எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 16, 2014

தீபாவளி மலரும் நினைவுகள்! அந்த நாளும் வந்திடாதோ!

சின்ன வயசில் தீபாவளி சமயம் அநேகமாய் ஜுரம் வந்து படுத்திருப்பேன். ஆகவே ரொம்பச் சொல்ல ஒண்ணும் இல்லைனே சொல்லணும்.  ஆனால் அப்போதிருந்த உற்சாகம், பட்டாசு வெடிக்கும் ஆர்வம் இப்போதைய குழந்தைகளிடம் இல்லை.  ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் அப்போதைய தீபாவளி நினைவுகள் நினைத்தாலே இனிக்கும்வகை தான். தீபாவளி குறித்த பேச்சு எல்லாம் நவராத்திரிக்கே ஆரம்பிக்கும். எனக்குத் துணி எடுக்கும்முன்னர் அப்பா ஒரு முறை தெரிஞ்ச ஜவுளிக் கடைகளை எல்லாம் சுத்தி வருவார்.  அந்த வருஷம் லேட்டஸ்ட் என்னனு தெரிஞ்சுப்பார்.எல்லாத்துக்கும் மேலே அதை வாங்கும் அளவுக்குப் பணம் வேணுமே, அதுக்காக மூணு மாதங்கள் முன்பிருந்தே தயார் பண்ணிப்பார். தீபாவளிக்கு பக்ஷணங்கள் நிறையவே செய்வாங்க.  அதுக்காகவும் சாமான்கள் சேகரம் பண்ணப்படும்.

அண்ணாவுக்கும், தம்பிக்கும் அரை டிரவுசர் எனப்படும் உடையும், மேல் சட்டையும் துணி வாங்கித்தைக்கக் கொடுப்பாங்க.  அதிலே தான் அப்பா காமெடி பண்ணி இருப்பார். வளரும் பசங்கனு சொல்லி தையற்காரரிடம் அளவு எடுக்கிறச்சே தாராளமாத் தைங்கனு சொல்லிடுவார்.   அரை மீட்டர் துணி போதும்ங்கற இடத்திலே ஒரு மீட்டர் வாங்கி இருப்பார்.  ஆகவே அது அண்ணா மாதிரி இரண்டு பையர்கள் போட்டுக்கிறாப்போல் இருக்கும். தம்பிக்கும் அப்படித் தான். இந்த தீபாவளிக்குத் தைச்ச டிரவுசரை அவங்க அதுக்கப்புறமா இரண்டு வருஷம் கழிச்சுப் போட்டால் கூடப் பெரிசாத் தான் இருக்கும். அவங்க போட்டுக்கவே முடியாது. ஆனால் அப்பாவுக்கோ பிள்ளைங்க ரெண்டு பேரும் அசுர வளர்ச்சி என நினைச்சுப்பார். அடுத்த தீபாவளிக்கும் இதே கதை தொடரும். அண்ணாவுக்குத் தைச்சதெல்லாம் தம்பி வளர்ந்து போட்டுக்க ஆரம்பிச்சான்னா பாருங்களேன்.

அடுத்துப் பட்டாசு.  அதுவும் குறிப்பிட்ட கடையிலே தான் வாங்குவார். எவ்வளவுக்குனு நினைக்கிறீங்க? இரண்டே ரூபாய்க்கு. அதிலேயே லக்ஷ்மி வெடி, குருவிவெடி, சீனிச்சரம், ஓலைப் பட்டாசு, கொம்பு வாணம், புஸ் வாணம், ஏரோப்ளேன், அணுகுண்டு, பென்சில் மத்தாப்பு, சாட்டை, கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு எல்லாமும் வரும். அதை நான்கு பாகமாய்ப்போடுவார் அப்பா.  நான் பெண் குழந்தை என்பதால் பட்டாசு எல்லாம் கிடையாதுனு சொல்லிப் பார்ப்பார்.  ஆனால் நான் விட மாட்டேனே! எனக்கும் வேணும்னு கேட்டு வாங்கி வைச்சுப்பேன். கடைசியிலே உடம்பாப் படுத்துப்பேனா, எல்லாத்தையும் அண்ணா, தம்பிக்குக் கொடுத்துடுனு அப்பா சொல்லுவார்.

கடைசியிலே அவங்களோடதையும் சேர்த்து அப்பாவே விட்டுடுவார். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே இருந்து அம்மா பக்ஷணம் பண்ண ஆரம்பிப்பாங்க. மைசூர்ப்பாகு நிச்சயமா இருக்கும். அல்வா நிச்சயமா இருக்கும். மற்ற ஸ்வீட் அம்மாவுக்கு என்ன முடியுமோ அது. மிக்சர் நிச்சயமா இருக்கும். அதுக்குப்  பண்ணும்போதே தேன்குழல், ஓமப்பொடினு பண்ணுவாங்க.  அப்புறமா உக்காரை நிச்சயமா இருக்கும். இது சிலர் அரிசியிலெ செய்யறாங்க. எங்க வீட்டிலே து.பருப்பு, க,பருப்பு வறுத்து ஊற வைச்சு அரைச்சுச் செய்வாங்க.  அது பற்றிப் பின்னர் எழுதறேன்.  தீபாவளிக்கு எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும் சமயங்களில் எல்லாம் எல்லா பக்ஷணங்களும் கார்த்திகைக்குத் திரும்பப் பண்ண ஆரம்பிச்சது கடைசியில் அது ஒரு வழக்கமாவே மாறிப் போச்சு! :))))

தீபாவளிக்குக் காலம்பர மூணரை மணிக்கே அம்மா எழுப்புவாங்க.  எழுந்துக்கத் தான் சோம்பலா இருக்கும். இந்த அம்மாவெல்லாம் தூங்கவே மாட்டாங்க  போலனு  நினைச்சுப்பேன். முதல்லே நான் எழுந்து குளிச்சாத் தான் அப்புறமா அண்ணா, தம்பி எல்லாம் குளிக்கலாம்.  அந்த நேரத்துக்கே அம்மா குளிச்சிருக்கிறதைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும். அப்பா அமாவாசையும் சேர்ந்து வந்தால் குளிச்சிருக்க மாட்டார்.  ஏன்னா, முதல்லெ ஒரு தரம் எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டா அப்புறமா  அமாவாசைத் தர்ப்பணத்துக்கு மறுபடி குளிக்கணும். ஆகவே பண்டிகை தனித்து வந்தால் எண்ணெய்க் குளியல். எல்லாம் முடிஞ்சு மூணு பேரும் குளிச்சுட்டு வந்ததும், அப்பா தன் கையாலே துணி எடுத்து தருவார்.  அதுக்குள்ளே அம்மா சாமிக்குக் கோலம் போட்டு விளக்கு ஏத்தி, பக்ஷணம், துணி, பட்டாசு எல்லாம் எடுத்து வைச்சிருப்பாங்க. அப்பா குளிச்சுட்டா நிவேதனம் பண்ணுவார்.  இல்லைனா அம்மாவை விட்டு செய்ய சொல்லுவார். எல்லாரும் புதுத் துணி உடுத்தி சந்தோஷமாப் பட்டாசு வெடிக்கப் போவோம்.

அதுக்கு அப்புறமா உள்ளூரிலேயே இருக்கும் பெரியப்பா, பெரியம்மா வீடுகள், தாத்தா வீடு ஆகிய வீடுகளுக்குப் போயிட்டு அவங்க கிட்டெ எல்லாம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வருவோம். பணமோ, துணியோ, பக்ஷணம், பட்டாசு என்று அது கலெக்‌ஷன் தனி.

இப்போதோ குழந்தைங்க ஒரு பக்கம், நாங்க ஒரு பக்கம்.  2011 ஆம் வருஷம் மட்டும் எங்க பையர் வீட்டிலே யு.எஸ்ஸிலே கொண்டாடினோம்.  குழந்தைங்களோட இருக்கிற சந்தோஷம் இருந்தாலும் இந்தியாவிலே பண்டிகை கொண்டாடிய சந்தோஷம் என்னமோ வரலை.  இப்போ நவராத்திரி என்றால் கூட கொலு வைச்சுட்டு நான் மட்டுமே தன்னந்தனியா உட்கார்ந்திருக்கிறாப்போல் இருக்கு.  அதுவும் சென்னையில் யாருமே வர மாட்ட்டாங்க. ஸ்ரீரங்கத்தில் பண்டிகை கொஞ்சம் பரவாயில்லைனு தோணுது.  என்றாலும் பக்ஷணத் தொழிற்சாலை மாதிரி பக்ஷணங்கள், புடைவைக் கடை போலப் புடைவைகள் என வாங்கிக் கொண்டாடிய காலம் எல்லாம் போய் இப்போ நாம் இருவர், நமக்கு நாம் இருவர் மட்டுமேனு தீபாவளி கொண்டாடிட்டு இருக்கோம்.

கல்யாணம் ஆனப்புறமா தீபாவளி என்பதும் கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்னரே பக்ஷணத் தொழிற்சாலை ஆரம்பிப்பதோடு ஆரம்பிக்கும். நம்ம ரங்க்ஸுக்குக் குடும்பம் மொத்தத்துக்கும் துணி எடுக்க வேண்டி இருப்பதால் தீபாவளிக்கு இரண்டு மாசம் முன்னாலிருந்தே சிக்கன நடவடிக்கைகளை ஆரம்பிப்பார். பக்ஷணத் தொழிற்சாலைக்கு வேண்டிய சாமான்களை சேகரம் செய்வது என் பொறுப்பு.  அக்கம்பக்கம் அனைவரின் ரேஷன் கார்டுகளையும் வாங்கி தீபாவளிக்குப் போடும் சர்க்கரை (அப்போல்லாம் எக்ஸ்ட்ரா சர்க்கரை போடுவாங்க) வாங்கிச் சேகரம் செய்வேன். காலை எழுந்து வீட்டில் சமையல், டிபன் வேலை முடித்து ஒன்பது மணிக்கெல்லாம் ரேஷனுக்கும் போய் சாமான் வாங்கி வந்து, பின்னர் வீட்டுக்கு வந்து மாமியார், மாமனாருக்குச் சாப்பாடுபோட்டு நானும் சாப்பிட்டுவிட்டு மறுபடி என்னோட கலெக்‌ஷன் வேலைக்குக் கிளம்புவேன். அதை முடிச்சுட்டு இரண்டு மணிக்கு வருவேன்.  கொஞ்ச நேரம் ஓய்வு. படிப்பு. ஹிஹிஹி, அப்போப் படிச்சுட்டும் இருந்தோமுல்ல! :))))

அது முடிஞ்சதும் மாலை டிஃபன், காஃபி, இரவு உணவுக்கான ஏற்பாடுகள்.  என்னிடம் படிக்கும் குழந்தைங்க, என் குழந்தைங்க எல்லாருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தல்னு இருக்கும்.  இதுக்கு நடுவிலே பக்ஷணமும் பண்ணி இருக்கேன்.  இப்போ??? நினைச்சாலே எப்படிச் செய்தோம்னு ஆச்சரியமாத் தான் இருக்கு.  விஜயதசமி அன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் போய் எல்லாருக்கும் துணி எடுப்போம்.  அநேகமாய் கோ ஆப்டெக்ஸ்;  ஒரு மாறுதலுக்கு உள்ளூர் துணிக்கடையில் கடனுக்கு.  அடுத்த தீபாவளி வரை வரும். :)))) என்றாலும் தீபாவளி உற்சாகமாகவே இருந்தது.  தொலைக்காட்சி வந்தப்புறம் தீபாவளி சிறப்புப் படமும், சிறப்பு நாடகமும் பார்க்க வீட்டில் கூட்டம் தாங்காது. அவரவர் வீட்டு பக்ஷணப் பரிமாற்றங்களோடு பார்த்த நாட்கள் அவை.

காலம் மாறியது என்பதோடு அல்லாமல் உறவுகள் ஒரு இடம் நாம் ஒரு இடம் என்றெல்லாம் ஆகும்னு நினைச்சுப் பார்க்கவில்லை. இதையும் ஏற்று கொண்டு வாழப் பழகியாச்சு.   எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.


எத்தனை தரம் எழுதினாலும் எதுவும் மாறப் போவதில்லை என்பது புரிந்து விட்டது.  இது இப்படித் தான் எனத் தெரிந்து விட்டது. ஆகவே போன வருஷத்துப் பதிவே இந்த வருஷத்துக்கும் சரியா இருக்கும்னு மீள் பதிவாப் போட்டுட்டேன்.  மீள் பதிவு போடறதே  ஒரு வழக்கமாயிடுமோ!!!!!!!!!!!!! நேத்து முகநூலில் ஒருத்தரோட மலரும் நினைவுகளைப் படிச்சதும் எனக்குள் ஏற்பட்ட  மலரும் நினைவுகள். புதுசாவும் எழுதினேன்.  போடலாமா வேண்டாமானு யோசனை!






23 comments:

  1. பொதுவாக ஒவ்வொரு ஆண்டு தீபாவளிக்கும் பிள்ளைகள் குடும்பத்தோடு இங்கு வருவார்கள். இந்த முறை ஒரு மாறுதலுக்காக சென்னையில் என் மூத்தமகன் வீட்டில் அனைவரும் ஆஜராகத் திட்டம். தீபாவளி நினைவுகள் வயசானால் அதிகம் வருமோ.? தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்த டிராயர்களை ரெண்டு ஆள் நுழையறா மாதிரி தைக்கச் சொல்றது அந்தக் காலத்தில் எல்லா அப்பாக்களுக்கும் வழக்கம் போல... எங்கள் ஸ்கூலில் எல்லோரும் "நாகரீக"மாக டிராயர் போட்டு வர,நாங்கள் மட்டும் நீதி சந்திரபாபு மாதிரி டிராயர் போட்டுப் போவோம்! அதுவும் சமயங்களில் அட்ஜஸ்ட்மென்ட், பணமில்லை என்று யுனிபார்ம் டிராயரே! ம்ம்ம்

    ReplyDelete
  3. பட்டாசுக் கதை ஸேம் ஸேம் ஸ்வீட் ஸ்வீட்தான்! அக்காவின் தலை தீபாவளிக்கு 25 ரூபாய்க்கு வாங்கியது ரெகார்ட்! அடுக்கி வைத்திருந்த அளவு கண் கொள்ளாக் காட்சி!

    ReplyDelete
  4. பட்சண விஷயத்துல எங்க வீட்டுல தீபாவளிக்கு முதல்நாள் தாத்தா திவசம் என்பதால் திவசம் முடிந்து இரவு 9 மணிக்கு மேல்தான் பட்சணம் செய்யும் வேலை தொடக்கம்! முன்னர் எப்படியோ, எனக்கு விவரம் தெரிந்தபின் நானும் அம்மாவும்தான்!

    ReplyDelete
  5. மீள் பதிவா.... போன வருஷமா... அப்போ நான் என்ன சொல்லி இருக்கேன்னு போய்ப் பார்க்கணும்!

    ReplyDelete
  6. பொதுவாக தீபாவளி சிறப்பாகக் என்பது குழந்தைப் பருவம் அல்லது திருமணமாகி முதல் பத்து வருடங்கள்!

    ReplyDelete
  7. வாங்க ஜிஎம்பிசார், வயசானவங்கனு இல்லை. எல்லோருமே தீபாவளிக் கொண்டாட்டம் முன்னை மாதிரி இல்லைனு சொல்றாங்க. முகநூலில் சொன்னவங்க சின்ன வயசுக்காரங்க தான். :)))) எல்லோருக்கும் அவங்க அவங்க இளமைக்கால நினைவுகள் வருது.

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், எங்க அண்ணா, தம்பிக்கெல்லாம் யூனிஃபார்ம் கிடையாது. அப்போல்லாம் யூனிஃபார்ம் அவ்வளவு கண்டிப்பாப் போடச் சொல்லலை. :))))

    ReplyDelete
  9. நாங்க தீபாவளிக்கு ஸ்வீட்டுனு வாங்கினது இல்லை. சென்னையிலே ரங்க்ஸோட அலுவலகத்திலே ஆயுத பூஜை சிட் ஃபன்டில் தர ஸ்வீட் பாக்கெட் தான் வெளியிலே வாங்கற ஸ்வீட்! :))))

    ReplyDelete
  10. இதை, இதை , இதைத் தான் போன வருஷப் பதிவிலேயும் சொல்லி இருந்தீங்க! :))))

    ReplyDelete
  11. போயெல்லாம் பார்க்கவேண்டாம். நான் பார்த்துட்டேன். :)))

    ReplyDelete
  12. எல்லோருக்கும் அப்படினு சொல்ல முடியாது. எங்க மாமியார், மாமனார் எல்லாம் வயசு ஆனப்புறமாக் கூட தீபாவளியை உற்சாகமாத் தான் கொண்டாடினாங்க. :)) ஆனால் நாங்க அவங்களோடு இருந்தோம் என்பதோடு உள்ளூரிலேயே பெண்களும் இருந்தாங்க என்பதால் வரப் போக இருப்பாங்க. :)))) அதுக்கப்புறமாக் கூட அவங்க ஆர்வமாத் தான் தீபாவளி கொண்டாடுவாங்க. வெகு சிலருக்குத் தான் இதெல்லாம் அமையும். :))))

    ReplyDelete
  13. // போயெல்லாம் பார்க்கவேண்டாம். நான் பார்த்துட்டேன். :))) //

    நான் போய்த் தேடித் பார்த்தேன். காணோம்! வந்து விட்டேன்.

    // இதை, இதை , இதைத் தான் போன வருஷப் பதிவிலேயும் சொல்லி இருந்தீங்க!:)))) //

    எதை?

    ReplyDelete
  14. //பட்சண விஷயத்துல எங்க வீட்டுல தீபாவளிக்கு முதல்நாள் தாத்தா திவசம் என்பதால் திவசம் முடிந்து இரவு 9 மணிக்கு மேல்தான் பட்சணம் செய்யும் வேலை தொடக்கம்! முன்னர் எப்படியோ, எனக்கு விவரம் தெரிந்தபின் நானும் அம்மாவும்தான்!//


    இதான், இதைத் தான் சொல்லி இருந்தீங்க! :))))

    ReplyDelete
  15. தீபாவளி எல்லாம் முன்னைப் போல இல்லை.... அப்போது கிராமத்தில் கூட்டுக் குடும்பம்....அப்போது வருடத்துக்கு ஒரு முறைதான் துணி இல்லையென்றால் யூனிஃபார்ம்தான் நண்பர் ஸ்ரீராம் சொன்னது போல்.....பட்டாசு எல்லாம் அதே அதே....

    .ஒன்று இப்போது குடும்பங்கள் தனித் தனித் தீவாகிவிட்டது.
    பின்னர் விலை வாசி....வளர வளர துணி மணி எடுப்பதில் ஆர்வம் குறைவு....பிள்ளைகளின் படிப்பு.....பட்டாசு சுற்றுப்புறத்தையும், விலங்குகளுக்கும் நலல்தல்ல என்று பல வருடங்கள் ஆகிவிட்டது வாங்குவது இல்லை....பலருக்கும் பல உடல்நலப் பிரச்சினைகள் என்பதால் பலகாரம் செய்வது குறைந்துவிட்டது.....இப்படியாக

    அது சரி உக்காரை இங்கு சென்னைப் பக்கம் செய்வதில்லையே.....எங்கள் வீட்டில் செய்வதுண்டு நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான்....திருநெல்வேலி, திருவனந்தபுரம் பழக்கம்...நீங்களும் அந்த ஊர் சைடோ?!!!!

    நல்ல மலரும் நினைவுகள்!

    ReplyDelete
  16. கடன் வாங்கி கொண்டாடினாலும் சின்ன வயசு தீபாவளி இனித்தது! இப்போ இந்த வயசு தீபாவளி கொஞ்சம் வலித்தது போலத்தான் இருக்கிறது!

    ReplyDelete
  17. சிறு வயதில் தீபாவளி என்றாலே உற்சாகம் தான் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே புது உடைகள் எடுத்தக் காலம் அது. அதனால் தீபாவளிக்கு எத்தனை நாள் இருக்கிறதுஎன்று நாள் கணக்குப் போட்டு , இனிப்பு வகையறாக்கள் எல்லாம் பெரிய பெரிய டப்பாக்களில்( கூட்டுக் குடும்பம் ) ஆயிற்றே, ரொம்ப அதிகம் பட்டாசு செலவு செய்யாமல் கொண்டாடின தீபாவளிகள் மனதில் நிழலாடுகின்றன. மகிழ்ச்சி கரைப் புரண்டோடும். அத்தனை நினைவுகளையும் வந்து மனதில் முட்டி மோத வைத்தது உங்கள் பதிவு.

    உக்காரை என் அம்மா வீட்டிலும் தீபாவளிக்கு நிச்சயம் உண்டு. ஆனால் நாங்கள் பாசிப் பருப்பில் செய்வோம்.

    ReplyDelete
  18. தீபாவளி - மற்ற நாட்களைப் போலவே ஒன்றாகி விட்ட உணர்வு. தில்லி வந்த பிறகு தீபாவளி கொண்டாட்டங்கள் அவ்வளவாக இல்லை! இங்கே Chotti Diwali, Badi Diwali என இரண்டு - பொதுவாக நாம் chotti diwali கொண்டாட, இவர்கள் Badi Diwali! அடுத்தடுத்த நாட்களில் - இம்முறை கூட நமக்கு 22, தில்லி வாலாக்களுக்கு 23!

    ReplyDelete
  19. வாங்க துளசிதரன், உக்காரை சென்னையில் என்ன? தஞ்சை ஜில்லாவில் கூட தீபாவளிக்குச் செய்யறதில்லை. எங்க பக்கம் உக்காரை இல்லாமல் நோ தீபாவளி. அது போல் தீபாவளி அன்னிக்குக் காலையிலும் வெள்ளை அப்பம் நிச்சயமாய் இருக்கும்.

    பி.கு. மீனாக்ஷி ஆட்சி செய்யும் நான்மாடக் கூடல்காரி நான். :)))))

    ReplyDelete
  20. வாங்க தளிர் சுரேஷ், அன்பையும், பாசத்தையும் தொலைக்காட்சியில் கூடப் பார்க்க முடியவில்லையே! நேரில் எங்கே பார்ப்பது? அதான் நம்மைப் போன்றவர்கள் மனமெல்லாம் அடிச்சுக்கிறது. :(

    ReplyDelete
  21. வாங்க ராஜலக்ஷ்மி, பாசிப்பருப்பிலும் உக்காரை செய்வாங்கனு என் மாமியார் சொல்லிக் கேட்டிருக்கேன். நாங்க பாசிப்பருப்பும், கோதுமை மாவும் சேர்த்து அல்வா(அசோகா) செய்திருக்கோம். அதிலேயே கொஞ்சம் சர்க்கரை சேர்க்காத கோவாவும் சேர்த்தால் சுவையோ சுவை தான்! இப்போ ஸ்வீட் என்று பெயருக்கு ஏதோ கொஞ்சம் தான். :))))

    ReplyDelete
  22. வாங்க வெங்கட், வடமாநிலங்களில் எல்லாமே சோட்டி திவாலி, படி திவாலி என இரண்டு உண்டு தான். ராஜஸ்தானிலும், குஜராத்திலும் கூடப் பார்த்திருக்கோம். அவங்களுக்கு அமாவாசை முக்கியம். நமக்கு சதுர்த்தசி முக்கியம். அதிசயமாக இரண்டும் சேர்ந்தும் வருவதுண்டு. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete