எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 13, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம்- 2


கண்ணன் தன் கைகளில் கொண்டு வந்திருந்த ஒரு புஷ்பமாலையை ராதையின் கழுத்தில் போட்டான். ராதை கண்ணனிடம், “கானா, நாம் உண்மையாக எப்போது திருமணம் செய்து கொள்வோம்?” என்றாள். “இதோ, நமக்குத் திருமணம் ஆகிவிட்டது. காந்தர்வ விவாஹம்” என்றான் கண்ணன் சிரித்துக் கொண்டே. “ அட, போ கானா, நீ என்ன பெரிய அரசகுமாரனா என்ன, காந்தர்வ விவாஹம் என்று சொல்ல?” கண்ணன் சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “ஒருவேளை, நான் அரசகுமாரனாய் இருந்திருந்தால்?” என்றான் அவளைப் பார்த்து. பெருமூச்சுவிட்டாள் ராதை. “நீ எப்போவுமே எனக்கு ஒரு அரசன் தான். என் ராஜா நீதான் கண்ணா. நீ எனக்குக் கோவிந்தனும் கூட. பசுக்களை மேய்க்கும் இடையனாக நீ எப்போதும் இங்கேயே என்னருகில் இருந்தால் அது போதும் எனக்கு.” கண்ணனின் புருவங்கள் நெரிந்தன. “ராதை, இதைக் கேள், நான் ஒரு மாடுகள் மேய்க்கும் இடையன் அல்ல. நான் ஒரு அரசகுமாரன். நீ ஒரு அரசகுமாரி. “ கண்ணன் உண்மையாகப் பேசுவது அவன் குரலில் தெரிந்தது. ராதையோ கண்ணனின் முகத்தையும், கண்களையும் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தினாள். “””””””ம்ம்ம்ம்ம்ம்?? அப்படிப் பார்க்காதே, ராதை. நாளைக்காலை நான் மதுரா செல்கிறேன் என்பதும், எப்படியும் சில நாட்களுக்காவது என்னால் வரமுடியாது என்பதும் நீ அறிவாய் அல்லவா?” ராதை அவசரம் அவசரமாய் மறுத்தாள். இல்லை, இல்லை, என் கானா வந்துவிடுவான். “கானா, நீ திரும்பி வந்துவிடுவாய், எனக்காக, உன் ராதைக்காக. “

“ராதை, கேள், நான் உன்னை இங்கே தனிமையில் அழைத்துவந்ததன் உண்மையான காரணமே யாருக்குமே தெரியாத ஒரு ரகசியத்தைக் கூறுவதற்குத் தான். எப்படி இருந்தாலும் ஒரு நாள் அனைவருக்கும் தெரியத் தான் போகிறது. யாதவகுலம் அடிமைத் தளையில் மூழ்கிப் பலவருஷங்களுக்கு மேல் ஆகிறது. நாரதமுனிவரின் தீர்க்கதரிசனத்தின்படி, நான் ஒருவன் மட்டுமே அந்தத் தளையை உடைக்கப் போகின்றேன். “ ராதை நடுங்கினாள். கண்ணனை இறுகக் கட்டிக் கொண்டாள். “என்ன சொல்கிறாய் , கானா? நீ சொல்லுவதற்கெல்லாம் என்ன அர்த்தம்?”

“ராதை, நாரத முனிவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் தேவகனின் மகளும், யாதவ இளவரசியும் ஆன தேவகியின் எட்டாவது குழந்தை , அந்தப் பரவாசுதேவனின் அம்சமாய்ப் பிறந்து யாதவகுலத்துக்கே ஒரு பெருமையைக் கொண்டு வந்து அவர்களின் அடிமைத் தளையையும் உடைப்பான். கம்சனை இந்தக் குழந்தையே கொல்லுவான்.”

“ம்ம்ம்ம்., ஏதோ சொல்லுவாங்க, கேட்டிருக்கேன். “ ராதை கொஞ்சம் அலட்சியமாகவே பதில் சொன்னாள்.
“நான் அந்த எட்டாவது குழந்தை!” கண்ணன் அமைதியாகச் சொன்னான்.

ராதைக்கு அதிர்ச்சி. கண்ணனைக் கட்டி அணைத்திருந்த அவள் கைகள் தானாய்த் தளர்ந்தன. “என்ன???” அதிர்ச்சியும், பயமும் அவளை ஆட்டிப் படைக்கக் கண்ணனை விட்டு விலகினாள். “நீ, நீ, இளவரசனா?”

“ஆம் , என்னைப் பெற்ற தந்தை வசுதேவரால் நான் கோகுலத்துக்குக் கொண்டுவரப் பட்டேன். நான் பிறந்த அன்றே நந்தனின் கைகளில் என் தந்தையான வசுதேவரால் ஒப்படைக்கப் பட்டேன். ம்ம்ம்ம் மேலும் கேள். பலராமன், என் சகோதரன், உண்மையில் ரோஹிணியின் பிள்ளையே அல்ல. அவனும் என் தாய் தேவகியின் பிள்ளைதான். ஏழாவது பிள்ளை அவன். வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த எனக்கு மூத்த சகோதரன் அவன்.”

வசுதேவர்??? நம் மரியாதைக்குகந்த இளவரசர்??””” எனில் நீ??”””

கண்ணன் மெளனமாய்த் தலையை ஆட்டினான். கம்சனின் கைகளில் இருந்து தப்பவேண்டியே இருவரையும் இங்கே வளர்க்க நேர்ந்ததாகவும் சொன்னான். “இப்போது கம்சன் தநுர் யாகம் செய்யப் போவதாயும், அதற்கு வரவேண்டும் எனவும் எங்களை அழைத்துள்ளான். இவ்வாறு அழைத்து எங்களைக் கொல்லவேண்டும் என்பதே அவன் திட்டமாய் இருக்கலாம். “

ராதைக்கு அனைத்தையும் கேட்கக் கேட்க மயக்கமே வந்தது. மேலும் கம்சனின் கொடுமைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால் கண்ணனுக்கு கம்சனால் ஏற்படப் போகும் தீங்கை நினைத்தும் கவலை கொண்டாள். அதை வெளிப்படையாய்க் கண்ணனிடம் சொல்லவும் சொன்னாள். கண்ணன் அவளுக்கு ஆறுதல் மொழிகள் சொன்னான், என்றாலும் சமாதானம் அடையாத ராதை, “கம்சன் உன்னைக் கொல்ல வந்தால் எப்படித் தப்பிப்பாய் கானா?” என்று கேட்டாள். கண்ணன் உறுதியோடும், தெளிவோடும் சொன்னான்:” கம்சனால் முடியாது. அனைவரும் சொல்லுகின்றனர், நான் தர்மத்தை நிலைநாட்டவே பிறந்திருப்பதாய். மேலும் கேள் ராதை, சில நாட்களாகவே என்னுள்ளும் மாற்றங்கள் என்னை அறியாமலே நிகழ்ந்து வருகின்றன. எனக்கும் நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது, நாம் செய்யவேண்டிய வேலைகளும், போகவேண்டிய தூரமும் நிறைய இருக்கின்றன என்றும், தர்மத்தை நான் பாதுகாப்பேன் என்றும் யதுகுலத்தின் மேன்மைக்குக் காரணம் ஆவேன் என்றும், கம்சனின் அடிமைத் தளையில் இருந்து யாதவர்களை விடுவிப்பேன் என்றும் நம்பிக்கை பிறந்துள்ளது.”

ராதைக்கு எதுவும் பேசத் தோன்றாமல் வாயை மூடி, மூடித் திறந்தாள். அவளுக்குத் துயரம் கட்டுக்கடங்காமல் போனது. பெரியதொரு விம்மலுடன் கண்ணனை அணைத்தவண்ணமே, “உன்னை அங்கே போகவிடாமல் தடுக்கக் கூடிய சக்தி ஏதேனும் இருக்கிறதா கானா?” என்று கேட்டாள். கிருஷ்ணனுக்கும் மனம் வேதனையாகவே இருந்தது. சற்று நேரம் எதுவும் பேசவில்லை. பின்னர்” இல்லை, ராதை இல்லை. அப்படி எந்த சக்தியும் இல்லை. நான் மதுரா சென்றே ஆகவேண்டும். அங்கே நடக்கப் போகும் நிகழ்வுகளுக்கு என்னை நான் தயார் செய்து கொண்டே ஆகவேண்டும். இது என்னுடைய தர்மம். என்னுள் நானே கேட்டுக் கொள்வதும் உண்டு, நம்மால் முடியுமா என. ஆனால் இப்போது சர்வ நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது, இது என்னால் மட்டும் தான் முடியக் கூடிய ஒன்றென.”

“ஆனால் கானா, என் நிலைமை?? என்னைப் பற்றி என்ன முடிவு செய்துள்ளாய்?” பெரும் கேவலுடன் கேட்ட ராதை கட்டுக்கு அடங்காமல் அழ ஆரம்பித்தாள். “ நீ இல்லாமல் என் வாழ்க்கை பாலைவனம் ஆகிவிடுமே கானா?? நான் ஊமையாகிவிடுவேனே! என்னால் பார்க்கவும் முடியுமா? கேட்கும் திறன் இருக்குமா என்னிடம்?? போகாதே, கானா, போகாதே, அந்தக் கம்சனால் உனக்குக் கேடு விளைந்துவிடும். ஏதோ நடக்கப் போகிறதோ என என் மனம் அஞ்சுகிறது கானா!”



“ராதா, பயப்படாதே! என்னைப் பற்றியும் கவலை கொள்ளாதே! கம்சன் அழிந்து நம் யாதவ குலம் கொடியவனிடமிருந்து விடுதலை பெற்றுவிடும். நீ தனியாகவெல்லாம் இருக்கமாட்டாய் ராதை. நான் என் கடமை முடிந்ததும், திரும்பி வருவேன், அல்லது உன்னை அழைத்துக் கொள்ள முயல்கிறேன். என் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியே நீ தான், நீ இருப்பதுதான், இப்போது போல் எப்போதும் நீ ஒருத்தியே என் வாழ்வின் அனைத்து மகிழ்வுக்கும் காரணம் ஆவாய்!”

சற்று நேரம் பேசாமல் இருந்த ராதை தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் ஆரம்பித்தாள்:”கானா, நீ மதுரா சென்று கம்சனை வென்றுவிடுவாய், எனக்குத் தெரியும், நீ ஒரு கடவுளுக்கு ஒப்பானவன் என. அங்கே அனைவரும் உன்னைப் பெரிய சக்கரவர்த்தியாகவும் ஆக்குவார்கள். நீ மிக மிகப் பெரிய மனிதனாகிவிடுவாய். இவ்வுலகின் அனைத்து மக்களும் உன் அடி பணியக் காத்திருப்பார்கள் கானா. நீ ஒரு ஒப்பற்ற மாபெரும் சக்கரவர்த்தியாக நம் தேசத்து இளவரசர்களுக்கும், அரசர்களுக்கும் நடுவே காட்சி அளிப்பாய்!”

“ஆம் ராதை, அப்போதும் நீ தான் என் ராணி! என் வாழ்வின் பிரிக்கமுடியாத ,என்னை விட்டு இணை பிரியாத ஒரு தோழியாகவும் நீயே இருப்பாய்!”

Saturday, October 10, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம்!

செய்தி காட்டுத் தீபோல் பரவியது விருந்தாவனத்தில். ஆண்,பெண், குழந்தைகள், முதியோர் அடங்கலாய் அனைத்து விருந்தாவனவாசிகளும் ஒருவரை பார்த்துக் கொள்ளும்போது கேட்பது இதுவே! “கம்சன் அழைப்பு அனுப்பி இருக்கிறானாமே? நந்தனுக்கு?? அதுவும் கிருஷ்ணனையும், பலராமனையும் அழைத்துவரச் சொல்லி இருக்கிறானாமே?? கப்பம் வேறே கொண்டுவரச் சொல்லி இருக்கிறான். அது சரி, அது நியாயம் தான். கம்சன் போன்றவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது. ஆனால் ஏதுமறியா இந்தப் பாலகர்களை எதுக்கு அழைத்துவரச் சொல்லுகிறான்?? வேண்டுமானால் விருந்தாவன வாசிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ளலாமாம். “

ஆமாம், ஆமாம், அப்படித் தான் சொல்கிறார்கள். ஏதோ தநுர்யாகமாம். கம்சன் பனிரண்டு வருஷம் போர்க்களத்தில் இருந்து வெற்றி கண்டு திரும்பிதற்கு நடத்துகிறானாம். வீரப் போட்டிகளெல்லாம் இருக்காமே. அக்ரூரர் கூட வந்திருக்கிறாராம் அழைக்க.””

“என்ன அக்ரூரர் வந்திருக்கிறாரா? அப்படி எனில் நந்தனிடம் என்ன சொன்னாராம்?”

“தெரியலை, ஆனால் ஏதோ விஷயம் இருக்கு இதிலே. நந்தனோடு மட்டும் பேசலை அக்ரூரர். அவர் பேசும்போது கிருஷ்ணனும், பலராமனும் கூட இருந்திருக்கின்றனர். பேசிட்டு வெளியே வரும்போது நந்தன் முகம் பார்க்கச் சகிக்கவில்லையாமே!”

“அட, அது யசோதை படவேண்டிய கவலை அல்லவோ?” குறும்புக்கார இளைஞன் ஒருவன் சொன்னான்.

பேசினவன் கத்த ஆரம்பித்தான். “உங்களுக்கெல்லாம் எப்போ விளையாடணும்னு தெரியாதா? ஏதோ முக்கிய விஷயமாய்க் கம்சன் நந்தனை வரச் சொல்லி இருக்கான். இன்னிக்குச் செய்தி வந்ததும் நந்தன் தன் ஆட்களை அழைத்துப் பிரயாணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி இருக்கின்றார். ஆனால் நந்தனுக்குப் பிரயாணத்தில் அவ்வளவு விருப்பம் இல்லை போல் தெரிகிறது. மனதில் சந்தோஷமே இல்லாமல் கப்பம் கட்டுவதற்காக நெல்லையும், பொன், மணி திரவியங்களையும், பசுக்களையும் சேகரிக்கிறார். யசோதை அம்மா அழுத வண்ணமே இருக்கிறாள். “

அனைவர் மனதிலும் வெறுமை சூழ்ந்துகொண்டது. கவலையிலும், குழப்பத்திலும் கனத்திருந்த மனதோடு அனைவரும் தூங்காமல் மேற்கொண்டு என்ன நடக்கும் என்பது பற்றிய பேச்சில் ஆழ்ந்தனர். அன்றைக்கு முழுநிலவு வானில் ஜகஜ்ஜோதியாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. யமுனை ஆற்றின் வெண்ணிற மணலோடு போட்டி போட்டுக் கொண்டு நிலவின் பிரகாசம் வெள்ளிமயமாய் ஜொலித்தது. நீலக்கடல் தன் நீல நிறத்தைக் கருநீலமாய் மாற்றிக் கொண்டிருந்தது. பூமித்தாயானவள் கருநீலப் பட்டில் வெள்ளி ஜரிகை இழையோட, புடைவையில் அங்கங்கே வெள்ளி நக்ஷத்திரங்கள் பளிச்சிட, பச்சை வண்ண ஜாக்கெட் அணிந்து காட்சி அளித்தாற்போன்ற தோற்றம். யாருக்கும் இந்த அதி அற்புதமான இயற்கையின் தோற்றத்தில் மனம் செல்லவில்லை. நிலவொளி வீணாகிக் கொண்டிருந்ததோ என்னும் எண்ணம் எழுந்தது சிலருக்கு. அப்போது அந்த நிலவொளியை நிரப்புவது போல், அங்கங்கே கிசுகிசுவெனப் பேசிக் கொண்டிருந்த சில குரல்களையும் மீறிக் கொண்டு, ஒரு புல்லாங்குழலின் இனிய கீதம் கேட்டது. நம் கண்ணனைத் தவிர வேறு யார் இப்படிப் புல்லாங்குழல் ஊதமுடியும்? அனைவரும் துள்ளிக் குதித்தனர். உண்மையில் விருந்தாவனமே துள்ளிக் குதித்தது என்னலாம்.

அந்த இனிய இசையில், இளைஞர்களும், இளம்பெண்களும் மட்டுமில்லை, மொத்த கோபர்களும், கோபிகளுமே தங்களை இழந்தனர். அனைவரும் அவரவர் இருந்த கோலத்திலேயே யமுனைக்கரைக்குக் கண்ணன் இருக்குமிடம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். “ராஸ்” ஆடுவதற்கான அணிகலன்களைப் பற்றியோ, உடையைப் பற்றியோ கவலைப்படும் நேரம் இதுவல்ல. இப்போது நம் கண்ணன் நம்மைவிட்டுப் போகப் போகிறான். இந்த இரவே கடைசி இரவாகிவிடுமோ?? ஒருவராலும் பதில் சொல்லமுடியாத கேள்வியாக இருந்தது இதுவே. ஆகவே கண்ணனின் ஒவ்வொரு செயலிலும் பங்குபெறத் துடிக்கும் உள்ளத்தோடு அனைவரும் யமுனைக்கரை நோக்கிச் சென்றனர். ராதையும் கேட்டாள். ஏற்கெனவே கண்ணன் மதுரா செல்லப் போகின்றான். கம்சனின் அழைப்பு வந்திருக்கிறது என்று தெரிந்து தன் இதயத்தைத் தானே தின்று கொண்டிருந்தாள் ராதை. ஒவ்வொரு கணமும் செய்வதறியாது துடித்த அவள் காதுகளில் கண்ணனின் இனிய புல்லாங்குழல் கீதம் கேட்டது. ஆஹா, என் கானா, கானா, நாளை விடிவதற்குள்ளாகக் கிளம்பிவிடுவானோ? அடுத்த கணம் ராதை துள்ளி எழுந்தாள். எழுந்த வேகத்தில் அவள் கைவளைகள் நொறுங்கிவிடும்போல் சப்தித்தன. தலை மயிர் பறக்க, மேலாடை காற்றில் வீச ராதை யமுனைக்கரையை நோக்கி ஓடினாள்.

அனைவரும் யமுனைக்கரையில் கூடிவிட்டனர். அனைவருமே ஒற்றுமையாகத் தாளம் போட்டுக் கொண்டு ஆடவும் ஆரம்பித்தனர். கொலுசு அணிந்தவர்கள் காலில் அவை சப்திக்க, சலங்கைகள் பேச ஆரம்பிக்க, ஆண்களில் சிலர் தாளவாத்தியத்தை இசைக்க, அனைவரும் வட்டமாகக் கூடிக் கொண்டு ஆட ஆரம்பித்தனர். நட்ட நடுவில் கண்ணன், அவன் அருகே ராதை! சுற்றிலும் அனைவரும் தா, தை, தா, தை எனத் தாளம் தப்பாமல் ஆடினார்கள். கண்ணனின் முகத்தைவிட்டு ராதையின் கண்கள் அகலவே இல்லை. இனம் புரியாத சந்தோஷத்தை உள்ளுக்குள்ளே அனுபவிப்பவளாக அரைக்கண் மூடிக் கொண்டு ராதை ஆடினாள். அவள் கண்களுக்குள்ளாக விருந்தாவனமும் சுழன்று சுழன்று ஆடியது. யமுனைக்கரை, யமுனை நதி, ஆகாயம், பூமி அனைத்தும் சுழன்று ஆடியது. நிலவு மட்டும் ஆடாமல், அசையாமல் இந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டு சிரித்து அனுபவிப்பது போலவும், யமுனை நதி தன் மெல்லிய ஓசையால் இனிய இசையை இசைப்பது போலவும் தோன்றியது அவளுக்கு. விண்ணுலகில் இருந்து தேவாதி தேவர்களும், கின்னரர்களும், கந்தர்வர்களும் தங்கள் நடனத்தைப் பார்ப்பதாகவும் நிலவின் தண்மையான ஒளிக்கதிர்களை பூமிக்கு அனுப்பித் தங்களை ஆசீர்வதிப்பதாகவும் தோன்றியது அவளுக்கு. ஆடிய சில கோபியர் களைப்பில் அப்படியே கீழே அமர, மற்றவர்கள் சிலருக்கு மயக்கம் வந்தது. அனைவரும் அங்கேயே அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்க எண்ணியபோது கண்ணனின் புல்லாங்குழல் இசை தூரத்தில் இருந்து கேட்டது.

சற்றே திரும்பி அனைவரும் பார்க்க, கண்ணன், ராதையை அணைத்தவண்ணம் காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அனைவர் மனதிலும் துயரம் சூழ்ந்தது. நாளை??? ஆனால் அங்கே தனிமையை நாடிச் சென்ற கண்ணனுக்கோ, ராதைக்கோ இந்தத் துயரம் எழவே இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர். ராதையின் மனதில் இனம் புரியாத கலவரமும், அதே சமயம் சிலிர்ப்பாகவும் உணர்ந்தாள். “ராதை,” கண்ணன் அழைத்தான் அவளை. “இன்றைய இரவு ஒரு முக்கியமான இரவு.” என்றான் கண்ணன். “ஆம்” ராதையின் குரல் மிகவும் தீனமாய்க் கேட்டது. “நீ அழகாயும், ஓர் அரிய அற்புதமாயும் இருக்கிறாய், ராதை!” கண்ணன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். ராதை, “கானா, நீ எப்போவுமே என்னிடம் இதே அன்போடு இருப்பாயா?” என்று கேட்டாள். “இருப்பேன், ராதை, இந்த உலகில் சூரிய, சந்திரர் உள்ளவரையில் இதே அன்போடு இருப்பேன்.” என்றான் கண்ணன். “என்னை மறக்கமாட்டாயே?”
“எப்படி முடியும்? நீ இல்லாமல் எனக்கு ஏது சந்தோஷம் என்பது?” இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்தனர்.

Friday, October 09, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கம்சனுக்குத் தெரிந்துவிட்டது!

இன்னமும் யாருக்கும் வாய் திறந்து பேசமுடியவில்லை. சும்மாத் தலையை மட்டுமே ஆட்டினார்கள். கம்சன் மேலும் தநுர் யாகத்தில் இடம் பெறப் போகும் வில்லின் சிறப்பை வர்ணித்தான். அந்தவில்லை யாராலும் தனியாய்த் தூக்கமுடியாது எனவும், சில மனிதர்களால் சேர்ந்தே தூக்கமுடியும் எனவும், யாராலும் வளைத்து நாண் ஏற்றி, அம்பைச் செலுத்த முடியாது எனவும் கூறினான். மேலும் மல்யுத்தப் போட்டியில் பிரசித்தி பெற்ற மல்லன் ஆன சாணூரனும், முஸ்திகனும் தயார் செய்யப் பட்டு வருவதாயும், அவர்களை வெல்ல இனிமேல் தான் யாரேனும் பிறக்கவேண்டும் எனவும் பெருமையுடன் கூறினான். அக்ரூரர் மெளனத்தை உடைத்துக் கொண்டு கம்சனைப் பாராட்டும் விதமாய்ப் பேச ஆரம்பித்தார். “யாதவத் தலைவர்கள் எவரும் தங்கள் கடமையில் இருந்தும், தர்மத்தில் இருந்தும் பின்வாங்க மாட்டார்கள்” என்று சொல்ல ஆரம்பித்த அக்ரூரரை இடைமறித்த கம்சன், அது தான் அறிந்ததே என்றான். அக்ரூரர் மேலும் கைகூப்பிக் கம்சனை வணங்கிய வண்ணம் பேசினார்: “ இளவரசே, இந்த அரிய சந்தர்ப்பத்தில் நம் மதிப்புக்குரிய மன்னரான உக்ரசேனரே நேரில் வந்திருந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுக்கவேண்டும் என அனைத்து யாதவத் தலைவர்கள் சார்பிலும் கேட்டுக் கொள்கின்றேன்.” என்றார்.

மன்னனையும் பார்த்து, “ நான் சொல்வது சரிதானே அரசே, தாங்கள் வருவீர்கள் அல்லவா?” என்று கேட்டார் அக்ரூரர்.

செய்வதறியாது தவித்த உக்ரசேனர் அக்ரூரரின் இந்த வேண்டுகோளினால் தனக்கு ஏற்படப் போகும் விளைவை முன்கூட்டியே அறிந்து கொண்டு தவித்தார். கம்சன் ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டே, “ஏன் இல்லை, மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய என் தந்தையும் கட்டாயமாய் வருவார். அவர் நம்முடைய தலைவர் அல்லவோ?” கம்சன் குரலில் மரியாதையோ, மதிப்போ காணப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். அங்கே கனத்த மெளனம் நிலவியது. கம்சன் வாயிலை நோக்க அங்கே இருந்த மகத இளவரசன் உடனே அறையை விட்டு வெளியேறினான். கண் இமைக்கும் நேரத்தில் கம்சனுக்குப் பாதுகாப்பாய் மகத நாட்டு வீரர்கள் அவனைச் சூழ்ந்து நின்று கொள்ள, ப்ரத்யோதாவின் பின்னேயும் சில வீரர்கள் நின்றனர். மகத இளவரசன் கம்சனின் பின்னே நின்றுகொண்டான். கிழவன் பஹூகாவிற்குப் பொறுக்க முடியவில்லை.

"நம்முடைய நாட்டு விஷயங்களைப் பற்றிப் பேசும் இந்த ரகசியக் கூட்டத்திற்கு வேற்று நாட்டு வீரர்களும், இளவரசனும் எதற்கு?” எனக் கடுமையாகக் கம்சனைப் பார்த்துக் கேட்டான்.

கம்சனோ அகந்தையுடன் சிரித்தான். “இந்தத் திறமையான வீரர்களின் துணையாலேயே நான் பல வெற்றிகளைக் கண்டேன். இந்தக் கொண்டாட்டத்தில் பங்கு கொள்ளவே இவர்கள் இங்கே வந்திருக்கின்றனர். அமருங்கள் தயவு செய்து.” என்றான். “அனைவரையும் சந்தியுங்கள், இவன் வ்ருத்ரிக்னன், மிகவும் திறன் வாய்ந்த படைவீரன். பனிரண்டு வருஷங்களாய் என்னுடன் இருக்கிறான்.” என்று மேலும் கூறினான்.

“நாங்கள் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?” என்று அக்ரூரர் கம்சனைப் பார்த்துக் கேட்டார்.

“எதுவுமில்லை, இளவரசன் வசுதேவனைப் பற்றிய ஒரு விஷயம் தவிர வேறு எதுவுமில்லை.” கம்சன் மீண்டும் அகந்தைச் சிரிப்புச் சிரித்தான்.

“என்னைப் பற்றியா?” வசுதேவர் பயத்தோடு கேட்டார்.

கடினமான குரலில் கம்சன், “ஆம், உனக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் என்னிடம் கொடுக்கவேண்டும் எனச் சொல்லி இருந்தேனே உனக்கு? நினைவிருக்கிறதா? தருவதாய் நீயும் வாக்களித்தாய்? நினைவில் உள்ளதா? நான் உன்னை நம்பினேன், உன் வாக்குறுதியை நம்பினேன். நீ சொன்ன சொல்லைக் காப்பாற்றுவாய் என நினைத்தேன். ஆனால் நீயோ பொய் சொல்லிவிட்டாய். உனக்குப் பிறந்த எட்டாவது குழந்தையைத் திருட்டுத் தனமாய் கோகுலத்துக்கு மாட்டிடையத் தலைவன் ஆன நந்தனிடம் அனுப்பிவிட்டாய். எனக்குப் புரிந்துவிட்டது வசுதேவா, உன்னுடைய எட்டாவது மகன், அந்த மாட்டிடையன் நந்தனின் மகன் என்ற பெயரில் விருந்தாவனத்தில் வளர்ந்து வருகிறான். இப்படி ஒரு நம்பிக்கைத் துரோகம் நீ எனக்குச் செய்யலாமா? இது தான் நட்பின் இலக்கணமா? ஒரு க்ஷத்திரியனும், சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவனும் ஆனவனுக்கு இதுதான் தர்மமா? “


கம்சனின் அடுக்கடுக்கான கேள்விகளாலும் அவன் கடுமையான தொனியாலும் அந்த சபையில் யாருக்குமே எதுவுமே பேசத் தோன்றவில்லை. ஆனாலும் அவர்களுக்கு இது முற்றிலும் புதிய செய்தியே. உள்ளூரப் பன்னீர் தெளித்தாற்போல மனதுக்குள்ளே மகிழ்ச்சி அனைவருக்கும் வந்தது. ஆஹா, வசுதேவனின் எட்டாவது குழந்தை உயிரோடு இருக்கிறதா? நந்தனிடம் வளர்கின்றானா? அப்பாடி, ஒருவழியாய்க் கம்சனை அழிக்கப் போகின்றவன் உயிருடன் இருக்கின்றான். நாரதமுனிவரின் தீர்க்க தரிசனம் பொய்யாகவில்லை. வசுதேவரோ கோபத்துடன் புருவங்கள் நெரிய ஏதோ பதில் கொடுக்கப் போகும்போது வயதான அந்தகத் தலைவன் ஆன பஹூகா, அவரை அடக்கி, கம்சனைப் பார்த்து, “உக்ரசேனரின் மகன் ஆன நீ க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றி எங்களுக்குப் போதிக்கிறாய்? உனக்கு என்ன தகுதி அதற்கு?” என்று கேட்டார்.

கம்சனுக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது. பஹூகா இப்படிப் பளிச்சென்று பேசுவான், கேள்விகள் கேட்பான் என அவன் எதிர்பார்க்கவில்லைதான். மேலும் பஹூகா போன்ற பெரியவர்கள் பேசும்போது மற்ற யாதவத் தலைவர்கள் என்னதான் பெரிய பதவிகளில் இருந்தாலும் மரியாதை நிமித்தம் திரும்பப் பேசவும் மாட்டார்கள். ஆனால் கம்சன் அப்படியா? தன்னைத் தானே சக்கரவர்த்தி என அறிவித்துக் கொள்பவன் ஆயிற்றே அவன்? ஆகவே அவன் பஹூகாவை இடைமறித்து, " ஏன் கூடாது?” என்று கேட்டான்.

பஹூகா சொன்னான்:” கேள், உக்ரசேனனின் மகனே, கேள், உன் தந்தை திடகாத்திரமாகவும், தெம்பாகவும் இருக்கும்போது அவரைச் சிறையில் அடைத்துவிட்டு நீ அரியணை ஏறியது க்ஷத்திரிய தர்மத்தைச் சேர்ந்ததா? உன் சித்தப்பன் மகளும், உனக்குத் தங்கை முறை ஆனவளும் ஆன தேவகியையும், வசுதேவனையும் அவர்கள் திருமண நாளன்றே சிறையில் அடைத்தாயே, அது எந்த க்ஷத்திரிய தர்மத்தைச் சேர்ந்தது? ம்ம்ம்ம்… எதற்குச் சிறையில் அடைத்தாய்? உன் தங்கையின் எட்டுக் குழந்தைகளையும் கொல்வதற்கு, அதுவும் பிறந்ததுமே கொல்லவேண்டியே சிறையில் அடைத்தாய்! கேள், கம்சா, நான் என்ன இன்னும் சில வருஷங்கள் உயிருடன் இருந்தால் அதிகம். என்றாலும் நான் சிறுவனாய் இருந்தபோதில் இருந்தே மரணத்துக்குப் பயந்ததில்லை. மரணத்தின் கடவுள் எனச் சொல்லப் படும் யமனைக் கண்டு அஞ்சியதில்லை. ஆனால் நீ???? எத்தனை வருஷங்களாக உன்னிடம் சொல்லக் காத்துக் கொண்டிருந்தேன் இந்த விஷயங்களை என்பதை நீ அறிவாயா? பொறுமையாய் கேட்டுக் கொள்! நீ செய்த இத்தகைய கொடுமைகளை இதுவரையிலும் யாருமே செய்ததில்லை! யாதவ குலத்துக்கே நீ பெரும் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டாய். “

பஹூகா சற்று மூச்சு வாங்க அவகாசம் எடுத்துக் கொண்டான். பின்னர் மேலும் தொடர்ந்தான். “வசுதேவனின் எட்டாவது குழந்தையைப் பற்றி நீ ஏன் இவ்வளவு ஏன் கவலைப்படுகிறாய்??அவன் எங்கே இருந்தால் அல்லது எப்படி இருந்தால் உனக்கு என்ன? ஏற்கெனவே வசுதேவனுக்கு உன்னால் ஏற்பட்ட தொல்லைகள் போதுமானது. மேன் மேலும் நீ அவனுக்குத் தொல்லை கொடுக்க நான் அநுமதிக்கமாட்டேன்." கோபம் மீதூறிய கிழவன் கண்களில் சிவப்பேறியது.

கம்சன் கோபத்தில் தன்னை இழந்தான். தன்னன மீறி, தன் வார்த்தையை மீறி யாதவகுலத்தில் ஒருவன் பேசுவதா? அதைத் தான் அநுமதிப்பதா? தன்னை அறியாமல் அவன் கைகள் வாளை எடுக்கச் சென்றன, அவன் கண்கள் ப்ரத்யோதாவையும் வ்ருதிக்னனையும் ஒரு நிமிஷம் பார்த்து ஏதோ சைகையில் பேசின. அக்ரூரருக்கு உள்ள நிலைமை நன்கு புரிந்தது. ப்ரத்யோதாவை அவரும் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் தன் மென்மையான அதே சமயம் உறுதியான குரலில் பேச ஆரம்பித்தார். “இளவரசே, உன் கோபம் உன் விவேகத்தை வென்றுவிட இடம் கொடுக்காதே. கோபம் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒப்பானது. உனக்கு என்ன வசுதேவனின் எட்டாம் குழந்தையைப் பற்றித் தெரியவேண்டும், அவ்வளவு தானே?”

ஆம்” கம்சன் மறுமொழி சொன்னான்.


அக்ரூரர் பேச ஆரம்பித்தார். “தேவகியின் எட்டாவது குழந்தை ஒரு ஆண்குழந்தை. அவன் விருந்தாவனத்தில் இருக்கிறானா என்பது உனக்குத் தெரியவேண்டும் அல்லவா? கேள், ஆம் அவன் விருந்தாவனத்தில் தான் வளர்ந்து வருகிறான். உன்னை யாராவது இவ்விஷயத்தில் ஏமாற்றி இருந்தார்கள் என நீ எண்ணினால் அது நான் மட்டுமே. வேறு யாரும் இல்லை. நான் தான் நந்தனின் பெண் குழந்தையையும், தேவகியின் ஆண் குழந்தையையும் இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்தேன்."

“என்ன, நீங்கள் ஏற்பாடு செய்தீர்களா? ஏன், எதற்கு?” கம்சன் கேட்டான்.

அவன் எவ்வளவு முயன்றும் கோபத்தை அவனால் மறைக்கமுடியவில்லை. அக்ரூரர் சொன்னார், “நீ தேவகியின் அனைத்துக் குழந்தைகளையும் கொன்று கொண்டிருந்தாய், உன்னுடைய இந்த மூர்க்கத் தனமான, மற்றும் பாவகரமான காரியத்தில் இருந்து உன்னைக் காக்கவேண்டியே இவ்விதம் செய்தேன்." சற்றே ஏளனம் கலந்த புன்னகை அக்ரூரரிடம் தென்பட்டது. “உன்னை உன்னிடமிருந்தே காக்கவேண்டியே செய்தேன்.”

கம்சன் கேட்டான், "ஆஹா! அதுவும் அப்படியா?? எனில், நந்தனின் மகன் கிருஷ்ணன் தான் தேவகியின் எட்டாவது குழந்தை என்பதும் உண்மையா?”

“ஆம்”

கம்சனுக்குள்ளே அவனையும் அறியாமல் ஒரு பீதி பரவியது. முதுகுத் தண்டு சில்லிட்டது. கடைசியில் அவனை அழிக்கப் போகின்றவன் பிறந்து வளர்ந்து காத்திருக்கிறான். எந்நேரமும் வந்துவிடுவான். எப்படி, என்று, எந்த ஆயுதத்தால் கொல்லப் போகின்றான்? உண்மையாகவே கொன்றுவிடுவானோ? அல்லது எல்லாரும் மிகைப்படச் சிந்திக்கின்றார்களா? என்ன இருந்தாலும் நமக்கும் ஒரு பகைவன் இருக்கிறான் என்றால் அவனை அழித்தால் ஒழிய நிம்மதி இல்லை. மிகவும் சிரமப் பட்டு தன் கலக்கத்தை மறைத்துக் கொண்டான் கம்சன். அக்ரூரரைப் பார்த்து சிரித்தான். “அக்ரூரா, நான் என்ன அவ்வளவு மோசமானவனா என்ன?? அதெல்லாம் கடந்த காலக் கதையப்பா. நான் அனைத்தையும் இப்போது மறந்தே விட்டேன். நீயும் மறந்துவிடு நண்பா. சரி, அதைவிடு, தேவகியின் பிள்ளை உயிருடன் இருக்கிறான் என்றால் நான் அவனை இங்கே வந்து இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.”

“ஏன் அவன் இங்கே வரவேண்டும் என விரும்புகிறாய்?” அக்ரூரர் கேட்டார்.

“ அவன் வரட்டும், வந்து இந்த தநுர் யாகத்தில் கலந்து கொள்ளட்டும். அவனுடைய திறமையையும், சாதனைகளையும் பற்றிக் கதை, கதையாய்ச் சொல்லுகின்றனர். நான் அனைத்தையும் கேட்டிருக்கிறேன். என்னுடைய தநுர்யாக வில்லை அவனால் எடுக்கவாவது முடிகிறதா என நான் பார்க்கவேண்டும். மல்யுத்தம் தெரியுமாமே அவனுக்கு? இங்கே மல்யுத்தத்திலும் பங்கு பெறட்டும் அவனும். ம்ம்ம்ம்ம்ம் அனைத்து மக்களும் சொல்லுவது போல் அவன் அவ்வளவு சிறந்தவனாகவும், அதிசயமானவனாயும் இருந்தால் இந்த மல்யுத்தத்தில் ஜெயிப்பதோ, தநுர்யாகத்தின் வில்லைக் கையாளுவதோ அவனுக்குச் சிரமமாய் இருக்காது.”

“இதில் ஏதோ சூது இருக்கிறது என நினைக்கிறேன் இளவரசே!” என்று உடனேயே பஹூகா சொல்ல, “என்ன சூது? எதுவும் இல்லை!” எனக் கம்சன் மறுத்தான். “நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். நீங்கள் தந்தையே?” எனத் தன் தந்தை உக்ரசேனரைப் பார்த்துக் கேட்டான் கம்சன். மற்றத் தலைவர்களுக்குக் கம்சனின் இந்த அசாதாரணமான நன்னடத்தையில் சந்தேகமாகவே இருந்தாலும் அக்ரூரரின் செயல்களிலும் சொற்களிலும், அவர் கம்சனைக் கையாளும் விதத்திலும் நம்பிக்கை வைத்துப் பேசாமல் இருந்தனர். “அந்த சர்வேஸ்வரன் அனைவருக்கும் நன்மையே செய்வான்.” என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டான் உக்ரசேனன்.

அக்ரூரரைப் பார்த்துக் கம்சன், “ அக்ரூரரே, நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டுமே, அந்தக் கிருஷ்ணனை இங்கே அழைத்துவா, அப்படியே அந்த ரோஹிணிக்கு ஒரு மகன் இருக்கிறானாமே, பலராமன் என்ற பெயரில். அவனும் வரட்டும். அவனும் கிருஷ்ணனும் இணை பிரியாமல் இருப்பார்களாமே? இருவரும் வந்து தநுர்யாகத்தில் பங்கெடுக்கட்டும். அப்படியே நந்தனையும் அவனுடைய வீரர்களையும் வந்து யாகத்தில் பங்கு கொள்ளச் சொல். ஆ, மறந்தே விட்டேனே, இந்த வருஷக் கப்பம் நந்தன் இன்னும் கொடுக்கவில்லை. அதையும் நினைவூட்டு. என்ன வசுதேவா, நான் சொல்வது சரிதானே?”

அக்ரூரர் இடைமறித்து, “இளவரசே, நான் நேரே விருந்தாவனம் சென்று, அவர்கள் இருவரையும் இங்கே அழைத்து வருகிறேன்.” என்றார்.

Thursday, October 08, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சனின் தந்திரம்!

இருபத்தைந்து வருஷங்களுக்கு மேலாக மதுராவையும் சுற்றுப் புறங்களையும் ஆட்சி
செய்து வந்த கம்சன் ஒருமுறை கூட இம்மாதிரி யாதவ குலப் பிரிவுகளின் தலைவர்களை அழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தியதில்லை. அவன் தந்தையான உக்ரசேனர் முக்கியமான காலகட்டங்களில் தங்கள் குலத் தலைவர்களோடு கலந்து ஆலோசிப்பது உண்டு. ஆனால் கம்சன் அனைத்துப் பிரிவுத் தலைவர்களையும் உதாசீனமே செய்துவந்தான். சிலரைக் கொன்றும் இருக்கிறான். இப்போது கம்சனிடமிருந்து அழைப்பு அதுவும் ஆலோசனைக் கூட்டத்துக்கு எனத் தெரிந்ததுமே அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த திகைப்பு. யாருக்கும் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவர்களுக்குள் பெரியவர்களையும், மூத்தவர்களையும் கலந்து ஆலோசித்தனர். அக்ரூரரையும், வசுதேவரையும் கூட அவ்வாறு சிலர் கலந்து ஆலோசித்தனர் . பல வருடங்கள் அஸ்வமேத யாகக் குதிரையோடு கம்சன் சென்றிருந்தபோது அவர்களில் பலரும் தங்களுக்குள்ள உரிமையையும், செல்வத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டிருந்தனர். சொல்லப் போனால் சிலர் கம்சனை விடப் பலத்தோடும், செல்வத்தோடும் இருந்தனர். ஆனால் அது கம்சனுக்குத் தெரியாவண்ணமும் பாதுகாத்துவந்தனர். இப்போது கம்சன் திரும்பிவிட்ட இவ்வேளையில், தங்கள் அதிகாரமும், செல்வமும், படைபலமும் தங்களிடமிருந்து எந்நாளில் பறிக்கப் படுமோ என்று ஒருவித பயங்கலந்த எதிர்பார்ப்புடனே இருந்தனர்.

தநுர் யாகம் என்ற பெயரில் கம்சனால் அறிவிக்கப் பட்டிருந்த வீரப் போட்டிகளில் பங்கு பெறும் அவர்களின் வீரர்கள் அனைவரும் மறைமுகமாய் வீழ்த்தப் பட்டு கம்சனின் புதிய வீரர்களால் பெருமளவில் கொல்லப் பட்டு வந்தனர். அதுவும் ப்ரத்யோதா என்னதான் பொல்லாதவனாய் இருந்தாலும் அவனும் ஒரு யாதவத் தலைவன். அவனால் காவல் செய்யப் பட்டு வந்த கம்சனின் மாளிகைக் காவலை இப்போது மகத நாட்டுத் தளபதி ஆன வ்ருத்ரிக்னன் ஏற்றிருக்கிறான். மாளிகை முழுதும் மகத வீரர்கள் இப்போது. ஏதோ சதிவேலை நடக்கிறது. கம்சன் மறைமுகமாய் ஏதோ சூழ்ச்சி செய்கின்றான். அனைத்துத் தலைவர்களும் இவ்வாறே நினைத்தனர். எவ்வளவு தூரம் கம்சன் போகின்றான் என்று பார்க்கலாம் என்றும் நினைத்தனர். ஆலோசனைக் கூட்டத்துக்குக் கம்சன் அழைத்த நேரத்துக்கு அனைவரும் வருகை தந்தனர். கிட்டத் தட்ட ஐம்பது தலைவர்கள் பூரண ஆயுதங்கள் தரித்து போர்க்கோலத்தோடேயே வருகை தந்தார்கள். மகதநாட்டு வீரர்களின் நடமாட்டத்தைக் கம்சனின் மாளிகையில் பார்த்ததுமே தங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதையும் அனனவரும் புரிந்து கொண்டனர். பல வருடங்களாக தனி மாளிகையில் சிறை வைக்கப் பட்டிருந்த அரசன் உக்ரசேனனும் கொஞ்சம் தர்மசங்கடத்தோடும், கவலையும் பயமும் ஆக்கிரமிக்க தன் மகன் ஆன கம்சன் அருகே வீற்றிருந்தான். உக்ரசேனன் வெளி மனிதர்களைப் பார்த்தே பல வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வெறுமையான பார்வையோடு சூன்யத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் உக்ரசேனன். கைகள் நடுங்க, உதவிக்குச் சிங்காதனத்தின் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

உக்ரசேனனுக்கு அடுத்து அமர்ந்திருந்த பஹூகா என்னும் யாதவத் தலைவனுக்குத் தொண்ணூறு வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ப்ரத்யோதாவின் தாத்தாவான அவன் உக்ரசேனனுக்கு மாமாவும் ஆவான். குடும்பத்தின் மூத்த தலைவன் பஹூகாவே. உண்மையின் தன் மாமனின் வரவை உக்ரசேனன் மட்டுமல்ல மற்றத் தலைவர்களும் எதிர்பார்க்கவே இல்லை. பஹூகா ஒரு சிவபக்தன். எந்நேரமும் சிவவழிபாடுகள் செய்வதில் ஆழ்ந்திருப்பவன். கம்சனை அவன் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. தான் உண்டு, தன் சிவ வழிபாடு உண்டு என்றே இவ்வளவு வருஷங்களாய் இருந்தான். இத்தனை வருஷங்களுக்குப் பின்னர் வருகை புரிந்திருக்கும் இந்த வயது முதிர்ந்த பஹூகாவின் உடல் ஒரு இரும்புக் கம்பியைப் போல் இன்னமும் விறைப்பாகவே இருக்கிறதே! வயதானதின் முதுமை சுருங்கிய முகத்தில் மட்டுமே தெரிகிறது. கண்களும் பளிச்சிடுகின்றனவே! அனைவரையும் தனித்தனியாக அடையாளம் கண்டு விசாரிக்கின்றானே! இத்தனையிலும் அனைத்துத் தலைவர்கள் மனதிலும் ஒரே எண்ணம் ஓடியது. ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது. எதற்கும் வராத பஹூகாவே இன்று வந்திருக்கின்றான் என்றால் காரணம் இல்லாமல் போகாது. என்னவாய் இருக்கும்????

பஹூகாவின் அருகே வசுதேவரும், கலக்கம் நிறைந்த முகத்தோடும், தர்மசங்கடத்தோடும் அமர்ந்திருந்தார். இந்த எதிர்பாராத கூட்டம் அவரை மிகவும் இம்சைப் படுத்தியது என்பதை அனைவரும் உணரும் வண்ணம் இருந்தார் வசுதேவர். கம்சனின் மறுபுறம் உக்ரசேனனின் தம்பியும், தேவகியின் தகப்பனும் ஆன தேவகனும், அக்ரூரரும் அமர்ந்திருந்தனர். அக்ரூரரைப் பார்த்தாலே அனைவரும் கை எடுத்துக் கும்பிட்டனர். பார்க்கவே ஒரு மஹான் போன்ற தோற்றத்தோடு காக்ஷி அளித்தார் அக்ரூரர். அனைவருமே அவரை ஒரு மரியாதையோடு பார்த்தனர். அக்ரூரரின் அருகே உறைந்து போன பார்வையோடு அமர்ந்திருப்பது யார்?? அட, நம்ம ப்ரத்யோதாவா அது??? ஒவ்வொருவரையும் பார்த்து மனசுக்குள்ளே அலசி எடைப் போட்டுக் கொண்டிருப்பான் போல. ஆனால் அவன் நிலைமை??? அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் அவனைக் கண்டால் பிடிக்காது. இப்போது அவன் எஜமான் ஆன கம்சனுமே அவனை நம்பவில்லை என்பது சர்வ நிச்சயம் ஆகிவிட்டது. அவனுடைய சகோதரர்களும் அங்கே வருகை தந்திருந்தனர். அனைவரும் கம்சனின் வருகைக்குக் காத்திருந்தார்கள். ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பை அனைவரிடமும் காணமுடிந்தது. கம்சன் வந்தான். அதுவும் எப்படி?? அனைவரும் ஆச்சரியப் படும் வண்ணம் சிரித்த முகத்துடனும், கூப்பிய கரங்களோடும் வந்த கம்சன் அனைத்துத் தலைவர்களையும் தனித்தனியாகப் பார்த்து நலம் விசாரித்தான்.

கம்சனின் இந்தப் பணிவு உண்மையானதாய்த் தெரியவில்லை அனைவருக்கும். இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்றே நினைத்தனர்.

“முகத்தின் இனிய நகாஅ அகத்தினா
வஞ்சரை அஞ்சப்படும்”

என வள்ளுவன் சொல்லி இருப்பதை இங்கே நினைவு கூரலாம். ஆகவே அனைவருக்கும் அச்சமாகவே இருந்தது. அது மட்டுமா? கம்சன் தன் கைகளையும் கூப்பிக் கொண்டு தன் அப்பாவான உக்ரசேனரையும், சிறிய பாட்டனாரான வயது முதிர்ந்த பஹூகாவையும் பார்த்து, வணங்கினான். அனைவரையும் தநுர் யாகத்தின் கொண்டாட்டங்களில் பங்கு பெறுமாறும் கேட்டுக் கொண்டான். மதுராவை ஒரு பிரசித்தி பெற்ற ராஜ்ஜியமாகத் தான் மாற்றி இருப்பதாகவும், மேன்மேலும் மதுராவுக்குச் சிறப்பு சேர்க்க ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாயும், அதற்கான ஒரு முன்னேற்பாடே தநுர் யாகம் எனவும் அந்த யாகத்தில் அனைவரும் பங்கேற்குமாறும் அதை வெற்றி அடையச் செய்யுமாறும் கூறினான். யாரும் பேசவே இல்லை. யாருக்கும் கம்சனின் இந்தத் திடீர் இன்சொல்லும், பணிவுக்கான காரணமும் பிடிபடவே இல்லை. ஏழுநாள் கொண்டாங்களுக்கு ஏற்பாடு செய்திருப்பதாயும், நடன நிகழ்ச்சிகள், பாடல் நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள், மல்யுத்தப் போட்டிகள், ரதப் போட்டிகள் என அனைத்துத் தரப்பு வீர விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்திருப்பதாகவும், அனைத்துத் தலைவர்களும் தங்கள் வீரர்களையும், குடும்பங்களையும் அதில் பங்குபெறச் செய்யவேண்டும் எனவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

Wednesday, October 07, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ப்ரத்யோதாவின் கலக்கம்!

ப்ரத்யோதாவைப் பார்த்த தேவகி நடுங்கினாள் என்றால், ப்ரத்யோதாவின் நிலைமை அதை விட மோசமாய் இருந்தது. அவனுக்கும் மயக்கமே வந்துவிடும்போல் ஆகிவிட்டது. ஆஹா, இவள் அதே இளவரசி, இவள் கல்யாணம் நடந்த அன்று, வீதியில் ஊர்வலம் நடத்தவேண்டி ஏற்பாடுகள் செய்யப் பட்டு இவளும், இவளை மணந்த வசுதேவனும் ரதத்தில் அமர்ந்திருந்தனர். நாம் பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கும்போது தானே கம்சன் ரதத்தில் இருந்து இவளைக் கீழே தள்ளினான்?? ம்ம்ம்ம்ம்ம் நான் அப்போது இதைப் பார்த்துக் கொண்டு கையாலாகாமல் சும்மாத் தானே இருந்தேன். அது மட்டுமா? இவள் வயிற்றில் பிறந்த குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்லப் பட்டபோது கூட நான் கம்சன் அருகே தானே இருந்தேன். அப்போதும் வாய் மூடி ஊமையாக!!! சேசே, சேச்சே, எத்தனை கேவலமான மனிதனாய் இருந்திருக்கிறேன். எல்லாம் எதற்காக? இந்த ஒரு சாண் வயிற்றுக்காக அன்றோ?, அவன் வீசி எறியும் காசுக்கும் அல்லவோ? கம்சனின் கொடூரத்திற்குத் துணை போனேனே! இப்போ மட்டும் என்ன வாழ்ந்தது??? மீண்டும் தேவகியின் மகன் ஒருவனைக் கொல்லவேண்டி கம்சன் செய்யும் ஏற்பாடுகளுக்குத் துணை போக அன்றோ நம்மை அனுப்புகின்றான்? இவள் முகத்தை நான் எங்கனம் நிமிர்ந்து பார்த்துப் பேசுவேன்? ப்ரத்யோதாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது என்றால் அவனையே பார்த்தவண்ணம் திகைப்பும், பயமுமாய் இருந்த தேவகிக்கோ சர்வாங்கமும் நடுங்கிக் கொண்டிருந்தது.

மிகவும் கஷ்டப் பட்டு தன் கைகளைக் கூப்பியவண்ணம் ப்ரத்யோதா அவளைத் தலை குனிந்து வணங்கினான். அக்ரூரர் அவளிடம், “தேவகி, நான் ப்ரத்யோதாவிடம் பேசி அனுப்பிவிட்டு, உன்னிடம் வருகிறேன்.” என்று சொல்ல, தேவகியும், “சரி” என்று சொல்லிவிட்டு உடனேயே சென்றுவிட்டாள். ப்ரத்யோதா அங்கேயே அமர்ந்தான். அவனால் பேசமுடியவில்லை. துயரமும், துக்கமும் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்த தேவகியின் ஒவ்வொரு அங்கமும் அவனுக்கு அவள் துக்கத்தின் ஆழத்தைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது. ம்ம்ம்ம்ம்…. இந்த தேவகி ஒரு பைத்தியம் போல ஏதோ ஒரு குழந்தை பொம்மையை வைத்துக் கொண்டு அதற்குப் பாலூட்டித் தாலாட்டிப் பாடல்கள் பாடி, அலங்காரங்கள் செய்வாளாமே! பாவம் அவள் குழந்தையைப் பிரிந்ததால் இப்படி ஒரு நிலைமை/…….. என்ன, என்ன?? திடீரெனப் ப்ரத்யோதாவுக்குப் பொறி தட்டியது. ஆஹா, இந்த தேவகி அந்தக் குழந்தைப் பொம்மைக்குத் தாலாட்டவில்லை. பாலூட்டவில்லை, அலங்கரிக்கவில்லை. தான் உயிரோடு தூக்கிக் கொடுத்த தன் அருமைக் குழந்தைக்கு, நந்தனிடம் வளர்கின்றான் என்பது தெரிந்தே எல்லாம் செய்திருக்கின்றாள். ஒரு தேவ அர்ப்பணம் போல் செய்து வந்திருக்கின்றாள். ம்ம்ம்ம்ம் இப்போது நாம் செய்யவேண்டியதுஎன்ன?? அந்தப் பையனுக்கு இப்போது பதினாறு வயது எனச் சொல்லுகின்றனரே? அவனைக் கம்சன் கொல்ல நாம் உதவப் போகின்றோமா??

அக்ரூரர் ப்ரத்யோதாவின் தனிப்பட்ட யோசனைகளைப் புரிந்து கொண்டவர் போல அவனை நேரிலேயே வசுதேவரிடம் வந்து கம்சனின் அழைப்பைக் கொடுக்கச் சொன்னார். ஆனால் ப்ரத்யோதாவோ வசுதேவரைப்பார்த்துப் பேசும் அளவுக்குத் தனக்குத் திராணி இல்லை என மறுத்தான். அக்ரூரர் ஒரு புன்னகையோடு, “ப்ரத்யோதா, நீ வசுதேவனிடம் வந்தால் ஒருவேளை தேவகி வைத்து வழிபடும் அந்தக் குழந்தைப் பொம்மையைக் காணலாம்.” என்று சொல்ல, ப்ரத்யோதா மீண்டும் உறுதியோடு மறுத்தான். தேவகியை நிமிர்ந்து பார்க்கக் கூட தன்னால் முடியாது என்று சொன்னான். அவளுக்குத் தான் துரோகம் செய்துவிட்டதாகவும் சொல்ல, அக்ரூரர், தேவகிக்கு உயர்ந்த மனம் என்றும், அந்த மனம் அவனை மன்னித்துவிடும் என்றும் கூறுகின்றார். ஏற்கெனவேயே அவள் ப்ரத்யோதாவை மன்னித்திருப்பாள் என்றும் கூறுகின்றார். எனினும் ப்ரத்யோதா மறுக்கின்றான். அங்கிருந்து கிளம்ப ஆயத்தம் ஆக, அக்ரூரர் அவனை, கொஞ்சம் தாமதித்துவிட்டு, ப்ரத்யோதா தன்னைத் தானே ஆசுவாசம் செய்து கொண்டு போகச் சொல்கின்றார். “கடவுள் தன்னுடைய இருப்பை எவ்விதமேனும் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சரியான சமயத்தில் தெரிவிப்பார். அந்தச் சமயம் உனக்கு இப்போது வாய்த்துள்ளது.” என்றும் அவனைத் தேற்றினார். ப்ரத்யோதா அவரை நமஸ்கரித்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றான்.

அவனிடம் அக்ரூரர், தனது சாந்தமான குரலில், “கடவுள் உன் கதவைத் தட்டும்போது அவருக்காக உன் கதவைத் திறந்தே வை. மூடாதே. அவரை நன்கு பரிசுத்தமான இதயத்தோடு வரவேற்று பக்தி செலுத்து. நம்மால் முடிந்தது அது ஒன்றே. கடவுளை நாம் அறிய முடிவதும் இவ்வாறே.” என்று சொல்லுகின்றார். கண்களில் கண்ணீர் பொங்க ப்ரத்யோதா, “அக்ரூரரே, கடவுள் என்னிடம் வருவாரா? நான் அதற்குத் தகுந்தவனா? ஒருகாலும் நடக்காத ஒன்று.” என்று பெருமூச்சுடன் சொல்லிவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு அக்ரூரரிடம் கிசுகிசுப்பான குரலில், “வசுதேவனின் எட்டாவது குழந்தைதான் நந்தனிடம் விருந்தாவனத்தில் வளர்கின்றானா?” என்று கேட்டான். இப்போது அக்ரூரருக்குக் கொஞ்சம் சந்தேகமும், நிறைய பயமும் ஏற்படவே, அவர், அவனிடம், “யார் சொன்னது உனக்கு?” என்று கேட்டார். இந்த ரகசியம் வெளியே தெரிந்துவிட்டதா என எண்ணி அவர் கலக்கமும் அடைந்தார். ப்ரத்யோதா சொன்னான்:”ப்ரலம்பன் சாகும் தருவாயில் கம்சனிடம் சொல்லிவிட்டுச் செத்தான். நான் அப்போது அங்கே காவல் இருந்தேன்.” என்றான். அக்ரூரரின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்றது. ஆனால் அவருக்கோ அது பலயுகங்கள் மாதிரித் தோன்றியது. வெளுத்த, கலவர முகத்துடன் அவர் ப்ரத்யோதாவைப் பார்க்க, அதைவிடப் பயத்துடன் தன்னை சுற்றிப் பார்த்து ஒருவரும் இல்லை என நிச்சயப் படுத்திக் கொண்ட ப்ரத்யோதா, அக்ரூரரிடம், “ பயப்படாதீர்கள் அக்ரூரரே! கவலை வேண்டாம். ப்ரலம்பன் அந்தக் குழந்தை தான் வாசுதேவகிருஷ்ணன் என்ற பரவாசுதேவன் ஆவான் என்றும், தர்மத்தை நிலைநாட்டவே அவன் பிறந்திருப்பதாகவும் சொன்னார். நம்மை எல்லாரையுமே அவன் தான் காப்பாற்றப் போகின்றான் என்றும் சொன்னார். நான் கேட்டேன்.” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, வெகுவேகமாய் அக்ரூரரின் இருப்பிடத்தை விட்டுச் சென்றான்.

ஜராசந்தனின் பூர்வீகம் பற்றிய குறிப்புகள் இன்றைய பதிவில் போட மறந்துட்டேன். சீக்கிரம் போடுகிறேன். நன்றி.

Tuesday, October 06, 2009

"பாரத நாடு பழம்பெரும்நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்"


இந்த வலைப்பக்கத்தில் எல்லா விஷயங்களையும் எழுதுகிறேன். இங்கே தான் அதிகமாய் நண்பர்கள் வந்து பார்க்கின்றனர். மற்றப் பக்கங்களுக்கு வருவதில்லை. அதனாலேயே இந்தப் பக்கத்தில் முதலில் ராமாயணமும், இப்போது பாகவதக் கதைகளை திரு முன்ஷி எழுதி இருக்கும் விதத்திலும் கொடுக்கிறேன். இங்கே வரவங்க படிக்கணும்னு. பின்னூட்டம்னு அதிகம் வராட்டியும், தனிமடல்கள் மூலம் நிறையப் பேர் படிக்கிறது தெரிய வந்து சந்தோஷமாவே இருக்கு. ஏனெனில் இப்போதைய நம் நாட்டுக்குத் தேவையான விஷயங்கள் இதில் அடங்கி உள்ளது. தர்மம்,வீரம், விவேகம், காதல், அன்பு, பாசம், கருணை, இரக்கம், நட்பு என அனைத்துத் தரப்புக்களையும் அரவணைத்துச் செல்லுகின்றான் கண்ணன். ஒரு மனிதன் எவ்வாறு நேர்மையுடனும், நெறியுடனும் இருக்கவேண்டும் என ஸ்ரீராமன் நிரூபித்தானோ அவ்வாறே, அனைவரையும் அவரவர்களின் குற்றங்குறைகளோடு அவற்றைப் பாராட்டாமல், தர்மத்தை நிலைநாட்டுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு கண்ணன் நடமாடி இருக்கின்றான். பழிகளையும் சுமந்திருக்கிறான். அதற்காகச் சற்றும் வருந்தவில்லை.

தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்,
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்!”

கண்ணனின் திரு அவதாரமே உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதற்கெனப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போ நாட்டில் தர்மம் நிலவுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். மிகவும் பலஹீனமான ஆட்சி நடக்கிறது இப்போது. இத்தகைய ஆட்சியில் தர்மம் நிலைப்பது எங்கே? நம் கதையில் கண்ணன் தர்மத்தை நிலைநாட்டவெனத் தன் அவதாரக் காரணத்தை நிலைநாட்டக் கிளம்பப் போகின்றான்.
நாம கண்ணனைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. இதோ நாளையிலிருந்து தொடர்ந்து வருவான். ஆனால் துவாபர யுகத்தில் தர்மத்தை நிலைநாட்டிய கண்ணன்இப்போ அவதாரம் எடுத்து வந்தே ஆகணும்கிற சூழ்நிலை நம் நாட்டில் இப்போது நிலவுகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் நம் கதைத் தொடரில் கண்ணன் கம்சனை அழிக்கப் போகின்றான். தானும், தன் மனைவி, குழந்தைகளுமே வாழவேண்டும், தனக்கு அடங்கி இருப்பவர்களை அடிமை போல் நடத்தவேண்டும் என்றே சுய அபிமானத்துடனும், சுயநலத்துடனும், கொடூர புத்தியுடனும், தனக்கு எதிராய் யார் வந்தாலும் அவர்களைப் பூண்டோடு அழித்துவிடுதல் போன்ற கொடுமையான காரியங்களைச் செய்தவனும், பச்சிளங்குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் அநேக குழந்தைகளைக் கொன்றவனும் ஆன கம்சன் அழியவேண்டியவனே என்பதால் அவன் கொல்லப் பட்டான். கண்ணன் அவதாரம் செய்த காலத்தில் மக்கள் அனைவரும் கம்சனின் கொடுங்கோல் ஆட்சிக்குப் பயந்து செய்வதறியாது திகைத்துக் கொண்டு, தங்களை வாழவைக்கப் போகும் கடவுளுக்குக் காத்திருந்தனர். திரு அவதாரம் செய்தான் கண்ணன். தர்மத்தை நிலைநாட்டினான். நம் நாட்டிலும் இப்போது அம்மாதிரியான ஒரு அசாதாரணமான சூழ்நிலையே நிலவுகிறது. மிகவும் கவலை அளிப்பதாகவும் இருக்கிறது.

அடுத்த வீடான நாடுகளை சிநேகிதம் செய்து கொண்டு அதன் மூலம் நம் நாட்டை மூன்று பக்கமும் சூழ்ந்து கொண்டு அண்டை நாடு ஆன சீனா பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. எந்நேரம் என்ன செய்தி வருமோ என்று பிரதமர் கவலைப்படுகிறாரோ இல்லையோ, நமக்குக் கவலையாய் இருக்கு. பத்தாததுக்கு தீவிரவாதிகளின் மிரட்டல். நாட்டின் ஆதாரமான கலாசாரச் சீரழிவுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொலைக்காட்சி சானல்கள் மூலம், மற்றப் பிரசாரங்கள் மூலமும் நடக்கின்றது. வெளிநாட்டுக் கலாசாரம் வெகுவேகமாய்ப் பரவிக் கொண்டிருப்பதோடு, அதுவே உயர்ந்தது என்றும் அத்தகைய கலாசாரத்தைப் பின்பற்றும் இளைஞர்கள், இளைஞிகள் எடுத்துக்காட்டாகவும் வெளிப்படுத்தப் பட்டு, அவர்கள் புகழே பாடப் படுகின்றது. அத்தகையோரே ஒரு முன்னுதாரணமாகவும் சித்திரிக்கப் படுகின்றனர். இது கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருக்கும் நம் கலாசாரத்தை அடியோடு அழிப்பதாய் இருக்கிறது. வேறு எந்தவகையிலும் மாற்ற முடியாத நம் நாட்டுக் கலாசாரம் இன்று தொலைக்காட்சிகளின் கைகளில் சிக்கிக் கொண்டு வெற்றிகரமாய் அழிக்கப் பட்டு வருகிறது. அனைவரும் எப்படியோ, எந்தவிதத்திலோ தொலைக்காட்சிகளில் தங்கள் முகம் தெரிந்தால் போதும் என்ற எண்ணத்திலே இருக்கின்றனர். முக்கியமான பண்டிகைகள் என்றால் அன்று முழுதும் தொலைக்காட்சி சானல்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக, நடிகையர் அந்தப் பண்டிகை எவ்விதம் கொண்டாடுகின்றனர் என்பதைத் தான் படம் பிடித்துக் காட்டுகின்றனர். நம் வாழ்க்கையின் முக்கிய ஆதாரம் அதுவே என நினைத்துக் கொண்டு, பண்டிகைக்கு வாழ்த்த (அதுவும் இப்போதெல்லாம் அபூர்வம்) வரும் விருந்தினர்களை உதாசீனம் செய்துவிட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியே கதி என உட்கார்ந்து கொள்கின்றோம்.

சூப்பர் சிங்கர் யார்னு ஒரு சானல் போட்டி வச்சால், நாட்டிய தாரகை யாருனு இன்னொரு சானல் போட்டி வைக்கிறது. மற்றோர் சானலோ மேலும் ஒருபடி போய் ஆதர்சத் தம்பதிகளுக்குள் ஒளிவு, மறைவு இருக்கா இல்லையானு பட்டி மன்றமே நடத்தித் தம்பதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. முன்னே எல்லாம் நாட்டியமோ, பாடலோ, நன்கு கற்றுக் கொண்டு திறமை இருந்தாலே அரங்கேறலாம் என்பது போய் இன்று தாத்தா, பாட்டி கூட குடும்ப நிகழ்ச்சி என்ற பெயரில் இத்தகையதொரு அற்பமான ஆசைக்கு உட்பட்டு ஆடுகின்றதையும் பல பத்திரிகைகள் மூலம் பார்க்க நேரிடுகிறது. உண்மை பேசுகிறேன் என்ற பெயரிலே குடும்பங்கள் சீரழிக்கப் படுகின்றன. அந்தரங்கங்கள் வெளிச்சத்துக் கொண்டுவரப் படுகின்றன. போதாதுக்கு செல்போன் என்னும் ராக்ஷசன் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு அனைவர் கையிலும் தவழ்கிறான். குடும்ப ரகசியங்களைப் பொது இடங்களில் அனைவரும் கேட்கும்படியாகப் பேசுகின்றனர். இதனால் ஏற்பட்ட, ஏற்படும், ஏற்படப் போகும் தீங்கைக்குறித்து யாருமே நினைத்துப் பார்க்கவில்லையோ எனத் தோன்றுகிறது. செல்போனில் பேசிக் கொண்டு சாலையைக் கடந்த, ரயில் தண்டவாளத்தைக் கடந்த இளம்பெண்கள், இளைஞர்கள் விபத்தில் பலியாகி இருக்கின்றனர். என்றாலும் இன்று கட்டுப் பாடு என்பது தேவையில்லை என்றே அனைவரும் நினைக்கின்றனர். ஒரு தொலைக்காட்சி ஒன்று சிரிப்பு என்ற பெயரில், தெருவில் சாதாரணமாய் நடந்து செல்பவர்களையும், பேருந்துகளில் ஏறுபவர்களையும் தடுத்துப்ப் பயமுறுத்தி விளையாடுகிறது. இதனால் ஒருவருக்கு அவசரமாக வெளியூர் செல்ல ரயிலைப் பிடிக்க முடியாமல் போய்விட்டது. இன்னொருவருக்கு வேறுவிதமான தொந்திரவு ஏற்பட்டிருக்கிறது. இதை எல்லாம் யோசிக்கவேண்டும்.

வெளிநாடுகள் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், நாம் விழித்துக் கொண்டு நாட்டைக் காக்கப் போராடும் வீரர்களைக் கெளரவிப்பதில்லை. எங்கே காஷ்மீரிலும், பாகிஸ்தான் இந்தியா எல்லையிலும், அஸ்ஸாம் எல்லையிலும் இறந்து போகும் வீரர்களைப் பற்றிய செய்திகள் செய்தித் தாள்களில் ஒரு மூலையில் வருகின்றன. அத்தோடு சரி. பலரும் அதைப் படிப்பது கூட இல்லை. தொலைக்காட்சி சானல்களும் சினிமா நடிகருக்கும், நடிகைக்கும் வெளிநாட்டில் கஸ்டம்ஸில் சோதனை நடப்பதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இம்மாதிரியான செய்திகளுக்குக் கொடுப்பதில்லை. இம்மாதிரிச் செய்திகளையே ஒளிபரப்புவது கிடையாது. வெளியே அந்நிய சக்திகள் ஆக்கிரமிப்பு என்றால் உள்நாட்டில் கலாசாரச் சீரழிவு தலை தூக்கி ஆடுகிறது. இப்போ நாடு இருக்கும் நிலைமையில் நம்மைக் காக்கவேண்டியவன், கண்ணன் ஒருவனே. அவனே மறுபடியும் பிறந்து வந்தால்தான் நமக்கு விடிவுகாலம் என்று தோன்றுகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒரு நல்ல விஷயத்துக்காக சுதந்திரம் பெறவேண்டும் என்ற உன்னத லக்ஷியத்துக்காக மக்கள் போராட்டம் செய்தனர். அத்தகையதொரு உணர்வு இப்போதும் வரவேண்டும். இது இன்னொரு வகை சுதந்திரப் போராட்டம். இதையும் நாம் நடத்திக் காட்டவேண்டும். அந்த சுதந்திரப் போராட்ட நாட்களில் திலகர் ஆன்மீக வழியில் மக்களைத் திசை திருப்பி அதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தில் அனைவரும் பங்கு பெற வழிவகுத்தார் என்பார்கள். அதுபோல் இப்போது நம்மை அழித்துக் கொண்டிருக்கும் அசுர சக்திகளிடமிருந்து நமக்கு விடுதலை கிட்டி உண்மையான சுதந்திரத்தை அடைய வேண்டிய மனோ வலிமையைக் கொடுக்கும்படி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி கடவுளிடம் பிரார்த்திப்பது ஒன்றே. நம் நாட்டின் உந்நதமான தர்மத்தைக் காக்கவும், கலாசாரத்தைப் பேணவும் உறுதி பூண்டு, பக்தி வழியில் அதே சமயம் தேவையான சமயம் உறுதியையும், வீரத்தையும் காட்டி நாட்டை அந்நிய சக்திகளிடமிருந்தும், உள்நாட்டைப் பீடித்திருக்கும் கலாசாரச் சீரழிவில் இருந்தும் காக்கவேண்டும். இந்தத் தொலைக்காட்சி, சினிமா மாயையில் இருந்து மக்கள் அனைவரும் விடுபடவேண்டும்.

சுதந்திரப் போராட்டம் போல இப்போ இதுவும் ஒரு வகைக் கலாசாரப் போராட்டமே. இந்த அடிமைத் தளையில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ளவேண்டும். இது நம்மால் மட்டுமே முடிந்த ஒன்று. முக்கியமாய்ப் பெண்களும், அவர்கள் பெற்றெடுத்த செல்லங்களும், குழந்தைகள் தொலைக்காட்சியில் தோன்றுவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப் படத் தயாராய் இருக்கும் தாய்மார்கள், அவங்க நல்வாழ்வுக்காகவும் கஷ்டப் படத் தயாராகவேண்டும். இறைவன் அருளால் இந்த போலியான, பொய்யான கலாசார மாயையில் இருந்து நாம் விடுபட இறைவனைப்பிரார்த்திக்கிறேன். இனி போரடிக்காமல் நாளையில் இருந்து கண்ணன் வந்து தன் கதையைச் சொல்லுவான்.

Sunday, October 04, 2009

உங்களுக்கும் 50% வேண்டுமா?

துளசி பிருகு முனிவரையும், பிருங்கி முனிவரையும் குழப்பிண்டப்போவே எழுதணும்னு வச்சிருந்தேன். ஆனால் நவராத்திரி வந்துடுச்சு. அது முடிஞ்சு இளைப்பாறவே இந்த முறை ஒரு வாரம் ஆயிடுச்சு. அதனாலே சும்ம்ம்மா இரண்டு மொக்கையோட நிறுத்திட்டேன். இப்போ எல்லாரும் முக்கியமாய் ஆந்திராவில் கொண்டாடும் கேதார கெளரி நோன்பைப் பற்றிய ஒரு விஷயம் எழுதப் போறேன். நோன்பு கொண்டாடும் அனைவருக்கும் தெரிஞ்சிருக்கும்தான் இந்த விஷயம். என்றாலும் தெரியாத மத்தவங்களுக்காக எழுதறேன். எனக்கும் இப்போ ஒரு நாலு வருஷம் முன்னாடிதான் இந்தக் கதை தெரிய வந்தது.

அம்மையப்பன் அர்த்தநாரீஸ்வரராக ஆனதைப் பற்றிப் பல புராணக் கதைகள் இருக்கின்றன. அர்த்தநாரீஸ்வரராகத் திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் தோற்றம் அளிப்பதையும் அந்த நேரத்தில் மலை உச்சியிலும், கோயில் கொடிக்கம்பத்தினருகேயும் தீபங்கள் ஒளி வீசிப் பிரகாசிப்பதையும் காண்கின்றோம். இந்த அர்த்த நாரீஸ்வரப்பதவி என்பது அம்மை தவம் இருந்து பெற்ற ஒன்று. உலகிலேயே முதல் முதலாக பெண்ணுக்கு சரிபாதி உரிமை தந்தவர் ஈசன் ஒருவரே. இப்போ அரசாங்கமே 33% கொடுக்கலாமா? குறைக்கலாமா? இல்லாட்டிப் பேசிட்டே இருந்தால் மட்டும் போதுமானு யோசிக்குது. ஆனால் ஈசன் யோசிக்கவே இல்லை. சரிபாதியைக் கொடுத்துட்டார். இப்போ விஷயத்துக்கு வருவோமா???

பிருங்கி முனிவரைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் அல்லவா? ஈசன் ஒருவனைத் தவிர மற்ற யாரையும் அவர் வணங்கமாட்டார். ஈசனோடு சேர்ந்தே அம்மையும் காக்ஷி கொடுத்தாலும் அவர் அம்மையை வணங்காமல் வண்டு உருவெடுத்து ஈசனை மட்டும் பிரதக்ஷிணம் பண்ணுவார். எந்நேரம் வேண்டுமானாலும் திருக்கைலை சென்று சிவதரிசனம் செய்யும் பிருங்கி முனிவர் ஒரு சமயம் அவ்வாறு சென்றபோது அம்மையப்பனாக வீற்றிருந்த இருவரையும் கண்டுவிட்டுத் தம்மை ஒரு வண்டாக மாற்றிக் கொண்டு அப்பனை மட்டுமே சுற்ற ஆரம்பித்தார். வண்டாகவோ, மனிதனாகவோ தனக்கு வேண்டிய சக்தியைக் கொடுப்பது அவள் அல்லவோ? அதை மறந்தார் பிருங்கி முனிவர். பார்த்தார் ஈசன். அம்மையும் பார்த்தாள். சிவமும், சக்தியும் ஒன்றையொன்று பரிபூரணமாய்ப் புரிந்து கொள்ள, அம்மை தன் சக்தியால் பிருங்கி முனிவரின் உடல் சக்தியை வற்றச் செய்தாள்.

நிற்கக் கூட முடியாமல் தடுமாறினார் பிருங்கி முனிவர். இவர் உடலில் ரத்தமோ, சதையோ இல்லாமல் வெறும் கூடு மட்டுமே இருந்தது. அந்நிலையிலும் அவர் ஈசனை மட்டுமே வணங்கி, தன் நிலைக்கான காரணத்தைக் கேட்க, ஈசன் அன்னையை வணங்காததால் அன்னை சக்தியை உறிஞ்சிவிட்டாள் எனச் சொல்ல, தங்களையே சரணம் என நினைக்கும் எனக்கு இந்தக் கதியா எனக் கண்ணீர் விட்டார் முனிவர். முனிவருக்குப் பாடம் புகட்டவேண்டும். அவர் திருந்துவதாய்த் தெரியவில்லையே? என்றாலும் ஈசன் முனிவருக்கு ஒரு ஊன்றுகோலை அளிக்க அதன் உதவியால் முனிவர் ஈசனை மட்டும் வணங்கிவர ஆரம்பிக்க, அன்னை வெகுண்டாள். சக்தியும், சிவமும் ஒன்று என்பதை இத்தனை தவம் செய்த இந்த முனிவன் அறியாமல் இருக்கிறானே என எண்ணிய வண்ணம் கெளதம முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றாள் அன்னை. அங்கே தான் தவம் செய்யப் போவதாயும் சொன்னாள். கெளதம முனிவர் சகல செளகரியங்களையும் அன்னைக்குச் செய்து கொடுத்து க் கேதார கெளரி விரதம் என்றொரு விரதம் கடைப்பிடிக்கப் படுவதையும் நினைவூட்டினார். புன்னகை புரிந்த அன்னை, தாம் அந்த விரதமே இருக்கப் போவதாய்த் தெரிவித்துவிட்டு புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தனம் துவங்கி இருபத்தொரு நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்தாள்.

விரதம் நிறைவு நாளன்று ஈசன் அன்னையிருக்குமிடம் தேடி வந்து, தம் இடப்பாகத்தை அன்னைக்கு அளித்துப் பெருமை சேர்த்தார். அன்னையும், ஈசனும் பிரிக்கவே முடியாத அர்த்த நாரீஸ்வரக் கோலம் கொண்டனர். இந்த விரதம் முடியும் நாளையே ஆந்திராவில் நோன்பாய்க் கொண்டாடுகின்றனர். புரட்டாசிமாதம் விஜயதசமிக்குப் பின்னர் ஐப்பசி மாசம் தீபாவளி அமாவாசையன்று முடிவடையும் விதத்தில் இந்த நோன்பு அமைந்திருக்கும். சில சமயம் நவராத்திரிக் கடைசிநாட்கள் ஐப்பசி மாதத்தில் வந்தாலும் தீபாவளி அமாவாசை அதற்குப் பின்னர் இருபத்தோராம் நாளிலேயே வரும். ஆகவே ஒவ்வொரு தீபாவளி அமாவாசையிலும் இந்த விரதம் அனுஷ்டிப்பார்கள் தெலுங்கு பேசும் சகோதரிகள். இந்த விரதம் இருந்தால் தாம்பத்திய வாழ்வு சிறந்து, கணவனை விட்டுப் பிரியாமல் இருப்பார்கள் என்று ஐதீகம்.

தெலுங்கு எழுத்துக்கள் கூட வாமபாகமாக அதாவது இடப்பக்கமாய்ச் சுழித்து வருவதாயும், இடப்பக்கமே அம்பாளுக்கு விசேஷம் என்பதால் அவளுக்குரிய ஸ்ரீசக்ரத்தில் அக்ஷரங்கள் தெலுங்கிலேயே இருக்கும் என்றும் ஆந்திராவே சிவப் பிரதான க்ஷேத்திரம் என்றும் ஸ்ரீபரமாசாரியாளின் தெய்வத்தின் குரல் சொல்லுகின்றது. மற்ற இடங்களில் அக்ஷராப்பியாசத்தின் போது விஷ்ணுவின் எட்டெழுத்து நாமத்துடன் துவங்கினால், ஆந்திராவிலே சிவனின் ஐந்தெழுத்திலேயே துவங்கும் என்றும், அந்த மாநிலமே சுற்றிலும் காளஹஸ்தி, ஸ்ரீசைலம், கோடிலிங்க க்ஷேத்திரம் என்ற மூன்று க்ஷேத்திரங்களுக்குள்ளேயே அடங்கி இருப்பதாயும், அதனால் த்ரிலிங்க க்ஷேத்திரம் என்ற பெயர் ஏற்பட்டு அதுவே பின்னர் தெலுங்கு என்று ஆகிவிட்டதாயும் ஸ்ரீபெரியவாள் தெரிவிக்கிறார். அதனாலேயே இந்த நோன்பும் அங்கே மட்டும் பிரதானமாய்க் கொண்டாடப் படுகிறது.