ஒரு வழியாய் ஊருக்குப் போயிட்டு வந்தாச்சு. தவிர்க்க முடியாத ஒரு பயணம். சொல்லப் போனால் மீண்டும் கண்ணனின் துவாரகையைப் பார்க்க எண்ணி 2006 டிசம்பரில் செல்ல ஏற்பாடுகள் செய்து இரு வழிப்பயணத்துக்கும் பயணச்சீட்டு வாங்கி இருந்தோம். சென்னையில் இருந்து அஹமதாபாத் வரை செல்லப் பயணச்சீட்டு முன்பதிவு உறுதி ஆகவில்லை. ஆனால் திரும்பி வர உறுதி செய்யப் பட்டு இருந்தது. செல்லும் தினம் வரையில் காத்திருந்து விட்டுப் பின்னர் பயணச்சீட்டை ரத்து செய்தோம். சொல்லப் போனால் நம்ம முதன்மைத் தொண்டர் அதியமான் அங்கே இருந்தார் அப்போ. வரப்போறோம்னு தகவல் கொடுக்கச் சொல்லி ம.பா. சொல்லிட்டே இருந்தார். ஆனால் எனக்கு என்னமோ கடைசிவரையில் கொஞ்சம் தயக்கமாவே இருந்தது. அதுக்கேத்தாப்போல் அப்போப் போக முடியவில்லை. இப்போத் தான் முடிஞ்சது.ஜனவரியில் இருந்தே அலைச்சல் தான். அஹோபிலம் போயிட்டு வந்ததுமே கொஞ்சம் முடியாமலும் போயிடுத்து. என்றாலும் அதைக் கண்டு கொள்ளாமலேயே குஜராத் பயணம் செல்லும்படி நேர்ந்தது. குஜராத்திலேயே ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தப்போ துவாரகை, சோமநாத் இரு கோயில்களுக்கும் சென்று வந்தோம். துவாரகை நாங்க இருந்த ஜாம்நகரில் இருந்து ரொம்பக் கிட்டே இருப்பதால், இரண்டு, மூன்று முறை சென்றிருக்கின்றோம். கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போப் போனப்போ ஊரும் சரி, மக்களும் சரி கொஞ்சமும் மாறவில்லை. அப்படியே தான் இருக்கின்றது. கோயில் இருக்கும் தெருவில் இன்னமும் முன்னேற்றம் என்ற பெயரால் ஐந்து நட்சத்திர விடுதிகளும், சுற்றுலா விடுதிகளும், வியாபாரப் பொருட்கள் விற்கும் கடைகளும் அணி வகுக்கவில்லை. எல்லாம் கோயிலை விட்டுக் கொஞ்சம் தள்ளியே இருக்கின்றன. கோயில் வளாகத்தினுள்ளும் கடைகள் அணி வகுக்கவில்லை. அனுமதிச்சீட்டு கிடையாது. சிறப்புத் தரிசனம் கிடையாது. விஐபி அனுமதி இல்லை.
அது நரேந்திரமோடியே ஆனாலும் எல்லாரையும் போல் தான் வந்து தரிசனம் செய்ய முடியும். என்ன? அவங்களுக்குக் கூடவே பாதுகாவலர்கள் வருவாங்க. நமக்குத் தொந்திரவு இல்லாமல் தரிசனம் செய்துட்டுப் போவாங்க. மக்களை வெளியேறச் சொல்லுவதோ, அவங்களுக்குத் தனியாய்த் தரிசனம் செய்து வைப்பதோ கிடையாது. சிறப்பு அனுமதியும், தனி அனுமதியும் பெண்களுக்கு மட்டுமே. அவங்களுக்கு கண்ணனுக்கு நேரே மிகக் கிட்டத்தில் சென்று தரிசிக்க அனுமதி உண்டு. தனியான வாயிலும் பெண்களுக்கு மட்டுமே. பெண்களும் கண்ணனைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருப்பதோடு ஏதோ தங்கள் பிள்ளை மாதிரிப் பேசுகின்றனர். இங்கேஅம்பி, தன்னோட மதுரை பதிவிலே எழுதி இருக்காப்போல! (அம்பி ஒரு இலவச விளம்பரம் கொடுத்துட்டேன், கொடுத்த மொய்யிலே கழிச்சுக்குங்க, மிச்சம் நீங்க தான் கொடுக்கணும்). அம்பி நீங்க கேட்டாப்பல லிங்க் கொடுத்தாச்சு. கொடுத்த மொய் திரும்ப வரணும்! கண்டிஷனை மறக்காதீங்க! :P
நாங்க காலையிலே முதன் முதல் எடுக்கப் படும் ஆரத்தி என அழைக்கப் படும் தீப ஆராதனையைப் பார்க்கச் சென்றோம். அந்தப் புலர்ந்தும் புலராத காலைப் பொழுதிலே, அந்தக் குளிரிலேயும் எத்தனை மக்கள்? யாருமே இருக்க மாட்டாங்கனு நினைச்சுட்டுப் போனால்?? ஒரே கூட்டம்! ஆச்சரியமா இருந்தது. உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள்னு எல்லாருமே காத்துட்டு இருந்தோம். கூட்டம் வேறு நினைவே இல்லாமல் கிருஷ்ணர் மேலே பஜனைப் பாடல்கள் பாடிக் கொண்டிருக்க, பெண்களும், ஆண்களும், த்வாரகாதீஷ் கி ஜெய் எனக் கோஷமிட, சரியாக ஏழு மணிக்குத் திரை விலக்கப் பட்டு ஆரத்தி நடைபெற்றது. கிட்டத் தட்ட அரைமணி நேரம் ஆரத்தி எடுக்கப் படுகின்றது. ஆரத்திக்குச் சற்று நேரம் முன்னால் கோயில் பிரகாரத்தில் இருக்கும் மணி ஒலிக்கத் தொடங்குகின்றது. அது ஆரத்தி எடுக்கப் போவதை அறிவிப்பது போல் உள்ளது. பிறகு அந்த மணி நின்று நிசப்தம். அதன் பின்னர் பெரிய காண்டாமணி ஒலிக்க, கூடி இருக்கும் கூட்டம் பித்துப் பிடித்தது போல் கிருஷ்ணா, கிருஷ்ணா என்று கதறிக் கண்ணீர் மல்க, துவாரகாதீஷ் அன்று காவிக்கலரில் ஆடை அணிந்து ஆடுமேய்க்கும் கோபாலனாகத் திவ்ய தரிசனம் தந்தான்.





