எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 01, 2011

நலம் தரும் நவராத்திரி வழிபாடு! செளந்தர்ய லஹரி 7

நான்காம் நாளான இன்று அம்பிகை வைஷ்ணவியாகக் காட்சி அளிக்கிறாள். “விச்’வக்ராஸா வித்ருமாபா வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ” என்று லலிதா சஹஸ்ரநாமாவளியில் சொல்வது போல, அவள் விஷ்ணுவின் ரூபமாகவே காட்சி அளிப்பாள். கண்டார் மனதை மயக்கும் சங்கு, சக்ர, கதாதாரியாகக் காட்சி அளிப்பாள். வைஷ்ணவி அனைவரையும் காத்து, பொன், பொருள் குறைவறக் கொடுத்து அனுகிரஹம் செய்வாள். இம்முறை நான்காம் நாள் சனிக்கிழமையாக வந்திருப்பதால் எள் சாதம் நிவேதனம் செய்யலாம். ஒரு சிலர் புளியோதரையும் செய்வார்கள்.
***********************************************************************************

எள் சாதம் செய்முறை: கறுப்பு எள் ஐம்பது கிராம் சுத்தம் செய்ய வேண்டும், உப்பு தேவையான அளவு, மி.வத்தல் நான்கு அல்லது ஐந்து. மூன்றையும் வெறும் சட்டியில் வறுத்துக்கொள்ளவும். நன்கு ஆறியதும் மிக்சியில்போட்டுப் பொடி செய்யவும். சூடான சாதத்தில் அரை டீஸ்பூன் உப்புப் பொடியோடு ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையும் விட்டு எள்ளுப் பொடியைப் போட்டு நன்கு கலக்கவும்.

புளியோதரை: புளிக்காய்ச்சல் செய்யணும் முதலில்.
நல்ல பழைய கறுப்புப் புளி 50கிராம் எனில் அதில் பாதி அளவுக்குப் புதுப்புளி. இரண்டையும் சேர்த்து ஊற வைத்துக் கெட்டியாகப்புளி கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதைத் தனியாக வைக்கவும்.

வறுக்கத் தேவையான பொருட்கள்: எள் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், மி.வத்தல் பத்து. எள்ளையும், கடுகையும் வெறும் வாணலியில் வறுக்கவும். அதைத் தனியாக எடுத்துக்கொண்டு அதே வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு மி.வத்தல், தனியா, வெந்தயம், பெருங்காயம் வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்துப் பொடி செய்து கொள்ளவும். இப்போது புளிக்காய்ச்சலுக்குத் தாளிக்க வேண்டும்.

புளிக்காய்ச்சல் செய்முறை: மி.வத்தல், பத்து அல்லது பனிரண்டு(காரம் தேவைக்கு ஏற்பக் கூட்டியோ குறைத்தோ போடலாம்.) கடுகு, கடலைப்பருப்பு அல்லது ஊற வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், கருகப்பிலை, பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு, வெல்லம் தேவையானால் ஒரு டேபிள் ஸ்பூன் தூள் செய்தது. தாளிக்க நல்லெண்ணை.

வாணலி அல்லது கல்சட்டி அல்லது உருளியில் நல்லெண்ணை ஊற்றிக்கொண்டு எண்ணெயைக் காய வைத்து முதலில் மி.வத்தலைப் போடவும். கவனிக்கவும், மி.வத்தல் முதலிலேயே போட்டால் தான் புளிக்காய்ச்சல் வாசனை தனித்து வரும். மி.வத்தல் நன்கு கறுப்பாக ஆகும் வரை எண்ணெயில் வறுக்கவும். கறுப்பாய் ஆனதும் கடுகு, கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலையைப்போட்டு வறுக்கவும், மஞ்சள் தூள், கருகப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றித் தேவையான உப்பைச் சேர்க்கவும். சேர்ந்து கொதித்து எண்ணெய் பிரியும் நேரம் செய்து வைத்த பொடியில் பாதியை முதலில் போட்டுத் தேவை எனில் வெல்லமும் சேர்த்து ஒரு கொதி விட்டுக் கீழே இறக்கவும். சூடான சாதத்தில் இந்தப் புளிக்காய்ச்சலைத் தேவையான அளவு விட்டுக் கலக்கவும். நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்து விட்டு மேலே வேர்க்கடலையை வறுத்து அலங்கரிக்கலாம். நிவேதனம் செய்துவிட்டு சாப்பிட்டுப் பார்த்துத் தேவையானால் புளிக்காய்ச்சலில் மீதம் பொடியையும் போட்டுக் கலந்து வைத்துக்கொள்ளலாம். இம்முறைப் புளிக்காய்ச்சல் ஒரு மாதமானாலும் குளிர்சாதனப் பெட்டியின் உதவியின்றி வெளியே வைத்தாலும் கெடாது.

மாலை நிவேதனம்: கடலைப்பருப்புச் சுண்டல்: கடலைப்பருப்பைக் குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அப்படியே குக்கரில் எல்லாம் வைக்க வேண்டாம். ஊறிய பருப்பை வாணலியில் அல்லது உருளியில்போட்டு வேக வைத்தாலே குழைய வேகும். உப்புச் சேர்த்து வேக வைத்ததும், நீரை வடிகட்டிவிட்டுக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, ப.மிளகாய், இஞ்சி, கருகப்பிலை,பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு கடலைப்பருப்பைக் கொட்டிக்கிளறவும். ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டு இறக்கும்போது தேங்காய் துருவலோடு ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பச்சைக்கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.
***********************************************************************************
அம்பிகையின் பாதாரவிந்தங்களைச் சரணடைவது குறித்துப்பார்த்தோம். அவள் பாத தூளியால் சிருஷ்டிகளும், வையத்தைக் காப்பதும் , அழிப்பதும் என அனைத்துத் தொழில்களும் சிறப்பாக நடைபெற்று வருவதையும் பார்த்தோம். அந்தப் பாததூளி எத்தகைய மஹிமை வாய்ந்தது எனில் அனைவருக்கும் முக்தியைக் கொடுக்க வல்லது. நம் மனத்தின் இருளைப் போக்கி நம்பிக்கையாகிய சூரியனைப் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை கொண்டது.

அவித்யானா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகூரீ
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதெள்
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வரஹஸ்ய பவதி

அறிவிலர்க்ககு இதய திமிரம் மீரும்
அளவற்ற ஆதவர் அளப்பிலா
எறி-கதி-ப்ரபை குழைத்து இழைத்தனைய
தீ இயாமளை நினைப்பிலார்
செறி மதிக்-கிணரின் ஒழுகு தேன் அருவி
தெறுகலிக்கு அருள் மணிக்குழாம்
பிறவி மைக்கடல் விழாது எடுப்பது ஒரு
பெருவராக-வெண் மருப்பு அரோ.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

அவித்யா என்பது அக்ஞானம் எனப்படும் மூடத்தனம், மடமை என்றும் சொல்லலாம். நம்முள்ளே நாம் தான் அனைத்தும் செய்கிறோம் என்றதொரு எண்ணம் எப்போதும் இருந்து வருகிறது. இந்த “நான்” என்பது நம்முள்ளே உறைந்து எப்போதும் கோயில் கொண்டிருக்கும் ஜோதிரூபமான ஆன்மாவை நம்மால் உணரமுடியாதபடிக்குச் செய்துவிடுகிறது. மனமென்னும் காட்டிலே நினைவுகளென்னும் விருக்ஷங்கள், எண்ணற்றவை முளைத்துப் படர்ந்து மனம் முழுதையும் இருட்டாக்கி ஞான சூரியனின் கிரணங்கள் சிறிதளவு கூட உள்ளே வராமல் செய்து இருட்டாக்கி விடுகிறது. அந்தக் காட்டின் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, ஒரு சின்ன அகலை ஏற்றுவது போல் அம்பாளின் பாத கமலங்களை இறுகப் பற்ற வேண்டும் என்றொரு எண்ணமாகிய அகலை ஏற்றிக்கொண்டு இருந்தால், நாளடைவில் அந்த அகலின் வெளிச்சம் கோடி சூரியப் பிரகாசமாகி நமக்கு ஜோதிமயமான ஆன்மாவுடன் ஒன்றிப் போகச் செய்யும். இந்த அக்ஞானம் சாமானிய மனிதருக்கு மட்டுமல்லாமல், புத்திமான்கள், வித்தை தெரிந்த அதிமேதாவிகள், கெட்டிக்காரர்கள் என அனைவரையுமே பீடித்திருக்கும். இவர்களைப் பீடித்திருக்கும் அக்ஞானம் அகந்தையாகும். இன்னும் சிலருக்கு என்ன சொன்னாலும் தெரியாது; தானாயும் தெரிந்து கொள்ள மாட்டார்கள்; சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களை ஜடம் என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்டவர்களுக்கு புத்தியின் தேஜஸ் அதிகரிக்கவும் அம்பாளின் பாத தூளி பயன்படும். அடுத்தது தரித்திரம் பிடிப்பது; யாருக்குத் தான் செல்வம் சேர்க்க ஆசையில்லை. செல்வம் சேர்ப்பதில் அடங்கா ஆசையும் உண்டு; அதே சமயம் செல்வந்தர்களைக் கண்டாலே வெறுப்பவர்களும் உண்டு. ஆனாலும் நினைத்ததை நடத்தித் தரும் சிந்தாமணி என்னும் மணியானது தெய்வாம்சமுள்ள மணியானது கிடைத்தால் எப்படி இருக்கும்?? நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் தந்துவிடுமே சிந்தாமணி. அப்படிப் பட்ட சிந்தாமணி தரும் செல்வத்தை எல்லாம் அம்பிகையின் பாததூளி தந்துவிடும்.

கவனிக்க; இங்கே அனைத்துச் செல்வங்களும் கிடைத்துவிடும் என்று வருவதால் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் எனப் பொருள் கொள்வதை விட, இம்மாதிரி அம்பாளின் நாமத்தைப் பாடி அவள் பாததூளியைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டால், நமக்குச் சிந்தாமணியின் மூலம் கிடைக்கும் பெளதிக சம்பந்தமான சொத்துக்களை விட மேன்மையான பெரும் செல்வம் கிட்டும் என்பதே உள்ளார்ந்த பொருளாகும். இதைக் கடைசி வரி விளக்குகிறது. ஹிரண்யாக்ஷன் அபகரித்துக்கொண்ட பூமிதேவியை மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் செய்து தன் கோரைப்பற்களில் தூக்கிக்கொண்டு வருவார். பாதாளத்துள்ளே இருந்த பூமிதேவியை எவ்வாறு விஷ்ணு அவ்விதம் மேலே தூக்கி வந்து கொண்டுசேர்த்தாரோ அவ்வாறே அம்பிகையின் பாததூளியானது இந்த சம்சார சாகரத்தில அழுந்தி மூழ்கி, மூச்சுத் திணறும் நம்மையும் தன் கருணா சாகரத்தில் கொண்டு சேர்த்து நம்மை ஆனந்தக் கடலில் வாசம் செய்யும்படி செய்யும்.

தேவி மஹாத்மியத்தில் மது, கைடபர் என்னும் இரு அரக்கர்களை மஹாவிஷ்ணு வதம் செய்வார். இந்த இரு அரக்கர்களும் அடங்கா ஆசைக்கும், அடங்கா வெறுப்புக்கும் உதாரணமாவார்கள். இவற்றை வெல்வதையே மது, கைடபர்களின் அழிவு சுட்டுகிறது. நம் மனதில் உள்ள ஆசையையும், வெறுப்பையும் மற்ற எதிர்மறைச் சிந்தனைகளையும் அழித்து ஒழிப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. நம்மை நாமே பூரணமாக அறிந்து கொண்டு, நம்மிடம் உள்ள “நான்” என்னும் சுயப் பெருமையை ஒழித்து நம்மை முழுதும் கடவுளின் பாதத்தில் ஐக்கியமடைய வைப்பதே நவராத்திரியின் முக்கியத் தத்துவம் ஆகும். நம்மில் பலரும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம்; இன்று சந்தோஷமாக இருந்தால் நாளை எழுந்திருக்கும்போதே வருத்தம் தாங்காது. இன்னொரு நாள் கோபம், எரிச்சல் வரும். ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இருக்கட்டும். ஏனென்றே சொல்லமுடியாத கோபமும் வரும். இதற்குக் காரணம் நம் முன்னோர்கள் ஒருபக்கம் எனில் இன்னொரு பக்கம் நம் முன் ஜென்மவினையும் ஆகும். இது குறித்து நாளை பார்ப்போமா!

மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருளிலேயே அபிராமி பட்டர் கூறி இருப்பது என்னவென்றால்,

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

ரிஷி, முனிவர்களால் உணர்ந்து அறியப்பட்டு ஓதப்படுவதான வேதத்தின் பொருளாக இருப்பவளே அம்பிகைதான் என்கிறார் பட்டர். அவள் வேதப் பொருள் மட்டுமல்லாமல் அதன் பொருள் உணர்ந்து ஓதுவோர்க்கு அருளுபவளும் ஆவாள். எல்லாம் வல்ல அந்த ஈசனையே இயக்கும் மாபெரும் சக்தியான அம்பிகையானவள் இமவானுக்கு நன்மை செய்யும்பொருட்டு அவன் மகளாகப்பிறந்தாள். அழியாத முத்தியைத் தன்னை வணங்குபவர்களுக்கு அளித்து வருகிறாள்; அத்தகைய அம்பிகையை நான் நின்று கொண்டிருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், அமர்ந்து கொண்டிருந்தாலும், கீழே கிடந்தாலும் எந்நேரமும் அவளையன்றி வேறொருவரை நினைப்பது என்னால் கூடுமோ! அவள் மலர்ச்சேவடியைத் தவிர வேறொன்றையும் நான் வணங்குவேனோ! அம்பிகையின் திருவடித்தாமரைக்கும், அவள் பாத தூளிகளுக்கும் மோக்ஷம் தரும் வல்லமை உள்ளது என்பதே இதன் உட்கருத்தாகும்.

4 comments:

  1. //அம்பாளின் நாமத்தைப் பாடி அவள் பாததூளியைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டால், நமக்குச் சிந்தாமணியின் மூலம் கிடைக்கும் பெளதிக சம்பந்தமான சொத்துக்களை விட மேன்மையான பெரும் செல்வம் கிட்டும் என்பதே உள்ளார்ந்த பொருளாகும். //

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
    அம்பாளின் நாமத்தைப் பாடி பாததூளியைப் பெற்றுக் கொண்டால் வேறு என்ன வேண்டும்.

    ReplyDelete
  2. பக்தியில் இன்னொரு விதமானது பாத சேவிதம்.
    நம்மைத் தேடி வர அதிதிகளுக்கு அவர்கள் பாதங்களை அலம்பி உபசாரம் பண்ற மாதிரி இந்த நவராத்திரியில் அம்பாளின் பாதங்களைப் பற்றி அவளை வணங்க வேண்டும்.
    'நான்' என்கிற எண்ணத்தை தொலைத்து, சதா ஈஸ்வர நினைப்போடு அவள் பாதத்தில் சரணாகதி அடைந்தால் மோக்ஷம் கிடைக்கும்.

    ReplyDelete
  3. வாங்க கோமதி அரசு, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீநி, உங்கள் விளக்கம் மேலும் மெருகு ஊட்டுகிறது.

    ReplyDelete