எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 04, 2011

பெண்களுக்குச் சம உரிமை?? இருக்கிறதா, இல்லையா?

தமிழ் ஹிந்துவில் வெளியிட்ட போது சென்ற பகுதிக்கு, பெண்கள் தரப்பில் இருந்து இரண்டே பேர்களைத் தவிர வேறு யாருமே இதற்குப் பின்னூட்டமிடவில்லை. நண்பர் ஒருவர் சொன்னது சரிதான் என்று நினைத்தேன். “எல்லாப் பெண்களும் உங்க கிட்டே கோபமாய் இருப்பாங்க. உங்களை இந்த மட்டோடு விட்டுட்டாங்களேனு நினைச்சு சந்தோஷப்படுங்க!” என்று சொன்னார். அவர் சொன்னபோது சிரிப்பு வந்தாலும் உண்மையில் இங்கேயும் பல பெண்களும் விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.தமிழ் ஹிந்துவில் சந்திரா என்னும் பெண்மணி என்னை அடிப்படைவாதி என்று சொன்னதில் ஆச்சரியமும் இல்லை. சுதந்திரம் என்பதற்கான அளவுகோல் என்ன?? அதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சுயக் கட்டுப்பாடு இல்லாத எந்தச் சுதந்திரமும் பலன் அளிப்பதே இல்லை. இன்றைக்கு நம் நாடு இருக்கும் நிலைமைக்குக் காரணமே கிட்டத்தட்ட 50 விழுக்காடு பெண்கள் இந்தச் சுயக் கட்டுப்பாட்டில் இருந்தும் கலாசாரத்திலிருந்தும் விலகிப் போனதுதான்.

ரிஷி ரவீந்திரன் என்னும் இன்னொரு நெருங்கிய நண்பர் இந்தக் கட்டுரையைத் தமிழ் ஹிந்துவில் படித்துவிட்டுக் , கட்டுரை சமநிலையில் எழுதப்படவில்லை என்கிறார். ஆனால் அது எப்படி என்று அவர் சொல்லவே இல்லை. இன்றைய காலகட்டத்தில் ஆண்களும், சரி, பெண்களும் சரி எல்லாவகை குணங்களையும் கொண்டு இருந்தாலும் சமுதாயத்தில் இன்னமும் பெண்ணின் முக்கியத்துவம் குறையவில்லை என நினைக்கிறேன். குறைய ஆரம்பித்து வருகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு பெண் அப்பாவியாக வெகுளியாக இருந்துவிடலாம், தப்பே இல்லை. ஏனெனில் அந்தப் பெண்ணால் எப்படிப் பட்ட புத்திசாலியான கணவனையும் தன்வயப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் முட்டாள் கணவன் என்றாலோ மிக மிகப் புத்திசாலியான பெண்ணே தேவை. அத்தகைய புத்திசாலித்தனம் இன்றைய பெண்களிடம் இருக்கிறதா? அதற்காக ஒட்டுமொத்த ஆண்களை நான் முட்டாள் என்றெல்லாம் சொல்லவில்லை. இந்த இடத்தில் கணவனைச் சாமர்த்தியமாகவும், திறமையாயும் தன் வயப்படுத்துவதையே குறிப்பிடுகிறேன். ஏனெனில் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இன்னமும் திருமணமும், கணவனும் முக்கியமான அங்கம் வகிக்கின்றனர்.

படித்து லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும் முறையான திருமணவாழ்வு இல்லாமல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி வாழ்க்கை நிறைவடைவதே இல்லை. மேலும் பெண்ணானவள் ஆலமரத்தைப் போல் விழுது விட்டுப் படரும் இயல்பு கொண்டவள்.. மரத்தை எப்படி வேரோடு பிடுங்கினால் பாதிப்பு ஏற்படுமோ அப்படியே குடும்பம் என்னும் வேரில் இருந்து பெண் தன்னை விடுவித்துக் கொள்வதும் கடினமே. ஒரு பெண்ணால் எல்லாப் பந்தங்களையும் அறுத்துத் தன்னை விடுவித்துக்கொண்டு வெளிக்கிளம்புவது மிகக் கடினம். வெளிக்கிளம்புவது என்பது இங்கே வேலைக்குச் செல்வதை மட்டுமே குறிக்கவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திரா நூயியே, “அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததுமே நான் என் குழந்தைகளுக்குத் தாயாகவும், என் கணவருக்கு மனைவியாகவும் மாறிவிடுகிறேன்.” என்று சொல்லி உள்ளார். ஒரு பெரிய குளிர்பானக் கம்பெனியின் நிர்வாகியான அவரே இப்படிக் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது நம் நாட்டுப் பெண்கள் அதிலே பாதியானும் காட்டுகிறார்களா?

பெண்களாகிய நாம் நமது உரிமைகளை மட்டுமே நினைத்து அவைகளைப் பெற ஓடினோமானால் என்ன நடக்கும்? நம் கைகளுக்கு அவை எட்டாத் தூரத்திலேயே காட்சி அளிக்கும். வேண்டுமானால் போராட்டங்கள் நடத்திக் கடுமை காட்டிப் பெறலாம். அதுவா நன்மை? உரிமைகளை மட்டுமே மனசிலே நினைத்துக்கொண்டு நம் கடமைகளை மறக்கலாமா? கடமைகளுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் அல்லவா? கடமைகளைச் செய்தோமானால் நாம் கேட்காமலேயே அனைத்து உரிமைகளும் நம்மிடமே தானாகவே வருமே!

ஆணைவிடவும் பெண்ணுக்கு இயற்கை அறிவும், உள்ளுணர்வும் அதிகம் என்றே சொல்லலாம். அநேகமாய்ப் பெண்களின் உள்ளுணர்வுகள் நூற்றுக்கு நூறு சதம் சரியாகவே இருக்கும். ஆணிடம் இந்த ஆக்க சக்தியும், ஆன்ம இயல்பும் இயல்பாகவே குறைந்தே காணப்படும். இது இயற்கை விதித்த நியதி. அதை ஈடு கட்டும் வகையிலேயே பெண்ணிடம் இவை அபரிமிதமாய்க் காணப்படுகின்றன. வில்லையும், அம்பையும் எடுத்துக் கொள்ளுங்களேன். தனித்து இயங்க முடியுமா? வில்லில் அம்பைப் பூட்டி நாணால் வளைக்கவேண்டும் குறி வைத்த இடத்தில் தாக்க. குடும்பத்திலும் அப்படியே. வில்லாகிய ஆண், நாணாகிய பெண்ணால் அவள்பால் வளைந்தே அம்பு என்னும் குடும்பத்தைப் பூட்டுகிறான். அது தர்மம் என்னும் குறியைச் சரியாகப்போய்த் தாக்கும். தன் அன்பால் பெண் ஆணை வளைக்கிறாள்; என்றாலும் அவனுக்குக் கீழ்ப்படிகிறாள். அதே சமயம் அவனைத் தன்பால் இழுக்கவும் செய்கிறாள். ஆனாலும் அவனையே பின்பற்றிச் செல்கிறாள். வில்லுக்கு நாண் இல்லாமல் எப்படி வேலை இல்லையோ அப்படியே ஆணுக்குப் பெண் இல்லாமலும், பெண்ணுக்கு ஆண் இல்லாமலும் குடும்ப அமைப்பு என்பதே இல்லை.வலை உலகத்தில் இருக்கும் இளம் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சாட்டிங்கில் இதைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னவை:

“பெண்ணுரிமைவாதிகள் தங்கள் கடமைகளைத் தட்டிக் கழிப்பதற்காகப் போராட்டம் என்னும் போர்வைக்குள்ளே ஒளிந்து கொள்கிறார்கள். சமூகத்தில் பல வேறு வேறு தளங்களில் இயங்கும் பெண்களுக்கும் உண்மையாகவே அவர்களின் நியாயமான உரிமை மறுக்கப் படுகிறது. அத்தகைய பெண்களை அவர்கள் இனம் கண்டு அவர்களுக்காகப் போராடுவதில்லையே, ஏன்? அதிகம் படித்த சுயமாகத் தன் காலில் நிற்கும் பெண்களே இத்தகைய பெண் உரிமைப் போராட்டங்களை நடத்துகிறார்கள்; இந்தச் சித்தாந்தத்தை அவர்களே முழுமையாகப் பின்பற்றுகிறார்கள். மேலும் நகரத்துப் பெண்களிடமிருந்து கிராமப் புறத்துப் பெண்கள் வெகுதூரம் வேறுபட்டு இருக்கிறார்கள். அவர்களின் உரிமைகள் பற்றி என்றும், யாரும், எதுவும் பேசுவதில்லை. இப்போது சென்ற பதிவில் நீங்கள் எழுதி இருப்பவயும் நகரத்துப் பெண்களுக்கே செல்லும். கிராமத்துப் பெண்கள் குறித்து நீங்களும் எதுவும் சொல்லவில்லை. அது சரி, ஆண்களிடமிருந்து விடுதலை வேண்டும் என்னும் இந்தப் பெண்கள் ஆண்களே இல்லாத உலகில் இருக்கப் போகிறார்களா? அல்லது பெண்களே இல்லாமல் ஆண்களால்தான் இயங்க முடியுமா? இப்படிச் சில பெண்கள் பெண்ணுரிமை பேசிக் கொண்டு ஆண்களை எதிரிகளாய்ப் பார்த்தால் அந்த இயக்கம் எவ்வாறு வெற்றியடையும்?”

இவையே அவர் சொல்வதன் சாராம்சம். கிராமத்திலும் பெண்களின் நிலைமை மோசம் என்று சொல்லக் கூடிய அளவில் இல்லாவிட்டாலும், நவீன, நகர, நாகரிகத் தாக்குதல்கள் அங்கே அதிகமாகவே காணப்படுகின்றன. அடிக்கடி எங்கள் கிராமத்திற்குச் செல்பவள் என்ற முறையில் சிலவற்றைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன். நகரங்களிலேயே வசிக்கும் எனக்குக் கூடத் தெரியாத பல அழகு சாதனப் பொருள்களும், உடை அலங்காரங்களும் கிராமத்துப் பெண்களுக்குத் தெரிந்திருக்கின்றன. அதற்குக் காரணம் தொலைக்காட்சியும், அதன் தாக்கமுமே. நகரத்துப் பெண்கள் என்றாலே தலையை விரித்துப் போட்டுக் கொண்டு (இதுக்கு யார் என்ன சொல்லப் போறீங்களோ சொல்லுங்கள், ஆவலோடு காத்திருக்கிறேன்), சல்வார், கமீஸ் போட்டுக் கொண்டு/ அல்லது மிக மிக நாகரிகமாய்க் குட்டைப்பாவாடை அணிந்த வண்ணம்/, கவர்ச்சியான உடை உடுத்திக்கொண்டுதான் இருப்பார்கள் என்றும் அடிக்கடி ஹோட்டல்களில் அதுவும் நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஹோட்டல்களில் சாப்பிடலாம் என்பதும் அவர்கள் கனவு. அப்படி எல்லாம் இல்லை என்றாலும் சிலருக்கு நம்பிக்கையும் வருவதில்லை. நகரத்துப் பெண்களின் உடை அலங்காரங்களைத் தான் விளம்பரங்களிலே பார்க்கிறோமே என்பார்கள். இப்படியான ஒரு வாழ்க்கைக்காகவே, எங்களுக்குத் தெரிந்த ஒரு பெண் தன் கணவனை நச்சரித்து நகரத்தில் வீடு பார்த்துக் குடிவைக்கும்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறார். தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலிப் பக்கத்துக் கிராமத்தில் அழகான, ஓரளவு இன்னும் மாசுபடாத தாமிரபரணிக் கரையில் இருக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணான அவர், “இங்கே வராதே, உனக்கு இங்கெல்லாம் சரிப்படாது!” என்று நான் சொன்னதன்பின் என்னை எதிரியாகவே பார்க்கிறார். ஆனால் அவர் கணவரோ அவரை விட மன முதிர்ச்சி பெற்றவராய், “நீங்கள் சொல்வதின் உண்மை அவளுக்கு இங்கே வந்து பட்டபின்தான் தெரியும், வந்து இருக்கட்டும்,” என்று சொல்லிக் குடித்தனம் வைத்திருக்கிறார். இது ஒரு சின்ன உதாரணம்தான்.

இதற்கெல்லாம் காரணமே தொலைக்காட்சிகளும் அதன் நிகழ்ச்சிகளும் அவற்றின் தாக்கங்களுமே. தொலைக்காட்சி விளம்பரத்தின் சிகப்பழகு க்ரீம் விளம்பரத்தைப் பார்த்துட்டு அதை வாங்காத பெண்ணே தமிழ்நாட்டின் எந்தக் கிராமத்திலும் இல்லை என அடித்துச் சொல்லலாம். நம் மஞ்சளும், கஸ்தூரி மஞ்சளும் செய்யாத ஒன்றையா இவை செய்துவிடப் போகின்றன?? எனக்கு முகப்பரு வந்தபோது நான் போட்டுக் கொண்ட க்ரீம்– வசம்பு, கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் சந்தனக் கல்லில் அரைத்து, விளக்கெண்ணெய் விட்டுக் குழைத்து இரவு படுக்கும்போது போட்டால் காலை அவை அமுங்கிவிடும். இது என் சொந்த அனுபவம். இப்போது அதற்கெல்லாம் நேரம் எங்கே என்பவர்கள் வாரம் ஒருநாள் ஒதுக்கி இவைகளைப் பொடிசெய்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாமே? நிச்சயமாய்ப் பலன் தரும. (ஆட்டோ வராமல் இருந்தால் சரி! :D)

“அட, உனக்குச் சரியாப் போச்சுன்னா எல்லாருக்குமா?” என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை. இதன் மகத்துவம் தெரிந்தே தான் மஞ்சளுக்குப் பேடண்ட் வாங்கி இருத்திருக்கிறார்கள் மேல்நாட்டுக்காரர்கள். அங்கே இருந்து இதே அறிவுரை வந்தால் நாம் ஏற்றுக்கொள்வோம். நம் நாட்டிலேயே சொன்னால் அதை கேலி செய்வோம். மூடப் பழக்கம், பழங்காலம் என்றெல்லாம் சொல்லுவோம்.

இந்தச் சிவப்பழகு க்ரீம் போட்டுக்கொள்ளவில்லை என்றால் அந்தப் பெண் கருப்பாகவே இருப்பார்கள் என்று வேறு சொல்கிறார்கள். மேலும் கருப்பான பெண் என்றால் கல்யாணம் செய்துகொள்ள மாட்டார்கள் என்று முன்பு வந்த விளம்பரங்களிலே காட்டிக்கொண்டிருந்தார்கள். அது பரவாயில்லையா? அதை நிறபேதம் கற்பிக்கப் படுவதாய் ஏன் பெண்ணுரிமைக்காரர்கள் எவரும் நினைக்கவில்லை? அதை ஏன் அவர்கள் எடுத்துச் சொல்லவே இல்லை? ஏன் பெண் கருப்பாய் இருந்தால் மட்டம் என்று நம்மைப் பற்றி நாமே ஏன் தாழ்வாக நினைக்க வேண்டும்? அதற்காகவெல்லாம் மனம் சோர்ந்து போகலாமா? இந்தியாவின் பொது நிறமே ப்ரவுன் நிறம் தான். ஆனால் தொலைக்காட்சி சானல்களிலோ இப்பொழுதும் கருப்பான பெண்ணுக்கு வேலை கிடைக்காது; மாடல் ஆக முடியாது; நடன அரங்கில் திறமையாக ஆடத்தெரிந்தாலும் பின்வரிசைக்குத்தான் போகவேண்டும்; டல் திவ்யாவிற்கு டேட்டிங் போக வகுப்பில் சக மாணவன் கிடைக்க மாட்டான்; கருப்பாக இருப்பவள் சொல்லும் பிக்னிக் ஸ்பாட்டை யாருமே கவனிக்கமாட்டார்கள்… அப்படி இப்படி என்று என்னென்னவோ சொல்லிப் பயமுறுத்தல்கள். அந்தப் பெண் இந்தச் சிவப்பழகு க்ரீமைப் போட்டுக்கொண்டதும் அதிசய உலகிலிருந்து வந்த மாதிரி சிவப்பாய் ஆகிவிட்டாள் என்றும் காட்டுகின்றனர். அது எப்படி முடியும் என்று யாரும் யோசித்துக் கூடப் பார்ப்பதில்லை. கல்யாணம் தான் வாழ்க்கையா ஒரு பெண்ணுக்கு என்பவர்கள், இந்த மாதிரி மாடல் ஆனதோடு, அல்லது சினிமாவில் நடிப்பதோடு, அல்லது நல்லதொரு வேலை கிடைப்பதோடு திருப்தி ஆகி விடுகிறதா என்பதைக் கேட்டால் பதில் சொல்ல முடியுமா? வாழ்க்கையில் இப்படியோர் உயர்ந்த நிலைக்கு வந்தாலும் அந்தப் பெண்ணால் மன அமைதியோடு இருக்க முடியுமா?



இந்தச் சிவப்பழகு க்ரீமை வாங்கிப் பூசிக்கொண்டால்தான் (அதுவும் ஏழே நாளில் வித்யாசம் ஏற்பட்டு) உயர்ந்த இடத்துக்கு வரமுடியும்; இதை வாங்கினால்தான் உனக்கு வாழ்க்கையே என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் வாழ்க்கையின் மன மகிழ்வுக்கு இது மட்டுமே போதுமா என்று அவர்களைக் கேட்டால் அதை ஒத்துக்கொள்வார்களா? அவர்களுக்கு அவர்கள் தயார் செய்யும் பொருள் விற்பனையில் முதலிடத்தில் இருக்கவேண்டும். இதை ஒரு வியாபாரத் தந்திரம் என்று மட்டுமே சொல்லலாம். மற்றபடி பெண்கள் இதனால் உயர்ந்து விட்டார்கள் என்று சொல்ல முடியுமா? இதை ஒரு மதிநுட்பம் படைத்த முதிர்ச்சியடைந்த பெண் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்விடுவாள். ஆனால் படித்த பெண்களிடமே இதற்கு எதிர்ப்பே இல்லை. அவர்களும் இதனால் என்னவோ வாழ்க்கையே சாபல்யம் அடைவதாக நினைத்து வாங்குகிறார்கள்.

ஆண்களுக்கான ஷேவிங் க்ரீம் விளம்பரமா? அதற்கும் ஒரு பெண் வந்தால்தான் விளம்பரமே சாபல்யமடையும். அந்த ஆணைப் பார்த்த பெண்கள் அவனுக்காகவே வரிசையிலே நிற்பார்கள். இன்னும் செல்போன் என்னும் கைபேசி விளம்பரம்… ஓர் ஆண் அனுப்புகிற எஸ்.எம்.எஸ்ஸுக்கும், அவனோடு பேசவும் பெண்கள் வரிசையிலே வருவார்கள். வேறு வேலைவெட்டி எதுவும் எல்லாமல் என்னவோ இதற்காகவே பெண்கள் காத்துக்கிடக்கிறாற் போல் காட்டுவார்கள். எந்தப் பெண்ணுரிமைக் கழகம் அல்லது சங்கம், அல்லது மக்கள் பிரதிநிதிகள் இதை எதிர்க்கிறார்கள்? இப்போது ஒரு வாரமாய் வரும் மற்றொரு விளம்பரம், டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனத்திற்கு. அதில் பின்னால் பில்லியனில் அமரும் பெண்களை எவ்வளவு மோசமாய் உட்கார வைக்க முடியுமோ அவ்வளவு தரம் கெட்டு அமர்ந்து வந்தாலும் எங்க வண்டியிலே எதுவும் ஆகாது உனக்கு என்று சொல்கின்றனராம். இவங்க புத்தி இப்படியா போகணும்னு நினைச்சேன். வேகமாய் ஓடும் வண்டியில் இப்படி எல்லாம் செய்து கொண்டு வந்தால் போக்குவரவுக்கு எவ்வளவு இடைஞ்சல் ஏற்படும்னு சொல்லி இருந்தால் ஏற்றுக்கொண்டிருக்கலாம். :(

இங்கே என்னை அடிப்படைவாதி என்று சொல்லும் பலரும் இதை எல்லாம் ஆதரிக்கிறார்களா? இதற்காகக் குரல் கொடுத்த பெண்ணுரிமைக்காரங்களைச் சுட்டிக் காட்டட்டும். அவங்க கேட்பது 33% பெண்களுக்கான ஒதுக்கீடு தான். பாக்கி??? பாக்கியிலே எதுவும் வேண்டாமா? இந்த ஒதுக்கீடு கொடுத்த உடனே பெண்கள் முன்னேற்றம் அடைந்து இந்தியாவின் எல்லாப் பெண்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிடுமா? பெண்களால் அடிமைப்படுத்தப் பட்டு, அவங்களால் கஷ்டப்படும் ஆண்களையும் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரலாமா? ஒரு சிலர் கள்ளக்காதல் என்பதையும் சர்வசாதாரணமாக் கூறி இருக்கிறார்கள் . இது ஒன்றும் புதுசு இல்லை என்பது அவர்கள் கட்சி. அதனால் நடந்தால் நடக்கட்டும் என்று விட்டுவிடலாமா? வேண்டுமானால் கள்ளக்காதலையும் அங்கீகரிக்க வேண்டும் என்று பெண்கள் போராடவேண்டும் என்று சொல்கிறாரா? நல்லவேளையா அது பெண்கள் உரிமை என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.

எங்கோ நடந்திருக்கலாம். நடக்கும், நடக்கிறது. ஆனால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் மற்றப் பெண்களும் அதைப் பற்றி அறிய நேரிடுகிறதே? அதற்காக ரகசியமாக நடக்கவேண்டும் என்கிற அர்த்தத்திலே எல்லாம் சொல்லவில்லை. அடிப்படையான பெற்றோர் வளர்ப்பு முறையே சரியில்லாமல் போனதே இவ்வளவு அவலங்களுக்கும் காரணம். ஒரு தலைமுறைக்கே பக்தி என்றோ ஆன்மீகம் என்றோ எதுவுமே தெரியாமல் போனது தான் முக்கியக் காரணம். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போக ஆரம்பித்துக் குழந்தைகள் தனியாக வளர ஆரம்பித்ததில் பெற்றோரின் அணைப்பும், ஆதரவும் கிடைக்காத குழந்தைகளே பொதுவாய் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறினால் போதும்னு நினைத்து குறுக்கு வழியில் செல்கின்றனர்.. பெற்றோர் ஒரு முன்மாதிரியாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது குழந்தைகளை பக்தியும், கட்டுப்பாடும் சொல்லிக் கொடுத்து வளர்க்கவேண்டும். அல்லது அதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவேண்டும்.

22 comments:

  1. பெண்கள் எவ்வளவு கற்றாலும் வாழ்க்கைக் கல்வி கற்க வில்லை என்றால் வாழ்க்கையைத் திறம்பட நடத்தமுடியாது. சுதந்திரம் என்பது எல்லோருக்கும் வேண்டும் என்றால் பிறருடைய சுதந்திரத்தை ஒவ்வொருவரும் மதித்து நடக்க வேண்டும். எதிலும் வரையறை தாண்டாத கட்டுப்பாடே நாகரிகத்தின் அளவுகோல். இது இரு பாலருக்கும் பொதுவானது- குறிப்பாகப் பெண்களுக்கு.

    நீங்கள் சொல்வது போல் தன் கடமைகளை தவறாமல் செய்தால் உரிமைகள் தானாக கிடைக்கும்.

    இந்தமாத மங்கையர் மலரில் சகதிசுடர் இணைப்பில் தமிழ்செல்வன் எழுத்தாளர் சொல்லும் கருத்து:

    “போலி அழகுத் தொழிற்சாலை சாம்ராஜ்யங்கள் இடிந்து விழுந்து நிஜ அழகின் முழுக்கத்தை விவாதித்து எழுப்ப வேண்டும்.ஆண்பார்வையில் சொல்லப்பட்ட அழுகுகளை பொசுக்குவோம்! ஆயுதகுவியலென ஆகிவிட்ட அழகுப் பூச்சுகளை மறுத்தளிப்போம் சுத்தம், மலர்ச்சி, பிரியம், புத்திக்கூர்மை, சமூக அக்கறையால் அலங்கரிக்கும் பெண்ணின் இயல்பான அழகை மட்டும் ஆராதிப்போம்.”

    இப்படி எல்லோரும் இயல்பை ஆராதிக்க ஆரம்பித்து விட்டால் உடலுக்கும் பொருளாதாரத்திற்கு எல்லாம் நல்லது.

    உங்கள் பதிவு நல்ல விழிப்புணர்வை கொடுக்கட்டும்.

    ReplyDelete
  2. இந்த பதிவு பின்னூட்டங்களுக்காக எதிர்பார்ப்புடன் எழுதினது என்றாலும்,
    1 . பெண் "இப்படியாகப்பட்டவள் மட்டுமே" என்று தீர்மானமாக சொல்வதையோ,
    2 . "பார்ப்பனீயம்" அது இது என்று சொல்லும் மற்றோர் போல, உங்கள் கருத்துக்களை நிலை நாட்ட ஊரில் இருக்கும் பல விஷயங்களையும் ஒரு பதிவில் எழுதுவதையோ,

    நீங்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை, என்பதால்,

    ஒரே ஒரு பின்னூட்டம் மட்டுமே போடுகிறேன். சந்தித்தால் கட்டாயம் பேசுவோம்!

    ReplyDelete
  3. feminism இப்ப ரொம்பexploited and distorted. அதை சொல்லற மெஜாரிடி பேருக்கு அதோட உண்மையான சக்தி, அர்த்தம் புரியுமாங்கறதே சந்தேகத்துக்கு இடமா இருக்கு . அதோட பேர்ல தனக்கு சாதகமாவும் தன் சுய நன்மைகளுமே மட்டும் முன்னிட்டு சமூகத்துல இருக்கற லூப் ஹோல்ஸ் ஐ பயன்படுத்தி அந்நியாயம் செய்யற செயல் குழுக்கள், பெண்களை பாத்துண்டு வறேன் . பெண்ணோட சக்தி அன்பு, சுயமரியாதை, நியாயம் . அதுவே இல்லாம செயல்பட்டா அது ஃபெமினிஸமா இல்லை அனிமலிசமா?!!
    தான் தகாத பழக்க வழக்கங்கள் வச்சுண்டு கணவன் தன்னை கொடுமைபடுத்தறதா ப்ளேட்டை மாத்தற நிறைய நம் வம்சாவளியினறையும் நான் இப்ப இங்க பாக்கறேன் , இவா நரகமாக்கறது இவாளை கல்யாணம் பண்ணிண்ட குற்றத்துக்கு கணவனுடையவும், பிறந்த குற்றத்திற்கு குழந்தைகளுடைய வாழ்க்கையையும் !!!!!.. “ கொலையும் செய்வாள் பத்தினி ”dialogue ஐ நான் முன்னை நம்பினதில்லை. இப்ப நம்பறேன்

    இங்க இந்திய வம்சாவளியினர் வழிகெட்டுப்போக குடி, சிகரெட் சூதாட்டம் , பணம்.. அப்படித்தான் சொஸைட்டில INTERGRATED ஆவோம்னு ஒரு நினைப்பு !! décolleté tops , miniskirts என்ன பெருமை சேக்கறதுன்னு தெரியல்லை ! ஏன் மேலை நாட்டவா decent ஆ ட்ரெஸ் பன்னிக்கறவா, இருக்கறவா எத்தனை பேர் இல்லை?? Misconceived values . Sophistication னா என்னனே தெரியாம . பள்ளிக்கூடம் போகாம எழுத்தறிவு கூட கிடைக்காம குடும்பத்துல ந்யாயம் தர்மத்தோட பொறுமை பெரிய மனதுடன் நடந்துகொண்டு குடும்பத்தை வாழ வைத்த என் பாட்டிமாதிரி பல தாய்மார்களின் SOPHISTICATION படிச்சறிஞ்சு வேலை பார்ப்பதினால் வருவதில்லை . அதுக்கு குணம் , நல்ல எண்ணம் வேணும் . End of education is character. அதை கத்துக்க பல்கலைகழகமோ பட்டங்களோ தேவையில்லை . வாழ்க்கையை வாழும் முறை !! Actual western society நம்மை மதிக்கறது நம்ம values, culture ஓட வாழும் போதுதான் !!

    ReplyDelete
  4. வாங்க எல்கே, கீழே பாருங்க கெபி என்ன சொல்லி இருக்காங்கனு!:(

    ReplyDelete
  5. கோமதி அரசு, உங்களோட நிதானம் என்னை எப்போவுமே வியக்க வைக்கும். அதிலே கொஞ்சமாவது எனக்கும் வேண்டும்னு வேண்டிக்கிறேன். நன்றிங்க, மனம் திறந்த பின்னூட்டத்திற்கு.

    ReplyDelete
  6. வாங்க கெபி, பின்னூட்டங்களை மட்டுமே எதிர்பார்த்து எழுதுவதானால் என்னுடைய எல்லாப் பதிவுகளுமே வேறு மாதிரியா இருக்கும். நீங்க என்னைப் பற்றிய ஒரு கணிப்பை ஏற்படுத்திக்கொண்டு கொடுத்திருக்கும் இந்தப் பின்னூட்டத்தின் மையக்கருவை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். மற்றபடி உங்கள் கருத்து உங்களுக்கு, என் கருத்து எனக்கு.

    ReplyDelete
  7. பின்னூட்டங்கள் தேவை எனில் தமிழ் ஹிந்துவில் வந்து ஆறு மாதங்களுக்கும் பின்னர் இதை நான் இங்கே வெளியிட வேண்டிய அவசியமே இல்லை. மகளிர் தினம் என்பதால் இப்போது கொஞ்சம் கூடுதல் கவனிப்புக் கிடைக்கும், ஊதற சங்கை ஊதுவோம் என்ற எண்ணம் மட்டுமே! :((((((

    ReplyDelete
  8. ஜெயஸ்ரீ, உங்களோட அருமையான பின்னூட்டத்தின் மையக்கருவைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். நன்றிங்க, தெளிவான பின்னூட்டத்திற்கும், ஆதரவு காட்டியமைக்கும்.

    ReplyDelete
  9. @கெபி

    //இந்த பதிவு பின்னூட்டங்களுக்காக எதிர்பார்ப்புடன் எழுதினது என்றாலும்,//

    சிரிப்புதான் வருகிறது. எனக்குத் தெரிந்து இவர்கள் பின்னூட்டம் எதுவும் இல்லாவிட்டாலும் கூட தொடர்ந்து எழுதி வருபவர்கள்.
    எனவே உங்களின் இந்த வாதம் வலுவில்லாத ஒன்று

    ReplyDelete
  10. // உங்கள் கருத்துக்களை நிலை நாட்ட ஊரில் இருக்கும் பல விஷயங்களையும் ஒரு பதிவில் எழுதுவதையோ,

    நீங்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை/

    அவர் புரிதலில் தவறு இருந்தால் சொல்லுங்கள். நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கும்பட்சத்தில் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்வார் கண்டிப்பாக.

    ஒரு முன்முடிவுடன் எந்த ஒரு விஷயத்தையும் அணுக வேண்டாம்

    ReplyDelete
  11. ஆணைவிடவும் பெண்ணுக்கு இயற்கை அறிவும், உள்ளுணர்வும் அதிகம் என்றே சொல்லலாம்.//

    மிக சரி.. மேலும் நுகர்வோர் கலாச்சாரத்தையும் கிழி கிழின்னு கிழித்ததற்கு நன்றி..

    குழந்தைகள் +குடும்பத்தின் முக்கியத்துவம் சொன்னதுக்கு மனமார்ந்த பாரட்டுகள்..

    ஆண்களை அடிமையாக வைத்து வேதனைப்படுத்தும் பெண்களுமுண்டு.. அது படித்தவர் , படிக்காதவர் என்ற வித்யாசமெல்லாம் இல்லை..

    வேணுமென்றே கணவர் , அவர் வீட்டாரை பழிவாங்க கேஸ் போட்டு நடுத்தெருவுக்கு கொண்டு வந்தவரும் உண்டு.. ( என் சொந்தத்திலேயே ) ..

    ஆக எல்லா பெண்களும் அப்பாவியுமல்ல, எல்லா ஆண்களும் மோசமுமல்ல.

    இதேதான் நகர கிராம வித்யாசமும்..

    விடிகாலை எழுந்து சமைத்து , குழந்தைகள் , கணவனை அனுப்பி , பல பஸ் , ரயில் மாறி வேலைக்கும் போய் துன்பப்படும் நகரப்பெண்களுமுண்டு.. அவர்களுக்கு போராடவெல்லாம் நேரமில்லை..

    இது தவிர்த்து பல எதிரான கருத்துகளும் உண்டு.. நீங்க வருத்தப்படாவிட்டால் மட்டுமே சொல்வேன் அக்கா..

    ---------


    சாந்தி.

    ReplyDelete
  12. உங்கள் இளம் நண்பர் சொல்வது மிகச்சரி....

    கடமைகளைத் தவிர்ப்பதற்காகவே போராடுவதாகக் காட்டிக் கொள்பவர்கள் பல பெண்கள்.....

    நல்ல சாட்டையடி கீதா...பொய்முகங்களுக்கு..


    வாழ்த்துகள்...

    ReplyDelete
  13. உண்மையில் உங்கள் முதல் பதிவிற்கே பின்னூட்டம் போடலாமா என யோசித்துப் பின், "பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை!" எனச் சொல்லும் உங்களுடன் மனித வரலாறு முழுதும் விவாதிக்கக் கொஞ்சம் களைப்பாகவும் மிச்சம் நேரமில்லாமலும் இருந்ததால் அப்படியே விட்டு விட்டேன்.

    பதிவுகள் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது மிகவும் பொதுமைப்படுத்திய ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளாகவே படுகின்றன என்பது எனது தாழ்மையான கருத்து. இப்பதிவை வாசித்த பின் எனக்குத் தோன்றிய சில எண்ணங்கள்/கேள்விகள் கீழே:

    "இன்றைக்கு நம் நாடு இருக்கும் நிலைமைக்குக் காரணமே கிட்டத்தட்ட 50 விழுக்காடு பெண்கள் இந்தச் சுயக் கட்டுப்பாட்டில் இருந்தும் கலாசாரத்திலிருந்தும் விலகிப் போனதுதான்."

    இக்கூற்றை எந்த ஆய்வை வைத்துச் சொல்கிறீகள்? இந்த முடிவுக்கு ஆதாரங்கள் என்ன என்று கூறுவீர்களா?


    "ஒரு பெண் அப்பாவியாக வெகுளியாக இருந்துவிடலாம், தப்பே இல்லை. ஏனெனில் அந்தப் பெண்ணால் எப்படிப் பட்ட புத்திசாலியான கணவனையும் தன்வயப்படுத்திக்கொள்ள முடியும்."

    எப்ப‌டி?

    "கடமைகளைச் செய்தோமானால் நாம் கேட்காமலேயே அனைத்து உரிமைகளும் நம்மிடமே தானாகவே வருமே!"

    எந்த‌க் க‌ட‌மைக‌ளைச் செய்யாம‌ல் உரிமைக‌ளுக்காக‌ப் போராடுகிறார்க‌ள்? க‌ட‌மைக‌ளைச் செய்ய‌ உரிமைக‌ள் தானாக‌ வ்ருமென‌ எதை வைத்துச் சொல்கிறீர்க‌ள்?

    ம‌ற்ற‌ப் ப‌டி இந்த‌ உட‌ல‌ழ‌குக் கிறீம்க‌ள், fair and lovely ads எல்லாம் கூட‌ ஆணாதிக்க‌ ச‌முதாய‌த்தின் பிர‌திப‌லிப்பே. என‌க்குத் தெரிந்து நான் வாசிக்கும் இந்தியாவிலிருந்து எழுதும் பெண்ணிய‌வாதிக‌ள் இதை எதிர்த்தே குர‌ல் கொடுக்கின்ற‌ன‌ர்.

    சில‌
    உதாரணங்கள்:
    The Fair and the Lovely

    என்ன 'வலி' அழகே!

    Size 0...Size -1...Size -2

    The Woman and the Mainstream Media


    நானே ஒருமுறை ஒருவ‌ரின் வீட்டில் இந்த‌ ad பார்த்ததிலிருந்து பலரிடம் கதைத்துள்ளேன். என்னுடன் கறுப்புத்தோலைப் பற்றிக் கதைக்கும் அனைவரிடமும் கேட்பது "எமது இயற்கையான தோல் நிறத்தையே எமக்குப் பிடிக்கவில்லை. நாம் தமிழர்/திராவிடர் என்று வாய் கிழியக் கத்திக்கொண்டிருந்தால் காணுமா?"

    மேலை நாடுகளில் கூட இந்த மாதிரிப் பெண்களுக்குச் சம்பந்தமில்லாத/இருபாலினருக்கும் பொதுவான‌ பொருட்களுக்குக் கூட பெண்களை முன்னிருத்தும் விளம்பரங்களை பெண்ணியவாதிகள் எதிர்த்தும் கொஞ்சமாவது வெற்றியடைந்தும் வருகின்றனர்.


    "ஒரு தலைமுறைக்கே பக்தி என்றோ ஆன்மீகம் என்றோ எதுவுமே தெரியாமல் போனது தான் முக்கியக் காரணம்."
    திரும்பவும் கேட்கிறேன் - எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  14. Dear Mrs Shivam
    Iam unable to post this in your comment box . Can you cut and paste it if appropriate ?
    Jayashree




    பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை! //



    Exactly!! male dominated society என்று எல்லா சமூகங்களிலும் சொல்லப்பட்டது என்னவோ உண்மை!ஆனா அடிமை /SLAVERY?? அது நமது மனப்பான்மை!

    உத்யோகம் புருஷ லக்ஷணம்னு இருந்தது.அது எப்ப தற்காலத்தில் கட்டுப்படியாகலையோ அப்போ தன் நன்மைக்கு வேண்டி தன் இணக்கத்தின் பேரிலும் இருவர் உத்யோகம் என்று வந்தது! அதுக்காக வேலைக்கு போகாம குடும்பத்தை பாத்துக்கறவா அடிமைனு அர்த்தமா ? ஒரு பெண் தான் வெளிவேலைக்கு போகாம தன் குடும்பத்துக்கு மிச்சம் பண்ணறது ஒருத்தர் வெளில போய் சம்பாதிக்கறதை விட ஜாஸ்த்தி!! அதுல இருக்கற management skills, opportunity emotional benefit for the family எல்லாமே உயர் தரம்!! இதை எனக்கு சொல்லிதர 4த் லெவல் படிச்சுண்டு இருந்த என் பிள்ளை வேண்டியிருந்தது !!

    அந்த காலத்தில பெண்களை படிக்க வைக்க வசதியில்லாத குடும்பங்கள் உண்டு . ஆனா அந்த பெண்களிடம் தைரியம் கண்ணியம் மனோ வாக்கு காய சுத்தம் இருந்தது . என் பாட்டி அந்த மாதிரி வசதியற்ற குடும்பத்தில் பிறந்து 2 வது மனைவியாய் வாக்குப்பட்டு மூத்த தாரத்தின் குழந்தைகளையும் சேர்த்து 13 குழந்தைகளுக்கு தாயாய் இருந்தவர் . தானே எழுத்துக்கூட்டி படிக்கக் கற்றுக்கொண்டவர் . என் தாத்தா பெயர் பெற்ற வக்கீல். அடுப்படியும் குடும்பத்துக்கு செய்வதுமே அவளது வாழ்க்கை . அதை அவர் ஒருபோதும் அடிமைத்தனமாய் பாத்ததும் இல்லை!!எந்த கல்யாணம் காக்ஷி யும் என் பாட்டியை கேட்க்காமல் கலந்து ஆலோசிக்காமல் என் தத்தா செய்ததில்லை. சம்பந்திகள் கல்யாணம் பேச வந்து கூடத்தில் இருந்துகொண்டிருக்க ,லௌகீக விஷயத்துக்கு "கொஞ்சம் இருங்கோ" என்று தாத்தா "அம்மா மீனாக்ஷி இன்ன விஷயம் நீ என்ன சொல்லற" என்று மறைவில் நின்று கொண்டிருந்த பாட்டியைக் கூப்பிட்டு கேட்டது என்னும் என் கண்ணில் நிற்கிறது .தகுந்தவர்களுக்கு உரிமைகள் ஒருபோதும் மறுக்கப்படறது இல்லை . கல்யாணம் ஆகி ஒரு முறை கூட தன் வீட்டுக்கு போனதில்லை . அது என் தாத்தா , குடும்பம் வேண்டாம் என்று சொல்லியில்லை . நான் போய் என்ன செய்யப்போறேன் அதற்கு பதில் என் அண்ணா பிள்ளையை படிக்க நம்மிடம் வைத்துக்கொண்டு உருப்பட உதவி செய்யுங்களேன் , என் தங்கை பெண்ணிற்கு கல்யாணத்துக்கு உதவி பண்ணலாமே என்று அவளுக்கு தெரிந்த நியாய தர்மத்தில் சந்தோஷமாகவே குடும்பம் நடத்தினார் .இந்த காலத்தில் எத்தனை பேருக்கு அந்த மனம் தைரியம் இருக்கு .எனக்கு தெரிந்த நிறைய சம்பாதிக்கற வசதி படைத்த ஒருவர் வசதி குறைந்த தன் மைத்துனர் மக்கள் கல்யாணத்துக்கு பெர்ஃயும் பார்சல் வேறோருவர் மூலம் அனுப்பிச்சாங்க!!! எங்கிட்ட சிரிச்சுண்டே "நாம போனா நம்ம தலையில் செலவு தீட்டிடுவாங்கன்னு !! வாயடைச்சு போச்சு இந்த மனோபாவம் பாத்து. . ஏறுக்குமாறா நியாயம் குறையும் கோரிக்கைகளில் கருத்து வேறுபாடு வந்தால் உடனே அது இப்பல்லாம் அடிமைத்தனமாகி விடறது!! "என் புருஷன் என்னை அடக்கி வைக்கிறான் , நான் பாவம்!! மாடா உழைத்து குடும்பத்துக்கு செய்யறேன் என்று "OH POOR ME " மனப்பான்மை வந்தால் கட்டாயம் நாம் அடிமைகளே. எங்கேந்து வரது எந்த உணர்வு?? Lack of self confidence நன்றும் தீதும் பிறர் தர வாரா. குனிய பிறத்தியார் வச்சுட்டதா சொல்லறது எவ்வளவு தூரம் சரி. அப்போ நம்ம எவ்வளவு ஈஸியா அந்த பவரை பிறத்தியார் கையில் தந்துடறோம் நு பாக்க வேண்டாமா !!!! அப்ப குனிஞ்சு நிக்கக் கூடாது, நிக்கற மாதிரி செய்யக்கூடாது. நிமிரணும் . அதையும் பிறத்தியார் செய்யமுடியுமா??யார் தன்னை அடிமை, பிறத்தியார் அடிமைனு நினைக்கிறார்களோ அது சம்பந்தப்பட்டவர்களின் PASSIVITY என்பது என் கருத்து. போட்டுக்கற கண்ணாடியோட நிறத்தை பொருத்து தான் பார்வை !! இருட்டில் கருப்புக்கண்னாடி வெளிச்சம் போட்டுக்காட்டாது !!அறிவை மனசாக்ஷியோட உபயோக படுத்தணும்

    ReplyDelete
  15. எல்கே, அவங்க புரிதலும், என்னோட புரிதலும் அடிப்படையே மாறுபடுகிறது. சரி அவங்க கருத்து அவங்களுக்கு! பெண்கள் பெண்களாகவே இருக்கணும் என்று நான் சொல்லுவதை அவங்க புரிஞ்சுக்கலை. சுதந்திரம் என்றால் எதுவேண்டுமானாலும் செய்யணும்னு அர்த்தம் இல்லை! :((((

    ReplyDelete
  16. வாங்க சாந்தி, பெண்களுக்குத் துன்பம் இல்லைனு நான் சொல்லவே இல்லையே? பல பெண்களும் இத்தகைய துன்பத்தை வலுவில் வரவழைச்சுக்கறாங்க.

    //பல பஸ் , ரயில் மாறி வேலைக்கும் போய் துன்பப்படும் நகரப்பெண்களுமுண்டு.. அவர்களுக்கு போராடவெல்லாம் நேரமில்லை..//

    பல பஸ் இல்லாட்டியும் நானும் பேசின் பிரிட்ஜ் போய் அங்கிருந்து பேருந்து பிடிச்சுத் தான் அலுவலகம் போயாகணும். அப்படித் தான் போயிருக்கிறேன். குழந்தை உண்டாகி ஏழு மாசம் வரைக்கும் அப்படித் தான் போனேன். அதுக்கு அப்புறம் மருத்துவர் கட்டளையின் பேரில் விடுமுறை எடுக்கவேண்டியதாயிற்று. எல்லாவற்றையும் யோசித்தே எனக்கு ஓர் இடம் வேலை, அவருக்கு வேறு இடம் வேலை, அதுவும் அவர் மத்திய அரசு, நான் மாநில அரசு. கூட்டிக் கழிச்சுப் பார்த்தே வேலைக்குப் போகவேண்டாம் என்ற முடிவையும் எடுத்தேன். இது ஒவ்வொரு கணவனும், மனைவியும் அவங்களுக்குள் குடும்ப நிலையை யோசித்துத் தீர்மானிக்கவேண்டிய ஒன்று.

    ReplyDelete
  17. வாங்க பாசமலர், பல மாதங்களுக்குப் பின் பார்க்கிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. அந்த இளைஞர் வலை உலகில் இருப்பவர் தான். நன்கு அறிமுகமானவர் தான். :))))) நன்றிங்க.

    ReplyDelete
  18. @Thiva, Your presence noted! :D

    ReplyDelete
  19. The Analyst,

    உங்களை விடவும் களைப்பும், நேரமில்லாமையும் எனக்கும் இருக்கு. முதலில் இந்த சமூகத்தின் மேலேயே கோபமாயும், களைப்பாயும் இருக்கிறது. பல செய்தித் தாள்களிலும், பெண்கள் பத்திரிகைகளிலும் இன்று முன்னிலைப் படுத்தப் படும் ஒரு விஷயம் இது. ஆய்வு செய்யணும்னு இல்லைனு நினைக்கிறேன். வெறும் புள்ளி விபரங்களை வைத்து என்ன செய்ய முடியும்??

    ஆதாரங்கள் என்று கேட்டால் அக்கம்பக்கமே நிறைய இருக்கு, நடக்கிறது. நேரிலே கண்ட பல நிகழ்ச்சிகள் இருக்கின்றன. உரிமைகள் யாருக்கும் எங்கேயும் எப்போதும் இல்லாமல் போகவில்லை. சிலரால் எடுத்துக்கத் தெரியாமல் இருக்கலாம். நாம் பிறந்த வீட்டில் என்ன உரிமையுடன் இருக்கிறோமோ அதைவிடவும் அதிகமாய்ப் புகுந்த வீட்டில் நமக்கு உண்டு. ஆனால் எத்தனை பெண்களுக்கு இது புரிகிறது?

    அழகு சாதனப் பொருட்களைப் பெண்ணியவாதிகள் எதிர்த்ததால் என்ன பலன் கிட்டி இருப்பதாய்ச் சொல்கிறீர்கள்? இன்னமும் இரு சக்கர வாகனத்திற்கு வந்து கொண்டிருக்கும் ஒரு மட்டமான விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்க முடியாது. அங்கே உங்களுக்கு இந்திய சானல்கள் தெரிய வாய்ப்பில்லை. ஆண்களுக்கான ஷேவிங் க்ரீமுக்கும் பெண் தான் வர வேண்டி இருக்கு. அதிலும் அந்த க்ரீமைப் போட்டுக்கொண்டு ஷேவ் பண்ணினவன் பின்னால் பெண்கள் தேடிக்கொண்டு அலைவார்களாம்! கேவலமாய் இல்லை?

    மற்றபடி உங்கள் வாழ்க்கையும், உங்கள் தாய் நாட்டின் நிலையும் மேம்பட என் மனப்பூர்வமான வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். பிரார்த்தனைகளில் எனக்கு நம்பிக்கை உண்டு.

    முதல் வரவுக்கும், நீண்ட கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  20. ஜெயஸ்ரீ மெயிலில் அனுப்பிய கமெண்டுக்கு பதில்.

    ஜெயஸ்ரீ, வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் பற்றிய உங்கள் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். என்னோட பாட்டியும் ஐந்து வயதில் திருமணமாகி வந்து ஐந்து பெண்களையும், நான்கு ஆண்களையும் பெற்று வளர்த்து ஆளாக்கியதோடு அல்லாமல், ஒரு மருமகள் கூட அவங்க பேரில் குறையும் சொல்ல முடியாதபடிக்கு வாழ்ந்தார்கள். சொல்லப் போனால் எங்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி. எங்க தாத்தாவும் ஒரு வக்கீல் தான். சொல்லப்போனால் பெரிய இடத்து வக்கீல். என்றாலும் பாட்டி வீட்டை நிர்வகிப்பதிலும், குழந்தைகளை வளர்ப்பதிலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான சலுகைகளைத் தருவதிலும் அவங்களுக்கு ஈடு அவங்க தான். இத்தனையிலும் தன் திருமணமாகாத மைத்துனரையும் மாமியார், மாமனாரையும் கடைசி வரை வைத்துக் காப்பாற்றினாங்க.

    ReplyDelete