மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!
படங்களுக்கு நன்றி கூகிளார்!
பூவைப்பூ வண்ணன் எனக் கண்ணனை அழைத்திருப்பதால் பல்வேறுவிதமான பூக்களைக் கோலத்தில் வரையலாம்.
மழைக்காலம் முழுதும் குகைக்குள் உறங்கிக் கிடக்கும் சிங்கமானது கண் விழிக்கையில் அதன் பிடரி மயிர் சிலிர்க்குமாறு கர்ஜனை செய்து குகையை விட்டு வெளிக்கிளம்பும். அதைப் போலக் கண்ணா! நீயும் உன் அரண்மனையை விட்டு வீரநடை நடந்து வெளியே வந்து உனக்கான சிம்மாதனத்தில் அமர்ந்து எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்வதாய்ச் சொல்கிறாள் ஆண்டாள்.
வந்த காரியம் ஆராய்ந்து அருளுமாறு ஆண்டாள் ஏன் கேட்கிறாள்? இவ்வுலகத்து இன்பங்களையே துய்க்கும் நம் போன்றவர் ஆண்டவன் சந்நிதியில் கேட்பதும் பொன், பொருள், நம் ஆசைகள் நிறைவேறுமாறு வேண்டுதல், புத்தாடைகள், புது வீடு என்றே கேட்கிறோம். அதனால் தான் ஆண்டாள் கோரிக்கைகள் நியாயமாய் இருந்தால் மட்டுமே நிறைவேற்றித் தருமாறு கேட்கிறாள். ஆண்டவன் சந்நிதியில் நமக்கென எதுவும் வேண்டாமல் இவ்வுலக சுபிக்ஷத்திற்காக வேண்டுவதே சிறப்பு.
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து= நல்ல மாரிக்காலத்தில் மலையின் குகையில் வெளியே வராமல் தன் குடும்பத்தோடு அடைபட்டுக்கிடக்கும் சிங்கமானது மழை முடிந்துவிட்டது என்பது தெரிந்ததும், பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு எழுந்து கர்ஜனை செய்யுமாம். அவ்வளவு நாட்கள் தூங்கிக்கொண்டிருந்ததில் அதன் கண்களும் சிவந்து நெருப்புப்போல் இருக்குமாம்.
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ =பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு தன் சோம்பலை உதறிக்கொண்டு கர்ஜித்துக்கொண்டே வேட்டைக்கு ஆயத்தமாகும் சிங்கம் போல் இருக்கிறானாம் கண்ணன். இங்கே கண்ணனைச் சிங்கம் என்றது அவன் ஆற்றலைக் குறித்தே. சிங்கத்தைப் போல் ஆற்றல் மிகுந்தவன் அவன். கம்பீரம் நிறைந்தவன். மற்றபடி அவன் மென்மையான தன்மை வாய்ந்தவன். அதை அடுத்த அடியிலே சொல்கிறாள் ஆண்டாள்.
பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய= பூவண்ணன் போன்றவனே, பூவைப் போன்றவனே, இப்படிப் படுத்துக்கொண்டிருக்காமல் நீ எழுந்து இங்கே உன் சபைக்கு வந்து
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!=சிங்காதனத்தில் அமர்ந்து கொள்வாய். நாங்கள் எதற்கு வந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து அறிந்து எங்களுக்கு அருளுவாய், எழுந்திருந்து வா கண்ணா, இங்கே அரிதுயில் கொண்டிருக்கும் பரமாத்மாவின் நடையழகைக் காண வேண்டி ஆண்டாள் கூறி இருப்பாள் போலும், அது மட்டுமில்லாமல் தாங்கள் கஷ்டப்பட்டு எதற்கு வந்திருக்கிறோம் என்பதையும் அவனுக்குச் சொல்ல ஆசைப்படுகிறார்கள். தாங்கள் வேண்டுவது அவன் கருணா கடாக்ஷம் ஒன்றே. அது எங்களுக்குக் கிட்டவேண்டும் என்பதே ஆண்டாளின் மறைமுகப்பிரார்த்தனை.
பட்டத்திரியின் பிரார்த்தனையோ வேறுவிதமாய் உள்ளது. இறைவனைப் பரிபூர்ண ஸ்வரூபி என்னும் அவர் தாம் எதையும் அறிந்திருக்கவில்லை என்றும், பரமாத்மாவைத் தியானிப்பதையே தாம் விரும்புவதாயும் கூறுகிறார்.
யோ யாவாந் யாத்ருஸோ வா த்வமிதி கிமபி நைவாவகச்சாமி பூமந்
ஏவஞ் சாநந்ய பாவஸ்த்வதநு பஜநமேவாத்ரியே சைத்யவைரிந்
த்வல்லிங்காநாம் த்வதங்க்ரி ப்ரியஜந ஸதஸாம் தர்ஸநஸ்பர்ஸநாதி:
பூயாந்மே த்வத் பூஜா நதி நுதி குண கர்மாநு கீர்த்யாதரோபி
பரிபூர்ண ஸ்வரூபியே, பரம்பொருளே, தாங்கள் யாரோ, எப்படிப்பட்டவரோ, எதற்கு ஒப்பானவரோ அவை எதையும் நான் அறிந்தேன் இல்லை. அப்படி அறியாதவனான நான் விரும்புவது வேறொன்றையும் மனதில் கொள்ளாமல் தங்கள் தியானம் ஒன்றே செய்ய விரும்புகிறேன். உம்முடைய அர்ச்சாமூர்த்தித் திருமேநிகளிலும் உமது சரணங்களைப் பக்தி செய்யும் மக்களின் நடுவிலும், உமது தரிசனம், ஸ்பரிசனம், வழிபாடு, வணங்குதல், ஸ்தோத்ரம் சொல்லுதல், உமது கல்யாண குணங்களையும் லீலைகளையும் பற்றி விவரித்துக் கீர்த்தனம் செய்தல், உமது திவ்ய சரித்திரத்தைப் பற்றிப் பேசுதல் ஆகியவற்றிலே எனக்கு ஈடுபாடு உண்டாகும்படி செய்யும்.
காலை வணக்கம்....
ReplyDeleteகோலங்கள் அழகு. தகவல்கள் நன்று.
மார்கழி 23 ஆம் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteபிடரி மயிர் ஆண் சிங்கத்துக்குதான் இருக்கும். அது வேட்டையாடாது! பெண் சிங்கம்தான் வேட்டையாடும்!
ReplyDeleteபாடல்களில் அந்த எம்பாவாய் வருமிடத்து, பெரும்பாலான சமயங்களில் அந்த இடத்தில வார்த்தைகளை பிரித்துக் கொண்டு வருவதற்கே கண்ணன் அருள் வேண்டும் என்பது போல அமைந்திருக்கும்!
ReplyDeleteகருணா கடாட்சம் போதும் என்று விட்டுவிட முடிகிறதா? லோகக்ஷேமத்துக்குதான் வேண்ட வேண்டும், தமக்கென எதுவும் வேண்டக்கூடாதென்றால் நமது நியாயமான கோரிக்கைகள், அல்லது நடக்க வேண்டியவை கூட நடக்கவில்லை என்றால் எப்படி வேண்டாமல் இருப்பது!
ReplyDeleteதிருமேனியா, திருமேநியா ? ஸ்பரிசம் ஓகே, ஸ்பரிசனம் என்று வருமா?
ReplyDeleteஉன் விஸ்வரூபம் பார்த்ததில்லை
ReplyDeleteநான் உன் உயரம் அறிந்தவனில்லை.
உன் பாதங்களையே பார்க்கிறேன்,
சரணடைகிறேன்
நான்
பார்க்காவிடினும் உன்
கண்களெனும் கருணையால்
என்னைப் பார்க்கவேண்டும்
வேறொன்றும் வேண்டிடேன் நான்.
ஸ்ரீராம் கலக்கல்...இதுதானே தத்துவம் பாதங்களில் வீழ்வதே...சரணாகதிதானே!!
Deleteகண்களென்ன்னும் கருணையால்//
இது நேற்றைய பாசுரத்திற்கும் பொருந்தும் இன்றைய கவிதை...பாதத்தில்தான் இருப்பாங்க பாண்டவர். சரணாகதி.
கீதா
பாதங்களில் சரணடைந்திருக்கும் நம்மை பரந்தாமன் குனிந்து கருணை என்னும் கண்களால் பார்க்கவேண்டும் .. சரணாகதி பாதம்தான்.
Delete"கருணை என்னும் கண்திறந்து பார்க்கவேண்டும்
காவல் என்னும் கைநீட்டி காக்கவேண்டும்..
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் கொண்டு வருவாய் கண்ணா"
நேற்றைய பாசுரம் கீதையின் கண்ணன் என்றால் இன்றைய பாசுரம் சிம்மம் நரசிம்மம்!
ReplyDeleteகீதா