எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 25, 2025

சிவாய நம ஓம்! சிவராத்திரிப் பதிவு!

 நாளை சிவராத்திரி. ஆகவே ஏதேனும் எழுதலாம்னு நினைச்சேன். கடைசியில் 22 ஆம் வருஷத்துப் பதிவை மீள் பதிவாகப் போட்டிருக்கேன்.



இன்று சிவராத்திரி. முதலில் சிவராத்திரி என்றால் என்ன? சிவபெருமான் லிங்க வடிவாகத் தோன்றிய காலம் தான் லிங்கோற்பவ காலம் என்று சொல்லப் படுகிறது. அந்த லிங்கோற்பவம் நடந்த நேரம் இரவு 11-30 மணிக்கு மேல் 1-00 மணி வரையாகும். லிங்கோற்பவம் நடந்த தலம் திருஅண்ணாமலை ஆகும். சிவலிங்கம் பற்றிய விளக்கங்கள் எல்லா ஞான நூல்களிலும், முக்கியமாகத் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லி இருக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தில் ஸ்காந்த புராணம் என்னும் கந்த புராணத்திலும் சொல்லப் பட்டிருக்கிறது. அது என்ன என்றால் வழிபாடு மூன்று வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. அவை உருவ வழிபாடு. இப்போது நாம் செய்து வருவது உருவ வழிபாடு ஆகும். இன்னொன்று அருவுருவ வழிபாடு. மற்றது அருவ வழிபாடு ஆகும். அருவ வழிபாடு என்பது உருவமற்ற பரம்பொருளைக் குறிக்கிறது என்று நம் எல்லாருக்கும் நன்கு தெரியும். "பார்க்கும் பொருளெல்லாம் பரம்பொருளாகப் பார்ப்பது" என்பதும் அருவ வழிபாட்டைச் சேர்ந்தது ஆகும். எல்லாமே இறைவன் என்ற நிலையை ஞானிகளும், மஹான்களும் தான் அடைய முடியும் என்பதால் நம்மைப் போன்ற சாமானிய மனிதருக்காக ஏற்பட்டது உருவ வழிபாடு. இரண்டுக்கும் இடைப்பட்டது அருவுருவ வழிபாடு. இதில் உருவம் இருக்கும். ஆனால் அவயங்கள் இருக்காது. அருவமாக இருக்கும். இந்த அருவுருவ வழிபாட்டைக் குறிப்பது தான் சிவலிங்கத்தை நாம் வழிபடுவது ஆகும்.

இதை எப்படிச் சொல்வது என்றால் இவ்வுலகாகிய பூமியைப் பெண்ணாக எடுத்துக் கொண்டால் ஆகாயம் என்பது அதனுடன் இணைந்த ஆணாகும். அது போல் லிங்கம் இருக்கும் பீடம் ஆவுடையாள் எனப்படும் அம்பிகை என்றால் லிங்கமாகிய பாணம் சர்வேஸ்வரன் ஆகிறான். ஆகாயத்தை நாம் தினமும் பார்க்கிறோம். அதன் வடிவம் என்ன? நம்மால் சொல்ல முடியாது. வடிவம் புலப்படுவதும் இல்லை. ஆனால் கவிழ்த்து வைக்கப் பட்ட மரக்காலைப் போல் இருக்கும் இந்த ஆகாயத்துக்கு இது தான் உருவம் என நாம் நினைத்துக் கொள்கிறோம். இவ்வுலகம் பூராவும், அனைத்துமே இந்த ஆகாயம் என்னும் கூரையின் கீழ் தான் இருக்கின்றன, நாம் உட்பட. இந்த அண்ட லிங்கமாகிய ஆகாயத்துக்கு அபிஷேஹம் செய்ய ஏற்பட்டவை தான் கடல் கள். ஆகாய லிங்கம் எவ்வளவு பெரிதோ அத்தனைக்கும் தேவைப்படும் அளவு நீர் நிறைந்த சமுத்திரங்கள் இருக்கின்றன. அபிஷேஹம் முடிந்த ஆகாய லிங்கத்திற்கு நட்சத்திரங்களே பூக்களாகவும், மாலைகளாகவும் ஆகின்றன. ஆடையோ எனில் எட்டுத் திக்குகளாம். இதைத் தான் திருமூலர் தன் திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறார். (எனக்குத் திருமந்திரம் பூராவும் தெரியாது. சிவராத்திரி மஹிமையில் படித்தது பற்றித் தான் எழுதுகிறேன்.)

 சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை எனப்படும் திரு மந்திரத்தில் திருமூலர் சொல்கிறார். "தரை உற்ற சக்தி, தனி லிங்கம் விண்ணாம் திரை பொரு நீரது மஞ்சன சாலை வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே." என்று லிங்கத்தின் அருவுருவத்தை வர்ணிக்கிறார். திருமூலர் சிவனை நேரில் கண்டவர் எனக் கூறுவார்கள். 63 நாயன்மாரிலும் ஒருத்தராகப் போற்றப் படுகிறவர். இவரது காலத்தைப் பற்றிய தகவல்கள் சற்று முரணாக இருக்கின்றது. திருமூலரின் வாக்குப்படி நாம் அனைவரும் இருப்பது ஒரே கூரையின் கீழ். பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் அடிமுடியைத் தேடியதும், பிரளய காலம் முடிந்து இரவு நேரத்தில் 4 ஜாமமும் அம்பிகை இறைவனைப்பூசித்ததும் சிவராத்திரி எனச் சொல்லப் படும் மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசி அன்று தான். பொதுவான நியதிப்படி பகல் பொழுது ஈசனுக்கும், இரவுப் பொழுது அம்பிகைக்கும் உரியது. சிவராத்திரி அன்று மட்டும் அம்பிகை தனக்கு உரிய இரவை ஈசனுக்கு அளித்து அவர் பெயரால் வழங்கச் செய்கிறாள். சிவம் வேறு அறிவு வேறு அல்ல என்பார்கள். அறிவே சிவம். நம்முடைய அறிவால் அறிந்து கொண்ட சிவனைப் போற்றித் துதிப்போம்.

 "தென்னாடுடைய சிவனே போற்றி, போற்றி!!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, போற்றி!!"


2008 ஆம் ஆண்டில் எழுதிய பதிவின் மீள் பதிவு. 

No comments:

Post a Comment