எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 11, 2018

நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம், 3

அ+உ+ம= ஓம் என்பது. அதுவே மாறி உ+அ+ம=உமா என தேவி பிரணவம் என்ற சிறப்பைப் பெற்றது. இதைத் தவிரவும் உ என்ற எழுத்துக்கு சிவன் என்றும் மா என்ற எழுத்து அவனின் சக்தியையும் குறிக்கும். மேலும் இந்தச் சக்திதான் நமக்கு சிவனை அடையாளமும் காட்டுகிறாள். நிறமற்றப் பரம்பொருளைத் தன் செந்நிறத்தால் அடையாளம் காட்டுகிறாள். இதையே அபிராமி பட்டரும், “உதிக்கின்ற செங்கதிர் “என்று கூறுகிறார். இவளுக்கு எல்லாமே மூன்று. தேவியின் பீஜாக்ஷரங்கள் மூன்று. அதனாலேயே த்ரிபுர சுந்தரி என்ற நாமத்தையும் பெற்றாள். த்ரிபுரம் என்பதே தேவியின் பீஜாக்ஷரங்களையே குறிக்கும். சிருஷ்டி(படைத்தல்), ஸ்திதி(காத்தல்), ஸம்ஹாரம்(அழித்தல்), திரோதானம்(மறைத்தல்), அனுகிரஹம்(அருளுதல்) என்னும் ஐந்து தொழில்களையும் தேவி முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன், ஸதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள். இதையே லலிதா சஹஸ்ரநாமமும்,, “பஞ்ச க்ருத்ய பராயணா” என்று கூறுகிறது. முக்குணம் உள்ள மாயைக்கு ரஜோ குணம் மேலிட்டிருக்கும்போது பிரம்மா என்ற சைதன்யமும், ஸத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு என்ற சைதன்யமும், தமோ குணம் மேலிட்டிருக்கும்போது ருத்ரன் என்ற சைதன்யமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது.

இப்போ மஹிஷாசுரனைப் பத்திப் பார்ப்போமா?? மஹிஷாசுரன் வாங்கிய வரங்களைக் கொண்டு நல்லாட்சி நடத்தாமல் அனைவரையும் துன்புறுத்தியே வந்தான். அவனுடைய அசுர வலிமையால் இந்திரலோகத்தில் இருந்து இந்திரனை விரட்டிவிட்டு மஹிஷாசுரன் தானே இந்திரன் என அறிவித்துக்கொண்டான். மேலும் திக் தேவதைகளின் அதிகாரங்களையும், சூரிய, சந்திரர்களைக் கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தான். ஆகவே மூவுலகிலும் நியதிகளில் மாறுபாடு ஏற்பட ஆரம்பித்தது. அவனுடைய கொடுங்கோன்மை கட்டுக்கடங்காமல் போகவே அனைவரும் ஈசனைச் சரண் அடைந்தனர். ஈசன் இது தேவி ஒருத்தியாலேயே நிகழக்கூடிய ஒன்று எனக் கூறித் தன் சக்தியில் இருந்து ஒரு மாபெரும் ஒளிப்பிழம்பைத் தோற்றுவித்தார். அவ்வாறே பிரம்மா, விஷ்ணுவும் அவரவர் சக்தியை ஒளிப்பிழம்பாய்த் தோற்றுவிக்க மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்தது. இதைக் கண்ட தேவாதி தேவர்கள் தங்கள் பங்கும் இந்த நற்காரியத்திற்கு வேண்டும் என உறுதி கொண்டு அவரவர் சக்தியை வெளிப்படுத்த அனைத்தும் சேர்ந்து கோடி சூரியப் பிரகாசத்தைவிடவும் அதிகப் பிரகாசம் கொண்டதொரு ஜோதி ஸ்வரூபமாய் மாறி தனக்கு உவமையற்றதாய் விளங்கியது. ஒன்று சேர்ந்த அந்த ஜோதி ஒரு பெண்ணுருக் கொண்டது.

ஈசனின் முகத்து ஒளியானது அந்தப் பெண்ணின் முகமாகவும், விஷ்ணுவின் ஒளியால் புஜங்களும், யமனின் ஒளியால் கேசமும், சந்திரனுடைய காந்தியால் மார்புகளும், இந்திரனுடைய காந்தியால் இடையும், வருண காந்தியால் தொடைகளும், முழங்கால்களும் தோன்றின. பூமியின் ஒளியானது பிருஷ்ட பாகமாய் மாறிற்று. பிரம்மாவின் ஒளியால் பாதங்கள், சூரிய ஒளியால் கால்விரல்கள், வசுக்களின் ஒளியால் கைவிரல்கள், குபேரனின் காந்தியால் மூக்கு, பிரஜாபதியின் ஒளியால் பல்வரிசைகள், அக்கினியின் ஒளியால் முக்கண்கள், சந்தியைகளின் ஒளியால் இரு புருவங்கள், வாயுவின் ஒளியால் காதுகள் தோன்றிற்று. மற்ற தேவர்களின் ஒளியால் மங்கள ஸ்வரூபமான தேவியின் ஆவிர்ப்பாவம் ஏற்பட்டது.
பரமசிவன் திரிசூலத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட ஒரு சூலத்தை அம்பிகைக்குக் கொடுக்க, விஷ்ணுவும் தன் சுதர்சனத்தில் இருந்து மற்றொரு சக்கரத்தை உண்டாக்கி அம்பிகைக்கு அளித்தார். வருணன் சங்கமும், அக்னி சக்தி ஆயுதமும் வாயு வில்லையும் பாணங்கள் நிறைந்த அம்புறாத் தூணியையும் அளிக்க, இந்திரன் தன்னுடைய வஜ்ஜிராயுதத்தையும், ஐராவதத்தில் இருந்து தோன்றிய மணியையும் அளிக்கிறான். யமனின் கால தண்டத்திலிருந்து ஒரு தண்டத்தையும், வருணன் பாசத்தையும், பிரஜாபதி அக்ஷமாலையையும், கமண்டலுவையும் அளித்தனர். சூரியனின் கிரணங்களால் அவள் உடலின் காந்தி ஒளிவிட்டுப் பிரகாசித்தது. காலன் சுத்தியையும், கேடயத்தையும் அளிக்க, பாற்கடலரசன் ஹாரத்தையும் எப்போதும் புதிதான வஸ்திரங்களையும் கொடுக்கிறான். இவ்வாறே மற்ற தேவர்களும் ஒப்புயுர்வற்ற ஆபரணங்களையும், ஆயுதங்களையும் அளிக்கின்றனர். விஸ்வகர்மா பிளக்கமுடியாத கவசங்களையும், ஹிமவான் சிம்ம வாகனத்தையும் நவரத்தினங்களையும் அளிக்கிறான். ஆதிசேஷன் நாகஹாரத்தைக் கொடுத்தான்.

தேவி அனைத்தையும் பெற்றுக்கொள்கிறாள். இவ்வாறு உபசாரங்கள் செய்யப் பட்டதில் மனம் மகிழ்ந்து சிம்ம வாஹனத்தில் அமர்ந்த வண்ணம் “அட்டஹாசம்” என்னும் சிரிப்பைத் தர அண்டசராசரமும் நடுங்கியது. தேவர்கள் ஜயகோஷம் எழுப்பினர். மஹிஷனை வதைக்க தேவி கிளம்பினாள்.

மஹிஷ அசுரன் என்னும் ஒருத்தன்
தபஸுமிகப்பண்ணி வரமடைந்தான்
ஜகத்திலுள்ளோரை உபத்திரவிக்க அஸுரன்
தேவர்கள் ரிஷிகளெல்லோருங்கூடி,
கைலாசத்திற்கு ஓடி வந்தெல்லோரும்
அறிவித்தாள் மஹாதேவருக்கும்
சிவனுடைய ஸந்நிதியில் நின்று 
தேவி மஹிமை சொல்லி ஸ்துதித்தாள்.
தேவாளுடைய முகத்திலிருந்தம்மன்
தேஜோரூபமாய் ஒன்று சேர்த்து
அத்தனை பேர்களின் தேஜசைக் கிரஹித்து
அம்மன் பிரத்தியக்ஷமாக வந்தாள்
அத்தனை தேவர்களும் பணிந்து தங்கள்
ஆயுதமும் தேவி கைகொடுத்தாள்
பக்தியாய் ஆயுதமுங்கொடுக்க அம்மன்
பதினெட்டுக் கையிலும் தரித்துக்கொண்டு,
சிம்ஹவாஹனத்தில் ஏறிக்கொண்டாள் மஹா
தேவியும் யுத்தம் பண்ண வந்தாள்
மஹிஷாஸுரனும் தேவியுமாய் மஹா
ஆங்காரமாய் யுத்தம் பண்ணலுற்றார்.

மகிஷாசுர மர்த்தினி க்கான பட முடிவு

மகிஷாசுரமர்த்தினி!

தேவியின் அருளைப் பெறுவதற்குப் பெரிதாகப் பூஜை, ஜபம், ஹோமம்னு எல்லாம் அமர்க்களமாய் எதுவும் செய்யவேண்டாம். ஒருமித்த மனதோடு தேவியின் நாமஸ்மரணை பண்ணினாலே போதும் என செளந்தர்ய லஹரியின் 23-ம் ஸ்லோகம் கூறுகிறது. தேவியை பவனாகிய ஈசனின் மனைவி என்ற பொருளில் பவானி என அழைக்கின்றனர். ஆனால் சம்ஸ்கிருத மொழியில் விளங்கும் பல பொருள் கொண்ட சிறப்பின் படி, பவாநீ என்பது,”நான் அப்படியே ஆவேன்” என்னும் பொருள் கொண்ட வினைச்சொல்லாகவும் எடுத்துக்கொள்வார்கள் சாக்தர்கள். தேவியைப் பூரணமாக ஒருமித்த மனதோடு வழிபடும் சாக்தர்கள் “நீயாகவே நான் ஆகின்றேன்” என்று உணர்கின்றான். இதை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் உணர்ந்திருக்கிறார். அம்பாளை வழிபடும் சக்தி உபாசகர் ஆன அவர் அச்சமயங்களில் தானும் புடைவை உடுத்திக்கொண்டு ஒரு பெண்ணைப் போலவே முக்கியமாய்த் தானே அம்பாள் ஆனதாகவே உணர்ந்திருக்கிறார். தேவியை வழிபடுபவர்களுக்குத் தனக்கும் அவனுக்கும் வேற்றுமை இல்லாததாகிய அத்தகையதொரு சாயுஜ்ய பதவியை தேவி அளிக்கிறாள். இப்போ மஹிஷனுக்கு என்ன ஆச்சுனு பார்ப்போமா?

அநேக காலம் மஹிஷன் தேவியுடன்
அஞ்சாமலே யுத்தம் செய்து நின்றான்
மாய்கையினால் பல ரூபமெடுத்தவன்
மஹாதேவியுடன் யுத்தம் செய்தான்
காளிரூபமெடுத்துக்கொண்டு தேவி
கைதனில் சக்ராயுதமுங்கொண்டு
மஹிஷரூபமெடுக்கும் போதவனை 
மடிய வெட்டினாள் மாதேவியும்

தேவியோடு யுத்தம் செய்ய வந்த மஹிஷன் தனக்கு உதவியாக எண்ணற்ற அசுரப் படைகளைக் கொண்டு வந்ததோடு அல்லாமல், பலவிதமான ஆயுதங்களையும் கொண்டு தேவியோடு யுத்தம் செய்தான். வாளை வீசிக்கொண்டு சண்டிகையைக் கொல்ல முயன்ற அசுரர்களைச் சண்டிகை வதம் செய்தாள். தேவியின் வாஹனமான சிம்ஹமும் பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு யுத்த களத்தில் பாய்ந்தது. அம்பிகையின் பெருமூச்சினாலேயே அசுர சேனாபலம் குறைந்து வந்தது. கதையாலும், சூலத்தாலும் தாக்கப்பட்டனர். அம்புகள் முட்களைப் போல் உடலெங்கும் பாய்ந்து உயிரை விட்டனர் பலர். தேர்களும், யானைகளும், குதிரைகளும் அசுரர்களும் வீழ்ந்து கிடந்தமையால் பூமியெங்கும் கால் வைக்க முடியாமல் இருந்தது. எங்கும் ரத்த வெள்ளம் பாய்ந்தது. அசுர சேனையின் தோல்வியைக் கண்டு தேவர்கள் விண்ணிலிருந்து புஷ்பமாரி பொழிந்து தேவியைத் துதித்துப் பாடினார்கள். தன் சேனையின் தோல்வியைக் கண்ட மஹிஷாசுரன் தேவியைத் தன் வாளால் வெட்ட எண்ணி அவளை அடிக்க அவளின் புஜத்தில் பட்டு வாள் பொடிப் பொடியாய் ஆயிற்று, பின்னர் சூலத்தையும் ஏவினான். பின்னர் எருமை உருவிலேயே வந்து அனைவரையும் தன் கொம்புகளாலும், வாலாலும், குளம்புகளாலும் தாக்க ஆரம்பித்தான். அனைவரையும் வாலில் சுருட்டி வீசி பூமியில் எறிந்தான். தேவியை நோக்கிக் கோபத்துடன் கர்ஜனை செய்தான். பூமி நொறுங்க, கடலும் கரை புரண்டு பூமிக்குள் புகுமோ என்னும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து விண்ணுக்கும், மண்ணுக்குமாய் ஆரோகணித்து நின்றான் மஹிஷாசுரன்.
சண்டிகை கோபத்துடன் அவனைக் கொல்ல முயல, அவன் சிங்க உரு, மானிட உரு, யானை உரு எனத் தன் மாயையால் பல உரு எடுத்தும் தேவி அவனை விடாது துரத்திக் கொல்ல முயன்றாள். மீண்டும் எருமை உருவிலேயே வந்து தேவியை முட்டித் தள்ள முயன்றான். தேவி அவன் மேல் பாய்ந்து அவனை வீழ்த்திக் கீழே தள்ளித் தன் கால்களால் மிதித்துக்கொண்டு கைச்சூலத்தால் அவனைத் தாக்கினாள். தேவியின் கால்களில் மிதிபட்ட மஹிஷாசுரன் வாயைப் பெரிதாய்த் திறந்துகொண்டு சுய உருவில் வெளியே வந்து எவ்விதமேனும் தப்ப முயல, அதைக் கண்ட தேவி தன் வாளால் அவன் தலையை வெட்டி வீழ்த்தினாள். மிச்சம் இருந்த அசுரர்கள் எல்லாம் ஓடிச் சிதற தேவர்கள் குதூகலத்துடன் ஆடிப் பாடி தேவியைப் பல வகைகளிலும் துதித்தனர்.

இங்கே எருமை என்பது அறியாமை என்னும் மெளட்டிகத்தையே குறிக்கும். தத்துவார்த்த ரீதியான இக்கதைகளின் உள்ளார்ந்த பொருளைப் புரிந்துகொண்டு அநுபவிக்கவேண்டுமே தவிர, அசுரன் என்றால் கொல்லலாம், தேவர்கள் என்றால் சகாயம் காட்டுவதா என்ற கேள்வி அர்த்தமற்றது. நம் மனத்திலே உள்ள ரஜோ குணம், தமோ குணம் போன்றவைகளால் நாமே சில சமயம் மிகவும் கோபம் கொள்ளுகிறோம். அப்போது என்ன சொல்லுவோம், “என்னைக் கோபப் படுத்தாதே, கோபம் வந்தால் நான் மனுஷனாக இருக்க மாட்டேன்!” இப்படித்தானே பெரும்பாலும் சொல்கிறோம்? இந்தக் குணமே மஹிஷாசுரனை ஒத்த அசுரர்களைக் குறிக்கும். நம்முடைய அறியாமையால் விளையும் இத்தகைய துர்க்குணங்களையே தேவி வழிபாடு வெட்டி வீழ்த்தும். அதுவும் மஹிஷன் தேவியின் பாதாரவிந்தங்களை அன்றோ சரணடைந்தான்?? அவ்வாறு தேவியின் பாதார விந்தங்களை நாம் சரண் அடைந்தால் அசுரர்களாகிய துர்க்குணங்கள் ஒழிந்து சத்வ குணம் நிரம்பப் பெற்று மானிட நிலையிலிருந்து தேவ நிலைக்கு உயர்த்தப் படுவோம். அதன் பின் படிப்படியாக மேலே உயர்ந்து தேவியின் கிருஹத்தில் அவள் துணையோடு சிவசக்தி ஐக்கிய சொரூபத்தைத் தரிசிக்கலாம்.

சந்திரகண்டா மூன்றாம் நாளுக்கான தேவி! மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் காக்ஷி கொடுக்கின்றாள். ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க் கிழமைகளில் இந்த தேவியைத்  துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். திருவாலங்காட்டில் காளியைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆட்டம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலைத் தோளுக்கு இணையாக உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆட்டத்தில் இருந்து தோன்றியவளே சந்திரகாந்தா தேவி.

சந்திரகண்டா க்கான பட முடிவு


சந்திரகாந்தா அல்லது சந்திரகண்டா தேவி! 

படங்களுக்கு நன்றி கூகிளார்

இன்றைய தினம் நான்கு, ஐந்து வயதுப் பெண் குழந்தையைக் கல்யாணியாகப் பாவித்து வழிபட வேண்டும். நக்ஷத்திரக் கோலம் போடலாம். அல்லது முத்துக்களால் ஆன மலர்க்கோலமும் போடலாம்.  குழந்தைகள் சாப்பிடுவதால் நிவேதனத்துக்கு கோதுமை மாவினால் ஆன லாடும், சர்க்கரைப் பொங்கலும் செய்யலாம்.  செண்பகப் பூக்கள், மரு, செம்பருத்தி, தாமரை மலர்கள்,  குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம்.  மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் தேவியை அலங்கரிக்கலாம்.  வெப்பத்தைப் போக்கும் தேவி என்பதால் தயிர் சாதமும் நிவேதனம் செய்யலாம்.  மாலையில் வெள்ளைக்காராமணி அல்லது பச்சைப்பயறுச் சுண்டல் செய்யலாம்.

26 comments:

  1. மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ சுண்டல் எனக்கே:)

    ReplyDelete
    Replies
    1. கடலைப்பருப்புச் சுண்டல் இன்னிக்கு! நேத்திக்குக் கேசரி பண்ணினேன், முதல்நாள் என்பதால்! சுண்டல் சூடாச் சாப்பிட்டாச்சு! :)))))

      Delete
    2. கோதுமை மாவு லட்டும், சர்க்கரைப் பொங்கலும் மத்தவங்க செய்யணும், நீங்க அதை ஃபாலோ பண்ணாமல் எது சுலபமோ அதைச் செய்யறீங்களா?

      Delete
    3. நான் நேற்று வடை சுட்டுக் குடுத்தேன் துர்க்கை அம்மாளாச்சிக்கு நல்ல ரேஸ்ட் என சொன்னா:) இன்று கெளபி சுண்டலும் பாயாசமும் குடுக்கிறேன்...

      Delete
    4. நெல்லைத் தமிழரே, நவராத்திரியில் முறைப்படி பூஜை செய்பவர்கள் தாம் இப்படிச் செய்யணும். அம்பத்தூரில் எங்க வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி ஒருத்தர் வீட்டில் வருஷா வருஷம் நவராத்திரி பூஜை அமர்க்களப்படும். மதியம் சாப்பாடு போடவே இரண்டு மணி ஆயிடும். தினம் ஒரு சின்னக் குழந்தை, ஒரு கன்னிப் பெண், ஒரு தம்பதியர் வைத்து பூஜை செய்வார்கள். நாங்க போய்ப் பார்த்துட்டு வருவோம்.

      Delete
    5. அதிரடி, முன்னெல்லாம் நவராத்திரி பத்து நாளும் பாயசம் பண்ணுவேன். இல்லைனா சுந்தரகாண்டம் நவாக பாராயணம் பண்ணினால் தினம் ஒரு நிவேதனம் உண்டு. இந்த வருஷம் சில காரணங்களால் பாராயணம் எடுத்துக்கலை! பாயசம் பண்ணினால் நான் தான் சாப்பிடணும். :)

      Delete
  2. இது ஒரு மீள் பதிவு இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சுமார் பத்து வருஷங்கள் முன்னே போட்டு அதைப் பலரும் காப்பி அடிச்சு அதைக் கண்டு பிடிச்சுச் சண்டை போட்டதிலே ஒருத்தர் மட்டும் பதிவை எடுத்துட்ட்டார். மற்றொருத்தர் வாயே திறக்கலை! :( அம்பிகையின் தத்துவங்கள் பத்தி ஒவ்வொரு வருடமும் சொல்லிக் கொண்டு வரேன். ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியில் ஆராதித்தாலும் இது அனைவருக்கும் பொதுவானது.

      Delete
  3. கீசாக்கா போன வருடம், நவராத்திரி ஒவ்வொரு நாளும் என்ன படைக்கோணும் என சொல்லி ஒரு போஸ்ட் போட்டிருந்தீங்க.. லிங் தாங்கோவன்...பிளீச்ச்ச்ச்ச்..

    ReplyDelete
    Replies
    1. http://sivamgss.blogspot.com/2017/09/blog-post_21.html

      http://sivamgss.blogspot.com/2017/09/blog-post_28.html

      இதிலே ஆரம்பிச்சு தினம் ஒரு பதிவாப் போட்டிருப்பேன், பாருங்க! ஆரம்பமும் முடிவும் கொடுத்திருக்கேன், பாருங்க!

      Delete
  4. உமா.. பெயர் காரணம் அறிந்தேன்.

    ReplyDelete
  5. சில சமயங்களில் யோசிக்கும்போது தவம் செய்யும் முனிவர்களைவிட, இது போல அக்கிரமம் செய்கிறவர்கள் ஆண்டவனை சீக்கிரம் சந்தித்து விடுகிறார்களோ!!! வதத்துக்குப் பின்னர் ஆண்டவன் பக்கத்தில் ஒரு இடமும் பிடித்து விடுகிறார்கள்! விபரீத சிந்தனை!

    ReplyDelete
    Replies
    1. வாங்கஸ்ரீராம், புராண இதிகாசங்களை நன்றாய்ப் படிக்கவும். உடனே எல்லாம் தண்டனை கிடைத்து விடுவதில்லை. அவங்க அக்கிரமம் எல்லை மீறும் வரை விட்டு விட்டுத் தான் தண்டனை கொடுப்பார்கள். அதுவும் அவர்கள் பெற்றிருக்கும் வரங்களால் உடனே எல்லாம் மரணம் நேராது. திருந்துவதற்கும் நேரம் கொடுத்துப் பொறுத்திருந்து தான் பார்ப்பார்கள்.

      Delete
    2. எல்லாருக்கும் ஆண்டவன் பக்கத்தில் இடம் கிடைக்கவில்லை; கிடைக்கவும் கிடைக்காது. அதற்கெனத் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே!

      Delete
  6. தேவியின் தியானம் பற்பல நலன்களை அருளவல்லது..
    ஒருநிலையில் மிகப் பெரிய ப்ரயத்னங்கள் எதுமின்றி அவளைத் தரிசித்து விடலாம்...

    ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
    பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
    வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
    நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே.. (32)

    நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
    நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
    பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
    தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கைச்சியே..(61)

    என்னும் திருப்பாடல்களின் மூலமாக அம்பிகையின் வாத்சல்யத்தை உணரலாம்...

    ஓம் சக்தி ஓம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை. சௌந்தர்ய லகரியையும் அபிராமி அந்தாதியையும் ஒப்பிட்டு எழுத ஆரம்பித்தது பாதியிலே நிற்கிறது! :( தொடர முடியவில்லை! கவனம் செலுத்த முடியவில்லை.

      Delete
    2. இரு பாடல்களும் மனதை மயக்கின. பக்தி மேலிட்டவர்கள்தாம் இதனை எழுத முடியும். பக்தியினால் மனது ஒருமுகப்பட்டு அந்த அம்பிகையின்பால் கண்ணீர் மல்கி எழுதியிருக்கிற வரிகள்... 'வலிய வைத்து ஆண்டு கொண்ட', 'பேயேன் அறியும் அறிவு' - இதெல்லாம் எந்த ஜென்மத்தில் கிட்டப்போகிறதோ..

      Delete
    3. 32ரொம்பப் பிடிச்சது.

      Delete
  7. அருமையான சரித்திரம் கீதாமா. அம்பிகை

    மஹிஷனை வதம் செய்வது கண்முன் நடப்பது போலச் சித்தரித்திருக்கிறீர்கள்.
    குழந்தைகளைக் காக்க அன்னையின்
    ஆக்க பூர்வமான சினம் எப்படித்தான் நடந்தேறுகிறது. மிக நன்றி கீதாமா.

    ReplyDelete
  8. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே//

    தீவினைகள் வெப்பத்தைத் தணித்து கருணைமழையால் குளிர்விக்க வேண்டுகிறேன் அன்னையை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு!

      Delete
  9. பாராட்டி மட்டும்தான் எழுத முடியும்

    ReplyDelete