எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 28, 2026

தமிழ்த்தாத்தாவை நினைவு கூர்வோம். ஏப்ரல் 28/2026

சிந்தாமணியை அறிந்தது எவ்வாறு?



திருவாவடுதுறை ஆதினம் தண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உ.வே.சா., இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உ.வே.சா. பெரிய அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மைச் சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உ.வே.சாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம் போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாகச், சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை; கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உ.வே.சா.விடம் கொடுத்துக் கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உ.வே.சாவிற்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார். உ.வே.சா. சிந்தாமணியைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார்.


பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. முதலியாருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு. இருவரும் கலந்துரையாடிப் பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்துவந்தனர். சிந்தாமணி சமண நூலாதலால் பல சமண கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களைத் தெளிவாக்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். உ.வே.சா. சமணர்களுடன் கலந்துரையாடிய போதும்; கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பல செய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியாவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உ.வே.சா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.


உ.வே.சா. சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக அனேக பயனுள்ள தகவல்களும் கிடைத்தன. நூலைப் பதிப்பிக்கும் போது அத்துணை தகவல்களையும், சேர்த்தே தந்திருப்பது இவருடைய நூல்களைத் தனித்து நிற்க உதவியது. சமகாலத்தில் இதற்கு ஒப்பான முயற்சி இருந்ததாகத் தகவல் இல்லை. நூலைப் படித்தோரும் இந்தத் தகவல்களின் பயனை அறிந்து ஐயரவர்களின் சேவையையும் முயற்சியையும் நன்கு உணர்ந்து பாராட்டினர்.

15 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தமிழ்தாத்தாவை என்றும் நினைவில் கொள்வோம். இன்று அவர் சீவக சிந்தாமணி நூலை நமக்கு புதுப்பித்து தந்த வரலாற்றைப் பற்றி அறிந்து கொண்டேன்.

    /ஒரு சொல் தெரியாவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உ.வே.சா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்/.

    நல்ல கடுமையான முயற்சி. அதனால்தான் அவர் இன்றளவும் நம் மனதில் நிலைத்து நிற்கிறார். அவரை என்றும் மறவாதிருப்போம். அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கவும் இறைவனை வேண்டிக் கொள்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தொடர்ந்து எழுதுவது இல்லையா? அதனால் பதில் கொடுக்கப் பதிவுப்பக்கம் வர முடிவதில்லை. :(

      Delete
    2. நன்றி கமலா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தொடர்ந்து எழுதுவது இல்லையா? அதனால் பதில் கொடுக்கப் பதிவுப்பக்கம் வர முடிவதில்லை. :(

      Delete
  2. தமிழை - தமிழ்த் தாத்தாவை நினைவுகூர்வோம் அன்புடன், மரியாதையுடன்.

    ReplyDelete
  3. இன்று காலை சீமான் பிராமணர்களுக்கு 7 சீட் ஒதுக்கி இருந்தது பற்றி கொடுத்த பேட்டியில் தமிழ்த்தாத்தா பற்றியும் பேசி இருந்ததைக் கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம். த.வெ.க. கட்சியில் கூட 3 எம் எல் ஏக்கள் பிராமணர்கள் என முகநூல் செய்திகள் சொல்கின்றன. யார் வந்து என்ன? தமிழகத்துக்கு நல்ல காலம் என்பது விதிச்சிருந்தால் நல்லதே நடக்கும்.

      Delete
  4. தமிழ்த் தாத்தவை நீங்களும் மறக்காமல்,எங்களுக்கும் நினைவூட்டியதற்கு மனமார்ந்த நன்றி. சீவக சிந்தாமணியை புரிந்து கொள்ள உ.வே.சா. எடுத்த முயற்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தி, அவர் மீது மரியாதையை அதிகரிக்கிறது.
    சீவக சிந்தாமணியை இன்ப நூல் என்பார்கள் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். romantic/erotic கருத்துகள் சீவக சிந்தாமணியில் நிறையவே உண்டு. ஆனாலும் கடைசியில் நாயகன் (சமண மதம்) துறவறத்தைத் தழுவிகின்றான். அதுதான் ஹைலைட்டே! கம்பரின் சிருங்கார வர்ணனைகள் பலவற்றில் சீவக சிந்தாமணியின் தாக்கம் இருப்பதாகச் சிலர் சொல்வார்கள்.

      Delete
    2. வாங்க பானுமதி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சிந்தாமணி பற்றிய கருத்துக்கும் நன்றி.

      Delete
  5. சீவக சிந்தாமணி – தமிழ் இலக்கியத்தின் ஒரு அழகான, பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட காப்பியம்.
    தமிழ்த்தாத்தா உ.வே. சுவாமிநாத அய்யர் – அதை மறைவிலிருந்து மீட்டெடுத்த மறக்க முடியாத நாயகன்.
    ---- ஒரு பக்கம் காப்பியத்தின் பெருமை
    ---- இன்னொரு பக்கம் அதை உயிர்ப்பித்த மனிதரின் உழைப்பு
    இரண்டும் சேர்ந்து தான் நம் தமிழ் பாரம்பரியம் இன்றும் வாழ்கிறது.
    நீங்களாவது வருடா வருடம் அவரை மறக்காமல் (நாங்களும் அதனால் மறக்காமல் இருக்கிறோம்) பதிவு போடுகிறீர்கள். "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்று முழங்கும் திராவிட மாடல் அரசு அவருக்கு என்றாவது மரியாதை செய்ததுண்டா?

    ReplyDelete
    Replies
    1. சீவகசிந்தாமணியைப் படிச்ச நினைவு எனக்கு இல்லை திரு சூர்யா! ஆகவே அதன் உள்ளடக்கம் பற்றிச் சொல்வதற்குத் தெரியவில்லை. இணையத்தில் கிடைச்சால் பார்த்துப் படிக்கணும். மற்றபடி தமிழ்த்தாத்தா வகையில் எங்கள் உறவினர் ஒருத்தர் உண்டு. அவர் பெயர் பாரதி என நினைவு. ஆனால் பார்த்தே பல்லாண்டுகள் ஆகிவிட்டன.96 அல்லது 97 இல் பார்த்தேன் ஒரு கல்யாணத்தில்.

      Delete
  6. சீவக சிந்தாமணிக்காக சமண சமயத்தில் ஒழுகுபவர்களிடம் அவர் அர்த்தங்கள் கேட்டுத் தெளிவு பெற்றதை எழுதியிருப்பார். எவ்வளவு பெரிய முயற்சி.

    நல்லவேளை ஆங்கிலேயர்கள் இருந்ததால், இவரது புகழ் வெளியே தெரிந்தது (அதாவது அவருக்கு மஹோ மஹோ பாத்தியாய என்ற விருது). நம் ஆட்சியாளர்கள் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள்.

    அப்போதிருந்த நடைமுறையில், பள்ளிகளில் தமிழ் ஆசிரியருக்குத்தான் மிகக் குறைந்த சம்பளமாம் (50 ரூ அதிகபட்சம்). மற்ற ஆசிரியர்களுக்கு 100-200 ரூ என்று சம்பளமாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை. ஆங்கிலேயரும் பெரிசா ஒண்ணும் பண்ணலை தமிழ்த்தாத்தாவுக்கு. ஆனாலும் கும்பகோணம் கல்லூரியில் இருந்தார்னு சொல்லிக் கேள்வி. பின்னர் சென்னைக்கு வந்ததும் அங்கே இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிகளுக்கு ஓரளவு உதவி தியாகராஜச் செட்டியார் மூலம் கிடைத்தது என்பார்கள். என்றாலும் மனதில் எந்தக் குறையும் இல்லாமல் தன் காலத்தை ஓட்டி இருக்கிறார். கலைமகள் பத்திரிகை ஆரம்பிச்சவங்களும் தமிழ்த்தாத்தாவின் எழுத்துக்களைப் பிரசுரம் செய்தது. கி.வா.ஜ.வும் ஒரு காரணம்.

      Delete
    2. தமிழ்த்தாத்தா காலத்தில் எப்படியோ தெரியாது. ஆனால் என் அப்பா 1956 களில் மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஹிந்தி கற்பிக்கும் ஆசிரியர் ஆனார். அப்போல்லாம் ஆறாம் வகுப்பில் இருந்து (ஃபர்ஸ்ட் ஃபார்ம் என்போம். நானெல்லாம் ஃபார்மில் தான் படிச்சேன்) எட்டாம் வகுப்பு (தேர்ட் ஃபார்ம் வரைக்கும் ) ஹிந்தி கட்டாயப்பாடம். இன்னும் சில பள்ளிகளில் பதினோராம் வகுப்பு (சிக்ஸ்த் ஃபார்ம் வரை) வைச்சிருந்தாங்க. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். அந்த வகையில் அப்பாவுக்கு இந்த எஸ்.எஸ்.எல்.சி பரிட்சைப் பேப்பர்கள் எல்லாம் வருஷம் 2 முறை திருத்துவதற்காக வீட்டுக்கு வரும். அதுக்குத் தனி சம்பளம். அதோடு அப்பா வேலை பார்த்தது மானேஜ்மென்ட் பள்ளி என்பதாலும் சம்பளம் அப்போவே நிறையத் தான் இருந்தது. 200ரூ அல்லது 250 ரூ இருந்திருக்கலாம். நான் குழந்தை (ஹிஹிஹி) என்பதால் அம்புட்டு விபரம் தெரியலை.

      Delete
    3. பின்னால் பக்தவத்சலம் முதல்வராக இருந்தப்போ இந்த மானேஜ்மென்ட் பள்ளிகளை எல்லாம் அரசு எடுத்துக் கொண்டது. அப்போ அப்பாவின் சம்பளம் வாங்க்ய சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது. அந்தச் சமயம் ரொம்பக் கஷ்டப்பட்டோம். ஊரிலிருந்து குத்தகைப்பணம் வந்ததாலும் கையில் இருந்த சேமிப்பினாலும் வண்டி ஓடியதுனு சொல்லலாம். என்றாலும் அப்பா என்னமோ அப்போ ஆரம்பித்தச் சிக்கன நடவடிக்கையைக் கடைசிவரை பின்பற்றினார். :)))) அவருக்கு அது வசதி! பின்னால் நம்ம தீராவிடர்கள் ஆட்சிக்கு வந்ததும் அதுவும் மு.க. வந்தப்போப் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் எக்கச்சக்கமாக எகிறியது. அதற்கு உண்மையில் வேறு காரணம் சொன்னாலும் எங்க அப்பா மாதிரியான ஆசிரியர்களுக்குப் புல்லுக்கும் ஆங்கே பொசிந்தது. பணி ஓய்வு பெற்றதும் நல்ல பென்ஷன் கூட அப்பாவுக்கு வந்தது. இதுவே மானேஜ்மென்ட் பள்ளி எனில் பென்ஷன் கிடைச்சிருக்காது. இப்போல்லாம் ஆசிரியர்கள் பணி ஓய்வுக்குப் பின்னர் வாங்கும் பென்ஷன் 20,000 ரூபாய்க்கு மேல் இருந்தது. இன்னும் இருக்கலாம். தற்கால நிலவரம் தெரியலை.

      Delete