எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 04, 2023

பெயரில் என்ன வந்தது?

பெயரிலே என்ன இருக்குனு சிலர் சொல்றாங்க. ஆனால் பெயரிலே தான் எல்லாமே இருக்கு இல்லையா? எங்க வீட்டிலே பாருங்க எந்தப் பெயரைச் சொன்னாலும் அந்தப் பெயரிலே யாராவது ஒருத்தர் இருக்காங்க. இப்போப் பாருங்க, அன்னிக்கு ஒருநாள் அம்பி அங்கிள் தொலைபேசிலே கூப்பிட்டு ஸ்டைலா ஸ்ரீராம்னு சொல்லி இருக்கார். ஸ்ரீராம்ங்கற பேரிலே எங்களுக்கு சொந்தங்கள் நாற்பது பேர்னா நண்பர்கள் பத்துப் பேராவது இருப்பாங்க. யாருனு எடுத்துக்கறது? நம்ம ரங்ஸுக்கு அந்தக் கவலையே இல்லை, குழப்புவார். என்னங்கறீங்க?? ஸ்ரீராமை,பொருத்தமே இல்லாத வேறே பெயராலே, கிருஷ்ணன், சேகர்னு ஆக்கிடுவார். அதோட இல்லாமல் அழுத்தம் திருத்தமா நம்மட்டே அடிச்சுச் சொல்லுவார். அவங்க வீட்டிலேயே போய் அவர் புரிஞ்சுட்ட பேராலேதான் கூப்பிடுவார். அவங்களும் பாவம்னு வந்துடுவாங்க. சிலர் மட்டும் அசடு வழிஞ்சுண்டே(நியாயமாப் பார்த்தா இவர் வழியணும், இங்கே எல்லாமே மாறிடும்) ஹிஹிஹி, என் பேர் சேகர் இல்லை ஸ்ரீராம்னு சொல்லுவாங்க. ஓஹோ, அப்படியானு கேட்டுப்பார். ஆனாலும் விடாம இவர் வச்ச பேராலே தான் கூப்பிடுவார்ங்கறது வேறே விஷயம்.

இதைவிடக் கூத்து ஒண்ணு நடந்துச்சே. ஒருநாளைக்கு திராச சார் கூப்பிட்டார். அவர் திராசனு சொல்லி இருந்தாலே இவர் புரிஞ்சுட்டிருக்க மாட்டார்ங்கறது வேறே விஷயம். அவரோ சந்திரசேகர்னு சொல்லிட்டார். சந்திரசேகர்ங்கற பேரிலே எனக்கு அக்காவீட்டுக்காரர் ஒருத்தர் இருக்கார். அதோட இவரோட நெருங்கின நண்பர்கள் இரண்டு பேர் சந்திரசேகர். இவங்க எல்லாரும் அவரை விடப் பெரியவங்க. ஆனாலும் இவர் நண்பர்கள்ங்கற ஹோதாவிலே ரொம்ப உரிமையா, "என்னப்பா, எப்படி இருக்கே??" னு எல்லாம் கேட்டுட்டு இருந்தார். சரிதான் அவரோட நண்பராக்கும்னு நினைச்சேனா?? தொலைபேசியை என் கையிலே கொடுத்து சந்திரசேகர்டி, உன்னோட பேசணுமாம். ஹிஹி அவர் நினைச்சது சந்திரமெளலியைப் போல. சரினு நானும் தொலைபேசியை வாங்கிட்டு ஹலோனு சொன்னால் எதிர்முனையில் திராச சார் பேசறார். இப்போ அசடு வழியவேண்டிய முறை என்னோடதாச்சு. இத்தனைக்கும் நம்மாளு அசரவே இல்லை. ஹிஹிஹி,இது பங்களூரிலே இருக்காரே உன்னோட நண்பர் மெளலி, அவர்னு நினைச்சேனேனு சமாளிப்பு.

நல்லவேளையாக் கொத்தனார் கூப்பிட்டப்போ "கொத்தனார் பேசறேன்னே சொல்லிட்டார். அவர் பேரிலே எங்க வீட்டிலே "என்னடா, டேய்"னு அதட்டற ரேஞ்சுக்குப் பசங்க இருக்காங்களா? பேர் சொல்லி இருந்தா மனுஷன் முழி முழினு முழிச்சிருப்பார். தி.வா.வேறே ஒருநாள் வாசுதேவன்னு சொல்லவே,அன்னிக்குத் தொலைபேசியை நான் தான் எடுத்தேன், இருந்தாலும் அது என்னோட ஓர்ப்படி பையர்னு நினைச்சுட்டேன். டேய் வாசுனு கூப்பிட்டிருக்கணும், (நல்லவேளையா, எனக்குத் தான் நல்லவேளை! :P) அப்புறம் தான் ஏதோ குரலில் மாற்றம் இருக்கேனு நினைச்சுட்டு, "யாரு"னு திரும்பக் கேட்டால் கடலூர்னு பதில் வந்ததோ பிழைச்சேன். இல்லாட்டி அன்னிக்கு ஒரு வழி பண்ணி இருப்பேன் எங்க பையர்னு நினைச்சு.

கணேசன் கேட்கவே வேண்டாம், எக்கச்சக்கமா இருக்காங்க. டேய்னு கூப்பிடறதிலே இருந்து மரியாதையாக் கூப்பிடற வரைக்கும் இருக்காங்க. பாலாங்கற பேரும் ரொம்ப காமன். அந்தப் பேரிலே நல்லவேளையா இணையத்திலே யாரும் அதிகமா இல்லையோ பிழைச்சாங்க. எங்க பால்காரர் பேரு என்னமோ முனுசாமினு. ஆனால் இவர் வச்சிருக்கிற பேரு என்னமோ அன்பழகன். அன்பழகன் இல்லை முனுசாமினு சொன்னாலும், பால்காரரைப் பார்த்தால் அன்பழகன்னு தான் தோணுதாம். ஆனால் என்ன பேரு அவங்க வீட்டிலே வச்சிருந்தாலும் நம்ம ரங்க்ஸ் கூப்பிடறதென்னமோ அவர் தானாய் செலக்ட் பண்ணிண்ட ஒரு பெயரிலே தான். இப்படி எத்தனை பேரைக் குழப்பி இருக்கார்னு நினைச்சீங்க? எல்லார் பேரையும் இஷ்டத்துக்கு மாத்திடுவார். இது வரைக்கும் அவர் மாத்தாத பேர் என்னோடதுதான்னு நினைக்கிறேன். மாத்தினாச் சும்மா விட்டுடுவோமா???

இப்போ எல்கே தாத்தா வேறே கார்த்திக்னு பேரிலே வந்திருக்காரா? கார்த்திக் என்னோட அண்ணா பையர் பேரு. இவர் கார்த்திக்னு சொன்னால் அவ்வளவு தான். என்னடானு கேட்போம். மீனாங்கற பேரிலே எங்க வீட்டிலே தடுக்கி விழுந்தால் ஒருத்தர் இருக்காங்க. அதனாலே ஒவ்வொரு மீனாவுக்கும் ஒரு அடைமொழி உண்டு. யு.எஸ்ஸிலே மட்டும் எங்களுக்குத் தெரிஞ்சு 3,4 மீனா உண்டு எங்க பொண்ணைச் சேர்க்காமல். இதிலே நம்ம கவிநயா தொலைபேசினாங்கன்னா எதிர்ப்பக்கம் சத்தமே வராது. நம்ம பேச்சுத் தான் எதிரொலிக்கும். அப்போப் புரிஞ்சுடும் அவங்கதான்னு. மத்தவங்க யாரானும் மீனானு சொன்னால் எந்த மீனானு கேட்டுக்கணும். அவ்வளவு ஏன்? என்னோட ஒரிஜினல் பேரான சீதாலக்ஷ்மிங்கறதே எங்க அப்பா வீட்டிலே பிறக்கிற எல்லாப் பொண்ணுங்களுக்கும் வச்சிருக்காங்களா? ஒரே சீதாலக்ஷ்மி மயம் தான் வீட்டிலே. நல்லவேளையாக் கூப்பிடற பேரு எல்லாருக்கும் மாத்தி மாத்தி வச்சுட்டாங்களோ பிழைச்சோம். இல்லைனா சீதாலக்ஷ்மினு கூப்பிட்டால் குறைந்தது நாங்க ஐந்து, ஆறு பேர் திரும்பிப் பார்ப்போம். இது ஒரு பரம்பரைத் தொடர்கதை! இரண்டு தலைமுறையா வந்துட்டு இருக்கு. :D

ஹிஹிஹி, இந்தப் பயங்கர ஆராய்ச்சிக்கட்டுரை தொடர்ந்தாலும் தொடரும்! எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க!

கொஞ்சம் மொக்கையும் கூடப் போட்டுக்கலாம்னு நினைச்சேன். ஆனால் இதுவும் 12 வருஷப் பழசு தான். இதிலே வரவங்க யாருமே இப்போத் தொடர்பில் இல்லை. :( அவ்வப்போது தி.வா. மட்டும் கூப்பிடுவார்.

Sunday, April 02, 2023

மெரினாவுக்கு ஈடு ஆகுமா இதெல்லாம்?

 என்ன இருந்தாலும் நம் மெரினா கடற்கரை போல் வராது தான். ஆனால் நம்மால் அதைப் பராமரிக்க முடியவில்லை. ஆங்காங்கே குப்பைகள், தின்பண்டங்களின் கழிவுகள், ப்ளாஸ்டிக் கவர்கள் எனப் போட்டு மெரினாவின் அழகையே கெடுத்துவிடுகிறோம். ஆனால் அம்பேரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் ஒரு சின்னக் குட்டிக் கடற்கரையையே எத்தனை அழகுடனும் ஆர்வத்துடனும் பராமரிக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு அம்பேரிக்கா போனப்போத் தான் பையர் இங்கே கூட்டிச் சென்றார். மக்களுக்குத் தேவையான பொழுது போக்கு அம்சங்களோடு ஓர் அருமையான கடற்கரை. ஏற்கெனவே இந்தப் பதிவை என் இன்னொரு வலைப்பக்கம் போட்டிருக்கேன். அங்கே யாரும் வரலை. மாதேவியையும் அப்போதைய சிநேகிதி ப்ரியாவையும் தவிர்த்து. இங்கே மீள் பதிவு செய்கிறேன். 


கடற்கரையில் லைட் ஹவுஸ்

 



பசுமையோடு காட்சி அளிக்கும் கடற்கரையின் ஒரு தோற்றம்.



 

ஹூஸ்டன் நகரில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கும் இந்தச் சின்னஞ்சிறு கடற்கரைப் பிரதேசம் ஒரு சுற்றுலாத்தலமாக அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பல கடற்கரை விளையாட்டுகள், காட்சிகள், பல்வேறு விதமான பொருட்களை விற்கும் கடைகள், கடல் நீரைப் பார்த்த வண்ணம் அமர்ந்து உணவு உண்ணும்படியான தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் என உள்ளன. குழந்தைகள் விளையாடப் பலவிதமான விளையாட்டுகளும் காணப்படுகின்றன. குட்டி ரயிலில் அந்தக் கடற்கரைப் பிரதேசத்தைச் சுற்றி வரலாம். ரோலர் கோஸ்டரில் ஏறிச் செல்லலாம். இன்வெர்டர் என அழைக்கப்படும் லிஃப்ட் போன்ற தூக்கும் வசதி கொண்ட ஒரு பெட்டியில் அமர்ந்து பெல்டினால் நம்மை இறுகக் கட்டிக்கொண்டால் அது நம்மை மேலும் கீழும் தூக்கி விளையாட்டுக் காட்டிவிட்டுப் பின்னர் தலைகீழாகவும் நம்மைத் தூக்கும். அதன் பின்னர் கிட்டத்தட்ட 150 அடி உயரத்தில் காணப்படும் கம்பத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கே சற்று நேரம் வைத்திருந்துவிட்டுப் பின்னர் அதிவேகமாய்க் கீழே இறங்கும்.

சிலருக்கு இதைப் பார்க்கவே பயமாக இருக்கும். ஆகவே மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே விளையாடலாம். இதை போர்ட் வாக் டவர் ட்ராப் ஜோன் எனக் கூறுகின்றனர்.

 



இதைத் தவிரவும் குழந்தைகள் ஆடுகுதிரையில் விளையாடலாம். இந்தக் குதிரை விளையாட்டு இரு தளங்களாக அமைக்கப்படுகிறது. மேல் தளத்தின் குதிரைகள் அருகிலும், கீழ்த்தளத்தின் குதிரைகள் அருகேயும் ஒவ்வொரு காப்பாளர் அருகே நின்று கொண்டே குதிரைகள் இயக்கப்படுகின்றன. இந்த விளையாட்டு வைப் அவுட் என அழைக்கப்படுகிறது. இதைத் தவிரக் குடைராட்டினமும் உள்ளது. உயரம் மிக அதிகமாகவும் உள்ளது. 65 அடி உயரத்தில் சுற்றுவதாய்க்கூறுகின்றனர். இதை விடவும் உயரத்தில் ஏவியேட்டர் என்னும் சக்கரச் சுற்றும், பலூன் வீல் எனப்படும் கூண்டு அமைக்கப்பட்ட குடைராட்டினமும் குழந்தைகள் கண்ணையும், கருத்தையும் கவரும்.

இன்னமும் பாட்டில்களைக்குறி தவறாமல் அடித்துப் பரிசாக பொம்மைகள் மற்றும் பல பொருட்களைத் தரும் கடைகள், ஐஸ்க்ரீம் ஸ்டால்கள், காஃபிக் கடைகள், துணிக்கடைகள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், செயற்கை மணிமாலைகள், முத்துமாலைகள் விற்கும் கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகளும் காணப்படுகின்றன. என்றாலும் சுற்றுவட்டாரம் சுத்தமாய்ப் பராமரிக்கப்படுகிறது. கடைகளின் பக்கவாட்டுத் தோற்றம்.




வேகமாய்ச் செல்லும் படகுகளிலும் அரைமணிநேரப் பிரயாணம் செய்யலாம். நாற்பது மைல் வேகத்தில் செல்லும் படகுகளின் பயணம் உற்சாகம் கொடுக்கும்.



gஎல்லாவற்றுக்கும் மேல் கடற்கரை சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகிறது. அத்தனை மக்கள், குழந்தைகளோடு வந்து விளையாட்டுகள் விளையாடி, உணவு உண்டு, என அத்தனையும் செய்த போதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளிலேயே குழந்தைகளைக் கூடக் குப்பைகளைப் போடும்படி பழக்கி இருக்கின்றனர். உணவுப் பொருட்களின் மிச்சமோ, துணிகளோ, ப்ளாஸ்டிக் கவர்களோ, பேப்பர் குப்பைகளோ காண முடியாது. அதோடு எங்கே சென்றாலும் வசதியான கழிப்பறைகளும், அவைகளின் சுத்தமான பராமரிப்பும், மக்கள் அவற்றைச் சுத்தமும், சுகாதாரமும் நீடித்து இருக்குமாறு பயன்படுத்துவதும், சிறு குழந்தைகளுக்குப் பொதுக்குழாயில் கைகளைக் கழுவ வேண்டி சின்னதாய் வடிவமைத்து ஆங்காங்கே காணப்படும் ஸ்டூல்களும், சின்னஞ்சிறு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துக்குழந்தைகளுக்கும், டயப்பர் மாற்றத் தனி இடமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளோடு இருப்பவர்களுக்கு முன்னுரிமை.


Wednesday, March 29, 2023

மீண்டும் சந்திப்போம்!

 நான் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் செய்து கொண்டேன். அறிந்தவர், தெரிந்தவர், முகநூல் நண்பர்கள்/மத்யமர்கள்னு பலரும் அறுவை சிகிச்சை செய்துக்கப் போறாங்க அல்லது செய்து கொண்டிருக்காங்க. இன்னொரு கண்ணிற்கான அறுவை சிகிச்சைக்குப் போனால் மருத்துவர்  சர்க்கரை சோதனையின் தற்போதைய நிலவரம் சரியாக இல்லை என்பதாலும், எனக்குக் கடுமையான இருமல் இருந்ததாலும் (இப்போதும் அவ்வப்போது இருக்கு) மருத்துவரே இப்போதைக்கு இன்னொரு கண் அறுவை சிகிச்சை வேண்டாம்னு சொல்லிட்டார். அதோடு இப்போ வெயில் வேறே தாங்கலை. உடல் முழுவதும் கொப்புளங்கள், கட்டிகள். அரிப்பு, வலி, எரிச்சல்! :( ஆகவே மறுபடியும் வேப்பிலை+குப்பைமேனி+மஞ்சள் கலவைக்குப் போகணும் இப்போதிருந்தே. இல்லைனா தாங்க முடியாது.

பெண்ணுக்கும் சாப்பாடு எல்லாம் இன்னமும் வழக்கமான முறையில் இல்லை. அது வேறே கவலை. இந்தியா வரச் சொல்லிண்டு இருக்கோம். 2015 ஆம் ஆண்டில் வந்தது. அப்புறமா வரவே இல்லை. என்ன செய்யப் போறாங்களோ தெரியலை. கு.குவுக்கு இப்போது ஈஸ்டர் விடுமுறை என்பதால் அவங்க யு.எஸ். போறாங்க. அங்கே தான் அவங்க மருத்துவச் சோதனைகள் எல்லாம் செய்து கொண்டு கண், பல் என எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொள்ளணும். இது அங்கே உள்ள நடைமுறைப்படி ஒவ்வொருவரும் கட்டாயமாய்ச் செய்துக்கணும். குஞ்சுலு   நன்றாக வரைய ஆரம்பிச்சிருக்கு. அதுவாவே ஒரு  லூடோ போர்ட் (அட்டை) வரைந்து வண்ணம் கொடுத்துட்டு அவங்க அப்பாவோட விளையாடியது. அது தோத்துப் போனால் அழுதிருக்கும் போல. அவங்க அப்பா "அழுமூஞ்சி துர்கா" என்று சொல்லுவாராம். ஆகவே இதுவும் அவ அப்பாவை "அழுமூஞ்சி அப்பா" என்று சொல்லிக் கொண்டு கையைத் தட்டிக் கொண்டு குதிச்சது. குழந்தைக்கு அடிக்கடி ஜூரம் வந்து விடுகிறது. அங்கே உள்ள சீதோஷ்ணம் காரணமா என்னனு தெரியலை.

எங்க எதிர் வீட்டு மாமியும் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாங்க போன வாரம். அவங்களுக்குக் கட்டெல்லாம் போடவில்லை. அன்னிக்கே ஒரு சாதாரண/அல்லது பவர் உள்ள கண்ணாடியைப் போட்டு அனுப்பிச்சுட்டாங்க. அறுவை சிகிச்சைக்காக நிறையப் பேர் இருந்ததால் காலை ஆறரைக்குப் போனவங்களுக்குப் பத்து மணிக்குத் தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கு. மகாத்மா காந்தி மருத்துவமனை, தென்னூரில் நடந்திருக்கு. இதே மாதிரித்தான் லென்ஸ்,மற்றவை எல்லாம். ஆனால் இவங்களுக்கு 20 நிமிடங்களில் சிகிச்சை முடிஞ்சிருக்கு. நாம தான் எல்லாத்திலேயும் சிறப்பானவங்க போல! 

நாட்டு நிலவரங்கள் எதுவும் சரியாக இல்லை. அதைப் பற்றி எழுதப் போனால் பிரச்னைகள் தான் வரும். அதிலும் முக்கியமாகக் கோயில்கள்! நல்லவேளையாகத் திரைப்பட நடிகை காஞ்சனா தன்னுடைய சொத்தைத் திருப்பதி தேவஸ்தானத்துக்கு எழுதிக் கொடுத்தார். தமிழ்நாட்டின் அறநிலையத்துறையின் கைகளில் வந்திருந்தால்! நினைச்சாலே நடுக்கமா இருக்கு! பெண்கள் சுதந்திரம் அது இதுனு சொல்லிக் கொண்டு ஒரு பக்கம் பெண்களுக்கு வன்கொடுமைகள் நிகழ்ந்தால் இன்னொரு ப்க்கம் பெண்களே கண்வனைக் கொல்வது, தீயிட்டு எரிப்பது என்றெல்லாம் போய்க் கொண்டு இருக்கு. தமிழகத்தில் குடிப்பழக்கமும் அதிகரித்து இருப்பதை அதிகரித்து வரும் விபத்துக்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பக்கம் இலவசம் கொடுப்பது போல் கொடுக்கும் அரசு இன்னொரு பக்கம் அதை டாஸ்மாக் மூலம் திரும்பப் பெற்றுக் கொண்டு விடுகிறது. 

கட்டுப்பாடின்றி வேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது. இங்கே காவிரிப் பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒரு சின்னப் பையர் ஸ்டன்ட் வேலை எல்லாம் செய்திருக்கார். அந்தப் பையரைப் பிடிச்சுட்டாங்களா என்னனு தெரியலை. இதை எல்லாம் வீடியோ எடுத்து முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளுவது இப்போதைய இளைஞர்களின் விருப்பம்.. அதோடு இல்லாமல் பேருந்தில் தொங்கிக் கொண்டு போறவங்களைக் கட்டுப்படுத்த ஓட்டுநர்/நடத்துநருக்கு அதிகாரம் கொடுத்திருக்காங்க. அதே போல் மின்சார ரயிலில் பயணம் செய்யும் இளைஞர்களையும் அடக்க ஒரு சிறப்புச் சட்டம்/அதிகாரம் ரயில்வே ஊழியர்களுக்குக் கொடுக்கணும். வேகமாகச் செல்லும் ரயிலில் தொங்கிக் கொண்டே போவதோடு அல்லாமல் பக்கத்தில் வரும் தூண்களின் மேலும் ஏறுவதற்கு முயற்சி செய்கிறார்கள், ரயில் ஓடும்போதே! இதை எல்லாம் சாகசம் என நினைக்கிறாங்க போல!


மீண்டும் சந்திப்போம்!

Sunday, February 19, 2023

தாத்தாவிற்குச் சற்றுத் தாமதமான அஞ்சலி!




தாம் வாழ்ந்து வந்த ஊரான ஆரியமூலையில் தமிழ் மேலும் கற்க வழியில்லாததால் சேர்வடைந்ததாகவும் அரும்பாவூர் நாட்டார் என்னும் பெரும் செல்வர் தமது இல்லத்தில் தங்கியிருந்த பொழுது, உ.வே.சாவின் தமிழார்வத்தை உணர்ந்து, இவரை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் அனுப்பும் படி பரிந்துரைத்தது தம்மனத்தில் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வேண்டும் என்னும் வேட்கையை எற்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். இடையில் சிலகாலம் விருத்தாச்சலம் ரெட்டியாரிடம் உ.வே.சா தமிழ் கற்றார். பாடல் எழுதுவதன் நுணுக்கங்களை அங்கு கற்றார். மேலும் புத்தகங்களைப் படிப்பது மட்டும் போதாது, படித்தவர்களிடம் பாடம் கேட்க வேண்டும் என்பதையும் அப்பொழுது நன்கு உணர்ந்து கொண்டார். பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் சேர்ந்து பாடம் கற்கத் துவங்கினார். அப்பொழுது திருவாடுதுறை ஆதினத்தின் தொடர்பும் கிடைத்தது. அத்தொடர்பு இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதி வரையிலும் இத்தொடர்பு உ.வே.சா விற்க்கு மிகுந்த பலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. பிற்காலத்தில் மடத்தலைவருடன் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அதனால் அறிய தமிழ் தொண்டு ஆற்றவும் இது வழி வகுத்தது. உ.வே.சா தமது ஆசிரியர் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் அளவிட முடியாத பற்றும், பாசமும் பக்தியும் கொண்டிருந்தார். தமது இறுதிக் காலம் வரை இவற்றில் இம்மியும் குறையவில்லை.


திருநாகைக்காரோணம், நைடதம், திருக்குடந்தைத்திரிபந்தாதி, பழமலைதிருபந்தாதி, திருப்புகலாதிருபந்தாதி, மறைசையந்தாதி, தில்லையக அந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழநிர்வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஸ்டபபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் ஆகிய நூல்களை அவரிடம் கற்றார். ஆசிரியரும் மிகவும் வருமையில் இருந்தார் என்று உ.வே.சா கூறுகிறார். “புலமையும் வருமையும் சேர்ந்தே இருப்பது இந்நாட்டின் சாபம்” இது உ.வே.சாவின் கூற்று. திருவாடுதுறை ஆதினம் திரு.சுப்பிரமணிய தேசிகரை ஆசிரியருடன் சென்று சந்தித்து, அங்கு ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தை பெருமையுடன் கூறுகிறார். இசையுடன் பாடல்களை பாடி விளக்கம் அளித்த உ.வே.சா, தேசிகரிடம் நல்ல எண்ணத்தை உருவாக்கினார். ஆதினத்தில் பல புலவர்களுடன் கலந்துரையாடவும், ஆசிரியர்கள் நடத்திய பாடமும் கேட்கும் சந்தர்பமும் கிடைத்தது. சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்களுக்கு புத்தகங்கள் பரிசு கொடுத்து அன்பு பாராட்டினார். இது தமது ஆசிரியருக்கு மெத்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று உ.வே.சா கூறுகிறார். ஆசிரியரிடம் பாடம் கேட்டதால் தமக்கு எவ்வளவு பெருமை என்றும் மற்றும் ஆசிரியர், தேசிகர் ஆகியோர் அன்பு இவரை நெகிழவைத்தது எனவும் கூறுகிறார். “என்ன துன்பம் வந்தாலும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை” என்று முடிவு செய்துள்ளார்.

Saturday, January 28, 2023

கின்டிலில் என்னுடைய புத்தகம்!

 https://kdp.amazon.com/en_US/bookshelf?ref_=kdp_kdp_TAC_TN_bs

தற்சமயம் மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் கின்டிலில் வெளியான என்னுடைய புத்தகங்களின் பட்டியலைப் பார்க்கலாம். அதிலே "என்ன கல்யாணமடி கல்யாணம்" 2011 ஆம் ஆண்டில் நான் தொடராக எழுதி வந்தவை. அவற்றில் கடைசியில் சப்தபதிக்குப் பின்னர் மற்ற வைதிகக் காரியங்களைப் பற்றி விரிவாக எழுதணும்னு நினைச்சு எழுத முடியலை. இப்போது இதிலேயும் விரிவாக எழுத நினைத்தும் ஓரளவு தான் எழுதினேன். எடிட்டிங் செய்யக் கஷ்டமாக வேறே இருந்ததால் ரொம்ப விரிவாக எழுதாமல் முக்கியமானவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதினேன். வெங்கட் ஸ்ரீரங்கம் வரப் போறார்னு தெரிஞ்சது. தொந்திரவு பண்ணணுமேனு நினைச்சேன். ஆனால் வேறே வழி இல்லை. அனுப்பி வைச்சேன்.  அவரும் ஒரு முறை எடிட் செய்துவிட்டுப் பின்னர் வெளியீடு செய்தார். ஜனவரி 25 ஆம் தேதி புத்தகம் வெளியானது பற்றி எனக்கு வாட்சப் மூலம் செய்தி அனுப்பி இருந்தார். ஆனால் என்னால் உடனே பார்க்க முடியலை. நேற்றுத் தான் பார்க்க நேரம் கிடைத்தது. ஆனாலும் வெங்கட் அனுப்பிய சுட்டிகளை எங்கள் குடும்பக் குழுவிலும், எங்கள் ப்ளாக் குழுவிலும் எங்க பில்டிங் அசோசியேஷன் குழுவிலும் போட்டேன். யாருமே கவனிக்கலை. எ.பியில் எப்போதும் போல் ரஹ்மான் மட்டும் வாழ்த்தி இருந்தார். இங்கேயும் ஒரு தரம் போட்டுடலாம்னு நினைச்சேன். அப்போத் தான் தோணியது எல்லாப் புத்தகங்களுக்குமே ஒரு விளம்பரம் கொடுத்துடலாமேனு.  மேலே கண்டிருக்கும் ஐந்து புத்தகங்களையும் வாங்கிப் படிப்போர் வாங்கிப் படிக்கலாம். கின்டில் அன்லிமிடெட் மூலம் படிப்பவர் படிக்கலாம். உங்கள் விமரிசனங்களை எனக்கு எழுதி அனுப்பவும்.


இன்றைய பரிக்ஷை முடிவு வெளிவந்து விட்டது. நல்ல மார்க் எடுத்துப் பாஸாகி விட்டேன். :))))) இனி அடுத்து என்ன என்பது தெரியணும். பார்க்கலாம். ஈசிஜி கூட வீட்டுக்கே வந்து எடுத்துட்டுப் போனாங்க. உண்மையில் ரிசல்ட் பார்த்து எனக்குமே ஆச்சரியம். முக்கியமாச் சர்க்கரை அளவு!!!!!!!!!!!!!!!!!!!


முந்தாநாள் பைத்தியம் மாதிரி ஒரு ப்ரின்ட் அவுட் எடுக்கையில் இந்த வையர்லெஸ் கீபோர்ட் நினைவே இல்லாமல் பழைய கீ போர்ட் மூலமாகத் தட்டச்சி அது வரவே வராமல் கடைசியில் மைக்ரோ சாஃப்ட் என்னை உள்ளேயே அனுமதிக்காமல் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின்னர் கோட் எல்லாம் வாங்கி எல்லா செட்டப்பையும் மாத்தி, பாஸ்வேர்டை மட்டும் ஒரு பத்துத்தரம் மாத்தி! அது என்னமோ பாஸ்வேர்ட் டைப் பண்ணினால் கீபோர்டில் உள்ள குறி தட்டச்ச ஆரம்பித்த இடத்துக்கே போய் விடுகிறது. அதை மாற்றிப் பாஸ்வேர்டுக்காக எண்கள் எழுத்துக்களைச் சேர்த்தால் சேரவே இல்லை. கடைசியில் ஒருவழியாக வெறும் எண்களை மட்டுமே கொடுத்தேன். அது ஓகே ஆனது. சுத்தப் பைத்தியக்காரத்தனமான வேலையில் ஒரு நாள் மத்தியானம் தண்டமாகக் கழிந்தது தான் மிச்சம். :(

Thursday, January 26, 2023

தற்போதைய நிலவரங்கள்! ஒரு பார்வை!

 குட்டிக்குஞ்சுலுவுக்குப் பால் பல் விழ ஆரம்பித்து விட்டது. நேற்றுக் கீழ்ப்பல் ஒன்று விழுந்திருக்கு. அதைக் காட்ட மாட்டேன்னு முகத்தை மூடிக்கொண்டு ரகளை. ஸ்கூல் போக மாட்டேன்னு அடம். பின்னர் சரியாப் போச்சு. குழந்தை நாம் அறியாமலேயே வளர்ந்து கொண்டு வருகிறாள். இன்னும் கொஞ்ச நாட்களில் மழலையும் காணாமல் போகும். ஒரு வகையில் வருத்தம்/வேறு வகையில் சந்தோஷம். படிப்புத் தான் நைஜீரிய ஆங்கிலப் பள்ளிப்படிப்பு எனக்கு அவ்வளவா நல்லா இருப்பதாகத் தெரியலை. எப்படியோ எங்கிருந்தாலும் நன்றாய்ப் படிக்கட்டும். 

ஒரு வழியாய்க் கண்ணில் அறுவை சிகிச்சை என்பது உறுதியாகி விட்டது. இரண்டு, மூன்று நாட்களாய் இதான் கவலை. நேற்று கண் மருத்துவரிடம் போய் மணிக்கணக்காய்க் காத்திருந்து எல்லா விபரங்களும் கேட்டுக் கொண்டு வந்தாச்சு. சனிக்கிழமையன்று எல்லாச் சோதனைகளும் செய்தாகணும். அதோடு இப்போ என்னமோ புதுசா ஸ்கான் பண்ணணும்னு வேறே சொல்றாங்க. எனக்கு மட்டுமா? அல்லது எல்லோருக்குமானு புரியலை. முதலில் எம் ஆர் ஐ ஸ்கான் என்கிறாப் போல் சொல்லவும் நடுங்கிட்டேன். யாரு உள்ளே போயிட்டு வரதுனு கவலையாப் போச்சு. இந்தப் பரிசோதனைகள் முடிஞ்சதும் ஸ்கான் பண்ணுவாங்களாம். என்னமோ போங்க. நம்மவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டப்போ இப்படி எல்லாம் கெடுபிடி இல்லை. நல்ல நாள் பார்த்துப் போனோம். அரை மணி நேரத்தில் சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு வந்தாச்சு.  நமக்கு எப்படியோ!

இதிலே இன்னொரு கவலை என்னன்னா அறுவை சிகிச்சை அன்னிக்கு வயிறு தொந்திரவு இல்லாமல் இருக்கணும். இரண்டு நாட்கள் முன்னாடி இருந்தே சாப்பாட்டில் கவனமாக இருந்துக்கணும். அதோடு இல்லாமல் அந்த உசரமான டேபிள் மேலே ஏறிப் படுத்துக்கறதும் கஷ்டம்னு நம்மவர் சொல்றார். எனக்கு ஆட்டோவிலேயே ஏற முடியறதில்லை. என்ன பண்ணப் போறேனோ! எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக் கவலைப் பட்டுக்கலாம்.

நாளைக்குக் குலதெய்வம் கோயிலில் மாவிளக்குப் போட நினைத்து ஏற்பாடுகள் செய்யப் போனால் பூசாரிக்கு அண்ணன் திடீரென இறந்து போய் விட்டதால் தீட்டு வந்து விட்டது. ஒரு பத்து நாட்களுக்கு அவரால் கோயிலுக்கு வர முடியாது. அதுக்கப்புறமாக் கோயிலுக்குப் போகலாம்னா அறுவை சிகிச்சைக்குத் தேதி என்ன கொடுக்கிறாங்களோ தெரியலை. போகப் போகத் தான் பார்க்கணும்.

காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தைப் பார்த்துட்டு ரொம்பவே வருத்தமாக இருந்தது. நல்லா எடுத்திருக்காங்க. சப் டைடில்ஸ் இருப்பதாகப் போட்டிருந்தாலும் எனக்கு வரலை. நான் ஹி(கி)ந்தியிலேயே பார்த்தேன். மிதுன் சக்ரவர்த்தி நடிப்பும் அனுபம் கேரின் நடிப்பும் சொல்லவே வேண்டியதில்லை. பல்லவி ஜோஷி ஒரு காலத்தில் எங்களுக்குப் பிடித்த நடிகை. அவர் நடித்த ம்ருகநயனி தொலைக்காட்சித் தொடர் தூர்தர்ஷனில் வந்தப்போ விடாமல் பார்ப்போம். பின்னரும் பல தொடர்கள் பார்த்திருக்கோம். இதில் ஜேஎன் யூ விற்குப் பதிலாக ஏன் என் யூவின் ப்ரொஃபசராக வருகிறார். கடைசியில் கோபத்துடன் வெளியேறுகிறார். நம் நாட்டின் படித்த அறிவு ஜீவிகளை நன்கு எடுத்துக் காட்டி இருக்கார். ஒரு முறைக்கு மேல் பார்த்தால் தாங்காது மனம். :(

அந்தப் பழைய வேலை செய்யும் பெண்மணி அடிக்கடி விடுமுறை எடுப்பதைக் கண்டித்ததும் திடீரென நின்றதுக்கப்புறமாப் பழைய, மிகப் பழைய வேலை செய்த பெண்மணி வந்து கொண்டிருந்தாள். எப்போ வேண்டுமானாலும் வருவாள். அதிலும் கரெக்டாகப் பனிரண்டு மணிக்குச் சாப்பிட உட்காரும்போது வந்துடுவாள். சாப்பிடறோம், பாத்திரங்களைத் தேய் என்றால் பெருக்கித் தான் துடைப்பேன்னு பிடிவாதம் பிடிப்பாள். போன வாரம் வியாழக்கிழமை மின்சாரக் கட்டணம் கட்டணும்னு 500 ரூ வாங்கிக் கொண்டு போனாள். எனக்குக் கொடுக்க இஷ்டமில்லை. இல்லைனு சொல்லிட்டேன். ஆனால் நம்மவர் பாவம் படிக்கிற குழந்தைங்க இருக்கு, மின்சாரம் இல்லைனா கஷ்டம்னு கொடுத்தார். மறுநாளில் இருந்து ஆளே வரலை. தெரிஞ்சவங்க ஒருத்தர் மூலமா இன்னொரு பெண் இன்று வந்தாள். இன்றே வேலையை ஆரம்பிக்கச் சொன்னேன். பாத்திரங்கள் மட்டும் தேய்க்கும் வேலைதான். காலையில் குழந்தைகள் பள்ளிக்குப் போவதால் கொண்டு விட்டுக் கூட்டி வரணும்னு வரமுடியாதுனு சொல்லிட்டாங்க. ஆகவே மத்தியானம் மூன்றரை மணி போல் வந்து பாத்திரங்களைத் தேய்க்கச் சொல்லி இருக்கேன். போகப் போகப் பார்க்கணும்.

Wednesday, January 18, 2023

கல்யாணத்துக்குப் போன கதை!

 நீண்ட நாட்கள் கழிச்சு இன்னிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போய் வந்தோம். இங்கேயே ஸ்ரீரங்கத்தில் எங்க சாலையிலேயே அமைந்திருக்கும் சிருங்கேரி மடத்துக் கல்யாண மண்டபத்தில் கல்யாணம். பெண் எதிர் வீடு. இரண்டு வருஷங்களாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்போது அமைந்துள்ளது. சிறப்பாகக் கல்யாணம் நடந்தது. நடுவில் எங்கேயுமே போகாமல் வீட்டிலேயே இருந்த நான் பையர் வந்தப்போக் குலதெய்வம் கோயிலுக்குப் போனது தான். அங்கேயும் மற்றக் கோயில்களுக்கு எல்லாம் இறங்கவே இல்லை. மாரியம்மனை மட்டும் பார்த்துவிட்டு வண்டிக்குள்ளேயே உட்கார்ந்திருந்தேன். அவங்க எல்லோரும் போயிட்டு வந்தாங்க.

இன்னிக்குக் கல்யாணத்துக்கும் போக முடியுமா என்பது நேற்று வரை சந்தேகமே!நேற்று நம்மவரிடம் நான் வரலை. நீங்க மட்டும் போங்கனு தான் சொன்னேன். ஆனால் காலம்பர எழுந்ததும் அவர் நீயும் வா! என்று சொல்லிட்டார். கொஞ்சம் உள்ளூர பயம் தான். வயிறு என்ன சொல்லுமோஎன்ன பண்ணுமோ எனக் கவலை தான். கல்யாணத்தில் காலையிலேயே போய்விட்டதால் காலை ஆஹாரம் லேசாக எடுத்துக்கலாம்னு போனோம். மாத்திரைகள் சாப்பிட்டாகணுமே! ஃப்ரூட் கிச்சடி, அக்கார அடிசில், வெண் பொங்கல், இட்லி, தோசை, பூரி, சாம்பார் வடைனு மெனு. நான் ஒரே ஒரு இட்லி போட்டுக் கொண்டு ஒரு தோசையும் போட்டுக் கொண்டேன். வலுக்கட்டாயமாக சாம்பார் வடையைச் சொல்லச் சொல்லக் கேட்காமல் போட்டுட்டாங்க. ஒரே ஒரு இட்லி, ஒரே ஒரு தோசைக்கு மிளகாய்ப் பொடி மட்டும் தொட்டுக் கொண்டு, சாம்பார் வடையுடன் சாப்பிட்டு முடிச்சேன். மற்றது எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

இப்போதெல்லாம் வீட்டில் சாப்பிட்டாலே ஒத்துக்கறதில்லை சில சமயம். முந்தாநாள் அப்படித் தான் ஒரே ஒரு வடை சாப்பிட்டேன். அன்றிரவெல்லாம் தண்டனை மாதிரி வயிற்றுப் போக்கு! நேற்றுப் பூரா ஓ.ஆர்.எஸ். தான் குடித்துக் கொண்டிருந்தேன். அதுவும் எல்லா ஃப்ளேவரும் பிடிக்கலை/ஒத்துக்கலை. ஆரஞ்சு ஃப்ளேவர் மட்டும் தான். இன்னிக்குக் கல்யாணத்திலே கூட பெண்ணின் அம்மா/பிள்ளையின் அம்மா எல்லோருமே கையில் ஓ.ஆர்.எஸ். வைத்துக் கொண்டிருந்தார்கள். யாருக்கு உடம்போனு நினைச்சேன். இப்போதைய பருவமும் அடிக்கும் சில்லென்ற காற்றும் உடம்பு/வயிறு இரண்டுக்கும் ஒத்துக்கலை போல! பலருக்கும் வயிற்றுப் பிரச்னை இருக்கு. :(

கல்யாணம் சிறப்பாக நடந்தது. சாப்பாடையும் ஒரு வழியாக அங்கேயே முடிச்சுக்கலாம்னு உட்கார்ந்திருந்தோம். பதினோரு மணிக்குத் தான் சாப்பாடு ஆரம்பிச்சது. பொதுவாகவே எந்தக் கல்யாணமாக இருந்தாலும் நான் மதியச் சாப்பாடு சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவேன். இன்னிக்கு வீட்டில் போய்ச் சமைக்கணும் என்பதால் ஒரு ரசம் சாதமாக முடிச்சுக்கலாம்னு உட்கார்ந்தேன். காய்களை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன் அவியல் தவிர்த்து. அதிலும் தேங்காயோ என்னமோ ஒரு வாசனை வந்தது என்பதால் சாப்பிடலை. முருங்கைக்காய் வேகவே இல்லை. மற்றபடி வேண்டாம்னு சொன்னாலும் கேட்காமல் சாம்பாரை விட்டுட்டாங்க. கொஞ்சமாக விடச் சொல்லியும் ஒரு கரண்டி விழுந்து விட்டது.. ஆனால் சாம்பார் நல்ல ருசி. காய்கள் நிறையப் போட்டிருந்தாலும் சாம்பார் கூட்டு மாதிரி இல்லாமல் நல்ல நீர்க்கவே இருந்தது. ரொம்ப நாட்கள்/வருஷங்கள்/மாதங்கள் கழிச்சு சாம்பார் சாதம் சாப்பிட்டேன். அடுத்து வத்தக்குழம்பு கொண்டு வந்தாங்க வேண்டாம்னு சொல்லிட்டு (மோர் சாதத்துக்கு விட்டுக்கலாமேனு) ரசம் விடச் சொன்னேன். ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! நல்ல ரசமான ரசம். சூடாக வேறே இருந்தது. அப்பளம் தான் ஒண்ணுக்கு மேலே கண்ணிலே காட்டலை, கருமி! :( பெரிய அப்பளமாக இருந்ததால் மிச்சத்தை வைச்சுண்டு சாப்பிட்டேன். அந்த ரசம் சாதத்தைச் சாப்பிட்டு முடிச்சேன். இரண்டாவது முறை அப்பளமே கேட்கலை. :( எவ்வளவு கஷ்டம் பாருங்க! அடுத்து சாதம் போட்டுக்கொண்டு (கொஞ்சமாக) தயிர் விட்டுக் கொண்டேன். தொட்டுக்க வத்தக்குழம்பு. மணத்தக்காளி வத்தல் குழம்பு, அருமை. கிடாரங்காய் ஊறுகாயும் புது மாதிரியாக இருந்தது. வடக்கே போடுகிறாப்போல் சர்க்கரை போட்டிருந்தாங்க. ஆக மொத்தம் நல்லதொரு சாப்பாடு. வடை எல்லாம் போடலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இனிப்பு பெங்காலி ரஹம். சேச்சே, மறந்துட்டேனே, தயிர் வடை போட்டாங்களே!

எல்லாம் முடித்துக் கொண்டு ஐஸ்க்ரீமும் சாப்பிட்டுவிட்டு பீடாவை வாயில் போட்டுக் கொண்டு வெளியே வந்தால் பக்கத்தில் மடத்து (வித்யார்த்திகள்) வேதம் பயிலும் மாணாக்கர்கள். ஏழு வயதிலிருந்து பதினாறு/பதினேழு வயது வரயிலான மாணாக்கர்கள். ஒட்டிய வயிறோடும், கண்களில் பளிச்சிடும் பிரகாசத்தோடும் வேஷ்டியைத் தட்டுச்சுற்றாகக் கட்டிக் கொண்டு வேதங்களை மனனம் செய்து கொண்டிருந்தார்கள். அவங்களைப் பார்த்ததும்  உடலில் இருந்து சாப்பிட்ட சாப்பாடெல்லாம் வெளியே போய்விட்டது! :( இந்த மாதிரியான சாப்பாடெல்லாம் அவங்களுக்கு எப்போக் கிடைக்கும்? சாப்பாடையே பிரதானமாக நினைச்சிருந்தால் வேத சம்ரக்ஷணம் பண்ணுவது எப்படி? இந்த வயதிலேயே எத்தனை மன உறுதி? உற்சாகம்! எதுக்கும் அசராமல் தங்கள் கடமையே கண்ணாக இருந்து வருவது எவ்வளவு போற்றத்தக்கது?  இது எதையும் நினைச்சுக் கூடப் பார்க்காமல் அவங்க உபாத்தியாயம் செய்ய வந்தால் நாம் நம்ம வழக்கப்படி அவங்களிடம் பேரம் பேசுவோம் இல்லையா? வாத்தியார் அதிகப் பணம் கேட்கிறார் எனப் புகார் கூறுவோம்! :(