எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 10, 2016

புவனேஸ்வரில் இட்லி, தோசையுடன் இரவு உணவு!

சோம வம்சத்து மன்னன் ஜஜாதி கேசரி என்பவனால் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் கோயிலின் சில பகுதிகள் அதற்கு முன்னரே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆறாவது நூற்றாண்டில் இந்தக் கோயிலின் சில பகுதிகள் காணக் கிடைத்தன என்று ஏழாம் நூற்றாண்டின் சம்ஸ்கிருத புத்தகங்கள் சிலவற்றில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. மேற்சொன்ன கேசரி அரசன் தன் தலைநகரை ஜெய்ப்பூரில் இருந்து புவனேஸ்வரத்துக்கு மாற்றியதாகவும் சொல்கின்றனர். இந்த வம்சத்து அரசி ஒருத்தியால் ஒரு கிராமம் இந்தக் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டு ஒன்று சொல்கிறது. மேலும் ராஜராஜ சோழன் அளித்த தானங்கள், நிவந்தங்கள் போன்றவற்றைச் சொல்லும் கல்வெட்டும் ஒன்று இருப்பதாகச் சொல்கின்றனர்.

லிங்கராஜர் கோயில் புவனேஸ்வர் க்கான பட முடிவு

செந்நிறக் களிமண்ணால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயிலின் சுற்றுச்சுவர் எனப்படும் மதில் சுவர் மிகப் பிரம்மாண்டமானது. இதன் கனம்  மட்டுமே  ஏழரை அடி கனம் கொண்டது. சுமார் 520/465 அடி நீள, அகலம் கொண்ட இந்தக் கோயிலின் சுற்றுச் சுவர் வெளியிலிருந்து பார்க்கப் பிரம்மாண்டமாய்த் தெரிகிறது.  கோயில் கிழக்குப் பார்த்த சந்நிதியைக் கொண்டது.  மணற்கற்களாலும், செந்நிறக் களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கெனத் தனித் தல வரலாறு இருப்பதாகத் தெரியவில்லை. கோயிலின் மூலஸ்தானத்திற்குச் சென்று தரிசித்தால் ஒரு வகை ஏமாற்றமே ஏற்படும். ஏனெனில் அங்கே பெரிய அளவில் லிங்கம் எதையும் பார்க்க முடியாது. லிங்கராஜாவாச்சே என நினைத்துச் சென்றால் நாம் காண்பது சுமார் எட்டு அங்குலத்திற்கு ஒரு லிங்கமே! சத்ய யுகத்திலும் திரேதா யுகத்திலும் இங்கே லிங்கமே இல்லை என்றும் துவாபர யுகத்திலும் தற்போதைய கலி யுகத்திலுமே லிங்கமாக உருவெடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர். கலிங்க மன்னர்களும் இந்தக் கோயிலைப் பராமரித்திருப்பதால் ஒரு சில கலிங்கச் சிற்ப வேலைகளையும் காணலாம்.

ஈசன் காசியை விட புவனேஸ்வரமே தனக்குப் பிடித்த இடம் என்று உமை அம்மையிடம் சொன்னாராம். இதைக் கேட்டதும் பார்வதி தேவி மாடு மேய்க்கும் பெண்ணாக இங்கே வந்ததாகவும், தன்னை மணம் புரிந்து கொள்ள ஆசைப்பட்ட பூதங்கள்/அரக்கர்கள்(?) கீர்த்தி, வாசா ஆகியோரிடமிருந்து தப்பிக்கத் தவம் செய்ததாகவும், அதற்கெனக் கோயிலின் உள்ளேயே ஈசன் பிந்து சாகர் குளத்தை உருவாக்கியதாகவும் சொல்கின்றனர்.  இந்தக் கோயிலின் சுற்றுப் பிரகாரம் மட்டும், 2,50,000 சதுர அடியாகும். எட்டு அங்குலத்திற்கு இருக்கும் லிங்கம் அமர்ந்திருக்கும் பீடம் சக்தி பீடம் எனப்படுகிறது. மேலும் அதன் சுற்றளவு சுமார் எட்டு அடியாகும். அம்பிகை தனிக் கோயில் கொண்டிருக்கிறாள். அதைத் தவிர இந்தக் கோயில் வளாகத்தினுள் சுமார் 150 சிறு சிறு சந்நிதிகள் இருக்கின்றன.

நாங்கள் சென்ற சமயம் மாலை நேரத்து ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. புரி கோயிலின் வழிபாட்டு முறைகளே இங்கும் பின்பற்றப் படுவதால் இங்கேயும் அடிக்கடி நடை சார்த்தி விடுகின்றனர். இங்கும் தேர்த்திருவிழா மிகவும் பெரிய அளவில் நடைபெறும் என்கின்றனர்.  ரத யாத்திரையில் லிங்கராஜா தன் சகோதரி ருக்மிணியுடன் வீதி வலம் வருகிறார். அருகிலுள்ள ராமேஸ்வர் தியூலா கோயிலுக்கு லிங்கராஜாவும் ருக்மிணியும் செல்வார்கள்.  இந்தக் கோயில் லிங்கராஜா கோயிலில் இருந்து இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  இந்தக் கோயிலில் லிங்கம் ஶ்ரீராமரால் சீதை வழிபாடு செய்வதற்காகப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம். ராவண வதம் முடிந்து அயோத்தி திரும்புகையில் சீதை இங்கே சிவபூஜை செய்ய வேண்டி ஶ்ரீராமரால் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் ராமேஸ்வர் தியூலா என்னும் பெயரில் இந்தக் கோயில் விளங்குகிறது.  இங்கே நான்கு நாட்கள் லிங்கராஜா தங்கியதும் ஐந்தாம் நாள் இங்கிருந்து திரும்புகிறார். சிவராத்திரி அன்று முழுதும் விழித்திருந்து இங்கே உள்ள லிங்கராஜாவைத் தரிசிக்கும் அன்பர்கள் விடிந்ததும் கோயிலின் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் பிந்து சாகர் குளத்தில் நீராடி விரதம் முடித்து மீண்டும் லிங்கராஜாவைத் தரிசித்துத் தங்கள் சிவராத்திரி தரிசனத்தை முடித்துக் கொள்கின்றனர்.

லிங்கராஜா கோயிலுக்கு மட்டும் போயிட்டு நாங்கள் திரும்ப விடுதிக்குச் செல்லும் முன்னர் கடைத்தெருவைப் பார்க்க விரும்பினோம். கடைத்தெரு பிரம்மாண்டமாக உள்ளது. ஆனால் எல்லாம் ஓர் ஒழுங்கில்! அங்கே ஓர் இடத்தில் வண்டியை ஓட்டுநர் நிறுத்திவிட்டு நாங்கள் செல்ல விரும்பிய வயோனிகா ஷோரூமுக்கு எங்களுக்கு வழிகாட்டிக் கொடுத்தார். வயோனிகா/பயோனிகா ஷோரூம் நம்ம ஊர் கோ ஆப்டெக்ஸ் மாதிரி. ஒரிசாவின் கைத்தறிப் படைப்புக்களை அங்கே வாங்கலாம்/காணலாம். சரினு அங்கே உள்ள நடைபாதைக் கடைகளை எல்லாம் வேடிக்கை பார்த்த வண்ணம் சென்றோம். உள்ளே வயோனிகா ஷோ ரூம் பெரிதாக இருந்ததோடு அல்லாமல் மிகவும் நவீனமாக அமைக்கப்பட்டிருந்தது. நம்ம ஊர் கோ ஆப்டெக்ஸோடு ஒப்பிடுகையில் இதன் நவீனம் மனதைக் கவர்ந்தது. கோ ஆப்டெக்ஸையும் இப்படி மாற்றி அமைக்கலாமே என நினைத்தோம். உள்ளே போனால் குறைந்த பட்ச விலையே மயக்கம் போட வைத்தது.

கடையின் வெளியே நடைமேடையில் மக்கள் அமர பெஞ்ச் போட்டிருந்தனர். ஆங்காங்கே கடைகளில் விற்கும் சாட், சமோசா போன்றவற்றையும் ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் வாங்கிக் கொண்டு ஆற, அமர அமர்ந்த வண்ணம் அனைவரும் ருசித்தும் ரசித்தும் கொண்டிருந்தனர். இதே போல் குஜராத்தின் பரோடா, ஜாம்நகர், அகமதாபாதில் பார்க்கலாம். பின்னர் அங்கிருந்து கிளம்பி விடுதிக்குச் செல்லும் முன்னர் இரவு உணவை முடித்துக் கொள்ள விரும்பி ஓட்டுநரிடம்  நல்ல தென்னிந்திய உணவு விடுதிக்குச் செல்லும்படி சொன்னோம். உண்மையிலேயே நல்ல உணவு விடுதி என்பதோடு விலையும் அதிகம் இல்லை.  இட்லி, தோசை போன்ற உணவுகளும், ஊத்தப்பமும் அருமையாக இருந்தது.

இட்லி, தோசை க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

அங்கே உணவை முடித்தவுடன் விடுதிக்கு வந்தோம். மணி ஏழரை ஆகிவிட்டது. விடுதிக் காப்பாளர் முதல்நாள் நிகழ்ச்சி முடிந்து விடுதிக்குத் திரும்பி விட்டார். லிஃப்டும் வேலை செய்தது. மேலே ஐந்தாம் மாடிக்கு வந்ததும் காப்பாளரிடம் குடிக்க வெந்நீர் மட்டும் கேட்டுக் கொண்டு அதை வாங்கிக் குடித்துவிட்டுப் படுத்தோம். மறுநாள் அங்கேயே அங்குல் என்னும் ஊருக்கு அருகே இருக்கும் என் நாத்தனாரையும் அவர் மகள் குடும்பத்தையும் பார்க்கச் செல்லவேண்டும். காலையே வண்டி வரும் என நாத்தனாரின் பையர் கூறி இருந்ததோடு ஓட்டுநர் பெயர், வண்டி எண் எல்லாவற்றையும் அனுப்பி இருந்தார். ஆகவே படுத்து ஓய்வெடுத்தோம். 

18 comments:

  1. கூகுள் படங்களை விட நீங்கள்
    எடுத்த படங்க்கள் இருந்தால் இன்னும்
    சிறப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது
    கோவில் குறித்த விரிவான விவரங்களை
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கும் பயணமும் பதிவுகளும்
    தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா, நல்வரவு. எனக்கு புவனேஸ்வர் செல்லும்போதே உடல்நலக் குறைவு ஆரம்பித்து விட்டது. அதே சமயம் பெரும்பாலான கோயில்களுக்குள் தோல் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாது. வண்டி நிற்கும் இடம் கோயிலின் நுழைவாயிலில் இருந்து அரை கிலோ மீட்டருக்கும் மேல் இருக்கும். ஆகையால் வெளியே இருந்தும் படம் எடுப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. மேலும் காலை மூன்று முறை ஐந்து மாடி ஏறி ஏறி இறங்கியதில் ரொம்பவே களைப்பு! :(

      Delete
  2. //இந்தக் கோயிலின் சுற்றுப் பிரகாரம் மட்டும், 2,50,000 சதுர அடியாகும். எட்டு அங்குலத்திற்கு இருக்கும் லிங்கம் அமர்ந்திருக்கும் பீடம் சக்தி பீடம் எனப்படுகிறது.//

    மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது என்பார்களே, ஒருவேளை அதுபோல இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இந்தக் கோயிலின் கீர்த்தி பெரியது தான்.

      Delete
  3. //ஓட்டுநரிடம் நல்ல தென்னிந்திய உணவு விடுதிக்குச் செல்லும்படி சொன்னோம். உண்மையிலேயே நல்ல உணவு விடுதி என்பதோடு விலையும் அதிகம் இல்லை. இட்லி, தோசை போன்ற உணவுகளும், ஊத்தப்பமும் அருமையாக இருந்தது.// //ஆகவே படுத்து ஓய்வெடுத்தோம். //

    மிகவும் சந்தோஷம்.

    ReplyDelete
  4. மேலே புவனேஸ்வர் கோயில் படமும், கீழே கூகுளாரின் இட்லி தோசை சாம்பார் சட்னிகள் படமும் நன்னா இருக்கு. பகிர்வுக்கு நன்றிகள். இனி, அங்குல் என்னும் ஊரில் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆனால் அங்கே குறிப்பிடத்தக்க சம்பவங்கள் ஏதும் இல்லை. நன்கு ஓய்வு எடுத்தோம் என்பதைத் தவிர!

      Delete
  5. லிங்க ராஜா கோவிலில் ருக்மணியா. என்ன அழகு. அந்த மதில்சுவரை இடிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்களா நல்ல வேளை. அந்தத் தென்னிந்தியக் கடையின் பெயர் என்னவோ.
    நல்ல வேளை லிஃப்ட் வேலை செய்ததே. எனக்கே கால்வலி குறைந்த மாதிரி இருக்கு.
    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நம்ம ஊர்களில் சிவன் கோயிலில் சந்நிதியின் நுழைவாயிலில் மஹாலக்ஷ்மி காணப்படுவாள். பார்த்திருப்பீர்கள் தானே! அதே போல் அங்கே ருக்மிணி. மஹாலக்ஷ்மியின் அம்சம் தானே! ஈசனின் சகோதரியாக வணங்கப்படுபவள்!

      Delete
    2. அந்த ஹோட்டலின் பெயர் ஹோட்டல் வீனஸ், ஹோட்டல் வீனஸ் இன் என்னும் தொடர் ஓட்டல்களைச் சார்ந்தது என நினைக்கிறேன். நாங்க போனது வீனஸ் ரெஸ்டாரன்ட்! புவனேஸ்வரில் ராஜ்பாத்துக்கு அருகே ஒரு பெட்ரோல் பங்க் அதைத் தாண்டிச் செல்ல வேண்டும். :)

      Delete
  6. அருமையான விளக்கமான தகவல்கள் புதியன பல அறிந்தோம்.

    கீதா: ஒடிசா காட்டன் கொஞ்சம் விலை கூடுதல்தான். இப்போது கோ ஆப்டெக்சில் கூட காட்டன் சாரிகள் அழகழகாக வந்துள்ளன..சுடிதார் மெட்டீரியல் கூட அழகு கலர், டிசைன்களில் வருகின்றன. ஒடிசா அளவிற்கு இருக்காது என்றாலும் விலை கொஞ்சம் கூடுதல்தான்....இப்போதெல்லாம் ஸ்ரீகணேஷ் ப்ராண்டட் காட்டன் மெட்டீரியல்ஸ். பாரிஸ் கார்னரில் 400 ரூபாய்க்கு கிடைக்கிறது ஹோல்சேல் கடைகளில்.. கோமல் ஆர்ட்ஸ், எல்லாம்...

    ReplyDelete
    Replies
    1. நான் கைத்தறிச் சேலைகளுக்கு மொத்தக் குத்தகை எடுத்திருக்கேன் கீதா! கோ ஆப்டெக்ஸில் தான் இந்த வருஷம் தீபாவளிக்குப் புடைவை எடுத்தேன். ஒடிஷா காட்டனும் ஒண்ணு எடுத்திருக்கேன். சம்பல்பூர் காட்டன். ஶ்ரீகணேஷ் ப்ராண்டட் காட்டன் பத்தி இப்போத் தான் கேள்விப் படுகிறேன். நான் சென்னையில் ஈவ்னிங் பஜாரில் உள்ள ஹான்ட்லூம் ஹவுஸில் தான் எப்போதும் சேலைகள் தேர்வு செய்வேன். மத்திய அரசு ஜவுளித் துறையைச் சேர்ந்த கடை!

      Delete
  7. கோவிலின் வரலாறு சுவாரஸ்யம். தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. இது என்ன தலைப்பு?.. புவனேஸ்வரில் நீங்கள் இட்லி தோசையுடன் ஊத்தப்பமும் சேர்த்து சாப்பிட்டதா முக்கியம்?..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஜீவி சார்! நிச்சயமா! இதுவும் முக்கியம் தான்! அதே போல் ஜவுளி பற்றி எழுதியதும் முக்கியமே! பலருக்கும் சாப்பாடு ஒரு பிரச்னை என்பது என் போன்ற வயிற்றுக்கோளாறு நிரந்தரமாக உள்ளவர்களுக்கு நன்கு புரியும். நல்ல சுத்தமான, சுவையான உணவு எங்கே கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது நல்லதே! மேலும் புவனேஸ்வரில் லிங்கராஜா கோயில் பார்த்ததோடு எங்களோட க்ஷேத்திராடனம் முடிஞ்சுது! தங்கும் இடம், நல்ல சாப்பாடு போன்றவை ஒழுங்காய் இருந்தால் தான் எந்த ஊருக்குப் போனாலும் நிம்மதியாகச் சுற்றிப் பார்க்க முடியும்.

      Delete
    2. தங்கள் பார்வைக்கு:

      http://jeeveesblog.blogspot.in

      Delete