எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 16, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு!

ரமேஷ் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் மனைவியும் ஒரு கம்பனியில் வேலை செய்கிறாள். ஒரே மகள். அவளைப் பார்த்துக்கொள்ளும் பெண் இன்னும் வரவில்லை. அவள் வந்ததும் கிளம்பவேண்டும். வீடு சொந்த வீடு. இருவருக்கும் தனித் தனியாகக் கார் இருக்கிறது. நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை. அழகான மனைவி. ரமேஷ் கொடுத்து வைத்தவன் என அனைவரும் சொல்வார்கள். மேலும் அனைவரும் பொறாமை கொள்ளும்படி இன்றைக்கு அலுவலகத்தில் அவனுடைய ப்ரமோஷன் பற்றிய முடிவு சொல்லப் படும். அவன் பரபரத்துக்கொண்டிருந்தான். ஆயிற்று, இதோ, வித்யாவும் வந்துவிட்டாள். மகளைப் பார்த்துக்கொள்ளும் ஆயாவும் வந்துவிட்டாள்.இருவரும் மகளைக் கொஞ்சி முத்தமிட்டுவிட்டு அவரவர் காரில் அவரவர் அலுவலகத்துக்குப் பயணித்தனர்.

அலுவலகம்: ஒரு முக்கியமான மீட்டிங். நடுவில் அவனுடைய மேலதிகாரி அழைப்பு. அவர் தொலைபேசியில் கூறிய செய்தியைக் கேட்ட ரமேஷின் முகம் மலர்கிறது. அதற்குள்ளாக அவனுடைய சொந்தக் கைத் தொலைபேசி அழைப்பு. அழைத்தது அவன் மனைவி. அன்று மாலை அவளுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊருக்குச் செல்லவேண்டுமாம். அவள் இருப்பது HRD என அனைவராலும் சொல்லப் படும் மக்கள் நலத்துறை. அது சம்பந்தமாய் அடிக்கடி கிராமங்களுக்குச் சென்று அங்கே சில நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்துவது வழக்கம் தான். ஆகவே அவன் சரியென்று சொல்லிவிட்டு அவனுக்கும் அன்று இரவு அவன் மேலதிகாரியின் வீட்டில் ஒரு பெரிய விருந்து இருப்பதாயும், விருந்து முடிந்து உடனே அவனும் இரவு விமானத்தில் பங்களூர் வரை செல்லவேண்டும் எனவும் கூறினான். திரும்பி வர இரு தினங்கள் ஆகும் என்றும் கூறினான்.

வித்யா உடனே, "ஐயோ, அப்போ குழந்தை? குழந்தையை இரு நாட்கள் நானும் தூக்கிப் போக முடியாதே? நான் போகப் போவது ஒரு அத்துவானக் காடு. அங்கே எந்தவித வசதியும் இல்லையே, ரமேஷ், நீங்க இருப்பீங்கனு நம்பினேனே!" என்றாள். அவனுக்கும் மனதில் கவலை தொற்றிக்கொண்டது. ஆனாலும் தவிர்க்கவும் முடியவில்லை. வித்யா உடனேயே வீட்டுக்குத் தொலைபேசி ஆயாவிடம் பேசுவதாய்க் கூறவும் கொஞ்சம் நிம்மதி அடைந்தான். மாலை நேரம். வீட்டுக்கு வந்த ரமேஷும், வித்யாவும் கிளம்பத் தயார் செய்து கொண்டிருந்தனர். இருவரும் கொஞ்ச தூரம் வரை ஒரே திசையில் பயணிக்கப் போவதையும் புரிந்து கொண்டதால் ரமேஷை வழியில் இறக்கிவிட்டுவிட்டு வித்யா பயணத்தைத் தொடருவதாய்ச் சொன்னாள். பின்னர் அங்கிருந்து மேலதிகாரியின் காரிலேயே ரமேஷ் பயணத்திற்கு விமான நிலையம் செல்வதாய்த் திட்டம். ஆயா இவர்கள் வந்ததுமே குழந்தையை விட்டுட்டுப் போனவள் இன்னும் வரலையே? வாசலை வாசலைப் பார்த்தாள் வித்யா.

கொஞ்ச நேரத்தில் ஒரு வயதான பெண்மணி வந்து கதவைத் தட்ட, வித்யா திறந்து பார்த்தாள். அவளைப் பார்த்துக் கேள்விக்குறியோடு நின்ற வித்யாவிடம், "விஜயாவிடம் சொன்னீங்களாமே? குழந்தையை பார்த்துக்கணும்னு! அதான் வந்திருக்கேன்!" என்றாள்.

"ஏன், விஜயாவிற்கு என்ன ஆச்சு?" ரமேஷ் சத்தம் போட்டான். அவன் வரையில் இந்த ஆயா வைத்துக்கொள்வதே பிடிக்கவில்லை. ஆனால் வித்யாவின் வேலையில் அடிக்கடி வெளி ஊர்கள் செல்லவேண்டி இருப்பதால் அவன் அம்மாவோ, வித்யாவின் அம்மாவோ வந்தாலும் அவங்களுக்கு இந்தச் சூழ்நிலை ஒத்துக்கொள்வதில்லை. ஆகவே அவங்க யாரையும் வைத்துக்கொள்ள முடியலை. "விஜயாதான் அனுப்பி இருக்கா. நம்பிக்கையான மனுஷியாம்." என்று சொல்லிக் கொண்டே அவளை உள்ளே அழைத்தாள் வித்யா. "குழந்தையோட பெயர் என்ன?" என்று கேட்டாள் வந்தவள். "அவள் பெயர் சுமி!" என்றாள் வித்யா. "என்ன வயசு? என்ன உணவு சாப்பிடுவா?" வந்தவள் கேட்ட அனைத்துக்கும் பதில் சொன்னாள் வித்யா.

குழந்தை அவள் அறையில் விளையாடிக் கொண்டிருந்தாள் பொம்மைகளோடு. அவளைக் காட்டினாள். சுமி திரும்பிப் பார்த்தாள். "அம்மா!" ஓடி வந்து கட்டிக் கொண்டாள். குழந்தையைத் தூக்கி முத்தமிட்ட வித்யா, "மூணு வயசு ஆகிறது இவளுக்கு. பேசுவா. புரிஞ்சுக்க முடியுது இல்லையா?" என்று வந்தவளைக் கேட்டாள். அவள் பெயர் வினுவாம். வினயாவா? விநோதினியா? யோசித்தவண்ணமே வித்யா குழந்தையிடம், தானும், ரமேஷும் வெளி ஊர் செல்லப் போவதையும், குழந்தை சமர்த்தாய் இருக்கவேண்டும் என்பதையும், வந்திருக்கும் வினு ஆண்டி தான் சுமியோடு விளையாடுவாள், அவளுக்குச் சாப்பாடு கொடுப்பாள் என்றும் சொல்கிறாள். குழந்தையும் சமர்த்தாய்த் தலையை ஆட்டினாள். ஒருவாறு நிம்மதி அடைந்த இருவரும், (அப்படியும் ரமேஷுக்கு என்னவோ உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.)காரை அடைந்தனர். ரமேஷ் தான் இறங்கும்வரை காரைத் தான் ஓட்டுவதாய்ச் சொன்னான்.

வழியில் வித்யாவிற்குத் தொலைபேசி அழைப்பு. அவள் சிநேகிதி சுபாவிடமிருந்து அழைப்பு. அவளும் வித்யாவோடு வருவதாய் இருந்தது. அவசரமாய் சொந்த வேலை வந்துவிட்டதால் வரவில்லையாம். அவளைத் தன் வண்டியிலேயே அழைத்துப் போக இருந்த வித்யா நேரே போய்க்கொள்ளலாம் என்றாள். சரி என்று சொல்லிவிட்டுக் கைபேசியை வைத்தாள் வித்யா. ரமேஷ் அவளைப் பார்த்து, "என்ன சிநேகிதி வரலைனதும் உனக்கு அப்செட் ஆயிடுச்சு போல?" என்று சீண்டினான். சற்றே யோசித்த வித்யா, "அப்படி இல்லை, இரண்டு பேரும்னால் கொஞ்சம் வசதி. என்றாலும் பரவாயில்லை, ரேவதி மேடம் அங்கே வராங்க!" என்று முடித்துக் கொண்டாள். சற்று நேரம் இருவரும் உல்லாசமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். காரின் பின்னால் இருந்த கூடையில் இருந்து தனக்குக் குடிக்க ஜூஸ் எடுத்துக் கொடுக்கும்படி ரமேஷ் கேட்க வித்யா பின்னால் திரும்பி ஜூஸை எடுக்கப் போனாள். அப்போது திடீரென அவள் கண்ணெதிரே ஒரு துப்பாக்கி. சைலன்சர் பொருத்தப் பட்டது.

ஒரு ஆண் குரல், "திரும்பாதே!" என்று கண்டிப்பாக அவளிடம் சொன்னது. அப்படியும் அவள் சற்றுச் சமாளித்துக்கொண்டு திரும்ப யத்தனித்தாள். துப்பாக்கி ரமேஷின் நெற்றிப்பொட்டில் பதிந்திருந்தது. மீண்டும் அதே குரல். "திரும்பாதே, திருமதி ரமேஷ், வித்யா, வித்யா தானே உன் பெயர். ஆனாலும் நான் மரியாதையாய் திருமதி ரமேஷ்னே கூப்பிடறேன். திரும்பினாயென்றால் இதில் உள்ள தோட்டாக்கள் உன் கணவன் நெற்றியின் இந்தப் பக்கம் பாய்ந்து அந்தப் பக்கம் வெளிவரும். எப்படி வசதி?" என்றான்.


தொடரும்.

13 comments:

  1. அய்யோ தலைவி என்ன ஆச்சு!!?? என்ன திடிரென்னு இப்படி ஒரு பதிவு...கதை தானே!! ;))

    ReplyDelete
  2. புஷ்பா தங்கதுரை. மர்மக் கதை எழுத்தாளர். தினமணி கதிரில் திருவரங்கன் வீதி உலா என்று எழுதும்போது அவர் பெயர் ஸ்ரீ வேணுகோபாலன்.
    காதலிக்க நேரமில்லை, உன்னை ஒன்று கேட்பேன் என்றெல்லாம் எழுதும் போது மணியன் என்ற பெயர். மர்மக் கதை எழுதும்போது டபிள்யூ ஆர் ஸ்வர்ணலதா...
    இந்த தளத்தில் துப்பாக்கி ரத்தம் என்று பார்த்ததும் ஆச்சர்யம்..!
    தொடருங்கள்... குழந்தையின் உணர்வுகளில் பயணிப்பீர்கள் என்று நினைத்த போது திருப்பம். சுவாரஸ்யம்தான்.

    ReplyDelete
  3. கண்ணா! இதுவும் தங்களின் லீலை தானா!
    கீதாம்மா! எங்களை ஏன் பயபடுத்தறீங்க?!
    ஆனா ஒண்ணு எனக்கு புரியுது
    நீங்களும் தங்கமணியும் சேர்ந்து எங்களை
    நல்லா மிரட்ட போறீங்கன்னு!
    ம்ம்

    ReplyDelete
  4. பங்களூரில் இருந்து சுபாஷிணி, மெயிலில் சொன்னது:

    Mami ரொம்ப நல்ல விஷயம் எடுதத்துடுண்டு இருக்கேள். இன்னிக்கு நிறைய பேர் ஆத்துலே இது தான் நடக்கறது. Waiting for your next post
    Subha
    Please post in your comments box

    ReplyDelete
  5. கோபி, ஒண்ணும் ஆகலை, நிதானமாப் படிச்சுட்டு வாங்க, கதையை நடந்தது நடந்தபடியே சொல்லப் போறேன், சரியா, தப்பானு நீங்கல்லாம் சொல்லணும். ஓகே?

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், ஒரு ஜாம்பவானோட ஒப்பிட்டதுக்கு நன்றி. :))))))) அவ்வளவு திறமை எல்லாம் இல்லை. என்றாலும் பொறுமையாய்ப் படிக்கிறதுக்கு நன்றிப்பா. எனக்கே சில சமயம் த்ரில்லிங்கை அடக்க முடியவில்லை. பார்க்கலாம், அந்த அளவுக்கு எழுத முடியுதானு!

    ReplyDelete
  7. ம்ம்ம்ம்?? புஷ்பா தங்கதுரை, ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் எழுதின நீ-நான் - நிலா தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த நாவல் அவரோட மாஸ்டர் பீஸ்னு சொல்லலாம்.

    ReplyDelete
  8. வாங்க ப்ரியா, கண்ணன் தான் ஓட்டமாய் ஓடிப் போய் ஒளிஞ்சுட்டானே! படிங்க, இதுவும் ஒரு அநுபவமே! நன்றிம்மா.

    ReplyDelete
  9. சுபாஷிணி, உங்க கமெண்டைப் போட்டாச்சு. நன்றிங்க, தனி மடலுக்கும், கருத்துக்கும்.

    ReplyDelete
  10. அச்சச்சோ! என்ன ஆச்சு உங்களுக்கு? உடம்பு கிடம்புக்கு சரியில்லையா? மர்மக்கதை எல்லாம் எழுதறீங்க? பிள்ளையாரப்பா காப்பாத்து! :P

    ReplyDelete
  11. சுபாஷிணி, (அம்பியோட சிநேகிதிங்கறதாலே பெண்களூர்னு நினைச்சேன்) இல்லையாம், சென்னைதானாம். சொல்லி இருக்காங்க! :))))))))

    ReplyDelete
  12. திவா, நறநறநறநறநறநறநறநறநறநறந

    ReplyDelete
  13. ஐயோ இப்படி எல்லாம் பயபடுத்தினா எப்படி மாமி.... கிருஷ்ணா காப்பாத்து

    ReplyDelete