எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 04, 2024

முங் தால் பராத்தா ரெடி! சாப்பிடலாம் வாங்க! :D

 நேத்திக்கு முதல் நாள் பாசிப்பருப்புச் சுண்டல் செய்தேன். நேற்று ஆயுர்வேத மருத்துவரிடம் போவதாக இருந்ததால் காலையிலிருந்து வயிற்றைக் காலியாகவே வைத்திருந்தேன். ஏனெனில் இப்போதெல்லாம் வயிற்றில் ஏதானும் போட்டால் உடனே கழிவறைக்குப் போகும்படி ஆகிறது. சாப்பிடுவது என்னமோ மோர் சாதம் மட்டும் தான். அதையும் பல நாட்கள் கரைத்துக் குடிக்கிறேன். இதுக்கே இந்தப் பாடு படுத்துகிறது வயிறு. என்னோட முதல் விரோதியே என் வயிறு தான். போகட்டும். நேற்றுச் சுண்டல் செய்கையில் மஞ்சள், குங்குமம் பாக்கெட்டைத் தேடிக் கொண்டிருந்ததால் சுண்டலைச் சரியான நேரத்தில் அடுப்பிலிருந்து எடுக்கலை. கொஞ்சம் குழைந்து போய் விட்டது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்மவர் உடனே எனக்கு வேண்டாம்னு அறிவிப்புச் செய்துட்டார். நான் விடுவேனா என்ன? தாளித்துக் கொட்டித் தேங்காயெல்லாம் சேர்த்துட்டு நிவேதனம் ஆனதும் சாப்பிட்டுப் பார்த்தால் நன்றாகத் தான் இருந்தது. வரவங்களுக்குக் கொடுக்கவும் கொடுத்தேன். அப்படியும் சுண்டல் மிச்சம். சரினு குளிர்சாதனப் பெட்டியில் ஒரு ஓரமாக எடுத்து வைத்தேன்.

இன்னிக்குக் காலம்பர காலை ஆகாரம் பண்ணி ஆகணுமே. சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைச்சுட்டு அந்தச் சுண்டலைக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்துக் கொண்டேன். அலுமினியம் சட்டியை அடுப்பில் வைத்துக் கடுகு, சீரகம், சோம்பு தாளித்துக் கொண்டு பெருங்காயப் பொடியைச் சேர்த்துச் சுண்டலைக் கொட்டிக் கொஞ்சம் காரப்பொடி, தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி சேர்த்து நன்கு கிளறினேன். உப்புக் கொஞ்சம் போலச் சேர்த்துட்டுச் சர்க்கரையும் கொஞ்சம் சேர்த்தேன். பச்சைக்கொத்துமல்லியைத் தண்டோடு பொடியாக நறுக்கிச் சேர்த்து நன்கு கிளறிய பின்னர் ஆற விட்டு உருண்டைகளாய்ப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு சாப்பாத்தியின் உள்ளேயும் வைத்து மூடிப் பின்னர் நன்கு பெரிதாக இட்டுக் கொண்டு அடுப்பில் சப்பாத்திக்கல்லில் போட்டு நெய் விட்டு நன்கு வேக விட்டு எடுத்துக் கொண்டேன். தால் பராத்தா தயார். 


PC: Google

இதையே மைதாமாவில் பிசைந்து கொண்டு இட்டு மூடி எண்ணெயில் பொரித்தெடுத்தால் மூங்தால் கசோடி தயார். காலை வேளையில் எண்ணெய் வேண்டாம் என்பதோடு மைதாமாவு பயன்பாடும் பெரிதாக இல்லை. கசோடியில் சில சமயம் பாசிப்பருப்புக் கலவையோடு பச்சையாகக் கொத்துமல்லி விதைகளை ஒன்றிரண்டாக நசுக்கிச் சேர்க்கலாம். உருளைக்கிழங்கையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு வேகவிட்டுச் சேர்க்கலாம். ராஜஸ்தான் கசோடி இல்லை, கசோடா. பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈதாக இருக்கும். உடைத்து நிறுத்துத் தான் தருவார்கள். 100 கிராம் கசோடா வாங்கினாலே தாராளமாக நான்கு நபர்கள் சாப்பிடலாம். காரம் தான் தலைக்கு ஏறும். அதுவும் நாங்க இருந்த நசிராபாத் கன்டோன்மென்டின் வெளியே பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே இந்தக் கடைகள் நடமாடும் வண்டிகளில் நிற்கும். எல்லாக் கடைகளும் கூட்டம் நிரம்பி வழியும். இத்தோடு சேர்த்துச் சாப்பிட மைதாமாவு ஜிலேபி. நெய்யிலேயே பொரித்திருப்பார்கள் என்பதோடு தித்திப்பும் வழியும். அந்தக் காரமும் இந்த இனிப்பும் ஒன்றுக்கொன்று ஒத்தும் போகும். இதையே காலை உணவாகக் கொள்பவர் பலர் உண்டு.

ஆக மொத்தம் சுண்டலும் வீணாகாமல், காலை ஆகாரமாகத் திப்பிசம் செய்து மாத்தியாச்சு. என் பெண் உனக்கு எப்படி அம்மா இப்படி எல்லாம் தோணுது? என்று கேட்பாள். இன்னிக்கு என்னமோ ஒண்ணும் கேட்டுக்கலை. ஹிஹி, நமக்குத் தான் இப்படி எல்லாம் தோணும். ஃபோட்டோ எடுக்கையில் ஆட்கள் வந்துட்டதால்  ஃபோட்டோ சரியாய் வரலை. கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் பராத்தா தயிர், எலுமிச்சை ஊறுகாயுடன் ஜூப்பரோ ஜூப்பரு!

Thursday, October 03, 2024

நவராத்திரிப் பதிவுகள்! தொடரலாம்!

 முன்னெல்லாம் நவராத்திரிப் பதிவுகள் ஒவ்வொரு வருஷமும் போட்டுக் கொண்டிருந்தேன். கொரோனாவுக்குப் பின்னர் எனக்கும் உடம்பு முடியாமல் காலில் பிரச்னை வந்து படுத்ததில் இம்மாதிரி ஆன்மிகம், பக்தி பற்றிப் பதிவுகள் போடுவதே குறைந்து விட்டது. கடைசியாக சஹானா இணைய இதழுக்காக, நவராத்திரிப் பதிவுகள், தீபாவளிப் பதிவுகள்னு எழுதிக் கொடுத்தேன்.அம்பிகையைப் பற்றி நிறைய விலாவரியாக எழுதி இருக்கேன். லலிதாம்பாள் சோபனத்தையும் சௌந்தரிய லஹரியையும் ஒப்பிட்டு எழுதினது எனக்கு மறக்க முடியாத ஒன்று. அது ஃப்ரீ தமிழ் ஈ புத்தகக்குழு மூலம் புத்தகமாக வந்திருக்கு. அதுக்கு நான் காப்புரிமை எல்லாம் வாங்கலைனாலும் திரும்பக் கிண்டிலில் போடலாமானு தெரியலை. என்னோட பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் புத்தகமும் ஈ புத்தகமாக வந்தது அங்கே இப்போது காணக் கிடைப்பதில்லை. அதன் மூலம் என்னோட டெஸ்க் டாப்பில் இருந்ததால் அதைப் பென் ட்ரைவில் காபி செய்து வைச்ச நினைவு. ஆனால் அதைப் போட்டு மீட்டு எடுக்கத் தெரியலை. ஏற்கெனவே ஃப்ரீ தமிழ் ஈ புத்தகமாக வந்தவற்றைக் கிண்டிலில் போடலாமானும் தெரியலை. 


அது போகட்டும். இப்போ நம்ம ரங்க்ஸுக்கு பிசியோதெரபி பயிற்சி கொடுப்பவர் வயதில் சிறியவராக இருந்தாலும் ஆன்மிகத்தில் முக்கியமாய் யோகத்தில் ஈடுபாடு உடையவர். அவருடன் பேசுகையில் நம் உடம்பின் சக்கரங்களதன் பயன்பாடுகளும், பற்றிப் பேசுவதோடு அல்லாமல் இந்த நவராத்திரியில் தேவி எப்படி அனைத்துச் சக்கரங்களுக்கும்  தொடர்பை ஏற்படுத்துகிறாள் என்பது பற்றியும் பேசினோம். தேவியின் சக்தியானது எவ்விதம் விரிந்து  அதன் மூலம் நாம் படைப்பின் அனைத்து அம்சங்களையும் இந்த நவராத்திரி மூலம் கொண்டாடுகிறோம் என்பது பற்றியும் சொன்னேன்.  முதலில் பித்ரு பக்ஷம் முடிவடைந்து  ஆண்களுக்கு எவ்வாறு உடல், மனம் சுத்தியாகிறதோ அவ்வாறே அடுத்த இந்தப் பத்து நாட்கள் பெண்களுக்கு  தேவி வழிபாட்டின் மூலம் ஏற்படுகிறது. உண்மையில் சாக்தர்கள் அம்பிகையின்  தசமஹா வித்யையும் இந்த நவராத்திரியில் முன்னெடுத்துக் கொண்டாடி தேவியை ஆராதிக்கின்றனர். 




நவசக்திகளையும்  ஒவ்வொரு நாள் வழிபடுவதன் மூலம் உடலின் ஏழு சக்கரங்களும் நன்கு செயல்பட ஆரம்பிக்கின்றன. முதல் நாள் சாக்தர்களுக்குப் பர்வத ராஜகுமாரியின் பிறப்பு எனக் கொள்வதால் மூலாதாரச் சக்கரமான குண்டலினியின் செயல்பாட்டில் துவங்குகிறது. பர்வதராஜகுமாரி ஈசனை மணக்க வேண்டி பிரமசாரிணியாகத் தவம் இருப்பது இரண்டாம் நாள் கொலுவில் வழிபடப்படும். இங்கு சுவாதிஷ்டானம் செயல்படுவதால்  அம்பிகையான ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர வேண்டித் தவம் இருப்பதைச் சுட்டிக் காட்டும்.இதை அடுத்து வரும் சந்திரகாந்தா எனும் சக்தியோ நம்முடைய மணிபூரக சக்ரத்தைச் செயல்பட வைப்பதன் மூலம் மனதை துர் எண்ணங்கள் இன்றி பக்தி ஒன்றே பிரதானமாகக் கொண்டு புனிதத்துடன்  செயல் பட வைக்கிறாள்.

என்றாலும்  அநித்தியமான மனித வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படும் கஷ்டங்களும் நோய் நொடிகளும் மனித மனதைப் பேதலிக்கத் தான் செய்கின்றன. அதற்கென உள்ள தேவி கூஷ்மாண்டா நம்முடைய அநாஹத சக்கரத்தைப் பிரதிபலிக்கச் செய்வதன் மூலம் தைரியத்தைக் கொடுத்து வியாதிகள், கஷ்டங்கள், நோய் நொடிகளில் இருந்து காத்து அருளுவாள்.  இதற்குள் நாம் நம் மனதினுள் தெய்வத்தை தியானிக்க ஆரம்பித்திருப்போம். மனம் ஒருமைப்பட வேண்டி தியானத்தில் அமிழ்ந்து போவோம். இங்கே தான்  ஸ்கந்த மாதா வந்து நம் விசுத்திச் சக்கரத்தைத் தூண்டுவதன் மூலம் நமக்கு நல்லதொரு வழியைக் காட்டி அருள்கிறாள். மனதில் மெல்ல மெல்ல அமைதி நிலவ ஆரம்பிக்கும். மனம் ஒருமுகப்படவும் ஆரம்பித்திருக்கும். அடுத்தது நமக்குத் தேவை ஆக்ஞை. ஆக்ஞா சக்கரத்தைத் தூண்டி விடும் காத்யாயனி தேவியின் சக்தியால் நாம் சஹஸ்ராரத்தில் மனம் ஒன்றி தவம் செய்து ப்ரப்ப்ரும்மத்தை அடைய வேண்டி தியானம் மேற்கொள்ளுவோம்.  சஹஸ்ராரத்தில் நாம் தியானம் செய்யும்போதோ மனமானது  பரிபூரணத்துவத்துடன் ஒன்றி இந்தத் தவத்தினால்  நமக்குப் பல சித்திகளையும் பெற்றுத் தரும்.

இதற்கு உதவும் தேவியே காலராத்ரி எனப்படும் தேவி. இவள் மூலம் நாம் சஹஸ்ராரத்தில் இருந்து மனம் ஒருமித்து தியானத்தில் ஈடுபட ஆரம்பிப்பதன் மூலம் அட்டமஹா சித்திகளையும் அடைகிறோம். மனதில் எந்தப் பொருளிடமும் பற்றுதல்கள் இருக்காது. மனம் அமைதியுடன் இருக்கும்.  அடுத்தநாளன்று மகாகௌரி எனப்படும் தேவியின் அவதாரத்திருநாள். நமக்கு எல்லாம் சரஸ்வதி ஆவாஹனம். இம்முறையில் சக்தி வழிபாடுகளைச் செய்தே பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் காளியைக் கண்டார். காளியின் அவதார தினமாகவும் இதைக் கொள்வது உண்டு. இந்த நாளின் வழிபாட்டினால் பழைய நினைவுகள் எல்லாம் மறைந்தும் மறந்தும் போகும். முன் ஜென்ம வாசனைகள் அறுபட்டு விடும் ஒன்பதாம் நாள் அன்று வழிபடும் சித்ராத்ரி தேவியின் மூலம் அட்டமஹா சித்திகளையும் பெறுவதால் அன்றைய தினம் இந்த தேவியை முன் வைத்துக் கொண்டாடுவார்கள். 


இவ்விதம் நாம் நவராத்திரியை ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தைக் கொண்டாடுவதன் மூலம் தேவியின் பரிபூரண அருளைப் பெற்று உலகில்  அமைதி நிலவவும், மனம் அமைதி பெறவும் கொண்டாடுகிறோம், தேவியின் மஹிஷ வதமும் கூட நம் மனமாகிய மஹிஷனின் கெட்ட குணங்களை அடியோடு வேரறுத்து மனதில் நல்லெண்ணங்கள் உற்பத்தி ஆவதைக் குறிப்பதே ஆகும். மஹிஷன் எங்கிருந்தோ வரவில்லை. நமக்குள்ளேயே இருக்கிறான். நமக்குள்ளே இருக்கும் மஹிஷனைக் கொல்லுவதே இந்தப் பத்து நாட்கள் தேவி வழிபாடு செய்வதன் நோக்கம்.  இதையே சாக்தர்கள் தசமஹா வித்யை எனப்படும் வழிபாட்டின் மூலம் கொண்டாடுகின்றனர். நாம் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் குழந்தையை அன்றைய தேவியாக மனதில் ஸ்வீகரித்து அந்தக் குழ்ந்தைக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து, ஆடை, ஆபரணங்கள், சாப்பாடு, பக்ஷணங்கள் எனக் கொடுத்து சந்தோஷப்படுத்தி நாமும் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போகிறோம். நவராத்திரியின் தாத்பரியமே தீமையை அழித்து உலகில் நன்மையையும் அமைதியையும் கொண்டு வருவதே ஆகும்.

 நான் பக்தியோ ஆன்மிகமோ கோயில்கள் பற்றியோ எழுதிப் பல நாட்கள்/வருடங்கள் ஆகிவிட்டன. ஆகையால் எழுத்து நடை முன்னே/பின்னே இருக்கும். பொறுத்துக் கொள்ளவும். தகவல்கள் உதவிக்கு நவராத்திரி பற்றி நான் எழுதின பதிவுகள், இன்னும் வாட்சப் மூலம் பெற்ற சில தகவல்கள் ஆகும்.

Tuesday, October 01, 2024

ஒரு வாய்க் காஃபி

மீள் பதிவு 148 ஆம் பதிவு. இன்னிக்கு சர்வதேசக் காஃபி தினமாமே அதான், இப்போத் தான் நேரம் கிடைச்சது மீள் பதிவைப் போட!


 ஹிஹிஹி, இந்த மாதிரித் தலைப்பு வச்சாத் தான் பார்க்க வருவாங்கன்னு வச்சிருக்கேன். ஆனால் காஃபி சம்மந்தமாவும் எழுதப் போறேன். ஆகவே தலைப்புக்கும் அதுக்கும் சம்மந்தம் வந்துடும், சரியா? முதலில் நான் ரசித்த ஒரு ஜோக்:


மனைவி கணவனிடம்: ஏங்க, எங்க அம்மா போட்டுத் தர காஃபியைக் குடிக்கவே மாட்டேங்கறீங்க?


கணவன்: எனக்குத் தண்ணியிலே கண்டம்னு ஜோசியர் எச்சரிக்கை பண்ணி இருக்கார், அதான்.


ஹிஹிஹி, கல்கியிலே இந்த வாரம் வந்தது. கொஞ்சம் மாறி இருக்கலாம். கல்கியை அதுக்குள்ளே தேடும்படியா எங்கோ வச்சுட்டேன். ஆனால் அர்த்தம் இது தான். ரொம்ப நல்லா சிரிக்க முடியுது. போனமுறை ஜோக் போட்டதைக் கைப்புள்ள தவிர யாருமே ரசிக்கல்லை. யாருக்கும் ஜோக் பிடிக்கலியா அல்லது வட இந்தியர்கள் சொல்றாப்பலே (கார்த்திக் மன்னிக்கவும்) தென்னிந்தியர்களுக்கு நகைச்சுவை குறைவான்னு தெரியலை. ஆனால் எங்க வீட்டிலே நகைச்சுவை மட்டும் இல்லை எல்லாச் சுவைக்கும் பஞ்சம் இல்லை. எங்க பிறந்த வீட்டிலே காஃபி எல்லாம் ரொம்பக் கட்டுப்பாட்டோட குடிப்பாங்க. காலை ஒரு தரம், மாலை ஒரு தரம். அதுவும் தம்ளர் எல்லாம் சின்னதாத் தான் இருக்கும். நான் கல்யாணம் ஆகி வந்த புதுசுலே (அப்போ நான் காஃபியே குடிக்க மாட்டேன், என் கணவராலே பழக்கம் ஆனது, இப்போவும் மனசிலே நிறுத்தணும்னு தோணினா நிறுத்திடுவேன்.) புகுந்த வீட்டுக்கு வந்தா முதலிலே அவங்க காஃபி குடிக்கிற தம்ளரைப் பார்த்தாலே பயமா இருந்தது. எனக்கும் அதுலே தான் போர்ன்விடா கொடுத்தாங்க. என்னாலே முடியலை. ஏதோ மாட்டுக்குக் கழனித் தண்ணி ஊத்தறாப்பலே அவங்க அவங்க நினைச்சப்போ காஃபி குடிச்சாங்களா? எனக்கு மயக்கமே வந்துடுச்சு. ஒரு சமயம் என் மாமியார் என் கிட்டே தனக்கு ஒரு வாய்க் காஃபி கலந்து எடுத்து வரும்படிச் சொல்ல நான் literally took it ஒரு சின்னத் தம்ளரிலே எடுத்துப் போய்க் கொடுக்க அவங்க விசித்திரமா என்னைப் பார்த்தாங்க. அப்புறம் பாருங்க, ஒரு வாய்ன்னா என்னன்னு நினைச்சே, ஒரு தம்ளராவது இருக்க வேண்டாமான்னு கேட்டாங்களா நான் அசந்து போயிட்டேன்.


என் கணவரோ அதுக்கு மேலே என்னைக் கூப்பிட்டு வகுப்பே எடுத்தார். ஒரு வாய்க்காஃபின்னா ஒரு தம்ளர். இது பெரிய வாய். கொஞ்சமாப் போதும்னா அது 1/2 தம்ளருக்குக்கொஞ்சம் கூட, அது சின்ன வாய்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதுக்கு அப்புறம் ஒரு வாய்க் காஃபின்னா நான் பெரிய வாயா? சின்ன வாயான்னு கேட்டு சந்தேக நிவர்த்தி பண்ணிக்கிட்டே கொடுக்கிறது வழக்கமாப் போச்சு. ஆனால் இன்னிக்குப் பாருங்க காலையிலே அவருக்குக் காஃபி கொடுத்துட்டு நான் யோகா பண்ணிட்டுக் குளிக்க ஏற்பாடு செய்யும்போது திடீர்னு எனக்கு ஒரு வாய்க் காஃபி கொடு, னு என் கணவர் கேட்க,யோகாவிலேயே கவனமாக இருந்த நான் மூச்சுப் பயிற்சியிலே இன்னும் என்ன பண்ணறது? மூச்சை நிறுத்தணும்னா எத்தனை நேரம் நிறுத்தறோம்னு தெரிய எண்ணிக்கை வேணும், எண்ணிக்கையிலே கவனம் இருந்தா மூச்சை நிறுத்தறது இயல்பா இருக்காது,னு யோசிச்சிட்டே காஃபி கொடுத்துட்டுக் குளிக்கப் போயிட்டேன். வந்து டிஃபன் கொடுத்துட்டு, காஃபி தான் இன்னிக்கு 2 தரம் குடிச்சாச்சே, மோர் கொடுக்கலாமானு யோசிச்சப்போ அவர் நீ 2-ம் தரம் காஃபி எங்கே கொடுத்தே, சும்மா காட்டிட்டுப் போயிட்டே? ஒரு வாய்னா அர்த்தம் சொல்லி இருக்கேன், இன்னும் புரியலியேங்கறார், என்னத்தைச் சொல்றது, ஒரு பெரிய வாயாக் காஃபியைக் கலந்து கொடுத்தேன், ஏற்கெனவே படிக்கிற நாளில் அவரோட சொந்தக்காரங்க வந்து என் கணவர் கிட்டே படிப்பு முடிச்சதும் மேலே என்ன செய்யப் போறேன்னு கேட்டதுக்கு, மேலே இப்போ ஒண்ணும் கூரை எல்லாம் மாத்த வேணாம் எல்லாம் நல்லாத் தானே இருக்குன்னு பதில் சொன்னவர் ஆச்சே, அதனாலே ஜாஸ்தி பேச்சுக் கொடுத்தா மாட்டிப்போம்னு தெரிஞ்சா விடு, ஜூட், வெற்றிகரமா வாபஸ்.

**********************


இன்னிக்கு அவள் விகடனிலே ஒரு கல்லூரி மாணவி தன்னோட ரத்த குரூப் நெகட்டிவ் வகையைச் சேர்ந்ததுன்னும், அதனாலே பெண் பார்த்தவங்க வேண்டாம்னு சொல்லிட்டதாயும் வருத்தப்பட்டிருக்காங்க. இதைப் படிச்சதும் ரொம்பவே வருத்தமா இருக்கு. மருத்துவம் நிறையவே முன்னேற்றங்களைக் கண்டிருக்கு. எனக்கு முதல் பிரசவம் அப்போ என் பெண்ணிற்கு வந்த மஞ்சள் காமாலை மூலம் தான் எனக்கு "O" Rh Negative வகை ரத்த குரூப் எனத் தெரிய வந்தது. இத்தனைக்கும் எங்க வீட்டிலே எங்க சித்தப்பா ஒரு டாக்டர் தான். மதுரைக்கு அருகே சின்னமனூரில் டாக்டராக இருந்தார். எங்க அம்மாவோட தங்கை கணவர். (அந்த ஏரியாவிலே அவருக்குத் தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆருக்கு உள்ள செல்வாக்கு உண்டு.) இருந்தாலும் யாருக்கும் இது பத்தி அப்போ யோசிக்கத் தெரியலை. என் பெண்ணைத் தினமும் வெயிலில் போட்டு எடுத்ததும், அதுக்கு அப்புறம் 2-வது பிரசவத்தில் பையனுக்கு வயிற்றிலேயே 7-ம் மாசத்திலேயே மஞ்சள் காமாலை தாக்கி இருந்ததும், பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடனும், enlargement liverஉடனும் பிறந்த அவனைக் காப்பாற்ற நாங்கள் பட்ட பாடு ஒரு வரலாறு. (ஹிஹிஹி, கார்த்திக், வரலாறு பத்தி எழுதிட்டேன், போதுமா?) அதுக்கு அப்புறம் எங்க வீட்டிலே எல்லாருக்கும் கல்யாணத்துக்கு முன்னாலே ரத்த குரூப் பார்க்க ஆரம்பிச்சாங்க, அல்லது குழந்தை உண்டானதும், ரத்த குரூப் பார்த்து வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சாங்க. சொந்தம் என்றால் தான் இப்படி இருக்கும்னு முன்னாலே சொல்லிட்டிருந்தது என்னோட விஷயத்திலே பொய்யாப் போச்சு. நானும் என் கணவரும் முன்னைப் பின்னே தெரியாதவங்கதான். எங்களுக்கு இப்படி நடக்கலியா? ஆகவே ரத்த குரூப் பாருங்க, ஆனால் இளைஞர்களே, இந்தச் சின்னக் காரணத்துக்காகப் பார்த்த பெண்ணை வேண்டாம்னு சொல்லாதீங்க, இப்போவெல்லாம் கருவில் குழந்தை உருவானதுமே அதுக்கான தற்காப்பு நடவடிக்கைகள் ஏராளமா இருக்கு, கவலை வேண்டாம்.

அவள் விகடனிலே ரசிச்ச ஒரு சிறு கவிதை:


ஒரு பெண்குழந்தை கேட்கிறது:

நான் பிறந்தப்போ

நெல்மணி கொடுக்க

முயற்சித்தாயாமே!

இப்போ கொடும்மா.,

பசிக்கிறது!"


இதுவும் ஒரு கல்லூரி மாணவி எழுதியது தான். ரொம்பப் பெரிசா எழுதறேன்னு எல்லாரும் சொல்றதாலே பம்பாய் பயணம் முடிஞ்சா நாளை தொடர்கிறேன்.

Sunday, September 29, 2024

அனுபவங்கள் பலவிதம்.!

 நம்ம ரங்க்ஸ் இப்போக் கொஞ்சம் கொஞ்சம் எழுந்து நடக்கிறார். பிசியோ தெரபிஸ்ட் தன்னால் முடிந்ததை முழு ஈடுபாட்டுடன் செய்வதால் இந்த அளவுக்குப் பலன் வந்திருக்கிறது. ஜூன், ஜூலையில் மருத்துவமனைக்குப் போனப்போ எல்லாம் ஆம்புலன்ஸில் தான் படுக்க வைத்து அழைத்துச் சென்றேன். வரும் நாட்களில்; கொஞ்சம் மாறும் என நம்பிக்கையுடன் இருக்கேன். ஆனால் இந்த ஹோம்கேர் ஆட்கள் தான் விதம் விதமாக வருகின்றனர். இதில் முக்கியமான விஷயம் கழிவறைப் பயன்பாடு. மத்யமரில் ஓர் பெண்மணி இந்த ஹோம்கேர் ஆட்கள் பற்றி எழுதி இருந்தாலும் இதைச் சொன்னாங்களானு தெரியலை. என்னோட நிலை தர்மசங்கடமானது. சொல்லுவது தப்பா/சரியானும் தெரியலை. ஆனாலும் இது ஒரு தீராத பிரச்னை. அபார்ட்மென்ட் வளாகத்தில் கீழே கார் பார்க்கில்  2 அல்லது 3 பொதுக்கழிவறையும் மேலே மொட்டை மாடியில் இரண்டு பொதுக்கழிவறையும் இருக்கு. நம்ம வீட்டுக்கு வருபவர்கள் அனைவருமே பெண்களாக இருப்பதால் பகல் வேளை என்றால் கூட நான் எங்க கழிவறையையே பயன்படுத்திக்கலாம்னு சொல்லிக் கொண்டிருக்கேன். ஆனால் அதைச் சுத்தம் செய்வதில் தான் பெரிய பிரச்னையே இருக்கு. நான் கொஞ்சமும் தயங்காமல் போய்ச் சுத்தம் செய்துடுவேன். ஆனால் இரவில் வரும் பெண்மணி நாங்க பயன்படுத்துவதை நாங்க தான் சுத்தம் செய்யணும்னு சொல்லிட்டுச் செய்வாங்க. ஆனால் பகலில் வந்து கொண்டிருந்த பெண்மணிக்கு இது ஒத்து வரவில்லை.

உங்க வீட்டுக் கழிவறை. நீங்க தான் சுத்தம் செய்யணும்னு சொல்லாமல் சொல்லுவாங்க. ஆனால் அவங்க போனால் உள்ளே போய்க் கதவைச் சார்த்திக் கொண்டால் மணிக்கணக்காக ஆகிடும். தன்ணீரே ஃப்ளஷ் செய்யும் சப்தம் கேட்காது. அவங்களிடம் கேட்டால் நான் கழிவறையைப் பயன்படுத்தவே இல்லைனு சொல்லிடுவாங்க. அடுத்து இவர் போனால் துர்நாற்றத்துடன் கழிவுகளுடன் இருக்கும். இரண்டு, மூன்று முறை சுத்தம் செய்துட்டு உட்காரும் இடமெல்லாம் நீர் விட்டு அலம்பிட்டுப் போகணும். அப்படியும் இதை அந்த அம்மா கண்டுக்கவே மாட்டாங்க இரவு வரும் பெண்மணி தான் வாரம் இருமுறை சுத்தம் செய்து தருவாங்க.  ஹோம்கேர் ஆர்கனைசரிடம் இதை ஒரு பெரிய குற்றமாகச் சொல்லி நான் வேலை வாங்குவதாகவும் அவங்களை அழ வைப்பதாகவும் சொல்லி இருக்கார். ஆர்கனைசர் என்னைக் கேட்டப்போ அப்போ அவங்க பயன்பாட்டில் இருக்கும் கழிவறையை நான் சுத்தம் செய்து கொடுக்கணுமானு கேட்டதுக்கு அவங்களிடம் பதிலே இல்லை. பின்னர் நான் விளக்கிச் சொன்னேன். பொதுக்கழிவறை மொட்டை மாடியிலும், கார் பார்க்கிலும் இருப்பதால் இவங்க அவசரத்துக்குப் போய்வரக் கஷ்டமாக இருக்கும் என்பதாலும் இருட்டு நேரத்தில் பெண்கள் தனியாகச் செல்வதைத் தவிர்க்கவும் வேண்டி எங்க கழிவறையையே பயன்படுத்திக்கச் சொன்னதாகவும், அவங்க பயன்பாட்டில் இருக்கும்வரை அவங்க தான் சுத்தம் செய்யணும் என்றும் திட்டவட்டமாகச் சொன்னேன். ஆனால் அது எவ்வளவு தூரம் சரியாக வரப் போகிறதுனு புரியலை.இப்போத் திடீர்னு இந்த இருவரையும் மாற்றும்படி நேர்ந்து விட்டதால் ஹோமில் வேலை செய்யும் இளம் பெண்களையே அனுப்பறாங்க. இளம்பெண்கள். எல்லோரும் 20/25 வயதுக்குள். ஹோமில் ஒருத்தர் நாலைந்து முதியவர்களைக் கவனிப்பதால் இங்கே இவரை மட்டும் கவனிப்பதில் அவங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் இதுவும் எத்தனை நாட்களுக்கோ எனத் தோன்றுகிறது. 

பலரும் இந்த வேலைக்குப் படித்து விட்டு முறையாகப் பயிற்சி எடுத்துக் கொண்டெல்லாம் வருவதில்லை. பணக்கஷ்டம் இருப்பவங்க இம்மாதிரி ஏதேனும் ஒரு ஹோம்கேரில் பெயரைப் பதிந்து கொள்கிறார்கள். ஹோம்கேர் ஆர்கனைசர்கள் எல்லோரும் நேரடியாக ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவங்க ஒரு பெண்மணியை இதை எல்லாம் கவனிக்கச் சொல்லி ஏற்பாடு செய்கிறார். அந்தப் பெண்ணோ தனக்கு யார் கமிஷன் கொடுக்கிறாங்களோ அவங்களைத் தேர்ந்தெடுப்பாங்க.ஆரம்பப் பள்ளிக்கல்வியைக் கூடத் தாண்டி இருக்க மாட்டாங்க.   அந்தப் பெண்மணி படிச்சே இருக்க மாட்டாங்க. ஒரு சிலர் நாலைந்து வகுப்புக்களும் இன்னும் சிலர் எட்டு வகுப்பும், சிலரே பத்தாம் வகுப்பும் படிச்சிருக்காங்க. பத்தாம் வகுப்புப் படிச்சிருந்தாலும் பெரும்பாலோருக்கும்  தமிழோ, ஆங்கிலமோ சரளமாக வரலை என்பதே உண்மை. சிலருக்கு நம்ம விலாசம் எழுதிக் கொடுத்தாலோ வாட்சப்பில் அனுப்பினாலோ படிக்கவே தெரியாது. வீட்டு வாசலிலோ அல்லது எதிரே உள்ள லான்ட்மார்க் கல்யாண மண்டப வாசலிலோ நின்று கொண்டு வீடு எங்கே இருக்குனு கேட்பாங்க. சில அதி புத்திசாலிகள் என்னைக் கீழே வந்து பார்த்து அவங்களை அழைத்துச் செல்லுமாறு கூப்பிடுவதும் உண்டு. இன்னும் சிலர் யாரையானும் அனுப்பி வைங்கனும் சொல்வாங்க. அவங்க கிட்டே எல்லாம் என்னால் வரமுடியாத நிலையையும், வீட்டில் யாரும் இல்லை என்பதையும் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அதோடு ஒரு வழியா வீட்டுக்கு வந்தாலும் அழைப்பு மணியை அழுத்திட்டுத் திறக்கும் வரை காத்திருக்கவெல்லாம் நேரம் இருக்காது. மணியிலேயே கையை வைத்துக் கொண்டு அழுத்திய வண்ணம் இருப்பாங்க. ஏன் இப்படிச் செய்யறீங்க, வர வேண்டாமானால் நான் கதவுகிட்டேயே நிற்கலை என்பது போலப்  .பேசுவாங்க

ஒரு விஷயத்தில் மட்டும் அநேகமாக எல்லோரும்  ஒற்றுமை/ அது அலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பது அல்லது அலைபேசியைத் தோள்பட்டைக்கும்/காதுக்கும் இடுக்கிக் கொண்டு பேசுவது அல்லது ஏதேனும் திரைப்படம், காமெடிக் காட்சிகள், பாடல் காட்சிகள் பார்ப்பது. மிகச் சிலர் மட்டும் எதுவும் அதிகம் பேசாமல் பார்க்காமல் இருப்பாங்க. சிலர் அறையின் பால்கனியைக் காற்றுக்காகத் திறந்து வைப்பதால் அங்கே போய் உட்கார்ந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள். கடவுள் அருளால் நல்ல வேளையாக இப்போ டயப்பர் மாற்றுவதோ கதீடர் மூலம் நிரம்பும் சிறுநீர்ப்பையைக் காலி செய்யும் வேலையோ இல்லை. முன்னெல்லாம் கவனித்துக் கொண்டே இருக்கணும். இல்லைனால் சிறுநீர்ப்பை நிரம்பி சிறுநீரெல்லாம் மீண்டும் ப்ளாடருக்கே போய் இன்ஃபெக்ஷன் ஆகி விடும்.வலியும் எரிச்சலும் உயிர் போகும்படி இருக்கும். ஒவ்வொரு முறையும் நர்சைக் கூப்பிட்டுச் சுத்தம் செய்து மருந்து போட்டுக் கதிட்டர் மாற்றி எல்லாம் பண்ணுவோம். அந்த நர்ஸ் இந்தப் பெண்களிடம் பல முறை சுத்தமாக வைச்சுக்கறதைப் பற்றிச் சொன்னாலும் கேட்பவர்கள் இல்லை. முடிந்தவரை காலை உடம்பு துடைக்கையிலும், மாலையும் நான் அவங்களில் யாராவது ஒருத்தரைக் கிட்டே இருந்து நானும் செய்து அவங்களையும் செய்ய வைப்பேன்.

இதை எழுதி 2 நாட்கள் ஆனாலும் போட யோசனை. இன்னிக்கு ஒரு வழியாப் போடலாம்னு முடிவு பண்ணிப் போட்டிருக்கேன்.

Wednesday, September 11, 2024

பாரதி கண்ட புதுமைப்பெண் திரௌபதி


 நாயகர் தாம் தம்மைத் தோற்ற பின் - என்னை

      நல்கும் உரிமை அவர்க்கில்லை - புலைத்

தாயத்திலே விலைப்பட்ட பின் - என்ன

      சாத்திரத்தால் எனைத் தோற்றிட்டார்? - அவர்

தாயத்திலே விலைப்பட்டவர் - புவி

      தாங்கும் துருபதன் கன்னி நான் - நிலை

சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் - பின்பு

      தாரமுடைமை அவர்க்குண்டோ?



போச்சுது போச்சுது பாரத நாடு!

      போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!

ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம்!

       அன்னை பாஞ்சாலி - பாண்டவர்களின் காதலி - துரியோதனனால், அவமதிக்கப்பட்ட பொழுது, பெண்ணாக மட்டுமல்ல, அடிமைத்தனத்தில் அவமதிக்கப்படும் நமது பாரத தேவியைப் போலவே காணப்படுகிறாள். இறுதியில் அவளது பெண்மை வெற்றி கொண்ட வேகத்தில் - சபதம் செய்யும் பொழுது, - பராசக்தியின் ஸ்வரூபமாகிறாள். இக்காவியப் பகுதியை பொறுக்கியெடுத்ததிலேயே, பாரதியின் ரசிகத்தன்மையும், நுட்பமான ஆராய்ச்சி சக்தியும் நன்கு வெளியாகிறதல்லவா? தன் கொள்கைக்கேற்ற ஒரு கதையை எடுத்துப் பட்டை தீட்டிப் புது வைரமாக்கியிருக்கிறார்".தனைத் தடுத்தல் அரிதோ!

நன்றி விக்கி பீடியா மூலம் தமிழ்ப்பல்கலைக்கழகத்துக் கட்டுரையின் வடிவம்.


Sunday, September 08, 2024

பிள்ளையார் உம்மாச்சியின் ஹாப்பி பர்த் டே!








குட்டிக்குஞ்சுலுவிடம் ஏற்கெனவே பிள்ளையார் சதுர்த்தி பற்றிச் சொல்லி யாச்சு என்பதோடு அவ அப்பாவும் சொல்லி இருக்கார். ஆகவே பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்குக் காலையில் (அவங்க நேரம் காலை எட்டு மணி)கூப்பிட்டாங்க. நான் அப்போத் தான் பூஜை முடிச்சுட்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு போட்டுட்டு அதிரசம் ஒண்ணை எடுத்துத் தின்று பார்த்துக் கொண்டிருந்தேன். குஞ்சுலு வந்ததும் எனக்கு/தாத்தாவுக்கு எல்லாம் ஹாப்பி பிள்ளையார் சதுர்த்தி சொன்னது. பின்னர் பிள்ளையாரைக் காட்டச் சொல்லியது. எனக்குச்சரியா வரலை. உதவிக்கு வரும் பெண் மொபைலை அட்ஜஸ்ட் செய்து காட்டினார். குஞ்சுலு பார்த்துட்டு ஹாப்பி பர்த்டே பிள்ளையார் உம்மாச்சி எனப் பாட ஆரம்பித்தது. பாடி முடிச்சதும் நிவேதனங்களைக் காட்டினால். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுக்கு லட்சியமே இல்லை. எல்லாம் அம்பேரிக்க வாழ்க்கையினால் வந்த விளைவு. இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சம் கடலை மிட்டாயும் எள்ளுருண்டையும் சாப்பிட ஆரம்பிச்சிருக்கு. மற்றபடி முறுக்கு, தட்டை, ஓலை பக்கோடா எல்லாம் சாப்பிடும்.முன்னால் வீட்டில் பண்ணி வைத்துக் கொண்டு கொடுப்பேன். பின்னர் பிள்ளை கண்டிப்பாக வீட்டில் பண்ணுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே வாங்கி வைக்கிறேன். அதையும் மனசு இருந்தால் சாப்பிடும். 

எப்படியோ ஒரு வழியாப் பிள்ளையார் சதுர்த்தியும் ஆச்சு. எனக்குத் தான் அன்று ஒரே தடுமாற்றம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ரங்க்ஸைப் பார்த்துக்க வேண்டி வந்ததால் சாப்பிடும்போது பனிரண்டு மணி ஆயிடுச்சு. பாவம் ரங்க்ஸ்! பசி முத்திப் போச்சு. சரியாச் சப்பிடலை. கொழுக்கட்டை எல்லாம் நிவேதத்துக்குப் பண்ணிக் கொண்டு மிச்சத்தை மத்தியானமாப் பண்ணி விநியோகம் செய்தேன்.




 பூரணக் கொழுக்க்ட்டை அம்மா வீட்டில் ஐந்த் விதம் பண்ணுவாங்க. இங்கே தேங்காய்ப் பூரணமும் உளுந்துப் பூரணமும் தான். வ்டை, அதிரசம்,, பாய்சம் தான் கூடுதலாக. பச்சரிசியில் இட்லி செய்யணும். நன்றாக வந்திருந்தது. இன்னிக்குக் காலையில் கூட அதான் சாப்பிட்டோம். இந்த முறை மிச்சம் வடை மாவை வடையாகவே தட்டித் தயிரில் போட்டு விட்டேன். இன்னிக்கு மத்தியானமாத் தான் பண்ணினேன். இன்னும் சாப்பிடலை. நோ திப்பிசம்.

Friday, September 06, 2024

கண்ணான கண்ணே!

 பகலுக்கு வந்து கொண்டிருந்த பெண் ஆசிரமத்தில் வளர்ந்ததாகச் சொன்னார். வயது என்னமோ 30க்குள் தான். அதுக்குள் கல்யாணம் ஆகிப் பனிரண்டு வருஷங்களாம். 2 பெண் குழந்தைகள். வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பார். நான் கொஞ்சம் கண்டிப்பாகப் பேச்சைக் குறைனு சொல்லிட்டேன். அதோடு அவள் மற்றவங்களைக் குறிப்பாக இரவுக்கு வரும் பெண்மணியையும், எங்க வீட்டில் ஏழெட்டு வருஷங்களாக வேலை செய்யும் பெண்ணையும் பற்றிக் குற்றம் சொல்ல ஆரம்பித்தார். இரவில் வருபவர் அப்பாவைச் சரியாகத் துடைத்துச் சுத்தமாக வைச்சுக்கலை, நீங்க சொல்லணும் என்று என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். அவர் சுத்தமாகத் தான் செய்து வந்தார். ஏனெனில் நான் இவங்க எல்லாம் உடம்பு துடைத்து, டயபரை மாற்றிச் சுத்தம் செய்யும்போதெல்லாம் நான் கூடவே தான் இருப்பேன். அதே போல் எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணையும் சரியாகப் பெருக்கலை, துடைக்கலை, மூலை எல்லாம் குத்திவிட்டுப் பெருக்கித்துடைக்கச் சொல்லுங்க என்றெல்லாம் ஆரம்பிச்சார். எங்க வீட்டுக்கு வரும் ஃபிசியோதெரபிஸ்டிடம் காலில் விழுந்து சாப்பிட்டு 3 நாட்கள் ஆயிடுச்சு, அம்மா இன்னமும் (நான் தான்) சம்பளம் கொடுக்கலை, ஏதானும் உதவி பண்ணுங்கனு அழுது கெஞ்சி 500 ரூபாய் வாங்கிட்டார். அவங்க சம்பளமெல்லாம் என் மூலமே போகாது. எனக்கு மொத்தப் பேச்சு வார்த்தையும் ஹோம்கேர் ஆர்கனைசரிடம் தான். நான் ஒரு நாள் மிகக் கடுமையாக நீ உன் கணவரிடமே போய் அங்கே சேர்ந்து குடித்தனம் பண்ணுனு சொல்லிட்டேன். மறு நாளில் இருந்து வருவதில்லை. இப்போ வேறே ஒருத்தர் வருகிறார். என்னதான் காலை சீக்கிரம் வரச் சொன்னாலும் அவர் சௌகரியத்துக்குத் தான் வரார். மாலையும் சீக்கிரம் கிளம்பிடுவார். இரவு வரும் பெண்மணியிடம் கேட்டுக் கொண்டு அவங்களைக் கொஞ்சம் சீக்கிரமா வரச் சொல்லிச் சொல்லி இருக்கோம். ஏழேகாலுக்குள் வந்துடறார்  இதிலே ஒரு பெண் இரவு வரும் பெண்மணி குலதெய்வக் கோயிலுக்குப் போனதால் லீவில் மாற்றாக வந்தவர் பிடிவாதமாக இனிமேல் ராத்திரி நான் தான் வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வீட்டில் ஒவ்வொருத்தருக்காகத் தொலைபேசியில் அழைத்து இங்கே கட்டில், மெத்தை எல்லாம் போட்டிருக்காங்க, ஏசியும் ஓடுது. சௌகரையமா இருக்கு. நான் இனிமேல் இங்கே தான் இரவுக்கு இருக்கப் போறேன் என அறிவிப்புச் செய்து கொண்டிருந்தாங்க. அவங்களைக் காலை கிளப்ப ரொம்பப் பாடு பட்டேன். 

இதுக்கு நடுவில் போனவாரம் வியாழனன்று இரவு திடீர் எனக் கண்ணில் இடக்கண்ணில் ஏதோ குத்தல்/குடைச்சல். கண்ணை மூட முடியலை/திறக்கவும் முடியலை. எப்படியோ படுத்துத் தூக்கம்னு பெயர் பண்ணினேன். கண் மருத்துவரிடம் போனால் மணிக்கணக்காய் உட்கார்ந்திருக்கணும்னு தெரிந்த ஃபார்மசியில் கண்ணுக்குச் சொட்டு மருந்து கேட்டிருந்தேன். கூடவே 2 மாத்திரைகளையும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார் மெட்ராஸ் ஐயாக இருக்கலாம்னு அவர் சந்தேகம். அன்று கொஞ்சம் பரவாயில்லைனு இருந்த கண் மறுபடி ஞாயிறன்றிலிருந்து தொந்திரவு செய்யவே வேறே வழியில்லாமல் ஆயிரத்தெட்டுப் பாதுகாப்பு ஆலோசனைகளைக் கொடுத்துட்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு அப்புறமாச் சாப்பிட மாதுளை ஜூஸும் போட்டு வைச்சுக் கண்ணாஸ்பத்திரிக்குப் போனேன். மீட்டர் ஆட்டோனு பெயர். அந்தப் பையர் நம்ம வீட்டிலிருந்து தெற்கு வாசலுக்கு எழுபது ரூபாய் ஆகிவிட்டதாகவும் மீட்டர் அவ்வளவு காட்டுவதாகவும் பயங்கரமான பொய் சொன்னார். நான் பணத்தை எடுக்கையிலேயே அவர் மீட்டரிடம் ஏதோ பண்ணுவதைப் பார்த்துட்டேன். காட்டிக்காமல் 50 ரூபாய் தான் எப்போவும் கொடுப்பேன். அதான் கொடுப்பேன்னு சண்டை போட அவர் ஒத்துக்க மறுக்க உடனே உங்க சங்கத்தலைவரிடம் நான் பேசிக்கிறேன். நீ எழுபது ரூபாய் என்ன, 100 ரூபாயகவே வைச்சுக்கோனு 100 ரூபாயைக் கொடுத்துட்டுக் கீழே இறங்கினேன். பையருக்கு பயமோ என்னமோ 50 ரூபாயைத் திரும்பக் கொடுத்தார். என்றாலும் சங்கத் தலைவரிடம் புகார் அளித்தேன்.

மருத்துவமனை உள்ளே போய் வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்ததும் அந்தப் பெண்ணிடம் என்னைச் சீக்கிரம் அனுப்பும்படியும் மாமா படுத்திருக்கும் விஷயத்தையும் சொன்னேன்.அரை மணி நேரத்தில் அனுப்புவதாகச் சொல்லிட்டு ஒரு வழியாப் பனிரண்டரைக்கு அனுப்பினாள். டாக்டர் பார்த்ததுமே கீதா மேடம், தூங்கி எத்தனை நாட்கள் ஆச்சு? என்று தான் கேட்டார். எனக்குத் திகைப்பு. பின்னர் கண்களைப் பல முறைகள் சோதனை பண்ணிட்டுத் தூக்கம் இல்லாததால் கண்க்ள் காய்ந்து நீர்ச்சுரப்பு இல்லாமல் போய்விட்டது என்றும் எதுக்கும் ரெடினா டெஸ்ட் பண்ணிடுவோம், இப்போ உங்களால் முடியுமா? அதுக்கு நேரம் ஆகும் என்றும் சொன்னார். இன்னொரு நாள் வீட்டில் டெஸ்டுக்குச் சொல்லிட்டுத் தயார் நிலையில் வரேன்னு சொன்னேன். அவருக்கும் அதற்குள்ளாக ரங்க்ஸின் உடல்நிலை பற்றிச் சொல்லி விட்டேன். ஆகவே அவர் இப்போதைக்குக் கண் இரண்டிலும் சொட்டு மருந்து விட்டுக்கச் சொல்லிக் கொடுத்துட்டுப் பின்னர் ஒரு நாள்வந்து ரெடினா செக் அப் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கார். அதுக்குப் போகணும். பயமாகவும் இருக்கு. அதே சமயம் போயிடணும்னும் தோணுது.