எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 04, 2011

நலம் தரும் நவராத்திரி வழிபாடு, செளந்தர்ய லஹரி 10


ஏழாம் நாளான இன்று அம்பிகையை பிராம்ஹி அல்லது பிரம்மாணியாகக் காட்சி தரும்படி அலங்கரிக்கலாம். இவளை வித்யா லக்ஷ்மி என்றும் கூறலாம். கமண்டலம், ஜபமாலை, கோடரி, கதாயுதம், வில், அம்பு, சூலம், அமுதகலசம் போன்றவற்றுடன் வெண் தாமரையில் அமர்ந்த வண்ணம் அருளாட்சி செய்யும் இவளை வணங்கினால் அடுத்தவரைப் பார்த்து அவரோடு நம்மை ஒப்பிடாத வண்ணம் நம் வாழ்க்கையை நாம் ரசித்தும் அதன் ருசியை உணர்ந்தும் வாழலாம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று எனப் பிறவியிலேயே விதித்திருக்கிறது. நாம் எடுத்து வந்த கர்ம மூட்டைகளுக்கு ஏற்பவே நமக்கு எதுவும் கிடைக்கும்; அல்லது கிடைக்காமல் போகும். ஆகவே இன்னொருத்தரைப் பார்த்துப் பேராசை கொள்ளாமல் நம்மிடம் இருப்பதை வைத்து வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

இவளுக்கான நிவேதனம் பால் சாதம் அல்லது பால் பாயசம். பால் சாதம் சாதத்தைக் குழைய வடித்துப் பாலைக் காய்ச்சிச் சேர்த்துச் சர்க்கரை, ஏலம் சேர்த்துச் செய்யலாம். பால் பாயாசம் எனில் அரிசி ஒரு கரண்டியை எடுத்துச் சுத்தம் செய்து கொண்டு நெய்யில் வறுத்துக் கொண்டு அரை லிட்டர் பாலில்குழைய வேக விட வேண்டும். நன்கு வெந்ததும் கரண்டியால் மசித்துக்கொண்டு மேலும் கொஞ்சம் பாலைச் சேர்க்கவும். பின்னர் கல்கண்டு சேர்த்துச் சேர்ந்து கொதித்ததும் தேவை எனில் பால் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். ஏலம், குங்குமப்பூ போடவும்.

மாலை நிவேதனம் மொச்சைச் சுண்டல்: மொச்சையை முன் கூட்டியே ஊற வைத்துக்குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைத்துப் பட்டாணிச் சுண்டலுக்குச் செய்த மாதிரியே செய்யவும்.

ஆசைகள் அதிகம் ஆனால் அதனால் ஏற்படும் தொல்லைகளும் அதிகம். புத்தி மந்தமாக மாறும். ஒருவரை ஒருவர் சந்தேகம் கொள்வார்கள். சிலருக்குத் தன் மேலேயே சந்தேகம் வரும். தன்னம்பிக்கை இருக்காது. மந்தமான புத்தி இருப்பதைத் தான் மஹிஷத்திற்கு உதாரணமாகக் காட்டுவார்கள். அந்த மந்தமான மஹிஷத்தை அன்னை அழிப்பதே மந்த புத்தியை அடியோடு ஒழித்து சுறுசுறுப்பும், ஆற்றலும் மிகுந்த சக்தியை வரவழைத்துக்கொள்வதாகும். உண்மையில் இந்தப்போராட்டங்கள் நமக்குத் தினம் தினம் நம்முள்ளே நடந்து கொண்டே இருக்கிறது. இந்த அசுரர்கள் எல்லாம் நமக்குள்ளேயே இருக்கின்றனர். சந்தேக புத்தியை சும்பனுக்கும், நிசும்பனுக்கும் உதாரணம் காட்டலாம். இரண்டு பேரும் எல்லாவற்றிற்கும், எல்லாரையும், எப்போதும் சந்தேகம் கொள்வார்கள். அதனால் புத்தி மஹிஷத்தைப் போல் மந்தமாகிவிடுகிறது. ஆற்றல் குறைகிறது. அதுவும் பரபரப்பான வாழ்க்கை நடத்தும் இன்றைய சூழலில் இது மிகவும் சகஜமான ஒன்று. நம்முள்ளே போராடித் தான் நாம் மீண்டு வரவேண்டும். அதைத் தான் இழந்த சக்தியை மீட்டெடுப்பது என்கிறோம். அந்த சக்திதான் அன்னை வடிவில் நாம் வணங்கும் தாயாக உருவகம் செய்யப் படுகிறது.

அந்த சக்தி தான் அநங்கன் எனப்படும் மன்மதனையும் வீறு கொண்டெழுந்து ரிஷி, முனிவர்களைக் கூட விடாமல் ஜயிக்க வைக்கிறது. சென்ற பதிவிலேயே பார்த்தோம். அநங்கன் உயிர் பிழைத்ததும் உயிரினங்கள் எல்லாம் காம வயப்படுவதும் சிருஷ்டிக்குத் தேவை எனப்பார்த்தோம். இங்கே அடுத்து வரும் ஸ்லோகமும் அதையே சொல்லும்.

தநு: பெளஷ்பம் மெளர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதன-ரத:
ததாப்யேக:ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித-மனங்கோ விஜயதே



மாயன் வணங்கி உன் மால் வடிவங்கொள
வாடும் அரன் துயர் போதாதோ
தூய மதன் தொழ ஆண்வடிவம் புணர்
தோகை கண் வண்டயில் தேனே போல்
மேய வழங்கும் உரூபமது என்சொல
மேலிது கண்டவர் வாழ்வாரோ
நீ அத-ரஞ்சகி மோகன வஞ்சகி
நீ செய்வது ஒன்றல மாதாவே.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

மன்மதனும் போர் தொடுக்கிறான். அனைவர் மேலும் இந்தப் போர் தொடுக்கிறான். ஆனால் அவன் ஆயுதங்களோ, கத்தி, வில், அம்பு, சூலம், வாள் போன்ற எதுவும் இல்லை. தநு: பெளஷ்பம்= புஷ்பத்தால் ஆன வில். சாதாரணமாகக் கரும்பு வில்லைத் தான் மன்மதன் வைத்திருப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கோம். அந்தக்கரும்பு வில்லைத் தான் காமாட்சியும் வைத்துக்கொண்டு காமங்களை ஆட்சி செய்து வருகிறாள். இங்கே ஆசாரியர் மலர்களால் ஆன வில்லை மன்மதனின் ஆயுதமாய்க் குறிப்பிட்டிருக்கிறார். பாணங்களொ எனில் தாமரை, அசோகமலர், மாம்பூக்கள், நவமல்லிகை, நீலோத்பலம். எல்லாமே வாசனைப்பூக்கள். மனதை மயக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு புலனைக் கட்டி இழுக்கும் திறமை கொண்டவை. அப்போது தானே காமவசப்படுத்த முடியும். இப்படி அனைவரையும் கட்டி இழுக்கும் ஆசையைத் தூண்டுமாறு மன்மதனுக்கு இத்தகையதொரு அதிகாரத்தைக் கொடுத்ததே அம்பிகை தான். அவளாலேயே அவன் உயிர் பெற்று எழுந்ததோடு அல்லாமல் அவள் ஆணைப்படியே சிருஷ்டிக்குத் துணையும் செய்து வருகிறான். கண்களுக்குத் தெரியாமலேயே வலிமையற்ற ஆயுதங்கள் துணையுடன் அவன் செய்யும் போரில் அவனே ஜெயிக்கவும் செய்கிறான். இது அவனுக்கு அம்பிகையின் கடாக்ஷத்தாலேயே ஏற்பட்டதாகும். இப்படி ஸ்ருஷ்டிக்கு அனுகிரஹம் பண்ணி அனைவரையும் ஜெயிக்கும் மன்மதனை நாம் ஜெயிக்க வேண்டும். ஈசனால் எரிக்கப்பட்டவன் அம்பிகையின் அருளினால் அநங்கனாய்த் தன் காரியத்தை அம்பாளிடமும், ஈசனிடமும் நிறைவேற்றிக்கொண்டான். அப்படி மன்மதன் அநங்கனாக மாறி அம்பிகையும் ஈசனும் திருக்கல்யாணம் செய்து கொண்டதைத் தான் காமாக்ஷி புராணம் என்றும் கூறுகின்றனர். இத்தனை பெரியதொரு நிகழ்வை நிகழ்த்திய அநங்கன் முன்போலிருந்தான் எனில் நான் என்ற ஆணவம் ஏற்பட்டிருக்கும். அன்னையை வணங்கி அவள் அருள் பெற்ற காரணத்தால் மன்மதனுக்கு இப்போது தான், தன்னால் தான் எல்லாரையும் வீழ்த்த முடியும் என்ற அஹங்காரம், தான் என்ற உணர்வு அற்றுப் போய் விட்டது. இது அம்பிகையின் அருளே என்பதைப் புரிந்து கொண்டான். தன்னால் எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டான்.

பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

மேற்கண்ட பொருளுக்கேற்ற பாடல் கிடைக்கவில்லை என்றாலும் இதிலே அம்பிகையின் பஞ்ச பாணங்கள் குறித்துப் பாடியுள்ளார் பட்டர். பஞ்சபாணி என அம்பிகையைக் கூப்பிடுகிறார். மன்மதனுக்கு அடுத்து அம்பிகையிடமே பஞ்ச பாணங்களும், கரும்பு வில்லும் உள்ளது. அத்தகைய பஞ்சபாணியான அம்பிகை ஈசனை ஜெயித்து அவன் உடலில் இடப்பாகத்தையும் பெற்றுக் கொண்டாள் எனில் அவள் சக்தியை என்னவென்று சொல்ல முடியும். இவ்விதம் ஈசனை வென்றாலும் தேவி அவனுள் ஐக்கியமாகி சிவசக்தியாக ஆனதன் மூலம் கணவன், மனைவி இருவரின் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறாள். இங்கே சிவன் பெரிதா, சக்தி பெரிதா என்ற கேள்வியே இல்லை. இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்தது. அசையாமல் இருந்த சிவத்தைத் தன் சக்தியின் மூலம் அசைத்து சிருஷ்டி தத்துவத்தையும், பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தையும் ஏற்படுத்துகிறாள் தேவி. இது ஒரு சக்கரம். சுழன்று கொண்டே இருக்கும். அதனாலேயே நமக்குப் பிறப்பும், இறப்பும் அதன் விளைவான கர்ம பலன்களும் ஏற்படுகின்றன.


இங்கே அனைவரும் தேவியின் பார்வைகளுக்கு முன்னர் சமம் என்றாலும் பெளதிக உலகில் ஒவ்வொருவரின் கர்ம பலனுக்கேற்றவாறே நற்பலன்கள் கிட்டும். அதனாலேயே ஏற்றத் தாழ்வுகள். சுற்றுச் சூழலின் சமநிலைக்கு எவ்வாறு காடுகள், மலைகள், நதிகள், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் இருப்பு முக்கியமானதாக இருக்கிறதோ அவ்வாறே பிரபஞ்சத்தின் சமநிலைக்கு இந்த ஏற்றத் தாழ்வுகள் காரணமாக உள்ளது. அனைவரையும் சமமாக வைக்காத கடவுள் எனக்குத் தேவையே இல்லை எனச் சிலர் நினைக்கலாம். இந்த ஏற்றத் தாழ்வுகள் நாம் கொண்டு வந்ததே எனப் புரிந்து கொண்டோமானால் கடவுளிடம் கோபம் வராது. அதற்குத் தான் பக்தி செய்யுமாறு கூறுகின்றனர். முதலில் சாதாரணமான பக்தியில் ஆரம்பித்தால் நாளடைவில் ஆன்ம முன்னேற்றத்தை நாடிச் செல்ல வழி வகுக்கும். தேவியின் வழிபாடும், அவள் பாதார விந்தங்களே சரணம் எனவும் இறுகப் பற்றிக்கொண்டவர்களுக்கு வேறு உபாயமே தேவை இல்லை.

தேவியின் கருணாபாத்திரமானவன் எந்தவிதமான வலிவான சாதனங்களின் உதவியின்றியும் இவ்வுலகை வென்றவன் ஆவான். இதற்கு உதாரணமாக நெஞ்சில் தீமையைத் தவிர வேறொன்றை நினையாமல் தேவாதி தேவர்களுக்குக் கொடுமைகள் புரிந்த அசுரர்களைக் கொன்று அழிக்கும் வல்லமையுடைய ஈசனையே வென்று அவன் உடலின் இடப்பாகத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாயே அம்மா! அத்தகைய சக்தி படைத்த நீ எனக்கும் கருணை காட்டு என்கிறார் பட்டர்.


செளந்தர்ய லஹரி விளக்கங்கள்: தெய்வத்தின் குரல், செளந்தர்ய லஹரி பாஷ்யம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம்.

தேவி மஹாத்மியம் விளக்கம்: தேவி மஹாத்மியம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம், மற்றும் பண்டிட் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் நவராத்திரிச் சொற்பொழிவுகள்.

அபிராமி அந்தாதி: உதவி தினமலர், சொந்தமாய்க் கொஞ்சம். போன வருஷம் கி.வா.ஜ. உரையைப் போட்டாச்சு. அதான் எல்லாரையும் கொஞ்சம் சோதனை பண்ணச் சொந்த முயற்சி.

நாளைக்கு வரும். இதைப் போடாமலேயே தினம் எழுதறேன். அதான் இன்னிக்குப் போட்டேன்.

6 comments:

  1. முதலில் சாதாரணமான பக்தியில் ஆரம்பித்தால் நாளடைவில் ஆன்ம முன்னேற்றத்தை நாடிச் செல்ல வழி வகுக்கும். தேவியின் வழிபாடும், அவள் பாதார விந்தங்களே சரணம் எனவும் இறுகப் பற்றிக்கொண்டவர்களுக்கு வேறு உபாயமே தேவை இல்லை.//

    ஆம் ஆம் உண்மை. காமதேனுவைப் போன்று யாவற்றையும் கொடுக்க வல்ல தேவியை வழிபட்டு அவள் அருளுக்கு பாத்திரமாகுதல் ஒன்றே மனிதப் பிறவி எடுத்ததின் பயனாகும்.

    ReplyDelete
  2. உண்மை கோமதி அரசு. மனம் தளர்ந்து போகும் சமயங்களில் எல்லாம் இந்த பக்தியும், நம்பிக்கையும் இல்லை எனில் மீண்டு வர முடியாது. இது ஒன்றே மனிதர்களுக்குக் கை கொடுக்கும். நன்றிங்க வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  3. //மனம் தளர்ந்து போகும் சமயங்களில் எல்லாம் இந்த பக்தியும், நம்பிக்கையும் இல்லை எனில் மீண்டு வர முடியாது.//

    சரியாகச் சொன்னீர்கள் அம்மா.
    அன்னையின் திருவடிகள் சரணம்.

    ReplyDelete
  4. வாங்க கவிநயா, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete