எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 15, 2011

அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், அடக்க முடியாத் தொல்லைகளும் 3

 
Posted by Picasa
லிஃப்டுடன்கூடிய கலவை மெஷினை ட்ராக்டர் இழுத்து வருகிறது. கலவை மெஷின் வீட்டுக்கு எதிரே வைப்பாங்க. அதிலே சிமெண்ட், ஜல்லி, மணலைக் கொட்டும்போது எழும் தூசியை நாம் சுவாசிக்க முடியாது. முக்கியமாய் ஆஸ்த்மாவினால் அவதியுறும் எனக்கு. இதைச் சொன்னாலும் கேட்டுக்கலை. எங்க வேலை ஆனால் போதும்னு இருக்காங்க. இன்னும் ஒரு தளம் போட்டாச்சுன்னா அப்புறமா இவ்வளவு தொந்திரவு இருக்காதுனு சமாதானம். அதுக்குள்ளே ஏதேனும் உடல்நலம் சீர் கெட்டால் என்ன செய்யறது? அந்தக் கேள்விக்கு பதிலே இல்லை. :( இதை எல்லாம் படிச்சதும் சிலருக்கு எனக்கு அடுக்குமாடிக் குடியிருப்பே பிடிக்காதா எனவும், எல்லாருமே தனி வீடு கட்ட முடியுமா எனக் கிண்டலாயும் தனி மடல்களில் கேட்டிருக்கின்றனர். நிச்சயமாய் எல்லாராலும் கட்ட முடியாதுதான். ஆனால் அரசாங்கம் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களைச் செயல்படுத்தினால் இந்த மாதிரி தீப்பெட்டிபோல் அடுக்குவதைத் தவிர்க்கலாம். சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும், மீறினால் குறைந்த பட்சத் தண்டனையே கடுமையானதாக ஆக்கவேண்டும். உயிருக்கு இந்தியாவில் தான் மதிப்பே இல்லை. இது ஒரு சோகமான, ஆனால் சுடும் உண்மை. அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டக்கூடாது என்பதே என் நிலைப்பாடு இல்லை. அதை முதலில் தெளிவாக்குகிறேன். கட்டட்டும், தாராளமாய்க் கட்டட்டும். தாராளம் கட்டுவதில் மட்டும் இல்லாமல் இடங்கள் தேர்ந்தெடுப்பதிலும் இருக்கவேண்டும். குறைந்த பட்சமாய் மூன்று கிரவுண்டு இடமாவது இருக்கவேண்டும். அரை கிரவுண்டு என்பது 1200 சதுர அடிகளே இருக்கும். அவற்றிலே கொஞ்சம் கூட இடம் விடாமல் 1199 அடிகளையும் வீடாய்க்கட்டினால் எப்படி?? அதுவும் பக்கத்திலே இருக்கிறவங்களுக்குத் தான் அத்தனை தொந்திரவும் வருகிறாப்போல் கட்டறாங்க. வீடுகட்டறது என்பது என்ன சும்மாவா?? அஸ்திவாரம் போடறதிலே ஆரம்பிச்சு எவ்வளவு வேலை இருக்கு??



அது வேறே சத்தம் தாங்காது. மதியம் முழுவதும், ஜேசிபி மெஷின் வந்து பூமியைத் தோண்டும் சத்தம் சில நாட்கள். அப்புறமாய்க்கம்பி கட்ட மெஷின் ஓட்டுவாங்க. கைகளாலும் கம்பிகளை வளைப்பாங்க. அதுக்கான பட்டறையை நம்ம வீட்டு வாசல்லே போடுவாங்க. வாசலிலே ஒரு அவசரத்துக்குக் கூட நாம வெளியே வந்துட முடியாது. ஒரு பக்கம் இப்படின்னா, எதிரே கட்டறவங்க மட்டும் என்ன சும்மா இருக்க முடியுமா? அவங்களும் வீடுகள் கட்டி லாபம் பார்க்க வேண்டாமா? போடுங்க அவங்க கட்டும் மணல் ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் அவங்க கம்பி கட்டறதை நேரே நம்ம வீட்டுக்கு எதிரேயே வச்சுப்பாங்க. அந்த மெஷினில் உடைக்கும் கம்பியின் கறுப்புத் துகள்களால் நம்ம வீட்டின் வாசலெல்லாம் கறுப்பு, கறுப்பாய்க் காட்சி அளிக்கும். அதைச் சுட்டிக் காட்டினால் ஒரு முறைப்பு, ஒரு கிண்டல், ஒரு நக்கல். இப்போதானே வேலை செய்யற அம்மாவும் பெருக்கினாங்க, நானும் பெருக்கினேனேனு சொன்னால் முறைப்பாங்க. உடனே ஜாடைப் பேச்சுக்கள் ஆரம்பம் ஆகும்.



நம் தமிழ் நாட்டிலேயே மிக மிக மோசமான ஒரு நடத்தை இப்படி அடுத்த வீட்டு வாசலில் குப்பையைப் போடுவதுதான். இதை நான் வேறெங்குமே கண்டதில்லை. பக்கத்து வீடு இடிக்கும் முன்னர் அங்கே மாடியில் குடியிருந்தவங்க தெரு நாய்க்குப் போடும் சாப்பாட்டை எல்லாம் சரியா எங்க காம்பவுண்டுக்கு நேரே தான் வைப்பாங்க. அவங்க பக்கம் சுத்தமாய் இருக்காம். அப்படின்னா இங்கே அசுத்தம் பண்ணலாமா?? அதைக் கேட்க முடியாது. இத்தனைக்கும் சுகாதாரப் பணியாளர்கள் வராங்கனு தான் பேரு. அவங்க தெருவைப் பெருக்கி நான் பார்ப்பது தீபாவளி அன்று மட்டுமே. தீபாவளிக்கானக் கூடுதல் தொகை வசூலிக்கவே பெருக்குவாங்க. தினசரி விழும் குப்பைகளை நாங்க தான் பெருக்கிச் சுத்தம் செய்து குவித்து வைப்போம், அல்லது ஒரு பையில் போட்டுக் கட்டி வைப்போம். சில சமயம் தென்னை மரங்களைக் கழித்தால் அவற்றை எடுத்துச் செல்ல அவங்களுக்குத் தனியாய்ப் பணம் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தாலும் அவங்க வந்து தூக்கிப் போக மாட்டாங்க, நாம தான் வண்டியிலே தூக்கிப் போடணும். சுகாதாரப் பணியாளர்களின் இந்த நடத்தை தனி வீட்டுக்காரங்க கிட்டே மட்டுமே. ஏனெனில் அவங்க ஒருத்தர் கிட்டே இருந்துதானே பணம் வருது. அதுவே அடுக்குமாடிக் குடியிருப்புன்னா அவங்க மாடிக்கே போய்க் குப்பையை எடுத்து வராங்க. அதையும் பார்க்கிறோம். எட்டுக் குடியிருப்பு இருந்தால் எட்டுப்பேருமாய்ச் சேர்ந்து வசூலிச்சு மொத்தம் நூறு ரூபாயிலிருந்து நூற்றைம்பது வரை கொடுக்கிறாங்க இல்லையா? அவங்களுக்கு அதானே லாபம்? ஆகக் கூடி இங்கே மனித நேயம் என்பதெல்லாம் வெறும் பேச்சு என்பதும் தெரிஞ்சுக்கலாம்.



என்ன சொன்னேன்? ஆமாம், குப்பை போடறதைப் பத்திச் சொன்னேன் இல்லையா? அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு இடையில் நாம் குடியிருந்தால் சாண்ட்விச் மாதிரி நாம நசுங்கித் தான் போவோம். இந்தப்பக்கமும் குப்பையை எல்லாம் நம்ம வீட்டு வாசலில் கொட்டுவாங்க. அடுத்த பக்கத்துக்கும் நம்ம வீட்டு வாசல்தான் குப்பைத் தொட்டியாக இருக்கும். மேலே இருக்கிறவங்க பால்கனியில் உலர்த்தும் துணிகள் நம்ம வீட்டிலே தான் வந்து விழும். அவங்க இறங்கி வந்தெல்லாம் எடுத்துக்க மாட்டாங்க. நாமதான் அவங்களைப் பார்த்துத் தேடிக் கண்டு பிடிச்சுக் கொடுக்கணும். இல்லைனா வாரக் கணக்கானாலும் துணி விழுந்த இடத்திலேயே கிடக்கும். அவங்க பசங்க பந்து விளையாட அவங்க வாசலுக்கும் காம்பவுண்டுக்கும் இடையே இருக்கும் இரண்டடி இடைவெளிதான் கிடைக்கும். அதிலும் ஒரே நேரத்தில் எல்லாருடைய குழந்தைகளும் ஆளுக்கொரு பந்தை வைத்துக் கொண்டு விளையாடுவாங்க. எல்லாப் பந்துகளும் சரியா விளையாட ஆரம்பிச்ச அடுத்த இரண்டாவது நிமிஷம் நம் வீட்டுத் தோட்டத்துக்குள்ளே வந்துவிழும். அவங்க விளையாடுவதற்கு நேரம், காலம் இருக்காது. குழந்தைகள் தானே. அதை எல்லாம் சொல்லிட்டும் இருக்க முடியாது. உண்மை. ஆனால் நாம்?? நமக்கு வேலையே இருக்காதா? அப்போத் தான் யாராவது தொலைபேசியில் கூப்பிடுவாங்க. பேசிட்டு இருப்போம். அல்லது சமையலில் ஆழ்ந்திருக்கலாம். வழிபாடுகள் பண்ணிட்டு இருக்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். மதிய நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு இதெல்லாம் கவலையே இல்லை.



அவங்க பந்துகள் இங்கே வந்து விழுந்ததும் எல்லாரும் கும்பலாய் வந்து ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அழைப்பு மணியை அழுத்துவாங்க. நமக்கு முடிஞ்சால் உடனே கதவைத் திறந்து எடுத்துக்கச் சொல்லலாம். முடியலைனா என்ன செய்யறது?? ஒரு நாள் நாங்க சாப்பிட உட்கார்ந்தோம், பந்துகள் விழ ஆரம்பிக்க இரண்டு முறை சாப்பாட்டு நடுவில் எழுந்து போய்க் கதவைத் திறந்து எடுத்துக்கொடுத்தோம். ஆனால் இதே தொடர்கதையாகவே ஒருநாள் கடுமையாகக் கண்டிச்சோம். அப்புறம் என்ன நடந்ததுனு நினைக்கறீங்க?



திரு அண்ணா கண்ணன் எங்க வீட்டின் நிலத்து மதிப்புக் கூடி இருக்குமே எனக் கேட்டிருக்கிறார். இருக்கலாம். அது குறித்த நிலவரம் தெரியவில்லை. ஆனால் கும்பகோணம் போயிருந்தப்போப் பார்த்தேன். பலரும் வீடுகளை இடித்துவிட்டு அங்கேயும் துளிக்கூட இடம் விடாமல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட ஆரம்பிச்சிருப்பதையும் எண்ணூறு சதுர அடி குடியிருப்பு முப்பது லக்ஷம் எனவும் சொல்கின்றனர். 2,400 சதுர அடிக்கான நிலம் கும்பகோணத்தில் 24 லக்ஷத்தில் இருந்து முப்பது லக்ஷம் வரை ஆகின்றது. இந்த விஷயத்தை அப்புறமாப்பார்க்கலாம். இப்போதைக்குத் தொல்லைகள் தொடர்கின்றன. நிலத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போவது, சாதகமா, பாதகமா என்பது குறித்துப் பலரின் கருத்துக்களையும் அறிய ஆவல்.

9 comments:

  1. எனக்கு இப்படி விலை ஏறிக்கொண்டே போவது சரியில்லை என தோன்றுகிறது.அரசு இப்பொழுதே இதில் கவனம் செலுத்தி சட்ட ஒழுங்குமுறை கொண்டு வரவில்லை என்றால் பின்னர் பணவீக்கத்தினால் பெரிய அவதிதான் வரும்.

    ReplyDelete
  2. என்னதான் செய்வது? அம்பத்தூர் கட்டிடங்களில் ஒரு பால்கனியில் இருந்து இன்னொரு பால்கனிக்கு அப்படியே தாண்டி போய்விடலாம். என்னே செக்யூரிட்டி!

    ReplyDelete
  3. மாமி
    இப்படிதானே நம் ( உங்கள் & என்) வீடு கட்டும் பொழுது, அடுத்த வீட்டார், எதிர்த்த வீட்டார் அவதிப் பட்டு இருப்பார்கள், அவர்கள் நமக்காகப் பொறுத்துக் கொண்டு இருக்க வில்லையா

    ReplyDelete
  4. உண்மைதான் ராம்வி. சட்ட ஒழுங்கு முறை இல்லாமல் இல்லை. அதைச் செயல்படுத்தும் சரியான கட்டமைப்பு இல்லை. நிர்வாகம் சரியாக இருக்கவேண்டும். :(((( இருக்கும் சட்டங்களை முறையாகப் பயன்படுத்தினாலே போதும். :(

    ReplyDelete
  5. திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P

    ReplyDelete
  6. ராம்ஜி யாஹூ, எங்க வீடெல்லாம் தனி வீடு, தனி வீடு கட்டத் தேவையான சாமான்கள் அடுக்குமாடிக்குடியிருப்புக்களை விடவும் கம்மியாக இருக்கும். வீட்டின் உள்பக்கமே கொட்டிக்கலாம். மணல், ஜல்லி எல்லாம், செங்கல் மட்டும் வீட்டின் சுற்றுச்சுவருக்கு அருகே அடுக்கலாம். அதோடு கலவைகளோ, மரவேலைகளோ வேறு இடத்தில் செய்து கொண்டு வரலாம். கம்பிகள் கட்டுவதும் வீட்டின் காம்பவுண்டுக்கு உள்ளேயே இருந்து செய்ய முடியும், ஏனெனில் தேவை குறைச்சல். இவ்வளவு சிரமம் இருக்காது. அதோடு இங்கே ஒரே சமயம் இரண்டு பக்கமும் கட்டுவதால் பிரச்னை அதிகம். எதிரேயும், பக்கத்திலேயும் கட்டறாங்க. எங்க வீட்டு ஜன்னல் கண்ணாடியில் இருந்து ஏ.சி. கம்ப்ரெசர் வரையிலும் தாக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது. ஜன்னல் கண்ணாடி உடைஞ்சு மாத்தியாச்சு. காம்பவுண்டுக்கு உள்ளே கான்க்ரீட் மிக்சர், பலகைகள், செங்கல்கள், நேத்திக்கு பாண்டோடு சிமெண்ட் கலவைனு விழுந்து கொண்டே இருக்கின்றன. தனி வீடு எனில் தேவையான இடம் விட்டே கட்டுவோம்.இப்படி ஒட்டிக் கட்ட மாட்டோம். பணம் பண்ணுபவர்கள் தான் லாபத்துக்காகப் பிறருக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.

    ReplyDelete
  7. திவாவின் கருத்து :)
    விலை கூடுவது இயற்கை. (குறையும் போது புலம்பாமல் இருப்போமா?)

    அடுக்குமாடிக் கட்டிடங்கள் நல்லதா கெட்டதா என்பது தான் கேள்வியோ?

    ReplyDelete
  8. விலை கூடுவது இயற்கை. (குறையும் போது புலம்பாமல் இருப்போமா?)//
    அப்பாதுரை, எங்களைப் பொறுத்த வரையிலும் இதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. தொழிலாக வைத்துக்கொண்டால் ஆர்வம் இருக்குமோ என்னமோ! என் கணவர் ஒரு சிலருக்கு உதவி என்ற வகையில் கட்டுமானத்தின் போது மேற்பார்வை செய்ததுண்டு. ஆகவே விலை குறைந்தால் புலம்பல் என்றெல்லாம் இருக்காது. :))))

    ReplyDelete
  9. அடுக்குமாடிக் கட்டிடங்கள் நல்லதா கெட்டதா என்பது தான் கேள்வியோ?//

    பொதுவாய்த் தீமைகளே. பாதுகாப்பு என்பது கேள்விக்குறி என்பதோடு ஒரு விபத்து என நடக்கும்போது இருபக்கமும் உயிர்ச்சேதமும் ஏற்படலாம். ஆனால் இதை எல்லாம் யார் யோசிக்கிறாங்க? :((((( இன்று சென்னையில் விதியை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களே பெருமளவுக்கு இருக்கின்றன. எந்த அரசும் அதற்கு வலுவாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நான் சொல்லுவது செவிடன் காதில் ஊதிய சங்கு தான்/ :((((((

    ReplyDelete