எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 23, 2016

ஓ, கல்கத்தா, ஓ, கல்கத்தா, ஓ, கல்கத்தா!

அன்று வெளியே எங்கும் செல்லவில்லை. மறுநாள் அங்குலிலேயே இருக்கும் ஜகந்நாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் நாத்தனார் பையர். குடும்ப சமேதராகக் கிளம்பினோம். அங்குல் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் பின்னர் கோயிலுக்குச் சென்றோம். நாங்கள் சென்ற சமயம் மாலை ஆரத்தி எடுக்கும் நேரமாக இருந்தது. கோயிலில் கர்ப்பகிரஹம் செல்லப் பல படிகள் மேலே ஏறணும்.

Jagannath Temple, Angul

படத்துக்கு நன்றி விக்கிபீடியா!

கிட்டத்தட்ட புரி ஜகந்நாதர் போலவே இங்கும் பலராமர், சுபத்ராவோடு இருக்கார் ஜகந்நாதர். அதே மரத்தாலான பிரதிமைகள்/விக்ரஹங்கள். ஜகந்நாதர் குடியிருக்கும் கோயில்களில் புரிக்கு அடுத்தபடியாக இதுதான் பெரியது என்று சொல்கின்றனர். ஆனால் புரி அளவுக்குக் கூட்டமெல்லாம் இல்லை. நின்று, நிதானமாக ஆரத்தி பார்த்தோம். பக்கத்திலேயே மா புதி தாகுரானி கோயில் என்னும் கோயில் இருக்கிறது. ஆனால் நாங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். மறுநாள் இந்த ஜின்டால் டவுன்ஷிப்பில் இருந்து சாலை வழியாக ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கும் பூஷணம் ஸ்டீல்ஸ் டவுன்ஷிப்பில் இருக்கும் நாத்தனார் பெண்ணைப்  பார்க்கச் சென்றோம். அன்றிரவு அங்கே தங்கி மறுநாள் காலை எழுந்து கல்கத்தா பயணம். ஒடிஷா வரை சென்றதால் கல்கத்தாவையும் பார்த்துடலாம்னு ரங்க்ஸ் திட்டம் போட்டிருந்தார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை நாத்தனார் பெண் வீட்டில் இருந்து ஒரு மணி நேரம் பயணித்து புவனேஸ்வர் விமான நிலையம் வந்தோம். அங்கிருந்து காலை ஒன்பதரைக்குக் கல்கத்தாவுக்கு விமானம். பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து விமானத்தில் ஏறிக் கல்கத்தாவுக்குப் பதினோரு மணிக்குப் போய்ச் சேர்ந்தாச்சு. கல்கத்தாவில் மழை பெய்திருந்தது.   நண்பர் ஒருவர் எங்களை வரவேற்க வெளியே காத்திருப்பதாகவும் முன் பதிவு செய்திருக்கும் விடுதிக்கு அவர் அழைத்துச் செல்வார் என்றும் செய்தி வந்திருந்தது. வெளியே வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு முன்பின் பார்த்திராத நண்பரையும் கண்டு பிடித்தோம். நண்பர் எங்களை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு முன் பணம் செலுத்திப் பயணம் செய்யும் டாக்சி பதிவுக்குச் சென்றார். மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் காத்திருந்து ஒருவழியாகப் பனிரண்டரை மணிக்கு டாக்சிக்குப் பணம் கட்டி ரசீது பெற்று வந்து எங்களை அழைத்துக் கொண்டு டாக்சியைக் கண்டு பிடித்து அதில் ஏற்றி அவரும் கூட வந்தார்.

வழியெங்கும் ஒரே குப்பை! அழுக்கு! அசுத்தம்! நடைமேடைகள் எல்லாம் குடிசைகள் கட்டி ஏழைமக்கள் ஆக்கிரமிப்பு! அப்போது இருந்த மனோநிலையிலும் காமிரா சூட்கேஸுக்குள் இருந்த காரணத்தாலும் படம் எடுக்கலை! அசுத்தம் என்றால் அவ்வளவு அசுத்தம்! கிழிந்த சுவரொட்டிகள்! ப்ளாஸ்டிக் தோரணங்கள்! எங்கு பார்த்தாலும் தீதியின் ஃப்ளெக்ஸ் பானர்கள்! ஒடிஷாவிலோ, குஜராத்திலோ, மற்ற மாநிலங்களிலோ முதல் அமைச்சரின் படங்களோ கட்சிக் கொடிகளோ கண்டதில்லை. உத்தரப்ரதேசத்தில் மாயாவதி நிர்மாணித்த யானைகள் உள்ளன! ஆனால் இங்கோ எங்கெங்கும் தீதிமயம்! :) இவ்வளவு மோசமான நகரத்தைப் பார்க்கவே முடியாது என எண்ணிக் கொண்டேன்.

பனிரண்டரை மணிக்கு ஆரம்பித்த பயணம் போய்க்கொண்டே இருந்தது. பத்து நிமிடம் பயணம் என்றால் அடுத்த பத்து நிமிடம் சிக்னலில் காத்திருப்பு! இப்படியே பயணித்து நாங்கள் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குக் கிட்டத்தட்ட மூன்று மணிக்குச் சென்றோம்.  துரதிர்ஷ்டவசமாக அந்த விடுதி அறை சில, பல காரணங்களால் எங்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை என்பதால் காப்பாளரிடம் ஒன்றும் சொல்லாமல் சாமான்களை அப்போதைக்கு அங்கே வைத்துவிட்டு வெளியே கிளம்பினோம். தெருவுக்கு வந்துச் சற்றுத் தூரம் நடந்து ஆட்டோ ஒன்று பிடித்தோம். கல்கத்தாவில் ஆட்டோக்கள் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் தான் பயணிக்க வேண்டும். மும்பையிலும் அப்படித் தான். தாதர் தாண்டினால் ஆட்டோக்களில் பயணம் செய்ய முடியாது. நாங்கள் சென்ற ஆட்டோ ஓட்டி மிக நல்லவராக இருந்தார். நாங்கள் செல்ல வேண்டிய கோமள விலாஸுக்குச் சரியாக வண்டியை ஓட்டிக் கொண்டு சென்று நிறுத்திவிட்டு 30 ரூபாய் பெற்றுக் கொண்டு நேரம் ஆகாதென்றால் தானே திரும்பவும் இருந்து கூட்டிச் செல்வதாகச் சொன்னார். ஆனால் நாங்கள் போகச் சொல்லிவிட்டோம்.

பாலிகஞ்ச் பகுதியில் ராஷ்பிஹாரி அவென்யூவில் கோமள விலாஸ் ஓட்டல் இருக்கிறது. ராஷ்பிஹாரி அவென்யூவில் தெருவின் இருபக்க நடைமேடைகளும் கடைகள், கடைகள், கடைகள்! யானை வேணுமானாலும் வரவழைத்துத் தருவாங்க போல! இந்தக் கடைகள் இருபக்கங்களிலும் அடைத்துக் கொண்டதில் கோமளவிலாசின் நுழைவாயிலே மறைந்துவிட்டது! இப்படித் தான் மற்றக் கட்டிடங்களுக்கும் காணப்பட்டது. அவங்கல்லாம் பொறுமை ஜாஸ்தி போலனு நினைத்துக் கொண்டேன். கல்கத்தா போகிறதா முடிவானதுமே கோமள விலாஸைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அறை முன்பதிவு செய்ய முயற்சித்தும் அவங்க ஒத்துக்கலை. கடிதம் மூலம் தொடர்பு வேண்டும். எழுத்து மூலம் இருந்தால் தான் ஒத்துப்போம்னு சொல்லிட்டாங்க. கடிதங்கள் சரியாகப் போய்ச் சேருவதில்லை. :( ஆகவே முன்பதிவு செய்ய முடியவில்லை. என்றாலும் ஓர் அசட்டு தைரியத்துடன் அங்கே போய் அறை இருக்கானு கேட்டோம். அங்கிருந்தவர் கிண்டலாக இருக்கு, ஆனால் அடுத்த மாதம் வரை காத்திருக்கணும்னு கேலி செய்தார். பல்லைக் கடித்துக் கொண்டு வேறு வழி தெரியாமல் எதிரேயே உள்ள கோமள விலாஸின் ஓட்டலுக்குச் சென்று ஏதேனும் சாப்பிட முடிவு செய்தோம்.

அங்கே சென்று இட்லியும், தோசையும் வரவழைத்துச் சாப்பிட்டோம். உணவு தரமாகவே இருந்தது. காஃபி சாப்பிட்டதும் எங்களுக்கு உணவு பரிமாறிய ஊழியரிடம் அக்கம்பக்கம் ஏதேனும் ஓட்டல் இருக்கா, தங்குமிடம் கிடைக்குமா என்று கேட்டோம். ஓட்டலை ஒட்டிய பக்கத்துத் தெருவில் போய்ப்பார்க்கும்படி அவர் சொன்னார். சாப்பிட்டு முடித்ததும் உலாக் கிளம்பினோம். பக்கத்துத் தெருவில் சென்று விசாரித்தோம். ஒருவர் அங்கிருந்து வலப்பக்கம் திரும்பும் தெருவில் தாரா மஹல் என்னும் ஓட்டல்/தங்குமிடம் இருப்பதாகவும் அங்கு சென்று விசாரிக்கும்படியும் சொன்னார். அதே போல் அங்கே சென்றோம். தெருவில் திரும்பியதுமே எதிர்சாரியில் 2.3 வீடுகள் தாண்டித் தாரா மஹல் தென்பட்டது. அங்கே சென்று வரவேற்பறையில் இருந்தவரிடம் அறை இருக்கா என்று கேட்டோம். எங்களைப் பார்த்தவர் எந்த ஊரிலிருந்து வரீங்கனு கேட்டார். நாங்க திருச்சி, ஶ்ரீரங்கம் என்று சொன்னோம். உடனே தமிழில் பேச ஆரம்பிச்சுட்டாங்க! 

20 comments:

  1. கோமள விலாஸ்! பெயரே கர்நாடகமா இருக்கே!!!

    தமிழில் பேசக் கேட்டதும் கண்கள் பனித்தனவா?!!

    ReplyDelete
    Replies
    1. கோமள விலாஸ் ஓட்டல்கள் உணவின் தரத்துக்கும் ருசிக்கும் பெயர் பெற்றவை ஶ்ரீராம். ஆந்திரா--தமிழ்நாடு சாலை வழியில் கூட ஒன்று உண்டு. ஆனால் இதன் கிளையா என்பது தெரியாது. மலேசியா அல்லது சிங்கப்பூரிலும் கோமள விலாஸ் பெயர் பெற்ற ஓட்டல்! :) தமிழில் பேசக் கேட்டதும் கண்கள் எல்லாம் பனிக்கவில்லை! நீங்க வேறே! :)))))

      Delete
  2. இதுவரை கொல்கத்தா சென்றதில்லை

    ReplyDelete
    Replies
    1. மிகப் பெரிய, பாரம்பரியம் மிக்கப் பழமையான நகரம்! ஆனால் பொலிவின்றி இருப்பதாக என் கருத்து!

      Delete
  3. புரியைத் தான் பேச்சு வழக்கில் பூரி என்று சொல்கிறோமோ? (ஜகந்நாதர் புகழ் பிரதேசத்தை)

    உடனே தமிழில் பேச ஆரம்பிச்சுட்டாங்க!-- எந்த மொழியில் பேசினால் தான் என்ன? எங்களை (குறிப்பாக என்னை)மாதிரியா நீங்க? ஹிந்தி தெரிஞ்சிருக்கற (கொல்கத்தாவுக்கு இல்லாவிட்டாலும்) வரைக்கும் உங்களுக்கென்ன கவலை?.

    ஹிந்தி தெரியாமல் வடபுலப் பயணம் மேற்கொண்டு நான் பட்ட பாடு எனக்கல்லவா தெரியும்?..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார், புரி தான் சரியான உச்சரிப்பு! :) வடமாநிலம் செல்வதற்குக் கொஞ்சமானும் ஹிந்தி தெரிந்தால் நல்லது தான். கல்கத்தாவில் நாங்க ஹிந்தி செல்லுமா, செல்லாதா என யோசனையில் இருந்தோம். நல்லவேளையாக அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள், புரிந்து கொள்கின்றனர். இதுவே குஜராத்தில் எடுத்த எடுப்பில் குஜராத்தியில் தான் "கிம் ச்சொ" என்பார்கள். ஒரு முறை ஸ்டேட் வங்கியில் அலுவலக ஊழியர் விடாப்பிடியாக குஜராத்தியிலேயே பேச, வெறுத்துப் போன நான் தமிழில் பேசப் பின்னர் மானேஜர் வந்து சமாதானம் செய்து ஊழியரை ஹிந்தி, அல்லது ஆங்கிலத்தில் உரையாடச் சொல்லிட்டுப் போனார்! :)

      Delete
    2. //ஒரு முறை ஸ்டேட் வங்கியில்// "குஜராத்தில் வசிக்கும்போது ஒருமுறை ஸ்டேட் வங்கியில்" என வந்திருக்கணும். குஜராத்தில் என்னும் வார்த்தை விடுபட்டிருக்கிறது! :)

      Delete
    3. தமிழ்இளங்கோ கவனிப்பாராக. தப்பித்தவறி காளிகோவில் பக்கம் போயிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

      ஜெயகுமார்

      Delete
    4. தமிழ் இளங்கோ கவனிக்கணுமா? புரியலையே? என்ன விஷயம்? தப்பித் தவறி என்ன! காளியைப் பார்க்காமல் கல்கத்தாவை விட்டுக் கிளம்புவதில்லை என்று முடிவே எடுத்திருந்தோம். :)

      Delete
    5. ஹாஹாஹா, அவர் ஸ்டேட் வங்கி ஊழியராக இருந்ததால் சொல்கிறீர்களோ? ஹிஹிஹிஹி!

      Delete
  4. தமிழ்நாட்டு சுத்தத்திற்கும் , பேருந்துகளுக்கும் வட நாட்டில் எந்த ஊரும் உறைபோடக்காணாது ...கல்கத்தாவும் விதிவிலக்கல்ல ...கல்கத்தாவில் வசித்தவர்களுக்கு ,கல்கத்தா is first love ...உண்மையில் கல்கத்தா ' பிடித்துபோக ' சிறிது காலம் பிடிக்கும் ...தி.ஜானகிராமன் குறிப்பிடும் நல்ல எண்ணம் கொண்டவர்கள் மிக
    அதிகம் ! in fact Calcutta is a glorified village ...அவ்வளவு பெரிய நகரத்திலும் you can see village life... that is in fact , the soul of Calcutta
    மாலி

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாலி சார், உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். நீங்க சொல்வது உண்மையே! ராஷ்பிஹாரி அவென்யூவில் வாழ்க்கை ருசிகரமாக இருக்கும் என்று தெரிந்தது. ஆனால் அந்தக் கூட்டம், நெரிசல், எல்லா சிக்னல்களிலும் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கும் வண்டிகள்! ஒரு மணி நேரப் பயணம் தான் விமான நிலையத்திலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய பகுதி! ஆனால் அதற்கு கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆயிடுச்சு! மக்கள் நல்லவர்களே! அதிலும் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் நேர்மையாகவே இருந்தனர்.

      Delete
    2. தமிழ்நாட்டில் சுத்தமா? ஹிஹிஹி, எங்கே சார் சுத்தம்? சென்னை ஓர் குப்பை நகரமாக அல்லவோ இருக்கிறது. மதுரையும் மோசம் தான்! கோவை கொஞ்சம் பரவாயில்லை. இங்கே திருச்சியை விட ஶ்ரீரங்கம் பரவாயில்லை!

      Delete
    3. திருச்சிதான் தமிழ்நாட்டிலேயே சுத்தமான நகரம் 1 ஆமிடத்தில் இருக்கிறது என்று சமீபத்தில் வாசித்த நினைவு...

      Delete
  5. இதே கல்கத்தாவைத் தம்பி புகழ்ந்து கொண்டே இருப்பான்.
    அது 30 வருடத்துக்கு முன்னால்,. கோமளவிலாஸ் அப்போதெல்லாம் இத்தனை கெடுபிடி கிடையாது.
    கதைகளில் கூட பார்த்த நினைவு.
    தமிழ்வாணன் கதையில் கலகத்தா பற்றித் தெரிந்து கொண்டதுதான். இத்தனை அழுக்கும் பாலிடிக்ஸுமா அங்கே.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம், இப்போவும் கல்கத்தாக்காரங்களுக்கு இதைப் படிச்சால் கோபம் வரலாம்! :) ஆனால் ஊரைக் கொஞ்சமாவது சுத்தமாக வைத்திருக்கணும்! :( கோமள விலாஸ் ஓட்டலில் தொண்ணூறுகளில் நம்ம ரங்க்ஸ் தங்கி இருந்திருக்கார். ஆறு மாசத்துக்கு ஒரு தரம்அலுவலக வேலையாகச் செல்வார். ஒரு வேளை அப்போப் போயிருந்தால் கல்கத்தா பிடிச்சிருக்குமோ என்னமோ! அது என்னமோ தெரியலை! அப்போக் கூட்டிட்டுப் போகமாட்டேன்னு சொல்லிட்டார்! :))

      Delete
  6. அடடா! கல்கத்தா போனீங்களா? அங்கே ஆறேழு வருஷம் அந்த தாராமஹால் பக்கத்துலே தான் வாழ்ந்தேன். நல்ல ஊருங்க அது.. என் இலக்கிய கோடி பட்டொளி வீசி பறந்த காலம். இப்போது கூட இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது போய் வருகிறேன்.. கல்கத்தாவை ரொம்ப திட்டாதீங்க... அழுதுடுவேன்!

    ReplyDelete
    Replies
    1. அட?நீங்களும் கல்கத்தா அபிமானியா? முன்னாலேயே தெரியாமல் போச்சு! :) தாராமஹல் அப்போ ரொம்ப வருஷமா இருக்கா? ம்ம்ம்ம்ம்ம்ம்! கல்கத்தாவைத் திட்டினா அழுவீங்களா? ஹை! ஜாலி! முன்னாடியே தெரியாமப் போச்சே! :)

      Delete
  7. கல்கத்தா அழுக்குதான். அரசியலும் அப்படித்தான். தீதியின் ஃப்ளக்ஸ் என்றால் அதுவும் பிறமாநிலத்தில் இல்லாத என்று தமிழ்நாட்டை மறந்துட்டீங்களா....இங்கு அம்மா....எல்லா இடங்களிலும் வீற்றிருக்கிறாரே

    கீதா

    ReplyDelete
  8. கல்கத்தா அழுக்குதான் என்ராலும் நல்ல ஊர். என்ன அவங்க ஊர் சாப்பாடு என்றால் எல்லாம் ஸ்வீட் ஸ்வீட் இல்லாமல் அதுவும் ரொசகுல்லா இல்லாமல் முன்பு...இப்போது தெரியவில்லை

    கீதா

    ReplyDelete