எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 22, 2015

பிள்ளையாரையும் பார்த்தேனே!





என் அருமைச் சிநேகிதரான நம்ம பிள்ளையார் இல்லாத ஊர்களே இல்லை. அது போல இங்கேயும் வந்து ஒரு கலக்குக் கலக்கிட்டு இருக்கார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் அரசர்கள் அனைவரும் முதலில்  கன்யாகுமரி மாவட்டத்தின் திருவிதாங்கோட்டிலும், பின்னர் கல்குளத்திலும் இருந்தவர்கள் ஆவார்கள். அப்போதெல்லாம் இதை வேணாடு என அழைத்திருக்கின்றனர். இந்த வேணாடு இப்போதைய தமிழ்நாட்டின் நாகர்கோயில், கன்யாகுமரி மாவட்டங்கள், மற்றும் கேரளாவின் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களை உள்ளடக்கி இருந்ததாகத் தெரிகிறது.  இதைத் தவிர குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளைச் சேர்த்து வடக்கில் திருவல்லா வரை இருந்த பகுதியை ஆய் நாடு என அழைத்தனர். இரு நாடுகளும் தன்னாட்சி கண்டிருந்தாலும் பாண்டியர்களுக்கு உட்பட்டே ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். பாண்டியர்களின் பிரதிநிதிகள் இங்கே ஆட்சியை மேற்பார்வை செய்தும் வந்திருக்கின்றனர்.

இந்த வேணாட்டின் கடைசி மன்னன் ஆன பால மார்த்தாண்ட வர்மா கிபி 1758 ஆம்  ஆண்டில் மர்மமான முறையில் இறந்தான். அப்போது கொச்சி போன்ற மலபார் பகுதியை ஆண்டு வந்த மலையாளம் பேசும் நம்பூதிரிகள்-நாயர்கள் கூட்டணி திருவிதாங்கூரைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்தது. திருவிதாங்கூரும் கொச்சியும் இணைக்கப்பட்டு அதுவும் மலபார் என்றே பெயரில் அழைக்கப்பட்டது. இதன் முதல் மன்னன் ஆன கார்த்திகைத் திருநாள்  ராமவர்மா ஆவான். அவனுக்கு முன்னர் மரணம் அடைந்த பாலமார்த்தாண்ட வர்மா தன் தலைநகரைக் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றி இருந்தான். அதை மாற்றாமல் ராமவர்மாவும் திருவனந்தபுரத்தையே தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்தான். இவ்விதம் தலைநகர் மாற்றப்பட்ட சமயத்தில் தான் மன்னன் தான் வழிபட்டு வந்த விநாயகரையும் உடன் கொண்டு வந்து திருவனந்தபுரம்  கோட்டை அருகே பிரதிஷ்டை செய்திருக்கிறான்.

இந்த விநாயகர் போர்க்களங்களுக்கெல்லாம் சென்றவர் என்கின்றனர். அரண்மனைக் காவலுக்கு இருந்த ராணுவ வீரர்களால் பராமரிக்கப்பட்டதோடு அல்லாமல் அவர்கள் எங்கு சென்றாலும் இவரை வணங்காமல் சென்றதில்லை. இதனால் போரில் வெற்றி, வாழ்க்கையில் முன்னேற்றம் கண்ட ராணுவ வீரர்கள் விடாமல் இவரைத் தொழுது வந்திருக்கின்றனர். பின்னர் இந்தப்- பிள்ளையாரை நிரந்தரமாக இங்கேயே பிரதிஷ்டை செய்து கோயிலும் கட்டி இன்றளவும் ராணுவத்தாலேயே பராமரிக்கப்படுவதாய்க் கூறுகின்றனர்.  ஆகவே இவரை, 'மிலிட்டரி கணபதி' என்றே அழைக்கின்றனர். ராணுவத்தின் ஒழுங்கு, நேரம் தவறாமை, சுத்தம், கட்டுப்பாடு ஆகியன இந்தக் கோயிலிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவரை வேண்டிக் கொண்டு  சிதறு காய் போடுகின்றனர். போடும் சிதறுகாய்களை  பெரிய பெரிய இரும்புக் கரண்டிகளால் அள்ளிச் சாக்குகளில் மூட்டைகளாகக் கட்டுகின்றனர். நிற்காமல் சிதறுகாய் போடப்படுகிறது.

நாங்களும் சிதறுகாய் போட்டோம். பின்னர் உள்ளே போய்ப் பிள்ளையாரைப் பார்த்து விட்டுக் கிளம்பினோம். இது கிழக்குக் கோட்டைப் பேருந்து நிலையத்துக்கு அருகே, ரயில்வே ஸ்டேஷனுக்கும் அருகே  இருக்கிறது. இங்கேயும் படம் எடுக்க விடவில்லை. கீழே உள்ள படம் தினமலர் பக்கத்திலிருந்து எடுத்தது!

பின்னர் மீண்டும் கல்யாண மண்டபம் திரும்பினோம். சாப்பாடு தயாராக இருந்தது. எரிசேரி அருமைன்னா அருமை! சேனை எரிசேரிக்கு நறுக்கி இருந்ததே மிக அழகாக இருந்தது. வெந்தும், குழைந்தும் அதே சமயம் துண்டங்களாகவும் சேனையை எடுப்பதற்கு நிறையப் பக்குவம் இருக்கணும். உண்மையிலேயே நல்ல சமையல். சேனை வறுவலும் மிளகு போட்டு சூப்பராக இருந்தது. சேமியா பாயசத்திற்குப் பால் விடாமல் மில்க் மெயிட் சேர்த்திருந்தார்கள். கத்தரிக்காய்க் கூட்டு/பிட்லை சாப்பிடும்போது என்னையும் அறியாமல் என் அம்மா நினைவு வந்து மோதியது. அப்படியே அம்மாவின் கைமணமாக இருந்தது. நான் பொதுவாகக் கல்யாணங்கள், சஷ்டி அப்தபூர்த்தி, மற்றும் சில விசேஷங்களுக்குப் போனால் காலை ஆகாரம் எடுத்துக் கொண்டால் மதியம் சாப்பிட மாட்டேன். சாப்பாடைத் தவிர்ப்பேன். ஆனால் இங்கே மீண்டும் நாகர் கோயில் செல்ல வேண்டும் என்பதாலும், அங்கே சுற்ற வேண்டி இருக்குமோ என்பதாலும், ஒரு முறை கேரளச் சமையல் சாப்பிட்டுப் பார்க்கலாம் என்பதாலும் சாப்பிட்டேன். சாப்பிடவில்லை எனில் இவை எல்லாம் ருசி பார்க்காமல் ஏமாந்திருப்பேன் என அப்புறமாய்த் தோன்றியது.

சாப்பாடு முடிந்த பின்னர் தாம்பூலம் வாங்கிக் கொண்டு திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் சென்றோம். மண்டப வாசலிலேயே ஆட்டோ கிடைத்தது. மீட்டர் உள்ள ஆட்டோ! மீட்டர் வேலையும் செய்தது. மினிமம் 20 ரூபாயில் வைத்திருந்தார். ஸ்டேஷன் வரும்வரை அதே பணம் தான் காட்டியது. வெறும் இருபது ரூபாயை வாங்கிக் கொண்டு எங்களை ஸ்டேஷனில் இறக்கி விட்டுச் சென்றார் அந்த ஆட்டோக்காரர். பின்னர் நாகர் கோயிலுக்கு ரயில் எத்தனை மணிக்கு எனக் கேட்டதற்கு பனிரண்டே முக்காலுக்கு ஒன்று இருப்பதாகச் சொன்னார். இப்போ முதல் நடைமேடையில் ஒன்று தயாராக இருப்பதாகவும் சொன்னார். ஆனால் எங்களிடம் டிக்கெட் இல்லை. அதோடு சாமான்கள் வைக்கும் அறையிலிருந்து சாமான்களை வேறே எடுக்கணுமே!

27 comments:

  1. ஆனைமுகத்தான் இல்லாத இடம் எது? மிலிட்டரி கணபதி என்று சத்யராஜ் படம் போலப் பெயர் கொண்டிருக்கிறாரே என்று பார்த்தேன். இதுதான் காரணமா? எனக்கு ஆனை முகத்தானின் தம்பிதான் இஷ்ட தெய்வம்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், எங்க வீட்டிலே எல்லோருக்கும் முதல் அறிமுகம் நம்ம பிள்ளையார் தான். ஆகவே அனைவருக்குமே இவர் தான் பிடித்தமானவர். எங்க மாட்டுப் பொண் முருக பக்தை என்றாலும் பிள்ளையாரும் வேண்டும். அந்த முருகனுக்கே இவர் தானே உதவினார்! :)))

      Delete
  2. எரிசேரிக்கு சேனைதான் பொருத்தம், சாப்பிட்டு நாளாயிற்று. மிளகூட்டல் என்பதும் இதுதானா? அது வேறா?

    20 ரூபாய்! அதிசய ஆட்டோக்காரர்!

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிஞ்சு எரிசேரி வேறே, மிளகூட்டல் வேறே. மிளகூட்டல் என்பது கீரை, பூசணி, புடலை போன்ற காய்களில் செய்யலாம். எரிசேரி என்றால் சேனையும், வாழையும் தான். வாழைக்காயை விடச் சேனைக்கிழங்கு தான் எரிசேரிக்கு எடுத்தது. மிளகூட்டல் என்ற பெயரை வைச்சுப் பலரும் மிளகூட்டலுக்கு மிளகையும் சேர்த்து வைத்தும் அரைக்கிறாங்க. மிவத்தல், சீரகம், தேங்காய்த் துருவல் மட்டும் தான் மிளகூட்டலுக்குப் போடணும். தே. எண்ணெயில் கடுகு, உபருப்புத் தாளிக்கணும்.

      Delete
  3. எரிசேரியில் சுக்கு இருந்ததோ? என்ன சேர்த்திருந்தார்கள் காராமணி பயரா அல்லது கொண்டைகடலையா?

    அவியல் இல்லையா அல்லது சாப்பிடவில்லையா?

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. எரிசேரியில் சுக்கு இருந்திருக்கணும்! நினைவில் இல்லை. அவியல் பண்ணலை! மோர்க்குழம்பு வேறே, எரிசேரி வேறே, கத்தரிக்காய்க் கூட்டு, இரண்டு கறி என்பதால் அவியலும் இருந்தால் சாப்பிட முடியாது அல்லவா? :)

      Delete
    2. எல்லாம் நம்மளை மாதிரி சா.ரா.க்களாகவே குழுச் சேருவோம் போல! :))))))

      Delete
    3. எரிசேரியில் சுக்கு சேர்க்க மாட்டோம். நல்லமிளகையும் சீரகத்தையும் பொடித்துப்போடுவதால் சுர்ர்ரென்று இருக்கும்..

      Delete
  4. // எரிசேரி என்றால் சேனையும், வாழையும் தான்// இரண்டையும் சேர்த்துப் போட்டும் செய்யலாம் , நன்றாக இருக்கும். பரங்கிக்காயிலும் செய்யலாம் , மத்தன் எரிசேரி என்று பெயர் !

    ReplyDelete
    Replies
    1. சேனையில் தனியாகச் செய்வது ஒரு தனிச் சுவை ஷோபா! பறங்கிக் காயில் அதிகம் செய்தது இல்லை. பறங்கிக்காயைப் (ஓலன் மாதிரி?) ப.மிளகாய் போட்டு வேகவிட்டு மசித்துத் தேங்காய்ப்பால் ஊற்றித் தே.எண்ணெயில் தாளிப்பேன்.

      Delete
    2. பூசணி, காராமணி, சேனை சேர்த்துச்செய்யும் எரிசேரியை முன்னெல்லாம் எங்களூர்க் கோயில்களில் கஞ்சிப்பிரசாதத்துக்குத் தொட்டுக்க வழங்குவார்கள். நேத்தும் எங்க வீட்டில் செய்தேனே :-)

      Delete
  5. மிலிட்டரி கணபதி பற்றியும் கேரள சமையலின் சுவை பற்றியும் அறிந்தேன்! நேற்றைய பதிவுகளை இன்னும் படிக்கவில்லை! பிறகு படித்துவிட்டு கருத்திடுகின்றேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மெதுவா வாங்க, ஒண்ணும் அவசரம் இல்லை. :)

      Delete
  6. அட பழவங்காடிப் பிள்ளையார்...இல்லையா!!? ....

    .எங்க ஊர் சமையல் அருமையா இருக்கும்...ஒரு பாயாசம் தான் வைத்தார்களா. பொதுவாக வெல்லப் பாயாசம், பால்பாயாசம், தேங்காய் பால் பாயாசம் என்று மூன்று வகை இருக்குமே...ம்ம்ம்

    ஆம் எரிசேரிக்கு சேனை தான் நன்றாக இருக்கும் வாழை சேர்த்து செய்தாலும்.....மத்தங்கா எரிசேரியும் செய்வதுண்டு....தேங்காய் வறுத்து இறுதியில் தாளிக்கும் போது சேர்க்க வேண்டும்....

    னண்பர் ஸ்ரீராம் எரிசேரி வேறு மிளகூட்டல் (மொளகூட்டல்) வேறு. மொளகூட்டல் இது மிளகூட்டல் மிளகு அல்ல....கேரளத்தில் மொளகு என்றால் சிவப்பு மிளாகாய் மிளகு வைத்து அரைத்தல் கிடையாது....சிவப்பு மிளகாய்தான்.

    பாலக்காடு பிராமின் சமையலில் தான் மிளகு உளுத்தம்பருப்பு வறுத்து, சிவப்பு மிளகாய் வறுத்து, ஜீரகம், தேங்காய் வைத்து அரைத்து விட்டு செய்வதும் உண்டு...முக்கியமாக, புடலங்காய், சௌசௌ செய்வதுண்டு..

    கேரளத்தினர்... மொளகூட்டல் என்று மத்தங்கா (சிவப்பு/மஞ்சள் பூஷணிக்காய்) செய்வதுண்டு....தேங்காய் எண்ணைதான் தாளிப்பதற்கு....

    ReplyDelete
    Replies
    1. //பாலக்காடு பிராமின் சமையலில் தான் மிளகு உளுத்தம்பருப்பு வறுத்து, சிவப்பு மிளகாய் வறுத்து, ஜீரகம், தேங்காய் வைத்து அரைத்து விட்டு செய்வதும் உண்டு...முக்கியமாக, புடலங்காய், சௌசௌ செய்வதுண்டு..//

      இது பொரிச்ச குழம்பு. எனக்குத் தெரிஞ்சு மொளகூட்டலில் நாங்க மி.வத்தல், தேங்காய், சீரகம் தான் வைப்போம். இன்னிக்குக் கூடப் புடலை மொளகூட்டல்! :)

      Delete
    2. பாயசம் ஒண்ணு தான். சேமியா மட்டும். :)

      Delete
  7. ஆஹா சுவையான கேரள சாப்பாடு..... நல்ல எஞ்சாய் பண்ணி இருப்பீங்க போல!

    கணபதி இல்லாத இடம் ஏது!

    ReplyDelete
    Replies
    1. சமைச்சது மதுரைக்காரங்க, எங்க சொந்தக்காரங்க வெங்கட்! :)

      Delete
  8. ஒரு பதிவு எழுதுவதற்கு நிறையவே மெனக்கெடுகிறீர்கள் போல... ஸ்தல புராணம் சரித்திரத் தகவல்கள் போன்றவையில் ஆரம்பித்து சாப்பாட்டில் முடிகிறது. .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா, சுவைபட எழுதுவது எனக்கு வருவதில்லை. ஆகவே சரித்திரத் தகவல்களை முழுதும் கொடுத்தாலும் யாரும் படிக்க மாட்டார்கள். அதனால் கொஞ்சம்போல் தொட்டுச் செல்கிறேன். ஒவ்வொருத்தர் எழுதுவதைப் பார்த்தால் வியப்பாகவே இருக்கிறது.

      Delete
  9. மிலிட்டரி கணபதி பற்றி அறிந்தேன் அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி. ஆதி காலத்திலேயே விநாயகர் ராணுவத்திலும் உள்ளாரே! வாதாபி கணபதியே அப்படி வந்தவர் தானே.

      Delete
  10. // பாலக்காடு பிராமின் சமையலில் தான் மிளகு உளுத்தம்பருப்பு வறுத்து, சிவப்பு மிளகாய் வறுத்து, ஜீரகம், தேங்காய் வைத்து அரைத்து விட்டு செய்வதும் உண்டு..// இல்லை , தேங்காய் , சீரகம் & வர மிளகாய் மட்டுமே அரைப்போம் !!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஷோபா, நாங்க பாலக்காடு இல்லைனாலும் மொளகூட்டல் பண்ணுவோம். எங்க அப்பா வீட்டுப் பக்கம் கொஞ்சம் சமையலில் கேரள மணம் வீசும். மேற்சொன்ன மாதிரிப் புடலையில் மொளகூட்டல் இன்றைய சமையலில் இடம் பெற்றது.

      ஏற்கெனவே கொடுத்தது எல்லாம் காக்கா உஷ் ஆகி இருக்கு! :)))))

      Delete
  11. //சேனை எரிசேரிக்கு நறுக்கி இருந்ததே மிக அழகாக இருந்தது.//

    முதலில் கால் அங்குல கணத்தில் சேனையை பெரிய ஸ்லைஸ் ஆக வெட்டி தோல் நீக்கி கையால் பிட்டு Zigsaw புதிருக்கு உள்ளது போல் உடைக்க வேண்டும்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. செதில் செதிலாகச் செதுக்கி இருந்தார்கள். தேர்ந்த சமையல்கலை வல்லுநர்! :)

      Delete
    2. முன்பொரு முறை நான் போட்டிருந்த எரிசேரி பதிவில் இந்த செதுக்குதலை படத்துடன் விளக்கியிருந்தேன் :-)

      Delete