதிகம் போனதில்லை. படிச்சது இல்லை. என்றாலும் படிச்சிருக்கேன். ஒரு சில சமயங்களில் கருத்துப் போட்டிருப்பேன். ஆனால் அவர் எழுத்துப் பரிச்சயம் தான். இத்தனை வருஷங்கள் கழிச்சும் அவர் என்னை நினைவு கூர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளித்தது. அப்போதெல்லாம் இவர், கவிதா கஜானன் போன்றவர்கள் எழுதுவதைப் படிக்கையில் எனக்கு அறிவுஜீவிகள் தோற்றம் வரும். நமக்குத்தான் அறிவு ஜீவி என்றால் ஒத்து வராது என ஒதுங்கியே இருந்திருக்கேன். உண்மையில் இன்று அவர் என்னை நினைவு கூர்ந்திருந்தது நெகிழ வைத்தது. அப்போது எழுதிக் கொண்டிருந்த பல நண்பர்களின் நினைவுகளும் வந்து அலை மோதின. 

ஏன் இவங்க எழுத்தை எல்லாம் பற்றிப் பயந்தேன் என்றால் நான் என்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள அப்போல்லாம் மொக்கைப் பதிவுகளாகவே போட்டுக் கொண்டிருந்தேன். நாம தீவிரமான சிந்தனைப்பதிவுகளை எழுதினால் படிப்பாங்களா என்னும் சந்தேகம். பின்னர் மெல்ல மெல்ல நானும் நடு நடுவே பக்திப்பதிவுகள், நவராத்திரிப் பதிவுகள்னு போட ஆரம்பிச்சேன். தமிழ் மணம் நக்ஷத்திரமாக இருந்தப்போ இந்த மும்மொழித்திட்டம் குறித்த ஓர் பதிவைக் கூட எழுதினேன் என்றால் பார்த்துக்கோங்க.  அதோடு அப்போல்லாம் வருடா வருடம் பதிவு எழுதிய/எழுத ஆரம்பிச்ச தினத்தைக் கொண்டாடுவேன். ஆரம்பத்தில் ஆதரவளித்த சூப்பர் சுப்ரா என்பவரை வருடா வருடம் நினைவு கூர்ந்து வந்தேன். பின்னர் காலப் போக்கில் எத்தனை வருடங்கள் என்பதே மறந்தும் விட்டது. என்றாலும் பலரின் நினைவுகள் இன்னமும் மங்காமல் இருக்கின்றன. இதில் என்னைப் போல் இன்னமும் ப்ளாக் எழுதுவது துளசி மட்டும் தான். வல்லி சிம்ஹன் அவ்வப்போது எழுதுகிறார். என்னை விடத் துளசி இன்னும் பிரயாணம் அதிகம் செய்வதால் அவர் இன்னமும் புத்துணர்வோடு எழுதிட்டு இருக்கார். வாழ்த்துகள். ஏதோ இந்த அளவுக்காவது என்னாலும் எழுத முடிகிறதே என்பதில் எனக்கும் சந்தோஷம் தான்.