எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 11, 2015

மஹாகவிக்கு அஞ்சலி!



 தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...



Thursday, September 10, 2015

சிட்டு, தேன் சிட்டு பாருங்க!



தேன்சிட்டு மறுபடி வர ஆரம்பிச்சிருக்கு. சமையலறை ஜன்னலிலும் வந்து உட்கார்ந்துக்குது. பால்கனிக்கும் வருது. தேன் கலருக்கே இருக்குங்க! மொத்தம் 3! ரொம்ப பிசியா இருக்குங்க! குறுக்கும், நெடுக்கும் பறக்கிறதும் அப்போப்போ ஒரு சின்ன இலையைக் கொண்டு வந்து கூடு கட்டும் இடத்தில் சேர்க்கிறதும், இன்னொரு சமயம் ஒண்ணுக்கொண்ணு விளையாடிக்கிறதும்! அதிலே ஒரு தேன் சிட்டை மட்டும் மத்த ரெண்டும் ரொம்பக் கோவிக்குதுங்க! ஏன் அப்படி?!!!!!!!!!! ஆனாலும் அதுவும் வந்து இதுங்களோடு சேர்ந்துக்குது!

தென்னை மரத்திலிருந்து தென்னங்கீற்றுகளை கூடு கட்டறதுக்காக அதுக்குத் தேவையான அளவில் கிழித்துக் கொண்டு வருகிறது. இங்கே பால்கனியில் உட்காரும். படம் எடுக்கப் போனால் பறந்துடும்! என்னிக்கானும் மாட்டிக்கும்னு நினைக்கிறேன். பார்ப்போம். :)

இரண்டு நாட்கள் முன்னாடி திறந்திருந்த பால்கனி கதவு வழியாக வீட்டுக்குள்ளேயே வந்திருக்கு. நான் அப்போ ரொம்ப முடியலைனு படுத்துட்டு இருந்திருக்கேன். ராத்திரியெல்லாம் தூக்கம் இல்லை. அதனால்! அப்போ என்னைக் கூப்பிட்டிருக்கார் ரங்க்ஸ். ஆனால் நான் எழுந்துக்கலையாம். ரொம்ப நேரம் வெளியே போகத் தவிச்சுட்டு அப்புறமா ஜன்னலைத் திறந்து வெளியே அனுப்பி இருக்கார். இன்னிக்கு பால்கனிக் கம்பியிலே வந்து உட்கார்ந்தப்போ எடுத்த படம் இது. நான் சாப்பாடு மேஜையில் அமர்ந்திருந்தேன். அங்கிருந்து கொஞ்சம் அசைந்து கிட்டேப் போனாலும் பறந்துடும் என்பதால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே எடுத்தேன். முடிந்தவரை ஜூம் பண்ணியதில் இவ்வளவு தான் வந்தது. இன்னொண்ணு வாயில் கிழித்த தென்னங்கீற்றுடன் வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் வயரில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. அதை எடுக்க எழுந்தால் இது பறந்துடும்.ஒரு வாரமாக் கூடு கட்டுவதில் ரொம்ப மும்முரம். அதன் சுறுசுறுப்பு நம்மை வெட்கப்பட வைக்குது. மனிதர்களுக்குத் தான் சோம்பல் எல்லாம்னு நினைக்கிறேன். காலையிலேயே ஆரம்பிச்சுடுதுங்க. நாள் பூரா உழைப்புத் தான்! நடுவில் கொஞ்சம் கொஞ்சல், சிணுங்கல்!



Monday, September 07, 2015

விடுவோமா முறுக்கையும், தட்டையையும்! ஜோராச் சாப்பிட்டேனாக்கும்! எப்பூடி? இப்பூடித் தான்!

ஹாஹாஹா ஹிஹிஹிஹிஹி ஹுஹுஹுஹு ஹெஹெஹெஹெஹெ என்ன சிரிப்புனு பார்க்கிறீங்க?
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது பக்ஷணச் சிரிப்பு!
இங்கே நான் அந்த பக்ஷணத்தை வைச்சே ஒரு புது ஐடம் பண்ணிட்டேனே!

இரண்டு நாட்களாக ஷோபா சொன்ன தயிர், ப.மி.யும், தில்லையகத்து கீதா சொன்ன க்ரீமோடு தயிரில் முறுக்கை ஊற வைப்பதும் மண்டையில் ஊறிக் கொண்டிருந்தது. பக்ஷணமும் காலி ஆகணும். ஒருத்தருக்கும் கொடுக்கவும் முடியலை. ஆகவே  அவற்றை வைத்து தஹி சாட் பண்ண முடிவு செய்துட்டேன். நல்லவேளையா இப்போ விரத நாட்கள் ஏதும் இல்லை. தக்காளி, வெங்காயம் சேர்க்கலாம்.

முடிவு செய்வதும், அதைச் செயலாற்றுவதும் நமக்கு ஒரே சமயம் நடக்கும் ஒண்ணு தானே!

ரங்க்ஸைக் கேட்டேன். சோதனை எலியா? நானா? ம்ஹ்ஹூம்னு மறுத்துட்டார். பச்சை, மஞ்சள், சிவப்புக் கலர் துரோகி! போகட்டும்! ரசனை இல்லாத மனுஷன்! :P :P :P :P

மளமளவென ஒரு சின்ன நடுத்தர அளவுத் தக்காளியும் பெரிய வெங்காயத்திலே சின்ன அளவாக ஒன்றும் எடுத்துக் கொண்டேன். பொடிப்பொடியாக நறுக்கி ஒரு பேசினில் போட்டேன்.


பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி வெங்காயம். 


அதன் பின்னர் ஒரு முறுக்கு, ஒரு தட்டை,  இரண்டு  உப்புச்சீடை, நாலு வெண்ணெய்ச் சீடை, இரண்டு சீப்பி ஆகியவற்றை ஒன்றிரண்டாக உடைத்துச் சேர்த்தேன்.



நிறையப் போட்டுவிட்டால் நான் மட்டும் இல்ல சாப்பிடணும். அதனால் கொஞ்சமாகவே சேர்த்தேன். 

இப்போ அதைச் சாப்பிடும் தட்டில் போட்டு அதன் மேல் ஒரு கரண்டி தயிரை ஊற்றினேன். உப்புச் சேர்க்காத தயிர்! 


 ஹூம், என்ன வருத்தம்னா பச்சைக் கொத்துமல்லியே வீட்டிலே இல்லை. தீர்ந்து விட்டது. ரங்க்ஸ் வாங்கிட்டு வந்திருக்கார்னு நினைச்சேன். வாங்கலையாம். வாடி இருந்ததாம். அதான் ஒரு குறை. அதோடு சாட் மசாலா இருந்தால் மேலே தூவி இருக்கலாம். காலா நமக் எனப்படும் கறுப்பு உப்புப் பொடியைக் கூடத் தூவிக்கலாம். தேவையான புளிச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியன இருந்தால் சேர்க்கலாம். காலா நமக் மட்டும் இருக்கு. அதையும் போட்டுக்கலை. மறந்துட்டேன். தயிர் சேர்த்து ஒரு கலவை கலந்து ஒரு நிமிஷம் வைத்துவிட்டுச் சாப்பிட்டேன். ரங்க்ஸ் வேண்டவே வேண்டாம்னு திட்டவட்டமாக (ராகுல் காந்தினு நினைப்பு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) மறுத்துவிட்டார். போனால் போகட்டும்னு மனசுக்குள்ளே பாடிக் கொண்டு (வாய்விட்டுப் பாடினால் யாருங்க கேட்கிறது? எனக்கே சகிக்காது, பயந்துடுவேன்) சாப்பிட்டுவிட்டு ஒரு காஃபி சாப்பிட்டேன் பாருங்க! சொர்க்கம்! 

Sunday, September 06, 2015

உப்பிட்டவரை உள்ளளவும் நினை! கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பதிவு! :)

கிருஷ்ண ஜெயந்திக்கு மாமியார், மாமனார் உடன் இருந்தவரைக்கும் அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு மாமியார் மட்டும் இருந்தப்போக் கூட இரண்டு நாட்கள் முன்னாடியே பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிப்போம். எங்க பையர் சொல்றாப்போல் பக்ஷணத் தொழிற்சாலை தான்!  ஆனாலும் பக்ஷணங்கள் நன்றாகவே அமைந்தன.  ஆனால் இந்த வருஷம்!!!!!!!!!!! மாமியார் கிருஷ்ண ஜெயந்தி அன்று பாயசம், வடை செய்ய மாட்டார். ஆனால் குழந்தை பிறப்பு என்று நான் செய்வேன்.  போன வருஷம் வெல்லச் சீடை உதிர்ந்து போய்ப் பின்னர் அப்பமாக்கினேன். அது போலெல்லாம் இந்த வருஷம் ஆகக் கூடாது என்றிருந்தேன். ஆனால் பாருங்க விதி விளையாடி விட்டது. எல்லாத்திலேயும் உப்பு அதிகம். சென்னையில் இருந்தாலாவது தண்ணீர் உப்புத் தண்ணீர்னு சொல்லலாம். இங்கே அதுவும் இல்லை. உப்பை அதிகம் போட்டிருக்கேன். :( நேற்றிலிருந்து மனசே சரியாக இல்லை. இத்தனைக்கும் ஒரு வேலை என்று ஆரம்பித்தால் அது முடியும் வரை பிற விஷயங்களில் மனதைச் செலுத்தாமல் ஒரே மூச்சாக அந்த வேலையை முடித்துவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன். அப்படி இருந்தும் இந்த மாதிரி ஆகி விட்டது. அதுக்காக என்ன பண்ணினோம்னு சொல்லாமல் இருக்கப் போவதில்லை. கீழே படங்களோடு பார்க்கவும்.

என்ன, ராமர் படம் போட்டிருக்கேனு பார்க்கறீங்க தானே! ராமருக்கு அப்புறமாத் தானே கிருஷ்ணர்! வருவார் மெல்ல, குழந்தை தானே!



கீழ்த்தட்டில் இருக்கும் ஶ்ரீதேவி, பூதேவி சமேதப் பெருமாளுடன் அன்னபூரணி, ராகவேந்திரர், பாண்டுரங்கர் இத்யாதி!


இது நம்ம ரங்க்ஸ் எடுக்கச் சொல்லி எடுத்தேன். பக்கவாட்டில் கதவில் ஒட்டப்பட்ட சாமி படங்கள்.






பூக்களோட பாரத்தில் கிருஷ்ணர் முகமே மறைஞ்சிருக்கு!




நிவேதனங்கள், பால், வெண்ணெய் தயிர், வெற்றிலை பாக்கு, தேங்காய், பழங்கள் பாயசம், வடை முறுக்கு, தட்டை, உப்பு, வெல்லச் சீடைகள், அவல், வெல்லம்

நல்லவேளையாக வெல்லச் சீடைக்கு  உப்புச் சேர்க்க வேண்டாம். இல்லைனா அதுவும் உப்பாகி இருக்கும்.  :P :P :P :P மறக்க முடியாத கிருஷ்ண ஜெயந்தி! 

Saturday, September 05, 2015

புழுங்கலரிசி முறுக்கும், தட்டையும்! செய்முறை விளக்கம்!

எல்லோரும் கிருஷ்ணன் பிறப்புக்கு பக்ஷணங்கள் பண்ணுவதிலே மும்முரமாக இருப்பீங்க! நேத்திக்கு நான் ஆரம்பிச்சேன். இப்போல்லாம் ஒரே நாளிலே எல்லாமும் பண்ண முடியலை என்பதாலும், அதிக நேரம் அடுப்படியில் நிற்க முடியவில்லை என்பதாலும் பிரித்துக் கொண்டேன். நேத்திக்கு முறுக்கும், தட்டையும் பண்ணினேன். புழுங்கலரிசி முறுக்கு! என்ன,புழுங்கலரிசியில் முறுக்குப் பண்ணி நிவேதனமானு கேட்பவங்களுக்கு!  திருக்கண்டீஸ்வரம் கோயிலிலும், ஆவுடையார் கோயில் ஆத்மநாதருக்கும் புழுங்கலரிசியில் நிவேதனம் உண்டு. திருக்கண்டீஸ்வரருக்கு வேண்டிக் கொள்வார்கள். வெந்நீர் அபிஷேஹம் செய்து புழுங்கலரிசியில் நிவேதனம் செய்வார்கள். ஆத்மநாதர் நம்மைப் போல! ஆறு காலமும் புழுங்கலரிசி நிவேதனம் தான். :)

என்றாலும் இன்றைக்குப் பச்சரிசியை ஊற வைச்சு மிக்சியில் மாவு திரித்து வைத்திருக்கேன். அதிலே நிவேதனத்துக்கு ஒரு நாலு முறுக்கு, நாலு தட்டை பண்ணிடுவேன். :) செரியா? இப்போ மறுபடி புழுங்கலரிசிக்கு வருவோமா?
தென் மாவட்டங்களில் இது மிகப் பிரபலம். இப்போல்லாம் சென்னையில் கூடக் கிடைக்கிறது. ஆனால் நான் கல்யாணமாகி வந்தப்போ புழுங்கலரிசி முறுக்கு, தட்டை என்றால் நம்ப ஆளில்லை! :) புழுங்கலரிசியை ஊற வைச்சு அப்போல்லாம் கல்லுரலில் போட்டு அரைத்துக் கொள்வோம். தட்டைக்கு மட்டும் எனில் மி.வத்தல், உப்பு, பெருங்காயம், தேங்காய் சேர்த்து அரைப்பது உண்டு. இரண்டுக்குமாக எனில் உப்புக் கூடப் போடாமல் கெட்டியாக அரைத்து வைத்து விட்டுப் பின்ன ர்பிரிச்சுக்கலாம். இப்போல்லாம் கல்லுரல் இல்லாததால் கிரைண்டரிலேயே அரைக்க வேண்டி இருக்கு. அதிலும் இந்த டேபிள் டாப் கிரைண்டருக்குத் தண்ணீர் ஊற்றலைனா சரியா அரைபடாது. ஆகவே அரைத்து விட்டு மாவை உடனேயே வெள்ளைத் துணியில் கட்டி வைச்சுடணும். தேவையானால் பண்ண ஆரம்பிக்கும்வரை குளிர்சாதனப் பெட்டியில் கூட வைக்கலாம். அதன் பின்னர் பண்ண ஆரம்பிக்கையில் வெளியே எடுத்துத் தேவையான மாவோடு உப்பு, வெண்ணெய், ஜீரகம், பெருங்காயம் போட்டு முறுக்குக்குப் பிசையவேண்டும். 

கீழே உள்ள படத்தில் துணியில் கட்டிய மாவை முறுக்குக்குப் பிசைய எடுத்திருக்கேன். புழுங்கலரிசியிலே செய்தாலும் இதை இன்னமும் ருசி பார்க்கலை. இன்னிக்குக் கிருஷ்ணருக்கு இதுவும் உண்டுனு காட்டிட்டுத் தான் சாப்பிடணும். ஆகவே உங்களுக்கும் கிடையாது! :)



முறுக்கு மாவு உப்பு, வெண்ணெய், பெருங்காயம் ஜீரகம் வறுத்து அரைத்த உளுத்தமாவும்  கலந்து பிசைந்தது. நீர் தெளித்துக் கொண்டால் போதும். கவனமாக நீர் சேர்க்கவும்.



சுற்றிய முறுக்குகள். பெரிசாச் சுற்றினால் பாதி கூடத் தின்ன முடியறதில்லை. ஆகையால் சுற்றும்போதே இரண்டு சுற்று முறுக்காகச் சுற்றிவிட்டால் சரியா இருக்கும். யாருக்கானும் கொடுக்கிறதுனாலும் வசதி.
நேற்று அதிக வெயிலால் சமையலறையில் எதிரே முன்னர் நாங்கள் இருந்த பகுதியிலிருந்து பிரதிபலித்த சூரிய ஒளியின் வெளிச்சம் அதிகமாக இருந்தது. ஆகவே படங்கள் கொஞ்சம் சுமார். :(



அடுப்பில் எண்ணெயில் வேகும் முறுக்குகள்.


வெந்த முறுக்குகள். நல்லாச் சிவப்பாக வேக விட்டு எடுக்கலாம்.
 இப்போ அடுத்துத் தட்டை செய்ய மீதி மாவை எடுத்துக் கொண்டு காரப்பொடி, உப்பு, பெருங்காயம், ஊற வைச்ச கடலைப்பருப்பு, தேங்காய்க்கீற்றுகள், வெண்ணெய் ஆகியன போட்டுக் கலந்து கொள்ளவும்.



தட்டைக்குப் பிசைந்த மாவு. இதுக்கும் உப்பு, வெண்ணெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, தேங்காய்க்கீற்றுகள், வறுத்து அரைத்த உளுத்தமாவு சேர்த்துப் பிசைய வேண்டும். நீர் ஊற்ற வேண்டாம்.




தட்டைகள்


அடுப்பில் வேகின்றன தட்டைகள்


வேக விட்ட தட்டைகள். அதிக வெளிச்சத்தில் சரியாகத் தெரியவில்லை. ஜன்னலுக்கு எதிரே வைச்சுட்டேன். யாருக்கானும் தேவையானாப் பயன்படுத்திக்கலாம் என்பதால் இப்போப் போட்டிருக்கேன். புழுங்கலரிசி இரண்டு மணி நேரம் ஊறினால் போதும். இப்போது கூட ஊற வைச்சுப் பண்ணிக்கலாம். இப்போ நான் கிளம்பவேண்டிய நேரம் வந்தாச்சு. மிச்சம் முடிஞ்சா ராத்திரி, இல்லைனா நாளைக்குக் காலம்பர! வேலை இருக்கு, வரேன்.





Thursday, September 03, 2015

வெள்ளை அப்பங்களுக்கு இலவசம்! காதுத் தொங்கட்டான்கள்! ! :)

ஜிமிக்கி க்கான பட முடிவு ஜிமிக்கி க்கான பட முடிவு


ஜிமிக்கி க்கான பட முடிவு  ஜிமிக்கி க்கான பட முடிவு தோடும் ஜிமிக்கியும்


                தோடு ஜிமிக்கி க்கான பட முடிவு                                                தோடும் ஜிமிக்கியும் சேர்ந்து!  மற்றவை தோடோடு சேர்ந்தாற்போல் வரும் தொங்கட்டான்கள்.


சரி, இதோடு வெள்ளையப்பம் படத்தை இணைக்கலாமா? வேண்டாமா?

வெள்ளையப்பம் படத்தையும் கீழே இணைத்திருக்கிறேன். பாருங்க!


இட்லி மாவில் இஞ்சி, ப.மிளகாய், பெருங்காயம், கருகப்பிலை கலந்தது. தேவையானால் ஒரு வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.


எண்ணெயில் வேகும் வெள்ளை அப்பங்கள். எண்ணெய் அதிகம் தேவையில்லை எனில் அப்பக்காரையில் கூடக் குத்தி எடுக்கலாம். என்னோட அப்பக்காரை உள்ளே எங்கேயோ இருக்கு. தேடி எடுக்கணும். ஆகையால் எண்ணெயிலேயே போட்டாச்சு.  கீழே வெந்து எடுத்த வெள்ளை அப்பங்கள். அப்படியே சாப்பிடலாம். சட்னி ஏதேனும் இருந்தால் அவற்றோடும் சாப்பிடலாம்.  அப்படி ஒண்ணும் எண்ணெய் குடிக்கலை.



Wednesday, September 02, 2015

சொன்னால் தப்பு! சொல்லாவிட்டால் வருத்தம்!

சமீபத்தில் தான் நம்ம தில்லையகத்து கீதா அவர்கள் பிரகாஷ்ராஜ் நடித்த விளம்பரம் ஒன்றில் பெற்ற பெண்களை டென்ஷன் என அடையாளம் காட்டுவது குறித்து எழுந்த எதிர்ப்பைப் பற்றிப் பதிவு செய்திருந்தார். அதே போன்ற தங்க நகை விளம்பரம் குறித்துத் தான் இந்தப் பதிவும்.

ஒரு கிராம் ரூ.2,535-க்கும், பவுன் ரூ.20,280-க்கும் நேற்று தங்கம் விற்பனையானது. 

மேலே சொல்லி இருப்பது தங்கத்தின் நேற்றைய விலை! ஒரு கிராம் கிட்டத்தட்ட 2,535 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைவாக 2,500 என்றே வைத்துக் கொள்வோம். மை கல்யாண் விளம்பரத்தில் பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும் வைர நகை வாங்கலாம் என விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அந்த விளம்பரத்தில் காட்டப்படும் நகைகளிலோ எல்லாம் வைரப் பதக்கங்கள் வைத்த மெல்லிய சங்கிலிகள், வைரங்கள் பதித்த காதுத் தொங்கட்டான்கள், ப்ரேஸ்லெட்கள் என இருக்கின்றன.

இவை எல்லாம் குறைந்த பட்சமாக 4 கிராம் தங்கத்திலிருந்து பத்து கிராம் தங்கத்திற்குள்ளாகவே செய்ய முடியும். நாலு கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட தொங்கட்டான் என்றால் கூட தங்கம் விலை 2500x4 கிராம் என்னும்போது அதுவே பத்தாயிரம் ஆகிறது. அதன் பின்னர் தொங்கட்டான் செய்யும் தங்க நகை ஆசாரிக்குக் கூலி! குறைந்தது 2,000 ரூபாய் வாங்குவார். வேலைப்பாடு அதிகம் ஆக ஆகக் கூலியும் அதிகரிக்கும். அதன் பின்னர் வைரங்கள்! ஒரு சென்ட் வைரமே 2 ஆயிரம் முதல் ஆறு ஆயிரம் வரை வைரத்தின் குணாதிசயங்களைப் பொறுத்தும் தகுதியைப் பொறுத்தும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆக 2,000 ரூபாய் வைரம் என வைத்துக் கொண்டாலும் ஒரே ஒரு வைரக்கல்லுக்கே 2,000 ரூபாயும் அதைப் பதிக்கும் ஆசாரிக்கு(இதற்கெனச் சிறப்பு ஆசாரி உண்டு) தனியாகக் கூலியும் சேர்ந்து 3,000 வரை ஆகும்.

ஆனால் இங்கே நாலைந்து வைரக்கற்கள் பதித்ததாகக் காட்டுகின்றனர். அப்போது வைரங்களின் விலையே பத்தாயிரத்தைத் தாண்டும். அதன் பின்னர் அவற்றைப் பதிக்கும் கூலி தனி! பனிரண்டாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை என வைத்துக் கொண்டாலும் தங்கம் தனியாக மதிப்பிடப்பட்டு அது ஒரு பனிரண்டாயிரம், வைரம் தனி மதிப்பு அது ஒரு பனிரண்டாயிரம் ஆக மொத்தம் 24,000  ஒரு சின்னக் காதணிக்கே ஆகி விடும். ஒரே ஒரு சென்ட் ஒற்றை வைரக்கல் வைத்த 1 கிராம் மூக்குத்தியே ஆறாயிரம் ஆகிறது. ஆக இந்த விளம்பரத்தை நம்பி (நம்புபவர்கள் இல்லை என்றே எண்ணுகிறேன்.) அந்தக் கடைக்குப் போனால் லட்சங்களில் தான் நகைகள் கிடைக்கும்.  ஆகவே இத்தகைய விளம்பரங்களை வெளியிடும் முன்னர் கடைக்காரர்களும் யோசிக்க வேண்டும். பொதுமக்களும் யோசிக்க வேண்டும்.

கல்யாண் ஜுவல்லர்ஸ் க்கான பட முடிவு


அடுத்துச் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில் இப்போதெல்லாம் எழுத்துப் பிழைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆங்கில ஆசிரியர்களோ, தமிழ் ஆசிரியர்களோ, ஹிந்தி ஆசிரியர்களோ யாராக இருந்தாலும் எழுத்துப் பிழைகளைச் சர்வ சாதாரணமாகவே செய்கின்றனர். கேட்டால் இது சகஜம் தான்! யாருக்கு வரவில்லை எழுத்துப் பிழை என பதில் வருகிறது. நாங்கள் படிக்கையில் வாரம் இரண்டு நாள் ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் டெஸ்ட் வைப்பார்கள். அதில் தப்புச் செய்பவர்கள் 100 முறை அதைத் திரும்ப எழுதிக்காட்ட வேண்டும். தமிழிலும் அப்படியே இருந்தது. ஆகவே எழுதும்போது கவனம் என்பது இயல்பாக வந்து விட்டது. அதனால் தானோ என்னமோ இப்போது இவற்றைக் கண்டால் மனம் பதைக்கிறது. ஆனால் திருத்த வேண்டியவர்கள் யாரும் இதைத் திருத்துவது இல்லை.  ஏனெனில் அந்தத் தவறுகளை ஆசிரியர்களே இப்போது செய்கின்றனர். அவர்களிடம் படிக்கும் மாணாக்கர்களும் ஆசிரியர்கள் செய்வதைத் தான் செய்வார்கள். :(

தமிழுக்காக உயிரையே கொடுக்கும் பலர் நம் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். ஒருவருக்கும் இந்த எழுத்துப் பிழைகள் கண்களில் படவில்லை. நேற்று ரயில்வேயில் நடந்த ஒரு  போராட்டத்தில், "ரயில் மறியல்!" என்பதற்கு "ரயில் மறியில்" என எழுதி இருந்தார்கள். அந்தப்புரம் என்பது "அந்தப்புறம்" ஆக மாறி எவ்வளவோ மாதங்கள்/வருடங்கள் ஆகிவிட்டன. உச்சரிக்கும் போதாவது சரியாகச் சொல்கின்றார்களா எனில் "இதைச் செய்ய மாட்டேன் என்கிறார்". என்று சொல்ல வேண்டியதை, "இதைச் செய்ய மாட்ரார்" எனச் சொல்லி மாட்டி விடுகின்றனர். தொலைக்காட்சித் தொடர்களின் பிரபல நாயக, நாயகியரின் உச்சரிப்பு இப்படித் தான் இருக்கிறது. மாட்றார் என்றாலோ, மாட்ரார் என்றாலோ மாட்டிக்கொண்டு திகைப்பதைக் குறிக்கும். மாட்டேன் என்கிறார் என்பதைச் சேர்த்துச் சொல்வதற்கு மாட்டேங்கிறாரா எனச் சொல்ல வேண்டும். ஆனால் அப்படிச் சொல்வதில்லை. அடுத்த தவறு "அழாதே!" என்பதை "அழுகாதே!" என்றே அனைவரும் சொல்கின்றனர். இதென்ன பழமா அழுகாமல் இருக்க? அர்த்தமே மாறுகிறதே என்பதை எவரும் கவனிப்பதில்லை! "அழாதே!" என்றே சொல்ல வேண்டும் என யாரும் வற்புறுத்துவதில்லை.


ஆனால் எனக்குத் தெரிந்து இத்தகைய தவறுகளைச் செய்பவர்களைப் பாராட்டுபவர்களும், ஆதரிப்பவர்களும் தான் நிறைய இருக்கிறார்கள். தவறுகளைச் சுட்டினால், நீ ஒழுங்காச் செய்கிறாய் என்பதற்காக எல்லோரிடமும் எதிர்பார்க்காதே எனச் சொல்லி விடுகின்றனர்! மொழி படும் பாடு வருத்தமளிக்கிறது. இது இரண்டு உதாரணங்கள் தான் இங்கே கொடுத்திருக்கேன். பல இருக்கின்றன.