எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 14, 2014

திருமாலிருஞ்சோலை வஞ்சக்கள்வன் மாமாயன்!

செஞ்சொற் கவிகாள்! உயிர்காத்து ஆள்
  செய்ம்மின்! திருமாலிருஞ்சோலை
வஞ்சக்கள்வன் மாமாயன்
  மாயக்கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து
  நின்றார்; ஆர் அறியா வண்ணம் என்
 நெஞ்சும் உயிரும் அவைகண்டு
 தானே ஆகி நிறைந்தானே!

வஞ்சக்கள்வன் இன்று வைகை ஆற்றில் இறங்குகிறார்.  முன்னெல்லாம் முதல் நாள் மூணு மாவடியில் எதிர்சேவை பார்த்துட்டு அழகரோடயே வந்து அப்பாவின் நண்பரின் மண்டகப்படியிலும் கிட்ட இருந்து பார்த்துட்டு, அங்கே இருந்து ஓலைப் பெட்டியில் புளியஞ்சாதம், சர்க்கரைப் பொங்கல் கட்டி எடுத்துக் கொண்டு கீழ்ப்பாலத்தோடு பொடி நடையாய் வீட்டுக்குப் போவோம்.  நடப்பது அப்போதெல்லாம்  பெரிய விஷயமாய்த் தெரியலை. பல நாட்கள் மேலாவணி மூல வீதியில் இருந்து எங்க பள்ளிக்குக் கீழ்ப்பாலம் வழியாக நடந்தே போயிருக்கேன்.  ஆகவே பழகின வழி தான்.


அழகர் ஆற்றில் இறங்கற அன்னிக்குக் காலம்பர எல்லோர் வீட்டிலேயும் சீக்கிரமாவே எழுந்துடுவாங்க.  அம்மாக்கள் எல்லாம் குளிச்சு முடிச்சு அநேகமாப் பாதி சமையலும் பண்ணி வைச்சுடுவாங்க.  எல்லோருமாய் ஒரு குழுவாய் அழகரைக் காணக் கிளம்புவோம்.  ஆறு, ஆறரைக்குக் கிளம்பினால் ஏழரைக்குள்ளாக சரியா அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்துக்கு நாமளும் போயிடலாம்.  கூட்டம் எல்லாம் முதல் நாளில் இருந்தே வைகையிலும், கரையிலும், மண்டகப்படிகளிலும் தங்குமாகையால் தெருக்களில் கூட்டம் அவ்வளவா இருக்காது.  கீழ்ப்பாலம் (கல்பாலம்) கிட்டேத் தான் கூட்டமே ஆரம்பிக்கும்.

வஞ்சக்கள்வன், மாமாயனின் அழகு மக்கள் மனதைக் கொள்ளை கொண்டதால் கள்ளழகர் என்ற பெயர் ஏற்பட்டதாம்.  மூலவர் பெயர் பரமசாமி. உற்சவர் தான் சுந்தரராஜப்பெருமாள் என்னும் அழகர். கள்ளழகர் கோலத்தில் கையில் கன்னக்கோலுடன் கறுப்புச் சல்லடம் கட்டிக் கொண்டு கொண்டை போட்டுக் கொண்டு வரும் அழகரைப் பார்த்தால் நிச்சயம் மயங்கி விடுவீர்கள்.



முகத்தின் அந்தப்புன்சிரிப்பு, குறும்பு கொப்பளிக்கும். நானும் உங்களில் ஒருவன் என்று சொல்லாமல் சொல்கிறார் அழகர்.  இன்னிக்கு இத்தனை நேரம் ஆத்தில் இறங்கி இருப்பார்.  என்ன உடை உடுத்தி வந்தார்னு இனிமேல் தான்பார்க்கணும்.



உண்மையில் மண்டூக ரிஷிக்கு சாபவிமோசனம் தருவது தான் அழகர் மதுரைக்கு வருவதன் முக்கிய கட்டம்.  ஆனால் காலப்போக்கில் அழகர் ஆத்தில் இறங்குவதை மீனாக்ஷி கல்யாணத்தோடு தொடர்பு கொண்டு கதைகள் கிளம்பி இருக்கின்றன.  இதே மண்டூக ரிஷியின் சாப விமோசனம் நிகழ்ச்சி ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அருகிலுள்ள இன்னொரு மலைக்கோயிலிலும் நடைபெறுகிறது.  அங்கே தான் ஆரம்பத்தில் நடைபெற்றதாகவும், பின்னர் அழகரோடு இதை இணைத்ததாகவும் அந்த ஊர்க்காரங்க கூறுகிறார்கள்.  அந்த மலையின் பெயர் மறந்துவிட்டது.  ஆனால் பெருமாள் அங்கேயும் சுந்தரராஜப் பெருமாள் தான்.  மலை உச்சிக்குப் போவது இன்னமும் கொஞ்சம் கடினமாய்த் தான் இருக்கிறது என்று தெரியவருகிறது. அங்கேயும் நூபுர கங்கை இருக்கிறாள்.  நானே இந்த ஊரைப்பத்தி ஒரு பதிவில் எழுதினேன்.  ஊர்ப் பெயர் மறந்துவிட்டதால் பதிவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்னிக்கு இங்கே அம்மாமண்டபத்துக்கு நம்பெருமாள் வந்துட்டு இருக்கார். காவிரிக்கரையில் கஜேந்திர மோக்ஷம் இன்னிக்கு நடைபெறும்.  ஆண்டாள் இப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.  இன்னிக்கு வருமானு தெரியலை.  ஹிஹி, இதை எழுதும்போதே ரங்க்ஸ் பெருமாள் எதிரிலுள்ள மண்டகப்படிக்கு வந்துட்டதாக அழைப்பு விடுத்தார். கீழே போனேன்.  ஆண்டாளைக் காணோம். :(   பெருமாள் மட்டும் இன்னிக்கு ஶ்ரீபாதம் தாங்கிகளால் தாங்கப்பட்டு வெயிலுக்குத் திரை போட்டு அழைத்து வரப் பட்டார்.  சுடச் சுடப் படம் கீழே!


வழக்கமா வர பல்லக்கு தோளுக்கு இனியான் என எண்ணுகிறேன்.  அதிலே வரலை.  கிட்டப்போக முடியாமல் விரட்டி விடறாங்க.  ஓரளவு தொலைவில் இருந்து தான் எடுக்க முடிந்தது.  இன்னிக்கு ரொம்ப சிம்பிள் அலங்காரம்.  பெருமாளுக்கு அருகிலிருக்கும் திரை வெண்பட்டுத் திரை தான் வெயில் படாமல் பாதுகாக்க.  கிழக்கே பிடித்திருக்கின்றனர். 

13 comments:

  1. இந்த சோகக் கதையை எங்க போய்....என்னத்த சொல்ல மிஸஸ் சிவம்! கதை விவரம் பாக்கலாம்னு கள்ளழகர்நு தேடினா விக்கி விஜயகாந்த் லைலா படம் காட்டறதுப்பா . :( நீங்க எழுதினது தெரிஞ்சா அதை படிச்சிருப்பேன் முதல்லையே

    ReplyDelete
  2. மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் இருந்த நாட்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

    அது ஒரு திருவிழாக்காலம்! நாங்கள் சாமியைப் பார்த்த நாட்களை விட கூட்டம் கண்டு பிரமித்த/அலுத்த நாட்கள்தான் அதிகம். கூட்டம் கலைந்த மறுநாள் அந்தத் தெருவையும் வீட்டு வாசலையும் சுத்தம் செய்ய வேண்டும் பாருங்கள்... அம்மம்மம்மா....

    ReplyDelete
  3. எங்களவரும் ஒவ்வொரு வருடமும் சொல்லுவார்: 'ஒருமுறையாவது அழகர் ஆற்றில் இறங்குவதை நேரில் சேவிக்கணும்' என்று.அவர் நிறைய தடவை சேவித்திருக்கிறார். எனக்குத் தான் இன்னும் கிடைக்கவில்லை.

    கள்ளழகர், திருவரங்கன் இருவரையும் உங்கள் பதிவில் இன்று சேவித்தாயிற்று.

    ReplyDelete
  4. இனிய நினைவுகள் அம்மா...

    ReplyDelete
  5. அழகர் கோவிலில் சுவாமியை தரிசனம் செய்ததோடு சரி. மதுரை விழாக்கள் பார்க்கும் வாய்ப்பு ஏதுமிருக்கவில்லை. ஒரு முறை தென்காசியில் திருமணம் ஒன்றுக்கு செல்லும் போது கோவில் தரிசனமாக மதுரை வந்திருக்கிறோம் அப்போது திருவிழாக்காலம் அம்மனை தரிசிப்பதே கஷ்டமாய் இருந்தது. வேறு நினைவுகள் இல்லை.

    ReplyDelete
  6. மதுரையில் நிகழ்ந்த அழகர் சேவையின் பழைய நினைவுகளோடு, ஸ்ரீரங்கம் அரங்கனின் புதிய தரிசனம். படிப்பதற்கு ஆர்வமாக இருந்தது.

    ReplyDelete
  7. வாங்க ஜெயஶ்ரீ, அப்படியானும் வந்தீங்களே, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. :)))

    உங்க பின்னூட்டம் பார்த்ததும் நானும் கூகிளார்ட்டே கேட்டதில் எனக்கு அழகர்மலை அழகர் அதுவும் கள்ளழகரே வந்தார். :)))) நல்லவேளையா விஜய்காந்த் வரலை. அப்படி ஒரு படம் வ்ந்திருக்கா?

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், கூட்டம் இப்போ இன்னமும் அதிகமா இருக்காம். :( என்னால் எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது.

    ReplyDelete
  9. வாங்க ரஞ்சனி, நாங்க அரங்கனைப் பார்த்தப்போ ஆண்டாள் இல்லை; வருத்தமா இருந்தது. அப்புறமா மத்தியானத்துக்கு மேல் கொண்டு வந்திருக்காங்க. அது இன்னமும் பழைய பாகனை நினைச்சு துக்கத்திலே ஆழ்ந்திருக்கு போல! வாயில்லா ஜீவன்! சொல்லிக்க முடியலை. :(

    ReplyDelete
  10. நன்றி டிடி.

    ReplyDelete
  11. வாங்க ஜிஎம்பி சார், மீனாக்ஷியை தரிசிப்பது என்பது கடந்த பத்து வருடங்களாகக் கஷ்டமாய்த் தான் இருக்கு! :(அறநிலையத் துறை படுத்தும் பாடு. :(

    ReplyDelete
  12. வாங்க தமிழ் இளங்கோ ஐயா. நன்றி. மதுரை நினைவுகளை அசை போட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தான். இப்போல்லாம் போய்ப் பார்க்க முடியாது. அவ்வளவு கூட்டம். :(

    ReplyDelete
  13. மதுரை நினைவுகள்....

    சித்திரைத் திருவிழா இது வரை நேரில் பார்த்ததில்லை..... எப்போது பார்க்கப் போகிறேன் என்பதும் பெரிய கேள்வி தான்....

    ReplyDelete